விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share

பாலகுமாரனை நினைத்து

நவம்பர் அந்திமழை மாத இதழ் தொடர்கதை சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. (கமல் 60 சிறப்பிதழும்கூட!) அதில் மெர்க்குரிப்பூக்களை முன்வைத்து நான் எழுதிய கட்டுரை ஒன்றும் வந்துள்ளது. ஓர் இதழின் விலை 20 ரூபாய் மட்டுமே. வாங்கிப் படித்துவிட்டுக் கருத்துச் சொல்லவும்.

நீண்ட நாள் கழித்து பாலகுமாரனின் ஒரு நாவலை வாசித்தபோது, மனத்தில் பல்வேறு பழம்நினைவுகள் என்னை அலைக்கழித்தன. அன்று பாலகுமாரனே எழுத்தின் எல்லை என்று நினைத்த நிமிடங்கள் இன்று அப்படி இல்லை என்றாகிப்போன மாற்றமே அதன் முக்கியப் புள்ளியாக இருந்தது. அதை ஒட்டி எழுந்த எண்ணங்களில் சிதறல்களை எழுதி வைத்தேன். அவை:

பாலகுமாரனின் பிரச்சினைகள் – எதையும் அதன் ஆழத்துக்குள் சென்று பரிசீலனைக்குட்படுத்தாதது. எல்லா ஆண் பெண் உறவுகளிலும் ஒரு செக்ஸ் எலிமெண்ட் எப்படியாவது இருந்துவிடுவது. அதிலிருந்து வெளிவர பெண்ணை தெய்வமாக்க முயல்வது. பெண்கள் ஆண்கள் என எல்லோரும் தத்துவார்த்தப் பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்வது. மெல்ல எப்படியாவது ஜாதிய சிந்தனை இருந்தே தீரும் என்று தொடர்ந்து பின் நின்று சொல்வது. இவை எல்லாவற்றிலும் அவர் ஆழம் போயிருந்தால் ஒவ்வொன்றும் ஒரு கேஸ் ஸ்டடியாகி இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் மூன்று மேலோட்டமான முடிவுகளுக்கு அவர் வந்தார். ஆண் பெண் உறவுகளில் செக்ஸ் அதற்குப் பின்னான வருத்தம், தத்துவார்த்தப் பிரச்சினைகளில் மிகவும் மேலோட்டமான எரிச்சலான தன்னிரக்கம், ஜாதிய சிந்தனைகளில் அவரது பிற்போக்குத்தனம் இவையே அவரை தேங்க வைத்தன. இதே மேலோட்டமான வேகத்தில் அவர் ஆன்மிகத்துக்குப் போனார். எனக்கு ஆன்மிகம் பற்றி அதிகம் பரிச்சயமில்லை. ஆனால் ஆன்மிகத்தை இவர் எழுதியதை வாசித்தபோது அவற்றிலும் ஒரு அவசரத்த்னமையும் தனது வாசகர்களைத் தான் செல்லும் திசைக்குத் திருப்பிக்காட்டவேண்டும் என்கிற வேகமும் முடியும் என்கிற மமதையும் மட்டுமே தென்பட்டன.

ஆனால் என் பால்யம் முழுக்க பாலகுமாரனே நிறைத்துக் கிடந்தார். அதில் காமத்தை பெரும்பாலும் தன் எழுத்துகள்மூலம் அவரே கட்டமைத்தார். ஒவ்வொரு இளைஞனும் வெறும் காமம் பற்றியே பேசும்போது அவர் எனக்குள் ஒரு விஸ்வரூபம் எடுத்தார். பல நாள்களில் பல நேரங்களில் நான் பாலகுமாரனுடன் மானசீகமாகப் பேசினேன். எனக்கு குருக்கள் என்று யாரும் இன்றுவரை இல்லை. ஆனால் மானசீகமாக என் வாழ்க்கையை பாலகுமாரன், ஜெயகாந்தன், சோ, சுஜாதா, ஜெயமோகன் போன்றவர்களே வடிவமைத்தார்கள். அந்தவகையில் பாலகுமாரனிடன் எனக்கு எப்போதும் ஒரு மென்மை உண்டு. எப்போதும் நான் அவரை நோக்கிக் கைக்கூப்புவேன்.

பாலகுமாரனின் மயக்கத்தை சுஜாதா போக்கடித்தார். சுஜாதாவிடமிருந்து ஜெயகாந்தன் என்னைக் கொண்டு போனார். இவர்கள் அத்தனை பேரையும் ஒரு சேரக் கடாச வைத்தார் ஜெயமோகன். ஆனால் இன்று நோக்கும்போது இவர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் எத்தனை முக்கியமானவர்கள் என்று தெரிகிறது. அதிலும் சுஜாதாவின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. ஜெயமோகன் எங்கேயோ போய்விட்டார். 

பாலகுமாரனின் பெண்களை மிகக் கறாராக வரையறுத்தால், உணவாலும் உடலாலும் ஒரு ஆணைக் கட்டிப்போட முடியும், முடியவேண்டும் என்று சொல்பவர்களாகவே இருந்தார்கள். ஆணிடம் ஒரு பெண் தோற்கும்போது அவர்கள் காமத்தை அனுபவமாக்கியே க்டந்தார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு நொடியில் வீட்டுப் பெண்ணே என்று காண்பிக்க பாலகுமாரன் தவறுவதில்லை. அதேபோல் எந்த ஒரு நொடியிலும் ஒரு வீட்டுப் பெண் பல தளங்கள் உயர்ந்து வெற்றிப் பெண்ணாக வலம்வர வைக்கவும் அவர் தவறுவதில்லை. என்ன, இவை இரண்டுமே நொடிநேர மின்னல்களாக நிகழ்ந்துவிடுவதுதான் சோகம். இதற்கேற்ற ஆழமான காரணங்களோ சம்பவங்களோ இருப்பதில்லை. அப்படி ஒரு பெண்ணால் மாறமுடியும் என்ற ஒற்றைக் காரணம் எல்லா நாவல்களிலும் பாலகுமாரனுக்குப் போதுமானதாக இருந்துவிடுகிறது.

அனல்காற்று ஜெயமோகன் எழுதியது. பாலகுமாரனின் கதை போன்ற ஒன்றுதான். ஆனால் அதில் ஜெயமோகன் நிகழ்த்திக் காட்டியிருக்கும் அனுபவங்கள் ஒரு ஆணையும் பெண்ணையும் அவர்கள் மனத்தில் அப்படியே நிர்வாணமாக்கி நிற்கவைப்பவை. ஆணின் எல்லையையும் பெண்ணின் எல்லையையும் அவர் தொட்டிருக்கும் அற்புதம் வாசித்தால்தான் புரியும். அனல்காற்று நாவலில் பல இடங்களில் நாம் பாலகுமாரனை நினைவுகூர்வோம். ஆனால் பாலகுமாரனால் செல்லவே முடியாத அலசல்களை ஜெயமோகன் நிகழ்த்திக்கொண்டிருப்பார்.

அனல்காற்று ஜெயமோகனின் நாவல்களில் ஒன்றாக வைக்கத் தக்கதல்ல. அத்தனை ஆழமான அலசல்களை மீறியும் அது ஒரு சுமாரான நாவலே. ஆனால் அது ஒரு திரைக்கதையாக எழுதப்பட்டது என்பதை மனத்தில் வைத்தே படிக்கப்படவேண்டும். சட்டென தெளியும் நிலையில் வரும் உறவு விவரணைகளில் உண்மையில் நான் மிரண்டுவிட்டேன்.

Share

ஈவெராவின் ‘பொன்மொழிகள்’

பி.ஏ. அனந்த கிருஷ்ணன் ஃபேஸ்புக்கில் குறித்து வைத்த இந்தப் பொன் மொழிகளை சேமிப்புக்காகப் பகிர்ந்து வைக்கிறேன்.

 

பெரியாரின் சில பொன்மொழிகளைப் படிக்க நேர்ந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1. பார்ப்பனரில் ஒரு வகையாருக்கு ஏன் முகம் சூப்பையாக இருக்கிறது?

அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை அறையில் அனுமார் படத்தை வைத்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் முகம் சூப்பையாக இருக்கிறது.

 

2. பெண் விபசாரிகள் விபூதி பூசியதன் மூலம் மோட்சத்திற்குப் போய் விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

கடவுள் இருக்கிறார். போதாக்குறைக்கு தேவர்களைக் கொண்டு சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

 

எனது பதில்: ஈவெராவின் நினைவிலி மனத்தில் இருப்பவை இவையே. வெளியில் போட்டதெல்லாம் வேஷம். இவரின் தொடர்ச்சியே இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவு.

மேலதிக விவாதங்களைப் படிக்க: https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/982137541812430?fref=nf&pnref=story

Share

யமுனாவின் மேற்கோள் அரசியல்

ஃபேஸ்புக்கில் போட்டது, சேமிப்புக்காக இங்கே.

/உலோகம் ஒரு கார்ப்போரேட் காக்டெயில் நாவல். ‘தமிழின் முதல் சைக்கலாஜிகல் திரில்லரான’ சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவே, ‘அரபு தேசக் கதைக்களனுடன் அதகளப்படுத்தும் திரில்லரான’ ராம் சுரேஷின் பழி, பாவம், படுக்கையறை, ‘பர்மா பஜார் நிழல் உலகைப் பதைபதைக்கச் சுற்றிவர’க்கோரும் யுவ கிருஷ்ணாவின் அழிக்கப் பிறந்தவன், ‘இங்கிலாந்து உளவாளியின் மயிர்க்கூச்செறியும் அட்டகாசங்கள் நிறைந்த’ தரணியின் ஓடு, ஓடு, ஒளி போன்ற ‘அட்டகாச’ திரில்லர்கள் வரிசையில், ‘கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டுவந்து’ ஜெயமோகன் உலோகம் எழுதியிருக்கிறார்.

தயவு செய்து குபுக்கெனச் சிரித்துவிட வேண்டாம். சத்தியமாக மேலே இருக்கிற நாவல்கள் குறித்த வர்ணனைகளை நான் எழுதவில்லை. கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை. இந்த நாவல்களின் பண்புகளுடனான உணர்ச்சிகமான திரில்லர் சமச்சாரங்களுடன் அங்கங்கே ஜெயமோகனுக்கு ஈழம் குறித்துத் தெரிந்த இலக்கியம் இலக்கியவாதிகள் அவர்களுக்குச் சுந்தர ராமசாமியுடன் இருந்திருக்கக்கூடிய உறவுகள் போன்றவற்றுடன உருவாகியிருக்கிற சுத்த இலக்கியக் காக்டெயில் யுனிக் நாவல்தான் உலோகம்.//

இப்படி யமுனா ராஜேந்திரன் எழுதியிருக்கிறார்.

ஆனால் உலோகம் பின்னட்டையில் உள்ளவை –

”உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. த்ரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தைக் கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு த்ரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் உணர வேண்டிய தருணத்தை உருவாக்குகிறார் ஜெயமோகன். துரோகம், கதையில் ஒரு முடிச்சை உருவாக்குகிறது. இன்னொரு துரோகம், அம்முடிச்சை அவிழ்த்துவிட்டு, வேறு முடிச்சைப்போட்டு வைக்கிறது. இப்படியாக இந்த த்ரில்லர் கதை செல்லும் ஆழம் அசர வைக்கக்கூடியது. ஈழத்தோடு தொடர்புடைய அரசியல் இக்கதையின் களமாக இருப்பதால், புனைகதையை உண்மைக்கு வெகு அருகில் நின்று நம்மால் பார்க்க முடிகிறது.”

புத்தகத்தின் உள்ளே, உள் முன்னட்டையில் நில்லுங்கள் ராஜாவே மற்றும் பழிபாவம்படுக்கையறை நாவல்கள் பற்றிய விளம்பரங்கள் உள்ளன. உள் பின்னட்டையில் அழிக்கப் பிறந்தவன், ஓடு ஓடு ஒளி நாவல் பற்றிய விளம்பரங்கள் உள்ளன.

ஆனால் யமுனா ராஜேந்திரன் சொல்வது: ”கிழக்கு பதிப்பகம் உலோகம் நாவலின் பின்னட்டையிலும் உள்அட்டையிலும் எழுதியிருக்கும் வாசகங்கள்தான் இவை.”

 

எப்படி யமுனாவால் ஒரு விஷயத்தை திரித்து எழுதமுடியும் என்பதற்கு இது உதாரணம். நான்கு விளம்பரங்கள், பின்னட்டையில் உள்ள வாசகத்தை ஒன்றாக்கி, சில வரிகளில் கோட் போட்டுவிட்டு, என்னவோ கிழக்கு பதிப்பகம் அப்படி எழுதியது போன்ற ஒரு தோற்றத்தைக் கொண்டுவருவது மூலம் இவர் சாதிக்கப் போவதென்ன என்று தெரியவில்லை.

 

 

யமுனா ராஜேந்திரனின் வலைத்தளம்: http://yamunarajendran.com/?p=1035

Share

மெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி

* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம். 

* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல.  இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக்கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை. 

* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சினையா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.

* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.

* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.

* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இருந்தால்.

* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும். 

* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.

* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு!

* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)

* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.

* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁

* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss. 

ஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.

Share

ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

மதிப்புரை.காம் தளத்தில் ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் என்ற புத்தகம் பற்றிய என் மதிப்புரை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

விரிவான ஆழமான விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மதிப்புரை.காம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் சில புத்தகங்களை இலவசமாகப் பெற்று விமர்சனம் செய்யும் வசதியும் உள்ளது.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை விமர்சனத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

சேமிப்புக்காக இங்கே:

ஆர் எஸ் எஸ்ஸை மிக நெருக்கமாக கடந்த 45 வருடங்களாகப் பார்த்துவரும் ஒருவர் ஆய்வு செய்து எழுதிய புத்தகம் இது. இவர் ஆர் எஸ் எஸ்ஸிலும் இருந்தவர். எனவே உள்ளே இருந்து எழும் ஒரு விமர்சனக் குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் குரல். அது கலகக்குரல் இல்லை. மாறாக விமர்சனக் குரல். ஒருவகையில் ஆர் எஸ் எஸ் எப்படி இருந்து இப்போது இப்படி வீழ்ச்சி அடைந்துவிட்டதே என்று வருத்தப்படும் குரல். அல்லது மீண்டும் ஆர் எஸ் எஸ் பழையபடி வீறுகொண்டு எழாதா என்று விரும்பும் ஏக்கக்குரல். இப்படி ஒரு கலவையாகவே இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடிகிறது.

ஆர் எஸ் எஸ்ஸின் முழுமையான வரலாற்றுப் பார்வையை இப்புத்தகம் தரவில்லை. என்றாலும், ஆர் எஸ் எஸ்ஸின் முக்கியமான மூன்று தலைவர்களின் ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் அலசுவதன்மூலம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாறும் விவரிக்கப்படுகிறது.

ஹெட்கேவர் காலத்தில் இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவே ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டது. அங்கே சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானவையாக வலியுறுத்தப்பட்டன. உயர்சாதி தாழ்ந்த சாதி வேறுபாடுகள் ஆர் எஸ் எஸ்ஸுக்குள் நுழையக்கூடாது என்பது ஹெட்கேவர் காட்டிய அக்கறையை மிகத் தெளிவாகவே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இந்த சாதி விஷயத்தில் ஆர் எஸ் எஸ் என்றுமே தன் நிலையிலிருந்து, யார் தலைவராக இருந்தபோதிலும், மாறிவிடவில்லை என்பதைத் தெளிவாகவே கூறுகிறார் நூலாசிரியர். முஸ்லிம் அராஜகத்துக்கு எதிராக ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்டது என்ற பொதுப்புத்தி கருத்துக்கு சஞ்சீவ் கேல்கர் தரும் பதில் மிக முக்கியமானது. 1974ல் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம், “எல்லா முக்கிய 22 கலவரங்களும் ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிமகளால் தொடங்கப்பட்டது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் நபர்கள் பெரிய பதவிகளில் இல்லை. மிகப்பெரிய கட்சியாக ஜனசங்கம் அறியப்பட்டிருக்கவில்லை. எல்லா நீதிபதிகளையும் இப்படித் தீர்ப்புக்கூறும் அளவுக்கு ஆர் எஸ் எஸ் பெரிய சக்தியாக இல்லை என்கிறார். அதாவது ஆர் எஸ் எஸ் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானதாக தொடங்கப்படவில்லை, மாறாக ஹிந்துக்களின் ஒற்றுமைக்கானது என்பதைச் சொல்கிறார். அதிகாரத்தைக் கையாள கொள்கையும் நேர்மையும்தான் அடித்தளமானது என்பதை இரண்டு தலைவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்கிறார், ஒருவர் காந்தி, மற்றொருவர் கோல்வல்கர்.

நூலில் கோல்வல்கரின் மீது வைக்கப்படும் ஒரு முக்கியமான விமர்சனம் அவர் தொலைநோக்கோடு முஸ்லிம்களை அணுகவில்லை என்பதுதான். கோல்வல்கரின் தேசியம் என்பது தேசத்தின் மதம் மற்றும் கொள்கையை நிச்சயம் ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்கி, அங்கேயே முடிந்துவிடுகிறது. ஒரு சமயம் ஹிந்து மதம் பரந்த மனம் கொண்டது என்று சொல்லும் கோல்வல்கர், இன்னொரு சமயம் இந்த தேசத்தின் கலாசாரத்தை முஸ்லிம்கள் ஏற்கவேண்டும் என்பதை எப்படி நியாயப்படுத்தமுடியும் என்கிறார் நூலாசிரியர். இதில் மிகமுக்கியமானது, முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்பதை கோல்வல்கர் ஏற்கவில்லை என்பதுதான்.

கோல்வல்கரின் மிக முக்கியமான அம்சமாக ஆசிரியர் சொல்வது – அதிகார வெறுப்பு. அதாவது அரசியலில் இருந்து விலகி இருத்தல். கோல்வல்கர் ஒரு தூய்மைவாதி. இதனால் ஆர் எஸ் எஸ் இறுகிப் போன ஒரு அமைப்பாக இருந்தது என்பதே ஆசிரியரின் பார்வை. ஒருவகையில் இந்த இறுகிப் போன தன்மைதான், ஆர் எஸ் எஸ்ஸின் நெருப்பு நிமிடங்களைக் கடக்க உதவியது என்றால் மிகையில்லை. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸின் மீதான பழி, ஆர் எஸ் எஸ் தடை என எல்லாவற்றையும் கோல்வல்கர் தனது தூய்மைவாதத்தால்தான் வென்றெடுத்தார். ஒருவகையில் அந்த நிலையில் கோல்வல்கரின் பார்வை சரியானதே. ஆனால் ஆசிரியர் இதை ஏற்கவில்லை.

காந்தி கொலையில் ஒரே வரியில் அதில் ஆர் எஸ் எஸ் பங்குபெற்றிருக்குமோ என்று சந்தேகம்கூடப் படமுடியாது என்று கடந்துபோகிறார் சஞ்சீவ் கேல்கர். அந்த நிலையைக் கோல்வல்கர் கையாண்ட விதத்தையும் மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார். மூர்க்கத்தனமான தடையைத் தாண்டி வெளியேற ஆர் எஸ் எஸ் கைக்கொண்ட சக்தியை, அதற்குப் பின்னர் சரியாக கோல்வல்கர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். தேவையே இல்லாமல் ஆர் எஸ் எஸ் தன்னை குறுக்கிக்கொண்டு, சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து, தன்னை வெளிப்படுத்தாமல் நடந்துகொண்டது என்கிறார். இதுவே கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் கோல்வல்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டது என்கிறார்.

கோல்வல்கர் தூய்மைவாதி என்றால் தேவரஸை நவீனவாதியாக ஆசிரியர் பார்க்கிறார். உண்மையில் கோல்வல்கரின் மீதான ஒவ்வொரு விமர்சனத்தின் பின்னாலும் தேவரஸைப் பற்றிய ஆசிரியரின் பிம்பம் உள்ளது என்பதே உண்மை. இதை ஒட்டி கோல்வல்கரின் செயல்பாடுகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை ஆசிரியர் முன்வைக்கிறார். கோல்வல்கரின் பிடியில் ஆர் எஸ் எஸ் செல்வதற்கு முன்பாகவே தேவரஸ் வந்திருந்தால் ஆர் எஸ் எஸ் மிக உன்னதமான நிலையை எட்டியிருக்கும் என்பதே ஆசிரியரின் எண்ணம்.

கோல்வல்கருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் (இதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன) முதலில் ஆர் எஸ் எஸ்ஸின் பணிகளில் இருந்து விலகியிருந்த தேவரஸ் திரும்ப வருகிறார். அரசியலில் பங்கெடுக்க தேவரஸை கோல்வல்கர் அனுமதிக்கவே இல்லை. தூய்மைவாதிக்கும் நவீனவாதிக்கும் இடையேயான முரண் இது. தேவரஸை ஆர் எஸ் எஸ் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும், கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் மையவாதத்திலிருந்து மாறுபட்ட போக்கை தேவரஸ் கையாண்டது சரியானது என்பதும் ஆசிரியர் பல இடங்களில் பல விளக்கங்களுடன் சொல்லிச் செல்கிறார். மிக முக்கியமான விஷயம், இந்த மூன்று தலைவர்களுக்குள்ளும் கொள்கையில் வேறுபாடு இல்லை என்பதே. ஆனால் அதை அடையும் வழி குறித்து மிகத் தீர்மானமான கருத்துகள் ஒவ்வொருவர் முன்னேயும் இருந்தன. ஹெட்கேவரின் சிந்தனையையும் வழியையும் மீண்டும் கொண்டு செல்பவர் தேவரஸ் என்றே ஆசிரிரியர் விவரிக்கிறார். ஆனால் கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் அதை முதலில் விரும்பவில்லை.

1973ல் தேவரஸ் ஆர் எஸ் எஸ் தலைவரானதும்தான் அரவணைத்துச் செல்லும்போக்கு தொடங்குகிறது. எல்லாருடனும் நட்புடன் இருப்பது பாவமல்ல என்றும் தனக்குள் ஆர் எஸ் எஸ் சுருங்கிக் கிடக்கவேண்டியதில்லை என்றும் புரியத் தொடங்குகிறது. ஆர் எஸ் எஸ்ஸின் புறத்தோற்றத்தை மாற்ற, அதன் ஷாகாவிலிருந்து தொடங்க நினைக்கிறார். கால் சட்டையை மாற்றக் கூட நினைக்கிறார். சிலவற்றை அவரால் செய்யமுடியவில்லை. பழமையை மாற்ற பலர் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஆர் எஸ் எஸ் யதார்த்தவாதத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய அமைப்பாக தேவரஸ் காலத்தில் மாறுகிறது என்பது உண்மைதான்.

முஸ்லிம்களைத் தள்ளி வைப்பதைத் தவிர்க்கும் தேவரஸ், அவர்கள் குறைந்தபட்ச சாகா நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இந்தியாவைத் தாய்நாடாகக் கருதினால், தங்கள் முந்தைய காலம் இந்தியாவுடன் தொடர்புடையது என்று கருதினால் அவர்களும் நம்மவர்களே என்ற எண்ணத்தை விதைக்கிறார். முஸ்லிம்களுக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒழிக்க ஆர் எஸ் எஸ்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து செயல்பட்டவர் தேவரஸ் என்கிறார் சஞ்சீவ் கேல்கர்.

இதற்குப் பின்பு நெருக்கடி நிலை பற்றியும் அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் தொண்டு பற்றியும் விளக்குகிறார். கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய அவரது பார்வையும், அவர்களது வீழ்ச்சியும் இப்புத்தகத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ ஒரு புள்ளியில் கம்யூனிஸமும் ஆர் எஸ் எஸ் கொள்கையும் இணையவேண்டும் என்று ஆசிரியர் விரும்புதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வியிலிருந்து ஆர் எஸ் எஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.

இந்நூலிம் முக்கியத்துவம், வெறுமனே ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடாதது. அதேபோல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாது. மாறாக, மிகத் தெளிவான கறாரான விமர்சனங்கள், அவையும் அவற்றுக்கான ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளதுதான். ஜாதியைப் பொறுத்தவரை ஆர் எஸ் எஸ்ஸில் மாற்றுக் கருத்துகளே இல்லை என்பதில் தொடங்கி, காந்தி கொலையில் ஆர் எஸ் எஸ் பங்கிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வதிலாகட்டும், இந்தியாவில் ஹிந்துக்களிடையே ஒரு பரந்த கலாசார ஒற்றுமை இருக்கிறது என்று எடுத்துக்காட்டுடன் சொல்வதிலாகட்டும், சஞ்சீவ் கேல்கருக்கு எவ்வித சந்தேகங்களும் இருப்பதில்லை. மிகத் தீர்க்கமான பார்வையுடன் அனைத்தையும் அணுகிறார். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வகை அணுகல்தான் புத்தகம் முழுக்க.

தேவரஸ் மீதான ஆசிரியரின் சாய்வு ஒரு கட்டத்தில் கோல்வல்கரை மிக அதிகமாக விமர்சிப்பதில் முடிகிறதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை.

ஆர் எஸ் எஸ் பற்றியும், கோல்வல்கர் தேவரஸ் பற்றியும் புரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது. ஆர் எஸ் எஸ்ஸின் வரலாற்றோடு இந்தியாவின் வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்திலும் பார்க்கமுடிகிறது.

இந்த நூலின் பின்னிணைப்பாக ‘தலித்களின் தசராவும் ஆர் எஸ் எஸ்ஸின் தசராவும்’ என்று ஒரு கட்டுரை உள்ளது. மிக முக்கியமானது. மிக உணர்வுப்புர்வமானது. டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் ஹெட்கேவரும் உருவாக்கிய அமைப்புகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தைச் சொல்வது. இன்னொரு பின்னிணைப்பு ஆர் எஸ் எஸ்ஸின் சாசகம் பற்றியது. இதுவும் முக்கியமானது.

மிகச் சிக்கலான ஆழமான ஒரு நூல் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும், சஞ்சீவ் கேல்கர், தமிழில் சாருகேசி, 382 பக்கங்கள், விலை ரூ 300, கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-156-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share

வெள்ளம்

10632752_754840337909529_2357361909193283785_n
Photo credit: Viveka Vivek, Nellai Maanagaram facebook group

நெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.

எனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.

அதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.” 

இரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.

மெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.

அப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.

தேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.

பாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்‌ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது.  பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு? பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன். 

எத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.

ஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.

வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.

குறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/

Share

உயிருள்ள இயற்கை உணவுகள் – புத்தக அறிமுகம்

100-00-0001-728-7_b

உயிருள்ள இயற்கை உணவுகள் புத்தகத்தைப் படித்தேன். நமக்குச் சமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவும் மனைவியும் கிட்டத்தட்ட நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் டாக்டர் ரெட்டியும் சசிரேகாவும். சமைக்காத உணவை எப்படி ருசியோடு சாப்பிட முடியும் என்று தெரியவில்லை. ருசி எதற்கு என்று வாயைக் கட்டச் சொல்பவர்கள் நடையைக் கட்டவும். எவற்றையெல்லாம் சமைக்காமல் உண்ணலாம் அல்லது குறைவான அளவில் சமைத்து சத்தோடு உண்ணலாம் என்று ஒரு பெரிய பட்டியலையும் தந்திருக்கிறார்கள். தினமும் எப்படி உணவுமுறையைக் கையாளலாம் என்ற அறிவுரையும் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.

தேங்காய் பாதி, கொய்யாப் பழம் நான்கு, ஐந்து வாழைப் பழம், நான்கு கிலோ கேரட் என ஒரு நாளைக்கான செலவு ப்த்து ரூபாய் கூட ஆகாது என்றெல்லாம் அதிர்ச்சிகள் புத்தகம் முழுக்க உண்டு.

சமைத்து உண்ணும் புல்தடுக்கி பயில்வான்களுக்கும் சமைக்காமல் உண்ணும் வீரர்களுக்கும் இடையே போட்டியில் சமைக்காத உணவை உண்ணும் வீரர்களே வெல்கிறார்கள் என்று ஐயம்திரிபறச் சொல்கிறார் ஆசிரியர். அதிலும் மேற்படி விஷயத்தில், சமைத்த உணவை உண்பவர்கள் தினசரி ஐந்து நிமிட வெறியில் தங்கள் சுகத்தை முடித்துக்கொள்கிறார்கள் என்றும், சமைக்காத உணவை உண்பவர்கள் வாரம் இரண்டு முறை பல மணி நேரங்கள் என்றும் ஆசிரியர் சொல்கிறார். சோதித்துப் பார்த்தவர்கள் பதில் சொல்லவும். 🙂

சிவ சைலத்தில் இதுபோன்ற சிகிச்சை எடுத்தவர்களின் கடிதப் பட்டியல் பல இருக்கிறது. சமைக்காத உணவின் மகத்துவத்தை அக்கடிதங்கள் தெரியப்படுத்துகின்றன.

உபவாசம் பற்றியும் சொல்கிறார். ஒரு நாள் உபவாசம் இருப்பது நம் வாழ்நாளை பத்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்கிறார். உபவாசத்தின் பல நன்மைகளைச் சொல்கிறார். தமிழ்நாடெங்கும் இருக்கும் இயற்கை உணவு மருத்துவர்களைப் பற்றிய குறிப்பும் இயற்கை உணவு மையங்கள் பற்றிய உண்டு. கடைசி சில பக்கங்கள் புத்தகத்தோடு ஒட்டாமல் என்னென்னவோ ஏதேதோ சொல்லிச் செல்கின்றன.

சமைக்காத உணவை உண்கிறோமோ இல்லையா, படிக்க, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான நூல்தான்.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0001-728-7.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share