வந்தார்கள் வென்றார்கள்

சின்ன வயதில் அதாவது 21 வயதில்! நான் விரும்பி வாசித்த முதல் அ-புனைவு புத்தகம் வந்தார்கள் வென்றார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திருநெல்வேலி டவுன் நூலகத்தில் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு வாசித்தேன். அதிலுள்ள படங்கள் ரொம்பவும் பிடித்துப்போய் அவற்றை மட்டும் கிழித்து எடுத்து வைத்துக்கொண்டேன். சில மாந்திரிகப் புத்தகங்களைப் படித்து பயந்து போய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. கட்டை விரலை சூரியன் முன்னர் காண்பித்து சூரியனுடன் கட்டைவிரலைப் பார்த்து கண்ணை மூடினால் கட்டை விரல் நிழல் கண்ணுக்குள் தெரியும் விதத்தில் உங்கள் மரணத்தை நிர்ணயிக்கலாம் என்ற ரீதியில் என்னவோ படித்து சூரியனைப் பார்த்து கண்ணை மூடி சட்டெனத் திறந்து – நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.
 
பாடங்கள் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்க விடமாட்டார்கள் வீட்டில். ஆனந்தவிகடன் குமுதம் என்று எதுவும் படிக்கக்கூடாது. பின்னர்தானே நாவலெல்லாம். 6ம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு விடுமுறையில் சில புத்தகங்கள் வாசித்தேன். கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவல், சாண்டில்யனின் ஒரே சமூக நாவல் (புயல் வீசிய இரவில்?) என்று சிலவற்றைப் படித்தேன். பள்ளி திறந்ததும் பாடப் புத்தகத்தைத் தவிர எதையும் தொடக்கூடாது. கல்லூரி செல்லவும் கொஞ்சம் தைரியமாக நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே நெல்லை நூலகம் வழி, பாலகுமாரனின் பல புத்தகங்கள் என்று விரிந்தது.
 
வேலை கிடைத்ததும் வந்தார்கள் வென்றார்கள் வாங்கினேன். மிரள வைத்த புத்தகம் அது. இத்தனை நாள் இப்புத்தகத்தைப் படிக்காமல் இருந்துவிட்டோமோ என்கிற எரிச்சல் ஒரு பக்கம். பள்ளியில் இதே முகலாயர்களை ஏன் இப்படி அறிமுகப்படுத்தவில்லை என்ற கடுப்பு இன்னொரு பக்கம். சரி, பாடப்புத்தகத்தில்தான் ஏமாற்றினார்கள் என்றால், ஒரு ஆசிரியர்கூடவா இவர்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தைச் சொல்லமாட்டார்கள் என்ற கோபம் ஒரு பக்கம்.
 
பள்ளிகளில் படிக்கும்போதே பாடப்புத்தகங்கள் நீங்கலாக மற்ற புத்தகங்களையும் மாணவர்களைப் படிக்கச் சொன்னால்தால் அவர்களது அறிவு துலங்கும். இல்லையென்றால் பாடங்களிலும் தேங்கவே செய்வார்கள். இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொள்வதே இல்லை.
 
என் மகன் படிக்கும் பள்ளியில் மிக நன்றாகச் சொல்லித் தருகிறார்கள். நான் என்னவெல்லாம் சொல்லித் தர நினைக்கிறேனோ அதை அவர்களே நடத்திவிடுகிறார்கள். பெரிய ஆச்சரியம் இது. தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என எல்லாப் பாடங்களையும் அவர்கள் நடத்தும் விதத்தைப் பெரிய அளவில் பாராட்டவேண்டும். 8ம் வகுப்பு பாடத்தில் முகலாயர்கள் பற்றிய பாடம் உள்ளது. நாங்கள் படிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. அக்பர், பாபர் போன்ற அரசர்களைப் பற்றி நல்ல விதமான எண்ணம் வரும்படியே புத்தகம் உள்ளது. மாணவர்களுக்கு இது போதும் என்று நினைத்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் மீது படையெடுத்த அனைத்து படையெடுப்புகளின் உண்மையான செயல்பாடுகளைக் கொஞ்சமாவது சொல்லவேண்டும் என்பதே. கோயில்கள் அழிப்பு, ஹிந்துக்கள் அழிப்பு போன்றவையெல்லாம் தேவையில்லை. அவை மாணவர்கள் மத்தியில் இந்நாளைய மனிதர்கள் மீது தேவையற்ற தவறான கருத்துகளைக் கொண்டு வரலாம். ஆனால் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் கருணையானவர்கள், அக்பர், பாபர் எல்லாம் நல்லவர்கள் என்கிற பிம்பத்தைக் கொண்டுவராமல் இருந்திருக்கவேண்டும். இன்றும் இப்புத்தகங்கள் இச்செயலைச் செய்யவில்லை.
 
ஆனால் பள்ளியில் மிகத் தெளிவாகப் பாடத்தை நடத்தி இருக்கிறார்கள். முகலாயர்களுக்குள் இருந்த உள்நாட்டுச் சண்டைகள், அரச பதவிக்கான போட்டி, அதில் செய்யப்படும் கொலைகள் என எல்லாவற்றையும் மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் மத விஷயங்களுக்குள் போகவில்லை. இது பெரிய விஷயம்.
 
என்னிடம் இருந்த ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆடியோ சிடியை என் மகனிடம் கொடுத்துக் கேட்கச் சொன்னேன். நேற்று ஒரே நாளில் 3 மணி நேரம் கேட்டுவிட்டான். மொத்தம் 12 மணி நேரம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை முடித்ததும் இதைப் படிக்கச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் பள்ளியில் முகலாயர்கள் பாடம் வரும்போது இதைக் கேட்பது நல்லது என்பதால் இப்போதே கேட்கச் சொன்னேன். அதில் உள்ள பலவற்றை பள்ளியில் இருக்கும் சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தான்.
 
வந்தார்கள் வென்றார்கள் ஆடியோ அபிராமை அசைத்துப் பார்க்கிறது. எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம். கூடவே நான் சொன்னது – முகலாயர்கள் வேறு, இந்திய முஸ்லிம்கள் வேறு. (இந்த எண்ணத்தினால்தான் பாடத்திட்டமும் பெரும்பாலும் நல்லவற்றை மட்டுமே எழுதுகிறது என்பது புரிகிறது.) இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னதன் காரணம், இப்போதே இந்தியர்கள் குறித்த வேற்றுமை கலந்த ஒற்றுமை அவன் மனத்தில் பதிய வேண்டும் என்பதாலும் நான் அதை உண்மையாக நம்புகிறேன் என்பதாலும். இவற்றையெல்லாம் விட, ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டும் திணிக்கப்படும் வெறுப்பைக் குறித்தும் அதன் அநியாயம் குறித்தும் இந்த திராவிடக் கட்சியின் ஆட்சி நடந்த/நடக்கும் நாட்டில் நான் இன்றுவரை உணர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதாலும்தான். எந்த ஒன்றையும் மீறி நம்மை இணைக்கவேண்டியது இந்தியன் என்கிற எண்ணமும் இந்தியா என்கிற கருத்தாக்கமும்தான். இதை இப்போதே விதைக்கவேண்டும். இதுவே சரியான நேரம்.
Share

சென்னை வானொலி 81

சென்னை ரேடியோ 81
 
நாங்களெல்லாம் சின்ன வயசில் வானொலி வெறியர்கள். கையில் ஒரு ரேடியோவை வைத்துக்கொண்டு அதன் பட்டனைத் திருகு திருகென்று திருகி திரைப்படப்பாடல் கேட்டு வளர்ந்தவர்கள். என் அம்மா தன் இளம் வயதில் இரவு விழித்திருந்து ஃப்ளாஸ்க்கில் காப்பி போட்டு வைத்துக் குடித்துக்கொண்டு விழித்திருந்து பாட்டு கேட்டவர்கள். கர்நாடக சங்கீதம் என்னவென்றே என் அப்பாவுக்குத் தெரியாது என்றாலும் ரேடியோவில் எங்காவது காதில் விழும் ஆலாபனைகள் அனைத்துக்கும் ஒரே மாதிரியாகத் தலையை ஆட்டி, கையைத் தட்டித் தாளம் போட்டவர்.
 
எத்தனை கஷ்டத்திலும் என் வீட்டில் எப்போதும் ரேடியோவும் டேப் ரிக்கார்டரும் இல்லாமல் இருந்ததில்லை. சங்கராபரணம் வீட்டில் ஓடிய ஓட்டத்தில் கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்த தமிழர்கள் தெலுங்கர்களாகிவிடுவோமோ என்ற அச்சமெல்லாம் வந்ததுண்டு. திருவிளையாடல் சரஸ்வதி சபதம் வசனம் தமிழ்நாட்டைவிட எங்கள் வீட்டில் அதிகம் ஒலித்திருக்கும்.
 
இப்பேர்க்கொத்த பரம்பரையில் வந்த ரேடியோ சோழன் எம்எல்ஏவாகிய நானும் இதே ரேஞ்சில் ரேடியோ பைத்தியமாக இருந்தேன். கேசட் வாங்க காசில்லாததால் ரேடியோவே சரணம். திருநெல்வேலியில் இருந்து சென்னை ரேடியோ கேட்க அல்லல்பட்டதெல்லாம் இன்னும் நினைவிருக்கிறது. இலங்கை ஒலிபரப்புதான் எங்களைக் காப்பாற்றி உயிருடன் இருக்க வைத்தது. இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலைதான். மதுரைக்குக் குடி பெயர்ந்ததும் கொஞ்சம் சென்னை ரேடியோ கேட்கக் கிடைத்தது. டொய்ங் ட்யூயூ சத்தத்துக்கு நடுவில் சென்னை ஒலிபரப்பின் திரைப்பாடல்களைக் கொஞ்சூண்டு கேட்டோம். என்னவோ சாதித்த மிதப்பு ஒன்று வரும். காலை 8 மணிக்கு, இரவு பத்து மணிக்கு ரேடியோவில் சரியான அலைவரிசை கிடைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். ரேடியோவை அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திருப்பி, சரியாக 750 பக்கத்தில் ஒரு அலைவரிசையில் அந்த சிவப்புக் கோட்டு ட்யூனரை நிறுத்தி வைத்து… இதில் சில ட்யூனர்கள் 700ல் நிற்கும், ஆனால் 600க்கான அலைவரிசையை ஒலிபரப்பும். எனவே குத்துமதிப்பாக ஒரு கரெக்‌ஷன் போட்டு அந்த ட்யூனரைத் திருகி, ரேடியோ தலைகீழாக ஓரமாக நிற்க வைத்து – என்னவெல்லாமோ செய்திருக்கிறோம்.
 
ஒரு படப்பாடல், ஒரு பாடல் முடிவின் வார்த்தையில் தொடங்கும் அடுத்த பாடல் என்று என்னவெல்லாமோ மாயாஜாலம் செய்வார்கள். திரைப்படங்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லி, ஒரு பொருள் வருமாறு சொல்வார்கள். காரில் போகும் பாடல்களாகப் போடுவார்கள். ஆனால் திருநெல்வேலி ரேடியோ ரொம்ப சுத்தபத்தம். இதையெல்லாம் செய்யாது. கடுப்பாக வரும். 85களின் பிற்பகுதியில் மதுரை ரேடியோ வந்ததும், தெளிவாகப் பாடல்கள் கேட்க ஆரம்பித்தோம். சென்னையின் அனைத்து நூதனங்களையும் மதுரை வானொலி செய்தது. காலை 8.20க்குத் துவங்கி 9 மணி வரை திரைப்படப் பாடல்கள். வீட்டில் இருந்து 8.45க்குக் கிளம்பி 9 மணிக்குப் பள்ளி அடையும்வரை தொடர்ச்சியாக எல்லார் வீட்டிலும் பாடல்கள் கேட்கும். கேட்டுக்கொண்டே நடக்கலாம். அற்புதமான உணர்வு அது.
 
சென்னை ஏ எம்-ஐ, சிற்றலையில் கேட்கலாம் என்று கேள்விப்பட்டபோது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சிற்றலை என்ற ஒன்றை அதுவரை பயன்படுத்தியது கூட இல்லை. சென்னை ஏ எம்மை சிற்றலையில் கேட்டோம். இதை எப்படிச் சரியாகச் சொல்வது என்று தெரியவில்லை. பேண்ட் 2 என்ற நினைவு. பாடல்கள் தெளிவாக இருக்கும். ஆனால் ஆனால் ஆனால், ஐயோ, கொஞ்சம் குறைந்தும் பின்னர் அதிகமாகவும் பின்னர் குறைந்தும் ஒலி கேட்கும். ஒரு மலைமீது நின்றுகொண்டு, ஊருக்குள் ஒலிக்கும் ஸ்பீக்கர் ஒலி காற்றில் உயர்ந்தும் தாழ்ந்தும் கேட்பது போல. கண்ணீர் வரும். அதிலும் சென்னையின் கிரிக்கெட் வர்ணனையைக் கேட்கும்போது அவுட் ஆகும்போதோ அல்லது சிக்ஸ் அடிக்கும்போதோ ஒலி உள்ளே போய்விடும். அப்புறம் அந்த ஹிந்திக்காரன் எழவெடுப்பான், என்ன சொல்கிறான் என்பது புரிந்தும் தொலையாது. ஹேண்ட்ஸ்ஃப்ரியும் கிடையாது. பெரிய ரேடியோவை காதுக்குள் திணித்து திணித்து, என்ன கடவுள் இவனெல்லாம், காதைக் கொஞ்சம் பெரியதாகப் படைத்துத் தொலைத்தால்தான் என்ன என்ற விரக்திக்குள் நுழையும்போது டெண்டுல்கர் அவுட் ஆனது புரிந்திருக்கும்.
 
நாஸ்டால்ஜியா கொட்டமிடும் நேரத்தில் இப்போதும் தஞ்சம் புகுவது ரேடியோவிடத்தில்தான். எல்லா ஏ எம் சானல்களும் இணையத்தில் கிடைப்பதில்லை. சென்னை மட்டும் கிடைக்கிறது. (சிம்பிள் ரேடியோ ஆப்.) திருநெல்வேலி மதுரை வானொலி ஏ எம் சானல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும். முன்பு திருநெல்வேலியில் இருக்கும்போது திருநெல்வேலியைவிட திருவனந்தபுரம் ஏ எம் துல்லியமாகக் கேட்கும். கடும் கோபமாக வரும். இதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வைத்துத்தான் நேரம் தெரிந்துகொள்வோம். மதுரையில் பாட்டு போட்டால் 8.20. பொங்கும் பூம்புனல் என்றால் 7 என நினைவு. இலங்கை ஒலிபரப்பை நிறுத்தினால் 10. பின்னர் எதோ நேர கரெக்‌ஷன் போட்டு 10.30 என்றான நினைவு. வானொலியுடனேயே வளர்ந்தோம். அயர்ன் கடைக்காரர் வானொலியில் என்ன வருகிறதோ அதைக் கேட்டுக்கொண்டு அயர்ன் செய்வார். தெருவில் கட்டில் போட்டுப் படுத்துக்கொள்பவரின் தலைக்குப் பக்கத்தில் ரேடியோ இருக்கும். ரேடியோவின் அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு குரலுக்கும் பெரிய எண்ணிக்கையில் ரசிகர்கள். ராஜிவ்காந்தி கொலையை அறிவித்த செல்வராஜின் (பெயர் சரியா?) குரல் இன்னும் நினைவிருக்கிறது. என்னென்ன நினைவுகள்.
 
இன்று சென்னை வானொலி 81ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கிறதாம். அனைத்து ஏ எம் சானல்களையும் இணையத்தில், ஆப்பில் கிடைக்க வைக்காவிட்டால் சீக்கிரம் மூடுவிழாதான். அப்படி மூடு விழா நடக்காமல் 100ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க வாழ்த்துகள்.
Share

no more blue print for Tamilnadu text books

அரசுத் தேர்வுகளில் ப்ளூ ப்ரிண்ட் என்ற ஒன்று இனி இருக்காது என்பது ஒரு தொடக்கம். ஆனால் இதுவே பெரிய தீர்வு அல்ல. ப்ளூ பிரிண்ட் என்பது, படிப்பில் மிகவும் பின் தங்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிய ஒன்று. ஐந்து மதிப்பெண்கள் கேள்வி, முதல் பாடத்தில் இருந்தும் அல்லது இரண்டாம் பாடத்தில் இருந்து வரும் என்று தெரியவந்தால், ஏதேனும் ஒரு பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்களையும் படிப்பதன்மூலம், இரண்டாவது பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளையும் படிக்காமல் விட்டுவிடலாம். ஏற்கெனவே படிக்கத் திணறும் மாணவர்களுக்கு இது கொஞ்சம் உதவும்.
 
ஆனால் இது எங்கெல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தியது? ப்ளூ பிரிண்ட் படி ஆசிரியர்கள் பாடம் நடத்தத் துவங்கினார்கள். இரண்டாம் பாடத்தின் ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளை நடத்துவது கடினம் என்றால், ப்ளூ பிரிண்ட்டைக் காரணம் காட்டி அதை நடத்தாமல் விட்டார்கள். இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை உண்டானது.
 
பதினோராம் வகுப்பின் ப்ளூ பிரிண்ட்டைப் பயன்படுத்தி, எவையெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் வருமோ அந்தப் பாடங்களை மட்டும் பதினோராம் வகுப்பில் எடுத்தார்கள். மற்றவற்றை எடுக்காமல் விட்டார்கள். இதனால் சில குறிப்பிட்ட பாடங்களை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் முற்றிலும் இழக்கும் நிலை உருவானது. இப்பாடங்களில் இருந்து கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்கப்பட்டால் பதில் சொல்லமுடியாமல் திணறும் நிலை உருவானது.
 
ப்ளூ பிரிண்ட் இனி இல்லை என்பது நல்ல சிறிய தொடக்கம். ஆனால் முழுமையாகச் செய்யவேண்டியவை – ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஒரு பாடத்தின் தேவையை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விதமும் அவசியமும், புத்தகத்தில் அச்சில் இருப்பது அல்ல ஒரு பாடம்; அது எப்படிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை ஆசிரியகளுக்கு விளக்கவேண்டிய அவசியம், பாடத்தை மனனம் செய்வதை விட்டுவிட்டு (அல்லது குறைந்த அளவில் மனனம் செய்து) புரிந்துகொண்டு படித்து பதில் அளிக்கவேண்டிய அவசியத்தை; இது இயலக்கூடிய ஒரு செயலே என்பதை ஆசிரியர்களுக்கு முதலில் உணர்த்தவேண்டியது – இவைதான் முக்கியம். மாணவர்களின் வீழ்ச்சிக்கு ஆசிரியர்களே காரணம். ஆசிரியர்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்படியாக மாணவர்களை உருவாக்கும் தேவையை அவர்களுக்குச் சொல்வதன் மூலமாகவுமே அடுத்த இடத்துக்கு நகரமுடியும்.
 
அதிகமாகப் படிக்கக் கொடுப்பது, நெட்டுரு போட்டு எழுதச் சொல்லி மார்க் வாங்க வைப்பது, அதிகமாக எழுதி வரச்சொல்லி வீட்டுப்பாடங்கள் கொடுப்பது, அதிக நேரம் பள்ளிகளிலேயே தங்க வைத்து படிக்க வைத்து மதிப்பெண்கள் வாங்க வைப்பது, பதினோராம் வகுப்பின் பாதியிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, ஒன்பதாம் வகுப்பின் பாதிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டுப் பாடங்கள் நடத்தி முடித்துவிட்டு அதிகமாக தொடர்ச்சியாகப் பரீட்சைகள் நடத்துவது – இந்த முறைகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் யுக்தியில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளும் நிபுணத்துவம் பெற்றுவிட்டன. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஆட்டுமந்தை ஆக்கப்பட்டார்கள். பல பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்கள் உள்ளார்கள். மேலே சொன்ன பள்ளியின் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் உடன்பாடு இருக்காது. ஆனால் அவர்களும்கூட மதிப்பெண் நெருக்கடிக்கு ஆளாகி ஒரு பள்ளி என்ன செய்யவேண்டும் என நினைக்கிறதோ அதை மட்டும் செய்யவேண்டிய அழுத்தம் உள்ளது. இதிலிருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு வர அரசு பல வகைகளில் முயலவேண்டும். மதிப்பெண்கள் பின்னால் அலையும் மனப்போக்கைத் தவிர்த்துவிட்டு, ஆசிரியர்கள் தாங்கள் புரிந்துகொண்டு மாணவர்களையும் புரிந்துகொள்ளச் சொல்லிப் பாடம் நடத்தும் முறை வராமல் நமக்கு விடிவுகாலம் இல்லை.
Share

Mathippurai.com and Andhimazai book review contest

அந்திமழையின் அதிரடி விமர்சனப் போட்டி! (தலைப்பு இப்படித்தான் வைப்போம். க்யாரே செட்டிங்கா என்று கேட்பவர்கள் அன்புடன் ப்ளாக் செய்யப்படுவார்கள்.)

மதிப்புரை.காம் என்றொரு வலைத்தளம் நடத்திக்கொண்டிருந்தோம். நோக்கம், புத்தகங்களுக்கு நல்ல விமர்சனம் வரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இன்றைய நிலையில் அதிகம் விற்கும் நாளிதழ்களில், பத்திரிகைகளில் ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் வருவது அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் அது அத்தனை கடினமானதுமல்ல. பத்திரிகைகளின் நோக்கம் சார்ந்து தேவை பொருத்து விமர்சனங்களுக்கான புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும். பல விடுபடல்களை மீறி ஒரு புத்தகத்தின் விமர்சனம் வெளியாகவேண்டும். இதில் பத்திரிகைகளின் இடப்பற்றாக்குறை, வருமானம் தரும் பகுதி எதுவோ அதன் தேவை என்பதையெல்லாம் பொருத்தே புத்தக விமர்சனங்கள் வெளியிடப்படும். இந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்கு ஓரளவு ரீச் இருக்கும். அதேசமயம் இந்த விமர்சனங்கள் எல்லாம் புத்தக அறிமுகங்கள் என்ற அளவிலானவை மட்டுமே.

காலச்சுவடு, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் புத்தக விமர்சனங்கள் கொஞ்சம் தீவிரமானவை. புத்தகத்தை ஆராய்பவை. இவற்றை விமர்னங்கள் எனலாம். இப்பத்திரிகைகளுக்கு அல்லது பத்திரிகை ஆசிரியர்களுக்கு அல்லது விமர்சனத்தை எழுதும் ஐயோபாவம் எழுத்தாளருக்கு உரிய சாய்வுகளுடனேயே எந்தப் புத்தகத்தின் விமர்சனம் வரவேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

இவற்றையெல்லாம் மீறிப் பார்த்தால், ஒரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் விமர்சனங்கள் வருவதில்லை என்பதே உண்மை. இதில் எல்லாருக்கும் பங்குண்டு. எனவே குற்றங்களை நாம் நமது என்று பேசுவதே நியாயமானது.

மதிப்புரை.காம் என்ற தளம் தொடங்கப்பட்டது, ஆன்லைனில் எப்படி புத்தக விமர்சனங்களைக் கொண்டு செல்வது, அதன் மூலம் அக்குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனையை அதிகப்படுத்துவது என்ற நோக்கில்தான். இதன்படி புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகம் இலவசமாகத் தரப்படும். அவர்கள் அப்புத்தகத்துக்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டும். புத்தகத்தை நிராகரித்தும்கூட எழுதலாம். விமர்சகர்களின் சுதந்திரத்தில் எவ்விதக் குறுக்கீடும் இருக்காது. இதுதான் திட்டம்.

இத்திட்டம் தோல்வி அடைந்தது. காரணங்கள் என்ன? புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவசமாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது! மூன்றாவது, விமர்சகர்கள் வாங்கிய புத்தகத்துக்கு விமர்சனங்கள் அனுப்பவில்லை. தொடர்ச்சியாகக் கேட்டாலும் அவர்கள் உண்மையில் மனத்தளவில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் நினைத்தாலும் அதைச் செய்து முடிக்கமுடியாத சூழல். இது எல்லோருக்கும் நேர்வது. ஆனால் இதனால் சில சுணக்கங்கள் நேர்ந்தன. பதிப்பாளர்களிடம் மீண்டும் புத்தகம் கேட்கமுடியாத சூழல் இதனாலும் உருவானது. நான்காவதாக, அனாமதேய புத்தகங்கள் என்னும் சொல்லும் அளவுக்கான புத்தகங்கள் விமர்சனத்துக்கு வந்தன. அவற்றைப் படிக்கவோ விமர்சனம் செய்யவோ யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பதிப்பாளர்களிடம், எழுத்தாளர்களிடம் அப்புத்தகங்களை அனுப்பாதீர்கள் என்றும் சொல்லும் நிலை உருவானது. இதனால் சில சங்கடங்கள் நேர்ந்தன. ஐந்தாவதாக, நீண்ட புத்தக விமர்சனங்களைப் படிக்க அதிகம் யாரும் தயாராக இல்லை. ஆறாவதாக, இலவசமாகப் புத்தகத்தையும் கொடுத்து, அதை அனுப்பவும் கொரியர் செலவு செய்து – எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.

இந்த உண்மைகளின் முன்னே இயல்பாகவே மண்டியிட நேர்ந்தது. இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆனாலும் மதிப்புரை.காமில் பல முக்கிய விமர்சனங்கள் வெளியாகின. இது தொடர்ந்திருந்தால் மிக முக்கியமான விமர்சனத் தளமாக அது தொடர்ந்திருக்கும். இப்போதும்கூட இப்படி ஒரு தளத்தை, பதிப்பாளர்களின் உதவியுடன் யாரேனும் முயன்று பார்க்கலாம்.

அந்திமழை.காம் புத்தக விமர்சனத்துக்கென்று ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதற்குள் விமர்சனங்களை அனுப்பவேண்டும். மதிப்புரை.காமில் பங்குகொண்ட நண்பர்கள், புத்தக ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிகம் இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.

முதல் பரிசு – ரூ.10000
இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.

அந்திமழை விமர்சனப் போட்டி அறிவிப்பு இங்கே: http://andhimazhai.com/news/view/andhimazhai-zhakart-contest-2852018.html

Share

நாங்க ரெட்டைலா

கொக்கு பறக்குதடி வெள்ளைக் கொக்கு பறக்குதடி என்றொரு பாடல். வெள்ளையர்களின் கட்டுப்பாட்டை மீறி, அதே சமயம் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி, சுதந்திரக் கனலை மக்கள் மத்தியில் ஊட்டும்படியாக விஸ்வநாத தாஸ் பாடிய பாடல் இது. தடையை மீறவும் வேண்டும், ஆனால் அது அவர்களுக்கு வெளிப்படையாகத் தெரியும் படியும் இருக்கக்கூடாது.

இதை எடப்பாடியின் அதிமுக அரசு எப்படிக் கடைப்பிடிக்கிறது என்று பாருங்கள். தமிழக அரசின் சாதனைகளை (!) விளக்கும் செய்திப்படங்கள் திரையரங்கில் காட்டப்படும். சென்ற வாரம் பார்த்தது – சிரிப்பை வரவழைத்தது. மெட்ரோ ரயில் சேவைகளை எப்படி ஜெயலலிதா தமிழகத்துக்குத் தந்தார், அதை எப்படி எடப்பாடி பழனிசாமி விரிவுபடுத்தினார் என்பதை விளக்கும் செய்திமடல் அது. ஆலந்தூர் முன்னே ஒரு பெண் ஆட்டோ கிடைக்காமல் தவிக்கிறார். இன்னொரு பையன் இண்டர்வியூ செல்ல கால்டாக்ஸி கிடைக்காமல் தவிக்கிறார். அங்கே தத்வமஸி என்னும் நடமாடும் சர்பத் கடை நடத்துபவர், ஏன் இப்படி தவிக்கிறீர்கள், மெட்ரோ பயன்படுத்துங்கள் என்று மெட்ரோவின் அருமை பெருமைகளைச் சொல்லி வழி அனுப்பு வைக்கிறார். பக்காவாக நெல்லைத் தமிழ் பேசும் நடிகர் இவர். ஏன் நெல்லைத் தமிழ் பேசுகிறார் என்பதை க்ளைமாக்ஸில் பார்க்கலாம். ஆட்டோவும் கால்டாக்ஸியும் கிடைக்காத இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார்கள். இறங்கும் இடத்தில் தெரியாமல் ஒருவர் மீது மோதுகிறார்கள். அவரைப் பார்த்தால், ஆலந்தூரில் கடை நடத்திய அதே மனிதர். இருவரும் ஆச்சரியத்துடன் ‘நீங்க எப்படி இங்க’ என்கிறார்கள். உடனே அவர் சிரித்துக்கொண்டே, ‘ஆலந்தூரில் இருப்பது என் தம்பி, நான் அண்ணன்லா’ என்கிறார்.

டிவிஸ்ட் இங்கேதான். கேமராவைப் பார்த்து அவர் சொல்கிறார், “ஆமா, நாங்க ரெட்டையிலா.” நாங்க ரெட்டை இலை என்று கேட்கும்படியாக அவர் இந்த வசனத்தைச் சொல்கிறார்.

பின்குறிப்பு: இந்தத் தண்டத்துக்கு விஸ்வநாத தாஸ் போன்ற சாதனையாளர்களையெல்லாம் கோட் செய்ததற்கு மன்னித்துவிடவும்.

Share

காலா விமர்சனம்

காலா

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

படத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

Share

6th standard Tamilnadu stateboad Tamil book

ஆறாம் வகுப்புக்குரிய தமிழ்ப் பாட நூலை இன்று தரவிறக்கிப் பார்த்தேன். முழுமையாக ஆனால் மேலோட்டமாக ஓட்டிப் பார்த்ததில் –
 
* புத்தகம் நன்றாக வந்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம். பழமை புதுமை என்பதை ஓரளவுக்குச் சரியாக பகுத்து நிரவி இருக்கிறார்கள்.
 
* கடவுள் வணக்கம் இல்லை. தமிழ் வணக்கம் உள்ளது. புத்தகம் முழுக்க கடவுள் இன்றி இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது போன்ற பிரமை. புத்தர் பற்றி உள்ளது. வள்ளலார் பற்றி வரும்போது அவரது கருணையைச் சொல்கிறார்கள். தெரசாவைப் பற்றிச் சொல்லும்போதும் கருணையை மட்டுமே சொல்கிறார்கள். பொங்கல் பற்றிய பாடத்தில்கூட கதிவரனுக்கு நன்றி சொல்கிறார்கள், இயற்கையை வழிபடுகிறார்கள் என்று வருகிறதே ஒழிய, மறந்தும் பொங்கல் அன்று கடவுளை வழிபடுவார்கள் என்று சொல்லிவிடவில்லை. பராபரக் கண்ணியைக்கூட செக்யூலராகச் சொல்லி இருக்கிறார்கள். தாயுமானவரின் படம் பட்டையின்றி வெற்றுடலாக உள்ளது.
 
* காணி நிலம் வேண்டும் என்ற பாடல் உள்ளது. பாடலில் பராசக்தி என்று வருகிறது. பாடலின் பொருளில் பராசக்தி என்ற பெயர் இல்லை. 🙂
 
* சிலப்பதிகாரம், மணிமேகலை (நாடகவடிவில்) உண்டு.
 
* சிறகின் ஓசை – சிட்டுக்குருவி பற்றிய பாடம் இனிய அதிர்ச்சி. மகிழ்ச்சி. சலீம் அலியைப் பற்றிய குறிப்பும் உண்டு.
 
* கிழவனும் கடலும் புதினத்தின் ஒரு சிறிய பகுதி – காமிக்ஸ் வடிவில். அட்டகாசம்.
 
* முதல் எழுத்தும் சார்பெழுத்தும் – இதற்குத் தரப்பட்டிருக்கும் குறிப்புப் படம் (யானையும் பின் தொடரும் குட்டி யானைகளும்) நல்ல கற்பனை. அதேபோல் மொழி முதல் எழுத்துகள், இறுதி எழுத்துக்களுக்கான படமான புகைவண்டியின் படமும்.
 
* மூதுரைக்குப் பின்னே உள்ள நூல்வெளி பகுதில் இருக்கும் ஔவையார் நல்லவேளை பட்டை போட்டிருக்கிறார்.
 
* அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி ஒரு பாடம் உள்ளது.
 
* புத்தகத்தில் வரும் பெயர்கள் எல்லாம் ‘தூய்மையாக’ உள்ளன. இனியா, கணியன், கயல், முகிலன், செல்வன், வளவன், அமுதா, எழிலன், கரிகாலன்(!), மலர்க்கொடி, கவிதா, மாதவி. என்ன, பாத்திமா, பீட்டரும் உண்டு. ராமன், சிவனைத்தான் காணவில்லை.
 
* புதுமைகள் செய்த தேசமிது கவிதையில் இந்திய ஒருமைப்பாடு பேசப்பட்டுள்ளது.
 
* புத்தகம் முழுக்க பல விதங்களில் இடம்பெறுபவர் திருவள்ளுவர்.
 
* இணையச் செயல்பாடு என்று உரலி மூலம் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தி உள்ளார்கள். QR code உண்டு. பதினோறாம் வகுப்புப் பாடத்தின் QR codeஐ க்ளிக்கியபோது வீடியோ வந்தது. (அந்தக் கொடுமை பற்றி பின்னர்!) இந்த கோட்-ஐ க்ளிக்கினால் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
* உ.வே.சாமிநாதர் பின்னொட்டின்றி தோழராக இங்கேயும் தொடர்கிறார். ஆனால் நரசிம்மவர்மனை வர்மத்தோடு உலவ விட்டிருக்கிறார்கள். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வருகிறார்.
 
* எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் சிறுகதை ஒன்று இருக்கிறது.
 
நான் ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த முதல் பாடல் – கடவுள் வாழ்த்து – வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி பாடல். இன்றைய நவீன பாடத்திட்டத்தில் ஹிந்து மதக் கடவுள்களின் வாசம் முழு வீச்சில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று – பாஜக இந்திய அளவில் இதற்கிணையாக இப்படிச் செய்யவேண்டும் அல்லது முற்போக்காளர்கள் இப்படிப் பாடத்திட்டம் இருப்பதை ஒரே அளவுகோலில் இந்தியா முழுமைக்கும் ஏற்கவோ கண்டிக்கவோ வேண்டும்.
Share

சூழல் பேணல்

நான் காந்தி நிகேதன் பள்ளியில் (கல்லுப்பட்டி) படித்துக்கொண்டிருந்தபோது தினமும் பள்ளியைச் சுத்தம் செய்யவேண்டும். பள்ளி என்றால் வகுப்பறைகளை மட்டும் அல்ல, பள்ளியைச் சுற்றியுள்ள இடங்கள், மண் தரை எல்லாம். அங்கே நின்றிருக்கும் மரங்களில் இருந்து விழும் இலைகள், காக்கை எச்சம் என எல்லாவற்றையும் தினமும் சுத்தம் செய்யவேண்டும். அன்றெல்லாம் கடும் எரிச்சல் தந்த பணி அது. அந்தப் பள்ளியில் படித்ததற்காக ரொம்ப வருத்தமும் எரிச்சலும் பட்டேன். (இன்றும் பல்வேறு காரணங்களுக்காக அந்த நினைவு அப்படியே உள்ளது. நான் படித்ததிலேயே மிக மோசமான பள்ளி அதுதான்.) அப்போதெல்லாம் அக்காங்களும் ஐயாக்களும் (ஆசிரியர்களை இப்படித்தான் அழைக்கவேண்டும்) காந்தி எப்படி தன் வாழிடப் பகுதிகளைத் தானே சுத்தம் செய்தார், எப்படிக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்தார் என்றெல்லாம் விளக்கி, தங்கள் இடத்தைத் தாங்களே சுத்தம் செய்யவேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். பள்ளி காந்தியத்தை பிரம்படியில் போதித்தது. சரியான உணவு இல்லாமல், மிகவும் ஏழ்மை நிலையில் மயங்கிச் சரியும் மாணவர்களைக் கொண்டு இந்த வேலைகளைச் செய்தது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனம் என்றே அன்று நினைத்தேன். வயது அப்போது 12 இருக்கலாம்.
 
பிற்பாடு, ஒரு மாணவன் தன் பள்ளியைச் சுத்தம் செய்வது அத்தனை பெரிய மோசமான காரியமில்லை என்ற எண்ணம் வந்தது. ஆனால் அந்தப் பள்ளியில் அத்தனை கெடுபிடியில் அதைச் செய்திருக்கக்கூடாது என்று இன்றும் தோன்றுகிறது.
 
 
இன்று இந்தச் செய்தியைப் பார்க்கிறேன். இனி பள்ளிகளில் இப்படிச் சுத்தம் செய்யச் சொன்னால் பெற்றோர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது புரிகிறது. ஆசிரியர்களின் கைகளில் இருந்த பள்ளிகள் இன்று மாணவர்களின் கைகளில் உள்ளது. ஆசிரியர்களின் வேலை ஒழுங்காகப் படிப்பு மட்டும் சொல்லித் தருவது என்பதோடு சுருங்கிவிட்டது. அதற்கு மேல் கண்டித்தால் எந்த வடிவிலும் பிரச்சினைகள் எழலாம். ஆசிரியர்கள் கவனமாக இருப்பது நல்லது, அவசியமும் கூட.
Share