படிக்க வேண்டியவை

<< >>

அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம். யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு

Share

திரைப்படங்கள்

ன்னா தான் கேஸு கொடு (M) படம் மிகவும் சீரியஸான படமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். ஆரம்பக் காட்சிகளிலேயே ஒருவிதமான ப்ளாக் காமெடி போன்று முயன்றிருந்தார்கள். நமக்கு இது ஒத்துவராதே என்று தோன்றியது. சரி, முழு படத்தையும் பார்ப்போம் என்று பார்த்தேன். சில நம்ப முடியாத காட்சிகளைக் கடந்துவிட்டால், சில எரிச்சலான காமெடிகளைக் கடந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் இத்திரைப்படம் அற்புதமான

Share

சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியாக மாறி இருப்பது மிகவும் முக்கியமான முன்னெடுப்பு. இதைச் செய்த அரசுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும். டெல்லி புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலும் பிசினஸ் டூ பிசினஸ் என்பதாகவே விற்பனை இருக்கும். அதில் இப்படி காப்புரிமை வாங்கி பல மொழிகளில் மொழிபெயர்க்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். இன்றைய பதிப்புலகம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விவாதங்களும் கருத்தரங்கங்களும்

Share

தற்கொலை குறுங்கதையும் பிரேக்கப்பும் – அராத்து

அராத்து எழுதிய நூல் தற்கொலை குறுங்கதைகள். அராத்து ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக எழுதிய தற்கொலை குறுங்கதைகளின் தொகுப்பு. ஃபேஸ்புக்கில் இல்லாத கதைகளும் இப்போது வெளியாகி இருக்கும் தொகுப்பில் உள்ளன என்று நினைக்கிறேன்.

அராத்துவின் பிரேக் அப் குறுங்கதைகளே எனக்குப் பிடித்திருந்தது. தற்கொலை குறுங்கதைகளைவிட ஒரு படி மேல் என்பது என் எண்ணம். இரண்டாவது புத்தகம் என்பதால் ஏற்பட்ட அனுபவம், விழிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் அராத்து இதை மறுக்கக்கூடும். எப்போதும் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவதே அவரது பாணி எனக்கூடும்.

தற்கொலை குறுங்கதைகள் நூலுக்கு சாரு நிவேதிதா எழுதியிருக்கும் முன்னுரை – வாய்ப்பே இல்லை. உயிர்மை வெளியீடாக தற்கொலை குறுங்கதைகள் வெளிவந்தபோது அந்த நூலுக்கு சாரு எழுதிய முன்னுரை, இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. சில முன்னுரைகளை மறக்கவேமுடியாது. முன்பு இரா.முருகன் எழுதிய அக்கம்மாதேவி பற்றிய ஒரு முன்னுரை அத்தனை அட்டகாசமாக இருந்தது. இப்போதும் அதை நினைத்துக்கொள்கிறேன். சாருவின் இந்த முன்னுரை, புத்தகத்தை எங்கோ கொண்டு போகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புத்தகத்தை மீறி நிற்கிறது.

முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. முதலில் பதில் சொல்ல ஒப்புக்கொண்டவர் ஜெயமோகன். கேள்விகள் எத்தரத்தில் இருந்தாலும் சரி, தன் பதிலின் மூலம் அக்கேள்வியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றார் ஜெயமோகன். (இக்கேள்வி பதில்கள் எதிர்முகம் என்ற தொகுப்பாக தமிழினி வெளியீடாக வெளிவந்தது.)

முன்பு சுரேஷ் கண்ணன் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இளையராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் படம் தள்ளாடுகிறது என்ற ரீதியில் எழுதி இருந்தார். ஆனால் முதலில் படம்தான் எடுப்பார்கள், பின்னர்தான் இசையமைப்பார்கள் என்றொரு பஞ்சாயத்தை வைத்தேன்.

இந்த இரண்டுக்கும் தற்கொலை குறுங்கதைகளுக்கும் உள்ள தொடர்பு – சாரு எழுதியிருக்கும் முன்னுரை தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.

தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை (பிரேக் அப் குறுங்கதைகள் தொகுப்பையும்!) வாசிக்கும்போது யார் யாரை எப்போது எதை அவிழ்ப்பார்கள் என்ற அச்சத்துடன் படிக்கவேண்டி இருக்கிறது என்பது மட்டும் ஒரு எச்சரிக்கை. என்னைப் போன்ற அடிப்படைவாதிகள் மறந்தும் ஒதுங்கக்கூடாத புத்தகம் இது என்பதும் இன்னுமொரு எச்சரிக்கை! மற்றபடி சாருவின் முன்னுரைக்காகவாவது தற்கொலை குறுங்கதைகளை நிச்சயம் வாசிக்கவேண்டும்.

Share

குற்றவாளிக் கூண்டில் மநு

குற்றவாளிக்கூண்டில் மநு?, எஸ். செண்பகப்பெருமாள், கிழக்கு பதிப்பகம்.

மிகச் சிறிய புத்தகம். மநுவின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்புலமான மநு ஸ்மிருதிகளைப் பற்றி விளக்கும் நூல். இந்த நூல் சொல்லும் கருத்துகளை இப்படித் தொகுத்துக் கொள்கிறேன்.

* மொத்தம் ஏழு மநு ஸ்மிருதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்போது இருக்கும் ஸ்மிருதி ஏழாவது மநு ஸ்மிருதி. விஸ்வேதேவர் தொகுத்தது இது.

* இந்த மநு ஸ்மிருதியில் பிரச்சினைக்குரியது ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே. இந்த அத்தியாயம் பிரச்சினைக்குரிய ஆபத்துக்காலம் என்பதற்கு மட்டுமானதாகத் திருத்தம் செய்யப்பட்ட ஒன்று. அந்த ஆபத்துக்காலம் என்பது பௌத்த காலம்.

* ஆபத்துக் காலம் வரையில் சமூகம் வர்ணத்தால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. வர்ணம் பிறப்படிப்படையில் இல்லை. வர்ணத்தை மாற்றிக்கொள்ளமுடியும். அதை மாற்றி அறிவிக்க குழுக்கள் இருந்தன. இதன் அடிப்படையிலேயே மநு ஸ்மிருதி இருந்தது.

* ஆபத்துக்காலம் நீடித்தபடியால் வர்ணம் மெல்ல ஜாதியாகக் கெட்டிப்பட்டது. இதனால் பிறப்படிப்படையில் ஜாதிகள் நிர்ணயிக்கப்பட்டு, வர்ணத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மநுவின் சட்டங்கள் ஜாதிகளுக்கு என்றானது. இதுதான் பிரச்சினை.

* மநு ஸ்மிருதியின் ஒரே நோக்கம் சமூகத்தைக் காப்பதுதானே அன்றி பிராமணர்களைக் காப்பது அல்ல. அப்படியே பிராமணர்களுக்குச் சொல்லப்பட்டிருந்த விதிகளும் (ஆபத்துக்கால விதிகள் நீங்கலாக) வர்ணத்தின் அடிப்படையிலானவையே. (மநு பிராமணர்களைக் காக்க முனையவில்லை என்பதை கோவில்களில் யார் பூசாரியாக இருக்கவேண்டும் என்பதிலெல்லாம் மநு அக்கறை கொள்ளவில்லை என்பதைச் சொல்வதன்மூலம் விளக்கி இருக்கிறார் நூலாசிரியர்.)

* ஆபத்துக்காலத்தில் பிராமணர்களை சமூகத் தேவையின் பொருட்டுக் காப்பதற்காகவே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படியாகத் தொகுத்துக் கொள்ளலாம். பத்தாம் அத்தியாயத்திலும் உள்ள சேர்க்கைகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

வர்ணம் எப்படி ஜாதியாகக் கெட்டிப்பட்டது என்பதை மிக விரிவாக விளக்கி இருக்கிறார் செண்பகப் பெருமாள். பல நிலைப்பாடுகளுக்கு அம்பேத்கரிடமிருந்து ஆதாரத்தைத் தருகிறார். அம்பேத்கரிடமிருந்து விலகும் புள்ளியையும் தெளிவாகச் சொல்கிறார் புத்தக ஆசிரியர்.

எங்கெல்லாம் மநுவின் அடிப்படைவாதக் கருத்துகள் வருகின்றனவோ அங்கெல்லாம் மிக சாமர்த்தியமாக, இணையான அல்லது அதைவிடக் கீழான அடிப்படைவாதக் கருத்துகளை பைபிளில் இருந்து சொல்லிக்காட்டிவிடுகிறார்.

பல அடிப்படைகளை விளக்கும் மிக முக்கியமான நூல்.

மநு ஸ்மிருதி நம் வரலாற்றில் எப்படி இருந்தது என்பதை அறியும் பொருட்டு மட்டும் எனக்கு முக்கியமான நூல். மற்றபடி இன்றையத் தேவைகளுக்கும் மநுவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். புத்தக ஆசிரியரும் நம்புகிறார். இன்றைய தேதியில் நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரே சட்டம் இந்தியாவின் சட்டம் மட்டுமே. அதே சமயம் நம் வரலாற்றின் ஸ்மிருதிகள் எப்படி இருந்தன, நம் சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது.

Share

பதிப்பாளர் குரல் :-)

சில பதிப்பாளர்களின் மீதான குறைகளை வாசகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். அது உண்மையாக இருக்குபட்சத்தில் அதை பதிப்பாளர்கள் திருத்திக் கொள்ளவேண்டியது பதிப்பாளரின் கடமை.

அதேபோல் பதிப்பாளர்கள் வாசகர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். இங்கே இருப்பவை எனக்குத் தனிப்பட்டுத் தோன்றியவை.

* தள்ளுபடி 10% மட்டுமே. கூடுதலாகக் கேட்டுப் பார்ப்பது ஒரு வகை, போராடுவது ஒருவகை. ஒரு வாடிக்கையாளர் போராட ஆரம்பித்தால் பத்து வாடிக்கையாளருக்கு பில் போடமுடியாமல் போகலாம்.

* ஏழு வருஷத்துக்கு முன்னாடி வந்தப்ப எனக்கு கூட டிஸ்கவுண்ட் கொடுத்தாங்க என்று ஒருவர் சொல்வதை பில்லிங் கவுண்ட்டரில் இருப்பவரால் புரிந்துகொள்ளவே முடியாமல் போகலாம் என்பதைக் கொஞ்சம் எதிர்பார்த்திருங்கள்.

* சரியாக பில்லிங் கவுண்ட்டர் அருகில் வந்ததும் போனை எடுத்துப் பேசிக்கொண்டே இருக்காதீர்கள். உங்களுக்கு பில் போட்டால்தான் அடுத்தவருக்கு பில் போடமுடியும். ‘நீங்க போடுங்க பணம் தர்றேன்’ என்று சொல்லிவிட்டு போன் பேசுவதைவிட, பணத்தை செலுத்திப் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு, அடுத்த அரங்குக்குள் நுழைவதற்கு முன்பு ஓரமாக நின்று மணிக்கணக்கில் பேசுவது நல்லது, உதவிகரமானது.

* உடன் வந்திருக்கும் நண்பரிடம் நீங்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தின் அருமை பெருமைகளை புத்தகம் பில் போட்டபின்பு சொல்லலாம். பில் கவுண்ட்டரில் நின்றுகொண்டு அத்தனையும் சொல்லும்போது பின்னால் பில் போடக் காத்திருக்கும் வாசகர்களுக்கு இடையூறாகலாம்.

* பில் போட்டு முடித்ததும் பணத்தை தாங்கள் கொண்டு வந்திருக்கும் அனைத்துப் பைகளிலும் தேடாதீர்கள். முதலிலேயே தோராயமாக பணத்தை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு ரூபாய் மிச்சம் தரவில்லை என்றால், இப்படி ஒவ்வொரு பில்லுக்கும் ஒரு ரூபாய்னா, ஒவ்வொரு பதிப்பகத்துக்கும் அப்படியானால் ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியிலும் எத்தனை கோடி ஊழல் என்று அங்கே நின்று சுஜாதா போல வாதிடாதீர்கள். சரியான சில்லறை வேண்டுமென்றால் சரியான சில்லறையைக் கையில் வைத்திருப்பது நல்லது. எளிய உபாயமும் கூட.

* பெரிய பை கொடுத்தா ஈஸியா கொண்டு போக உதவியா இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் பெரிய பெரிய துணிக்கடைகள்கூட 2000 ரூபாய்க்கு மேல்தான் பெரிய பை தருகிறார்கள். புத்தக விற்பனையாளர்களைப் பற்றிக் கொஞ்சம் கருணையுடன் யோசித்துப் பாருங்கள்.

* பில் போடும் முன்னரே கொஞ்சம் தூரத்தில் ஒரு எழுத்தாளரைப் பார்த்துவிட்டு புத்தகம் கையெழுத்து வாங்கும் ஆர்வத்தில் அப்படியே ஓடிவிடாதீர்கள். நீங்கள் வந்து பில் போடுவீர்கள் என்ற நம்பிக்கையில்லாமல் இல்லை. ஆனால் அதுவரை உங்களையே பார்த்துக்கொண்டிருப்பது கடினம்.

* கி.ராஜநாராயணன் போன்ற மூத்த எழுத்தாளரைப் பார்த்து, போகன் சங்கர்தான நீங்க, நிறைய படிச்சிருக்கேன் என்று தயவுசெய்து சொல்லாதீர்கள். எழுத்தாளருக்கு அடுத்தபடியாக, ஒரு பதிப்பாளருக்கே இதன் அபத்தமும் கஷ்டமும் அதிகம் புரியும்.

* பத்து கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் எந்த கிரெடிட் கார்டுக்கு எந்த பின் நம்பர் என்பதை பதினோரு முறை கிரெடிட் கார்ட் மெஷினில் போடாதிருப்பது பெரிய உதவி. ஒவ்வொரு கார்டுக்கும் இப்படிக் கணக்குப் போட்டால் நிஜமாக எனக்கே தலை சுற்றுகிறது.

* கிரெடிட் கார்ட் வேலை செய்யவில்லை என்றால் ப்ளான் பி வைத்திருங்கள். இப்பதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி பக்கத்து கடைல போட்டேன் என்ற உங்கள் நிலைப்பாடு நியாயமானதாக இருக்கலாம். ஆனால் அதற்கு பில் கவுண்ட்டரில் இருக்கும் எளியர் என்ன செய்யமுடியும்! கிரெடிட் கார்ட் மிஷின் ஓகே என்று சொன்னால் மட்டுமே அவர் புத்தகத்தைத் தரமுடியும்.

* அமெரிக்கன் கார்ட் கிரெடிட் கார்ட் மிஷின்களில் வேலை செய்யவில்லை என்றால், ஏன் எதற்கு எப்படி என்று பில் கவுண்ட்டரில் இருப்பவரிடம் பல விதமான அறிவுசார் கேள்விகளை எழுப்புவது உளவியல் ரீதியிலான தாக்குதல் என்பதை உணருங்கள்.

* எந்நேரத்திலும் கிரெடிட் கார்ட் மிஷின் வேலை செய்யாமல் போகும் சகல சாத்தியமும் உண்டு. ‘என்னங்க இவ்ளோ பெரிய புக் ஃபேர் நடத்துறீங்க, கிரெடிட் கார்ட் மிஷின் கூட இல்லையா’ என்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் தீர்வு இல்லை. தேவைப்பட்டால் இருக்கட்டும் என்று பணம் வைத்திருங்கள்.

* புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் ஆயிரம் குறைகள் உண்டு. அதைப் பொறுத்துக்கொண்டு நீங்கள் புத்தகம் வருகிறீர்கள் என்பது உண்மை. அதற்காக தமிழ் உலகும் பதிப்பாளர் உலகும் கடமைப்பட்டிருக்கிறது. இதன் எதிர்முனையும் உண்மை. பதிப்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தமிழ் உலகும் கடமைப்பட்டிருக்கிறது. இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

* புத்தகக் கண்காட்சி அரங்கில் முக்குக்கு முக்கு குடிநீர் வைத்திருக்கிறார்கள். கூட்டம் அதிகம் இருக்கும்போது அங்கு நீர் இல்லாமல் போவது இயல்புதான். இதை நிவர்த்தி செய்யவேண்டும் என்பது சரிதான். அதே சமயம், நீங்களும் கையில் தேவையான குடிநீருடன் வருவது உங்களுக்கு உதவலாம்.

* புத்தகக் கண்காட்சியில் நண்பர்களுடன் அரட்டை என்பதும் ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அதை அரங்குக்குள் புத்தகத்தோடு சேர்ந்து நின்றுகொண்டுதான் செய்யவேண்டும் என்பதில்லை என்பதையும் நினைவில் வைக்கலாம்.

* ஒரு புத்தகம் எங்கே இருக்கிறது என்று அதற்குத் தொடர்பே இல்லாத இன்னொரு அரங்கில் கேட்பதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஒருவேளை அவர் தெரியவில்லை என்றாலோ, அல்லது எந்தப் பதிப்பகம் என்று தவறாகச் சொன்னாலோ மீண்டும் தேடி வந்து ‘இதுகூட ஒழுங்கா சொல்லமாட்டீங்களா’ என்று சொல்லாமல் இருக்கலாம்.

* புரோட்டா செய்வது எப்படி என்ற புத்தகம் எங்கே கிடைக்கும் என்பதை முதல் அரங்கில் இருந்து கடைசி அரங்கு வரை எல்லோரிடமும் கேட்காதீர்கள். க்ரியா கீழைக்காற்று அரங்குகளில் இக்கேள்வியைக் கேட்பது குறித்து கொஞ்சம் யோசித்துக்கொள்ளுங்கள்.

* புத்தகக் கண்காட்சியில் நான்கைந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது நல்லது. நாப்பது ஐம்பது செல்ஃபி எடுக்காதீர்கள், ப்ளீஸ்.

* பத்து ஸ்டால் கடந்து நடக்கும்போது கால் வலி வந்தால் உட்கார அங்கே இடம் கிடையாது. வெளியே சென்றுதான் உட்காரவேண்டும். எனவே நன்றாக நடக்க முடியும் என்ற உறுதியுடன் உள்ள நண்பரை மட்டும் அழைத்துக்கொண்டு வாருங்கள். இல்லையென்றால் புத்தகக் கண்காட்சி அனுபவமே எரிச்சல் மிக்கதாக ஆகிப் போகும்.

* செல்ஃபோனை தொலைப்பவர்கள், கடைசியாக பில் போட்ட அரங்கில் தேடுவது இயல்பு. ஆனால் அங்கேயே நின்று எங்கே செல்ஃபோன் என்று போராடுவதில் ஒரு பயனும் இல்லை. உங்கள் செல்ஃபோன் உங்கள் உரிமை, உங்கள் செல்ஃபோனை பத்திரமாக வைத்திருப்பது உங்கள் கடமை.

* இதில் எதையுமே நீங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வந்து புத்தகம் வாங்குங்கள். அதுதான் அடிப்படைத் தேவை.

Share

ஞாநி – அஞ்சலி

ஞாநியின் மரணம் பேரதிர்ச்சி. நேற்று முன் தினம் கிழக்கு அரங்குக்கு மிகுந்த புன்னகையுடன் வந்தார். நான் ஓடிச் சென்று அவரிடம் பேசினேன். பத்ரியைப் பற்றி சில வார்த்தைகள் கிண்டலுடன் பேசினார். நானும் என்னவோ சொல்ல சத்தம் போட்டுச் சிரித்தார். உளவு ஊழல் அரசியல் புத்தகம் வாங்கினார்.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஞாநி அரங்குக்கு வந்தால் என்னை வந்து பார்ப்பதை ஓர் அன்புக் கடமை என்றே செய்துகொண்டிருந்தார். ஞாநியின் அன்பு ஆச்சரியத்துக்கு உரியது. பத்து வருடங்களுக்கு முன்பே புத்தக அரங்கில் வந்து, ‘இன்னைக்கு அட்டெண்ட்ஸ் போட்டாச்சு, ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதிடுங்க’ என்று சொல்லிவிட்டுப் போவார்.

அரங்கங்களில் அமர்ந்து அரட்டை என்று ஆரம்பித்தால், பல்வேறு தகவல்களைச் சொல்வார். அவை எங்கேயும் வெளிவந்திராத தகவல்களாக, அவர் பங்குபெற்ற விஷயங்களாக இருக்கும்.

இரண்டு நாள் முன்னர் பார்க்கும்போது உடல் கொஞ்சம் தேறியே இருந்தார். இனி பிரச்சினையில்லை என்றே நினைத்தேன். அவரும் அதையே சொன்னார்.

ஞாநியின் நினைவுகள் என்னவெல்லாமோ மேலெழுகின்றன.

ஞாநி – கண்ணீருடன் விடைகொடுக்கிறேன். அவரது கருத்தியல், ஹிந்துத்துவ ஹிந்து பிராமண எதிர்ப்பு என எல்லாவற்றையும் தாண்டி, ஐ லவ் ஞாநி.

Share

ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்

ஓரிதழ்ப்பூ (நாவல்), அய்யனார் விஸ்வநாத், கிழக்கு வெளியீடு.

அய்யனார் விஸ்வநாத் ப்ளாக்கர் காலத்தில் இருந்து நண்பர். மிக மேலோட்டமாக வெளியான வலைப்பதிவுகளில் தீவிர முகம் காட்டியவர் அய்யனார் விஸ்வநாத். உண்மையில் அவரது தீவிரமான எழுத்து, குறிப்பாக திரைப்படங்கள் பற்றிய அவரது பதிவுகள், மிகக் குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பற்றியும் ஒரு ப்ரெஞ்ச் திரைப்படம் பற்றியும் (பெயர் மறந்துவிட்டது, தேடினால் கிடைக்கும், நேரமில்லை, மன்னிக்கவும்) அவர் எழுதிய இரண்டு பதிவுகள் எனக்கு மிக விருப்பமானவை.

அவரது நாவல் ஓரிதழ்ப்பூ கிழக்கு மூலம் வெளிவருவதில் எனக்கு மகிழ்ச்சி. இந்நாவலைத் தொடர்ச்சியாக வலைப்பதிவில் எழுதினார் அய்யனார். பெருங்காமத்தின் தீரா விளையாட்டு என்று இந்த நாவலைச் சொல்லலாம். ஒருவகையில் பித்து நிலை என்று கூடச் சொல்லலாம். இந்த பித்து நிலை காமத்தோடும் ஆன்மிகத்தோடும் சுழலும் ஒரு பித்து மனிதனின் தேடல் என்று கூட நீட்டிக்கொள்ளலாம். எழுத்தாளரின் தேடல் அல்ல, நாவலில் உள்ள ஒரு கதாபாத்திரத்தின் தேடல்.

ஓரிதழ்ப்பூ என்பது திருவண்ணாமலையின் மலைதான் என்று நினைக்கலாம். ஆனால் நிஜமாகவே தேடப்படும் ஓரிதழ்ப்பூ ஒவ்வொருவரின் வாழ்க்கையின் காமத்தின் தொடக்கப்புள்ளியும் இறுதிப்புள்ளியும் என்கிறது நாவல். இதை விரித்துச் சொன்னால் ச்சை என்று போய்விடும். ஆனால் நாவலில் வாசிக்கும்போது அகத்திய முனியானவனும் அல்லாதவனுமாகிய ஒருத்தனின் தேடலிலும் மானுடல் கொண்டவனின் தேடலிலும் நமக்குக் கிடைப்பது வேறொரு சித்திரம். ஒற்றச் சித்திரம். ஓரிதழ்ப்பூ என்னும் சித்திரம்.

இந்த நாவலில் பெண்கள் தொடர்பான தீவிரமான சித்திரம் வெகு அழகாக உருவாகி வந்துள்ளது. நான்கு விதமான பெண் பாத்திரங்களும் தீவிரத் தன்மையுடன் படைக்கப்பட்டுள்ளன. எல்லாத் தீவிரங்களுக்குள்ளும் சென்று வர ஏதுவாக அமைகின்றன, ஒருவித பித்து நிலையிலான மாயத்தோற்றம் காட்டும் நினைவுகளும் மொழியும். இந்த மாய விவரிப்புகளே ஒவ்வொரு சமயம் இந்த நாவலில் ஒரு பலவீனமாகவும் உள்ளது.

அய்யனார் விஸ்வநாத்தின் கட்டுரைகளின் முழுமையான தீவிரம் இந்நாவலில் கைகூடி வரவில்லை என்பதையும் சொல்லவேண்டி உள்ளது. அத்தியாயங்களைத் தொடர்ச்சியான மனநிலையில் எழுதாமல், தோன்றியபோது எழுதியதால் வந்த சிக்கலாக இருக்கலாம் என்பது என் யூகம். இன்னும் தீவிரமான நாவலை அய்யனார் நிச்சயம் எழுதுவார் என்கிற நம்பிக்கையைத் தருகிறது ஓரிதழ்ப்பூ.

– ஹரன் பிரசன்னா

கிண்டிலில் இந்நாவலைப் படிக்க: https://www.amazon.in/dp/B078Y1TBG8/ref=sr_1_1…

ஆன்லைனில் அச்சுப் புத்தகத்தை வாங்க:http://www.nhm.in/shop/9789386737311.html

Share

90களின் சினிமா – அபிலாஷ்

90களின் சினிமா, கிழக்கு வெளியீடு, ரூ 120

அபிலாஷ் சந்திரனின் 90களின் சினிமா புத்தகம் வாசித்தேன். 90களில் வந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும் அவை சினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. ஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் உலகளாவிய/இந்திய அளவிலான/பிராந்திய அளவிலான சினிமாக்களுடன் முன் – பின் தொடர்ச்சியுடன் அபிலாஷ் எப்படிப் பார்த்திருக்கிறார் என்பது பெரிய ஆச்சரியம் தருகிறது. மிகப் பொறுமையாக ஒரு திரைப்படத்தின் பல்வேறு கோணங்களையும் சாத்தியங்களையும் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் அபிலாஷ். உலக/மலையாள/தமிழ்த் திரைப்படங்களில் மிக ஆழமான கவனம் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்படி ஒரு நூல் எழுதுவது சாத்தியம்.

இவையெல்லாம் இப்புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ். இனி நான் சொல்லப்போவதெல்லாம் இந்நூலை நான் வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட குழப்பங்களைப் பற்றியும் ஒப்புதலின்மையைப் பற்றியும். இதனால் இந்த நூலை நான் நிராகரிக்கிறேன் என்பது பொருளல்ல. மாறாக, இந்நூலை நிச்சயம் ஒரு முக்கியமான நூலாகப் பார்க்கிறேன் என்பதற்கு மேலே எனக்கு ஏற்படும் எண்ணங்கள்.

இந்த நூலில் அபிலாஷ் சொல்லி இருக்கும் அனைத்துப் படங்களையும் இயக்கிய இயக்குநர்களும் இந்த நூலை வாசிக்க நேர்ந்தால் எப்படி உணர்வார்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். திரை இயக்குநர்களின் அனைத்துக் காட்சிகளின் அடிப்படையையும் அவர்களது திறமையையும் நான் சந்தேகிக்கவில்லை என்றாலும், அவர்கள் வைக்கும் ஒவ்வொரு காட்சிக்குப் பின்னரும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்று நான் நம்பத் தயாராக இல்லை. சில நேரங்களில் கிடைக்கும் ஒரு மின்னல் ஒரு காட்சி உருவாக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். வம்படியாகக் கேள்வி கேட்க வைக்கும் உத்தி, திரும்பிப் பார்க்க வைக்கும் பாணி, எதையாவது வித்தியாசமாகக் காட்டவேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எனப் பல விஷயங்கள் உள்ளன, ஒரு காட்சியை வைக்க. ஆனால் அபிலாஷ் இக்காட்சிகளின் பின்னணியில் ஒரு சித்திரத்தை உருவாக்கப் பார்க்கிறார். நான் பெரும்பாலும் இதை ஏற்கவில்லை. முக்கியக் காட்சிகளுக்கு இடையேயான பின்னணி, ஓர் இயக்குநரின் மனச்சாய்வு அவரது எல்லாப் படங்களுக்கும் தரும் பின்னணி இவற்றையெல்லாம் மறுக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு சிறிய காட்சிக்குப் பின்னாலும் இருக்கும் ஒரு தொடர்ச்சியை என்னால் ஏற்கமுடியவில்லை. ஆனால் அபிலாஷ் இவற்றை நிரூபிக்க மிகப்பெரிய அளவில் மெனக்கெடுகிறார்.

திரைப்படங்களில் வரும் ஆண் தன்மை பற்றி இந்நூல் முழுக்க விவாதிக்கப்படுகிறது. ஆண் தன்மை பற்றிய விவாதங்களை, வேறு விவாதங்களை முன்வைக்கும்போதும்கூட அபிலாஷால் கைவிடமுடியவில்லை. ஆண் ஆண் நட்பை எல்லாமும் கூட, இயக்குநர் மிகத் தெளிவாக அது நட்பு என்று காட்டினாலும், அவற்றுக்குள் ஒரு ப்ரொமான்ஸ் அல்லது ஓரினச் சேர்க்கை விழைவு இருக்கமுடியும் என்று காண்கிறார். நம் தமிழ்ப்படங்களில் நண்பர்களின் நட்பை இப்படிச் சந்தேகிக்கும் அளவுக்கே காண்பிக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நட்பையும் ஆண் பெண் காதலையும் தனித்தனியே காட்ட இவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் பிரச்சினையே ஒழிய, அல்லது இப்படிக் காட்டியே பழக்கப்பட்டுவிட்டார்கள் என்பதுதான் பிரச்சினையே ஒழிய, இவர்கள் மனத்துக்குள்ளே ஓரினச் சேர்க்கையை அல்லது ப்ராமன்ஸைக் காட்டும் எண்ணம் உள்ளது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.

பொதுவாக இதைப் போல இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி அதற்கான ஆதாரத்தைத் தர விரும்பும் எழுத்தாளர்கள் செய்யும் குழப்பத்தை, தவறை (அதாவது என் பார்வையில் இது தவறு) அபிலாஷும் செய்கிறார். அர்ஜுனன் – கிருஷ்ணன் உறவு வரை இந்தச் சந்தேகத்தையும் குழப்பத்தையும் நீட்டிச் செல்கிறார். அங்கிருந்து பிதாமகன் என்று தாவியதைக்கூடப் பொறுத்துக்கொள்ளலாம் என்றாலும், நந்தா, தளபதி என்றெல்லாம் போனது அராஜகம். நாம் என்ன நினைக்கிறோமோ அதை மட்டும் தேடிச் சென்று அதை மட்டுமே கண்ணில்பட்டுக் கண்டடையும் பயணம் இது.

அதேபோல் ஆண் மையக் கதாநாயகர்களின் காதல்களையெல்லாம் விவரிக்கும்போது எப்படி அவர்கள் நாயகி முன்னால் நாயகியை நாயகனாக்கி, தான் நாயகியாக மாறுகிறார்கள் என்று பற்பல இடங்களில் விவரிக்கிறார். இவையும் என்னால் ஏற்கமுடியாதவை. ஆண் மையக் காதல் என்று இவர் சொல்லும் காட்சிகளை மட்டுமே ஆண் மையக் காதல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆண் மையத் திரைப்படத்தில் ஒரு ஆண் மைய நாயகன் ஒரு பெண் முன்னால் குழைவது ஓர் உத்தி மட்டுமே ஒழிய, ஓர் இயக்குநரின் ரசனை மட்டுமே அன்றி, அதற்குப் பின்னே ஆண் சரியும் காரணங்களெல்லாம் இல்லை என்று மட்டுமே நான் நினைக்கிறேன். ஆனால் ஆண் மைய போலிஸ் கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் நாயகி முன்பு தங்கள் ஆண் தன்மையை இழக்கிறார்கள் என்று மிக விரிவாக ரசனையாக எழுதிச் செல்கிறார் அபிலாஷ்.

மதுரைக்காரப் படங்களின் பின்னணி குறித்த அலசலிலும் துரோகங்களின் அலசலிலும் ஒரு நல்ல தொடர்ச்சி உள்ளது. இதே போன்ற தொடர்ச்சியை அபிலாஷின் மற்ற விரிவுகளில் காண இயலவில்லை. ஆனால் இப்படி ஒரு திரைப்படத்தைப் பார்க்க யோசிக்க விவாதிக்க ஒருவருக்கு இடம் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது என்பதுவே இப்புத்தகத்தின் இடம். அதை மிக அழகாக ஆழமாக மிகமிக விரிவாகப் பயன்படுத்திக்கொள்கிறார் அபிலாஷ். ஒரு திரைப்படத்தை இப்படிக் காண வேண்டிய அவசியம் என்ன என்று நாம் பல சமயங்களில் நினைக்கும் அளவுக்கு, நம் கற்பனைக்கெட்டாத, இயக்குநரின் கற்பனைக்கே எட்டியிராதோ என்ற அளவுக்கான யூகங்களையெல்லாம் அபிலாஷ் முன் வைக்கிறார். ஷங்கரின் உருமாற்றம் குறித்த கட்டுரை இதற்கு நல்ல உதாரணம். உருமாற்றம் தொடர்பாகப் பல நல்ல உதாரணங்களைச் சொல்லும் அபிலாஷ், குண்டு வெடித்து அதனால் ஏற்படும் உருமாற்றங்களைக்கூட தன உதாரணங்களுக்குள் சேர்த்துக்கொள்வது கொஞ்சம் ஓவர். எந்த அரசியல் படங்களில் குண்டு வெடிக்காமல் அதனால் உருமாற்றம் நடக்காமல் இருந்துவிட முடியும்?

திரைப்படங்கள் குறித்த மிக முக்கியமான பல கட்டுரைகளைத் தொடர்ச்சியாக
அபிலாஷ் எழுதி வருவது ரசனைக்குரியது. வணிகத் திரைப்படங்களைப் பற்றிப் பேசுவதே தீட்டு என்ற சிற்றிதழ்ச் சூழல் இன்று தகர்க்கப்பட்டுவிட்டது. வணிகத் திரைப்படங்களை அவற்றுக்கான இலக்கணங்களுடன் எல்லைகளுடன் அணுகுவதும் அவசியமானதே. இதை மிகக் கறாராக நிகழ்த்திக் காட்டியுள்ளது இப்புத்தகம்.

ஹரன் பிரசன்னா

Share

உடலெனும் வெளி – அம்பை

உடலெனும் வெளி, அம்பை, கிழக்கு பதிப்பகம்.

பெண்ணிய எழுத்தாளர்களைப் பற்றிய ஒரு தொகை நூல் என்னும் அளவுக்கு ஆழமான நூல் இது. சில நூல்கள் நம்மை வியப்பிலாழ்த்தும். இது எப்படி சாத்தியம் என்று வியப்பைக் கொண்டு வரும். அப்படியான ஒரு நூல் இது. இதுபோன்ற ஒரு நூலை ஒருவர் சட்டென நினைத்து எழுதிவிட முடியாது. வாழ்க்கை முழுமைக்கான வாசிப்பும் அர்ப்பணிப்பும் தான் தேர்ந்த ஒன்றில் தளராத தொடர்ச்சியும் இருந்தால் மட்டுமே இத்தகைய நூல் சாத்தியம்.

தொடக்க காலங்களில் இருந்து சமீபத்திய பெண்ணிய எழுத்தாளர்கள் வரை அனைத்துப் பெண்ணிய எழுத்தாளர்களின் நூல்களையும் வாசித்து, அவற்றைத் தன் ரசனை மற்றும் பொதுப் பார்வையில் மதிப்பிட்டு, அதில் தேர்ந்தவற்றை நமக்குச் சொல்லியிருக்கிறார் அம்பை. தேந்தெடுத்து எழுதியது இவை என்றால், அவர் எத்தனை வாசித்திருப்பார் என்பதும், அந்த நூல்களைக் கண்டடைய அவர் எப்படி முயன்றிருப்பார் என்பதும் பெரிய ஆச்சரியத்தைத் தருகிறது. இத்தகைய நூல்களுக்கு இப்படியான உழைப்பு நிச்சயம் தேவை. இல்லையென்றால் நூல் தரமற்றுப் போய்விடும்.

1950களுக்கு முன்னர் இருந்த பெண்ணிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் பெயரையும் அவற்றில் அவர்கள் எழுத முனைந்த கருத்துகளையெல்லாம் பார்க்கும்போது வியப்பு மேலிடாமல் இல்லை. ஜாதி மதம் என எப்பாகுபாடுமின்றி பெண்கள் நிலை எல்லா இடத்திலும் ஒரே போல்தான் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை இந்நூல் உணர்த்துகிறது.

பெண் எழுத்தாளர்களின் நாவல், சிறுகதைத் தொகுதி மற்றும் கவிதைகள் என்று பிரித்துக்கொண்டு அவற்றைப் பற்றிச் சுருக்கமாகவும் ஆழமாகவும், எழுத்தாளர்களைப் பற்றி விரிவாகவும் அலசி இருக்கிறார் அம்பை. யார் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், யார் யாரையெல்லாம் விலக்கி இருக்கிறார் என்பது நிச்சயம் கேள்விகைக் கொண்டு வரும். ஆனால் எல்லாவற்றுக்கும் தெளிவான பதிலுடன் இருக்கிறார் அம்பை.

பெண் எழுத்தாளர்களின் படைப்புகளை அணுகுவது குறித்த மிகச்சிறந்த திறப்பை இந்நூல் கொண்டு வரும். நாம் பெண்ணியத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதை, அவர்கள் நம் பார்வையை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து தொடங்கலாம். அதையே இந்நூல் பல்லாண்டுகளான படைப்பு வரலாற்றுப் பின்புலத்தில் பேசுகிறது.

நான் வாசித்த மலைக்க வைக்கும் எழுத்துகளுள் இதுவும் ஒன்று.

விளக்கப் பின்குறிப்பு: இந்நூலின் முன்னுரையில், “கிழக்கு பதிப்பகத்திலிருந்து ஹரன் பிரசன்னா கைப்பிரதியைப் படிக்க விரும்புவதாகக் கூறினார். அவருக்குப் பிடித்திருந்தது; சில ஆண் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டு அவர்கள் எழுத்து பிடித்திருப்பது போல இதுவும் பிடித்திருக்கிறது, வெளியிட விருப்பம் என்று! ஆணை ஒட்டியேதான் எல்லாம் அமையும் போலும்! ஆனால் ஹரன் பிரசன்னாவுடன் இணைந்து இந்தக் கைப்பிரதியை வடிவாக்கிய அனுபவம் நன்றாக அமைந்தது. அவருக்கு என் நன்றி” என்று சொல்லி இருக்கிறார். நான் இந்த நூலை வாசித்துவிட்டு அம்பையிடம் சொன்னது, கிட்டத்தட்ட இது போலத்தான். “ஜெயமோகன், பிஏகே, அரவிந்தன் நீலகண்டன் போன்றோரது நூல்களை வாசிக்கும்போது ஏற்படும் மலைப்பு இதைப் படிக்கும்போது ஏற்பட்டது” என்பதைத்தான்.

அம்பை சொல்லி இருப்பது, பல்லாண்டுகளாக அவரது அனுபவத்திலிருந்து கிளைத்திருப்பது. அதை நான் புரிந்துகொள்கிறேன். இந்த விளக்கம்கூட ஒரு பதிவுக்காக மட்டுமே.

Share

பூனைக்கதை – பா.ராகவன்

பூனைக்கதை (நாவல்), பா.ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350

பா.ராகவனின் நூல் ஒன்றுக்கு விமர்சனம் எழுதுவது என்பது ஒரு சங்கடம்தான். ஏனென்றால் மிக மரியாதைக்குரிய நண்பர்களில் ஒருவர் அவர். எனவே வெளிப்படையாக எழுதுவது என்பதில் எனக்குக் கொஞ்சம் சிக்கல்கள் உண்டு. இதன் மற்றொரு பக்கம் சுவாரஸ்யமானது. அவரிடம் நேரில் பேசும்போது அவரது புத்தகங்களைப் பற்றிய என் வெளிப்படையான கருத்துகளை வைத்துள்ளேன். பாராவின் மிக முக்கியப் பண்பு, எந்த ஒரு சிறு நெருடலும் இன்றி, அவற்றை என் கருத்துகள் என்ற அளவில் ஏற்றுக்கொள்பவர். இன்று நேற்றல்ல, நான் பாராவை முதன்முதலில் சந்தித்த தினம்தொட்டு, கிழக்கில் அவருடன் ஒன்றாகப் பணிபுரிந்த காலங்களிலும், அவர் கிழக்கைவிட்டு விலகி திரைப்படம் தொலைக்காட்சி என்று திசைமாறியபோதும் இதேபோலப் பழகியிருக்கிறார். அது அவரது இயல்பு. இந்த நாவலை எனக்கு சமர்ப்பித்திருக்கிறார். கொஞ்சம்கூட எதிர்பாராதது இது. இது அவரது பெருந்தன்மை என்பதைத் தவிர வேறெதுவும் இல்லை. நான் இந்தப் பெருந்தன்மைக்கு அருகதையுடையவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். அந்தப் பெருந்தன்மைக்கு இன்னொரு நன்றி.

மெகா சிரீயல்களில் பக்கம்பக்கமாக வசனம், புத்தகங்களில் லிட்டர் லிட்டராக ரத்தம் என்று சென்றுகொண்டிருந்த பாராவின் வாழ்வில், சென்ற புத்தகக் கண்காட்சியின்போது எப்போதும்போல் பேசிக்கொண்டிருந்த எதோ ஒரு சமயத்தில் நாவல் எழுதவேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உண்மையில் இது துரதிர்ஷ்டவசமானது என்றே நான் நினைத்தேன் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிடுகிறேன். புவியிலோரிடம் மட்டுமே நான் வாசித்த பாராவின் ஒரே நாவல். பாராவின் அபுனைவு எழுத்துகள் எனக்கானது அல்ல என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. இதை முன்வைத்துத்தான் ப்ளாக்கர் வரலாற்றுக் காலங்களில், எல்லோரையும் விமர்சிக்கும் நான் (ஹரன்பிரசன்னா!) ஏன் பாராவை விமர்சிப்பது இல்லை என்ற கேள்விகளெல்லாம் எழுப்பப்பட்டன. இக்கேள்விக்கான அப்போதைய ஒரே பதில், நான் வாசித்ததில்லை என்பதுதான். நான் வாசித்த அவரது முதல் அபுனைவு நூல், ஆர் எஸ் எஸ். அடுத்தது பொலிக பொலிக. இப்போது புனைவில் பூனைக்கதை. ஆர் எஸ் எஸ் விமர்சனத்துக்குட்பட்டுப் பிடித்திருந்தது. புவியிலோரிடம் அதன் தைரியமான கான்செஸ்ப்ட் காரணமாக என் பார்வையில், என் சாய்வில், முக்கியமான நூல். பொலிக பொலிக – பிரமிக்க வைக்கும் வேகம் கொண்ட, ஒருவகையில் ஒரு மாதிரிநூல்.

இந்த முன்குறிப்புகள் அவசியமானவை என்பதால் இதை இத்தனை தூரம் சொல்லவேண்டியதாகிவிட்டது. இனி பூனைக்கதை குறித்து.

அபுனைவில் இருந்து பாரா நாவலுக்கு வருவதன் பயம், நாவலை வாசித்த சில பக்கங்களில் இல்லாமல் போனது. ஆகப்பெரிய கற்பனை ஒன்றை, வரலாற்றின் முன்னொரு காலத்தில் நிகழும் அதீத கற்பனையை, மாய யதார்த்தம் (முற்றிலும் மாய யதார்த்தம் அல்ல) போன்ற ஒரு பூனையால் நிகழ்காலத்தோடு இணைக்கிறார். மிக நுணுக்கமான ஒற்றுமைகள் பின்னி வருகின்றன. நாம் அந்த நுணுக்கங்களைத் தேடிச் செல்லவேண்டும். தேடிச் சென்றால் இரண்டு களங்களுக்குரிய ஒற்றுமைகள் மெல்ல மெல்ல விரியும். இல்லாவிட்டாலும், இரண்டு பெரும் உலகங்கள் நம் முன் இரண்டு பேருருவத்துடன் உரையாடவே செய்யும்.

வெளிப்பாட்டுத் தன்மையில் இலகுவான நாவல், அதீதக் கற்பனையின் உள்ளே சில சிக்கலான விஷயங்களைப் பேசுகிறது. ஆறு கலைஞர்களின் முன்வாழ்க்கையில் அந்தக் காலத்தின் வர்ணாசிரம ஜாதிய அடுக்களின் வெளிப்பாடுகள் மேலோட்டமாகத் தெரிகின்றன. அதன் விளைவுகள் அப்பட்டமாக. அதீதக் கற்பனைக்குத் தரப்படவேண்டிய ஆதாரத்தை பாரா பாபரின் நாட்குறிப்பிலிருந்தும் ராமானுஜரின் விஜயத்திலிருந்தும் எடுத்துக்கொள்கிறார். இப்படியாக ஒரு கற்பனை, சில நிஜங்களின் மீது கட்டியெழுப்பப்படுகிறது.

கற்பனையின் மீது அமர்த்தப்பட்ட நிஜம் இன்னொரு கற்பனையால் முழுக்க ஆட்கொள்ளப்பட்டு இன்றைய யதார்த்த உலகில் வெளிப்படுகிறது. அந்த உலகம், இதுவரை அதிகம் நாவல்களில் பேசப்படாத மெகா சீரியல் தயாரிப்பின் உலகம். ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கு நிகரான, அதைவிட அதிகமான வலியும் சவாலும் துரோகம் அரசியலும் நிறைந்த உலகம் இது என்பதை பாரா மிக அழகாகச் சொல்கிறார். கற்பனை உலகின் வசன பாணி எல்லாம் மாறிப்போய் யதார்த்த உலகில் வேறொரு வசன பாணியை நாவல் கைக்கொள்கிறது. ஒருவகையில் அசோகமித்திரனின் திரைப்படங்கள் குறித்த நாவல்களில் காணக்கிடைக்கும் பாணி. திரைப்பட உருவாக்கத்துக்கும் மெகா சீரியல் உருவாக்கத்துக்கும் உள்ள வேறுபாடுகள் புலப்பட்டாலும் விளைவைப் பொருத்தவரை இரண்டு உலகங்களும் ஒரே மாதிரியானவையே. மெகா சீரியல்களை பெரும்பாலானவர்கள் திரைப்படத்தை நோக்கிய ஒரு பயணமாகவோ அல்லது திரைப்படத் தோல்விகளின் தொடர்ச்சியாகவே பார்க்கிறார்கள். எனவேதான் திரைப்படத் துறையின் அதன் குணத்தின் முன்னொட்டும் பின்னொட்டுமாகவே தொலைக்காட்சி உலகமும் இருக்கிறது.

தொலைக்காட்சித் தொடர்கள் தொடர்பான அத்தியாயங்களின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நடிகையின் ஆவி பேசும் வசனமும், பூனைக்கு சார் சொல்லும் கதாபாத்திரத்தின் இயல்பும் நடிகர்களின் அவல வாழ்க்கையைச் சொல்லாமல் சொல்கின்றன.

நாவலைப் படித்துமுடிக்கும்போது ஒட்டுமொத்தாக ஒரு பிரமிப்பு நிச்சயம் ஏற்படுகிறது. சந்தேகமே இன்றி பாரா இதுவரை எழுதிய புனைவுகளில் சிறந்தது இந்த நாவல்தான். அபுனைவு மொழியிலிருந்து கிட்டத்தட்ட பாரா முழுவதும் விலகிவந்து இந்த நாவலை உருவாக்கி உள்ளது, என் பார்வையில் பெரிய சாதனை. (கிட்டத்தட்ட என்ற வார்த்தை முக்கியம், ஏனென்றால் அங்கங்கே சில வார்த்தைகளில் பாராவுக்குள் இருக்கும் அபுனைவு_வெறி_மிருகம் விழித்துக்கொள்கிறது.)

நாவலில் ஒரு வாசகனாக நான் செரிக்க கஷ்டப்பட்ட சில இடங்களைச் சொல்லவேண்டும். ஒன்று, மிகத் தட்டையான அதன் தலைப்பு. உண்மையில் நாவலுக்குள்ளே இருக்கும் கற்பனையின் விளையாட்டை இந்நாவலின் தலைப்பு சரியாகப் பிரதிபலிக்கவில்லை. அதற்குக் காரணம், பாராவின் இயல்பு என்றே நினைக்கிறேன். அல்லது நாவலின் உள்ளடக்கமே முக்கியம், தலைப்பு அல்ல என்ற தலைப்பு குறித்த அலட்சியமா? அதீதமான வலியைக்கூட பகடி மூலம் கடக்க நினைக்கும் ஓர் இயல்பாகக்கூட இருக்கலாம். (இன்னொரு உதாரணம், ஓர் உபதலைப்பின் பெயர் மலச்சிக்கலில் இருந்து விடுதலை!) அது நாவலின் தலைப்பிலும் வந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம். இரண்டாவது, பூனை என்பது பல வகைகளில் மாய யதார்த்த உருவமாகி இரண்டு வேறுபட்ட உலகங்களுக்குள்ளும் அந்த அந்த காலத்துக்கான யதார்த்தத் தேவைகளுக்குள் பயணமாகிறது என்றாலும், ஒரு கட்டத்தில் அது அதீதமாகிவிடுகிறது. எங்கெல்லாம் தேவை என்பது சவாலாகிறதோ அங்கெல்லாம் பூனையைக் கொண்டு கடக்க முற்படுவது போல. இதில் ஒரு எழுத்தாளனுக்கு சுதந்திரம் இருக்கிறது என்பது உண்மைதான். அதேபோல் ஒரு வாசகனின் சுதந்திரத்தில் குறுக்கிடும் அளவுக்கு அது இருப்பது நியாயமா என்றும் தோன்றுகிறது. இன்னொரு முக்கியமான (என்) பிரச்சினை, லாஜிக் இல்லாத ஒன்றின் மேல் கட்டி எழுப்பப்படும் எல்லாவற்றுக்கும் லாஜிக் இருக்கவேண்டும் என்ற நியாயம் சில இடங்களில் மீறப்பட்டிருப்பது. குறிப்பாக எலியின் திடீர் மாயத்தன்மை. உண்மையில் இந்நாவலில் உள்ள ஒரே பெரிய சறுக்கல். இங்கே பூனை, எலி என்றெல்லாம் சொல்வதை வைத்து எதோ விளையாட்டு என்று எண்ணிவிடக்கூடாது. அவை வேறொரு உலகத்தில் நிகழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நாவலின் மொழிநடையில் பெரிய அளவுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்றாலும், அங்கங்கே தென்படும் அபுனைவு அல்லது பாராவுக்கே உரிய அதீத எளிமைப்படுத்தல் என் போன்ற வாசகனை விலக்குகிறது. அதாவது வாசகனை இப்படித்தான் யோசிக்க வைக்கவேண்டும் என்கிற போக்கு, இப்படித்தான் இந்த வேகத்தில் படிக்க வைக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு.

மற்றபடி, பூனைக்கதை நாவல் மிக முக்கியமான நாவல். பாராவின் நாவல்களிலும் சரி, ஒட்டுமொத்த நாவல்களிலும் சரி, பூனைக்கதை நிச்சயம் ஒரு நல்ல முயற்சி. பாராவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துகள்.

இந்த நாவலை அசோகமித்திரனுக்கு சமர்ப்பணம் செய்திருக்கவேண்டும் என்பது எளிய கருத்து.

— ஹரன் பிரசன்னா

Share