பிக் பாஸ் – கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி கமலுக்குத் தேவைதானா என்கிற எண்ணமே மேலோங்குகிறது. காலில் அடிபட்டதில் இருந்து கமல் மீண்டும் நடிக்கத் துவங்கவில்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் இந்நிகழ்ச்சி மூலம் நல்ல பணம் கமலுக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தால் அது நல்லதுதான். ஆனால் இப்படித் தொலைக்காட்சிகளில் வரும் பிரபலங்கள் நாளடைவில் தங்கள் ஸ்டார் கவர்ச்சியையும் அந்தஸ்தையும் இழப்பார்கள் என்றுதான் நான் நம்புகிறேன். கமல் ஸ்டார் அந்தஸ்தைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டாரே என்று அப்பாவியாக (ஒரு பக்க உண்மையை மட்டும்) நம்புபவர்களுக்குச் சொல்ல எதுவும் இல்லை.

இந்திய அளவில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபலங்களுக்கு இப்படி நேர்ந்ததா என்று தெரியாது. ஆனால் தமிழ்நாட்டில் இப்படித்தான் ஆகும். குஷ்பூ தன் நட்சத்திர வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோது வந்த தொலைக்காட்சி வாய்ப்புகளை மறுக்க சொன்ன காரணம், ‘தினம் தினம் டிவில வந்தா மவுசு போயிடும்’ என்ற ரீதியில்தான். மவுசு குறைந்தபோதுதான் டிவிக்கு வந்தார். இன்றளவும் நட்சத்திர அந்தஸ்திலும் சரி, மரியாதையிலும் சரி, கமலுக்கு எக்குறைவும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்நிலையில் இவர் ஏன் தொலைக்காட்சிக்கு வரவேண்டும்? பிக் பாஸ் ஒளிபரப்பாகியதும், தொடக்கத்தில் எல்லா ஊடகங்களிலும் கமலின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கும். பின்பு இது ஒரு சடங்காகும். கமலுக்கு இது நேரக்கூடாது.

கமலின் ஒட்டுமொத்த கவனமும் உழைப்பும் திரைப்படங்களில் நடிப்பதிலும், அது இயலாமல் போகும் நேரத்தில் திரைப்படங்கள் இயக்குவதிலும் மட்டுமே செலவழியவேண்டும். அதுதான் கமலுக்கும் தமிழ்த் திரையுலகுக்கும் நல்லது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்பது ஏனோ வருத்தமாகவே இருக்கிறது.

ஃபேஸ்புக்கில் சொன்ன பதில்: (சேமிப்புக்காக)

எனக்குள்ள பிரச்சினைகளைத் தெளிவாகச் சொல்கிறேன். நண்பர் கோவிந்துக்கு நான் பதில் சொல்ல இவையே காரணங்கள்.

* நான் ரஜினி பற்றி பதிவிடும்போதெல்லாம் கோவிந்த் கமலை ஆதரிக்கிறார். இத்தனைக்கும் கமல் ஹிந்து எதிரி, ஹிந்துத்துவ எதிரி. இதை மீறி ரஜினிக்கு எதிராகக் கமலை முன்வைக்கும்போது அது நகைப்புக்கு இடமாகிறது. ஜெயலலிதாவைத் திட்டுபவர்கள் கருணாநிதிக்கு ஆதரவு அளித்தது போல.

* ரஜினியை மட்டும் திட்டிவிட்டுச் சென்றிருந்தால், அது ஒருவரது அரசியல். கமலை ஏற்றுக்கொண்டு ரஜினியைத் திட்டும்போது அது வேறொரு அரசியல்.

* இதில் கமலுக்கு ஆதரவாக ரஜினிக்கு எதிராகச் சொல்லப்படும் அரசியல் ஆதரவுக்கான காரணம், பெண்கள் சித்திரிக்கப்படும் விதம். என்ன கொடுமை இது? நான் என்ன கண்ணையும் காதையும் மூடிக்கொண்டா சினிமா பார்க்கிறேன்? தமிழ்த் திரையுலகில் யார் செய்யாத ஒன்றை ரஜினி செய்துவிட்டார்? அல்லது கமல் இதில் எதைச் செய்யாமல் இருந்தார்? ஒரு நியாயம் வேண்டாமா? பெண்களின் மரியாதையை முன்வைத்தால் ரஜினி உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் ஒரே தராசுதானே? கமல் சொன்ன இரட்டை அர்த்த வசனங்களுக்கு என்ன பஞ்சம்? ரஜினி சொன்ன, பெண்கள் அடங்கி இருக்கவேண்டும் என்பதை கமல் எத்தனை படங்களில் சொல்லி இருக்கிறார்? இதில் என்ன கமலுக்கு ஆதரவு?

* இப்படிப் பேசிக்கொண்டே, ஐநாவில் நடனம் ஆடிய ரஜினியின் மகளைப் பற்றிய வர்ணனையை மேலே பாருங்கள். ஐநாவில் ரஜினியின் மகள் நடனம் ஆடியதில் நிச்சயம் விதிகள் மீறப்பட்டிருக்கும். அல்லது வளைக்கப்பட்டிருக்கும். தகுதியான நபர் ஆடவில்லை. ஆடவும் அவருக்குத் தகுதி இல்லை. இதை எப்படி எதிர்கொள்வது? அந்தப் பெண்ணின் தோற்றத்தை எள்ளி நகையாடியா? அப்படிச் சொல்லிக்கொண்டே, ரஜினி படங்களில் பெண்ணுக்கு மரியாதை இல்லை எத்தனை பெரிய முரண்? ரஜினியாவது திரைப்படங்களில் ஒரு கதாபாத்திரமாகப் பேசினார் என்று ஏமாற்றி (நான் ஏற்கவில்லை) நழுவவாவது பார்க்கலாம். இதை எப்படி ஏற்பது? இதில் கடைசியில் வரும் ரஜினி பக்தர்! யார் யாருக்கோ பக்தர்கள் இருக்கும் நாட்டில், கருணாநிதிக்கும் ஈவெராவுக்கும் ஜெயலலிதாவுக்கும் சீமானுக்கும் பக்தர்கள் இருக்கும் நாட்டில் ரஜினிக்கு பக்தராக இருப்பது கேவலமல்ல. கமலையே அரசியலில் ஏற்கத் துணிந்தவர்கள் முன்பு ரஜினியை ஏற்பது மரியாதைக்குரியதே.

https://www.facebook.com/haranprasanna/posts/1439249269429771?pnref=story

Share

பாகுபலி

நேற்று பாகுபலி (இரண்டாம் பாகம்) பார்த்தேன். 🙂
 
முதல் பதினைந்து நிமிடங்கள் பொறுமையைச் சோதித்துவிட்டார்கள். பாதி நேரடித் தமிழ்க் காட்சிகள், பாதி டப்பிங், எரிச்சலான நகைச்சுவைக் காட்சிகள் என்று நொந்து போயிருந்த சமயத்தில் சிவகாமி சத்தியம் செய்கிறார். அங்கே பிடித்துக்கொண்ட படம், இடைவேளை வரை நான் திறந்த வாயை மூடவில்லை. மிரட்டல். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு, ஆனாலும் பிரமாண்டத்துக்கும் அட்டகாசத்துக்கும் குறைவே இல்லை. உலகத் திரைப்பட பிரமாண்டங்களுக்கு இந்தியாவின் பதில் இது. இந்தியப் பெருமிதம். ராஜ மௌலியின் திறமை ஆச்சரியப்படுத்துகிறது. முதலில் வரும் யானை, பல்வாள்தேவனின் ரத காளைகள் போன்றவை கிராஃபிக்ஸில் சொதப்பினாலும், ஒட்டுமொத்த அளவில் கிராஃபிக்ஸின் பிரமாண்டம் இன்னும் கண்ணிலேயே நிற்கிறது. இளையராஜா இல்லாத குறை தெரியாத அளவுக்குப் பின்னணி இசையிலும் பாடல்களிலும் மரகதமணி கலக்கல். பின்னணி இசையின் இனிமையும் அன்னப்பறவை போன்ற கப்பலில் வரும் பாடலும் இன்னும் காதில் மிச்சம் இருக்கிறது. வம்சம் மெகா தொடர் கண்ணில் பட்டு ஒட்டுமொத்தமாக வெறுத்துப் போயிருந்த ரம்யா கிருஷ்ணன், இப்படத்தில் அதகளப்படுத்துகிறார். வசனகர்த்தா மதன் கார்க்கிக்கு தனியே ஒரு பாராட்டு. ஒரு திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒன்றை ஒன்று விஞ்சும் அளவுக்கு நன்றாக அசத்தலாக அமைவது என்பது சாதாரண விஷயமல்ல. ராஜமௌலி இதைச் சாதித்திருக்கிறார்.
 
தமிழில் நேரடியாக என்று சொல்லி எடுக்கப்படும் இருமொழிப் படங்கள் அத்தனையிலும் உள்ள பிரச்சினையே இப்படத்தின் பிரச்சினையும் கூட. தெலுங்கு பேசும் உதட்டசைவுக்கு தமிழில் பேசிப் பாடி வரும் காட்சிகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. இதைக் கடந்துவிட்டால் போதும்.
 
தமிழர்கள் செய்திருக்கவேண்டிய இப்பெரும் சாதனையை தெலுங்குத் திரையுலகம் தட்டிக்கொண்டு போனதில் கொஞ்சம் வருத்தம்தான் என்றாலும் இது ஒரு இந்தியப் பெருமை என்ற வகையில் மறக்கமுடியாத திரைப்படமே.
Share

பவர் பாண்டி

பவர் பாண்டி பார்த்தேன். மஞ்சள் பை தந்த பயம், கிழவர்களின் காதல் என்ற பிரயோகங்கள் தந்த அச்சம் காரணத்தால் இயன்றவரை இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தே வந்தேன். மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து ரேவதி மீது உருவான இனம்புரியாத எரிச்சல் இன்னுமொரு காரணம். சுத்தமாக முக பாவங்கள் காட்ட வராத ராஜ்கிரண் வேறு. இத்தனை எரிச்சலுடன் பார்த்தும், இந்தப் படம் பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தனுஷின் காதல் காட்சிகள் முடியும் வரை படம் அட்டகாசமான ஃபீல் குட் மூவி. அதற்குப் பின்பு கொஞ்சம் சொதப்பல். ஆனால் அந்த சொதப்பல் காட்சிகளில் ரேவதியின் நளினமான நடிப்பு – அருமை. ரேவதி மிதமிஞ்சிப் போனால் படத்தில் பதினைந்து நிமிடங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்த சிரிப்பு, அந்த கண்களில் காட்டும் நுணுக்கம் என ஒட்டுமொத்த படத்தையும் ஹைஜாக் செய்துவிட்டார். ரேவதியின் முன்பு ராஜ்கிரண் பூனையாகிப் போனது பெரிய மைனஸ். தனுஷை அந்த அளவுக்கு ரசிக்கும்விதமாகக் காட்டிவிட்டு, ரேவதியின் முன்பு ராஜ்கிரண் இறங்கிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் படத்தின் மைனஸ் என நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்துப் போன இன்னும் சில விஷயங்கள்: அலட்டாத மிகவும் சீரியஸான யதார்த்தமான பிரசன்னாவின் நடிப்பு. பிரசன்னாவின் வாழ்நாள் படம் இது என நினைத்துக்கொண்டேன். அடுத்து தனுஷின் ஃபிரண்டாக வரும் அந்த பீர் பார்ட்னர். என்ன ஒரு யதார்த்தம். இளையராஜா இசையமைத்திருக்கலாமே என்று படம் முழுக்க தோன்றிக்கொண்டே இருந்தது.

தேவையற்ற அந்த கடைசி சண்டைக் காட்சியை நீக்கி, ராஜ்கிரணை இறுதிக்காட்சிகளில் கொஞ்சம் கெத்தாகக் காட்டி இருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தனுஷின் முதல் பட இயக்கம் மிகவும் நன்றாகவே வந்துள்ளது. தனுஷின் இயக்கம் என்று சொன்னபோது நான் எதிர்பார்த்த திரைப்படம் வேறு. தனுஷ் தந்ததோ முற்றிலும் வேறானது. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. இந்த வயதான காதல் வகைத் திரைப்படங்களில் தமிழின் ஒரே முத்து கேளடி கண்மணி மட்டுமே என்பது என் எண்ணம். இப்போதும் கேளடி கண்மணியே முதன்மையில் உள்ளது. துணை படம் (துரை இயக்கியது) இதை கொஞ்சம் தொட்டுப் பார்த்தது. (துணை படத்தில் சிவாஜியைத் தூக்கிச் சாப்பிடும் ராதாவின் மிரட்டல் நடிப்பு இன்னும் கண்ணில் நிற்கிறது.) இப்போதைய டீஸண்ட் வரவு பவர் பாண்டி.

முதல் மரியாதையை மிஸ் செய்துவிட்டேன். முதல் மரியாதை வேற லெவல்.

Share

காற்று வெளியிடை

காற்று வெளியிடை – கதையே இல்லை. கார்கில் பிரச்சினை தொட்டுக்கொள்ள ஊறுகாய். பாகிஸ்தானைத் திட்டினால் முஸ்லிம்களுக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம். இந்தியாவைக் குறை சொன்னால் இந்திய அளவில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்ற பயம். எனவே அரசியலையும் நாட்டுப் பிரச்சினைகளையும் இம்மி கூடத் தொடாமல் கார்கில் பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்து சாதனை செய்திருக்கிறார் மணிரத்னம். ஒரு முக்கியப் பிரச்சினையை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வது மணிரத்னத்துக்கும் நமக்கும் புதியதல்ல என்றால், இப்படம் இன்னும் ஒரு படி மேல். இதற்கு முந்தைய படங்களில் அப்பிரச்சினையைப் பற்றி எதாவது சொல்லவாவது முயற்சிப்பார். இதில் அந்த முயற்சியும் கிடையாது.
 
பாகிஸ்தானில் கார்த்தி சிக்குவதும் பாகிஸ்தானிலிருந்து தப்பிப்பதும் மனைவி குழந்தையுடன் சேருவதுமான காட்சிகளில் எது சிறந்த காமெடிக் காட்சி என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணத்துக்கு முன்னரே உடலுறவு என்ற கருத்துத் திணிப்பை இப்படத்திலும் கடைப்பிடிக்கிறார் மணிரத்னம். என் செல்லக்கிளியே, உங்க அருமை பேத்தி என்பது போன்ற ஒட்டாத மணிரத்னத்தின் ட்ரேட் மார்க் செயற்கை வசனங்கள், வண்ணப்பொடி தூவி ஒரு கல்யாணப் பாடல், டாக்டரைத் தேடிப் போன மாதவனைப் போல ஒரு டாக்டர் காதலைத் தேடிப் போவது, டெண்ட் போட்டு வைத்தியம் பார்க்கும் ஹீரோயின் என மணிரத்ன க்ளிஷேக்கள் இப்படத்திலும் உள்ளன.
 
படத்தின் ப்ளஸ் என்ன? ப்ளஸ் அல்ல, பல ப்ளஸ்கள். ஒன்று, ஒளிப்பதிவு. தமிழில் இத்தனை சிறந்த ஒளிப்பதிவுள்ள படங்கள் மிகக்குறைவு. உயிரே திரைப்படத்துக்குப் பிறகு இப்படி அசரடிக்கும் ஒளிப்பதிவை த்மிழ்ப்படங்களில் பார்த்ததாக நினைவில்லை. அதையும் தாண்டிச் செல்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு விருது உறுதி. ஒளிப்பதிவுக்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
 
இரண்டாவது ப்ளஸ், அதிதி ராவ். முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நடிக்குமா? நடிக்கிறது. கண் காது மூக்கு என சின்ன சின்ன அழுத்தமான அசரடிக்கும் பாவங்களில் அதகளப்படுத்துகிறார் அதிதி ராவ். சான்ஸே இல்லை.
 
மூன்றாவது ப்ளஸ், மணிரத்னத்தின் இயக்கம். படம் முழுக்க பத்து காட்சிகளாகவது பிரமாதமாக இருக்கின்றன. வழக்கமான மணிரத்னத்தின் படங்களைப் போல இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதுதான் பிரச்சினை.
 
பின்னணி இசையா அது பாடலா என்று கண்டுபிடிப்பதற்குள் அது முடிந்துவிடுகிறது. நல்லை அல்லை பாடல் இரண்டு வரி காதில் விழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிரச்சினை, மெலடி பாடல் என்றால் இசையே இல்லாமல் இசைப்பதுதான் என்ற முடிவுதான்.
 
மெல்ல நகரும் மணிரத்னத்தின் படங்களின் ரசிகர்கள் இப்படத்தைப் பொறுமையாகப் பார்ப்பார்கள். நான் பார்த்தேன். ரசித்துப் பார்த்தேன். கதையே இல்லை என்பது தந்த எரிச்சலை மீறி, மணிரத்னத்தின் சில செயற்கையான காதல் வசனங்களை மீறி, பிரமிக்க வைக்கும் பல காட்சிகளை ரசித்துப் பார்த்தேன். இரண்டாம் முறையும் பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் நொந்து போவார்கள். அப்படி நொந்து போனவர்கள் நம்மையும் நிம்மதியாகப் பார்க்கவிடாமல் கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று நான் பார்த்த திரையரங்கில் என்னைத் தவிர எல்லாருமே இப்படி நொந்து போய் கமெண்ட் அடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இரண்டரை மணி நேரப் படம் இருபது மணி நேரம் ஓடுவது போல் பிரமை ஏற்படுத்துவது உறுதி என்பதால் கட்டுச்சாதம் கட்டிச் செல்லவும். மிகத் தெளிவாக இது ஈகோ க்ளாஷ் படம் என வகைப்படுத்தி இருந்தால், ஒரு கட்டுக்குள்ளாவது இருந்திருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் மணிரத்னம்.
 
பின்குறிப்பு: இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று வருகிறது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வருகிறது. கூடவே இன்னொருவர் பெயரும் வருகிறது. அதோடு ஒரிஜினல் ஸ்கோர் என்று அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?
Share

கிறுக்கல்கள் தங்கமீன்களான கதை

குமுதத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகியிருக்கிறது. எதோ ஒரு தருணத்தில், சிறிய கதையில் கூட கொஞ்சம் முயற்சி செய்யமுடியும் என்ற எண்ணம் உந்த எழுதி அனுப்பிய கதை இது. அனுப்பிய நாள் செப்டம்பர் 7, 2016. ஒரு பதிலும் இல்லை. குமுதம் போன்ற இதழ்கள் பதில் அனுப்பாது என்று தெரியும் என்பதால், இதழில் வருகிறதா என்று பார்த்தேன். அடுத்த நான்கு வாரங்களில் கதை வரவில்லை என்றதும், இதழில் தேடுவதை நிறுத்திவிட்டேன். 23.10.2016 அன்று, என் கதை வேறு இதழுக்கு அனுப்புகிறேன் என்று குமுதத்துக்கு ஒரு மடலும் அனுப்பினேன். பின்பு அக்கதையை வாரமலருக்கு அனுப்பி வைத்தேன். வாரமலரில் இருந்தும் பதில் இல்லை. எனவே ஜனவரி 2017ல் அக்கதையை என் சிறுகதைத் தொகுப்பு ‘புகைப்படங்களின் கதைகள்’ நூலில் சேர்த்து வெளியிட்டுவிட்டேன். மார்ச் 15ம்தேதியிட்ட குமுதத்தில் என் கதை வெளியாகி இருக்கிறது. அதுவே நண்பர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்! ஒரு கதை ஏழு மாதம் கழித்து வெளியாகும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதெல்லாம் ஸென் நிலை. ஒரு பெண்ணுக்காகக்கூட அப்படி காத்திருக்கமுடியாது என்பதே என் டிஸைன்.

நான் எழுதியதே மூன்று பக்கம் கூட இருக்காது. அதை இரண்டு பக்கமாக சுருக்க்கிவிட்டார்கள். கதையின் பெயரையும் மாற்றி இருக்கிறார்கள்.

குமுதத்துக்கு நன்றி. 🙂

நேற்று உடனே வாரமலருக்கு மடல் அனுப்பினேன், என் சிறுகதை ஒரு தொகுப்பில் வெளிவந்துவிட்டது, எனவே வாரமலரில் வெளியிடவேண்டாம் என்று. அதைப் பார்த்தார்களா, அதற்கு முன் வந்த என் கதையைப் பார்த்தார்களா என்பதெல்லாம் எதுவும் எனக்குத் தெரியாது.

நான் எழுதிய கதையையும் குமுதம் எடிட் செய்து வெளியிட்ட கதையையும் இங்கே இணைத்திருக்கிறேன். வாசித்து இன்புற்று ஆசி வழங்குங்கள்.

தேவையா இதெல்லாம்? 🙂

கிறுக்கல்கள் (சிறுகதை)

– ஹரன் பிரசன்னா
வீட்டின் சொந்தக்காரர் மாடியில்தான் குடியிருக்கிறார். ஆறு வயது மகள் ஸ்ருதியைத் தூக்கிக்கொண்டு மாடிக்குப் போகும்போது ஒரு கூடை ரோஜாவைத் தூக்கிக்கொண்டு போவது போல் இருக்கும் என்றெல்லாம் ரசிக்க இப்போதைக்கு பாலாவால் முடியாது.

இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி வாடகை குறைக்கக் கெஞ்சி வண்டி அமர்த்தி வீடு மாற்றி தன் பருத்த உடலைத் தூக்கிக்கொண்டு மூச்சு வாங்கி எல்லாவற்றையும் அடுக்கி நிமிரும்போது, ‘என்னங்க இது, வாஷ் பேசின்ல தண்ணி போகமாட்டேங்குது…’ நினைக்கும்போதே பாலாவுக்கு முதுகு சுண்டி இழுத்தது. இந்த வீட்டுக்குக் குடி வந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காலி செய்யச் சொல்லிவிட்டார்.

எல்லா வீட்டுக்காரர்களும் ஒரே போல்தான் இருக்கிறார்கள். எல்லா குடித்தனக்காரர்களும்கூட ஒரே போலத்தான் இருக்கிறார்கள். வீட்டுக்காரர் சிரிக்கும்போது சிரிக்கலாம். ஆனால், அவர் கோபப்பட்டால் கூடவே கோபப்படமுடியாது. பணிந்து பேசவேண்டும். இல்லையென்றால் இன்னொரு வீடு பார்த்து அட்வான்ஸ் குறைக்கச் சொல்லிப் பேசி…

மாடிப்படி ஏறி ஒரே ஒரு தடவை மட்டும் பெல் அடித்துவிட்டு வாசல் திறக்க பவ்யமாகக் காத்திருக்கும்போது ஸ்ருதி சொன்னாள். “அப்பா, நான் சொன்ன பாயிண்ட்ட மறந்துறாத.”

வீட்டுக்காரம்மா வந்து கதவைத் திறந்துவிட்டு அவனை உள்ளே வாங்க என்று சொல்லாமல், வீட்டுக்குள் இருக்கும் தன் கணவனிடம் ‘பாலா வந்திருக்கார். வாங்க’ என்று இங்கிருந்தே சத்தமாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் நகர்ந்தாள். மாடியில் வைக்கப்பட்டிருந்த ரோஜாச் செடிக்களைத் தட்டித் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள் ஸ்ருதி. பாலா கண்களால் அதட்டினான்.

உடைந்து விழுவது போல வீட்டுக்காரர் வந்தார். அவருக்கு உடையாத குரல் என்பது பாலாவுக்குத் தெரியும். இவருக்குள் எங்கிருந்து இத்தனை கம்பீரமான குரல் வருகிறது என்று பலமுறை யோசித்திருக்கிறான் பாலா.

“சொல்லுங்க பாலா” என்றார். “அதான் எல்லாம் சொல்லியாச்சே. நீங்க காலி பண்ணிடுங்க. நல்ல ஃபிரண்ட் நாம. அது எப்பவும் அப்படித்தான். உங்கள மாதிரி நல்ல டெனெண்ட் கிடைக்கிறதெல்லாம் சான்ஸே இல்லை. நானே சொல்லிருக்கேனே இதை.”

பாலா மெல்ல சொன்னான். “இல்ல சார், எதோ சின்ன பொண்ணு தெரியாம சுவத்துல கிறுக்கிட்டா… இனிமே நான் கிறுக்காம பாத்துக்கறேன்.”

வீட்டுக்காரர் பாலாவிடம், ‘சே சே. இதுக்குன்னு இல்லை. குழந்தைங்கன்னா கிறுக்கத்தான். கிறுக்கினாத்தான் குழந்தைங்க. என் மாப்பிள்ளைக்கு வேலை மாத்தலாயிருக்கு. இங்கவே வந்து தங்கப் போறாங்க. பேத்தி மலர் எங்க கூடயே இருக்கப்போறான்னு எங்களுக்கும் சந்தோஷம். அதான் காரணம்” என்றார்.

“இல்ல சார், சின்ன பொண்ணு… தெரியாமத்தான் கிறுக்கிட்டா.”

“சின்ன பொண்ணுதான் பாலா. யார் வீட்ல சின்ன பொண்ணுங்க இல்ல சொல்லுங்க? நாமதான் பார்த்துக்கணும். உங்களுக்கு சொந்த வீடு இல்லாததால இதெல்லாம் புரியல. கொழந்தைங்களுக்கு என்ன தெரியும்” என்று சொல்லிவிட்டு, “ஸ்ருதி, சாகெல்ட் வேணுமா?” என்று கேட்டார். ஸ்ருதி ரோஜாச் செடியில் இருந்து கையை எடுக்காமல் “தேங்க்ஸ் அங்கிள்” என்றாள்.

பாலா, “இல்ல சார். இனிமே கிறுக்க மாட்டா. ஷ்யூர்” என்றவன், ஸ்ருதியை அழைத்து, “சொல்லும்மா” என்றான். அவள், “ரோஜாச் செடியே க்யூட் பா” என்றாள்.

காற்றில் கதவில் மாட்டியிருந்த திரை அசைந்து வீட்டுக்காரர் முகத்தை மூடியது. பாலா வீட்டுக்காரருக்குத் தெரியாமல் ஸ்ருதியைக் கண்ணால் மிரட்டினான். ஸ்ருதி, “டோண்ட் டூ தட் டாடி. ஐ ஃபீல் லாஃபிங்” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டே சொன்னாள். வீட்டுக்காரர் ஸ்ருதியைப் பார்த்து, ‘ஸ்வீட் கேர்ள்’ என்று சொல்லிவிட்டு, “இந்த மாசம் காலி பண்ணிக் குடுத்துடுங்க பாலா” என்றார்.

வேறு என்ன என்னவோ வார்த்தைகளில் பாலா அவரிடம் விடாமல் பேசிக்கொண்டிருந்தான். அவரும் விடாமல் கிறுக்கல்கள், மலர், மாப்பிள்ளை என்று சுற்றி சுற்றி பதில் சொல்லிக்கொண்டிருந்தார். வீட்டுக்காரம்மா வெளியில் வந்து பாலாவிடம் “காப்பி கலக்கட்டுமா” என்றுவிட்டு, கணவரை நோக்கி, “துணி காயப்போடணும்” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

வீட்டுக்காரர் பாலாவிடம், “சரி. நான் என் மாப்பிள்ளைகிட்ட பேசிப் பாக்கறேன். அவர் இங்க தங்கலைன்னா நீங்களே இருங்க. என்ன இப்போ. ஆனா கொஞ்சம் பாத்துக்கோங்க. முழுக்க வெள்ளை அடிக்கணும்னா 20,000 ரூபாயாவது ஆகும். உங்களுக்காக உங்ககிட்ட நான் அட்வான்ஸே 20,000 ரூபாய்தான் வாங்கினேன்” என்றார்.

“நோ நோ. இனிமே கிறுக்கவேமாட்டா” என்றான் பாலா. அவருக்கு தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஸ்ருதியைக் கூட்டிக்கொண்டு கீழே இறங்கினான். இறங்கும்போது ஸ்ருதியிடம், “அப்பா வீடு கட்டறேன். வீடு முழுக்க என்ன வேணா நீ கிறுக்கிக்கலாம்” என்றான்.

“அப்பா, நம்ம வீட்டுல மலர் கிறுக்கினதும் இருக்குப்பா. அவ ஹேண்ட் ரைட்டிங் எனக்குத் தெரியும். இதைக் கேட்டிருந்தா அவரால பதிலே சொல்லிருக்க முடியாது. நான் சொல்லிக்கொடுத்த நல்ல பாயிண்ட்டை நீ கேக்கவே இல்லையேப்பா” என்றாள் ஸ்ருதி.

(முற்றும்)

thangameengal kirukkalgal

Share

சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள்

சசிகலாவைப் பற்றிய மிகத் தரக்குறைவான மீம்ஸ்களும் இடுகைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அனைத்திலும் உள்ள அடிநாதம், அவர் வேலைக்காரி என்பதுதான். சசிகலாவை எதிர்க்க எத்தனையோ காரணங்கள் உள்ளன. வீட்டு வேலை செய்தவர் என்ற காரணம்தான் சிலருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டு வேலை செய்வது இழிசெயல் அல்ல. வேலைக்காரி என்ற சொல்லில்கூட ஒரு இழிதொனி உள்ளது. சசிகலா எவ்வித ஊழலும் செய்யாதவராக இருந்து அவர் முதல்வராகும் வாய்ப்பும் வந்திருந்தால், வீட்டு வேலை செய்தவர் முதல்வராக முடியும் என்பது பெருமைக்குரியதே. ஒவ்வொருமுறையும் அவரை வேலைக்காரி என்று இழித்துரைப்பதன்மூலம் தங்கள் ஆதிக்கத் திமிரையே ஒவ்வொருவரும் பதிவு செய்கிறார்கள். ஒருவகையில் எல்லாருமே யாருக்கோ வேலைக்காரர்கள்தான். நடிகர் நாடாள்வது, வீட்டு வேலை செய்பவர் நாடாள்வது போன்ற எல்லா விவாதங்களையும் ஒற்றைப் புள்ளியில் குறுக்கி இகழ்வதால் நாம் நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம் என்பது மட்டும்தான் உண்மை.
 
அதேபோல் சசிகலா ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார் என்பது. இதை நான் சிறிதளவு கூட நம்பவில்லை. ஏன் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை, ஏன் வீடியோ இல்லை என்பதெல்லாம் ஏற்புடைய கேள்விகள்தான். ஆனால் அதன் பின்னணியில் இருப்பது நிச்சயம் கொலை எண்ணம் அல்ல என்றே நம்புகிறேன். சசிகலாவின் ஆனந்தவிகடன் பேட்டி இதைத் தெளிவாக்கி இருக்கிறது. இதே காரணங்களையே நானும் நினைத்தேன். தன்புகைப்படம் எப்படி வரவேண்டும் என்பதில் ஜெயலலிதா மிகக் கறாராக இருந்தவர். தன்னை இந்நிலையில் யாரும் சந்திக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆளுநர் கூடவா என்ற கேள்வியெல்லாம் ஜெயலலிதாவின் முன் எடுபடவே எடுபடாது. பிரதமரே அழைத்த போதும் தொலைபேசியில் அவர் பேச மறுத்த ஒரு சம்பவம் முன்பு நடந்த நினைவு. கூடவே, எல்லாவற்றையும் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ளும் சசிகலாவின் மனோபாவமும் சேர்ந்துகொண்டிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் வந்துவிட்டால் இத்தனை கேள்விகளும் ஒரே நொடியில் காணாமல் போய்விடும் என்று நம்பி இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இவற்றுக்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
இப்போதெல்லாம் சாதாரணமாக எந்த முக்கியஸ்தராவது மரணமடைந்தாலும் கூட அதில் சந்தேகங்களைக் கிளப்புவது வாட்ஸப்/ஃபேஸ்புக் ஃபேஷனாகி வருகிறது. எப்போதும் எதிலும் ஏதோ ஒரு த்ரில்லரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும் நாம் இதனை உடனே நம்பத் தலைப்படுகிறோம். உண்மையில் எதாவது சந்தேகங்களை நம்பும் மாதிரி யாராவது கேட்டுவிடமாட்டார்களா என்று துடிக்கிறோம். இதன் நீட்சியே இது.
 
எந்த ஒன்றையும் அதீதமாக்கி அதன் மேல் வெறுப்பு வரவைப்பதே நம் வழக்கம். வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் இதை இன்னும் தீவிரமாக்கி இருக்கிறது. எது கையில் கிடைத்தாலும் அதை உடனே லட்சம் பேருக்கு அனுப்பும் மனநோய் எல்லோரையும் ஒளிவேகத்தில் பீடித்துக்கொண்டிருக்கிறது. இன்று அனுப்பும் நீங்கள் நாளையே உங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தியைப் பெறலாம். அன்றும் இதே போல் சிரித்துக் கடக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Share

சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு

எல்லாரும் சுப்ரமணியம் சுவாமி சட்டத்துக்காகத்தான் பேசுகிறார் என்றனர். என் நண்பர் எனக்குச் சொன்ன தகவலை வைத்து, சுவாமி வெளிப்படையாகவே சசிகலாவை ஆதரித்துவிட்டார் என்று நானாகவே தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். சில நண்பர்கள் அப்படி இல்லை என்று சுட்டிக் காட்டியதும்தான் புரிந்தது. ஆனாலும் உள்ளே ஒரு சந்தேகம். இன்னும்.
 
* ஏன் சட்டம் தன் கடமையைச் செய்ய இம்முறை சுவாமி அதிகமாக மெனக்கெடுகிறார்?
 
* சட்டம் கொஞ்சம் தாமதமாகச் செயல்படுவதால் என்ன பெரிய கேடு வந்துவிடப்போகிறது? சசிகலா முதல்வராகப் போவது தள்ளிப் போனால் நல்லதுதானே?
 
* இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரப்போகிறது என்று உச்ச நீதி மன்றம் சொல்லி இருக்கும்போது, சசிகலா மீது வழக்கு தொடர்ந்தவரே ஏன் சட்டம் உடனே செயலாற்றவேண்டும் எனத் துடிக்கிறார்?
 
புரியவில்லை. சரி அமைதியாக இருக்கலாம், எப்படியும் இவ்விஷயம் வெளியே வரும் என நினைத்தேன்.
 
இன்றுவரை என்ன காரணம் என்பது புரியவில்லை என்றாலும், நிச்சயம் இதன் பின்னால் என்னவோ ஒரு மர்மம் உள்ளது. அது பாஜகவுக்கு நல்லது செய்வதாகவும் இருக்கலாம், அல்லது சுவாமிக்கு தனிப்பட்ட நலன் கிடைப்பதாகவும் இருக்கலாம். உறுதியாக இப்போது வரை தெரியவில்லை.
 
இந்தியா டுடே தொலைக்காட்சி விவாதத்தில், சசிகலா ஹிந்து பக்தி உடையவர் என்பதால் அவரை ஆதரிப்பதாக சுவாமி சொன்னதாகத் தெரிகிறது. இந்த காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. இது உண்மையென்றால், பன்னீர் செல்வமும் ஹிந்து பக்தி உடையவரே. ஏன் சசிகலாவுக்கு மட்டும் சுவாமி ஆதரவு தருகிறார் என்பது புரியவில்லை.
 
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், சுவாமி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கூடிவிடுமோ, அதற்கு முன்பாக சசிகலாவை ஆளுநர் அழைத்துவிடவேணுமே என்ற பதற்றம் சுவாமிக்கு இருப்பதாக எனக்கு மட்டும்தான் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். என் சந்தேக புத்தி அப்படி.
 
இவர் பாஜகவில் சேர்ந்த நாள் முதலாகவே, மோதிக்கு தலைவலியாக இருப்பார் என்பதே என் கருத்தாக இருந்தது. இன்று வரை பெரிய குடைச்சல் இல்லை. காரணம், மோடியும் பாஜகவும் இவரை எந்த அளவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதுதான். சுவாமி பாஜகவைப் பயன்படுத்துவதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
 
இதனால் சுவாமியின் ஊழலுக்கு எதிரான சாதனைகளை மறுக்கிறேன் என்று அர்த்தமல்ல. அது அசாதரணமான வெற்றி. ஊழலுக்கு எதிரான வெற்றிகளை முன்வைத்து சுவாமியை முழுமையாக நம்புகிறேன் என்பதுமல்ல. ஏனென்றால் சுவாமியின் வரலாறு அப்படி. இன்றைய நிலையில் சுவாமியின் நிலைப்பாட்டில் சந்தேகமே தொடர்கிறது.
Share

ரூபெல்லா தடுப்பூசியும் வாட்ஸப் முட்டாள்களும்

என் மகனும் மகளும் படிக்கும் பள்ளியில் இன்று ரூபெல்லா தடுப்பு ஊசி போடப்பட்டது. நான்கு நாள்களுக்கு முன்பே ஊசி போடச் சம்மதம் என்று ஒரு படிவத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்கள். நேற்று அழைத்து, இன்று ஊசி போட வரச் சொன்னார்கள். அழக்கூடாது மஹி என்று அவளை அழைத்துகொண்டு சென்றேன். சாக்லேட் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாள். அபிராமுக்கு இன்று ப்ரவீன் பூர்வார்த் பரிட்சை என்பதால் அவனுக்கு ஊசி போடவில்லை. அடுத்த முகாமில் போடவேண்டும்.

பள்ளியில் கூட்டமே இல்லை. நான் 8 வயதில் இருக்கும்போது காலரா தடுப்பூசி போட்டார்கள். அப்போதும் இதேபோல் ஒரு வதந்தி இருந்தது. காலரா ஊசி போட்டால் கண்ணு போகுதாம், காது போகுதாம், அதுவா டாம் டாம்னு வெடிக்குதாம் என்ற வதந்திகளை மீறி மக்கள் சாரை சாரையாக வந்து வரிசையில் நின்று போட்டுக்கொண்டார்கள். சேரன்மகாதேவியில் நாங்கள் குடி இருந்த தெருவில் எங்கள் வீட்டுக்கு எதிரே தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விழா போல நடந்தது. ஊர் நண்பர்கள் குழந்தைகளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து ஊசி போட்டார்கள். ஊசி போட்டால் ஆரஞ்சு மிட்டாய் தருவார்கள். காய்ச்சல் நிச்சயம் வரும் என்றார்கள். காய்ச்சல் வந்தால் 2 நாள் பள்ளிக்கு மட்டம் போடலாம் என்ற என் ஆசையில் மண் விழுந்தது. சரியாக எனக்கு மட்டும் காய்ச்சலே வரவில்லை. நம் வாழ்க்கையில் இப்படி ஒரு தோல்வியா என்று நான் துக்கித்துக் கிடந்தது நினைவில் இருக்கிறது. ஆனால் 40 வயது மாமாவுக்கும் அத்தைக்கும் கை வீங்கி அதற்கு தனியே மருத்துவம் பார்க்க ஹைகிரவுண்டு போனார்கள்.

இன்று வாட்ஸப் ஃபேஸ்புக் காலம். விவஸ்தையே இல்லாமல் புரளிகள் மட்டுமே உண்மை என்று சுற்றி வரும் காலம். எவ்வித யோசனையும் இன்றி, காசா பணமா என்று எல்லாவற்றையும் ஃபார்வெர்ட் செய்து பெருமை பீற்றிக்கொள்ளும் முட்டாள் கூட்டம். எதை அனுப்புகிறோம், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எந்த யோசனையும் கிடையாது. மீம்ஸா அனுப்பு. செய்தியா அனுப்பு. எதையும் யோசிக்க நினைப்பதில்லை. யோசிக்க கொஞ்சம் மூளையும் அவசியம் என்பதால் இப்பிரச்சினை. இதில் உச்சம் என்னவென்றால், இதையே செய்தியாக நம்பி வெளியிடும் பத்திரிகைகளில் பொறுப்பற்ற மூடத்தனம். இதனால் இப்பிரச்சினை இன்னும் கூடுதல் சிக்கல் கொள்கிறது. இன்னும் அதிகம் பகிரப்படுகிறது. வாட்ஸப் மற்றும் ஃபேஸ்புக்கின் புரளிகளின் ஆதாரம், ரூபெல்லா தடுப்பூசிக்கு வந்திருக்கும் பயம்.

அரசு கரடியாகக் கத்தினாலும், புத்தி உள்ளவர்கள் இதன் தேவை பற்றிக் கதறினாலும், இவர்களின் செயல்பாட்டைவிட லட்சம் முறை அதிகம் பேசப்படுவது புரளிகளே. இந்த ஒட்டுமொத்த தடுப்பூசிகளினால் ஏற்படும் நன்மை என்ன, தேவை என்ன என்பதன் விவாதம் நிச்சயம் தேவைதான். ஆனால் அதை முன்னெடுக்கும் விதம், இதைப் போட்டால் உயிர் போய்விடும் என்ற ரீதியில் அல்ல. இதனால் பயந்துபோய் பலர், பெருவாரியானவர்கள் ஊசி போடவில்லை.

இன்று பள்ளியில் பேசிக்கொண்டிருந்தபோது, 40 பேர் உள்ள வகுப்பில் 5 பேர்தான் போடச் சம்மதித்திருக்கிறார்கள். பலருக்கு வாட்ஸப்பில் வந்த வதந்தியால் பயம். இவர்கள் புத்திசாலித்தனமான வாதமாகச் சொல்வது, “அது பொய்யாவே இருக்கட்டும். ஆனாலும் எதுக்கு ரிஸ்க்?” என்பது. இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.

மிகச் சொற்ப அளவில் வந்திருந்த குழந்தைகளுக்கே இன்று ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. போட்டவுடன் ஒரு அறையில் அரை மணி நேரம் காத்திருக்கச் சொன்னார்கள். அப்வர்வேஷனில் இருக்கவேண்டும் என்றார்கள். இதெல்லாம் வாட்ஸப்பின் கைங்கர்யம்தான். அரை மணி நேரம் காத்திருந்துவிட்டு, நர்ஸுகளுக்கு நன்றி சொல்லிவிட்டு மஹியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.

“என்னப்பா வீட்டுக்கு போகாம எங்க போற?” என்றாள் மஹி. “சாக்லெட் வாங்க” என்றதும், அவள் சொன்னது. “என்னப்பா நீ. நெஜமாவே வாங்கித் தர! மிஸ்ஸெல்ல்லாம் நாங்க சேட்டை செஞ்சா டார்க் ரூம்ல போடுவோம்னு சொல்லுவாங்க. ஆனா போடவே மாட்டாங்க. எங்களுக்கெல்லாம் நல்லா தெரியும் அவங்க போடமாட்டாங்கன்னு. ஆனாலும் நாங்கள்லாம் அப்படியே பயந்து போய் அமைதி ஆயிடுவோம். நீ என்னடான்னா சாக்லெட் வாங்கித் தர!”

🙂

Share