Archive for ஹரன் பிரசன்னா

The arrival of Ashokamitran

அசோகமித்திரன் வந்திருந்தார்

சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில் எழுதியதை நேற்றிரவு பொழுது போகாத நேரத்தில் படித்தேன். அதைத் தொடர்ந்து, இதுவரை எழுதாத ஒன்றைப் பதிவு செய்யலாம் என்று இதை எழுதுகிறேன்.

எனி இந்தியன் பதிப்பகம் சார்பாகக் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்திருந்த நேரம். அலுவலகம் திநகர் பிஎம்ஜி காம்ப்ளக்ஸில் இருந்தது. நான் கம்ப்யூட்டரில் வேலையாக இருந்தேன்.

அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பழுப்பு நிறத் தோல் பையோடு வயது உலர்ந்த மனிதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் அசோகமித்திரன் என்று பிடிபட எனக்கு ஒரு சில நொடிகள் ஆயின. சட்டென்று எழுந்து, வாங்க சார் என்றேன். அங்கே இருந்து நாற்காலியில் மெல்ல அமர்ந்துகொண்டு, நீங்கதான் பதிப்பகத்தைப் பாத்துக்கறீங்களா என்று தனக்குள் கேட்டபடி, தன் தோல் பையைத் திறந்து, எனி இந்தியன் பதிப்பித்த புத்தகங்களை வெளியே எடுத்தார்.

எனி இந்தியன் பதிப்பித்திருந்த புத்தகங்களை அவர் பார்வைக்கு அனுப்பி இருந்தோம்.

அந்தப் புத்தகங்களை மேஜை மேலே அடுக்கியவர், “இத்தனை புத்தகம் படிக்கறது கஷ்டம். பணம் போட்டுக் கஷ்டப்பட்டு பதிப்பிச்சிருக்கீங்க. வீணாகக் கூடாதுன்னு நேர்ல கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்றார். எனக்குப் பாவமாகப் போய்விட்டது. இந்தப் புத்தகங்களைக் கொடுப்பதற்காக இந்த வெயிலில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா என்று கேட்டேன். வீடு பக்கத்தில்தான், நடந்தே வந்துவிட்டேன் என்றார். இன்னும் கஷ்டமாகிப் போனது.

நாங்கள் அனுப்பிய புத்தகங்களில் தனக்குத் தேவையான ஒன்றிரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டதாகச் சொல்லி, புத்தகங்களுக்கு நன்றியும் சொன்னார்.

“புத்தகத்துல தப்பே இல்லையே.. நெஜமா தமிழ் தெரிஞ்சவங்கதான் போட்டுருக்கணும்னு நினைச்சிக்கிட்டேன்” என்றார்.

“இந்தக் காலத்துல புத்தகமெல்லாம் இன்னும் விக்குதா?” என்று கேட்டார்.

டீ குடிக்கிறீங்களா சார் என்று கேட்டபோது, தண்ணீர் மட்டும் போதும் என்று சொல்லி, குடித்துவிட்டு, வேலை நேரத்தில் உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.

அசோகமித்திரனை வியந்து படித்தவனை அசோகமித்திரனே நேரில் வந்து பார்த்தது (என்னைப் பார்க்க அவர் வரவில்லைதான்) பெரிய ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

இன்னொரு முறை அசோகமித்திரனைப் பார்த்தது, கோபால் ராஜாராமின் வீட்டுத் திருமணம் ஒன்றில்.

அதன் பின்னர் புத்தகக் கண்காட்சிகளில் நான்கைந்து முறை பார்த்துப் பேசி இருக்கிறேன்.

எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கவே கூடாது என்று சுஜாதா சொன்னதை மறுத்து சாரு நிவேதிதா எழுதி இருப்பது, இவற்றை எல்லாம் நினைவூட்டியது.

உண்மையில் சுஜாதா ‘வாசகர்களும் எழுத்தாளர்களும் சந்திக்கக் கூடாது’ என்று எப்போது சொன்னார்? அதுவும் என் (எங்கள்!) சந்திப்பின் போதுதான். அதைப் பற்றி சுஜாதாவுக்கான அஞ்சலியில் 2008ல் எழுதி இருக்கிறேன்.

//தேசிகன் மூலம் நண்பர்கள் சிலர் அவரைச் சந்தித்தோம். ஆறு மணிக்கு சரியாக உட்லேண்ஸ் டிரைவ்இன் வந்த அவர் மிக இயல்பாக எல்லாருடனும் பேசினார். இப்படி சிலர் சேர்ந்து அவரை வறுத்தெடுக்கிறோமே என்று எல்லாருக்குமே தோன்றினாலும், விடாமல் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். கமல், ரஜினி, சிறுகதை, தொடர்கதை, பிரபந்தம் என ஆளாளுக்குப் பல கேள்விகள் கேட்டோம். எல்லாவற்றிற்கும் பதில் சொன்னார். கவிதைகள் பற்றிப் பேச்சு வந்தபோது என்னைப் பார்த்து ‘நீங்ககூட கவிதை நல்லா எழுதுறீங்களே’ என்றார். இரண்டு முறை சொன்னார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. அவருக்கு அபுல்கலாம் ஆசாத்தின் கஜல் புத்தகத்தையும் ஹரிகிருஷ்ணனின் அனுமன் வார்ப்பும் வனப்பும் புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். இனிமையாக முடிந்த அந்த சந்திப்புக்குப் பின்னர், இரண்டு நாள்கள் கழித்து வந்த ஆனந்தவிகடன் கற்றதும் பெற்றதும் பகுதியில், இந்த சத்திப்பைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, இதன் மூலம் அவருக்குக் கிடைத்த செய்தியாக ‘வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையேயான இடைவெளி அவசியம்’ என்பதைச் சொல்லியிருந்தார். சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்குமே கொஞ்சம் திக்கென்றிருந்தது. சுஜாதாவுடன் சந்த்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது, பலர் இடையே வந்து அவரிடம் ஆட்டோகிரா·ப் வாங்குவதும் அவரது ஃபோன் நம்பர் கேட்பதும் அவரது வீட்டுக்கு வரலாமா என்று கேட்பதுமாக இருந்தார்கள். அவருடைய பாப்புலாரிட்டியின் காரணமாக அவர் எப்போதும் வாசகனுடன் ஒரு இடைவெளியை வைத்திருக்க விரும்பினார். அதுமட்டுமின்றி என் கணிப்பில் அவர் ஒரு தனிமை விரும்பியாக இருந்தார். தனிமையைக் கொண்டாடுவாரோ என்று கூட நினைத்திருக்கிறேன். தேசிகனிடம் ஏன் கற்றதும் பெற்றதும் பகுதியில் சுஜாதா இப்படி எழுதினார் என்று கேட்டபோது, கற்றதும் பெற்றதும் பகுதியைப் படித்துவிட்டு பலர் அவருக்கு ·போன் செய்து, நாங்களும் டிரீட் தருவோம், எங்களுடனும் பேசவாருங்கள் என்று அழைத்தார்களாம், அதைத் தவிர்க்கவே சுஜாதா அப்படி எழுதினார் என்று விளக்கம் கூறினார்.//

இப்போது சாருவின் விஷயத்துக்கு வருவோம். எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்திக்கலாமா? கூடவே கூடாது. எழுத்தாளர்களுக்காக அல்ல. வாசகர்களுக்காக.

Share

My interview

Thanks: Rajavel Nagarajan and Pesu Tamizha Pesu

Share

Madurai Lord Murugan Conference

முருக பக்தர்கள் மாநாடு ஆன்மிகமா மதவாத அரசியலா?

கூட்டம் வருமா? மதுரை குலுங்குமா?

ராமரைக் கைவிட்டுவிட்டு முருகனுக்குத் தாவியது ஏன்?

மதச்சார்பின்மைக்கு பங்கமா?

பதில் அளிக்கிறார் நம்பி நாராயணன்.

Share

Kerala crime files Season 2

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் (M) – ஒருமுறை பார்க்கலாம். ஆகா ஓகோ என்று சொல்ல முடியாவிட்டாலும் நிச்சயம் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல தருணங்கள் உள்ளன. முதல் இரண்டு அத்தியாயங்களும் கடைசி இரு அத்தியாயங்களும் அருமை. அதிலும் முதல் 5 நிமிடங்கள் வாவ். நடுவில் இரண்டு அத்தியாயங்கள் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயல்கின்றன. அதில் தப்பித்துக் கொள்வது நம் சாமர்த்தியம்.

தொடர் முழுக்க ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆறு எபிசோட் எப்படியாவது வந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் போல. அதிகாரிகள் மாறினாலும் அதே விஷயத்தை ஒவ்வொரு ஊரிலும் சென்று பேசுகிறார்கள். போதும்டா சாமி நீங்க பேசுனது என்று நினைக்கும் போதுதான் கதைக்குள்ளேயே வருகிறார்கள். இதில் போதாக்குறைக்கும் மனைவி கதாபாத்திரங்களின் எரிச்சல் வேறு.

கதையில் ஓர் ஆச்சரியம் கொலை எதற்காக என்பது.  அதில் ஒரு மைனஸ் இதற்காகத்தான் இருக்கும் என்பதை முதல் காட்சியிலேயே யூகிக்க முடிவது. இன்னொரு மைனஸ், என்னதான் நியாயம் என்றாலும் அதற்காக இத்தனை கொடூரமான கொலையா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதை எல்லாம் தாண்டி இந்தத் தொடரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, திரைக்கதை எழுதிய விதம். கடைசி வரை எதற்காக கொன்றான் என்று ஒரு சாதாரண பார்வையாளன் யோசித்தாலும் பரவாயில்லை, அது பூடகமாகவே இருக்கட்டும் என்று, பொதுவான கிரைம் த்ரில்லர்களில் வருவது போல கொலைகாரன் அவன் வாயிலேயே வெளிப்படையாகச் சொல்லாதது. அதெல்லாம் கதைக்குள்ளே இருக்கிறது. காட்சிகள் மூலமாக முன்பின் இணைத்து, இதற்குத்தான் கொன்றான் என்பதை நீயே புரிந்து கொள் என்று விட்டிருப்பது நல்ல விஷயம்தான் என்றாலும், 5 மணி நேரமாக காரில் ரோட்டில் படகில் வீட்டில் என்று சதா பேசிக் கொண்டே இருப்பவர்கள், இதை மட்டும் ஏன் வெளிப்படையாக சொல்லாமல் விட்டார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. யூட்யூபில்‌ சேட்டன்கள் இதைப் புளி போட்டு விளக்கிக் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய நடிகர்கள் எல்லாம் இல்லாமல் திறமையான நடிகர்களை வைத்து இயக்கி இருப்பது இன்னொரு நல்ல விஷயம். முதல் இரண்டு எபிசோடுகளில் ஐந்து நிமிடங்களே வந்தாலும் இந்திரன்ஸ் காட்டும் முகபாவம், அதைவிட குறைவான நிமிடங்களே வந்தாலும் ஹரிஸ்ரீ அசோகனின் மேக்கப்பும் குறைவான மிரட்டலான நடிப்பும் இந்தத் தொடரில் முக்கியம் எனலாம்.

இன்னும் வெப் சீரியஸ் விஷயத்தில் மலையாளிகளுக்குப் பிடி கிடைக்கவில்லை. ஏதோ ஒன்று குறைவாகத்தான் இருக்கிறது. அவர்கள் அதைச் சரியாகப் பிடிக்கும் போது, வெப்சீரிஸில் பல மாயங்கள் மலையாளிகளால்தான் நிகழப் போகிறது.

ஜியோ ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Yoga – A discussion with trainers

யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டும்தானா? அதில் ஆன்மிகம் இல்லையா? ஆன்மிகத்தைப் பிரித்துவிட்டால் யோகாவுக்கும் உடற்பயிற்சிக்கும் என்ன வேறுபாடு?

ஆன்மிகம் உள்ளது, வேதகால ரிஷிகள் மொழிந்தது யோகா என்றால், பிற மதத்தவர்கள் அதை ஏன் ஏற்கவேண்டும்? பலர் யோகாவுக்கு மதமில்லை என்கிறார்களே, அது உண்மையா?

யோகாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கிறதா? பால் வேறுபாடு இன்றி, மத வேறுபாடு இன்றி மக்கள் யோகாவை ஏற்றுக் கொள்கிறார்களா? கள நிலவரம் என்ன?

சம்ஸ்கிருதம் கோலோச்சும் யோகாவை பிற மொழிக்காரர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல் உள்ளதா?

எதிர்ப்பு என்ற போர்வையில் யோகா அரசியலாக்கப்படுகிறதா?

இப்படிப் பல கேள்விகளுக்கு தெளிவாகவும் அனுபவபூர்வமாகவும் பதில் சொல்லி இருக்கிறார்கள் யோகா பயிற்றுநர்களான பாலா மற்றும் தங்கலக்ஷ்மி.

பாருங்கள்.

உலக யோகா தினம் – இன்று – ஜூன் 21ம் தேதி.

Pl share

Share

Keeladi Discussion with Krishnan

தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?

தமிழ்நாட்டின் தொன்மம் திட்டமிட்டு மறைக்கப்படுகிறதா?

மத்திய அரசின் உள்நோக்கம் என்ன?

கீழடி அரசியல் குறித்த விரிவான விவாதம் – எஸ்.கிருஷ்ணனுடன்.

Share

Vadakkan Malayalam Movie

வடக்கன்  (M) – சுமாரான திரைப்படம்தான். ஆனால்…

சில மலையாளப் படங்களை சுமார் என்று சொல்லிவிட்டு ஆனாலும் புறக்கணிக்க முடியாததாக இருக்கிறது என்று சொல்ல வேண்டி இருக்கிறது. அதிலும் சமீபமாகப் பார்த்த திரைப்படங்கள் எல்லாமே அந்த வகையில் வருகின்றன. ஆஹா ஓஹோ என்று கொண்டாடவும் முடியவில்லை. சுத்தக் குப்பை என்று தள்ளவும் முடியவில்லை. அதில் ஒன்று வடக்கன்.(ஹிந்தி வடக்கன் என்ற பொருளில் அல்ல.)

பேய்த் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். நமக்கு அதிகம் அறிமுகமானது காஞ்சனா, அரண்மனை போன்ற திரைப்படங்கள்தான். ஆனால் மலையாளத்தில் வேறு வகையும் வருகின்றன. குமாரி, பூதகாலம், பிரமயுகம் போன்ற சைக்காலஜிக்கல் ஹாரர். இதில் இந்த மூன்றுமே ஒவ்வொரு வகையில் முக்கியமானவை. அந்த மூன்று திரைப்படங்களிலும் எனக்குச் சில குறைகள் இருந்தாலும் கூட, அவை முக்கியமான திரைப்படங்கள் என்பதில் மாற்றமில்லை.

இந்தத் திரைப்படம் அந்த அளவுக்குப் போகவில்லை என்பது பெரிய குறை. முதல் முக்கால் மணி நேரம் சாகடித்து விட்டார்கள். ஏன் இந்தக் கொடுமையைப் பார்க்க வேண்டும் என்று விடை தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு மெல்ல மெல்ல கதை விறுவிறுப்பாகிறது. சைக்கலாஜிக்கல் தில்லர் வகைக்குள் போகிறது. ஃபிளாஷ்பேக் கட்சிகளில் ஜாதிய வேறுபாடு, தெய்யம் ஆட்டம், அதன் பின்னால் இருக்கும் காமம் என்று பலவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். கதையில் எந்தப் புதுமையும் கிடையாது. ஆனால் அதை எடுத்த விதம் பார்க்க வைக்கிறது. குறிப்பாக அந்தப் பாடல் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

வழக்கமான பேய்ப் படங்கள் போல அல்லாமல் ஒரு சீரியஸான பேய்ப் படமாக எடுத்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் கதாநாயகியின் நடிப்பு, ஐந்து நிமிடங்கள்தான் என்றாலும் கூட, மிரள வைக்கிறது. இன்னொரு குறை என்று பார்த்தால் கதாநாயகனாக கிஷோரை நடிக்க வைத்தது.

பொறுமையாக, கொஞ்சம் வித்தியாசமான அனுபவம் வேண்டும் என்று நினைப்பவர்கள் நேரமிருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

முக்கியமான விஷயம் 18+ திரைப்படம்.

Share

Three rules of central literary awards

மூன்று விதிகள்

ஒரு விருதைத் தீர்மானிக்கும் நடுவர் குழுவில் இடதுசாரி ஆதரவாளர்களோ திராவிட இயக்க ஆதர்வாளர்களோ இருந்தால், அந்த விருது பாஜக தலைமையிலான அரசு தரும் விருதாகவே இருந்தாலும் கூட, அவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது கொள்கைக்கு எதிரான புத்தகங்களையோ எழுத்தாளர்களையோ கௌரவிக்கவே மாட்டார்கள். இது விதி 1.

அதே பாஜக அரசில் இடதுசாரி எதிர்ப்பாளர்களோ திராவிட எதிர்ப்பாளர்களோ நடுவர்களாக அமரும்போது, அவர்கள் தங்களை நடுநிலையானவர்கள் என்று 100% நம்பிக்கொண்டு அவர்களும் இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் திராவிட ஆதரவு எழுத்தாளர்களுக்குமே பரிசுகளைத் தருவார்கள். இது விதி 2.

விதி 3: இதுவே தலைவிதி.

Share