Archive for ஹரன் பிரசன்னா

அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்

* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று நான் நினைப்பதால் அதை விட்டுவிட்டு மற்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

* நான் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல், மகாதேவன் சுயமான சிந்தனை உடையவர். இதன் எதிர்த்திசையில், யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காகவேகூட தீவிரமான சிந்தனை செய்பவரும்கூட என்பது என் அனுமானம். இப்படிச் சிந்திப்பவர்களால் சில சமயங்களில் தீவிரமான கருத்துப் பிரதிவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே கருத்தின் அடிப்படையில் மட்டுமே மகாதேவன் போன்றவர்களை அணுகுதல் நலம். இந்த இடுகையில் நான் சொல்லும் கருத்து, மகாதேவனின் அனைத்துக் கருத்துகளுக்குமான கருத்தல்ல.

* சிபிஎஸ்இ பள்ளிகளில் பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதையே நான் முதலில் ஏற்கவில்லை. பிராமணர்கள் உள்ளிட்ட மற்ற உயர்சாதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதனால்தான் அவர்கள் நன்றாக நடத்துகிறார்கள் என்பது அடிப்படையற்றது. இதேபோன்ற தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஹிந்து அல்லாத மற்ற மத ஆசிரியர்களும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் நடத்துவது கண்கூடு. எனவே தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளால்தான் இது சாத்தியமாகிறதே ஒழிய ஜாதியாலோ மதத்தாலோ அல்ல.

* சாதி மற்றும் மதத்தால் ஆசிரியர்களை பொதுப்படுத்துவது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கும். நேரிடையாக அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம், ஐயத்துக்கு இடமின்றி நடந்த ஒன்றைக் கேள்விப்பட்டதாகவும் இருக்கலாம்.

* 3ம் வகுப்பு முதல் கல்லூரி நான் படித்தவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளே. நான் படித்து முடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றெல்லாம் கல்வி நன்றாக இருந்தது என்பது முதல் பொய். நான் படித்தபோதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் லட்சணம் மிகக் கேவலமாக இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இன்று பல மடங்கு முன்னேறி இருக்கிறது. (இந்த முன்னேற்றம் உண்மையான, சரியான முன்னேற்றமா என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது.)

* 3 மற்றும் 4ம் வகுப்பில் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தேன். பாடம் நடத்தவே மாட்டார் ஆசிரியர். உண்மையில் அவருக்கு ஏதேனும் தெரியுமா என்பது எனக்கு இன்று வரை சந்தேகமாக உள்ளது. ஆனால் மாட்டடி அடிப்பார்கள். கூட்டமாக உட்கார்ந்து சொன்னதையே சொல்லி மனனம் செய்யச் சொல்வார்கள். அதிலும் ஆயிரம் பிழைகள் இருக்கும். அப்படியே மனனம் செய்யச் சொல்வார்கள். இந்த லட்சணத்தில்தான் அந்தப் பள்ளியில் படித்தேன். (பள்ளியின் பெயர் வேண்டாம் என்பதால் எந்தப் பள்ளியின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் சொல்லப் போவதில்லை.) ஆசிரியர்கள் அனைவருமே அபிராமணர்கள்.

* 5ம் வகுப்பு படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தண்டம். இதற்கு மேல் அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆசிரியர் பிராமணர். 30 வருடத்துக்கு முன்பாகவே இதுதான் நிலைமை, தரம்.

* 6,7 வகுப்பும் வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. ஜாதியின் வெறியாட்டத்தை உணர்த்தியது இந்தப் பள்ளிதான். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே பிராமணர்கள், அபிராமணர்கள் என்று பிரிந்துகிடந்தார்கள். காந்தியத்தை வளர்த்த பள்ளி திராவிடத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்தது. இந்தப் பள்ளியில் படித்ததையே நான் மறக்க நினைக்கிறேன். நான் முதல் ரேங்க் வாங்கவில்லை என்று ஒரு பிராமண ஆசிரியர், ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லி அடித்தார். நான் தொடர்ந்து 15 முறை (இரண்டு ஆண்டுகளில்) முதல் மதிப்பெண் பெற்றபோது, தேவையற்ற காரணங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அபிராமண ஆசிரியர் அடித்தார். இதில் தன்னை பிராமணச் சார்பு இல்லாதவராகக் காட்டிக்கொள்ளவேண்டிய பிராமண ஆசிரியர்களும் திட்டித் தீர்த்து எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த வெறி மோதல்களுக்கு இடையேதான் நான் ஏதோ படித்தேன். இதில் உள்ள ஆசிரியர்கள் – பிராமணர்களும் அபிராமணர்களும்!

* இப்பள்ளியில் நடந்தவையெல்லாம் அராஜகமானவை. ஒரு பெண் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆசிரியர் தன் பேனாவைக் கொண்டு அந்தப் பெண்ணை உந்தித் தள்ளினார். அந்தப் பேனாவின் நுனி பட்டது, எந்நேரத்திலும் வயதுக்கு வரப்போகும் பெண்ணின் மார்பகத்தில். அன்று முழுவதும் அந்தப் பெண் அந்த பேனா மையின் புள்ளியோடு கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். அதை எதைக் கொண்டு மறைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள். ஒருவரும் இதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. ஏன்? ஜாதி பயமாக இருக்கலாமோ என்னவோ. அன்று வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேறு உடை மாற்றிக்கொண்டு அப்படி அழுதாள். அந்த ஆசிரியர் அபிராமணர்.

* யாராவதுசரியாகப் பாடம் படிக்கவில்லை என்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மாணவிகள் மத்தியில் தூக்கிப் போடுவார். எங்கடா பட்டுச்சு என்று கேட்பார். அந்த ஆசிரியர் பிராமணர்.

* இந்தப் பள்ளியை விட்டுச் சென்றதே என் வாழ்க்கையின் விடுதலை என்று இப்போதும் நினைக்கிறேன். அடுத்து சென்றது இன்னொரு அரசு உதவி பெறும் பள்ளி. 8,9 மற்றும் 10வது படித்தேன். உண்மையான சுதந்திரத்தை இங்கே உணர்ந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுக்க முயன்றார்கள். வெகுசிலர் மட்டுமே மிகச் சிறப்பாக எடுத்தார்கள். அதில் ஒரு ஆசிரியரை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். கணித ஆசிரியர். அவர் கிறித்துவர்.

* இதே பள்ளியில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிறித்துவர். நல்லவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருநாள் திடீரென்று அனைவரிடமும் இன்று நம் வகுப்பில் ம்யூஸிக் கிளாஸ் நடக்கும் என்று சொன்னார். இசைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தோம். வந்தவர்கள் பெரிய பெரிய கிட்டார், ஸ்பீக்கர் என்றெல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக ஏசுவைப் பற்றிய பாடல்களைப் பாடினார்கள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எனக்கு வயது 14. வகுப்பாசிரியர் என் மீது மிகவும் பாசமாக இருப்பவர். அவரிடம் சொன்னேன், இது எனக்கு சரிவராது என்று. மனதுக்குள் எனக்குப் பிடித்தமான கடவுளான ராமரையோ ஆஞ்சநேயரையோ நினைத்துக்கொள்ளச் சொன்னார். அன்று அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இனி இப்படி என்னால் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். தலைமை ஆசிரியர் கிறித்துவர்! அரசு உதவி பெறு பள்ளி!!! இதுதான் லட்சணம். அங்கிருந்த பிராமண ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் யாரும் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இந்த லட்சணத்தில்தான் நம் பள்ளிகள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தன.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல் வீணாகப் பேசிக்கொண்டு இரட்டை அர்த்த ஜோக் அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர் அபிராமணர்.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல், மாணவர்களை ஹோட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டு, தூங்கி எழுந்து சென்ற ஆசிரியர் பிராமணர்.

* பின்பு +1, +2 வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே உருப்படியாகப் பாடம் நடத்திய ஒரே ஆசிரியர், என் வாழ்நாளில் நான் மறக்கவே கூடாத இன்னொரு ஆசிரியர், அபிராமணர். இவர் நடத்தும் தனிப்பயிற்சிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி, “ஏம்ல நீ இங்க வார? ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா? அங்கயும் இங்கயும் ஒண்ணுதாம்ல. நாளைக்கு இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிருவேம்ல” என்றார். கெஞ்சிக் கூத்தாடி ட்யூஷன் சேர்ந்தேன். உண்மையில் பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் நடத்தியக் காட்டியவர் இந்த ஆசிரியர். நமஸ்காரம் இவருக்கு.

* முதல் நாளே இன்னொரு ஆசிரியர் சொன்னார். மெதுவாக. ரொம்பமெதுவாக. மெல்லப் பேசினார். “என்னை நம்பாதீங்க. நான் முடிஞ்சதை நடத்துவேன். நல்ல மார்க் வேணும்னா ட்யூஷன் சேர்ந்து பொழச்சிக்கோங்க. பிராக்டிகல் மார்க் எப்படியாச்சும் வாங்கித் தரேன். நான் ஹார்ட் பேஷண்ட்.” இவர் பிராமணர்.

* இன்னொரு ஆசிரியர் எங்களையே வாசிக்கச் சொல்வார். அவ்வளவுதான் பாடம். அவர் அபிராமணர்.

* இவையெல்லாம் நடந்தது 11 மற்றும் 12ம் வகுப்பில். அதாவது எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் நடந்தவை. இதே போன்ற பிரச்சினைகளுடன் தான் இன்று வரை நம் அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்வியைத் தந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் லட்சணத்தையும், அதற்கான காரணங்களையும், இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தையுமே அன்றி, அவர்களின் சாதி மற்றும் மதத்தை அல்ல.

* அரசுப் பள்ளிகளைவிட கொஞ்சம் பரவாயில்லை அரசு உதவி பெறும் பள்ளிகள். இன்றையக் கல்வியில் இந்த அளவுக்கு ஜாதி மற்றும் மதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கக் காரணம், மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கமே. இவை இல்லை என்றால் மாணவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.

* இப்படி எல்லாம் சொல்வதால் அரசுப் பள்ளிகளில் நல்லவர்களே இல்லை என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மேலேயே மிக நல்ல ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொற்பம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாடம் நடத்துவதில் கில்லாடிகளாக இருக்கவேண்டும்.

* இன்று அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை நம்மால் கற்பனையில் கூட யோசிக்கமுடியாது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேதான் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களின் ஒரே மீட்சி அரசுப் பள்ளிகள்தான். அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக உதவுகிறார்கள். கால் நடக்க முடியாத பையனைத் தானே தூக்கிச் செல்லும் ஆசிரியர், வகுப்பில் வயதுக்கு வந்துவிட்ட பெண்ணை அழைத்துச் சென்று வேறு உடை தந்து புது ஆடை வாங்கிக் கொடுத்து, குங்குமம் மஞ்சள் கொடுத்து நெட்டி முறித்து வீடு வரை சென்று விட்டு வரும் ஆசிரியை, தன் கைக்காசைப் போட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இரவில் தங்கிப் படிப்பதற்காக உணவு தரும் ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமம். ஆனால் இவர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்றால், ஒரு ஆசிரியருக்குரிய தகுதி இல்லை என்றால், இவர்களை இவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டலாமே தவிர, ஒரு முழுமையான ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அரசுப் பள்ளிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இப்படியான ஈரமான ஆசிரியர்களின் தொண்டுகளையே முன் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை, இத்துடன் கூடிய சிறப்பான கல்வி. சிறப்பான கல்வி மட்டுமே ஒரு பள்ளியின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதை நோக்கியே ஆசிரியர்கள் உயரவேண்டும்.

* இந்த நிலை இன்றைய நிலையில் நம் அரசுப் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இல்லை. பணம் இருந்தால் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷனில் படிக்க வையுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புனிதர்கள் அல்ல. ஆனால் அரசுப் பள்ளிகள் அளவுக்கு மோசமானவையும் அல்ல. எனவே நிச்சயம் சேர்க்கலாம். அதேசமயம் மெட்ரிகுலேஷனில் சேர்த்துவிட்டால் பையன் நன்றாகப் படித்துவிடுவான் என்றெல்லாம் கனவு காணக்கூடாது. இது ஒரு சிக்கலான விஷயம். நாம் முயன்றால்தான் ஒரு பையனை சிறப்பாகப் படிக்க வைக்க முடியும். இது பல படிகளில் நிகழவேண்டியது. ஆசிரியர்கள் மட்டுமே ஒரு பையனை சிறப்பாக உருவாக்கிவிடமுடியாது. பல சூழல்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் மெட்ரிகுலேஷனைவிடப் பல மடங்கு சிறந்தவை சி பி எஸ் இ பள்ளிகள். ஆனால் அவை உண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருக்கவேண்டும். மெட்ரிக் வழிமுறையிலேயே நடத்தி பெயருக்கு சிபிஎஸ்இ என்று வைத்துக்கொள்ளும் பள்ளிகளாக இருக்கக்கூடாது. பணமும் இருந்து நல்ல பள்ளியும் இருந்தால் யோசிக்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேருங்கள். தமிழ்நாட்டுக் கூச்சல்களுக்கு மதி மயங்கி, முற்போக்காளர்களின் மூளைச் சலவையில் சிக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள்.

* ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்துங்கள். ஹிந்தி இல்லாவிட்டால் குடி மூழ்கிவிடாது. அதே சமயம் ஹிந்தி படிப்பதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடமாட்டார்கள் என்பதோடு பல வகைகளில் பின்னாளில் உதவவும் கூடும். எனவே நிச்சயம் படிக்கச் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் முதன்மை, ஹிந்தி அடுத்ததாக என்று இருக்கட்டும்.

* அரசுப் பள்ளிகளின் தரத்தை மாற்ற ஆசிரியர்களின் தரத்தை மாற்றவேண்டும். சும்மா பாடத்திட்டத்தை உயர்த்திவிட்டோம் என்று சொல்லிப் பெருமை பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழக அரசு இதைத்தான் எப்போதும் செய்துகொண்டுள்ளது. பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசும் முற்போக்காளர்கள் ஆசிரியர்கள் பற்றி மூச்சே விடமாட்டார்கள். இவர்களது ஒரே நோக்கம் இந்திய ரீதியிலான பாடத் திட்டத்தை முடக்குவதுதான். முதலில் இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களே இன்றைய கல்விக்கும் கல்வித் திட்டத்துக்கும் மாணவர்களுக்கும் முதல் எதிரி. இவர்களை எதிர்கொண்டால் நாம் முன்னேறிவிடலாம்.

* இறுதியாக: பி.ஆர். மகாதேவன் சொன்னதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அதேசமயம் அவர் சொன்னது இதுவரை யாரும் சொல்லி இராத கருத்தல்ல. இவராவது நிறைய விஷயங்களை யோசித்து ஒன்றாக்கி அதிலிருந்து இன்னொன்றை வந்தடைகிறார். மற்ற சிலர், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டால்தான் பள்ளிகள் மோசமாகின என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றைச் சொன்னவர்கள் பாஜக அபிமானிகள் அல்ல என்பதும் (குறிப்பு: பாஜக அபிமானிகள் இப்படிச் சொன்னதே இல்லை என்று நான் சொல்லவில்லை!), திராவிட சிந்தாத்தத்தை நம்புகிறவர்கள் என்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.

Share

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்

முன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன்? படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்!

கவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்து, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.

பொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின் சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும். இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும் எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக் கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்புகளின் தொகுப்பாகிவிடுகிறது இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப் பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு) ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.

பல நினைவுத் தெறிப்புகளுக்கு நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில் வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர் நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது; பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.

கவிஞர் சுரதா இவரைப் பார்த்து, “அகமுடையார்தானே?” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில் படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால் எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழுதினாராம்.

இப்புத்தகத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள் எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி, நா.முத்துக்குமார் வரை அனைவரையும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி, அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும் மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.

இளையராஜாவைப் பற்றிய பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார் என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.

தனித்தமிழ்த்தாகம் (சில இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது!) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்!), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம் அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு, இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.

பின்குறிப்பு: கவிஞர் அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின் பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400

Share

Naradha award

விஷ்வ சம்வத் கேந்திரா வழங்கிய சந்தேஷ் புரஸ்கார் விருது இன்று திருச்சியில் நடந்த நாரத ஜெயந்தியில் தரப்பட்டது. வலம் இதழுக்காக.

புகைப்படம் எடுத்த மச்சேந்திரன் புகழுக்கு மிக்க நன்றி.

Share

நிலம் புதியது நீர் புதியது

1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக்காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே போய் பேருந்து பிடித்து சினிப்ரியா மின்ப்ரியா சுகப்ரியா காம்ப்ளெக்ஸுக்குப் போனால், ‘அஞ்சலி’ ஹவுஸ்ஃபுல், தர்மதுரைக்குப் பெரிய வரிசை. இத்தனைக்கும் படம் வந்து 90 நாள்களுக்கும் மேல் இருக்கும். ஆறேழு நண்பர்கள் மட்டுமே போயிருந்தோம். நான் கவுண்ட்டருக்குச் சென்று, ஸ்கூல் முடிச்சிட்டு வர்றோம்ண்ணே என்று சொல்லவும், கவுண்ட்டரில் இருந்தவர் சட்டென எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டார். கதிர்வேல், அழகேசன், ஜெ.குமரன், சுரேஷ்குமார், நான், இன்னும் ஒன்றிரண்டு பேர். எங்களுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷத்துடன் படம் பார்த்தோம்.

படம் முடிந்ததும் மீண்டும் பேருந்து பிடித்தோம். சிம்மக்கல் பக்கத்தில் சுரேஷ்குமார் இறங்கினான். பின்பு ஜெ.குமரன். பின்பு ஒவ்வொருவராகப் பிரிந்தோம். அன்றைக்குப் பிறகு சுரேஷ்குமார், ஜெ.குமரன் என்று யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. எங்கே இருக்கிறார்கள், என்னை நினைப்பார்களா – எதுவும் தெரியாது. மதுரையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைக்குப் போய்விட்டார்கள். அழகரடியில் குடி இருந்தோம். அங்கே போய்த் தேடியதில் சிலரைப் பிடிக்க முடிந்தது. ஆனால் பலரை இன்று வரை பார்க்கமுடியவில்லை. வீட்டு நண்பர்களாக இருந்தவர்களில் ராஜாவுடன் மட்டும் இன்றும் தொடர்பு இருக்கிறது. மற்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது. . மதிப்பெண் பட்டியல் வாங்கும்போதுகூட யாரையும் பார்க்கமுடியவில்லை. நான் சீக்கிரமே போய் வாங்கிக்கொண்டு திருநெல்வேலி வந்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் தொண்டையை அடைக்கும் துக்கம் அது. இன்றும்கூட திடீரென அழகரடி கனவில் வருவதுண்டு. ஃப்ரான்சிஸ், இன்பக்கந்தன், சரவணக்குமார், பாலாஜி என்று சிலரை ஃபேஸ்புக்கில் பிடிக்கமுடிந்தது. ஃப்ரான்சிஸுடன் எப்போதுமே கொஞ்சம் தொடர்பில் இருந்தேன்.

மகன் அபிராமை 9ம் வகுப்புக்கு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினேன். கொஞ்சம் ரிஸ்க்தான். பெரிய ரிஸ்க்காகக்கூட இருக்கலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் ஒரே பள்ளியில் படித்தவன் அபிராம். நான் எந்த ஒரு பள்ளியிலும் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து படித்ததில்லை. அதற்கே எனக்குப் பிரிவு அத்தனை வருத்தமாக இருந்தது. அபிராமுக்கும் இப்போது அதே மனநிலை. ஆனால் நான் இருந்ததைவிட கொஞ்சம் முதிர்ச்சியுடன் இருக்கிறான் என்றே தோன்றுகிறது. 1ம் வகுப்பிலிருந்து 2 வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற்றும்போது,  “என்னடா, ஃபிரண்ட்ஸை விட்டுப் போறோம்னு இருக்கா” என்று கேட்டதற்கு, “ஏன் அங்க ஃப்ரண்ட்ஸ் இருக்கமாட்டாங்களா” என்று கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று இதைக் கேட்கும் நிலையிலெல்லாம் இல்லை. விவரம் புரியத் தொடங்கிவிட்டது. இதுதான் நிஜம் என்று ஒரு பக்கம் புரிந்தாலும், வருத்தமாகத்தான் இருக்கிறான். கடைசி வரையில் எப்படியாவது இந்தப் பள்ளி மாற்றம் தடைபட்டுவிடும் என்று எதிர்பார்த்தான்.

நான் மதுரையில் பெரிய நண்பர்கள் படையைவிட்டுவிட்டு திருநெல்வேலி சென்றபோது, இனி அப்படி நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றே நம்பினேன். ஆனால் திருநெல்வேலி இன்னொரு நண்பர்படையுடன் என்னை உள்வாங்கிக்கொண்டது. இன்றளவும் தொடரும் நட்புகள் அவை. அதே தீவிரத்துடன் அதே நட்புடன் அதே உண்மையுடன். துபாய் சென்றபோது மீண்டும் அதே எண்ணம், ‘இனி அப்படி நட்பு அமையாது’ என்பதே. ஆனால் வாழ்க்கை இதையும் உடைத்துப் போட்டது. சென்னைக்கு வந்த பிறகும் இப்படிச் சில நண்பர்கள் அமைந்தார்கள். இனி அமைவார்களா? தெரியாது. ஆனால் அமையமாட்டார்கள் என்று நிச்சயம் சொல்லிவிடமுடியாது என்பதை காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

இன்று அபிராம் புதிய பள்ளிக்குச் செல்கிறான். நான் பத்தாம் வகுப்பில் என் நண்பர்களைப் பிரிந்தபோது அவர்களுடன் ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது அதற்கெல்லாம் வசதி இல்லை. இன்று மறக்காமல் நான் அபிராமுக்குச் செய்தேன். பள்ளியின் கடைசி நாளன்று அவன் பள்ளிக்குப் போய் அவனை அவன் நண்பர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். இதில் பல நண்பர்களை அபிராம் இனி பார்த்துப் பழகமுடியாமல் போகலாம். ஆனால் புதிய பள்ளி புதிய நண்பர்களுடன் நிச்சயம் காத்திருக்கும்.

Share

சிலுக்குவார்பட்டி சிங்கம்

விஷ்ணுவிஷாலின் அஜெண்டா என்னவென்று தெரியவில்லை. மிகத் தவறாமல் ஹிந்து மதத்தைச் சீண்டுவதை, குறிப்பாக கிறித்துவ மதத்துக்கு மாறுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் படத்தில் நுழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சொல்லி படத்தில் காட்சியை வைத்தே ஆகவேண்டிய அளவுக்கு அவர் உயரவும் இல்லை. அப்படியானால் ஒட்டுமொத்த திரைப்படச் சூழலும் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

இவர் நடித்த ஜீவா படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். இங்கே வாசிக்கலாம்.

இப்போது ஒரு படம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். 2018ல் வந்திருக்கிறது. ஓவியாவுக்காகப் பார்க்கப் போனால், கதாநாயகி வேறொரு பெண். சரி, பார்ப்போம் என்று பார்த்ததில், கண்ணில் பட்ட ஒரு காட்சி. வீடியோ இணைத்திருக்கிறேன்.

எப்படி நேரடியாக, மறைமுகமாக, பின்னணியாக, உபகாட்சியாக, காமெடியாக, சாதாரணமாக, காதலாக, கண்ணீராக, கோபமாக எப்படியெல்லாம் நுழைக்கிறார்கள் பாருங்கள். எதாவது ஒரு படத்திலாவது ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமோ கிறித்துவ கதாபாத்திரமோ இப்படி ஒரு வசனம் பேசுவதாக வைத்திருக்கிறார்களா? அப்படி வைத்திருந்தால், அது ஹிந்து மதத்தையும் சேர்த்துப் புறக்கணிக்கும் ஒரு ‘புரட்சி’ப் படமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

Share

கிரேஸி மோகன் – அஞ்சலி

கிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலுடன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.

ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.

மூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.

எனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.

நடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.

தேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.

தமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.

Share

போட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்

டிஃபன் பாக்ஸ் (படம் பெயர் லஞ்ச் பாக்ஸ், நாங்கள் கிண்டலாக அதை அன்று அப்படிச் சொன்னோம்) படம் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. நினைவிருக்கிறது என்றால், வாழ்க்கையில் மறக்காது. குஜராத்தில் இரவுக் காட்சிக்கு அழைத்துச் சென்ற பிரதீப்பையும் கூட வந்த நண்பர்களையும் மருதனையும் அந்த இரவு முழுக்க சுற்றியதையும் நிச்சயம் வாழ்நாளில் மறக்கமுடியாது. படம் மெல்ல மெல்ல நகர்ந்தது. முக்கியமான படம்தான், ஆனால் அப்போதைய எங்கள் கொண்டாட்ட சூழலுக்கு ஒட்டவில்லை. ஆனாலும் பார்த்தோம். சிரித்தோம். கலைந்தோம்.

அந்த இயக்குநரின் இரண்டாவது படம் போட்டோகிராஃப். அதே போன்று மெல்ல நகரும் படம். அதேபோன்று நம்பமுடியாத ஒரு சின்ன கதைத் தொடக்கம். அதை நம்பினால் படம் பிடிக்கும். இல்லையென்றால் இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்பதற்குள்ளேயே நாம் அலைந்துகொண்டிருப்போம். லஞ்ச்பாக்ஸில் ரொம்ப அலைந்தேன். போட்டோகிராஃபில் அத்தனை இல்லை என்றாலும், நம்பமுடியாத ஒரு கதைக்கருதான்.

ஏன் இந்தக் கதைக்கு ஒரு ஹீரோ முஸ்லிமாக இருக்கிறான்? ஏன் ஒரு ஹிந்துப்பெண்ணை இப்படி விழுந்து விழுந்து ஆனால் வெளியே தெரியாமல் மெல்ல மெல்ல அழுத்தமாகத் துரத்துகிறான்? தற்செயலா? படம் தற்செயல் என்றே சொல்கிறது. ஆனால் என்னால்தான் அந்த யோசனைகளில் இருந்து வெளியேற முடியவில்லை. அந்தப் பெண் எதனால் கோபமே இல்லாமல் இவன் பின்னால் வருகிறாள்? கோபம் இல்லை என்பதுகூடப் போகட்டும். புரிதலின் உச்சமாக இருக்கலாம். ஆனால் ஏன் ஒத்துழைக்கிறாள்? இத்தனைக்கும் அந்தப் பெண்ணின் படிப்பென்ன, அந்தஸ்து என்ன? சரி, இவனிடம் எதைப் பார்த்து மயங்குகிறாள்? சிஏ இண்டர் படிக்க இருக்கும் டாப்பர் பெண்ணுக்கு மயங்க கிடைக்காத வேறு வாய்ப்புகளா இல்லை? ஆண்களா இல்லை? ஆனால் இவனிடம் மயங்குகிறாள். இதை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரு கவிதை காத்திருக்கிறது.

நவாஸுதீன் சித்திக் ஒரு ஏழை முஸ்லிம். அவன் தன் பாட்டிக்காக ஒரு பொய் சொல்கிறான். அப்படியானால் எப்படிப்பட்ட பெண் தனக்குக் கிடைத்திருக்கிறாள் என்று சொல்வான்? ஒரு தற்செயல்தான் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? எந்தத் தைரியத்தில் அந்தப் பெண்ணிடம் சென்று நடிக்கக் கேட்கிறான்? எதுவுமே ஒட்டவில்லை. மாற்றுத் திரைப்படம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அனுபவத்துக்குள் போ என்கிறார்கள். அந்த அனுபவம் உண்மையில் அட்டகாசமாகவே வந்துள்ளது. பல நுணுக்கமான காட்சிகள். ஆனால் அதன் அடிப்படைதான் நம்பமுடியாததாக இருக்கிறது.

இவர்கள் இருவரும் காதலித்துவிடக்கூடாது என்ற பரிதவிப்பில் பார்த்த முதல் படமாக இதுவே இருக்கும் என நினைக்கிறேன். ஒரு திறந்த முடிவுன் விட்டு வைக்கிறார்கள். அவள் கட்டவுட்டில் இருப்பது தன் படம் இல்லை என்பதைத் தொட்டு, அவனை ஏற்கிறாள் என்றும் சிலர் கொள்ளலாம். ஆனால் அதன் பின்பு வரும் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கில் பெற்றோர் சம்மதிக்கமாட்டார்கள் என்ற கிளிஷே சினிமா காட்சியின் விளக்கத்துடன் யதார்த்தமாக அவர்கள் பிரிகிறார்கள் என்றே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் சரியாக வருகிறது.

லஞ்ச் பாக்ஸ் படத்திலும் சரி, இப்படத்திலும் சரி, மிகக் குறிப்பாக ஈர்த்தது, ஒலிப்பதிவின் துல்லியம். அத்தனை அட்டகாசம்.

இன்னும் ஏன் இத்தனை மெல்லமாகப் படம் எடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவள் யோசிக்கிறாள் என்றால் யோசித்துக்கொண்டே இருக்கிறாள். நடந்து வருகிறாள் என்றால் நடந்துகொண்டே இருக்கிறாள். கடைசியில் கேம்ப கோலா ஃபார்முலாவைச் சொல்லும் ஒரு கிழவர் கதவைத் திறந்தபோது அவருக்கும் நவாஸுதீன் சித்திக்குக்கும் இடையே பத்தடிதான் இருக்கும் என்றாலும், ஐயோ இவர் நடந்து வர 10 நிமிடம் ஆகுமே என்று மனம் அரற்றியது. சட்டென ஒரு எடிட்டிங்கில் அடுத்த காட்சிக்குப் போனபோது அப்பாடி என்றிருந்தது என்றால் அடி எத்தனை பலம் என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

மெல்ல நகரும் திரைப்படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படத்தில் ஒரு நவீனத்தன்மை கூடுதலாகத்தான் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தனை மெல்ல நகரும் படம், மிக அழுத்தமான கதையொன்றைச் சுற்றாத வரையில், எனக்குத் தாங்காது என்பது மீண்டும் ஒருமுறை எனக்குப் புரிந்தது.

Share

கேசரி – ஹிந்தித் திரைப்படம்

கேசரி (ஹிந்தி) – 21 சீக்கிய சிப்பாய்கள் தங்கள் சரகாரி (Saragarhi) கோட்டையைக் காக்க, எப்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதான் வீரர்களை எதிர்த்துப் போரிட்டு வீர மரணம் அடைந்தார்கள் என்பதைச் சித்தரிக்கும் படம். 21 சிப்பாய்கள் அல்ல, 22 சிப்பாய்கள் என்றொரு கருத்தும் உண்டு. அதையும் படத்தில் உருக்கமான வசனமாகக் காட்டி இருக்கிறார்கள். சரகாரி பற்றி கூகிளில் தேடினால் ஆச்சரியத்தக்க அளவுக்கு விஷயங்கள் கிடைக்கின்றன. ஏற்கெனவே வெப் சீரிஸ் ஒன்றும் வந்திருக்கிறது. 21 சீக்கிய வீரர்கள் கொன்றது 600 முதல் 1000 பதான் வீரர்கள் வரை இருக்கலாம் என்றெல்லாம் தகவல்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசுத் தரப்பின் எண்ணிக்கை குறைவாகவே சொல்கிறது. காவி நிற டர்பனைக் கட்டிக்கொண்டு போரிடுவதாக கேசரி படத்தில் காண்பிக்கப்படுகிறது. பொதுவாக பிரிட்டிஷ் அரசின் வீரர்கள் காக்கி நிற டர்பனையே அணிந்திருப்பார்கள் என்பதால், இப்படி காவி நிற டர்பன் அணிந்து போரிட்டதற்கு ஆதாரம் இல்லை என்று செய்திகள் சொல்கின்றன. ஆனால் அக்காட்சியை மிக முக்கியமான காட்சியாக இயக்குநர் வைத்திருக்கிறார். பிரிட்டிஷ் அரசின் கீழே உள்ளவர்கள்தான் என்றாலும், தாங்கள் போரிடுவது சீக்கியர்களின் வீரத்தையும் தியாகத்தையும் சொல்வதற்காக என்ற எண்ணத்தை உறுதியாகச் சொல்கிறார் இஷார் சிங் என்னும் வீரர். 21 வீரர்களில் ஒருவர் இவர். இவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. உண்மையில் இவரைச் சுற்றி இப்படிக் கதை நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் கிடையாது. படத்துக்காக இப்படி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். வரலாற்றைப் பதிவு செய்த வகையில் முக்கியமான படம்.

ஒரு திரைப்படமாகப் பார்த்தால், பெரிய அலுப்பைத் தரும் படம். சிறுவர்களுக்கான திரைப்படமாகச் சொல்லலாம். 21 வீரர்கள் பத்தாயிரம் பதான் வீரர்களை எதிர்த்துப் போரிடுகிறார்கள் என்ற ஒற்றை வரிக்குள் திரைக்கதையை பார்த்து பார்த்துப் பழகிப் போன விதத்தில் நுழைத்திருக்கிறார்கள். அதே காதல், உறவுகள் பிரிந்திருக்கும் செண்டிமெண்ட் என்று. பொறுமையாகப் பார்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. ஒவ்வொரு கொலையையும் விதவிதமாகக் காண்பிக்கிறார்கள். ஒரு திரைப்படத்தில் அதிகம் பேர் கொல்லப்பட்டது இப்படத்தில்கூட இருக்கலாம் என்னுமளவுக்குக் கொலைகள். 21 பேரின் தியாகத்தை பிரிட்டிஷ் அரசு அங்கீகரித்திக்கிறது என்னும் குறிப்போடு நிறைவடைகிறது திரைப்படம்.

சிறுவர்கள் பார்க்கவேண்டிய படம்.

Share