Archive for ஹரன் பிரசன்னா

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share

விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.

தொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.

தீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.

அந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.

விஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.

Share

சர்கார் (தமிழ்)

சர்க்கார் –

முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது.

மற்றபடி

வலுவே இல்லாத கதை. அதனால் எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அலைபாயும் திரைக்கதை.

அரசியல் ஒரு கதையென்றால், கூடவே நடிகர் விஜய்யின் முதல்வர் கனவு இன்னொரு கதை. இதனால் தமிழ்நாட்டில் நடந்த எல்லாவற்றையும் எங்கேயாவது எப்படியாவது தூவ வேண்டிய நிர்ப்பந்தம். கந்துவட்டி, ஜல்லிக்கட்டு, நீயுட்ரினோ என வாயில் வந்ததையெல்லாம் யார் யாரோ சொல்கிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு முன்பு பதவி ஏற்பு ரத்து, ஒரு ஓட்டு கள்ள ஓட்டானதால் அதற்கு மறு ஓட்டு உரிமை தரப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மறுதேர்தல் என்றெல்லாம் நம்பவே முடியாத கதை. முதல்வனும் நம்பமுடியாத கதைதான். ஆனால் அதில் தெளிவான ஓட்டமும் திரைக்கதையும் இருந்தன. முதல்வன் போல ஒரு படம் எடுப்பது அத்தனை எளிதில்லை என்று நிரூபிக்கிறது சர்கார். கூடவே விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்துகொண்டதால் தெலுங்குப் படம் போல போகிறது.

இதற்கிடையில் விஜய்யின் கமர்ஷியல் ஹீரோ பிம்பத்தையும் கட்டிக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. குப்பத்துக்குப் போய் பேசி மீனவன் என்கிறார். உடனே நம்பி ஓடி வருகிறார்கள். (அதிலும் அந்த தக்காளி விளக்கம் ஐயையோ.) ஆளும் கட்சி கூட்டத்துக்குப் போயே பேசுகிறார். நாம் திடீரெனக் கனவு காண்போமல்லவா, ஜெயலலிதா நாளைக்கே ஜெயிலுக்கு போனால், கருணாநிதி கைதானால் என்று, அதை அத்தனையும் விஜய் செய்கிறார். ஆளும்கட்சியின் முதல்வர் மரணம் அடைந்தாலும் 15 நாளில் தேர்தல் நடக்கிறது. படத்தின் போக்குக்கு இது முக்கியம் இல்லைதான். ஆனால் இப்படிப் பல நெருடல்கள்.

ஒரு ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டால் பேலட் ஓட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்பது விதி. தேர்தலின் முடிவில் குழப்பம் இருந்தால் தேவைப்பட்டால் மட்டுமே அந்த பேலட் ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். விஜய் பேலட் ஓட்டும் போடுவதில்லை என்பதால் என்றாரம்பித்து என்ன என்னவோ செய்து… முடியல. அதிலும் அந்த கொடுமையான க்ளைமாக்ஸ், கற்பனை வறட்சி. ஓட்டுப் பதிவு தொடங்கி பாதி நேரம் பதிவு கழிந்தும்… ரொம்ப ஓவருங்க இதெல்லாம். தாங்கமுடியலை.

பல முக்கியமான காட்சிகளில் விஜய் என்னவோ போல் பேசி வெறுப்பேற்றுகிறார். அதிலும் ஆளும்கட்சி அலுவலகத்துக்குள்ளே போகும் காட்சி (ஆமாம், இப்படி ஒரு காட்சி!) கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்போதே விஜய் அடிதடியில் இறங்கி அக்காட்சியை காலி செய்கிறார். சாதாரணமாகப் பேசுவதே இல்லை. மீண்டும் தேர்தல் என்பதைக் கூட அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பொங்க மட்டுமே பேசுகிறார் விஜய். இப்படியே போனால் பிற்கால சிவாஜியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே காட்சி, வரலட்சுமி பழ.கருப்பையாவுக்கு மருந்து கொடுக்கும் காட்சிதான். அதற்குப் பின்னர் தெலுங்குப் படமாகிவிட்டது.

வலுவற்ற கதை, வலுவற்ற திரைக்கதை, திக்கின்றி அலையும் காட்சிகள். சீரியஸான காட்சியில் சொதப்பும் விஜய். இதுதான் சர்க்கார்.

Share

Halasyan

ஹாலாஸ்யனின் கட்டுரைகள்

பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.

தமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளாக அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.

விளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.

மிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.

உலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்!) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.

ஹாலாஸ்யனின் புத்தகங்கள்:

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.
நுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.
எக்காலம், பார்வதி படைப்பகம்.

ஹாலாஸ்யனின் சில கட்டுரைகள்:

http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal
http://www.valamonline.in/search/label/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
https://solvanam.com/author/halasyan/

ஹாலாஸ்யனின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/yes.eye.we.yea

 

 

 

Share

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

நீட்

நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும் கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் செல்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். இதை ஒட்டிய தீர்ப்பே இப்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால், ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால், கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது இத்தீர்ப்பு.

இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றதனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து செல்லவேண்டிய விஷயம் அல்ல.

சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள் தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல் வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ சந்திக்க நேர்ந்திருக்காது.

ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer) சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’ இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில் 49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில் பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை. டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன். என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத் தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில் கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.

49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும் கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப் பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும் என்று நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக் கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன். அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால் ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிகொண்டது, தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம் புறக்கணிக்கமுடியாது.

இதன் அடிப்படையில் 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள் பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.

என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம். இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன. இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம் என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது. நீள  பரிமாணங்கள் என்பது நீள  அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி ஆகி இருக்கிறது.

இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக் ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள் போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான் அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத் தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான். சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய பதில்.

நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில் இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும், மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.

நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக் கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள் இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும் ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.

மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப் பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும் செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான் நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு. அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம் இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.

உச்சநீதி மன்றத்தில் வரும் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.

நன்றி: வலம் ஆகஸ்ட் 2018

Share

வாஜ்பாயி – அஞ்சலி

நன்றி வாஜ்பாயி

கச்சத் தீவு பிரச்சினையில் அன்றைய மத்திய அரசின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தில் கண்டித்த முதல் தலைவர் வாஜ்பாயி என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழுரை தீட்டியிருக்கிறது. கொள்கையளவில் வேறுபட்டவர் என்றாலும் அனைவர் உள்ளங்களிலும் அங்கீகரிக்கத்தக்க ஒரு தலைவர் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறார் வாஜ்பாயி. இத்தனைக்கும் கடந்த பதினைந்து வருடங்களாக அவர் அரசியல் வெளியில் முற்றிலுமாக இல்லை.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் மிக முக்கியமான பிரச்சினை எது, எது அந்த மக்களின், இனத்தின் உணர்வுசார்ந்த உண்மையான பிரச்சினை என்பதையெல்லாம் வாஜ்பாயி அறிந்திருந்தார். மதுரையில் நடந்த டெசோ மாநாட்டில் அவர் கலந்துகொண்டது இன்று வரை அனைவரையும் நினைவுகூர வைக்கிறது.

காங்கிரஸ் எத்தனையோ மாநில அரசுகளைக் கலைத்திருக்கிறது. ஆனால், எவ்வளவோ நெருக்கடியை ஜெயலலிதா உருவாக்கியபோதும், தன் வாழ்நாளில் தான் சந்தித்திருந்தாத சிறுமைகளைச் சந்திக்கவேண்டி வந்தபோதும், வாஜ்பாயி தமிழ்நாட்டில் திமுக அரசைக் கலைக்க மறுத்தார்.

1994ல் காஷ்மீர் பிரச்சினையை ஒட்டிய ஒரு தீர்மானத்தை ஐநாவில் பாகிஸ்தான் கொண்டு வரவிருக்கிறது என்ற செய்தி இந்தியாவுக்குக் கிடைத்தது. இந்தியாவின் நிலையை ஐநாடில் உறுதிபட எடுத்துரைக்க அன்றைய பிரதமர் நரசிம்மராவ் வாஜ்பாயி தலைமையில் ஒரு குழுவை ஜெனீவாவுக்கு அனுப்பினார். தனக்குத் தரப்பட்ட மிகப்பெரிய பொறுப்பைச் சாதித்தார் வாஜ்பாயி. தீர்மானம் வந்தால், தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலை உறுதியாகிவிடும் என்று பயந்துபோன பாகிஸ்தான் அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவே இல்லை.

பொக்ரான் அணுகுண்டுச் சோதனை அனைத்து உலக நாடுகளையும் இந்தியாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது. இத்தனை பரந்து விரிந்த நாட்டில் ஒரு ரகசியத்தைக் காப்பாற்றி இத்தனை பெரிய நிகழ்வைச் சாதித்துவிட முடியும் என்று இந்தியாவின் சாதாரண மக்கள் மட்டுமல்ல, உலக நாடுகளும் பெரியண்ணன் நாடும்கூட நம்பியிருக்கவில்லை. அப்படி ரகசியமாக புத்தர் சிரித்தபோது உலக நாடுகள் ஆச்சரியத்தில் வாய்பிளந்தன. ஒவ்வொரு இந்தியன் உள்ளத்தில் எதோ ஒரு பெருமிதம். இதன் தொடர்ச்சியாக இந்தியா எதிர்கொள்ளப் போகும் பொருளாதாரத் தடைகளை எல்லாம் மீறி அனைவர் உள்ளத்திலும் என்னவோ தாங்களே சாதித்து விட்டது போன்ற உணர்ச்சி.

இந்த உணர்ச்சியின் உளவியல் முக்கியமானது. தொடர்ச்சியாக மிக பலவீனமான பிரதமர்களையே கண்டுவிட்ட இந்தியா, தன்னளவில் மிகவும் தன்னம்பிக்கையுள்ள, தேசத்தின் மீது பெரும் அபிமானமுள்ள, இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்தின் மீதும் அக்கறையுள்ள ஒரு தலைவனைக் கண்டுகொண்டது என்ற உணர்ச்சிதான் அதன் உண்மையான காரணம்.

கார்கில் போரை வாஜ்பாயி அரசு கையாண்ட விதம் மிக முக்கியமானது. லாகூர் பயணத்துக்குப்பின் இந்தியாவின் நல்லெண்ணத்துக்கு பாகிஸ்தான் செய்த அநியாயத்துக்கு வாஜ்பாயி தக்க பதிலடி கொடுத்தார். சமாதானம் என்றால் சமாதானம், போர் என்றால் போர் என இந்தியா எதற்கும் தயார் என்ற செய்தி கார்கில் வெற்றி வழியே உலகிற்குச் சொல்லப்பட்டது.

நாற்கரச் சாலைத் திட்டம் இந்தியாவை சாலை வழியே ஒருங்கிணைத்தது. இன்றும் இச்சாலைகளில் பயணம் செய்பவர்கள் வாஜ்பாயி பெயரைக் குறிப்பிடுவதைக் கேட்கலாம். தொலை நோக்கு என்பது ஒரு அரசியல் தலைவரின் அடிப்படைத் தேவை. இது இல்லாத சமயங்களில்தான் இந்தியா தள்ளாடுகிறது. இந்தியாவின் இத்தள்ளாட்டத்தைப் போக்கிய பாரதத் தாயின் பிதாமகன் வாஜ்பாயி.

ஒப்பற்ற ஒரு தலைவரை, ஒரு மாபெரும் நிகழ்வை நாம் இழந்திருக்கிறோம். வாஜ்பாயி தனக்களிக்கப்பட்ட வாழ்வை மிக அர்த்தம் மிகுந்ததாக்கியிருக்கிறார். கட்சி ரீதியாகவும் சரி, ஒரு தலைவர் என்ற நிலையில் இந்தியாவுக்காகவும் சரி, அவர் செய்துவிட்டுச் சென்றிருக்கும் சாதனைகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. வாஜ்பாயி என்ற அந்த சாதனையாளருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி: குங்குமம் இதழ்

Share

SMS in PC

வாட்ஸப்பை கணினியில் பார்ப்பது எவ்வளவு உதவிகரமானது என்று அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்குப் புரியும். இதேபோல் மெசேஜையும் (எஸ் எம் எஸ்) பார்க்க வழி உள்ளதா என்று பீராய்ந்திருக்கிறேன். டெக்ஸ்டாப் ஆப் ஒன்றில் அந்த வசதி இருந்தது. ஆனால் அது சில சமயம் வேலை செய்யும். சில சமயம் ஏழரையை இழுக்கும்.

வாட்ஸப் மற்றும் மெசேஜ் – இரண்டும் கணினியிலேயே பார்க்க முடிந்துவிட்டால் வேலை செய்வது மிக எளிது. பதில் அளிக்க, பெரிதாக விரைவாக டைப் செய்ய, காப்பி பேஸ்ட் செய்ய எனப் பல வசதிகள் இதில்.

நௌகாட் இந்த வசதியைக் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன். மற்ற ஆண்ட்ராய்ட் வெர்சன்களில் இவ்வசதி உள்ளதா என்பது தெரியவில்லை. இப்போது மெசேஜையும் வாட்ஸப்பைப் போலவே கணினியில் பார்க்கமுடிகிறது. அட்டகாசமான முன்னேற்றம் இது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எஸ் எம் எஸ்–> செட்டிங்க்ஸ் —> வெப் –> ஸ்கேன் கோட். அவ்ளோதான். https://messages.android.com/என்ற இடத்தில் உங்கள் மெசேஜ் வரும்.

பின்குறிப்பு: இது இப்பதான் தெரியுமா, எவ்ளோ வருஷமா தெரியும் என்பவர்கள், மறக்காமல் ஷேர் செய்யவும். 

Share