Archive for ஹரன் பிரசன்னா

மெட்ராஸ் திரைப்படம் பற்றி நாலு வரி

* ஆடுகளம், மதயானைக் கூட்டம் வரிசையில் வைக்கத்தக்க ஒரு படம். 

* இடைவேளை வரை மிரட்டல். இடைவேளைக்குப் பிறகும் மோசம் என்றெல்லாம் இல்லை. நன்றாகவே உள்ளது. ஆனால் வழக்கம் போன்ற ஹீரோயிஸம் பாணிக்குப் போனதே பெரிய சறுக்கல். அதிலும் கடைசிக் காட்சியில் ஹீரோ கால்பந்து ஆடுவதைக் காட்டி அதைப் போல வில்லன்களைப் பந்தாடுகிறார் என்று காட்டியிருப்பது மிகப்பெரிய சறுக்கல். (சவுக்கு வெளியிட்டிருந்த கட்டுரையில், இப்படம் கருப்பர் நகரத்தின் காப்பி என்று எழுதும்போது, கருப்பர் நகரத்தில் வரும் ஹீரோ கால்பந்து ஆடுபவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எது காப்பி எது மூலம் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஒருவேளை காப்பி என்றால், காப்பி அடிப்பவர் ஏன் அப்படியே கால்பந்து ஆடுபவராக வைத்தார் என நினைத்துக்கொண்டேன். இந்தக் காட்சிக்காகத்தான் என்றால், சிரிப்பே வருகிறது. கபடி ஆடுபவராக வைத்திருக்கலாம். காப்பி அடிக்கவே கூடாது. அடித்தே தீரவேண்டும் என்றால், மூலத்தைவிட ஒரு படி மேலே போய்விடவேண்டும். அல்லது குறைந்தபட்சம் அதுவேறு இதுவேறு என்று சொல்லும் வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

* தலித்துகளுக்கான படம் என்று பெரிய பிரசாரம் நடக்கிறது. இருக்கட்டும். நல்ல விஷயம்தான். தலித்துகளுக்கான படம் மிகத் தெளிவான அடையாளங்களுடன் வரவேண்டியது அவசியம். ஆனால் இப்படம் அப்படி அமையவில்லை என்பதுதான் வேதனை தருகிறது. நாமாக இதை தலித் திரைப்படம் என்று எடுத்துக்கொள்கிறோம். அல்லது அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். படத்தை இயக்கியவர் தலித் என்பதால், இப்படத்தின் மூலம் தங்கள் ‘படைபலம்’ (படைபலம் பற்றி ரெண்டு மூணு பெத்துக்க சொல்லி வருகிறது. வீரத்தாய் திட்டத்தில் ராம கோபாலனும் இதையே சொன்னார். 🙂 இரண்டும் ஒன்றல்ல. ஆனாலும் என்னவோ ஒற்றுமை உள்ளது) உலகத்துக்குத் தெரியட்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள் போல.  இதில் தவறில்லை. ஆனால் அதற்காக இப்படம் தலித்துகளுக்கான கனவுப்படமெல்லாம் இல்லை. இன்னும் நாம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர் சொல்லாத முதல் மரியாதை, காதல், மதயானைக்கூட்டம் போன்ற படங்களில் இருந்து ஒரு இம்மிகூட முன்னேறிவிடவில்லை. 

* இது தலித்துகளுக்கு உள்ளே நடக்கும் பிரச்சினையா அல்லது தலித்துகளுக்கும் நாயுடுகளுக்குமான பிரச்சினையா (அப்படி ஒன்று இருக்கிறதா) அல்லது ஒரே கட்சிக்குள் நடக்கும் பிரச்சினைகள் மட்டும்தானா என்ற குழப்பமெல்லாம் எவ்வகையிலும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நாமம் வைத்துக்கொண்டு வருபவர்களை இணையப் புரட்சிக்காரர்கள் தலித்துகள் என்று எப்போதும் சொன்னதில்லை. அவர்களை மேல் சாதிக்காரர்கள் என்றே ஓட்டியிருக்கிறார்கள். ஆனால் அதே பொதுப்புத்திக்காரர்கள் இப்படத்தை எப்படி தலித்துகளின் படமாக ஏற்றுக்கொண்டார்கள் எனத் தெரியவில்லை. நம் ஜனம் முன்னேற வேண்டும் என்ற வசனத்தை இருதரப்பும் பேசிக்கொள்கிறார்கள் என்பதால் குழப்பம் உச்சமடைகிறது.

* வட சென்னையை சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் நிறையப் படங்கள் வட சென்னையைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் தேவைக்கு மட்டும் வட சென்னையைக் காட்டிவிட்டுச் செல்லும் படங்களிலிருந்து மாறுபட்டு, ஒட்டுமொத்த படமே வடசென்னையில்தான் நடக்கிறது.

* இத்தனை மெனக்கெட்டவர்கள் வெண்பதுமை போல இருக்கும் கார்த்தியை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. பெரிய குறை இது. இதற்கும் ஏதோ சாதித் தொடர்பே காரணம் என்றார்கள். யார் யார் என்ன என்ன ஜாதி என்றெல்லாம் தெரியாததால் என்னால் இதனுள் மேற்கொண்டு போகமுடியவில்லை. இக்குறையைத் தீர்ப்பது அன்பு மேரி காதல் காட்சிகள். அட்டகாசம்.

* இயக்குநர் ரஞ்சித்தைப் பொருத்தவரை அட்டகத்தி என்ற சுமாரான படத்திலிருந்து இது மிகப்பெரிய தாவல். அட்டகத்தியையே ஆனையாக்கும் என்றார்கள். இன்று இன்னும் அதிகமாக. தங்கள் அரசியலுக்கு தன்னைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை பூத்துவிட்டு ரஞ்சித் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவது நல்லது. இது நல்ல படம்தானே அன்றி மிகச் சிறந்த தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு முக்கியமான படமல்ல. அப்படத்தை ரஞ்சித் எடுக்கக்கூடும். தன் கவனத்தை மின்மினி அரசியல் சமூகப் போராளிகளிடம் தொலைக்காமல் இருந்தால்.

* சந்தோஷ் நாராயண் பின்னணி இசை மிரட்டல். இவரும் இன்னும் சாதிக்கட்டும். 

* படத்தில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இரண்டை வெட்டியிருக்கலாம்.

* தொடர்ந்து மாறி மாறிக் காட்டப்படும் நம்பிக்கைத் துரோகக் காட்சிகள் அஞ்சானை மிஞ்சுகின்றன. இக்காட்சிகள் தமிழ்த் திரையுலகில் க்ளிஷேவாக மாறிவிட்டன. இனியும் இதைப் பிடித்துக்கொண்டு அலைவதில் லாபமில்லை என்பதோடு நஷ்டமுண்டு!

* எல்லோரும் படத்தில் வரும் புத்தர் சிலை, அம்பேத்கர் படம், அம்பேத்கர் நூல் போன்றவற்றைச் சொல்லி அதன் குறியீடுகளை வியக்கிறார்கள். நாமும் நம் பங்குக்குக் கொளுத்தி வைப்போம். படத்தில் வராத படங்கள் இல்லை. ரஜினி படம், சாய் பாபா படம், கிறித்துவ கதாபாத்திரங்கள், ஹிந்து சாமியார்கள் என என்னவெல்லாமோ வருகின்றன. அம்பேத்கர் படம் வருகிறது. புத்தர் சிலை வருகிறது. சே குவேராவின் படம்கூட வருகிறது. வராத ஒரே ஒரு படம் ஈவெராவின் படம் மட்டுமே. ரஞ்சித்தை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். வடசென்னையில் ஈவெரா படமில்லை என்று உரக்க நிரூபித்துவிட்டார். 😀 (எங்காவது யாராவது இப்படத்தில் ஈவெரா படம் வருவதை ஆதாரத்துடன் சொன்னால், அப்படியா கவனிக்கலைங்க என்று மட்டும் சொல்வேன் என உறுதி கூறுகிறேன்.)

* கடைசியாக – ஆடுகளம், மதயானைக் கூட்டம், மெட்ராஸ் எனக் கொண்டால் என் வரிசை இப்படி: மதயானைக் கூட்டம், ஆடுகளம், மெட்ராஸ்.

* தனுஷ் நடித்திருக்கவேண்டிய திரைப்படம். தனுஷ் நடிக்காததால் நமக்கு பெரிய இழப்பு இது. 🙁

* தியேட்டரில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். Do NOT miss. 

ஸாரி, நாலு வரி இல்லை, நாற்பது வரிகள் எழுதிவிட்டேன்.

Share

ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்

மதிப்புரை.காம் தளத்தில் ஆர் எஸ் எஸ் – கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் என்ற புத்தகம் பற்றிய என் மதிப்புரை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

விரிவான ஆழமான விமர்சனத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் மதிப்புரை.காம் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசகர்கள் சில புத்தகங்களை இலவசமாகப் பெற்று விமர்சனம் செய்யும் வசதியும் உள்ளது.

பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை விமர்சனத்துக்கு அனுப்பி வைக்கலாம்.

சேமிப்புக்காக இங்கே:

ஆர் எஸ் எஸ்ஸை மிக நெருக்கமாக கடந்த 45 வருடங்களாகப் பார்த்துவரும் ஒருவர் ஆய்வு செய்து எழுதிய புத்தகம் இது. இவர் ஆர் எஸ் எஸ்ஸிலும் இருந்தவர். எனவே உள்ளே இருந்து எழும் ஒரு விமர்சனக் குரலாக ஒலிக்கிறது ஆசிரியரின் குரல். அது கலகக்குரல் இல்லை. மாறாக விமர்சனக் குரல். ஒருவகையில் ஆர் எஸ் எஸ் எப்படி இருந்து இப்போது இப்படி வீழ்ச்சி அடைந்துவிட்டதே என்று வருத்தப்படும் குரல். அல்லது மீண்டும் ஆர் எஸ் எஸ் பழையபடி வீறுகொண்டு எழாதா என்று விரும்பும் ஏக்கக்குரல். இப்படி ஒரு கலவையாகவே இந்தப் புத்தகத்தைப் பார்க்க முடிகிறது.

ஆர் எஸ் எஸ்ஸின் முழுமையான வரலாற்றுப் பார்வையை இப்புத்தகம் தரவில்லை. என்றாலும், ஆர் எஸ் எஸ்ஸின் முக்கியமான மூன்று தலைவர்களின் ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் அலசுவதன்மூலம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் வரலாறும் விவரிக்கப்படுகிறது.

ஹெட்கேவர் காலத்தில் இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவே ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டது. அங்கே சமத்துவமும் சகோதரத்துவமும் மிக முக்கியமானவையாக வலியுறுத்தப்பட்டன. உயர்சாதி தாழ்ந்த சாதி வேறுபாடுகள் ஆர் எஸ் எஸ்ஸுக்குள் நுழையக்கூடாது என்பது ஹெட்கேவர் காட்டிய அக்கறையை மிகத் தெளிவாகவே ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இந்த சாதி விஷயத்தில் ஆர் எஸ் எஸ் என்றுமே தன் நிலையிலிருந்து, யார் தலைவராக இருந்தபோதிலும், மாறிவிடவில்லை என்பதைத் தெளிவாகவே கூறுகிறார் நூலாசிரியர். முஸ்லிம் அராஜகத்துக்கு எதிராக ஆர் எஸ் எஸ் துவங்கப்பட்டது என்ற பொதுப்புத்தி கருத்துக்கு சஞ்சீவ் கேல்கர் தரும் பதில் மிக முக்கியமானது. 1974ல் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம், “எல்லா முக்கிய 22 கலவரங்களும் ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிமகளால் தொடங்கப்பட்டது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் நபர்கள் பெரிய பதவிகளில் இல்லை. மிகப்பெரிய கட்சியாக ஜனசங்கம் அறியப்பட்டிருக்கவில்லை. எல்லா நீதிபதிகளையும் இப்படித் தீர்ப்புக்கூறும் அளவுக்கு ஆர் எஸ் எஸ் பெரிய சக்தியாக இல்லை என்கிறார். அதாவது ஆர் எஸ் எஸ் என்பது முஸ்லிம்களுக்கு எதிரானதாக தொடங்கப்படவில்லை, மாறாக ஹிந்துக்களின் ஒற்றுமைக்கானது என்பதைச் சொல்கிறார். அதிகாரத்தைக் கையாள கொள்கையும் நேர்மையும்தான் அடித்தளமானது என்பதை இரண்டு தலைவர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் என்கிறார், ஒருவர் காந்தி, மற்றொருவர் கோல்வல்கர்.

நூலில் கோல்வல்கரின் மீது வைக்கப்படும் ஒரு முக்கியமான விமர்சனம் அவர் தொலைநோக்கோடு முஸ்லிம்களை அணுகவில்லை என்பதுதான். கோல்வல்கரின் தேசியம் என்பது தேசத்தின் மதம் மற்றும் கொள்கையை நிச்சயம் ஏற்றுக்கொள்வதிலிருந்து தொடங்கி, அங்கேயே முடிந்துவிடுகிறது. ஒரு சமயம் ஹிந்து மதம் பரந்த மனம் கொண்டது என்று சொல்லும் கோல்வல்கர், இன்னொரு சமயம் இந்த தேசத்தின் கலாசாரத்தை முஸ்லிம்கள் ஏற்கவேண்டும் என்பதை எப்படி நியாயப்படுத்தமுடியும் என்கிறார் நூலாசிரியர். இதில் மிகமுக்கியமானது, முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் இடமில்லை என்பதை கோல்வல்கர் ஏற்கவில்லை என்பதுதான்.

கோல்வல்கரின் மிக முக்கியமான அம்சமாக ஆசிரியர் சொல்வது – அதிகார வெறுப்பு. அதாவது அரசியலில் இருந்து விலகி இருத்தல். கோல்வல்கர் ஒரு தூய்மைவாதி. இதனால் ஆர் எஸ் எஸ் இறுகிப் போன ஒரு அமைப்பாக இருந்தது என்பதே ஆசிரியரின் பார்வை. ஒருவகையில் இந்த இறுகிப் போன தன்மைதான், ஆர் எஸ் எஸ்ஸின் நெருப்பு நிமிடங்களைக் கடக்க உதவியது என்றால் மிகையில்லை. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸின் மீதான பழி, ஆர் எஸ் எஸ் தடை என எல்லாவற்றையும் கோல்வல்கர் தனது தூய்மைவாதத்தால்தான் வென்றெடுத்தார். ஒருவகையில் அந்த நிலையில் கோல்வல்கரின் பார்வை சரியானதே. ஆனால் ஆசிரியர் இதை ஏற்கவில்லை.

காந்தி கொலையில் ஒரே வரியில் அதில் ஆர் எஸ் எஸ் பங்குபெற்றிருக்குமோ என்று சந்தேகம்கூடப் படமுடியாது என்று கடந்துபோகிறார் சஞ்சீவ் கேல்கர். அந்த நிலையைக் கோல்வல்கர் கையாண்ட விதத்தையும் மிகப்பெரிய ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார். மூர்க்கத்தனமான தடையைத் தாண்டி வெளியேற ஆர் எஸ் எஸ் கைக்கொண்ட சக்தியை, அதற்குப் பின்னர் சரியாக கோல்வல்கர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். தேவையே இல்லாமல் ஆர் எஸ் எஸ் தன்னை குறுக்கிக்கொண்டு, சுதந்திர இந்தியாவில் இருக்கிறோம் என்பதை மறந்து, தன்னை வெளிப்படுத்தாமல் நடந்துகொண்டது என்கிறார். இதுவே கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் கோல்வல்கரிடம் இருந்து பெற்றுக்கொண்டது என்கிறார்.

கோல்வல்கர் தூய்மைவாதி என்றால் தேவரஸை நவீனவாதியாக ஆசிரியர் பார்க்கிறார். உண்மையில் கோல்வல்கரின் மீதான ஒவ்வொரு விமர்சனத்தின் பின்னாலும் தேவரஸைப் பற்றிய ஆசிரியரின் பிம்பம் உள்ளது என்பதே உண்மை. இதை ஒட்டி கோல்வல்கரின் செயல்பாடுகள் மீது மிகக்கடுமையான விமர்சனங்களை ஆசிரியர் முன்வைக்கிறார். கோல்வல்கரின் பிடியில் ஆர் எஸ் எஸ் செல்வதற்கு முன்பாகவே தேவரஸ் வந்திருந்தால் ஆர் எஸ் எஸ் மிக உன்னதமான நிலையை எட்டியிருக்கும் என்பதே ஆசிரியரின் எண்ணம்.

கோல்வல்கருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் (இதற்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன) முதலில் ஆர் எஸ் எஸ்ஸின் பணிகளில் இருந்து விலகியிருந்த தேவரஸ் திரும்ப வருகிறார். அரசியலில் பங்கெடுக்க தேவரஸை கோல்வல்கர் அனுமதிக்கவே இல்லை. தூய்மைவாதிக்கும் நவீனவாதிக்கும் இடையேயான முரண் இது. தேவரஸை ஆர் எஸ் எஸ் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றும், கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் மையவாதத்திலிருந்து மாறுபட்ட போக்கை தேவரஸ் கையாண்டது சரியானது என்பதும் ஆசிரியர் பல இடங்களில் பல விளக்கங்களுடன் சொல்லிச் செல்கிறார். மிக முக்கியமான விஷயம், இந்த மூன்று தலைவர்களுக்குள்ளும் கொள்கையில் வேறுபாடு இல்லை என்பதே. ஆனால் அதை அடையும் வழி குறித்து மிகத் தீர்மானமான கருத்துகள் ஒவ்வொருவர் முன்னேயும் இருந்தன. ஹெட்கேவரின் சிந்தனையையும் வழியையும் மீண்டும் கொண்டு செல்பவர் தேவரஸ் என்றே ஆசிரிரியர் விவரிக்கிறார். ஆனால் கோல்வல்கரின் ஆர் எஸ் எஸ் அதை முதலில் விரும்பவில்லை.

1973ல் தேவரஸ் ஆர் எஸ் எஸ் தலைவரானதும்தான் அரவணைத்துச் செல்லும்போக்கு தொடங்குகிறது. எல்லாருடனும் நட்புடன் இருப்பது பாவமல்ல என்றும் தனக்குள் ஆர் எஸ் எஸ் சுருங்கிக் கிடக்கவேண்டியதில்லை என்றும் புரியத் தொடங்குகிறது. ஆர் எஸ் எஸ்ஸின் புறத்தோற்றத்தை மாற்ற, அதன் ஷாகாவிலிருந்து தொடங்க நினைக்கிறார். கால் சட்டையை மாற்றக் கூட நினைக்கிறார். சிலவற்றை அவரால் செய்யமுடியவில்லை. பழமையை மாற்ற பலர் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும் ஆர் எஸ் எஸ் யதார்த்தவாதத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய அமைப்பாக தேவரஸ் காலத்தில் மாறுகிறது என்பது உண்மைதான்.

முஸ்லிம்களைத் தள்ளி வைப்பதைத் தவிர்க்கும் தேவரஸ், அவர்கள் குறைந்தபட்ச சாகா நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், இந்தியாவைத் தாய்நாடாகக் கருதினால், தங்கள் முந்தைய காலம் இந்தியாவுடன் தொடர்புடையது என்று கருதினால் அவர்களும் நம்மவர்களே என்ற எண்ணத்தை விதைக்கிறார். முஸ்லிம்களுக்கும் ஆர் எஸ் எஸ்ஸுக்கும் இடையேயான வேறுபாட்டை ஒழிக்க ஆர் எஸ் எஸ்ஸுக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து செயல்பட்டவர் தேவரஸ் என்கிறார் சஞ்சீவ் கேல்கர்.

இதற்குப் பின்பு நெருக்கடி நிலை பற்றியும் அப்போது ஆர் எஸ் எஸ்ஸின் தொண்டு பற்றியும் விளக்குகிறார். கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய அவரது பார்வையும், அவர்களது வீழ்ச்சியும் இப்புத்தகத்தில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோ ஒரு புள்ளியில் கம்யூனிஸமும் ஆர் எஸ் எஸ் கொள்கையும் இணையவேண்டும் என்று ஆசிரியர் விரும்புதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகளின் தோல்வியிலிருந்து ஆர் எஸ் எஸ் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் சொல்கிறார்.

இந்நூலிம் முக்கியத்துவம், வெறுமனே ஆர் எஸ் எஸ்ஸை வசைபாடாதது. அதேபோல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாது. மாறாக, மிகத் தெளிவான கறாரான விமர்சனங்கள், அவையும் அவற்றுக்கான ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ளதுதான். ஜாதியைப் பொறுத்தவரை ஆர் எஸ் எஸ்ஸில் மாற்றுக் கருத்துகளே இல்லை என்பதில் தொடங்கி, காந்தி கொலையில் ஆர் எஸ் எஸ் பங்கிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வதிலாகட்டும், இந்தியாவில் ஹிந்துக்களிடையே ஒரு பரந்த கலாசார ஒற்றுமை இருக்கிறது என்று எடுத்துக்காட்டுடன் சொல்வதிலாகட்டும், சஞ்சீவ் கேல்கருக்கு எவ்வித சந்தேகங்களும் இருப்பதில்லை. மிகத் தீர்க்கமான பார்வையுடன் அனைத்தையும் அணுகிறார். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு வகை அணுகல்தான் புத்தகம் முழுக்க.

தேவரஸ் மீதான ஆசிரியரின் சாய்வு ஒரு கட்டத்தில் கோல்வல்கரை மிக அதிகமாக விமர்சிப்பதில் முடிகிறதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியவில்லை.

ஆர் எஸ் எஸ் பற்றியும், கோல்வல்கர் தேவரஸ் பற்றியும் புரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது. ஆர் எஸ் எஸ்ஸின் வரலாற்றோடு இந்தியாவின் வரலாற்றை ஒரு புதிய கண்ணோட்டத்திலும் பார்க்கமுடிகிறது.

இந்த நூலின் பின்னிணைப்பாக ‘தலித்களின் தசராவும் ஆர் எஸ் எஸ்ஸின் தசராவும்’ என்று ஒரு கட்டுரை உள்ளது. மிக முக்கியமானது. மிக உணர்வுப்புர்வமானது. டாக்டர் அம்பேத்கரும் டாக்டர் ஹெட்கேவரும் உருவாக்கிய அமைப்புகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தைச் சொல்வது. இன்னொரு பின்னிணைப்பு ஆர் எஸ் எஸ்ஸின் சாசகம் பற்றியது. இதுவும் முக்கியமானது.

மிகச் சிக்கலான ஆழமான ஒரு நூல் மிக நேர்த்தியாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்: கடந்துவந்தபாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும், சஞ்சீவ் கேல்கர், தமிழில் சாருகேசி, 382 பக்கங்கள், விலை ரூ 300, கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-93-5135-156-6.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234

Share

வெள்ளம்

10632752_754840337909529_2357361909193283785_n
Photo credit: Viveka Vivek, Nellai Maanagaram facebook group

நெல்லையில் 1992ம் ஆண்டு வந்த வெள்ளத்தைக் காட்டும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததில் இருந்து எழுந்த நாஸ்டால்ஜியாவை அடக்கமுடியவில்லை. இந்த நாஸ்டால்ஜியா குழிக்குள் விழுந்துவிடக்கூடாது என்று எத்தனை ஒத்திப் போட்டாலும் முடியவில்லை என்பதால், இதை எழுதித் தொலைக்கிறேன்.

எனக்கு 8 அல்லது 9 வயது ஆகும்போது தாமிரபரணியில் பெரிய வெள்ளம் வந்தது. அப்போது நாங்கள் சேரன்மகாதேவியில் இருந்தோம். சேரன்மகாதேவி ராமர் கோவில் வரை வெள்ளம் சூழ்ந்திருந்தது. கடும் குளிரில் புயலில் ஒரு குடையை எடுத்துக்கொண்டு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு வெள்ள நீர் முழங்காலில் மோதிக்கொண்டிருக்க வெள்ளத்தின் வீச்சைப் பார்த்தது பேரனுபவமாக இருந்தது. தினமும் குளித்துக் கும்மாளமிடும் நதி பற்றிய பயம் ஏற்பட்டது அக்கணத்தில்தான்.

அதன் பின்னர் நான் கண்ட வெள்ளம் 1992ல். மிகப் பெரிய வெள்ளம். நாங்கள் டவுணில் சிவா தெருவில் இருந்தோம். அங்கேயே தெருவில் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இப்போது நினைத்தாலும் மிரட்சியாக உள்ளது. எல்லார் வீட்டிலும் பாலுக்கு காசு வாங்கி, நான்கைந்து பேர் சேர்ந்து நீரில் நடந்து சென்று (நீந்தில்லா போனோம் என்று சொல்லிக்கொள்வோம்), சந்திப் பிள்ளையார் முக்கு அருகில் இருக்கும் பால் பூத்தில் பால் வாங்கி வருவோம். பால்காரர் குமார் அண்ணனும் வெள்ள நீரில் நின்றுதான் விற்பனை செய்துகொண்டிருந்தார். காப்பி இல்லாவிட்டால் தற்கொலை செய்துகொண்டுவிடலாம் என்று நினைக்கும் நெல்லை மக்களுக்கு குமார் அண்ணன் தான் நெல்லையப்பராகக் காட்சி தந்தார். “இவ்ளோ வெள்ளத்திலயும் நமக்காக பால் விக்கானேய்யா நம்ம குமாரு.” 

இரண்டு நாளாக மின்சாரம் இல்லை. புயல். மதியம் 3 மணிக்கெல்லாம் இரவு 7 மணி போன்ற வானம். ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டு கடும் குளிர்க்காற்றில் மண்ணெண்ணெய் அடுப்பில் ரவை உப்புமா அக்கா செய்துதர சூடாக உண்டோம். இப்போதும் எப்போதாவது மழை வந்து வானம் இருட்டினால் என் மனம் இதே சூடான உப்புமாவைத் தேடுகிறது. மனமும் நாக்கும் ஒரே புள்ளியில் சந்தித்துவிடும் கணங்கள் அப்படியே மனத்தில் பதிந்துவிடுகின்றன.

மெல்ல மழை நின்றது. வெள்ளம் வடியத் தொடங்கியது. ஆனால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்துவந்த மக்கள் தங்கள் வீடு உடைமைகளை இழந்துவிட்டார்கள். அவர்களை அரசுப் பள்ளிகளில் தங்க வைத்து அவர்களுக்குத் தேவையான உணவு மருத்துவத்தை அரசு வழங்கியது. எனவே எங்களுக்கு விடுமுறை. வெள்ளம் மெல்ல வடியட்டும் என்றே பிரார்த்தனை செய்துகொண்டோம்.

அப்போதுதான் தேவர் மகனும் பாண்டியனும் வெளியாகியிருந்தது. அப்போதெல்லாம் நான் கமல் ரசிகனாக இருந்தேன். ரஜினி சார் என்னை மன்னிக்க, ப்ளீஸ். ஆனால் ராஜா வெறியன். ராஜா எந்தப் பாட்டு போட்டாலும் ஹிட்டான காலம் அது. அவர் டியூன் போடும் முன்னரே சில பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் என்று நான் உறுதியாக நம்பிய நாள்கள். (அப்போதுதான் ரஹ்மான் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவன்லாம் எங்க சின்னப்பய என்று சொல்லிவிட்டுத்தான் ராஜா பாடலையே கேட்பேன்.) போற்றிப் பாடடி பெண்ணே பாடலும் பாண்டியனா கொக்கா கொக்கா பாடலும் ஏற்படுத்திய அவசரத்தில் அந்த இரண்டு படத்தையும் முதல் நாளே பார்க்கத் துடித்த நினைவுகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன.

தேவர் மகன் திரைப்படத்திலும் ஒரு வெள்ளம் உண்டு. அட்டகாசமான ஒளிப்பதிவு, தரமான பின்னணி இசை என அந்த வெள்ளம் தமிழ்நாட்டில் எல்லோரையும் மூழ்கடித்தது என்றாலும், திருநெல்வேலிக்காரர்கள் அதை கொஞ்சம் தனிப்பட்டமுறையில் எதிர்கொண்டார்கள். அப்போதுதான் வெள்ளத்திலிருந்து மீண்டிருந்த நெல்லை மக்கள் மீண்டும் அந்த வெள்ளைத்தையும் அதன் பாதிப்பையும் திரையில் பார்த்தபோது எதோ தங்கள் வீட்டுக்குள்ளேயே வெள்ளம் வந்தது போல ஆதங்கப்பட்டார்கள். தேவர் மகன் படத்தை எப்போது நினைத்தாலும் எனக்கு நினைவுக்கு வருவது ஒரு மழைக்காலச் சூழல்தான். அந்த அளவு அந்த மழையும் வெள்ளமும் மனத்தில் தங்கிக் கொண்டது.

பாண்டியன் திரைப்படத்தை பேரின்பவிலாஸில் போட்டிருந்தார்கள். அங்கேயெல்லாம் வெள்ளம் சூழ்ந்திருந்தது, எனவே அங்கு படத்துக்குப் போகக்கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஜங்க்‌ஷனில் கவிதா ஷாப்பிங் செண்டரின் முதல் மாடி மூழ்கியதும் சுலோச்சனா முதலியார் பாலம் மூழ்கியதும் நெல்லையையே புரட்டிப் போட்டிருந்தது. வெள்ளம் வடிந்துவிட்டாலும் அங்கெல்லாம் போக வீட்டில் தடை. ஒருவழியாக சம்மதம் வாங்கி பேரின்பவிலாஸ் போனேன். தியேட்டரின் கவுண்ட்டர் தரையெல்லாம் வெள்ளத்தின் கசடுகள். கொஞ்சம் அச்சமாக இருந்தது. பாதி படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெள்ளம் வந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது.  பாண்டியனா கொக்கா கொக்காவைப் பார்த்தபின்னர் வெள்ளம் வந்தால் நல்லது என்று தோன்றியது. மாட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த திருமலை என்ற நண்பன், ‘என்னல வெள்ளத்தப்ப படத்துக்கு வந்திருக்க, அதுவும் சாயங்கால ஷோவுக்கு? பாத்துக்கோல’ என்று வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டுச் சென்றான். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை, நிம்மதியாக பாண்டியன் பார்த்தேன். பாண்டியனா கொக்கா கொக்கா பாடலை இப்போது கேட்டாலும் இந்த நினைவுகள் மேலெழும். ராஜாவின் எந்த ஒரு பாட்டுக்கும் இப்படி நினைவுகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இந்த வெள்ளத்தைப் பார்க்கப் போன மளிகைக்கடைச் செட்டியாரின் பையன் திரும்பி வரவில்லை என்று டவுணே அலோலப்பட்டது. செட்டியாரின் பையனும் இன்னொரு பையனும் வெள்ளத்தைப் பார்க்க சைக்கிளில் போயிருக்கிறார்கள். சைக்கிளில் டபுள்ஸ் ஏறி உட்காரும்போது அந்தப் பையன் தவறி வெள்ளத்தில் விழுந்துவிட்டான். அதன்பின் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. இதுதான் கேள்விப்பட்டது. மீண்டும் மீண்டும் ஒவ்வொருவரும் இதைச் சொல்லிச் சொல்லி இதை நானே நேரில் பார்த்தது போன்ற ஒரு நிலைக்கு உள்ளாகிப் போனேன். அவன் சைக்கிளில் பின்னால் ஏறும்போது கீழே விழுவது என மனக்கண்ணில் ஓடத் தொடங்கி, கொஞ்சம் மிரண்டுவிட்டேன். 

எத்தனையோ தேடியும் செட்டியார் பையனைக் காணவில்லை. மூன்றாம் நாள் அவர் வீட்டு முன்னர் பந்தல் போட்டிருந்தார்கள். யார் யாரோ துக்கம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான்காம் நாள் வழக்கம்போல காலையில் செட்டியார் கடையைத் திறந்து வியாபாரத்துக்கு வந்திருந்தார். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், இவ்ளோதானா பாசம் என்று ஏமாற்றமாகவும் இருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் அந்தப் பையன் வந்து நிற்பான் என்று ஏனோ உறுதியாக நம்பினேன்.

ஒரு சில நாள்களில் இதை மறந்துபோனேன். ஒரு நாள் செட்டியாரின் கடை மூடி இருந்தது. என்னவென்று விசாரித்தபோது, அன்று அந்தப் பையனின் பதினாறாம் நாள் காரியமாம். நான் பட்ட ஏமாற்றம் சொல்லி முடியாது. எப்படி அப்படி அவன் வரமாட்டான் என்று நம்பி காரியம் செய்கிறார் இந்தச் செட்டியார் என்று கோபமாக வந்தது. ஆனால் இன்றுவரை அந்தப் பையன் வரவே இல்லை.

வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அன்று கற்றிருக்கிறேன். அது என்னவென்றே தெரியாமல்.

குறிப்பு: விவேகா விவேக் என்பவர் நெல்லை மாநகரம் என்ற ஃபேஸ்புக் குழுவில் இப்படி திருநெல்வேலி போட்டோவாகப் போட்டு வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறார். பார்வையிட: https://www.facebook.com/groups/nellaimaanagaram/

Share

உயிருள்ள இயற்கை உணவுகள் – புத்தக அறிமுகம்

100-00-0001-728-7_b

உயிருள்ள இயற்கை உணவுகள் புத்தகத்தைப் படித்தேன். நமக்குச் சமைத்துக் கொடுத்துக்கொண்டிருக்கும் அம்மாவும் மனைவியும் கிட்டத்தட்ட நம்மைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்கள் டாக்டர் ரெட்டியும் சசிரேகாவும். சமைக்காத உணவை எப்படி ருசியோடு சாப்பிட முடியும் என்று தெரியவில்லை. ருசி எதற்கு என்று வாயைக் கட்டச் சொல்பவர்கள் நடையைக் கட்டவும். எவற்றையெல்லாம் சமைக்காமல் உண்ணலாம் அல்லது குறைவான அளவில் சமைத்து சத்தோடு உண்ணலாம் என்று ஒரு பெரிய பட்டியலையும் தந்திருக்கிறார்கள். தினமும் எப்படி உணவுமுறையைக் கையாளலாம் என்ற அறிவுரையும் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது.

தேங்காய் பாதி, கொய்யாப் பழம் நான்கு, ஐந்து வாழைப் பழம், நான்கு கிலோ கேரட் என ஒரு நாளைக்கான செலவு ப்த்து ரூபாய் கூட ஆகாது என்றெல்லாம் அதிர்ச்சிகள் புத்தகம் முழுக்க உண்டு.

சமைத்து உண்ணும் புல்தடுக்கி பயில்வான்களுக்கும் சமைக்காமல் உண்ணும் வீரர்களுக்கும் இடையே போட்டியில் சமைக்காத உணவை உண்ணும் வீரர்களே வெல்கிறார்கள் என்று ஐயம்திரிபறச் சொல்கிறார் ஆசிரியர். அதிலும் மேற்படி விஷயத்தில், சமைத்த உணவை உண்பவர்கள் தினசரி ஐந்து நிமிட வெறியில் தங்கள் சுகத்தை முடித்துக்கொள்கிறார்கள் என்றும், சமைக்காத உணவை உண்பவர்கள் வாரம் இரண்டு முறை பல மணி நேரங்கள் என்றும் ஆசிரியர் சொல்கிறார். சோதித்துப் பார்த்தவர்கள் பதில் சொல்லவும். 🙂

சிவ சைலத்தில் இதுபோன்ற சிகிச்சை எடுத்தவர்களின் கடிதப் பட்டியல் பல இருக்கிறது. சமைக்காத உணவின் மகத்துவத்தை அக்கடிதங்கள் தெரியப்படுத்துகின்றன.

உபவாசம் பற்றியும் சொல்கிறார். ஒரு நாள் உபவாசம் இருப்பது நம் வாழ்நாளை பத்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பது என்கிறார். உபவாசத்தின் பல நன்மைகளைச் சொல்கிறார். தமிழ்நாடெங்கும் இருக்கும் இயற்கை உணவு மருத்துவர்களைப் பற்றிய குறிப்பும் இயற்கை உணவு மையங்கள் பற்றிய உண்டு. கடைசி சில பக்கங்கள் புத்தகத்தோடு ஒட்டாமல் என்னென்னவோ ஏதேதோ சொல்லிச் செல்கின்றன.

சமைக்காத உணவை உண்கிறோமோ இல்லையா, படிக்க, தெரிந்துகொள்ள சுவாரஸ்யமான நூல்தான்.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0001-728-7.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 94459 01234

Share

புத்தக விற்பனை குறித்து

இரா நடராசன் அந்திமழை செப்டம்பர் இதழில் அவருடைய புத்தகங்கள் 20,000 முதல் 30,000 வரை விற்பதாகச் சொல்லியிருக்கிறார். அதை ஒட்டி எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு இது. மற்றபடி, இரா நடராசனின் புத்தகங்கள் இத்தனை விற்பது உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. ஒரு பதிப்பகத்துக்கும் எழுத்தாளருக்கும் இதைவிடக் கொண்டாட்டமான விஷயம் வேறு எதுவும் இருக்கமுடியாது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் ஒவ்வொரு புத்தகமும் இந்த எண்ணிக்கையில் விற்கவேண்டும். மிக நல்ல அல்லது புகழ்பெற்ற புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இனி எழுதப்போவதெல்லாம் என் அனுபவங்கள் தரும் சித்திரத்தை மட்டுமே. இது மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் நான் உண்மையாக இருக்கும் என்று நம்புவதை மட்டுமே இங்கே சொல்கிறேன். இதற்குத் தரவுகள் கிடையாது என்ற போதிலும்.

சாரு நிவேதிதா தனது புத்தகங்கள் லட்சக்கணக்கில் விற்றிருக்கவேண்டும் என்று அடிக்கடி எழுதுவதைப் பார்க்கலாம். ஆனால் யதார்த்தத்தில் அவரது புத்தகங்கள் 3000 தான் விற்கின்றன என்பதையும் எழுத அவர் தவறுவதில்லை. இது முக்கியமானது. நமது லட்சியம் கனவு ஆசை வேறு. யதார்த்தம் வேறு. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டால்தான் நாம் கனவை அடைய என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கவாவது முடியும். 

புத்தக விற்பனையில் பலவகை உண்டு. ஒரு சில புத்தகங்கள் மட்டும் பல்லாயிரம் விற்பதுண்டு. சில புத்தகங்களைக் கல்லூரிகள் பள்ளிகளில் வாங்குவதால் அதன் விற்பனை ஆயிரக்கணக்கில் விற்பதுண்டு. கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்படும் புத்தகங்களும் இப்படி விற்பனையாவதுண்டு. இவற்றையெல்லாம் தேவை சார்ந்த விற்பனை என்று வரையறுக்க இயலாது. தேவை ஏற்படுத்தப்பட்ட புத்தகங்கள் இவை. மக்களிடையே தானாக ஏற்பட்ட தேவை காரணமாக விறப்னையான புத்தகங்களே ஒரு சமூகத்தின் புத்தக விருப்பத்தைச் சொல்ல வல்லது. திணிக்கப்பட்ட விற்ப்னை எவ்விதத்திலும் சமூகத்தின் புத்தகத் தேவையைச் சொல்வதாகாது. ஒரு எழுத்தாளருக்குத் தன் புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் விற்பது மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடியதா என்றால் இல்லை என்றே நான் சொல்வேன். தானாக ஏற்பட்ட தேவை காரணமாக அவ்விற்பனை நடந்திருந்தால் அது ஓர் எழுத்தாளனுக்குக் கொண்டாட்டத்துக்குரிய ஒரு சாதனையே.

விற்பனையை முன்வைத்து தமிழின் நட்சத்திர எழுத்தாளர்கள் என்று நமக்கே சில மனப்பதிவுகள் இருக்கலாம். கல்கி, சுஜாதா, ஜெயகாந்தன், வைரமுத்து, மதன், இப்படிச் சிலர். இவர்கள் புத்தகங்களின் விற்பனையைப் பற்றி நாம் தெரிந்துகொண்டாலே நமக்கு இருக்கும் மயக்கங்கள் தெளியலாம். 

இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்லவேண்டி உள்ளது. தமிழில் இதுவரை எந்தப் பதிப்பகமும் தெளிவான விற்பனை விவரங்களை முன்வைத்ததில்லை. எனவே இவற்றையும் புத்தகச் சந்தையிலிருந்து வரும் செவிவழிச் செய்தி வழியாகவும் அனுபவம் வழியாகவே மதிப்பிடவேண்டி உள்ளது. நாளை ஏதேனும் ஒரு பதிப்பகம், நான் சொல்லப்போகும் இக்கூற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுத்து, தங்கள் புத்தகங்களின் சிறப்பான விற்பனையை நிரூபிக்குமானால், எனக்கு அது மகிழ்ச்சியான தோல்வியாகவும், சிறந்த பாடமாகவும் இருக்கும் என்றே சொல்லிக்கொள்கிறேன். எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற பல விற்பனை/பதிப்பக நண்பர்களுக்கும் இது பொருந்தும்.

ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் ஒரு வருடத்துக்கு ஒரு லட்சம் பிரதிகள் விற்கலாம் என்று அனுமானிக்கிறேன். தமிழில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பொன்னியின் செல்வன் புத்தகமே விற்பனையில் சாதனை படைத்த நூலாக இருக்கமுடியும். இதைத் தொடர்ந்து கல்கியின் சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு நூல்கள் விற்றிருக்கலாம். அதேபோல், புத்தகம் வெளிவந்த வேளையில் அக்னிச் சிறகுகள் பெரிய சாதனை படைத்திருக்கும் என்றே நினைக்கிறேன். இதுவரை ஒட்டுமொத்தமாக ஆறு லட்சம் பிரதிகள் விற்றிருக்கலாம் என்று நினைக்கிறேன். 

இதற்கடுத்து வைரமுத்துவின் நாவல்கள் இந்த இடத்துக்கு வர வாய்ப்புள்ளது. மூன்றாம் உலகப்போர் நாவல் வெளிவந்த 6வது வாரத்தில் 30,000 பிரதிகள் விற்றிருந்தது. வைரமுத்துவின் கவிதை நூல்கள் இந்த அளவு விற்பனை ஆவதில்லை. வைரமுத்துவின் மற்ற இரண்டு நாவல்களும் இதைவிட அதிகமாக விற்றிருக்க வாய்ப்புண்டு.

மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள், கிமுகிபி, மனிதனும் மர்மங்களும் போன்றவை வருடம் ஆயிரக்கணக்கில் விற்கும் புத்தகங்கள்.

எழுத்துலகின் சூப்பர் ஸ்டாரான சுஜாதாவின் சூப்பர் ஹிட் புத்தகங்கள் ஒவ்வொரு வருடமும் 6,000 பிரதிகள் விற்கலாம் என்று நினைக்கிறேன். சூப்பர் ஹிட் புத்தகங்கள் மட்டுமே இப்படி. மற்ற புத்தகங்கள் சராசரியாக வருடத்துக்கு ஆயிரம் விற்கலாம்.

இவை இல்லாமல் எழுத்தாளர் யாரென்றே தெரியாமல், அந்த புத்தகப் பெயர் தரும் ஆர்வம் மற்றும் அதன் உள்ளடக்கம் தரும் அனுபவம் ஆகியவற்றுக்காக விற்கும் புத்தகங்கள் உண்டு. (ராஜிவ் கொலை வழக்கு, ஹிட்லர், முசோலினி வகையறா.) துறை சார்ந்த புத்தகங்கள் அதிகம் விற்பதுண்டு. (அள்ள அள்ள பணம் வகையறா.) தொடராக வந்து விற்பனையில் கொடிகட்டும் புத்தகங்கள் உண்டு. (விகடனின் பல புத்தகங்கள்.) இவை எல்லாம் தானாக எழுந்த தேவை சார்ந்து விற்கும் புத்தகங்கள். இதில் பெருமைகொள்ள எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் எல்லாவித உரிமையும் உண்டு.

குழந்தை நூல்களின் விற்பனை பற்றி யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும். தமிழில் 6 வயதுக்குட்பட்ட குழந்தை நூல்கள் இல்லவே இல்லை என்று சொல்லிவிடலாம். எங்காவது தேடித் தேடி சில புத்தகங்களை வாங்கினால்தான் உண்டு. அதற்கு மேற்பட்ட வயதுக்கான புத்தகங்கள் இன்னது என்ற வகையில்லாமல் நிறையவே உள்ளன. பாரதிப் புத்தகாலயம் நிறைய புத்தகங்களை குழந்தைகளுக்கென வெளியிட்டுள்ளது. ஆனால் அவற்றின் தேவை சார்ந்த விற்பனை குறித்த ஐயம் எனக்கு எப்போதும் உண்டு.

இந்த அடிப்படையில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். தமிழகத்தில் இருக்கும் 200 கடைகளின் வழியாகவும் ஆன்லைன் வழியாகவும் போன் மூலமும்தான் இந்த விற்பனை நடந்திருக்கமுடியும். எனவே விற்பனையாளர்கள் மிக எளிதாக எந்தப் புத்தகங்களுக்குத் தேவை இருக்கிறது என்பதனைக் கண்டுகொள்வார்கள். திடீரென ஒரு புத்தகம் தேவை இருப்பதாகச் சொல்லப்பட்டால், அது இந்த விற்பனையாளர்களின் வழியே விற்கப்படாமல் இருந்தால், அது தானாக எழுந்த தேவையைச் சார்ந்து நிகழ்ந்த புத்தக விற்பனை அல்ல என்றே பொருள்.

இந்த நோக்கில்தான் நாம் புத்தக விற்பனையை அணுகமுடியும். நாளையே ஒரு சாதிச் சங்கமோ மத அமைப்போ ஒரு புத்தகத்தை வெள்யிட்டு, அவற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காண்பிக்கமுடியும். இது ஏற்கெனவே நிகழ்ந்தும் இருக்கிறது. இவை புத்தக விற்பனையின் மேன்மையைச் சொல்வதாக நான் நம்பவில்லை. எப்படி இருந்தாலும் அது விற்பனைதானே என்று நினைப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளக்கூடும். என்னால் இயலாது.

இன்றிருக்கும் நிலை மாறி ஒவ்வொரு புத்தகமும் லட்சக்கணக்கில் விற்கவேண்டும் என்றே நினைக்கிறேன். அதை முன்னெடுக்க இன்று என்ன விற்கிறது என்பதை உண்மையாக நாம் அறிந்துகொள்ளும் ஒரு நிலை வரவேண்டும். அதோடு நல்ல புத்தகங்களுக்கும் நன்றாக விற்கும் புத்தகங்களுக்குமான தூரம் குறையவேண்டும். 

இரா. நடராசனின் ஆயிஷா புத்தகம் இப்படி விற்றிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எல்லாப் புத்தகங்களும் இப்படி விற்கிறது என்று என்னால் நம்பமுடியவில்லை. நான் ந்ம்பாத ஒன்று உண்மையாக இருக்கமுடியாது என்று நிச்சயம் சொல்லமாட்டேன். அப்படி அது உண்மையாக இருக்குமானால், நான் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது என்றே பொருள். இரா. நடராசனின் புத்தகங்கள் மேலும் மேலும் விற்க வாழ்த்துகள்.

Share

டியூஷன் (2)

முதல் பகுதியை வாசிக்க இங்கே செல்லவும்.

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துவதே இல்லை என்றால், இன்னும் சிலர் எப்போதும் பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்திக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு நொடியும் அவர்கள் கவனம் பிள்ளைகளின் படிப்பின் மீதே இருக்கிறது. இது அந்தக் குழந்தைகளுக்குத் தரும் மன நெருக்கடியை வார்த்தைகளில் சொல்லமுடியாது. என் அண்ணா பையன் ஒரு தடவை தன் அம்மாவிடம், ‘எப்பவாவது நல்லா சாப்பிட்டியா என்ன படம் பாத்தன்னு கேக்கியா, எப்பவும் படிப்பு படிப்பு படிப்புத்தானா’ என்று கேட்டதாக என் அண்ணி சொன்னார். இத்தனைக்கும் இந்தப் பையனுக்கு பெரிய நெருக்கடியெல்லாம் தரப்படவில்லை. அப்படி இருந்தும் படி படி என்று சொல்வது ஒரு பையனுக்கு எரிச்சலைத்தான் தருகிறது. அதையே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தால் அதை எதிர்க்கமுடியாத குழந்தைகள் பெரிய சோர்வை நோக்கியே செல்கின்றன. 

1ம் வகுப்பு படிக்க ஒரு தாய் தன் மகளைச் சேர்க்க வந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் மனைவியிடம் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 1ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு டியூஷன் எதற்கு என்பது முதல் கேள்வி. இரண்டாவது, அந்தக் குழந்தையைச் சேர்க்க ஒரு மணி நேரம் என்ன பேசத் தேவை இருக்கிறது என்பது. சேர்த்த சமயம் அவர் சொன்னது, அவரது மகள் ஐ ஏ எஸ் ஆகவேண்டும் என்பது அவரது கனவாம், அவரே ஐ ஏ எஸ் ஆக இன்னும் முயன்றுகொண்டுதான் இருக்கிறாராம், அவரது சிறிய வயதில் அவர் ஒழுங்காகப் படிக்காமல் விட்டதால் இப்போது திணறுகிறாராம், அத்தவறை அவரது மகள் செய்துவிடக்கூடாதாம். எப்போதும் படிப்பு மட்டுமே அவளது கவனமாக இருக்கவேண்டுமாம். அந்தக் குழந்தையின் வயது 6. முதன்முதலாக அந்தக் குழந்தை டியூஷனுக்கு வந்தபோது, நான் உள்ளே நுழைந்தவுடன் என் மனைவியிடம் ‘என்ன ஒரு பெரிய கொசு ஒண்ணு உக்காந்திருக்கு’ என்று கேட்டேன். உருவத்தில் கொஞ்சம் பெரிய கொசு போலத்தான் அக்குழந்தை இருந்தது. பள்ளி விட்டு வந்த உடனே அந்தத் தாய் அவரது போதனையைத் தொடங்கிவிடுவார். டியூஷனுக்கு வரும்போதெல்லாம் அரை மணி நேரம் என் மனைவியிடம் பேசுவார். அதைப் படிக்கணும், இதைப் படிக்கணும், யார்கூடயும் பேசவிடாதீங்க, விளையாடக்கூடாது, சிரிக்கக்கூடாது, ஒழுக்கம் முக்கியம், தூங்கினா தண்டனை தாங்க, என்று இப்படி நிறைய சொல்லுவார். சில நாள்கள் நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு எனக்குப் பொறுமை போய்விட்டது. ஒரு கட்டத்தில் என் மனைவிக்கு இதைக் கேட்க கேட்க ரத்தக் கொதிப்பே வர ஆரம்பித்துவிட்டது. தினம் வார்த்தை மாறாமல் இதையே ஒருவரால் எப்படிச் சொல்லமுடிகிறது என்றெல்ல்லாம் ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

இப்படி வளர்ப்பதுதான் சரி என்று என் மனைவி நினைத்துவிடுவாளோ என்று நான் அஞ்சும் அளவுக்கு ஆகிப்போனது அந்தத் தாயின் தொடர் அறிவுரைகள்/கேள்விகள். அந்தக் குழந்தையிடம் கேட்டேன். ”விளையாடுவியா?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” “டிவி?” “எப்பவாச்சும். அம்மா திட்டுவாங்க.” நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் மெல்ல பேச ஆரம்பித்தோம். அந்தக் குழந்தை தனது துக்கங்களை அதன் மொழியில் சொல்லத் தொடங்கியது. விளையாடாததும், எப்போதும் தன் அம்மா தன்னைப் படிக்கச் சொல்லிக் கண்டிப்பதும் அந்தக் குழந்தைக்கு பெரிய மன நெருக்கடியைத் தந்திருந்தது. அதை விளக்கமாக அந்தக் குழந்தையின் அம்மாவிடம் என் மனைவி சொன்னாள். அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை. “அவளுக்கு எப்பவும் விளையாடணும், டிவி பார்க்கணும், வேற வேலை இல்லை. நீங்க ஃபிரண்ட்லியா இருக்கதால உங்களை ஏய்க்கறா” என்று ஒரே வரியில் நாங்கள் சொன்னதை புறந்தள்ளிவிட்டார்.

எங்கள் வீட்டுக்கு வரும்போது நானும் என் மனைவியும் அந்தக் குழந்தையிடம் நன்றாகப் பேசுவதால் எங்களுடன் சிரிக்க ஆரம்பித்தது. அதையும் ஒரு குற்றச்சாட்டாக அந்த அம்மா சொன்னார். ”கண்டிஷனா இருங்க மிஸ்.” உடனே என் மனைவி, இது எங்க ஸ்டைல், இப்படித்தான் நாங்க பாடம் எடுப்போம், இருப்போம். உங்க பொண்ணு மார்க் குறைஞ்சா மட்டும் கேளுங்க என்று சொல்லிவிட்டாள். உடனே அவர், அதுக்கில்ல, அவளை ஐ ஏ எஸ் ஆக்கணும், அதுதான் என்றார். சலித்துப் போய்விட்டது. கடைசி வரை அந்த அம்மா மாறவே இல்லை. அந்தப் பெண்ணுக்கு விளையாட்டும் சக குழந்தைகளிடம் பேசுவது சேட்டை செய்வது என்பதெல்லாம் எங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் மட்டுமே கிடைத்தது. அதிலும் அந்த அம்மா, “நல்லா மூணு மணி நேரம் வெச்சி அனுப்புங்க” என்பார். எந்தக் குழந்தையும் ஒரு மணி நேரத்துக்கு மேல் படிக்க முடியாது. படிக்க என்ன இருக்கிறது என்பது அடுத்த கேள்வி! ஆனால் அந்தக் குழந்தையை மூன்று மணி நேரம் படிக்க வைக்கவேண்டுமாம். ஜஸ்ட் 1ம் வகுப்புப் படிக்கும் குழந்தைக்கு நேர்வதைப் பாருங்கள்.

என் மனைவி மிகத் தீர்மானமாகச் சொன்னாள். “உங்க பொண்ணு பாடத்தை படிக்க வைப்போம். ரொம்ப கெட்டிக்காரி. ஒரு மணி நேரமே அதிகம். எப்பவும் முதல் ரேங்க்தான். அப்புறம் என்ன? மீதி நேரம் விளையாடத்தான் செய்வாள்.” இப்படிச் சொல்லியும் அந்த அம்மா மீண்டும் மீண்டும் அவர் கருத்துகளைப் புகுத்திக்கொண்டே இருந்தார். ஏன் டியூஷனை மாற்றவில்லை என்று யோசித்தேன். அவரது கணவரே காரணம். இதையெல்லாம் அந்த அம்மா அவரது கணவரிடம் சொல்லி இருப்பார் போல. கணவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. தன் மகள் சிரித்து விளையாடட்டும் என்று சொல்லி, என்ன ஆனாலும் டியூஷனை மட்டும் மாற்றக்கூடாது என்று உத்தரவிட்டுவிட்டார். அந்த அம்மாவுக்கு டியூஷனை மாற்றும் எண்ணமில்லை. ஆனால் எப்படியாவது தான் விரும்பும் டியூஷன் டீச்சராக என் மனைவியை மாற்றிவிட எண்ணம். அது நடக்கவில்லை. நாங்கள் இப்போது வீடு மாற்றிக்கொண்டு வந்துவிட்டோம்.

எங்கள் வீட்டுக்கு வரும்போது சிரித்துக்கொண்டும் என்னுடனும் என் மகளுடனும் விளையாடிக்கொண்டிருந்த அந்த பெரிய கொசு போன்ற குழந்தையை இப்போது எந்த டீச்சர் கசக்கி எறிந்திருக்கிறாரோ என்று தெரியவில்லை.

இப்போது ஒரு மாதத்துக்கு முன்பு இன்னொரு பையன் டியூஷனுக்கு சேர்ந்தான். 2ம் வகுப்பு. அந்தப் பையனின் அம்மாவின் கண்டிஷன்: யாருடனும் விளையாடக்கூடாது. தெருவில் விளையாடவே கூடாது. டியூஷன் விட்ட உடன் காத்திருந்து அந்த அம்மா வந்ததும்தான் வீட்டுக்குச் செல்லவேண்டும். (அந்தப் பையனின் வீடு பக்கத்து வீடுதான்.) தனியாக வரக்கூடாது. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் இன்னும் என்ன என்ன உண்டோ அத்தனையிலும் தேர்ச்சி பெறவேண்டும். பாடப் புத்தகங்கள் தவிர எதையும் படிக்கக்கூடாது. (நான் காமிக்ஸ் படி என்று அந்தப் பையனிடம் சொல்லி இருந்தேன். மறுநாள் வந்து பையன் சொன்னது, அதெல்லாம் அம்மா படிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க.) டிக்ஷ்னரி தேவையற்ற ஒரு பொருள். டீச்சர் சொல்லித் தந்தால் போதுமானது. 

அந்தப் பையனிடம் மெல்ல சொன்னேன். “வீட்டுக்கு போய் அம்மாகிட்ட அங்கிள் சொன்னாங்கன்னு சொல்லுப்பா. தினமும் வெளிய விளையாடு.” மறுநாள் வந்து சொன்னான், நான் சொன்னேன் அங்கிள், எங்க அம்மா திட்டறாங்க என்றான். யாரை என்று கேட்கவில்லை. மறுநாள் அந்த அம்மா வந்தபோது அந்தப் பையன் ஓடி வந்து என்னிடம், அங்கிள் நீங்களே எங்க அம்மாகிட்ட சொல்லுங்க என்றான். என் மனைவியைச் சொல்லச் சொன்னேன். பாச்சா பலிக்கவில்லை. “தம்பி உன் அதிர்ஷ்டம் அவ்ளோதான்” என்று சொல்லிவிட்டேன். 🙁 

நேற்றிலிருந்து டியூஷனையும் நிறுத்திவிட்டார்கள். காரணம், என் மனைவி சொன்ன பழைய கண்டிஷன்களே. விளையாட விடுங்க, நல்லா படிக்கறான், அது போதும், ரொம்ப கஷ்டப்படுத்த வேண்டாம், நல்லா ஜாலியா இருக்கட்டும் – இவைதான் அந்தப் பையன் டியூஷன் நிற்கக் காரணம். இங்கேயும் அந்தப் பையனின் அப்பா, தன் மகன் விளையாடுவதை விரும்புகிறார். ஆனால் அம்மா செம ஸ்ட்ரிக்ட். “தெருவுல கண்டவனோட சேர்ந்தா புள்ள கெட்டுடுவான். அவனுக்கு உடம்புக்கும் முடியலை, விளையாண்டா எதாவது ஆயிடும். இத்யாதி இத்யாதி.”

இப்படி நிறைய பெற்றோர்கள். ஒரு இரட்டையர்கள் டியூஷன் வருகிறார்கள். அவர்களிடம் நாம் படத்துக்குப் போவோம் என்று அழைத்தேன். இதுவரை தியேட்டரில் சினிமாவே பார்த்ததில்லை என்றார்கள். அவர்கள் வயது 15! நான் அதிர்ந்துவிட்டேன். ஏனென்றால் படம் பார்ப்பது தவறு என்பது அவர்கள் பெற்றோர்கள் சொல்லித் தந்தது. தமிழ்ப்படங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்றாலும், தேர்ந்தெடுத்துப் படங்களைக் காட்டியிருக்கலாமே! நான் அந்தப் பெற்றோர்களை அழைத்துப் பேசினேன். படம் மட்டும் வேண்டாம் ப்ளீஸ் என்று சொல்லிவிட்டார்கள். மற்ற வகைகளில் இந்தப் பெற்றோர்கள் தங்கள் மகன்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள் என்பதால், இதில் ஏதோ காரணம் உள்ளது என்று நினைத்துக்கொண்டு, நானும் அத்தோடு அதை விட்டுவிட்டேன். 

இந்த ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்களின் நிலைமையைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. தினமும் அரை மணி நேரம் மேல் படிக்க அவர்களுக்கு ஒன்றும் இல்லை. மீதி நேரத்தில் டிவி பார்க்கலாம், தெருவில் களைத்துப் போகும் அளவுக்கு விளையாடலாம். சைக்கிள் ஓட்டலாம். திருடன் போலிஸ் ஆடலாம். ஷட்டில் ஆடலாம். படம் பார்க்கலாம். என்ன என்ன இருக்கிறது! அதைவிட்டுவிட்டு எப்போதும் படிப்பு படிப்பு என்று ஏன் கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இந்தப் பெற்றோர்கள்?

எல்லோரும் 90+ மதிப்பெண்கள் வாங்கிவிட்டால், 70+ மற்றும் 40+களையெல்லாம் வாழவைப்பது யார்? என் மனைவியிடம் நான் தீர்மானமாகச் சொன்னது, எப்பவும் படி படி என்று சொல்லக்கூடாது, மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ஜஸ்ட் ஓர் எச்சரிக்கை போதும், தண்டனை கூடாது என்பது. (என் மகன் இதை அவன் டீச்சரிடமே சொல்லி, அவர் எங்களை அழைத்து, “அதை நீங்க மனசுக்குள்ள வெச்சிக்கோங்க, பையன்கிட்ட சொல்லாதீங்க, ஏண்டா மார்க் குறைஞ்சதுன்னா எங்க அப்பா திட்டமாட்டாங்கன்னு என்கிட்டயே சொல்றான்” என்று சொன்னது உபரிக்கதை.)

மிக முக்கியமாக, காமிக்ஸ், குழந்தைகள் நூல்களைப் படிக்க வைப்பது. படிப்பது என்பது சுவாரஸ்யமானது என்பதை உணர இதுதான் வழி. உண்மையில் இந்த காமிக்ஸைப் படிக்கவே என் மகன் முகம் சுழிக்கிறான். இருந்தாலும் கட்டாயப்படுத்தி வாராவாரம் படிக்க வைக்கிறேன். அதுவும் மிகக் குறைவான நேரத்துக்கு மட்டுமே. மற்ற நேரம் முழுக்க அவன் விளையாடிகொண்டுதான் இருப்பான். எனக்கு இப்போது 38 வயது. என்னால் விளையாட முடியவில்லை. 🙁

விளையாடும் நேரத்தில் விளையாடும் வயதில் குழந்தைகளை விளையாட விடுங்கள். ஒருவன் ஐ ஏ எஸ் கனவைப் பெறுவதற்கு 5 வயது ஏற்றதல்ல. 🙁 எப்போதும் படித்துக்கொண்டே இருப்பதற்கு குழந்தைகள் சாவி முடுக்கிவிடப்பட்ட குழந்தைகள் அல்ல. தமிழ் பேசுவது பாவமல்ல. ஆங்கிலம் தெரியாதது அவமானமல்ல. ஐயோ, எத்தனை எத்தனை கற்பிதங்கள் இந்தப் பெற்றோர்களுக்கு. நீங்கள் தோற்றுப் போனதை ஜீரணிக்க உங்கள் குழந்தைகளைப் பந்தயம் வைக்காதீர்கள். எங்காவது சென்று இதையெல்லாம் சொல்லி கத்த வேண்டும் போல் உள்ளது.

உண்மையில் குழந்தைகளுக்கு டியூஷன் தேவையே இல்லை. வேறு வழி இல்லை என்றால் மட்டும் டியூஷன் சேர்த்துவிடுங்கள். சனி ஞாயிறுகள் குழந்தைகளின் விளையாட்டுக்கு உருவாக்கப்பட்டவை என்று புரிந்துகொள்ளுங்கள். ஒரே நேரத்தில் ஆங்கிலம் தமிழ் ஹிந்தி சம்ஸ்கிருந்தத்தில் ஆறு வயதில் குழந்தைகள் புலைமை பெற்றுவிடும் என்று நம்பாதீர்கள். பக்கத்து வீட்டுப் பையன் செய்கிறான், என் பையன் ஏன் செய்யக்கூடாது என்று ஒருக்காலும் கேட்காதீர்கள். ஒரு குழந்தைக்கு ஒரு திறமை இருக்கும், இன்னொரு குழந்தைக்கு இன்னொரு திறமை இருக்கும் என்பதைவிட முக்கியமானது, இயல்பிலேயே திறமை குறைவான குழந்தைகளும் இருக்கலாம் என்று புரிந்துகொள்ளுங்கள். அது உங்கள் குழந்தையாகவே இருக்கலாம். ஏனென்றால் நாம் அப்படித்தான் இருந்தோம். 

(தொடரும்)

Share

குரு உத்ஸவ்

குரு உத்ஸவ் என்ற பெயர் மாற்றம் ஏன் கூடாது என்பதற்கு நாராயணன் எழுதியிருக்கும் இப்பதிவே, குரு உத்ஸவ் ஏன் தேவை என்பதை விளக்கப் போதுமானதாகிவிடுகிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவனை வானுறையும் தெய்வத்துள் வைப்பதே நம் மரபு. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதே நம்மை வழிநடத்தும் கருவி. (நீ த்வைதி இல்லையா என்பவர்கள் விலகி நிற்க. த்வைதமும் அத்வைதமும் மிக மெல்லிய வகையில், தெய்வத்து நிகராகலாம், தெய்வமாகவே ஆகலாம் என்பதில் மட்டுமே முரண்படுகிறது என்று மிக எளிமையாக எடுத்துக்கொண்டுவிட்டேன் என்றும் என்னளவில் இரண்டும் ஒன்றுதான் என்று புரிந்துகொள்க!) எனவே மனிதனை தெய்வமாக்குவது ஹிந்து, எனவே இந்திய, முறைமை. இதில் மேன்மையே உள்ளது. மனிதன் எக்காரணத்தினாலும் தெய்வமாக முடியாது என்பதும் தெய்வம் ஒன்றே என்பதும் நம்க்கு ஒவ்வாத ஆபிரஹாமிய சிந்தனைகள். இந்த சிந்தனைகளில் இருந்து வெளிவர குரு உத்ஸவ் என்ற வார்த்தை மாற்றமே உத்வேகம் அளிக்கக்கூடியது என்பதை நான் நம்பவில்லை என்றாலும், இந்தப் பெயர் மாற்றத்தை எதிர்ப்பவர்கள் நம்புவதால் அந்தப் பெயர் மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மனிதன் என்பவன் நிச்சயம் தெய்வமாகலாம்.

குரு என்பதற்கும் ஆசிரியர் என்பதற்கும் நானாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கிறேன். ஆசிரியர்கள் குருவாகவே வேண்டும் என்பதே என் ஆசை. குரு என்னும் வார்த்தை (அது தமிழா சம்ஸ்க்ருதமா என்பது தேவையற்றது. தமிழில் பெருவகையில் புழங்கியபின்னர் இது தமிழ் வார்த்தையாகவே இருக்கட்டும் என்பதே என் கருத்து) பெரிய அளவில் பரந்த அளவில் ஆழமான அளவில் ஒரு பொருளைக் கொண்டுவிடுகிறது என்று தோன்றுகிறது. ஆசிரியர் என்பது நம் இயல்பான வாழ்க்கையில் அதிகம் புழங்கிவிட்டதால், எதையேனும் கற்றுத் தருபவர் ஆசிரியர் என்ற பொருளில் பழக்க அளவில் சுருங்கிவிட்டது என்றும் எனக்குத் தோன்றுகிறது. இவை தோற்ற மயக்கங்களாகவே இருக்கலாம். ஆனால் இன்று இப்படித்தான் தோன்றுகிறது என்பதைப் புறக்கணித்துவிட்டு எப்படி யோசிக்கமுடியும்?

இப்படி ஒரு பிரிவை வைத்துக்கொண்டோமானால், இதை ஏற்றுக்கொண்டோமானால், எனக்கு குரு என்று யாருமில்லை. இதில் ஆணவம் எதுவும் இல்லை. ஒரு குருவை அடையும் குறைந்தபட்ச தகுதிகூட எனக்கில்லை என்ற அளவில் நான் இதை என்னை மட்டம்தட்டித்தான் சொல்கிறேன். குரு இல்லை என்பதல்ல, குருவைக் கண்டுணர்ந்து குருவை ஏற்கத்தக்கவனாக நான் இன்னும் தயாராகவில்லை என்றே சொல்கிறேன். நம்புங்கள். ஆனால் ஆசிரியர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். மிருதஞ்ஜெயன் என்ற ஆசிரியர் அடிக்கடிச் சொல்வார், கல்லூரியில் படிப்புக்குப் பின்னர் தேர்வு ஆனால் வாழ்விலோ தினம் தினம் தேர்வுக்குப் பின்னர்தான் படிப்பு என்று. அப்படி எனக்குப் பலப்பல விஷயங்களைக் கற்றுத் தந்த, கற்றுத் தந்துகொண்டிருக்கும் ஒவ்வொருவரும் வணக்கத்துக்குரியவரே. (க்ளிஷே போதும்.)

குரு இல்லை என்றாலும் குருத்துவத்தில் சில பரிமாணங்களை சில பொழுதுகளில் காட்டிய ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். அந்த ஆசிரியர்கள் அனைவரும் வணக்கத்துக்குரியவர்கள்.

நான் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது எனக்கு வகுப்பெடுத்த முத்துலக்ஷ்மி டீச்சர் நினைவுக்கு வருகிறார். மாணவர்கள் வீட்டுப் பாடம் செய்யாமல் வருவது பாவமல்ல, சேட்டை செய்வது குற்றமல்ல, எதிர்த்துப் பேசுவது தவறல்ல என்று செயல்பட்ட அந்த ஆசிரியர் எப்போதுமே எங்களிடம் (என்னிடம்) அன்பாகவே இருந்தார். அவருடன் வேலை பார்த்த மற்ற ஆசிரியர்கள் முகத்தில் எள்ளும் கடுகும் வெடித்தபோது (அப்போது அந்த வயதில் அப்படித் தோன்றியது) இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். பின்னாளில் என்னுடன் டேக்-கில் வேலை செய்த மந்திரமூர்த்தி இந்த ஆசிரியரின் மகன் என்று அறிந்தபோது, முத்துலக்ஷ்மி டீச்சரின் மேல் இருந்த பிரியும் மந்திரமூர்த்தி அண்ணனின் மேலும் வந்தது என்றால், எனக்கு முத்துலக்ஷ்மி டீச்சரை எவ்வளவு பிடித்தது என்று பார்த்துக்கொள்ளுங்கள். சேரன்மகாதேவியில் இருந்த அந்த பஞ்சாயத்து போர்ட் ஸ்கூல் முத்துலக்ஷ்மி டீச்சரின் முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. நான் ஆசிரியராக இருந்தால் என்னால் முத்துலக்ஷ்மி டீச்சர் போல இருந்திருக்கமுடியாது என்பதே இந்த டீச்சரின்மேல் மரியாதையை வரவழைக்கிறது.

9ம் வகுப்பை மதுரையில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் படித்தேன். அப்போது எனக்குத் தமிழாசிரியராக இருந்தவர் லக்ஷ்மணன் ஐயா. இவர் இல்லாவிட்டால் தமிழின் இலக்கணத்தை என் வாழ்நாள் எதிரியாக நினைத்திருப்பேன். தமிழ் இலக்கணம் என்பது எளிமையானது, அழகானது, ஆர்வத்துடன் படிக்க வல்லது என்பதை நிரூபித்தவர் அவர். இன்று வரை எனக்குத் தெரிந்த தமிழுக்கு அடிப்படை வித்து லக்ஷ்மணன் ஐயா இட்டதே.

10ம் வகுப்பில் எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் நார்மன் சார் எனக்கு வகுப்பாசிரியராக வந்தார். இவர் என் மேல் வைத்திருந்த பாசம் இப்போதும் எனக்குப் புரியாததாக இருக்கிறது. குள்ளப்பையா என்றுதான் என்னை அழைப்பார். கிறித்துவ இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கை கொண்டவர் என்று இப்போது தோன்றுகிறது. வகுப்பு முடிந்ததும் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கும் என்று சொல்லி, சிலரை அழைத்துவந்தார். அவர்கள் கிறித்துவ இறைப் பாடல்களைப் பாடினார்கள். கண்ணை மூடி இறைவனை நினைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நான் மறுநாள் நார்மன் சாரிடம் எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று சொன்னேன். நான் ஹிந்து என்றோ, நடப்பது கிறித்துவத்தைப் புகுத்தும் செயல் என்றோ அன்று எனக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் எனக்கு ஒப்பவில்லை. என் தெய்வம் ஏசுவல்ல என்று மட்டும் மனத்தில் பட்டது. இப்ப என்ன, நீ உனக்குப் பிடிச்ச சாமியை நினைச்சுக்கோ என்றார். நான் தலைமை ஆசிரியரான தர்மராஜ் சாரிடம் சென்று சொன்னேன். (இவரைப் பற்றி அடுத்து.) அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பின்னர் அதுபோன்ற வகுப்பு நடக்கவில்லை. ஆனால் நார்மன் சார் எப்போதும் போல் என்னிடம் அன்பாகவே இருந்தார். பள்ளி இறுதித் தேர்வின்போது மிகச் சிறிய பைபிள் ஒன்றை (ஒரு குழந்தையின் கை அகலத்துக்கும் குறைவானது) அனைவருக்கும் பரிசளித்தார். எனக்குத் தரும்போது, உனக்கு வேண்டாம்னா பரவாயில்லை என்றார். இல்லை, தாங்க சார் என்று வாங்கி வைத்துக்கொண்டேன். பல நாள் அதனுள்ளே ஓம் டாலரை வைத்திருந்தேன். பள்ளி சமயத்தில் திடீரென்று ஒருநாள் அவரை ஒரு சாலையில் பார்க்க நேர்ந்தது. வாடா என்று அழைத்துக்கொண்டு போய் எனக்கு பஜ்ஜி வாங்கித் தந்தார். இப்போது நினைத்தாலும் அன்று பட்ட கூச்சம் இப்போதும் வருகிறது. ஆனாலும் எந்த ஆசிரியர் இப்படிச் செய்வார் என்பதும் நினைவுக்கு வருகிறது. என் வாழ்வில் நான் நன்றாக இருக்கவேண்டும் என எனக்காகப் பிரார்த்தித்த நார்மன் சாரை இன்றும் நினைத்துக்கொள்கிறேன்.

எம் எல் டபுள்யூ ஏ பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தர்மராஜ் சார். வாழ்நாளில் என்னால் இவரை மறக்கவே முடியாது. நான் அங்குப் படித்த மூன்று ஆண்டுகளும் என் மீது மிகுந்த பாசத்தையும் நம்பிக்கையையும் வைத்திருந்தவர் தர்மராஜ் சார். நார்மன் சார் கிறித்துவப் பாடல் குழுவைக் கூட்டிக்கொண்டு வந்தபோது இவரிடம் சொன்னேன். அமைதியாகக் கேட்டுக்கொண்டார். பின்னர் இவர் தலையீட்டின்பேரில்தான் அது நிறுத்தப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டேன். பத்தாம் வகுப்பு முடிந்ததும் டிசி வாங்கப் போயிருந்தேன். ஐயரே இங்கயே படி, என் வீட்ல தங்கிப் படி என்றார். நான் திருநெல்வேலிக்குப் போகவேண்டி இருந்தது. மனதில்லாமல் டிசி கொடுத்து வாழ்த்தி அனுப்பினார். அவரது முகவரியைக் கேட்டேன். ஜார்ஜ் தர்மராஜ்னு போட்டு, ஸ்கூல் அட்ரஸுக்கு போஸ்ட்கார்ட் போடு, சரியா எனக்கு வந்துரும் என்று சொன்னார். அப்போதுதான் அவரும் கிறித்துவர் என்றே தெரிந்தது. அதுவரை அன்றுவரை அவர் கிறித்துவர் என்று எனக்குத் தெரியாது. அவரிடமே சென்று நார்மன் சாரின் கிறித்துவக் குழுவின் பாடலைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அவரும் இதைப் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்தாம் வகுப்பில் நாங்கள் நல்ல மதிப்பெண்கள் எடுக்க தர்மராஜ் சார் பட்ட பாடு சொல்லமுடியாதது. எங்களுக்குகாக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார். அவர் இல்லையென்றால் எங்கள் பள்ளியே இல்லை என்னும் அளவுக்கு அவர் பள்ளியின் மேல் ஈடுபாட்டோடு இருந்தார். அவரை மறக்கமுடியாது.

பத்தாம் வகுப்பில் வரலாறு புவியியல் சமூகவியல் எடுத்த கிருஷ்ணன் சார். உட்கார்ந்த இடத்திலேயே கண்முன் அத்தனையையும் படமாக விரித்து பாடம் நடத்த வல்லவர். அவரைப் போன்ற ஒருவர் பாடம் எடுத்தால் வரலாறெல்லாம் இனிக்கும். புவியியலெல்லாம் பிடிக்கும். சமூகவியல் சலிக்காது. பத்தாம் வகுப்புப் பரிட்சைக்கு முன்னர் அவர் பயன்படுத்திக்கொண்டிருந்த பேனாவை எனக்குப் பரிசாகத் தந்தார். அன்றோடு அவரது பணி நிறைவடைந்து பள்ளியை விட்டும் விடைபெற்றுக்கொண்டார். மிக நல்ல ஆசிரியர்.

பத்தாம் வகுப்பில் ஜான் சார். கணித ஆசிரியர். இத்தனை நன்றாக கணிதம் எடுக்கமுடியுமா என்று வியக்க வைத்தவர். எதையும் விடாமல் புத்தக அட்டை டூ அட்டை நடத்திய முதல் ஆசிரியர். நண்பனைப் போல என்னிடம் பழகியவர். தினமும் மதியம் தன் வீட்டுக்குச் சாப்பிடச் செல்லும்போது சைக்கிளில் டபிள்ஸ் என்னை ஏற்றிக்கொண்டு சென்று என் வீட்டில் இறக்கிவிட்டுவிட்டுப் போனவர். இதெல்லாம் ஒரு ஆசிரியர் செய்வாரா என்று என்னை ஆச்சரியப்பட வைத்தவர். நான் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன் என என்னைவிட அதிகம் நம்பியவர்.

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் திருநெல்வேலி மதிதா பள்ளியில் எனக்குத் தமிழ் கற்பித்த சோமசுந்தரம் ஐயா. இவரைப் பற்றிய சில மதிப்பீடுகள் வயதின் காரணமாக பின்னர் சற்றே மாறி, மீண்டும் அதே வயதின் காரணமாக சரிந்த மதிப்பீடு மீண்டும் உயர்ந்தது என்பதைச் சொல்ல்த்தான் வேண்டும். இவர் தமிழ் இலக்கணம் கற்பித்த முறை மறக்கமுடியாதது. பல இலக்கண விதிகளை அப்படியே ஒப்பிப்பார். மிக அழகாக விளக்குவார். மற்ற மாணவர்கள் எல்லாம் எரிச்சலில் இருக்க, நானும் அவரும் மட்டும் விடாமல் இலக்கணம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். நீங்க ரெண்டு பேரும் தனியா போய் பேசுங்கல என்று நண்பர்கள் அலறுவார்கள். பனிரெண்டாம் வகுப்புக்கான ஃபைனல் ரிவிஷன் தேர்வில் தமிழில் 197 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். தன் வாழ்நாளில் தமிழை இத்தனை ஆர்வமாகக் கற்ற மாணவனைப் பார்த்ததில்லை என்று சொல்லி, எனக்கு நன்னூல் ஒன்றைப் பரிசளித்தார். 

மற்ற ஆசிரியர்கள் பாடம் எடுக்காமல் உதார் விட்டுத் திரிந்தபோது, பள்ளியில் பாடம் எடுப்பதைத் தன் சத்தியச் செயலாகக் கடைப்பிடித்த சுப்பையா சார். கணித ஆசிரியர். நான் அவரிடம் டியூஷன் சேர்ந்தபோது, ஒனக்கு என்ன இங்க தனியாவா எடுக்கபோறேன், அங்க எடுக்கதுதான் இங்கயும், ஒனக்கு டியூஷன் வேண்டாம்ல என்று சொன்னவர். பள்ளியில் 45 நிமிடங்கள் கொண்ட ஒரு வகுப்பில் 45வது நிமிடம் வரை பாடம் நடத்தியவர். கணிதத்தின் மேல் காதல் வரக் காரணமாய் இருந்த ஆசிரியர் சுப்பையா சார். இன்றும் மதிதா பள்ளியில் பணியில் இருக்கிறார்.

மதிதா கல்லூரியில் வேதியியல் கற்பித்த மிருதஞ்ஜெயன் சார், விஸ்வநாதன் சார், கந்தசாமி சார். இவர்கள் மூவரும் முக்கண்களாக இருந்து எங்களை வழிநடத்தினார்கள். வேதியியலைக் காதலோடு படிக்க் வைத்த விற்பன்னர்கள் இவர்கள். எங்கள் வயதைப் புரிந்துகொண்டு எங்களிடம் பழகியவர்கள். எங்களின் விளையாட்டுத்தனத்தையும் விடலைத்தனத்தையும் மன்னித்தவர்கள்.

இவர்கள் அத்தனை பேரையும் தன்னுள்ளே கொண்டு எனக்குக் கல்வி கற்றுத் தந்த என் தாத்தா என் வாழ்நாளின் மிக முக்கியமான ஆசிரியர். இவர் இல்லாவிட்டால் நான் இல்லை.

இத்தனை ஆசிரியர்களுக்கும் என் குரு வணக்கம். ஆசிரியர் தினம் என்றதால் இன்று கொஞ்சம் சிறப்பாக நினைக்கிறேன். ஆனாலும் மற்ற எல்லா தினங்களிலும் இவர்களை நினைத்துக்கொண்டுதான் இருக்கிறேன். கண்ணில் நீருடன் அவர்கள் அனைவருமே தெய்வத்துள் வைக்கத் தக்கவர்கள் என்றெண்ணி அவர்கள் அனைவரின் பாதம்தொட்டு நமஸ்கரிக்கிறேன். என் திமிரினாலும் அறியாமையாலும் இவர்களுக்கு எந்த வகையிலேனும் மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருந்தால் பெருந்தன்மை கொண்ட இவர்கள் என்னை மன்னித்துவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். குரு உத்ஸவ் தொடரட்டும்.

Share

அனந்த விரதப் பண்டிகையும் தமிழக பிஜேபிக்கு வேண்டுகோளும்

நேர நெருக்கடி இருப்பவர்கள் இந்த மொக்கையைத் தவிர்த்துவிட்டுச் செல்லவும்.

அனந்த விரதப் பண்டிகை என்பது மாத்வர்களின் முக்கியமான பண்டிகளில் ஒன்று. பொதுவாக இதை ஆண்களுக்கான பண்டிகை என்று சொல்லுவார்கள். எல்லாப் பண்டிகைகளும் பெண்களுக்கானது என்றிருக்க, ஆவணி அவிட்டமும், அனந்த விரதப் பண்டிகையும் ஆண்களுக்கானது என்பது மரபு. (எப்படி ஏன் என்பன போன்ற கேள்விகளைத் தவிர்க்க.) இந்த அனந்த விரதப் பண்டிகையை கொண்டாட ஒரு சில விதிகள் உள்ளன.

பொதுவாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வரும் குடும்பத்தினரின் ஆண் வாரிசுகள் திருமணம் ஆனவுடன் முதல் வருடத்தில் இந்தப் பண்டிகையைப் பிடித்துக்கொள்ள வேண்டும். அப்படிப் பிடித்துக்கொள்வதற்கு, அப்போது அந்த மருமகள் கர்ப்பமாக இருக்கக்கூடாது. தீட்டு வரும் நாளாக இருக்கக்கூடாது. திருமணமான முதல் வருடத்தில் கல்யாணம் ஆன பெண் முழுகாமல் இருக்கவேண்டும் என்ற விதியை வைத்தவனை (மூக்கிலேயே குத்த) தேடிக்கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் முழுகாமல்தான் இருப்பார்கள். எனவே இந்தப் பண்டிகையைப் பிடிக்கமுடியாமல் போய்விடும். இப்படி இல்லாமல் இருந்தால் முதல் வருடத்தில் பிடித்துக்கொள்வது நல்லது, எளிதானது.

அப்படி முதல் வருடத்தில் பிடித்துக்கொள்ள முடியவில்லை என்றால், அடுத்து எப்போது அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமி அன்று வருகிறதோ அன்றுதான் பிடிக்கவேண்டும். அந்த சமயத்திலும் மேலே சொன்ன விதிகளும் சரிவர இருக்கவேண்டும். (இத்தனை கஷ்டப்பட்டு இந்தப் பண்டிகையைப் பிடித்து என்ன ஆகப்போகிறது என்னும் பகுத்தறிவுவாதிகள் ஒதுங்கி நிற்க.)

என் அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பிடிக்கவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. நானும் இன்னும் பிடிக்கவில்லை. இடையில் இரண்டு தடவை முழு பௌர்ணமியில் இந்தப் பண்டிகை வந்தபோது எங்கள் வீட்டில் யாரோ இறந்து ஒருவருடம் பண்டிகை இல்லை என்றாகிவிட்டதால் பிடிக்கமுடியாமல் போய்விட்டது. இந்த முறை அனந்த விரதப் பண்டிகை முழு பௌர்ணமியில் வருகிறது. செப்டெம்பர் 8ம் தேதி.

அண்ணனும் தம்பியும் சேர்ந்து பிடித்துக்கொள்வது வழக்கம். எனவே நான் திருநெல்வேலிக்குச் சென்றோ அல்லது என் அண்ணன் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தோ இந்தப் பண்டிகையைச் சேர்ந்து செய்யவேண்டும். இந்த முறை சென்னையில் செய்வது என்று முடிவெடுத்தோம்.

எங்கள் வீட்டில் என் தாத்தா காலம் வரை அனந்த விரதப் பண்டிகை மிகப் பெரிய அளவில் நடைபெறும். ஒட்டுமொத்த குடும்பமும் அன்று ஒன்றிணைந்து இருக்கும். சிறுவர்களான நாங்கள் அன்று தரப்படும் வெண்ணெய்க்கும் தேனுக்கும் நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்திருப்போம். ஜால்ரா, சப்ளாக்கட்டை, மணி என மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அனந்த பத்மநாபனைத் தொழுது தோரணம் அணிந்துகொள்வோம். (ஒருமுறை என் அப்பா கடிதம் எழுதும்போது, அனைவரும் சாமி முன்னர் கயிறு மாட்டிக்கொண்டோம் என்றெழுதி அனைவரின் சிரிப்புக்கும் ஆளானார்!)

கடந்த வருட தோரணம் (கயிறு) சிறுவர்களுக்குத் தரப்படும். அவர்கள் கட்டிக்கொள்வார்கள். ஆண்கள் கயிரை புஜத்தில் கட்டிக்கொள்ள பெண்கள் மாலைபோல கழுத்தில் போட்டுக்கொள்வார்கள். சமையல் மிகவும் ஆசாரமாக கரி அடுப்பில் செய்யப்படும். நிறைய வகைகள் வேறு உண்டு. 2 மணிக்கே சாப்பாடு போட்டுட்டாங்களே என்றெல்லாம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்! 

முதல் முறை பிடிக்கும்போது, ஆண் வாரிசின் மாமனார் மாமியார் முக்கியமாக வரவேண்டும். கூடவே உடன்பிறந்த சகோதரிகளும் வரவேண்டும். இப்படியாக இந்தப் பண்டிகை இந்தமுறை சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு ஏக தடபுடலாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. அனைவருக்கும் புதுத் துணி எடுத்தாகிவிட்டது. மடியான சமையலுக்கு ஆள் சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. பூஜைக்குத் தேவையான சாமான்கள், பலசரக்கு எல்லாம் வாங்கியாகிவிட்டது. எல்லோரும் வரும் 8ம் தேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்

இரண்டு அம்மாக்கள் குண்டை போட்டார்கள். ஒருவர் என்க்கு அம்மா. இன்னொருவர் நமக்கு ‘அம்மா.’

கடந்த வாரம் என் அம்மாவுக்கு திடீரென உடல்நிலை குறைவடைய, ஆஸ்பத்திரியில் 4 நாள் சேர்க்கும்படி ஆகிவிட்டது. இன்னும் சரிவர அவர் குணமாகவில்லை. மருத்துவம் தொடர்கிறது. எதை உண்டாலும் வயிறெல்லாம் வலி. உப்பசம். மூச்சுத் திணறல். எப்போதும் வயிற்றைக் கௌவும் ஒரு வலி. எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்த சோதனை, நீர் சோதனை எல்லாம் செய்தாகிவிட்டது. நாற்பதாயிரம் செலவில் கிடைத்த முடிவு, எல்லாம் நார்மல். ஆனால் வலி மட்டும் அப்படியே. இந்தப் பண்டிகையை இந்த முறையாவது பிடித்துவிடவேண்டும், அடுத்தமுறை தான் இருப்போமோ இல்லையோ என்ற எண்ணம் அம்மாவுக்கு வந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர் சீரியஸாக இல்லை என்றாலும், அவர் அப்படி நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இன்னொரு ‘அம்மா’ யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல அதிரடியாக திடீரென்று மேயர் தேர்தலை அறிவித்துவிட, என் அண்ணன் படு பிஸியாகிவிட்டார். இப்போது அவரால் வரும் திங்களன்று வரமுடியுமா என்றுகூடத் தெரியவில்லை. போதாக்குறைக்கு என் தங்கைகளும் அக்காவும் வரமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது. ஒரே குழப்பம். எப்படியாவது வந்துவிடச் சொல்லி நாங்கள் சொல்ல, கடும் நெருக்கடியில் வருவது சாத்தியமில்லை என்று அண்ணா சொல்ல, என் அம்மா இன்னும் வருத்தமாக, ஒரே குழப்பம்தான்.

இந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஓர் எளிய வழி உள்ளது. நெல்லை மேயர் தேர்தலுக்கு இதுவரை அதிமுக மட்டுமே விண்ணப்பித்துள்ளது. தேமுதிக, மதிமுக, திமுக, காங்கிரஸெல்லாம் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது. ஆனால் தமிழக பாஜக மட்டும் வீராப்பாக உள்ளது. நான் தமிழக பிஜேபியிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். எப்படியும் நெல்லை மேயர் தேர்தலில் ஜெயிக்கப் போவதில்லை. நீங்களும் ஒதுங்கிக்கொண்டு (ஓடி)விட்டால், அன் அப்போஸ்ட்டாக அதிமுக ஜெயித்துவிடும். இதில் நாட்டு நலனும் என் வீட்டு நலனும் பாதுகாக்கப்படும். தேவையற்ற பணம் விரயமாவது தவிர்க்கப்படுவதோடு, எங்கள் வீட்டுப் பண்டிகையும் நன்றாக நடக்கும். அனந்த பத்மநாபன் அருள் உங்களுக்குக் கிடைக்கும். யோசிக்கவும். இன்றுதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜஸ்ட் ஒரு பத்து மணி நேரம் நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். நமக்கு நீலகிர் அனுபவமும் உண்டு என்றறிக.

ஹிந்துக்கள் மனது வைத்தால் திருவனந்தபுரத்தோடு இருக்கலாம் என்று சொன்னவர் உள்ள கட்சிக்காரர்கள், திருவனந்தபுரத்துப் பெருமாளின் பண்டிகையை கன்னடம் பேசும் சுத்தத் தமிழன் கொண்டாட வழிவகை செய்து இந்திய தேசியத்தை நிலைநாட்ட உதவவேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்பதைக் குறியீடாகக் கொண்டு யோசித்து நல்ல முடிவு எடுத்து மேயர் தேர்தலில் இருந்து விலகி இருக்குமாறு தமிழக நெல்லை பிஜேபி வகையறாக்களுக்கு என் கோரிக்கையை வைக்கிறேன். இதனால் என் அண்ணன் நிம்மதியாக வந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுப் போகமுடியும். செய்வீர்களா செய்வீர்களா?

Share