பிரபஞ்சனுக்கு அஞ்சலி

பிரபஞ்சனுக்கு அஞ்சலி. வானம் வசப்படும் படித்த நாள்கள் நினைவுக்கு வருகின்றன. அவரது ஆர்ம்ப கால நாவல்கள் தந்த ஏமாற்றமெல்லாம் கொஞ்சநஞ்சமல்ல. அப்படியான நாவல்களுக்கும் வானம் வசப்படும் நாவலுக்கும் இடையே பெரிய பயணம் இருந்ததை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். தொடர்ந்து அவர் எழுதிய பண்டைத் தமிழ் சார்ந்த உரைநடைகள் மிகவும் நன்றாக இருந்தன – படிக்க. கருத்து சார்ந்து அவர் மிகத் தெளிவாக இடதுசாரி முற்போக்கு மனப்பான்மையுடனேயே இருந்தார். மற்ற பெரும்பாலான இலக்கியவாதிகளையும் போல.

எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட மாத்தா ஹரி நாவலை அவர் வெளியிடவேண்டும் என்று அவரை அழைக்க நாகரத்தினம் கிருஷ்ணாவுடன் நானும் சென்றிருந்தேன். என்னவெல்லாமோ பேசினார். நீண்ட நேரம் நடந்த சந்திப்பு அது. மேடையில் எழுத்தாளர்களுக்குப் பேச வராது என்பதை உடைத்தவர் அவர். மிகத் தெளிவாகவும் சுவையுடனும் பேசும் எழுத்தாளர். நேர்ப்பேச்சிலும் அப்படியே பேசினார். மற்ற எழுத்தாளர்களைப் பற்றிய காஸிப்புகளுக்கும் அங்கே பஞ்சமிருக்கவில்லை. அவர் சொன்னதில் இன்னும் குறிப்பாக நினைவில் நிற்பது, “… வலது காலில் விழுந்து கிடக்கிறார் அவர், இடது காலில் இவர், தமிழே என் காலுக்குக் கீழே” என்று அந்த அரசியல்வாதி சொன்னதாகச் சொன்னதுதான். அவர் சொன்ன எழுத்தாளர்களின் பெயரையும் அரசியல்வாதியின் பெயரையும் இங்கே சொல்ல விரும்பவில்லை. நானும் கொஞ்சம் மறந்துவிட்டேன்!

மாத்தா ஹரி நாவலை வெளியிட்டுப் பேசும்போது பாண்டிச்சேரியில் ஒரு தேவாலயத்தில் இரண்டு சாதியினர் தனித்தனியாக அமர நேர்ந்த வரலாற்றுக் குறிப்பை அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை மையமாக வைத்துச் சிறப்பாகப் பேசினார்.

பிரபஞ்சனுக்கு அஞ்சலி.

Share

Comments Closed