சர்வம் மாயா (M) – இப்படி அழகான க்யூட்டான ஒரு பேய் கிடைக்குமானால் நான்கைந்து பேய்களுடன் வாழலாம் என்பதைத் தாண்டி இந்தப் படத்தில் ஒரு சுக்கும் இல்லை. ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமான கதைகளை மலையாளிகள் காதலிக்கிறார்கள் என்பது புரியவில்லை. கதை திரைக்கதை லாஜிக் என எதுவுமே இல்லாமல் மொக்கையாக ஒரு திரைப்படம். அங்கங்கே லேசாகப் புன்னகை வரப் பார்க்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தை முழுமையாக ஏன் பார்த்தோம் என்பதும் புரியவில்லை. கதாநாயகி அழகாக நடிக்கிறார். நிவின் பாலி தன் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக நகரும் திரைப்படம். போட்டுப் படுத்தி எடுத்து விட்டார்கள். மலையாள படங்களைத் தமிழ் டப்பிங்கில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள் எத்தனையோ அரத மொக்கையான மலையாளப் படங்களைப் பார்த்து வைரம் பாய்ந்த கட்டைகள் மட்டும் ஒரு முறை பார்க்கலாம்.
Exiled from Ayodhya
ராமன் வனவாசம் போன வழி – இந்த நூல் சீர்சேந்து முகோபாபாத்யாய எழுதிய நூல். இந்த நூலைப் பற்றி நான்கு வரிகளாவது எழுதாவிட்டால் ராமபாவம் என்னைச் சும்மாவிடாது.
சீர்சேந்து முகோபாத்யாயாவுக்கு ராமாயணம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. அல்லது வம்படியாகத் தவறாகப் புரிந்துகொள்ளும் தீவிர இலக்கியவாதியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ராமன் வனவாசம் போன வழியைத் தேடி அவர் போவது எல்லாம் பிரமாதம்தான். உண்மையில் இது ஒரு மனநிலை. இதைச் செய்ய ஆழமான பற்றுடன் கூடிய முற்றான விலகலும் வேண்டும். இலக்கியவாதிகளுக்கே இது சாத்தியம்.

முதலில் அயோத்திக்குச் செல்லும் சீர்சேந்துவுக்கு எல்லாமே எரிச்சலாகத்தான் இருக்கிறது. பக்திப் பயணத்தைத் தன் தீவிர இலக்கிய அறிவால் அளக்க நினைப்பவர்களுக்கு இப்படித்தான் அமையும். அயோத்தி/காசியின் அறைகள், தெரு, நீர் எல்லாமே மாசடைந்திருக்க, தெருக்களில் நிலவும் ராம கோஷம் எல்லாமே எரிச்சலாகவே இருக்கிறது. ஆனாலும் மானுட நம்பிக்கை இவருக்கு இருக்கிறது. மனிதர்கள் இவரைக் கைவிடவில்லை. எல்லா மனிதர்களும் எப்படியோ உதவுகிறார்கள். இவரது பயணம் பல சுவாரஸ்யங்களுடன் தொடர்கிறது.
செல்லுமிடமெல்லாம் எப்படியோ உணவு — பணம் கொடுத்தோ இலவசமாகவோ — கிடைத்துவிடுவது இன்றுவரை இந்தியாவின் பாரம்பரியம். யாரோ எப்படியோ எங்கோ ஏனோ நமக்கு உதவுவார்கள். அவர்களைக் கடவுள் என்றாலும் சரி, மனிதன் என்றாலும் சரி. இது அனைவருக்கும் நடக்கும். (எனக்கும் நடந்திருக்கிறது.)
நூல் முழுக்க உள்ள பிரச்சினை, இவர் ராமன் சீதையின் அண்ணன் என்று தீவிரமாக நம்புகிறார். லக்ஷ்மணன் சீதையின் காதலன் என்றும் நம்புகிறார். இந்தப் பைத்தியக்காரத்தனமே பிரச்சினை. இந்தப் பைத்தியக்காரத்தனத்தின் மூலம், இலக்கியவாதியின் மூளை சிந்திக்கும் விதம்.
எத்தனையோ விதங்களில் ராமாயணம் வாய்மொழியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் எங்கேயும் ராமன் சீதைக்கு அண்ணன் என்று சொல்லப்படவில்லை. (புத்தக ஜாதகக் கதைகளில் சொல்லப்பட்டிருப்பதாக ஜடாயு சொல்லும் வீடியோ.)
சீர்சேந்துவின் ஊரைச் சேர்ந்த சுகுமார் சென் என்ற ஓர் எழுத்தாளர் எங்கோ ஒரு குறிப்பில் ‘ராமன் சீதைக்குத் தங்கை, தங்கையை மணந்துகொண்டார்’ என்று கிறுக்கி வைக்க, இந்த சீர்சேந்து அதைப் பிடித்துக்கொண்டு விட்டார். இதற்கு சுகுமார் சென் ஓர் ஆதாரத்தைத் தர, அந்த ஆதாரத்தையே புத்தகத்தில் ஆதாரமாகக் கொடுத்து, அதை வைத்து இன்னும் பல கிறுக்குத்தனங்களை சீர்சேந்து சேர்த்துக்கொண்டு விட்டார். அதிலும் குறிப்பாக இது ஆரியர்களின் வழக்கமல்ல, இந்தியர்களின் வழக்கம் என்று அவர் சொல்வது!
அவர் கொடுத்திருக்கும் ஆதாரம் என்ன?
//ரிக் வேதப் பாடல் ஒன்றில்(10-3-3) சொல்லப்படும் விஷயங்கள், ராமனுக்கும் சீதைக்கு இருப்பதாக மரபாகச் சொல்லப்படும் உறவுக்கு மாறாக உள்ளன. ராம்காதார் என்ற தனது நீண்ட கட்டுரையில் இந்த வேதப் பாடலை மேற்கோள் காட்டும் முனைவர் சுகுமார் சென்1, இதை இப்படி மொழிபெயர்க்கிறார்: பத்ரனும் (தாசர அஸ்வின்/ராமன்), பத்ராவும்(உஷை/சீதை) அருகருகே நடந்து செல்கிறார்கள்: அவனது சகோதரி(உஷை/சீதை)யின் பின்னால் அவளது காதலன்(நசத்ய அஸ்வின்/லட்சுமணன்) நடக்கிறான். அக்னி தண்மையாகச் சுடர்விட்டுப் பெருக்கி ராமனுக்குப் பிரியாவிடை கொடுக்கிறான்.//
//ஆனால் சந்தேகவாதிகளுக்கும் குறைவில்லை; அவர்கள் ராமன் ஒரு ஆரியனல்ல என்று அடித்துச் சொல்கிறார்கள். அவன் கருமை நிறத்தவன்; மேலும் தனது தங்கையான சீதையைத் திருமணமும் செய்துகொள்கிறான். இது ஆரியரல்லாத சமூகத்தின் வழக்கம்.//
அந்த ரிக் பாடல் சொல்வதென்ன?
//He comes auspicious, attended by the auspicious; then like a gallant he approaches his ‘sister’ (the Dawn). Agni, spreading everywhere with bright, knowing rays, overcomes the dark night with his shining beams.”//
வழக்கம் போல உருவமாகச் சொல்லப்படுவதை, ராமனும் சீதையும் அண்ணன் தங்கை, திருமணம் செய்துகொண்டார்கள், லக்ஷ்மணன் சீதை மேல் காதல் கொண்டான் என்றெல்லாம் உளறித் தள்ளிவிட்டார். நம்ம ஊர் வம்புப் பிரசாரம் போல அந்த ஊர் வம்புப் பிரசாகர் போல.
அதாவது ஆயிரம் ராமாயணங்கள் ராமனை சீதையின் கணவன் என்று சொன்னாலும்,எங்கேயாவது ஒரே ஒரு ராமாயணம் மாற்றிச் சொல்ல, அதைப் பிடித்துக்கொண்டு, மற்ற ஆயிரத்தையும் மறுக்கும் மனநிலைக்குப் பெயர்தான், இலக்கியவாதிகளின் மனநிலை!
இத்துடன் நிற்கவில்லை. எல்லாவற்றிலும் ஒரு குதர்க்கப் பார்வை.
லக்ஷ்மணனுடன் சீர்சேந்துவின் சந்தேகப் பார்வை நிற்கவில்லை. பரதனுக்கும் தொடர்கிறது. பரதன் ராமனிடம் இருந்து பாதுகையைக் கேட்டது, ராமன் அந்த வெயில் காலத்தில், கல்லிலும் முள்ளிலும் கஷ்டப்பட்டு நடக்கவேண்டும் என்பதற்காக என்பது இவரது கண்டுபிடிப்பு. இது உள்ளூற ராமனுக்கும் தெரியுமாம். ஏனென்றால், பரதனுக்கு மணிமுடி மேல் பேராசை, ஆனால் அது ராமனுக்குத் தரப்பட்டதால், இப்படிப் பாதுகை கேட்டு ஒரு பழிவாங்கல் என்பது சீர்சேந்துவின் இலக்கியத் திறனாய்வு.
//“பரதன் பாதுகையைத் தவிர வேறெதையும் கேட்கவில்லை. புத்திசாலி. ராமனிடமிருந்து பாதுகையை வாங்கிச் சென்றுவிட்டால் ராமன் இந்த இடத்தில் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாவான். ராமனின் உயிர்கூட போய்விடலாம். ஹா ஹா ஹா. இந்தப் பார்வையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” “என்ன சொல்ல? அது உண்மையாகக்கூட இருக்கலாம்! அரசியல் என்றால் அப்படித்தானே இருக்கும், சரிதானே?”//
//அரியணையைத் துறந்து வனவாசம் போவேன் என்பதில் ராமன் உறுதியாக இருந்ததற்கு தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்திருக்க வேண்டியதில்லை. நற்சிந்தனை கொண்ட அந்த இளைஞன், கைகேயியின் பேராசையையும் அரியணைமேல் பரதனுக்கிருந்த ரகசிய ஆசையையும் உள்ளூர உணர்ந்தே இந்த சிறுமையான பதவிமோகச் சண்டையிலிருந்து தூர விலகி நிற்க முடிவுசெய்தான்.//
தொடரும் இவரது பார்வை பற்றிச் சில வரிகள் இன்னும்.
//ஆனால் அது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. பிணத்தைத் தூக்கிச் சென்றவர்கள் சன்னியாசிகள்; இறந்தவரும் சன்னியாசிதான், அவரின் தலைமுதல் கால்வரை வெள்ளைத் துணியால் மூடியிருந்தது. அவரது ஆண்குறி மட்டும் ஓர் ஓட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. சன்னியாசிகள் வெட்கம் மானம் பார்ப்பதில்லை; இறந்த பிறகு சொல்லவே வேண்டாம். ஆனாலும் இறந்துபோன சன்னியாசியின் ஆணுறுப்பு ஆன்டெனாவைப் போல எதற்காக மேலே தூக்கி இருக்கிறது? அவரது இறுதி யாத்திரையின்போது இது சொல்லும் செய்திதான் என்ன?//
எத்தனை முறை படித்தும் இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்ன விதமான பார்வை இது?
தேநீரை மாட்டு மூத்திரத்தைவிட மோசமாக இருப்பது என்பது, ஹிந்தி மொழி குறித்த கருத்து போன்ற இன்னும் சில அபிப்பிராயங்களும் சீர்சேந்துவுக்கு இருக்கின்றன. ராமனைப் பற்றி வரும்போது மூளையால் சிந்திப்பதாக நினைத்துக்கொள்ளும் சீர்சேந்து, மொழி என்று வரவும் எப்படி யோசிக்கிறார் என்று பாருங்கள்.
//எனக்கு இந்தி கிட்டத்தட்டப் புரிந்துக்கொள்ளப் போதுமான அளவுக்கு வசப்பட்டிருந்தது. அது எளிமையான மொழியும்கூட. இங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தி இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற சிக்கலான விவாதத்துக்குள் நான் இறங்கவில்லை. ஆனால், வட இந்தியாவிலும் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் மக்களோடு உரையாடுவதற்கு அது ஓர் எளிய சாதனமாக இருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும். சிலருக்கு இந்தி மொழியோடு பிரச்சினை இருக்கலாம்; இருக்கவும் செய்கிறது. ஆனால் இதைப் போல விரைவாகக் கற்றுக் கொள்ளக்கூடியதும் கூலிக்காரர் முதல் பெரிய ஆளுமைகள் வரை புரிந்துகொள்ளக்கூடியதுமான வேறு இந்திய மொழி இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் இந்தியை வெறுக்கிறார்கள் என்றும் அங்கே எல்லோருக்கும் ஆங்கிலம் புரியும் என்றும் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இது உண்மையல்ல என்பது அங்கே போனபோதுதான் தெரிந்தது. கன்னியாகுமரியிலும் சரி ராமேஸ்வரத்திலும் சரி – கர்நாடகத்திலும்தான் – பேச முடியாமல்போகும் மௌனப் புயல் அபாயத்திலிருந்து என்னைக் காப்பாற்றியது இந்திதான். ஆங்கிலமல்ல. இந்திக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று என்னை விமர்சிக்கக் கூடும்; நான் அனுபவித்துத் தெரிந்துகொண்ட உண்மையை மறைப்பது அவ்வளவு உசிதமல்ல என்பது என் எண்ணம். என்னை விடுங்கள், சுவாமி விவேகானந்தரே இந்திக்குத் தேசிய மொழி அந்தஸ்தை அளித்திருக்கிறார். ‘தேசிய மொழி’ என்ற வார்த்தையில் அபாயகரமான அர்த்தங்கள் தொனிப்பதால் நான் அப்படிச் சொல்லாமல், இந்தி எளிதாக பலருக்கும் புரிவதால் இந்தியாவின் பெரும்பகுதியிலும் பேச்சுத் தொடர்புக்கு ஏற்ற மொழியாக இருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அந்த மொழி மட்டும் தெரிந்திராவிட்டால் அயோத்தி முதல் சித்திரக்கூடம் வரையிலான எனது குறும்பயணத்தில் என்னால் எதையும் புரிந்துகொண்டிருக்க முடியாது.//
இத்தனையையும் மீறி இந்தப் புத்தகம் ஒன்றைச் சாதித்திருக்கிறது. அது முக்கியமானது. எந்த ஒன்று நம்மை இணைக்கிறது என்று பாரம்பரியவாதிகள் சொல்கிறார்களோ அதை சீர்சேந்து போன்ற முற்போக்காளர்களும் ஒப்புகொள்ளும்போது, அது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கடும் முன்முடிவுடன் ராமனை அணுகும் சீர்சேந்து, அயோத்தியின் கோசங்களால் எரிச்சலடையும் சீர்சேந்து, ஒரு கட்டத்தில் ராமபக்தியில் தன்னை இழக்கிறார். ஏனென்றால் ராம பக்தி இயல்பானது. சீர்சேந்துவைப் போல அது காரணங்கள் கொண்டும் காரியங்கள் கொண்டும் உலகை அளப்பதல்ல. அது உள்ளுணர்வோடும் காலம்காலமாக நம்மோடு பயணப்பட்டுக்கொண்டிருக்கும் நம் பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்தது. காசியும் அயோத்தியும் நம் நாட்டின் இரு பக்திக் கண்கள். அங்கே உங்கள் கண்ணில் படும் மாசுகளை மீறி, அவலங்களை மீறி, ராம பக்தியும் சிவ பக்தியும் உங்களைத் தூக்கிச் செல்லும். நீங்கள் அதற்கு ஒப்புக்கொடுத்தே ஆகவேண்டும்.
அயோத்தியும் காசியும் புனித நகரங்கள். சரயுவும் கங்கையும் இருக்கும் வரை, உங்கள் அகந்தை கொண்ட கால்கள் அங்கே பட்டு அந்த நீரில் முங்கி எழும்போது, இயல்பான இந்திய பக்தி உங்களை முழுக்க நனைத்திருக்கும். இதை ஒப்புக்கொள்ள ஓர் இந்திய இதயம் வேண்டும், அவ்வளவுதான். அது சீர்சேந்துவுக்கு இருந்திருக்கிறது. இதைப் பாராட்டவேண்டும். இதனாலேயே இந்தப் புத்தகம் முக்கியமான பதிவாகவும் மாறுகிறது.
//பக்தி தொற்றுவியாதி போலிருக்கிறது. எனக்கு அன்றுவரையிலும் ராமனிடம் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை; அதிலும் குறிப்பாக, அவன் வாலியைக் கொன்றதும் சீதையை வெளியேற்றியதும், தொட்டதற்கெல்லாம் சிணுங்கியதும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், “ராமனையும் அவனது ஆராவாரக் கும்பலையும் நான் வெறுக்கிறேன்” என்று சொன்ன மைக்கேல் மதுசூதன தத்தைப் போல எனக்கு அவன்மீது அவ்வளவு வெறுப்புக் கிடையாது. வங்காளிகள் பலரைப் போல, நானும் அவன்மீது ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தேன்; ஆனால், அயோத்தியில் நான் கேட்ட லட்சக்கணக்கான பக்திப் பரவசக் குரல்கள் என்னை மாற்றிவிட்டன. எனக்குள் என்னையறியாமலேயே ராமன்மீதான மோகத்தின் விதை இடப்பட்டிருக்க வேண்டும். முரட்டு பக்தனான இந்த பில்லோடு சில மணிநேரம் கழித்ததில் அது முளை விட்டிருக்கிறது//
மொழிபெயர்ப்பு மிகக் கச்சிதம். அதைத் தனியே குறிப்பிடவேண்டும்.
புத்தகத்தை வாங்கும் லின்க் www.SwasamBooks.com
Haq – Hindi Movie
Haq (H) – ஜீவனாம்சம் கோரி தன் உரிமைக்காகப் போராடி (ஹக் என்றால் உரிமை) இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஷா பானு வழக்கை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

திரைப்படமாக அழகாக வந்திருக்கிறது. மிகப் பொறுமையாக ஆழமான வசனங்களுடன் நகரும் திரைப்படம். டோண்ட் மிஸ் வகையறா.
நம் இயக்குநர்கள் முஸ்லீம் தாஜா அரசியலுக்காக, நிஜத்தில் ஒரு பட்டியலினப் பையன் கதையை இஸ்லாமியப் பையனாக மாற்றி, நீதிமன்ற வாசலில் நமாஸ் செய்யும் அர்த்தமற்ற காட்சிகளை (சிறை) வைத்துக்கொண்டிருக்க, ஹிந்தியில் உண்மையான வரலாற்றைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
படத்துக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? நிஜத்தில் ஷா பானு தனது 62 வயதில் வழக்கைத் தொடுக்கிறார். இந்தப் படத்தில் இளம் வயதிலேயே கதாநாயகி வழக்கைத் தொடுக்கிறார். ஷா பானுவின் அப்பா ஒரு கான்ஸ்டபிள். ஆனால் கதாநாயகியின் அப்பா ஒரு மௌல்வி. இப்படிச் சில மாற்றங்கள். இவை எதுவுமே தேவையற்ற மாற்றங்களும் கூட. உண்மையில் 62 வயதுப் பெண் ஜீவனாம்சத்துக்காகப் போராடுவது இன்னும் வலுவாகவே இருந்திருக்கும்.
கதாநாயகியின் அப்பாவை மௌல்வி என்று வைத்ததன் மூலம், தேவையற்ற எதிர்ப்புக் குரல்களை இயக்குநர் சமாளித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். மௌல்வியின் மகள் என்பதால் தனக்கு குரான் மற்ற எவரையும் விட நன்றாகவே தெரியும் என்று அவர் பேசும் பல வசனங்கள் எதிர்ப்பாளர்களை வாயடைக்கும்ச் செய்துவிடும் வகையிலானவை. வசனங்கள் படு கூர்மை.
ஷா பானு தன் வீட்டிலிருந்து கணவனால் வெளியேற்றப்பட்ட பிறகு தனியாகவே வாழ்ந்தார். ஆனால் கதாநாயகி தன் கணவன் வீட்டில், அது தன் பெயரில் உள்ள வீடு என்பதால், வலுக்கட்டாயமாக அங்கே குடியேறி வாழ்கிறார். தேவையில்லாமல் கதையை வளைத்திருக்கிறார்கள் இங்கே.
கதாநாயகிக்காக வழக்காடும் வழக்கறிஞர் ஒருவரும் முஸ்லிம். படத்துக்காக வைத்திருப்பார்களோ என்று தேடிப் பார்த்தால், ஷா பானுவுக்காக வாதாடிய பல வக்கீல்கள் முஸ்லிம்களே.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பில் ஜீவனாம்சத் தொகையாக ரூ 22 / மாதம் என்று சொல்லப்படும்போது — நமக்கு அது முன்பே வரலாற்று ரீதியாகத் தெரிந்திருந்தும் கூட — அதிர்ச்சியாகவே இருக்கிறது. கடைசியில் தன் போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு படம் நிறைவடைகிறது. ஆனால் வரலாறு நிறைவடையவில்லை.
இஸ்லாமிய தாஜா அரசியலுக்காக இந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக ராஜிவ் அரசு, இந்தத் தொகையை இத்தா காலத்தில் அதாவது விவாகரத்து செய்யப்பட்ட பின்னான மூன்று மாதக் காத்திருப்புக் காலத்தில் மட்டும் கொடுத்தால் போதும் என்ற வகையில் சட்டம் இயற்றுகிறது. அதைச் சட்ட ரீதியாகச் சரியாக்க 2023 வரை (ஒரே சமயத்தில் தரப்படும் முத்தலாக் தொடர்பாக 2019 வரை) காத்திருக்க வேண்டியதாயிற்று. இவையெல்லாம் கடைசியில் திரையில் எழுத்துகளாகக் காட்டப்படுகின்றன.
செக்யூலர் முஸ்லிம்களும் முஸ்லிம் பெண்களும் இந்திய வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் தவறவிடக் கூடாத படம் — உண்மையிலிருந்து சில இடங்களில் படம் விலகிச் சென்றாலும் ஆதாரப் பிரச்சினையில் இருந்து துளி கூட விலகவில்லை என்பதற்காகவும், சென்சிடிவ் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் தேவையற்ற வகையில் யாரையும் சீண்டவில்லை என்பதற்காகவும்.
நவம்பர் 2025ல் வெளியான இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.
பின்குறிப்பு: வலதுசாரிகள் திரைப்படம் எடுக்க நினைப்பதில் தவறில்லை. நிச்சயம் அது தேவையான ஒன்று. ஆனால் தரம் இந்தப் படத்தைப் போல இருக்க வேண்டும். இந்தப் படத்துக்கான செலவு பெரிய அளவில் இருந்திருக்காது. ஆனால் தரம் அட்டகாசம். தரம் இல்லாமல் நாம் நம் கருத்துகளை எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.
Confession of a death row convict
கிட்டத்தட்ட மூன்று நாள்களில் 700 பக்கம் உள்ள தூக்கு செல்வம் எழுதிய ‘தூக்குக் கைதியின் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். இத்தனை விரிவான குற்றப் பின்னணியையும் சிறை வாழ்க்கையும் இவ்வளவு விறுவிறுப்பாகச் சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது. அதைவிட பாராட்டுக்குரியது, இதைத் தைரியமாக வெளியிட்டிருக்கும் கிழக்குப் பதிப்பகத்தின் துணிச்சல். என்னிடம் கேட்டிருந்தால் நான் ஒரு பதிப்பாளராகக் கொஞ்சம் யோசித்திருப்பேன். அத்தனை தூரம் பல பிரச்சினைக்குரிய விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒரு வாசகனாக இந்தப் புத்தகத்தை நான் படிக்கும்போது அடிக்கடி என் மனதில் நான் சொல்லிக் கொண்டது, ‘குற்றவாளி எப்போதுமே குற்றவாளிதான், தீவிரவாதி எப்போதுமே தீவிரவாதிதான், பயங்கரவாதி எப்போதுமே பயங்கரவாதிதான்; இவர்களை ரொமாண்டிசைஸ் செய்வது எந்தக் காலத்திலும் நிகழவே கூடாத ஒன்று’. இப்படிச் சொல்வதால் இந்தப் புத்தகம் ஒரு குற்றவாளியை ரொமான்டிசைஸ் செய்கிறது என்பதல்ல; அப்படி ஓர் எண்ணம் இதைப் படிப்பவர்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்தப் புத்தகத்தின் ஒரு பிரச்சினையாக நான் பார்ப்பது — ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டபோது உண்மையில் அவர்கள் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கப்படவில்லை. மாறாக அவர்கள் நீண்ட காலம் சிறையில் இருந்தார்கள் என்பதற்காகத்தான் விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் பொதுமக்கள் நோக்கில் அவர்கள் ஏதோ நிரபராதி என்பது போலக் காட்சிப்படுத்தப்பட்டார்கள். அவர்களும் பல இடங்களில் தாங்கள் நீண்ட காலம் சிறையில் இருந்ததால் மட்டுமே விடுதலை ஆனோம் என்பதைச் சொல்லாமல் தவிர்த்தார்கள். இந்தப் புத்தகத்திலும் அந்தக் குழப்பம் உள்ளது. குற்றம் செய்ததற்காகத்தான் உள்ளே சென்றோம் என்பதும், கூடவே நிரபராதிகளான தாங்கள் செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவிக்கிறோம் என்பதும் மாறி மாறி சொல்லப்பட்டிருக்கிறது. இது பெரிய குழப்பம். இப்படிச் சொல்வதற்கு ஏற்றாற் போல் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கொலை செய்ய திட்டமிடப்படுவது சொல்லப்படும் போதே, அடுத்த நாள் கொலை பற்றிய செய்திதான் சொல்லப்படுகிறது. ஒரு திரைக்கதையின் நுணுக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் வாசகன் ஏமாளி அல்ல. இது இந்தப் புத்தகத்தின் எழுத்தாளருக்கும் தெரியும். ஏனென்றால் அவரே ஒரு தேர்ந்த வாசகர்தான்.
இவற்றையும் மீறி இந்தப் புத்தகம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? இத்தனை விரிவாக இத்தனை ஆழமாகச் சிறை குறித்த விவரங்கள் தமிழில் அபூர்வம். ஒன்றிரண்டு புத்தகங்கள் சிறை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன என்றாலும், இந்த அளவுக்கு ரத்தமும் சதையுமாகச் சொல்லும் புத்தகம் குறைவு. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியா போன்று அமைந்திருக்கிறது. இனி எடுக்கப் போகும் திரைப்படங்களுக்கும் வெப் சீரிஸுகளுக்கும் இந்தப் படமே வழிகாட்டியாக இருக்கப் போகிறது. அந்த அளவுக்கு இதில் விவரணைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத பல சிறிய சிறிய சட்ட நுணுக்கங்கள் கூடத் தெளிவாக இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. அந்த அளவில் இந்தப் புத்தகம் பெரிஅ அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தப் புத்தகத்தின் இன்னொரு முக்கியத்துவம், வெளியில் இருந்து பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிந்த பல தலைவர்கள் / குற்றவாளிகள் பற்றிய இணை சித்திரத்தை உருவாக்குவது. சில சமயங்களில் நாம் ஏற்கெனவே அறிந்திருக்கும் சித்திரத்திற்கு வலுச் சேர்க்கிறது அல்லது மொத்தமாகப் புரட்டிப் போடுகிறது.
உண்மையில் சொல்லப்போனால் இவை அனைத்தையுமே கிழக்குப் பதிப்பகம் முன்பே வெளியிட்டிருக்கும் ‘அடியாள்’ (ஜோதி நரசிம்மன் எழுதியது) என்ற புத்தகம் செய்துவிட்டது. அந்தப் புத்தகத்திற்கு நான் எழுதிய நீண்ட விமர்சனத்தில் இவை அனைத்தையுமே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்திற்கும் உள்ள வேறுபாடு, அந்தப் புத்தகத்தை எழுதிய ஜோதி நரசிம்மன் 21 நாள்கள் மட்டுமே சிறையில் இருந்தார். ஆனால் தூக்குச் செல்வம் கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். ஜோதி நரசிம்மன் சிறிய அடிதடி வழக்கில் உள்ளே போனவர் என நினைக்கிறேன். ஆனால் தூக்கு செல்வம் தூக்குத் தண்டனை கைதியாக இருந்து, பின்னர் ஆயுள் கைதியாக இப்போதும் இருந்து வருகிறார். எனவே ஒரு மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
‘அடியாள்’ புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை பிரேமானந்தா பற்றிய சித்திரம். ‘அடியாள்’ புத்தகம் சொன்னதை இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவு செய்கிறது. கடைசி வரை சிறையிலேயே இருந்து செத்துப்போன பிரேமானந்தா, கைதிகளின் பார்வையில் மிகவும் நல்லவராக மீண்டும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான ஒரு கூடுதல் காரணத்தையும் தூக்கு செல்வம் இந்தப் புத்தகத்தில் வாய்மொழியாகக் கேட்டதை வைத்துப் பதிவு செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் தூக்கு செல்வம் பதிவு செய்திருப்பது அத்தனையுமே வாய்மொழியாகக் கேட்டவை. அல்லது அவர் கண்ணால் கண்டவை. எனவே அதை எந்த அளவுக்கு நாம் நம்ப வேண்டும் என்பது அவரவர் பார்வையிலும் அவரவர் நிலைப்பாட்டிலும் நிச்சயம் மாறும். ஆனாலும் இதை தூக்கு செல்வம் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியமானது. பின்னாளில் இவை மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பாகவும் மாறும் வாய்ப்புள்ளது. ஆம், பிரேமானந்தா சிறைக்குள்ளேயே ஒரு சிவன் கோயிலையும் கட்டிக் குடமுழுக்கு செய்து வைத்திருக்கிறார், இன்றும் அந்தக் கோவில் இருக்கிறது என்கிறார் செல்வம்.
பிரேமானந்தா பிராமணராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்று பிரேமானந்தாவிடம் சொல்லும் பெரியாரிஸ்ட் செல்வம் தன் கூற்றைத் தனக்குத் தெரியாமல் தானே மறுக்கிறார், ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் கூற்றின் மூலமாக. ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்தும் சங்கரராமன் குறித்தும் தூக்கு செல்வம் எழுதி இருக்கும் இரண்டு வரிகள் முக்கியமானவை. அப்புதான் அடியாள் மூலம் கொலை செய்தார் என்று தன்னிடம் வாய்ப்பேச்சில் அப்பு கூறியதாக எழுத்தில் பதிவு செய்திருக்கிறார் செல்வம்.
இந்தப் புத்தகத்தின் ஆச்சரியம் என்னவென்றால் இத்தனை தீவிரமான குற்றச்சாட்டுகளை அதாவது பெயர் சொல்லியே காவல்துறைக்காரர்கள் மீது தூக்கு செல்வம் வைக்கும் குற்றச்சாட்டை எப்படிப் புத்தகமாக்க அனுமதித்தார்கள் என்பதுதான். சிறைக் காவலர்களுக்கு தெரியாமலேயே குறிப்புகள் அனைத்தும் வெளியே கொண்டு வரப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தூக்கு செல்வம் எழுதுகிறார்.
சில இடங்களில் தூக்கு செல்வம் வரம்பு மீறி எழுதியிருக்கிறார் என்பதுதான் என் பார்வை. ஆதாரம் இல்லாத நிலையில் ஒற்றைப் பார்வையாக அதை அவர் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு என்றாலும், படிக்கும் போது நமக்கு பகீர் என்று இருக்கிறது. அதேசமயம் சிறைத் துறைக்குள்ளே எந்த அளவுக்கு ஊழலும் அராஜகங்களும் இருக்கின்றன என்பதும் நமக்குப் புதிதல்ல. இன்னும் சொல்லப்போனால் நாம் எதிர்பார்ப்பதை விட மிகவும் சீரழிந்து கிடைக்கிறது சிறைத்துறை என்பதுதான் இந்தப் புத்தகம் நமக்குச் சொல்லும் ஒரே செய்தி. இதில் நீதித்துறையையும் தூக்கு செல்வம் சேர்த்துக் கொள்கிறார். அதற்கான காரணங்களை அவர் விரிவாக அடுக்குகிறார். ஆதாரங்களையும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கிறார். ஆனால் அத்தனையையும் மீறி நான் இன்னும் நீதிமன்றத்திடம் நம்பிக்கை இழந்து விடவில்லை என்பதால் தூக்கு செல்வத்தின் கருத்துக்களை பின்ச் ஆஃப் சால்ட்டுடன்தான் எடுத்துக் கொண்டேன்.
அதே சமயம் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து செல்வம் சொல்லும் ஆதாரங்கள் அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவை. ராஜிவ் கொலை விவகாரத்தில் ஏழு பேர் விடுவிக்கப்பட்டார்கள் என்றால், அதைவிட அதிகக் காலம் சிறைத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்காதது ஏன் என்பது ஓர் உதாரணம். இது போன்று அவர் பல வழக்குகளில், ஒரே குற்றத்தன்மை உள்ள வழக்குகளில் கூட, வெவ்வேறு மாதிரியான தீர்ப்புகள் வருவதைக் கேள்வி கேட்கிறார். ஆனால் நீதி என்பது நீதிபதிகளுக்குத் தரப்படும் சாட்சியையும் பின்னணியையும் வைத்து மட்டுமே சொல்லப்படுவது. இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் மேற்கொண்டு பேச முடியும். அதே சமயம் இதைக் கூடுதலாக நாம் அழுத்தமாகச் சொல்ல முடியாததற்குக் காரணம், நீதித்துறையிலும் புரையோடி இருக்கும் ஊழல்கள்.
ஒரு வலுவான ஆதாரத்தைச் சொல்ல வேண்டும் என்றால், அஸ்ஸாமில் இருந்த சிறைக் கைதி Machang Lalung 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலேயே இருந்திருக்கிறார். 1951ல் சிறைக்குச் சென்ற அவர் 2007ல் அவரது 77 வது வயதில் வெளியே வருகிறார். நீதித்துறை அவருக்கு நடந்த அநீதியை ஏற்றுக்கொண்டு தண்டப் பணம் தந்திருக்கிறது. பென்சனும் தந்திருக்கிறது. ஆனால் அடுத்த ஒன்றரை வருடங்களில் அவர் இறந்து விடுகிறார். இந்தக் குறிப்புகளை எல்லாம் செல்வம் சொல்லாவிட்டாலும், அவர் பெயரை மட்டும்தான் சொல்கிறார் என்றாலும், செல்வம் கேட்கும் கேள்வி நியாயமானது. இந்த அநியாயமான சிறைத் தண்டனைக்கு யார் பதில் சொல்வது?
குற்றவாளிக்கு ஒரு தண்டனையை நீதிபதி கொடுத்தால் அந்தத் தண்டனைக் காலத்தை வரையறுக்க வேண்டிய கட்டாயமான ஒரு காலகட்டத்திற்குள் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மூன்று ஆயுள் தண்டனைகளைக் கொடுத்துவிட்டு ஒவ்வொரு ஆயுள் தண்டனை முடிந்த பின்பாக அடுத்த ஆயுள் தண்டனை என்று தரும் தீர்ப்பையும் கேள்வி கேட்கும் செல்வம், அதே நீதிபதியே பிற்காலத்தில் தான் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக, ஏகபோக காலத்தில் இந்த மூன்று தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லி, ‘ஒரு ஆயுள் தண்டனை முடிந்த பிறகு இன்னொரு ஆயுள் தண்டனை என்பது எப்படிச் சரியாகும்’ என்று கேள்வி எழுப்பிய முரணைச் சுட்டிக் காட்டுகிறார்.
இப்படிப் பல முரண்களைத் தனக்கு ஏற்ற வகையில் செல்வம் கடுமையாக எடுத்து வைப்பது ஆச்சரியப்படுத்துகிறது. அவரே எழுதியிருந்தால் அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். பின்னணியில் யாரேனும் உதவி இருந்தால் அவர்களையும் பாராட்ட வேண்டும். ஏனென்றால் தன் தரப்புக் கருத்துகளை இத்தனை வலுவாக வைப்பது அத்தனை எளிதானதல்ல.
இந்தப் புத்தகத்தில் தவிர்த்திருக்கப்பட வேண்டியதாக நான் நினைப்பது, மனமொத்து நடக்கும் காம விஷயங்கள். இதனால் சட்ட ரீதியாகப் பிரச்சினை மட்டும்தான் நாம் அதைப் பற்றிப் பேச வேண்டும். அப்படி இல்லாத நிலையில் அது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே அல்ல. ஆனாலும் தனது முதல் புத்தகம் மட்டுமே தனது ஒரே புத்தகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக செல்வம் நினைத்தோ என்னவோ அத்தனையையும் இதில் பதிவு செய்ய நினைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தூக்கு செல்வத்தின் பல்வேறு கருத்துகள் இன்றைய நிலையில் முற்போக்குகளாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் எழுத்தாளரின் குரலுடன் ஒத்துப் போவதைப் பார்க்கலாம். பல்வேறு அரசியல் வழக்குகளுக்காக உள்ளே வரும் எழுத்தாளர்கள் / அரசியல்வாதிகள் அத்தனை பேரும் தூக்கு செல்வத்தின் மீது தீராத தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே இரண்டு குரல்களும் ஒரே குரல் போல் ஒலிக்கின்றன. இந்த விஷயத்தில் உண்மையில் இந்துத்துவ இயக்கங்கள் தோற்றுப் போய்விட்டன என்று கூடச் சொல்லக்கூடாது, இதைப் பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், தனக்குத் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதற்கு நன்றி சொல்லும் செல்வம், அதில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி பெயரையும் சேர்த்திருக்கிறார். ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்காக, சம்பிரதாயத்திற்காக நன்றி சொல்லி இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.
சிறையில் இருக்கும் குற்றவாளிகளிடம் பரிவுகாட்ட கன்னியாஸ்திரிகள் வருவதைப் பற்றிய குறிப்பு இந்தப் புத்தகத்தில் மின்னல் போல் வந்து செல்கிறது. வேறொரு சந்தர்ப்பத்தில் நான் இது குறித்து எழுதி இருக்கிறேன். இந்துத்துவ / பக்தி இயக்கங்கள் சிறைத்துறையைக் கண்டு கொள்வதே இல்லை. ஆனால் இஸ்கான் அமைப்பு சில விஷயங்களைச் செய்ததை நான் நேரடி அனுபவத்திலிருந்து கண்டு கொண்டிருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவென்றால், சிறைத்துறைக்குள்ளே கிடைக்கும் உணவு வகைகள். வேகமாக வேகமாகப் படித்ததில் எனக்கு நினைவிருப்பவை — பன்றிக்கறி, ஆட்டுக்கறி, சாம்பார், பொரியல், உதிரிச் சோறு, கட்டுச்சோறு, பிரியாணி, ஒட்டகக் கறி, மீன் குழம்பு, கேக், காஃபி இன்னும் எத்தனையோ. இத்தனை விரிவாக எப்படி உணவு வகைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று புரியவில்லை. இது சட்டபூர்வமாக நடக்கிறதா அல்லது சட்டத்தைத் தாண்டி நடக்கிறதா அல்லது இரண்டுமேவா என்பது பற்றிய தெளிவு இந்தப் புத்தகத்தில் எனக்குக் கிடைக்கவில்லை. முதலைக் கறி உண்ட படலமும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்படுகிறது. இதைவிட அநியாயம் என்னவென்றால், இங்கே சமைத்து வீட்டுக்குக் கொடுத்து விட்டிருக்கிறார்கள். மாவீரர் தினம் கொண்டாட்டம் சிறைக்குள்ளே நடைபெற்றிருக்கிறது. சிறைத்துறைக் காவலர்கள் எந்த லட்சணத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு இந்தப் புத்தகம் வலுவான சாட்சி. இந்தப் புத்தகத்தில் செல்வம் பொய் சொல்லியிருக்கிறார் என்றும் கருத முடியாது. ஏனென்றால் அவர் அது நடந்த தினம், அங்கே இருந்த காவலர்கள் யார் என்ற பட்டியலோடுதான் சொல்கிறார்.
இத்தனை ஊழல்களிலும் என்னை அதிர வைத்தது, சிறைக்குள்ளேயே ஜாமின் தரும் போலி ஆவணத்தை உருவாக்கிய ஊழல்தான். இதைப்பற்றிக் கேள்விப்பட்டது சுத்தமாக மறந்து போய், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது புதியதாகப் படிப்பது போலத்தான் தோன்றியது. நம்பவே முடியாத அளவுக்கு ஆட்டமாக ஆடி இருக்கிறார்கள்.
வெளியே இருக்கும் சாதிச் சண்டைகளே எத்தனையோ பரவாயில்லை என்னும் அளவுக்கு உள்ளே நடக்கிறது சாதிச் சண்டை. இந்தப் புத்தகத்தை எழுதியவர் கூட சாதி இல்லை என்பதை நம்புபவராக எனக்குத் தெரியவில்லை. ஒரு பப்பாளிக்காக ஜான் பாண்டியனுடன் நடக்கும் சண்டை. சந்திரலேகாவின் முகத்தில் அமிலம் எறிந்த சுர்லா என்னும் சுடலை முத்துத் தேவர். கராத்தே செல்வினின் அறிவுரை! எல்லாம் சாதி மயம். மதமாற்றம் சாதி இல்லாமலாக்கும் என்பதை மறுக்கும் லட்சமாவது ஆவணம்.
இன்னொரு அநியாயம், சிறைக்குள்ளேயே ஆபாசப் படம் பார்த்திருக்கிறார்கள். பணம் இருந்தால் எதுவும் நடக்கும் போல. பல இடங்களில் 18+ என்று சொல்லும் அளவுக்கான ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. சிறைத் துறையின் கதை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. உண்மையைச் சொல்லப் போனால் மிகக் குறைவாகவே அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அதே சமயம் ஒரு அதிகாரியைப் பார்த்துக் காமம் கொள்ளும் இடத்தில் அந்த அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றுதான் நினைக்கிறேன். அதே போல் ஒரு நடிகையின் பெயரையும் சொல்லி இருப்பது. என்னதான் கருத்துச் சுதந்திரம் என்றாலும், என்னதான் உண்மை என்றாலும், அது இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. விடுதலைப்புலிகள் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டு, ராபர் ஃபயஸும் ஜெயக்குமாரும் முருகனுக்கு சயனைடு விஷம் வைத்துக் கொல்லப் பார்த்தார்கள் என்பதை எல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது? இதை முருகனே செல்வத்திடம் சொல்லி இருப்பதாகச் செல்வம் சொல்கிறார்.
புத்தகத்தின் தொடக்கம் முதல் பாதிப் புத்தகம் வரை கொலைகள் கொலைகள் கொலைகள்தான். திரைப்படங்களில் காண்பிப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை என்னும் அளவுக்கான தொடர் கொலைகள். மாறி மாறிப் பழி. நீதிமன்றத்திற்குள்ளே புகுந்து நீதிபதி முன்னாலேயே செய்யப்படும் கொலைகள். இதற்கு ஆயுள் தண்டனை தவறல்ல என்பதுதான் என் பார்வை. ஆனால் ஆயுள் தண்டனை பெற்ற சில குற்றவாளிகள் விடுதலையாகி வெளியே வரும்போது, அதைவிட அதிகக் காலம் தண்டனை அனுபவித்த ஒரு கைதி ஏன் வெளியே வரக்கூடாது என்பது நியாயமான கேள்விதான். இந்தப் புத்தகத்தின் அடிநாதம் இந்தக் கேள்விதான்.
தொடக்க காலத்திலேயே கைதாகாமல் இன்னும் 10-15 ஆண்டுகள் செல்வம் வெளியேவே இருந்திருப்பாரேயானால், நிச்சயமாக இந்நேரம் அமைச்சராக இருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றியது. அதற்கேற்ற அத்தனை தகுதியையும் அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஈவெராவைக் கடுமையாகத் திட்டும் அவர், ஒரு கட்டத்தில் ‘என் தலையில் பெரியார் அமர்ந்து கொண்டார்’ என்றும், இது பெரியார் மண் என்றும் சொல்லத் தொடங்கி விடுகிறார். கருணாநிதி தலைவர் என்கிறார். கருணாநிதி மேல் தீராக் காதல். கலைஞர் என்று மட்டுமே அழைக்கிறார்.
பல சிறைத்துறை மாற்றங்களைக் கொண்டு வந்த முதல்வர்களுக்கு நன்றி சொல்லும்போது, ஜெயலலிதா உட்பட அவர் அனைவருக்கும் நன்றி சொன்னாலும், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் அவர் சொல்லும் நன்றி உண்மையிலேயே ஆத்மார்த்தமாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு திமுக ஆதரவாளராக இருக்கிறார். தொடக்கக் காலத்தில் குற்றச்செயல்கள் செய்த போது எந்தக் கட்சியையும் சாராதவராகவும்தான் இருந்திருக்கிறார். அப்போதும் கருணாநிதியே தலைவர். செல்வம் சிறைக்குச் சென்றதும் அவர் ஜாமீனுக்கும் ஆயுள் தண்டனைக் குறைப்புக்கும் உதவுவது திமுக எம்எல்ஏக்கள்தான். அவர்கள் பெயரையும் வெளிப்படையாகவே அவர் குறிப்பிட்டிருக்கிறார். அரசியலையும் ரௌடியிஸத்தையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கு இந்தப் புத்தகம் ரத்த சாட்சியம்.
சில சுவாரசியமான சம்பவங்களையும் செல்வம் குறிப்பிடுகிறார். அதில் என்னை வாய்விட்டுச் சிரிக்க வைத்தது — நயன்தாரா புத்தகம். ஒரு கைதி ஆபாசக் கதை எழுதி சரோஜாதேவி புத்தகம் போல அதற்கு நயன்தாரா புத்தகம் என்று பெயர் வைத்து அதைப் படிக்க 25 சிகரெட் வசூலித்திருக்கிறார்.
இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், சிறைத்துறைக்கு நூல் வாங்கிச் செல்வது குறித்து. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை ஓர் அரங்கு அமைத்து, அங்கே புத்தகங்களை இலவசமாகத் தரலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது. அதற்குப் பெரிய ஆதரவு இருந்தது. பலர் புத்தகங்களை நன்கொடையாகத் தந்தார்கள். ஆனால் அப்படி வரும் புத்தகங்களில் பலவற்றைப் பல அதிகாரிகள் திருடிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்பதால், யாரும் இலவசமாகத் தராதீர்கள் என்கிறார் செல்வம். நாம் எங்கேயும் எதிலேயும் ஊழல் செய்வோம் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் இது. உண்மையில் ஓர் அரசு நூலகத்துக்கோ அல்லது சிறைக்கோ புத்தகங்களை இலவசமாகத் தாருங்கள் என்று கேட்கக் கூசவேண்டும். புத்தகம் வாங்க அரசிடம் இல்லாத பணமா!
கடைசியில் செல்வம் சொல்லும் சில சிறைத் திருத்தங்களைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் — அவற்றையெல்லாம் செய்தால் ஒரு கொலையோ கொள்ளையோ செய்துவிட்டு நாமே ஏன் சிறைக்குப் போகக் கூடாது என்ற எண்ணம் தோன்றி விடும்! அவர் சொல்லும் சில சீர்திருத்தங்கள் முக்கியமானவைதான் என்றாலும், ஒட்டுமொத்தமான சீர்திருத்தங்கள் சிறைக் கைதிகளுக்கான மனிதாபிமான அடிப்படையிலான பரிந்துரைகள் என்பதைத் தாண்டி, கிட்டத்தட்ட வெளியே இருப்பதைப் போன்ற சொகுசு உலகம் உள்ளேயும் வேண்டும் என்று ஆசைப்படுவதாகத்தான் தோன்றுகிறது. அதை பரிசீலிப்பது கூடத் தேவையில்லை தேவையற்றது என்பதே என் நிலை. அதேபோல் தூக்குத் தண்டனையே இருக்கக் கூடாது, ஒரு மனிதன் செய்த கொலைக்கு பதிலாக நீதிமன்றம் இன்னொரு கொலை செய்யக் கூடாது என்பதெல்லாம் ஏற்கவே முடியாதவை. அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் தூக்கு தரப்படுகிறது. நிர்பயா வழக்கில் கொலைகாரர்களின் பக்கத்தையும் (நியாயப்படுத்தி அல்ல) செல்வம் போன்றவர்கள் பேசினாலும், அதை ஏற்கவே முடியாது.
இந்தப் புத்தகத்தின் அறிவிப்பு வந்தபோது இந்தப் புத்தகம்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியின் பெஸ்ட் செல்லராக இருக்கப் போகிறது என்று நினைத்தேன். ஆனால் மிகப் பெரிய புத்தகம் என்பதால், அதனால் 800 ரூபாய் விலை என்பதால் அது நடக்காது என்றும் தோன்றியது. ஒருவேளை இந்தப் புத்தகம் சிறிய புத்தகமாக 250 ரூபாய் என்றளவில் வந்திருந்தால், இந்தப் புத்தகக் கண்காட்சியில் மட்டும் ஆயிரம் பிரதிகள் நிச்சயம் விற்றிருக்கும். ஏனென்றால் வன்முறையின் பக்கங்களைச் சொல்லும் நேரடிப் பதிவுகளுக்கு என்றைக்குமே ஓர் ஈர்ப்பு உண்டு. அது இந்தப் புத்தகத்தில் பக்கத்திற்குப் பக்கம் வார்த்தைக்கு வார்த்தை கொட்டிக் கிடக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் நாம் செய்ய வேண்டியது எல்லாம், நாம் படிப்பது ஒரு வாக்குமூலத்தைத்தானே அன்றி, ஒரு பொய்யின் மறுபக்கத்தை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனென்றால், கஸாப், அஃப்ஸல் போன்றவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பான நிமிடங்களைப் படித்துக் கண்ணீருடன் நின்ற சமூகம் நம் சமூகம். அவர்கள் பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் நாம் கண்ணீர் விடுவதற்கான காரணம், நாம் பயங்கரவாதிகள் அல்ல, நல்லவர்கள் என்பதுதான். ஒரு புத்தகமோ ஒரு திரைப்படமோ அதைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டியது நம் பொறுப்பு.
I strongly recommend this book. அடுத்த 3 நாள்களுக்கு மட்டும் சுவாசம் புக்ஸ் வலைத்தளத்தில் இந்தப் புத்தகம் 15% தள்ளுபடியில் கிடைக்கும். லின்க் https://www.swasambooks.com/
Kalamkaval review
களம்காவல் (M) – பார்க்கும்போது போரடிக்காமல் செல்கிறது என்பது பிளஸ். மம்மூட்டியின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. ஆனாலும் என்னவோ முழுமையாக அதை உள்வாங்க முடியாத அளவுக்கு ஒரு இடறல் படம் முழுக்க இருக்கிறது. திரைக்கதையாகப் பார்த்தால் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மம்மூட்டியா இப்படி என்கிற பரபரப்பு, முதல் 10 நிமிடங்களில் குறையத் தொடங்கியதும் திரைக்கதை பக்கம் நம் கவனம் செல்லும் போது, என்னடா இது என்ற எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஒரு 50 வயது பெண்ணுக்கு 20 திருமணங்கள் நடந்த செய்தி நமக்குத் தெரியும். நம் ஊரில் ஆண்களுக்கான ‘இந்த’ poverty செய்தி நமக்குப் புதியதல்ல. ஆனால் ஒரு 50 வயது ஆணுக்கு இத்தனை பெண்கள் அதுவும் குழந்தை குட்டியுடன் உள்ள பெண்கள் ஏன் விழுந்தார்கள் என்பதற்கான காரணம் எதுவுமே வலுவாக இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆனாலும் முதல் 10 நிமிடமும் கடைசி அரை மணி நேரமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன. மிகப்பெரிய ஆறுதல் கொலைக்கு ஒரு மோட்டிவ் காண்பிக்கிறேன் என்று எதையாவது காண்பிக்காமல் இது இப்படித்தான் என்று முதலிலேயே நமக்குச் சொல்லி விடுவது. நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நடக்கும் திரைப்படம் என்பதால் பின்னணியில் தமிழ்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் வந்த நேரடித் தமிழ் பாடல்களைப் பயன்படுத்தாமல் இவர்களே தமிழ்ப்பாடல் போன்ற சிலவற்றை உருவாக்கிப் படம் முழுக்கப் பல இடங்களில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். மலையாளிகளே எழுதும் தமிழ்ப் பாடல் எப்படி இருக்கும்? ஆம், இதிலும் நாராசமாகத்தான் இருக்கிறது.
Sirai – Islamic appeasement movie
சிறை என்ற கொடுமையைப் பார்த்தேன். என்னடா அனைத்து ‘முற்போக்கு’களும் இப்படி டான்ஸ் ஆடுகிறார்களே என்று பார்த்தால், அது ஏன் என்பதற்கு இன்றுதான் பதில் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் ஒரு தமிழ்ப்படம், வாரே வாஹ், என்னை தமிழ் இயக்குநர்கள் ஏமாற்றுவதே இல்லை.
அதே இஸ்லாமிய தாஜா ஜல்லி. உண்மையில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் எந்த அச்சத்திலும் இல்லை. இருக்கவேண்டிய தேவையும் இல்லை. (பிராமணர்கள் பயந்து வாழ்கிறார்கள் என்பதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு மதமாகவோ இனமாகவோ சாதியாகவோ அஞ்சி வாழவேண்டிய நிலையில் யாரும் எப்போதும் இருந்ததில்லை என்பதைச் சொல்வதற்காகத்தான். அவ்வப்போது எழும் பிரச்சினைகள் எல்லாம் எல்லாருக்குமே பொதுவானவை. ஒரு சாதி அல்லது மதம் மேல் இருக்கும் வெறுப்பு என்பது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்கள் அஞ்சி வாழ வேண்டிய அளவுக்கு இன்னும் போகவில்லை.) ஆனால் இந்தப் படம் இல்லாத ஒன்றை இருப்பது போல இட்டுக்கட்டிச் சொல்கிறது.
படம் முழுக்க புல்லரிப்புதான். ஒரே ஒரு இஸ்லாமியப் பையன், அன்பே உருவான பையன், அவன் விலகிப் போனாலும் காதலிக்கும் இந்துப் பெண். என்ன ஒரு டெம்ப்ளேட்! தெரியாமல் அவன் அந்தப் பெண்ணின் அப்பனைக் கொன்றுவிட, உண்மை தெரிந்து அவனையே உருகி உருகிக் காதலிக்கும் பெண்… இன்னொரு காட்சியை மறந்துவிட்டேனே… அந்த நீதிபதி மன்னிப்புக் கேட்கும் காட்சி… இதைச் சொல்வதா அல்லது நானும் முஸ்லிம்தான் என்று போலிஸ் சொல்வதைச் சொல்வதா… எத்தனை எத்தனை காட்சிகள். அதிலும் கோர்ட்டுக்கு முன்னால் அவன் நமாஸ் செய்யும் காட்சியில் நானே வாயடைத்துப் போய்விட்டேன். இயக்குநர் எங்கோ சென்றுவிடுவார் என்பது உறுதி.
ஈழத் தமிழர்களுக்காக முதலில் உயிர் இழந்தவர் என்று ஒரு இஸ்லாமியப் பெயரைச் சொல்லும் காட்சி உண்டு. அதற்குப் பிறகு அதே ஈழத்தில் அந்த இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து இந்தத் திரைப்படம் மூச்சே விடவில்லை.
இந்தப் படத்தின் ஹீரோவாக வரும் விக்ரம் பிரபுவின் கதாபத்திரம் அற்புதம். இத்தனை கிறுக்கான போலிஸை தமிழில் இதுவரை எந்தப் படமும் இத்தனை மெச்சூர்டாகக் காட்டியதில்லை. பைத்தியக்காரத்தனமான மெச்சூரிட்டியின் உச்சம் இந்தக் கதாபத்திரம்தான்.
தவறவே விடக் கூடாத படம். பார்த்துக் கண்ணீர்விட்டுத் தொலையுங்கள்.
Director has said this – https://www.facebook.com/share/p/1CBpXTPy7M

Tamil pen puli
பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் புத்தகம் படித்தபோதே அதில் பல இடங்களில் தமிழ்ப் பெண் பு₹லி என்ற புத்தகம் மேற்கோள் கட்டப்பட்டிருந்தது. அப்போதே அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். புத்தகக் கண்காட்சியில் அந்தப் புத்தகம் தற்செயலாகக் கண்ணில் படவும் முதலில் அதைஒ படிக்க நினைத்து வாங்கினேன். படித்து முடித்தும் விட்டேன்.

முக்கியமான புத்தகம்தான். நிரோமி பெண் பு₹லியாகச் சேர்வதற்கு முன்பே அவருக்குப் பு₹லிகள் குறித்த சந்தேகம் இருந்திருக்கிறது. அவர்கள் ஏன் டெ₹லோ போன்ற சக போராட்டக்காரர்களை இப்படிச் சாகடிக்கிறார்கள் என்பது குறித்து அதிருப்தி அது. ஆனாலும் அவர் பு₹லிப் பிரிவில் சேர்கிறார். அதற்குப் பின்பு அங்கு நடந்தவற்றையெல்லாம் அவர் விரிவாகப் பதிவு செய்கிறார். அதில் நமக்குத் தேவையான பல தகவல்கள் கிடைக்கின்றன.
சந்தேகப்படுபவர்கள் எல்லாம் ஆதாரம் இல்லாவிட்டால் கூட, துரோகி என்று முத்திரை குத்திப் பு₹லி₹கள் கொன்றிருக்கிறார்கள். அடித்து துவம்சம் செய்து பின்னர் அவர் குற்றவாளி இல்லை என்ற பிறகு சில சமயம் விடுவித்தும் இருக்கிறார்கள். குறிப்பாக இந்தப் புத்தகத்தின் 181ம் பக்கம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது.
பு₹லிகள் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல், தப்பிக்க வேண்டும் என்றால் யார் வீட்டுக்குள்ளாவது சென்று புகுந்து கொள்வார்கள். அங்கேயே தங்குவார்கள். உணவருந்தி உறங்கிவிட்டு ஒரு நாளோ ஒரு வாரமோ கழித்துப் பின்னர்தான் போவார்கள். பல வீடுகள் காலியாகக் கிடந்ததால் அங்கேயே பல நாள்கள் தங்குவார்கள். பக்கத்தில் இருக்கும் கடைகளில் திருடி உணவு உட்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பலவற்றை இந்தப் புத்தகத்தில் போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார் நிரோமி.
உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்ட திலீபன் பற்றிய மிக விரிவான சித்திரம் இந்தப் புத்தகத்தில் இணையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (இந்த மரணம் குறித்த இன்னொரு பார்வை, பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் நூலில் அதிர்ச்சிகரமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.)
சிறிய வயதில் புலிகள் இயக்கத்தில் சேரும் பெண்களுக்குரிய பல பிரச்சினைகள் இந்தப் புத்தகத்தில் அழகாக வெளிப்படுகின்றன. அழகான ஆண் பையன்களை பார்ப்பது, சைட் அடிப்பது, காதலிப்பது என்று வாழ்ந்திருக்க வேண்டிய வயதில் இவர்கள் துப்பாக்கியுடன் உயிருக்காக ஓடுகிறார்கள். ஆனாலும் அந்த உணர்வுகள் இந்தப் பெண்களை விட்டுப் போய் விடுவதில்லை அழகான பையன்கள் வரும் இடத்துக்குக் காவலுக்குப் போகச் சந்தோஷப்படுகிறார்கள். கூடவே பேன் பிரச்சினைகள், மாதவிடாய்ப் பிரச்சினைகள் குறித்தவையும் உண்டு.
உயிருக்கும் மரணத்துக்கும் இடையே போராடும் போதும் அவர்களுடைய நகைச்சுவை உணர்வு குறையவே இல்லை. குறிப்பாக, சு சு சுடு என்று திக்கிக்கொண்டே தலைவர் ஒருவர் சொல்வதற்குள் நம்மைக் கொன்று போட்டு விடுவார்கள் என்று பேசிக் கொள்வது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் இந்தப் புத்தகம் கச்சிதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றாலும், கூடவே ஒரு குறையும் உண்டு பல வரிகளை மொழிபெயர்க்காமல் அதன் சாரத்தை மட்டும் ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்கள். இதனால் பல இடங்களில் தொடர்பறுந்து புத்தகம் வேகமாக ஓடுவது போன்ற பிரமை ஏற்படுகிறது. சில இடங்களில் ஏன் சில வரிகளை மொழிபெயர்க்காமல் விட்டார்கள் என்பதே புரியவில்லை. இதை இன்னும் கொஞ்சம் சீரியஸாகக் கவனித்திருக்கலாம். ஆங்கிலப் புத்தகத்தில் பின்னணைப்பாக உள்ள படங்களைக் கூட தமிழ்ப் புத்தகத்தில் சேர்க்காமல் விட்டிருக்கிறார்கள். அதேசமயம், ஆங்கிலத்தை ஒப்பிடாமல் படித்தால் தமிழில் படிக்கக் கச்சிதமாகத்தான் இருக்கிறது.
புத்தகத்தின் கடைசி வரியாக இன்றைய ஸ்ரீ லங்காவின் நிலையைத் தமிழில் சேர்த்திருக்கிறார்கள் ஆனால் அது ஆங்கிலத்தில் இல்லை. ஒருவேளை நிரோமியின் ஒப்புதலின் பேரில் கூட இதைச் சேர்த்திருக்கக்கூடும்.
கேள்வி கேட்காதே – தலைவனை நம்பு – ஒரே ஒரு இயக்கம் இருந்தால்தான் தமிழீழம் சாத்தியம் – இவை அனைத்து பு₹லிகளுக்கும் போதிக்கப்படுகின்றன. அவர்களும் கேள்வியே இன்று அதை நம்புகிறார்கள். எத்தனை பேர் இறந்தாலும் அடுத்தடுத்துப் பு#லிகள் அந்தக் காலகட்டத்தில் வந்து கொண்டேதான் இருந்திருக்கிறார்கள். ஆனால் காலமாற்றும் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விட்டது. எது யதார்த்தம் என்பதை நிரோமியின் புத்தகத்தில் அவர் வார்த்தைகளிலேயே நாம் தெளிவாகக் காணலாம். வன்முறைக்கு எதிராக இன்னொரு வன்முறையில் சேர்ந்து விட்டு, இப்போது வருத்தப்பட்டு எந்தப் பயனும் கிடையாது என்று நிரோமி தெளிவாக விளக்கமாக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் புத்தகம் முக்கியமான ஆவணம்தான்.
நிரோமிக்கும் ரோஷனுக்குமான காதல் அத்தியாயங்கள் அட்டகாசம். கிட்டத்தட்ட ஒரு நாவலைப் போல இருக்கின்றன. ஆங்கிலத்தில் முதலில் வெளிவந்ததாலோ என்னவோ மிக கச்சிதமாக எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அதுவே இந்த நூலின் மிகப்பெரிய பலம். அப்படியே எந்தவித மாற்றமும் இன்றி அழகான திரைக்கதையாக மாற்றி ஒரு திரைப்படமாக எடுத்தால் சந்தேகமே இன்றி பிளாக்பஸ்டராக அந்தப் படம் அமையும்.
நிரோமி இப்படிப் பு₹லிகளைக் குற்றம் சாட்டுவதால் பு₹லிகள் ஆதரவாளர்களின் பார்வையில் நிரோமி கூட ஒரு துரோகியாக இருக்கக்கூடும். எனக்கு அது பற்றித் தெரியவில்லை. ஆனால் இந்திய அமைதிப்படையைப் பற்றியும் சில வரிகளில் அவர் குறிப்பிட்டிருக்கிறார் என்ன பிரச்சினை என்றால், பு₹லிகள் மற்றும் இந்திய அமைதிப்படை குறித்த அவரது பார்வை இரண்டையும் நாம் ஏற்க வேண்டும் அல்லது இரண்டையும் நிராகரிக்க வேண்டும் என்பதுதான்.
சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்ற புத்தகம் ஏன் முக்கியமானது என்பதற்கான சில ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் ‘பி#ர#பா%கர%ன் எழுச்சி வீழ்ச்சியும்’ தமிழில் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நூல். பல புத்தகங்கள் பு₹லிகள் இயக்கத்தைப் பாராட்டியும் அங்கங்கே விமர்சித்தும் வரும்வேளையில், முற்றிலுமாக இந்தியப் பார்வையில் எழுதப்பட்டிருக்கும் பி#ர#பா%கர%ன் எழுச்சியும் வீழ்ச்சியும் நூல், பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதைப் பற்றிப் பின்னர் இன்னொரு பதிவில்.
தமிழ்ப் பெண் பு#லிகள், நிரோமி டி சோய்ஸா, தமிழில் சிவகாசி பிரகாசம், உமா மகேஸ் டாட் காம், 200 ரூ
Pathimoonaavathu maiyavaadi

தமிழில் கிறித்துவத்தை இப்படி வெளிப்படையாக விமர்சிக்கும் நாவல்கள் குறைவு, இது அவற்றில் உச்சமாக இருக்கும் என நினைக்கிறேன். பங்குத் தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் புரட்டு செய்வதாகவோ அல்லது அவர்கள் நிஜமாகவே செய்யும் அனைத்து விதமான புரட்டுகளுமோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
ஒரு சிறுவன் வயதுக்கு வரும் நாவல் என்று இதைக் கொண்டாலும், அதைப் பின்னணியாக மட்டுமே பார்க்கவேண்டி இருக்கிறது. மணிரத்னம் தன் படங்களில் பெரிய பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் தர்மன் வயதுக்கு வரும் ஒரு விடலையின் பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதைவிட பெரிய களத்தை நாவலில் சொல்லி இருக்கிறார். கன்னியாஸ்திரிகளுடன் உறவு, பெண்களுடன் உறவு, ஏமாற்று என பாதர்களை தேவைக்கும் அதிகமாகவே சோதித்துவிட்டார் தருமன். சில இடங்களில் இவை அத்துமீறுகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். குறிப்பாக, எந்த எந்தக் காயை வாங்குவார்கள் என்பதும், ஆணி அடிக்கவேண்டும் என்று கொச்சையாகப் பேசுவதும். இவை ரசக்குறைவு. தவித்திருக்கலாம்.
நாவலின் குறைகள் என்று பார்த்தால் பலவற்றைச் சொல்லலாம். முதல் குறை, அனைத்துப் பெண்களும் கருத்தமுத்துவைப் பார்த்த உடனே படுக்கைக்கு அழைப்பது. இத்தனைக்கு அவன் சிறிய பையன். கொடுமை. இதிலும் மிக மோசமான பாத்திரப் படைப்பு ஜெஸ்ஸி. தன் தாயை அவள் எதற்காக வெறுக்கிறாளோ அதையே அவளும் செய்கிறாள். பின்னராவது அதைப் புரிந்துகொண்டு அவள் தாயை ஏற்றுக்கொண்டிருப்பது போல் சித்தரித்திருக்க இருக்கவேண்டும். அப்படிச் செய்யாததால், ஜெஸ்ஸி கதாபாத்திரம் மிக மோசமான பாத்திரமாகத் தேங்கிவிட்டது. அதிலும் திருமணத்துக்குப் பிறகும் கருத்தமுத்துவுடன் உறவு, குழந்தை பிறந்தபிறகும் முத்தம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம். பிற குறைகள் — பல கதாபத்திரங்கள் அப்படி அப்படியே தேங்கி நிற்பது, நாவல் திடீர் திடீரென அறுந்து எங்கெல்லாமோ போவது, கடைசிச் சில பக்கங்கள் வேகமாகச் செல்வது, மீண்டும் மீண்டும் ஒரே போன்ற பாலியல் பிறழ்வுகளே கதைகளாக வருவது.
நிறுவனமயப்படுத்தப்பட்ட கிறித்துவத்துக்குள் இருக்கும் ஊழலை முன்வைப்பதே நாவலின் நோக்கம் என்றாலும், கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற தொண்டையும் இந்த நாவல் சொல்கிறது. குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கான மருத்துவம் குறித்த பக்கங்கள்.
மையவாடியைச் சுற்றி வரும் அத்தியாயங்கள் எல்லாமே அருமை. இந்த ஒன்றில் மட்டுமே தொடக்கம், மையம், முடிவு எல்லாமே ஒரே சீராக வெளிப்பட்டிருக்கிறது.
இறுதியில் வரும் கம்யூனிஸ்ட் ஒருவனின் சிந்தனை, இன்றைய ஹிந்துத்துவச் சிந்தனை போலத் தோன்றியது எனக்கு.
இத்தனையிலும் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மிக எளிதாக கருத்தமுத்துவை ஹிந்துச் சிந்தனை கொண்டவனாகக் காட்டி இருக்கும் வாய்ப்பு இருந்தும், முற்போக்காகக் காட்டி இருக்கிறார் தர்மன். எனவே அவரது நோக்கம் ஹிந்து எதிர் கிறித்துவம் என்று நிற்பதல்ல, மாறாக, அவரை உறுத்திய கிறித்துவ மடங்களுக்குள் நிலவும் பாரபட்சங்களை முன்வைப்பதே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தைரியமான நாவல்தான். இது உருவாக்கும் வித்தியாசமான உலகுக்காக நாவலை நிச்சயம் வாசிக்கலாம்.
புத்தகத்தை வாங்க https://www.swasambooks.com/


