Vyasaraja Mutt Controversy

மத்வ மடங்களில் ஒன்றான சோசலே வியாசராஜ மடம் (Sosale Vyasaraja Mutt), கடந்த சில ஆண்டுகளாக வாரிசுரிமைப் போராட்டங்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதாவது அடுத்த பீடாதிபதி யார் என்பது குறித்த சிக்கல்.

2010 வாக்கில் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2012-ல் கர்நாடக அரசு மடத்தின் சொத்துக்களைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அதை நிர்வகிக்க ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது. 2017 ஜூன் மாதத்தில் ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் தனது பதவியை விட்டு விலகினார்.

மடத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், மடத்தின் பாரம்பரியத்தைக் காக்கவும் ஒரு சட்டப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி,  ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர்  (பூர்வாசிரமப் பெயர்: டி. பிரகல்லாதாச்சார்) உடனடியாகப் புதிய பீடாதிபதியாக வேண்டும், அதே வேளையில் ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தர் (பூர்வாஸ்ரம பெயர்: புஷ்கராச்சார்) என்பவரை மடத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ இளைய பீடாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று முடிவானது.

ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தருடன் சேர்ந்து புதிய பீடாதிபதி வித்யாஸ்ரீஷ தீர்த்தர் சில நாட்களுக்கு மடத்தின் மூல விக்கிரகங்களைத் தொட்டு இணைந்தே பூஜைகளைச் செய்தார். பீடாதிபதிகளைத் தவிர வேறு யாருக்கும் இந்த மூல விக்ரகங்களைத் தொட உரிமையில்லை. மத்வத்தில் மூல விக்ரகங்கள் மிக முக்கியமானவை. ஆனால், சில நாட்களிலேயே எந்தவொரு காரணமும் கூறாமல், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரை மடத்தை விட்டு வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தரப்பு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது. (இதுகுறித்துப் பல குமுறல்கள் ரீல்ஸ்களாகவும் யூ டியூபிலும் கிடைக்கின்றன.)

தற்போது பிரச்சினை என்னவென்றால், ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தனது பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரனான பிரணவ் (பெயர் சரியா எனத் தெரியவில்லை) என்பவரை அடுத்த மடாதிபதியாகக் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பதுதான். தனது பேரனை மூல விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்ய அனுமதித்தது அடுத்த பிரச்சினை.

பொதுவாக பேரனை அடுத்த பீடாதிபதியாக மத்வ மடங்களில் நியமிப்பதில்லை என்றாலும், கடந்த காலங்களில் இப்படி நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரைத்தான் அடுத்த பீடாதிபதியாக்க வேண்டும் என்று எழுத்துபூர்வமான சட்டப்பூர்வ ஒப்பந்தம் இருக்கும்போது, அதை மீறித் தன் பேரனைக் கொண்டுவர தற்போதைய பீடாதிபதி முயல்வது பிரச்சினையாகியுள்ளது.

நான் ஏதோ ஒரு ரீல்ஸைப் பார்க்கப் போக, கடந்த இரண்டு மூன்று நாள்களாக இந்தப் பிரச்சினையை ஒட்டிய ரீல்கள் வந்து குவிகின்றன. என்னடா பிரச்சினை என்று தோண்டித் துருவிப் பார்த்ததில், சாட் ஜிபிடி, ஜெமினை உதவியுடனும், சில யூ டியூப் சர்ச்சைகளைக் கேட்டும் சிலரிடம் பேசியும் நான் புரிந்துகொண்டவை இவை.

தற்போதைய பிரச்சினைக்குரிய ஸ்ரீவித்யாஸ்ரீஷ தீர்த்தர் பெரிய அறிவாளி. ஸ்காலர். பல இடங்களிலும் வியாசராஜ மடத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி விரிவாக்கியவர். இதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இவரது பிரச்சினைக்குரிய செயல்பாட்டை, நிர்வாகப் பிரச்சினைகளை, குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அடுத்த பீடாதிபதி பதவியைத் தர முயல்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

Share

Madhva Mutts and We

மத்வ மடங்களுக்கும் யதார்த்த மாத்வர்களுக்குமான உறவு பற்றி நான் முன்பே சொல்லி இருக்கிறேன். உண்மையில் எனக்கு மடம் என்பது முதலில் அறிமுகமானது, ஸ்ரீ ராகவேந்திர ஆராதனைக்கு உணவு உண்ணப் போகும்போதுதான். அதை தீர்த்தப் பிரசாதம் என்றழைப்பார்கள் என்பதே அதிலிருந்து 30 வருடங்கள் கழித்துத்தான் எனக்குத் தெரிந்தது. மதுரையில் பேச்சியம்மன் படித்துறையில் இருக்கும் ஸ்ரீ ராகவேந்திர மடத்தில் ஆராதனைக்குப் போனதுதான் முதல்முறை. அங்கே உண்டுவிட்டு, அழகரடியில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு அந்த வெயிலில் நடந்துவரவேண்டும். பஸ் வசதியும் கிடையாது, பஸ்ஸுக்கும் வசதி கிடையாது. அதனாலேயே மடத்தில் சென்று சாப்பிடுவது குறித்து அச்சம் வரும். சிலசமயம் யார் வீட்டிலாவது தங்கிவிட்டு மாலை போல நடந்து வருவோம். ஒரே ஒரு முறை மட்டும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பரமேஸ்வரி தியேட்ட்டரில் மைக்கேல் மதன காமராஜன் படத்துக்குப் போனது நினைவிருக்கிறது. (நான் 2ம் முறையாகப் பார்த்தேன்!) என் நினைவு தெரிந்து என் அப்பா அம்மா அக்கா அண்ணனுடன் பார்த்த வெகு சில படங்களில் இதுவும் ஒன்று. (இது ஒன்றுதானோ என்னவோ!)

ஸ்ரீ ராகவேந்திரர் என்பவர் குரு, குருவும் தெய்வம் மத்வ சித்தாந்ததின்படி ஒன்றல்ல என்பதே பின்னர்தான் புரிந்தது. இன்றுவரை பெரும்பாலான மாத்வ இளைஞர்கள் இந்த வேறுபாட்டைக் கூட அறிந்திருப்பார்களா என்பது சந்தேகமே — அன்றைய எங்களைப் போல. நீத்தார்களைக் கடவுளாகவே கும்பிடுவதும் இதனுள் அடக்கம். (எது தவறு எது சரி என்று நான் பேசவில்லை. அது அவரவர்கள் நிலைப்பாடு.)

பின்பு மடம் என்பது முகத்திலறைந்தாற்போல் அறிமுகமானது, இந்த மடம் இல்லை என்றால் ஒன்றுமே செய்ய முடியாது என்றளவுக்கு வாழ்க்கைக்குள் நுழைந்தது, எங்கள் குடும்பத்துப் பெரியவர்கள் ஒவ்வொருவராக வைகுண்டப் பிராப்தி அடைந்தபோது. தாத்தாவின் மறைவுக்கான சாங்கியங்களை வீட்டிலேயே செய்தோம். பின்னர் வீட்டில் முடியவில்லை. மடங்களே கதி என்றானது.

இவற்றுக்குப் பின்னர்தான் மடங்களில் இருக்கும் வேறுபாடுகள், நாம் எந்த மடம் என்பதெல்லாம் அறிமுகமானது. இவை நடந்தது எங்கள் தலைமுறைகளின் திருமணங்களின் போதும், மூத்தோர்கள் வீட்டு பூஜைகளின் போது எங்களை வழி நடத்தியபோதும்.

மாயப் பெரு நதி நாவல் எழுதியபோது இந்த மடங்கள் குறித்த வேறு வகைப் புரிதல் ஏற்பட்டது. சுவாசம் வெளியிட்ட மத்வாசாரியார் புத்தகத்தை எடிட் செய்தபோது, முதல் பதிப்பில் இருந்த சில போதாமைகளை, தவறுகளை மத்வ சித்தாந்தத்தில் கரை கண்டவர்கள் சொன்னபோதும் அடுத்த வகைப் புரிதல் ஏற்பட்டது.

இதன் அடுத்த கட்டம், இப்போதைய ரீல்கள். நான் பெரும்பாலும் மலையாளம் மற்றும் கன்னட ரீல்களைத்தான் பார்க்கிறேன். மலையாளம் 50%, கன்னடம் 30%, தமிழ் 20% என வைத்துக் கொள்ளலாம். இவற்றில் மத்வ மடங்களைச் சேர்ந்த பல ரீல்கள் வரத் தொடங்கியதில் இன்னும் கொஞ்சம் புரிதல் ஏற்பட்டது. எந்த அளவுக்கு என்றால், எங்கள் மடமான வியாசராஜ மடத்தில் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் நேற்றுத்தான் தெரிந்துகொண்டேன் — இந்த ரீல்ஸ்களின் மூலமாக! ஏழு வருடங்களாக இருக்கும் இந்தப் பிரச்சினை பற்றி நேற்று முன்தினம் வரை எனக்கு ஆ ஆ கூடத் தெரியாது.

மேலே சொன்ன அத்தனைக்கும் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தால், நாங்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பதே உண்மை என்பதால்தான். எனக்குத் தெரிந்து எங்கள் முன்னோர்களில் யாரும் கர்நாடகா பக்கம் கூடச் சென்றதில்லை. தாத்தாவின் அப்பாவுக்கு சொந்த ஊர் கல்லிடைக்குறிச்சி! இப்படி ஒரு சமூகம், அதாவது தமிழ்நாட்டிலேயே தலைமுறை தலைமுறையாக இருந்துகொண்டு, ஆனால் வீட்டில் கன்னடம் பேசும், கன்னடம் எழுதப் படிக்கத் தெரியாத, ஆனால் சராசரித் தமிழர்களைப் போல/விட நன்றாகத் தமிழ் பேசும் ஒரு சமூகம் இருந்துகொண்டிருக்கிறது. (தெலுங்கிலும் கூட இதே கதை.) இதனால்தான் கர்நாடகாவில் நடப்பது பற்றியெல்லாம் இங்கே தெரிந்துகொள்வதே இல்லை. அவசியமும் இல்லை.

ரீல்ஸ் அதை உடைக்கிறது. ஒப்பீட்டளவில் சென்னை மாத்வர்கள் கூடுதலாக மடம் மற்றும் மத்வ சித்தாந்தம் சார்ந்தவற்றில் ஆழமான பிடிப்புடனும் அறிவுடனும் இருக்கிறார்கள். சென்னையைத் தாண்டிவிட்டால் மற்றவர்கள் அந்த அந்த ஊர்த் தமிழர்களைப் போலத்தான்!

ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் — அடுத்த பதிவுக்காக.

தேவையற்ற வம்புகளைக் குறைக்கவும், பதில் சொல்லும் பொறுமையும் ஞானமும் இல்லை என்பதாலும், முக்கியமான மத – அரசியல் பதிவுகளில் கமெண்ட் செய்யும் ஆப்ஷன் இருக்காது.

Share

Karakkam and Mollywood Times

Karakkam (M) – என்ன எழவு படம் இது? இதெல்லாம் பேய்ப்படம்னு சொன்னா பேயே காறித் துப்பும். சேட்டன்ஸ் ஆன் கொலைவெறி மோட். அது தெரியாமல் நான் சிக்கிச் சின்னாபின்னமாகிப் போய்விட்டேன்.

Mollywood Times (M) – நஸ்லேன் கஃபூர் நடித்திருக்கிறார் என்பதற்காகப் பார்த்தேன். ஏமாற்றவில்லை. எல்லோருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகம்தான். பலருக்கும் பல குழப்பங்கள் இந்தப் படத்தின் கதையில் நிச்சயம் வந்தே தீரும். ஆனால் இரண்டு விஷயங்களுக்காக நிச்சயம் பார்க்கலாம். ஒன்று திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், திரைத்துறை பற்றிய பரீட்சயம் உள்ளவர்கள் தவற விடக் கூடாத திரைப்படம். இரண்டாவது நஸ்லேன் ஃகபூர் பிடிக்கும் என்பவர்கள் தவறவிடக் கூடாத திரைப்படம். இந்தச் சிறிய வயதில் என்ன ஒரு மெச்சூரிட்டியான நடிப்பு!

திரைத்துறை சார்ந்த நம்பிக்கை, அந்த நம்பிக்கை தகர்ந்து போவது, மதிப்பீடுகள் மாறிப் போவது, மீண்டும் நம்பிக்கை கொண்டு எழுவது, தொடர்ந்து மீண்டும் மீண்டும் முதுகில் குத்தும் நயவஞ்சகர்கள், தானே செய்யப் போகும் ஏமாற்று வேலை & நயவஞ்சகம் என அனைத்தையும் இப்படி ஒரு திரைப்படம் கலந்து கொடுத்து நான் பார்த்ததே இல்லை. மேக்கிங் சில இடங்களில் சுமார்தான் என்றாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிகிறது.

என்னதான் கேமியோ ரோலில் வந்தாலும், இப்படி ஒரு ரோலில் பஸில் ஜோசஃப் நடிப்பதெல்லாம் ஆச்சரியப்படுத்துகிறது.

மனோரமா மேக்ஸில் கிடைக்கிறது. ஹாட்ஸ்டாரிலும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

Share

KD The Devil Kannada Movie

KD The devil (K) – மூன்று மடங்கு ஹரி திரைப்படத்தின் வேகத்துடனும் 100 மடங்கு நெல்சன் திரைப்படத்தின் ரத்தத்துடனும் ஆயிரம் மடங்கு தங்கர் பச்சான் திரைப்படத்தின் சத்தத்துடனும் ஒரு கன்னடப் படம் வந்தால் எப்படி இருக்கும்? மிரண்டு போய்விட்டேன். மேலே உள்ள ஜானரில் எதுவுமே பிடிக்காது என்றால் இந்தப் பக்கமே தலை வைத்து விடாதீர்கள். மேலே உள்ள ஜானர் பிடிக்கும் என்பவர்கள் தவற விட்டு விடாதீர்கள்.

துருவா சர்ஜா நடித்த படத்தை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். முதலில் என்னடா இவர் என்று தோன்றியது. அவரது அதீத நடிப்பும் ஹீரோயினாக வரும் பெண்ணின் ஓவர் நடிப்பும் ஒரு கட்டத்தில் பிடித்துப் போனது. முதல் காட்சியில் இருந்து கடைசி நொடி வரை எல்லாமே ஓவர்தான்.

படத்தில் திடீரென்று ரமேஷ் அரவிந்த் வரவும், இவர் இருக்கிறாரா என்று நினைக்கும் போது, அடுத்து ரவிச்சந்திரன் வரவும், அட இவருமா என்று நினைக்கும் போதே, அட ஷில்பா‌ ஷெட்டி, என்ன இவர்களை டம்மியாக வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், கடைசிக் காட்சியில் உண்மையிலேயே மிரண்டு போய் விட்டேன். எதிர்பாராத டிவிஸ்ட்.

சஞ்சய் தத்தை ஹிந்திப் பட இயக்குநர் கூட இத்தனை விரும்பி இருக்க மாட்டார். அத்தனை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வன்முறை ஓவராகியும், தொடக்கம் முதல் இறுதிவரை செயற்கைத் தனமான செட்டிங்ஸ் மற்றும் ஒளிப்பதிவுடன் இருந்தும், யார் எப்போது எங்கே டான்ஸ் ஆடுவார்கள் என்று தெரியாமல் ஒருவித தினசாக ஒரு திரைப்பட அனுபவத்தைப் பார்க்க நினைத்தால்,‌டோண்ட் மிஸ்.

துருவா சர்ஜா மிரட்டல்.

இரண்டாம் பாகத்தில் சுதீப் வேறு. தியேட்டர் தாங்குமா எனத் தெரியவில்லை.

Share

Haal Malayalam Movie

Haal (M) – ஹால் என்ற மலையாள வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. சூஃபி மலையாள வார்த்தையாக இருக்குமோ என்னமோ. அது ஒரு நிலை என்பதாக இருக்கலாம். நாம் இதைத் தெரிந்து கொண்டு ஒன்றும் ஆகப் போவதில்லை. ஏனென்றால் படம் மண்ணு மாதிரி இருக்கிறது.

ஒரே ஒரு நல்ல சீனை ரீல்ஸில் பார்த்துவிட்டு அடடா இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று முழுமையாகப் பார்த்துத் தொலைத்தேன்‌ விக்கிபீடியாவில் லவ் ஜிகாத் என்றெல்லாம் போட்டிருக்க சம்பவம் பண்ணி இருக்காங்க மல்லூஸ் என்று நினைத்துப் பார்த்தால்… அந்தப் பெண் கிறித்துவப் பெண், பையன் முஸ்லிம் பையன் என்றதுமே ஒரு தமிழ்நாட்டுப் பார்வையாளனாக எனக்கு முற்றிலுமாக ஆர்வம் வடிந்துவிட்டது. ஒருவேளை கேரளாவில் கிறிஸ்தவப் பரவல் அதிகமாக இருப்பதால் கிறித்துவக் குடும்பங்கள் பதற்றத்துடன் பார்த்திருக்குமோ என்னவோ.

முஸ்லிம்‌ பையனும் கிறித்துவப் பெண்ணும் காதலிக்க, இதில் முஸ்லிம் குடும்பம் அவளை மதம் மாற்றம் செய்ய வேண்டும் எனச் சொல்ல, அந்தப் பெண்ணும் ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ள, மதமாற்றம் செய்யப்படும் நேரத்தில் அந்தப் பெண் என்னால் மதம் மாற முடியாது, கிறித்துவப் பெண்ணாகவே இருப்பேன் என்று சொல்லிவிட, இது பெரிய பிரச்சனையாகி, லவ் ஜிகாத், ஐ எஸ் என்றெல்லாம் போக, கடைசி அரை மணி நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் காமெடிப் படம் போல என்னத்தையோ மாற்றிப் படத்தைக் கொன்று என்னையும் கொன்று விட்டார்கள்.

சேன் நிகமுக்காகப் பார்த்தது தவறாகிப் போனது.

Share

Some movies

வாழ II (M)

முதல் பாகத்தைப் போல அத்தனை யதார்த்தமாக இல்லை என்றாலும், இந்தத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தது வியப்பே இல்லை. முதல் அரை மணி நேரம் என்னடா கொடுமை என்று பாடாய்ப்படுத்தி விட்டார்கள். ஆனால் அடுத்த ஒரு மணி நேரம் படம் பட்டாசு. குறிப்பாக, பள்ளியில் யார் யார் மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்ற காட்சியில் தொடங்கிப் பின்னர் போலீஸ் வருவது, அடிதடி அனைத்தும் சிறப்பு. அதிலேயே கமிங் ஆஃப் ஏஜ் காதலையும் சொன்னதெல்லாம் அருமை. அதே போல் சுன்னத் போர்ஷன் க்யூட் நகைச்சுவைக் கவிதை. அதன் பிறகு நண்பர்கள் ஒவ்வொரு இடத்திற்குச் சிதறிப் போய்விட, படம் கொஞ்சம் மெலோ டிராமா ஆகிறது. அதன் பின்னர் நெஞ்சை நக்கும் திரைப்படமாகிறது. 4 நண்பர்களும் அப்பாக்களும் யதார்த்தமாக நடிக்கிறார்கள். நேரம் இருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம். தமிழில் இதுபோன்ற அனுபவம் கிடைக்காது என்பதற்காகவே நிச்சயம் பார்க்க வேண்டும்.

பிகு: சில நிமிடங்கள் மட்டுமே வரும் ஒரு நடிகர் பழைய ரவீந்திரன் மாதிரி இருக்கிறாரே என்று பார்த்தால்.. ஆம் பழைய நடிகர் ரவீந்திரனேதான்.

காதல் ரீசெட் ரிபீட்

தமிழ்நாட்டு போலிஸுக்கும் ஸ்காட்லாந்து போலிஸுக்கும் இருக்கும் வாய்க்கால் தகராறு நாம் அறிந்ததே. ஸ்காட்லாந்து போலிஸைவிட தமிழ்நாடு போலிஸ் பெட்டர் என்ற கருத்தை அடித்து நொறுக்கவே ஏ எல் விஜய் ஒரு படம் எடுத்திருக்கிறார். அந்தப் படத்தின் பெயர்தான் காதல் ரீசெட் ரிபீட். ஸ்காட்லாந்து போலிஸ்காரர்கள் வெறும் கிறுக்கர்கள் என்று நிரூபித்திருக்கிறார். படமும் கிறுக்குத்தனமாகவே இருக்கிறது.

என்னடா மிலிட்டிரி நீ இந்தப் பக்கம் என்பது போல் முக்கியமான கேரக்டரில் அர்ஜூன் அசோகன். ஐயோ பாவம்.

ஜோக் சொல்லிட்டல்ல, நாளைக்கு சிரிக்கிறேன் என்பது போலக் காட்சிகள். இதை திடீரென்று நகைச்சுவைப் படமாக மாற்றிவிடலாம் என்று யாரோ இயக்குநரை நம்ப வைத்திருக்கிறார்கள். உலகத்திலேயே யாரும் யோசிக்காத புதுமையான கதை என்று இயக்குநரே நினைத்துக்கொண்டிருக்கிறார் போல! கொடுமைடா சாமி.

எம். பாஸ்கர் கொடூரம். பேசியே கொல்கிறார்.

இசை பற்றிய படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்டால் பிச்சிக்கும் என்று நினைத்தால், படத்தையே பிய்த்து எறிந்துவிட்டார் ஹாரிஸ். சந்தத்தில் பாடாத கவிதை பாடலை அடியொட்டி ஒரு காப்பி பாடல் வேறு. இளையராஜா பாடலைக் கேட்டால் தாலாட்டு மாதிரி தூக்கம் வரும் என்றெல்லாம் என்ன என்னவோ படத்தில் வருகிறது.

கதாநாயகி தமன்னாவின் நகல் – அவரை விட அழகாக இருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல்.

மைக் (M)

படத்தின் ஆரம்பக் காட்சிகள் மிகவும் கச்சிதமாக நல்ல மேக்கிங்குடன் இருந்தன. நாவலில் மட்டுமே பரிச்சயப்பட்ட, ஆனால் திரைப்படத்தில் இப்படி ஒரு கதையா என்று ஆச்சரியப்பட வைக்க வைக்கும் ஒரு கதை. ஒரு பெண் தன்னை ஆணாக உணர்ந்து பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள நினைக்கும் கதை. பிரச்சினை என்ன என்றால் அந்த கதைக்குரிய பாயிஷ் கேரக்டரை மிகவும் அழகான ஒரு ஹீரோயினிடம் கொடுத்தது தான். அனஸ்வரா ராஜன். அவரை பாயிஷ் கதாபாத்திரமாக நினைக்கவே முடியவில்லை. ஆனால் திரைக்கதையும் அப்படித்தான் இருக்கிறது என்பதால் பார்க்க முடிகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகளின் ஆழமற்ற தன்மை காரணமாகப் படம் சொதப்பிவிட்டது. இறுதிக்காட்சியில் ஒரே நொடியில் பாயிஷ் கேரக்டர் பெண்தன்மைக்கு மாறுவது, ஒரே காட்சியில் மாறினாலும் கூட நம்பும்படியாக இருக்கிறது. அப்படித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அத்தனை நேரம் என்னடா திரைக்கதை என்று யோசித்த நாம் அந்த ஒரு நொடியில் திரைக்கதையுடன் ஒன்றித்தான் போகிறோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஹீரோவுக்காக நிச்சயம் பார்க்க வேண்டும். 2022ல் வந்த படம் இது.

The Rise of Ashoka (K)

கன்னடத் திரைப்படம். கதையாக சற்று குழப்பம் நிறைந்த கதை. கோவிலில் செலுத்தும் முடி காணிக்கைக்குப் பின்னால் இத்தனை பெரிய பண லாபி இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுவே படத்தின் ஆதாரத்தைக் கொஞ்சம் சிதைக்கிறது. நாவிதர் குடும்பத்தில் இருந்து எப்படியாவது படித்து மேலே வர நினைக்கும் ஒருவன், மீண்டும் அந்த தொழிலுக்குள்ளேயே சென்று தன் சமூக மக்களுக்காகப் போராடுவதை கமர்சியல் பாணியில் எடுத்திருக்கிறார்கள். மோசமான மேக்கிங் இன்னொரு பலவீனம். இந்தப் படத்தை இயக்கும் போது இயக்குநர் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட, வேறொரு இயக்குநர் இயக்கித் திரைப்படத்தை முடித்திருக்கிறார். மறைந்து போன இயக்குநரின் அஞ்சலிக்காக இதைப் பார்க்கலாம். ஆனால் தமிழர்களை இத்தனை கேவலமாக காட்டி இருக்கத் தேவையில்லை. படுமோசம்.

Share

Kara Tamil Movie

கர – என்ன கண்றாவியா படம் எடுத்து வைக்கிறீங்க! பார்க்க முடியல. 1980ல் வந்திருந்தால் கூட காமெடியாகத்தான் இருந்திருக்கும். கே.எஸ்.ரவிக்குமாருக்கு யாரோ நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அவரது நடிப்பைப் பார்க்கவே எரிச்சலாக வருகிறது. மேக்கப் நன்றாக இருந்தாலும் கூட அவரது நடிப்பைப்‌ பார்க்க முடியவில்லை.

தனுஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை எதையோ சாப்பிடக்கூடாத ஒன்றைச் சாப்பிட்டு விட்ட மாதிரி முகத்தை வைத்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

பல காட்சிகள் இன்னுமாயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என நினைக்க வைத்தது. போலீசை முதுகிலிருந்து கீழே தூக்கிப் போட்டு அடிக்கும் காட்சியில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். டிராக்டரிலேயே பேங்க் மேனேஜர் இடித்து உயிரிழப்பதெல்லாம் பெரும் கொடுமை. அதில் கருப்புசாமி துணை வேறு. ஹீரோ கருப்பு சாமியை திருடுவதற்கு மட்டுமே கும்பிடுகிறான். குடும்பம் குட்டி நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிடுவதே இல்லை. அதைவிட கொடுமை, பணம் கட்ட ஒருவர் பேங்குக்கு வரும்போது அவரிடம் திருடாமல் அதை பேங்க்கிலேயே போட்டுவிட்டு பிறகு பேங்கில் இருந்து திருடுவதெல்லாம் அடேய்களா…

முதலில் ஆரம்பக் கட்சியிலே திருடனாகக் காட்டிவிட்டு, நான் என் பணத்தைத் திருடுகிறேன் என்று சொல்வதெல்லாம் பெரும் கொடுமை.

படம் பேங்கைப் பற்றிய படம் என்று புரியவே ஒரு மணி நேரம் ஆனது. இதில் இன்னொரு கொடுமை, இது 1990களில் நடக்க நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே முக்கால் மணி நேரம் எனக்கு ஆகிவிட்டது. இந்த லட்சணத்தில் திரைப்படம் எடுத்தால் எவன் பார்ப்பான்?

அதைவிட மன்னிக்கமுடியாத கொடுமை, அப்பாவின் பிணத்தை அனாதைப் பிணமாக ஆஸ்பத்திரியில் வைத்து விட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் பணத்தைத் திருடப் போராடுவதெல்லாம் என்ன விதமான லாஜிக்? அதை விட நாலு கொள்ளிக்கட்டையை வாங்கிக் கொள்ளி வைத்து எரித்துத் தொலைத்திருக்கலாம்.

அதிலும் ஆக சிறந்த காமெடி சீன், அந்த மருமகள் வீட்டில் காலை வைக்கிறாள், மாமனார் மண்டையைப் போட்டு விட்டார். பட டிஸ்கஷனில் ஒருத்தன்கூடவாய்யா சொல்லிருக்க மாட்டீர்கள், இப்படி எல்லாமா கதை யோசிப்பது என்று?

இந்த ‘கொடுமை’ இயக்குநரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் பக்கமே இனி திரும்பக் கூடாது.

Share

Athiradi Malayalam Movie

அதிரடி (M) – இளமைச் சரவெடி என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தொடக்கக் காட்சியிலேயே மிரள வைக்கிறார்கள். அடுத்த நொடி படம் வேறு மூடில் பயணிக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை கல்லூரிதான். முழுக்க முழுக்க இளைஞர்களின் கல்லூரி விளையாட்டு. கதை ஒன்றுமே இல்லை. திரைக்கதையிலும் நடிகர்களின் நடிப்பிலும் எடிட்டிங்கிலும் பின்னணி இசையிலும் பரத்தி விட்டார்கள். இடையில் ஒரு பத்து நிமிடமும் கடைசிச் சண்டையில் ஒரு ஐந்து நிமிடமும் கொஞ்சம் தொய்வாகப் போனாலும் ஒட்டுமொத்தமாக மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விட்டது. தீவிரமான மலையாளத் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் செட் ஆகாது. மாறாக நம்ம ஊர் டிராகன் போன்ற திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

பல காட்சிகள் அருமை. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை ஒட்டி அந்த ப்ரொபசர் பேசப் போகும்போது நல்ல உத்தி என்று நினைக்கும் போதே அடுத்த நொடி அதைவிட அட்டகாசமான உத்தியைப் பயன்படுத்தியது பக்கா சரவெடி தான். வினீத் அவராகவே வருகிறார். எத்தனை காட்சிகளில் அவரை மட்டம் தட்டி வசனம் எழுதி இருக்கிறார்கள்! அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

பாசில் ஜோசப் கலக்கி இருக்கிறார்.

25 வயது மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைப்பவர்களுக்கு மட்டுமான படம்.

Share