
துரந்தர் (H) – சந்தேகமே இன்றிச் சிறப்பான பரபரப்பான படம். தொடக்கம் முதல் இறுதி வரை அங்குமிங்கும் விலகாத ஒற்றை நோக்கிலான திரைக்கதையும் பரபரப்பான சம்பவங்களும், படம் பார்க்கும்போது வேறு எதைப் பற்றியும் நம்மைச் சிந்திக்க விடாமல் இருத்தி விடுகின்றன. இதுதான் இந்தப் படத்து வெற்றி ரகசியம். இப்படம் இந்தியா முழுக்க வசூலை வாரிக் குவித்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. நல்ல நடிகர்களின் சிறப்பான நடிப்பு, தரமான இயக்கம், அசத்தலான ஒளிப்பதிவு எனப் படத்திற்கு தேவையான அனைத்து வெற்றிச் சூத்திரங்களும் இந்தப் படத்தில் ஒருங்கிணைந்திருக்கின்றன.
படம் முடிந்த பிறகு சில விஷயங்களை யோசித்துப் பார்த்தேன். இந்தப் படம் பிரசாரப் படமா என்றால், ஒருவகையில் பிரசாரப் படம்தான். ஆனால் தரமான, சரியான வரலாற்றுத் தரவுகளுடன் கச்சிதமாகக் கலக்கப்பட்ட கற்பனையுடன் கூடிய படம். தமிழில் எடுக்கப்படும் அற்பத்தனமான பிரசாரப் படங்களை விதந்தோதும் போலி முற்போக்காளர்கள் ஏன் இந்தப் படத்திற்கு மட்டும் அத்தனை குதித்தார்கள் என்பது படத்தைப் பார்த்தாலே எளிதில் விளங்கும்.
இந்தப் படத்தில் சில வெளிப்படையான பிரசாரக் காட்சிகள் இருந்தன. உத்தரப் பிரதேசத்தின் ஊழல் ஆதாரங்களை எல்லாம் சேர்த்து வையுங்கள், யாராவது ஒருவன் நல்லவன் வருவான் என்ற வசனங்களும், புதிய இந்தியா என்ற வசனங்களும் அப்படிப்பட்டவைதான். ஒட்டுமொத்தத் திரைப்படத்தில் இவை அதிகபட்சம் 30 நொடிகள் கூட வருவதில்லை. அதற்கே இந்தப் போலி முற்போக்காளர்கள் கொதிக்கிறார்கள். ஆனால் தமிழ்ப் படங்களில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒற்றைப் படைத்தன்மையுடன் வெறுப்புப் பிரசாரம் கலந்து எந்தவிதத் தர்மமும் இன்றி, எந்தவித வரலாற்றுப் பின்புலமும் இன்றி அடித்து ஆடும்போது அதைச் சிலாகிக்கிறார்கள்
தமிழில் வெளிவரும் மாற்றுப் பிரசாரப் படங்கள் அதாவது வலதுசாரி பிரசாரப் படங்கள் என்று சொல்லப்படும் படங்கள் மீது எனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. அவற்றைப் பற்றி நான் எழுதுவதுமில்லை. அவற்றைப் பார்ப்பதும் இல்லை. நானே அந்தப் படங்களை ஏற்கவில்லை. அந்தப் படங்களை இந்தப் போலி முற்போக்காளர்கள் குறை சொல்லும்போது அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் துரந்தர் போன்ற படங்களைக் குறை சொல்வது அவர்களது பதற்றத்தைத்தான் காட்டுகிறது.
ஆயிரம் வன்முறைகள் தடுக்கப்பட்டாலும் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவிட்டால் அது அந்த அரசாங்கத்திற்குக் கெட்ட பெயரைத்தான் கொண்டு வரும். மோடி ஆட்சியிலும் அதேதான். புல்வாமா, பஹல்காம் தாக்குதல் தொடங்கி எல்லாவற்றிலும் அப்படித்தான். ஆனால் அதற்குப் பின்னர் மோடி அரசு என்ன செய்தது என்பது முக்கியமானது.
இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரையில், கிட்டத்தட்ட 10/20 வருடங்களுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து ஒருவனை எல்லை தாண்டி அனுப்புவது ஒரு ராஜதந்திரம். இதை அஜித் தோவல் போன்ற அதிகாரிகள் மட்டும் முடிவெடுத்துச் செய்திருக்கவே முடியாது. நிச்சயம் பிரதமரின் ஆலோசனையும் அறிவுறுத்தலும் ஒப்புதலும் இருந்தே தீர வேண்டும்.
உண்மையில் இந்தத் திரைப்படம் தேசபக்தி என்பதைப் பின்னணியில் மட்டும் வைத்துக் கொண்ட திரைப்படம் மட்டுமே. அந்த தேசபக்தியைத் தாண்டிய ஒரு கேங் வார் திரைப்படமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. வலுவான காரணமாக தேசபக்தி. பாகிஸ்தானில் கேங் வார் நடக்கிறது, அது அரசியல் உருப்பெற்று, ஆயுதக் கடத்தல் தொடங்கி பிறநாடுகளின் மீதான தாக்குதல் வரை எப்படி நீள்கிறது, இந்த அரசியல்/ஆயுதப் போட்டியில் எப்படி ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்து கொள்கிறார்கள், யார் மேலே வருகிறார்கள் என்பதுதான் ஒட்டுமொத்தத் திரைப்படம்.
இந்தத் திரைப்படத்தின் கதை இந்தியாவுக்கோ, ஏன் தமிழுக்கு கூட புதியதல்ல. கமலின் குருதிப்புனல் திரைப்படமும் விஸ்வரூபம் திரைப்படமும் இந்த வகைக் கதைதான். களங்கள் மட்டுமே வேறு. விஸ்வரூபம் திரைப்படம் நிஜமாகச் சொல்லப்போனால் துரந்தர் திரைப்படத்தின் ஆக்கத்தை விட, இயக்கத்தை விட ஒரு படி மேலானது. விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினை அதில் வந்த தேவையற்ற பல காட்சிகள். சிக்கன் சாப்பிட்டியா மாமி போன்ற தேவையற்ற வசனங்கள் தந்த எரிச்சலும், ஒரு நளினமான நடனக்காரன் ஒருவன் பெரிய வீரனாக உருமாற்றம் கொள்ளும் புல்லரிப்புக் காட்சிகளும் படத்தின் தீவிரப் போக்கைச் சிதறடித்து விட்டன. அந்தக் காட்சிகளை எல்லாம் விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் நடக்கும் காட்சிகளை மட்டும் தனியே பார்த்தால் துரத்துரை விடப் பல மடங்கு உயர்ந்த தரத்தில், விஸ்வரூபம் திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. துரந்தர் படத்திலும் சில தேவையற்ற காட்சிகள் உண்டு. ஆனால் எப்படியோ அதைப் படத்துடன் கச்சிதமாக இணைத்துவிட்டார்கள். துரந்தர் கதையும் விஸ்வரூபம் கதையும், குருதிப் புனல் இறுதிக் காட்சியும் துரந்தரின் இறுதிக்காட்சியும் ஒன்றுதான்.
துரந்தர் திரைப்படத்தில் ஆச்சரியப்படத்தக்க ஒரு காட்சி என்னவென்றால், இந்திய ரகசிய உளவாளியாகச் சென்றவன் தந்த ஆயுதங்கள்தான் மும்பையில் 26/11ல் கொல்லப் பயன்படுத்தப்பட்டது என்னும் கற்பனை. நுணுக்கமான திரைக்கதை. ஒரு ரகசிய உளவாளியின் பின்னால் இருக்கும் நியாய உணர்வு அங்கேயே அடிபட்டு, அந்தக் கணத்திலிருந்து அந்தக் கதாபாத்திரம் நுணுக்கமான தத்துவார்த்தச் சிக்கலில் மாட்டிக் கொண்டு விடும். மிகச் சிறப்பாக அதை எடுத்திருக்கிறார்கள். இதையடுத்து அவன் செய்யும் ஒவ்வொரு அராஜகமும் நியாயப்படுத்தப்படும் வகையிலான திரைக்கதை அட்டகாசமாக வந்திருக்கிறது.
உண்மையில் இந்தத் திரைப்படத்தில் அரசியல் பின்னணியிலான கேங்வார் தொடர்பான காட்சிகள் மட்டுமே வந்திருக்கின்றன. போலி முற்போக்காளர்களை இன்னும் பதறச் செய்யப் போகும் புதிய இந்தியா தொடர்பான காட்சிகள் இரண்டாம் பாகத்தில்தான் வரவிருக்கின்றன என நினைக்கிறேன். முதல் பாகம் இத்தனை வெற்றி பெற்ற பிறகு இரண்டாம் பாகம் இந்த அளவுக்குப் பேசப்படுமா என்பதில் எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. விஸ்வரூபம் பாகம் 2 ஒரு கொடுங்கனவு என்பதும் நினைவுக்கு வருகிறது. துரந்தர் 2 என்ன ஆகிறது என்று பார்க்கலாம்.








