நெஞ்சிலோர் நண்டு – சுதாகர் கஸ்தூரி எழுதிய மிக முக்கியமான புத்தகம்.
இந்தப் புத்தகம் ஆண்களுக்கு வரக்கூடிய, அதாவது லட்சத்தில் ஒருவருக்கோ அல்லது ஆயிரத்தில் ஒருவருக்கோ மட்டுமே ஏற்படக்கூடிய அபூர்வமான மார்பகப் புற்றுநோய் பற்றியது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுதாகர் கஸ்தூரி எனக்கு ஃபோன் செய்து, தனக்கு இப்படி ஒரு நோய் வந்திருப்பதாக, அதாவது மார்பகப் புற்றுநோய் இருப்பதாகச் சொன்னபோது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அதிலும் ஆண்களுக்கான மார்பகப் புற்றுநோய் என்று சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. அவர் சொல்லும் வரைக்கும் இப்படியொரு நோய் இருப்பதே எனக்குத் தெரியாது.

அப்போது அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. உண்மையில் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சுதாகர் கஸ்தூரியை எனக்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தெரியும். அடிக்கடி பேசியிருக்கிறோம். அவருடைய புத்தகங்களை நாங்களே வெளியிட்டிருக்கிறோம். அவர் முதல் புத்தகம் எழுதியபோது படித்துப் பார்க்கச் சொல்லி எங்களுக்கு அனுப்பியிருந்தார். அந்த அளவுக்கு பழக்கம் உண்டு. ‘மரத்தடி’ குழுவில் இருந்த காலத்திலிருந்தே அவரை எனக்குத் தெரியும். அவரும் திருநெல்வேலிக்காரர் என்பதால் இயல்பாகவே நல்ல நட்பு இருந்தது.
அவர் இந்த புற்றைப் பற்றிச் சொன்னபோது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதன்பின்னர் அவ்வப்போது அவரைத் தொடர்புகொள்வேன். அதிகமாகத் தொந்தரவு செய்யவில்லை. ஒருமுறை பேசும்போது, “இப்போது எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அப்போது, “கிட்டத்தட்ட இந்த நோயிலிருந்து வெளியே வந்துவிட்டேன். பெரும்பாலும் எல்லாமே சரியாகிவிட்டது” என்று சொன்னார்.
அப்போது நான், “இதைப் பற்றி நீங்கள் ஒரு புத்தகம் எழுத வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே அதற்கு சம்மதித்தார். அவருக்கு ஏற்கெனவே அந்த எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை. நான் சொன்னவுடன், “கொஞ்சம் நேரம் கொடுங்கள்” என்றார். பிறகு 2026 ஜனவரி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்தபோது மீண்டும் கேட்டேன். “எழுத ஆரம்பித்துவிட்டேன். கண்டிப்பாகத் தருகிறேன்” என்றார். அந்தப் புத்தகம் இப்போது வெளியாகியிருக்கிறது.
இந்தப் புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், முதலில் ஆண்களின் மார்பகப் புற்றுநோய் பற்றிப் பெரும்பாலோருக்குத் தெரியாது. பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாக மார்பகப் புற்றுநோயைப் பலரும் நினைக்கிறார்கள். ஆண்களுக்கும் இது வரலாம் என்பது பலருக்கும் தெரியாததால், இந்தப் புத்தகம் உண்மையிலேயே ஒரு Eye-opener.
இரண்டாவது, இந்தப் புத்தகம் முழுவதும் பேசும் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவரைவிட (அல்லது அதே அளவுக்கு) பாதிக்கப்படுவது அவருடைய குடும்பம். “இது சரியாகுமா? சரியாகாதா? இவர் மீண்டு வருவாரா?” என்ற தெரியாமல், இது தரும் மன உளைச்சல், இதைக் கடந்து வருவது சாதாரண விஷயம் அல்ல.
இதை நான் நேரில் பல நண்பர்களின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்; என்னுடைய நண்பணின் மகன் பன்னிரண்டு வயதில் ரத்தப் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட மீண்ட பிறகு, புற்று மீண்டும் தாக்கி எங்களை விட்டுப் பிரிந்தான்.. அந்தக் குடும்பம் இரண்டு ஆண்டுகள் அனுபவித்த வேதனையை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். (அந்த வலி எழுப்பிய கேள்விகளே நான் எழுதிய ‘கர்மன்’ என்ற நாவல்.)
என்னுடைய நெருங்கிய நண்பரின் குடும்பத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் புற்றுநோயால் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் புற்றுநோய் தரக்கூடிய மன அழுத்தம், வேதனை பற்றி எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது. அந்த Stressஐ அளவிடவே முடியாது.
சமீபத்தில் Palliative Care பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தேன். அது விரைவில் தமிழில் வரப்போகிறது. அந்தப் புத்தகத்தை யார் வெளியிடுகிறார்களோ, அவர்கள் அதைப் பற்றிய முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள். நல்ல முக்கியமான புத்தகம் அது.
அந்தப் புத்தகத்திற்கும் இந்தப் புத்தகத்திற்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், இரண்டு புத்தகங்களும் நோயாளியை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கின்றன.
இந்தப் புத்தகத்தில், சுதாகர் கஸ்தூரி எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டார், அவருடைய குடும்பத்தினர் எப்படி உறுதுணையாக இருந்தார்கள், நண்பர்கள் எப்படி துணையாக இருந்தார்கள் அல்லது சிலர் எப்படி விலகிச் சென்றார்கள், சமூகத்தில் இருக்கும் தவறான நம்பிக்கைகள், மூடநம்பிக்கைகள், “இது தொற்றுநோய்” போன்ற பல கற்பிதங்கள்—இவை அனைத்தையும் மிகத் தெளிவாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
அதைவிட முக்கியமான விஷயம், இத்தனை பிரச்சினைகள், இத்தனை எதிர்மறை அனுபவங்கள் இருந்தாலும், இந்தப் புத்தகம் விதைப்பது Positive Thinking.
புற்றுநோய் வந்துவிட்டால் மருந்து வாங்குவது, மருத்துவமனைக்குச் செல்வது, செலவுகள், நீண்ட நேரம் காத்திருப்பது, பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருப்பது, எதிர்மறையான முடிவுகள் வருவது, மீண்டும் போராட வேண்டிய நிலை, தனிமையில் உட்கார்ந்து “இனி என்ன செய்வது?” என்று சிந்திப்பது—இவை அனைத்தையும் சொல்லிக்கொண்டே, இந்தப் புத்தகம் ஒரு நேர்மறை நம்பிக்கையையும் இணையாக விதைக்கிறது. அதுதான் இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய பலம்.
“உங்களால் முடியும். உங்களால் ஜெயிக்க முடியும். இதைத் தாண்டி வர முடியும்.” அதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைச் செய்தி.
புற்றுநோய் வந்தவுடன் ஒவ்வொருவரின் மனத்திலும் எழும் முதல் கேள்வி, “ஏன் எனக்கு மட்டும் இப்படி?” என்பதுதான். உண்மையில் எந்த நோயாக இருந்தாலும், குறிப்பாக புற்றுநோயாக இருந்தாலும், முதலில் எழுவது இந்தக் கேள்விதான். இந்தக் கேள்வி இந்தப் புத்தகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. நான் குறிப்பிட்ட Palliative Care புத்தகத்திலும் மிக முக்கியமான கேள்வியாக “Why Me?” என்பதே பேசப்படுகிறது.
“ஏன் எனக்கு இப்படி வந்தது?” என்பதைத் தாண்டி, “நான் இவ்வளவு கஷ்டப்படுகிறேனே!”, “என் குடும்பம் என்ன செய்யப் போகிறது?”, “பொருளாதார ரீதியாக நான் என்ன செய்வேன்?” என்ற எல்லா கேள்விகளையும் கடந்து, “நான் ஜெயிக்க முடியும்; இதைத் தாண்டி வர முடியும்; ஒரு Survivor-ஆக வாழ முடியும்” என்ற நம்பிக்கையை இந்தப் புத்தகம் வலிமையாகச் சொல்கிறது.
அதை சுதாகர் கஸ்தூரி மிகவும் அழகாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
புற்றுநோய் பற்றிய ஒரு புரிதல் அவருக்கு ஏற்கெனவே இருந்ததாலும், அவர் ஒரு சிறந்த சிந்தனையாளராக இருந்ததாலும், இந்த நோயை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் பிரமிக்க வைக்கிறது. அவர் மருத்துவர்களுடன் பேசிய விதம், மருத்துவ அறிக்கைகள் வந்தபோது அவற்றைப் புரிந்துகொண்டு விவாதித்த விதம், நோயைப் பற்றி தொடர்ந்து கற்றுக்கொண்ட விதம்—இவை அனைத்தும் இந்தப் புத்தகத்தில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது வெறும் வலியை மட்டும் சொல்லும் புத்தகம் அல்ல. அதையும் தாண்டி, எப்படி நம்மால் நோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகம். அந்த அடிப்படையில், ‘நெஞ்சிலோர் நண்டு’ மிக முக்கியமான நூல்.
புத்தகத்தை வாங்க https://www.swasambooks.com/products/nenjilor-nandu/3569293000002990031 | போன் 81480 66645


