Kara Tamil Movie

கர – என்ன கண்றாவியா படம் எடுத்து வைக்கிறீங்க! பார்க்க முடியல. 1980ல் வந்திருந்தால் கூட காமெடியாகத்தான் இருந்திருக்கும். கே.எஸ்.ரவிக்குமாருக்கு யாரோ நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அவரது நடிப்பைப் பார்க்கவே எரிச்சலாக வருகிறது. மேக்கப் நன்றாக இருந்தாலும் கூட அவரது நடிப்பைப்‌ பார்க்க முடியவில்லை.

தனுஷ் ஆரம்பம் முதல் இறுதி வரை எதையோ சாப்பிடக்கூடாத ஒன்றைச் சாப்பிட்டு விட்ட மாதிரி முகத்தை வைத்திருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை.

பல காட்சிகள் இன்னுமாயா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என நினைக்க வைத்தது. போலீசை முதுகிலிருந்து கீழே தூக்கிப் போட்டு அடிக்கும் காட்சியில் வாய்விட்டுச் சிரித்து விட்டேன். டிராக்டரிலேயே பேங்க் மேனேஜர் இடித்து உயிரிழப்பதெல்லாம் பெரும் கொடுமை. அதில் கருப்புசாமி துணை வேறு. ஹீரோ கருப்பு சாமியை திருடுவதற்கு மட்டுமே கும்பிடுகிறான். குடும்பம் குட்டி நன்றாக இருக்க வேண்டும் என்று கும்பிடுவதே இல்லை. அதைவிட கொடுமை, பணம் கட்ட ஒருவர் பேங்குக்கு வரும்போது அவரிடம் திருடாமல் அதை பேங்க்கிலேயே போட்டுவிட்டு பிறகு பேங்கில் இருந்து திருடுவதெல்லாம் அடேய்களா…

முதலில் ஆரம்பக் கட்சியிலே திருடனாகக் காட்டிவிட்டு, நான் என் பணத்தைத் திருடுகிறேன் என்று சொல்வதெல்லாம் பெரும் கொடுமை.

படம் பேங்கைப் பற்றிய படம் என்று புரியவே ஒரு மணி நேரம் ஆனது. இதில் இன்னொரு கொடுமை, இது 1990களில் நடக்க நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே முக்கால் மணி நேரம் எனக்கு ஆகிவிட்டது. இந்த லட்சணத்தில் திரைப்படம் எடுத்தால் எவன் பார்ப்பான்?

அதைவிட மன்னிக்கமுடியாத கொடுமை, அப்பாவின் பிணத்தை அனாதைப் பிணமாக ஆஸ்பத்திரியில் வைத்து விட்டு, அவரைக் காப்பாற்றுவதற்காகப் பணத்தைத் திருடப் போராடுவதெல்லாம் என்ன விதமான லாஜிக்? அதை விட நாலு கொள்ளிக்கட்டையை வாங்கிக் கொள்ளி வைத்து எரித்துத் தொலைத்திருக்கலாம்.

அதிலும் ஆக சிறந்த காமெடி சீன், அந்த மருமகள் வீட்டில் காலை வைக்கிறாள், மாமனார் மண்டையைப் போட்டு விட்டார். பட டிஸ்கஷனில் ஒருத்தன்கூடவாய்யா சொல்லிருக்க மாட்டீர்கள், இப்படி எல்லாமா கதை யோசிப்பது என்று?

இந்த ‘கொடுமை’ இயக்குநரின் பெயரைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவர் பக்கமே இனி திரும்பக் கூடாது.

Share

Athiradi Malayalam Movie

அதிரடி (M) – இளமைச் சரவெடி என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தொடக்கக் காட்சியிலேயே மிரள வைக்கிறார்கள். அடுத்த நொடி படம் வேறு மூடில் பயணிக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை கல்லூரிதான். முழுக்க முழுக்க இளைஞர்களின் கல்லூரி விளையாட்டு. கதை ஒன்றுமே இல்லை. திரைக்கதையிலும் நடிகர்களின் நடிப்பிலும் எடிட்டிங்கிலும் பின்னணி இசையிலும் பரத்தி விட்டார்கள். இடையில் ஒரு பத்து நிமிடமும் கடைசிச் சண்டையில் ஒரு ஐந்து நிமிடமும் கொஞ்சம் தொய்வாகப் போனாலும் ஒட்டுமொத்தமாக மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விட்டது. தீவிரமான மலையாளத் திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு இந்தப் படம் செட் ஆகாது. மாறாக நம்ம ஊர் டிராகன் போன்ற திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்கள் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

பல காட்சிகள் அருமை. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை ஒட்டி அந்த ப்ரொபசர் பேசப் போகும்போது நல்ல உத்தி என்று நினைக்கும் போதே அடுத்த நொடி அதைவிட அட்டகாசமான உத்தியைப் பயன்படுத்தியது பக்கா சரவெடி தான். வினீத் அவராகவே வருகிறார். எத்தனை காட்சிகளில் அவரை மட்டம் தட்டி வசனம் எழுதி இருக்கிறார்கள்! அதை எல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை.

பாசில் ஜோசப் கலக்கி இருக்கிறார்.

25 வயது மனநிலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என நினைப்பவர்களுக்கு மட்டுமான படம்.

Share

Bha Bha Ba

Bha Bha Ba (M) – நேரம் கெட்ட நேரம் என்றால் இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்கத் தோன்றும். திலீப்பும் மோகன்லாலும் நடித்திருக்கிறார்களே என்று இந்தக் கொடுமையைப் பார்த்தேன். இதுவரை பார்த்த அனைத்துக் கொடுமையான மலையாள, தமிழ்த் திரைப்படங்களுக்கு சிகரம் இத் திரைப்படம். பைத்தியக்காரத்தனமான திரைப்படம். பார்த்தால் நிச்சயம் பைத்தியம் பிடித்து விடும். இப்படிப்பட்ட ஒரு மோசமான கதையை நம்பி, அதைவிட மோசமான திரைக்கதையை எழுதி, அதைவிட மோசமாக இயக்க முடியும் என்று நிரூபித்த இயக்குநர்களை எத்தனை பாராட்டிலும் தகும். விளக்கமாத்துக்குப் பட்டு குஞ்சம் என்பது போல் இந்த கன்றாவிக்கு இரண்டு இயக்குநர்கள் வேறு. பயம் பக்தி பகுமானம்தான் ப ப பவாம்.பார்வையற்றவருக்குக் கண்ணாயிரம் என்று பெயர் வைத்ததைப் போல.

Share

Oru Durooha Saahacharyathil

ஒரு துரூஹ ஸாஹசர்யத்தில் (M) – உச்சரிப்பு சரி என்றே நினைக்கிறேன். அதாவது சந்தேகத்திற்கு இடமான / மர்மமான சந்தர்ப்பத்தில் என்ற அர்த்தம் போல. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் இந்த படத்தையும் பார்த்தேன். படமாகப் பொறுமையைச் சோதித்து விட்டார்கள். தூக்கம் வராமல் பார்ப்பது மிகக் கடினம். ஒரு கதையாக என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்பது கடைசி வரை புரியாது. படம் புரியாது என்று சொல்லவில்லை. படம் நன்றாகப் புரியும். ஆனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாது. இதில் மாவோயிஸ்ட் ஜல்லி வேறு. நிச்சயம் பார்க்க வேண்டுமா என்றால் தேவையில்லை. ஆனால்.. குஞ்சாகோ போபன் மற்றும் திலீஷ் போத்தன் இருவரின் நடிப்புக்காகப் பார்க்க வேண்டும். அவர்களது யதார்த்த மேக்கப்பிற்காகப் பார்க்க வேண்டும். அசுரத்தனமான பர்பாமன்ஸ்.

பிகு: பைத்தியங்கள்தான் கமல் படம் பார்ப்பார்கள் என்ற உள்குத்தைப் பற்றி நான் பேசப் போவதில்லை!

Share

3rd Language in CBSE schools

சமச்சீர்க் கல்வியைப் பின்பற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பெரும்பாலான பள்ளிகளில் ஹிந்தி மூன்றாம் மொழிப் பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் ஹிந்தி கிடையாது.

பொதுவாக சிபிஎஸ்சி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை ஹிந்தி. ஒன்பதாம் வகுப்பு முதல் ஹிந்தி கிடையாது.

அரசுப் பள்ளிகளில் எந்த ஒரு வகுப்புக்கும் இந்தி கிடையாது.

நேற்று இந்த நிலை இப்படியே இருந்தது. இன்றும் அப்படியேதான் இருக்கிறது.

இப்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் ஹிந்தி கட்டாயம் என்று சொல்லியதன் மூலம், மேலே உள்ள எந்த ஒரு நிலையும் மாறிவிடவில்லை. பத்தாம் வகுப்பில் மூன்றாம் மொழிப் பாடத்திற்குப் பொதுத்தேர்வு கிடையாது என்றும் சிபிஎஸ்சி சொல்லிவிட்டது.

ஆனால் என்னமோ மிகப்பெரிய மாற்றம் வந்துவிட்டது போல குதித்து ஊரை ஏமாற்றுவதில் நம் ஊடகங்களைப் போல கேடுகெட்ட ஊடகங்களை இந்தியாவில் எங்கேயும் பார்க்க முடியாது.

உண்மையில் கடந்த திமுக அரசு, சமச்சீர்க் கல்வியைப் பின்பற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஹிந்தியைச் சொல்லித் தரக் கூடாது என்று கட்டாயமாக ஓர் உத்தரவைப் பிறப்பித்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்று வீணாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மத்திய அரசு ஒருபடி மேலே போய், ஹிந்திக்குப் பதிலாக எந்த ஓர் இந்திய மொழியையும் கற்றுக் கொடுக்கலாம் என்ற சலுகையையும் அறிவித்துவிட்டது. இதனால் பெரிய பயனில்லை, இந்திதான் பயிற்றுவிக்கப்படும் என்றாலும், குறைந்தபட்சம் இதையாவது மத்திய அரசு செய்தது.

ஆனால் இன்று என்னமோ சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை நுழைத்துவிட்டதாகக் கூச்சல் போட ஆரம்பித்திருக்கிறார்கள். உடனே சிபிஎஸ்இ பள்ளிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளைத் தமிழர்கள் வெளியே எடுத்து, இந்தி கற்றுத் தராத அரசுப் பள்ளிகளில் போட வேண்டியதுதானே?

தரம் சிபிஎஸ்சி அளவுக்கு வேண்டும், ஆனால் சிபிஎஸ்சி சொல்லும் எந்த ஒன்றையும் ஏற்க மாட்டோம் என்றால் என்ன அர்த்தம்?

எப்படி மாநில அரசு தங்கள் கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கிறதோ அதேபோல் மத்திய அரசும் அதன் கொள்கைகளைப் புகுத்தப் பார்க்கத்தான் செய்யும்.

ஒரே வழி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக நீக்கிவிட்டு, அதன் தரத்தையும் சிபிஎஸ்இ போல உயர்த்தி விட்டு, தமிழ்ப் பிள்ளைகளை அங்கே சேர்ப்பதுதான். அவை எந்த அரசும் செய்யாது. ஏனென்றால் அதற்கு வக்கு கிடையாது.

பல மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மெல்ல சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறிக் கொண்டிருக்க, இதையும் செய்தால் ஒட்டுமொத்தமாக அனைவரும் சிபிஎஸ்சி முறைக்கு மாறி விடுவார்கள்.

இன்று பலர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் தமிழ்ப் பிள்ளைகளைச் சேர்ப்பது ஒரே ஒரு காரணத்திற்காகத்தான். சிபிஎஸ்சி பள்ளியைவிட கட்டணம் குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டும்தான். தரம் என்று பார்த்தால் அனைவரும் விரும்புவது சிபிஎஸ்இ பள்ளிகளை மட்டுமே. இதுவே வெளிப்படையான உண்மை.

இந்த லட்சணத்தில் நம் அரசுகள் வாய் கிழியப் பேசுவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்.

Share

TN assembly election 2026

அதிமுகவுக்கு இந்த முறை இருக்கப் போகும் பிளஸ் பாய்ண்ட்டுகள்:

  • திமுகவின் மேல் இருக்கும் எதிர்மனோபாவம்.
  • திடீரென்று பேய் பிடித்தது போல் எடப்பாடி செய்யும் நல்ல பிரசாரம்
  • அண்ணாமலை ஒதுங்கி இருப்பாரோ என்று நினைத்த நேரத்தில் மிகச் சிறப்பாக அண்ணாமலையும் செய்யும் பிரசாரம்
  • இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் தனித்தனியாகத்தான் பிரசாரம் செய்யும். ஆனால் இந்த முறை ஒரே மேடையில் தோன்றி அனைவரும் ஒன்றிணைந்து பிரசாரம் செய்வது.
  • விஜய் கட்சி திமுகவிடமிருந்து பெரிய அளவில் ஓட்டுகளைப் பிரிக்கும்.
  • கிறிஸ்தவர்கள் ஓட்டு நிச்சயம் திமுகவுக்குப் பெரிய அளவில் குறையும். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு ஓட்டு போட நினைக்கும் கிறிஸ்தவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்பதால், கிறிஸ்தவர்களின் ஓட்டு பிரிவது அதிமுகவுக்கு குறைவான பாதிப்பையே உண்டாக்கும்.

நியாயமாக இதனால் அதிமுக பாஜக கூட்டணி எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் என்ன பிரச்சினை என்று எனக்கு தோன்றுகிறது?

  • மெய்ன் மைனஸ் பாயிண்ட், இத்தனை செய்து எடப்பாடியையா முதலமைச்சர் ஆக்கப் போகிறோம் என்ற கேள்வி.
  • என்னதான் விஜய் கட்சி திமுகவின் வாக்குகளை அதிகமாகப் பிரித்தாலும், திமுகவுக்கு எதிராக ஒன்று திரண்டு வந்திருக்க வேண்டிய அதிமுகவின் ஓட்டு நிச்சயம் பிரிந்து விஜய்க்குப் போகும். இது அதிமுகவுக்குப் பெரிய பின்னடைவைத் தரப் போகிறது.
  • கடந்த எட்டு ஆண்டுகளில் அதிமுக பெரிய அளவில் வளரவில்லை என்பதும், அதிமுகவின் வாக்குச் சதவீதம் தேய்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் உண்மையானால்,‌ அதிமுகவின் தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று.

(விஜய் பொதுவாகப் பிரிக்கப் போகும் பெண்கள் ஓட்டு, இளைஞர்கள் ஓட்டு என்பதெல்லாம் அனைத்துக் கட்சியையும் – முன்னே பின்னே இருந்தாலும் – ஒரே விதமாகப் பாதிக்கும் என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.)

இப்படி எதுவும் நடக்காமல் இருக்க, திமுக தோற்க, என் யூகம் பொடிபட அந்தக் கடவுள் அருளட்டும்.


இன்றுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில் நாம் கவனிக்க வேண்டியவை என்ன?

யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

தமிழ்நாடு முழுக்க போதையைப் பரப்பி இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கிய ஒரு கட்சிக்கு, நம் மகள்கள், சகோதரிகள் எந்தவிதப் பாதிப்பும் இன்றி வீட்டுக்குத் திரும்புவார்களா என்ற பயத்தை ஒவ்வொரு பெற்றோருக்கும் உருவாக்கிய கட்சிக்கு, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு கட்சிக்கு, ஜாதியும் மதமும் பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் அதன் அடிப்படையில் பிரித்துச் சூழ்ச்சி செய்யும் ஒரு கட்சிக்கு வாக்களிக்காதீர்கள். இது நம் அடிப்படைக் கடமை.

எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்?

எந்தக் கட்சிக்கு வாக்களித்தால், மேலே சொன்ன ஒரு கட்சி ஆட்சிக்கு வராதோ அந்தக் கட்சிக்கு வாக்களிப்போம். பெரிய அளவில் திரண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியை ஆதரியுங்கள். என்டிஏவை ஆதரிக்க வேண்டியது நம் அடிப்படைக் கடமை.

நோட்டா, பாஜகவுக்காக பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருப்பது, அதிமுகவுக்கு வாக்களிக்காமல் இருப்பது – இவையெல்லாம் ஏதோ ஒரு வகையில் திமுகவை வெற்றி பெற வைக்கும். அந்தத் தவற்றைச் செய்து விடாதீர்கள்.

இந்த முறை தேர்தல் சார்ந்த பதிவுகளை மிகக் குறைவாகவே எழுதினேன். அதற்கு, தனிப்பட்ட வகையில் பாஜக தனித்து நிற்காதது ஒரு காரணம். ஆனால் வாக்களிக்கும் போது அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

இத்துடன் தேர்தல் செய்திகள் முடிவடைகின்றன.

Share

Valadhu Vasathe Kallan

வலதுவசத்தெ கள்ளன் (M) – ஜீத்து ஜோசப்பின் வழக்கம்போன்ற திரில்லர்‌ முதல் இரண்டு மணி நேரம் யார் என்ன எதற்கு எப்படி என்பதை நிஜமாகவே யோசிக்க வைக்க விடாமல் மிரட்டி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல பையன் வரவும் அவனாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது தேவையற்ற க்ரிஞ்சாகிவிட்டது. கடைசி அரை மணி நேரம் (கதைக்குத் தேவையான ஆனால் நமக்கு) தேவையற்ற கதை. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் கலக்கிவிட்டார். இவருக்காகவும், திரைக்கதைக்காகவும், அதைவிட முக்கியமாக வலதுவசத்தெ கள்ளன் என்ற பெயர் வைத்ததற்காகவும் சுமாரான இப்படத்தை ஒருமுறை பார்த்து வைக்கலாம்.

Share

TN Election 2026 and Delimitation

தொகுதி மறுவரையறை அறிவிப்பினால் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் புதிய பின்னடைவு வர ஏதும் வாய்ப்பில்லை. மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு மாற்றி வாக்களிப்பார்கள் என்று நான் நம்பவில்லை. (விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த ஈழப் பிரச்சினை முக்கியமான அரசியல் பிரச்சினை. ஆனால் மக்கள் தமிழ்நாட்டுத் தேர்தலில் இதை மையமாக வைத்து வாக்களித்ததில்லை.)  

இங்கே வாக்களிக்கும் அரசியல் காரணம் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்பதே என் பார்வை. ஏதோ ஒரு பெரிய காரணம். 2ஜி ஊழல். 1996 ஊழல். இப்படியாகிவிட்டது.

ஆனால், இந்தப் பிரச்சினை திமுகவுக்கு வேறொரு வகையில் நிச்சயம் பிரசாரத்துக்கு உதவி இருக்கிறது.

பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு வரை திமுகவின் கை ஓங்கி இருந்ததாகவே நான் நினைத்தேன். (இப்போதும்.) ஆனால், திமுக பிரசாரத்தில் தொய்வாக இருப்பதாகவே எனக்குப் பட்டது. விஜய்க்கு வரும் பிரமாண்டமான கூட்டம் ஒரு பக்கம். எதிர்பாராமல் நன்றாகப் பேசிப் பிரசாரம் செய்யும் எடப்பாடி ஒரு பக்கம். அதிமுகவே (நானும்) எதிர்பாக்காத அளவுக்கு அதிமுகவுக்காகப் பிரசாரம் செய்யும் அண்ணாமலை. அதிலும் எந்த ஒரு பிரச்சினையையும் அதிரடியாக ஆழமாகப் பேசி அதை ஒன்றுமில்லாமல் ஆக்கும் அண்ணாமலையின் சாமர்த்தியம். இவற்றை விட முக்கியமாக, ஈகோ இல்லாமல் இந்தக் கூட்டணித் தலைவர்கள் ஒன்றாகத் தோன்றிப் பிரசாரம் செய்வது – இவை எல்லாம் சேர்ந்து திமுக பக்கம் ஒரு மந்தத் தன்மை இருப்பதாக நினைக்க வைத்தது.

இன்னொரு வகையில், இந்தத் தேர்தலில் வெற்றி உறுதி என்று திமுக முடிவு கட்டியது போலவே நடந்து கொண்டது.  இந்தச் சுணக்கத்தைப் போக்க இந்தத் தொகுதி மறுவரையறை அறிவிப்பு உதவி இருக்கிறது என்பதைத் தாண்டிப் பெரிய மாற்றத்தை இது கொண்டுவராது, அதாவது முன்பிருந்த மக்களின் முடிவு (அது யாருக்குச் சாதகமாக இருந்திருந்தாலும்) மாறாது என்பதே என் யூகம். பார்க்கலாம்.

Share