Premalu Malayalam Movie

ப்ரேமலு (ம) – இளமைக் கொண்டாட்டம். நான்-ஸ்டாப் புன்னகை. மலையாள இளைஞர்களின் வாழ்நாள் படமாக இது இருக்கும். ஹீரோயின்‌ அழகு என்றால் ஹீரோ அதற்கும் மேல். இருவரின் வெள்ளந்தித்தனமே நம்மை ஒன்ற வைக்கிறது. காட்சிக்குக் காட்சி புன்னகை. கடைசி பத்து நிமிடம் ஒரு பக்கம் மனம் உருக, இன்னொரு பக்கம் சிரிப்பு என கலக்கிவிட்டார் கள். தொடக்கம் முதல் இறுதி வரை கதையே இல்லாமல் காட்சிகளிலும் காதலிலும் நட்பிலும் படத்தை எங்கோ கொண்டு போய்விட்டார்கள். தமிழ் டப்பிங்கில் பார்த்தால் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். ஏனென்றால் இது பிரேமம் போல மலையாள இளைஞர்களின் அசல் கொண்டாட்டம். பிரேமத்தில் கேரள நிலம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. இதில் அதுவும் இல்லை. ஆனாலும் அக்மார்க் மலையாளத் திரைப்படமாக முகிழ்ந்திருக்கிறது. டோண்ட் மிஸ்.

ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

2024 Parliament election – vote for BJP

இன்றோடு பிரசாரம் முடிகிறது. நம் கண்ணெதிரே இருக்கும் போட்டியாளர்களில் அண்ணாமலையின் நிழலைத் தொடக்கூட யாரும் இல்லை என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் நிச்சயம் தெரியும். படித்தவர், அறிவாளி, நேர்மையானவர், கண்டிப்பானவர், நிர்வாக ரீதியாகத் திறமையானவர் என்று பல திறமைகள் ஒருங்கே பெற்ற ஒருவர் அரசியலுக்கு வருவது அபூர்வம். அப்படி ஒருவர் வந்தாலும் அவர் மக்களின் ஆதரவைப் பெறுவது இன்னும் அபூர்வம். அவர் வெற்றி பெறாவிட்டால் அது நம் தவறு.

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ தொகுதிகள் நாளைய முதல்வருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் எந்த ஒரு தொகுதியும் நாளைய பிரதமர் ஒருவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றதே இல்லை. கோயமுத்தூருக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. கோயமுத்தூர் அண்ணாமலையை நிச்சயம் வெற்றி பெற வைத்து, நாளைய பிரதமர் ஒருவருக்கு முதல் எபி பதவியைக் கொடுத்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்.

பாஜகவுக்கு வாக்களிப்பது ஒவ்வொரு தேசியவாதியின் கடமை. அற்பக் காரணங்களுக்காக வாக்களிக்காமல் இருந்துவிட்டு, பின்னர் தேசியத்துக்காக வெட்டியாகப் பேசும் தவறைச் செய்யாமல், பாஜகவுக்கு வாக்களிப்போம். ஊழலற்ற அரசைத் தரும் ஒரே அரசு பாஜகவின் அரசாகவே இருக்கமுடியும் என்பதை நினைவில் வைத்து வாக்களியுங்கள்.

Share

J Baby Tamil Movie

ஜெ பேபி – 1990களில் இருந்தே ஊர்வசியின் நடிப்பைப் பார்த்துப் பயந்து போய், அவரது படம் என்றாலே கையெடுத்துக் கும்பிட்டு ஒதுங்கி நின்றவன் நான். அதிலும் ஒருவித லூஸு கதாபத்திரமாகவே நடித்து நடித்து அவரது எந்த ஒரு கதாபாத்திரமும் லூஸுதானோ என்று நினைக்க வைத்துவிட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஊர்வசி இத்தனை தத்ரூபமாக நடிப்பார் என்று நினைக்கவே இல்லை.

படத்தைத் தனியாளாகத் தாங்கிப் பிடிக்கிறார் ஊர்வசி. இத்தனை வருடத் திரைப்படங்களில் காண்பிக்காத உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார். இப்படி குறைந்தது பத்துக் காட்சிளாவது சொல்ல முடியும். கண்கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தின் முதல்பாதியிலேயே பேபியின் கதாபாத்திரம் இத்தகையது என்று காட்டி இருந்தால் ஒரு தொடர்ச்சியும் பரிதாபமும் இருந்திருக்கும். ஏனோ அதை விட்டுவிட்டார்கள். மூத்த மகனாக வரும் நடிகரின் நடிப்பும், கல்கத்தாவில் உதவி செய்யும் நடிகரின் நடிப்பும் அபாரம். யதார்த்தம். அட்டகத்தி தினேஷும் நன்றாக நடித்திருக்கிறார். படத்துக்காகத் தொப்பை போட்டிருந்தால் கூடுதல் பாராட்டுகள்.

சில காட்சிகள் மிகப் பிரமாதமாக இருப்பதும் சில காட்சிகள் இழுவையாக இருப்பதும் பலவீனம். சென்னைத் தமிழ் பெரிய பலம். ஒரே ஒரு காட்சியில் தெரசா தன் கைகளை நீட்டி அபயம் காட்டிக்கொண்டிருக்க, அடுத்த சில காட்சிகளில் ‘கடவுளே இல்லை’ என்பது போல தன் கையில் இருக்கும் கயிறுகளை ஹீரோ கழற்றி எறிகிறார். ‘நீலம்’ திரைப்படமென்றால் இது போல ஏதாவது ஒன்று இருக்கவேண்டும் என்பதற்காகவே இதை வைத்திருக்கிறார்கள் போல.

குடும்பத் திரைப்படங்கள் வராத காலங்களில், நிஜமான நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்து, விசுத்தனமான கதையை இத்தனை தரமாக எடுத்து அசத்தி இருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் ‘பெண்மணி அவள் கண்மணி’யை நினைவுபடுத்தின. கட்டாயம் பார்க்கலாம்.

Share

Rebel Tamil Movie

Rebel (T) – தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது ஃபேஷனாகிவிட்டது. ஆங்கிலப் பெயர் வைத்தால் 10% கூடுதல் வரி என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசுக்கு நல்ல லாபமும், தமிழ்க்குடி காத்தான் என்கிற பாராட்டும் கிடைக்கும்.

எப்படி நான் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறேனோ அப்படித்தான் படமும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. கல்லூரிக்குள் நடக்கும் அரசியலை, அதுவும் கலைக்கல்லூரிக்குள் நடக்கும் அரசியல் என்னும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறார்கள். ஒட்டவே இல்லை. மூணாற்றில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களைக் காண்பிக்க நினைக்கும் படத்தில் நம் மனதில் நிற்பது கேரள கம்யூனிஸ காங்கிரஸ் அரசியல் சண்டைகள்தான்!

கம்யூனிஸ்ட்டுகளை முதலில் நல்லவர்களாகக் காண்பித்து, பின்பு அவர்களையும், பாவாடையைக் கழற்றிவிடும் கெட்டவர்களாக்கி, அதற்கொரு முட்டுக் கொடுக்கும் விதமாக, ‘நீ பாத்து வளந்த கம்யூனிஸம் வேற இந்த கம்யூனிஸம் வேற’ என்று என்னவோ சொல்லி… அடேய்களா… ரெண்டு கம்யூனிஸத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்குத் தெரியும். அது கறுப்பா பயங்கரமா இது. இது பயங்கரமா கறுப்பா இருக்கும். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கம்யூனிஸம் என்ன செய்யும் என்பது வரலாற்றில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது இயக்குநருக்குத் தெரியாது போல.

காங்கிரஸ் சார்பாக வரும் இளைஞர் பட்டையைக் கிளப்புகிறார். நன்றாக நடிக்கும் அத்தனை பேரும் மலையாளிகள்! இந்த மலையாளிகள் நடிக்கும் காட்சிகள் அநியாய மண்மணத்தோடு பளபளப்பாக இருக்கின்றன. இயக்குநருக்கு கேரளத் திரையுலகில் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.

படத்தில் வசனம் எழுதியவர் என்னவோ எழுத, காட்சியாக வேறு என்னவோ வருகிறது. வேட்டி கட்டியவனைப் பார்த்ததும் தமிழ் உணர்வு பொங்கி வருது என்று ஒரு பக்கம் வசனகர்த்தா பிலாக்கணம் வைக்க, அங்கே தமிழ்த் தடியர்கள் பேண்ட் சட்டையில் வர, மலையாளக் ‘குடி வெறியர்’களோ அழகாக, பாந்தமாக வேட்டியில் இருக்கிறார்கள். இன்னொரு காட்சியில் வசனகர்த்தா உணர்ச்சிவசப்பட்டு திமுகவின் கொடியை, கறுப்பும் சிவப்புமே நம் நிறம் என்று புல்லரிப்புடன் பேச, கொடியில் கறுப்பு வெள்ளை சிவப்பு என்று அதிமுக கொடி போலக் காண்பிக்கிறார்கள். அதிமுகவுக்கும் புரட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்?

பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் வரும் அதே எரிச்சல் இதிலும். ஆம், கேரள மாணவர்களுள் ஒருவன் கூட நல்லவனில்லை. தமிழ் மாணவர்களுள் ஒருத்தன் கூட கெட்டவனில்லை. இங்கேயே ஒரு படம் பிரசாரப் படமாக மாறித் தோற்றுப் போய்விடுகிறது.

படம் முழுக்க சிவப்பு, புரட்சி, ஈவெரா, சேகுவேரா என்று குறியீடுகள். 80களின் ரஜினி மற்றும் இளையராஜாவைச் சரியாகப் பின்னணியில் வைத்தவர்கள், என்னதான் கம்யூனிஸம் மூணாற்றில் வலுவாக இருந்தது என்றாலும், திமுக அதிமுக தலைவர்களை ஒரே ஓர் இடத்திலாவது வைத்திருக்கலாம்.

80கள் என்பதால் இளையாராஜாவின் தமிழ்ப் பாடல்கள் பின்னணியில். அத்தனையும் மனதை வருடுகின்றன. அதுவும் ஒரு காட்சியில், ‘பூங்காற்றினோடும்’ என்னும் மலையாளப் பாடல் மனதை வருட, அப்படியே படத்தை நிறுத்திவிட்டுப் பாட்டைப் போட்டுக் கேட்டால் என்று மனம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று காலை அந்தப் பாட்டை பலமுறை கேட்டபின்பே இதனை எழுதுகிறேன்.

மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், செயற்கைத்தனமான புரட்சி என்று எரிச்சலை ஏற்படுத்தும், மனதோடு ஒட்டாத இன்னுமொரு தமிழ்ப்படம். மலையாளிகளும் கேமராவும் அருமை.

Share

Lover Tamil Movie

லவ்வர் – எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு டாக்சிக் திரைப்படமாக வந்திருக்கிறது லவ்வர்.

spoilers ahead.

ஒருவன் வேலைக்குப் போவதில்லை. குடிக்கிறான். வீட்டில் பணம் வாங்கிச் செலவழிக்கிறான். பிசினஸ் செய்வதாகச் சொல்லி நஷ்டம் வேறு. இரண்டாம் மனைவி வைத்துக்கொண்டு அம்மாவை நடுரோட்டில் விடும் அப்பாவை அடிக்கப் போகிறான். இவனுக்கு ஒரு காதலி.

கல்லூரிக் காலத்திலேயே இவனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் இவனோ, அவள் வேறு வழியின்றிச் சொல்லும் பொய்களை எல்லாம் குத்திக் கிழித்துப் பெரிதாக்கிக் காண்பித்து அவளை மிரட்டுகிறான். இவன் வேண்டாம் என்று அவள் ஒதுங்கிப் போக ஆரம்பிக்கும் போது, மீண்டும் அவளிடம் கெஞ்சுவது, கூத்தாடுவது, தன்னைச் சேர்த்துக் கொள் எனக் கெஞ்சுகிறான். அவளும் சம்மதிக்கிறாள். மீண்டும் காதலிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னால் உறவு வேறு.

இவன் அவளை மொத்தமாகச் சந்தேகப்பட அவள் ஒரு கட்டத்தில் உதறிவிட்டுப் போகிறாள். அதற்குப் பின்னும் அவன் விடாமல் அவளைத் துரத்த அவள் கடைசி வரை அவன் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. இதனால் தாங்க முடியாமல் தவிக்கும் அவன் அவளை எப்படியாவது மீண்டும் தன் வழிக்குக் கொண்டு வர முயற்சிக்கிறான.

இதற்குப் பிறகுதான் பெரிய பிரச்சினை இருக்கிறது. ஒன்று, அந்தப் பெண் முற்போக்கான பெண். கல்லூரியில் எப்படியோ அவனைக் காதலித்து விட, கல்லூரிக்குப் பிறகான வாழ்க்கை தடம் மாறுகிறது. இத்தனைக்கும் தன் காலில் அவள் நிற்கும் போது ஏன் அவன் பின்னாலே சுற்றுகிறாள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. தூக்கி எறிந்து விட்டுப் போயிருக்க வேண்டும்.

காதலால் அவன் மீது வைத்த பாசத்தால் அப்படி இருக்கிறாள் என்று எடுத்துக் கொண்டால் அது மிகவும் பலவீனமானதாக இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பெண்ணுக்கு மிகத் தெளிவாகவே தெரிகிறது அவன் ஒரு லோஃபர் என்று. அத்தனையையும் தாண்டி அவள் அவனைவிட்டு விலகும்போது, ஒரு கட்டத்தில் அவன் இவளிடமிருந்து விலகிப் போகிறான். விட்டது சனியன் என்றில்லாஎன்றில்லாமல், ஏன் இவள் சென்று அவனைக் கட்டிப்பிடிக்கிறாள் என்பது அடுத்த மில்லியன் டாலர் கேள்வி. உண்மையில் படம் தன் அத்தனை நிலைப்பாடுகளில் இருந்தும் தவறிய தருணம் அதுவே. அந்த காட்சி அந்தப் படத்தையும் அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தையும் மொத்தமாக உடைத்து விட்டது என்பதுதான் உண்மை.

நியாயப்படி இந்தப் பெண் அவனை அழைத்து செருப்பால் ஒரு அறை அறைந்து, இனிமேல் நீ உன் வேலையை பார்த்துக் கொள் என்று சொல்லி இருக்க வேண்டும். இந்தக் காட்சியை ஒரு பெண்ணியத் தருணத்திற்காக நான் சொல்லவில்லை. உண்மையிலேயே அதைச் செய்திருக்க வேண்டும் அந்தப் பெண். அப்படிப்பட்ட ஒரு குடிகாரன்தான் அவனது காதலன். ஆனால் இத்தனைக்கும் பின்னால் சென்று அவள் அவனைக் கட்டிக் கொள்வாள் என்பது பெண்களை நிஜமாகவே மட்டம் தட்டும் ஒரு செயல்.

அடுத்து, இப்படி ஒரு பெண் நல்லவனாக இருந்து விட்டால் எங்கே பிரச்சினை குறைவாக இருக்குமோ என்று அந்தப் பெண்ணுக்கும் ஆயிரம் சிக்கல்களை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் இயக்குநர். நவீனப் பார்வையில் அதுவும் ஒரு திரைக்கதை சூட்சமம்தான் என்றாலும், இது அந்தப் பெண் பக்கத்திற்கான நியாயத்தை பெருமளவில் குறைகிறது. ஏனென்றால், காதலனான குடிகாரனைப் பார்த்துச் சொல்கிறாள், பகலில் குடிக்காதே என்று. அதன் அர்த்தம் இரவில் குடிக்கலாம். கூடவே இவளும் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறாள். ஏற்கெனவே ஒருமுறை தம் அடித்து பார்த்திருக்கிறேன், பிடிக்கவில்லை என்பதால் தம் அடிப்பதில்லை என்கிறாள். கூட இருக்கும் பெண்கள் எல்லாம் கஞ்சா அடிக்கிறார்கள். இதெல்லாம் செய்யும் ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பார்த்து யாருக்குப் பாவம் தோன்றும்? ஆனாலும் இந்தப் படத்தில் தோன்றுகிறது. காரணம் அவளுடைய காதலனை இதைவிட கேவலமானதாக கட்டியிருப்பதால். ஆம், தனக்காக உருகும் ஒரு பெண்ணைப் பாபார்த்து அவன் தேவடியா என்கிறான்.

மீண்டும் ஒரு முறை இப்படம் அதன் அடிப்படையில் உடைவது இறுதிக் காட்சிகாலில். எல்லாம் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு என்று போடும்போது, அந்த லோஃபர் காதலன் மிகப்பெரிய ஒரு உணவுக் கடையை திறந்து வைத்திருக்கிறான். அங்கே அந்தக் காதலி சாப்பிட வருகிறாள். அவனைப் பார்த்துக் கை கொடுக்கிறாள். அவன் வாழ்க்கையில் வென்று விட்டதாக அவளே சொல்கிறாள். உனக்காக சந்தோஷப்படுகிறேன் என்கிறாள். அவன் அவளுக்குப் பிடித்த ஒரு ஸ்வீட்டை கொண்டு வந்து கொடுக்கிறான். இது சொல்ல வருவது என்ன? இப்படிப்பட்ட லோஃபரை எல்லாம் விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் பெண்களே, இவர்கள் நிச்சயம் ஒரு காலத்தில் வெல்வார்கள் என்றா? அப்படிச் சொல்ல நினைத்தால் இந்தப் படம் கிறுக்குத்தனமான ஆண் மையப் படமாக மாறி விடுகிறது. முழுக்கவே இது அராஜகமான ஆண் மையப் படம்தான் என்பது வேறு விஷயம். நான் ஆண் மையப் படங்களுக்கு எதிரி அல்ல. ஆனால் அது நியாயமான விதத்தில் உருவாக வேண்டும்.

அந்த இறுதிக்காட்சி, அதுவரை அந்தப் பெண் பட்ட கஷ்டங்களை எல்லாம் பொடிப்படியாக்குகிறது. நியாயமாக அந்தக் காட்சியில் அந்தப் பெண் ஒரு நல்ல கணவருடன், கையில் ஒரு குழந்தையுடன் இவனைப் பார்த்து, ‘நான் சொன்னேன்ல இவர்தான்’ என்று தன் கணவனிடம் சொல்வது போல் ஒரு செருப்படியுடன் முடித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது இயக்குநரின் பெரிய தவறு.

ஏன் இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்கின்றன? ரொம்ப சிம்பிள். இயக்குநர்கள் எப்போதுமே மார்டனாகத் திரைப்படத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காகத் தங்கள் மனதில் எதெல்லாம் மாடர்ன் என்று நினைக்கிறார்களோ அதையே காட்சிகளாக உருவாக்குகிறார்கள். இதனால்தான் திருமணத்திற்கு முந்தைய உறவு, பெண்கள் தண்ணியடிப்பது, பெண்கள் சிகரெட் புகைப்பது, பெண்கள் கஞ்சா உண்பது எல்லாம் சாதாரணமான விஷயம் என்று மீண்டும் மீண்டும் வலிய நுழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை மறுப்பவர்கள் பூமர் ஆகிவிடுகிறார்கள். இந்தப் படத்திலும் அதுதான் நடக்கிறது.

இத்தனைக்கும் இப்படி லோஃபர் போல அலையும் ஒருவனது குடும்பம் எப்படி இருக்கிறது என்றால் அங்கே அதைவிட பிரச்சினை. அவனது அப்பா இன்னொருத்தியை வைத்துக் கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட குடும்பத்தில் ஒருவனைப் பார்த்து ஒரு பெண், அதுவும் நல்ல நிலையில் இருக்கும் ஒரு பெண், அதுவும் அவனைவிட பல லட்சம் சம்பாதிக்கும் ஒரு பெண் ஏன் காதலிக்க வேண்டும்? இதைத்தான் மார்டன் என்று காண்பிக்கிறார்கள். இதுதான் படத்தை டாக்ஸிக் ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஒரு பெண் ஒரு லோஃபரைக் காதலிக்கலாம் என்பதும் அந்த லோபர் அவளை தேவடியா என்று சொன்னாலும் அவள் கடைசியில் வந்து கட்டிக் கொள்வாள் என்பதும்தான் இந்தப் படத்தை டாக்சிக் படமாக மாற்றுகிறது.

உண்மையில் அந்தக் காதலி ஒரு தடவையாவது அவனைச் செருப்பால் அடிக்காமல் விட்டதுதான் இந்தப் படத்தின் பெரிய மைனஸ் பாயிண்ட்.

மீண்டும் மீண்டும் இது போன்ற நவீனத் திரைப்பட இயக்குநர்களுக்குக் கைகூப்பி ஒரு வேண்டுகோள். தொடக்கம் முதல் இறுதி வரை இப்படிப்பட்ட நவீன கதாநாயகிகளை அழ வைக்காதீர்கள். அந்தப் பெண் நெஞ்சுரம் கொண்டு எதையும் எதிர்த்து நிற்கும் ஒரு பெண்ணாக இருக்கட்டும். இல்லையென்றால் நீங்கள் பேசாமல் துலாபாரம் எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

மணிகண்டனும் ஹீரோயினாக வரும் அந்த பெண்ணும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். திரைக்கதையைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதைக் கொஞ்சம் சரி செய்திருந்தால் படம் ஓரளவு மேம்பட்டியிருக்கும். மணிகண்டனுக்காகவும் அந்தப் பெண்ணுக்காகவும் பார்க்கலாம்.

Share

ஆடு ஜீவிதம்

ஆடு ஜீவிதம் (M)

வளைகுடா நாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஒருவன் பாலைவனத்தில் அராபிய முதலாளி ஒருவனிடம் மாட்டிக்கொண்டு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக அங்கேயே கிடந்து பாடுபடுவதும், அங்கிருந்து தப்பிப்பதும்தான் கதை. சர்வைவல் மூவி வகை.

பென்யாமின் எழுதி ஆடு ஜீவிதம் மலையாள நாவலாக வெளிவந்து (தமிழ் மொழிபெயர்ப்பிலும் கிடைக்கிறது) கிட்டத்தட்ட 2 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்ற நூல். நாவலாக ஆடு ஜீவிதம் மிக முக்கியமான ஒன்று. ஆனால் படமாக அது நாவலைப் போல அத்தனை நேர்த்தியாக வந்திருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.

ஆடு ஜீவிதம் திரைப்படம் வழக்கமான மலையாளப் படங்கள் போல மெல்லவே நகர்கிறது. மிகவும் மெல்ல. அதுவும் இடைவேளைக்குப் பிறகு மிக மிக மெல்லத்தான் நகர்கிறது. என்னதான் ஒருவனது வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகக் கண்முன்னே பார்க்கிறோம் என்றாலும் இத்தனை மெல்ல நகரும் படத்துடன் அமர்ந்திருப்பது பெரிய சவால்தான். இது பாலைவன வாழ்க்கையைக் கண்முன் கொண்டுவருகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு பிளெஸ்ஸி இப்படி ஒரு திரைப்படத்துடன் வந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் இயக்குநர் பிளெஸ்ஸி செய்த ஒரு தவறு, எடுத்த எடுப்பில் நாயகன் வளைகுடா நாட்டுக்கு வந்து இறங்கி இருப்பதைக் காட்டிவிட்டு, அதன் பின்னர் ஃபிளாஷ்பாக்கில் அவனது வீட்டையும் அவன் சந்தோஷமாக இருந்த வாழ்க்கையையும் காண்பித்தது. அப்படி அல்லாமல் அவன் சந்தோஷமாக இருந்த காட்சிகளை எல்லாம் கோவையாக முதலில் கட்டிவிட்டு பின்னர் ஒட்டுமொத்தமாக வளைகுடாவை ஆரம்பித்திருந்தால், மக்கள் அனைவருக்கும் ஒரு பதைபதைப்பு இருந்திருக்கும். அதை இயக்குநர் தவற விட்டுவிட்டார்.

நாவலாக நுணுக்கங்களையும் உள்முரண்பாடுகளையும் உணர்ச்சிச் சிக்கல்களையும் கொண்டிருந்த நஜீப், திரைப்படத்தில் ஒற்றைத்தன்மை உடையவனாக மாறிவிடுகிறான். எங்கே உள்மனச் சிக்கல்களையும் அவனது போராட்டங்களையும் வைத்தால் நாயகனுக்கு எதிரான உணர்வு பார்வையாளர்களுக்கு வந்து விடுமோ என்பதற்காக இயக்குநர் இப்படிச் செய்துவிட்டார் போல. கோபத்தில் நஜீப் ஆடுகளை அடிப்பது, ஆசனவாயில் கம்புகளைச் செருகுவது போன்ற காட்சிகள் எல்லாம் நாவலில் புரிந்துகொள்ள முடியும், திரைப்படத்தில் முடியாது என்று பிளெஸ்ஸி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.

நாவலில் பதறச் செய்யும் இடங்களான, நஜீப் ஆடுகளுடன் வேறு வழியின்றி உறவு கொள்ள முடிவெடுப்பது திரைப்படத்தில் இல்லை. அதேபோல் நாயகன் மிகவும் மிகவும் அங்கதத்துடன் பேசிக்கொள்ளும் காட்சிகள் எதுவுமே இல்லை. ஒவ்வொரு ஆட்டுக்கும் மோகன்லால், இஎம்எஸ் என்றெல்லாம் பெயர் வைப்பது, குறிப்பாக ஓர் ஆட்டுக்கு ஏன் ராணி என்று பெயர் வைத்தேன் என்று சொல்வது போன்ற புன்னகை ததும்பும் காட்சிகள் எதுவுமே படத்தில் வரவில்லை. அதனால் படம் ஒரே சோகமயமாகிவிட்டது.

இத்தனை கஷ்டப்பட்டும் ஓர் இளைஞன் தன் முதலாளியைக் கொன்றால்தான் என்ன என்று நாம் யோசிப்போம். நாவலில் அப்படி ஒரு காட்சி உண்டு. படத்தில் இல்லை.

பென்யாமின் தெளிவாக ஒரு பேட்டியில் சொல்கிறார் (மலையாள மனோரமா பேட்டி), இந்த நாவலின் தொடக்கம், ஒரு தனியாள் அவனுக்கும் கடவுளுக்கும் இடையே எப்படிப் பேசிக்கொள்வான் என்பதுதான் என்கிறார். உண்மையான நஜீப் எத்தனையோ தடவை தற்கொலை செய்துகொண்டால்தான் என்ன என்று யோசித்திருக்கிறான். ஆனால் அதை நாவலாக்கிய பென்யாமின், எங்கேயும் அந்தத் தற்கொலை எண்ணம் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். என்ன ஆனாலும் இறைச் சிந்தனையை விட்டுவிடக் கூடாது என்பதுவே பென்யாமின் அடிப்படை. இப்படமும் கிட்டத்தட்ட அதைச் சொல்கிறது என்றாலும், நான் ஏன் இன்னும் அல்லாவைக் கும்பிடவேண்டும் என்று நஜீப் சலித்துக்கொள்ளும் காட்சி உண்டு. இது ஒரு சின்ன விஷயம். ஆனால் ஒரு நாவலைப் படமாக்கும்போது இப்படி அடிப்படையில் கை வைப்பதில் எனக்கு உடன்பாடு எப்போதுமே கிடையாது. பரதேசி திரைப்படத்தில் மதமாற்றத்துக்காகத்தான் டாக்டர் உதவி செய்தார் என்பதும், ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று காட்சிப்படுத்தல்களிலும் எனக்கு எப்போதுமே உடன்பாடு இல்லை.

பாலைவனத்தில் இதுதான் நமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை என்பதைக் கடினப்பட்டு ஏற்றுக்கொள்ளும் நஜீப் ஒரு கட்டத்தில் ஆடுகளுடன் அன்பாக இருக்க ஆரம்பிக்கிறான். அதனால்தான் அவன் ஆட்டை விட்டுப் பிரிந்து செல்லும்போது அத்தனை வருத்தத்துடன் போகிறான். திரைப்படத்தில் இது சரியாக வரவில்லை. முக்கியமாக ஒரு கர்ப்பிணி ஆடு தன் குட்டியை ஈன்றெடுக்கும் போது, அதை வளர்க்கும் நஜீப், தனக்கு மகன் பிறந்தால் என்ன பெயர் வைக்க நினைத்தானோ அதையே வைக்கிறான். ஆனால் அந்த ஆண் கிடாவுக்கு விதை நீக்க அரபாப் முடிவெடுக்கும்போது துடித்துப் போகிறான். இப்படிப்பட்ட காட்சிகள் எல்லாம் படத்தில் இல்லை.

படம் வேறு நாவல் வேறு என்று எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நேரடியாக எளிமையாகப் போய்விடுகிறது. பாலைவனத்திலிருந்து நஜீப் தப்பித்துப் போவதை அணு அணுவாகக் காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக ஹகீம் இறக்கும் காட்சி அபாரம். படத்தில் உயிரைக் கொடுத்து நடித்திருக்கும் பிரித்விராஜ் மிகப்பெரிய பலம், சில காட்சிகளில் அதீத நடிப்பு என்றாலும் கூட. இந்த இரண்டையும் விட்டுவிட்டால் படத்தில் என்ன இருக்கிறது என்று கேள்வி நமக்கு வரத்தான் செய்கிறது.

இத்தனை மெல்ல நகரும் காட்சிகளை வைத்ததற்குப் பதிலாக நாவலில் பல காட்சிகளை எடுத்துக்கொண்டு அனைத்தையும் சேர்த்து விறுவிறுப்பான திரைக்கதையாக்கி சிறிய சிறிய காட்சிகளாக வேகமாக நகரும் படமாகத் திரைக்கதையாக்கி, கூடவே அங்கதத்தையும் வைத்திருந்தால் படம் நிச்சயம் மேம்பட்டிருக்கும். இப்போது யாரோ ஒருவனின் வலியை நாம் ஏற்கவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவிக்கும் ஒரு நிலையில்தான் இருக்கிறோம்.

மலையாளிகளின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது வளைகுடா நாட்டில் வேலை பார்ப்பார்கள். எனவே அவர்களுக்கு இந்தப் படம் ஒரு நெருக்கத்தைத் தரலாம். ஆனாலும் கூட இத்தனை மெல்ல நகரும் திரைப்படம் எத்தனை மலையாளிகளுக்கு அப்படி ஒரு நெருக்கத்தைத் தரும் என்பது எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படியான திரைப்படங்களுக்கு மலையாளிகள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் நிஜம்தான். தமிழ்ப் பார்வையில் இருந்து நாம் பார்க்கும்போது நமக்கு இந்தப் படம் சிறிது அன்னியப்பட்டு நிற்கும். ஆனாலும் எங்கோ ஒருவன் ஏதோ ஒரு கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு அனுபவிக்கும் துயரை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தால் இந்தப் படம் ஓரளவுக்குப் பிடிக்கலாம்.

Share

Sirdar Udham – Hindi Movie

சர்தார் உதம் (H) – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படம். இப்போதுதான் பார்த்தேன். ஹிந்தித் திரைப்படம் என்றாலும், ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான மேக்கிங். மே அடல் ஹூம், சாவர்க்கர் திரைப்படங்களில் அந்தக் காலத்தைக் கண்முன்னே கொண்டு வருவதில் அதிக கவனம் செலுத்தவில்லை. காரணம், அப்படி படம் எடுப்பது அதிக செலவையும் கற்பனையையும் கோரும் ஒன்று. காலாபாணி திரைப்படம் இதற்கு ஓர் உதாரணம். பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் இவ்விஷயத்தில் கறாராக இருப்பார்கள். காரணம் பெரிய பட்ஜெட்.

கலை விஷயத்தில் கவனமாகவும் பிரமாண்டமாகவும் தயாரிக்கப்படும் படங்கள் காட்சி ரீதியாகப் பார்வையாளனுக்குக் கடத்தும் பல விஷயங்கள் முக்கியமானவை. சர்தார் உதம் இந்த விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையாக வந்திருக்கிறது. சின்ன சின்ன விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார்கள்.

படத்தைப் பொறுத்தவரை, திரைக்கதை ரிவர்ஸ் பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலைக்காக ஒரு சீக்கிய இளைஞன் 20 வருடங்கள் காத்திருந்து பழிவாங்குகிறான் என்பது எப்போதுமே நம்மை வியக்கச் செய்யும் ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வுக்குள்ளேயே ஒரு கதை இருக்கிறது. ஆனால் இதைத் திரைப்படமாக எடுப்பது சுலபமல்ல. பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில், முதலில் ஜாலியன்வாலா பாக் நிகழ்வைக் காட்டிவிட்டு, இறுதிக்காட்சியாக மைக்கேல் ஓ டயரை (ஜாலியன்வாலா பாக் கொலைக்கு உத்தரவிட்டவர்) கொல்வதைக் காட்டுவதுதான் சிறப்பாக இருக்கும்.

ஆனால் இப்படத்தில் முதல் காட்சியிலேயே மைக்கேல் டயரை உதம் சிங் கொல்வதைக் காட்டிவிட்டார்கள். பின்னர் படம் துப்பறிவு வகைத் திரைப்படம் போல நகர்கிறது. உதம் சிங்கை பிரிட்டிஷ் போலிஸ் எப்படி விசாரிக்கிறது, ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதெல்லாம் அணுஅணுவாகக் காட்டப்படுகிறது. இதற்கிடையில் உதம் சிங்கின் வாழ்க்கை நான்-லீனியராக விரிகிறது. இறுதிக்காட்சியாக ஜாலியன்வாலா பாக் படுகொலை வருகிறது. இதுவே படத்தின் மையம் என்பதால் மிக நீண்ட காட்சியாக இதை எடுத்திருக்கிறார்கள். கண்முன்னே நிகழ்ந்த ஒரு நிகழ்வு என்பதால் பதைபதைப்புடன் இதை நாம் பார்க்கிறோம்.

முடிவு இதுதான் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும் என்ற வகைத் திரைப்படம்தான் இது. இருந்தாலும், வழக்கு விசாரணை, சித்திரவதையை இத்தனை தூரம் காண்பித்து, அதையும் விறுவிறுப்பாக எடுத்திருப்பது ஆச்சரியம்தான். மைக்ரோ விஷயங்களில் அதீத கவனம் எடுத்திருப்பதும், வழக்கு விசாரணைகளில் வரும் விஷயங்கள் பெரும்பாலும் உண்மைக்கு அருகில் இருப்பதும் இப்படத்தை முக்கியமானதாக்குகின்றன.  உதம் சிங் தன் கையில், ராம் முஹம்மத் சிங் ஆசாத் இன்று பச்சை குத்தி இருப்பதும், நீதிமன்ற விசாரணையின்போது உதம் சிங்கின் தரப்பு பத்திரிகையில் வரக்கூடாது என்று நீதிபதி சொல்வதும், அப்போது உதம் சிங், ‘பிரிட்டிஷ் இம்பீரியலிஸம்’ ஒழிக என்று கத்தியதும் படத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன.

உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கௌஷல் பிரமாதமாக நடித்திருக்கிறார். இயக்கம் ஷூஜித் சர்க்கார். தமிழர்களுக்கு அறிமுகமானவர்தான். இவரது திரைப்படமான ‘மெட்ராஸ் கஃபே’ ஈழத் தமிழர்களை மட்டம் தட்டிய வகையில் இருந்ததற்காகப் பெரிய பிரச்சினை அப்போது உருவானது. இந்திய அளவில் முக்கியமான திரைப்படமான பின்க் (தமிழில் நேர்கொண்ட பார்வை) இவரது இயக்கத்தில் உருவானதுதான். இவர் இயக்கிய இன்னொரு திரைப்படம் ‘அக்டோபர்’ நம் பாலுமகேந்திராவின் இயக்கத்தைப் போன்ற ஒரு திரைப்படம். விக்கி டோனர் (தமிழில் தாராள பிரபு) இவர் இயக்கியதுதான்.

நம் நாட்டு விடுதலைக்காகப் போரிட்ட வீரர்களின் படத்தைப் பார்க்க வேண்டியது, அதுவும் இத்தனை தரமான படத்தைப் பார்க்க வேண்டியது நம் கடமை.

Share

Vinayak Damodar Savakar (Hindi Movie)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் (H) – சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்திருக்கிறார்கள்.

சாவர்க்கரின் அரசியல் வாழ்க்கை மூன்று கட்டங்கள் கொண்டது. ஒன்று, அவரது ஆரம்ப காலப் போராட்டங்கள், ஆயுதம் மூலம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது. இரண்டாவது, அந்தமான் சிறையில் அவர் கழித்த கொடூரமான சித்திரவதைக் காலங்கள். அங்கேயும் சாவர்க்கர் செய்த அரசியல், சமூகப் போராட்டங்கள். மூன்றாவது, அவரது விடுதலைக்குப் பின்னரான இந்திய அரசியல் காலகட்டம்.

இந்த மூன்று காலகட்டங்களிலும் சாவர்க்கரின் பங்களிப்பை ஒரு திரைப்படத்துக்குள் கொண்டு வருவது பெரிய சவால். சாவர்க்கரைப் பற்றி மட்டும் திரைப்படம் எடுத்துவிடமுடியாது என்பது இதில் இன்னொரு பிரச்சினை. சாவர்க்கரால் நிகழ்ந்தவை, சாவர்க்கரால் தூண்டப்பட்டவர்கள் செய்த புரட்சிகள் என எல்லாவற்றையும் காண்பித்தாக வேண்டும். இப்படிக் கம்பி மேல் நடக்கும் வித்தையில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது இந்தத் திரைப்படம்.

படத்தை சாபேகர் சகோதரர்களின் வீரச் செயல்களில் ஆரம்பித்தது நல்ல திரைக்கதை. சாபேகர் சகோதரர்களின் தியாகத்தையும் சாவர்க்கர் சகோதரர்களின் தியாகத்தையும் நான் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரசின் ஒடுக்குமுறைகளில் சிக்குவது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை. அதிலும் சாபேகர் சகோதரர்கள் மூவரும் ஒரே வாரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டதெல்லாம் எப்பேற்பட்ட பலிதானம்!

ஒரு திரைப்படமாக இத்திரைப்படம் மிகப் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அவசரமாகக் கதையைச் சொல்ல நினைக்காமல், ஒவ்வொரு காட்சியையும் பொறுமையாக நிதானமாக இயக்கி இருக்கிறார் இயக்குநர். ஒரு திரைப்படமாக இது உயர்ந்து நிற்பது இந்த உத்தியால்தான். 2001ல் ஹிந்தியில் வந்த சாவர்க்கர் திரைப்படத்தைச் சில மணித்துளிகள் பார்த்தேன். வெறும் வசனங்களால் ஆன படம் அது. ஆனால் இத்திரைப்படம் காட்சிகளாலும், தீவிரமான ஆழமான சுருக்கமான வசனங்களாலும் ஆனது.

சாவர்க்கரின் குடும்பத்தின் தியாகத்தை எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டும் வைத்தது சிறப்பு. கணேஷ் சாவர்க்கர் தன் தம்பி விநாயக் (வீர) சாவர்க்கரிடம், என்னை ஒரு முறை தழுவிக்கொண்டு விடை கொடுக்க மாட்டாயா என்று கேட்கும் தொடக்க காட்சியில் உணர்ச்சிவசப்பட்டேன். அண்ணன் தம்பிகளின் இந்த உணர்ச்சிப் போராட்டத்தை, சொற்பமான காட்சிகளில் கடைசி வரை சிறப்பாகக் காண்பிக்கிறார் இயக்குநர்.

இண்டியா ஹவுஸ் என்ற பெயர் தரும் கிளர்ச்சியை, இந்திய சுதந்திரத்தின் ஆயுதப் போராட்டத்தை அறிந்தவர்கள் உணர்வார்கள். சாவர்க்கர் இண்டியா ஹவுஸில் ஷ்யாமாஜியுடன் சந்திக்கும் காட்சியெல்லாம் அபாரம். அங்கே ஆயுதமேந்திப் போராட மண்டையம் ஆச்சார்யா, மதன்லால் திங்ரா என்ற பெரும்படையே இருக்க, அனைவரும் ஒன்று கூடி அங்கேயே பெரும் போராட்டத்துக்கான விதையை விதைக்கிறார்கள். ஆங்கில அரசின் மண்ணிலேயே முதல் அரசியல் கொலை நிகழ்கிறது. தொடர்ந்து வெடிகுண்டு தயாரிக்கும் கையேட்டைக் கைப்பற்றுகிறார் சாவர்க்கர். அதைத் தொடர்ந்து இந்தியாவில் குதிராம் போஸ் குண்டு வீசுகிறார். வரலாற்றின் நெடுக நடந்த இந்த நிகழ்வுகளை எப்படித் திரைக்கதையாக்கினார்கள் என்பது ஆச்சரியம்தான். தொடக்க காட்சி முதல் சார்வக்கர் அந்தமான் செல்லும் இடைவேளை வர துளிகூட தொய்வில்லை. இத்தனை ஆவேசமான திரைக்கதையை நான் எதிர்பார்க்கவில்லை.

இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தைப் பற்றி அறியாதவர்களுக்கு இத்திரைப்படம் வெறும் நேம் டிராப்பிங் அனுபவமாக உறையக் கூடும். ஒவ்வொருவரும் தூக்கிலிடப்படும் காட்சி இரண்டு நொடிகளே வருகின்றன. ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் பெரும் வரலாறு உள்ளது. தூக்கில் தொங்கவிடப்படுபவர்களின் வயது சராசரியாக இருபது. மீசை வளரும் முன்னே ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்துச் சாகிறார்கள். இக்காட்சிகள் இந்தத் திரைப்படத்தில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் மேடை நாடகப் பாணியில் இருந்தாலும் நம்மை அசைத்துப் பார்க்கிறது.

அந்தமானில் சாவர்க்கர் படும் வேதனைகள் இடைவேளைக்குப் பிறகான ஒரு மணி நேரத்தில் காட்டப்படுகின்றன. அங்கே சாவர்க்கர் அடையும் மனரீதியான நெருக்கடிகள் சிறப்பாகவே காட்சிப்படுத்தப்படுகின்றன. அதிலும் ரெஜினால்ட் கிரடாக்கும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் காட்சி அபாரம். ஆனாலும், அந்த நெருக்கடியிலும் சாவர்க்கர் அங்கே இருந்தபடியே சிறைக்குள் ஆற்றிய பெரும் சாதனைகள் சரியாகக் காட்டப்படவில்லை. சிறிய சிறிய காட்சிகளாக அவை நகர்ந்து போகின்றன. இதை இன்னும் சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கலாம். அதேபோல் அந்தமானில் நடந்த கர்வாப்ஸியின் அவசியத்தையும் இன்னும் சிறப்பாகப் படமாக்கி இருக்கலாம். ஆனால் சாவர்க்கர் அந்தமானில் பட்ட கஷ்டங்களை மட்டும் காட்டவேண்டும் என்று அணுகி இருக்கிறார். ஒருநோக்கில் அதிலும் தவறில்லை என்றே சொல்லவேண்டும்.

படத்தின் அடுத்த நகர்வு, காந்திஜி கொலை காலகட்டம். இப்போது சாவர்க்கரின் வீடு, ஆயுதம் ஏந்திப் போராடும் வீரர்களின் உறைவிடம் போல ஆகிறது. கோட்ஸே உட்பட. காந்தி கொல்லப்படுகிறார். சாவர்க்கர் கைதாகிறார். இவையெல்லாம் டாக்குமென்ட்ரி போலச் செல்கிறது. மேடை நாடகப் பாணி என்றாலும், இதையும் சிறப்பாகப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.

இயக்குநராகவும் நடிகராகவும் ரந்தீப் ஹூடா செய்திருப்பது மாபெரும் சாதனை. சாவர்க்கரைப் பற்றிய சிறப்பான திரைப்படம் இது. ரந்தீப் ஹூடா சாவர்க்கராகவே மாறி இருக்கிறார். சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றை இப்படி ஒரு திரைக்கதையாக மாற்றியதற்காக இவரை எத்தனை பாராட்டினாலும் தகும். அதே போல் சாவர்க்கரின் 1857 புத்தகம் எப்படி ஆயுதப் போராட்டக்காரர்களின் கீதையாக மாறியது என்பதைக் காட்சிரீதியாக அட்டகாசமாகப் படமாக்கி இருப்பதையும் பாராட்டவேண்டும்.

இந்தத் திரைப்படத்தின் போதாமைகள் என்ன? இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய சில செய்திகள் அவசர அவசரமாகக் கடந்து போவது. சில நிகழ்வுகள் முன்னும் பின்னும் இருப்பது. சாவர்க்கர் போன்ற ஒரு தலைவரின் படத்தில் இதைத் தவிர்க்க முடியாது.

இப்படத்தின் பெரிய சறுக்கல் எது? காந்தியும் நேருவும் கோகலேவும் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம். காந்தியை ஒரு கோமாளி போலவும், ஹிந்துக்களை வஞ்சித்தவர் போலவும் காண்பிக்கிறார்கள். இது அரசியல்ரீதியாகவும் நிஜத்திலும் தவறு. இண்டியா ஹவுஸிலும், பின்னர் சாவர்க்கரின் வீட்டிலும், காந்தியும் சாவர்க்கரும் பேசிக்கொள்ளும் வசனங்களில் சாவர்க்கர் பேசுவது, காந்தியின் மீது வன்மத்தைக் கொட்டுவது போல் இருப்பது தவிர்த்திருக்கப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து நிஜத்தில் சாவர்க்கர் தன்னுடைய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்தில் மகாத்மா காந்திஜி என அவரைக் குறிப்பிட்டிருக்கிறார் என்றே நினைக்கிறேன். திரைப்படத்தில் கோகலே கோமாளி போல் சிரிப்பது அனாவசியம். நேருவும் அப்படியே. காந்தியைத் தவிர மற்றவர்களைப் பற்றிய காட்சிகள் எல்லாம் ஓரிரு நொடிகளே வருகின்றன என்றாலும் தவிர்த்திருக்கலாம்.

இந்தியாவுக்கான சுதந்திரம் பற்றி காந்தியின் அஹிம்சைப் போராட்டப் போராளிகள் நமக்குச் சொல்லப்பட்டிருக்கும் அளவுக்கு ஆயுதப் போராளிகள் சொல்லப்படவில்லை என்பது நூறு சதவீதம் உண்மை. இந்த இரண்டு வழிகளும் சேர்ந்தே நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தன என்பதுவும் உண்மை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் காந்தியைப் போன்ற ஒருவரே மக்கள் தலைவராக இருக்கமுடியும் என்பதும் உண்மை. ஆனால் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் பெயர்கள் கூட நம்மிடம் இருந்து மறைக்கப்பட்டதெல்லாம் அரசியல். அந்தப் பெருங்குறையை இத்திரைப்படம் ஓரளவுக்குக் குறைக்கிறது.

Share