Tag Archive for புத்தகம்

ஒரு தமிழ்ப் புத்தகம்

ஒரு தமிழ்ப் புத்தகம். 40 பக்கங்கள் படித்தேன். முக்கியமான எழுத்தாளர். பதிப்பகக்காரர் நண்பர். அவர் வருத்தப்படக்கூடாது என்பதற்காகக் கிசுகிசு போலச் சொல்கிறேன். அந்தக் காலக் கதை என்றால், எத்தனை வருடங்களுக்கு முன்பு நடந்ததோ அதை ஒட்டிய ஒரு பேச்சுவழக்கு நம் மனதில் பதிவாகி இருக்கிறது. புராண காலம் என்றால் ஒரு பேச்சு வழக்கு, அரசர் காலம் என்றால் அதற்கு ஒரு பேச்சு வழக்கு என நமக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கிறது. அதை மாற்றுவதில் தவறில்லை. சரியான ஆதாரத்தோடு சரியான பின்பலத்தோடு மாற்றினால் பரவாயில்லை. அதை ஒரே அடியாக மாற்றுகிறேன் என்பதும், அதற்கும் தாண்டி போவதும் நிச்சயம் நம்மைப் புத்தகத்திலிருந்து அந்நியமாக்கிவிடும். எனக்கும் அப்படித்தான் நடந்தது. அதிலும் குறிப்பாக, கடவுள் ‘இப்ப பாருடா’ என்று சொல்லிவிட்டு ‘வில்லனை’ அடிப்பதை எல்லாம் தாங்கிக் கொள்ளும் மனவலிமை எனக்கில்லை.

Share

பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share

2018ல் வாசித்தவை

2018ல் படித்த புத்தகங்கள்:

* சைவ பேலியோ டயட் – பா.ராகவன்
* பேட்டை – தமிழ்ப்பிரபா
* எனது நாடக வாழ்க்கை – அவ்வை சண்முகம்
* வருவதற்கு முன்பிருந்த வெய்யில் – ஜி.கார்ல் மார்க்ஸ்
* எனது பர்மா நடைப்பயணம் – வெ.சாமிநாத சர்மா
* முஸ்தபாவைச் சுட்டுக் கொன்றவர்கள் – அகரமுதல்வன்
* சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்
* Mistress Throne – Ruchir Gupta
* Ivory throne – Manu S. Pillai (Half read!)
* நிமித்தம் – எஸ்.ராமகிருஷ்ணன்
* Idol Thief – Vijayakumar
* ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ.சிவசுப்பிரமணியன்
* வெட்டாட்டம் – ஷான் கருப்பசாமி
* பீரங்கிப் பாடல்கள் – என்.எஸ்.மாதவன், தமிழில்: இரா.முருகன்
* காச்சர் கோச்சர் – விவேக் ஷான்பாக், தமிழில்: நல்லதம்பி
* சிள்வண்டு முதல் கிகா பைட் வரை – ஹாலாஸ்யன்
* சிறைச்சாலை சிந்தனைகள் – எம்.ஆர்.ராதா (விந்தன் செய்த நேர்காணல்)
* இந்தியாவின் இருண்ட காலம் – சசி தரூர் (பாதி!)
* பேட்டை – தமிழ்ப் பிரபா
* எம்ஜியார் என்கிற ஹிந்து – ம.வெங்கடேசன்
* நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் – மாரிதாஸ்
* ஊழல் உளவு அரசியல் – சவுக்கு சங்கர்
* வெங்கட் சாமிநாதன் கட்டுரைகள் (தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு)
* பின்லாந்து காட்டும் வழி
* கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல் (இன்னும் வெளிவரவில்லை.)
* 1975 – இரா.முருகன் (இன்னும் வெளிவரவில்லை.)
* மலைக்காடு – சீ.முத்துசாமி (இன்னும் வெளிவரவில்லை.)
* பழி – அய்யனார் விஸ்வநாத் (இன்னும் வெளிவரவில்லை.)
* சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள் (சென்னையர் கதைகள்)

இவை போக, 12 வலம் இதழ்கள் வெளிவருவதில் பங்காற்றி இருக்கிறேன்.

பொதுவாகவே ஒரு புத்தகத்தை எடுத்தால் முடித்துவிடுவதுதான் வழக்கம். ஆனால் இந்த வருடம் முடிக்காமல் விட்ட சில புத்தகங்களும் உள்ளன. இந்த வழக்கத்தைக் கைவிட்டு, எதிர்வரும் 2019ல் முழுமையாக ஒரு புத்தகத்தைப் படித்துவிடவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஏப்ரல் வாக்கில் தொடங்கும் ஒருவித சோம்பேறித்தனம் ஜூன் முடிவது வரை நீடிக்கிறது. பிள்ளைகளுக்கு விடுமுறை நேரம் என்பதே காரணம்.

அடுத்த வருடத்தில் இதைவிட இரண்டு மடங்கு புத்தகங்களாவது படிக்கவேண்டும் என்று ஒரு சபதம். பார்க்கலாம்.

Share

Halasyan

ஹாலாஸ்யனின் கட்டுரைகள்

பொதுவாகவே அறிவியல்/சூழலியல் தமிழ்க் கட்டுரைகளை (ஆங்கிலக் கட்டுரைகளையும்!) நான் அதிகம் வாசிப்பதில்லை. முதலும் கடைசியுமான காரணம், இவை என் தலைக்கு மேலே பயணிப்பவை. டிஸ்கவரி சானல்களில் வரும் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் பார்ப்பதுண்டு. அவை அசரடிக்கும் வகையில் படம்பிடிக்கப் படுபவை. ஒரு மணி நேர ஸ்கிரிப்ட்டுக்கு அவர்கள் எடுத்துக்கொள்ளும் கவனமும் உழைப்பும் ஆச்சரியமானவை. ஆனால் அவற்றில் எதோ ஒருவகையில் ஒரு அந்நியத் தன்மை இருக்கும். ஹாலாஸ்யனின் கட்டுரைகளில் அந்த அந்நியத்தன்மை இருப்பதில்லை. நேரடியாகத் தமிழில் எழுதப்படும் கட்டுரைகள். தமிழர்களின் சராசரி அறிவியல் அறிவை, விருப்பத்தை அறிந்துகொண்ட ஒருவர் எழுதும் கட்டுரைகள்.

தமிழில் பெரும்பாலான அறிவியல் கட்டுரை முயற்சிகள், ஒன்று, குறைவான அறிவியலுடன் பெரும்பாலும் கிண்டல் பேச்சுக்கள் மூலம் அறிவியலை விளக்கப் பயன்படும் கட்டுரைகளாக அமையும். அல்லது, தீவிரமான அறிவியல் கட்டுரைகளாக, அறிவியல் பற்றி ஏற்கெனவே அறிந்திருப்பவர்களுக்கான கட்டுரைகளாக அமையும். என்.ராமதுரை போன்ற சிலர் இந்த இரண்டுக்கும் இடைப்பட்டு கட்டுரைகள் முயன்றிருக்கிறார்கள். ஹாலாஸ்யன் இதில் அடுத்த படி.

விளக்க சில நகைச்சுவைத் தொடர்களை, உரையாடல்களைப் பயன்படுத்தினாலும் அவற்றிலேயே உறைந்துவிடுவதில்லை ஹாலாஸ்யன். அறிவியல் 90% இருக்கவேண்டும் என்பதில் பிறழ்வதில்லை.

மிகச் சரியான தமிழ் வார்த்தைகளைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறார். உருவாக்குகிறார். ஏன் அந்தத் தமிழ் அறிவியல் வார்த்தைகளை உருவாக்குகிறோம் என்பதில் அவருக்கு சரியான புரிதல் இருப்பதால், அவை பெரும்பாலும் சரியான வார்த்தைகளாகவே அமைகின்றன. ஒன்றிரண்டு கட்டுரைகள் எழுதிவிட்டு ஓய்ந்து போய்விடுவதில்லை என்பது முக்கியமாகச் சொல்லவேண்டியது. தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதுகிறார்.

உலக அறிவியல் முன்னேற்றங்கள் குறித்துத் தொடர்ச்சியாகத் தமிழில் அறிமுகப்படுத்தும் ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது. சமீபத்தில் எழுத வந்த இளைஞர்களில் (குழந்தை என்றே சொல்லவேண்டும்!) தனிப்பாதை ஒன்றைக் கைக்கொண்டிருக்கிறார் ஹாலாஸ்யன். தொடர்ச்சியாக இதே திக்கில் இவர் எழுதுவாரானால் இவரது ஒட்டுமொத்த தொகுப்பு தமிழுக்கான கொடையாக இருக்கும்.

ஹாலாஸ்யனின் புத்தகங்கள்:

சிள்வண்டு முதல் கிகாபைட்ஸ் வரை, கிழக்கு பதிப்பகம்.
நுண்ணுயிர்கள் ஓர் அறிமுகம், யாவரும்.
எக்காலம், பார்வதி படைப்பகம்.

ஹாலாஸ்யனின் சில கட்டுரைகள்:

http://www.dinamani.com/junction/aachariyamoottum-ariviyal
http://www.valamonline.in/search/label/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
https://solvanam.com/author/halasyan/

ஹாலாஸ்யனின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/yes.eye.we.yea

 

 

 

Share

கெடை காடு

ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவல் படித்தேன். முன்பே வாங்கி வைத்திருந்த நாவல். அப்போது காவ்யா வெளியீடாக வந்தது. தற்போது டிஸ்கவரி வெளியீடாக வந்திருக்கிறது.

100-00-0002-258-9_b-01

நாவலின் சிறப்பு, கதை என்று எதுவுமில்லை. ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நண்பர்கள் குழு மாடுகளைப் பத்திக்கொண்டு போய் குள்ராட்டி என்னும் மலைக்காட்டுக்குச் சென்று அங்கே தங்கி இருக்கிறார்கள். அவ்வளவுதான் கதை. இதனூடாகச் சொல்லப்படும் பல்வேறு நினைவுகள், சிறு கதைகள், நிகழ்வுகள் இதுதான் நாவல்.

இதனால் ஒட்டுமொத்த நாவலும் விவரணைகளாகவே இடம்பெறுகின்றன. காட்டையும் ஊரையும் அதன்வழியே கோனார்களையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் ஏக்நாத். இதில் இன்னும் சிறப்பு என்பது, நாவலின் விவரணைகளில் பயன்படுத்தப்படும் தமிழும் வார்த்தைகளும்தான். அப்படியே மண் மனம் கமழ, காட்டு மணம் கமழ மிகப் பிரமாதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் பேச்சு வழக்கில் நெல்லை வட்டார வழக்கு சுத்தமாகக் கையாளப்பட்டுள்ளது. வட்டார வழக்கின் பயன்பாட்டை தேவைக்காக மட்டும் பயன்படுத்தி இருப்பது அழகு. இல்லையென்றால் முழுமையாக நாவலில் உட்புகமுடியாமல் போயிருக்கலாம். இவ்வழக்குக்கு ஈடாக கதை சொல்லியின் நடை அமர்க்களப்படுத்துகிறது.

நாவலின் காலம் 70கள் என்று கொள்ளுமாறு பல குறிப்புகள் உள்ளன. இன்று வாசிக்கும்போது காட்டில் வசிப்பது குறித்த ஏக்கத்தைக் கொண்டு வருவதில் இந்நாவல் வெற்றி பெறுகிறது என்றே சொல்லவெண்டும். (இந்த இடத்தில் தேவையில்லை என்றாலும் ஒன்று – நாவலில் ஓரிடத்தில் அனைவரும் சிவாஜி எம்ஜியார் பாடல்களைப் பாடும் இடம். அதுவும் எதோ ஒரு ஏக்கத்தைத் தந்த ஒன்றே.)

சில குறைகள் என்று பார்த்தால் – நாவல் வெறும் கதை சொல்லல் என்ற போக்குக்கு மேல் எழவே இல்லை. நாவலின் பின்னணியாக எவ்வித அரசியல் வரலாற்றுப் பின்னணியும் வரவில்லை. இப்படி நிச்சயம் வரத்தான் வேண்டுமா என்பது ஒரு பக்கம். இப்படி வராததால் நாவல் மிக மிக நேர்க்கோட்டுப் பாதையில் வெறும் நிகழ்வுகளைப் பட்டியலிடும் ஒன்றாகக் குறுகிப் போய்விடுகிறது. இன்னொரு குறை என்றால், வாசகர்களை ஊகிக்கவிடாமல் அதை நாவலாசிரியரே சொல்வது. இதனால் ஒரு வைரமுத்துத்தனம் நாவலில் வந்துவிடுகிறது. கெடைக்குப் போய்விட்டு நாள்கழித்து வரும் மகனுக்கு அம்மா கோழி அடித்துக் குழம்பு வைக்கிறாள் என்பதே போதுமானது. பல நாள் நல்ல சாப்பாடு சாப்பிடாதவனுக்கு எந்த ஒரு தாயும் செய்வது இதைத்தான் என்பது யாருக்கும் புரியும். தாயுள்ளம் இதை ஏற்கெனவே அறிந்திருந்தது என்று எழுதுவது ஒரு திணிப்பு. இதை வாசகனே புரிந்துகொள்ளும்போது வரும் ஒரு இன்பத்தை இவ்வரிகள் குலைக்கின்றன. இதைப் போன்ற பயன்பாடு நாவல் முழுக்க பல இடங்களில் வருகிறது. உச்சிமகாளியின் காதல் முயற்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகின்றன. கெடையை மேய்த்துக்கொண்டு காட்டைப் பற்றிய சித்திரங்களில் ஊர் பற்றிய நிகழ்வுகள் அதிகம் சொல்லப்படுவதும் ஒரு வகையில் சலிப்பே. கோனார்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்த சித்திரம் நாவலில் உருவாகி வந்தாலும், மற்ற சாதிகளைப் பற்றிய விரிவான பதிவோ அவர்களுடனான உறவின் எல்லைகளோ சொல்லப்படவில்லை. எல்லா சாதியும் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பது போன்ற சித்திரம் ஒன்று மட்டும் எப்படியோ மேலோட்டமாக உருவாகிறது.

இவற்றையெல்லாம் மீறி நாவல் நம்மைக் காட்டுக்குள் கொண்டு செல்கிறது என்பது உண்மைதான். காட்டைப் பற்றிய ஏக்கம் எல்லா நவீன மனங்களுக்குள்ளும் இருக்கிறது என்பதை இந்நாவல் சரியாகப் பிடித்துவிடுகிறது. அந்தக் காட்டைப் பற்றிய விவரணைகளில் நாவலாசிரியர் சொல்லும் பல விஷயங்கள், எத்தனை தூரம் இவர் காட்டைப் படித்திருக்கிறார் என்பதைப் புரியவைக்கிறது. காட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு எழுதுவது அல்ல, காட்டிலேயே வாழ்ந்து எழுதுவது. அவ்வகையில் இந்நாவல் ஒரு முக்கியமான பதிவுதான்.

நாவலை வாங்க: http://www.nhm.in/shop/1000000022589.html

Share