Archive for Uncategorized

12th fail

12th Fail (H) – ஒரு நல்ல திரைப்படமும் நல்ல புத்தகமும் ஒரு வகையில் ஒன்றுதான். எப்போது அது நமக்கு நிகழ வேண்டும் என்றிருக்கிறதோ அப்போதே நிகழும். இந்தத் திரைப்படத்தைப் பல பல சமயங்களில் பலர் பார்க்கச் சொல்லியும் ஏதோ ஓர் உந்துதல் இன்றிப் பார்க்காமலேயே இருந்தேன். இன்று பார்த்தேன்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு மனதைக் கொள்ளை கொள்ளும் மிக அருமையான திரைப்படத்தைப் பார்த்த உணர்வை எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இது திரைப்படம் அல்ல, ஓர் அனுபவம். ஒவ்வொரு நடிகரும் எத்தனை இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாழ்க்கையை வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். அதுவும் இறுதிக் கட்டக் காட்சியில் கண்கலங்காதவர்களே இருக்க முடியாது.

ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்படும் திரைப்படம், இருப்பதிலேயே சவாலானது. ஆனால்‌ இதில் கலக்கிவிட்டார்கள்.

ஒரே ஒரு வருத்தம்தான். இந்த ஐபிஎஸ் அதிகாரி அரசுக்கும் சமூகத்திற்கும் மண்டியிடாமல் கடைசிவரை இதே நேர்மையுடன் இருக்க வேண்டுமே என்பதுதான். ஓர் உட்டோப்பியன் உலகமாக இருந்திருக்கும் சாத்தியக்கூறு வந்திருந்தாலும் கூட, இந்தத் திரைப்படத்தில் இது உண்மைக் கதை என்று சொல்லாமல் இருந்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். அந்த அளவுக்கு இந்தக் கதாபாத்திரம் நேர்மையைத் தூக்கிப் பிடிக்கிறது. இயல்பான வாழ்க்கையில் அது அத்தனை எளிதானதல்ல. இந்தத் திரைக் கதாபாத்திரம் நிஜத்தில் தோற்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உண்மைக் கதை என்பதை காட்டாமல் இயக்குநர் தவிர்த்திருக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு இந்தப் படத்தில் ஒன்றி விட்டேன்.

பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்து விடுங்கள். இந்தியத் திரை உலகம் பெருமை கொள்ளும் ஓர் அனுபவம் இந்த திரைப்படம்.

ஒவ்வொரு திரைப்படம் சில சமயம் மெதுவாகப் போகும். ஆனால் அப்படி மெதுவாகப் போகும் காட்சிகள் கூட ஒரு பரபரப்பை உருவாக்கினால் அதுவே அந்தத் திரைப்படத்தின் வெற்றி. இந்தத் திரைப்படம் அந்த வகையைச் சார்ந்தது. இறுதிக் காட்சியில் மெல்ல மெல்ல நகரும் விதமும், அந்த இசையும், அந்தப் பாடலும், கண்கலங்க நிற்கும் ஹீரோவும், ஃபோனில் பேசும் அம்மாவும், கட்டிப்பிடித்துக் கொண்டு கண்ணீர் விடும் நண்பர்களும் என உணர்ச்சிமயமான தருணம். மறக்க முடியாத தருணம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கும் இத்திரைப்படத்தில் ஒரு செய்தி உள்ளது. இந்தப் படமும் ஒரு வகையில் ஒதுக்கப்பட்டவர்களின் நசுக்கப்பட்டவர்களின் சார்பாகப் பேசும் திரைப்படம்தான். ஆனால் இந்தத் திரைப்படத்தில் எந்த ஒரு சமூகத்தின் மீதும் தனிப்பட்ட வன்மமோ கோபமோ வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமான சமூகத்தின் மீதான கோபமும், அந்தச் சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சரியான நோக்கமும் மிகக் கச்சிதமாக வெளிப்படும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்திற்குரிய உண்மையான மனிதர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து வந்த ஒரு பிராமணர் என்று சொல்லப்பட்டாலும், திரைப்படத்தில் அவர் எந்த ஜாதி என்பதைக் காட்டவில்லை. மாறாக, மிகுந்த பின்தங்கிய ஒரு கிராமத்திலிருந்து வந்து ஆங்கிலம் தெரியாமல் போராடும் ஒரு மனிதன், இந்தச் சமூகத்தில் எந்த அளவு கஷ்டப்படுகிறான் என்பதை விரிவாகக் காட்டி இருக்கிறார்கள். அப்படிக் காட்டும்போது அந்த மனிதருடன் சேர்ந்து, வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் மற்ற மனிதர்களின் கதைகளைச் சொல்லும் பொழுது, எந்த ஒரு குரோதத்தையும் வெளிப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார்கள். வீம்புக்காக யோசிக்காமல் அன்புக்காக யோசிக்கும் இயக்குநரால் மட்டுமே இப்படி ஒரு திரை அனுபவத்தை வழங்க முடியும்.

Share

Nerungu varum idiyosai audio book

நெருங்கி வரும் இடியோசை நாவலின் ஒலி வடிவம். முழுமையாகக் கேட்பது எப்படி?

ஆராலிட்டி ஆப் அல்லது கூகிள் ஆடியோ ப்ளே புக் அல்லது ஸ்பாட்டிஃபை அல்லது ஸ்டோரி டெல்லில் கேட்கலாம்.

Share

Aangaaram Novel

ஆங்காரம் நாவல் கிண்டிலில் வாசித்தேன். ஏக்நாத் எழுதியது. கதை பல இடங்களில் அலை பாய்வதைக் குறைத்திருக்கலாம். நெல்லை‌ வழக்கும் களமும் ப்ளஸ். வாய்மொழிக் கதைகளுக்குப் பின்னே நாவலுடன் ஒரு தொடர்பு இருப்பது முக்கியம். இல்லையென்றால் அவை வெற்றுக் கதைகளாகவே எஞ்சும் அபாயம் உள்ளது. நாவல் முழுக்க வெளிப்படும் மண் சார்ந்த அனுபவத்துக்காக வாசிக்கலாம்.

Share

Two movies

Little hearts (M) – சுமாரான படம். ஷேன் நிகம்-க்காகப் பார்த்தேன். சிறிய புன்னகை ஆங்காங்கே வருகிறது என்றாலும் மொத்தத்தில் அறுவை.

கோடி (K) – பார்க்கலாம். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் இழுவையால் நீர்த்துவிட்டது. என்னைப் போல் தனஞ்செய் பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இரண்டும் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

வாழை

வாழை – ஒரே வார்த்தையில் செல்வதென்றால் வாழ்க்கை.

Spoilers ahead.

நல்ல திரைப்படம். திரைக்கதையில் நம்மை இணைக்க சிறுவனின் வாழ்க்கையையும் அவனது நட்பையும் சித்தரித்த விதம் அருமை. இந்த காட்சிகளில் இருந்துதான் நாம் திரைப்படத்துக்குள் நுழைகிறோம். அங்கங்கே கதிர் அருவாள் கம்யூனிசம் என்று ஊறுகாய் போல் காட்டினாலும் படம் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் வலியை விரிவாகப் பேசுகிறது. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லை அறிந்து சிறப்பாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் இரண்டு சிறுவர்கள் அமர்க்களம் செய்திருக்கிறார்கள். கமல் ரஜினி பற்றிய அளவான வசனங்கள் அள்ளிக்கொண்டு போகின்றன.

குறைகளைப் பேசும் நேரம் இதுவல்ல என்றாலும் 90களின் விருதுத் திரைப்பட சாயலைக் கொஞ்சம் தவிர்த்து இருந்திருக்கலாம். கடைசிக் காட்சியில் வரும் அதீத உணர்ச்சியையும் கொஞ்சம் மட்டுப்படுத்தி இருக்கலாம். எதிர்பாராத திடுக்கிடலுக்கு ஏற்ற இதுவும் ஒருவகை யதார்த்தம்தானே என்றால் அதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால் உச்ச காட்சிக்குப் பின்னர் அந்தச் சிறுவன் சாப்பிட அமர்வது கதையைத் தாண்டிப் பயணிப்பது போல் எனக்குத் தனிப்பட்ட அளவில் தோன்றியது.

மணிகண்டனின் திரைப்பட‌ வகையில் மாரி செல்வராஜின் படம் இது.

இப்படத்தில் இசைக்கு காது இளையராஜாவுக்காக ஏங்குகிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தேவா.‌ ஆனாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பூங்கொடிதான் பூத்ததம்மா பாடலின் தொடக்க இசை ஒலித்தபோது எனக்கு இறக்கை முளைத்தது நிஜம். இந்த அவஸ்தையை இயக்குநரும் அனுபவித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

திருநெல்வேலி வட்டாரத் தமிழைக் கொலை செய்யாமல் நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி கிராம வட்டார வழக்கைக் கச்சிதமாக அந்த இரு சிறுவர்களும் இன்னும் முகம் தெரியாத பல நடிகர்களும் பேசுகிறார்கள். கதாநாயக நாயகிகள் வழக்கம்போல் சில இடங்களில் சரியாக திருநெல்வேலித் தமிழையும், சில இடங்களில் வாய்க்கு வந்த தமிழையும் பேசிக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றாலும், முழுமையான அளவில் திருநெல்வேலி வட்டாரத் தமிழ் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலிக்கே உரிய வட்டார வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு.

தங்கலான் எனும் அதீத‌ நடிப்புச் செயற்கைக் காவியம் தந்த ரணத்துக்குக் கொஞ்சம் களிம்பு பூசி இருக்கிறது இந்த யதார்த்தம்.

Share

Thangalaan

தங்கலான் – ரஞ்சித்தின்‌ பலமே யதார்த்தத்தில் அரசியல். நுணுக்கமான காட்சிகள். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படமாய் வந்திருக்கிறது தங்கலான்‌. தங்கத்தைத் தேடுவதில் அரசியலை நுழைக்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நில உரிமை என்று பேசுகிறார்கள். மாய யதார்த்தம் என்று‌ வைத்துக்கொண்டு ஜல்லியான திரைக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் எப்போதும் அடிவயிற்றில் இருந்து நரம்பு தெறிக்கப் பேசுகிறார்கள்? யார் இந்த இயக்குநர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது? ஒருவர் விடாமல் அனைவரும் வளவளவென்று பேசியே சாவடிக்கிறார்கள். அதிலும் என்னவோ ஒரு காலத் தமிழ். ஆனால் பாட்டு பாடும்போது மட்டும் இன்றைய தமிழாம்! எல்லாக் காலகட்டத்திலும் பிராமணர்களே எதிரிகள் என்று வலுக்கட்டாயமாகக் காட்டி, புத்தரை திணியோ திணி என்று திணித்திருக்கிறார்கள். கடைசி காட்சியில் ஏன் விக்ரம் கதாபாத்திரத்துக்கு உண்மை தெரிந்தது? அது முதல் காட்சியிலேயே தெரிந்து தொலைத்திருந்தால்தான் என்ன? இத்தனை நீளப் படத்தில் ஒரு காட்சி கூட ஒட்டவில்லை. விக்ரம் இத்தனை கஷ்டப்பட்டு ஏன் ஓவர் ஆக்ட் செய்தார் என்றே புரியவில்லை. உள்ளொழுக்கு படத்தில் ரசித்த பார்வதியை வெறுக்க இந்த ஒரு படம் போதும். இதில் பாடாவதியான கிராஃபிக்ஸ் வேறு. மொத்தத்தில் ஒட்டாத குறியீட்டுச் செயற்கைத்தனத்துடன், பாலாவின் படம் போன்ற ஒரு ரஞ்சித் திரைப்படம். பாலாவின் பரதேசி படமும் இப்படித்தான் இருந்தது.

Share

Golam

கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று‌ அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.

Share

சிபிஐ 4

CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.

Share