Tag Archive for திரைப்படம்

Rebel Tamil Movie

Rebel (T) – தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது ஃபேஷனாகிவிட்டது. ஆங்கிலப் பெயர் வைத்தால் 10% கூடுதல் வரி என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசுக்கு நல்ல லாபமும், தமிழ்க்குடி காத்தான் என்கிற பாராட்டும் கிடைக்கும்.

எப்படி நான் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறேனோ அப்படித்தான் படமும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. கல்லூரிக்குள் நடக்கும் அரசியலை, அதுவும் கலைக்கல்லூரிக்குள் நடக்கும் அரசியல் என்னும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறார்கள். ஒட்டவே இல்லை. மூணாற்றில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களைக் காண்பிக்க நினைக்கும் படத்தில் நம் மனதில் நிற்பது கேரள கம்யூனிஸ காங்கிரஸ் அரசியல் சண்டைகள்தான்!

கம்யூனிஸ்ட்டுகளை முதலில் நல்லவர்களாகக் காண்பித்து, பின்பு அவர்களையும், பாவாடையைக் கழற்றிவிடும் கெட்டவர்களாக்கி, அதற்கொரு முட்டுக் கொடுக்கும் விதமாக, ‘நீ பாத்து வளந்த கம்யூனிஸம் வேற இந்த கம்யூனிஸம் வேற’ என்று என்னவோ சொல்லி… அடேய்களா… ரெண்டு கம்யூனிஸத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்குத் தெரியும். அது கறுப்பா பயங்கரமா இது. இது பயங்கரமா கறுப்பா இருக்கும். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கம்யூனிஸம் என்ன செய்யும் என்பது வரலாற்றில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது இயக்குநருக்குத் தெரியாது போல.

காங்கிரஸ் சார்பாக வரும் இளைஞர் பட்டையைக் கிளப்புகிறார். நன்றாக நடிக்கும் அத்தனை பேரும் மலையாளிகள்! இந்த மலையாளிகள் நடிக்கும் காட்சிகள் அநியாய மண்மணத்தோடு பளபளப்பாக இருக்கின்றன. இயக்குநருக்கு கேரளத் திரையுலகில் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.

படத்தில் வசனம் எழுதியவர் என்னவோ எழுத, காட்சியாக வேறு என்னவோ வருகிறது. வேட்டி கட்டியவனைப் பார்த்ததும் தமிழ் உணர்வு பொங்கி வருது என்று ஒரு பக்கம் வசனகர்த்தா பிலாக்கணம் வைக்க, அங்கே தமிழ்த் தடியர்கள் பேண்ட் சட்டையில் வர, மலையாளக் ‘குடி வெறியர்’களோ அழகாக, பாந்தமாக வேட்டியில் இருக்கிறார்கள். இன்னொரு காட்சியில் வசனகர்த்தா உணர்ச்சிவசப்பட்டு திமுகவின் கொடியை, கறுப்பும் சிவப்புமே நம் நிறம் என்று புல்லரிப்புடன் பேச, கொடியில் கறுப்பு வெள்ளை சிவப்பு என்று அதிமுக கொடி போலக் காண்பிக்கிறார்கள். அதிமுகவுக்கும் புரட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்?

பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் வரும் அதே எரிச்சல் இதிலும். ஆம், கேரள மாணவர்களுள் ஒருவன் கூட நல்லவனில்லை. தமிழ் மாணவர்களுள் ஒருத்தன் கூட கெட்டவனில்லை. இங்கேயே ஒரு படம் பிரசாரப் படமாக மாறித் தோற்றுப் போய்விடுகிறது.

படம் முழுக்க சிவப்பு, புரட்சி, ஈவெரா, சேகுவேரா என்று குறியீடுகள். 80களின் ரஜினி மற்றும் இளையராஜாவைச் சரியாகப் பின்னணியில் வைத்தவர்கள், என்னதான் கம்யூனிஸம் மூணாற்றில் வலுவாக இருந்தது என்றாலும், திமுக அதிமுக தலைவர்களை ஒரே ஓர் இடத்திலாவது வைத்திருக்கலாம்.

80கள் என்பதால் இளையாராஜாவின் தமிழ்ப் பாடல்கள் பின்னணியில். அத்தனையும் மனதை வருடுகின்றன. அதுவும் ஒரு காட்சியில், ‘பூங்காற்றினோடும்’ என்னும் மலையாளப் பாடல் மனதை வருட, அப்படியே படத்தை நிறுத்திவிட்டுப் பாட்டைப் போட்டுக் கேட்டால் என்று மனம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று காலை அந்தப் பாட்டை பலமுறை கேட்டபின்பே இதனை எழுதுகிறேன்.

மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், செயற்கைத்தனமான புரட்சி என்று எரிச்சலை ஏற்படுத்தும், மனதோடு ஒட்டாத இன்னுமொரு தமிழ்ப்படம். மலையாளிகளும் கேமராவும் அருமை.

Share

அயலான்

அயலான் – பல குறைகள் இருந்தாலும் தமிழில் வந்திருக்கும் ஒரு பொருட்படுத்தத் தக்க படமே. நல்ல கிராஃபிக்ஸ். குழந்தைகளுக்கான படம் என்ற தெளிவு. இந்த இரண்டும் படத்தை சுவாரஸ்யமானதாக்குகின்றன.

,ஹீரோ பெயர் தமிழ் & வில்லனுக்குப் பெயர் ஆரியன், ஆதார் கார்டைக் கிண்டலடிக்கும் ஐடெண்டிடி கார்ட் போன்ற குறியீடுகளைச் சமன் செய்யும் சில வசனங்களும் உண்டு, ‘இந்த ஊர்ல ஒரு திட்டத்தை செயல்பட விடமாட்டாங்களே… போராட்டம்னு ஆரம்பிச்சிருவாங்களே.’

மின்னல் முரளி, எந்திரன் போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. விவசாயம், கிராமம் என்றெல்லாம் எரிச்சலைக் கிளப்பி கொட்டாவி வரும் நேரத்தில் அயலான் வருகிறான். பின்னரே படம் சுதாரித்துக் கொள்கிறது. முதல் அரை மணி நேரக் கிராமத்துக் காட்சிகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு, ,நேரடியாக அயலான் காட்சியில் ஆரம்பித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை. அயலானின் கிராஃபிக்ஸ் நிஜ பிராணி என்று நம்ப வைக்கும் வகையில் இருப்பதும் அருமை. யோகி பாபு பெரிய ப்ளஸ். பின்னணி இசை கொடூரம். படத்தின் மிகப் பெரிய மைனஸ் இது. இன்னொரு மைனஸ் சித்தார்த்தின் குரல். அதேசமயம் விஜய் சேதுபதியைப் போடாததற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஆங்கிலப் படங்களில் இருக்கும் லாஜிக் தீவிரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தது, திரைக்கதை ரீதியாக மைனஸ். ஆனால் தமிழில் அறிவியல் புனைகதைப் படங்களே இல்லை என்ற நிலையில், இந்த அளவுக்கு ஒரு படம் வந்திருப்பதே சிறப்புதான்.

சிவகார்த்திகேயன் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இஷா கோபிகர் பெயரைப் பார்த்ததும் பழைய நினைவுகள். எவ்வளவு பெரிய திறமைசாலி. கூகிள் தேடிப் பார்த்தேன். பிஜேபியில் இருக்கிறாராம்.

இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’ நல்ல சுவாரஸ்யமான அறிவியல் புனைகதைத் திரைப்படம். அயலான் இன்னும் சிறப்பு. தேவையற்ற அரசியல் வசனத் தெறிப்புகளில் சிக்கிச் சிதறிப் போகாமல் பெரிய இயக்குநராக இவர் வர வாழ்த்துகள்.

Share

மாமன்னன் – சாதா மன்னன்

மாமன்னன் – தீவிரமான வெளிப்படையான குறியீடுகளுடன் ஒரு படம். பட்டியலின ஆதரவுத் தரப்பு என்பதை திராவிட அரசியல் நிலைப்பாட்டுடன் வெளிப்படுத்தும் தீவிரமான கலைத்தன்மையுடன் கூடிய திரைப்படங்களைப் போல இன்னும் அதன் எதிர்த்தரப்பிலிருந்து அதே பட்டியலின ஆதரவுடன் வராமல் இருப்பது நம் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட தலித் ஆதரவைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தை எவ்விதச் சார்பும் இன்றி ஆராய்ந்து பார்த்தால்,

• முதல் நாற்பது நிமிடங்கள் படம் எதையுமே சொல்லவில்லை. தாமிரபரணியில் ஆளும்கட்சி / போலிஸால் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இத்திரைப்படம் சாதிய மோதலாக உருவகிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான சம்பவம் படத்தின் மையச் சரடோடு பயணிக்காததால் வெறும் ஒரு காட்சியாகத் தனித்து நின்றுவிடுகிறது. எப்படியாவது பதற்றத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிடவேண்டும் என்ற இயக்குநரின் ஆசையைத் தாண்டி எதுவுமில்லை.

• அதற்கடுத்த ஒரு மணி நேரம், பரபரப்பின் உச்சம். அதுவும் மாமன்னன் நாற்காலியில் உட்காரும் காட்சி மிக அருமை.

• அதன் பின் படத்தில் பொருட்படுத்தத்தக்க கோர்வையான காட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவரை மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்ட வசனங்கள் நீர்த்துப் போகத் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், ஒரே விதமான வசனம். இவையெல்லாம் வெறும் தனித்தனிக் காட்சிகளாகத் திரையில் தோன்றி மறைகின்றன. அவை எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. சாவுக்கு வரும் காட்சி, திடீரென இளைஞர்கள் திரண்டு வந்து நிற்கும் காட்சி, ரத்னவேலு காலில் விழும் காட்சி, காரில் மாமன்னன் துப்பாக்கியால் மிரட்டும் காட்சி, கீர்த்தி சுரேஷிடம் அதிவீரன் கோபமாகப் பேசும் காட்சி என எதுவுமே ஒட்டவில்லை. எல்லாம் திடீர் திடீர்க் காட்சிகள். அதிலும் ஒரே ஒரு வீடியோவில் மாமன்னன் வெல்வதெல்லாம் கொடுமை. அதிலும் அந்த வீடியோவில் மாமன்னன் பேசுவதெல்லாம் எவ்வித ஆழமும் இன்றி மேம்போக்காக இருக்கிறது.

• உச்சகட்டக் காட்சியில் மாமன்னன் சபாநாயகராகப் பதவி ஏற்பது அருமை. அதற்கு முந்தைய சண்டை எல்லாம் பொறுமையைச் சோதிக்கிறது.

• கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாமன்னன் அதிமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. முன்னாள் சபாநாயகர் தனபாலை மனதில் வைத்து மட்டும் சொல்லவில்லை. ரத்னவேலு கட்சி மாறியதும் அக்கட்சித் தலைவரின் படம் தினகரனில் முதல் பக்கத்தில் வருகிறது. தினகரனில் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தால் நிச்சயம் அது அதிமுகவாக இருக்கமுடியாது. எனவே மாமன்னன் அதிமுகதான் என்பது நிரூபணமாகிறது. (நானே யோசிச்சேன்!)

• இத்தனை முக்கியமான படத்துக்கு இத்தனை சப்பையான பாடல்களைப் போட்டிருக்கவேண்டாம். இன்னும் கதைக்களத்துடன் பயணப்பட ஏ.ஆர்.ரகுமானால் முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் சமாளிக்கிறார்.

• ரத்னவேலுவின் மனைவியாக வரும் நடிகையும் சரி, கீர்த்தி சுரேஷும் சரி – வீண்.

• பன்றி நாய் குறியீடெல்லாம் சுத்த அறுவை.

• வடிவேலுவின் நடிப்பு பிரமாதம். அதேபோல் ஃபகத்தின் நடிப்பும். இருவருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் உதயநிதி ஏதோ சமாளிக்கிறார்.

பரியேறும் பெருமாள் > கர்ணன் > மாமன்னன்.

Share

லவ் டுடே – அசட்டுக் காதல்

லவ் டுடே – தமிழகமெங்கும் ‘பரபரப்புடன்’ பேசப்பட்ட படம். ஏழு மாதம் கழித்து ஒரு படம் பார்க்கிறேன். சும்மா வெச்சி செஞ்சி அனுப்பினார்கள். இப்படத்தில் பிராமணர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பற்றிப் பின்னர் பார்க்கலாம். இது இல்லாமல், ஒரு திரைப்படமாக இது எந்த லட்சணத்தில் வந்திருக்கிறது என்று முதலில் பார்த்துவிடலாம்.

நவீன விக்கிரமனாக பிரதீப் ரங்கநாதன் உருவாகி இருக்கிறார். அசட்டு காமெடி, கிறுக்குத்தனமான திரைக்கதை, கொஞ்சம் கூட ஆழமே அற்ற மேம்போக்கான காட்சிகள், வாய்க்கு வந்ததைப் பேசும் வசனங்கள், மோசமான மேக்கிங் – இப்படித்தான் கிட்டத்தட்ட படம் முழுக்க. யுவன் சங்கர் ராஜா ஏன் எஸ்.ஏ.ராஜ்குமார் போல இம்சை அளித்திருக்கிறார் என்றே புரியவில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார் லாலலலா என்பதை குரலில் போட்டே கொல்வார் என்றால், யுவன் படம் முழுக்க எதோ ஒரு இசையை ஓடவிட்டே கொன்றிருக்கிறார். அதிலும் நகைச்சுவைக் காட்சிகளில் இசை தாங்கமுடியாத இம்சையாக இருக்கிறது. விக்கிரமனின் பாணியைப் போலவே, பாஸிட்டிவான ஒரு செய்தியைச் சொல்லி, புல்லரிக்க வைத்து அனுப்புகிறார்கள். திரையரங்கில் பலர் அழவும் செய்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே தாங்கமுடியாமல் நெளிந்துகொண்டிருந்தவன் என நினைக்கிறேன்.

விக்கிரமன் படத்தில் நிஜமான ஒரு நேர்மறை அம்சம் இருக்கும். அது யாரையும் மனம் நோக வைக்காமல் இருப்பது. இந்த பிரதீப் அப்படியுமில்லை. பிராமணர்கள் மேல் ஏன் அப்படி ஒரு இளக்காரம், கோபம்!

இப்படத்தில் வரும் கதாநாயகி ஏன் பிராமணப் பெண்ணாக இருக்கவேண்டும்? கதைக்கும் ஜாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பிராமண அப்பாவாக வரும் சத்யாராஜுக்கு நடிக்கவே வரவில்லை. சத்யராஜும் இன்னும் சில கதாபாத்திரங்களும் பிராமணப் பேச்சு வழக்காக நினைத்துக்கொண்டு பேசும் வசனங்களைக் காதால் கேட்கமுடியவில்லை. மலபார் போலிஸில் சத்யராஜ் மலையாளம் கலந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிய பாலக்காட்டுத் தமிழின் கொடூரம் இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போது திடீர் திடீர் என்று இத்திரைப்படத்தில் பேசும் பிராமணப் பேச்சு வழக்கும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது.

வக்கிரமான ஒருவனைக் காண்பிக்கும்போது அவன் நெற்றியில் வம்படியாக விபூதி இருப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் பிராமணப் பெண்ணோ சாதாரண பொட்டு கூட பல காட்சிகளில் வைப்பதில்லை.

ஒரு பையன் ஹோம குண்டத்தில் சிறுநீர் கழிக்கிறான். காமெடி என்று நினைத்து இக்காட்சியை இயக்கிய இயக்குநரை என்ன சொல்ல!

அந்தச் சிறுநீரை லெமன் சர்பத்தில் பிடிக்கும் ஹீரோ, யாரோ ஒருவரிடம் தரும்போது, அதைக் குடிப்பவரைப் பார்த்து ‘குடிங்கோ’ என்று சொல்கிறார். ஹீரோ பிராமணரல்ல. தான் காதலிக்கும் பெண்ணிடம் கூட அவர் பிராமண வழக்கில் பேசுவதில்லை. ஹீரோ வீட்டுக்கு எத்தனையோ அபிராமணர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சிறுநீர் கலந்த எலுமிச்சை சர்பத்தைக் குடிப்பவர் ஒரு பிராமணர். அசட்டு நகைச்சுவையாக, 1960களிலேயே சலித்துப் போன, ‘என்ன உப்பா இருக்கு’ என்ற வசனமும் உண்டு.

பல காட்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியலின் தரத்தில்தான் இருக்கின்றன. குறிப்பாக, யோகி பாபுவின் டிராக். அதை நல்ல டிராக் என்று நம்பி எப்படித்தான் எடுத்தார்களோ!

பிராமணரான சத்யராஜ் கண்டிப்பானவர் என்பதைக் காண்பிக்கும் காட்சிகளும் இதே ரகத்திலானவையே. தண்ணீர் கேன் போடுபவருக்குத் தருவதற்காக ஒரு ரூபாய்க்கு அவர் தேடுகிறாராம். அதனால் கண்டிப்பானவராம். கோபமானவராம். இத்தனை கண்டிப்பான கோபமான அப்பா என்னவோ செய்யப் போகிறார் என்றால், அவர் செய்யும் வேலை கிறுக்குத்தனமானதாக இருக்கிறது.

இத்தனை அவலட்சணங்களையும் தாண்டி எது இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது? இரண்டு விஷயங்கள். கதாநாயகன் மற்றும் நாயகியின் நடிப்பு. அசரடிக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பு மட்டும் இல்லையென்றால், இந்தக் கிறுக்குத்தனத்தைத் தாங்கிக்கொண்டிருக்கவே முடியாது. இரண்டு மொபைலை மாற்றுவதன் மூலம் ஒன்றும் ஆகிவிடாது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த ரௌடிக்கேத்த பொண்ணு அந்த ரௌடிதான் என்ற முடிவுக்கு வேண்டுமானால் வரலாம்.

இதில் ஒரு பையன் மாங்கொட்டையை ஊன்றி வைத்துவிட்டு தினமும் எடுத்துப் பார்க்கிறான். 20 வருடம் கழித்து அது வளர்ந்து மரமாக நிற்கிறதாம். இது பாஸிடிவ் வைபாம். இதை நம்பி, அந்தப் பையன் மாங்கொட்டைக்கு தண்ணீர் ஊற்றுவதை ஏதோ அவார்ட் படம் போலக் காட்டிச் சாவடிக்கிறார்கள். செத்தோம் பிழைத்தோம் என்று தப்பித்து வீடு வந்தேன்.

Share

வலிமை – ஹைடெக்

வலிமை – மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து உச்ச நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகள், காதல், குடும்பத்தைக் கொல்லும் வில்லன், பழிவாங்கல் என்று போய்க்கொண்டிருக்க, இது எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை நடிக்க முன்வந்திருக்கும் தைரியத்துக்காக அஜித்தை நிச்சயம் பாராட்டவேண்டும். ஒரு நவீன தொழில்நுட்பத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக யோசித்து, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து, லாபமும் பார்ப்பதெல்லாம் பெரிய சாதனை. வலிமை டீமுக்கு வாழ்த்துகள்.

மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லவேண்டுமானால், பேசி பேசியே அனைத்துப் பெரிய பிரச்சினைகளையும் அஜித் விடுவிப்பது, நீளமான அந்த பைக் ரேஸ், வில்லனை ஏமாற்றுவதை ஒரே போல் இரண்டு முறை செய்வது, என்னதான் லாஜிக் வேண்டாம் என்றாலும் அரசு வசம் இருக்கும் போதை மருந்தை அஜித் எடுப்பது இவையெல்லாம்தான். செண்ட்டிமெண்ட் அதிகம் என்று அனைவரும் சொன்னார்கள், நான் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் போல, அதில் அத்தனை செண்டிமெண்ட் இல்லை.

மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, உச்சக்காட்சியில் கதாநாயகன் கொலைகாரர்களை மன்னித்து ஒரு வழக்கு கூட இல்லாமல் விடுவிப்பது – இது அராஜகம். என்னதான் கதாநாயகனுக்குக் காவடி எடுக்கவேண்டும் என்றாலும் இத்தனை தூரம் தரம் தாழவேண்டியதில்லை.

வில்லனை அஜித் காவல்துறை பஸ்ஸில் கொண்டு போகும் சேஸிங் காட்சி, மிக நீளமாக இருந்தாலும், அட்டகாசமாக இருந்தது. அஜித் நன்றாக இருக்கிறார், கெத்தாக இருக்கிறார், முக்கியமாக மிக நன்றாக நடிக்கிறார்.

செய்ன் அறுப்பு என்பது எனக்கு மிகவும் பதற்றம் தரும் ஒன்று. சில நிஜ வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதை நினைத்தாலே பதற்றம் வந்துவிடும். இந்தப் பதற்றத்தை அப்படியே திரையில் கொண்டு வந்த தமிழ்ப்படம் மெட்ரோ. உச்சக்காட்சிகள் மட்டுமே சொதப்பல். வலிமை திரைப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், அஜித் வராதபோதும், பரபரப்பாக இருந்ததற்கு இந்த செய்ன் அறுப்புக் காட்சிகளும் அதை ஒட்டிய கொலைகளுமே காரணம். இன்னும் ‘மெட்ரோ’ படத்தை இப்படம் தொடவில்லை என்றாலும், வலிமையும் முக்கியமான பதிவுதான்.

இனி அரசியல். இவ்வளவு பார்க்கவேண்டுமா என்பவர்கள் இங்கேயே ஜூட் விட்டுவிடவும். என் நோக்கமே இதைப் பதிவு செய்யத்தான்!

பொதுவாகவே அஜித் ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே எதையும் திணிப்பதில்லை என்று இங்கே இருக்கும் அஜித் ரசிக ஹிந்துத்துவர்கள் சொல்வது வழக்கம். நானும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். இப்போதும்!

அதே சமயம் இந்தப் படத்தில் வந்திருக்கும் சில காட்சிகளைப் பற்றி ஒரு குறிப்பாவது எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்றும் தோன்றியது. இந்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு நமக்கு உதவலாம்! (இயக்குநர் மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று நழுவிவிடவும் முடியாது!) இதே இயக்குநரின் மிக முக்கியமான படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இப்படிப் பிரச்சினைகள் இருந்தன. மத ரீதியிலானது அல்ல, இவர்கள் இப்படித்தான் என்னும் மோசமான முத்திரை குத்தல் தொடர்பானது.

வலிமை படத்தில், குடிகாரனாக வரும் ஒருவன் பெரும் பட்டை போட்டுக்கொண்டு வருகிறான்.

ஐயப்ப மாலை போட்டிருக்கும் அண்ணன் ஐயப்ப மாலையைப் பாலில் கழற்றிப் போட்டுவிட்டுக் குடிக்கிறான்! அப்படிக் குடித்தால் பாவமில்லை என்று ஒரு நியாயமும் கற்பிக்கிறான். இதைப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் ஆரம்பிக்கப் போகிறார்களோ..

வில்லன் கதாபாத்திரம், அதாவது செய்ன் அறுப்பு + போதை மாஃபியா + கொடூரக் கொலைகாரனை மட்டும் ஜி என்று அழைக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மற்றபடி வலிமை வலிமைதான்!

Share

FIR – திசை தவறிய பறவை

Spoilers ahead.

FIR – மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கும் தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எப்படி வரையறுப்பது என்றே தெரியவில்லை. எல்லாவனுக்கும் நல்லவனாக இருக்கணும், அதே சமயம் முற்போக்குப் பட்டமும் வேணும் என்றால் எப்படி? ஒன்று, கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கவேண்டும், இல்லையென்றால் இந்தப் பக்கம் இருக்கவேண்டும், இரண்டும் இல்லாமல் அங்கேயும் இங்கேயும் தாண்டிக்கொண்டு, வணக்கம் போடும் வரை யோசிக்கவிட்டு மூளையைக் களைப்படையச் செய்துவிட்டார் இயக்குநர். இது இஸ்லாமியர்களுக்கான ஆதரவு என்ற போர்வையில் இந்திய அரசை எதிர்க்கும் படம் என்று பத்தாயிரம் வார்த்தைகளும், இது இந்திய ஆதரவுப் படம் என்று இன்னொரு சாரார் பத்தாயிரம் வார்த்தைகளும் எழுதலாம். நான் நினைப்பது, அப்பாவி இஸ்லாமியன் ஒருவன், தன் பெயர் இஸ்லாமியப் பெயர் என்னும் ஒரே காரணத்துக்காக அவன் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லி ஆனால் அந்த அப்பாவி இந்திய முஸ்லிம் எப்பேற்பட்ட தியாகி என்பதை விளக்க முயன்றிருக்கிறார் என்பதுவே. ஒரு இந்திய முஸ்லிம் தன்னை பெருமை மிகு இந்திய முஸ்லிம் என்று அழைப்பதால் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? இங்கேதான் கதை சறுக்குக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள் என்பது பித்தலாட்டம். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு பெரும்பான்மை ஹிந்துவுக்கு என்ன என்ன உரிமை உண்டோ அத்தனையும் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கும் உண்டு, சொல்லப் போனால் கூடுதலாகவே உண்டு. மனசாட்சி உள்ளவர்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன்னை தேசிய இஸ்லாமியராக உணரும் ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இந்தப் படத்தில், அப்பாவி முஸ்லிம் ஒருவன், சூழ்நிலையால் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தப்பட்டால் அவன் என்ன என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கவேண்டி இருக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைசியில் தேசியப் புலனாய்வு மையத்தோடு முடிச்சு போட்டு அவனைத் தியாகியாக்கி வைக்கிறார்கள்.

சூழ்நிலையால் பயங்கரவாதியாகும் இர்ஃபான், அதுவும் இந்தியாவில் ஊடுருவி இருக்கும் ஐ எஸ் தலைவன் என்று சந்தேகிக்கப்படும் இர்ஃபான், தன் ஹிந்து நண்பர்களோடு வரும்போது முக்கியமான கேள்விகளைக் கேட்கிறான். என் பேர் இர்ஃபான்றதாலதான என்னை பயங்கரவாதின்னு நினைக்கிறாங்க, இதுவே ஒரு ஹிந்துப் பெயரா இருந்தா விட்டிருப்பாங்கள்ல என்று. உடனே ஹிந்து நண்பர்கள் நடந்ததற்காக இர்ஃபானிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். கூடுதலாக ஒரே ஒரு கேள்வியை இந்திய இஸ்லாமியனான இர்ஃபானோ, உடன் வந்த ஹிந்து நண்பர்களோ கேட்டிருக்கலாம். ஏன் இப்படி ஒரு நிலைமை? எதனால் வந்தது? இப்படம் சொல்ல நினைப்பது, அப்படி ஒரு முஸ்லிமை முஸ்லிம் பெயர் இருப்பதாலேயே சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று. ஆனால் சொல்லி இருப்பதோ, அப்படி ஒரு சூழ்நிலை வர முஸ்லிம்களே காரணம் என்று. நான் சொல்லவில்லை, திரைக்கதையில் அப்படி அர்த்தம் வருகிறது.

ஜனநாதன் என்றொரு தீவிர கம்யூனிஸ இயக்குநர் இருந்தார். அவரது திரைப்படங்கள் எல்லாம் புரட்சி என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் திரையில் பார்த்தால், இந்தியத்துவத்தை எங்கேயும் கை விட்டிருக்கமாட்டார். இந்தப் படத்துக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. படம் முடியும்போது தியாகி முஸ்லிமுக்காக வருத்தப்படவேண்டிய நாம், இந்திய அரசின் போராட்டத்துக்காக மகிழ்ச்சி அடைந்துவிடுகிறோம்.

இர்ஃபான் ஒரு பெருமைமிகு இந்திய முஸ்லிம் என்றால், இர்ஃபான் தீவிரவாதி என்று நம்பி, அவனைக் கொன்று இந்தியாவைக் காப்பாற்ற நினைக்கும் அந்த இஸ்லாமியப் பெண் யார்? இர்ஃபான் ஒரு காட்சியில் நானும் முஸ்லிம் நீயும் முஸ்லிம் என்று சொல்ல, அடுத்த நொடி இர்ஃபானின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் இஸ்லாமியப் பெண் அதிகாரி. அவரும் பெருமை மிகு இந்திய முஸ்லிமே.

ஒரு கட்டத்தில், இர்ஃபான் தன் நிலைக்குக் காரணமான இந்தியாவுக்கு எதிராக மாறுகிறான். இந்தியாவை ஒழிக்க நினைக்கும் ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவாக அவர்கள் கேட்கும் கெமிகல் கேஸ் வெபன் (ரசாயன வாயுவை வைத்துக் கொல்வது) தயாரிக்க உதவுகிறான். கடைசி ஐந்து நிமிடத்தில் இர்ஃபானின் குடும்பமே எப்பேற்பட்ட தியாகிகள் என்று சொல்லப்படுகிறது. இர்ஃபான் உதவும் ஐ எஸ் அமைப்பில் அத்தனை பேரும் முஸ்லிம்களே. இந்தியாவை வெறுக்கும் முஸ்லிம்கள். தலைவன் முஸ்லிம் ஒரு முன்னாள் ஹிந்து. மதம் மாறி, ஐ எஸ்ஸில் சேர்ந்து, என்னவெல்லாமோ சொல்கிறார்கள். சொல்லிவிட்டு, கார்த்திக் என்ற பெயர் இருப்பதால் அவனை போலிஸ் சந்தேகிக்கவில்லை, ஆனால் இர்ஃபான் என்ற பெயர் இருப்பதால் ஒரு அப்பாவி முஸ்லிமை சந்தேகித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

FIR Tamil movie poster.jpg

படம் பார்க்கும் அத்தனை இந்திய வெறுப்பாளர்களை அல்லது இஸ்லாமியர்களுக்கு இப்படித்தான் நடக்கிறது என்று நம்பும் நடுநிலையாளர்களை இந்தக் கதை பதைபதைக்கச் செய்திருக்கவேண்டும் இல்லையா? ஆனால் செய்திருக்காது. ஏன்? படத்தின் திரைக்கதையே காரணம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

* ஐ எஸ் அமைப்பு என்பது எத்தனை பெரிய கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று உலகுக்கே தெரியும். இந்திய முஸ்லிம்கள் தங்களை எந்த இடத்திலும் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி யோசித்துக் கூடப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு அமைப்பின் தலைவனாக இர்ஃபான் இருப்பானோ என்ற சந்தேகம் வந்தால், இந்தியா அல்ல, அது எந்த நாடாக இருந்தாலும் ஊராக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும். கதையை யோசிக்கும்போது ஐ எஸ் அமைப்பின் ஒரு தலைவன் இந்தியாவில் இருந்தால் என்று யோசித்துவிட்டார்கள். இந்த ஒரு வரியில் மயங்கிவிட்டார்கள்.

* இந்தியப் புலனாய்வு மையம் என்பது பக்கத்து வீட்டில் மாங்காய் அடித்துத் திருடித் திங்கும் அமைப்பு அல்ல. பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்வது, எதிர்த்தாக்குதல் நடத்துவது என்று இந்தியாவின் தலையாய பிரச்சினையை தினம் தினம் எதிர்கொள்பவர்கள். அந்த அமைப்பு சட்டென திருவல்லிக்கேணி இர்ஃபானை எப்படி ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதி என்று நம்பும்? இதற்குக் கடைசியில் வேறு ஒரு கதை சொல்கிறார்கள். ஆனால் அந்த நொடி வரை இதே நினைப்பில் கதை பார்க்கும் பார்வையாளர் நம்பகத்தன்மை இல்லாமல்தானே பார்ப்பான்?

* ஒரு ஹீரோ கெட்டவனாக இருக்கமுடியாது என்று நமக்குத் தெரியாதா? கடைசியில் ஒரு நொடியில் என் ஐ ஏ-வின் திட்டங்கள் தெரியும்போது நமக்கு அதிர்ச்சி வருவதற்குப் பதிலாக, இதுக்காடா இவ்ளோ சீன் என்ற கேள்விதான் வருகிறது.

* கதையின் மையம் என்ன? பெயரில் என்ன இருக்கிறது என்பதுதானே? ஆனால், ஹீரோ இர்ஃபான் தன் பெயர் இர்ஃபான், தான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே தேசியப் புலனாய்வு மையம் தன்னைத் தேர்ந்தெடுக்கிறது என்று தெரிந்தே ஒப்புக்கொள்கிறான். அப்படியானால் இது கதையின் அடிப்படைக்கே எதிரானதல்லவா? தேசியப் புலனாய்வு மையத்திடம் அவன் என்ன கேட்டிருக்கவேண்டும்? என் பெயர் கார்த்திக் என்றால் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா என்றுதானே? அங்கே கேட்காமல் ஊரெல்லாம் கேட்டுத் திரிகிறான் இர்ஃபான்.

* கடைசியில் இர்ஃபான் குடும்பமே இந்தியத் தியாகிகள் என்று சொல்லி, அதன் பின்னால் இருக்கும் திட்டத்தை என் ஐ ஏ இயக்குநர் விவரிக்கும்போது அதுவரை கதையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையும் அடியோடு போய்விடுகிறது. என் ஐ ஏ இயக்குநராக வரும் கௌதம் மேனன் கொஞ்சம் தமிழில் அவ்வப்போது பேசுகிறார். மற்றபடி இவர் எப்போதும் போல் ஹாலிவுட் நடிகராகவே வலம் வருகிறார்.

* மோடி போன்ற கெட்டப்பில் வரும் பிரதமர் கடைசியில் சொல்கிறார், பயங்கரவாதியின் பெயர் இர்ஃபானா அப்துல்லா, சரி, பெயர் எதுவாக இருந்தால் என்ன, பயங்கரவாதி பயங்கரவாதிதானே என்று சொல்லிவிட்டுப் போகிறார். அதாவது இர்ஃபான் குடும்பம் செய்த தியாகத்தை என் ஐ ஏ இயக்குநர் பிரதமரிடம் இருந்து மறைத்துவிடுகிறார். இதனால் இர்ஃபான் இந்திய ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவனாகவே இறந்தும் போகிறாராம்.

* இப்படி எத்தனையோ முஸ்லிம்களின் தியாகம் வெளியே வராமல் போய்விட்டது என்று சொல்கிறார்கள். விட்டுருவீங்களாய்யா நீங்க என்றுதான் கேட்கவேண்டும். அதைவிட இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள், இப்படி இர்ஃபான் பயங்கரவாதி என்று சந்தேகம் வரக் காரணம், அதை உடனே நம்பிய மீடியா என்று. தமிழ் ஊடகங்களா? சுத்தம்!

* சிரியாவில் போய் ஐ எஸ்ஸில் சேர்வது வீட்டுக் கொல்லையில் இருக்கும் புளியம் பழம் பறிப்பதைப் போல சுலபமானது போல. அதுவும் இந்திய ஐ எஸ் காரன் முன்னாள் ஹிந்து என்பதெல்லாம் அதீத நகைச்சுவை.

இப்படி நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும், இலக்கு என்ன என்பதைத் தீர்மானமாக நிர்ணயிக்காததாலும், அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலைக் கைதியாகிறான் என்பதைக் காட்டுவதற்கு தரப்படும் முன்னொட்டுக் காட்சிகளின் நீளத்தாலும், இப்படம் மொத்தத்தில் எரிச்சலைத்தான் தருகிறது. இதனால் விஷ்ணுவிஷால் பட்ட கஷ்டம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிறது.

இதில் இன்னொரு காமெடியை வேறு செய்து வைத்திருக்கிறார்கள். இர்ஃபான் தன்னைப் பற்றித் தானே ஒரு பிம்பத்தை உருவாக்குகிறான். அதில் வருவது ஒரு காதல். அதுவும் எப்படி? ஒரு பிராமணப் பெண் இர்ஃபானை விழுந்து விழுந்து காதலிக்கிறாளாம். இதை உலகமே நம்புகிறதாம். சொல்வதோ ஊரை ஏமாற்ற ஒரு கதை என்றாகிவிட்டது, அதில் ஏன் ஒரு பிராமணப் பெண் இர்ஃபானைக் காதலிக்கவேண்டும்? அந்தப் பெண்ணும் ஒரு முஸ்லிமாக இருந்துவிட்டால் அது கதையை எப்படிப் பாதித்துவிடும்? இயக்குநருக்கே வெளிச்சம்.

இன்னும் தமிழில் உருப்படியான இஸ்லாமியத் திரைப்படம் வரவில்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்ட யதார்த்தமான இஸ்லாமியச் சூழலுடன் வரும் படம் ஒன்றில்தான் ஒரு அப்பாவி முஸ்லிமின் கஷ்டத்தைச் சரியாகக் காட்டமுடியும். இல்லையென்றால், குறைந்தபட்சம் அந்த அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலையால் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுகிறான் என்பதை உள்ளூர் அளவிலாவது யோசிக்கவேண்டும். இப்படி ஐ எஸ் என்றெல்லாம் யோசித்தால் எடுபடாது. கடைசியில் FIR என்று போட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முஸ்லிம் பெயரைப் போடுவதால் மட்டும் நாம் சொல்ல நினைத்ததை சொன்னதாகிவிடாது. இந்திய தேசிய முஸ்லிம்களுக்கும் இந்திய தேசிய ஹிந்துக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, எந்தப் பெயரில் வந்தாலும் அவர்கள் இந்தியர்களே. அப்படி இல்லாமல் போவது ஏன் என்பதை இந்திய தேசிய ஹிந்துக்களை போலவே இந்திய தேசிய முஸ்லிம்களும் யோசிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான விடை கிடைக்கும்.

Thanks: https://oreindianews.com/?p=7553

Share

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஆனால் யாருக்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவரை நினைத்துப் பாவமாக இருக்கிறது. இது போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் ஒரு பிடிவாதம் வேண்டும். தான் எடுக்கும் படங்கள் மீதான நம்பிக்கை வேண்டும். இரண்டுமே மணிகண்டனிடம் இருக்கிறது, அதற்காகப் பாராட்டுகள்.

கடைசி விவசாயி என்ற பெயர் ஒரு வகையில் இப்படத்துக்குத் தவறான பெயரோ என்று இப்போது யோசிக்கிறேன். குற்றமே தண்டனையில் ‘ஜி-ன்னு கேட்டாலே எரிச்சல் வருது’ என்றொரு வசனம் வரும். இது போன்ற புதிய அலை இயக்குநர்கள் (மணிகண்டன் புதிய அலையில் வருவாரா என்பது தனியே விவாதத்துக்குரியது) எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இந்திய – ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது வழக்கம் என்பது ஒரு பக்கம். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் விவசாயம் என்பதைத் அதீதப் புனிதமாக்கி, எங்கெல்லாம் திரைக்கதை எழுத முடியவில்லையோ அங்கெல்லாம் புனித விவசாயத்தைப் புகுத்தி, விவசாயம் என்றாலே பார்வையாளர்கள் ஓடிவிடும் அளவுக்கு ஆக்கி வைத்திருப்பது ஒரு பக்கம். இதனால்தான், இப்படத்தின் பெயர் கடைசி விவசாயி எனவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் மணிகண்டன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏன்? முதல் பாராவை வாசிக்கவும். அந்த நம்பிக்கையில் இப்படத்துக்குப் போனேன்.

முதல் 50 நிமிடம் ரொம்பவே சோதித்துவிட்டார் இயக்குநர். கதைக்குள் எடுத்த எடுப்பிலேயே வந்திருக்கலாம். ஆனால் என்னவெல்லாமோ காண்பித்துப் பாடாகப் படுத்திவிட்டார். அதிலும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படத்துடன் எங்கேயும் ஒட்டாமல் எப்படியோ அலைபாய்கின்றன. கேள்வியை எதாவது கேட்டுவிட்டு அதற்கு எதாவது ஒரு பதில் சொல்லி, அதைத் தத்துவ பன்ச் என்று நினைத்து அவர்களாக ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. வெளியே போய்விடலாமா என்று நினைக்கும்போதுதான் அந்த நீதிமன்றக் காட்சி ஆரம்பிக்கிறது.

அதற்குப் பிறகு படம் நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியை எங்கே எப்படி வைப்பது என்பதிலும் மணிகண்டனுக்குக் குழப்பம் போல. இழுஇழு என்று இழுத்து எப்படியோ முடித்து வைக்கிறார். நவீன விவசாயத்தின் மீதான அவநம்பிக்கை படத்தில் ஒவ்வொரு காட்சியில் தெரிந்தாலும், கதையின் மையம் அதுவல்ல என்பது என் எண்ணம். இன்னொரு கோணத்தில் கதையின் மையம் அதுவே என்று சிலர் சொல்லக் கூடும். இயற்கை விவசாயம் என்பதை யாரால் முடியுமோ அவர்கள் செய்துகொள்ளலாம். ஆனால் நவீன வேளாண்மை என்ற ஒன்று இல்லாவிட்டால், பூச்சி மருந்துகள் என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகம் முழுக்க ஊஊஊஊதான் என்பதை எல்லாரும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. என் பார்வையில் இப்படம் ஒட்டுமொத்த விவசாயமே கேள்விக்குறியாகிறது என்பதைப் பற்றியே பேசுகிறது என்றே நினைக்கிறேன். ஆனால், கடைசிக் காட்சியில் மயில் நடனமாட, மழையும் பெய்கிறது! அப்படியானால் மழைதான் பிரச்சினையா? ‘குற்றமே தண்டனை’யிலும் இதே போல் மணிகண்டனுக்குப் பிரச்சினைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது. ரொம்ப யோசித்துத் தத்துவச் சிக்கலுக்குள் மூழ்கும்போது திரைக்கதை எழுதுவாரோ? 🙂

படம் எப்போதெல்லாம் நம்மை சோதிக்கிறது என்றால், விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் வரும்போது! இந்த இரண்டு பேரும் ஏன் இந்தப் படத்துக்குத் தேவை என்பதே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சி மட்டுமன்றி, கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறேன் என்று, படத்தோடு ஒட்டமுடியாத, ஆனால் காட்சியாக நல்ல காட்சிகளும் பல உண்டு.

விவசாயியாக நடித்திருப்பவர் மட்டுமல்ல, பல நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். க்ளிஷேவாக அல்ல, நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களையே காட்சிக்கேற்றார் போல் வசனம் பேசச் சொல்லிவிட்டார் போல இயக்குநர். பல வசனங்கள் நாம் வீட்டில், தெருவில் பேசிக்கொள்வது போல அப்படியே வருகின்றன. திக்குவது, தவறாகச் சொல்லிப் பின்னர் சரியாகச் சொல்வது, எதாவது பேசுவது என எல்லாமே அப்படியே வருகின்றன. துல்லியமான மதுரைப் பேச்சு வழக்கில். இதில் சொதப்புவர்கள் யாரென்றால், பெயர் பெற்றுவிட்ட விஜய்சேதுபதி போன்றவர்கள்தான். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியெல்லாம், எத்தனை இயல்பாக இருக்கிறது என்றால், இப்படித் தமிழ்ப்படங்களில் பார்த்ததே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக இருக்கிறது. பெரிய சாதனை இது. இதற்காக மணிகண்டன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்.

நீதிபதியாக வரும் பெண்ணின் நடிப்பு மிக அருமை. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே பெரிய பலம்.

விஜய் சேதுபதி தான் இத்தனை நாள் நடித்த படங்களிலும் இனி நடிக்கப் போகும் படங்களிலும் ஹிந்து மதத்தைத் தாக்கியதற்காக ஒரு பெரிய பிராயசித்தமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் போல. தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஹிந்து மதச் சின்னங்கள்தான். ஆனால் பைத்தியம். எல்லாப் படங்களிலும் இவர் பேசுவது இப்படித்தான் இருக்கிறது என்பதால், நமக்கு இதில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை.

எழுத்து போடும் காட்சியில் ஒலிக்கும் டி எம் எஸ்ஸின் முருகன் பாடல் தொடங்கி இறுதிக் காட்சி வரை முருகன், பிள்ளையார், குலசாமி, அய்யனார் என பக்தி மயம்தான். படத்தின் முதல் சட்டகமே ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, பாட்டன் முருகனுக்கும் அவனது அடியார்களுக்கும்’ என்றெல்லாம் வந்தது. ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று கூட நினைத்தேன். இல்லை, உண்மையிலேயே பக்தியாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 🙂

சந்தோஷ் நாராயன் இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. இளையராஜா இசையமைத்த டிரைலர் இன்னும் காதில் ஒலிக்கிறது. நமக்குக் கொடுப்பினை இல்லை. வேறென்ன சொல்ல!

மணிகண்டனின் படங்கள் மெல்ல நகரும் என்பது தெரிந்ததுதான். இப்படம் மெல்ல ஆனால் நகரவே இல்லை என்பதுதான் பிரச்சினை. சில காட்சிகள் மிக இயற்கையாக இருக்கின்றன, சில காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து, திரைக்கதையில் கவனம் செலுத்தி, விஜய் சேதுபதி + யோகி பாபுவை மொத்தமாக நீக்கி இருந்தால், இப்போது மயிலின் அகவலாகத் தேங்கி இருக்கும் படம், மயிலின் நடனமாக . மணிகண்டன் தவறவிட்டுவிட்டார்.

இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, மணிகண்டன் யாரை நம்பி இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறார் என்பதுதான். ரசிகர்களை நம்பி என்று தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும். இன்று நான் தியேட்டரில் பார்த்தபோது 20 பேர் இருந்தால் அதிகம். நல்லவேளை, ஓ.டி.டி என்ற ஒன்று இருக்கிறது. அதில் வரும்போது இன்னும் சில லட்சம் பேர் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்? மணிகண்டன் யோசிக்கவேண்டும். மணிகண்டன் திறமையான இயக்குநர் என்பதில் ஐயமே இல்லை. அந்தத் திறமையைப் பறைசாற்றும் திரைப்படங்களை அவர் தரட்டும். அந்த முருகன் அவருக்கு பிழைக்கும் புத்தியைத் தரட்டும்.

பின்குறிப்பு: படத்தில் ஒரு கவித்துவமான காட்சி. யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். அந்த யானைக்கு கொசு வலை போட்டு உறங்க வைப்பார். அந்தக் காட்சியில் யோகி பாபுவின் உதவியாளர் படுத்திருக்கும் யானைக்குக் கால் அமுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார். ❤ எனக்கு மிகவும் பிடித்துப் போன காட்சி.

Share

சில கன்னடத் திரைப்படங்களும் மலையாளத் திரைப்படங்களும்

சர்க்காரி ஹிரிய ப்ரதமிகெ ஷாலே, காஸர்கோடு – கொடுகெ: ராமண்ணா ராய் – படத்தின் பெயர் இது. தோராயமாக மொழிபெயர்த்தால்: அரசு உயர்நிலைப்பள்ளி, காஸர்கோடு – உபயம்: ராமண்ணா ராய் என்று சொல்லலாம். இது என்ன என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடங்கள் ஆகியது. ஒரு திரைப்படம் வந்துவிட்டால் அது தொடர்பான வார்த்தைக்கு கூகிளில் பொருள் கண்டுபிடிப்பது என்பது மலையைப் புரட்டி எலியைப் பிடிப்பது போலத்தான். ஹிரிய ப்ரதமிகெ ஷாலே என்றால் நடுநிலைப்பள்ளியா உயர்நிலைப்பள்ளியா என்று இன்னும் பிடிபடவில்லை. கன்னடம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ராமண்ணா ராய் என்பவர் காஸர்கோட்டில் இருந்து 80களில் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொழிவாரி பிரிக்கப்படும்போது 1956ல் காஸர்கோடு கேரளாவுடன் இணைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர் என்று தெரிகிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை என்றால் நம்ம ஊர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் வகையல்ல. இது ஒரு மென் நகைச்சுவைத் திரைப்படம். கூடவே, சிறுவர்களுக்கான படம் என்றும் சொல்லலாம். காஸர்கோட்டின் கர்நாடக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் கன்னடம்வழி கற்பிக்கும் பள்ளி கேரள அரசின் கீழ் உள்ளது. ஐம்பது பேர் மட்டுமே படிக்கும் இப்பள்ளிக்கு மலையாளியான கணக்கு வாத்தியாரை அரசு அனுப்புகிறது. இவருக்கு கன்னடம் தெரியாது. மலையாளத்தில் கணிதம் சொல்லித் தருகிறார். இங்கிருக்கும் கன்னடர்கள் அதை எதிர்க்க, அந்த மலையாளி ஆசிரியர் பயந்து ஓடிப் போகிறார். இனியும் இப்பள்ளியை நடத்துவது தேவையற்றது என்று ஊழல்வாதியான கேரளக் கல்வி அதிகாரி முடிவெடுக்கிறார். ஆனால் பள்ளி தலைமையாசிரியரான மலையாள நம்பூதிரியோ கன்னடப் பள்ளியும் அதில் படிக்கும் கன்னட மாணவர்களும் பாவம் என்று தன்னால் முடிந்த அளவுக்குப் போராடுகிறார். மாணவர்கள் போராடி, மைசூரிலிருந்து ஒருவரை அழைத்து வந்து அவரை வைத்துச் சட்டப் போராட்டம் நடத்தி எப்படிப் பள்ளியை மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

இந்த அளவுக்கு சீரியஸ் கதையை இத்தனை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருப்பது ஆச்சரியம். எப்போதும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் தவழ்ந்தபடி இருக்கிறது. சில காட்சிகள் நல்ல நகைச்சுவை. சில கொஞ்சம் டல். ஒவ்வொரு நடிகரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். (கன்னட வெறியராக வரும் ப்ரமோத் ஷெட்டி தவிர!) பள்ளி மூடப்பட்டு அங்கே படிக்கும் ஏழை மாணவர்கள் தத்தம் தொழிலுக்குப் போகும் காட்சியைக் கூட உணர்ச்சிவசப்பட வைக்காமல் மிகவும் ஜாலியாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும் நமக்கு மட்டுமே அம்மாணவர்களின் எதிர்காலம் குறித்த வருத்தம் வருகிறது. அத்தனை தெளிவாகத் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

அழகி திரைப்படத்தில் பள்ளி சார்ந்த காட்சிகளை நாம் திரையில் பார்த்தபோது எப்படிச் சில்லரையை சிதற விட்டோமோ அப்படி படம் முழுக்கக் காட்சிகள் இருக்கின்றன. நம்மை பழங்காலத்துக்குக் கொண்டு போகும் காட்சிகள். காஸர்கோட்டில் மலையாளம் கலந்து கன்னடம் பேசும் சிறுவர்கள், மம்மூட்டி மோகன்லாலைக் கொண்டாடும் கன்னடச் சிறுவர்கள் என்று இயல்பாக நகர்கிறது படம்.

2001ல் துபாயில் நான் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் சூத்ரதாரன். அப்போது எனக்கு மலையாளம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. தியேட்டரில் பாண்டவபுர காட்சிகள் வந்தபோது அதில் சிலர் கன்னடம் பேச, ஆஹா நமக்குப் புரிந்த ஒரு மொழி என்ற ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. அதேபோல் இத்திரைப்படத்தில் பல இடங்களில் மலையாளம் பேசப்படுகிறது. காஸர்கோட்டில் இத்திரைப்படம் ஓரளவுக்கு ஓடி இருக்கிறது. இப்படம் 2018ல் வெளி வந்திருக்கிறது. 2020ல் கூட காஸர்கோட்டில் ஒரு கன்னட மீடியம் பள்ளியில் மலையாள கணக்கு ஆசிரியை நியமிக்கப்பட்டு பிரச்சினை ஆகி இருக்கிறது. அதாவது இன்று வரை இப்பிரச்சினை இன்னும் அங்கே இருக்கிறது.

பள்ளியை மாணவர்கள் ஆனந்த்நாக் மூலம் மீட்பதெல்லாம் கொஞ்சம் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளே. ஆனால் தாய்மொழியில் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லி புல்லரிக்க வைத்துவிட்டார்கள். பதினைந்து வயதில் ஒரு பையனுக்கும் உடன் படிக்கும் ஒரு மாணவிக்கும் வரும் எதிர்பாலினக் குறுகுறுப்பைப் படம் முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், எல்லை தாண்டாமல்.

கன்னட நகைச்சுவைப் படங்கள், மற்ற கன்னடப் படங்களைப் போலவே, பார்க்கவே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் இத்திரைப்படம் நல்ல ஃபீல் குட் முவீயாக வந்திருக்கிறது. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ஆன்லைனில் எம் எக்ஸ் ப்ளேயரில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதே பிரச்சினையை அப்படியே தமிழுக்கு மையப்படுத்திக் கொண்டு வந்தால், புல்லரிக்க வைக்கும் தமிழ்வழிக் கல்வி தொடர்பான ஒரு உருப்படியான படத்தைக் கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது இத்திரைப்படம்.

*

பாப்கார்ன் மன்க்கி டைகர் என்றொரு படம். தனஞ்செய் நடித்தது. ரத்னன் ப்ரபஞ்ச பார்த்துப் பிடித்துப் போய் தனஞ்செய்யின் இந்தப் படத்தைப் பார்த்தேன். கன்னடத்தின் சிறந்த நவீன படமாக நான் நினைப்பது, உலிதவரு கண்டெந்தெ. (தமிழில் ரிச்சி!) ரக்‌ஷித் ஷெட்டி இயக்கி நடித்தது. சமீபத்தில் கருட கமனா வ்ருஷப வாகனா என்றொரு படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்தது. ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்து இதற்கு டிக்கெட் வாங்கப் போகும்போது, எதோ ஜெர்க்காகிப் பார்த்தால், இது ராஜ் ஷெட்டியின் படம். பின் எப்படி ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்தேன்? பின்னர் நினைவுக்கு வந்தது, இப்படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி தன் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ராஜ் பி ஷெட்டியின் படம் என்று தெரிந்ததும் டிக்கெட் வாங்கவில்லை. இவரது படமான ஒரு மொட்டயின் கதா-வை ஆஹா ஓஹோ என்று பலர் கொண்டாடினாலும் எனக்குப் பிடிக்கவில்லை. ராஜ் ஷெட்டியின் படங்களில் எனக்கு உறுத்துவது எதோ ஒரு தேக்கம். ஆனால் கருட கமனா அப்படி இல்லை. படம் நன்றாகவே இருந்தது. எல்லாரும் ராஜ் பி ஷெட்டியைப் புகழ, அவரை விட எனக்கு ரிஷப் செட்டியின் நடிப்பு பிடித்துப் போனது. வழக்கமான கன்னடப் படம் போலல்லாமல் நவீன மலையாளத் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, சில காட்சிகளில் அதையும் தாண்டி நன்றாகவே இருந்தது கருட கமனா. தமிழ்ப் படங்களின் மேக்கிங் தரத்துடன்! ஆனாலும் உலிதவரு கண்டெந்தே இதைவிடப் பல மடங்கு நல்ல படம்.

இப்படி ஒரு பின்னணியில் பாப்கார்ன் மன்க்கி டைகர் பார்த்தேன் – என்ன சொல்ல! உலிதவரு கண்டெந்தெ போல மிகச் சிறப்பான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், சந்தேகமே இல்லாமல் மிக வித்தியாசமான படம். முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை ரத்தம், வன்முறை, கொலைதான். ரிவர்ஸ் க்ரொனாலஜிகல் முறையில் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூகிள் சொல்கிறது. படம் முழுக்க அப்படி இல்லை. ஆனால் நிறைய காட்சிகள் அப்படித்தான். படம் முடிந்தாலும் கூட, இத்தனை நேரம் என்ன பார்த்தோம், ஏன் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் புரிவதே இல்லை. அல்லது எதோ ஒரு குழப்பம். பின்பு நீண்ட நேரம் யோசித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. படம் வெளிவந்தபோது (2020) தியேட்டரில் கதறிக்கொண்டேதான் பலர் போயிருக்கிறார்கள். விஸ்வரூபம் பலருக்குப் புரியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படம் அதைப் போல பத்து மடங்கு புரியாது. படம் பார்த்துவிட்டு யூ ட்யூப்பில் பல வீடியோக்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து, நான் நினைத்தது சரியா என்று உறுதிப்படுத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே பலருக்குப் புரியாத படமாகவும், சிலருக்கு மிகவும் முக்கியமான படமாகவும் ஆகிவிட்டிருக்கிறது இத்திரைப்படம்.

இப்படி புதிர் போன்ற ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், மூளைக்கு வேலை வைக்கும் திரைப்படத்தைப் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் தவறவிடக் கூடாத படம் இது. இப்படத்தில் வரும், குழந்தை காணாமல் போகும் தொடர் காட்சிகள் பதற வைக்கும் சோகக் கவிதை என்றே சொல்லவேண்டும். இடைவேளையின் போது அக்குழந்தை அழுதுகொண்டிருக்கும் அந்தச் சட்டகம் என்றும் மறக்கமுடியாத ஒன்று. அதே போல் டைகர் சீனு கதாபாத்திரத்துடன் இணையும் நான்கு பெண் பாத்திரமும் மிகவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மனைவியின் கதாபாத்திரம் மிக அருமை.

நேரம் இருப்பவர்கள், பொறுமை இருந்தால் மட்டும், இப்படத்தைப் பாருங்கள். நான் ஸீ5ல் பார்த்தேன்.

*

ரத்னன் ப்ரபஞ்ச (க)

முன்பின் தெரியாத ஒரு திரைப்படத்தை ஏன் பார்க்கிறோம் என்பதே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். நேற்றிரவு தூக்கம் வராத நேரத்தில் பார்த்த கன்னடத் திரைப்படம் ரத்னன் ப்ரபஞ்ச. (ரத்னனின் உலகம்) இதன் டிரைலர் தற்செயலாகக் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வசவுச் சொற்கள். போளி மகனே, திக்கா முச்கொண்டிருத்தீரா, முள்ஹந்திமுண்டேகண்டி என்றெல்லாம் காதில் விழவும், ஆர்வமாகப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். போளி மகனே டப்பிங்கில் தட்டி மகனே ஆகிவிட்டது. திக்கா வரவே இல்லை. ஆனாலும் படத்தை முழுக்கப் பார்த்தேன்.

திணிக்கப்பட்ட கதை. ஹீரோவின் அம்மாவின் அதீத நடிப்பு. இதைப் பொறுத்துக்கொண்டால், கன்னடம் கொஞ்சமேனும் தெரியும் என்றால், முழுக்கப் பார்த்துவிடலாம். காஷ்மீரில் நடக்கும் காட்சிகளில், கதாநாயகியின் அம்மா என ஒரு transgenderஐ அறிமுகப்படுத்த, அந்த 2 நிமிடக் காட்சிகள் இனிமை.

அதைத் தொடர்ந்து வரும் உத்ர கர்நாடகக் காட்சிகள் இத்தனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நல்லவேளை, தவறவிடாமல் பார்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நன்றாக இருந்தது. குறிப்பாக உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்கு. உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்குக்காகவே பற்பல வீடியோக்களை தேடி தேடிப் பார்த்திருக்கிறேன். இப்படத்திலும் என்ன அழகு! ஹீரோவின் தம்பியாக வரும் நடிகரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. ஹீரோ தனஞ்சயாவின் நடிப்பும் அருமை.

இறுதிக் காட்சிகளில் நெஞ்சை நக்க வைத்து, வளர்ப்புத் தாயை நினைத்து மகன் ஏங்குவதோடு சுபமாக முடித்து வைக்கிறார்கள். பெற்றால் மட்டுமே அம்மா அல்ல என்பதை மூன்று பகுதிகளாக ஆழ உழுதிருக்கிறார்கள்.

உத்ர கர்நாடகக் காட்சிகளுக்காகவும், படம் முழுக்க உடன் வரும் சொக்க வைக்கும் ஒளிப்பதிவுக்காகவும், நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். பிராமணப் பையனின் அக்கா முஸ்லீமாக இருந்தும் எவ்வித மதப் பிரச்சினைகள், வம்புகளுக்குள் போகாமல், அது அதை அப்படியே காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவலுக்காக.

*

நீண்ட நாள்கள் கழித்து இரண்டு மலையாளப் படங்கள் பார்த்தேன். கடந்த 8 மாதங்களில் நான் இன்னும் பார்க்காத பல தமிழ்ப்படங்கள் அப்படியே இருக்கின்றன. என்னவோ ஒரு மனவிலகல். இப்போது பார்த்த இரண்டு மலையாளப் படங்கள் பீமண்டெ வழி மற்றும் மின்னல் முரளி.

பீமண்டெ வழி – வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கும் மலையாளப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டே பார்க்க ஆரம்பித்தேன். படம் சுமார். அரை மணி நேரத்தில் எடுத்து முடித்திருக்கவேண்டியதை இழு இழு என்று இழுத்து, ஒரு வழியாய் முடித்து வைத்தார்கள். ஜினு ஜோசப்பின் நடிப்பு மிரட்டல்! கடைசி காட்சியில் ஜினு ஜோசப்பை அந்த குண்டுப் பெண் தூக்கி அடிக்கும் காட்சியில் வாய் விட்டுச் சிரித்தேன். மற்றபடி சிரிக்க ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

மின்னல் முரளி – ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் மிரட்டல். சூப்பர் மேன் படங்கள் வந்து குவிந்து விட்டிருக்க, அதே பாணியில் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பாகவும் அட்டகாசமான திரைக்கதையுடனும் எடுக்கவேண்டுமென்றால், அது எத்தனை கஷ்டம்? ஆனால் இதை மிக எளிதாகத் தாண்டி இருக்கிறார்கள். குரு சோம சுந்தரத்தின் நடிப்பு அற்புதம். தமிழனைக் கொன்று மலையாளி கடவுள் ஆகிறான் என்றெல்லாம் யாரும் வரப்புத் தகராறுக்குப் போகாமல் இருந்ததன் காரணம், கள படத்தில் தமிழன் மலையாளியை ஓட ஓட விரட்டி அடித்தாலோ என்னவோ. டொவினோ தாமஸ் எத்தனை நடித்தாலும் எனக்கு ஏனோ ஓட்டவே ஒட்டாது. ஆனால் மின்னல் முரளியில் கலக்கிவிட்டார். தவறவிடக் கூடாத படம் இது.

Share