Tag Archive for மலையாளம்

Avesham Malayalam Movie

ஆவேஷம் (M) – ஃபகத்தின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். நம்ப முடியாத கதை. நம்பினால் சில அருமையான காட்சிகளும் அனுபவமும் இருக்கின்றன. அது முழுமையானதாக இருக்கிறதா என்றால் இல்லை. மலையாளப் படங்களின் பிரத்யேகத் தன்மையில் இருந்து முற்றிலும் விலகி, ஒரு தமிழ்ப் படம் போல நகர்கிறது இப்படம். தனுஷின் பல படங்கள் இப்படிப்பட்ட வகையறாக்கள்தான். எனவே நமக்கு எதுவும் புதிதாகத் தோன்றுவதில்லை.

மலையாளிகள் நல்ல வசூல் தரும் படங்களை எடுப்பதிலும் மெல்ல மெல்ல மேலேறி வருகிறார்கள். குருப் படத்தில் ஆரம்பித்து இப்போது வரை பல படங்களில் நல்ல வசூல். இத்தனைக்கும் குருப் சுமாரான திரைப்படமே.

இந்தப் படமும் அப்படியே. ஆனால் இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் அதாவது ஃபகத் ஃபாசில் வரும் வரையிலான திரைப்படம் அசல் மலையாளத் திரைப்படம். அந்த மூன்று இளைஞர்களின் நடிப்பும் முகமும் மறக்க முடியாதவை. கிளைமாக்ஸ் யூகிக்கக் கூடியதாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது மிகப்பெரிய பலவீனம். ஃபகத் பல இடங்களில் ஓவராக நடித்தாலும் அது இந்த கேரக்டருக்குப் பொருந்தித்தான் போகிறது.

இத் திரைப்படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை குடி குடி குடிதான். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒரே ஒரு காட்சியில் அந்த மூன்று இளைஞர்களும் குடியை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இத்தனை குடி அவசியமா என்று எரிச்சல் வரும்போது தமிழ்ப் படங்களின் லட்சணம் முகத்திலறைகிறது.

விடுவித்துக் கொள்ளவே முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொள்ளும் திரைக்கதைகளின் முடிவு எப்போதுமே மிக எரிச்சல் தருவதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கேங்ஸ்டர் படங்கள் பிடிக்கும் என்றால், கேங்ஸ்டர் படத்தை இன்னொரு கோணத்தில் காண்பித்ததற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Share

Premalu Malayalam Movie

ப்ரேமலு (ம) – இளமைக் கொண்டாட்டம். நான்-ஸ்டாப் புன்னகை. மலையாள இளைஞர்களின் வாழ்நாள் படமாக இது இருக்கும். ஹீரோயின்‌ அழகு என்றால் ஹீரோ அதற்கும் மேல். இருவரின் வெள்ளந்தித்தனமே நம்மை ஒன்ற வைக்கிறது. காட்சிக்குக் காட்சி புன்னகை. கடைசி பத்து நிமிடம் ஒரு பக்கம் மனம் உருக, இன்னொரு பக்கம் சிரிப்பு என கலக்கிவிட்டார் கள். தொடக்கம் முதல் இறுதி வரை கதையே இல்லாமல் காட்சிகளிலும் காதலிலும் நட்பிலும் படத்தை எங்கோ கொண்டு போய்விட்டார்கள். தமிழ் டப்பிங்கில் பார்த்தால் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். ஏனென்றால் இது பிரேமம் போல மலையாள இளைஞர்களின் அசல் கொண்டாட்டம். பிரேமத்தில் கேரள நிலம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. இதில் அதுவும் இல்லை. ஆனாலும் அக்மார்க் மலையாளத் திரைப்படமாக முகிழ்ந்திருக்கிறது. டோண்ட் மிஸ்.

ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

Attam (M)

ஆட்டம் (M) – இந்த வருடத்தின் மிகச் சிறந்த படமாக இது இருக்கக் கூடும். சிறந்த திரைக்கதை, சரியாகச் சொல்லவேண்டுமென்றால் நுணுக்கமான திரைக்கதை. அபாரமான அனுபவம்.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ச்சியான வசனங்கள். ஆனால் ஆழமான வசனங்கள். ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஆழமாக்குகிறது. ஒட்டுமொத்தமாக ஆண்களின் உலகத்தை உருவாக்கிக் காட்டுகிறது.

மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதையும், ஒரு பெண்ணுலகைச் சமைப்பதில் பெரும்பாலான ஆண்கள் எத்தனை சுயநலவாதிகள், எப்படி ஆண்கள் எப்போதும் ஆண்கள் என்பதையும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வசனத்திலும் இத்தனை இயல்பாக இத்தனை பலமாகச் சொல்லும் வேறொரு படம் இல்லை என்றே சொல்லலாம்.

பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஒரு பெண்ணைச் சுற்றி ஆண்கள் என்ன என்ன கதைகளை எல்லாம் புனையக் கூடும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படம். பொதுவாக இப்படிப்பட்ட படங்களில் வரும் பிரசாரத் தொனி துளி கூட இல்லை என்பதே இப்படத்தின் ஆதார பலம்.

இப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த நாடகத்தில் நடித்த அத்தனை ஆண் நடிகர்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நாடகத்தின் கதாநாயகி’ என்று. படத்துக்கும் அது பொருந்தும். அத்தனை ஆண் நடிகர்களும் அட்டகாசமாக நடிக்க, அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிடுகிறார் கதாநாயகி. இந்த வருட சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த நடிகை, சிறந்த திரைகதை எனப் பல விருதுகளையும் வெல்லப் போகும் படமாக இது அமைந்தால் வியப்பதிற்கில்லை.

முதல் அரை மணி நேரத்தைப் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். அந்த அரை மணி நேரத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் பின்னால் திரைக்கதையில் பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது. டோண்ட் மிஸ் இட் வகையறா படம்.

மலையாளிகள் எங்கோ உச்சிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

2022ல் வெளியான Three of us -ஹிந்தித் திரைப்படத்தின் கதாநாயகி, 2023ல் வெளியான டோபி – கன்னடத் திரைப்படத்தின் கதாநாயகி சைத்ரா, 2024ல் ஸரின் ஷிஹாப் என வரிசைகட்டி கதாநாயகிகள் கலக்குகிறார்கள். இந்தப் படம் 2023லேயே பதியப்பட்டிருந்தால், சிறந்த நடிகை விருதைப் பெறுவதில் சைத்ராவுக்கும் ஸரினுக்கும் பெரும் போட்டி இருக்கும்.

மலையாளத்தின் முக்கியமான திரைப்படமான ‘யவனிகா’ ஏனோ நினைவுக்கு வந்தது. ஆனால் இந்தப் படம் இன்னும் உயரப் போய்விட்டது.

அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

ஃபேலிமி (M)

Falimy (M) – பார்க்கலாம். சில இடங்களில் மனம் விட்டுச் சிரிக்கலாம். அந்த இடங்களுக்காகப்‌ பல மொக்கைக் காட்சிகளைச் சகித்துக் கொள்ள வேண்டும். காசிக்குச் செல்லும் கதைக்குள் கல்யாணத்தை நுழைத்து மீண்டும் காசிக்கு டிராக் மாற்றுகிறார்கள். காசியில் அப்பாவும் பையனும் பேசிக் கொள்ளும் காட்சிகளில் வசனம் அருமை. இரண்டு பெருசுகள் ஜன்னல்‌வழியாகப் பேசும் ஃப்ரேம் மனதைப் பிசைகிறது. மனதளவில் பிரிந்து கிடக்கும் குடும்பத்தை காசி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வைக்கிறது. காசிக்குச் சாலையில் செல்லும் காட்சிகளிலும் இறுதிக் காட்சியிலும் குபீர் சிரிப்பு உத்தரவாதம். அதற்காக முழுப் படத்தையும் தாங்கிக் கொள்ள முடியுமா என்றால், கஷ்டம்தான். அதுவும் தமிழ் டப்பிங் அல்லது சப் டைட்டிலை மட்டுமே நம்பிப் பார்க்கப் போகிறவர்கள் திண்டாட்டம்‌தான். மலையாளம் தெரிந்தவர்கள் முயன்று பார்க்கலாம்.

Share

அன்வேஷிப்பின் கண்டெத்தும் (M)

அன்வேஷிப்பின் கண்டெத்தும் (M) – தேடினால் கண்டடைவீர்கள். எனவே ஹீரோ படம் முழுக்கத் தேடுகிறார். சரியாகக் கண்டடைகிறார்.

Spoilers ahead.

தரமான படம். எடுத்த விதம், வசனம், நடிப்பு என எல்லாமே அருமை. ஆனால் என்ன பிரச்சினை என்றால், இரண்டு கதைகளாகி விட்டன. இடைவேளை வரை ஒரு கதை. பிறகு இன்னொரு கதை. இப்படிப்பட்ட இரண்டு கதைகள் கொண்ட திரைப்படங்கள் எனக்குப் பிடிக்காது. ஒரு திரைப்படம் என்பது ஒற்றை விஷயத்தை மையப்படுத்தித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். முன்பே இவ்விஷயம் தெரிந்திருந்தால் இப்படத்தையே பார்த்திருக்க மாட்டேன்.

படத்தின் முதல் பாதியில் வரும் கதை பிரமாதம். பாதிரியாரைச் சுற்றி நடக்கும் கதை. இரண்டாம் பாதியில் உயர்சாதி ஹிந்து. இரண்டாம் பாதியில் ஹீரோ கொலையை உட்கார்ந்த இடத்திலேயே பேசி பேசி கண்டுபிடித்து விடுகிறார். ஆனாலும் யார் கொலையாளி என்பதைக் கடைசி வரை யூகிக்க விடாமல் வைத்திருந்தார்கள். நான் இரண்டு பேரை சந்தேகத்தில் வைத்து இருந்தேன். அதில் ஒருவரைக் காட்டவும் சந்தோஷமானேன். ஆனால் அதற்குப் பிறகும் ஒரு திருப்பம் கொடுத்து விட்டார்கள். இரண்டு கதைகளிலும் கொலையாளியை திடுக்கெனக் காண்பித்ததைப் பாராட்டத்தான் வேண்டும்.

நல்ல படம்தான். ஒருமுறை பார்க்கலாம்.

பின்னணி இசை இத்தனை மிரட்டலாக இருக்கிறதே, நிச்சயம் விருது கிடைக்கும் என்று நினைத்தபடியே பார்த்தேன். கடைசியில் பின்னணி இசை சந்தோஷ நாராயணன் என்று பார்த்ததும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தன.

Share

சில திரைப்படங்கள்

ஒரு தெக்கன் தல்லு கேசு (M) – மிடில. மகேஷிண்ட பிரதிகாரம் போல இன்னொரு ஈகோ மோதல் திரைப்படம். அந்தப் படமே எனக்கு ஒட்டவில்லை. இது இன்னும் மோசம். அதிலாவது ஃபகத் இருந்தார். இதில் பிஜு மேனன். ஈகோவில் ஒருத்தனை வெட்டும் அளவுக்கு ஒன்றும் நடந்திருக்கவில்லை. நம்பு என்றால் நம்பவேண்டும் என்பதுதான் மலையாள ஈகோ மோதல் திரைப்படங்களின் பாணி போல. பதிலுக்கு நகைச்சுவையகப் பழி வாங்குவாராம். அடேய்களா!

பிஜு மேனன் என்னதான் நன்றாக நடித்தாலும் என்னவோ ஒட்டாது எப்போதும். பல்லைக் கடித்துக்கொண்டு எப்படியோ பார்த்து முடித்தேன்.

2018 (M) – கேரளாவில் 2018ல் வரலாறு காணாத மழை, வெள்ளம். இதனால் 450க்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள். இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படமே 2018.

கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு இல்லாத மழை கேரளாவைப் புரட்டிப் போடுகிறது. கேரள மக்கள் சொல்ல முடியாத துன்பங்களுக்கெல்லாம் ஆளாகிறார்கள். அவர்கள் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும்போது எந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நமக்கு 2015 வெள்ளம் தந்த அனுபவங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னை சிறுகதைப் போட்டியில் வந்திருந்த இருந்த கதைகளில் பெரும்பாலானவை 2015 வெள்ளத்தை ஒட்டியவையே. எந்த அளவுக்கு சென்னை வெள்ளம் சென்னை மக்களை புரட்டிப் போட்டது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதேதான் 2018 திரைப்படமும். கேரளாவைப் பொறுத்தவரை பார்த்தவர்கள் நிச்சயம் கதறி இருப்பார்கள். படத்தின் கலெக்ஷனும் அதை உறுதி செய்கிறது.

இதுபோன்ற திரைப்படங்களுக்கு உரிய அதே கதைதான். ஒவ்வொரு குடும்பமாகக் காண்பிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் எப்படி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்கள். ஒவ்வொரு மக்களும் தானே ஹீரோவாகி எப்படி அனைவரையும் மீட்கிறார்கள் என்பதைப் பரபரப்பாகக் காட்டுகிறார்கள். சென்னையில் நடந்தது போலவே அங்கேயும் கர்ப்பிணிப் பெண் ராணுவத்தால் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட காட்சியும் உண்டு. ஒரே ஒரு இளம் ஜோடி மட்டும் வெள்ளத்தில் ஒட்டுமொத்தமாகப் பிரிய நேர்கிறது, டைட்டானிக் போல.

கேரளாவில் குண்டு வைக்கப் போகும் தமிழன் ஒருவன் மனம் திருந்தும் தனி டிராக்கும் உண்டு. இப்படிப் பல டிராக்குகள் தனித்தனியே அலைவதுதான் படத்தின் பெரிய பலவீனம்.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சம், வெள்ளம் வெள்ளம் என்று பயமுறுத்தாமல் படத்தின் போக்கிலேயே வெள்ளத்தின் அளவைக் கூட்டிக் கொண்டே போனதுதான். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம், பல நல்ல நடிகர்கள் சின்ன சின்ன காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

டைட்டானிக் போலவே அந்த ஜோடியின் உண்மையான அன்பை இன்னும் ஆழமாகக் கொண்டு போயிருந்தால் படம் அனைத்துத் தரப்பினரையும் பாதித்திருக்கும். இப்போது இது கேரளாவுக்கான ஒரு படமாகவே இருக்கிறது.

ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.

புருஷ பிரேதம் (M) – யாரோ ஒருவர் எப்போதோ இது மிக நல்ல படம் என்று சொல்லிவிட, இத்தனை நாள்களாக இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். இன்றுதான் அந்த சனி எனக்குப் பிடித்தது.

சமீபத்தில் பார்த்த மலையாளப் படங்களில் மிக மோசமானது இதுவே. இந்தப் படத்தை யார் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் என இப்போது நினைவுக்கு வரவில்லை. இரண்டரை மணி நேரத் திரைப்படத்தை 5 மணி நேரம் பார்த்தது போன்ற உணர்வு. கொஞ்சம் கூட கதையோ சுவாரஸ்யமோ இல்லை. ஆனால் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக பேசிக் கொள்வதாகவும் மிகுந்த மாடர்னாகப் படம் எடுத்ததாக நினைத்துக் கொண்டு சாவடித்து விட்டார்கள். யதார்த்தத்துடன் ஒரு போலீஸ் சந்திக்கும் அத்தனை கஷ்டங்களையும் காண்பிப்பதாக மனதில் உருவகித்துக் கொண்டு உருவான வினோத வஸ்துவிடம் நான் மாட்டிக்கொண்டு விட்டேன்.

ஸப்த ஸாகரதாச்சே யெல்லோ – ஸைட் பி (K) – காவியம் போன்ற ஒரு படத்துக்கு இப்படி ஒரு இரண்டாம் பாகமா என்று பலர் புலம்பியிருந்தாலும், எனக்குப் பிடித்திருந்தது. தனக்குக் கிடைக்காத காதலி இன்னொருவனை மணந்துகொண்டு குழந்தையுடன் வாழ்ந்தாலும், அவள் கனவுகண்ட சின்ன சின்ன விஷயங்கள் கூட நிறைவேற வேண்டும் என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்யும் ஹீரோ கதாபாத்திரம். அதே சமயம் அதைப் பரிபூரணமாகச் செய்யவும் முடியாமல் அவனைக் கொல்லும் வரை செல்லும் சைக்கோத்தனம். இந்த இரண்டுக்கும் இடையே ரக்‌ஷித் செட்டி – க்ளிஷேவாகத் தெரிந்தாலும் சொல்கிறேன் – வாழ்ந்திருக்கிறார்.

காதலியை மையமாக வைத்து முன்னகர வேண்டிய திரைப்படத்தில் அழகிய விபத்து ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது. பாலியல் தொழிலாளியாக வரும் நடிகை நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். இதனால் ஹீரோவும் கதாநாயகியும் ஒன்றாகச் சேர வேண்டும் என்னும் பரபரப்பே நமக்குள் எழாமல் போகிறது. அப்படி ஒரு பரபரப்பை இந்தப் படம் கோரவில்லை என்பதால் பெரிய இழப்பில்லை.

ஒற்றைக் காது கேட்காமல் வரும் வில்லன் நடிகர் முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகத்திலும் தன் முக அசைவுகளாலேயே அனாயசமாக நடிக்கிறார்.

முதல் பாகத்தை உணர்வுரீதியாக ரசித்தவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். முதலிரண்டு பாகங்களும் சேர்ந்த ஒற்றை நாவல் என்ற புரிதலுடன் பார்த்தால் மறக்க முடியாத அனுபவமாக மாறும்.

பிரைமில் கிடைக்கிறது.

18+ படம்.

ஒரு கட்டுரையாளர் சொன்னார் என்பதற்காக, நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்காமல் விட்டுவிட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சி மேலிட, எறும்பு திரைப்படத்தை 45 நிமிடங்கள் பார்த்தேன். அதுவே பல்லைக் கடித்துக் கொண்டுதான் பார்த்தேன். அதற்கு மேல் பொறுமை இல்லை. இந்தத் திரைப்படத்தை மலையாள நல்ல திரைப்படங்களுடன் ஒப்பிடுவது எல்லாம் கலைக்கும் மலையாளத் திரைப்படங்களுக்கும் செய்யும் துரோகம். இன்னும் மனதில் நிறைய கொட்டிக்கொண்டு வருகிறது. ஆனால் இதுபோன்ற திரைப்பட முயற்சிகளை, முயற்சிகள் என்ற அளவிலாவது நோகடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அமைதியாகிறேன்.

அதே சமயம் எல்லா மலையாளத் திரைப்படங்களும் நல்ல திரைப்படங்கள் அல்ல. அவற்றிலும் பல போலிகள் உண்டு. அப்படிப்பட்ட திரைப்படங்களை இங்கே பலர் ஏற்றிப் பிடிக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சொல்வது உண்மைதான். அது தனி.

கைவா (K) – பொழுது போகாத நேரமொன்றில் இந்தக் கன்னடப் படத்தைப் பார்த்தேன். ஏன் பார்த்தேன்? 1980களின் பெங்களூரைக் கண்முன்னால் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னதற்காக. யார் சொன்னது? படத்தை எடுத்தவர்களே! இங்கேதான் நான் ஏமாந்துவிட்டேன். அந்தக் கால பெங்களூரில் 0.1% கூட காட்டவில்லை.

படத்தின் மேக்கிங் நன்றாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களைப் போன்ற கலர் டோனைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் கதை? அரதப்பழசான கதை. இரண்டு கேங்குகளுக்கு இடையே உள்ள பகைமையில் அப்பாவிப் பெண், அதிலும் வாய் பேச முடியாத பெண் சீரழிக்கப்பட, அவர்களைக் கொடூரமாகப் பழி வாங்குகிறான் ஹீரோ. இதில் ஹீரோ ஹிந்து, ஹீரோயின் முஸ்லிம். ஆனால் இதெல்லாம் சினிமாவில் ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லாம் அப்படி அப்படியே நடக்கிறது.

1983ல் ராஜ்குமார் நடித்த பக்த பிரகலாதா ரிலீஸாகிறது. அதில் புனித் ராஜ்குமார் பிரகலாதன். ராஜ்குமார் ஹிரண்யகசிபு. பெங்களூரில் கபாலி தியேட்டரிலும் அப்படம் ரிலீசாகிறது. அப்படத்தின் உச்சகட்ட காட்சியில் ராஜ்குமார் தன் கதையுடன் வெகுண்டெழுந்து, ‘இங்கே இருக்கிறானா உன் ஹரி?’ என்று கோபம் கொண்டு ஒவ்வொரு தூணாக உடைக்க, கடைசி தூணை உடைக்கும்போது, அருகே இருந்த கங்காராம் அடுக்குமாடிக் கட்டடம் இடிந்து தியேட்டர் மேல் விழுந்ததில் 123 பேர் மரணமடைகிறார்கள்.

படம் திரையிடப்பட்டதும், கட்டடம் தியேட்டர் மேல் இடிந்து விழுந்து படம் பார்த்தவர்கள் இறந்ததும் உண்மை. ராஜ்குமார் அடித்தபோது இடிந்தது என்பது ஒரு மித். இதைத் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய சோகத்தை படத்தில் ஊறுகாய் போலத் தொட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒரு விஷயத்தைத் தவிர படத்தில் எதுவுமில்லை.

மஞ்ஞுமெள் பாய்ஸ் (M) – ஒரு முறை பார்க்கலாம். இதுமாதிரியான சர்வைவல் வகைத் திரைப்படங்களுக்குத் திரைக்கதை அமைப்பதில் எப்போதுமே சவால் இருக்கும். பரதனின் மாலூட்டியில் இருந்து இதைப் பார்க்கலாம். கதைக்குள் வருவதற்குள் பாடாய்ப் படுத்திவிடுவார்கள். அப்படிக் கதைக்குள் வந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாது. Trapped (H), Helen (M) எல்லாம் இப்படித்தான்.

இந்தப் படத்தில் நண்பர்கள் அனைவரும் கொடைக்கானலுக்குச் செல்லும் வரை படம் படு இயல்பு. நண்பர்களின் ஆரவாரத்தைத் திரையில் அப்படியே கொண்டு வந்துவிட்டார்கள். கொடைக்கானலை நேரில் பார்த்தது போன்ற உணர்வு. ஒரு நண்பன் குழிக்குள் விழும் காட்சி பதைபதைப்பு. அதன்பின்பு படம் அப்படியே நிற்கிறது. மேக்கிங், நடிப்பு எல்லாம் நன்றாக இருந்தும் அதற்கு மேல் ஒன்றும் இல்லை. நண்பனை எப்படிக் காப்பாற்றுகிறார்கள் என்று இன்ச் இன்ச்சாகக் காட்டுகிறார்கள். கயிறு இழுக்கும் போட்டி வரும்போதே, இது பின்னால் உதவும் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சி புல்லரிப்பாகத்தான் இருந்தது.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது – கண்மணி அன்போடு என்ற பாடல் வரும் இடம். தொடக்கத்தில் அத்தனை பெரிய திரையில் அந்த இசையைக் கேட்டதும் மனம் திருநெல்வேலியையும் ரத்னா தியேட்டரையும் பதினைந்து வயது நண்பர்களையும் தேடத் தொடங்கியது. ஏங்க ஏங்க அழுகை வந்தது என்கிற வரி வரும் காட்சியில் நிஜமாகவே கண்ணீர் வந்துவிடும் போல இருந்தது. இப்படியான ஒன்றிரண்டு காட்சிகளைத் தாண்டி, பெரிதாக படத்தில் ஒன்றும் இல்லை.

***

2004ல் கல்யாணம் முடிந்து தேனிலவுக்குக் கொடைக்கானல் போனோம். குணா குகையைத் தூரத்தில் இருந்து பார்த்தோம். உள்ளே இறங்கிப் போய்ப் பார்க்கலாம் என்று மனைவி சொன்னாள். மஞ்ஞுமெள் பாய்ஸ் படத்தில் இப்போது காண்பிக்கப்படுவது போல கேட் இருந்த நினைவில்லை. இறங்கிக் கொஞ்சம் தூரம் நடந்து போய்ப் பார்க்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டேன். அதிலிருந்து இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மனைவி சொல்லிக்கொண்டே இருந்தாள், குணா குகையைப் பார்த்திருக்கலாமே என்று. மஞ்சும்மெள் பாய்ஸ் பார்த்தவுடன், ‘எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து தப்பிச்சிருக்கோம் பாத்தியா?’ என்று சொல்ல நினைத்தேன். ‘குழிலயே விழுந்திருக்கலாம்’ என ஒரு பதில் சொல்லும் வாய்ப்பை அவளுக்குத் தரக் கூடாது என்பதற்காகவே அதைச் சொல்லவில்லை.

கேப்டன் மில்லர் – ஏன் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம் என்று நொந்து கொள்கிறேன். ஏன் இந்தத் திரைப்படத்தை எடுக்கிறோம் என்று யாருக்கும் தெளிவில்லை. இது சுதந்திரப் போராட்டத் திரைப்படமா அல்லது தலித்துகள் கோவிலுக்குள் செல்லும் உரிமையை மீட்கும் திரைப்படமா அல்லது காந்திய – தீவிரவாதப் போக்கினரிடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்லும் படமா என்று எதிலும் ஒரு தெளிவில்லை.

இன்றைய கால மனநிலையை அன்றைய கால சுதந்திரப் போராட்டக் களத்துக்குள் வைத்து எதையோ ஒட்டிச் செயற்கையாக ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, எடுத்த விதம் எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். அந்தக் கால பீரியடைத் திரையில் கொண்டு வரத் தெரியாமல் ஒதுக்குப்புறமாகவே பெரும்பாலான காட்சிகளை வைத்து ஒப்பேற்றி இருக்கிறார்கள். கோவிலில் கூடவா செயற்கைத்தனம்? வசனங்களிலும் அப்படியே. மூடிட்டு இரு என்று கடந்த பத்து வருடங்களாக நாம் பேசுவதெல்லாம் நூறு வருடங்களுக்கு முன்பே திரைப்படத்தில் வசனமாக வருகிறது.

நடிப்பு – ஐயையோ. அத்தனை பேரும் ஓவர் ஆக்டிங். தனுசு இந்தக் கால ஹீரோ போல் ஸ்லோமோஷனில் நடந்து வந்து சுட்டுக் கொல்கிறார்‌. ஆங்கிலேயர்கள் வசம் இருக்கும் ஒட்டுமொத்தத் துப்பாக்கிகளை விடவும், கையெறிக் குண்டுகளை விடவும் புதைகுண்டுகளை விடவும் தனுஷிடம் கூடுதலாக இருக்கிறது. எப்படி வந்தது, யார் கொடுத்தார்கள் எதுவும் தெரியாது.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதப் பாதை என்பது இத்தனை கேவலமாக இல்லை. அது கூடுதல் அர்ப்பணிப்புடன், கடவுள் நம்பிக்கையுடன், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் உள்ளடக்கியதாகத்தான் இருந்தது. இவர்கள் எடுக்க நினைத்தது நக்சலைப் பற்றிய திரைப்படம். எடுத்தது சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஒரு திரைப்படம்.

இந்தக் கொடுமையை எப்படித்தான் தியேட்டரில் பார்த்தார்களோ.

நேரு (M) – தொடர்ச்சியாக வளவளவென்று மலையாளம் பேசும் ஒரு திரைப்படம். மலையாள வசனங்கள் இத்தனை பேசப்பட்டாலும் பிடிக்கும் என்பவர்களுக்கான படம்.

எப்படியாவது த்ருஷ்யம் போல ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் அதே போன்ற ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்னொரு திரைப்படம். அதே ஜித்து ஜோசப். அதே மோகன்லால்.

மையம் கொஞ்சம் நம்பும்படியாக இல்லை என்பது மிகப்பெரிய மைனஸ். நோ மீன்ஸ் நோ என்பது போல இதைப் புரிந்து கொண்டால்தான் இந்தப் படத்துடன் ஒன்ற முடியும்‌. ஏனோ என்னால் முடியவில்லை.

When rape is inevitable என்றொரு பழமொழி உண்டு. யதார்த்தத்தில் அது கொடூரமானது. விக்டிம்களுக்குத்தான் அது புரியும். இந்தப் படம் அங்கே சறுக்குகிறது.

எம்.கே.மணியின் சிறுகதை ஒன்று நினைவுக்கு வந்து தொந்தரவு செய்தது, அக்கதைக்கும் இப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட.

Share

The Kerala Story

கேரளா ஸ்டோரி (M) – பார்த்திருக்கக் கூடாது. ஒரு திரைப்படமாக இதில் நிறைய சமரசங்களும், தொழில்நுட்ப ரீதியாகப் போதாமைகளும், நம்ப முடியாத கணங்களும் உள்ளன. ஆனால் இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல என்பதுதான் பதற்றத்தைத் தருகிறது. பிரசாரத் திரைப்படம்தான். முழுக்க கற்பனை அல்ல என்பதுதான் இப்படத்தை முக்கியத்துவம் பெற வைக்கிறது. (பின்குறிப்பு: இது வயது வந்தவர்களுக்கான திரைப்படம். Zee5ல் கிடைக்கிறது.)

Share

ப்ரமயுகம் – மலையாளம்

ப்ரமயுகம் (M) – பிரமை என்றால் கற்பனை என்றும் பைத்தியக்காரத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம் போல. படமும் அப்படித்தான் இருக்கிறது. சாதி குறியீட்டுடன் பார்த்தால் அதிகாரத்தை அடையும் வெறி என்று கொள்ளலாம். ஆனால் குறியீடுகளுடன் ஒரு படத்தைப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. நேரடியான சாதிப் படங்களே என் தேர்வு.

இந்தப் படத்தை மம்மூட்டிக்காக நிச்சயம் பார்க்கலாம். மிரட்டல் என்னும் வார்த்தை எல்லாம் குறைவு. கண்களிலேயே நடிக்கிறார். வெறித்தனமான சிரிப்பு ஒன்று போதும். அதிலும் அந்தத் தொடக்கக் காட்சி, மறக்கவே முடியாது. விதேயன் திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். தனது 72ம் வயதில், அன்றைய விதேயன் போல அத்தனை சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதை ஒழுங்காக அமைந்திருந்தால் நிச்சயம் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கும். இப்போதும் விருது கிடைக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் பின்னணி இசை. அருமை. ஒளிப்பதிவும் அட்டகாசம். ஆனால் கதை?

கறுப்பு வெள்ளை திரைப்படம். படம் முழுக்க நான்கே பேர். அதிலும் பெரும்பாலும் மூன்று பேர்தான். படம் முழுக்க பார்க்க வைத்ததே பெரிய விஷயம். என்ன பிரச்சினை என்றால், இதைத்தாண்டி ஒன்றுமே இல்லை.

மிக பலவீனமான கதை. மம்மூட்டிக்காக எவ்வளவு நேரம் ஒரே விஷயத்தை இரண்டு மணி நேரம் பார்ப்பது? ஒரு பரபரப்பும் இல்லை, ஒரு பயமும் இல்லை. sick திரைப்பட வகை என்பதைச் சிறப்பாகக் கொண்டு வந்தவர்கள், கதையிலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டுவிட்டார்கள். மெல்ல நகரும் மலையாளப் பாணி இன்னொரு எரிச்சல். அதிலும் மம்மூட்டி கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பிறகு, உலகத்துக்கே தெரிந்த முடிவை இன்ச் இன்சாகக் காட்டி இன்னும் சாகடித்துவிட்டார்கள்.

தம்பட் (ஹிந்தி), குமாரி (மலையாளம்) திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும். குமாரி திரைப்படமும் இத்திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே வகை.

மற்றபடி ஆஹோ ஓஹோ என்று புகழ ஒன்றுமே இல்லை. தூக்கம் கெட்டுத் தலைவலி வந்ததே மிச்சம். ஃபேஸ்புக்கில் புகழ்ந்தவர்களின் பேச்சைக் கேட்டு தியேட்டர் வரை போயிருக்க வேண்டாம். ப்ச்.

Share