Tag Archive for மணிரத்னம்

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

காற்று வெளியிடை

காற்று வெளியிடை – கதையே இல்லை. கார்கில் பிரச்சினை தொட்டுக்கொள்ள ஊறுகாய். பாகிஸ்தானைத் திட்டினால் முஸ்லிம்களுக்குக் கோபம் வந்துவிடுமோ என்ற அச்சம். இந்தியாவைக் குறை சொன்னால் இந்திய அளவில் எதிர்ப்பு வந்துவிடுமோ என்ற பயம். எனவே அரசியலையும் நாட்டுப் பிரச்சினைகளையும் இம்மி கூடத் தொடாமல் கார்கில் பிரச்சினையை மையப்படுத்தி படம் எடுத்து சாதனை செய்திருக்கிறார் மணிரத்னம். ஒரு முக்கியப் பிரச்சினையை பின்னணியாக எடுத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிவிட்டுச் செல்வது மணிரத்னத்துக்கும் நமக்கும் புதியதல்ல என்றால், இப்படம் இன்னும் ஒரு படி மேல். இதற்கு முந்தைய படங்களில் அப்பிரச்சினையைப் பற்றி எதாவது சொல்லவாவது முயற்சிப்பார். இதில் அந்த முயற்சியும் கிடையாது.
 
பாகிஸ்தானில் கார்த்தி சிக்குவதும் பாகிஸ்தானிலிருந்து தப்பிப்பதும் மனைவி குழந்தையுடன் சேருவதுமான காட்சிகளில் எது சிறந்த காமெடிக் காட்சி என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. கல்யாணத்துக்கு முன்னரே உடலுறவு என்ற கருத்துத் திணிப்பை இப்படத்திலும் கடைப்பிடிக்கிறார் மணிரத்னம். என் செல்லக்கிளியே, உங்க அருமை பேத்தி என்பது போன்ற ஒட்டாத மணிரத்னத்தின் ட்ரேட் மார்க் செயற்கை வசனங்கள், வண்ணப்பொடி தூவி ஒரு கல்யாணப் பாடல், டாக்டரைத் தேடிப் போன மாதவனைப் போல ஒரு டாக்டர் காதலைத் தேடிப் போவது, டெண்ட் போட்டு வைத்தியம் பார்க்கும் ஹீரோயின் என மணிரத்ன க்ளிஷேக்கள் இப்படத்திலும் உள்ளன.
 
படத்தின் ப்ளஸ் என்ன? ப்ளஸ் அல்ல, பல ப்ளஸ்கள். ஒன்று, ஒளிப்பதிவு. தமிழில் இத்தனை சிறந்த ஒளிப்பதிவுள்ள படங்கள் மிகக்குறைவு. உயிரே திரைப்படத்துக்குப் பிறகு இப்படி அசரடிக்கும் ஒளிப்பதிவை த்மிழ்ப்படங்களில் பார்த்ததாக நினைவில்லை. அதையும் தாண்டிச் செல்கிறது இப்படத்தின் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுக்கு விருது உறுதி. ஒளிப்பதிவுக்காகவே இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.
 
இரண்டாவது ப்ளஸ், அதிதி ராவ். முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நடிக்குமா? நடிக்கிறது. கண் காது மூக்கு என சின்ன சின்ன அழுத்தமான அசரடிக்கும் பாவங்களில் அதகளப்படுத்துகிறார் அதிதி ராவ். சான்ஸே இல்லை.
 
மூன்றாவது ப்ளஸ், மணிரத்னத்தின் இயக்கம். படம் முழுக்க பத்து காட்சிகளாகவது பிரமாதமாக இருக்கின்றன. வழக்கமான மணிரத்னத்தின் படங்களைப் போல இவை ஒன்றுடன் ஒன்று ஒட்டவில்லை என்பதுதான் பிரச்சினை.
 
பின்னணி இசையா அது பாடலா என்று கண்டுபிடிப்பதற்குள் அது முடிந்துவிடுகிறது. நல்லை அல்லை பாடல் இரண்டு வரி காதில் விழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பிரச்சினை, மெலடி பாடல் என்றால் இசையே இல்லாமல் இசைப்பதுதான் என்ற முடிவுதான்.
 
மெல்ல நகரும் மணிரத்னத்தின் படங்களின் ரசிகர்கள் இப்படத்தைப் பொறுமையாகப் பார்ப்பார்கள். நான் பார்த்தேன். ரசித்துப் பார்த்தேன். கதையே இல்லை என்பது தந்த எரிச்சலை மீறி, மணிரத்னத்தின் சில செயற்கையான காதல் வசனங்களை மீறி, பிரமிக்க வைக்கும் பல காட்சிகளை ரசித்துப் பார்த்தேன். இரண்டாம் முறையும் பார்க்கப் போகிறேன். மற்றவர்கள் நொந்து போவார்கள். அப்படி நொந்து போனவர்கள் நம்மையும் நிம்மதியாகப் பார்க்கவிடாமல் கமெண்ட் அடித்துக்கொண்டே இருப்பார்கள். இன்று நான் பார்த்த திரையரங்கில் என்னைத் தவிர எல்லாருமே இப்படி நொந்து போய் கமெண்ட் அடித்துக்கொண்டுதான் இருந்தார்கள். இரண்டரை மணி நேரப் படம் இருபது மணி நேரம் ஓடுவது போல் பிரமை ஏற்படுத்துவது உறுதி என்பதால் கட்டுச்சாதம் கட்டிச் செல்லவும். மிகத் தெளிவாக இது ஈகோ க்ளாஷ் படம் என வகைப்படுத்தி இருந்தால், ஒரு கட்டுக்குள்ளாவது இருந்திருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் மணிரத்னம்.
 
பின்குறிப்பு: இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று வருகிறது. பின்னணி இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வருகிறது. கூடவே இன்னொருவர் பெயரும் வருகிறது. அதோடு ஒரிஜினல் ஸ்கோர் என்று அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் வருகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டும்?
Share