Tag Archive for விஜய் சேதுபதி

Merry Christmas (H)

Merry Christmas (H) – அந்தாதூன் நினைவுக்கு வர, ஶ்ரீராம் ராகவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக இதைப் பார்த்தேன். ஜனவரியிலேயே வந்திருக்கிறது. படம் பார்த்துவிட்டு கூகிளில் தேடினால் இந்தப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடித்திருந்தும் இப்படி ஒரு படம் வந்தது கூட எனக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் இரவில் நடந்து முடியும் கதை. படத்தின் தொடக்கத்தில் ஹீரோவும் ஹீரோயினும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இருவரும் தங்கள் கதையைச் சொல்லி முடிக்கும்போது இருவருக்கும் இடையே ஓர் உறவு மலரும் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே ஒரு திருப்பம். பின்னர் அது த்ரில்லர் படமாகிறது. எப்படி ஒரு பெண் முன்பின் தெரியாத ஒருவனிடம் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கிறாள் என்பதற்கு விடையும் கிடைக்கிறது.

படம் எடுத்த விதம் அருமை. நீட்டான திரைப்படம் என்றுதான் சொல்லவேண்டும். விஜய் சேதுபதி ஹிந்தியில் பேசினாலும் தமிழ் போலவே ஒலித்தது. படத்திலும் அவர் தமிழ்க்காரர் என்பதால் அது இயல்பாகவும் தோன்றியது. அலட்டலே இல்லாமல் நடித்தார். கத்ரினா கய்ஃபும் பிரமாதமாக நடித்தார். கடைசி பத்து நிமிடம் இசை மட்டுமே என்று என்னவெல்லாமோ செய்து பார்த்திருக்கிறார்கள். மெல்ல செல்லும் திரைப்படம் மெல்ல முடிந்துவிடுகிறது. பிரெஞ்சு நாவலைத் திரைப்படமாக்கி இருப்பதாலோ என்னவோ, வெளிநாட்டுத் திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற அனுபவம் கிடைத்தது.

அந்த வீடு, படத்தின் கலர் டோன், நடிகர்களின் நடிப்பு – இவற்றுக்காகப் பார்க்கலாம். தமிழில் இந்த அனுபவம் கிடைக்குமா எனத் தெரியவில்லை. பார்த்தவர்கள் சொல்லுங்கள்.

Share

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஆனால் யாருக்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவரை நினைத்துப் பாவமாக இருக்கிறது. இது போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் ஒரு பிடிவாதம் வேண்டும். தான் எடுக்கும் படங்கள் மீதான நம்பிக்கை வேண்டும். இரண்டுமே மணிகண்டனிடம் இருக்கிறது, அதற்காகப் பாராட்டுகள்.

கடைசி விவசாயி என்ற பெயர் ஒரு வகையில் இப்படத்துக்குத் தவறான பெயரோ என்று இப்போது யோசிக்கிறேன். குற்றமே தண்டனையில் ‘ஜி-ன்னு கேட்டாலே எரிச்சல் வருது’ என்றொரு வசனம் வரும். இது போன்ற புதிய அலை இயக்குநர்கள் (மணிகண்டன் புதிய அலையில் வருவாரா என்பது தனியே விவாதத்துக்குரியது) எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இந்திய – ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது வழக்கம் என்பது ஒரு பக்கம். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் விவசாயம் என்பதைத் அதீதப் புனிதமாக்கி, எங்கெல்லாம் திரைக்கதை எழுத முடியவில்லையோ அங்கெல்லாம் புனித விவசாயத்தைப் புகுத்தி, விவசாயம் என்றாலே பார்வையாளர்கள் ஓடிவிடும் அளவுக்கு ஆக்கி வைத்திருப்பது ஒரு பக்கம். இதனால்தான், இப்படத்தின் பெயர் கடைசி விவசாயி எனவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் மணிகண்டன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏன்? முதல் பாராவை வாசிக்கவும். அந்த நம்பிக்கையில் இப்படத்துக்குப் போனேன்.

முதல் 50 நிமிடம் ரொம்பவே சோதித்துவிட்டார் இயக்குநர். கதைக்குள் எடுத்த எடுப்பிலேயே வந்திருக்கலாம். ஆனால் என்னவெல்லாமோ காண்பித்துப் பாடாகப் படுத்திவிட்டார். அதிலும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படத்துடன் எங்கேயும் ஒட்டாமல் எப்படியோ அலைபாய்கின்றன. கேள்வியை எதாவது கேட்டுவிட்டு அதற்கு எதாவது ஒரு பதில் சொல்லி, அதைத் தத்துவ பன்ச் என்று நினைத்து அவர்களாக ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. வெளியே போய்விடலாமா என்று நினைக்கும்போதுதான் அந்த நீதிமன்றக் காட்சி ஆரம்பிக்கிறது.

அதற்குப் பிறகு படம் நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியை எங்கே எப்படி வைப்பது என்பதிலும் மணிகண்டனுக்குக் குழப்பம் போல. இழுஇழு என்று இழுத்து எப்படியோ முடித்து வைக்கிறார். நவீன விவசாயத்தின் மீதான அவநம்பிக்கை படத்தில் ஒவ்வொரு காட்சியில் தெரிந்தாலும், கதையின் மையம் அதுவல்ல என்பது என் எண்ணம். இன்னொரு கோணத்தில் கதையின் மையம் அதுவே என்று சிலர் சொல்லக் கூடும். இயற்கை விவசாயம் என்பதை யாரால் முடியுமோ அவர்கள் செய்துகொள்ளலாம். ஆனால் நவீன வேளாண்மை என்ற ஒன்று இல்லாவிட்டால், பூச்சி மருந்துகள் என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகம் முழுக்க ஊஊஊஊதான் என்பதை எல்லாரும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. என் பார்வையில் இப்படம் ஒட்டுமொத்த விவசாயமே கேள்விக்குறியாகிறது என்பதைப் பற்றியே பேசுகிறது என்றே நினைக்கிறேன். ஆனால், கடைசிக் காட்சியில் மயில் நடனமாட, மழையும் பெய்கிறது! அப்படியானால் மழைதான் பிரச்சினையா? ‘குற்றமே தண்டனை’யிலும் இதே போல் மணிகண்டனுக்குப் பிரச்சினைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது. ரொம்ப யோசித்துத் தத்துவச் சிக்கலுக்குள் மூழ்கும்போது திரைக்கதை எழுதுவாரோ? 🙂

படம் எப்போதெல்லாம் நம்மை சோதிக்கிறது என்றால், விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் வரும்போது! இந்த இரண்டு பேரும் ஏன் இந்தப் படத்துக்குத் தேவை என்பதே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சி மட்டுமன்றி, கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறேன் என்று, படத்தோடு ஒட்டமுடியாத, ஆனால் காட்சியாக நல்ல காட்சிகளும் பல உண்டு.

விவசாயியாக நடித்திருப்பவர் மட்டுமல்ல, பல நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். க்ளிஷேவாக அல்ல, நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களையே காட்சிக்கேற்றார் போல் வசனம் பேசச் சொல்லிவிட்டார் போல இயக்குநர். பல வசனங்கள் நாம் வீட்டில், தெருவில் பேசிக்கொள்வது போல அப்படியே வருகின்றன. திக்குவது, தவறாகச் சொல்லிப் பின்னர் சரியாகச் சொல்வது, எதாவது பேசுவது என எல்லாமே அப்படியே வருகின்றன. துல்லியமான மதுரைப் பேச்சு வழக்கில். இதில் சொதப்புவர்கள் யாரென்றால், பெயர் பெற்றுவிட்ட விஜய்சேதுபதி போன்றவர்கள்தான். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியெல்லாம், எத்தனை இயல்பாக இருக்கிறது என்றால், இப்படித் தமிழ்ப்படங்களில் பார்த்ததே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக இருக்கிறது. பெரிய சாதனை இது. இதற்காக மணிகண்டன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்.

நீதிபதியாக வரும் பெண்ணின் நடிப்பு மிக அருமை. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே பெரிய பலம்.

விஜய் சேதுபதி தான் இத்தனை நாள் நடித்த படங்களிலும் இனி நடிக்கப் போகும் படங்களிலும் ஹிந்து மதத்தைத் தாக்கியதற்காக ஒரு பெரிய பிராயசித்தமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் போல. தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஹிந்து மதச் சின்னங்கள்தான். ஆனால் பைத்தியம். எல்லாப் படங்களிலும் இவர் பேசுவது இப்படித்தான் இருக்கிறது என்பதால், நமக்கு இதில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை.

எழுத்து போடும் காட்சியில் ஒலிக்கும் டி எம் எஸ்ஸின் முருகன் பாடல் தொடங்கி இறுதிக் காட்சி வரை முருகன், பிள்ளையார், குலசாமி, அய்யனார் என பக்தி மயம்தான். படத்தின் முதல் சட்டகமே ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, பாட்டன் முருகனுக்கும் அவனது அடியார்களுக்கும்’ என்றெல்லாம் வந்தது. ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று கூட நினைத்தேன். இல்லை, உண்மையிலேயே பக்தியாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 🙂

சந்தோஷ் நாராயன் இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. இளையராஜா இசையமைத்த டிரைலர் இன்னும் காதில் ஒலிக்கிறது. நமக்குக் கொடுப்பினை இல்லை. வேறென்ன சொல்ல!

மணிகண்டனின் படங்கள் மெல்ல நகரும் என்பது தெரிந்ததுதான். இப்படம் மெல்ல ஆனால் நகரவே இல்லை என்பதுதான் பிரச்சினை. சில காட்சிகள் மிக இயற்கையாக இருக்கின்றன, சில காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து, திரைக்கதையில் கவனம் செலுத்தி, விஜய் சேதுபதி + யோகி பாபுவை மொத்தமாக நீக்கி இருந்தால், இப்போது மயிலின் அகவலாகத் தேங்கி இருக்கும் படம், மயிலின் நடனமாக . மணிகண்டன் தவறவிட்டுவிட்டார்.

இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, மணிகண்டன் யாரை நம்பி இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறார் என்பதுதான். ரசிகர்களை நம்பி என்று தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும். இன்று நான் தியேட்டரில் பார்த்தபோது 20 பேர் இருந்தால் அதிகம். நல்லவேளை, ஓ.டி.டி என்ற ஒன்று இருக்கிறது. அதில் வரும்போது இன்னும் சில லட்சம் பேர் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்? மணிகண்டன் யோசிக்கவேண்டும். மணிகண்டன் திறமையான இயக்குநர் என்பதில் ஐயமே இல்லை. அந்தத் திறமையைப் பறைசாற்றும் திரைப்படங்களை அவர் தரட்டும். அந்த முருகன் அவருக்கு பிழைக்கும் புத்தியைத் தரட்டும்.

பின்குறிப்பு: படத்தில் ஒரு கவித்துவமான காட்சி. யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். அந்த யானைக்கு கொசு வலை போட்டு உறங்க வைப்பார். அந்தக் காட்சியில் யோகி பாபுவின் உதவியாளர் படுத்திருக்கும் யானைக்குக் கால் அமுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார். ❤ எனக்கு மிகவும் பிடித்துப் போன காட்சி.

Share

கணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு

Spoilers ahead. கதையைத் தெரிந்துகொள்ளவேண்டாம் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். நீண்ட பதிவு.

நல்ல ஒரு கதையை வைத்துக்கொண்டு, அதில் தேவையே இல்லாமல் அரசியல் கலப்பதால் எத்தனையோ படங்கள் தங்கள் இலக்கைத் தொடாமலேயே தேங்கிப் போய்விடுகின்றன. அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவை இப்படித்தான். மீண்டும் மீண்டும் ஒரே அரசியல்தான் இதிலும் சொல்லப்படுகிறது. இந்தியா வாழ லாயக்கற்ற தேசம், இந்தியாவில் தனிமனிதனால் வாழவே முடியாது என்ற செய்திகள்தான். இந்திய அரசு (இந்தப் படத்தில் மாநில அரசையும் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்) எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் இருந்தாலும் செத்தாலும் அரசுக்குக் கவலை இல்லை. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது. கவலைக்குரிய ஒரு பெண்ணின் வலியோடு. இந்த அரசியலில் கவனிக்கப்படவேண்டிய இந்தப் பெண்ணின் வலியும் அது சார்ந்த பிரச்சினைகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ரணசிங்கம் வீரன், தீரன், முற்போக்காளன், எக்ஸட்ரா எக்ஸட்ரா. ராமநாதபுரத்தில் தன் கிராமத்தில் குடிநீருக்காகப் போராடுகிறான். கிராமத்தின் ஒற்றுமைக்காகப் போராடுகிறான். அவனை அத்தனை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள். அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள்ளாகவே அவனது மரணச் செய்தி வந்து சேர்கிறது. ரணசிங்கத்தின் வீர தீர காதல் எல்லாம் அவ்வப்போது நினைவலையாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எதாவது ஒரு நினைவு வந்து அங்கேயும் விஜய் சேதுபதி வந்துவிடுவாரோ என்ற அச்சம் வரும் அளவுக்கு அதீதமாக ரணசிங்கத்தின் காட்சிகள் வருகின்றன. பத்தாம் நிமிடத்திலேயே அவன் செத்துப் போய்விடுவதால், கதை எதைப் பற்றியது என்ற ஆர்வம் நமக்கு வருகிறது. ஆனால் படமோ ரணசிங்கத்தை விவரிப்பதிலேயே சுற்றுகிறது.

பின்னர் ஒரு வழியாகக் கதை என்பது ரணசிங்கத்தின் உடலை துபாயில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதுதான் என்பது தெரிகிறது. ஏன் துபாய் அரசும், அங்கே ரணசிங்கம் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனமும் அவன் உடலைத் தரவில்லை? அதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை. நம்புவோம். ஏனென்றால் கதை அந்தக் காரணம் பற்றியது அல்ல. அப்படிச் செத்துப் போகும் இந்தியர்களின் உடல் இந்தியாவுக்கு வருவதைப் பற்றியது. இதிலுள்ள சிக்கலில் இந்தியாவின் அரசு நிர்வாகம் எத்தனை மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இப்படம் பற்றிய நோக்கம்.

ரணசிங்கத்தின் திருமணம் இரவோடு இரவாக நடக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் படத்தைப் பார்த்து நொந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கு ஆதாரமே இல்லை. அதாவது ஊரில் எல்லாருக்கும் தெரியும். ஆதாரம் மட்டும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரண சிங்கம் செத்துப் போனதோ துபாயில். அவன் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மனுச் செய்ய அவரது மனைவிக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்தான் மனைவி என்பதற்கு ஆதாரம் இல்லை. அதை அரசு கேட்கிறது. இதில் என்ன தவறு? இத்தனைக்கும் அரசு அதிகாரியாக வரும் பிராமணர், தங்கை மூலம் உடலைக் கோரலாம் என்று நியாயமான, நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் சொல்கிறார். வசனம் எழுதியவர் அவரை அறியாமலேயே இந்த உண்மையை எழுதி இருக்கவேண்டும். இங்கே மட்டும் அல்ல, அரசின் குரலாகப் பல இடங்களில் உண்மையை எழுதி இருக்கிறார். இதற்காக இவரையும் இயக்குநரையும் பாராட்டவேண்டும். ஆனால் ரணசிங்கத்தின் மனைவி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், தான் தான் ரணசிங்கத்தின் மனைவி என்று நிரூபிக்கும் போராட்த்துக்குள் போகிறாள். ரணசிங்கம் எத்தகையவன் என்று சொல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட படம், இங்கே ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியே என்று நிரூபிக்கப் போராடும் பெண்ணின் படமாக மாறுகிறது.

ரணசிங்கத்துக்கு ஆதரவாகவே நல்லவராக வரும் கலெக்டர் (ரங்கராஜ் பாண்டே) தன்னளவுக்கு இயன்றவரை உதவி செய்கிறார். முதலில் ரணசிங்கத்துக்கும், பின்னர் அவனது மனைவிக்கும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் ரணசிங்கம் இறந்துவிட்டதால், அந்த விபத்தை மறைக்க நினைக்கும் நிறுவனம், ஏதேதோ பொய் சொல்கிறது. செட்டில்மெண்ட்டுக்கெல்லாம் வருகிறது. ஆனால் உடலைத் தர மறுக்கிறது. ஏனென்றால் உடலே அவர்களிடம் இல்லை. இது இறுதிக்காட்சியில்தான் நமக்குத் தெரிகிறது.

இதற்கிடையில் துபாயில் ஸ்ரீதேவி இறந்து போக, அதற்கு பிரதமர் இரங்கல் செய்தி போட்டு ட்வீட் போடுகிறார். அவரது உடல் மூன்றே நாளில் இந்தியா வருகிறது. இந்த ஒப்பீடு ஒரு நல்ல கற்பனைதான். ஆனால் யதார்த்தமும் இதுதான். ஒரு நடிகையின் மறைவுக்குப் பிரதமர் ட்வீட் போடுகிறார், ஆனால் ஒருத்தன் துபாயில் செத்துப் போய் பத்து மாதங்கள் ஆகின்றன, அவன் உடல் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படித்தான். பாஜகவிலும் இப்படித்தான். ஊரிலும் வீட்டிலும் இப்படித்தான். ஆனால் இயக்குநர் இதைத் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ரணசிங்கத்தின் மனைவி சென்னைக்கு வந்து, மத்திய அமைச்சர் வரும் காரில் போய் விழுந்து நீதி கேட்கிறாள். மத்திய அமைச்சர் ஒரு பெண். பாதுகாப்பு அமைச்சர். ஆனால் நிர்மலா சீதாராமன் அல்ல! அவர் பரிவுடன் விசாரித்து, ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியுடன் ஒரு செல்ஃபியும் போட்டு, சக அமைச்சருக்கு டேக்-க்கும் செய்கிறார். விஷயம் இந்தியா முழுக்கவும் பரவுகிறது. ஆனால் பிரயோஜனமில்லை.

அரியநாச்சி தமிழ்நாட்டு முதல்வரைப் பார்க்க முயல்கிறாள். ஆனால் போலிஸ் தரப்பு அவளை முதல்வர் அருகில் கூட வரவிடுவதில்லை. இப்படியே வெளியுறவுத் துறை அதிகாரிகளும் செய்கிறார்கள். வேறு வழியே இன்று டெல்லி போகிறாள். அணையைத் திறந்துவிட வரும் பிரதமர் வரும் இடத்துக்குப் போய், அணையில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறாள். கையில் குழந்தையுடன். அதை லைவாகவும் ஒளிபரப்பாகிறது. பிரதமர் மோதி வருகிறார். அதாவது மோதியைப் போல ஒருவர் வருகிறார். அவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரிகிறது. பரிவுடன் பரிசிலீக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் இந்தியா வரவேண்டும், அதுவரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். இந்தியாவே பரபரக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ரணசிங்கத்தின் உடல் இந்தியா வருகிறது. அரியநாச்சியே அணையைத் திறந்துவிடட்டும் என்று பரிவுடன் பிரதமர் சொல்ல, அரியநாச்சியே திறந்து வைத்துவிட்டுப் போகிறாள். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்று சொல்கிறார் பிரதமர்.

ரணசிங்கத்தின் உடல் வீட்டுக்கு வருகிறது. எரிக்கும்போது அரியநாச்சி கண்டுகொள்கிறாள், அது ரணசிங்கத்தின் உடல் இல்லை என. ஆனாலும் அது ரணசிங்கத்தின் உடல்தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். இரவில் தனிமையில் ‘வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க’ என்று சொல்கிறாள். தேவடியா பசங்க என்பது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உருப்படியான படமாகவே எடுத்திருக்கலாம். தமிழில் அதிகம் விவாதிக்கப்படாத கதை இது. ஒரே கதையிலேயே கிராமத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் காட்ட நினைத்தது முதல் தவறு. விஜய் சேதுபதிக்காக கதையை அவரைச் சுற்றிப் பின்னிவிட்டது இரண்டாவது தவறு. அவனது உடலைக் கொண்டு வருவதற்கு ஏதேனும் காரணங்களைச் சொல்லவேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் அவன் மீது இருக்கும் வழக்குக்களை எல்லாம் சேர்த்து என்னவெல்லாமோ வசனங்களைச் சொல்லவிட்டது அடுத்த குழப்பம். பன்னாட்டு நிறுவனமும் துபாய் அரசும் சேர்ந்துகொண்டு செய்யும் பிரச்சினைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் என்ன செய்யமுடியும் என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலே சொல்லாமல் விட்டது பெரிய சறுக்கல். இதில் ஸ்ரீதேவியின் உடல் மட்டும் மூன்றே நாளில் வருகிறது என்பதை இத்துடன் எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

பன்னாட்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விபத்தை மூடி மறைத்தால், அதுவும் அது வேறொரு நாட்டில் நடந்தால், அதை இங்கிருந்தபடியே ஒரு கிராமத்துப் பெண் எதிர்கொள்வது உள்ளபடியே கஷ்டம்தான். இதன் பொருள் இந்திய அரசு அவளைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல. வேண்டுமென்றே இந்தியாவைத் திட்டவேண்டும் என்று நினைத்தால்தான் இப்படி யோசிக்கமுடியும். ரேஷன் அரிசியில் பெயர் சேர்க்க வரும் ஒரு அதிகாரியிடம் நாங்க இந்தியாவுலயே இல்லைன்னு எழுதிக்கோ என்று அரியநாச்சி சீறுகிறாள். ஆனால் வந்த அதிகாரி கேட்கும் கேள்வி நியாயமானது. அந்த நியாயத்தை மறைக்க அவர்கள் கேட்ட விதத்தை வேண்டுமென்றே மோசமாக்கி எடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படித்தான் அந்த பிராமண அதிகாரி விஷயத்திலும் நடக்கிறது.

பிராமண அதிகாரியின் விஷயத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டி இருக்கிறது. படத்தில் வரும் எந்த ஒருவரின் சாதியும் மதமும் தெரிவதில்லை. இரண்டு பேரைத் தவிர. ஒருவர் பிராமணர். இவர் கலெக்டரின் உதவியாள். அதிகாரி. அரசுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யும் ஆள். கலெக்டரையும் மீறி, அரியநாச்சியுடம், வந்த பிணம் ரணசிங்கம்தான் என்று கையெழுத்து வாங்க அலைகிறார். அரியநாச்சியைப் பற்றி அலட்சியமாகப் பேசுகிறார். அவரை இப்படிக் காண்பிக்கிறார்கள். இன்னொருவர் முஸ்லீம். அவர்தான் ரணசிங்கத்தை, பணம் வாங்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்புகிறார். துபாய் பன்னாட்டு கம்பெனி இவர் மூலமாகத்தான் பண பேரம் பேசுகிறது. ஆனால் இவர் பேசும் வசனத்தில் ஒன்றில்கூட வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். தன் கையறு நிலையைப் பேசுகிறார் இந்த ஏஜெண்ட். மிகத் தெளிவாக இரண்டு கதாபாத்திரங்களையும் அமைத்திருக்கிறார்கள். முஸ்லீம் ஒருவரை நல்லவராகக் காண்பிப்பது, சூழ்நிலைக் கைதியாகக் காண்பிப்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக இன்னொரு கதாபாத்திரம் வரும்போது எப்படி யோசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஸ்ரீதேவி இறந்தபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருக்கு ஒரு ட்வீட் செய்தாலே போதும் எப்படி உதவுவார் என்று உலகமே வியந்தது. அவர் இறந்தபோது காங்கிரஸ் அமைச்சர்களே அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இயக்குநருக்கு அது மட்டும் நினைவில்லை போல.

பிரதமரே வந்திருந்து ஒரு பெண்ணுக்கு உதவுகிறார். ஆனாலும் அந்தப் பெண் அரியநாச்சி தேவடியா பசங்க என்று யாரைத் திட்டுகிறாள்? அவளுக்கே அதில் தெளிவில்லை. இயக்குநருக்கும் தெளிவில்லை. யார் மீது கோபத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. புகைப்படமும் இல்லை. பத்திரிகையும் இல்லை. அப்படியானால் அதிகாரிகளால் எப்படி உதவமுடியும்? அதற்கான வழிகளையும் ஒரு அதிகாரி சொல்கிறார். எல்லா இடங்களிலும், அரசு அலுவலர்களின் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும், வேலை நடக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் இறந்து போன ஒருவரின் உடலைக் கொண்டு வருவது என்பது நிச்சயம் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். அதற்கு இந்தியாவின் மீது கோபப்பட்டு, வெறுப்புடன் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அரியநாச்சியாக அட்டகாசமாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அற்புதமான நடிப்பு, இந்த அரசியலில் பின்னுக்குப் போய்விடுகிறது.

எப்படியாவது இந்திய, ஹிந்து, பாஜக வெறுப்பைக் காண்பித்தால்தான் ஆதரவு கிடைக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் படத்தை அதன் ஆதாரக் கருத்தை மட்டுமே சுற்றி எடுத்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சிகளில் வரும் கிராமம் மற்றும் குடும்பம் சார்ந்த காட்சிகள் மிக இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தன. அதைவிட்டுவிட்டுப் படம் எப்போது புரட்சி வசனங்களை நோக்கிப் போகிறதோ அங்கேயே தன் பிடியை இழக்கத் துவங்குகிறது. அதிலும் உன் பேர் என்னப்பா என்ற கேள்விக்குக் கூட, ஊர் நியாயம் உலக நியாயம் சாதி மத இன வேறுபாடு என்று பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி பேசத் துவங்கும்போது கொட்டாவிதான் வருகிறது. அவர் செத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொல்கிறாரே என்று தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தையெல்லாம் விட்டுவிட்டு, அரசுடன் போராடும் ஒரு பெண்ணின் கதையை மட்டும் சொல்லி இருந்தால், அரசின் மெத்தனமும் அலட்சியப் போகும் பின்னணியில் அதுவாகவே வெளிப்படுவதாகக் காட்டி இருந்தால், இந்தப் படம் வேறு தளத்துக்குப் போயிருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்.

பின்குறிப்பு: சென்னைக்கு வந்து இறங்கிய உடனேயே தெரிந்த ஒருவர் உதவுவது, ஒரு கதாபாத்திரம் தலையை ஆட்டிக்கொண்டே வருவது (சோ-வின் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது) என்பதையெல்லாம் சினிமா உலகம் தாண்டி எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. இயக்குநர் கொஞ்சம் மனம் வைக்கவேண்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share

சீதக்காதி

சீதக்காதி திரைப்படம் பார்த்தேன். மிகவும் வேறுபட்ட முயற்சிகளுக்குரிய படத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்காமல் அதனளவில் நின்று பார்ப்பது நல்லது. ஆனால் சில வேற்று முயற்சித் திரைப்படங்களை நாம் இந்த நல்ல அளவுகோலுடன்கூட அணுகிவிடமுடியாது. சீதக்காதியை அணுகலாம். இதுதான் இதன் முதல் ஆறுதல்.

படத்தின் முதல் சில நிமிடங்கள் மட்டுமே வரும் விஜய் சேதுபதியால் எந்த ஒரு நாடகக் காட்சியிலும் சிறப்பாக நடிக்கமுடியவில்லை. அவர் ஔரங்கசீப்பாக நடித்தாலும் விஜய் சேதுபதியாகவே இருக்கிறார். அதிலும் அவர் தூய தமிழ் வசனத்தைப் பேசும்போதெல்லாம் சென்னைத் தமிழில் பேச முற்படும் அவர் முகம் மட்டுமே கண் முன்னால் வருகிறது. ஆனால் அவர் இறந்தபின்பு அவரது ஆன்மா புகுந்து நடிக்கும் ஒவ்வொரு நடிகரும் அசத்திவிடுகிறார்கள். படத்தின் மிகப்பெரிய பளஸ் இதுவே.

இது தமிழ்த் திரைப்படத்தைப் பற்றிய ஒரு பகடியாகவும், அதைவிட, தமிழ்த் திரையுலகத்தையும் ரசிகர்களையும் பற்றிய கூடுதலான பகடியாகவும் அமைந்திருக்கிறது. பல நுணுக்கமான காட்சிகளில் இயக்குநர் தென்படுகிறார். இதுபோன்ற பகடித் திரைப்படத்தில் எதைப் பகடியாக்குகிறார்களோ அதில் சரணடையவேண்டி வரும். இதிலும் அப்படி வருகிறதுதான். ஆனால் அதை சாமர்த்தியமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

இத்தகைய படங்களில், இறுதியில் என்ன செய்வது என்கிற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரும். இத்திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல. பகடியாகவும் ஒன்றைப் பயன்படுத்தி, அதை அறிவியல் ரீதியாகவும் எதிர்கொள்ளவேண்டிய சிக்கலும் இப்படத்துக்கு கூடுதலான பிரச்சினையாக இருக்கிறது. இயக்குநர் மகேந்திரனின் ஒரு வசனத்தில் படத்தை முடிப்பதெல்லாம் வேறு வழியின்றி, இருக்கும் வழிகளில் சிறந்த ஒன்றென இதை ஏற்றுக்கொண்டு செய்வது.

அய்யா நடிக்க வராவிட்டால் என்னாகும் என்பதை ஒரே மாதிரியான தொடர்ச்சியான நீளமான இரண்டு காட்சிகளில் காண நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை. இதைத் தவிர்த்திருந்திருக்கவேண்டும். கிட்டத்தட்ட மலினமான பேய் நகைச்சுவைப் படம் அளவுக்குப் போய்விட்டது. அக்காட்சிகளில் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பால் கொஞ்சம் சிரிக்கமுடிகிறது என்பதும் உண்மைதான்.

இந்தக் கதையை இன்னும் எப்படி வேறு விதமாகக் கையாண்டிருக்கலாம் என்று யோசித்ததில் தோன்றியது, முதலில் வரும் அய்யாவாக வேறு ஒரு முக்கியமான நடிகரை (கமல்!) நடிக்கவைத்துவிட்டு, அதற்கு அடுத்து அவர் ஆன்மா புகும் ஒரு நடிகராக விஜய் சேதுபதியை மாற்றி இருந்தால் படத்துக்கு வேறொரு பார்வை கிட்டி இருக்கும். ஆனால் இப்படி நடிகர்களை மாற்றிக்கொண்டே செல்லும் திரைக்கதையை மாற்றவேண்டி இருக்கும்.

ஒட்டுமொத்தமாக படத்தின் மேக்கிங் தரம் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். பல காட்சிகள் சாதாரண தொலைக்காட்சி நாடகங்களைப் போல இருந்தன.

அய்யா என்ற பெயரை ஈவெரா என்று யோசித்துப் பார்த்தேன். கொஞ்சம் திக்கென்று இருந்தது. பின்னர் சிரிப்பாகவும் வந்தது. (கமான் பாலாஜி தரணிதரன், நீங்க என்ன நினைச்சு இதைச் செஞ்சீங்க?)

படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதன் பெயர். சீதக்காதி. நல்ல யோசனை. இதைப் போன்ற படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை நினைத்துப் பாவமாக இருந்தது. பாலாஜி தரணிதரனுக்கு அடுத்த படம் கிடைத்து அது ஒட்டுமொத்தமாக எல்லா வகையிலும் நல்லதாக அமையட்டும்.

பின்குறிப்பு: பிராயசித்தமாக பூர்ணம் விஸ்வநாதனின் ஊஞ்சல் நாடகத்தைப் பார்க்கவேண்டும். அதில் நடிக்கும்போது அய்யா செத்துப் போவது நல்ல விமர்சனம்தான்.

Share

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்

நல்ல நாள் பார்த்துச் சொல்றேன்

என்னவோ எடுக்க இயக்குநர் முயன்றிருக்கிறார். அது அப்படியுமில்லாமல் இப்படியுமில்லாமல் வந்திருக்கிறது. அடுத்த படத்தில் நினைத்தது நடக்கட்டும்.

கௌதம் கார்த்திக்கின் நடிப்பு மெல்ல மெல்ல இயல்பாகிக்கொண்டே வருகிறது. இப்படத்தில் அடுத்த கட்டம். கலக்கி எடுக்கிறார். அசட்டுத்தனமான ப்ளே பாய் ரோல். மிக எளிதாகக் கையாளுகிறர். இயல்பாகவே வருகிறதோ என்னவோ. 🙂 அவரது குரல் அப்படியே அந்தக் கால கார்த்திக்கை நினைவூட்டுகிறது. கௌதம் கார்த்திக்கின் ஆரம்பக்காலப் படங்களில் பழைய கார்த்திக்கின் குரலுடன் இத்தனை நெருக்கமாக இல்லை. ஆனால் இந்தப் படத்தில் கார்த்திக்கே பேசுவது போல் உள்ளது. கார்த்திக் அந்தக் காலத்தில் இப்படியே பேசத் துவங்கி இதுவே அவரது பாணியாக அந்தப் பாணியே அவருக்கு எமனாவும் ஆனது. கௌதம் கார்த்திக் அதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. ஏற்கெனவே லைட்-வெய்ட்-போர்னோ படங்களாகத் தமிழில் நடித்துக்கொண்டிருக்கும் கௌதமுக்கு இதுவும் சேர்ந்தால் பின்னாளில் ‘மேற்படி’ படங்களில் மட்டும் நடிக்கவேண்டிய அபத்தம் நேரலாம். தூர்தர்ஷனில் நடித்துக்கொண்டிருந்த சில நடிகர்களை அப்படிப்பட்ட படங்களில் திருநெல்வேலியின் புண்ணிய தியேட்டர்களில் பார்த்தபோது கொஞ்சம் ஷாக்காகவும் அதே நடிகர்களை தொலைக்காட்சிகளில் மீண்டும் பார்த்தபோது அதிகம் ஷாக்காகவும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் படத்தில் இவர் வரும் காட்சிகள் மட்டுமே கொஞ்சம் ஆசுவாசம்.

விஜய் சேதுபதி, நடிப்பில் அப்படியே நிற்க உடல் மட்டும் விரிவடைந்துகொண்டே போகிறது. இப்படியே போனால் டி.ராஜேந்தர் ஆக்கிவிடுவார்கள். தேர்ந்தெடுத்து நடிப்பது ரொம்ப முக்கியம். நல்ல திறமையான நடிகர் வீணாகிக்கொண்டிருக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன். பின்னணி இசை அழகு. ஒரு குத்துப் பாட்டு, கொஞ்சம் காசு துட்டு மணியை நினைவூட்டினாலும், அதகளம். கேட்க:

 

Share