மத்வ மடங்களில் ஒன்றான சோசலே வியாசராஜ மடம் (Sosale Vyasaraja Mutt), கடந்த சில ஆண்டுகளாக வாரிசுரிமைப் போராட்டங்களையும் சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. அதாவது அடுத்த பீடாதிபதி யார் என்பது குறித்த சிக்கல்.
2010 வாக்கில் அப்போதைய பீடாதிபதி ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2012-ல் கர்நாடக அரசு மடத்தின் சொத்துக்களைத் தன் கட்டுப்பாட்டில் எடுத்து, அதை நிர்வகிக்க ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்தது. 2017 ஜூன் மாதத்தில் ஸ்ரீ வித்யா மனோஹர தீர்த்தர் தனது பதவியை விட்டு விலகினார்.
மடத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், மடத்தின் பாரம்பரியத்தைக் காக்கவும் ஒரு சட்டப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் (பூர்வாசிரமப் பெயர்: டி. பிரகல்லாதாச்சார்) உடனடியாகப் புதிய பீடாதிபதியாக வேண்டும், அதே வேளையில் ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தர் (பூர்வாஸ்ரம பெயர்: புஷ்கராச்சார்) என்பவரை மடத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ இளைய பீடாதிபதியாக அறிவிக்க வேண்டும் என்று முடிவானது.
ஒப்பந்தப்படி நியமிக்கப்பட்ட ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தருடன் சேர்ந்து புதிய பீடாதிபதி வித்யாஸ்ரீஷ தீர்த்தர் சில நாட்களுக்கு மடத்தின் மூல விக்கிரகங்களைத் தொட்டு இணைந்தே பூஜைகளைச் செய்தார். பீடாதிபதிகளைத் தவிர வேறு யாருக்கும் இந்த மூல விக்ரகங்களைத் தொட உரிமையில்லை. மத்வத்தில் மூல விக்ரகங்கள் மிக முக்கியமானவை. ஆனால், சில நாட்களிலேயே எந்தவொரு காரணமும் கூறாமல், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரை மடத்தை விட்டு வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தரப்பு வெளியேற்றியதாகச் சொல்லப்படுகிறது. (இதுகுறித்துப் பல குமுறல்கள் ரீல்ஸ்களாகவும் யூ டியூபிலும் கிடைக்கின்றன.)
தற்போது பிரச்சினை என்னவென்றால், ஸ்ரீ வித்யாஸ்ரீஷ தீர்த்தர் தனது பூர்வாஸ்ரம மகன் வழிப் பேரனான பிரணவ் (பெயர் சரியா எனத் தெரியவில்லை) என்பவரை அடுத்த மடாதிபதியாகக் கொண்டுவர தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் என்பதுதான். தனது பேரனை மூல விக்கிரகங்களைத் தொட்டு பூஜை செய்ய அனுமதித்தது அடுத்த பிரச்சினை.
பொதுவாக பேரனை அடுத்த பீடாதிபதியாக மத்வ மடங்களில் நியமிப்பதில்லை என்றாலும், கடந்த காலங்களில் இப்படி நியமிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால், ஸ்ரீ வித்யா விஜய தீர்த்தரைத்தான் அடுத்த பீடாதிபதியாக்க வேண்டும் என்று எழுத்துபூர்வமான சட்டப்பூர்வ ஒப்பந்தம் இருக்கும்போது, அதை மீறித் தன் பேரனைக் கொண்டுவர தற்போதைய பீடாதிபதி முயல்வது பிரச்சினையாகியுள்ளது.
நான் ஏதோ ஒரு ரீல்ஸைப் பார்க்கப் போக, கடந்த இரண்டு மூன்று நாள்களாக இந்தப் பிரச்சினையை ஒட்டிய ரீல்கள் வந்து குவிகின்றன. என்னடா பிரச்சினை என்று தோண்டித் துருவிப் பார்த்ததில், சாட் ஜிபிடி, ஜெமினை உதவியுடனும், சில யூ டியூப் சர்ச்சைகளைக் கேட்டும் சிலரிடம் பேசியும் நான் புரிந்துகொண்டவை இவை.
தற்போதைய பிரச்சினைக்குரிய ஸ்ரீவித்யாஸ்ரீஷ தீர்த்தர் பெரிய அறிவாளி. ஸ்காலர். பல இடங்களிலும் வியாசராஜ மடத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தி விரிவாக்கியவர். இதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இவரது பிரச்சினைக்குரிய செயல்பாட்டை, நிர்வாகப் பிரச்சினைகளை, குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அடுத்த பீடாதிபதி பதவியைத் தர முயல்வதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.


