Am Aha Malayalam and Pravinkoodu shappu Malayalam Movies

அம் அஹ (அம்மா) – (M) – விதந்தோதத்தக்க படம் அல்ல என்றாலும், மனதைக் கனக்கச் செய்துவிட்ட படம். படத்தின் முதல் பாதி த்ரில்லர் போலச் சென்றது. அதற்கான காரணத்தை விவரிக்கும்போது கலங்கடித்துவிட்டது. குறிப்பாக அந்தக் குழந்தையின் கள்ளம் கபடமற்ற முகம்.

அனைத்து நடிகர்களும் மிக இயல்பாக நடிக்கிறார்கள். நம்ம ஊர் தேவதர்ஷினிக்கு வாழ்நாள் கதாபாத்திரம். நன்றாக முயன்றிருக்கிறார் என்றாலும், நாம் பழக்கப்பட்டுவிட்ட தேவதர்ஷினியைத் தாண்டி, இந்தக் கதாபாத்திரத்துக்குள் செல்ல முடியவில்லை. வேறு நடிகையை நடிக்க வைத்திருக்கலாம். பாடல்களைக் குறைத்திருக்கலாம்.

மனம் இருண்டு கிடக்கும் நேரத்தில் ஒரு மகிழ்ச்சிச் செய்தி வந்து, புது மழை கசடை எல்லாம் நீக்கி குளிரச் செய்துவிடுவது போன்ற கடைசி இரண்டு நிமிடம் – மறக்கவே முடியாத மகிழ்ச்சியான தருணம்.

கதைக் களம் நடக்கும் இடம் மலை சார்ந்த பகுதி. இப்படிப்பட்ட ஊரில் எப்படி வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று ஒவ்வொரு நொடியும் அதிசயிக்க வைக்கிறார்கள். தங்கள் படத்தில் தங்கள் நிலத்தை இத்தனை அழுத்தமாகக் காண்பிப்பதில் மலையாளிகளுக்கு நிகர் எவருமில்லை.

திலீஷ் போத்தன் தான் நடிக்கும் எல்லாப் படங்களிலும் சிறப்பாக நடிக்கிறார் என்றாலும், இத்தனை நல்ல இயக்குநர் இப்படி நடிப்பில் கவனம் செலுத்தி வீணாகிப் போகிறாரே என்ற வருத்தம் எழாமல் இல்லை.

அம் ஆ – பொறுமை இருப்பவர்களுக்கான படம்.

Primeல்கிடைக்கிறது.

ப்றாவின்கூடு ஷாப்பு (M) – ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் தரம். கதை எல்லாம் பார்த்து பார்த்து அலுத்துப் போன கதைதான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் அட்டகாசம்.

பாஸில் ஜோசஃப் படம் என்று நினைத்து கொஞ்சம் அசுவாரஸ்யமாகப் பார்க்கத் தொடங்கினேன். வந்தார் சௌபின் ஷாஹிர். கூடவே செம்பன் வினோத். இவர்கள் இருவரும் இருப்பது தெரிந்திருந்தால் எப்போதோ பார்த்திருப்பேன். மூவரும் கலக்கிவிட்டார்கள். உண்மையில் இது சௌபின் படம். அவரது மேக்கப்பும் நடையும் அட்டகாசம். நடிப்பு அதகளம்.

ச்சாந்தினி – நோ சான்ஸ். செம அழகு, செம நடிப்பு.

எப்படி இத்தனை விதம் விதமான கொலை த்ரில்லர்களை எடுக்கிறார்களோ மலையாளிகள். ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, நடிப்பு, எடிட்டிங் இசை என அனைத்திலும் துல்லியம்.

ஏன் இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்கவில்லை என்பது புரியாத புதிர்தான்.

டோன்ட் மிஸ் வகையறா படம். அதிலும் கொலையாளி யார் என்று நின்று நிதனமாகச் சொல்லும் காட்சி தரத்திலும் தரம்.

சோனி லைவில் கிடைக்கிறது.

Share

Vijayabharatam Award

விஜயபாரதம் பிரசுரம் வழங்கிய ‘சிறந்த பதிப்பாளர்’ விருது பத்ரி கையால் பெற்றபோது.

வாழ்த்திய அனைவருக்கும் சுவாசம் சார்பாக நன்றி.

பாரதி விருது பெற்ற ம வெங்கடேசன், பி.ஆர்.மகாதேவன், உவேசா விருது பெற்ற கீழாம்பூர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

புகைப்படம் நன்றி – ஆர்விஎஸ் மற்றும் வல்லபா

Share

Kumari Anandhan

சில வருடங்களுக்கு முன்பு மதியம் 1.45 மணி இருக்கும். அப்பொழுது கிழக்குப் பதிப்பகத்தில் இருந்தேன். செக்யூரிட்டி வந்து, ஒருவர் புத்தகம் வாங்க வந்திருக்கிறார் என்று சொல்லவும், உணவு நேரம் முடிந்து 2 மணிக்குதானே விற்பனை தொடங்கும் என்று சொன்னேன். வந்தவர் பெரிய மனிதர் போல் இருக்கிறார், கூட போலிஸ் ஒருவரும் இருக்கிறார், விற்பனைப் பிரதிநிதிகள் மதிய உணவுக்குப் போயிருக்கிறார்கள் என்று சொல்லவும் நான் போய்ப் பார்த்தேன். அங்கே சேரில் குமரி அனந்தன் அமர்ந்திருந்தார். அத்தனை தள்ளாத வயதில் எப்படி மாடி ஏறி வந்தார் என்று ஆச்சரியமாக இருந்தது. கடை திறக்க அரை மணி நேரமாகும் என்று சொல்லி, அவருக்கு வேண்டிய புத்தகங்களை எழுதி வாங்கிக்கொண்டு, வீட்டிற்குப் புத்தகங்களை அனுப்பி வைக்கிறோம் என்று சொல்லவும் ஆச்சரியப்பட்டார். இப்படி எல்லாம் செய்வீர்களா என்றெல்லாம் கேட்டார். ஃபோன் நம்பரைக் கொடுத்து, இனி ஃபோன் செய்தால் போதும் புத்தகங்கள் உங்கள் வீடு தேடி வரும் என்று சொன்னேன். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சென்றார்.

குமரி அனந்தன் என்றதும் அதுவரை எனக்கு நினைவுக்கு வந்ததெல்லாம், 1996ல், முதல்நாள் வரை காங்கிரஸுக்கு எதிராகக் கோஷம் போட்டுவிட்டு, மறுநாள் காங்கிரஸ் சொன்னவுடன் அதிமுகவுடன் கூட்டணியை ஏற்றுக்கொண்ட குமரி அனந்தனின் முகம்தான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குமரி அனந்தனை நினைக்கும் போது அவர் மாடிக்கு வந்து காத்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வரும்.

குமரி அனந்தன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி. அவரை இழந்து தவிக்கும் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Share

Bougainvillea Malayalam Movie

போகன்வில்லா (M) – சைக்கலாஜிக்கல் திரில்லர் வகை. படத்தின் பிளஸ் பாயிண்ட் என்றால் மேக்கிங் மிக அருமையாக இருக்கிறது. இசை அருமை. கடைசி வரை ஏன் இப்படி நடக்கிறது என்று யூகிக்க முடியாமல் சஸ்பென்ஸைத் தக்க வைத்தது சிறப்பு. மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் ஹீரோதான் எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்க வேண்டும் என்பது சீக்கிரமே தெரிந்து விடுகிறது. ஃபகத் ஃபாசிலை இத்தனை வீணடித்திருக்கக் கூடாது. பல காட்சிகள் அவர் இல்லாமலேயே நகர்கின்றன. கடைசியில் நம்ம ஊர் சினிமா போலீஸ் போலத் துப்பாக்கியுடன் வந்து கைது செய்து விட்டுப் போவதற்கு அவர் எதற்கு? ஹீரோதான் காரணம் என்று தெரிந்த பிறகு வரும் காட்சிகள் நீளம். சுமாரான படம்.

Share

Five Movies

கிருஷ்ணம் ப்ரணய சகி (K) – கணேஷின் திரைப்படம் ஃபீல் குட் முவீயாக இருக்குமே என்று பார்க்க நினைத்தது ஒரு குத்தமாய்யா? சிதைச்சி விட்டுட்டாய்ங்க. கட்டுன பொண்டாட்டியையே காதலிக்கிற கதையை ஃபீல் குட்டா காமிக்க நினைச்சி, நான்லீனியர் கதையை அதுல செருகி, அப்படியே நம்ம தலைலையும் அதை செருகி.. மிடில.

ஒரு ஜாதி ஜாதகம் (M) – வினீத் ஸ்ரீனிவாசன் நடித்தும் படம் அறுவை. ஆங்காங்கே ஒவ்வொரு சமயம் சிரிக்கிறோம் என்றாலும் மொத்தத்தில் சிரிப்பே வரவில்லை. ஒரு ஆணுக்கு இத்தனை சிரமமா என்றெல்லாம் தோன்றினாலும், கதை நாயகனை இத்தனை அடி அடிக்கும் ஒரு படமா என்று தோன்றினாலும், பலவீனமான கதையும் அதைவிட பலவீனமான திரைக்கதையும் சாவடித்துவிட்டன.

பணி (M) – ஜோஜு ஜார்ஜின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் திரைப்படம். முதல் பாதி மிக விறுவிறுப்பு. அட்டகாசமான திரைக்கதை. அத்தனையையும் இரண்டாம் பாதியில் கெடுத்து வைத்திருக்கிறார்கள். வெறும் பழிவாங்கும் கதை என்று போய்விட்டது. அதில் சுவாரசியமும் இல்லை. நம்பகத்தன்மையும் இல்லை. முதல் பகுதி அத்தனை புத்திசாலித்தனமாக இருக்க இரண்டாம் பகுதி பைத்தியக்காரத்தனமாகிவிட்டது. ஜோஜு ஜார்ஜின் நடிப்பும் மற்ற அனைத்து நடிகர்களின் நடிப்பும் மிக அருமை. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். சோனி‌ லைவில் கிடைக்கிறது.

I am Kathalan (M) – பார்க்கலாம். எனக்குப் பிடித்திருந்தது. டெக்னிகல் கிரைம் த்ரில்லர் வகையறா என்றாலும் படத்தில் ஒரு ஃபீல் குட் தன்மையும் இருந்தது. இளமையான படம். இதில் இருக்கும் தவறுகளை டெக்னிகல் ஆள்கள் கண்டுபிடிக்கலாம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவே இருக்கும். ஆஹா ஓஹோ படமில்லை என்றாலும் ஈகோ கணக்கைத் தீர்த்துக்கொள்ளும் எளிமையான படம். ப்ரைமில் கிடைக்கிறது.

Ponman (m) – எப்படித்தான் இப்படி ஒரு கதையை கண்டுபிடித்தார்களோ. ஒரு வரிக் கதையை வைத்துக்கொண்டு எத்தனை பெரிய படமாக்கி இருக்கிறார்கள்! ஓரளவுக்குப் பார்க்கும்படியாகவே வந்துள்ளது. சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை என்று தோன்றினாலும் கூட, படத்தின் விறுவிறுப்பு நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. தொண்டி முதலும் திருகாக்‌ஷியும், மகேஷிண்டெ பிரதிகாரம் போன்ற, இருவருக்கிடையேயான ஈகோவை நினைவூட்டும் ஒரு கதை என்றாலும், இந்தக் கதை வேறு களம். உயிரே போனாலும் வெல்ல நினைக்கும் ஒரு பிடிவாதம். கேரளத்தின் நிலம், மக்கள் என அனைத்தையும் அத்தனை அசலாகப் படம் பிடித்திருக்கிறார்கள். சமூக ஊடங்களில் ஆகா ஓகோ என்று கொண்டாடப்பட்ட அளவுக்கு எனக்கு இதில் ஒன்றும் தோன்றவில்லை என்றாலும், நிச்சயம் மோசமான படம் அல்ல.

Share

TN Bjp’s worst decision

தமிழ்நாட்டு பாஜகவில் ஒரு விசித்திரமான நோய் உண்டு. தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் ஆதரிப்பவர்களைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாது. அதுவே அதுவரை பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் திட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாஜகவை புகழ்ந்து பேச ஆரம்பித்தால் அவர்களை உடனே அரவணைத்துக் கொள்ளும். இது காலம் காலமாக இருக்கும் நோய்.

இந்திய அளவில் இன்னொரு நோய் உண்டு. பாஜகவின் நம்பிக்கை மிகுந்த தலைவராக இருக்கும்போது அவரைப் புறக்கணிப்பார்கள். அதுவே அவர் வெளியேறி தனிக் கட்சி கண்டு வெற்றி பெற்றால் மீண்டும் அவரைத் தலைவராகக் கூட்டிக் கொண்டு வருவார்கள். எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். கல்யாண் சிங் எடியூரப்பா போன்றவர்கள் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மூன்றாவது ஒரு வியாதியும் உண்டு. மற்ற கட்சியில் தலைவராக இருந்தவர்களையே தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராகவும் வர வைப்பார்கள். அவர்களும் தலைவராக இருந்து விட்டு மீண்டும் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவைத் திட்டுவார்கள். திருநாவுக்கரசு நினைவுக்கு வருகிறார்.

இது போன்ற பல வினோதங்களைத் தொடர்ந்து செய்வதால்தான் தமிழ்நாட்டு பாஜகவால் சட்டென ஓர் உயரத்திற்குச் செல்ல முடியாமல் இருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருப்பது இது எல்லாவற்றையும் தாண்டிய அதலபாதாளமான வீழ்ச்சி. மீட்புக்கு இடமில்லை. இதனால் அண்ணாமலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Share

Azhagaradi in Madurai and my father

அழகரடியும் அப்பாவும்

மதுரை அழகரடியின் நினைவுகள் மறக்க முடியாதவை. என்னதான் உள்ளும் புறமும் திருநெல்வேலிக்காரனாக இருந்தாலும் 87 முதல் 91 வரை அழகரடியில் வாழ்ந்த காலங்கள் எப்போதுமே பசுமையானவை. இப்படித்தான் நான் என பின்னால் அமையப்போகும் பலவற்றுக்கு அங்கே தான் விதை ஊன்றப்பட்டது என்பது என் மனப்பதிவு. குறிப்பாக இரண்டு பேர் இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர். கொஞ்சம் கமலஹாசனும் கூட. ஆனால் இன்று கமல்ஹாசன் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி விட்டார். வெறுப்பு கூட தோன்றி விட்டது. ஆனால் இளையராஜாவும் சச்சினும் அன்று எந்த நிலையில் இருந்தார்களோ அதைவிட கூடுதலான உயரத்தில் இப்போதும் இருக்கிறார்கள்.

அழகரடியை நினைக்கும் போது பல விஷயங்கள் எப்போதும் மனதில் வந்து போகும். அவற்றில் ஒன்று அப்பாவின் நினைவு.

அப்பா, நான், அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என்று ஒண்டிக் குடித்தன வீடு ஒன்றில் வாழ்ந்தோம். வரண்டா போன்ற ஒன்றில் தட்டி போட்டு மறைக்க அது தாத்தாவும் பாட்டி அறையானது. அம்மா அப்பா அக்கா எல்லாம் வீட்டுக்குள் படுத்துக்கொள்ள நான் வெளியே திண்ணையில் படுத்துக் கொள்வேன். வீட்டு வாடகை அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம் என நினைவு. அப்பாவுக்கு சம்பளம் 300 ரூபாய் போல. தினம் பேட்டா ஒரு ரூபாய் டீ குடிக்க. அந்த ஒரு ரூபாயைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பார். தினச் செலவுக்கு தின வட்டிக்குப் பணம் வாங்கி ஓட்டிய காலம். அப்பா வேல்முருகன் லாரி சர்வீஸ் சென்ற ஒரு கம்பெனியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.

அழகரடியில் இருந்து மெய்ஞானபுரத்தில் குடியிருந்த சித்தப்பா வீட்டுக்கு நடந்து போகும்போது அப்பாவின் ஆபிசைக் கடந்து போக வேண்டும். அப்போது ஆஃபிசுக்குச் சென்று அவரைப் பார்ப்பேன். பென்சிலின் பின்னால் ரப்பர் பேண்டைச் சுற்றி அதை ரப்பராகப் பயன்படுத்துவார். எப்போதும் அந்த பென்சிலைக் காதில் வைத்திருப்பார். பெரிய கணக்கு நோட்டைத் திறந்து ஏதேதோ பெரிய பெரிய நோட்டுகளில் கணக்குப் போட்டுக் கொண்டே இருப்பார். கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தார். அவரது ஆஃபிஸுக்கு நான் சென்றதும் ஒரு சேரில் அமரச் சொல்வார். டீ குடிக்கிறியா என்று கேட்பார். வேண்டாம் என்பேன். ஏனென்றால் அம்மா என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பார். அப்படியும் ஒன்றிரண்டு முறை டீ வாங்கிக் கொடுத்திருக்கிறார். என்னவோ அப்பாவை மிகப் பெரிய கம்பெனியில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதுக்குள் அத்தனை பெருமையாக இருக்கும். அப்படியே சித்தப்பா வீட்டிற்கு அந்தப் பெருமிதத்துடன் நடந்து செல்வேன்.

அப்பா தனக்காக எதையும் சேமிக்க வேண்டும் என்று நினைத்தவர் இல்லை. அத்தனை வருமானமும் இல்லை. பெரிய பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டவர் இல்லை. அதற்கான பெரிய கல்வித் தகுதிகளும் இல்லை. ஆனால் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை மாறாத உறுதியுடையவராக இருந்தார். அவரது இயல்பே அன்புதான். கள்ளம் கபடமற்றவர். எத்தனை வேகமாக கோபம் வருகிறதோ அத்தனை வேகமாக கோபத்தை இழக்க கூடியவர். பின்பு அதிலேயே குற்ற உணர்ச்சி கொண்டு, தான் கோபம் கொண்டவரிடம் ஏதாவது பேசி சமாதானம் செய்யும் வரை நிலை இல்லாமல் தவிப்பவர். அம்மா சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராகப் பேச நினைத்தாலும் அதை ஆரம்பித்துப் பாதியிலேயே விட்டுவிட்டு அம்மா சொல்வதையே சரி என்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்.

எல்லோரையும் போல ஒரு குழந்தையாகவே பிறந்தார். குழந்தையாகவே வளர்த்தார். குழந்தையாகவே வாழ்ந்தார். அப்படியே மறைந்தார்.

அப்பாவும் அம்மாவும் இல்லாமல் இன்று நாங்கள் இல்லை. அழகரடி வீட்டில் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறை கூட இட்லி தோசை சாப்பிட்டிருக்க மாட்டோம். ரேஷன் அரிசி சாப்பாடுதான். தினமும் காலை செய்த குழம்பு ரசம்தான் இரவு வரை. பொரியல் எப்போதாவது இருக்கும். குடும்பமாகச் சேர்ந்து திரைப்படத்திற்குப் போன கதை எல்லாம் கிடையவே கிடையாது. எனக்குத் தெரிந்து ஒரு முறை படித்துறை மடத்தில் சாப்பிட்டுவிட்டு நான் அண்ணா அக்கா அம்மா அப்பா என அனைவரும் பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்த மைக்கேல் மதன காமராஜனுக்குச் சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் இப்படி அத்தனை பேரும் சேர்ந்து பார்த்த வேறு படங்கள் நினைவுக்கு வரவில்லை.

அப்பா எங்களுக்காகவே வாழ்ந்தார். அப்பாவை நினைக்காத நாளில்லை. மறந்த நொடி இல்லை. எங்கிருந்தாலும் அப்பா எங்களை அணைத்து ஆசீர்வதிக்கட்டும்.

இன்று அப்பாவின் திதி.

Share

Third Language policy in Tamilnadu

மூன்றாம் மொழிக் கொள்கையில் திமுக செய்து வருவது உச்சகட்ட உணர்ச்சி நாடகமே அன்றி வேறில்லை.

தினம் தினம் இப்படி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒரு வரிக் கருத்தைச் சொல்லிச் செய்யும் அரசியல் திமுகவினருக்கு எளிதாக இருக்கிறது. அனைத்தையும் ஆதாரத்துடன் மறுத்துப் பேசும் அண்ணாமலையின் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் இந்த ஒற்றை வரி உணர்ச்சித் தெறிப்பு அரசியலில் அவர்கள் தஞ்சம் கொள்கிறார்கள்.

பி எம் ஸ்ரீ திட்டத்தில் தரப்படும் பணம் உரிமைப் பணம் அல்ல. நீங்கள் அந்தத் திட்டத்தில் சேராதவரை அந்தப் பணத்தைக் கேட்க எந்த மாநிலத்துக்கும் எந்த ஓர் உரிமையும் இல்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர மாட்டோம் என்பது மாநிலத்தின் உரிமை. அதில் சேராவிட்டால் பணம் கிடையாது என்பது விதி.

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அதிகபட்சம் 300 பள்ளிகள் வரலாம். இதை அனுமதித்து, மத்திய அரசுப் பங்குத் தொகையையும் பெற்றுக்கொண்டு, இங்கே ஹிந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளைக் கற்றுத் தரும் வேலையை ஓர் சாதுர்யமான மாநில அரசு செய்திருக்கும். ஆனாம் நம் மாநில அரசுக்கு அந்தச் சாதுர்யம் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை எப்போதுமே பிரசார அளவிலான அரசியல் மட்டுமே.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முடியாமல், கல்வித் தரத்தைக் கூட்ட முடியாமல், மற்ற பள்ளிகளின் தரத்தில் கை வைப்பதையே இவர்கள் வழக்கமாகக் கொண்டார்கள். சமச்சீர்க் கல்வித் திட்டம் வந்ததே அனைவருக்கும் ஒரே கல்வி என்பதற்காகத்தான். ஆனால் இன்று அமைச்சர்களின் மகன்(ள்)கள் மூன்று மொழி கற்கிறார்கள், ஆனால் ஏழை அரசுப் பள்ளி மாணவரால் அப்படிக் கற்க முடியவில்லை என்னும் ஆதாரமான கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டார்கள்.

தமிழுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என்றால் அதிலும் மலைப்பே மிஞ்சும். தமிழை உணர்வு ரீதியாகத் தூண்டிவிடுவதைத் தவிர இவர்கள் எதுவுமே செய்ததில்லை. 2010 வரை, அதாவது திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைந்து 43 வருடங்கள் வரை தமிழைப் படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு வரை படித்துவிடலாம் என்கிற நிலைமைதான் இருந்தது.

சரி, தமிழையாவது உருப்படியாக வளர்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலரை அழைத்து அவர்களை தமிழில் எழுதச் சொல்லிப் பாருங்கள். உங்களுக்குப் பேரதிர்ச்சியே மிஞ்சும். கேட்டால் தமிழ் எங்கள் உணர்வுமொழி, அறிவல்ல என்று வாய்ச்சவடால் பேசுவார்கள். அறிவுள்ளவர்கள் இதைச் சொல்ல வெட்கப்படவேண்டும்.

தமிழை உணர்வுரீதியாக அணுகுபவர்கள், அந்த மொழிக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்றுதான் யோசிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழை எப்படி எடுத்துப் போவது என்று திட்டம் தீட்டுவார்கள். ஆனால் இவர்கள் அரசுப் பள்ளியின் தரத்தைக் கூட்டாமல், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தாமல், அவர்களைத் தங்கள் வாக்கு அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி, ‘டீச்சர்ஸ் ஓட்டு எங்களுக்குத்தான்’ என்று வெற்றுப் பெருமை பேசி, இன்று தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத, படிக்கத் தெரியாத பல கோடி பேர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கேட்டால் தமிழ் எங்கள் உணர்வாம். இதைச் சொல்ல நாணமற்றவர்களின் கூட்டத்துடன் என்ன பேசுவது!

The DMK’s stance on the third language policy is nothing more than an emotional ploy.

The DMK finds it easy to make simplistic statements daily. They can’t handle Annamalai’s evidence-backed politics, so they resort to emotionally charged, one-liner politics.

Subsidies from the PM Shri scheme aren’t a state’s entitlement. States don’t have the right to demand those funds unless they participate in the scheme. While it’s a state’s prerogative not to join the PMSREE scheme, a savvy state government would have signed the MOU, ensuring students could learn any Indian language besides Hindi. Unfortunately, our state government lacks such tact, opting instead for propaganda politics.

The Uniform Education Scheme aims for universal education. However, while ministers’ children learn three languages, poor government school students are deprived of such opportunities.

The DMK’s contributions to the Tamil language are negligible. Until 2010, 43 years after Dravidian parties emerged as ruling parties, students could complete their 12th grade in Tamil Nadu without studying Tamil.

Had they properly developed Tamil, it might be different. But ask a few Class XII students from government schools to write in Tamil, and you’ll be shocked by their inability. Dravidian parties consider Tamil an emotional language, not a scholarly one—a sentiment that should be met with embarrassment.

Those who approach Tamil with genuine emotion would think about its preservation and progress. They’d strategize on how to pass Tamil down to the next generation. Instead, by not enhancing the quality of government schools or teachers, focusing solely on vote politics, and boasting about ‘teacher votes,’ they’ve created millions who can’t read or write Tamil properly. And yet, they claim Tamil stirs their emotions—this is disgraceful.

Share