சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில்
துபாய் பாபா
பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய்
Swasam Subscription Scheme – SSS
சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme தினந்தோறும் புத்தகத் திருவிழா எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா? இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.) இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது. நிபந்தனைகள் • இத்திட்டத்தில்
கோவிட் 19 தடுப்பூசி
தமிழ்நாட்டில் தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். காரணமே இல்லாமல் பயப்படுகிறார்கள். தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்ட போது நேரடியாக, மறைமுகமாக அதன் மீது நம்பிக்கையின்மையைப் பரப்பிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. அறிவியலை விட இயற்கையே சுத்தம் என்றொரு தியரி இங்கு உண்டு. அதிலும் சில குழுக்கள் தமிழ்நாட்டில் இதையே முழு மூச்சாகச் சொல்கின்றன. இரண்டு வருடம் முன்பு நடந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். ஏன் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளக் கூடாது என்று காரணங்களைப் பட்டியலிட்டார். தடுப்பூசி என்கிற மருந்தின் உலகளாவிய லாபி, அதன் பின்பு வந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதால் உலகம் முழுக்க அத்தடுப்பூசி நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் பணத்தின் மதிப்பு என என்னவெல்லாமோ பேசினார். கேட்கும் யாரும் ஒரு நிமிடம் யோசிப்பார்கள். பின்பு அது அவரது மனத்துக்குள்ளே அவரறியாத ஒரு இடத்தில் இருந்துகொள்ளும். இதைப் போல கொரோனா தடுப்பூசி வரும்போது, அப்போதும் சில குரல்கள் அதைப் போடாதே என்று சொல்லும்போது, விவேக் போன்ற ஒரு நடிகர் அதிர்ச்சியாக மரணமடையும்போது, மனதுக்குள்ளே அமிழ்ந்து கிடக்கும் நினைவிலி எண்ணம் தான் மட்டுமே சரி என்னும் ஆங்காரத்துடன் எழுந்து வரும். தமிழ்நாட்டில் இப்போது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. தங்கள் அரசியல் தேவைகளுக்காக தடுப்பூசியைப் பழித்தவர்கள் இன்று மக்களைத் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
முதலில் இப்படி இருக்கும், பின்னர் போக போகப் போட்டுக்கொண்டு விடுவார்கள், இது சின்ன பிரச்சினை என்றே நான் நினைத்தேன். ஆனால் இப்போதும் நிறைய பேருக்குத் தயக்கம் உள்ளது. மக்கள் மனதில் இருக்கும் முட்டாள்தனங்களைக் கீழே உள்ளபடி தொகுக்கலாம்.
– தடுப்பூசியால் பலனே கிடையாது. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வரத்தானே செய்கிறது.
– தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குத்தான் கொரானா வந்திருக்கிறது.
– தடுப்பூசி போட்டுக் கொண்டதால் மட்டும்தான் ஒருவர் இறந்திருக்கிறார். என் மாமாவின் சித்தியின் ஒன்றுவிட்ட சகோதரியின் சம்பந்திக்கு இப்படி ஆனது.
– தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு வரும்.
– தடுப்பூசி என்று உடலுக்குள் செலுத்தப்படுவது கொரோனா கிருமிதான். எனவே கொரோனா வந்தது போலவே உடல் பாதிக்கப்படும்.
– தடுப்பூசி என்பது ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு லாபத்துக்காக செய்யப்படும் பிரசாரம்.
– தடுப்பூசி போட்ட பின்பு குடித்தால் மாரடைப்பு வரும், எனவே போட வேண்டாம்.
– யார் வந்து கேட்டாலும் தடுப்பூசி போட்டாகிவிட்டது என்று சொல்லிவிடலாம், யாராலும் கண்டுபிடிக்க முடியாது.
இப்படிப் பல காரணங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
தடுப்பூசி போட்ட பின்பு இறந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தடுப்பூசி போடாமல் இறந்தவர்களின் எண்ணிக்கையே பெரும்பான்மை. எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்? இன்றைய நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது. எப்படியும் உயிர் போகப் போகிறது என்று நினைத்து தடுப்பூசியை கைவிடுவதற்குப் பதிலாக, அதே பயத்துடனாவது போட்டுத் தொலையுங்கள். உங்களைத் தடுப்பூசி காப்பாற்றும்.
போலியோ சொட்டு போட்டதும் குழந்தை மரணம், ஒரு தடுப்பூசி போட்டதும் சிறுவன் மரணம் என்ற கதைகள் எல்லாம் நம் நாட்டில்தான் சாத்தியம். என் மகளுக்கு 6 வயதாக இருந்தபோது ஒரு தடுப்பூசி போடப்பட்டது. அப்போதும் இதே பிரசாரம். நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவள் பள்ளிக்குச் சென்று தடுப்பூசி போடப் போனேன். சுத்தமாகக் கூட்டமே இல்லை. அரசு இலவசமாகத் தந்த தடுப்பூசி. இந்த பிரசாரத்தால் பள்ளி ஆசிரியர்கள் பயந்து போய், அனைவரிடமும் என் முழு சம்மதத்துடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறேன் என்று ஒரு தாளில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி இருந்தார்கள். எந்த நாளில் தடுப்பூசி போடப்பட்டதோ அந்த நாளில் 70% குழந்தைகள் பள்ளிக்கு வரவில்லை. அத்தனை பெரிய பிரசாரம் நடந்தது. நான் என் மகளுக்குப் போட்டுக்கொண்டேன். அன்று மீதி இருந்த 30% குழந்தைகளுக்கும் போடப்பட்டது. ஒரு குழந்தைக்கும் ஒன்றும் ஆகவில்லை. இந்த லட்சணத்தில்தான் நாம் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது என்று அரசின் மீது பழியைப் போடுகிறோம், கொஞ்சம் கூட அறிவோ வெட்கமோ இல்லாமல்.
ஒருவகையில் எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு. நேரடியாக, மறைமுகமாக இந்தத் தடுப்பூசியின் மீது நம்பிக்கை இல்லை என்றே அவர்கள் பேசினார்கள். இன்று வந்து யோக்கியன் போல, அப்படியெல்லாம் இல்லை என்று பூசி மெழுகினாலும், இதுவே உண்மை. ஒரு நல்ல விஷயம், இன்று நிலைமையைப் புரிந்துகொண்டு, தடுப்பூசியின் தேவையைப் பேசத் துவங்கி இருக்கிறார்கள்.
அரசு என்னவெல்லாம் செய்யலாம்.
– அனைத்து நடிகர் நடிகைகளிடம் 30 நொடி வீடியோ பைட் வாங்கி அதை அனைத்து சானல்களிலும் ஒளிபரப்பச் செய்யலாம். (முக்கியமாக இந்த நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தவேண்டும். பாதி பிரச்சினை இவர்களால்தான்!)
– மதக்குருமார்கள் அனைவரிடமும் இதேபோல் பைட் வாங்கி ஒளிபரப்ப வேண்டும்.
– அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இதேபோல் வீடியோ வாங்கி அதை அனைத்து தொலைக்காட்சிகளில் சமூக ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டும்.
– கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட்ட அனைத்து பிரபலங்களிடமும் வீடியோ பைட் வாங்கி ஒளிபரப்பவேண்டும்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தமிழ்நாடு இத்தனை பின் தங்கி இருப்பது நல்லதல்ல. அபாயமானது.
மண்டேலா – அதீதம்
மண்டேலா – எதையுமே நமக்கு உரக்கச் சொல்லித்தான் பழக்கம். அதிலும் எதாவது ஒரு நாடகத்தை நுழைக்காவிட்டால் தூக்கம் வராது. ஒவ்வொரு கதை விவாதத்திலும் யாரேனும் ஒருவர் நிச்சயம் ‘இது தமிழ் ஆடியன்ஸுக்கு செட் ஆகாது சார்..’ என்று சொல்வார்கள் என நினைத்துக்கொள்வேன். ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லும் அலுக்க வைக்கும் திரைக்கதை. எளிதாக யூகிக்கக் கூடிய நிகழ்வுகள். ஒரு ஓட்டு என்னும் செயற்கைத்தனத்தின் மேல் நம் இயக்குநர்களுக்கு இருக்கும் வெறித்தனமான ஆர்வம் ஆச்சரியமளிக்கிறது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு என்பதெல்லாம் ஓவர். நாமாகவே இது தேர்தலுக்கும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும். வெளிப்படையாகச் சொன்னால் திராவிட இயக்கம் தோலை உரித்தாலும் உரித்துவிடும். ஆனால் மோடி பிரச்சினையில்லை. என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஒருத்தருக்கு 15,000 ரூபாய் என்று சொல்லலாம். பாரதம் தூய்மைத் திட்டம் என்றும் சொல்லலாம். ஒரே விதிவிலக்காக இருபது ரூபாய் டோக்கன் என்ற ஒன்றைக் காண்பிக்கிறார்கள்.
நம் இயக்குநர்களுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சினை வினோதமானது. அவர்கள் எடுக்க நினைப்பது 80 அல்லது 90களின் கதையை. அப்படியே எடுத்தால் எப்படி இன்றைய இந்திய அரசைக் கிண்டல் செய்வது என்று நினைப்பார்களோ அல்லது ஒரு பீரியட் படமாகச் செய்வது தேவையற்ற வேலை என்று நினைப்பார்களோ தெரியாது. அவர்களது கனவை இன்றைய நிலையில் கொண்டு வந்து பொருத்தி வைக்கிறார்கள். அது அழகான கழுதையாகவும் இல்லாமல் அசிங்கமான கழுதையாகவும் இல்லாமல் எதோ ஒன்றாகப் பிறக்கிறது. (கழுதைப் புலி உவமானத்தைச் சொல்ல விரும்பவில்லை, காரணம் இதில் ஒரு புலி கூட இல்லை!) எந்த கிராமத்தில் இத்தனை பேர் இன்னும் வீட்டில் கழிப்பறை வசதி கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்கிற பூதாகரமான கேள்வி எழுகிறது. நிச்சயம் வாய்ப்பில்லை. உடனே முற்போக்காளர்கள், அதெல்லாம் இருக்கிறது என்றால், இத்தனை ஆண்டுகள் திராவிட இயக்கங்கள் செய்ததுதான் என்ன என்ற கேள்வியும் சேர்ந்து எழவே செய்யும். இதையே 90கள் என்று வைத்துவிட்டால், கொஞ்சம் சமாளித்திருக்கலாம். ஆனால் இன்று நிகழ்வது போல வைக்கிறார்கள். அப்போதுதானே டிஜிடல் இந்தியா என்று சொல்லமுடியும். நான் இப்படிச் சொல்வதால், என்னவோ இந்தப் படத்தில் பூதாகரமாக அரசைக் கிண்டல் செய்திருக்கிறார்கள் என நினைக்கவேண்டாம். போகிற போக்கில் சொல்லப்படும் கிண்டல்களே. எனக்கு இருக்கும் வருத்தம், தெளிவாக அதிமுகவையோ திமுகவையோ தொடாமல் விட்டு விலகும் அந்த சாமர்த்தியத்தின் மேல் மட்டும்தான். இந்த தெளிவு இருக்கும் வரை தமிழ்நாட்டில் உருப்படியான அரசியல் பகடி படங்கள் வர வாய்ப்பில்லை.
நோட்டா, ஒரு ஓட்டில் வெற்றி என்று குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான். மண்டேலா குண்டுச் சட்டிக்குள் கழுதையை ஓட்டும் ஒரு முயற்சி. முதல் இருபது நிமிடத்தில் படத்தைப் பார்க்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எப்படியோ முழுமையாகப் பார்த்துவிட்டேன். அப்படி முழுமையாகப் பார்க்க முடிந்தது ஒன்று மட்டுமே படத்தின் வெற்றி.
2021ல் உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அது வாக்கு இயந்திரத்தில் நடக்காது என்று இயக்குநர் நம்புகிறார் போல! இத்தனைக்கும் அந்த ஊரில் போட்டி இடுபவர்கள் இரண்டு பேர் மட்டுமே.
தேஜஸ்வி சூர்யா – பெங்களூரு படுக்கை ஊழல்
பெங்களூருவில் நடந்த கொரானா நோயாளிகள் மற்றும் மருத்துவமனை தொடர்பான ஊழலை தேஜஸ்வி சூர்யா வெளிப்படுத்தும்போது சொன்ன பெயர்கள் அனைத்தும் இஸ்லாமியர்களின் பெயர்கள். இதை வைத்துக்கொண்டு அங்கே காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியினர் இதில் இருக்கும் மத அரசியலைப் பாரீர் என்று ஆரம்பித்துவிட்டார்கள். ஏன் அந்தப் பெயர்களை அவர் சொன்னார், அந்தப் பெயர்கள் யாருடையவை, அவை யார் தந்தவை என்பதையெல்லாம் அறிவுள்ளவர்கள் மட்டுமே சிந்திப்பார்கள். நடிகர் சித்தார்த் கிடைத்தது இன்னொரு வாய்ப்பு என்று மதச்சார்பின்மை ஒளிவட்டத்துடன் ஒரு பதிவும் போட்டு, அஜ்மல் கஸாப்பையும் விட பின் தங்கிவிட்டதாக ஒரு ட்வீட் செய்துவிட்டார். அதையும் சேர்த்துக்கொண்டு கன்னட ஊடகங்களும் ஆங்கில ஊடகங்களும் ஆரம்பித்துவிட்டன – தேஜஸ்வி சூர்யாவின் ஊழல் தோலுரிப்பில் மத அரசியல் என்று.
Youtube link for the interview of Tejasvi Surya https://www.youtube.com/watch?v=7cera26EkDM
இந்நேரம் பார்த்து தேஜஸ்வி சூர்யாவை பேட்டி எடுத்தது இந்தியா டுடே. வழக்கம்போல இந்தியா டுடேவின் நோக்கம் தேஜஸ்வி சூர்யாவிடம் இல்லாத மத அரசியலை, இஸ்லாமிய வெறுப்பை எப்படியாவது வெளியே கொண்டுவந்து அவரை அம்பலப்படுத்துவது. ஆனால் வழக்கம்போல நடந்தது வேறு. தேஜஸ்வி சூர்யா சொன்ன பதில்களில் வாயடைத்துப் போய்விட்டது இந்தியா டுடே. ஒரு கேள்வியையும் தேஜஸ்வி சூர்யா விட்டுவைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். ஏன் அந்த இஸ்லாமியர்ப் பெயர்கள் என்றதற்கு அவர் சொன்ன பதில்தான் இது ஹைலைட். அந்தப் பெயர்ப் பட்டியல் தேஜஸ்ட் சூர்யா தயாரித்ததே அல்ல! மருத்துவமனை தந்தது. அந்தப் பட்டியலை மருத்துவமனைக்குத் தந்தது ஒரு ஏஜென்ஸி. அந்த ஏஜென்ஸி இப்போது காவல்துறை வளையத்துக்குள். இதோடு நின்றிருந்தால் இது அரசியல் பதிலாக மட்டும் போயிருக்கும். அடுத்து என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது. நந்தன் நீல்கேனியின் உதவியுடன் இப்போதிருக்கும் வலைத்தளம் மற்றும் ஆப்பை எப்படி உயர்த்தலாம் என்று ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். நந்தன் நீல்கேனி அதற்கென 100 தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து, அந்த ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. இந்த பதில்களை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா டுடே அடுத்த கேள்வியை வெட்கமே இல்லாமல் கேட்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டுமா என்று. இவர்களுக்குத் தேவை பரபரப்பு மட்டுமே. அதற்கான நேர்மையான பதில் அல்ல!
Book fair thoughts
சென்னைப் புத்தகக் கண்காட்சி 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நகைச்சுவையாக ஃபேஸ்புக்கில் எழுதிய தெறிப்புகளின் தொகுப்பு! #நகைச்சுவை
”சார்.. எனக்கு டிஸ்கவுண்ட்டே வேண்டாம். சொன்னா கேளுங்க..”
“ஐயையோ.. அதெப்படிங்க? புத்தகக் கண்காட்சில 10% டிஸ்கவுண்ட் குடுத்தே ஆவணும்..”
“இல்ல சார். டிஸ்கவுண்ட்டோடதான் நான் புத்தகம் வாங்கணும்னா எனக்கு அப்படி ஒரு புத்தகமே வேணாம்! புத்தகத்துக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்!”
“டிஸ்கவுண்ட் இல்லாமத்தான் நான் புத்தகம் விக்கணும்னா அப்படி விக்கவே வேணாம். புத்தகக் கண்காட்சிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு சார்..”
*
நைட்டெல்லாம் இதோட ஒரே ரோதனை. தள்ளிப் படுங்க! நிம்மதியா தூங்க முடியுதா?
–
சார், பன்னண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு புக் பாத்தேன் சார். யார் எழுதினதுன்னு ஞாபகம் இல்ல. யார் போட்டதுன்னும் மறந்துட்டேன். அட்டை சேப்பு கலர்ல இருக்கும் சார். நாவலா சிறுகதையா கட்டுரையான்னு சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது. அந்தப் புத்தகம் கிடைக்குமா சார்?
—
நேத்து பத்து புத்தகம் வாங்கினேன். வீட்ல போய் பாத்தா பதினொன்னு இருக்கு சார். இந்தாங்க சார்.
உங்களை போல வாசகர்கள் இருக்கிறதாலதான்..
ரெண்டு பக்கம் படிச்சிப் பாத்தேன். தப்புன்னு தோணிச்சி சார்.
–
வாசகர்: போன வருஷம் வாங்கின புக்ஸையே படிச்சி முடிக்கல. அதான்..
பதிப்பாளர்: போன வருஷம் போட்ட புக்ஸையே வித்து முடிக்கல. நாங்க புது புக் போடலியா? கூச்சப்படாம வாங்குங்க சார்.
–
மனசே சரியில்லை சார்.
என் புத்தகத்தைப் படிங்க..
அதுக்கப்புறம்தான் சார்..
—
‘தூரம் போகும் பறவைகள்’ நாவல் பேரை அடுத்த ப்ரிண்ட்லயாவது ‘தூரமாகப் போகும் பறவைகள்’னு மாத்திருங்க சார், ப்ளீஸ்.
–
சார்.. புத்தக அட்டை பிரமாதம்.
தேங்க்ஸ் சார்.
அட்டை மட்டும் தனியா கிடைக்குமா சார்? பத்து ரூபா வேணா குடுத்துர்ரேன்..
–
ஆடியோ புக் என்ற பெயரில் ‘நீராரும் கடலுடுத்த’ பாடல் சிடி விற்பனை செய்தவருக்கு போலீஸார் எச்சரிக்கை.
–
என்ன சார் தமிழ் இது. ஒரு வரி கூட புரியலை. நானும் கடைசி வரை ஒரு வரி விடாம படிச்சி பாத்துட்டேன். எப்படி சார் இதையெல்லாம் ப்ரிண்ட் பண்றீங்க?”
“படிக்காமதான் சார்”
—
ட்ரைன்ல ஏறினா அடுத்து இறங்குறதுக்குள்ள படிச்சி முடிக்கணும். அப்படி எதுனா இருக்கா சார் உங்க ஸ்டால்ல?
நாங்க ட்ரைன் டிக்கெட் விக்கிறதில்லைங்க.
—
சார், உங்க புத்தகமெல்லாம் விலை கூடிக்கிட்டே போகுது..
இதுவே சினிமாக்குன்னா.. ஹோட்டலுக்குன்னா..
அதில்ல சார். விலை எவ்ளோ வேணா வெச்சிக்கோங்க. புத்தகம் பத்து பக்கத்துக்குள்ள இருந்தா நல்லருக்கும்.
—
வாசகர்: நேத்து வாங்குன உங்க நாவல்ல பத்து பக்கம் ப்ரிண்ட்டே ஆகாம வெள்ளையா இருக்கு சார்.
ஹரன் பிரசன்னா: ஸாரி சார். ப்ரிண்ட்டிங் மிஸ்டேக். மாத்தி குடுத்துடறேன் சார்.
வாசகர்: நோ நோ. அந்தப் பத்துப் பக்கம்தான் க்ளாஸ். அதுவே இருக்கட்டும்.
–
பின் நவீனத்துவ நாவல் என்று சொல்லி புத்தக விலைப்பட்டியலை விற்க முயன்றவரால் புத்தகக் காட்சியில் பரபரப்பு.
–
கொரானாவில் இருந்து தப்பிப்பது எப்படி என்ற நூலால் கொரானா பரவுமா என்று கேட்ட அப்பாவியை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
—
வரலாற்றைத் திறந்த மனதுடன் அணுகி அதைத் திருகலின்றிப் பதிவு செய்யவேண்டும்.
– ஒரு கம்யூனிஸ்ட்டின் வெளிப்படையான ரகசியக் குறிப்பிலிருந்து.
–
சார், நல்ல புக்ஸ் நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.
இப்படி கேட்டீங்கன்னா நான் எழுதின எல்லா புத்தகத்தையுமே உங்களுக்கு சொல்ல வேண்டி வரும்.
அதில்ல சார்.. நல்ல புக்ஸா நாலு சஜஸ்ட் பண்ணுங்க சார்.
–
எழுத்தாளரின் ஆன்மா: என் எல்லா புத்தகமும் ஸ்டால்ல இருக்கா?
பதிப்ப்பாளரின் ஆன்மா: ப்ரின்ட்ல இருக்கு சார். எப்ப வேணா வரலாம்.
–
சார், புத்தகத்தை எடுத்தா கீழ வைக்க முடியக் கூடாது. அப்படி ஒரு புக் வேணும்!
அதுக்கு நீங்க பைண்டிங் ஆஃபிஸ்க்குத்தான் போகணும். அங்கதான் பசை ஒட்டி காய வெச்சிருப்பாங்க.
–
புத்தகத்துக்கு 10% டிஸ்கவுண்ட் ஒரு தடவையா இரண்டு தடவையா என்று கேட்ட நபரை பதிப்பாளர்கள் விரட்டியடித்தனர்.
–
“பில்லிங் க்ளோஸ் பண்ணிட்டோம் சார்..”
“சார்.. தாம்பரத்துல இருந்து வரேன் சார்! எங்கல்லாம் தேடினேன் சார் இந்த புக்கை! என்னா ட்ராஃபிக்.. அதான் லேட்டாயிடுச்சு சார்.. இந்த ஒரு புக் மட்டும் பில் போட்ருங்க சார்.. ப்ளீஸ் சார்.”
அவர் கையில் இருந்த பொன்னியின் செல்வனைப் பார்த்த பதிப்பாளர் மயக்கமடித்தார். அடுத்த வருடம்தான் மயக்கம் தெளியும்.
–
புத்தகக் கண்காட்சியில் இரண்டு பதிப்பாளர்கள் சந்தித்துக்கொண்ட போது –
“உங்களுக்கு ஃபர்ஸ்ட் ரோ-லயே கடை. எங்களுக்கு உள்ள மாட்டிக்கிச்சு சார். கூட்டமே இல்லை.”
“உங்களுக்கு சொல்லிக்க ஒரு காரணமாவது இருக்கு சார்!”
–
அப்பளக்கடைக்காரர் தன் மகனிடம்: தம்பி, கூட்டமா வர்றாங்கள்ல பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும். ஒவ்வொருத்தரையும் நல்லா ஞாபகம் வெச்சிக்கோ. அவங்க பொறாமைப்பட்டு வாய் வெச்சி வெச்சித்தான் நம்ம சேல்ஸும் குறைய ஆரம்பிச்சிருச்சி. நீ வளர்ந்து பெரியாளாகி ஒரு புத்தகம் எழுதி அதை அவங்களயே விக்க வெச்சி நீ பழி வாங்கணும். இதுதாண்டா என் வாழ்நாள் ஆசை!
–
“சார்.. போன வருஷம் இந்த புக் உங்க கடைலதான் வாங்கினேன்.. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது..”
“தம்பி இங்க வாங்க. அதோ நிக்கிறார் பாத்தீங்களா.. அவர் நாலு வருஷம் முன்னாடி வாங்குனவரு..”
—
எழுத்தாளர் அவரது நண்பருக்குச் சொல்லிக்கொண்டிருந்தது-
“சார்.. பன்மைத்துவம் வேணும் சார். எங்களை பாருங்க.. நான் மார்க்ஸிஸ்ட். அவரு சோஷியலிஸ்ட். அவங்க எக்ஸ் நக்ஸல். இவங்க மாலெ. அதோ அவங்க சோஷியலிஸ்டிக் மாவோயிஸ்ட். இவங்க சிபிஎம். அவங்க சிபிஐ. இதுதான் சார் முக்கியம்.”
–
இரண்டு எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக்கொண்ட போது –
“உங்க புக் அட்டை பிரமாதம் சார்!”
“நானும் சொல்லணும்னு நெனச்சேன். உங்க புக் அட்டையும் அட்டகாசம் சார். டிசைனர் பின்னிட்டான்!”
–
“எழுத்தாளர் முத்தத்துல இருக்கார்ன்னா ‘எழுத்தாளர் முற்றம்’ அரங்கில் இருக்கிறார்னு அர்த்தம்யா.. யதார்த்தமா இருங்கய்யா..”
—
இரண்டு வாசக நண்பர்கள் புத்தகக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்ட போது –
“கம்யூனிஸம் பத்தி புக் வாங்கிருக்கேன் மச்சி”
“அட.. நானும்தான் மச்சி”
“மூலதனத்தை அடிப்படையா வெச்சி எளிமையான தமிழ்ல…”
“அட நானும்தான் மச்சி!”
“புக் பேரு கம்யூனிச சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து.”
“ஓ! நான் வாங்குன புக் பேரு கம்யூனிசச் சிந்தனைகள் – மூலதனத்தை அடிப்படையாக வைத்து. ச் இருக்கு. நாம எக்ஸேஞ் பண்ணி படிச்சிக்கலாம்!”
–
பதிப்பாளர்: லீவ் நாள்ன்னு பேரு. ஆனா சுத்தமா கூட்டமே இல்ல.
வாசகர்: ஆமா சார். எனக்கு டிக்கெட் நேத்தே கிடைச்சி படமும் பாத்துட்டேன்.
–
எழுத்தாளர்: ரொம்ப டீட்டெய்ல்டா ஆழமா விரிவா எல்லா கோணங்கள்லயும் சிந்திச்சி இதுவரை வராத மாதிரி ஒரு புக் எழுதணும்..
பதிப்பாளர்: நீங்க எதுனா எழுதுங்க சார், போட்ரலாம்.
–
‘புக் ஃபேர் முழுக்க சுத்தி பாத்துட்டேன்.. பெரியார், கம்யூனிஸம் புக்ஸெல்லாம் அவ்ளோ இல்லியே ப்ரொ?’
‘ப்ரொ… ப்ரொ.. எந்திரிங்க ப்ரொ!’
–
பித்தகக் கண்காட்சிக்கு போகசொல்லோ ஒரே குருவிங்கோ!
டெரரிஸ்ட் மாரி மூஞ்சி கை எல்லாம் மூடிக்கினு இருக்குமே!
ஆமா.. ஆனா குருவிங்கோ முத்தம் குடுத்துகினு இருந்திச்சுங்கோ.
–
பிரபல கொலை வழக்குகள் – பாகம் 2
பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பாகம் வாசித்தேன். சிறிய நூல். இரண்டு மணி நேரத்தில் வாசித்துவிடலாம். இதற்கேற்ற இலகுவான நடை. எடுத்தால் கீழே வைக்க முடியாது என்னும் அளவுக்கான வேகம். அந்தக் கால வழக்குகள் மூலம் நாம் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடிகிறது. சட்டம் கடுமையான பின்பு, கொலைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தொழில்நுட்பம் பயன்படத் தொடங்கிய பின்பு, மிகப் பெரிய அளவில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று புரிந்துகொள்ளலாம். கூடவே கல்வியும், ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சியும், எதற்கெடுத்தாலும் கொல் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் நம்மைப் பக்குவப்படுத்தி இருக்கின்றன. பிரிட்டிஷ் காலத்தில் வழக்குகள் நடைபெற்றாலும், இந்தியர்களுக்கு மட்டுமே தண்டனை என்கிற நிலை இருந்ததைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்திய உயர்நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டுவிட்டால் லண்டனில் பிரிவி கவுன்ஸிலில் மேல் முறையீடுக்குப் போகவேண்டுமாம். பணம் இருந்தவர்கள் போயிருக்கிறார்கள். அங்கே தண்டனையைக் குறைத்துக் கொண்டும் வந்திருக்கிறார்கள்.
நரசம்மா கொலை வழக்கில், எப்படிச் செய்திருந்தால் கிராமணி தப்பித்திருக்கலாம் என்று நூலாசிரியர் எஸ்பி சொக்கலிங்கம் சொல்லும் இறுதி வரியை ரசித்தேன்! சூலூர் சுப்பாராவ் வழக்கில் திருப்பத்துக்கு மேல் திருப்பம். வழக்கைச் சொன்னதோடு அந்தக் காலத்தில் இந்த வழக்குகளைப் பற்றி எப்படிப் பேசிக்கொண்டார்கள் என்பதையும் தந்திருப்பது சிறப்பு. ஆட்டோ சங்கர் வழக்கு, நாவரசு கொலை வழக்கு நமக்கு நன்கு பரிச்சயமானவையே என்றாலும், நாவரசு வழக்கை படித்தபோது மிகவும் கஷ்டமாகவே இருந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்படி என்றால், வழக்கு நடந்தபோது இவ்வழக்கு தமிழ்நாட்டை உலுக்கியதில் ஆச்சரியமில்லை.
பில்லா ரங்கா வழக்கு – படிக்கும்போதே ஒரு பதற்றத்தை வரவழைத்தது. இந்தியா முழுக்க இவ்வழக்கு பேசப்பட்டதில் விந்தையில்லை.
கொலை வழக்கில் கொல்லப்பட்ட உடல் கிடைக்கவில்லை என்றால் என்னாகும் என்று நான் யோசித்ததே இல்லை. இப்புத்தகத்தில் அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறார் ஆசிரியர்.
இந்நூல் முழுக்கவே பல கொலைகளும் பாலியல் அத்துமீறல்களும் விவரிக்கப்பட்டுள்ளன. படிக்கும்போது படபடப்பு இல்லாமல் படிக்க முடியாது. அதற்கேற்ற நடை, அதற்கேற்ற வேகம், தேவையான தகவல்களை மட்டும் தந்தால் போதும் என்கிற தெளிவு இப்புத்தகம் முழுக்க சீராகக் கையாளப்பட்டுள்ளது.
எஸ்பி சொக்கலிங்கத்திடம் சில வருடங்கள் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது, இந்தியாவை உலுக்கிய பாலியல் வழக்குகள் என்றே ஒரு புத்தகம் கொண்டு வரலாம் என்றேன். பாலியல் வழக்குகள் என்பதில் சொக்கலிங்கம் அவர்களுக்கு உடன்பாடில்லையோ என்று எனக்குத் தோன்றியது. இப்போதும் இந்தியாவை (தமிழ்நாட்டை) உலுக்கிய பாலியல் வழக்குகள் என்று ஒரு புத்தகம் வருமானால், அது முக்கியமான புத்தகமாகவே இருக்கும்.
பின்னட்டை வாசகம்:
மதுரை நாயக்கரின் வீட்டின் புறக்கடையில் உள்ள வடிகாலில் அடைப்பு. சாக்கடைக் குழியின் சிமெண்ட் மூடியை அகற்றிவிட்டு உள்ளே பார்த்தால் ஒரு பச்சிளம் குழந்தையின் இடது கை விரல்களும் குழந்தையின் தலையும் தெரிந்தது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், ஈச்ச இலையில் சுற்றிக் கட்டப்பட்ட பார்சல் ஒன்று எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியில் ஏற்றப்பட்டது. பிரித்துப் பார்த்தால் உள்ளே ஒரு பெண்ணின் சடலம்.
சென்னை மந்தைவெளியில் பேருந்தின் கடைசி இருக்கையின் அடியில் ஒரு வெள்ளை நிற பாலித்தீன் பை கண்டெடுக்கப்பட்டது. உள்ளே ரத்தக்கறையுடன் தலையில்லாத உடல்.
…
நெஞ்சைப் பதைபதைக்கச் செய்யும் பத்து படுகொலைகள் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. கொலை நடந்த நொடியில் இருந்து தீர்ப்பு வழங்கப்பட்ட நொடி வரை நடந்தவை அனைத்தையும்
படு துல்லியமாக, முழு ஆதாரங்களுடன் விறுவிறுப்பான மொழி நடையில் ஒரு திரைப்படம் போல் கண் முன்னே விரியச் செய்கிறார் எஸ்.பி. சொக்கலிங்கம். எழுத்தாளராக மட்டுமல்லாமல் வழக்கறிஞராகவும் இருப்பதால் சட்டங்கள், நீதி மன்ற விசாரணைகள் தொடர்பான நுட்பமான விவரங்களையும் கவனமாகப் பதிவு செய்கிறார்.வாசகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபல கொலை வழக்குகள் நூலின் இரண்டாம் பகுதி இது. பத்து த்ரில்லர் படங்களை ஒரே நேரத்தில் பார்க்கத் தயாராகுங்கள்.
விலங்குச் சாலை (கவிதை)
விலங்குச் சாலை
தார் ரோட்டில்
சாலையோடு சாலையாக
அப்பிக் கிடக்கும்
நாயொன்றின் தோல் மீது
வண்டி ஏறி இறங்குகையில்
துணுக்குறும் மனத்துக்குள்ளே,
கொல்லாமல் விட்ட
மனிதர்களின் முகங்கள்
வேட்டையாடாமல் விட்ட
அழகிகளின் உடல்கள்
கண் மூடிக் கொண்ட
கடவுள்களின் சாத்தான் குணங்கள்
மண் மூடிக் கிடந்த
மிருகங்களின் விழிப்புகள்.
சாலைக்குக் குறுக்கே ஓடும் நாய்க்குட்டிகளே
இது விலங்குகள் விரையும் சாலை.
களத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்
- படத்தில் தொடர்பே இல்லாமல் ஒரு காமெடி காட்சி. ஜீவா கதாபாத்திரமும் காமெடி நடிகரும் பைக்கில் வருகிறார்கள். அப்போது ஒருவன் எதிரே ஓடி வருகிறான். அவன் காவி வேட்டி, பட்டை அணிந்திருக்கிறான். அவன் ஜீவாவிடம், ஒரு பிரச்சினை உடனே வாருங்கள் என்று அழைக்கிறான். என்ன பிரச்சினை என்று சொல்லாமல், பிரச்சினை பிரச்சினை என்று இழுக்க, காமெடி நடிகர் காவி வேட்டி கட்டியவனைப் பார்த்துச் சொல்கிறார், ‘ஊர்ல மீத்தேன் பிரச்சினை அது இதுன்னு ஆயிரம் பிரச்சினை இருக்கு, இதுதான் ஒனக்கு பிரச்சினையா, ஓட்றா’ என்று சொல்லிவிட்டு, ‘இப்ப பிரச்சினை சரியாய்ட்டா என்ன பண்ணுவ’ என்று கேட்க, காவி வேட்டிக்காரர் சொல்கிறார், ‘ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவேன்’ என்று. காவி வேட்டிக்காரனை ஜீவாவும் காமெடி நடிகரும் விரட்டும்போது காமெடி நடிகர் சொல்லும் வசனம், ‘அஞ்சறிவு உள்ள இவனையெல்லாம் விரட்டணும்.’ (வசனங்களை நினைவில் இருந்து எழுது இருக்கிறேன். அஞ்சறிவு என்னும் வார்த்தை காதில் விழுந்தது போலத்தான் இருந்தது. இன்னொரு முறை பார்க்கும் பொறுமை இல்லை என்பதால் அதை உறுதி செய்யாமல் எழுதி இருக்கிறேன்.)
- கிறித்துவப் பெண்ணை ஹிந்துப் பையன் காதலிக்கிறான். கிறித்துவப் பெண் சொல்கிறாள், ‘எங்கப்பாகிட்ட நீ பொண்ணு கேட்டு வரும்போது எங்கப்பா ஒன்னை அசிங்கமா திட்டுவாரு. மதம் மாறச் சொல்வாரு..’ எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லும் ஹீரோ (அருள்நிதி), எல்லாவற்றுக்கும் சரி என்று சொல்லிவிட்டு, மதம் மாற பிரச்சினையே இல்லை என்று சொல்கிறார்.
- கிறித்துவப் பெண் தன் காதலை ஏற்றுக் கொள்ள அருள்நிதி கதாபாத்திரம், சர்ச்சில் ஹீரோயின் பின்னாலேயே தவம் கிடைக்கிறது. இரண்டு முறை இந்தக் காட்சி வருகிறது. ஆனால் ஒரு தடவை கூட கிறித்துவப் பெண் தன் காதலனுக்காக கோவிலுக்குள் காலை வைக்கும் காட்சி என்றில்லை, கோவில் இருக்கும் தெருவில் காலை வைக்கும் காட்சி கூட இல்லை!
- ஜீவா கதாபாத்திரம் ஒரு வசனம் சொல்கிறது. ‘அரேஞ்ச்ட் மேரேஜ் சிஸ்டத்தை மொதல்ல ஒழிக்கணும்!’
முக்கியமான பின்குறிப்பு: தொடர்பே இல்லாமல் ஒரு காட்சியை சொன்னதற்காக, மற்ற காட்சிகள் எல்லாம் தொடர்போடு இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். எல்லாக் காட்சிகளுமே தொடர்பே இல்லாமல்தான் நகர்கின்றன.
அந்தகாரம்: ஒரு வெளிச்சம்
அந்தகாரம் – தமிழின் மிக முக்கியமான படம். நல்ல படம், மோசமான படம் என்ற இரு வகைகளைத் தாண்டி புத்திசாலித்தனமான படம் என்றொரு வகையை புதிய அலை திரைப்படங்கள் தோற்றுவித்திருக்கின்றன. பீட்ஸா, ஜிகர்தண்டா, சூது கவ்வும் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். அந்தகாரம் இந்தவகைத் திரைப்படம்.
சில இயக்குநர்கள் தங்கள் வருகையின்போதே தாங்கள் மிக முக்கியமான இயக்குநர்களின் வரிசையில் வரப் போகிறவர்கள் என்று அறுதியிட்டுச் சொல்லும் படங்களோடு வருவார்கள். பாரதிராஜா, மணிரத்னம், நலன் குமாரசாமி, கார்த்தி சுப்புராஜ், மணிகண்டன் போல. விக்னராஜனும் அப்படி ஒரு படத்துடன் வந்திருக்கிறார். அரசியல் செருகல்களால் திசை மாறாமல் இருக்கவேண்டும்!
தமிழில் வந்த திரைப்படங்களில் இது போல, கிட்டத்தட்ட கடைசி வரை என்னதான் நடக்கிறது என்று புரியாமல் இருக்கும் ஒரு படம் இருக்குமா எனத் தெரியவில்லை. படம் மூன்று மணி நேரம் ஓடுகிறது என்றால் இரண்டரை மணி நேரத்தில்தான் இத்திரைப்படத்தின் முழு விஷயமும் பிடிபடுகிறது. காலக் கோட்டைக் கலைத்துப் போட்டு ஆடும் விளையாட்டை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். லூஸியா (தமிழில் என்னைப் போல் ஒருவன்) திரைப்படத்தை மட்டுமே இப்படத்துடன் ஒப்பிட முடியும். படமாக்கலும் கிட்டத்தட்ட லூஸியா போலவே உள்ளது.
படமாக்கலைப் பொருத்தவரை, இயக்குநர் மற்றும் எடிட்டரின் அசாதாரண உழைப்பு நன்றாகத் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு யோசித்துச் செய்திருக்கிறார்கள். தமிழில் இது மிகவும் அரிது. சின்ன சின்ன விஷயங்களைக் கூட இத்தனை யோசித்துச் செய்வார்களா என்று சந்தோஷம் கொள்ள வைக்கிறது இப்படம். அதிலும் அந்த விஷயங்கள் துருத்திக் கொண்டிருக்காமல் சரியாக அமைந்திருப்பது பாராட்டப்படவேண்டியது. கதையும் அது நகரும் விதமும் எந்த அளவுக்கு இருந்தது என்றால், தமிழில் இப்படி யோசிக்க யார் இருக்கிறார்கள், நிச்சயம் இது எதாவது ஒரு உலகப் படத்தின் தழுவலாகத்தான் இருக்கும் என்று நான் கூகிளில் தேடும் அளவுக்கு இருந்தது! இயக்குநரைப் பாராட்டும் நோக்கில்தான் இதைச் சொல்கிறேன்.
நடிகர்கள் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் படத்துடன் சட்டென ஒன்றிக்கொள்ள முடிகிறது. அத்தனை நடிகர்களும் மிக யதார்த்தமாக நடிக்கிறார்கள். தமிழின் புதிய அலைத் திரைப்படங்கள் நமக்குத் தந்திருக்கும் ஒரு கொடை இந்த யதார்த்த நடிப்பு.
இந்தப் படத்தின் முக்கியமான பலம் வசனம். மிகக் கூர்மையான வசனங்கள். மிகக் குறைந்த அளவிலான வசனங்கள்.
எல்லா வகையிலும் முக்கியமான திரைப்படம் இது. பேய்ப்படம் என்றும் சொல்லலாம். இல்லாவிட்டாலும் கூட இது முக்கியமான திரைப்படமே. பேய் என்றால் திடும் திடுமென இசையைக் கூட்டி அலற வைக்கவேண்டும் என்கிற க்ளிஷேவை எல்லாம் உடைத்து, பேய்ப்படத்தை ஒரு த்ரில்லர் போலக் காட்டி இருக்கிறார்கள். தமிழில் பேய்ப்படங்கள் என்றாலே எதோ ஒரு ஆங்கிலப் படத்தை உல்ட்டா செய்து எடுத்திருப்பார்கள். அப்படி இல்லாமல் இத்திரைப்படம் வித்தியாசமாக இருக்கிறது. அதனால்தான் பேயைக் குறைவாகவும் த்ரில்லர் களத்தை அதிகமாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் போல.
படத்தின் குறை என்று பார்த்தால், இரண்டரை மணி நேரத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் எப்படிப் பார்ப்பது என்கிற ஒரு அலுப்பு பார்வையாளர்களுக்கு வரலாம். பொதுப் பார்வையாளர்களுக்கு இப்படி ஒரு அலுப்பு வரவே செய்யும். அதேபோல் நொடிக்கு நொடி மாறும் காட்சிகள், அந்த ஒரு நொடிக் காட்சியைக் கூட மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய அவசியம் – இவற்றையெல்லாம் எல்லாரும் புரிந்துகொள்வார்களா எனத் தெரியவில்லை. நான் சொல்லும் குறைகள் கூட பார்வையாளர்கள் பார்வையில்தானே தவிர, திரைப்படத்தின் குறைகளாக இல்லை.
தொடர்ச்சியாகப் பேய்ப் படங்கள் என்கிற பெயரில் வரும் ஆபாசப் படங்களுக்கு மத்தியில் இத்திரைப்படம் வித்தியாசமான, முக்கியமான திரைப்படம்.