Archive for ஹரன் பிரசன்னா
ரஜினியின் அரசியல் பிரவேசம்? (2017)
ரோலக்ஸ் வாட்ச்
அதே கண்கள்
அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.
அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.
அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –
* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.
* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.
* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.
* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.
* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.
* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.
இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.
குடியரசு தினம் – 2017
அவன் காட்டை வென்றான்
அவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.
அவன் காட்டை வென்றான், கேசவ ரெட்டி, தமிழில்: எத்திராஜுலு, விலை ரூ 25.
ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்
மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் இதுவரை மிகவும் அமைதியாக நடந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்தான். பாராட்டப்படவேண்டியது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இந்தத் தொடர் போராட்டங்கள் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக உணர்வு ரீதியாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாணவர்கள் ஒருநாள் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு தரப்படும்வரை போராட்டம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் நடத்தும் திடீர் தொடர் உண்ணாவிரதங்கள் போல இது தோற்றமளிக்கிறது. இதுவரை மாணவர்களின் போராட்டம் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்தாலும், இதில் சில விஷமிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் அது மாணவர்கள் தலையில்தான் விடியும். எனவே மாணவர்கள் அமைப்புகள் மிகக் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது தன்னெழுச்சியான போராட்டம் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. உள்ளடியாக நிச்சயம் சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புகள் இருந்தே ஆகவேண்டும். இப்படி இருப்பது தவறல்ல, இயல்பானதுதான். ஆனால் மாணவர்களின் முதல் வேலை படிப்பில் கவனம் செலுத்துவது. அரசியல் ஆர்வமும் அரசியல் பங்கெடுப்பும் இரண்டாவது வேலையாக இருக்கலாம். எனவே தொடர் போராட்டங்கள் எல்லாம் சரியானதுதானா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிதுமல்ல.
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், 1967ல் மாணவர் போராட்டம் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த சம்பவத்திலிருந்தே, மாணவர்கள் போராட்டம் பெரிய பிரச்சினையை மட்டுமே கொண்டுவரும் என என் மனதில் பதிந்துவிட்டது. இதை மனதில் வைத்தாவது மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு உணர்வு ரீதியாக தீவிரமான ஆதரவைத் தந்தது போதும் என்று முடிவெடுத்து படிப்புக்குத் திரும்பவேண்டும். நானெல்லாம் படிக்கும்போது ஒருநாள் விடுமுறை கிடைப்பதுதான் ஸ்ட்ரைக்கின் நோக்கம் என்ற புரிதலோடு கல்லூரியில் படித்தவன். இன்று மாணவர்கள் உணர்வோடு தொடர்போராட்டம் நடத்துவது பெரிய ஆச்சரியம் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி தனித்தமிழ்நாடு என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தால், போராட்டக்காரர்கள் ஏமாந்து போவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் மாய ஊடகத்திலும் இருக்கும் தமிழகத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு இத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஊருக்குள் பெரும்பாலும் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே தமிழ்நாட்டை மையமாக வைத்து இந்தியாவை எதிர்ப்பவர்கள் வேறு விஷயத்தைத் தேடுவது நல்லது. காவிரி நீர்ப் பிரச்சினை போன்ற மிக ஆதாரமான விஷயத்தில்கூட, வடிவேலு போல ‘லைட்டா வலிக்குது’ என்று தாண்டிப் போனவர்கள் நம் மக்கள். போராட்டம் நடப்பது இவர்களை நம்பியே என்பதுதான் வரமும் சாபமும்!
ஆண்டாள் குறித்து வைரமுத்து – விவகாரம்
ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை மோசமானது. திடீர் இலக்கிய ஞானத்தால் ஏற்பட்ட சறுக்கல். மதங்கள் பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் வைரமுத்து எழுதி இருப்பது எல்லாமே அபத்தம். இதை மிக எளிதாகவே ஹிந்து நண்பர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். ஜடாயு தமிழிந்துவில் (தமிழ் தி ஹிந்து அல்ல) இதுபற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்.
ஆனால் கோபம் கொண்டு வைரமுத்துவை வசை பாடுவது, வைரமுத்து சொன்னதிலும் தரம் தாழ்ந்து போவதோடு, வைரமுத்து சொன்னதே பரவாயில்லை என்கிற எண்ணத்தைக் கொண்டு வரும். கடுமையாக எதிர்கொள்வதற்கும் கேவலமாக எதிர்கொள்வதற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவரை, அடுத்தவர்கள் நம்மீது செலுத்தும் வசையைக் குறை சொல்ல நமக்கு தார்மிகத் தகுதி இல்லை.
ஒருவர் ஒன்றை உளறினால் பதிலுக்கு அவருக்கு உரைக்கவேண்டும் என்ற நோக்கில் அவரது தாயை வசைபாடும் போக்கு ஆபாசமானது. பெண்ணை வசைபாடும் ஆண் மனப்பான்மையை முதலில் கைவிடுவதே நாம் அடிப்படையில் கற்றுக் கொள்ளவேண்டியது.
இப்படிக் கேவலமாகப் பேசி பதிலடி தருவதும் ஒரு தரப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதைப் புரிந்துகொள்கிறேன், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற மதங்கள் பற்றி ஒரு நாளும் வைரமுத்து இப்படிப் பேசிவிடத் துணிய மாட்டார் என்பது உண்மைதான். அந்த இடத்தை அடையவே இப்படியான எதிர்வினை என்பதும் புரிகிறது. இப்படித்தான் அடைய முடியுமானால் அந்த இடத்தை அடையவும் வேண்டுமா என்ன.
(ஜனவரி 10)
—
வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் பாரதி ராஜா. இது கிட்டத்தட்ட கொலை மிரட்டல். ஜாதிய ரீதியிலான தாக்குதல். திராவிட இயக்கங்கள் கற்றுக்கொடுத்த, பிராமணர் தமிழர் இல்லை என்கிற சித்தாந்தப்படி காரணமும் கற்பித்தாகிவிட்டது. வெளங்கிரும். ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டதாகப் பொய் சொல்லும் பாரதிராஜா இன்னொரு படம் எடுத்தால் போதும், கத்தி அருவா சுத்தியல் டைம்பாம் எல்லாத்தையும்விட படுபயங்கரமான ஆயுதமா இருக்குமே. ராஜா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் செஞ்சிரலாமே… செய்வாரா செய்வாரா?
(ஜனவரி 12)
—–
நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.
இன்று தேவைக்காக இதை ஆதரிப்போர், இப்படியும் ஒரு தரப்பு இருந்தால்தான் புத்தி வரும் என்போரெல்லாம், பின்னாளில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்த்துத்துவ ஆதரவாளர்களுக்கு நேரப்போகும் அத்தனை மரியாதையின்மைக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.
இத்தனை நாள் அடிப்படைப் பண்பிலிருந்து விலகுவது, நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் பெரிய குழி. உடனடி மிரட்டல்களுக்கு இது பயன்பட்டாலும் நமக்கு எதிரான ஆயுதமாகவே இது நீண்ட நாள் நோக்கில் பயன்படுத்தப்படும்.
இதை எதிர்த்தாகவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் ஹிந்துத்துவரின் தேவை. அப்போதுதான் நாளை இதை வாய்ப்பாகச் சொல்பவர்களுக்கு, எங்கள் தரப்பிலேயே மிக அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை மறுபடியாகச் சொல்லமுடியும்.
*
இந்த ஜீயர் உண்ணாவிரதம் இருக்கும்வரை சிலர் ஆஃபர் அறிவித்ததுதான் நேற்றைய உச்சகட்ட அதிர்ச்சி. ஆனால் மனிதர்கள் இப்படித்தான். பதிலுக்கு நாமும் பல விஷயங்களைச் சொல்லமுடியும். ஆனால் அது தரமற்றது. ஒரு ஜீயர் என்றில்லை, ஒரு மனிதன் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக என்றுகூட யோசிக்கத் தோன்றாமல் இப்படிப் பிதற்றுவதெல்லாம் எளிது. அரசியல் உண்ணாவிரதத்தையும் அழிச்சாட்டிய உண்ணாவிரதத்தையும் ஐந்து மணி நேர உண்ணாவிரத்தையும் பார்த்துப் பழகியவர்களுக்கு இது ஆஃபர் காலமாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தாயாருக்காக. இந்த உண்ணாவிரதத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் நிச்சயம் என்னால் எள்ளி நகையாடிப் புறந்தள்ள இயலாது.
இந்த ஜீயர் பற்றி எனக்கு அதிக தகவல்களெல்லாம் தெரியாது. நான் சொல்வது, இவரது இன்றைய நிலைப்பாட்டை ஒட்டி மட்டுமே.
*
வைரமுத்து பிராமணர்களுக்கு எதிரானவர் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அல்லது அந்தத் திக்கில் நான் யோசித்ததில்லை. ஏனென்றால் வைரமுத்துவே தன் சாதியினரின் ஆதரவாளர் என்ற எண்ணம் இருப்பதால். இந்த ஜீயரின் உண்ணாவிரதம் நிச்சயம் வைரமுத்துவை அசைத்துப் பார்க்கும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை, நான்கைந்து நாள் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன். பார்க்கலாம்.
(ஜனவரி 18)