Archive for ஹரன் பிரசன்னா

ரஜினியின் அரசியல் பிரவேசம்? (2017)

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றும் அதற்கு ஆலோசனை நடத்தினார் என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஜினி வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை.
 
ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால், இதைவிட நல்ல தருணம் கிடைக்காது. 96ல் மிக எளிதாக முதல்வராகும் வாய்ப்பை வேண்டாம் என்று விட்டுவிட்டார். இப்போதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். சோ மறைவுக்கு ரஜினி எழுதிய சிறந்த அஞ்சலியில், 96 சமயத்தில் அரசியலுக்கு வராததற்குக் காரணம் சோ என்ற ரீதியில் ரஜினி எழுதி இருந்தார். அதை கொஞ்சம் யோசித்ததில், அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இருந்திருக்கும் என்பதாகவே நான் புரிந்துகொண்டேன். அந்த எண்ணத்த்தின் மிச்சம் மீதி இருக்குமானால், இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
 
ஜெயலலிதாவின் மறைவு, சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் ஒவ்வாமை, கருணாநிதியின் அரசியல் மௌனம், ஸ்டாலினின் உத்வேகமின்மை, மற்ற கட்சிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை எனப் பல வகைகளில் இது நல்ல சமயம். ஸ்டாலினின் வளர்ச்சி உறுதியானாலும் ஸ்டாலின் எதிர் ரஜினி என்று மாறவும் நல்ல வாய்ப்புள்ளது. அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளுவது இந்நிலையில் ஓரளவு எளிதானதுதான். ஓபிஎஸ் நல்ல பெயர் எடுக்குமுன் ரஜினி முடிவெடுக்கவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே நெருக்கடி.
 
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருக்கும். அந்த எதிர்ப்பின் உள்ளர்த்தம், அவருக்கு வெற்றி கிடைக்க சகல வாய்ப்புகளும் உள்ளது என்பதுதான். ஏனென்றால் அதிகம் எதிர்க்கப்பட்டவர்களே வென்றிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த அரசியலையும் ரஜினி எதிர் மற்றவர்கள் என்று மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் மிக எளிதாக வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
 
இத்தனையையும் மீறி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது. வந்தால் நிச்சயம் முதல்வராவார் என்றும் அதே உள்ளுணர்வு சொல்கிறது.
 
பின்குறிப்பு: போட்டி போடாமல் வரிசையாக என்னையும் ரஜினியையும் திட்டவும். அனைவருக்கும் திட்ட சமமான வாய்ப்பு வழங்கப்படும்.
Share

ரோலக்ஸ் வாட்ச்

சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் நாவல் படித்தேன். மிக எளிய வடிவிலான நாவல். முதல் சில நாவல்களில் இந்த உத்தி எளிமையானதும் வசதியானதும். பல்வேறு நிகழ்வுகளை மெல்ல புனைவுக்குள் அமிழ்த்தி பல அத்தியாயங்களில் உலவி சில அத்தியாங்களில் ஒரு தொடர்ச்சியை உருவாக்குவது. இந்த உத்தியைச் சரியாகவே செய்திருக்கிறார் சரவணன் சந்திரன். விறுவிறுவெனப் படிக்க வைக்கும் நடை கைகொடுக்கிறது. பல இடங்களில் சைவமான சாரு நிவேதிதாவைப் படித்தது போன்ற உணர்வு மேலோங்குகிறது. சந்திரன் பாத்திரம் கொள்ளும் உச்சம் மிக நன்றாக வெளிப்பட்டுள்ளது. சந்திரன் பற்றிய நேரடி விவரங்களே இல்லை என்பதுதான் இதில் உள்ள சிறப்பு. இதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
 
எனக்கு அலுப்புத் தந்தவை எவை என்று பார்த்தால், எவ்வித ஆழமும் இன்று சிலச்சிலப் பக்கங்களில் விரியும் தொடர்ச்சியற்ற சம்பவங்கள். நாவல் எழுதும் நாளில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதிவிட்டாரோ என்று எண்ணத்தக்க அளவுக்கு ஏகப்பட்ட சம்பவங்கள். வெகு சில பக்கங்கள் கொண்ட அத்தியாயங்களை கீரனூர் ஜாகிர் ராஜாவின் நாவல்களில் வாசித்திருக்கிறேன். ஆனால் அவற்றுக்கிடையே உள்ள தொடர்பும் அந்தக் கதைகளின் வழியே உருவாகி வரும் ஒட்டுமொத்த சித்திரமும் அபாரமானதாகவும் தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும். இந்த உணர்வு இந்த நாவலில் கிடைக்கவில்லை. சில சாதிகளைப் பற்றியும் சில கட்சிகளைப் பற்றியும் அந்தச் சாதி என்றும் அந்தக் கட்சி என்றும் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. நாவலிலுமா இப்பிரச்சினை என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
 
சரவணன் சந்திரனின் எழுத்து மிக நன்றாக இருப்பது நாவலின் பெரிய ப்ளஸ். தொடர்ந்து பல நாவல்கள் எழுதி முக்கியமான நாவலாசிரியராக வர சகல சாத்தியங்களை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. சரவணன் சந்திரனுக்கு வாழ்த்துகள்.
 
தமிழ் மகன் இந்நாவலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில் உள்ள, சினிமாவில் நாயகர்கள் எடுத்துக்கொண்ட வில்லன்களின் உடைமைகள் பற்றிய குறிப்பு சுவாரஸ்யம்.
 
ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன், உயிர்மை பதிப்பகம்.
Share

அதே கண்கள்

அதே கண்கள் – முகில் நண்பர். தூத்துக்குடிக்காரர். எனவே கிட்டத்தட்ட திருநெல்வேலிக்காரர். 🙂 ஸ்க்ரிட்ப் கன்சல்டண்ட்டாக இந்தப் படத்தில் பணி புரிந்திருக்கிறார். தனிப்பட்ட வகைப் பழக்கத்தில் முகிலின் பலம் என்று நான் நினைப்பது – அவரது ஹ்யூமர். தன் பலத்தைத் திரைப்படத்தில் கொண்டு வருவது ஒரு கலை. கூடவே அதிர்ஷ்டமும் வேண்டும். அதே கண்கள் படத்தில் முகிலுக்கு இந்த இரண்டும் சரியாக வாய்த்திருக்கின்றன. இந்த அணிக்கு என் வாழ்த்துகள்.

அதே கண்கள் – த்ரில்லர் வகை திரைப்படம். ஆஹோ ஒஹோ என்று புகழ்த்தக்க ஒரு படமல்ல. அதே சமயம் முற்றிலும் புறக்கணிக்கத்தக்க ஒரு படமும் அல்ல. தன் எல்லைகளைப் புரிந்துகொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம்.

அதே சமயம் ஏன் இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கவில்லை என்று யோசித்தால் –

* நடிகர்கள் தேர்வு முதல் சொதப்பல். கலையரசனால் ஒரு அளவுக்கு மேல் படத்தைத் தூக்கிக்கொண்டு போகமுடியவில்லை. மதயானைக்கூட்டம், மெட்ராஸ் படங்களில் சிறப்பாக நடித்தவர் இவர். ஆனால் முழுப்படத்தையும் தன் தோளில் சுமக்க இவரால் முடியவில்லை.

* படத்தில் ஏமாற்றும் பெண்ணாக வரும் நடிகையின் நடிப்பு அமெச்சூர் ரகம். நகைக்கடையில் அவர் அவமானப்படுத்தப்படும் ஒரு காட்சியில் மட்டும் அத்தனை யதார்த்தம். மிடுக்குடன் வரவேண்டிய மற்ற காட்சிகளில் எல்லாம் ரொம்ப சுமாராகவே நடித்திருந்தார். ஒரு பலமான நடிகை நடித்திருக்கவேண்டும். பச்சைக்கிளி முத்துச்சரம் ஜோதிகா போல.

* மிகவும் கணிக்கத்தக்க கதை மற்றும் திரைக்கதை. அதிலும் யார் கொலைகாரர் என்ற தெரிந்த பின்பும் நீளும் திரைக்கதை.

* பார்வையற்றவர்கள் தொடர்பாக வரும் கதைக்குள் வருவதற்கு, ஹீரோவுக்கு பார்வை இல்லாமல் இருப்பதும், மீண்டும் பார்வை வருவதும் என அலைபாயும் முதல் அரை மணி நேரக் காட்சிகள்.

* மிக மோசமான இசை, ஒளிப்பதிவு.

* மிக நீளமான ஒரே மாதிரியான காட்சிகள்.

இந்த அத்தனை அலுப்பையும் தன்னந்தனியாளாகப் போக்குகிறார் பால சரவணன். இவர் வந்ததும்தான் இறுக்கம் தளர்ந்தது. ஏன் அத்தனை நேரம் இறுக்கமாக இருந்தோம் என்பது பதிலற்ற கேள்வி! பால சரவணனின் மேனரிஸத்துக்கேற்ற வசனங்கள். இந்த வசனங்களில் முகிலின் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும் என்பதை யூகிக்கமுடிகிறது. மலையாளத்தில் ரீமேக் செய்தால் சூப்பர் ஹிட்டாகும் என்று படம் பார்க்கும்போது தோன்றியது. இங்கேயும் இத்திரைப்படம் பரவலாக பாஸிட்டிவ் பாராட்டுகளைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. திரைத்துறையில் முகில் வெற்றி பெறவும் அழுத்தமான தடம் பதிக்கவும் வாழ்த்துகள்.

Share

குடியரசு தினம் – 2017

தமிழ்நாட்டுப் பிரிவினையை ஏற்காத 99.99% தமிழர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
 
தனித் தமிழ்நாடு என்ற உயிரிழந்த கோஷத்தை மெல்ல உயிர்கொடுக்கப் பார்க்கும் ப்ரீ பெய்ட் போராட்டக்காரர்களுக்கு மிக நன்றாகவே தெரியும், இது ஒரு நாளும் எடுபடாத கோரிக்கை என்று. தங்கள் அரசியலுக்காக மட்டுமே இதைக் கையில் எடுக்கிறார்கள். இத்தனை பிரச்சினைக்குப் பின்னும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது. எந்தக் கட்சி ஆண்டாலும் இந்திய அரசு, காஷ்மிர் தன் ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலையில் இருந்து பின்வாங்கியதே இல்லை. இதில் தனித்தமிழ்நாடு கோரிக்கையெல்லாம் மிக லேசாக வலுப்பெற்றால்கூட இந்திய அரசு அதை எப்படிக் கையாளும் என்பதை ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளமுடியும்.
 
இந்தியாவில் குஜராத் வேகமாக முன்னேறுகிறது என்றபோது, போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார சமூகப் புலிகள் எல்லாம் எப்படி தமிழ்நாடு இந்தியாவில் எப்போதுமே முன்னேறிய மாநிலமாக இருந்துவந்துள்ளது என்பதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டினார்கள். அன்று இதே தமிழ்ப் பிரிவினைவாதிகள் அதனை ஏற்றுக்கொண்டு குஜராத்துக்கு எதிராகக் களமாடினார்கள். இதன் பொருள், எந்நாளும் தமிழ்நாடு இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டதில்லை என்பதே. மாநிலங்களுக்க்குத் தேவையான அதிகாரங்கள் இன்னும் அதிகமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும், அதை மையமாக வைத்து தமிழ்ப் பிரிவினைவாதிகள் தனித்தமிழ்நாடு கோருவதும் ஒன்றல்ல.
 
எத்தனையோ பேர் போராடிப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் நோக்கம் இந்தியத் திருநாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே. தனித்தமிழ்நாடு என்னும் கோஷத்துடன் கூட்டம் சேர்த்துப் பார்த்தால் 300 பேர் கூடக் கூடமாட்டார்கள் என்று தெரிந்தவர்கள்தான் மூன்று லட்சம் பேர் கூடிய கூட்டத்தை தங்கள் கூட்டமாக மாற்றப் பார்த்தார்கள். இந்த சக்திகள் முன்னெடுத்தால் தமிழக அரசியலில் குழப்பமும் கூச்சலும் அமைதியின்மையுமே எஞ்சும் என்பதற்கு கடந்த வாரக் காட்சிகளே உதாரணம். இந்திய அரசும் தமிழக அரசும் ஈவு இரக்கமின்றி இந்த பிரிவினை சக்திகளை ஒடுக்கவேண்டும் என்பதே இந்த இந்தியக் குடியரசு தினத்தன்று மேற்கொள்ளவேண்டிய உறுதிமொழியாக இருக்கவேண்டும்.
 
அனைவருக்கும் இந்தியத் திருநாட்டின் குடியரசு தின வாழ்த்துகள்.
Share

அவன் காட்டை வென்றான்

அவன் காட்டை வென்றான் நாவலைப் படித்தேன். 78 பக்கமே உள்ள குறுநாவல். தொடக்கம் முதல் இறுதி வரை நாவலில் விவரிக்கப்பட்டிருப்பவை, ஒரு கிழவனின் பன்றிப் பாசமும், காடும்தான். காட்டுக்குள் வழி தவறிச் செல்லும் சினைப் பன்றியை மீட்கச் செல்லும் கிழவன் காட்டை எப்படிப் புரிந்துகொண்டு அதை வெல்ல யத்தனிக்கிறான் என்பதே ஒட்டுமொத்த கதையும். நாவல் முழுக்க விவரணைகளும் அகக் கேள்விகளும் மட்டுமே. இருவர் பேசிக்கொள்ளும் காட்சி ஒன்றிரண்டு கூட இல்லை. இதனால் நாவல் ஒரு கட்டத்தில் கிழவனுக்கும் இயற்கைக்குமான அக விசாரணை அளவுக்குச் செல்கிறது. தேவைக்காக தன் ஆசைப் பன்றியையே கிழவன் கொல்லும் காட்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அவன் காட்டை வென்றான் என்ற பெயர் இருந்தாலும், காட்டை வென்ற கிழவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையான தோல்வியையே அடைகிறான். அவன் நினைத்தது எதுவுமே நடக்கவில்லை. காட்டை நீங்கள் எத்தனை புரிந்துகொண்டாலும் அது தனக்கான ரகசியத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும் என்றும் அதற்கு இயற்கையும் பரிபூரணமாக ஒத்துழைக்கும் என்றும் இப்பிரதியைப் புரிந்துகொள்ளலாம். தெலுங்கிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று யூகிக்கிறேன். மிகச் சரளமான மொழிபெயர்ப்பு. மிகச் சில வார்த்தைகள் (ரண வாயு, களேபரம் என்று இறந்த உடலைச் சொல்வது போன்றவை) தவிர, வாசிப்பனுவத்தைப் பாழ் செய்யும் அந்நிய வார்த்தைகள் இல்லவே இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம், நாவல் முழுக்க பல இடங்களில் ஆசிரியர் கூற்றாக கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் மகாபாரதத்தின் மாந்தர்கள் பற்றியும் வந்துகொண்டே இருக்கிறது. இனி வரும் காலங்களில் இது சாத்தியமா எனத் தெரியவில்லை. அப்படியே வந்தாலும் அது இலக்கியப் பெருமை பெறுமா என்பது பெரிய கேள்வி.

33958622

அவன் காட்டை வென்றான், கேசவ ரெட்டி, தமிழில்: எத்திராஜுலு, விலை ரூ 25.

Share

ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் இதுவரை மிகவும் அமைதியாக நடந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்தான். பாராட்டப்படவேண்டியது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இந்தத் தொடர் போராட்டங்கள் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக உணர்வு ரீதியாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாணவர்கள் ஒருநாள் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு தரப்படும்வரை போராட்டம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் நடத்தும் திடீர் தொடர் உண்ணாவிரதங்கள் போல இது தோற்றமளிக்கிறது. இதுவரை மாணவர்களின் போராட்டம் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்தாலும், இதில் சில விஷமிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் அது மாணவர்கள் தலையில்தான் விடியும். எனவே மாணவர்கள் அமைப்புகள் மிகக் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது தன்னெழுச்சியான போராட்டம் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. உள்ளடியாக நிச்சயம் சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புகள் இருந்தே ஆகவேண்டும். இப்படி இருப்பது தவறல்ல, இயல்பானதுதான். ஆனால் மாணவர்களின் முதல் வேலை படிப்பில் கவனம் செலுத்துவது. அரசியல் ஆர்வமும் அரசியல் பங்கெடுப்பும் இரண்டாவது வேலையாக இருக்கலாம். எனவே தொடர் போராட்டங்கள் எல்லாம் சரியானதுதானா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிதுமல்ல.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், 1967ல் மாணவர் போராட்டம் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த சம்பவத்திலிருந்தே, மாணவர்கள் போராட்டம் பெரிய பிரச்சினையை மட்டுமே கொண்டுவரும் என என் மனதில் பதிந்துவிட்டது. இதை மனதில் வைத்தாவது மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு உணர்வு ரீதியாக தீவிரமான ஆதரவைத் தந்தது போதும் என்று முடிவெடுத்து படிப்புக்குத் திரும்பவேண்டும். நானெல்லாம் படிக்கும்போது ஒருநாள் விடுமுறை கிடைப்பதுதான் ஸ்ட்ரைக்கின் நோக்கம் என்ற புரிதலோடு கல்லூரியில் படித்தவன். இன்று மாணவர்கள் உணர்வோடு தொடர்போராட்டம் நடத்துவது பெரிய ஆச்சரியம் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

இந்தப் போராட்டத்தின் பின்னணி தனித்தமிழ்நாடு என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தால், போராட்டக்காரர்கள் ஏமாந்து போவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் மாய ஊடகத்திலும் இருக்கும் தமிழகத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு இத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஊருக்குள் பெரும்பாலும் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே தமிழ்நாட்டை மையமாக வைத்து இந்தியாவை எதிர்ப்பவர்கள் வேறு விஷயத்தைத் தேடுவது நல்லது. காவிரி நீர்ப் பிரச்சினை போன்ற மிக ஆதாரமான விஷயத்தில்கூட, வடிவேலு போல ‘லைட்டா வலிக்குது’ என்று தாண்டிப் போனவர்கள் நம் மக்கள். போராட்டம் நடப்பது இவர்களை நம்பியே என்பதுதான் வரமும் சாபமும்!

Share

ஆண்டாள் குறித்து வைரமுத்து – விவகாரம்

ஆண்டாள் பற்றி வைரமுத்து எழுதிய கட்டுரை மோசமானது. திடீர் இலக்கிய ஞானத்தால் ஏற்பட்ட சறுக்கல். மதங்கள் பற்றியும் ஹிந்து மதம் பற்றியும் வைரமுத்து எழுதி இருப்பது எல்லாமே அபத்தம். இதை மிக எளிதாகவே ஹிந்து நண்பர்கள் எதிர்கொண்டு விடுவார்கள். ஜடாயு தமிழிந்துவில் (தமிழ் தி ஹிந்து அல்ல) இதுபற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்.

ஆனால் கோபம் கொண்டு வைரமுத்துவை வசை பாடுவது, வைரமுத்து சொன்னதிலும் தரம் தாழ்ந்து போவதோடு, வைரமுத்து சொன்னதே பரவாயில்லை என்கிற எண்ணத்தைக் கொண்டு வரும். கடுமையாக எதிர்கொள்வதற்கும் கேவலமாக எதிர்கொள்வதற்குமான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாதவரை, அடுத்தவர்கள் நம்மீது செலுத்தும் வசையைக் குறை சொல்ல நமக்கு தார்மிகத் தகுதி இல்லை.

ஒருவர் ஒன்றை உளறினால் பதிலுக்கு அவருக்கு உரைக்கவேண்டும் என்ற நோக்கில் அவரது தாயை வசைபாடும் போக்கு ஆபாசமானது. பெண்ணை வசைபாடும் ஆண் மனப்பான்மையை முதலில் கைவிடுவதே நாம் அடிப்படையில் கற்றுக் கொள்ளவேண்டியது.

இப்படிக் கேவலமாகப் பேசி பதிலடி தருவதும் ஒரு தரப்பு என்று சிலர் சொல்லக்கூடும். அதைப் புரிந்துகொள்கிறேன், ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மற்ற மதங்கள் பற்றி ஒரு நாளும் வைரமுத்து இப்படிப் பேசிவிடத் துணிய மாட்டார் என்பது உண்மைதான். அந்த இடத்தை அடையவே இப்படியான எதிர்வினை என்பதும் புரிகிறது. இப்படித்தான் அடைய முடியுமானால் அந்த இடத்தை அடையவும் வேண்டுமா என்ன.

(ஜனவரி 10)

வைரமுத்து ஆண்டாள் பிரச்சினை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் பாரதி ராஜா. இது கிட்டத்தட்ட கொலை மிரட்டல். ஜாதிய ரீதியிலான தாக்குதல். திராவிட இயக்கங்கள் கற்றுக்கொடுத்த, பிராமணர் தமிழர் இல்லை என்கிற சித்தாந்தப்படி காரணமும் கற்பித்தாகிவிட்டது. வெளங்கிரும். ஆனால் ஆயுதங்களைக் கைவிட்டதாகப் பொய் சொல்லும் பாரதிராஜா இன்னொரு படம் எடுத்தால் போதும், கத்தி அருவா சுத்தியல் டைம்பாம் எல்லாத்தையும்விட படுபயங்கரமான ஆயுதமா இருக்குமே. ராஜா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் செஞ்சிரலாமே… செய்வாரா செய்வாரா?

(ஜனவரி 12)

—–

நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.நிதியானந்தாவின் சீடர்களின் வீடியோக்கள் குமட்டலை வரவழைக்கின்றன. சன் டிவியில் வெளியான அவரது தனிப்பட்ட வீடியோவில்கூட நான் இத்தனை அதிர்ச்சியும் அருவருப்பும் அடையவில்லை. சன் டிவியின் மீதுதான் அருவருப்பும் எரிச்சலும் இருந்தன. ஆனால் இப்போது வெளியாகும் வீடியோக்கள் அருவருப்பையும் குமட்டலையும் தருகின்றன.

இன்று தேவைக்காக இதை ஆதரிப்போர், இப்படியும் ஒரு தரப்பு இருந்தால்தான் புத்தி வரும் என்போரெல்லாம், பின்னாளில் ஹிந்து மதம் மற்றும் ஹிந்த்துத்துவ ஆதரவாளர்களுக்கு நேரப்போகும் அத்தனை மரியாதையின்மைக்கும் காரணகர்த்தாக்களாக இருப்பார்கள்.

இத்தனை நாள் அடிப்படைப் பண்பிலிருந்து விலகுவது, நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் பெரிய குழி. உடனடி மிரட்டல்களுக்கு இது பயன்பட்டாலும் நமக்கு எதிரான ஆயுதமாகவே இது நீண்ட நாள் நோக்கில் பயன்படுத்தப்படும்.
இதை எதிர்த்தாகவேண்டியது ஒவ்வொரு ஹிந்துவின் ஹிந்துத்துவரின் தேவை. அப்போதுதான் நாளை இதை வாய்ப்பாகச் சொல்பவர்களுக்கு, எங்கள் தரப்பிலேயே மிக அதிக எதிர்ப்பு இருந்தது என்பதை மறுபடியாகச் சொல்லமுடியும்.

*

இந்த ஜீயர் உண்ணாவிரதம் இருக்கும்வரை சிலர் ஆஃபர் அறிவித்ததுதான் நேற்றைய உச்சகட்ட அதிர்ச்சி. ஆனால் மனிதர்கள் இப்படித்தான். பதிலுக்கு நாமும் பல விஷயங்களைச் சொல்லமுடியும். ஆனால் அது தரமற்றது. ஒரு ஜீயர் என்றில்லை, ஒரு மனிதன் உண்ணாவிரதம் இருப்பது எதற்காக என்றுகூட யோசிக்கத் தோன்றாமல் இப்படிப் பிதற்றுவதெல்லாம் எளிது. அரசியல் உண்ணாவிரதத்தையும் அழிச்சாட்டிய உண்ணாவிரதத்தையும் ஐந்து மணி நேர உண்ணாவிரத்தையும் பார்த்துப் பழகியவர்களுக்கு இது ஆஃபர் காலமாகத்தான் தோன்றும். ஆனால் இந்த ஆன்மிக உண்ணாவிரதம் ஒரு தாயாருக்காக. இந்த உண்ணாவிரதத்தை நான் ஏற்கவில்லை. ஆனால் நிச்சயம் என்னால் எள்ளி நகையாடிப் புறந்தள்ள இயலாது.

இந்த ஜீயர் பற்றி எனக்கு அதிக தகவல்களெல்லாம் தெரியாது. நான் சொல்வது, இவரது இன்றைய நிலைப்பாட்டை ஒட்டி மட்டுமே.

*
வைரமுத்து பிராமணர்களுக்கு எதிரானவர் என்று இதுவரை எனக்குத் தோன்றியதில்லை. அல்லது அந்தத் திக்கில் நான் யோசித்ததில்லை. ஏனென்றால் வைரமுத்துவே தன் சாதியினரின் ஆதரவாளர் என்ற எண்ணம் இருப்பதால். இந்த ஜீயரின் உண்ணாவிரதம் நிச்சயம் வைரமுத்துவை அசைத்துப் பார்க்கும் என்றே நினைக்கிறேன். ஒருவேளை, நான்கைந்து நாள் ஜீயர் உண்ணாவிரதம் இருந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்க்கிறேன். பார்க்கலாம்.

(ஜனவரி 18)

Share

ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்

இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை – ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை.
oruthi_3101048h
இதை 60களில் ஜெமினிகணேசனை ஹீரோவாக வைத்து படமாக எடுத்திருந்தால் இன்னுமொரு சூப்பர்ஹிட் உணர்ச்சிகர காவியம் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். இதன் முடிவுக்காக சிலரால் புரட்சிகர சினிமா என்று போற்றப்பட்டிருக்கும் என்பதோடு, இரண்டு மனைவி கலாசாரத்தைப் புகுத்துகிறாரா என்று பலரால் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். இதை ஏன் ஜெயலலிதா இப்படி எழுதினார் என்பதை ஒட்டி ஜெயலலிதாவின் பின்னாளைய அரசியல் வாழ்க்கைக்கான அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டிருக்கும். நாவலாக வந்துவிட்டதால் இந்நாளைய தமிழர் மரபுக்கு இணங்க பெரும்பாலானோர் இதை வாசிக்கவே இல்லை. குடும்ப நாவல் இந்த மாதம் இதை வெளியிட்டதால் இதைப் படிக்க முடிந்தது. இது போக இன்னும் ஒரு நாவல் ஜெயலலிதா எழுதி இருக்கிறார் போல. அதையும் வாசிக்கவேண்டும். இந்த நாவலைப் படிக்கும்போது ஜெயலலிதாவை நினைத்து ஏனோ வருத்தமாக இருந்தது.
 
 
இன்று புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் தாமதமாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலைக் கையில் எடுத்தது தவறாகப் போய்விட்டது!
Jpeg

Jpeg

 
துக்ளக் சோவை இன்னும் மறக்கமுடியவில்லை. இவரது நினைவுக்காக அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலை இரண்டு நாளுக்கு முன்னர் வாங்கினேன். விலை ரூ 120. பொக்கிஷம் என்ற க்ளிஷேவை இதற்குச் சொல்லலாம். பொக்கிஷம். கருணாநிதி மற்றும் எம்ஜியாரைத் துவைத்து எடுத்திருக்கிறார். 71ல் ஈவெரா ராமரை செருப்பால் அடித்தது போன்ற போஸ்டரை வெளியிட்டதற்காக தடைசெய்யப்பட்ட துக்ளக் இதழ் மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களும்; 1985ல் பி.எச். பாண்டியன் சட்டசபையில் ரகுமான் கானிடம் ‘தன்மையாகப்’ பேசியதை துக்ளக் இதழில் வெளியிட்டு (என நினைக்கிறேன்) உரிமைப் பிரச்சினைக்கு ஆளான பிரச்சினை மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களையும் முழுமையாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். அதுவும் கிட்டத்தட்ட துக்ளக் வடிவமைப்பில். பல இடங்களில் சோவைப் பற்றிய நினைவுகள் என்னைக் கலங்கடித்துவிட்டன. என்னவெல்லாம் செய்திருக்கிறார். 15.7.85 அன்று சோ துக்ளக்கில் எழுதியிருக்கும் தலையங்கத்தில்தான் எத்தனை தெளிவு, என்ன துணிவு. வாய்ப்பே இல்லை. அதன் கடைசி வரி, “என்ன நடந்தாலும் சரி, ஆனது ஆகட்டும், நானும் பார்க்கிறேன்.”
 
சோவின் கடைசி காலங்களில் அவரது வேகம் மிகவும் மட்டுப்பட்டுவிட்டது என்பதையும் ஜெயலலிதாவை அவர் தீவிரமாக ஆதரித்தார் என்பதையும் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ இதழைப் படிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயலலிதா மீது வைக்கப்பட்டும் பல குற்றச்சாட்டுகளுக்குத் தொடக்கப்புள்ளி எம்ஜியார் என்பதை இப்புத்தகம் பின்னணியில் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நெடுஞ்செழியன், பி.எச். பாண்டியன் போன்றவர்களுக்கு எதிர்விதத்தில் நேர் செய்யும் விதமாக வருகிறார்கள் ‘வணிக ஒற்றுமை’ பத்திரிகை ஆசிரியர் பால்ராஜும், பாளை சண்முகமும்.
 
இந்நூலில் உள்ள ஒன்றரைப் பக்க நாளேடு ஓர் உச்சம். தலைவர்களின் தீபாவளி வாழ்த்து கற்பனை அதகளம். கடவுளைக் கற்பித்த்வன் முட்டாள், காட்டுமிராண்டி என்று ஈவெராவின் சிலைக்குக் கீழ் உள்ள வாசகங்களை ஒட்டிய பிரச்சினைக்கு பதில் கூறும் முகமாக எழுதப்பட்ட கட்டுரையில், சென்னை ஆர்ச் பிஷப் பூஜ்யர் ஸ்ரீ அருளப்பாவின் கருத்தைச் சரியாகச் சேர்த்திருப்பது அட்டகாசமான சோ-த்தனம். ஐ லவ் சோ. ஐ மிஸ் ஹிம். 🙁
Share