OTT தொலைக்காட்சித் தொடர்களுக்குத் தணிக்கை

அரவிந்தன் கண்ணையன் ஒரு பதிவு ஒன்றை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதாவது அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் சானல்களில் திரைப்படங்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்டிருந்ததை நான் பார்வேர்ட் செய்ததை ஒட்டிய பதிவு அது.

சிவசேனா கேட்டதற்காக அல்ல, நான் முன்பிருந்தே இதுபோன்ற படங்களுக்குத் தணிக்கை வேண்டும் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். நான் கேட்டதன் காரணம் மத ரீதியானது என்பது முதற் காரணம் அல்ல. முதன்மையான காரணங்கள், அந்தத் திரைப்படங்களில் வரும் வெளிப்படையான பாலுறவுக் காட்சிகளும் மிகக் கொடூரமான வன்முறைக் காட்சிகளும்தான். அதேசமயம் மதரீதியான விஷயங்களுக்கும் தணிக்கை இருப்பதற்கு நான் எதிர்ப்பும் அல்ல. அதுவும் கிறிஸ்தவ மாஃபியா கைகளில் சிக்கி இருக்கும் இது போன்ற தளங்களுக்கு இத்தகைய தணிக்கை இல்லாமல் இருப்பதுவே ஆபத்தானது.

உண்மையில் இன்றைய திரைப்படங்கள் தணிக்கைக்குப் பின்தான் வருகின்றன. ஆனால் அங்கே எந்த வகையிலும் இந்து மதம் பாதுகாக்கப்படவில்லை. இது ஒரு மிக வெளிப்படையான உண்மை. எனவே இது போன்ற சானல்களுக்குத் தணிக்கை என்று வந்துவிட்டால் அது பாசிசம் என்றாகி விடும் என்ற கருத்து அடிப்படையற்றது.

இன்று ஹிந்து மதத்திற்காக நான் பேசுவதாக நீங்கள் வைத்துக்கொண்டாலும் கூட (அது உண்மையே), நாளை அது எந்த ஒரு மதத்திற்கும் உதவத்தான் போகிறது. இது கூடத் தெரியாமல் நான் அதைச் சொல்லவில்லை. எங்கோ மற்ற மதங்களின் மதத் தலைவர் ஒருவரின் படம் எடுக்கப்பட்டதற்கு இங்கு சென்னையும் தமிழ்நாடும் அப்படிக் கொந்தளித்தது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் நாம் இதுபோன்ற திரைப்படங்களுக்குத் தணிக்கை அவசியமா என்பதைப் பார்க்க வேண்டும்.

திரைப்படங்களுக்கான தணிக்கை என்று ஒன்று இருக்கும்பொழுது இதுபோன்ற தளங்களுக்கான படங்களுக்குத் தணிக்கை தேவையில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தணிக்கை என்பதே ஒட்டுமொத்தமாக வேண்டாம் என்ற மிக முற்போக்கான சமூகத்தில் நாம் வாழவில்லை. எனக்கு அதில் நம்பிக்கையும் இல்லை. அதை நம்புபவர்கள் இந்த விவாதத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல. அரவிந்தன் கண்ணையன் அந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

அவரது பதிவில் கிழக்கு பதிப்பகம் என்று குறிப்பிட்டு, அந்தப் பதிப்பகத்தைக் குறிப்பிடக் காரணம், நாளை கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களுக்கும் தணிக்கை வேண்டுமா என்ற அறிவார்ந்த கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதற்கு இரண்டு பதில் சொல்ல வேண்டும். முதலாவது, புத்தகங்களும் திரைப்படங்களும் ஒன்றல்ல. அந்த இரண்டையும் ஒன்றாகவே கருதி, தணிக்கை இரண்டுக்கும் வேண்டும் என்று சொல்லும் அசட்டுத் துணிச்சல் எனக்கில்லை. உண்மையில் அரவிந்தன் கண்ணையனுக்கும் முடிந்து இருக்க முடியாது. ஆனால் ஹிந்து மதத்தை ஆதரிப்பவரை பாசிஸ்ட் என்று சொல்ல வேண்டும் என்ற அவரது பதற்றமே இதற்குக் காரணம். இரண்டாவதாக கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளரான பத்ரி சேஷாத்ரி இதுபோன்ற தளங்களுக்கு தணிக்கை என்பதற்கு முற்றிலும் எதிரானவர். ஆனால் இது ஒரு பொருட்டாக அரவிந்தன் கண்ணையனுக்குத் தெரியவில்லை. அதில் வேலை செய்யும் எனது கருத்தை வைத்துக்கொண்டு வேகவேகமாகக் கருத்தைச் சொல்வது அவருக்கு முதன்மை ஆகிறது. அதற்கும் காரணம் இந்து மதம்தான்.

ஹிந்து மதம் என்று வரும்பொழுது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பேசுவது என்பது ஒட்டுமொத்த முற்போக்காளர்களின் செயல்பாடாகவே இருக்கிறது. பொதுவாக இதை அடிப்படையாக வைத்து எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது முற்போக்காளர்கள் என்ற பெயரில் உலாவரும் கம்யூனிஸ்டுகள்தான். இன்று அது ஒரு பொதுவான போக்காகவே மாறிவிட்டிருக்கிறது. இந்து மதத்தை வம்படியாகத் திரைப்படங்கள் தாக்கும்போது இவர்கள் யாருமே வாயைத் திறக்க மாட்டார்கள். மாறாகப் பாராட்டுப் பத்திரம் வாசிப்பார்கள். ஆனால் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தணிக்கை வேண்டும் என இப்படி ஒரு அறிக்கை விடும்போது என்று வரும் பொழுது மிகச்சரியாக ஓடி வருவார்கள்.

அந்த எனது பதிவில் ஒரு கமெண்ட்டில் நானே தெளிவாகச் சொல்லி இருந்தேன், சிவசேனா என்பது புனிதம் அல்ல என்று. அதுவெல்லாம் இவர்களுக்கு முக்கியமே அல்ல. இவர்களது நோக்கம் இந்து மதத்தை ஆதரிக்கும் ஒருவரை பாசிஸ்ட் என்று அழைப்பதும் அவர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்தை இழுத்து அதற்குத் தணிக்கை வேண்டும் என்று கேட்பதும்தான். அது எந்த அளவுக்கு என்றால் திரைப்படங்களும் புத்தகங்களும் ஒன்று என்ற அளவிற்கு.

உண்மையில் இன்று புத்தகங்களுக்குத் தணிக்கை இல்லை என்பதனால் நீங்கள் எந்த ஒன்றையும் அச்சிட முடியாது. புத்தகம் வெளிவந்த மறுதினமே தடைசெய்யப்படும் அத்தனை சாத்தியங்களும் உள்ளது. மேலும் புத்தகம் வாசிப்பாளர்கள் மிகமிகக் குறைந்துவிட்ட தருணத்தில் இன்று புத்தகங்களையும் திரைப்படங்களையும் ஒன்றாக வைக்கமுடியாது. அதிலும் வீட்டுக்குள்ளே எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி வரும் இது போன்ற சேனல்களில் வரும் திரைப்படங்களை, சீரியல்களை ஒப்பிடவே முடியாது. ஆனால் அரவிந்தன் கண்ணையன் தைரியத்துடன் ஒப்பிட்டிருக்கிறார்.

அதே பதிவில் ஒரு அறிவுக்கொழுந்து என்னைப் பற்றி, 21 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடவேண்டும் என்று கூறியவர்தானே இவர் என்று கேட்டிருக்கிறார். நான் சொன்னது, உண்மைதான். ஆனால் அது யாருக்குச் சொன்னது என்பது முதலாவது விஷயம். கல்யாணத்தைக் காரணம் காட்டி, மதமாற்றத்தைக் காரணம் காட்டி, பெண்களுக்குப் பாலிய விவாகம் வேண்டும் என்று கூறுபவர்களிடம், தயவுசெய்து 21 வயது வரையிலாவது பொறுத்திருங்கள் என்ற தொனியில் எழுதப்பட்ட கட்டுரை. தன் மகள் மதம் மாற மாட்டார் என்ற நம்பிக்கை உள்ள இந்துக்களும் முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் 25 வயது 30 வயது வரையில் கூடக் காத்திருந்து அவர்களுக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்ளட்டும். அதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் தன் மகள் மதம் மாறக் கூடாது என்று நினைக்கும் ஒருவர், பால்ய விவாகம் என்ற கருத்தை நோக்கிச் செல்வது அபத்தமானது, அநியாயமானது, அராஜகமானது; அது கூடாது என்ற நோக்கில் குறைந்தபட்சம் 21 வயதில் திருமணம் செய்யுங்கள் என்று சொல்லியிருந்தேன். இன்று பெண்ணுக்குத் திருமண வயது 18. நான் 21 வயதில்தான் திருமணம் செய்யலாம் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்குக் கூட அல்ல, பெண்களுக்கு மட்டுமே, அதுவும் தவிர்க்கமுடியாத பட்சத்தில். ஆனால் அந்த அறிவுக்கொழுந்துக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒருவேளை தானும் தன் மகளும் எதிர்காலத்தில் எந்த மதத்தில் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்பவர்களுக்கும், தானே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அல்லது செய்துகொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கும் இது ஒரு பிரச்சனையே அல்ல என்று தோன்றலாம். அவர்களுக்கானது அல்ல இது.

இந்து மதத்தினரும், எந்த ஒரு மற்ற மதத்தினரும் கல்யாண ஆசை காட்டி சூறையாடப்பட்டு விடக்கூடாது என்பதற்கான பதில்தான் நான் எழுதி இருந்தது. ஆனால் இந்த அறிவுக்கொழுந்து அதையெல்லாம் படித்திருப்பாரா என்பது தெரியவில்லை. படித்தாலும் புரிந்திருக்குமா என்பது இரண்டாவது விஷயம். அல்லது எந்த ஒன்றையும் ஒரே வரியில் சொல்வது இன்றைய சமூக ஊடக ஜாதியைச் சேர்ந்த ஒரு விஷயம் ஆகிவிட்டதால் அவருக்கும் அந்த வியாதி தாக்கி இருக்கலாம். எனவே அந்த அறிவுக்கொழுந்துக்கு இனியும் பதில் சொல்வது தேவையற்றது.

ஆனால் அதில் நான் நம்பும் சிலர் கமெண்ட் போட்டிருந்தார்கள். அந்தப் பதிவை நான் எழுதியபோது இதற்கு ஒரு பதில் சொல்ல நினைத்தேன். இன்று அதே நண்பர்கள் மீண்டும் அதையே செய்யும்பொழுது இதைத் தெளிவாக்குவது என் கடமையாகிறது.

அவர்களை விடுங்கள். மீண்டும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். உங்களுடைய மகனோ மகளோ கல்யாணம் என்ற ஒன்றைக் காட்டி மதம் மாறக் கூடாது என்று நினைத்தால் அதுவும் அதை உங்களிடம் இருந்து தொடங்குங்கள். மதம் என்பதை திருமணத்தின் போது திடீரென ஒன்றாக நுழைத்தால் இதுதான் நிகழும். நீங்களே சரியாக இருந்தால் இந்தப் பிரச்சினை உங்களுக்கு ஒருவேளை வராது. அப்படியும் மீறி இந்த பிரச்சினை வரக்கூடாது என்று நினைத்தால், உங்கள் மகள் கல்யாணம் என்ற ஒன்றைக் கட்டி மதம் மாற்றப்படக் கூடிய அபாயம் இருந்தால், உண்மையில் 21 வயதில் திருமணம் செய்விப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சமயம் பால்ய விவாகத்தை ஆதரிக்கும் கட்டத்துக்குள் போய்விடாதீர்கள். இதுதான் அன்றும் இன்றும் என்றும் என் நிலைப்பாடு. இதில் வெட்கப்பட ஒன்றுமே இல்லை.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்லுவார் நேரு அல்ல பிரச்சினை நேருவியர்களே என்று. அந்த நேருவியர்கள் வெற்று காங்கிரஸ்காரர்களாக மாறிவிடும் அபாயமான சூழல் இன்று சூழ்ந்திருக்கிறது என்பதை உணருகிறேன்.

Share

Comments Closed