Archive for திரை

Death of a President – பரிபூரண சுதந்திரத்தின் உச்சம்

சோனியா காந்தி ஜூலை 2009ல் கொலை செய்யப்பட்டுவிட்டார். யார் எதற்காகக் கொன்றார்கள் என ஆராய்கிறது சிபிஐ. கொலை செய்தவர்கள் யாராக இருக்கும் என்று யோசிக்கும்போது, இலங்கைத் தமிழர்களின் பட்டியலை முதலில் பார்க்கத் தொடங்குகிறது சிபிஐ.

இப்படி ஒரு திரைப்படத்தை இந்தியாவில் யோசிக்கவாவது முடியுமா எனத் தெரியவில்லை.

ஓர் அதிபரின் மரணம் என்னும் ஆங்கிலத் திரைப்படம் இதனைச் சாதித்திருக்கிறது. இத்திரைப்படம் ஆவணப்பட உத்தியில் இயக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் புஷ் கொல்லப்பட்டுவிடுகிறார். அதனை விசாரிக்கும் எஃ பி ஐ, புஷ்ஷின் மெய்க்காப்பாளர்கள், அமைச்சர்கள், எஃபிஐ அதிகாரிகள், சந்தேகத்திற்கு உரிய கலவரக்காரர்கள் உள்ளிட்ட எல்லாரையும் விசாரிக்கிறது. அவர்கள் நடந்தவற்றை விவரிக்க விவரிக்க காட்சிகள் உருப்பெறுகின்றன. ஆவணப்படத் தன்மையில் இப்படம் இயக்கப்பட்டுள்ளது மிகப் பெரிய பலமாக அமைகிறது.

சிகாகோவில் வணிகர்களின் கூட்டத்தில் பங்கேற்க வரும் ஜார்ஜ் புஷ்ஷை எதிர்த்து பெரிய கூட்டம் மறியல் செய்கிறது. அதை மீறி புஷ் அக்கூட்டத்தில் சிறப்பாகப் பேசுகிறார். அக்கூட்டம் முடிந்ததும் சிகாகோ மக்களைப் பார்த்துப் பேசும் புஷ் சுடப்படுகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறக்கிறார். ஜார்ஜ் புஷ் பேசும் இடத்துக்கு எதிரே இருக்கும் பலமாடி உணவகத்திலிருந்தே யாரேனும் சுட்டிருக்கவேண்டும் என்று கருதும் எஃபிஐ, அங்கே பணிபுரியும் அலுவலர்களின் பட்டியலைப் பார்க்கிறது. அங்கிருக்கும் முஸ்லிம்களை முதலில் சந்தேகிக்கத் துவங்குகிறது. முதலில் சந்தேகத்துக்கு உள்ளாகும் ஒரு முஸ்லிம் தனது தரப்பைக் கூறுகிறார். அவரது சகோதரர் ஈராக்கில் போரில் இறந்ததுக்குக் காரணம் புஷ்தான் என்று அவரது தந்தை நம்புகிறார். புஷ் கொல்லப்பட்டதும், அவரது தந்தை தன் மகனுக்கு கடிதம் ஒன்றை எழுதிவிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். இன்னொரு முஸ்லிம்தான் கொலைகாரனாக இருக்கவேண்டும் என்று எஃபிஐ முடிவு செய்கிறது. கைரேகைத் தடங்கள் ஒத்துப் போவதாலும், அவர் ஆஃப்கானிஸ்தான் சென்றிருப்பதாலும் அவர்தான் கொலையாளியாக இருக்கமுடியும் என்று முடிவெடுக்கிறது எஃபிஐ.

யாரையேனும் கொலையாளி என்று முடிவு கட்டவேண்டிய அழுத்தம் எஃபிஐக்கு. அவர் முஸ்லிமாகவும், ஆஃப்கானிஸ்தானுக்குச் சென்றவராகவும் இருந்தால், அவரை அல்க்வைதாவுடன் எளிதில் தொடர்புபடுத்திவிட முடியும் என்று நினைக்கிறது எஃபிஐ. 11 ஜூரிகள் அடங்கிய சபை இவரையே குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கிறது. அவர் இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவெடுக்கிறார். இவரது மேல்முறையீட்டை இழுத்தடிக்கிறது எஃபிஐ. குற்றவாளியின் வழக்கறிஞர் இந்த இழுத்தடிப்பைக் கேள்வி கேட்கிறார். விசாரணை தொடர்கிறது என முடிகிறது திரைப்படம்.

எது உண்மை, எது கற்பனை என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு, படம் முழுதும் விரவிக் கிடக்கும் ஆவணப்படத் தன்மை நம்மை ஆச்சரியப் படுத்துகிறது. உண்மையில் ஜார்ஜ் புஷ் இப்போது உயிரோடு இருக்கிறாரா அல்லது உண்மையில் கொன்றுதான்விட்டார்களா என்று ஒரு நிமிடம் நம்மை யோசிக்க வைத்துவிடுகிறது திரைப்படத்தின் கச்சிதமான ஆக்கம்.

குற்றவாளி யாராக இருக்கலாம் என்னும்போது முதலில் முஸ்லிம்களின் பட்டியலைத்தான் பார்த்தோம் என்கிறது எஃபிஐ. இது ஒரு இனத்துக்கு எதிரான நடவடிக்கை என்று பார்க்கவேண்டாம், அந்த நேரத்தில் அங்கே இருந்துதான் தொடங்கமுடியும் என்கிறார் அவர். இதைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், ஒரு முஸ்லிமை, இத்தனை பெரிய கொலைக்கு வெறும் கைரேகையை மட்டுமே வைத்து பொறுப்பாக்க முனைவது, அமெரிக்காவின் மனத்தின் அடியில் உறைந்துகிடக்கும் அல்க்வைதா பயத்தை படம்பிடித்துக் காட்டுகிறது. கைரேகை நிபுணர் ஒருவர் சொல்கிறார், கொலை செய்தவனின் கைரேகை பொதுவாகத் துப்பாக்கியில் கிடைக்காது; நீங்கள் பார்க்கும் திரைப்படங்களில்தான் இப்படிக் காண்பிப்பார்கள், ஆனால் உண்மை அதுவல்ல என்று. இதையும் சேர்த்துக்கொண்டு பார்த்தால் எஃபிஐயின் அவசரத்தையே இயக்குநர் (Gabriel Range) காண்பிக்க நினைத்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இயக்குநர் சொல்ல வருவது, அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தேவையான, கடுமையாக்கப்படவேண்டிய சட்டங்களைப் பற்றி. அந்த நோக்கில் அவர் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

குற்றவாளி என்று அறியப்படும் முஸ்லிமின் மனைவியும் விசாரணையில் தன் கருத்தைச் சொல்கிறார். ஆஃப்கானிஸ்தானில் அல்க்வைதா அணியில் தன் கணவர் பலவந்தமாகச் சேர்க்கப்பட்டார் என்றும், உடல்நிலை சரியில்லை என்று அவர் நடித்ததால் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்றும், இதனை யாரிடமும் சொல்லவேண்டாம், பாகிஸ்தான் சென்றதாக மட்டும் சொன்னால் போதும் என்று அவர் சொன்னதாகவும் இவர் சொல்கிறார். உண்மையான ஒரு விசாரணையில் ஏற்படும் குழப்பத்தை திரையில் கொண்டுவருவதில் இக்காட்சியில் பூரணத்துவத்தை எட்டியிருக்கிறார் இயக்குநர். இதைப் பார்க்கும் ஒருவர் குற்றவாளி உண்மையில் யார் என்னும் குழப்பத்தோடே திரைப்படம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

இத்திரைப்படத்தின் வழியாக நாம் காண்பது அமெரிக்கா தரும் சுதந்திரத்தை. முதலில் இது போன்ற ஒரு படத்தை எடுத்தது, இரண்டாவதாக குற்றவாளி என்று சொல்லப்படும் முஸ்லிமுக்கு ஆதரவாகப் பேசும் வழக்கறிஞரின் கேள்விகள், அடுத்ததாக புஷ்ஷுக்கு எதிராகக் காட்டப்படும் கலவரக்காரர்களின் மறியல்களும் கூச்சல்களும். எல்லாவற்றிலும் சுதந்திரம். இதையே இத்திரைப்படம் நமக்கு முகத்தில் அடித்தாற்போல் காண்பிக்கிறது. இந்தியாவில் இது சாத்தியமாகுமா என்ற ஏக்கத்தை உருவாக்கிவிடுகிறது திரைப்படம்.

ஒரு தலைவரின் கொலையை விசாரிப்பது என்பது நாம் கதை போலச் சொல்லப் பிறர் அதனை அப்படியே புரிந்துகொள்வது அல்ல. நாம் எதிர்பார்க்காத திசைகளிலெல்லாம் பயணிக்கும் காற்றைப் போன்றது அது. ராஜிவ் காந்தி கொலை வழக்கின் சிறப்பு அதிகாரியாக இருந்த ரஹோத்தமனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது, ஒரு வழக்கின் பல்வேறு புதிர்கள் எப்படி விடுவிக்கப்படுகின்றன என்றும், விடுவிக்கப்பட்ட அதே புதிர்கள் எப்படி மீண்டும் சிக்கலாகிக்கொள்கின்றன என்றும் ஒரு சேரப் பார்க்கமுடிந்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கு பற்றிய சிடி ஒன்றையும் ரஹோத்தமன் வெளியிட்டிருக்கிறார். அதைப் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன்.

நேரில் காண்பது என்னவோ ஒரு குண்டு வெடிப்பு அல்லது தோட்டா. அதற்குப் பின்னர் சிதறிக் கிடக்கும் பல்வேறு செய்திகளை அள்ளிக் கூடையில் போடும் காவல்துறையின் ஒரு பரிமாணத்தை வெற்றிகரமாகத் திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர்.

Share

ஈரம், ஸ்பிரிட் திரைப்படங்கள்

மெண்ட்டல் ப்ளாக் பற்றி எழுதும்போதே சொல்லியிருக்கவேண்டும்.

வார்த்தை இதழில் ஆலோசனைக் குழுவில் இருந்தபோது, பிரசுரிக்கச் சொல்லி கவிதைகள் வரும். அஞ்சல் அட்டையில் அனுப்பவேண்டாம் என்று வார்த்தை இதழில் தெளிவாகத் தெரிவித்த பின்பும் அனுப்புவார்கள். அஞ்சலட்டையில் வந்த மறக்கமுடியாத கவிதை:

“அன்பே
என் உடலைத்தான்
உனக்குத் தரமுடியும்
ஏனென்றால்
என் உயிர்
இந்தியாவுக்கு.”

என்ன ஒரு இந்தியன்!

-oOo-

ஈரம் படம் பார்த்தேன். ஷங்கர் தயாரிப்பில் வந்த நல்ல மொக்கைப் படம் இதுதான். ஆரம்பத்தில் நன்றாக ஆரம்பித்த திரைப்படம், ஆவி, பேய் என்று நுழைந்து கழுத்தை அறுத்துவிட்டது. நல்ல மேக்கிங் இருந்தாலே எந்த ஒரு கதையையும் பார்க்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஷங்கருக்கு இடி விழுந்திருக்கும்.

நல்ல துப்பறியும் படம் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கிய எனக்கு ஆவி அது இது என்றெல்லாம் படம் அலையத் தொடங்கியது முதல் எரிச்சல் என்றால், அதிலும் ஒரு புதுமையில்லாமல் பழைய ‘13ம் நம்பர் வீடு’ ரேஞ்சுக்கு, கார் தானாக ஓடுவதும், நீரில் விழுந்து சாவதும், திடீரென ஒரு குழந்தை பேய் போல வேஷம் போட்டு அதிரும் பின்னணி இசையில் பயமுறுத்துவதும் என ஒரே இம்சை. படம் முழுக்க எங்கேயாவது தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. தியேட்டரிலும் சொட் சொட் எனச் சொட்டியிருக்கும், அதன் பெயர் கண்ணீர்! முடியல.

நான் எங்க வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வந்துடுவேன் என்று ரஜினி ரேஞ்சுக்கு எல்லார்க்குள்ளும் பேய் வருவதுதான் ஹைலைட். அதிலும் தன்னைக் கொன்ற கணவனுக்குள்ளேயே பேய் வந்து அவனை மாட்டிவிடுவது மிகப்பெரிய டிவிஸ்ட் என்று இயக்குநர் கருதியிருக்கவேண்டும். பாவம்.

மேலே உள்ள வீடியோவில் பேயே சாட்சி சொல்லும் காட்சியையும், எஸ்.வி.சேகர் நாடகம் போல ஹீரோ படத்தின் பெயரைக் கடைசியில் சொல்லும் காட்சிகளையும் கண்டு ‘ரசிக்கலாம்.’

படம் ஊத்திக்கொண்டதும் அந்தப் பேய் ஷங்கருக்குள் இறங்கியிருக்கும். இயக்குநர் அறிவழகன் ரிச்நெஸ் முகமூடி போட்டு ஏமாற்றப் பார்த்திருக்கிறார். 🙂

இந்தப் படத்தை நிச்சயம் பாருங்க சார் என்று சொன்ன அந்தப் பையனைத் தேடிக்கொண்டிருக்கிறேன். எங்கள் அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறான்.

-oOo-

SPIRIT என்று ஒரு திரைப்படம் பார்த்தேன். அனிமேஷன் திரைப்படம். குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்வது தவறு. ஒரு ரஜினி படத்தை ரசிப்பது போல இந்தப் படத்தை நான் ரசித்தேன். ‘நீயே குழந்தை மாதிரிதான்’ என்று என்னை நினைப்பவர்கள் இது குழந்தைகளுக்கான அனிமேஷன் என்று சொல்லிக்கொள்ளலாம். 🙂

ஒரு குதிரை பிறக்கிறது. சுட்டியாய் வளர்கிறது. எதிலும் வேகம், ஆர்வம், விவேகம். கழுகைவிட விரைவாக ஓடுகிறது. குதிரைக் குட்டிகளை வேட்டையாட வரும் சிங்கத்தை ஓட ஓட விரட்டுகிறது. வேட்டைக்காரர்கள் இதனை சிறைப் பிடிக்கிறார்கள். ஆனால் அவர்களால் இக்குதிரையை அடக்கமுடியவில்லை. என்னென்னவோ செய்கிறார்கள். அவர்களை வீழ்த்திவிட்டு, அவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் காட்டுவாசியுடன், அங்கிருக்கு மற்ற குதிரைகளையும் விடுவித்துவிட்டு ஓடுகிறது. அந்தக் காட்டுவாசி தன்னைக் காப்பாற்றிய குதிரையையே சிறைப்பிடிக்கிறான்! அவனிடம், நம் ஹீரோ குதிரையை ஒத்த, அதே வேகம் விவேகம் உள்ள ஒரு பெண் குதிரை உள்ளது. பிறகென்ன காதல்தான்.

ஹீரோ குதிரை காட்டுவாசியைப் புரிந்துகொள்கிறது. அவனுடன் நட்பாகிறது. குதிரையைத் தேடி வரும் வேட்டைக்காரர்களிடமிருந்து காட்டுவாசியைக் காப்பாற்றுகிறது பெண் குதிரை. காப்பாற்றும்போது ஓடும் வெள்ளத்தில் விழ, அந்தப் பெண் குதிரையைக் காப்பாற்றுகிறது ஹீரோ குதிரை. ஆனால் மீண்டும் வேட்டைக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது.பின்னர் எப்படி காட்டுவாசியைக் காப்பாற்றி, பெண் குதிரையோடு தன் வீட்டுக்குத் திரும்புகிறது என்பது கதை.

குதிரையின் ஸ்டைல் பற்றிச் சொல்லவேண்டும். முன் பக்கம் பறக்கும் தலைமயிரும், பிடரி மயிரும் அக்குதிரைக்கு ஒரு பிரத்யேகமான அழகைத் தந்துவிடுகிறது.

இந்தப் படத்தில் குதிரைக்குப் பதிலாக ரஜினி நடித்தால் (அனிமேஷனில் அல்ல!) இது ஒரு கச்சிதமான ரஜினி திரைப்படமாக மாறிவிடும். இதனால்தான் ரஜினி படத்தை குழந்தைகள் அப்படி விழுந்து விழுந்து பார்க்கிறார்கள் போல.

ஒரு ஆள் எப்படி நூறு பேரை அடித்து வீழ்த்தமுடியும் என்ற லாஜிக்கை மறந்துவிட்டு சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் ஸ்பிரிட் படத்தைப் பார்க்கமுடியும் என்பதால், அவர் நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதோடு இன்னொரு வேண்டுகோள். எந்திரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. எந்த ஒரு ரஜினி திரைப்படம் வந்தாலும் அதனை நாலு திட்டு திட்டி எழுதுவார் சுரேஷ் கண்ணன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிடும். ஆனால் எந்திரன் திரைப்படத்தை இதுவரை அவர் திட்டாமல் இருப்பது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் மனமறிந்து உடனே அவர் எந்திரனைத் திட்டி ஒரு பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

Share

Turtles Can Fly – ஈரானியத் திரைப்படம்

இந்தக் கட்டுரையை தமிழ்ஹிந்து.காமில் வாசிக்கலாம்.

Share

நான் கடவுள் – காவியும் காசியும்

படிக்க: http://idlyvadai.blogspot.com/2009/02/blog-post_1704.html

Share

கரம் ஹவா – கற்பிதங்களும் யதார்த்தமும்

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவிலேயே தங்கும் ஒரு இஸ்லாமியக் குடும்பம் நேர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய திரைப்படம். 1973ல் இயக்கப்பட்ட இத்திரைப்படம் இந்திய மாற்றுத் திரைப்படங்களின் முன்னோடிகளுள் ஒன்று. சிறந்த இசை, சிறந்த நடிப்பு இவற்றோடு மிக முக்கியமான பிரச்சினையை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இந்திய பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து பொருட்படுத்தத்தக்க வகையில் எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படமும் இதுதான் எனத் தெரிகிறது.

சலீம் மிர்ஸா என்னும் காலணி உற்பத்தியாளரின் வாழ்க்கையை மையமாக வைத்து நகர்கிறது. கதை. பிரிவினைக்குப் பின் சலீம் மிர்ஸாவின் உறவினர்கள் பெரும்பாலானோர் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்துவிட, சலீம் மிர்ஸா இந்தியாவிலேயே தங்குகிறார். எந்த முஸ்லிமும் எப்போதுவேண்டுமானாலும் பாகிஸ்தான் சென்றுவிடலாம் என்கிற எண்ணம் நிலவுவதால், யாரும் சலீம் மிர்ஸாவிற்கு கடன் தர மறுக்கிறார்கள். வங்கியில் கடன் வாங்கும் பல முஸ்லிம்கள் கடனை அடைக்காமல் பாகிஸ்தான் சென்றுவிடுவதால் வங்கிகளும் சலீம் மிர்ஸாவிற்குக் கடன் தர மறுக்கின்றன.

சலீம் மிர்ஸாவின் தம்பி பாகிஸ்தானுக்குச் சென்றுவிடுவது ஊரில் தெரிந்துவிடுவதால், சலீம் மிர்ஸா தங்கியிருக்கும் அவரது தம்பியின் வீட்டிற்கும் பிரச்சினை வருகிறது. வேறு வழியின்றி வாடகை வீட்டிற்கு இடம்பெயர்கிறார்கள்.

சலீம் மிர்ஸாவின் மகளின் காதலன் குடும்பமும் பாகிஸ்தானுக்கு இடம்பெயர்கிறது. அவன் வந்து அவளை மணம் முடிப்பது இயலாமல் போகும் நிலையில், அவள் தன் அத்தை மகனையே காதலிக்கிறாள். அவனும் பாகிஸ்தான் சென்றுவிடுகிறான். அவனுக்கு அங்கேயே வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஏற்கெனவே அவனோடு உடலுறவு ஏற்பட்டுவிட்ட நிலையில், அவனை மறக்கமுடியாமல், தற்கொலை செய்துகொள்கிறாள் அமினா.

சலீம் மிர்ஸாவின் மூத்த மகன் இனியும் இந்தியாவில் இருந்தால் வேலைக்காகாது என்று பாகிஸ்தான் செல்கிறான். தனது தம்பியையும் அங்கு வருமாறு வற்புறுத்துகிறான்.

சலீம் மிர்ஸாவின் இரண்டாவது மகன் நன்கு படித்தும் வேலை கிடைக்காமல் அலைகிறான். அவனும் அவனையொத்த நண்பர்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் சாய்கிறார்கள்.

சலீம் மிர்ஸா தன் தம்பியிடமிருந்து வீட்டை வாங்க, தன் வீட்டின் நகலை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார். அது பிரச்சினையாகி அவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்க்கிறார் என்று கைது செய்யப்படுகிறார். அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுதலை செய்தாலும் மக்கள் அவரை பாகிஸ்தான் உளவாளியாகப் பார்க்கிறார்கள். (இந்த ஒரு காட்சி மட்டுமே கொஞ்சம் நாடகத்தன்மையுடன் அமைக்கப்பட்டுவிட்டது. அவர் நடந்து வரும்போது, தெருவில் நிற்பவர்கள் எல்லாம் அவரைப் பார்த்து ‘பாகிஸ்தான் உளவாளி பாகிஸ்தான் உளவாளி’ என்று சொல்கிறார்கள்!)

சலீம் மிர்ஸா வரும் குதிரைவண்டி தெரியாமல் ஹிந்துக்கள் குடியிருப்பில் இருக்கும் ஹிந்துகள் மீது மோதிவிட, பிரச்சினை வெடித்து மதக்கலவரம் ஆகிறது. சலீம் மிர்ஸாவின் காலணி உற்பத்திக்கூடம் தீ வைக்கப்படுகிறது.

மனம் வெறுக்கும் சலீம் மிர்ஸா தன் மனைவி மகனோடு பாகிஸ்தான் செல்ல முடிவெடுக்கிறார். வீட்டைக் காலி செய்துகொண்டு வரும் வழியில் பெரும் ஊர்வலம் போகிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் சேர்ந்து செல்லும் ஊர்வலம் அது. அனைவருக்கும் வேலை கேட்டு நடக்கும் ஊர்வலம். மகன் அந்த ஊர்வலத்தில் பங்குகொள்ள அனுமதி கேட்டு தந்தையைப் பார்க்கிறான். தன் மகனின் உலகம் இந்த ஊர்வலத்தில், இந்தப் போராட்டத்தில் இங்கேதான் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் சலீம் மிர்ஸா, அவனைத் தடுப்பதில்லை. அதுமட்டுமன்றி, தனது உலகமும் இங்கேதான் இருக்கிறது என்று புரிந்துகொண்டு, பாகிஸ்தான் செல்லும் திட்டத்தைக் கைவிட்டு அப்போராட்டத்தில் இணைகிறார்.

1973ல் எடுக்கப்பட்ட திரைப்படம் மிக யதார்த்தமாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. சலீம் மிர்ஸாவாக வரும் நடிகர் Balraj Sahni இன் நடிப்பு மிக உணர்வுபூர்வமானது. தனது மனதின் சலனங்களை முகத்திலேயே காண்பித்துவிடுகிறார். Ismat Chughtai இன் கதையை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை இது. மூலக் கதையில் பிரிவினைக்குப் பின் கைவிடப்படும் ஸ்டேஷன் மாஸ்டர், திரைக்கதையில் காலணி தயாரிப்பவராக மாற்றப்பட்டிருக்கிறார். முதலில் இத்திரைப்படத்தை இயக்க ஒத்துக்கொள்ளும் ஒரு தயாரிப்பாளர், இப்படம் வெளிவருவதில் சிக்கல்கள் வரலாம் என்று நினைத்து ஒதுங்கிக் கொள்கிறார். என் எஃப் டி சி (அப்போது எஃ எஃ சி) உதவியுடன் இத்திரைப்படம் எடுக்கப்படுகிறது. இத்திரைப்படம் எடுக்க சில பிரச்சினைகள் வந்தபோது, சில இடங்களில் இத்திரைப்படம் எடுக்கப்படுவதுபோல செட் அப் செய்துவிட்டு, யாருக்கும் தெரியாத இடங்களில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தங்கும் ஒரு முஸ்லிம் குடும்பம் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. தான் காதலிக்கும் காதலன் காஸிமை பிரியவேண்டி நேர்கிறது அமினாவிற்கு. (சலீம் மிர்ஸாவின் மகள்.) அவன் அவளைத் தேடி பாகிஸ்தானிலிருந்து ஓடி வருகிறான். ஆனால் போலிஸால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்திய எல்லைக்குக் கடத்தப்படுகிறான். அவன் பாகிஸ்தானிலிருந்து திரும்பி வந்ததும், மாடிப்படிகளில் எதிரெதிரே அவனும் அவளும் சந்தித்துக்கொள்ளும் காட்சியை ஒரு கவிதை எனலாம். இக்காதல் நிறைவேறாது என்பதைப் புரிந்துகொள்ளும் அமினா, தன்னையே சுற்றி வரும் தன் அத்தை மகனின் காதலை ஏற்கிறாள். பதேபூர் சிக்ரி, தாஜ்மகால் என சுற்றுகிறார்கள். முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். உடலுறவு ஏற்படுகிறது. அவனும் பாகிஸ்தான் செல்கிறான். இக்காதலும் தோல்வி அடைவதைத் தாங்கமுடியாத அமினா தற்கொலை செய்துகொள்கிறாள். அமினாவின் இரண்டாவது காதல் தொடங்கும் இடமும் கவிதை என்றே சொல்லவேண்டும். பதேபூர் சிக்ரியில் அவர்களுக்கு இடையில் உருவாகும் காதல் மிக அழகாகப் படமாக்கப்பட்டுள்ளது. அப்போது ஒலிக்கும் பாடல் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அமினா தன் பழைய காதலின் கடிதத்தைக் கிழிக்கவும் அப்பாடல் நிற்கவும் என, மிக நேர்த்தியான காட்சிகளை இயக்கியிருக்கிறார் இயக்குநர். (M. S. Sathyu.) அமினா இரண்டாவது காதல் கொண்டதும், தன் பழைய காதலினின் கடிதங்களைக் கிழிப்பதற்கு முன்பு அதைப் படிக்கிறாள். அப்போது அவள் முகத்தில் தோன்றும் உணர்வுகள் அசாதாரணமானவை. தன்னை விட்டுவிட்டு, பாகிஸ்தானில் ஒரு அமைச்சரின் மகளைத் திருமணம் செய்துகொண்டுவிட்ட காதலனின் மறக்கமுடியாத முகமும், அவனது ஆசை மொழிகளும், அவன் மீதான வன்மமும் என பல உணர்வுகளை ஒருங்கே வெளிப்படுத்துகிறது அமினாவின் முகம்.

படத்தின் தொடக்கக் காட்சிகள் மிக முக்கியமானவை. தன் உறவினர் ஒருவரை பாகிஸ்தானுக்கு வழியனுப்பிவிட்டு வருகிறார் சலீம் மிர்ஸா. வண்டியில் திரும்பிச் செல்லும்போது வண்டி ஓட்டுபவன் சொல்கிறான், ‘இந்நாட்டில் நாய் கூட வாழாது’ என்று. அவனுக்குள் பாகிஸ்தான் பற்றிய கனவு முட்டிக் கிடக்கிறது. இப்படத்தில் பாகிஸ்தான் ஒரு கனவு தேசமாகவே காட்டப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானுக்குச் செல்லும் யாரும் அங்கே தோல்வியடைவதில்லை. அங்கிருந்து பாகிஸ்தானின் வளங்களைப் பட்டியலிட்டு கடிதம் அனுப்புகிறார்கள். அங்கே செல்லும் அரசியல்வாதியும் செல்லுபடியாகிறார். இதைக் காணும் கேட்கும் இந்தியாவில் தங்கிவிட்ட முஸ்லிம்களுக்குள் பாகிஸ்தான் என்னும் கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் ஸ்தாபிக்கப்படுகின்றன. இதனை மிக அழகாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர். இவற்றை வைத்தே அத்தலைமுறையின் இந்தியாவில் தங்கும் முஸ்லிம்களின் மனநிலையைப் படம் பிடிக்கிறார். அடுத்த தலைமுறையைக் கொண்டு அவர் உருவாக்கிய கனவு தேசம் பற்றிய கற்பிதங்களை உடைக்கிறார். சலீம் மிர்ஸாவின் மகன் இந்தியாவே தன் தேசம் என்பதைக் கண்டடைகிறான். எங்கேயும் எப்போதும் எதற்கும் சவால்களும் பிரச்சினைகளும் உண்டு என்றும் அதை எதிர்ப்பதும் வெல்வதுமே வாழ்க்கை என்பதை உணருகிறான். அதற்கான விடை நாடுவிட்டுப் போவதில் இல்லை என்பதில் முடிவாக இருக்கிறான். இதே எண்ணம் சலீம் மிர்ஸாவிற்குள் ஆரம்பித்தில் இருந்தே இருந்தாலும், கனவு தேசம் பற்றிய கற்பிதங்கள் அவரை சலனப்பட வைக்கின்றன. அவர் மயங்குகிறார். பாகிஸ்தான் என்பது எல்லா முஸ்லிம்களுக்கான தேசம் என்றும் அது எப்போதும் எல்லா முஸ்லிம்களையும் அரவணைக்கக் காத்திருக்கிறது என்பதுமான அபத்தமான கற்பனைகளை தன் மகனைக் கொண்டு கடக்கிறார் சலீம் மிர்ஸா.

இன்னொரு முக்கியமான திரைமாந்தர் காஸிம்மின் அப்பா. அவர் முஸ்லிம் லீக்கின் பிரதிநிதி. முகமது அலி ஜின்னா உள்ளிட்டவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே தலைவர் தான் மட்டுமே என்கிற எண்ணம் அவருக்குத் தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் முஸ்லிம்களின் நிலைமைக்காகப் போராடும் ஒரே தலைவர் தாந்தான் என்று பிரகடனப்படுத்திக்கொள்கிறார். இந்தியாவில் இருக்கும் அத்தனை முஸ்லிமும் பாகிஸ்தானுக்குப் போய்விட்டாலும், இங்கே ஒரேயொரு முஸ்லிமின் மூச்சு மட்டும் கடைசி வரை இருக்கும், அது தனது மூச்சுதான் என்கிறார். ஏனென்றால் இந்தியாவே தனது நாடு என்று முழங்குகிறார். அடுத்த நாளே பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். அங்கிருந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு இந்தியா வரும் ஹிந்து, முஸ்லிம்களின் நிலபுலன்கள், தொழிற்சாலைகளைப் பயன்படுத்தி பணக்காரராகிவிடலாம் என்று பாகிஸ்தானுக்குப் போய்விடுகிறார். இவரது சந்தர்ப்பவாதமே காஸிம்மின் அமினாவுடனான காதலையும் உடைக்கிறது.

இன்னொரு முக்கியமான பாத்திரம் சலீம் மிர்ஸாவின் தாய். ஏன் தனது பிறந்த வீட்டை தான் காலி செய்யவேண்டும் என்று புரியாமல் தவிக்கிறாள். வீட்டைக் காலி செய்ய மறுத்து அவள் யாருக்கும் தெரியாமல் ஓரிடத்தில் ஒளிந்துகொள்கிறாள். அவளை வம்படியாகத் தூக்கிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. தான் சாகுமபோது தான் வாழ்ந்த வீட்டிலேயே சாக ஆசைப்படுகிறாள். அவளது மரணம் அவள் நினைத்த மாதிரியே அவள் வாழ்ந்த, திருமணம் ஆகிவந்த அவளது பழைய வீட்டிலேயே நேர்கிறது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையையோ, இந்து முஸ்லிம் பிரச்சினையையோ அவளால் கடைசிவரை புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

கடைசியில் சலீம் மிர்ஸா போராட்டத்தில் அமைதியாகக் கலந்துகொண்டு செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பிரச்சினைகளின் இன்னொரு காரணம், அவர் இந்திய நீரோட்டத்தில் கலக்காமல் இருந்ததே என்கிற ஒரு எண்ணம் பார்வையாளர்களுக்கு ஏற்படும் வண்ணம், அவர் மெல்ல அமைதியாக போராட்டத்தில் கலந்துகொண்டு நடந்து செல்கிறார். இத்தனை நாள் அவருக்கிருந்த பாகிஸ்தான் செல்வது பற்றிய மனமயக்கங்கள் தீர்கின்றன. எங்கும் எல்லா இடத்தில் போராட்டம் நிச்சயம் என்பதை அவருக்குப் புரிய வைக்கிறான் அவரது மகன். மகனுக்கு இந்தியாவைத் தவிர வேறு எந்த ஒரு நாட்டையும் தாய் நாடாக நினைக்கமுடிவதில்லை. அவனது நண்பர்கள் அவனிடம் சொல்கிறார்கள், ‘உனக்கு இந்தியாவில வேலை கிடைக்கலைன்னா பாகிஸ்தான்ல வேலை தேடலாம். நாங்க எங்கே போவோம்’ என்று. அவன் வேலை கேட்டுச் செல்லும் இடங்களிலெல்லாம் அவன் பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறான். அத்தனையையும் மீறி, அவன் தன் வாழ்க்கையை இந்தியாவிலேயே கண்டடைகிறான்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னான இந்திய முஸ்லிம்களின் மனநிலையையும், பாகிஸ்தான் பற்றிய கற்பிதங்களையும், அதை உடைக்கும் அடுத்த தலைமுறையினரையும் பற்றிய முக்கியமான திரைப்படம்.

Share

Spirited Away

2001ல் வெளியான அனிமேஷன் திரைப்படம். இயக்குநர்: Hayao Miyazaki

புதிய நகருக்குக் குடிபெயர்கிறார்கள் Chihiroம் அவளது பெற்றோரும். குறுக்கு வழியில் செல்லும்போது தன் வழியை இழக்கும் Chihiroன் பெற்றோர்கள் ஒரு பாழடைந்த தீம் பார்க் போன்ற ஓரிடத்தை அடைகிறார்கள். ஆரம்பம் முதலே அவ்விடத்திற்குச் செல்லவேண்டாம் எனச் சொல்லும் Chihiro வின் பேச்சைக் கேட்காமல் அங்கே செல்கிறார்கள் அவளது பெற்றோர். அங்கு பல உணவிடங்கள் இருக்கின்றன. ஆனால் யாரையும் காணவில்லை. ஒரு உணவிடத்தில் சுடச்சுட உணவு தயாராகக் கிடக்க அந்த உணவை உண்ணத் தொடங்குகிறார்கள். Chihiro உண்ண மறுத்து, அவ்விடத்தை விட்டு விலகி வேறு இடத்திற்குச் சென்று பார்க்கிறாள். அங்கே ஒரு பாய்லர் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது அங்கே Haku என்னும் சிறுவன் வந்து, விளக்கேற்றுமுன் அவளை உடனே அங்கிருந்து ஓடச் சொல்கிறான். பகல் மறைய விளக்குகள் ஒளிரத் தொடங்குகின்றன. காரணம் புரியாது Chihiro தன் பெற்றோரைத் தேடி உணவகத்திற்கு ஓடுகிறாள். அவர்கள் அங்கே பன்றிகளாக உருமாறியிருக்கிறார்கள். அதுவரை அங்கே யாருமில்லாமல் இருந்த இடங்களிலும், உணவகங்களிலும் ஆவிகள் உலவுகின்றன. Chihiro என்ன செய்வது எனத் தெரியாமல் பயந்து நடுங்குகிறாள். அவளது உடலும் மறையத் தொடங்குகிறது. மீண்டும் Haku அவளுக்கு உதவுகிறான். உண்ண ஒரு உருண்டையைக் கொடுத்து அவளின் உருவத்தை மீண்டும் கொண்டுவருகிறான். மனிதர்களுக்கு அங்கே இடமில்லை என்றும், அதை மீறி மனிதன் அங்கே தங்கவேண்டுமானால் அவ்விடத்தின் சூனியக்காரியான Yubaba விடம் அவ்விடத்தில் வேலைக்குச் சேரவேண்டும் என்றும் சொல்கிறான். தான் அவளுக்கு நண்பன் என்றும் சொல்கிறான்.

Yubaba நடத்தும் ஆவிகளுக்கான குளியளிடத்தில் வேலை கேட்கிறாள். முதலில் தர மறுக்கும் Yubaba கடைசியில் அவளுக்கு வேலை தருகிறாள். அதற்கு பதிலாக Chihiroவின் பெயரை வாங்கிக்கொள்கிறாள். அவளுக்கு சென் என்கிற பெயரைத் தருகிறாள். இனி Chihiroவின் பெயர் சென் என்பதுதான். பின்பு அவளைச் சந்திக்கும் Haku, இப்படி பெயரை மறக்கடிப்பதன் மூலமே தங்கள் பழைய விஷயங்களை மறக்கச் செய்கிறாள் Yubaba என்கிறான். தானும் அப்படி பெயர் ம்றந்தவனே என்றும் சொல்லிவிட்டு, சென் தன் உண்மையான பெயரான Chihiroவை மறக்கக்கூடாது என்று சொல்லி அதை எழுதிக்கொடுத்துவிட்டு, டிராகனாக மாறிப் பறந்துபோகிறான்.

அங்கே வேலை செய்தபடியே எப்படி தங்கள் பெற்றோரை மீட்கிறாள் என்பதே மீதிக்கதை.

ஆவிகள் குளியலறைக்குக் குளிக்கவரும் முகமற்ற, துர்நாற்றம் பீடித்த ஆவியொன்றிற்கு சென் குளிக்க உதவுகிறாள். அது மகிழ்ந்து அவளுக்கு ஓர் உருண்டையைத் தருகிறது. அதைத் தின்றால் தங்கள் பெற்றோர்கள் உருவம் பெறுவார்கள் என நம்புகிறாள். இரக்க மனம் படைத்த சென் அதை தன் பெற்றோருக்குத் தருவதற்கு முன்பாகவே, Haku டிராகனுக்கும் உடலற்ற இன்னொரு ஆவிக்கும் தந்து உதவுகிறாள். Haku டிராகனைத் துரத்தி வரும் பேப்பர் பறவையான சூனியக்காரியின் தங்கையான இன்னொரு சூனியக்காரி Zeniba, தன் அக்காவின் இராட்சத மகனையும், தன் அக்காவின் பறவையான காக்கையையும் சிறு குழந்தையாகவும் ஹம்மிங் பறவையாகவும் மாற்றிவிட்டுச் சென்றுவிடுகிறாள். சிறுகுழந்தையும் ஹமிங் பறவையும் சென்னுடன் கூடவே செல்கிறார்கள். Hack டிராகன் தங்கை சூனியக்காரி Zenibaவின் சூனியக்கோளத்தை திருடிவிட்டதால் அவனைத் துரத்திக்கொண்டு வந்தவள், சென்னின் உதவியால் அவனை ஒன்றும் செய்யமுடியாமல் போய்விடுகிறாள். தன்னிடமிருக்கும் உருண்டையை வைத்து Hakuவைக் காப்பாற்றும் சென், Zenibaவின் சூனியக்கோளத்தை எடுத்துக்கொண்டு அவளிடம் சென்று கொடுக்கிறாள். மனம் மகிழும் Zeniba, இனி தன் அக்காவால் Hakuவை ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி அனுப்புகிறாள்.

இதனிடையில் தன் மகனைக் காணாமல் தேடும் Yubaba கடும் கோபத்துடன் Hakuவிடம் கேட்கிறாள். தான் அக்குழ்ந்தையை மீட்பதாகவும் அப்படி மீட்டுவிட்டால் சென்னையும் அவர்களது பெற்றோரையும் விட்டுவிடவேண்டும் என்றும் கேட்கிறான். ஒரே ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொள்கிறாள் Yubaba. சென் Yubabaவின் மகனை அவளிடம் ஒப்படைக்கிறாள். Yubabaவின் கடைசி பரிட்சைக்கும் தயாராகிறாள். கூடிக்கிடக்கும் பன்றிக்கூட்டத்தில் சென்னின் பெற்றோரை சரியாகக் கண்டுபிடிக்கச் சொல்கிறாள் Yubaba. அப்படி கண்டுபிடித்துவிட்டால் அவளுக்கு விடுதலை, இல்லையென்றால் அவளின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதுதான் கடைசி பரிட்சை. மிகச்சரியாக, அப்பன்றிக்கூட்டத்தில் தன் பெற்றோர் யாருமில்லை என்று சொல்லி வெல்கிறாள் சென். Chihiro என்கிற தனது பெயரோடு தன் பெற்றோரைத் தேடி ஓடுகிறாள். அவர்கள் முதலில் வந்த பாழடைந்த தீம் பார்க்கில் இவளைத் தேடி நிற்கிறார்கள். அவர்களுக்கு இப்படி நேர்ந்த எதுவுமே தெரிவதில்லை. அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்.

இப்படத்தை சுருக்கமாக அனிமேஷன் கலக்கல் என்று சொல்லலாம். யாருமற்ற உணவகத்தில் திடீரென விளக்குகள் ஒளிர்வதும், எல்லா இடங்களிலும் உடலற்ற ஆவிகள் தோன்றி குளிக்கச் செல்வதும், உண்ணச் செல்வதும், அப்போது வரும் பின்னணி இசையும் ஒரு அனிமேஷன் பிரம்மாண்டத்தை நிகழ்த்துகின்றன. டிராகன் வரும் காட்சிகள் எல்லாம் அனிமேஷன் போன்றே இல்லை. அவ்வளவு கச்சிதம். கற்பனையின் உச்சம் பல காட்சிகளில் தென்படுகிறது. கடலுக்குள் தண்டவாளமும், கடலில் தொடர்வண்டி செல்வதும், சென்னுக்கு விளக்கே நட்ந்து சென்று வழிகாட்டுவதும், தவளையை உண்டு தவளைக் காலுடன் நடக்கும் உடலற்ற ஆவியும் என பல இடங்களில் கற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. முகமற்ற பேய் குளிக்க செய்யும் ஏற்பாடுகளும் சிறிய சிறிய கருப்பு உயிரினங்கள் கரியை சுமந்து பாய்லரில் போடுவதும், ஏகப்பட்ட கைகளுடன் இருந்த இடத்திலேயே இருந்து வேலை செய்யும் மனிதனுமாக அனிமேஷன் ஒரு பெரிய பரவசத்தை ஏற்படுத்துகிறது. இந்த அனிமேஷன் கலக்கலுக்கு மிகப்பெரிய பலம் அதன் பின்னணி இசை.

அனிமேஷன் படங்கள் குழந்தைகளை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. எல்லோரும் ரசிக்க அதில்தான் எத்தனை காட்சிகள். உலகெங்குமுள்ள அனிமேஷன் ரசிகர்களின் ‘சிறந்த பத்து அனிமேஷன் படங்கள்’ பட்டியலில் இப்படம் எப்படியும் இடம்பெற்றிருக்கும். நிச்சயம் பார்க்கவேண்டிய படம்.

Share

The Piano


The Piano Directed by Jane Campion, 1993.

பியானோவையே தனது உயிருக்கு மேலாக நினைக்கும் ஒரு பெண்ணின் (Ada McGrath) வாழ்க்கை பற்றிய திரைப்படம். அவள் பேச விரும்பாமல் தனது ஆறாவது வயதில் தன் பேச்சை நிறுத்தியவள். அவளது உலகம் பியானோவில் அவள் உருவாக்கும் புதுப்புது இசை வடிவங்களின் வழியாகவே முழுமையடைகிறது. நியூசிலாந்திற்கு மணமாகித் தன் மகளுடன் செல்லும் அவள், தன் பியானோவை அடைய தன் கணவனின் நண்பன் (Baines) சொல்லும் வர்த்தகத்திற்கு உடன்படுகிறாள். அவள் பியானோ வாசிக்கும்போது அவன் என்ன விரும்பினாலும் செய்யலாம். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு தொகை. இப்படியே அவள் அந்த பியானோவை அடைந்துவிடலாம். அவளும் இதற்கு ஒப்புக்கொள்கிறாள். இதையே காரணமாக வைத்து அவளை அடைகிறான். மறுநாள் பியானோவிற்காக அவளுடன் உறவு கொள்வதை மறுத்து அவன் அவளுக்கே பியானோவைத் தந்துவிடுகிறான். மேலும் அவன் அவளை விரும்புவதாகவும் சொல்கிறன். பியானோ கிடைத்துவிட்டாலும் அவளால் அவனை மறக்கமுடியவில்லை. மீண்டும் அவனைச் சந்தித்து தன் காதலைச் சொல்லி அவனுடன் உறவு கொள்கிறாள். இதையறியும் அவள் கணவன் (Alistair) அவளை சிறை வைக்கிறான். தன்னுடன் வாழச் சொல்லியு உறவு கொள்ளச் சொல்லியும் நிர்ப்பந்திக்கிறான். அவள் சம்மதிக்க மறுக்கிறாள். இன்னும் அவள் அவன் நினைப்பாகவே இருக்கும் கோபத்தில் அவள் விரல்களை துண்டித்துவிடுகிறான். தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சும் அவள் தன் காதலுடன் சென்று வாழ விரும்புவதாக சொல்லுகிறாள். முடிவில் அவள் கணவனும் சம்மதிக்கிறான். தன் பியானோவுடனும் மகளுடனும் தன் காதலனுடன் படகில் செல்லும் அவள் தன் பியானோவைக் கடலில் வீசச் சொல்லுகிறாள். பியானோ கடலில் விழும்போது அதோடு பிணைந்திருக்கும் கயிறில் தன் கால்களை தானே பிணைத்துக்கொள்ள, பியானோ அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு கடலில் விழுகிறது. முதன்முறையாக அவளது குரலை நாம் கேட்கிறோம். எவ்வித சலனமுமின்றி கடலில் மிதக்கும் அவளது பியானோவோடு அவளும் மிதக்க விரும்புகிறாள். ஆனால் கடைசி நிமிடத்தில் காலைக் கட்டியிருக்கும் கயிறை உதறிவிட்டு மேலே வந்து தன் காதலனுடன் இணைகிறாள். அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

இப்படத்தின் இசையும் ஒளிப்பதிவும் அபாரமாக இருக்கிறது. பியானோவை அடைவதற்காக Baines சொல்லும் வியாபாரத்திற்கு ஒப்புக்கொள்ளும் அவள், அவன் உடல்ரீதியாக அவளை அணுகும்போது அமைதியாயிருக்கிறாள். பின்பு பியானோ கிடைத்தபின்பும் அவளுக்கு அவன் நினைப்பு வரும்போதுதான், அவள் மனதில் இருக்கும் அவளது காதல் அவளுக்கே புரிகிறது. இந்த மாற்றம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. கடைசி காட்சியில் பியானோ கடலுக்குள் தள்ளப்படும்போது அவளும் தன்னை அதோடு பிணைத்துக்கொண்டு விழுகிறாள். கடலின் நிசப்தத்தில் அவளது குரல் மட்டும் ஒலிக்க அவள் ஓர் ஏகாந்த நிலையை அனுபவிக்கும் காட்சி மிகச் சிறப்பானது. ஆனாலும் பியானோவை உதறிவிட்டு, காதலுக்காக மேலே வருகிறாள். சொற்களை விழுங்கிவிட்டு வாழ்ந்தவள் அவள். பியானோவின் இசையையும் விழுங்கிவிட்டு தன் வாழ்க்கையைத் தொடங்குகிறாள்.

ஒருமுறை பார்க்கலாம்.

Share

தமிழ் சினிமா கேள்விகள் – தொடராட்டம்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

நினைவில்லை. சில சமயம் இப்படி யோசித்திருக்கிறேன். யார் நமக்கு முதலில் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொடுத்திருப்பார்கள் என்று. விடை தெரியாத கேள்வியே இது. நாமாக நினைத்துக்கொள்ளவேண்டியதுதான். பொன்வண்டு என்கிற வார்த்தையை யார் சொல்லிக்கொடுத்தது? நினைவில்லை. அதேபோல் எந்தப் படம் முதலில் பார்த்தேன் என்பதும் நினைவில்லை. ஆனால் என் நினைவில் தெரியும் காட்சி ஒன்று உண்டு என்று நானாக ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஔவையார் படத்தில் வைக்கோலை யானை கட்டி போரடிக்கும் காட்சி. அந்தக் காட்சியைப் பார்த்தது நான் ஒன்றாம் வகுப்பு பார்த்தபோது இருக்கலாம்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?

சரோஜா – படம் பரவாயில்லை.

3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

விருமாண்டி. நேற்று முன் தினம் கிரண் டிவியில் பார்த்தேன். இளையராஜாவும் கமலும் பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கினார்கள். அந்தக் கமல் காணாமல் போனது குறித்து வருத்தம் இருக்கிறது. பின்னணி இசைக்காக இளையராஜாவிற்கு விருது கிடைக்காதது அநியாயம் என்ற நினைப்பு மீண்டுமொருமுறை எழுந்தது. முதல்முறை படம் பார்க்கும்போது ஏற்பட்ட அதே உணர்வுகள் மீண்டும் தலைதூக்கின. ஹே ராம் பாதிப்பில் வரும் ஒன்றிரண்டு காட்சிகள், சமய சந்தர்ப்பம் இல்லாமல் கிரேஸி மோகன் டைப்பில் கமல் அடிக்கும் ஒன்றிரண்டு ஜோக், கடைசியில் படம் கமர்ஷியலாகத் தடம்புரள்வது என… இருந்தாலும் விருமாண்டி நல்ல படம். மிகச்சிறந்த படமாக வந்திருக்கவேண்டியபடம்.

4.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?

ஹேராம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?

பாட்ஷா திரைப்பட மேடையில் ரஜினி ஜெயலலிதாவைக் கண்டித்தது.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஏ.ஆர். ரகுமானின் வரவு.

6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

மிகவும் ஆர்வத்துடன் வாசிப்பேன். விட்டல்ராவின் தமிழ்சினிமாவின் பரிமாணங்கள் ஒரு சிறந்த புத்தகம். செழியனின் பேசும் படம், மகேந்திரனின் நடிப்பு என்னும் கலை, தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம், ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், மின்னல் என்ற புனைப்பெயரில் ஒருவர் எழுதிய புத்தகம், சுஜாதாவின் பார்வை 360, இன்னும் பல.

7.தமிழ் சினிமா இசை?

பார்த்திபன் ‘உள்ளே வெளியே’ திரைப்படத்தில் இசை @ இளையராஜா என்று டைட்டில் கார்டில் போட்டார். நானும் அக்கட்சிதான். தமிழ் சினிமா இசை @ இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

கடந்த இரண்டுமூன்று வருடங்களாக நிறையப் பார்க்கிறேன். நல்ல மலையாளப் படங்கள் மிகவும் பிடிக்கும். நிறைய உலகப் படங்களயும் பார்க்கிறேன். தாக்கிய படங்கள் பல. Life is beautiful, பதேர் பாஞ்சாலி, சூரஜ் கா சாத்வன் கோடா, Amistad எனப் பல.

9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை.

10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மோசமில்லை.

11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எரிச்சலாகத்தான் இருக்கும். என்னதான் பல படங்களைப் பார்த்தாலும், மொக்கையாக இருந்தாலும் தமிழ்ப்படம் பார்க்காமல் இருக்கமுடியுமா என்ன. அதிலும் ரஜினி படத்தை, முதல் நாள் முதல் ஷோவில் பார்க்காமல் என்ன வாழ்க்கை வேண்டியிருக்கிறது. :)) கருணாநிதிக்கும் நேரம் நிறையக் கிடைக்கும் என்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். 🙂

பதிவு போட அழைத்த சுரேஷ்கண்ணன், ஜெ. ராம்கி ஆகியோருக்கு நன்றி. மோகந்தாஸ் என்னை அழைக்கவில்லை, மிரட்டினார். அதனால் அவருக்கு நன்றி கிடையாது. 😛

அழைக்க விரும்புகிறவர்கள் என்கிற column கொஞ்சம் பயமாக இருக்கிறது. தப்பித் தவறி சாருநிவேதிதா என்று எழுதினால், நீ ரஜினிகாந்தைக் கூப்பிட்டியா என்பார் என்பது குறித்த பயம் இருக்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி சாருவிடம் கேட்க கேள்விகள் அதிகம் இல்லை என்பதால் அவரை அழைக்காமல் இருப்பதும் நல்லதுதான். 🙂

நான் அழைக்க விரும்புகிறவர்கள்:

சந்திரசேகர் கிருஷ்ணன் (இவரது எழுத்து நடை எனக்குப் பிடித்தது என்பதால்.)

சுகா (இவர் திரைப்படத் துறையில் நேரடியாகப் பங்கு பெற்றிருப்பதால்.)

இட்லிவடை (இவர் சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுவதைக் கேட்க விரும்புவதால்.)

ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் (எப்படியும் எழுதப்போவதில்லை என்பதால்.)

சேதுபதி அருணாசலம் (திரைப்படங்கள் பற்றிய ரசனை கொண்டவர் என்பதால்.)

பின்குறிப்பு: இனிமேல் இதுபோன்ற ஆட்டைல சேர்க்காதீங்க சாமி. 🙂

Share