Archive for திரை

குசேலன் – பெண்களின் கிருஷ்ணன்?

படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலெல்லாம் நெளிய ஆரம்பித்துவிட்டேன். தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியல் போல ஆளாளுக்கு பேசும் வசனங்கள். ஒரு நல்ல கதையை கமர்ஷியலாக்குகிறேன் என்று அதீத தன்னம்பிக்கையில் (அகம்பாவத்தில்) கதையைக் கூறு போட்டு, ‘ஒரு சீன் பசுபதி சார், அடுத்த சீன் வடிவேலு சார்’ என்று யோசித்துவிட்டார் பி.வாசு. வடிவேலு வரும் காட்சிகள் மருந்துக்கும் சிரிப்பைத் தருவதில்லை. பசுபதியிடம் ‘சீரியஸ் கேரக்டர்’ என்று வாசு மிரட்டியிருப்பார் என நினைக்கிறேன். எப்போதும் ஒரு சோகத்தை வலிய வைத்துக்கொண்டு உயிரை எடுக்கிறார். ரஜினியின் என்ட்ரியின் போது 75 ஆண்டுகால சினிமாவிற்கு இப்பாடல் சமர்ப்பணம் என்று ஒரு வரியைப் போட்டு ஒரு பாட்டையும் போடுகிறார்கள். 75 ஆண்டுகால சினிமாவின் மீது வாசுவுக்கு என்ன கோபமோ, பழிதீர்த்துவிட்டார். இசை ‘சின்னப்பையன்’ என்பதை நிரூபித்துவிட்டார்.

வடிவேலு காட்சிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, ஒரு சின்ன கதையை அடிப்படையாக வைத்து, நேர்க்கோட்டுப் படமாக, உருப்படியாக எடுத்திருக்கலாம். அதற்குத் திறமை வேண்டும். வாசுவின் திறமை நாம் அறிந்ததே. திரைக்கதை என்றால் என்னவென்றே தெரியாது என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்து, பணக்காரன், உழைப்பாளி, சாது, தாலாட்டு கேட்குதம்மா, கட்டுமரக்காரன் எனப் பல படங்களில் நிரூபித்தவர்தான் அவர். அதை மீண்டும் இன்னொருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கிறார். படத்தில் அழுத்தமான காட்சியோ, அழுத்தமான வசனமோ, மனதைக் கொள்ளை கொள்ளும் நல்ல நடிப்போ எதுவும் கிடையாது. பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி முகங்களைக் காட்டிக்கொண்டு, ஆளாளுக்கு உளறித் திரிகிறார்கள். இதில் நரிக்குறவர் இனத்தைப் பெருமைப் படுத்துகிறேன் என்று படுத்தித் தள்ளிவிட்டார். ஆனால் ரஜினிக்கு ‘இதெல்லாம் போணிக்காகாது’ என்பது கூடவா தெரியாது?

அண்ணாமலை வெளிவரும் முன்பு ஒரு கூட்டத்தில் பேசிய ரஜினி, ‘அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமையும். நஷ்டமானால், தயாரிப்பாளர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருகிறேன்’ என்று சொன்னார். அவர் சொன்னது போலவே அண்ணாமலை வெள்ளிவிழா படமாக அமைந்தது. குசேலன் படத்தின் வெளியீட்டுவிழாவில் இப்படம் 25 வாரங்கள் ஓடும் என்றார் ரஜினி. 25 வாரங்கள் ஓடுவதற்கு இந்தப் படத்தில் என்ன இருக்கிறது? திடீர் திடீரென்று பாடல்களும், சம்பந்தமில்லாத காட்சிகளும் என கத்தரித்துச் சேர்த்த பிட்டு படம் போலவே ஓடுகிறது குசேலன். மூன்று குழந்தைகள் மட்டுமே அமைதியாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நன்றாக நடித்துவிடுவார்களோ என்கிற சந்தேகம் வந்ததோ என்னவோ இயக்குநருக்கு, அவர்கள் வரும் காட்சிகளை ஒரேடியாகக் குறைத்துவிட்டார்.

படத்தில் ரசிக்கத்தக்க காட்சிகள் இரண்டே இரண்டு. ஒன்று, ஆர். சுந்தரராஜன் ரஜினியைக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் வசனம். அடுத்து வடிவேலு ரஜினியைப் பார்த்தவுடன், ‘பார்த்துட்டேன்’ என உடலை வளைத்து ஹைபிட்ச்சில் அலறும் காட்சி. வேறெந்தக் காட்சிகளும் மனதில் கொஞ்சம் கூட ஒட்டுவதில்லை. பெரும் எரிச்சல் தரும் பாடல்களும், மட்டமான பின்னணி இசையும், சந்திரமுகி, அண்ணாமலை பார்ட் 2 என்று சொல்லி வாசு அடிக்கும் கொட்டங்களும் தாங்கமுடியாதவை. இதில் ‘தலைவா நயந்தாராவையே பார்க்கிறியே எங்களைப் பார்க்கமாட்டேன்கிறியே’ போன்ற வசனங்கள் எல்லாம் கண்ணில்படாமல் போகின்றன.

கடைசி 15 நிமிடங்கள் படம் செண்ட்டிமெண்டாக அமைந்து, படத்துக்கு வந்த எல்லாப் பெண்களையும் ஈர்த்துவிடுகிறது. தன் ஆரம்பகால படங்களில் நாம் பார்த்திருக்கும் ரஜினியின் எதார்த்தமான நடிப்பை இந்த 15 நிமிடங்களில் பார்க்கமுடியும். அசர வைக்கிறார். சின்ன இடத்தில்கூட எல்லை தாண்டாமல், சறுக்காமல், அவர் மேடையில் பேசும் விதமும், கண் கலங்கி கண்ணீர் விடும் இடமும் எல்லாரையுமே கவர்கிறது. கடைசி 15 நிமிடங்களால் மட்டும் வெள்ளிவிழா சாதனை புரிந்த ‘காதலுக்கு மரியாதை’, ‘பாரதி கண்ணம்மா’, ‘லவ் டுடே’, ‘சந்திரமுகி’ வரிசையில் இந்தப் படமும் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நாடகம் போன்ற ஒரு படம், க்ளைமாக்ஸில் பெண்களை ஈர்க்கும் படமாகிவிடுகிறது. இதில் அசந்துதான் ரஜினியும் 25 வாரங்கள் என்று சொல்லியிருக்கவேண்டும். பி.வாசுவின் திறமையை ஆணித்தரமாக நிரூபித்திருக்கும் இப்படம், 25 வாரம் ஓடிவிட்டால், தமிழ்நாடு என்னாகும்? அதற்கான வாய்ப்பிருக்கிறது என்பதுதான் சோகம் தரும் விஷயம்!

மதிப்பெண்கள்: 39/100

Share

தசாவதாரம் – ஒட்டாத முகங்கள்

இன்னும் விமர்சிக்க என்னவிருக்கிறது என்ற அளவிற்கு ஆளாளுக்கு விமர்சித்தாகிவிட்டது. தசாவதாரத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்காதவர்களுக்கு வலைப்பதிவர்கள் சங்க அட்டை கிடைக்காது என்று கேள்விப்பட்டேன். தசாவதாரம் பற்றிய என் எண்ணங்களைச் சொல்லி, வலைப்பதிவாளர்கள் சங்கத்தில் என் பெயரை தக்க வைத்துக்க்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன காரணம் இருந்திருக்கமுடியும் தசாவதாரம் பற்றிய எண்ணங்களைச் சொல்ல?

அடியேன் ரங்கராஜன் நம்பி என்கிற கமலின் கர்ஜனையில் நம்மை உள்வாங்கிக்கொள்ளும் படம், ரங்கநாதர் சிலை கடலுக்குள் வீசி எறியப்பட்டதும் தியேட்டரில் நம்மைத் துப்பிவிடுகிறது. மீண்டும் சுனாமியில் நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. இந்த பத்து நிமிஷத்திற்காகத்தான் இவ்வளவு ஆர்பாட்டமுமா என்கிற எண்ணம் ஏற்பட்டுப்போகிறது. கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது என்கிற பொருளே அற்ற வாலியின் வரியில் பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் அமர்க்களமாகத்தான் இருக்கிறது. சைவ மன்னன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. வைணவக் கடவுளான ரங்கநாதர் இல்லை என்றே சொல்லுகிறான். அப்படியிருக்க ஏன் கல்லை மட்டும் கண்டால் கடவுள் கிடையாது ரங்கராஜன் நம்பி பாடுகிறார் எனத் தெரியவில்லை. கேயாஸ் தியரி என்று கமல் கதையளக்க கிராஃபிக்ஸ் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறக்கிறது. உண்மையில் இந்த கேயாஸ் தியரிக்கும் ரங்கராஜன் நம்பியை மையமாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கும் சைவ வைணவ மோதலுக்கும் படத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. கமல் ஆரம்பத்தில் பேசத் தொடங்கும்போது நாம் 12ஆம் நூற்றாண்டுக்குப் போகவேண்டிய தேவையுள்ளது என்று சொல்லி என்னவோ காரணம் சொல்கிறார். ஆனால் எனக்குத் தெரிந்தவரை இந்த சைவ வைணவ மோதல் படத்திற்கு அவசியமே இல்லாத ஒன்று. பிராமணக் காட்சிகளின்மேல் கமலுக்கிருக்கும் காதல் நாம் அறிந்ததே. தொடர்ந்து நாத்திகக் கருத்துகளைச் சொல்லி வரும் கமல், தொடர்ந்து பிராமணர்கள் தொடர்பான காட்சிகளைத் தன் படத்தில் காண்பிக்காமல் இருப்பதில்லை. தனக்குத் தேவையான விளம்பரங்களைப் பெற இதுபோன்ற காட்சிகளையும், தனக்கு முற்போக்கு முகம் தரும் கருத்துகளைப் படம் முழுக்க அள்ளி வீசியுமிருக்கும் கமலின் பேனா மறந்தும் இஸ்லாமிய, கிறிஸ்துவ மதம் பக்கம் திரும்பிடவில்லை. பேனா முனை முறிந்துவிடும் அபாயம் பற்றித் தெரிந்திருப்பதால், ‘இந்து மதமே அபயம்’ என்கிறார் கமல். ஸூடோ செக்யூலர்களின் தொடர் ஓட்டத்தில் கமலுக்கு இல்லாத இடமா, அன்போடு அழைத்து ஏற்றுக்கொள்கிறது ‘எவ்வளவு நல்லவண்டா’ மதம்.

கமலின் நடிப்பைப் பற்றியும் கமலின் கடும் உழைப்பைப் பற்றியும் சொல்லப் புதியதாக ஒன்றுமில்லை. அதே ஆர்வம், அதே அர்ப்பணிப்பு, அதே உழைப்பு. அசர வைக்கிறார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த முறை மேக்கப் கமலுக்கு ஒத்துழைக்க மறுத்திருப்பதுதான் ஆச்சரியம். தெலுங்கு பேசும் நாயுடுவும் புரட்சி செய்யும் தலித் கிறித்துவ போராளியும் கமலோடும் அதன் மேக்கப்போடும் ஒட்டிப்போவதுபோல் மற்ற வேஷங்கள் ஒட்ட மறுக்கின்றன. அவர் போட்டிருக்கும் ஐயங்கார் வேஷமும் எப்போதும்போல் ஒட்டிப்போகிறது, மேக்கப் இல்லாமலேயே. மொட்டைப் பாட்டியும் அவ்தார் சிங்கும் ஜார்ஜ் புஷ்ஷும் தங்கள் முகம் எப்போது பிய்ந்து விழுமோ என்கிற பயத்துடன் நடிப்பது போலவே இருக்கிறது. குரலில் வித்தியாசம் காண்பிக்கிறேன் என நினைத்துக்கொண்டு, சன் டிவி மூப்பனார் பேசிய தமிழுக்கே சப்-டைட்டில் போட்ட தேவையை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டார் கமல்.

உடல் மொழியைப் பொருத்த வரையில் பாட்டியின் குறுகலான உடலமைப்பை கடைசிவரை காப்பாற்றுவதில் கமல் ஜெயிக்கிறார். அதேபோல் தெலுங்கு நாயுடுவும் பூவரகனும் தங்கள் உடல்மொழியை சிறப்பாகவே வெளிப்படுத்துகிறார்கள். அவ்தார் சிங்கின் உடல்மொழியும் பேச்சும் செயற்கைத்தனமாக இருக்கிறது. இப்படி பத்துவேடங்களைப் பத்து பேர் செய்திருக்கிறார்கள் என்கிற எண்ணம்வர கமல் எடுத்துக்கொண்டிருக்கும் தீவிரமான உழைப்பு நிச்சயம் பாராட்டப்படவேண்டியதே. ஆனால் கதை? உலகம் சுற்றும் வாலிபன், குருவி என அதன் தொடர்ச்சியில் வந்திருக்கும் இன்னொரு அம்புலிமாமா கதை. ஒரு வணிகப்படத்திற்கு அம்புலிமாமா கதை போதுமானதே. எந்தவொரு படமும் பார்வையாளர்களையும் பங்கேற்பாளர்களாகச் செய்யும்போது வெற்றி பெறுகிறது. ஆனால் பெரும்பாலான வணிகப்படங்களில் இது சாத்தியமல்ல. ஆனால் அவை பார்வையாளர்களைப் பங்கேற்பாளர்களாக மாற்றாமல், பார்வையாளர்களாக வைத்துக்கொண்டு, படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரையில் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடமால் கட்டிப்போடுவதில் பெரும் கவனம் கொள்கிறது. இதுவே கில்லி முதல் சிவாஜி வரையிலான வணிகப்படங்களின் முக்கிய நோக்கம். அந்த மூன்று மணி நேரத்தில் பார்வையாளர்களை லாஜிக் பற்றியோ படத்தில் தெரியும் சிறிய குறைகளைப் பற்றிப் பெரியதாக நினைக்கவோ நேரம் கொடுக்காமல், படத்தை செறிவாக அடைக்கப்பட்ட பண்டமாக மாற்றுவதில் தீவிர கவனம் கொள்கின்றன. இதைத் தவற விட்டிருக்கிறது தசாவதாரம். லாஜிக் ஓட்டையை அடிப்படையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. ஆனால் அதன்மேல் கட்டப்படும் காட்சிகளில் லாஜிக் தவறில்லாமல் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது. திரைக்கதை ஆசிரியராக இதில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் கமல்.


அமெரிக்காவிலிருந்து வரும் வில்லன் கமலுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா சந்து பொந்துகளும் தெரிந்திருக்கிறது. அவர் பைக் ஓட்டுவதுபோல் தமிழ்நாட்டில் யாரும் பைக் ஓட்டமுடியாது. அப்படி ‘ஓட்டியிருக்கிறார்’ கமல். இந்த வில்லன் கமல் செய்யும் அக்கிரமங்களுக்குச் சற்றும் இளைத்ததல்ல, பகுத்தறிவு பேசிக்கொண்டு திரியும், அறிவியல் முனைவரான இன்னொரு கமல் செய்யும் ஓட்டுதல்கள். எப்படியும் கீழே விழும்போது அங்கே கார்கோ இருக்கப்போகிறது, அதன் கம்பி தட்டி மயக்கமாகப் போகிறோம் என்பதை முடிவு செய்தபின்பு ஏன் அத்தனை இழுவை அந்தக் கிருமியும் கமலும் கார்கோவில் ஏற எனத் தெரியவில்லை. மிக நீண்ட காட்சிகள் பொறுமையைச் சோதிக்கின்றன. கார்கோவிலிருந்து வரும் முனைவர் கமல் வசம் ஒரு ஐடி கார்டு கூட இருக்கக்கூடாது. ரா பிரிவின் உயரதிகாரி கிட்டத்தட்ட ஒரு லூஸு. இரண்டு நிமிடங்களில் போலிஸிடம் சொல்லியிருந்தால் தீர்ந்திருக்கவேண்டிய பிரச்சினையை திரைக்கதையாளர் கமல் பெருமாளுக்குச் சொல்லிவிடுகிறார். கலிகாலம் என்று பெருமாளும் ஓடுகிறார். உண்மையில் பைத்தியகாரப் பாட்டியாக வரும் கமல் செய்யும் பைத்தியக்காரத்தானங்களே மிக்குறைவு என்னுமளவிற்குப் பைத்தியக்காரத்தனங்கள் செய்கிறார்கள் மற்ற எல்லாரும். இருநூறு முகவரிகளில் சரியாகச் சிதம்பரம் போகிறார்கள் வில்லன் கமலும் மல்லிகா ஷெராவத்தும். ஒரு போலிஸ் தப்பித்து ஓடுகிறார். அவர் சென்று யாரிடமும் சொல்வதில்லை அறிவியலறிஞரான கமல்தான் நல்லவர் என்று. அவர் என்ன செய்துகொண்டிருந்தார்? யாருக்கும் தெரியாது. நட்டநடுத் தெருவில் மல்லிகா ஷெராவத்தைச் சுடுகிறார் வில்லன் கமல். ஆனால் போலிஸ் அறிவியலறிஞரை தீவிரவாதியாக அறிவிக்கிறது. மல்லிகா ஷெராவத் மார்பையும் இடுப்பையும் பிருஷ்டத்தையும் ஆட்டிவிட்டு, கடைசியில் தலையையும் ஆட்டிவிட்டுச் சாகிறார். இவரால் வேறெந்தப் பயன்களும் இல்லை, ஐந்து நிமிடங்கள் குஜாலான காட்சிகள் இருந்தது என்பதைத் தவிர. ஜெயப்பிரதாவைப் பற்றிச் சொல்ல அதிகமில்லை, கொடுமை என்பதைத் தவிர. அவ்தார் சிங் சீக்கிரம் செத்தால் நல்லது என்பதுபோல நடிக்கிறார். இந்தக் கொடுமைகளிலிருந்து நம்மையும் படத்தையும் கொஞ்சம் காப்பாற்றுகிறது நாயுடு பாத்திரம். அவர் தமிழே அழகு. மொபைல் ரிங்டோன் என்று தெரியாமல் பாட்டை ரசித்து ஆடுமிடமாகட்டும், எப்படி போலிஸ் துன்புறுத்துவார்கள் என்று லெக்சர் கொடுக்குமிடமாகட்டும் சிரிப்பை வரவழைக்கிறார். அதேபோல் தலித் இளைஞனாக வரும் கமலின் நடிப்பும் கொஞ்சம் ஆசுவாசம் தருகிறது. ஆனால் கதையமைப்பைப் பொருத்தவரை இக்கதாபாத்திரமும் அசாருதீன் மாதிரி வந்து யாருக்குமே புரியாமல் என்னவோ பேசும் அப்பாவி முஸ்லிமும் அவசியமே இல்லாத பாத்திரங்கள்.

அறிவியலறிஞர் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். இசைக் ‘கலைஞர்.’ இவை இரண்டும் போதாதா நாத்திகக் கருத்துகளைப் பேச? படம் முழுக்க நேரம் கிடைக்கும்போதெல்லாம் கமல் நாத்திகம் பரப்பித் தள்ளுகிறார். ஆனால் காட்சி அமைப்பைப் பார்த்தால் ஆத்திகத்தை ஆதரிக்கும் காட்சிகளாக வருகின்றன. ‘நான் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று சொன்ன மறுநிமிடமே ‘ஆனா நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்குத் தெரியாது’ என்று சொல்லிக் குழப்பும் ரஜினிக்கும் மேலாகக் குழப்புகிறது நாத்திகக் கருத்துகளும் ஆத்திகக் காட்சிகளும். கமல் எந்தப் பாலத்திலிருந்து எப்போது குதித்தாலும் எப்படியாவது ஒரு வண்டி வந்து அவரைக் காப்பாற்றிவிடுகிறது. எப்படி வண்டி வந்தது? அப்படி ஒரு வண்டியில் ஸ்ரீ ராமஜெயம் என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கமல் கடவுள் இருந்திருக்கலாம் என்பார். அந்தக் கல்லும் ஒரு கடவுள். அதுவும் சுனாமி வழியாக வந்து தன்னைக் கரைசேர்த்துக்கொண்ட கடவுள்.

பகுத்தறிவு பேசும் அறிவியலறிஞர் கமலுக்கு மூளை இல்லையோ என யோசிக்கவைக்கும் கிளைமாக்ஸ் வசனங்கள் கமலின் டாப் நகைச்சுவை. சுனாமியில் பத்தாயிரம் பேர் சாகிறார்கள். ஆனால் கிருமி பரவியிருந்தாலோ தமிழகமே, ஏன் இந்தியாவே இல்லாமல் போயிருந்திருக்கும். அப்படியானால் ஒரு பகுத்தறிவுவாதி எப்படி யோசிக்கவேண்டும்? நல்லவேளை சுனாமி வந்தது என்றுதான் யோசிக்கவேண்டும். ஆனால் அறிவியலறிஞர் கமலோ ராமசாமி நாயக்கரின் மகன். அவர் கேட்கிறார், பத்தாயிரம் பேர் செத்ததுதான் கடவுளோட செயலா என்று. அந்தப் பகுத்தறிவு நமக்கு வராது என்று ஏற்கெனவே புரிந்துவிட்டதால் அது பற்றிப் பேச ஒன்றுமில்லை என்பதும் தெரிந்துவிடுகிறது. பகுத்தறிவு அதோடு நிற்பதில்லை. ஒரு இஸ்லாமியர் சொல்கிறார், நாம இருநூறு பேர் மசூதிக்குள் இருந்ததால்தான் தப்பித்தோம் என்று. அப்போது அங்கே யாரும் கேள்விகள் எழுப்பவதில்லை, செத்த பத்தாயிரம் பேருக்கு என்ன பதில், அதுதான் அல்லாவின் கருணையா என்று. ஏனென்றால் பகுத்தறிவு பேசுபவராக வரும் கமல் பிறந்தது தமிழ்நாட்டில். அவர் எங்கு வேலைக்குச் சென்றாலும், என்ன டாக்டர் பட்டம் பெற்றாலும் அவருக்குத் தெரிவதென்னவோ தமிழகம் தந்த பகுத்தறிவு மட்டுமே. இந்து மதத்தை விமர்சிப்பது நடுநிலைமை, மற்றெந்த மதத்தையும் பாராட்டுவதும், விமர்சிக்காமல் இருப்பதும் முற்போக்கு என்பது கமலுக்கு மிக நன்றாகத் தெரிந்துவிட்டிருக்கிறது. அறிவியலறிஞர் கமலை நாயுடு விமர்சிக்கும்போது தேவையே இல்லாமல் கேட்கிறார், ‘நீ ஐஎஸ்ஐயா, அல் குவைதாவா’ என்று. என்னடாவென்று பார்த்தால், கடைசியில் ஒரு இஸ்லாமியரிடம் அதே கேள்வியைக் கேட்கவேண்டியிருக்கிறது. முதலில் ஒரு காட்சியில் இதைச் சொல்லாமல் கடைசியில் மட்டும் கேட்டுவைத்தால் வரும் எதிர்ப்பு எப்படியிருக்கும் என்பது கமலுக்குத் தெரியும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அரசியலில் இந்தப் பாகுபாடு கமலுக்கு இல்லை. உச்சகட்ட காட்சியில் கருணாநிதி வரப்போகிறார் என்றதுமே சுனாமியைப் பார்வையில் ஜெயலலிதா வந்துவிடுகிறார். ஏனென்றால் நிஜக்கமல் பிறந்ததும் தமிழ்நாடு என்பதால் அவருக்கு எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்திருக்கிறது. இந்து மதத்தின் மீது வைக்கும் விமர்சன ‘தைரியம்’, அரசியலின் மீது கிடையாது. நல்லதுதான், இல்லையென்றால் அடுத்த ஆட்சியில் அடுத்த படம் வருமா என்பது யாருக்குத் தெரியும். ‘சண்டியரை’ ‘விருமாண்டியாக்கிய’வரிடம் மோத யாருக்குத் தைரியம் வரும்? மோதவேண்டுமென்றால் இருக்கிவே இருக்கிறது ஒரு ‘தமிழ்நாட்டு செக்யூலரின்’ வழி. பிறகென்ன கவலை?

வசனகர்த்தாவாக கமல் அதிகம் சொதப்பிய படம் இதுவாகத்தான் இருக்கும். ஒரு வசனம் என்பது அது பேசும் ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது என்பதைக்கூடவா கமல் புரிந்துகொள்ளவில்லை? மிகவும் சீரியஸான கட்டங்களில் ஆளாளுக்கு கிரேஸித்தனமாக வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். அறிவியலறிஞரில் தொடங்கி, லூஸு பாட்டியிலிருந்து, அவ்தார் சிங் வரை எல்லாரும் நாயுடு மாதிரியே பேசிக்கொண்டு திரிகிறார்கள். போதாதற்கு நேரம்கெட்ட நேரத்தில் ஜோக்கடிப்பதாக நினைத்துக்கொண்டு உளறிக்கொட்டும் நாகேஷும் கே.ஆர். விஜயாவும். இப்படி ஆளாளுக்குப் பேசும் வசனங்களில் படம் பல காட்சிகளில் கிரேஸி மோகன் நாடகம் போல ஆகிவிட்டது. இந்த சொதப்பலில் சில நல்ல வசனங்கள் நினைவுக்கு வராமலேயே போயிவிடுகின்றன. (‘உங்கள மாதிரி ஒரு தெலுங்கன் வந்து தமிழைக் காப்பாத்துவான் சார்’ – நான் ரசித்த வசனத்தில் ஒன்று.)

பின்னணி இசையில் பேரிசைச்சலே முதன்மை பெறுகிறது என்றாலும் மோசமில்லை. குறிப்பாக நாயுடு ‘தெலுங்கா’ என்று கேட்கும் காட்சியில் வரும் இசை. பாடலில் கல்லை மட்டும் கண்டால் பாடலும் முகுந்தா முகுந்தா பாடலும் நன்றாக இருக்கின்றன. முகுந்தா முகுந்தா பாடலில் தோல் பாவைக்கூத்து காட்டுகிறார் பிராமணரான அசின். எனக்குத் தெரிந்து எந்த பிராமணரும் தோல் பாவைக்கூத்து செய்வதில்லை. மண்டிகர் சாதியைச் சேர்ந்தவர்களே தோல் பாவைக்கூத்து செய்கிறார்கள்.

ஒளிப்பதிவின் குளுமை படம் முழுக்க வரும் கிராஃபிக்ஸில் காணாமல் போய் ஒருவித எரிச்சலே காணக் கிடைக்கிறது. நெட்டைக் கமல் வரும் பெரும்பாலான காட்சிகளில் அவர் தலை பாதி தெரிவதில்லை. நெட்டைக் கமலைப் பார்த்து பேசுவதாக நினைத்துக்கொண்டு ஆளாளுக்கு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுகிறார்கள். கிராஃபிக்ஸ் கோளாறு. அதிகம் செலவு செய்துவிட்டால் பிரம்மாண்டம் வந்துவிடாது என்பதற்கு குருவியும் தசாவதாரமும் உதாரணங்கள். சிவாஜி திரைப்படத்தின் பிரம்மாண்டம் அதன் செலவுகளில் மட்டுமில்லை, ஷங்கரின் திறமையில் உள்ளது.

பல லாஜிக் ஓட்டைகளுக்கு மத்தியில், நாத்திகப் பிரசாரத்திற்கு மத்தியில், ஒட்டாத மேக்கப்புகளூக்கு மத்தியில் கதையையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் கண்டுபிடிக்கவேண்டியிருக்கிறது. அசின் நன்றாக நடித்திருப்பதும், நாயுடு கொண்டு வரும் சிரிப்பும் இல்லாவிட்டால் படத்தை குப்பையாகச் சேர்த்திருந்திருக்கலாம். கமலின் உழைப்பை மட்டும் மனதில் கொண்டு, மாறுவேடப் போட்டி பார்ப்பது போல் பார்க்கலாம்.

கடைசியாக ஒரேயொரு சந்தேகம். ‘தசாவதாரம்’ என்பது தமிழ் கிடையாது. எப்படி இந்தப் படத்திற்கு வரிச்சலுகை தந்தார்கள்? சிவாஜி படம் வந்தபோது அதற்குப் பெயர்ச்சொல் என்கிற விளக்கம் தரப்பட்டது. இதற்கு என்ன விளக்கமோ? பேசாமல் தன்னைப் புகழும் எந்தவொரு நடிகரின் படத்திற்கும் வரிவிலக்கு தரலாம் என்று அரசு அறிவித்துவிடலாம். கேள்விகள் எழாது.

மதிப்பெண்கள்: 41/100

Share

இந்தியாவைச் சுற்றிய வாலிபன்

மக்கள் தொலைக்காட்சியில் ‘உலக ரஷ்யத் திரைப்படங்கள்’ வரிசையில் ‘மூன்று கடல்களுக்கு அப்பால்’ (A Journey beyond three seas) படத்தைக் காண்பித்தார்கள். படத்தின் ஆரம்ப முன்னோட்ட சட்டங்களில் ரஷ்யப் படத்தின் கதாநாயகனின் படத்தோடு நர்கிஸ் படத்தையும் பத்மினி படத்தையும் காண்பிக்க, சற்று குழம்பிப் போனேன். ரஷ்யப் படத்தில் பத்மினியும் நர்கிஸ¤ம் நடித்திருக்க, அதைப் பார்ப்பது சந்தோஷமாகத்தான் இருந்தது.

15ம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த முதல் ரஷ்ய யாத்ரிகர் அஃபனாஸி நிகிதியைப் பற்றிய படம் இது. அஃபனாஸி நிகிதி இந்தியாவில் சுற்றியலைந்தபோது இந்தியாவின் கலாசாரம், இந்தியாவில் அவர் கண்ட காட்சிகள் பற்றிய வர்ணனைகளுடன் இந்தியாவின் அன்றைய வர்த்தகம் பற்றி எழுதி வைத்திருக்கிறார். அவர் ரஷ்யா திரும்பியதும் என்ன ஆனார் என்பதை கண்டறிய இயலாமல் போகிறது. ஆனால் அவர் எழுதிய குறிப்புகள் அன்றைய ரஷ்ய அரசின் கையில் கிடைக்க, அதை பாதுக்காத்து வைக்கிறது அரசு. அதை அடியொற்றி எடுக்கப்பட்ட படம் இது.

அஃபனாஸி நிகிதி தன் தாய்நாட்டிலிருந்து வர்த்தகப் பயணமாக ஈரான் வழியாக இந்தியா வந்தடைகிறார். (முதல் இருபது நிமிடங்கள் நான் பார்க்காததால் ஈரானில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.) ஈரானில் அவர் கொண்டுவந்த பொருள்கள் எல்லாம் களவு போகின்றன. மிஞ்சுவது ஒரு குதிரை மட்டுமே. அழகான அக்குதிரையுடன் இந்தியாவில் நுழைகிறார் அ·பனாஸி. இந்தியாவிற்கு வரும் முதல் ரஷ்ய யாத்ரிகர் அவர். இந்தியச் சந்தைகளில் நடக்கும் கேளிக்கையில் ராம கதையை ஆடிப் பாடுகிறார்கள் மக்கள். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் அ·பனாஸியின் குதிரை களவு போகிறது. அந்தக் குதிரையைத் திருடியது அந்நகர ஆளுநராகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் ராமகாதை பாடியாடும் சாது. ஆளுநரிடம் சென்று தனது குதிரையைத் திரும்பக் கேட்கிறார் அ·பனாஸி. இஸ்லாமிய அரசின் பிரதிநிதியாக அங்கு ஆளும் ஆளுநர் அ·பனாஸியைத் தன் படையில் சேர்ந்துவிடவும் மதம் மாறவும் நிர்ப்பந்திக்கிறார். அப்படிச் செய்தால் மட்டுமே அவருக்கு அவரது குதிரை திரும்பக் கிடைக்கும் என்றும் சொல்கிறார். என்ன ஆனாலும் தான் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இஸ்லாமிற்கு மாறமுடியாது என்று சொல்கிறார் அ·பனாஸி. நான்குநாள்கள் கெடு தரும் ஆளுநர் அதற்குள் மதம் மாற ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லது அஃபனாஸி ஏதேனும் வேலை தேடிக்கொண்டு அவன் அங்கு வாழத் தேவையான உத்தரவாதத்தை யாரேனும் அளிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார். அ·பனாஸிக்கு சாது ஒரு உபாயம் சொல்கிறார். இரண்டு நாளில் நகருக்கு வரும் தலைவரிடம் சென்று முறையிட்டால் பலன் கிடைக்க வழியுண்டு என்கிறார். அதேபோல் அ·பனாசியும் தலைவரின் வழியை மறித்து உதவி கேட்கிறார். தலைவர் ஏற்கெனவே அ·பனாசியை அறிந்தவர். அவர் ரஷ்யா சென்றிருந்த சமயத்தில் அவருக்கு உதவியர் அஃபனாஸி என்பதால் ஆளுநரிடம் அ·பனாசி தன் நண்பன் என்றும் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்யவேண்டியது ஆளுநரின் கடமை என்றும் உத்தரவிடுகிறார். குதிரையைத் திரும்பப் பெற்றுக்கொண்டு இந்தியாவைச் சுற்றத் தொடங்குகிறார் அ·பனாஸி.

இதற்கிடையில் பாம்பு கடித்து சாகக் கிடக்கும் சாம்பா என்கிற பெண்ணைக் காப்பாற்றுகிறார் அ·பனாஸி. கடும் மழைக்காலத்தில் குதிரையில் பயணம் மேற்கொள்ள முடியாது என்பதால் சாம்பாவின் வீட்டில் தங்குகிறார். அங்கு அவருக்கும் சாம்பாவிற்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால் நாடு, மதம் போன்ற பிரிவினைகளுடன் அவளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு, காதலை வெளியில் சொல்லாமல், மழைக்காலம் கழிந்தவுடன் மீண்டும் புறப்படுகிறார் அ·பனாஸி.

செல்லும் வழியில் ஒரு கோயிலுக்குள் செல்ல முயல்கிறார். அவர் வெளிநாட்டவர் என்பதால் தடுக்கிறார்கள். சாது அங்கு வந்து தத்துவங்களை எடுத்துக்கூறி, தடுத்தவர்களிடம் உண்மையை விளக்க, அ·பனாஸியை கோயிலுக்குள் அனுமதிக்கிறார்கள். சாதுவிற்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்படுகிறார் அ·பனாஸி.

வேறொரு ஊரில் வேறொரு பெண்ணைச் சந்திக்கிறார் அ·பனாஸி. அவர் ஒரு சிறந்த நடனப் பெண். அந்த ஊரில் சில காலம் வசிக்கும் அஃபனாஸி தன் குதிரையை விற்று அதற்கு மாற்றாகத் தங்க நாணயங்கள் பெற்றுக்கொள்கிறார். அந்த ஊரின் வைஸ்ராயைச் சந்தித்து ஊரின் மோசமான நிலையை எடுத்துச் சொல்கிறார். அவரைச் சந்திப்பதற்கு நடனப்பெண் உதவுகிறாள். வைஸ்ராயிடம் ஊரில் முதலாளிகள் கொழுத்திருக்கவும் தொழிலாளிகள் ஏழைகள் வாடவுமான நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அ·பனாஸி. ரஷ்யாவில் அப்படி இல்லையா என்று ஏளனத்தோடு கேள்வி கேட்கும் வைஸ்ராயிடம், உலகெங்கும் இதே நிலைதான் என்று ஒப்புக்கொள்ளுகிறார் அ·பனாஸி. வைஸ்ராய் அவனை மதித்து, ரஷ்ய அரசுக்கு ஒரு கடிதமும் கொடுத்தனுப்புகிறார். நடனப்பெண்ணிடம் சொல்லிவிட்டு வேறு இடம் நோக்கிக் கிளம்புகிறான் அ·பனாஸி. அவன் மீது ஒருதலையாகக் காதல் கொள்ளும் நடனப்பெண் மனம் உடைந்துபோகிறாள்.

அ·பனாஸியின் மனம் ரஷ்யாவையும் அவனது அம்மாவையும் நினைத்து ஏங்குகிறது. மீண்டும் நாடு திரும்ப முடிவெடுக்கிறான். வரும் வழியில் சாம்பாவின் வீட்டுக்குச் சென்று மறைந்திருந்து பார்க்கிறான். சாம்பா தூளியில் தனது குழந்தையைத் தாலாட்டிக்கொண்டிருக்கிறாள். ஏக்கத்தோடு பார்க்கும் அ·பனாஸி, தன்னிடமுள்ள தங்க நாணயங்களை அவள் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு வெளியேறுகிறான்.

அவனிடம் பணம் இல்லாததால் அவனைத் தங்கள் படகில் ஏற்றிக்கொள்ள வணிகர்கள் மறுக்கிறார்கள். அவன் மாலுமியாக வருகிறேன் என்று சொல்வதையும் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அங்கு உடல்நலமில்லாமல் படுத்துக்கிடக்கும் சாதுவைச் சந்திக்கிறான். அவர் அவனுக்கு மீண்டும் உதவுகிறார். பாட்டுப்பாடி காசு சேர்த்து அவனுக்குத் தருகிறார். அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, இந்தியாவைப் பற்றிய நல்ல விஷயங்களை ரஷ்யா முழுதும் எடுத்துச் சொல்வேன் என்று கூறிவிட்டு, படகேறுகிறார் அ·பனாஸி.

உலகின் முதல் பயணக்கட்டுரையாக (உறுதியாகத் தெரியாது) இருக்கும் சாத்தியமுள்ள இப்புத்தகத்தை வாசித்திருந்தால் இப்படம் தந்த அனுபவங்களைவிடக் கூடுதலாகப் பெற்றிருக்கமுடியும் என்பது உண்மை. படம் ஒரு திக்கில்லாமல் அலைவதுபோல் ஆகிவிட்டது. உலகத் திரைப்பட வரிசையில் இதை எப்படிச் சேர்த்தார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவிற்கு வரும் முதல் ரஷ்யன் அ·பனாஸி. ஆனால் அவருடன் எல்லாரும் ரஷ்யமொழியில் பிளந்துகட்டுகிறார்கள். சாம்பா (நர்கிஸ்) அவரிடம் ரஷ்யமொழியில் பேசுகிறார். ஆனால் ஹிந்தியில் பாட்டுப்பாடுகிறார். நடனப்பெண் (பத்மினி) கதையும் இதே. ரஷ்யமொழியில் பேசிவிட்டு, ஹிந்தியில் பாட்டுப்பாடி மயக்கம் போட்டு விழுகிறார். அஃபனாஸி செல்லும் ஊராக பிடார் என்கிற ஊரை மட்டுமே சொல்கிறார்கள். அவர் எந்த ஊருக்குப் போகிறார், யாரைப் பார்க்கிறார் என்பதற்கான விவரங்கள் சரியாக இல்லை. கடைசியில் எங்கேயிருந்து கப்பலேறுகிறார் என்பதும் சரியாகத் தெரியவில்லை. திடீரென்று ஒரு காட்சியில் விஜயநகரப் பேரரசைப் பார்த்திருக்கிறேன் என்கிறார் அ·பனாஸி. அடுத்த காட்சியில் அவர் இருக்கும் இடம், விஜய நகரப் பேரரசின் கட்டடக்கலையில் உருவான கோபுரங்களைக் கொண்டதாக இருக்கிறது. இன்னொரு காட்சியில், ராம், கிருஷ்ணா என ஒலிக்கும் கோயிலுக்குள்ளிருந்து மூன்று பட்டை போட்ட சைவர்கள் ஓடிவருகிறார்கள். சாது பாட்டுப் பாடிச் சொன்னதும் உடனே அயல்நாட்டவரைக் கோயிலுக்குள் அனுமதித்துவிடுகிறார்கள். சாது தானும் ஒரு அயல்நாட்டவன் என்கிறார். எங்கெங்ல்லாமோ போகிறது படம்.

நர்கிஸ¤க்கும் பத்மினிக்கும் அதிகக் கவலைகள் இருந்திருக்காது. இந்தியப் படங்களில் செய்த அதே அதீத நடிப்பு, அதே அதீத சோகம், அதே காதல் தோல்வி, கையை மடித்து முழங்கையைக் கொண்டு கண்ணை மறைத்துக் கதறல். நர்கிஸை ரஷ்யாவிற்குக் கூட்டிச் சென்றால் செலவு என்று நினைத்தார்களோ என்னவோ, நர்கிஸ¤ம் கதாநாயகனும் ரஷ்யாவைப் பார்க்கும் கனவுக் காட்சியை செட்டில் எடுத்து சேர்த்து ஒட்டிவிட்டார்கள். நர்கிஸ¤ம் பத்மினியும் தாங்கள் ரஷ்யப்படங்களில் நடித்ததாகச் சொல்லிக்கொள்ளலாம். இறந்தபின்பு அவர்களுக்கு குறிப்பெழுத உதவியாக இருந்திருப்பது இணையத்தின் மூலம் புரிகிறது. லதா மங்கேஷ்கரும் ரஷ்யப் படத்தில் பாடல்கள் பாடியிருக்கிறார். சும்மா இல்லை, அதுவும் ஹிந்திப்பாடல்!

அஃபனாஸியை இஸ்லாத்திற்கு மாறச் சொல்லும்போது அவர் அதை மறுக்கிறார் என்று படம் சொல்கிறது. ஆனால் கூகிளில் தேடினால், அவர் கடைசி காலத்தில் இஸ்லாமியராக வாழ்ந்ததற்கான சாத்தியங்களே அதிகம் என்று வருகிறது. அவர் இந்தியாவில் இருந்தததால் ரஷ்யாவில் எப்போது கிறிஸ்துமஸ் வருகிறது எனத் தெரியாமல் ஈத்தையே கொண்டாடினார் என்றெல்லாம் சொல்கிறது கூகிள். அவரது பயணக்குறிப்பின் கடைசிப் பக்கங்களில் காணக்கிடைக்கும் அராபிய தொழுகைக் குறிப்புகளில் இருந்தும், உடைந்த அராபிய எழுத்துகளிலிருந்தும் அவர் இஸ்லாமியராக மாறியிருப்பதற்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே தோன்றுகிறது என்கிறது கூகிள்.

அஃபனாஸியின் வெண்கலச் சிலையொன்று ரஷ்யாவில் இருக்கிறது. இதற்குப் பின்னான ஒரு சுவாரஸ்யமான தகவலைச் சொல்கிறது விக்கிபீடியா. ரஷ்யாவின் அமைச்சர் ஒருவர் இந்தியாவைப் பார்வையிட்டபோது, அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவரிடம் இந்தியாவின் முதல் ரஷ்ய யாத்ரிகர் பற்றிக் கேட்டாராம். அவரது சிலையை தங்கள் நாட்டில் நிறுவியிருந்ததாகச் சொன்னாராம் அமைச்சர். ஆனால் உண்மையில் அப்படி ஒரு சிலையில்லை. ரஷ்ய அமைச்சர் உடனடியாகத் தனது நாட்டுக்குத் தொடர்புகொண்டு, நேரு அடுத்தமுறை இந்தியா வருமுன் அந்தச் சிலையை உடனடியாக நிறுவவேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். அதன்படி நிறுவப்பட்டதாம் அச்சிலை.

யாரோ ஒரு இந்திய இயக்குநரிடம் கருத்துக் கேட்டுப் படம் எடுத்திருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது. இந்தியப் படங்கள் மாதிரியே அலைகிறது இப்படம். எதற்கெடுத்தாலும் ஹிந்தியில் பாடிக்கொல்கிறார்கள். (ஹிந்தியில் வெளியான பர்தேஸி இந்தப் படத்தின் மொழிமாற்றமா, மறுஆக்கமா எனத் தெரியவில்லை.) படம் வந்து கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் இருக்கவேண்டும். படத்தின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. இசையும் அப்படியே. இந்தியக் காட்சிகளில் சீன இசைபோன்று வந்தாலும், பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. இந்திய நிலப்பரப்பு தெரிந்தவுடன் இசைக்கும் வேதங்களோடு சேர்ந்த பின்னொலியும், தொடர்ந்த மழைக்காட்சிகளும் அருமை. ஆனால் மக்கள் தொலைக்காட்சி இதை உலகத் திரைப்படங்கள் வரிசையில் வைத்ததைத்தான் ஜீரணிக்கமுடியவில்லை. இதுவரை உலகத் திரைப்படங்கள் வரிசையில் ஒரு தமிழ்ப்படம் கூட ஒளிபரப்பாத மக்கள் தொலைக்காட்சி (அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, தமிழ்த்திரைப்படங்களின் தரம் அப்படித்தானிருக்கிறது என்றாலும்) இப்படத்தைவிட பல விதங்களில் மேன்மையான தமிழ்ப்படங்களான வீடு, சந்தியா ராகம், உன்னைபோல் ஒருவன் படங்களை ஒளிபரப்பலாம். ஒருவேளை இப்படத்தின் மூலமான பயணக்கட்டுரையின் முக்கியத்துவத்தில் ஏமாந்துவிட்டார்களோ என்னவோ.

கட்டுரைக்கு உதவிய சுட்டிகள்.

http://en.wikipedia.org/wiki/A_Journey_Beyond_the_Three_Seas
http://en.wikipedia.org/wiki/Afanasy_Nikitin

Share

களியாட்டம் – மலையாளத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 04)

கேரளாவின் வடக்குப் பகுதியில் மரபாக வரும் களியாட்டம் என்பது தெய்வத்தின் ஆட்டம் (தெய்யம் அல்லது தெய்யாட்டம்) என்று நம்பப்படுகிறது. கண்ணகி போன்ற, உயிருடன் வாழ்ந்த மனிதர்களை தெய்யங்களாக வரித்து ஆடும் ஆட்டம் இது. சமூகத்தையும் தாங்கள் வாழும் கூட்டத்தையும் இந்தக் களியாட்டம் காக்கும் என்று நம்பினார்கள் இதை ஆடுபவர்கள். வேலன், மலையன், பெருவண்ணன் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களே களியாட்டத்தின் தெய்யங்களாக ஆடுகிறார்கள். இந்த மூன்று சாதிகளுமே ஒரே சாதியின் பல்வேறு பிரிவுகள்தான் என்று சொல்கிறார்கள். தெய்யத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் களியாட்டமே பின்னாளில் கதகளியாக மாறியது. இந்த வேர்களை நாம் தமிழில் காணலாம் என்றும் வேலன் வெறியாடலே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்களில் களியாட்டமாக உருமாறியது என்றும் சொல்கிறார்கள். பெருங்களியாட்டம் என்பது பல்வேறு தெய்யங்களின் வேடத்தையும் புனைந்து ஒருவரே ஆடும் ஆட்டம். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.

ஜெயராஜ் இயக்கி சுரேஷ்கோபி, மஞ்சு வாரியர், பிஜூ மேனோன், லால் நடிப்பில் 1997ல் வெளியானது களியாட்டம் திரைப்படம். சேக்ஸ்பியரின் ஒதெல்லோவைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம். தமிழ்ப்படங்களைப் போல் மறைக்காமல் இதை படத்தின் ஆரம்பித்திலேயே காண்பித்துவிடுகிறார்கள். தெய்ய ஆட்டக்காரனான கண்ணன் பெருமலையன் தாமரையின் மீது காதல் கொண்டு அவளை மணக்கிறான். உயர்ந்த சாதியைச் சேர்ந்த தாமரை தன் சாதியையும் தன் தந்தையையும் மறுத்துவிட்டு கண்ணன் பெருமலையனை மணம் செய்துகொள்கிறாள். அப்போது தாமரையின் தந்தை சபையில் எல்லார் முன்னிலும் தன்னை வஞ்சித்ததுபோலவே ஒருநாள் தன் கணவனையும் தன் பெண் வஞ்சிக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை என்று சொல்லி, சந்தேகத்தின் விதையை விதைத்து வைக்கிறான். பனியன் தெய்யங்களில் நகைச்சுவை வேடமேற்பவன். கண்ணன் பெருமலையன் மீது இருக்கும் பொறாமையாலும் தெய்யத்தின் முக்கிய ஆட்டக்காரனாக மாறி, கண்ணன் பெருமலையனின் இடத்தைப் பிடிக்கும் எண்ணத்திலும், மலையன் மனைவிக்கும் காந்தனுக்கும் தவறான உறவிருப்பதாக மலையனிடம் சொல்கிறான். சந்தர்ப்பங்கள் இதை உறுதிப்படுத்த, அதை நம்பி தன் மனைவி தாமரையை, பெருங்களியாட்டம் நடக்கும் அன்று கொல்கிறான் கண்ணன் பெருமலையன். அவள் இறந்தபின்பே தன் மனைவி குற்றமற்றவள் என்றும் பனியனின் சதி இது என்றும் தெரிகிறது. பனியனின் கையையும் காலையும் முறித்துவிட்டு, தனக்கு அடுத்த தலைமை தெய்ய ஆட்டக்காரனாக காந்தனை நியமித்துவிட்டு, பெருங்களியாட்டத்தில் தெய்யமாகவே அவன் எரியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கிறான்.

ஒதெல்லோ போன்ற கதைகளை நம் சூழலுக்குப் படம் எடுக்கும்போது எப்படி அதை மாற்றவேண்டும் என்பதற்கு இப்படத்தை ஒரு மாதிரியாக வைக்கலாம் என்கிற அளவிற்கு மிகச் சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெய்ய ஆட்டக்காரர்கள் தங்கள் உடலெங்கும் வண்ணத்தை வரைந்துகொண்டு, அலங்காரமாக ஆழ்நிற வண்ணங்களுடன் அமைக்கப்பட்ட கிரீடங்களையும் கவசங்களையும் அணிந்துகொண்டு, கண்களைச் சுழற்றும் அழகும் புருவங்களை உயர்த்தும் அழகும் சிறப்பாக இருக்கும். இந்த அலங்காரங்களைச் செய்யவே கிட்டத்தட்ட பத்து மணிநேரம் வரை ஆகும் என்கிறார்கள். இரவில் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு தெய்யங்கள் ஆடும் காட்சியில் வண்ணங்களும் தீயின் பல்வேறு நிறங்களும் தங்கள் ஆளுமையை தீவிரமாகப் பறை சாற்றுபவை. இவற்றை எந்தவிதக் குறையுமில்லாமல் அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். படமெங்கும் இழையும் வண்ணங்கள் படத்திற்கு ஒரு தொடர்ச்சியைத் தருகின்றன. கண்ணன் பெருமலையனும் தாமரையும் வண்ணங்களோடு உடலுறவு கொள்கிறார்கள். தரையில் குங்குமம் மஞ்சளும் தங்கள் தீவிர நிறத்துடன் கலந்து சிந்துகின்றன. வண்ணமயமான பட்டின் மேல் உறவுகொள்கிறார்கள். பின்னர் அந்தப்பட்டே உறவுக்கான முன்னறிவிப்பாகிறது. கண்ணன் பெருமலையன் தாமரை காந்தனுடன் உறவுகொள்வதாக நினைக்கும் காட்சிகளைக்கூட அதே நிறங்களுடன் காண்கிறான். படமெங்கும் வண்ணம் பிரிக்கமுடியாமல் அழகாகக் கலந்துகிடக்கிறது.


அதேபோல் படமெங்கும் வரும் கேரளத்தின் மரபிசை. செண்டையும் தாளமும் படத்தில் எல்லாக் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில சாதாரண காட்சிகளில்கூட இந்த மரபிசை தேவையற்றுப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் உக்கிரம் கொள்ளும் காட்சிகளில் அதே உக்கிரத்தை இசையும் கொள்கிறது. இசையமைப்பாளர் கைதப்பரம் விஸ்வநாதன் பாடல்களையும் இதே மரபின் தன்மையோடு இசையமைத்துள்ளார். கண்ணாடிப் புழையொடு தீரத்து பாடலும் கதிவனூரு வீரனே பாடலும் இந்த வகையைச் சேர்ந்தவை. அதிகம் அறியப்பட்ட சிறப்பான பாடல் ‘என்னோடெந்தினா பிணக்கம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடைசி காட்சியில் தெய்ய ஒப்பனையோடு பெருமலையன் தாமரையைக் கொல்லும் காட்சியின் பின்னணி இசை உக்கிரம் கொள்ளவும் நெகிழ வைக்கவும் செய்கிறது.

மஞ்சு வாரியர் தாமரையாக நடித்திருக்கிறார். படத்தில் இவரது நடிப்பு வெகு இயல்பாகவும் ஆர்பாட்டம் இல்லாததாகவும் அமைதியானதாகவும் இருக்கிறது. அழகும் அமைதியும் கூடி விளங்கும் தாமரையைக் காணும்போது, தன் லட்சணமற்ற முகம் இவளுக்குத் தகுதியானதல்ல என்கிற எண்ணம் கண்ணன் பெருமலையனுக்கு ஏற்படுவது இயல்பே என்று பார்வையாளர்களே நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அழவேண்டிய காட்சிகளில் சட்டெனக் கண்ணீர் விடுவதும், தன்னைக் கொல்ல கணவன் நெருங்கும் நேரத்தில் பயத்தில் மிரள்வதும் அவனையே கட்டிக்கொண்டு கெஞ்சுவதுமென மஞ்சு வாரியர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘ஏடா புல்லே’ புகழ் மாஸ் ஹீரோவான சுரேஷ் கோபி கண்ணன் பெருமலையனாக நடித்திருக்கிறார். முதலில் ஒரு மாஸ் ஹீரோவுக்குள் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பற்றிய தேடல் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். இப்படத்தை தயாரித்ததும் சுரேஷ் கோபி என்னும்போது ஏற்படும் ஆச்சரியம் பலமடங்காகிறது. த்வீபா என்னும் கன்னடப்படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா என்ற போது இதே ஆச்சரியத்தை நான் அடைந்தேன். கண்ணன் பெருமலையனாக சுரேஷ்கோபி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் மிக மெதுவாகவும் ஆர்பாட்டமில்லாமலும் வரும் அவரது கதாபாத்திரம், தன் மனைவியின் மீதான சந்தேகம் வலுக்கொள்ள கொள்ள கடும் சீற்றம் கொண்டதாகவும் குழப்பம் கொண்டதாகவும் மாறுகிறது. அத்தனையையும் தன் முகபாவத்திலேயே வெளிப்படுத்துகிறார். பனியன் பெருமலையனிடம், பொது இடத்தில் காந்தன் எப்படியெல்லாம் தாமரையை தான் அனுபவித்ததைப் பற்றிச் சொன்னான் என்று சொல்லும்போது, சுரேஷ்கோபி வெளிப்படுத்தும் ஆத்திரம், அச்சம், அசிங்கம் என எல்லா பாவங்களும் அருமையாக இருக்கின்றன. அதன் வேகத்திலேயே அவருக்கு வலிப்பு வருகிறது. வலிப்பு வருபவனின் மூளை அடையும் சலனத்தை அவரது முகத்திலேயே நாம் பார்த்துவிடமுடிகிறது. அத்தனை கோபமும் சந்தேகமும் தாமரையைப் பார்த்ததும் அவருக்கு அடங்கிப் போகிறது. தன் மனைவி குற்றமற்றவளாகவே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் தலைதூக்க பெரும் குழப்பத்திலும் அமைதியிலும் அவர் ஆழ்வது சரியான இயக்கம். கடைசியில் தன் மனைவியைக் கொல்ல, பெருங்களியாட்டத் தெய்யத்தின் ஒப்பனையோடு அவர் வந்து கவிதைத்துவமாகப் பேசும் காட்சியும், தாமரை தான் குற்றமற்றவள் என்று கதறி அழுது அவனைக் கட்டிக்கொள்ளும்போது ஒரு கணம் கனிவு பொங்க மறுகணம் ருத்ரம் கொண்டு கொல்லும் காட்சியும் சுரேஷ்கோபியின் நடிப்பின் உச்சம் என்று சொல்லவேண்டும்.

படத்தில் வண்ணங்களையும் ஒப்பனையையும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஒப்பனை கலைத்தபின்பும்கூட சுரேஷ் கோபியின் கண்களில் தெரியும் கருவளையமும் கரும்பொட்டும் வெகு அழகு. அதேபோல் குழப்பத்தின் உச்சியில் மலையுச்சி நோக்கி ஓடி கதறும் பெருமலையன் முன்பு அவனது மூதாதையர்கள் மானசீகமாகத் தோன்றுவதும், அவன் நிகழுலகிற்குள் வரும்போது அங்கு பணியன் நிற்பதும் சிறப்பான காட்சிப்படுத்தல். பணியனாக வரும் லாலும் காந்தனாக வரும் பிஜூ மேனோனும் பணியனின் மனைவியாக வரும் பிந்து பணிக்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தானும் மலையன் கூட்டத்தில் ஒருவனென்றாலும் தனக்கு தெய்யம் கட்ட முடியவில்லை என்னும் கோபத்தை ஒரு சாதாராண மனிதனுக்குரிய வகையில் லால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வண்ணங்களைப் போலவே தீயும் அதன் நாவுகளும் தீப்பொறிகளும் தொடர்ச்சியான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. பெருமலையன் முதலில் தாமரையைச் சந்த்திப்பது தீமிதிக்கும்போது ஏற்பட்ட காயத்துக்கு பின். தெய்ய ஆட்டத்தில் ஒப்பனையுடன் தீ மிதிக்கும் காட்சிகள் முக்கியமானவை. தீப்பொறிகள் சிதறி விழுவதை ஒளிப்பதிவு செய்திருக்கும் விதமும் எரியும் பெருந்தீயின் செந்நிறத்தில் தென்படும் எல்லா கதாபாத்திரங்களும் செம்மை கொள்வதை படத்தில் கொண்டு வந்திருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. தாமரையை பெருமலையன் கொல்லும் காட்சிகளில் வீடெங்கும் ஒளிரும் விளக்குகள். நெருப்பில் தொடங்கும் படம், கண்ணன் பெருமலையன் தன் தவறை உணர்ந்து இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்கிற எண்ணத்தில் நெருப்பில் அமிழ, நெருப்பின் கோரப் பசி அவனை விழுங்கி மேலும் கொளுந்துவிட்டு எரிய, நெருப்பிலேயே முடிகிறது. ஜெயராஜின் வண்ணங்களின் மீதான மோகத்தை கண்ணகி திரைப்படத்திலும் பார்க்கமுடியும். அப்படத்தில் வரும் சேவலின் நிறமும் அதன் உக்கிரமும் கடைசியில் லாலுக்கும் நந்திதா போஸ¤க்கும் மாற்றப்படும்.

இப்படத்தில் கதிவனூரு வீரன் என்கிற தெய்யத்தின் ஆட்டத்தையே கண்ணன் பெருமலையன் ஏற்கிறான். கதிவனூரு வீரன் பற்றிய கதை எங்கும் கிடைத்தால் எனக்கு அறியத் தரவும். நிச்சயம் மரபில் வந்த கதை ஒன்றிருக்கும். அதை அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் திரைப்படத்தை maebag.com என்கிற வலைத்தளத்தில் இருந்து வாங்கினேன். விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளவும். முக்கியமான விஷயம், எனக்கு இந்நிறுவனத்தைப் பற்றித் தெரியாது. கூகிளில் தேடி, நான் ஆர்டர் செய்தேன், எனக்கு சரியாக படத்தை அனுப்பிவிட்டார்கள். அதனால் இதை ஒரு தகவல் என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ளவும்

.

Share

கல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள்

கல்லூரி படம் பார்த்தேன். (சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் அந்தப் படத்தைப் பார்த்து எழுதுவது என்பது பெரிய விஷயமாகத்தான் போய்விட்டது எனக்கு!)

முடிவின் கனத்தில் முன்னோக்கி நகரும் இன்னொரு படம். நடிகர்களின் தேர்வு வெகு யதார்த்தம். எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் கதாநாயகியாக வரும் நடிகையின் முக பாவங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. காதல், நட்பு, ஏக்கம், கோபம், பொஸஸிவ்நெஸ் என எல்லாவற்றையும் முக அசைப்பிலேயே காண்பிக்கிறார். கதாநாயகியுடன் நடிக்கும் பெண், கயல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் பாத்திரப் படைப்பும் அருமை. எப்படியும் நட்பு வட்டத்துள், இப்படி மரபு பேசி, குற்ற உணர்ச்சியை அதிகமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருந்தே தீருவார். அதேபோல் இன்னொரு நடிகர், எப்போதும் கமெண்ட் அடித்துக்கொண்டு, பரதநாட்டியம் ஆடும் நடிகர். வெகு யதார்த்தம். இப்படியும் ஒரு நண்பர் உங்கள் நட்பு வட்டத்துள் இருந்தே தீருவார்.

செழியனின் கேமராவில் கல்குவாரி காட்சிகள் அழகு. மழையில் வரும் ஒரு பாடலும் வெகு அழகு.

யதார்த்தமான காட்சிகளே படத்தின் பலம். தொடர்ச்சியான கலாய்த்தல் மூலம், மாறி மாறிப் பேசிக்கொள்வதன் மூலமும் பாலாஜி சக்திவேல் நட்பை அதிக பிணைப்பு கொள்ளச் செய்கிறார். ஒரு கட்டத்தில் இது அளவுக்கு மீறி எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. படத்தின் முடிவு தரவேண்டிய கடுமையான மன உளைச்சலுக்கு – நானும் மன உளைச்சலுக்கு ஆளானேன் – இந்த சலிப்பு தேவை என்று இயக்குநர் உணர்ந்தே செய்தாரோ என்னவோ.

கதாநாயகி கதாநாயகன் மீது நெருக்கம் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் ஒரு வகையில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, நணபர்கள் மதுரைக்குச் சென்று பங்குகொள்ளும் இணடர் மீட் காட்சிகள். இதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பது நாயகியின் பொஸ்ஸஸிவ்நெஸ்ஸை. அதற்கு இந்தக் காட்சிகளின் நீளம் அதிகம். ஏனென்றால் இதற்கு அடுத்து வரப்போகும் (மகாபலிபுரம் காட்சியில் கயல் முத்துவின் தலையை தடவிக்கொடுப்பது) காட்சியும் இதையே முன்வைக்கப்போகிறது.

கல்லூரியின் மிக முக்கியமான இரண்டு இதில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒன்று, என்னதான் ஒரு கூட்டமாக ஆண் பெண் நட்பிரிந்தாலும், அதிலிருந்து பிரிந்து ஆண்களுக்குள்ளே ஏற்படும் நட்பும் அதில் முக்கியப்பொருளாக விவாதம் கொள்ளும் காமமும். பெரும்பாலும் இளைஞர்களுக்கு BF, மேற்படி படங்கள் அறிமுகமாவது கல்லூரியில்தான். இதைப் பற்றிய விஷயமே இந்தக் கல்லூரியில் இல்லை. இரண்டாவது, கல்லூரியின் தேர்தல் மற்றும் சமூகத்தின் ஜாதி தனது முகத்தை அறிமுகப்படுத்தும் காலங்கள். தேர்தல் நேரத்து களைகட்டுதல் இல்லாது கல்லூரிகளே இல்லை. மட்டுமின்றி, ஒரு இளைஞன் மெல்ல ஜாதிகளின் நிழல் அதன் இன்னொரு முகத்தோடு தன் மீது படிவதை ஒரு கல்லூரியில் உணரத் தொடங்குவான். அதிலும் இதுபோன்ற கிராமம் சார்ந்த மனிதர்கள் சென்று படிக்கும் கல்லூரிகளில் இந்த விஷயம் வெகு சாதாரனம். மதுரை இண்டர் மீட்டுக்கு பதில் இதில் எதாவது ஒன்றை இயக்குநர் யோசித்திருக்கலாம் என்று தோன்றியது. இதனால் கல்லூரி படம், கல்லூரியில் நடக்கும் ஆண் பெண் உறவை மட்டுமே முன்வைப்பதாக அமைந்துவிட்டது. இதன் பல்வேறு பிரிவுகள் கவனிக்கப்படவில்லை.

இவ்வளவு யதர்த்தமான படத்தில் வரும் சில நாடகத்தனமான காட்சிகள். முதலில் எல்லா நண்பர்களின் வீட்டைப் பற்றிக் காண்பிக்கும்போது வெளிப்படுத்தப்படும் வறுமை. இதில் உண்மையிருக்கும் அளவிற்கு காட்சிகள் அமைத்த விதத்தில் ஈர்ப்பு இல்லை. தகவல்கள் போல இவர்களின் நிலைமை சொல்லப்படுகிறது. இதனால் அவர்களின் வறுமை பார்வையாளர்களின் வறுமையாக மாறாமல் போகிறது. அடுத்தது, நட்பு அன்பு என்கிற அடிப்படையில் நடக்கும் பாசமிகு காட்சிகள். அதில் முக்கியமானவை இரண்டு. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் சாப்பிடாமல் போனதும் அனைவரும் வருந்துவதும் சாப்பிடாமல் போவதும் நாடகத்தன்மை உள்ள காட்சி. இன்னொரு காட்சி, அவர்கள் அனைவரும் திருச்சிக்கு சென்று முத்துவை வெற்றி பெறச் செய்தார்கள் என்று சொன்னதும், எல்லாத்துக்கும் காரணம் ஷோபனா என்று சொல்லப்படுவதும் தொடர்ந்து முத்து நெகிழ்ச்சி அடைவதுமான காட்சிகள். இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், காதல் படத்தில் வரும் செயற்கையான காட்சிகள் வெகு குறைவு. அதேபோல் கல்லூரி முதல்வர் வெகு செயற்கை.

படத்தின் நெடுகில் வரும் இளையராஜாவின் பாடல்கள். வாவ், என்ன ஒரு அற்புதம். உண்மையில் இளையராஜாவை திரையுலகம் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பாடல்களில் வரும் வெறுமையை உறுதிப்படுத்துகிறது அங்கங்கு தெறித்து விழும் இளையராஜாவின் பாடல்கள். ஜோஷ்வர் ஸ்ரீதரின் இசையில் ஜூன்மாதம் என்று வரும் பாடல் கொஞ்சம் தரமானதாகத் தோன்றியது. மற்ற பாடல்களைப் பற்றி இன்னும் நிறைய முறை கேட்டால்தான் மேலும் சொல்ல முடியும். பின்னணி இசையில், மௌனம் காத்திருக்கவேண்டிய இடங்களில் நெகிழ்ச்சியை அள்ளி இறைக்கும் இசையை அமைத்துவிட்டார். இதை தவிர்த்திருந்திருக்கலாம்.

படம் கல்லூரியின் மீது படியும், கல்லூரி மாணவர்கள் கொஞ்சமும் நினைத்தே இராத, அரசியலின் கொடுமையைப் பற்றிப் பேசுகிறது. நம்மை யோசிக்க வைக்கிறது. மிரள வைக்கிறது. இந்த வகையில் இது முக்கியமான படமே. ஆனால், மணிரத்தினத்தின் பாணி போல, களத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அக்களத்தின் மீதான சமூக, அரசியல் காரணங்களைப் பற்றி ஆராயாமல், எல்லாவற்றையும் பார்வையாளன் மீதே சுமத்திவிடுகிறது இப்படமும். அந்த வகையில் இதை ஒரு குறையாகவும் சொல்லமுடியும். (உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதன் இயலாமை புரியக்கூடும். அப்படி அரசியல் சமூகக் காரணங்களை தெளிவாகச் சொல்லிப் படமெடுக்கும் சூழல் இல்லை என்பதை அவர்கள் முன்வைக்கலாம். எரிப்புக்களம் ஆந்திராவுக்குப் போவதும் வெள்ளைக் கொடிகள் மங்கலாக அசைவதும் இதை உறுதி செய்கின்றன. இயக்குநரின் எல்லையைப் பற்றியும் புரிந்துகொள்கிறேன். விசுவின் அரங்கத்திற்கு விவாத அரங்கம் என்று பெயர் வைக்குமளவிற்கு மட்டுமே இங்கு இயக்குநரின் சுதந்திரம் இருக்கிறது என்பதும் புரிகிறது.)

காதல் படத்தில் வரும் சிறு சிறு பிழைகள் இப்படத்திலும் தொடர்கின்றன. கதாநாயகி ஒரு தடவை ‘ஓகே’ என்கிறார். பின்குரல் சரி என்கிறது. உதட்டசைவும் குரலும் ஒன்றுபடவில்லை. மழையில் வரும் பாடலொன்றில் ஒரேமாதிரியான முகபாவங்கள் இரண்டு முறை வருகிறது. இந்த இரண்டும் சிறு விஷயங்களே. படத்தின் கடைசி காட்சியில், முத்துவின் பையிலிருந்து கீழே விழும் கர்சீஃபைத் தொடர்ந்து கதாநாயகியின் ரீயாக்ஷனும் இரண்டு முறை வருகிறது. இதை நிச்சயம் எடிட்டிங்கில் தவிர்த்திருந்திருக்கவேண்டும். மிக முக்கியமான காட்சி அது.

இரண்டு நண்பர்கள் ‘நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க’ என்று சொல்லும் காட்சிகள் பயன்படுத்தப்படும் விதம் வெகு அருமை. உண்மையிலேயே பல சந்தர்ப்பங்களில் இவை நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. இன்னொருவகையில், இக்கதாபாத்திரங்கள் காடு நாவலில் வரும் இரண்டு ஆண் நண்பர்களை எனக்கு நினைவுக்குக் கொண்டு வந்து, தேவையில்லாமல் நிறைய யோசிக்க வைத்துவிட்டது!

இவ்வளவு அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, யதார்த்தமான படம் எடுப்பது என்பது பெரிய சவால். அதை வெகு கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். எனக்குத் தெரிந்த நடிகர் யார்தான் வந்தார் என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன், விசு தவிர ஒருவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை! அப்படியென்றால் இயக்குநரின் உழைப்பு எத்தகையது என்று புரியலாம்.

காதல் தந்த மயக்கம் தீராத நிலையில், இந்தப் படத்தை காதலோடு ஒப்பீடு செய்வதை நிறுத்தவே முடியாமல் போனால், இப்படம் கொஞ்சம் சுணக்கம் பெறும். ஆனால் பாலாஜி சக்திவேல் முக்கியமான இயக்குநராக அறியப்படுவார்.

மதிப்பெண்: 45/100

Share

மஜித் மஜிதியின் பரன் – இரானியத் திரைப்படம் (Majid Majidi’s Baran – Iranian Movie)

பரன் (இரானியத் திரைப்படம்)

கதை: (கதையை விரும்பாதவர்கள் இதை தவிர்த்துவிட்டு தொடர்ந்து வாசிக்கவும்!)

மஜித் மஜிதி (Majid Majidi) 2001ல் இயக்கி வெளிவந்த திரைப்படம். உலகப் புகழ் பெற்ற Children of Heaven திரைப்படத்தைப் போலவே மிக எளிமையான கதையை, செய்நேர்த்தியின் மூலம் உன்னதப் படைப்பாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். சிறப்பான ஒளிப்பதிவு, இயல்பான நடிப்பு, ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர் எடுத்துக்கொள்ளும் உழைப்பு இவற்றின் வழியாக பரன் ஒரு சிறந்த படமாகிறது.

பதின்ம வயதில் இருக்கும் லதீ·ப் (Lateef) ஒரு இரானியன். டெஹ்ராடூனில் கட்டுமானத் தொழில் நடக்கும் இடத்தில், அங்கிருக்கும் தொழிளாலர்களுக்கு தேநீரும் உணவும் செய்து பரிமாறும் வேலையைப் பார்க்கிறான். வயதிற்கேற்ப விளையாட்டுத்தனத்தோடும் துடுக்கோடும் திரியும் அவன் வாழ்க்கையில் ஒரு பெண் ஏற்படுத்தும் மாறுதலும் அதை அவன் எதிர்கொள்ளும் விதமும் கவித்துவமாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் போர் நடப்பதால், அங்கிருந்து பாஸ்போர்ட் இல்லாமல் இரான் வரும் அகதிகள், சொற்ப சம்பளத்தில், சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்கிறார்கள். அப்படி வேலை பார்க்கும் ஒரு ஆப்கானிஸ்தானியான நஜ·ப் (Najaf) இரண்டாவது மாடியிலிருந்து தவறிக் கீழே விழுந்துவிடுகிறான். அங்கு வரும் லதீ·ப் “ஏன் நஜ·ப் பாராசூட் இல்லாம குதிச்சார்” எனக் கேட்கிறான். படம் ஆரம்பித்த இரண்டு, மூன்று காட்சிகளில் லதீ·பின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுவிடுகிறது. அவன் இப்படி கேட்கும் வசனமும் அதற்கு இசைவாக இருக்கிறது.

மறுநாளிலிருந்து சொல்தான் (Soltan) என்னும் மனிதனுடன் நஜ·பின் 14 வயது மகன் ரஹ்மத்தும் வேலைக்கு வருகிறான். மேஸ்திரி மெமர் (Memar) முதலில் சிறுவனை வேலைக்குச் சேர்க்க மறுக்கிறான். சொல்தானின் வற்புறுத்தலுக்கு இணங்க, நஜ·பின் வறுமையை மனதில் கொண்டு, சம்மதிக்கிறான். 14 வயது சிறுவனால் சிறப்பாக வேலை செய்யமுடியவில்லை. எல்லாரும் அவனைத் திட்டுகிறார்கள். நிலைமை கட்டுக்கு மீறும் சமயத்தில், அவன் வயதை கருத்தில் கொண்டு, மெமர் சிறுவனுக்கு தேநீர் செய்யும் வேலையையும் லதீ·ப்க்கு கடினமான வேலையையும் மாற்றித் தந்துவிடுகிறான். இதைத் தொடர்ந்து கடும் கோபமடையும் லதீ·ப் சிறுவனுடன் எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறான். ஆனால் சிறுவன் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்து, அனைத்து தொழிலாளர்களிடம் நல்ல பெயர் எடுத்துவிடுகிறான். இது மேலும் எரிச்சலைத் தருகிறது லதீ·புக்கு. திடீரென ஒருநாள் தற்செயலாக சமையலறையில் பார்க்கும்போது, அந்தச் சிறுவன் ஒரு சிறுவனல்ல என்றும், அது ஒரு பெண் என்றும் அறிந்துகொள்கிறான் லதீ·ப்.
அவனுள் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவளுக்கு ஒரு கார்டியன் போலச் செயல்படுகிறான். சோதனைக்கு வரும் அரசாங்க அதிகாரிகளிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான். அதன் பின்பு அரசாங்க அதிகாரிகள் பாஸ்போர்ட் இல்லாத ஆ·ப்கானிஸ்தானியர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என்று மெமரைக் கடுமையாக எச்சரிக்க, அந்தப் பெண்ணும் சொல்தானும் வேலை வரமுடியாமல் போகிறது.

ரஹ்மத்தைப் பார்க்காமல் லதீ·பின் உலகம் இருள்கிறது. அவளைத் தேடிக் கிராமத்துக்குச் செல்வது என்று முடிவெடுத்து, மெமரிம் பொய் சொல்லிவிட்டு அவளைத் தேடிப் போகிறான். கிராமத்தில் ரஹ்மத் லதீ·பைக் கண்டாலும், அவன் கண்ணில் படமால் மறைந்துகொள்கிறாள். எதேச்சையாக சொல்தானைச் சந்திக்கும் லதீ·ப், ரஹ்மத் குடும்பத்தின் வறுமை நிலையை அறிகிறான். அதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் மெமரிடமிருந்து பெற்றுக்கொண்டு, அதை சொல்தானிடம் தருகிறான். அப்பணத்தை சொல்தான் நஜ·ப்க்குத் தரவேண்டும் என்றும் அது தான் தந்ததாக நஜ·பிற்குத் தெரியவேண்டாமென்றும் கேட்டுக்கொள்கிறான். மறுநாள் அவரை சந்திப்பகாதக் கூறிச் செல்கிறான். மறுநாள் சொல்தானுக்குப் பதில் அங்கு நஜ·ப் வருகிறான். சொல்தான் பணத்தைத் தனக்குத் தர வந்ததாகவும் தன்னைவிட பணம் சொல்தானுக்குத்தான் தேவை என்பதால் சொல்தான் அப்பணத்துடன் ஆப்கானிஸ்தான் சென்றுவிட்டதாகவும் கூறுகிறான் நஜ·ப். பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறான் லதீ·ப். அப்போது ரஹ்மத்தின் உண்மையான பெயர் பரன் என்றும் அறிந்துகொள்கிறான்.

வீட்டின் வறுமை தாளாமல் பரன் ஆறுகளில் கல் பொறுக்கும் வேலை செய்வதைப் பார்த்து மிகவும் வருத்தமடைகிறான் லதீ·ப்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் போரில் நஜ·பின் அண்ணன் இறந்துவிடுவதால் நஜ·ப் உடனடியாக ஆப்கானிஸ்தான் செல்லவேண்டியிருக்கிறது. நஜ·பைப் பார்க்கவரும் லதீ·ப் இதை அறிந்துகொண்டு, தன் பாஸ்போர்ட்டை விற்றுப் பணம் கொண்டு வந்து நஜ·பிற்குத் தருகிறான். அந்தப் பணத்தை மெமர் தந்ததாகவும் அது நஜ·பிற்குச் சேரவேண்டிய பணம்தான் என்றும் பொய் சொல்லுகிறான். அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தன் மகள் பரனுடன் ஆப்கானிஸ்தான் செல்கிறான். அவள் விட்டுச் செல்லும் கால் சுவட்டை அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போது மழை கால்சுவட்டை நீரால் நிறைக்கிறது.

பதின்ம வயதில் லதீ·பிற்கு ஏற்படும் உணர்வுகள் வெகு அழகாகச் சித்தரிக்கப்படுகின்றன. ரஹ்மத்தாக வேலை செய்யும் ஆண் நிஜத்தில் ஒரு பெண் என அறிகிற நேரத்தில் அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக அழகாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. பரனாக வரும் கதாபாத்திரம் ஒரு வசனம் கூட இப்படத்தில் பேசுவதில்லை. கடைசியில் ஆப்கானிஸ்தான் செல்லும்போது, ஒரேயொரு முறை லதீ·பைப் பார்த்து புன்னகைக்கிறாள். அவளை நினைத்தே லதீ·ப் இவ்வளவும் செய்கிறான் என்பதை அவள் புரிந்துகொண்டிருக்கிறாள் என்பதை அக்காட்சி காட்டுகிறது.

அழகான ஒரு காதல் கதைக்கு இடையில் ஆப்கானிஸ்தான் அகதிகள் படும் கஷ்டமும் சொல்லப்படுகிறது. அரசாங்க அதிகாரிகள் சோதனைக்கு வருவது தெரிந்தவுடன், அனைத்து ஆப்கானிஸ்தான் தொழிலாளர்களும் அவர்களிடத்தில் மாட்டாமல் இருக்க மறைவிடம் நோக்கி ஓடுகிறார்கள். மெமர் ஒரு காட்சியில், இரானியர்களை வேலைக்கு வைப்பதை விட ஆப்கானிஸ்தான் அகதிகளை வேலைக்கு வைப்பது நல்லது என்கிறான். காரணம், ஆப்கானிஸ்தான்காரர்கள் மாடு போல் உழைப்பவர்கள்; அவர்களுக்குக் குறைந்த கூலி கொடுத்தால் போதுமானது.

குறிப்பு: baran என்பதன் சரியான உச்சரிப்பு தெரியவில்லை. பாரோன் என்பதாக இருக்கலாம். இப்போதைக்கு பரன் என்றே எழுதியிருக்கிறேன்.

லதீ·ப் இரானியன் என்பதால் அவன் பாஸ்போர்ட் நல்ல விலைக்குப் போகிறது. அதை ஏதேனும் ஒரு ஆப்கானிஸ்தானியின் படம் ஒட்டி, அவனை இரானியாக உலவ விட பயன்படுத்திக்கொள்ளமுடியும். உண்மையில் இது லதீ·பின் எதிர்காலத்தையே தகர்த்துவிடக்கூடியது. அதுமட்டுமில்லாமல், லதீஃப் அத்தனை காலம் உழைத்த பணம் முழுவதையும் நஜ·பிற்குக் கொடுக்க முடிவெடுக்கிறான். விடாமல் துரத்தும் அந்தப் பெண்ணின் நினைவே அதன் காரணம். அவள் நினைவாக அவளது ஹேர் பின்னையும் அதில் சிக்கியிருக்கும் அவளது முடி ஒன்றையும் கடைசி வரைக்கும் வைத்திருக்கிறான். அவள் அவனை விட்டு விடைபெறும் காட்சிக்கு முன்னதாக அதுவும் அவனுக்குத் தெரியாமலேயே அவனிடமிருந்து விடைபெற்றுவிடுகிறது.

Children of Heaven வருவது போலவே இப்படத்திலும் ஒரு ஓட்டக் காட்சி இடம்பெறுகிறது. அக்காட்சி படம் பிடிக்கப்பட்ட விதம் அப்படியே Children of Heavenல் கடைசி காட்சியில் அலி ஓடுவது போலவே இருக்கிறது. பின்னணி இசை எதுவில்லாமல், சிறப்பான ஒளிப்பதிவில், ஒருவரை ஒரு முந்தும் காட்சி, அதே போல வேக வேகமாக இளைக்கும் மூச்சுடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. தன் சிறந்த படத்தை நினைவுபடுத்தும் விதமாக மஜித் மஜிதி இக்காட்சியை வேண்டுமென்றே வைத்திருக்கலாம்.
அதேபோல Children of Heaven படத்தில் வருவதுபோல அழகிய சிவப்பு மீன்கள் உலவும் குளமும் இப்படத்தில் வருகிறது. இரானின் வீதிகளில் இதுபோன்ற சிறிய நீர் தேக்கங்கள் இருக்குமோ என்னவோ.

Children of Heaven படம் போலவே, இப்படத்தில் வரும் ஒவ்வொரு சட்டமும் (Frame) புகைப்படத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் இரானின் பனிப்பொழிவுக் காலத்தில் கதை நடைபெறுகிறது. வீதியெங்கும் அப்பிக் கிடக்கும் வெண்பனியும், மழைக்காலத்தில் தெருவெங்கும் தேங்கிக் கிடக்கும் தண்ணீரும், ஓடும் வாய்க்காலுமென ஒரு ஒளிப்பதிவு இயக்குநர் அதிகம் விரும்பும் களமாக இப்படத்தின் களன் அமைந்துவிட்டது. அதை மிக அழகாக, இதைவிட சிறப்பாகச் செய்யமுடியாது என்ற அளவிற்கு படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர் Mohammad Davudi. ஏகப்பட்ட காட்சிகள் கிரேன் ஷாட்டுகள் மூலம் எடுக்கப்பட்டிருப்பதால், நடிகர்களைத் தாண்டி அவர்களைச் சுற்றியிருக்கும் வண்ணமயமான வெளியும் படத்தில் பிரிக்கமுடியாத ஒன்றாக கலந்துவிடுகிறது. கடைசி காட்சியில் பரன் விட்டுப் போன காலடிச் சுவட்டை மழை நிறைக்கிறது. இதுவும் ஒரு புகைப்படத்தன்மை உள்ள காட்சியே.

மஜித் மஜிதியின் இரண்டு திரைப்படங்களிலும் (Children of Heaven, Baran) முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் நல்லவர்களாகவே வருகிறார்கள். யாருக்கும் ஏமாற்றும் எண்ணம் இல்லை. Children of Heaven திரைப்படத்தில் ஒரு காட்சியில் அலி தான் குடிக்கும் க·பாவிற்கு சர்க்கரை கேட்பான். அலியின் தங்கை வீட்டில் கிடக்கும் உடைக்கப்படாத சர்க்கரையை எடுத்துத் தரப்போவாள். அப்போது அவர்களின் தந்தை சொல்லுவார், “மசூதிலேர்ந்து சர்க்கரை துண்டுகளை உடைக்கச் சொல்லி கொடுத்திருக்காங்க. அது மசூதிக்குச் சொந்தமானது. உனக்கு வேண்டியது வீட்டுல அம்மா கிட்ட கேளு” என்று. இதே போன்ற நேர்மை இத்திரைப்படத்திலும் கையாளப்பட்டிருக்கிறது. பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் செல்லும் சொல்தான் ஒரு சீட்டில் இப்படி எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறான். “ஆண்டவன் ஆணையாக இப்பணத்தைத் திரும்பத் தருவேன்.” மஜித் மஜிதியின் மனிதர்கள் இயல்பில் கள்ளமில்லாமலேயே படைக்கப்படுகிறார்கள். அவ்வளவு பணத்தை பார்த்த நஜ·ப், தான் கால் நடக்கமுடியாத அந்த நேரத்திலும் அந்தப் பணம் தனக்குச் சொந்தமானதில்லை என நினைப்பதால், அப்பணத்தை சொல்தானையே வைத்துக்கொள்ளச் சொல்லுகிறான். மெமரும் இப்படியே. (Children of Heavenல் அலியின் தந்தையாக வரும் நடிகரே (Mohammad Amir Naji) இப்படத்தில் மெமராக நடித்திருக்கிறார்.) அவன் தன் கையில் பணம் வைத்துக்கொண்டு யாருக்கும் பணம் இல்லை என்று சொல்லுவதில்லை. இப்படியான மனிதர்கள். இப்படி அழகழகான மனிதர்களுடன், அழகழகான காட்சிகளுடன், கவிதை போல செல்கிறது திரைப்படம்.

இரண்டு அடிப்படை விஷயங்கள் யோசிக்க வைக்கின்றன. ஒன்று, ஆண் வேஷமிட்டு வரும் பெண்ணை யாரும் கண்டறிவதில்லை. ஆனால் நாம் முதல் காட்சியிலேயே அதைக் கண்டுபிடித்துவிடுகிறோம். இரண்டாவது, ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒரு பெண்ணிற்காக தன் எதிர்காலத்தையே ஏன் பணயம் வைக்கிறான் லதீ·ப்; பதின்ம வயதுக்கோளாறு இத்தனை தூரம் கொண்டு செல்லுமா என்பது. இது போன்ற அடிப்படை லாஜிக்குகள் இடித்தாலும் படத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட் படத்தை மிகச் சிறப்பான ஒன்றாக்குகிறது.

பரன் என்றால் மழை என்று அர்த்தமாம். (ஆதாரம்: விக்கி பீடியா.) மழை போல ஒரு பதின்ம வயது வாலிபனின் மனதில் பெய்துவிட்டு மறைவதால் இப்பெயரைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் இயக்குநர்.

மேலதிக விவரங்களுக்கு: http://www.imdb.com/title/tt0233841/

Share

சூரஜ் கா சாத்வன் கோடா – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 03)

படம்: சூரஜ் கா சாத்வன் கோடா (சூரியனின் ஏழாவது குதிரை)
இயக்கம்: ஷ்யாம் பெனகல்
மொழி – ஹிந்தி

ஷ்யாம் பெனகலின் ‘சூரியனின் ஏழாவது குதிரை திரைப்படம்’, அலஹாபாத்தில் வசிக்கும் ஒரு ரயில்வே ஊழியரின் பால்ய வயது, பதின்ம வயது மற்றும் இளம் வயது காதல்களை முன்னிறுத்தி, அவற்றின் ஊடாக பெண்களைப் பற்றிய, காதலைப் பற்றிய, வாழ்க்கையைப் பற்றிய ஒரு ஆணின் பார்வையை முன்வைக்கிறது. ரகுவீர் ஆதவ் என்னும் நடிகர் தன் நண்பர்களைப் பற்றிய நினைவுகளை நினைக்க படம் ·ப்ளாஷ் பேக்கில் துவங்குகிறது. ரயில்வே துறையில் வேலை பார்க்கும் மாணிக் முல்லா அவரது நண்பர்களுடன் தினம் தினம் கதைகளைப் பகிர்ந்துகொள்ளுகிறான். சிறந்த கதை சொல்லியான அவன் கதைகளை ஆர்வமுடன் கேட்கும் அவன் நண்பர்கள் அது பற்றிய கடுமையான விவாதமும் மேற்கொள்ளுகிறார்கள். கதையைச் சொல்லி அதைக் கேட்பதை விட அவர்களுக்கு வேறு நல்ல பொழுது போக்கு இல்லை என்பதும் ஒரு காரணம். அப்படி ஒரு நாள் தன் பால்ய கால காதல் கதையைச் சொல்லுகிறான் மாணிக் முல்லா.

Thanks:nfdcindia.comதன்னாவும் ஜமுனாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். தன்னாவிற்குப் பெண்ணைத் தர ஜமுனாவின் அம்மாவிற்குச் சம்மதம் இல்லையென்றாலும், தன் பெண்ணின் சந்தோஷமே முக்கியம் என்று சம்மதிக்கிறார் ஜமுனாவின் தந்தை. தன்னாவிற்குப் பெண்ணைத் தர சம்மதிக்காததற்குக் காரணம், தன்னாவின் சாதி தனது சாதியை விடத் தாழ்ந்த சாதி என்று ஜமுனாவின் தாய் நினைப்பதுதான். ஆனாலும் சில நிபந்தனைகளுடன் பெண் தரச் சம்மதிக்கிறாள். அதில் முக்கியமானது, தன்னா தன் வீட்டுடன் மாப்பிள்ளை ஆகவேண்டும் என்பது. அதற்கு தன்னா மறுக்க, அவன் சாதியைச் சொல்லித் திட்டி விரட்டுகிறாள் ஜமுனாவின் தாய். மாணிக் முல்லா படிக்கும் வயதில் இருக்கிறான். அவன் மேல் மிகுந்த அன்பு காட்டுகிறாள் ஜமுனா. தன் திருமணம் தடைபட்டுப்போன சோகத்தில் மாணிக் முல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவன் மேல் ஆதரவாகச் சாய்கிறாள். மனம் மயங்கிச் சரியும் பொழுதொன்றில் அவனை முத்தமிடவும் முயல்கிறாள். தன் மன மயக்கத்தை கண்டு அஞ்சி அவனை விட்டு விலகி ஓடுகிறாள். மாணிக் முல்லாவின் பதின்ம வயது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் மாற்றத்துக்குள்ளாகிறது. அவனால் ஜமுனாவை மறக்கமுடியவில்லை. ஆனாலும் அது காதலில்லை என்றும் தெளிவாக உணர்கிறான். ஜமுனாவிற்கும் வயதான ஒரு செல்வந்தருக்கும் மணம் முடிகிறது. ஜமுனா இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்படுகிறாள். இதை எதிர்த்து தன்னாவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அவன் கொடுமைக்கார தந்தைக்குப் பயந்து தன் காதலை தன் மனதிலேயே புதைத்துக்கொள்ளுகிறான். பின்பு தன்னாவிற்கும் வேறொரு பணக்கார பெண்ணான லில்லிக்கும் திருமணம் நடக்கிறது. இதை அறியும் ஜமுனா, அவள் வீட்டிற்கு வரும்போது தன்னாவிடம் அவள் மனைவி தன்னைவிட அழகியா என்று கேட்கிறாள். என்ன சொல்வது என்று தெரியாமல் தன்னா தடுமாறும்போது, அவன் எதிர்பாராத சமயத்தில் ஜமுனா அவனைக் கட்டிபிடித்துக்கொள்ளுகிறாள். அவளை பலவந்தமாக விலக்கித் தள்ளிவிட்டு ஓடுகிறான் தன்னா. தனது புதிய வாழ்க்கை மிகுந்த செல்வம் நிறைந்ததாக இருக்க, அதனால் கர்வம் கொள்ளும் ஜமுனா, வம்படியாக தன்னாவை வெறுக்கத் துவங்குகிறாள். தன்னா இல்லாத சமயத்தில் லில்லியிடம் பேசி தன்னா பற்றிய ஒரு எதிர்மறை சித்திரத்தையும் உருவாக்க முனைகிறாள். இந்நிலையில் ஜமுனாவின் வயதான செல்வந்தக் கணவர் தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக சில பூஜைகளை மேற்கொள்ளுகிறார். அதை கவனித்துச் செய்ய தன் வேலைக்காரனைப் பணிக்கிறார். அந்த வேலைக்காரனுக்கும் ஜமுனாவிற்கும் இடையே ஏற்படும் புரிதல் மெல்ல காதலாகி உறவில் முடிகிறது. பூடமாகச் சொல்லப்படும் இக்காட்சிக்குப் பின் ஜமுனாவிற்குக் குழந்தை பிறக்கிறது. அதைக் கொஞ்சுகிறார் வயதான கணவர். அப்படியே நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிய அவர் உயிர் பிரிகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து விடப்படும் ஜமுனா பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் அவர் வீட்டிலேயே வாழ்கிறாள். வேலைக்காரனும் அவளுடனேயே இருந்துவிடுகிறான் கார்டியனாக.

முதல் கதை முடிந்ததும் நண்பர்கள் விவாதிக்கிறார்கள். ஒரு நண்பன் இதை கற்பனைக் காதல் கதை என்று சொல்ல, வெடித்தெழும் ரகுவீர் யாதவ் இக்கதை பெண்களின் மீதான வன்முறை என்கிறார். பெண்கள் என்றைக்கும் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்கிறார். இன்னொரு நண்பர் கண்ணீர் சிந்தி அழுகிறார் தன்னாவிற்காக. இரண்டாவது கதையைக் கேட்கிறார்கள் நண்பர்கள். மாணிக் முல்லா சொல்லத் தொடங்குகிறார்.

தன்னாவின் தந்தை மஹசேர் தலால் தனது கிழட்டுப் பருவத்தில் திருமணம் செய்துகொள்கிறார். மகன் காதலில் இருப்பது தெரியாமல் தனக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர, அவரது மகள்கள் அருவருப்பின் உச்சத்திற்குச் செல்கிறார்கள். மகன் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருப்பது மஹசேர் தலாலுக்குப் பெரும் எரிச்சலைத் தருகிறது. தன் இரண்டாவது மனைவியுடன் உல்லாசமாக இருக்கும்போது அங்கு வரும் தன்னாவின் மீது எரிந்து விழுகிறார். திடீரென தன்னாவிற்கு பணக்காரப் பெண் லில்லி கிடைக்கவும் அவன் திருமணத்திற்கு நிச்சயிக்கிறார். ஜமுனாவின் மீது காதலில் இருக்கும் தன்னா தன் தந்தையை எதிர்க்கும் தைரியமின்றி திருமணத்திற்குச் சம்மதிக்கிறான். தன் கணவன் தன் மீது அன்பாக இல்லை என்கிற எண்ணம் உண்டாகிறது லில்லிக்கு. அதை ஆமோதிக்கும் விதமாக ஜமுனாவும் பேச, தன்னா தன் மீது அன்பாக இல்லை என்கிற முடிவுக்கே வந்துவிடுகிறாள் லில்லி. இதில் ஏற்படும் பிரச்சினையில் தன் பிறந்த வீட்டிற்குப் போய்விடுகிறாள் லில்லி. எதேச்சையாக ஒருநாள் ரயில்வே ஸ்டேஷனில் ஜமுனாவைச் சந்திக்கிறான் தன்னா. ஜமுனா கணவனை இழந்து, தன் வீட்டு வேலைக்காரனுடன், கையில் குழந்தையுடன் அடுத்த வண்டிக்குக் காத்திருக்கிறாள். இருவரும் பேசிக்கொள்கிறார்கள். விடைபெற்றுச் செல்லும் தன்னா, எதிர்பாராமல் ஒரு ரயிலில் அடிபடுகிறான். ஜமுனா அவனை மருத்துவமனையில் சேர்க்கிறாள். அவனுக்கு ஒரு கால் போய்விடுகிறது. தன்னா கதறி அழுகிறான். ஜமுனாவும் அழுகிறாள். அப்போது ஏற்படும் நெஞ்சு வலியில் தன்னா இறந்துவிடுகிறான். தன்னாவைப் பார்க்க வரும் லில்லியைக் கட்டிக்கொண்டு ஜமுனா கதறி அழ, லில்லிக்கு சில விஷயங்கள் பிடிபடுகின்றன.

இத்துடன் இரண்டாவது கதை முடிவடைகிறது. நண்பர்கள் கதை பற்றி விவாதிக்கிறார்கள். இது மிகவும் சோகமான கதை என்கிறான் ஒரு நண்பன். வாழ்க்கையில் ஏற்படும் சங்கிலித் தொடர் போன்ற சோகங்கள் சொல்வதுதான் என்ன என்று தீவிரமாக விவாதிக்கிறார்கள். மூன்றாவது கதை கேட்க நண்பர்கள் அவசரப்படுகிறார்கள். மூன்றாவது கதை தொடங்குகிறது.

மூன்றாவது கதை இரண்டு கிளைகளில் செல்கிறது. முதல் கிளையில் தன் நண்பர்களுக்கு காதல் என்றால் என்ன விளக்க மாணிக் முற்படுகிறான்.

Thanks:italkies.comநிலவும் மழையும் பொழியும் இரவில் கவிதைத்துவமாகப் பேசுகிறான் மாணிக். அவனது பேச்சில் மயங்கிக் கிடக்கிறாள் லில்லி. தனக்கும் தன்னாவிற்கும் திருமண நிச்சயம் முடிந்துவிட்டதைச் சொல்கிறாள் லில்லி. அதை மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மாணிக் அன்று தான் கண்ட வங்காளப் படத்தின் காதல் காட்சிகளை அவளுக்குச் சொல்கிறான். இது விளையாட நேரமல்ல என்று லில்லி எத்தனைமுறை சொல்லியும் அதை பொருட்படுத்தாமல், இது விளையாட்டல்ல இதுவே வாழ்க்கை என்கிறான் மாணிக். இரவீந்தரநாத் தாகூர் எழுதிய காவிய வரிகளை அவளுக்குச் சொல்லி அவளைத் தேற்றுகிறான். அவளிடமிருந்து என்றென்றுமாக விடைபெறுகிறான். லில்லிக்கு அவன் மேலிருக்கும் ஈர்ப்பு குறையவில்லை. ஆனாலும் அதை மறந்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்கும் இன்னொரு காரணம் பின்னர் சொல்லப்படுகிறது.

தன்னாவின் தந்தை மஹசேர் தலால் இனிப்புக் கடையில் அமர்ந்திருக்கும்போது அங்கு இனிப்பு விற்க வருகிறாள் சத்தி. அவளை நோட்டமிடும் கடைக்காரனை சத்தி கத்தியைக் காட்டி மிரட்டுகிறாள். அதைப் பார்க்கும் தன்னாவின் தந்தையின் மனதுக்குள் அவள் மீது காதல் அரும்புகிறது. ஏற்கனவே இரண்டாவது திருமணமாகி வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை மறுக்க மூன்றாவது பெண் மீது காதல் கொள்ளுவதுதான் வழியென முடிவெடுக்கிறார் மஹசேர் தலால். இதை அறியும் இரண்டாவது மனைவி சண்டை பிடிக்க, அவனை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார் மஹசேர் தலால். தன் தந்தையின் இரண்டாவது மனைவிக்கும் தன்னாதான் ஆறுதல் சொல்கிறான். சத்திக்கு கார்டியனாக இருப்பவன் சத்தியை அலஹாபாத்தின் ஓரிடத்தில் கண்டெடுத்ததாகவும் அதுமுதல் அவளை வளர்த்துவருவதாகவும் சொல்கிறான். அவனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து அவளை அடைய விரும்புகிறார் மஹசேர் தலால். அதற்குச் சம்மதிக்கிறான் சத்தியின் கார்டியன். சத்திக்கு மிட்டாய் விற்றதில் ஏற்படும் கணக்குக் குழப்பங்களைத் தீர்க்கிறான் மாணிக். இதனால் மாணிக் மேல் சத்திக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. மாணிக் படித்து பெரியாளாக வேண்டும் என்று சத்தி மெனக்கெடுகிறாள். மாணிக்கும் பாஸ் செய்கிறான். இடையில் ஒருநாள் இரவு சத்தி மாணிக்கைத் தேடிக்கொண்டு அவன் வீட்டிற்கே வந்துவிடுகிறாள். உடனே அன்றிரவே அவள் எங்கேனும் போகவேண்டும் என்கிறாள். மஹசேர் தலால் அவளைத் துரத்துவதுதான் காரணம். அவரிடமிருந்து தப்பிக்க மாணிக்கிடம் தஞ்சமடைகிறாள். மாணிக் அவளைத் தன் வீட்டில் இருக்க வைத்துவிட்டு தன் அண்ணனிடம் வந்து சொல்கிறான். சத்தி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண். அவளுக்கும் தன் தன் தம்பி மாணிக்குக்கும் உறவு இருப்பதை விரும்பாத மாணிக்கின் அண்ணன், மஹசேர் தலாலிடமும் சத்தியின் கார்டியனிடமும் அவள் இங்கிருப்பதைச் சொல்லிவிடுகிறார். அங்கு வரும் இருவரும் சத்தியை இழுத்துச் செல்கிறார்கள். சத்தியின் வீட்டில் ஏற்படும் பிரச்சினையில் சித்தி மரணமடைகிறாள். இதைக் கேட்கும் மாணிக் பெரும் சோகம் கொள்கிறான். மஹசேர் தலாலை போலிஸ் தேடுகிறது. அவர் தலைமறைவாகிறார்.

மூன்றாவது கதை முடிவடைகிறது. இதில் பல்வேறு காட்சிகள் முதலிரண்டு கதையோடு பொருந்தி படத்திற்கு வேறொரு கோணத்தைத் தருகின்றன. முதலில் முக்கியமானது, மஹசேர் தலால் தலைமறைவாகியிருப்பது லில்லியின் வீட்டில். லில்லியின் தாய்க்கும் மஹசேர் தலாலுக்கும் இடையே உறவு இருக்கிறது. இதனால்தான் லில்லி தன்னாவுடன் சேர்ந்திருப்பதில் சுணக்கம் கொள்கிறாள். லில்லிக்கும் மாணிக்கிற்கும் இடையே ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. இதனால் லில்லி, ஜமுனவிற்கும் தன்னாவிற்கும் இடையே இருக்கும் காதலை உணரும் கணத்தில், வாஞ்சையுடன் ஜமுனாவின் தலையைத் தடவிக்கொடுக்கிறாள். இப்படி பல முடிச்சுகள் மூன்றாவது கதையில் அவழ்கின்றன. ரயில்வே ஸ்டேஷனில் மாணிக் சந்திக்கும் ஜமுனா அவனுக்கு ஒரு மாட்டின் லாடத்தைப் பரிசாகத் தருகிறாள். அதை பத்திரமாக, தன் பால்ய, இளமைக்காலத்தின் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறான் மாணிக்.

நண்பர்கள் பெரும் குழப்பத்திற்கும் ஆச்சரியத்திற்கும் ஆளாகிறார்கள். ரகுவீர் யாதவ் இனி கதையே வேண்டாம் என்று சொல்லி அழுது மாணிக்கைக் கட்டிக்கொள்ளுகிறான். நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டே, கதைகளில் சந்தேகம் கேட்டுக்கொண்டே, டீ குடிக்கச் செல்லுகிறார்கள். அங்கு ஒரு ஊனமுற்றவனைக் கொண்டு பிச்சை எடுக்க வருகிறாள் சத்தி. இவனைக் கண்ட நேரத்தில் அந்த இடத்தை விட்டு மறைகிறாள். அவளைத் தேடும் மாணிக் அவளைக் காணாமல் பெரும் குழப்பம் கொள்ளுகிறான். ஒரு குதிரை கட்டுக்கடங்காமல் பிடறி சிலிர்க்க ஓடி வருகிறது. தன் நினைவுகளில் இருந்து மீள்கிறான் ரகுவீர் யாதவ். படம் நிறைவடைகிறது.

மூன்று கதைகளில் சொல்லப்படும் நிகழ்ச்சிகள் ஒன்றோடு ஒன்று ஊடாடி முன்னர் சொல்லப்பட்ட கதைக்கு எதிரான புதிய புரிதலை ஏற்படுத்துகின்றன. முதல் கதையில் நாம் பச்சாதாபம் கொள்ளும் பாத்திரம் அடுத்த கதைக்குப் பின் அதன் எதிர்த்திசையில் நின்று கொள்கிறது. நாம் கோபம் கொள்ளும் பாத்திரம் மூன்றாவது கதைக்குப் பின் பாவம் கொள்ள வைக்கிறது. காட்சிகள் தொடங்கும்போதெல்லாம், அவை அதற்கு முன்னர் வந்த காட்சிகளின் நிறைவுப் பிரதிகளாக அமைந்து காட்சிகளுக்கு பெரும் கனத்தைச் சேர்க்கின்றன. இதை இயக்குநரின் உச்சபட்ச திறமை என்று சொல்லவேண்டும். இப்படி ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக களம் கொள்ளும் கதை கடைசியில் இன்னொரு பெரும் யோசனையை கதை சொல்லிக்கும் நண்பர்களுக்கும் தருகிறது. அவர்கள் சத்தியை உயிருடன் பார்த்த நேரத்தில் அதுவரை சொல்லப்பட்ட கதையை எல்லாம் நாம் மீண்டும் யோசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம்.

மாணிக் முல்லா கொள்ளும் மூன்றுவித பால் ஈர்ப்புகளும் அவற்றிற்குப் பின்னர் மிகப்பெரிய மறைபிரதியை வைத்திருக்கின்றன. அவற்றை தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் உணர்கிறான் மாணிக் முல்லா. தன் மேல் காதலாக இருக்கும் லில்லி மணக்கப் போகும் தன்னா ஏற்கனவே ஜமுனாவுடன் காதலில் இருந்தவன் என்கிற உண்மை அவனுக்குத் தெரிவதால், லில்லி காதல் சொல்லும் நேரங்களில் மிக நிதானமாக அதை எதிர்கொள்ளுகிறான். வாழ்க்கை போடும் கோலங்களைப் புரிந்து கொள்ளுகிற கணத்தில் அவனுக்குக் காதல் மீது புதிய புரிதல் ஏற்படுகிறது. கடைசியில் சத்தியைப் பார்க்கும் நேரத்தில் அவன் மீண்டும் வாழ்க்கையைப் படிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவதை உணர்கிறான். அதுவரை தான் சொல்லும் எல்லாக் கதைகளும் தனக்கு முழுக்கப் புரிந்தது என்கிற ‘சொல்லும்’ நிலையிலிருந்து, தனக்கே புரியாத பிரதிகள் இன்னும் வாழ்க்கையில் வாசிக்கக் காத்துக்கிடக்கின்றன என்பதை உணர்கிறான் மாணிக்.

இப்படத்தின் வசனங்களின் தீர்க்கம் படத்தை மிக உன்னதமான கலைப்படைப்பாக மாற்றுகின்றன. முன்னுக்குப் பின் முரணான கதை சொல்லல் மூலம் தொடர்ந்து முடிச்சுகளை உருவாக்குவதும் அடுத்தடுத்த காட்சிகள் அதை அவிழ்ப்பதுமாக படத்தின் ஒவ்வொரு காட்சியும் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. படம் பார்த்த முடிந்தவுடன் படத்தைப் பற்றிய சிந்தனையை யாரும் அத்தனை சீக்கிரம் விட்டுவிடமுடியாது. உண்மையில் மேலும் மேலும் சிந்திப்பதையும் மறைந்து கிடக்கும் வாழ்க்கையின் பிரதிகளையும் வாசிப்பதையுமே இப்படம் முன்னிறுத்துகிறது.

அடைந்து கிடக்கும் ஒரு கதவைத் திறக்க அதனுள்ளே கதவுகள் பல திறந்துகொண்டே செல்லும் அனுபவம் போல ஒவ்வொரு கதைக்குள்ளும் செல்லும் நாம் மீண்டும் முதல் கதைக்கு வந்து அதன் வழியாக மீண்டும் அடுத்த கதைகளை அடைந்து கொண்டே இருக்கிறோம். வாழ்க்கை என்பதே இப்படி பல அறைகளைக் கொண்டதுதான்.

சூரியனின் ஏழாவது குதிரை, ஏழு குதிரைகளில் மெதுவாகச் செல்லக்கூடியதும் வலிமையற்றதுமாகும். ஆக, இந்தக் குதிரையே ஏழு குதிரைகளின் ஒட்டுமொத்த வேகத்தையும் நிர்ணயிக்கக்கூடியது. இப்படியே இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் மீதான நம் முடிவுகள் அடுத்தடுத்த காட்சிகளின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. ஒரு கதாபாத்திரத்தை நிர்ணயிக்க, நாம் அதன் கடைசி இயக்கம் வரை காத்திருக்கவேண்டியிருக்கிறது. எப்படி சூரியனின் ஏழாவது குதிரை சூரியனின் வேகத்தை முடிவு செய்கிறதோ அதைப் போல.

ஷ்யாம் பெனகலின் இத்திரைப்படம் தந்த அனுபவம் மிக உன்னதமானது. முதல் முறை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, இரண்டாவது முறை லோக்சபா தொலைக்காட்சியில் பார்த்தபோது, நாம் ஒரு மிகச்சிறந்த இந்தியப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டேன். பத்து நிமிடம் பார்த்துவிட்டு அணைத்துவிடலாம் என நினைத்து நினைத்து, படம் முழுவதும் பார்த்து முடிந்த பின்பும் அதன் நினைவு என்னை விட்டு அகலவில்லை.

(கதையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டிருப்பதற்குச் சிறிய வாய்ப்பு இருக்கிறது. அப்படியே மாறியிருந்தாலும் கதை இதுதான். டிவிடி கிடைக்காததால் சரி பார்க்கமுடியவில்லை. மீண்டும் ஒருமுறை பார்க்க நேர்ந்தால், பெயர்களில் தவறு இருந்தால் திருத்தி வைப்பேன். கதையை இவ்வளவு விஸ்தாரமாக எழுதி வைப்பது பின்னர் யாருக்காவது (எனக்கும்!) உதவும் என்பதற்காக.)

Share

மாஸே சாஹிப் – ஹிந்தி திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 02)

Director/Story : Pradip Krishen
Camera : R. K. Bose
Editor : Mohan Kaul
Music : Vanraj Bhatia
Cast : Raghuvir Yadav, Barry John, Arundhati Roy, Virendra Saxena
1986/ 118 Mins/ Hindi/ Social
Thanks: http://www.nfdcindia.com/view_film.php?film_id=36&show=all&categories_id=8

1986 இல் வந்த திரைப்படம். இந்த அருமையான திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு மக்கள் தொலைக்காட்சி மூலம் கிட்டியது. என்னைக் கவர்ந்த படங்களுள் இதுவும் ஒன்று.

1927இல் நடக்கும் கதை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய மாஸே (நடிகர் ரகுவீர் யாதவ். இவரை ருடாலி, தாராவி ஆகிய படங்களிலும் பார்க்கமுடிந்தது.) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை மிகவும் மதிக்கிறான், நம்புகிறான். ஒரு க்ளார்க்காக பணிபுரியும் அவன் செயல்கள், நடத்தை, உடை எல்லாமே பிரிட்டிஷ் அதிகாரிகளை ஒத்திருக்கின்றன. மத்திய இந்தியாவில் வாழும் அவனது செய்கைகள் அங்கிருக்கும் மக்களுக்கு பெரும் வியப்பூட்டுபவையாக அமைகின்றன. கடைகளுக்குச் செல்லும் அவன் தான் ஒரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யாத்தின் வேலையாள் என்று சொல்லி கடன் வாங்குகிறான். தொடர்ந்து கடன் தர மறுக்கும் நபர்களை மிரட்டி வைக்கிறான். ஆனால் உண்மையில் மாஸே ஒரு அப்பாவி. அவன் மிரட்டும் வேளைகளில் கூட எதிராளிகள் அவன் ஒரு அப்பாவி என்பதை உணர்ந்துவிடுகின்றனர். இந்நிலையில் சாலி (சாலியாக நடித்திருப்பவர் எழுத்தாளர் அருந்ததிராய்) என்கிற காட்டுவாசிப் பெண்ணை அவன் சந்திக்கிறான். பார்த்த கணமே காதல் ஏற்படுகிறது. அவளை மணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறான். அவன் வீட்டுக்காரர்கள் ஆரம்பத்தில் மறுக்கிறார்கள். என்றாலும் அவன் தருவதாகச் சொல்லும் பணத்துக்காகச் சம்மதிக்கிறார்கள். ஆங்கிலேயர்களின் திருமணம் நடப்பதுபோல, ஒரு சர்ச்சில் வைத்து அவன் திருமணம் நடக்கிறது. திருமணம் ஆன இரவே, (முதலிரவு முடிந்துவிடுகிறது) சாலியின் உறவினர்கள் வந்து அவன் தருவதாகச் சொன்ன பணத்தைத் தராததால் சாலியைத் தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறான் மாஸே.

Thanks:nfdcindia.com
அருந்ததி ராய், ரகுவீர் யாதவ்

மாஸே வேலை செய்யும் இடத்திலுள்ள ஆங்கிலேயர்களிடம் மிகவும் நெருக்கமானவனாகத் தன்னைக் காட்டிக்கொள்கிறான். சார்லஸ் ஆடம் என்கிற பிரிட்டிஷ் உயரதிகாரி அலுவலகத்தின் கணக்கு வழக்குகளைக் கேட்கிறார். முதலில் ஏதேதோ காரணம் சொல்லும் மாஸே, பின் தான் செலவுக்கு அந்தப் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொள்கிறான். அதோடு நில்லாமல், அதை எப்படி கணக்குக் காட்டித் தன்னைத் தப்ப வைக்கமுடியும் என்றும் ஆடமுக்கு விளக்குகிறான். கடும் கோபம் கொள்ளும் ஆடம், இது அரசாங்கத்தின் பணம் என்றும் இது திரும்ப கிடைக்கும்வரை அவனை வேலையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்வதாகவும் உத்தரவிடுகிறார். உண்மையில் அந்தப் பணம் நகரத்தையும் கிராமத்தையும் இணைக்கும் சாலைகளுக்கான பணம்.

மனைவியையும் இழந்து வேலையையும் இழந்து நிற்கும் மாஸே, தனக்கு எப்படியும் தனது மேலதிகாரி ஆடம் உதவுவார் என்று நம்புகிறான். வருடங்கள் ஓடுகின்றன. மனைவி சாலியையும் தனது மகனையும் யாருக்கும் தெரியாமல் சந்திக்கிறான் மாஸே. இதை அறியும் சாலியின் அண்ணன் கோபத்தில் மாஸேயை பெரும் கழியால் தலையில் அடித்துவிடுகிறான். பின் யாருக்கும் தெரியாமல் சாலியையும் தன் மகனையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகிறான்.

மழைக்காலத்தில் சாலை போடும் பணிகள் மந்தமடைவதால் தன் ஊருக்குச் செல்கிறார் ஆடம். பருவ நிலை மாறுகிறது. சாலை போடவேண்டிய வேலையைத் துரிதப்படுத்தும் அரசின் ஆணையோடு, தன் மனைவியையும் அழைத்துக்கொண்டு திரும்ப வருகிறார் ஆடம். என்ன முயன்றும் சாலை போடும் வேலை மெத்தனமாகவே நடக்கிறது. சாலைகள் காடுகள் வழியே போடப்படவேண்டி இருக்கிறது. காட்டை அறிந்தவர்கள் யாரும் துணையில்லாமல் திண்டாடுகிறார் சார்லஸ் ஆடம். அவரது மனைவி இப்படி ஒரு வேலை தேவையா என்று சலித்துக்கொள்கிறார்.

காட்டில் டெண்ட்டைப் பார்க்கும் மாஸே அது தனது அதிகாரி ஆடமாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்து அங்கு செல்கிறான். அங்கு ஆடமைப் பார்க்கும் அவன் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறான். ஆடமும் மாஸேயை வேலையை விட்டுத் தூக்குவதைத் தவிர தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்று சொல்லி வருந்துகிறார். வெளியில் நிற்கும் தனது மனைவியையும் ஆடமுக்கு மாஸே அறிமுகப்படுத்துகிறான். கையில் இருக்கும் குழந்தையைப் பார்க்கும் ஆடம், அக்குழந்தையின் பெயரைக் கேட்கிறார். சார்லஸ் என்கிறான் மாஸே. ஆடம் மிகுந்த உணர்ச்சிக்குள்ளாகிறார். எப்படி மாஸேக்கு உதவுவது என்று யோசிக்கிறார்.

மாஸே ஆடமுக்கு சாலை போடும் விஷயத்தில் உதவ முடிவெடுக்கிறான். ஆடமிடமும் சொல்கிறான். ஒரு அரசாங்கத்தால் முடியாததை எப்படி மாஸே தனியாளாகச் செய்யமுடியும் என்று கேட்கிறார் ஆடம். நாளை காலை உங்களுக்குத் தேவையான ஆள்களை வேலைக்குக் கொண்டுவருகிறேன் என்று சொல்லிச் செல்கிறான் மாஸே. அதை நம்பாத ஆடமின் மனைவி ஆடமையும் மாஸேயையும் கேலி செய்கிறாள்.

மாஸே அன்று இரவே எல்லா காட்டுவாசி குடியிருப்புகளுக்கும் சென்று, தான் அரசாங்கத்தின் ஆள் என்று சொல்லி, நைச்சியமாகப் பேசியும் ஆசை காட்டியும் பயமுறுத்தியும் அனைவரையும் வேலைக்கு வர வைக்க சம்மதம் பெறுகிறான். மறுநாள் ஆடமின் கூடாரத்துக்கு (Tent) வெளியே கேட்கும் பெரும் சத்தத்தைக் கேட்டு வந்து பார்க்கிறாள் ஆடமின் மனைவி. அனைவரும் வேலைக்கு வந்தவர்கள் என்றறியும்போது அவளுக்கும் மாஸேயின் மீது பெரிய ஆச்சரியமும் நம்பிக்கையும் ஏற்படுகிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலை வேகம் பெறுகிறது. அரசு நிர்ணயித்த தினத்திற்கு முன்பாகவே சாலைகள் போடப்பட்டுவிடும் என்று அரசுக்கு தகவல் அனுப்புகிறார் ஆடம். அதற்கு முக்கியக் காரணம் மாஸேதான் என்றும் அவனை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பரிந்துரை ஏற்கப்படுகிறது. சாலையைத் திறந்துவைக்கும் விழா நடைபெறுகிறது. ஆடம் உரையாற்றுகிறார். மாஸேயைப் புகழ்ந்து அவனுக்கு வேலை மீண்டும் தரப்படுவதை உறுதி செய்கிறார். அப்போது அங்கு வரும் காட்டுவாசிகள், சாலையைத் திறந்து வைக்க வரும் அரசின் பிரதிநிதிகளிடம், சாலைக்கான வரியை ரத்து செய்யவேண்டும் என்று விண்ணப்பம் வைக்கிறார்கள். அரசின் பிரதிநிதியும் ஆடமும் அதிர்ந்து போகிறாகள். அப்படி ஒரு வரி இல்லவே இல்லை என்று சொல்கிறார்கள். அந்த இடத்திற்கு வரும் மாஸே அனைவரையும் திட்டி விரட்டுகிறான். ஆனால் ஆடமுக்கு ஏதோ சந்தேகம் தோன்ற, மீண்டும் காட்டுவாசிகளைக் கூப்பிட்டுக் கேட்கிறார். அவர்கள் அனைவரும் மாஸே வரி வசூலித்ததைச் சொல்கிறார்கள்கள். கடும் கோபம் அடைகிறார் ஆடம். அரசு மாஸேவைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது.

சிறையில் எவ்விதத் துன்பமும் இன்றி இருக்கும் மாஸே தன்னை எப்படியும் ஆடம் காப்பாற்றிவிடுவார் என்று நம்புகிறான். ஆடமுக்கு இருக்கும் கோபம் வடிந்து, இயல்பாகவே மாஸே மீது இருக்கும் அன்பு பொங்குகிறது. ஆடமின் மனைவியும் ஆடம் எப்படியும் மாஸேவைக் காப்பாற்றவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறாள். சட்டத்தை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையில், அவனைத் தனிமையில் சந்திக்கும் ஆடம் மாஸே எப்படி நீதிமன்றத்தில் பேசவேண்டும் என்று சொல்லித் தருகிறார். அனைத்தையும் அலட்சியப்படுத்தும் மாஸே, ஆடமிடம் ‘எப்படியும் என்னை நீங்கள் காப்பாற்றிவிடுவீர்கள் எனத் தெரியும்’ என்று சொல்கிறான். எவ்வளவு விளக்கியும் மீண்டும் மீண்டும் அதையே சொல்கிறான் மாஸே. ஆடம் செய்வதறியாமல் வீட்டுக்குப் போகிறார். நீதிமன்றத்தில் மாஸேவுக்கு தூக்குத் தண்டனை உறுதியாகிறது. தூக்குத் தண்டனைக்கு முந்தைய நாள்கூட ஆடம் எப்படியும் தன்னைக் காப்பாற்றுவார் என்றும் நம்பும் மாஸே, ஆடமே தன்னைச் சுட்டுக் கொல்வது போல கனவு காண்கிறான். மறுநாள் மாஸேவுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றுவதாக திரையில் எழுத்தில் காண்பிப்பதோடு படம் முடிவடைகிறது.

காடுகளில் சாலை போடும் காட்சிகள் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. மாஸேயாக வரும் நடிகர் ரகுவீர் யாதவும் ஆடமாக வரும் ஆங்கில நடிகரும் மிக அழகாக, இயல்பாக நடித்திருந்ததே படத்தின் பலம். ரகுவீர் யாதவ் ஆடமை மேயர் சாப் என்றே கடைசி வரை அழைக்கிறார். அவர் அழைக்கும் விதம், அந்தக் குரல் இன்னும் காதில் ஒலிக்கிறது. அருந்ததி ராய்தான் மாஸேயின் மனைவியாக நடித்தவர் என்ற செய்தி என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

மாஸே பெண் கேட்டுச் செல்லுமிடத்தில், காட்டுவாசிகள் பிரிட்டிஷ்காரர்களைப் போல நாகரிகம் தெரியாதவர்கள் என்று உணர்கிறார். ஆனால் அதேசமயம் தன் காதலை விட்டுக்கொடுக்கவும் அவர் தயாரில்லை. அவர் தரும் பணத்திற்காக சம்மதிக்கும் சாலியின் அண்ணன், மாஸே அணிந்திருக்கும் கோட்டையும் பேண்ட்டையும் கேட்கிறான். வேறு வழியின்றி அதைக் கொடுத்துவிட்டு, கால்சட்டையுடன் திரும்புகிறான். அவன் வைத்திருக்கும் குடையையும் சாலியின் தந்தை பிடுங்கிக்கொள்கிறான். இதற்குப் பின்னர்தான் மாஸேயின் திருமணம் நடக்கிறது. திருமணத்தின் போது, காட்டுவாசிகள் வழக்கம்போல் எப்படி துண்டை போர்த்திக்கொள்வார்களோ அதேபோல அந்த கோட்டை போர்த்திக்கொண்டு வருகிறான் சாலியின் அண்ணன். அதைப் பார்க்கும் மாஸேயின் முகபாவம் ரசிக்கத்தக்க ஒன்று.

காட்டுவாசிகளிடம் சாலை வேலைக்கு வருமாறு கேட்கும் காட்சிகளில் மாஸே செய்யும் தந்திரங்கள் எளிமையானவை, நம்பத் தகுந்தவை. எந்தக் குழுக்கள் சாலை வேலைக்கு வருகிறார்களோ அவர்கள் மட்டுமே சாலையைப் பயன்படுத்தமுடியும் என்கிறான். ஒருகுழுவிடம் மற்றொரு குழு இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டுவிட்டது என்கிறான். இப்படியே ஆள்களை வேலைக்குச் சேர்க்கிறான்.

கணக்கு கேட்டு வேலையை விட்டு துரத்தப்படும் நிலையில், ஆடமின் வீட்டு முன்னால் நின்றுகொண்டு சத்தம் போடும் காட்சி இன்னொரு சிறப்பான காட்சி. ‘என்ன கணக்கு வேணும் பெரிய கணக்கு, நானா திருடினேன், என் டைரியில இருக்கு கணக்கெல்லாம். பாருங்க. யார் யாருக்கு எவ்ளோ கொடுத்தேன்னு இதுல இருக்கு பாருங்க’ என்று ஆடம் வீட்டு முன்பு நின்று கத்துகிறான். பின்பு அந்த டைரியை அவர் வீட்டின் முன் தூக்கி எறிந்துவிட்டுச் செல்கிறான்.

ஆடமுக்கு மாஸேயின் மீது இருக்கும் சாஃப்ட் கார்னர் அழகாக விவரிக்கப்படுகிறது. மாஸேயின் மகனுக்குத் தன் பெயரான சார்லஸ் என்று வைத்திருப்பதை அறியும் கணத்தில் அவனுக்கு தான் ஏதேனும் செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை உணர்கிறார் ஆடம். கடைசி காட்சிகளில், ஆடம் எப்படி நீதிமன்றத்தில் சொன்னால் தப்பிக்கலாம் என்று விளக்கும்போது அவர் அடையும் விரக்தியும் ஏமாற்றமும் தன்மீதான மாஸேயின் கண்மூடித்தனமான நம்பிக்கையும் பேரி ஜானால் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேரி ஜான், அருந்ததி ராய் இவர்கள் எல்லாம் National School of Dramaவில் நடித்துக்கொண்டிருந்தவர்கள்தானாம்.(இந்த விவரம் தவறென்று சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி. வாய்மொழியாக நண்பர் சொன்னதை வைத்து விவரத்தை உறுதி செய்யாமல் எழுதியது இது.) படத்தின் இயக்குநர் ப்ரதீப் கிஷென் பாராட்டுக்குரியவர்.

இதுவும் இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று நான் நம்புகிறேன்.

Search Tips: Indian Movies, Indian Award Movies.

Share