Archive for திரை

இம்சை அரசனும் இம்சையும்

மிகவும் பாதித்த மற்றும் பிடித்துப்போன படங்களுக்குத் தவிர வேறெப்படங்களுக்கும் விமர்சனம் எழுதக்கூடாது என நினைத்து அதைக் கடைபிடித்து வந்திருக்கிறேன். இம்சை அரசன் 23-ஆம் புலிகேசிக்கு இணையத்தில் நான் வாசித்த சில விமர்சனங்கள் அப்படத்தைப் பெரிதும் புகழ்ந்திருப்பதைக் கண்டேன். இம்சை அரசனை நான் பார்த்த போது ஏற்பட்ட இம்சை தாங்கமுடியாததாக இருந்தது. அதனால் சில வரிகள் தட்டிப்போடலாம் என நினைத்தேன்.

01. உத்தம புத்திரனின் கதையை அப்படியே உல்டா பண்ணியிருக்கிறார்கள். இதற்குக் கதை – சிம்புதேவன் என்று போட்டுக்கொள்வது தயாரிப்பாளரும் இயக்குநரும் செய்யும் முதல் இம்சை.

02. வடிவேலுக்கு நடிக்கவே வரவில்லை. சீரியஸான வடிவேலு பெரிய காமெடி. வடிவேலும் தமிழ் உச்சரிப்பும் மற்ற சக நடிகர்களின் தமிழ்ப் பேச்சும், தமிழ் மொழி இத்தனை கேவலமாக இருந்ததில்லையே என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

03. அரச காலத்துப் படங்களில் நடிக்கும் தகுதியும் திறமையும் ஒருவித மகுடித்தன்மையும் கேட்பவரைக் கிறங்கச் செய்யும் வசன வெளிப்பாடும் கொண்ட ஒரே நடிகர் நாசராகத்தான் இருக்கமுடியும். நொடிக்கு நொடி அவர் காட்டும் முகபாவங்களும் வசன உச்சரிப்பும் தெளிப்பும் அருமை. இதைத்தவிர நல்ல விஷயம் எதுவும் படத்தில் இல்லை.

04. வாய் விட்டுச் சிரிக்கும் காட்சிகளோ, புத்திசாலித்தனமான நகைச்சுவையோ படத்தில் ஒன்று கூட இல்லை.

05. இம்சை அரசனின் இம்சைகள் என்ற பெயரில் காட்டப்படும் நகைச்சுவை பெரிய இழுவையும் இம்சையுமாய் அமைகின்றன. ஓரிரண்டு காட்சிகள் லேசாக சிரிக்க வைத்தாலும் அவை படத்தைத் தூக்கி நிறுத்தப் பயன்படுவதில்லை.

06. வடிவேலுவின் காதல் காட்சிகளைப் பற்றித் தனியே சொல்லவேண்டும். மகா இம்சை அது.

07. அவ்வப்போது பாடல்கள் வந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன. திடீரென்று வடிவேலு காமெடிக்காரர்கள் கெட்டப்பில் ஆடுவதும் பாடுவதும் ரசனையற்று அமைகிறது. அவர் அரசர் கெட்டப்பில் ஆடினால் நமக்கு ரசனை விட்டுப் போய்விடுகிறது!

08. திரையரங்குகளில் நல்ல கூட்டம் அலைமோதுவதாகக் கேள்விப்பட்டேன். நீண்ட நாள்களுக்குப் பின் வரும் அரசர் காலத்துப் படம் என்பதாலும் வடிவேலும் புகழும் இதற்குக் காரணமாய் இருக்கலாம்.

08. இப்படத்தை நான் பார்த்ததற்குச் செய்யவேண்டிய ஒரே பிராயசித்தம் உத்தமபுத்திரன் படத்தை எப்படியாவது மீண்டும் ஒருமுறை பார்த்துவிடுவது மட்டுமே.

09. இம்சை அரசன் உண்மையிலேயே இம்சையில் அரசன்தான்.

35 மதிப்பெண்கள்.

Share

மும்பை எக்ஸ்பிரஸ் அல்லது கமலுக்கு என்னாச்சு?

   அடிப்படையில் கமலின் ரசிகன்(னும்) என்பதால் முதல்நாள் இரண்டாம் ஆட்டத்திற்கு எங்கள் குடும்ப சகிதம் சென்று பெரும் தொல்லையில் மாட்டிக்கொண்டோம். படத்தைப் பற்றிப் பேசுவதை விட, முதலில் படத்துக்குச் சென்ற விஷயத்தைப் பற்றிப் பேசலாம். எது சுவாரஸ்யமோ அதைத்தான் பேசமுடியும்! சந்திரமுகிக்கு அலையாய் அலைந்து, இரண்டு மணி நேரம் காத்திருந்து அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்த கலைப்பு நீங்குவதற்குள், கமலின் இரசிகர்கள் நிறைந்த எங்கள் குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்களும் ஒரே மனதாக மும்பை எக்ஸ்பிரஸ் போகவேண்டும் என்றார்கள். தியேட்டருக்கு போன் செய்து “டிக்கெட் கிடைக்குமா” என்று கேட்டதற்கு, எங்கள் முகவரி எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார்கள். எனக்கு அப்போதே எங்கேயோ இடித்தது! ஆனாலும் எல்லாரும் போனோம். மறுநாள் எங்கள் வீட்டின் மிக முக்கியமான ஒரு விழா இருந்தது. கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து நடைபெறும் குடும்ப விழா அது. அதற்கான வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஓடினோம். தியேட்டரில் கூட்டமே இல்லை. படம் போட்டுவிட்டார்கள் என்று நினைத்த கமலின் தீவிர இரசிகர்கள் எண்ணத்திலும் மண் விழுந்ததது. படம் வந்த முதல் தினம் இரவுக் காட்சி இப்படி கூட்டமில்லாமல் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்பதால் எனக்கே கொஞ்சம் வருத்தம்தான். விருமாண்டி போலவோ ஹே ராம் போலவே ஒரு படத்திற்கு இப்படி இருந்திருந்தால் அதை நான் எதிர்பார்த்தே இருந்திருப்பேன். நானறிந்த வரையில், மும்பை எக்ஸ்பிரஸ் என்பது நகைச்சுவைப் படம் என்பதே. திரையரங்கில் நிறைய நேரம் காத்திருந்தோம். படம் போடும் வழியைக் காணோம். கூட்டம் சேர்ந்தபின்பு படம் போடும் டூரிங் டாக்கீஸ் நிலையை நினைத்து விக்கித்துப் போயிருந்தார்கள் கமலின் தீவிர இரசிகர்கள். ஒரு வழியாகப் படம் ஆரம்பித்தது. ஆரம்பித்த சில காட்சிகளிலேயே, படம் ஆரம்பித்திருக்கவேண்டாமோ என்கிற எண்ணம் வந்தது.

   கமலுக்கு நிஜமாகவே என்னதான் ஆச்சு? சாதாரண நகைச்சுவைப் படங்களைப் புறந்தள்ளி, நகைச்சுவைப் படங்களில் ஒரு தரத்தையும், நல்ல வெரைட்டிகளையும் கொண்டு வந்தவர் கமல். அதன் நீட்சியாக ஒரு கிளாசிக் காமெடி என்கிற முயற்சிதான் இந்த மும்பை எக்ஸ்பிரஸ். ஆனால் கிளாசிக்கும் இல்லை; காமெடியும் இல்லை படத்தில். காமெடி என்றாலே வசனத்தை மாற்றி மாற்றிப் பேசுவது மட்டுமே என்கிற ஒரு தட்டையான எண்ணத்தில் தள்ளப்பட்டிருக்கிறாரோ கமல் என்கிற சந்தேகத்தை அவரது சமீபத்திய காமெடிப் படங்கள் உண்டாக்கின. அந்தச் சந்தேகத்தை மெய்ப்பிப்பது போல அமைகிறது இந்தப் படமும். ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேசுகிறார்கள். அதுவும் அலுத்துப்போன மேனரிசத்தோடு. அதே ஆள்மாறாட்டத்தை வைத்துக்கொண்டு தலை காய வைக்கிறார்கள். ஆங்கில கிளாசிக் படத்தை மனதில் வைத்துக்கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது காட்சியமைப்பில் தெளிவாகத் தெரிகிறது. கொஞ்சம் கூட சிரத்தையற்ற கதையும், அதைச் சுற்றி எழுப்பப்பட்ட திரைக்கதையும் கிளாசிக் காமெடி முயற்சியை படுகுழியில் தள்ளுகிறது. படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒரு சிறுவனைக் கடத்துவது பற்றிப் பேசிக்கொள்கிறார்கள். ஏதோ காமெடி என்று நினைத்துக்கொண்டு (அப்போதும் சிரிப்பு வரவில்லை!) பார்த்தால், கடைசி வரை அதுவே படமாகச் செல்கிறது.

   கமல் காது கேளாமல் வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் கூட ஒட்டாமல் திரையில் ஓடுகின்றன. லேசாகப் புன்னகை வரவழைக்கக்கூடிய காட்சிகள் கூட ஒன்றோ இரண்டோதான். மற்ற காட்சிகள் எல்லாம் திரையில் வருகின்றன; போகின்றன. டிஜிடல் தொழில்நுட்பம் என்கிறார்கள். நான் பார்த்த திரையரங்கு சரியில்லையோ என்னவோ; படத்தின் ஒளிப்பதிவு சகிக்கவில்லை. நிறையக் காட்சிகள் கிராபிக்ஸில் ஒட்ட வைத்தது போன்ற தோற்றம். கமலுக்கு நகைச்சுவை நடிப்பு மறந்துவிட்டது என்று சந்தேகப்படும் அளவிற்கு உள்ளது அவரது நடிப்பு. சாதாரண காட்சியை, காட்சி அமைப்பின் மூலமும் நடிப்பின் மூலமும், கிளாசிக் ஆக்கிவிடலாம் என்று கமல் தன் மேல் நம்பிக்கை கொண்டிருப்பது புரிகிறது. கமல் போன்ற அசாதாரணக் கலைஞர்கள் அதைச் சாதிப்பவர்கள்தாம். ஆனால் “பழைய செருப்புக் கடிக்காது” என்பதை மறந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் தற்கொலை செய்ய முயற்சி செய்யும்போது, கமல் காப்பாற்ற நினைக்கும் காட்சியின் நீளம் கொட்டாவி வரவைக்கிறது. அதைத் தொடர்ந்து கமல் அவரை மகனாக ஏற்றுக்கொள்வது, மணீஷாவை லவ் செய்வதும் நாம் அனுபவிக்கும் கொடுமைகளில் ஒன்று.

   எத்தனை நாள்தான் அபத்தமான ஒரு கதாபாத்திரத்திற்கு “ஆளவந்தான் மணீஷா”வைச் சொல்வது? இனி “மும்பை எக்ஸ்பிரஸ் மணீஷா” எனச் சொல்லலாம். பாத்திரப்படைப்பில் பெரும் கோட்டை விட்டிருக்கிறார் என்று தனியே சொல்லவேண்டியதில்லை. படத்திலுள்ள பல குறைகளில் இதுவும் ஒன்று.

   ஒரு காட்சியாவது வாய் விட்டுச் சிரித்தோம் என்றில்லை. சில காட்சிகள் சிரிப்பைத் தருவது போன்று அமைந்து, அடுத்த விநாடியே “இதுல என்ன இருக்கு?” என்கிற அலுப்பைத் தருகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள்தான் ஏராளம்.

   இளையராஜா எதற்காகவும் அலட்டிக்கொள்ளவில்லை. அவருக்கு வேலை ஒரே ஒரு பாட்டு. தனியாகக் கேட்கும்போது மனதில் ஏதோ ஒரு சோகம் ஒட்டிக்கொள்கிறது. ஆனால் காட்சி அமைப்புடன் பார்க்கக்கூடாது.

   கமல் கிரேனில் ஆபரேட் செய்யும் காட்சிகள், அங்கிருந்து கீழே இறங்கி ஒரு பையனைக் கடத்தும் காட்சிகள், கார் விபத்தில் சிக்கிய பின்பு போலீஸிடம் பேசும் காட்சிகள், அந்தப் பையன் தற்கொலை செய்ய முயல அவனைக் காப்பாற்ற முயலும் காட்சிகள் என்று நீளமாக நம்மைச் சோதனைக்குட்படுத்தும் காட்சிகள் நிறைய நிறைய. அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு.

   கிளைமாக்ஸ் காட்சிகளில் ஆளாளுக்கு லாஜிக்கே இல்லாமல் மாற்றி மாற்றி நினைத்துக்கொள்கிறார்கள். சீக்கிரம் படம் முடிந்துவிடும் என்ற நினைப்பே பெரும் சுகம் தருவதாக அமைகிறது.

   கமல் ஒரு பேட்டியில், எத்தனை நாள் காதலிக்க நேரமில்லை படமே கிளாசிக்கில் இருக்கும்?” என்று கேட்டு, அதை அந்தச் சிம்மாசனத்தில் இருந்து “மும்பை எக்ஸ்பிரஸ்” நீக்கும் என்று சொல்லியிருக்கிறார். ஆசை வெட்கம் அறியாது மற்றும் நல்ல விளம்பர உத்தி. நிஜம் என்னவோ, காதலிக்க நேரமில்லை இன்னும அதே சிம்மாசனத்தில்.

   பம்மல் (உவ்வேக்) சம்பந்தம் வரிசையில் மும்பை (உவ்வேக்) எக்ஸ்பிரஸ்.

   படத்தைப் பார்த்துவிட்டு வந்த இரசிகர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ஒருவர் “இன்கம்டாக்ஸுக்காக எடுத்த படம்” என்றார். இன்னொருவர் “சந்திரமுகியில முதல் ஷாட்டே கமலுக்கு நன்றி சொல்றதுதான். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைப் பார்த்துட்டு ரஜினி தேங்க்ஸ் சொல்லியிருக்காரு போல” என்றார். இன்னொருவர் “படம் இடைவேளை வரை செம ஃபாஸ்ட். ஆமா, நல்லாத் தூங்கிட்டேன்” என்றார். இதுபோன்ற கமலின் இரசிகர்களின் கமெண்ட்டுகள் எனக்குப் புதிதல்ல. குருதிப்புனல், குணா, ஹேராம் போன்ற படங்களை முதல் காட்சியில் பார்க்கும் “விசிலடிக்கும் இரசிகர்கள்” இப்படித்தான் எதிர்வினையாற்றுவார்கள். அதே எதிர்வினை ஒரு நகைச்சுவைப் படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது. கமல் யோசிக்கவேண்டும்.

   [01] கமலின் நகைச்சுவை, ஒரே மாதிரியான நடிப்பினால் அலுக்கத் தொடங்கிவிட்டது. ஆள்மாறாட்டம், வார்த்தையை மாற்றி மாற்றிப் போட்டுப் பேசுவது போன்ற அலுத்துப்போன விஷயங்களிலிருந்து கமல் வெளி வரவேண்டும்.

   [02] கதையே வேண்டாம், காட்சியமைப்பில் வென்றுவிடலாம் என்கிற பரிசோதனைகளை விட, கொஞ்சமாவது கதையுடன் கூடிய பரிசோதனைகள் நல்லது.

   [03] சந்தானபாரதி போன்ற முகபாவனைகளே வராத நடிகர்களைப் போடுவதைக் காட்டிலும், இயல்பாகவே நகைச்சுவையாய் நடிக்கத் தெரிந்த நடிகர்களையும் நகைச்சுவை நடிகர்களையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

   [04] என்னதான் கிளாசிக் காமெடி என்றும் காமெடிப் படங்களில் புதிய பரிசோதனை என்றும் சொல்லிக்கொண்டாலும், காமெடிப் படம் என்னும்போதே காமெடி என்கிற ஒன்று தேவைப்பட்டுவிடுகிறது. அப்படி காமெடி என்கிற சங்கதியே இல்லாமல் காமெடிப் படத்தில் பரிசோதனை எடுப்பதைப் பற்றிக் கமல் யோசிக்கவேண்டும்.

   [05] கமலின் பரிசோதனைகள் எல்லாம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் மிகச்சிறந்த பெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால் இந்த முறை இரண்டும் இல்லாமல் போயிருக்கிறது. கிட்டத்தட்ட இதே பிரச்சனை விருமாண்டியிலும் கமலுக்கு ஏற்பட்டது என்றே நான் நினைக்கிறேன். வணிக வெற்றியையும் தரமான படங்களையும் கமல், முன்பு போலவே குழப்பாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.

   இவையெல்லாம் கமலுக்கு நாம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சிறந்த சிந்தனையாளர் மற்றும் சுய பரிசோதனை செய்யும் கலைஞர் அவர். மும்பை எக்ஸ்பிரஸில் எனக்குத் தோன்றியதை மட்டும் சொல்லியிருக்கிறேன் என் கருத்து என்கிற வகையில்.

   குமுதம் இந்தப் படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டியிருக்கிறது. பத்திரிகைகள் ஒரு தரமற்ற படத்தைத் தூக்கி நிறுத்திவிட முடியாது என்பதற்கு இந்தப் படம் மேலும் ஒரு சான்றாக அமையும்.

   மும்பை எக்ஸ்பிரஸ் செம ஃபாஸ்டாக ஓடும் தியேட்டரை விட்டு.

   மதிப்பெண்கள்-35

Share

லகலகலகலகல

   ரஜினியின் படமொன்றிற்கு விமர்சனம் என எழுதுவது இதுவே முதல்முறை! விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட (:P) அவரின் படங்களுக்கெல்லாம் எதற்கு விமர்சனம் என்று நினைத்திருந்துவிட்டேன் என்று சொன்னால் சும்மா விடமாட்டார்கள்!

   பாபாவின் தோல்விக்குப் பிறகு வந்திருக்கும் சந்திரமுகி, படம் வருவதற்கு முன்பே, வழக்கம்போல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டிருந்திருந்தது. அரசியலோ ஆன்மீகமோ இருக்காது என்று உறுதியாகத் தெரிந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஆசுவாசத்தைத் தந்தது. மணிச்சித்திரத்தாழின் ரீமேக் என்றவுடன், அந்தக் கதை எப்படி ரஜினிக்குப் பொருந்தி வரும் என்று யோசிக்காத ரசிகன் இல்லை. மோகன்லால் இடைவேளைக்குப் பின்னரே மலையாளப் படத்தில் வருவாராம். (நான் இன்னும் மணிச்சித்திரத்தாழ் பார்க்கவில்லை). ரஜினி இடைவேளைக்கு பின்னர் வந்தால் திரையரங்குகள் என்னாவது?! எந்தவொரு சமரசமுமில்லாமல் ரஜினியோ வாசுவோ படமெடுக்கக்கூடியவர்கள் அல்ல என்பது தெரிந்த விஷயமாதலால் மணிச்சித்திரத்தாழ் “சந்திரமுகி”யாக மாற்றப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையும் இருந்தது. இத்தனை எதிர்பார்ப்புகளுடன் ஏப்ரல் 14-ம் தேதி, இரண்டாவது காட்சியில் அமர்ந்திருந்தேன். (டிக்கெட் கிடைக்க நடந்த சம்பவங்கள் தனிக்கதை. அது என்னுடைய சுயசரிதையில் நிச்சயம் வெளிவரும்!!!)

   முதல் பதினைந்து நிமிடங்களில் ரஜினி ரசிகர்களுக்கான படம் முடிவடைந்துவிடுகிறது. அதன்பின் படம் பொதுப் பார்வையாளர்களுக்குரியது. ஆன்மீகம், அரசியலை விட்டுவிட்ட ரஜினி, அதற்குப் பதிலாய் மாந்த்ரீகம், மந்திரம் போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார். கொஞ்சம் பிசகினாலும் “ஏமாத்துறாய்ங்க” என்று ஒரே வரியில் ஊத்திக்கொள்ளக்கூடிய கதையை ரஜினிக்கு ஏற்றவாறு கையாண்டிருக்கிறார் வாசு. படத்தின் எழுத்துப் போடுவதற்கு முன்பாகவே, பாய்ந்து பாய்ந்து அடித்தல், காலைத் தலைக்கு மேலே தூக்கி நின்று சிரித்தல், சுவிங்கம் மென்றுகொண்டே ஸ்லோ-மோஷனில் நடந்து எதிரிகளைப் பந்தாடுதல், காலைச் சுற்றும்போது புயல் மையம் கொண்டு சத்தைகள் பறந்து அடங்குதல் என்று ரஜினி ரசிகர்களுக்கான காட்சிகளை வேக வேகமாக முடித்துவிட்டுக் கதைக்கு நகர்ந்துவிடுகிறார். சின்னச் சின்ன நெருடல்கள், கேள்விகளை எல்லாம் (ரஜினி படத்தில் லாஜிக்கா?) கொஞ்சம் கூடக் கண்டுகொள்ளாமல், வேட்டைக்கார பங்களாவில் சூடு பிடிக்கிறது படம். அந்த டெம்போ படத்தின் இறுதி வரை குறைவதே இல்லை. அதுவும் படத்தின் உச்சக்கட்டக் காட்சியான “ரா ரா” தெலுங்குப் பாடலின் இசை, ஜோதிகா மற்றும் ரஜினியின் நடிப்பு, படமாக்கிய விதம் அனைத்தும் படத்திற்கு ஒரு கிரீடத்தையே சூட்டிவிடுகிறது என்றால் மிகையில்லை.

   படத்தின் நிஜ சூப்பர் ஸ்டாராகச் சொல்லவேண்டியது இரண்டு பேரை. ஒன்று வித்யாசாகர். இன்னொருவர் ஜோதிகா. வித்யாசாகரின் பின்னணி இசை வெகு அபாரம். படத்தைத் தாங்கிப்பிடிப்பதே அவரின் இசையும் பாடல்களுமே. வித்யாசாகர் இத்தனைச் சிறப்பாக இதுவரை இன்னொரு படத்தில் பின்னணி இசையை அமைத்ததில்லை. படத்தின் காட்சி ஒவ்வொன்றிலும் அவரின் அயராத உழைப்புத் தெரிகிறது. உச்சக்கட்டக் காட்சியான “ரா ரா” பாடலுக்கு இசையமைத்த விதத்திற்கு அவருக்கு ஒரு ஷொட்டு. அத்திந்தோம் பாடல் இன்னொரு கலக்கல். இந்த மெட்டு 80 களில் இளையராஜா போட்டுச் சலித்ததுதான் என்றாலும் ரஜினிக்கு இது போதுமானது என்று கணித்தே வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். படம் சூடு பிடிக்கும் இடமே அத்திந்தோம் பாடலில் இருந்துதான். “கொக்கு பற பற” பாடல் படமாக்கப்பட்ட விதம் ரஜினி படங்களில் வெகு அபூர்வமாக நிகழக்கூடிய ஒன்று. “கொஞ்ச நேரம்” இந்த வருடத்தின் சிறந்த மெலோடிகளில் ஒன்று. படமாக்கும் விதத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்கள். ரஜினிக்குத் தேவையான இசையை பாடல்களிலும், தரமான பின்னணி இசையையும் தந்து தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார் வித்யாசாகர்.

   ஜோதிகா. இப்படி ஒரு நடிப்புத் திறமை இவரிடம் இருக்கிறது என்று நம்பி, சோபனா செய்த கதாபாத்திரத்தை இவரால் செய்யமுடியும் என்று தேர்வு செய்த இயக்குநர் நிச்சயம் பாராட்டுக்குரியவர். படத்தின் கடைசி அரைமணி நேரக் காட்சிகளில் ஜோதிகாவின் நடிப்பு வேகம் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. “ரா ரா” பாடலில் அவரின் நடிப்பும், வேட்டைக்கார ராஜா மீது எண்ணெய் ஊற்றும்போது அவர் உட்கார்ந்திருக்கும் ஸ்டைலும்,. வேட்டைக்கார ராஜாவைப் பார்த்து அவரின் பாணியிலேயே “லகலகலகலகலகலகல” என்றும் சொல்லும் ஸ்டைலும் அதிசயிக்க வைக்கின்றன. இந்த வருட தமிழக அரசு விருது இவருக்குத்தான் கிடைக்கும். ஜோதிகாவுக்கு டப்பிங் கொடுத்த கலைஞர் யாரென்று தெரியவில்லை. தெலுங்கில் சந்திரமுகியாக அவர் பேசும் விதம் அதிசயிக்க வைக்கிறது. அவருக்கும் ஒரு விருது நிச்சயம்.

   இனி ரஜினி புராணம்! 57 வயது ரஜினிக்கு என்றால் நம்பவே முடிவதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் அவரின் ஸ்டைலும் காட்சியை உணர்ந்து நடிக்கும் தன்மையும், அவரது ஆளுமையும் – ரஜினிக்கே உரியது. சில காட்சிகளில் ரஜினியின் நடிப்பு மிகத் தீர்க்கமாக இருக்கிறது. வடிவேலுவும் ரஜினியும் இணைந்து செய்யும் நகைச்சுவைக் காட்சிகள் கலகலக்கின்றன. வடிவேலு நினைத்ததை ரஜினி சொல்லும் இடங்கள் நன்றாக இருக்கின்றன. பூட்டிய அறைக்கு வெளியே, வேட்டைக்கார ராஜாவாக ரஜினி இரண்டு முறை நடக்கும் ஸ்டைல் மற்றும் நடிப்பு வேறு யாருக்கும் வராத ஒன்று. “ரா ரா” பாடலில், “லகலகலகல” என்று சொல்லிக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக, துள்ளலுடன் ரஜினியைக் காணும்போது, ஒரு வேகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. தலைப்பாகையைக் கீழே போட்டுவிட்டு, அதை எடுக்க ஒரு அமைச்சர் குனியும்போது ரஜினி சிரிக்கும் காட்சியும், கள்ளக்காதலினின் தலையைச் சீவிவிட்டுக் காது குண்டலத்தை எடுத்து மாட்டிக்கொண்டு பாடும் காட்சியும் ரஜினி சிறப்பாக நடித்திருக்கும் இன்னும் சில காட்சிகள். மற்றப் படங்களைக் காட்டிலும் இதில் ரஜினி வராத காட்சிகள் அதிகம். இது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தும் விஷயம். படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் இந்தக் கருத்தைக் கேட்க முடிந்தது. “பஞ்ச் டைலாக் இல்லை. இதெல்லாம் என்ன?” என்றார் ஒருவர். எங்கோ நடக்கும் ஒரு கதையில் ரஜினி வந்து போவதாகப் புலம்பினார் இன்னொரு ரசிகர். இதன் காரணம், உச்ச கட்டக் காட்சிகளில், ஜோதிகா செய்த ஹைஜாக்கில் அனைவரும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என்பதே.

   படத்தில் குறைகளே இல்லை என்பதில்லை. அது இருக்கிறது. நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. தேவையற்ற குழப்பங்கள் எழுகின்றன. எப்படியென்று தெரியாமல் சில விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் இவையெல்லாம் மிகக்குறைவான காட்சிகள் என்பதே படம் பிழைத்துக்கொள்ளும் காரணம்.

   மணிச்சித்திரத்தாழ் என்கிற க்ளாசிக் படத்தை, ரஜினிக்குத் தகுந்த முறையில் கையாண்டிருக்கிறார்கள். மணிச்சித்திரத்தாழில் இல்லாத சில காட்சிகளைச் சேர்த்திருந்தப்பதன் மூலம் ரஜினிக்குச் சிறந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார்கள்.

   பிரபு அவரது வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார்.

   சந்திரமுகியின் பலத்தில் ரஜினியின் கொடி பறக்கிறது.

[மதிப்பெண்கள்: 47]

Share

தமிழ்த்திரைப்படப்பெயரும் தமிழக அரசியலும்

படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. தமிழகத்தில் எப்போதும் தமிழுணர்வு சார்ந்த பிரச்சனைகளில் உணர்வு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியலே பிரதானமாக்கப்பட்டிருக்கிறது. இந்த முறையும் நம் வழக்கத்திற்கு எந்தப் பங்கமும் இல்லை. தமிழில் பெயர் வைக்கும் படலத்தில் முழுக்க முழுக்க அரசியல் விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது.

தமிழ்ப்படங்களுக்குத் தமிழிலிலேயே பெயர் வைப்பது வரவேற்கப்படவேண்டிய ஒன்றுதான். அதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் அது நிகழ்த்தப்பட, தமிழ் பாதுகாப்பு அமைப்பு மூலம் ராமதாஸ¤ம் திருமாவளவனும் மேற்கொள்ளும் வழிகள் மிகவும் கண்டத்திற்குரியதாக இருக்கிறது. படங்களில் சிகரெட், மது அருந்தும் காட்சிகள் வந்தால் அந்தப்படத்தைத் தடை செய்வோம் என்கிறார்கள். படத்திற்குத் தமிழில் பெயர் வைக்கவில்லை என்றால் அப்படத்தைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்கிறார்கள். இவர்கள் இப்படிச் சொல்லிவிட்டால், இவர்களில் தொண்டர்கள் எந்தவிதத்தில் இந்தப் பிரச்சனையைக் கையாளுவார்கள் என்று நாம் அறிந்ததே. தமிழுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்கிற நிஜமான எண்ணம் பின்னுக்குத் தள்ளப்பட்டு வன்முறை உணர்வே முன்னுக்கு வரும். படம் திரையிட்ட திரையரங்குகளைக் கொளுத்தவும், திரையைக் கிழிக்கவும் இவர்கள் தொடங்குவார்கள். பாபாவுக்கு நேர்ந்தது நாம் அறிந்த ஒன்றுதான். அன்றே பிரச்சனையை நடிகர்கள் ஒற்றுமையாகச் சந்தித்திருந்தால் ராமதாஸ் கொஞ்சம் அடங்கியிருப்பார். அன்று நேர்ந்தது ரஜினிக்குத்தானே என்கிற மனப்பான்மை நடிகர்களிடம் இருந்தது. அதுவே இப்போது வளர்ந்து அனைவரையும் தாக்கும்போது எல்லாரும் உணர்கிறார்கள். விஜயகாந்திடம் ராமதாஸ் மோதியபோதுதான் விஜயகாந்திற்குக் கோபம் வருகிறது. ரஜினியுடன் ராமதாஸ் மோதியபோதே நடிகர்கள் ஒரே அணியில் இருந்து எதிர்த்திருந்தால் நிலைமை இத்தனைத்தூரம் வந்திருக்காது.

தமிழைக் காக்கிறோம் என்று அறிவித்துக்கொண்டு இவர்கள் செய்யும் அறிவிப்புகள் பெரும்பாலும் பொதுமக்களில் ஒரு பிரிவினரிடையே அச்சத்தையும் (திரைப்பட உலகினரும் பொதுமக்கள்தாம்!) அதனால் பெருத்த நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்றன. இவர்கள் முன்பு இப்படி அறிவிப்பு வெளியிடும்போதெல்லாம் எப்படி ஓர் அரசு அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறது என்கிற கேள்வி எழும். எல்லாம் தமிழ்ப்பேச்சு தருகிற ஓட்டு என்று நினைத்துக்கொள்வேன்.

ராமதாஸ் இன்று தி.மு.க. அணியில் இருக்கிறார். அதனால் கருணாநிதியால் வெளிப்படையாகக் கண்டிக்க இயலவில்லை. அவர் நடிகர்களைப் பகைத்துக்கொள்ளவும் தயாரில்லை. அவரால் திரைமறைவில் மட்டுமே ராமதாஸை அமைதியாக இருக்கச் சொல்லமுடியும். பாபா பிரச்சனையில் திரைமறைவில் செயல்பட்டது போல இப்போதும் செயல்படமுடியும். திறந்து ராமதாஸைக் கண்டிக்கமுடியாது. இதனால் கூட்டணி உடையும் சாத்தியக்கூறு உள்ளது. இன்னொரு ஐந்து வருடம் ஆட்சிக்கட்டில் இல்லாமல் இருக்க அவர் தயாராக இருக்கமாட்டார் என்பது நாம் அறிந்ததே. மேலும் தமிழுணர்வை ஆதாயமாக வைத்து அரசியல் இலாபம் பெற தி.மு.க.விற்கு மட்டும்தான் உரிமையா என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டால் அதற்கும் கருணாநிதியிடம் பதிலில்லை.

ஜெயலலிதா ராமதாஸின் அறிவிப்பை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறார். தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் விஷயத்தில் தமிழ்த்தேசியவாத அமைப்பு வன்முறையைத் தூண்டும் விதத்தில் நடந்துகொண்டால் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று சொல்லியிருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கப்படவேண்டியது. தமிழுணர்வை எதிர்த்து என்ன சொன்னாலும் அவர் தமிழ்த்துரோகியாக்கப்படுவது நமக்குப் புதியதல்ல. ஜெயலலிதா அதைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்ட அரசியல்வாதி இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். சென்ற முறை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அரசு, இந்த முறையாவது இதைக் கண்டித்தது ஆறுதல் அளிக்கிறது. தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைப்பது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இஷ்டம். அவர்களைத் தமிழில் பெயர் வைக்க சிபாரிசு செய்யலாம். தமிழைக் காக்கவேண்டிய பொறுப்பு இருப்பதை வலியுறுத்தலாம். ஆனால் படத்தைத் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்று ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி அறிவிக்குமானால் அதை அரசு பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. இன்று அறிக்கையில் காட்டம் காட்டியிருக்கிறது ஜெயலலிதா, நாளை தேர்தலில் பா.ம.க.வுடனான கூட்டணிக்குச் சமிஞ்கை கிடைக்கும் பட்சத்தில் இந்த அறிக்கையை அப்படியே மறப்பார் என்று நாம் அறியாததல்ல. அவரது அரசியல் மற்றும் அணுகுமுறை நமக்கு அத்துப்பிடிதான். அப்படி ஒன்று நிகழ்ந்தால் திரைப்படத்துறையினரை யாரும் காக்கமுடியாது. (….என்றும் சொல்லமுடியாது. இப்போது திரைப்படத் துறையினரின் சேவியராக ஜெயலலிதா தன்னைக் காண்பித்துக்கொண்டபடி, கருணாநிதி வருவார்!.)

ஒரு படத்திற்குத் தமிழில் பெயர்வைக்க நிர்பந்திப்பதற்கு அரசியல்வாதிகள் யார்? இப்படி நேரடியாகக் கேள்வி எழுப்புகிற அளவிற்கு நடிகர்களிடையே ஒற்றுமையில்லை. நல்லவேளை, தன் படத்திற்கு B(est) F(riend) என்று பெயர் வைத்திருக்கிற சூர்யா, அவர் படத்திற்குப் பெயர் மாற்றப்படவேண்டும் என்ற பேச்சு எழுந்தபோது, அதற்குச் சம்மதிக்க அறவே மறுத்துவிட்டார். அடுத்துச் சிக்கியது கமலின் “மும்பை எக்ஸ்பிரஸ்.” அவர் எப்படித் தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைக்கலாம்? அவர் மட்டும் தமிழில் பெயர் வைத்திருந்தால் தமிழ்நாட்டில் “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்” என்று தமிழாறு ஓடியிருக்கும். கெடுத்தார்கள் சூர்யாவும் கமலும். தமிழைக்காக்க வந்திருக்கிற ராமதாஸ் சும்மா இருப்பாரா? இந்த இரண்டு படங்களுக்குப் பெயர் மாற்றாவிட்டால் அந்தத் திரைப்படங்களைத் திரையிடுவதை எதிர்ப்போம் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சண்டியர் விஷயத்தில் சூடு பட்ட கமல், இந்த முறை ஜெயலலிதாவின் அறிக்கையால் கொஞ்சம் சந்தோஷத்துடன் இருக்கிறார். அவர், “முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. இதைத்தவிர நான் எது சொன்னாலும் அது அரசியலாகிவிடும்” என்று சொல்லி தன் வேலையைச் சுருக்கிக்கொண்டுவிட்டார். இவர்கள் எடுக்கும் வணிகப்படத்திற்கு தலைப்பை எப்படி வைத்தால் என்ன? இன்னும் சொல்லப்போனால் BF படத்துக்குத் தமிழில் பெயர் வைக்கக்கூடாது என்றல்லவா போராட்டம் நடத்தவேண்டும்?!

வைகோ தன் பங்கிற்கு, “திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கும் விஷயத்தில் வன்முறைக்கு ம.தி.மு.க. துணை போகாது” என்று அறிவித்திருக்கிறார். பின்னர் அவருக்கே என்ன தோன்றியதோ,”எங்கள் கூட்டணிக்கு எந்தவிதப் பங்கமும் இல்லை. வரும் தேர்தலில் வெற்றிபெற்றி கருணாநிதி ஆட்சி அமைப்பார்” என்றும் சொல்லியிருக்கிறார். இந்த விஷயம் பற்றி இதுவரை கருணாநிதியிடமிருந்து பதிலில்லை. இந்தவாரம் ஆனந்தவிகடனில் பேட்டி கொடுத்திருக்கிற திருமாவளவன், ‘சில நல்ல விஷயங்களை அழுத்தமாகச் சொன்னால்தான் புரிகிறது சிலருக்கு” என்று சொல்லியிருக்கிறது. அவர் சொல்கிற “அழுத்தம்” நமக்குப் புரியாதது அன்று.

இதற்கெல்லாம் மூலகாரணமாகச் சொல்லவேண்டியது திரையுலகினரின் ஒற்றுமையின்மையை. தமிழின் பழைய எழுத்துகளான கொம்பு எழுத்துகளைத் தவிர்த்துவிட்டு அனைவரும் புதிய எழுத்துகளுக்கு மாறியபோது (கொம்பு த=தை), அப்படி மாறாதவர்கள் எல்லாம் தமிழுணர்வுக்கு எதிரானவர்கள் என்ற பிரசாரம் செய்யப்பட்டது. அதை எதிர்க்கும் வண்ணம் வீம்புக்காக சோ துக்ளக் பத்திரிகையில் பழைய கொம்பு எழுத்துகளையே பயன்படுத்தினார். அதே வீம்புதான் இப்போதைக்குத் தேவையானது. இனி வரும் ஐம்பது படங்களுக்கு அனைத்துப் பெயர்களையும் ஆங்கிலத்திலேயே வைப்பது என்று எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அதன்படி நடந்தால் தமிழ் பாதுகாப்பு அமைப்பு என்ன செய்யும்? ஐம்பது படங்களையும் தடுப்பார்களா? நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இதை எதிர்த்தால் இந்த ஒன்றுமில்லாத பிரச்சனையை முறியடிக்கமுடியாதா?

வாட் டூ யூ திங்க் ·பிரண்ட்ஸ்?

Share

காதல் – திரைப்படம்

காதல் (திரைப்படம்) – இயக்கம்: பாலாஜி சக்திவேல், இசை: ஸ்ரீதர் ஜோஷ்வா, ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

நிறையத் தடவை தமிழ்த்திரைப்படங்கள் பல்வேறு வடிவங்களில் பார்த்துவிட்ட கதையை யதார்த்தத்துடனும் கலைநேர்த்தியுடனும் தரத்துடனும் தந்திருக்கிறார் இயக்குநர். மெக்கானிக்கும் பணக்கார வீட்டுப்பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் அதைத் தொடர்ந்த விளைவுமே கதை. ஒளிப்பதிவின் உயர்ந்த தரமும் யதார்த்தமும் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் எனலாம். படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் க்ளோஸ்-அப் காட்சிகளே. நடிகர்களில் பலர் அறிமுகங்கள்; அவர்கள் மிகவும் இயல்பாக நடிக்கிறார்கள் என்பதால் படத்துடன் எளிதில் ஒன்ற முடிகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் மதுரையிலும் இரண்டாம் பாதி முழுவதும் சென்னையிலும் சுழல்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் மதுரைத்தமிழ், அதிலும் குறிப்பாக கதாநாயகன் பரத் பேசும் மதுரைத்தமிழ் வெகு கச்சிதம். பரத்தின் நடிப்பு கொஞ்சம் கூட எல்லை மீறாமல் ஒரு டூ வீலர் மெக்கானிக்கை அப்படியே கண் முன் கொண்டுவருகிறது. ரிப்பேருக்கு வரும் வண்டியை ஒரு மெக்கானிக் எப்படி ஓட்டுவாரோ அப்படியே ஓட்டுகிறார். மெக்கானிக்கை ஒரு பணக்காரப் பெண் காதலித்தால் வரும் உணர்வுகளை அப்படியே சித்தரிக்கிறார். கதாநாயகி சந்த்யா அறிமுகம் என்கிற சுவடேயில்லை. யதார்த்தமான காட்சிகளில் வெகு இயல்பாகவும் உச்சகட்ட காட்சிகளில் வெகு அழுத்தமாகவும் நடித்து வியப்பில் ஆழ்த்துகிறார். பள்ளி சீருடையில் சிறுமியாகவும் சுடிதார் வகையறாக்களில் பெண்ணாகவும் தெரிகிறார். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவற்றின் தன்மையையும் தேவையையும் உணர்ந்து நடித்திருக்கின்றன. அனைவரும் புதுமுகங்கள் என்பது ஆச்சரியமான விஷயம். பரத்தின் எடுபிடியாக வரும் சின்னப்பயல் அடிக்கும் கமெண்ட்டுகள் அழகு.

இப்படி யதார்த்தத்தைத் தோளில் சுமந்து செல்லும் படம் இடைவேளைக்குப் பிறகு இலேசாகத் தடம் புரள்கிறது. சென்னையில் வரும் மேன்சன் காட்சிகளில் படம் தொய்வடைகிறது. மேன்சன் காட்சிகள் இயல்பாக நடக்கக்கூடியவைதான் என்றாலும் அவை படத்தின் தேவையை விட அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. ஸ்டீபனாக நடிக்கும் நடிகர் யாரெனத் தெரியவில்லை. அப்படியே வடிவேல் போலவே இருக்கிறார். அவரின் ப்ளாஷ்பேக் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் அவசியமற்றது; நாடக ரீதியானது. அதேபோல் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அவர் திருமணம் செய்து வைக்க, அதைப் பார்க்கும் மேன்சன் நண்பர் மிக உணர்ச்சிவசப்பட்டு கதாநாயகனையும் நாயகியையும் மேன்சனுக்குக் கூட்டி வந்து, தேவையானதை எல்லாம் செய்து, எல்லோரும் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டு, அதில் மேன்சனின் பெருமைகளைப் பட்டியற்படுத்தி….. விக்ரமன் வாசனை. போதாக்குறைக்கு கதாநாயகன் தானும் ஒரு ஆட்டம் போட, அதைப் பார்த்த கதாநாயகி அவரும் ஒரு ஆட்டம் போட்டு, பின் வெட்கப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார். இரண்டே நிமிடங்கள் வரும் காட்சிதான் என்றாலும் பல படங்களில் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன, செயற்கையான காட்சியினை, அதுவரை மிக யதார்த்தமாக படத்தை நகர்த்திக்கொண்டிருந்த இயக்குநர் எப்படி அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது.

உச்சகட்ட காட்சிகளில் நிகழும் சம்பவங்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் காணும் சம்பவங்களே. “சிங்கம்லே” என்று தன் வண்டியில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாராய வியாபாரியின் மகளை, ஒரு மெக்கானிக் காதலித்தால் என்ன நடக்குமோ அது நடக்கிறது. அந்தக் காட்சியில் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கூட நடித்திருக்கின்றன. “சில வருடங்களுக்குப் பிறகு” திண்டுக்கல்லில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தோடு படத்தை முடித்திருந்தால் அது இன்னும் இயல்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். அதற்குப் பின்னும் ஐந்து நிமிடம் படம் நகர்கிறது. மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரின் பெருந்தன்மையோடு படம் நிறைவடைகிறது. உண்மைக் கதையை ஆதாரமாகக் கொண்ட கதை என்று இயக்குநர் முதலிலேயே சொல்லிவிடுகிறார். படத்தின் நிறைவுக்காட்சியில் அதே சம்பவத்தை வைத்தே நிறைவு செய்திருக்கிறார்.

படத்தில் எழுத்துப் போடும் காட்சிகளில் ஒவ்வொரு சட்டமாக மதுரையில் இயல்பு வாழ்க்கையைக் காட்டும்போது பரவும் மதுரை வாசம் இறுதிவரை கூடவே வருகிறது. அதிலும் கதாநாயகியின் சடங்குக் கொண்டாட்டங்களில் வரும் மனிதர்களில்தான் எவ்வளவு நிஜம்! இப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓடிப்போவதை மட்டுமே, அதுவும் செயற்கையாக நாடக ரீதியில் சொல்லிப் பழகிவிட்ட தமிழ்த்திரைப்படச்சூழலுக்கு மத்தியில், இப்படி ஒரு படத்தின் மூலம் ஓடிப்போவதைத் தாண்டியும் பேசியிருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இத்திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்குக்கான திரைப்படம் என்கிற வட்டத்தையும் மீறி சமூக சிந்தனையுள்ள ஒரு திரைப்படம் என்றும் வகைப்படுத்தலாம்.

மிக சில காட்சிகளில் இயக்குநர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். பல இடங்களில் கதாபாத்திரங்கள் ஒன்றுமே வாயசைக்காமல் இருக்கும்போது பின்னணியில் வசனம் பேசப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் ஒன்றைப் பேச, வசனமோ இன்னொன்றாக இருக்கிறது. கதாநாயகி பூப்படையும் காட்சியில் வேண்டுமென்றே தண்ணீர் வரும் டேப்பைத் திறப்பதுபோல இருக்கிறது!

இசை (ஸ்ரீதர் ஜோஷ்வா-அறிமுகம்) மோசமில்லை. பாடல்கள் நா.முத்துகுமார். நிறைய வரிகளில் பளிச்சிடுகிறார்.

தரமான திரைப்படம்.

Share

English titles Vs Tamil films

சேரன் தனது அடுத்த படுத்திற்கு “டூரிங் டாக்கீஸ்” என்று பெயர் வைத்திருக்கிறார். சட்டென்று மனதில் நிற்கும் பெயர்தான். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சேரன் துபாய் வந்திருந்தபோது “ஆட்டோகிரா·ப்” என்கிற பெயரை ஏற்கனவே வைத்துவிட்டதாகவும் துபாய் வந்து தூய தமிழில் பேசிக்கொள்ளும் ஆசி·ப் உள்ளிட்ட நண்பர்களைச் சந்தித்தித்திருந்தால் அப்படி ஆங்கிலத்தில் பெயர் வைப்பதைத் தவிர்த்திருப்பாரெனவும் சொன்னதாகத் தெரிகிறது. (மரத்தடியில் முன்பு ஆசி·ப்உள்ளிட்ட மடல் இப்படிச் சொல்கிறது). இப்போது எடுக்கப்போகும் படத்திற்கும் “டூரிங்டாக்கீஸ்” என்று ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்திருக்கிறார்.

தமிழ்ப்படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களை வைப்பது தவறு என்று பா.ம.க. உள்ளிட்ட பலஅமைப்புகள் கண்டனம் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றன. வணிக ரீதியில் எடுக்கப்படும் படங்கள் எல்லா வகையிலும் மக்களைக் கவர்வதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ளும். அப்போது படங்களின் பெயர்களைத் தமிழில் வைக்கவேண்டும் என்றோ தமிழில் வைக்கக்கூடாது என்றோ யோசிக்கமாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. எந்தப் பெயர் பொருத்தமானதாகவும் சட்டென்று கவரக்கூடியதாகவும் இருக்குமோ அதை வைக்கிறார்கள்.

எச்சூழ்நிலையிலும் தமிழில் மட்டுமே பெயர் வைப்போம் என்கிறவர்களை மெச்சும் நேரத்தில் தமிழில் படத்திற்குப் பெயர் வைக்காதவர்களைத் தமிழுணர்வு அற்றவர்களாக சிலர் அறிவிக்க முயல்வதை ஏற்கமுடியவில்லை. தமிழ்ப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைப்பதையும் தமிழுணர்வையும் முடிச்சு போடுவது வேடிக்கையானது. தமிழுணர்வைத் தமிழ்ப்படங்களில், அதுவும் “நியூ” மாதிரியான தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் ஏன்பெயர் வைக்கவில்லை என்று வாதம் செய்வது ஒரு வகையில் தமிழ் எதிர் உணர்வு. இன்னும்சொல்லப்போனால் “நியூ” மாதிரியான படங்களுக்குத் தமிழில் பெயர் வைக்காததை, தமிழில் பெயர் வைப்பதைக் கட்டாயமாக்க முயல்பவர்கள் பாராட்டவேண்டுமென்பேன்.

சேரனுக்கு வருவோம். சேரன் “டூரிங் டாக்கீஸ்” என்று படத்திற்குப் பெயர் வைப்பதில் என்னளவில் எந்தவிதமான எதிர்ப்புமில்லை. “டூரிங் டாக்கீஸ்” நல்ல பெயர்; சட்டென்று மனதைக் கவரும், மனதில் நிற்கும், பழைய நினைவுகளைக் கிளறிவிடும் பெயர்தான். ஆனால் துபாயில் அப்படிச் சொல்லிவிட்டு, அதை மறந்துவிட்டு அவர் மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் வைப்பதை எப்படி ஏற்பது? குறைந்தபட்சம் துபாயிலேயே தன்னிலையை விளக்கியிருக்கவேண்டும். “ஆட்டோகிரா·ப் படத்துக்கு நினைவேடுன்னு பேர்வெச்சா நீங்க மட்டும்தான் பார்ப்பீங்க” என்று ஆசி·பிடம் சொல்லும்போதே “உங்களைச் சந்தித்திருந்தால் அந்தப் பெயர் வைத்திருக்கமாட்டேன்” என்று சொல்வதைத் தவிர்த்திருக்கவேண்டும். அவர் பேச்சுவாக்கில் சொன்னாரா, சீரியஸாகச் சொன்னாரா என்பது ஆசி·ப்பிற்கே வெளிச்சம்.

தமிழ்ப்படங்களுக்குத் தமிழிலிலேயே பெயர் வைப்பது நல்லது. அதே சமயம் ஆங்கிலத்தில் பெயர் வைப்பது தமிழ்த்துரோகம்; கடுங்குற்றம் என்பதை என்னால் ஏற்கமுடியாது. ஆனால் அதைப் பாவமென்றோ தவறென்றோ ஒப்புக்கொள்கிறவர்கள் மீண்டும் ஆங்கிலப்பெயரை வைக்காமல் இருக்கவேண்டும்.

Share

ஆய்த எழுத்து – ஒரு விமர்சனம்


எடுத்த எடுப்பில் மாதவன் சூர்யாவைச் சுட பரபரப்புத் தொற்றிக்கொள்கிறது. அந்தப் பரபரப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து கொண்டு செல்கிறார் மணிரத்னம் இடைவேளை வரையில். வெவ்வேறு வாழ்க்கைத் தளங்கள், வெவ்வேறு பிரச்சனைகள், வெவ்வேறு இலக்குகளுடன் மூன்று இளைஞர்கள்.

மொட்டைத் தலையுடன் அடியாளாக, அதேசமயம் உள்ளுக்குள் ‘பெரியாளாக வேண்டும்’ கனவுடன் மாதவன். மாதவனின் நடிப்பும் டயலாக் டெலிவரியும் அசத்தல். கிட்டத்தட்ட நெகடிவ் கேரக்டர். துணிச்சலாகச் செய்திருக்கிறார் மாதவன். மூன்று நடிகர்களில் மாதவன் முந்துகிறார். அரசியலில் நல்லவர்கள் இறங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சூர்யா. கூடவே காதல். பல தடைகளை எதிர்த்து, ச்¢த்தார்த்தும் கைகோர்க்க, மாதவனை முறியடித்து, பேண்ட் ஷர்ட்டுடன் சட்டசபைக்குள் செல்ல.. கொட்டாவி.

படத்தின் ஆரம்ப கட்டக் காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு இடைவேளை வரை தொடர்வது படத்தின் பெரிய பலம். இடைவேளைக்குப் பின் வரும் சித்தார்த்- த்ரிஷா லாலிபாப் காதல் படத்தின் மிகப்பெரிய பலவீனம். சூர்யா மாதவன் காட்சிகளில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்பு சித்தார்த்தின் காட்சிகளில் இல்லாமல் போனது இன்னொரு ஸ்பீட் ப்ரேக்கர். சிவகாசி மாப்பிள்ளை என்று த்ரிஷா சொல்லும் காட்சிகளெல்லாம் பொறுமையைச் சோதிக்கின்றன. தேவையே இல்லாமல் சூர்யா- ஈஷா தியோல் காதல். ஈஷோ தியால் “நடிப்பு கிலோ எவ்வளவு ரூபாய்?” என்கிறார். த்ரிஷா, ஈஷோ தியோல் இருவரும் நம் பொறுமையைச் சோதிக்கும்போது ஆறுதல் அளிப்பது மீரா ஜாஸ்மினின் அழகும் நடிப்பும். அசத்தல் மீரா ஜாஸ்மின்.

படத்தின் ஆச்சரியம் பாரதிராஜா. அவரும் சூர்யாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் படத்தின் ஹைலைட். பாரதிராஜாவுக்கு இன்னும் அதிக வாய்ப்புக் கொடுத்திருக்கலாம்.

ஏ.ஆர்.ரகுமான். படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே வந்தது போன்ற பிரமை. மற்றப் பாடல்கள் வருகின்றன, போகின்றன. ஒன்றும் மனதில் நிற்பதில்லை. பாடலைத் தனியே போட்டு நூறு முறை கேட்டுவிட்டுப் படத்திற்குப் போகவேண்டும் என்பார்கள் ஏ.ஆர்.ரகுமான் இரசிகர்கள். பின்னணி இசை சுத்த மோசம். (பாரதிராஜாவும் மாதவனும் கடைசியில் பேசிக்கொள்ளும் காட்சி நீங்கலாக) பாடலின் ஹம்மிங்கையோ இசையையோ போட்டு படம் முழுதும் ஒப்பேற்றி விடுகிறார். பின்னணி இசை பிரவீன்மணி என்கிறார்கள். எழுத்துப் போடும்போது அப்படிக் காட்டவில்லை.

சுஜாதா நீண்ட நாள்களுக்குப் பிறகு பளிச். பல வசனங்கள் நல்ல கைதட்டைப் பெறுகின்றன.

மூன்று இளைஞர்களின் வாழ்க்கையைத் தனித்தனியாகக் குழப்பமில்லாமல் காண்பிப்பதில் வென்ற மணிரத்னம் படத்தின் டெம்ப்போவை இழுத்துப் பிடிப்பதில் சறுக்கியிருக்கிறார். சித்தார்த்- த்ரிஷா காதல் படத்தின் சீரியஸ்தன்மையை உடைக்கிறது. மாதவன் கேரக்டரில் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சுகிறது. சூர்யா சொன்னதும் கல்லூரி மாணவர்கள் படைபோல் பின்னால் வருவதெல்லாம் சுத்தப் பூச்சுற்றல். சித்தார்த் திடீரென அரசியலுக்கு வந்து சூர்யாவுக்குத் தோள் கொடுக்கும் காட்சியும் த்ரிஷா மீண்டும் சித்தார்த்திடமே வந்து சிவகாசி மாப்பிள்ளை ட்ரெயின் ஏத்திவிட்டார் என்று சொல்வதும் இது மணிரத்னம் படமா என்று சந்தேகம் வரும் நேரங்களில் சில.

ஆய்த எழுத்து – கொஞ்சம் எழுத்துப்பிழை!

===

ஒரு முக்கியமான கேள்வி:

மாதவன் ஜெயிலிலிருந்து வெளிவரும்போது போலீஸ்காரர் அவரிடம் அவரது பணத்தை ஒப்படைக்கிறார். ‘பத்துப் பைசா குறையுதே’ என்று மாதவன் சொல்லவும் போலீஸ் பத்துப் பைசாவைத் தேடித் தருகிறார். (கைதிகளோட பழகிப்பழகி நகைச்சுவை உணர்ச்சியே இல்லாமப் போச்சோ என்கிறார் மாதவன். சுஜாதா பஞ்ச்) பத்துப் பைசாதான் செல்லாதே.. அப்புறம் எப்படி???

Share

சேரனின் "ஆட்டோகிராஃப்" – ஒரு விமர்சனம்


தமிழ்த்திரையில் நம்பிக்கை அளிக்கும் இயக்குநர்களில் சேரனும் ஒருவர். இந்தப் படத்திலும் அதை நிரூபித்திருக்கிறார். எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும் அனுபவம் படமாக்கப்பட்டுள்ளது. சிறப்பாகவே படமாக்கப்பட்டுள்ளது.

பத்தாவது படிக்கும்போது ஏற்படும் ஈர்ப்பு படமாக்கப்பட்டிருக்கும் விதம் கவிதை மாதிரி இருக்கிறது. அந்தச் சிறுவனும் அந்தப் பெண்ணும் பேசிக்கொள்ளும் விதம் படு யதார்த்தம்.

கேரளச்சூழலில் இரண்டாவது பெண்ணைச் சந்திக்கிறார். காதல் மலர்கிறது. அதைப் படமாக்கியவிதமும் வெகு இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. இதுவரை எந்தவொரு தமிழ்ப்படமும் இத்தனை நல்ல மலையாளம் பேசி படமாக்கப்படவில்லை. மலபார் போலீஸ் படத்தைப் பார்த்த மலையாளிகள் சத்யராஜின் மீது இன்னும் வன்மமாகத்தான் இருக்கிறார்கள். 🙂

“அந்த ஏழு நாள்களில்” வரும் மலையாளம் கொஞ்சம் தேவலாம் என்றாலும் அதுவும் தரமான மலையாளமில்லை. அலைபாயுதேவில் வரும் அழகம்பெருமாளும் நித்யாவும் தரமான மலையாளம் பேசினார்களென்றாலும் மிககுறைவாகத்தான் பேசினார்கள். ஆட்டோகிரா·பில் மட்டுமே மலையாளம் சரியாகக் கையாளப்பட்டிருக்கிறது.

முதலிரண்டு பெண்கள் வரும் காட்சிகளின் நேர்த்தியை மூன்றாவது பெண் (ஸ்நேகா) வரும் காட்சியில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். முதலிரண்டு பெண்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எத்தனை இயல்போ எத்தனை யதார்த்தமோ அத்தனைக்கு அத்தனை ஸ்னேகா வரும் காட்சிகள் முழுவதும் செயற்கைத்தனம்.

வித்தியாசமாக வேலை கேட்கிறோம் என்று சொல்லி, அந்த முயற்சியில் வேலை கிடைத்தது என்று சொல்லும்போது படத்தின் யதார்த்தம் தொலைந்துபோக ஆரம்பிக்கிறது. சேரன் ஸ்நேகாவைச் சந்திக்கும் காட்சிகளிலேயே ஸ்னேகா தைரியசாலியாக இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. ஆனால் திடீரென்று ஒரு காட்சியில் “முன்னல்லாம் இப்படி இல்ல. ரொம்ப கோழை. இப்ப ரொம்ப தைரியமா இருக்கேன்னா அதுக்குக்காரணம் friedship” என்று டயலாக் அடிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஸ்னேகாவிற்குப் பின் இரண்டு பெரிய சோகம் இருப்பதைக் காண்பிக்கிறார்கள். ஒன்று அவர் ஏமாற்றப்பட்டது; இன்னொன்று அவரது தாயின் நிலை. அப்படிப்பட்ட தாய் இறந்தும் அவர் அதை மறைத்து சேரனின் வெற்றிக்காக முயல்வதும், அதில் சேரன் வெற்றி பெறுவதும் பின்னர் அதை அறிந்த சேரன் “ஏண்டா ஏன்” என்று கேட்கும்போது friendship என்று பதில் சொல்லும்போது இது சேரன் படமா “அக்மார்க் விக்ரமன் படமா” என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

படத்தின் கவிதைத்துவமான காட்சிகள் பத்தாவது படிக்கும்போது காட்டப்படும் காட்சிகளும் கேரளக் களத்தில் வரும் காட்சிகளும். இவற்றிலும் சில இடங்களில் சறுக்கியிருக்கிறார் சேரன்.

பத்தாவது படிக்கும் சிறுவனுக்கு சேரனே குரல் கொடுத்திருக்கிறார் (என நினைக்கிறேன்). அந்தக் குரல் மிகுந்த முதிர்ச்சியோடு இருப்பதால் அந்தச் சிறுவனை நம்மிடமிருந்து கொஞ்சம் அந்நியப்படுத்தி விடுகிறது.

கேரளக் காட்சிகளில் வரும் டூயட் பாட்டு, ஆதாம் ஏவாளாகக் கற்பனை செய்து பார்ப்பது – அபத்தமான காட்சிகள்.

படத்தின் அடுத்த மிகப்பெரிய குறை பாடலும் பின்னணி இசையும். ஒரு நல்ல படத்திற்கு, கொஞ்சம் வித்தியாசமான முயற்சிக்கு சையமைக்கிறோம் என்கிற எண்ணம் பரத்வாஜுக்கும் சபேஷ்-முரளிக்கும் கொஞ்சம் கூட இருந்ததாகத் தெரியவில்லை. ஞாபகம் வருதே பாடல்தான் நல்ல பாடல் என்று சொல்லவேண்டிய துர்பாக்கிய நிலை.

நடிகர் சேரன் இனி இயக்குநராக மட்டும் இருத்தல் அவருக்கும் நமக்கும் நல்லது. காட்சி நமக்குத் தரவேண்டிய சோகத்தைத் தரவிடாமல் நடிப்பில் கொண்டு வர முயற்சித்து தரையைப் பார்த்து சோகப்பட்டு அவர் நடிக்க யத்தனிக்கும் விதம் ஸ்டீரியோ டைப்பிக்காக அமைந்துவிட்டது. அவர் நிறுத்திக்கொள்ளுதல் நலம்.

லதிகா (கேரளாவில் வரும் காதலிக்கதாபாத்திரத்தின் பெயர். நடித்திருப்பவர் கோபிகா) விதவையாகக் காட்டப்படும் காட்சி எதிர்பார்த்த ஒன்று. ஆனாலும் அதை சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் சேரன்.

இவற்றையெல்லாம் மறக்கடிக்கும் அளவிற்குப் படத்தை உயரத் தூக்கி நிறுத்துகிறது படத்தின் உச்ச கட்ச காட்சிகள். கல்யாணம் நடக்கப்போகிறது என்று தெளிவாகத் தெரிந்தும் சேரன் தனக்கு வரப்போகும் மனைவியை மனதளவில் ஏற்கத் தயாராகும் காட்சிகளைக் காட்டும் விதம் படு அசத்தல். புதுப்பெண் சொன்னதும் தாடியை எடுப்பதும், புகைப்படம் எடுக்கும்போது தோளில் கையைப் போட்டுக்கொள்வதும் ஒவ்வொருத்தராக வந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதும் படத்தின் ஒட்டுமொத்த இனிய நினைவுகளைக் கண்முன் கொண்டுவந்துவிடுகிறது. அதுமட்டுமில்லாமல், மூன்று பெண்களுமில்லாமல் நாலாவது ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் காண்பிக்குமிடத்தில் இயக்குநர் சேரன் ஜெயிக்கிறார்.

படத்தில் நான் மிகவும் இரசித்த காட்சி என்றால் பத்தாவது படித்த போது விருப்பப் பட்ட பெண்ணைத் தன் திருமணத்திற்கு அழைக்கச் செல்லும் காட்சிகள். அவளது மகனின் பெயர் செந்தில் என்றதும் “உம் பேரு என்னப்பா” என்று கூட வந்த நண்பர் கேட்க “சுரேஷ்” என்று சொல்லவும், “பாத்தியா உனக்கு முன்னாடியே ஒருத்தன் இருந்திருக்கான்” என்னும்போது தியேட்டரே அலறுகிறது. (அப்போது சேரன் அந்த நண்பரை அறைவது கூட சரியான இயக்கம் இல்லை என்றுதான் சொல்வேன். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பின்பு அந்த கமெண்ட்டை யார் கேட்டாலும் சிரிக்கத்தான் செய்வார்கள். சேரன் செந்திலின் கதாபாத்திரத்தை மிகுந்த உணர்ச்சிபூர்வமாகக் காட்ட அப்படி கையாண்டார் போல!) அதைத் தொடர்ந்த காட்சிகள் எல்லாமே வெகு இயல்பாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

தமிழில் நல்ல படங்கள் வருகின்ற சீசன். அதில் ஆட்டோகிரா·ப்-ம் ஒன்று.

Share