Archive for திரை

கிருஷ்ண சந்திரன் பேட்டி

கிருஷ்ண சந்திரனின் (மலையாளப்) பேட்டியைப் பார்த்தேன். மனதை மயக்கும் பல தமிழ்ப் பாடல்களை (அள்ளி வெச்ச மல்லிகையே, ஏதோ மோகம்) 80களில் ராஜாவின் இசையில் பாடியவர். பேட்டியில் அருவி போலக் கொட்டுகிறார். மனதில் எவ்விதக் களங்கமும் இல்லாதவர்கள் மட்டுமே இப்படிக் கடகடவெனக் கொட்ட முடியும் என்று தோன்றியது.

யேசுதாஸ் உங்களது வளர்ச்சியைத் தடுத்தாராமே என்று கேட்கப்பட்ட கேள்விக்குச் சொல்கிறார், “இதைக் கேட்கும்போது ஒரு பக்கம் சிரிப்பும் இன்னொரு பக்கம் கோபமும் வருகிறது. காலையில் 7 மணிக்கு யேசுதாஸ் படி இறங்கினால், இரவாகி வீட்டுக்கு வரும் முன்பு ஒரு நாளில் 14 பாடல்கள் வரை பாடுவார். நான் பிஸியாக இருந்தபோது 4 பாடல்கள் வரை ஒரு நாளில் பாடி இருக்கிறேன். அதுவே எத்தனை அழுத்தமான வேலை என்று எனக்குத் தெரியும். அப்படி இருக்க இன்னொருவருக்கு எதிராக சதி செய்ய யேசுதாஸுக்கு எங்கே நேரம்? யேசுதாஸை நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும் அவர் எத்தனை நல்ல நேர்மையான மனிதர் என்று” என அடுக்கிக்கொண்டே போகிறார். கிருஷ்ண சந்திரன் பாட வரும் முன்பே யேசுதாஸ் மலையாளிகளின் கான கந்தர்வனாகிவிட்டார். கிருஷ்ண சந்திரன் சினிமாவில் பாடுவதற்கு முன்பே யேசுதாஸுக்கு நேரடிப் பழக்கம். யேசுதாஸின் கச்சேரிகளில் தம்புரா கூட ஒரு முறை வாசித்திருக்கிறாராம்.

திரையுலகம் எப்படி காஸிப்புகளில் மூழ்கித் திளைக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். என்ன பிரச்சினை என்றால், அத்தனையுமே காஸிப் என்று ஒதுக்கிவிடவும் முடியாது என்பதுதான்.

80களின் பிற்பகுதியில் மனோ பிரபலமாகப் பாடத் தொடங்கிய பின்பு, குமுதம் இதழில் காஸிப்பாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அத்தனை வாய்ப்பும் மனோவுக்குப் போவதால் எஸ்பிபி மனோ மேல் கடுப்பில் இருக்கிறார் என்று. எஸ்பிபி மறைந்தபோது மோட்ச தீபம் ஏற்றினார் மனோ.

Share

Shakhahaari – Kannada Movie

Shakhahaari (K) – சைவம் என்று பொருள். நல்ல பெயர். ஆஹா ஓஹோ‌ படமல்ல. ஆனால் பார்க்கலாம். கன்னடத்தில் மேக்கிங் நன்றாக இருக்கும் படங்கள் குறைவு. இப்படம் நல்ல மேக்கிங். கதை சுமார்தான். ஆனால் ரங்காயன ரகுவுக்காகவும் கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டேவுக்காகவும் நிச்சயம் பார்க்கவேண்டும். இருவருமே தேர்ந்த நடிகர்கள். அதிலும் ரங்காயன ரகு அருமை. கடைசி 15 நிமிடங்கள் இருவர் நடிப்பும் சூப்பர். இயக்குநருக்கு முதல்‌படம். நம்பிக்கை தருகிறார்.

Share

பஸ்தர் – ஹிந்தித் திரைப்படம்

பஸ்தர் – தி நக்ஸல் ஸ்டோரி (H) – மாவோயிஸ்ட்டுகளுக்கான எதிர்பிரசாரத் திரைப்படம். கேரளா ஸ்டோரி எடுத்த குழுவிடமிருந்து வந்திருக்கும் படம். ஒரு திரைப்படமாக கேரளா ஸ்டோரியில் இருந்த போதாமைகளும் பின்னடைவுகளும் இந்தப் படத்தில் துருத்திக் கொண்டு வெளிப்படையாக வெளியே தெரிகின்றன.

என்னதான் பிரசாரப் படம் என்றாலும் அடிப்படையில் இது ஒரு சினிமா. அந்த சினிமாவின் மொழியைத் தீவிரமாகவும் லாகமாகவும் கை கொள்ளாத எந்த ஒரு திரைப்படமும் எரிச்சலையே ஏற்படுத்தும். இந்தப் படம் முழுமையாக எரிச்சலை மட்டுமே தருகிறது. நாடகத்தனமான கதை. செயற்கையான நடிப்பு. அதீதத் திணிப்பு.

மிகப் பெரிய நாட்டின் முக்கியமான பிரச்சினையைக் கிறுக்குத்தனமாக கையாண்டிருக்கிறார்கள். பஸ்தர் என்ற ஊரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் மாவோயிஸ்டுகள் என்ற வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்காது.

பஸ்தரையும் சரி, பஸ்தரில் இருக்கும் பிரச்சினைகளையும் சரி, மாவோயிஸ்ட்டுகளையும் சரி, மிக மேம்போக்காகப் பேசுகிறது இத்திரைப்படம்.

Share

Laapataa Ladies – Hindi Movie

Laapataa ladies {H} – நம்ப முடியாத கதை. ஆனால் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் சந்தேகமே இல்லாமல் நல்ல ஃபீல் குட் மூவி.

குடும்ப பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுத் தன் கனவை நோக்கிச் செல்ல நினைக்கும் ஒரு பெண். தன் கணவனே தனக்கு எல்லாம், குடும்பமே எல்லாம் என்ற கனவுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இன்னொரு பெண். இதற்கிடையில், கணவனை வெறுத்து ஒதுக்கி, தன் காலில் தனியாக நின்று கடை நடத்தும் ஒரு பெண். எந்த உறுத்தலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே அந்தப் பெண் படிக்க நினைக்கும் கனவையும் வலியுறுத்தி, அனைவருக்கும் நல்லபடியாக முடித்து விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் இன்னும் பல காட்சிகளும் செயற்கைத்தனமாக இருந்தன. ஆனாலும் படம் எடுத்த விதத்திலும் நடித்த விதத்திலும் அதை ஈடு செய்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் கடை நடத்தும் அந்த பெண்ணின் நடிப்பு மிக மிக அருமை

படத்தின் பிரச்சினையாக நான் பார்த்தது, படம் முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. நாம் அதனுடன் பயணிக்கிறோம். திடீரென்று படம் இன்னொரு பெண்ணின் பார்வைக்குத் தடம் மாறுகிறது. இந்தத் தடுமாற்றத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

Share

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக.

பொதுவாக அராத்து சென்ஸிபிளாக எழுதக் கூடியவர். ஆனால் இந்த முறை சறுக்கி இருக்கிறார். சில பூமர் அங்கிள்கள் பொழுதுபோகாமல் அவ்வப்போது ராஜாவைத் திட்டி லைக் வாங்குவது கண்கூடு. அராத்து அப்படிச் செய்பவரும் அல்ல.

* இசை தெரியாது என்று சொன்னால் இசை குறித்த கருத்தில் இருந்து விலகி இருந்திருக்கவேண்டும்.

* தபேலாவில் டொண்டனக்க என்று இசையமைப்பவர் என்று செவிடர்கள் கூட சொல்ல மாட்டார்கள்.

* கணவன் மனைவிக்கு, காதலர்களுக்கு ராஜாவின் பாட்டே கிடையாது என்பது அபத்தம். ஒருமுறை சுரேஷ்குமார் இந்திரஜித், ‘ராஜாவின் பாடல்களில் அதிகபட்சம் 15 தேறும்’ என்றார். அதற்கு இணையான அபத்தம். மூன்று தலைமுறைகள், ராஜாவின் பாடலால்தான் காதலித்தது, காமம் கொண்டது, சோகத்தில் அழுதது, வெற்றியில் நிமிர்ந்தது, சந்தோஷத்தில் தளுதளுத்தது. இது எம்.எஸ்.விக்கும் கே.வி.எம்முக்கும் பின்னர் ரஹ்மானுக்கும் நடந்தது.

* ‘என் இசை’ என்ற கர்வமே ஒரு கலைஞனைச் செலுத்தக் கூடியது. அராத்து அடிப்படையில் ஓர் எழுத்தாளர். அவர் எப்படி இதைத் தவறவிட்டார் என்பது ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ‘என் எழுத்து’ என்னும் திமிருக்காகவே அவரது வாசகர்கள் அவரை வாசிப்பது அராத்துவுக்குத் தெரிந்திருக்கும். அந்த உரிமை ராஜாவுக்கு உண்டு. அதுவும் சாரு நிவேதிதாவைவிட பல மடங்கு உண்டு.

* இன்னொருவரை வளரவிடவில்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இளையராஜாவை மீறி வளர, அவரளவு திறமை உள்ள ஒருவர் வரவேண்டும். இல்லையென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்கள் வருவார்கள். வந்தார்கள். ரஹ்மான் புதிய இசையோடு வந்தபோது இளையராஜா அவர் வளர்ச்சியை ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே வரலாறு.

* இளையராஜா போன்ற, கற்பனைக்கெட்டாத சாதனையாளர்கள் இப்படித் தூற்றப்படுவது நாம் யார் என்பதைத்தான் சொல்கிறதே ஒழிய, ராஜாவின் திறமையை இம்மியளவும் மதிப்பிட்டுவிடவில்லை.

Share

Avesham Malayalam Movie

ஆவேஷம் (M) – ஃபகத்தின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். நம்ப முடியாத கதை. நம்பினால் சில அருமையான காட்சிகளும் அனுபவமும் இருக்கின்றன. அது முழுமையானதாக இருக்கிறதா என்றால் இல்லை. மலையாளப் படங்களின் பிரத்யேகத் தன்மையில் இருந்து முற்றிலும் விலகி, ஒரு தமிழ்ப் படம் போல நகர்கிறது இப்படம். தனுஷின் பல படங்கள் இப்படிப்பட்ட வகையறாக்கள்தான். எனவே நமக்கு எதுவும் புதிதாகத் தோன்றுவதில்லை.

மலையாளிகள் நல்ல வசூல் தரும் படங்களை எடுப்பதிலும் மெல்ல மெல்ல மேலேறி வருகிறார்கள். குருப் படத்தில் ஆரம்பித்து இப்போது வரை பல படங்களில் நல்ல வசூல். இத்தனைக்கும் குருப் சுமாரான திரைப்படமே.

இந்தப் படமும் அப்படியே. ஆனால் இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் அதாவது ஃபகத் ஃபாசில் வரும் வரையிலான திரைப்படம் அசல் மலையாளத் திரைப்படம். அந்த மூன்று இளைஞர்களின் நடிப்பும் முகமும் மறக்க முடியாதவை. கிளைமாக்ஸ் யூகிக்கக் கூடியதாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது மிகப்பெரிய பலவீனம். ஃபகத் பல இடங்களில் ஓவராக நடித்தாலும் அது இந்த கேரக்டருக்குப் பொருந்தித்தான் போகிறது.

இத் திரைப்படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை குடி குடி குடிதான். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒரே ஒரு காட்சியில் அந்த மூன்று இளைஞர்களும் குடியை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இத்தனை குடி அவசியமா என்று எரிச்சல் வரும்போது தமிழ்ப் படங்களின் லட்சணம் முகத்திலறைகிறது.

விடுவித்துக் கொள்ளவே முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொள்ளும் திரைக்கதைகளின் முடிவு எப்போதுமே மிக எரிச்சல் தருவதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கேங்ஸ்டர் படங்கள் பிடிக்கும் என்றால், கேங்ஸ்டர் படத்தை இன்னொரு கோணத்தில் காண்பித்ததற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Share

Premalu Malayalam Movie

ப்ரேமலு (ம) – இளமைக் கொண்டாட்டம். நான்-ஸ்டாப் புன்னகை. மலையாள இளைஞர்களின் வாழ்நாள் படமாக இது இருக்கும். ஹீரோயின்‌ அழகு என்றால் ஹீரோ அதற்கும் மேல். இருவரின் வெள்ளந்தித்தனமே நம்மை ஒன்ற வைக்கிறது. காட்சிக்குக் காட்சி புன்னகை. கடைசி பத்து நிமிடம் ஒரு பக்கம் மனம் உருக, இன்னொரு பக்கம் சிரிப்பு என கலக்கிவிட்டார் கள். தொடக்கம் முதல் இறுதி வரை கதையே இல்லாமல் காட்சிகளிலும் காதலிலும் நட்பிலும் படத்தை எங்கோ கொண்டு போய்விட்டார்கள். தமிழ் டப்பிங்கில் பார்த்தால் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். ஏனென்றால் இது பிரேமம் போல மலையாள இளைஞர்களின் அசல் கொண்டாட்டம். பிரேமத்தில் கேரள நிலம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. இதில் அதுவும் இல்லை. ஆனாலும் அக்மார்க் மலையாளத் திரைப்படமாக முகிழ்ந்திருக்கிறது. டோண்ட் மிஸ்.

ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

J Baby Tamil Movie

ஜெ பேபி – 1990களில் இருந்தே ஊர்வசியின் நடிப்பைப் பார்த்துப் பயந்து போய், அவரது படம் என்றாலே கையெடுத்துக் கும்பிட்டு ஒதுங்கி நின்றவன் நான். அதிலும் ஒருவித லூஸு கதாபத்திரமாகவே நடித்து நடித்து அவரது எந்த ஒரு கதாபாத்திரமும் லூஸுதானோ என்று நினைக்க வைத்துவிட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஊர்வசி இத்தனை தத்ரூபமாக நடிப்பார் என்று நினைக்கவே இல்லை.

படத்தைத் தனியாளாகத் தாங்கிப் பிடிக்கிறார் ஊர்வசி. இத்தனை வருடத் திரைப்படங்களில் காண்பிக்காத உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார். இப்படி குறைந்தது பத்துக் காட்சிளாவது சொல்ல முடியும். கண்கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தின் முதல்பாதியிலேயே பேபியின் கதாபாத்திரம் இத்தகையது என்று காட்டி இருந்தால் ஒரு தொடர்ச்சியும் பரிதாபமும் இருந்திருக்கும். ஏனோ அதை விட்டுவிட்டார்கள். மூத்த மகனாக வரும் நடிகரின் நடிப்பும், கல்கத்தாவில் உதவி செய்யும் நடிகரின் நடிப்பும் அபாரம். யதார்த்தம். அட்டகத்தி தினேஷும் நன்றாக நடித்திருக்கிறார். படத்துக்காகத் தொப்பை போட்டிருந்தால் கூடுதல் பாராட்டுகள்.

சில காட்சிகள் மிகப் பிரமாதமாக இருப்பதும் சில காட்சிகள் இழுவையாக இருப்பதும் பலவீனம். சென்னைத் தமிழ் பெரிய பலம். ஒரே ஒரு காட்சியில் தெரசா தன் கைகளை நீட்டி அபயம் காட்டிக்கொண்டிருக்க, அடுத்த சில காட்சிகளில் ‘கடவுளே இல்லை’ என்பது போல தன் கையில் இருக்கும் கயிறுகளை ஹீரோ கழற்றி எறிகிறார். ‘நீலம்’ திரைப்படமென்றால் இது போல ஏதாவது ஒன்று இருக்கவேண்டும் என்பதற்காகவே இதை வைத்திருக்கிறார்கள் போல.

குடும்பத் திரைப்படங்கள் வராத காலங்களில், நிஜமான நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்து, விசுத்தனமான கதையை இத்தனை தரமாக எடுத்து அசத்தி இருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் ‘பெண்மணி அவள் கண்மணி’யை நினைவுபடுத்தின. கட்டாயம் பார்க்கலாம்.

Share