சர்வம் மாயா (M) – இப்படி அழகான க்யூட்டான ஒரு பேய் கிடைக்குமானால் நான்கைந்து பேய்களுடன் வாழலாம் என்பதைத் தாண்டி இந்தப் படத்தில் ஒரு சுக்கும் இல்லை. ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமான கதைகளை மலையாளிகள் காதலிக்கிறார்கள் என்பது புரியவில்லை. கதை திரைக்கதை லாஜிக் என எதுவுமே இல்லாமல் மொக்கையாக ஒரு திரைப்படம். அங்கங்கே லேசாகப் புன்னகை வரப் பார்க்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தை முழுமையாக ஏன் பார்த்தோம் என்பதும் புரியவில்லை. கதாநாயகி அழகாக நடிக்கிறார். நிவின் பாலி தன் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக நகரும் திரைப்படம். போட்டுப் படுத்தி எடுத்து விட்டார்கள். மலையாள படங்களைத் தமிழ் டப்பிங்கில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள் எத்தனையோ அரத மொக்கையான மலையாளப் படங்களைப் பார்த்து வைரம் பாய்ந்த கட்டைகள் மட்டும் ஒரு முறை பார்க்கலாம்.
Archive for திரை
Haq – Hindi Movie
Haq (H) – ஜீவனாம்சம் கோரி தன் உரிமைக்காகப் போராடி (ஹக் என்றால் உரிமை) இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஷா பானு வழக்கை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

திரைப்படமாக அழகாக வந்திருக்கிறது. மிகப் பொறுமையாக ஆழமான வசனங்களுடன் நகரும் திரைப்படம். டோண்ட் மிஸ் வகையறா.
நம் இயக்குநர்கள் முஸ்லீம் தாஜா அரசியலுக்காக, நிஜத்தில் ஒரு பட்டியலினப் பையன் கதையை இஸ்லாமியப் பையனாக மாற்றி, நீதிமன்ற வாசலில் நமாஸ் செய்யும் அர்த்தமற்ற காட்சிகளை (சிறை) வைத்துக்கொண்டிருக்க, ஹிந்தியில் உண்மையான வரலாற்றைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
படத்துக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? நிஜத்தில் ஷா பானு தனது 62 வயதில் வழக்கைத் தொடுக்கிறார். இந்தப் படத்தில் இளம் வயதிலேயே கதாநாயகி வழக்கைத் தொடுக்கிறார். ஷா பானுவின் அப்பா ஒரு கான்ஸ்டபிள். ஆனால் கதாநாயகியின் அப்பா ஒரு மௌல்வி. இப்படிச் சில மாற்றங்கள். இவை எதுவுமே தேவையற்ற மாற்றங்களும் கூட. உண்மையில் 62 வயதுப் பெண் ஜீவனாம்சத்துக்காகப் போராடுவது இன்னும் வலுவாகவே இருந்திருக்கும்.
கதாநாயகியின் அப்பாவை மௌல்வி என்று வைத்ததன் மூலம், தேவையற்ற எதிர்ப்புக் குரல்களை இயக்குநர் சமாளித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். மௌல்வியின் மகள் என்பதால் தனக்கு குரான் மற்ற எவரையும் விட நன்றாகவே தெரியும் என்று அவர் பேசும் பல வசனங்கள் எதிர்ப்பாளர்களை வாயடைக்கும்ச் செய்துவிடும் வகையிலானவை. வசனங்கள் படு கூர்மை.
ஷா பானு தன் வீட்டிலிருந்து கணவனால் வெளியேற்றப்பட்ட பிறகு தனியாகவே வாழ்ந்தார். ஆனால் கதாநாயகி தன் கணவன் வீட்டில், அது தன் பெயரில் உள்ள வீடு என்பதால், வலுக்கட்டாயமாக அங்கே குடியேறி வாழ்கிறார். தேவையில்லாமல் கதையை வளைத்திருக்கிறார்கள் இங்கே.
கதாநாயகிக்காக வழக்காடும் வழக்கறிஞர் ஒருவரும் முஸ்லிம். படத்துக்காக வைத்திருப்பார்களோ என்று தேடிப் பார்த்தால், ஷா பானுவுக்காக வாதாடிய பல வக்கீல்கள் முஸ்லிம்களே.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பில் ஜீவனாம்சத் தொகையாக ரூ 22 / மாதம் என்று சொல்லப்படும்போது — நமக்கு அது முன்பே வரலாற்று ரீதியாகத் தெரிந்திருந்தும் கூட — அதிர்ச்சியாகவே இருக்கிறது. கடைசியில் தன் போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு படம் நிறைவடைகிறது. ஆனால் வரலாறு நிறைவடையவில்லை.
இஸ்லாமிய தாஜா அரசியலுக்காக இந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக ராஜிவ் அரசு, இந்தத் தொகையை இத்தா காலத்தில் அதாவது விவாகரத்து செய்யப்பட்ட பின்னான மூன்று மாதக் காத்திருப்புக் காலத்தில் மட்டும் கொடுத்தால் போதும் என்ற வகையில் சட்டம் இயற்றுகிறது. அதைச் சட்ட ரீதியாகச் சரியாக்க 2023 வரை (ஒரே சமயத்தில் தரப்படும் முத்தலாக் தொடர்பாக 2019 வரை) காத்திருக்க வேண்டியதாயிற்று. இவையெல்லாம் கடைசியில் திரையில் எழுத்துகளாகக் காட்டப்படுகின்றன.
செக்யூலர் முஸ்லிம்களும் முஸ்லிம் பெண்களும் இந்திய வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் தவறவிடக் கூடாத படம் — உண்மையிலிருந்து சில இடங்களில் படம் விலகிச் சென்றாலும் ஆதாரப் பிரச்சினையில் இருந்து துளி கூட விலகவில்லை என்பதற்காகவும், சென்சிடிவ் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் தேவையற்ற வகையில் யாரையும் சீண்டவில்லை என்பதற்காகவும்.
நவம்பர் 2025ல் வெளியான இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.
பின்குறிப்பு: வலதுசாரிகள் திரைப்படம் எடுக்க நினைப்பதில் தவறில்லை. நிச்சயம் அது தேவையான ஒன்று. ஆனால் தரம் இந்தப் படத்தைப் போல இருக்க வேண்டும். இந்தப் படத்துக்கான செலவு பெரிய அளவில் இருந்திருக்காது. ஆனால் தரம் அட்டகாசம். தரம் இல்லாமல் நாம் நம் கருத்துகளை எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.
Kalamkaval review
களம்காவல் (M) – பார்க்கும்போது போரடிக்காமல் செல்கிறது என்பது பிளஸ். மம்மூட்டியின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. ஆனாலும் என்னவோ முழுமையாக அதை உள்வாங்க முடியாத அளவுக்கு ஒரு இடறல் படம் முழுக்க இருக்கிறது. திரைக்கதையாகப் பார்த்தால் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மம்மூட்டியா இப்படி என்கிற பரபரப்பு, முதல் 10 நிமிடங்களில் குறையத் தொடங்கியதும் திரைக்கதை பக்கம் நம் கவனம் செல்லும் போது, என்னடா இது என்ற எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஒரு 50 வயது பெண்ணுக்கு 20 திருமணங்கள் நடந்த செய்தி நமக்குத் தெரியும். நம் ஊரில் ஆண்களுக்கான ‘இந்த’ poverty செய்தி நமக்குப் புதியதல்ல. ஆனால் ஒரு 50 வயது ஆணுக்கு இத்தனை பெண்கள் அதுவும் குழந்தை குட்டியுடன் உள்ள பெண்கள் ஏன் விழுந்தார்கள் என்பதற்கான காரணம் எதுவுமே வலுவாக இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆனாலும் முதல் 10 நிமிடமும் கடைசி அரை மணி நேரமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன. மிகப்பெரிய ஆறுதல் கொலைக்கு ஒரு மோட்டிவ் காண்பிக்கிறேன் என்று எதையாவது காண்பிக்காமல் இது இப்படித்தான் என்று முதலிலேயே நமக்குச் சொல்லி விடுவது. நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நடக்கும் திரைப்படம் என்பதால் பின்னணியில் தமிழ்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் வந்த நேரடித் தமிழ் பாடல்களைப் பயன்படுத்தாமல் இவர்களே தமிழ்ப்பாடல் போன்ற சிலவற்றை உருவாக்கிப் படம் முழுக்கப் பல இடங்களில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். மலையாளிகளே எழுதும் தமிழ்ப் பாடல் எப்படி இருக்கும்? ஆம், இதிலும் நாராசமாகத்தான் இருக்கிறது.
Sirai – Islamic appeasement movie
சிறை என்ற கொடுமையைப் பார்த்தேன். என்னடா அனைத்து ‘முற்போக்கு’களும் இப்படி டான்ஸ் ஆடுகிறார்களே என்று பார்த்தால், அது ஏன் என்பதற்கு இன்றுதான் பதில் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் ஒரு தமிழ்ப்படம், வாரே வாஹ், என்னை தமிழ் இயக்குநர்கள் ஏமாற்றுவதே இல்லை.
அதே இஸ்லாமிய தாஜா ஜல்லி. உண்மையில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் எந்த அச்சத்திலும் இல்லை. இருக்கவேண்டிய தேவையும் இல்லை. (பிராமணர்கள் பயந்து வாழ்கிறார்கள் என்பதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு மதமாகவோ இனமாகவோ சாதியாகவோ அஞ்சி வாழவேண்டிய நிலையில் யாரும் எப்போதும் இருந்ததில்லை என்பதைச் சொல்வதற்காகத்தான். அவ்வப்போது எழும் பிரச்சினைகள் எல்லாம் எல்லாருக்குமே பொதுவானவை. ஒரு சாதி அல்லது மதம் மேல் இருக்கும் வெறுப்பு என்பது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்கள் அஞ்சி வாழ வேண்டிய அளவுக்கு இன்னும் போகவில்லை.) ஆனால் இந்தப் படம் இல்லாத ஒன்றை இருப்பது போல இட்டுக்கட்டிச் சொல்கிறது.
படம் முழுக்க புல்லரிப்புதான். ஒரே ஒரு இஸ்லாமியப் பையன், அன்பே உருவான பையன், அவன் விலகிப் போனாலும் காதலிக்கும் இந்துப் பெண். என்ன ஒரு டெம்ப்ளேட்! தெரியாமல் அவன் அந்தப் பெண்ணின் அப்பனைக் கொன்றுவிட, உண்மை தெரிந்து அவனையே உருகி உருகிக் காதலிக்கும் பெண்… இன்னொரு காட்சியை மறந்துவிட்டேனே… அந்த நீதிபதி மன்னிப்புக் கேட்கும் காட்சி… இதைச் சொல்வதா அல்லது நானும் முஸ்லிம்தான் என்று போலிஸ் சொல்வதைச் சொல்வதா… எத்தனை எத்தனை காட்சிகள். அதிலும் கோர்ட்டுக்கு முன்னால் அவன் நமாஸ் செய்யும் காட்சியில் நானே வாயடைத்துப் போய்விட்டேன். இயக்குநர் எங்கோ சென்றுவிடுவார் என்பது உறுதி.
ஈழத் தமிழர்களுக்காக முதலில் உயிர் இழந்தவர் என்று ஒரு இஸ்லாமியப் பெயரைச் சொல்லும் காட்சி உண்டு. அதற்குப் பிறகு அதே ஈழத்தில் அந்த இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து இந்தத் திரைப்படம் மூச்சே விடவில்லை.
இந்தப் படத்தின் ஹீரோவாக வரும் விக்ரம் பிரபுவின் கதாபத்திரம் அற்புதம். இத்தனை கிறுக்கான போலிஸை தமிழில் இதுவரை எந்தப் படமும் இத்தனை மெச்சூர்டாகக் காட்டியதில்லை. பைத்தியக்காரத்தனமான மெச்சூரிட்டியின் உச்சம் இந்தக் கதாபத்திரம்தான்.
தவறவே விடக் கூடாத படம். பார்த்துக் கண்ணீர்விட்டுத் தொலையுங்கள்.
Director has said this – https://www.facebook.com/share/p/1CBpXTPy7M

Devaaaa
தேவாஆஆஆ
நேற்று ஒரு வேலையாக கேப் ஏறி அமர்ந்ததுமே என்னவோ கலவரமாக இருந்தது. காரணம் உள்ளே ஒலித்தது தேவாவின் ஒரு பாடல். தேவா எனக்கு அத்தனை பிடித்தமான இசையமைப்பாளர் அல்ல. அவரது 20 – 30 பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் பல பாடல்கள் ஏனோ எரிச்சலைத்தான் வரவழைத்திருக்கின்றன. நேற்று கேப்-இல் ஒலிபரப்பானது தேவாவின் ஹிட் பாடல்கள் அல்ல. படம் வந்தபோது அவ்வப்போது அங்கங்கே கேட்டு தேவாவே மறந்து விட்ட பாடல்கள். தொடர்ந்து அதே போன்ற பாடல்கள் வரிசையாக வந்தன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் தவிர யார் இசை அமைத்த பாடல்களாக இருந்தாலும் தொடர்ந்து ஐந்தாறு பாடல்கள் கேட்டாலே எனக்கு பிபி ஏறத் தொடங்கும். நேற்று நடந்தது வன்கொடுமை. என்னென்ன பாடல்கள் என்று கூட எனக்கு இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் நான் கல்லூரிக்கு சைக்கிளில் போகும் போதோ அல்லது ஏதோ ஒரு டீக்கடையிலோ நிச்சயம் கட்டியிருக்கிறேன். டிரைவரிடம் பாடலை மாற்றச் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சரி போய்த் தொலையட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50 நிமிடப் பயணம். 11 பாடல்கள். காது புண்ணாகிப் போனது.

அவர் என்னை இறக்கி விடவும் அங்கே இருந்த ஒரு டீக்கடையின் முன்பாக இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து, அந்த மிதமான மழைச்சாரலின் நடுவே, எனது மொபைலில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் ராம நாமம் ஒரு வேதமே பாடலைக் கேட்டேன். கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது. அதிலும் அந்த யேசுதாஸின் குரலும் இளையராஜாவின் இசையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒர் அனுபவம். அடுத்ததாக அழைக்கிறான் மாதவன் கேட்டேன். டீக்கடை மறந்து, டீக்கடையின் முன்னால் நின்று 5 இளைஞர்களும் 5 யுவதிகளும் சிறிய கேக்கை வாங்கி என்னவோ பேசி அர்த்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறைந்து, எனக்குள்ளே ஒரு பிருந்தாவனம் தோன்றி மறைந்தது. மனம் கொஞ்சம் இலகுவானது.
ஒரு வேலையை முடித்துவிட்டு மீண்டும் கேப் பிடித்தேன் மீண்டும் தேவா. இப்படி ஒரு நிலைமை எனக்கு இதுவரை
வந்ததில்லை இந்த முறை தேவாவின் ஹிட் பாடல்கள். அதனால் கொஞ்சம் தாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் 50 நிமிடம். மீண்டும் பதினொரு பாடல்கள்.
நேற்று எனக்கும் தேவாவுக்கும் இப்படி ஒரு ஏழாம் பொருத்தம் அமைந்திருக்க வேண்டாம்.
Idli Kadai
இட்லிக்கடை – படமாய்யா எடுத்து வெச்சிருக்கீங்க. அடப் பக்கிகளா. முதல் 10 நிமிஷம் நல்லா இருக்கேன்னு நெனச்சேன், அது ஒரு குத்தமாய்யா. வெச்சு செஞ்சிட்டீங்களே.
1960ல இந்தப் படத்தை எடுத்திருந்தா கூட பழைய படமாத்தான் இருந்திருக்கும். ராயன் எடுத்த தனுசுக்கு ஏன் இப்படிப் புத்தி போனது என்று தெரியவில்லை. கதை திரைக்கதை என ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இரண்டே நிமிடத்தில் ஒரு பாடலில் முடிக்க வேண்டிய கதையை 3 மணி நேரம் கண்றாவியாக இழுத்து இழுத்துச் சாவடித்து விட்டார்.
ஃபீல் குட் மூவி என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் பேய்ப் படம் போல இருக்கிறது. ராஜ்கிரனும் அவர் மனைவியும் செத்தும் கடைசிக் காட்சி வரை பேயாக வந்து பாடாய்ப்படுத்துகிறார்கள்.
கொடுமை ஒன்றாய் இரண்டா. சமுத்திரகனி வடிவில் இன்னொரு கொடுமை. தாங்கிக்கொள்ள முடியாத நித்யா மேனன் வேறு.
நமத்துப் போன நாலு இட்லியும் அவிஞ்சி போன அந்த ரெண்டு கரண்டி சாம்பாரையும் தின்றதற்காக ஊரே உயிரைக் கொடுத்து இவன் பின்னால் நிற்குமாம். கேட்பவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுமாம்.
இது எல்லாமே கூட மன்னித்து விடலாம். ஆனால் கருப்பசாமி காலில் சலங்கை கட்டி பவ்யமாகப் போவது இட்லி சுடுவதற்காகத்தான்னு காமிச்சீங்களே, அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.
படம் முழுக்க ஹிந்துக் குறியீடுகள் வருவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா, இல்லை இந்தக் கொடுமையைப் பார்த்தால் பாதி பேர் இன்னும் மதம் மாறி போய் விடுவானே என்று வருத்தப்படுவதா… டெலிகேட் பொசிஷன்.
ஆனாலும் ஒரு சந்தோஷம். இன்பக்குட்டியண்ணாஜியையே தனுஷ் காண்டாக்கிப் பார்த்ததுதான்.
பிகு: இடது கையால் மாவை தள்ளும் இட்லிக்கா இவ்ளோ மவுசு? உவ்வேக்.
Dies Irea
Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது.
பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.
பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு.
இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.
பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம்.
இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.
Spoiler alert.
படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச் சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.
தமிழில், கன்னடத்தில், ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.
அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.
மேலதிக எண்ணங்கள்
Full of spoilers
திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.
எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?
திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.
நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.
படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.
நானே சிந்தித்தேன். : )
Mirage
Mirage (M) – சின்ன வயதில் அதிர்ஷ்டப் பரிசுச்சீட்டு கிழிக்கும் வழக்கம் உண்டு. 25 பைசா கொடுத்து சீட்டுக்கிழித்தால் அதில் 50 பைசா அல்லது ஒரு ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் பத்து ரூபாய். பல சமயம் பரிசு விழாது அப்போது புதிதாக ஒரு பரிசுச்சீட்டு வந்தது. அதாவது 25 பைசாவுக்குக் கிழித்தால் ஏதேனும் ஒரு பரிசு நிச்சயம். அது ஐந்து பைசாவும் இருக்கலாம், பத்து பைசாவாகவும் இருக்கலாம்.
இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சில திரைப்படங்கள் பார்க்கும்போது நாம் சிலவற்றை யூகித்துக் கொண்டே இருப்போம். ஒரு துப்பறியும் படம் என்றால், இவன் கொலைகாரனா அவன் கொலைகாரனா என்று யோசிப்போம். படத்தில் வரும் அத்தனை பேரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் யாரோ ஒருவன் கொலைகாரன் ஆவான். நான் சொன்னேன் பார்த்தியா என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இந்தப் படம் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல. நீங்கள் என்ன யூகித்தாலும் அது அத்தனையும் இந்தப் படத்தில் நடக்கும். இப்படி ஒரு திரைக்கதையை யோசித்ததற்காகவே ஜீது ஜோசப்பைப் பாராட்ட வேண்டும்.
முதல் காட்சியில் இருந்து பலவற்றை நான் யூகித்தேன்.வ்அத்தனையும் நடந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸை முதல் காட்சியிலேயே யூகித்தேன் என்பது முக்கியமான விஷயம்.
படம் கொஞ்சம் இழுவை என்றாலும் எனக்குப் பிடித்திருந்தது. முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை போரடிக்காமல் போகிறது என்பது பெரிய ப்ளஸ்பாய்ண்ட். பின்னணி இசை அபாரம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.
ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் ஜீதுதான் இப்படம்.


