Archive for திரை

மேப்படியான் – நில அரசியல்

தமிழ் சமூக ஊடகங்களில் இந்த மலையாளப் படம் ஹிந்துக்களுக்கு ஆதரவான ஒரு மனநிலையில் கொண்டாடப்பட, இது ஒரு அரசியல் திரைப்படம் என்று நினைத்துக் கொஞ்சம் கவனமின்றி இருந்துவிட்டேன். இன்றுதான் பார்த்தேன்.

ஒரு படமாக இப்படம் எந்த வகையிலும் எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லவில்லை. எல்லாருமே தங்கள் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகளாகக் காட்டப்படுகிறார்களே ஒழிய, வேண்டுமென்றே கெட்டவர்களாகச் சித்திரிக்கப்படவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்தக் கதாபாத்திரம் ஒரு அரசியல்வாதி. அந்த அரசியல்வாதி ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கரும் கூட. அவர் கிறித்துவர். படத்தில் ஏகப்பட்ட கிறித்துவக் கதாபாத்திரங்கள். மிக நல்லவர்களாகப் பலர் காட்டப்படுகிறார்கள். ஹாஜியார் கதாபாத்திரமும் கூட அதனளவில் வியாபாரத்துக்காக, தன் லாபத்துக்காக எதிராளிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமே.

இரண்டு குடும்பங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் வாக்கை கைவிடாத குடும்பங்களாகக் காட்டப்படுகின்றன. ஒன்று, கதாநாயகன் முகுந்தன் உன்னியின் குடும்பம். இன்னொன்று, வீட்டை விற்கும் கிறித்துவக் குடும்பம். தான் கொடுத்த வாக்குக்காக, ஒரு கிறித்துவப் பெண்ணின் வாழ்க்கைக்காகத் தன் எல்லா உடைமைகளையும் இழந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ஹிந்துக் குடும்பத்துக்கு இணையாக, சாகும் தறுவாயிலும் தான் கொடுத்த வாக்குக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து வீட்டை கிரையம் செய்து கொடுக்கும் கிறித்துவக் குடும்பம் என்று எல்லாமே சமநிலையில்தான் உள்ளது.

முகுந்தன் மிக அழகாக இருக்கிறார். எல்லை தாண்டாமல் நடிக்கிறார். மிக மெல்ல நகரும் படத்தில் மெல்ல மெல்ல ஒரு படபடப்பைக் கூட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் சார்பதிவாளர் அலுவலகக் காட்சி உச்சம். ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுழலும் கதை தரும் அலுப்பைத் தாண்டிவிட்டால் ஓரளவுக்கு சுவாரஸ்யமான திரைப்படமே. நில அரசியலின் அத்தனை சாத்தியங்களும் காட்டப்படுகின்றன.

பின்னெப்படி இத்திரைப்படம் ஹிந்து ஆதரவுப் படமாகியது? படத்தில் வரும் சேவா பாரதி ஆம்புலன்ஸ் ஒரு சின்ன குறியீடே ஒழிய, அது பெரிய காரணமல்ல.

நிஜ உலகில் நடிகர் முகுந்தன் உன்னி உடல் எடை குறைப்பை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 95 கிலோவில் இருந்து 75 கிலோவாக உடலைக் குறைக்கிறார். (அந்தப் புகைப்படத்தைத் தேடிப் பாருங்கள். பெரிய சாதனைதான்!) அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்கிறார். அதில் தன்னுடன் ஒரு ஹனுமானின் படத்தையும் சேர்த்துப் பகிர்கிறார். அங்கே சந்தோஷ் கீழாற்றூர் என்றொரு நடிகர் கமெண்ட் போடுகிறார். “இந்த ஹனுமான் நாட்டை கொரானாவில் இருந்து காப்பாற்றுவாரா” என்று கேட்கிறார். இதற்கு முகுந்தன் உன்னி பதில் சொல்கிறார், “நாம் ஒன்றாக நடித்திருக்கிறோம், எனவே பணிவுடன் சொல்கிறேன், நான் நம்பும் கடவுளை வேண்டிக்கொண்டு இங்கே ஒரு பதிவு போடுகிறேன். இப்படியெல்லாம் பதில் சொல்லி உங்கள் மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று.

முகுந்தன் உன்னி குஜராத்தில் சின்ன வயதில் இருக்கும்போது பட்டம் பறக்கவிடும் விழாவில் மோடியுடன் பட்டம் விட்டதாகச் சொன்ன செய்தியையும் மேலே நடந்த டிவிட்டர் விஷயத்தையும் முகுந்தன் உன்னி பிரதரமரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பின்னர் மாத்ருபூமி செய்திகள் பேட்டியில் நெறியாளர் கேட்கிறார், “நீங்கள் வலதுசாரி என்று தெரிகிறது.” உடனே மறிக்கிறார் முகுந்தன் உன்னி.

முகு: எப்படித் தெரியும்? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

நெறி: உங்கள் சமூக ஊடகங்கள் இடுகைகளில் இருந்து.

முகு: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு என்றா?

நெறி: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு மட்டுமே என்று சொல்லவேண்டியதில்லை.

முகு: அப்படியானால் அது என்ன? நீங்கள் சொல்வதை வைத்து நான் பிஜேபி என்றுதான் புரிந்துகொண்டேன். தெளிவாகச் சொல்லுங்கள். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதாலா என்னை வலதுசாரி என்கிறீர்கள்? எனக்கு இப்போதைக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இல்லை. நான் வளர்ந்த சூழலில் ஐயப்பன், கிருஷ்ணன், ஹனுமான் என்றுதான் வளர்ந்தேன். ஜிம்மில் கூட எதிரே ஹனுமான் படமே இருந்தது. ஏன் அந்த நடிகர் ஹனுமானால் கொரோனா போகும் என்று கேட்டார் எனத் தெரியவில்லை.

என்றெல்லாம் விளக்குகிறார்.

இது போதாதா? அவர் சங்கியாக்கப்படுகிறார். அதனால் அவர் நடிக்கும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் பார்க்கப்படுகிறது போல!

நம் தமிழ்த் திரையுலகில் ஹிந்துக்களுக்கும் பாஜக அரசுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரசாரத்தில் நூறில் ஒரு பங்கு கூட, மேப்படியான் படத்தில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எதிராக இல்லை. ஆனாலும் கொண்டாடுகிறார்கள். அத்தனை காய்ந்து போய் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

முகுந்தன் உன்னி இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் இயக்குநர் மோகன் ஜி இப்படத்தைப் பார்க்கவேண்டும். மேப்படியான் ஒரு பிராசரப் படம்தான் என்று வைத்துக்கொண்டாலும் அதன் நேர்த்தி எந்த அளவுக்கு யாராலும் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது என்று நாம் எல்லாரும் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்பாக இருக்கும். படத்தின் செலவு வெறும் 3 கோடி மட்டுமே என்று விக்கி சொல்கிறது. மேப்படியான் இயக்குநர் விஷ்ணு மோகனின் அடுத்த திரைப்படம் ‘பப்பா’ என்று தெரிகிறது. அதன் மோஷன் பிக்சர் டிரைலரில் முகுந்தன் உன்னி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். இப்படம் முகுந்தன் உன்னியின் இதே திசையில் இருக்குமா அல்லது இதை சமன் செய்யும் எதிர்த்திசையில் இருக்குமா என்று அறிந்துகொள்ள இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Share

KPAC Lalitha

கே பி ஏ சி லலிதா நேற்று உடல்நலமில்லாமல் மரணமடைந்திருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் களேபரத்தில் இந்தச் செய்தி கண்ணில் படவே இல்லை. எப்பேற்பட்ட நடிகை. எத்தனை பெரிய இழப்பு!

சென்ற வாரம் பொழுது போகாத ஒரு நேரத்தில் ‘பவித்ரம்’ என்றொரு மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். மோகன்லால் நடித்து 1994ல் வெளியான திரைப்படம். மோகன்லால், திலகன் என்று இருவரும் கலக்கியெடுக்க, கே ஏ பி சி லலிதா நிழல் போலப் படம் முழுக்க கலகலப்பாக வந்து மனதை கனக்கச் செய்தார். அதிலும் மோகன்லால் தன் மகளை (தங்கையை!) அடிக்கப் பாயும் கணத்தில் கே ஏ பி சி லலிதா தடுக்கும் காட்சி உணர்ச்சிகரமானது. மோகன்லால் கதாபாத்திரத்தின் அம்மா கர்ப்பமாகி இருப்பதை கே ஏ பி சி லலிதா நாணத்துடன் மோகன்லாலுக்கு சொல்லும் காட்சி மறக்க முடியாதது. (அந்த ஸ்ரீவித்யாவின் முகம்தான் எத்தனை பாந்தம்!)

தமிழில் 70களின் குழந்தைகளுக்கு இவர் ராஜபார்வையில் நடித்தவர் என்று சொன்னால் தெரியலாம். அதைவிட, காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வரலாம்.

ஓம் ஷாந்தி.

Share

மகான் – முரண்களின் சுவாரஸ்யமான ஊர்வலம்

மகான் திரைப்படம் பற்றி எழுதவேண்டுமா என்று யோசித்தேன். ஆனால் ஒரு சிறு குறிப்பையாவது எழுதி வைப்பதுதான் நியாயம் என்று தோன்றியது.

மகான் திரைப்படத்தில் சாராயம் காய்ச்சும் ஒருவனின் பெயர் காந்தி மகான். அவனே ஹீரோ. இது காந்தி ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய எரிச்சலை உருவாக்கி இருக்கிறது. நியாயமான எரிச்சலே. ஆனால் படம் பார்த்த பின்பு எனக்கு இது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. காரணம் என்ன? முதலில் இந்தப் படம் பரம்பரை பரம்பரையாக காந்திய வழியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. ஹீரோ அவ்வழியில் வந்தவன். கள்ளுக்கடை மறியலில் தன் உயிரைக் கொடுத்த ஒரு தாத்தாவின் பேரன் அவன். அவனது அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியின் நினைவாக தன் மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைக்கிறார். அவன் பின்னாளில் குடும்பத்தின் அஹிம்ஸையின் உச்சமான அடக்குமுறை பிடிக்காமல் காந்திய வழியில் இருந்து விலகி ஓடுகிறான். இப்படித்தான் அவனது பெயர் காந்தி மகான் என்று வைக்கப்படுகிறதே ஒழிய காந்தியை இழிவு படுத்தும் நோக்கில் அல்ல.

கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். ஒரு கதாபாத்திரத்துக்கு வேண்டுமென்றோ நரேந்திர மோடி என்றோ வேறு மதங்களின் இறைத்தூதர் பெயரையோ வைத்தால் சும்மா இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். ஆனால் காந்திக்கு இன்று அந்த அளவுக்குப் பிரச்சினைகள் இல்லை. இது காந்தி உருவாக்கித் தந்த ஒரு ஜனநாயக வெளி என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.

இதைவிட முக்கியம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த வாழ்க்கையில் அவர் காந்திய வெறுப்பாளராக இருந்திருக்கும் தடயங்கள் ஏதும் இல்லை. தீவிர அரசியல் நிலைப்பாட்டுடையவர் வேண்டுமென்றே தனக்குப் பிடிக்காத ஒரு அரசியல்வாதியின் பெயரை ஒரு கதாபாத்திரத்துக்கு வைப்பதற்கும் இப்படத்தில் காந்தி மகான் என்று பெயர் வைத்ததற்குமான முக்கியமான வேறுபாடாக இதைப் பார்க்கிறேன். இப்படம் பார்த்த பிறகு தோன்றியது, ராஜிவ்காந்தி என்று பெயரை வைத்துக்கொண்டு எல்டிடிஈ-யினரை ஆதரிப்பவர்கள், காந்தி என்று பெயர் வைத்துக்கொண்டு திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன மனநிலையில் இருப்பார்கள் என. உண்மையில் பெயர் நமக்கு வைக்கப்படுவது, நாம் தேர்வது அல்ல!

இத்திரைப்படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல லாஜிக் மீறல்களையும் எரிச்சலூட்டும் க்ளிஷே காட்சிகளையும் (எதிரிகள் இருவருமே நண்பர்களாக இருப்பது) தாண்டி இப்படம் பிடித்திருந்தது. காரணம் என்ன? வழக்கமான கேங்ஸ்டர் கதையில் வழக்கமான அப்பா மகன் மோதலை ஒரு தத்துவப் பின்னணியில் சுவாரஸ்யமாகக் கொண்டு போய்ச் சேர்த்ததுதான். தொடக்க 10 நிமிடங்கள் பெரிய எரிச்சலைத் தந்தாலும், பின்னர் படம் சூடுபிடிக்கிறது. ஒரு பக்கம் காந்தி சாராய வியாபாரியாக உயர்ந்துகொண்டே போக, தன் மகனை ரட்சிக்க வந்த தேவ தூதன் காந்தி என்று சத்தியன் மதமார்க்கத்தில் போக எத்தனிக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சாராய வழிக்கே கொண்டு வருகிறான் காந்தி. இக்காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, படத்தின் உச்ச காட்சிகளுக்கு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துத் தருகின்றன. பிரமாதமான திரைக்கதை இது.

இத்தொழிலே வேண்டாம் என்று விலகிப் போனவனைக் கூட்டி வந்து தன் கையாலேயே கொல்வது, தானே காப்பாற்றிய தன் மகன் போன்ற ஒருவனை தன் நிஜ மகனே கொல்வது, காந்தி மகான் என்று பெயர் வைக்கப்பட்டு மது விலக்குக்காகப் போராட வேண்டியவனே சாராய வியாபாரி ஆவது என்று படம் முழுக்க முரண்களின் ஊர்வலம். காந்திய வழி இல்லை என்றாலும், நான் கொன்றால் அது சட்டப்படி சரி என்று அத்தனை பேரையும் என்கவுண்ட்டரில் போடும் மகனே தன் கையால் சட்டத்துக்கு உட்படாத கொலைகளைச் செய்யவேண்டி வருவது இன்னொரு உச்சக்கட்ட முரண்.

உண்மையில் காந்தியின் அவனது மகனும் இறுதிக்காட்சிக்கு முன்பாக காரில் வரும்போதே இப்படம் முடிந்துவிடுகிறது. கடைசி பத்து நிமிடம் படம் தேவையற்று அலைபாய்ந்து விட்டது. காரணம், ஹீரோவே வெல்லவேண்டும் என்பது போன்ற ஒரு லாஜிக். கூடவே, இறுதிக்கணத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்தே ஆகவேண்டும் என்கிற கார்த்திக் சுப்புராஜின் வெறி. ஆனாலும் இக்காட்சிகளையும் ஓரளவுக்கு நியாயப்படுத்தி எடுக்க முயன்றிருக்கிறார்.

ஜகமே தந்திரம் போலவே அட்டகாசமான மேக்கிங்கில் இப்படம் உருவாகி இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு இலக்கின்றி அலைபாய்ந்த ஜகமே தந்திரம் படத்தின் பிரச்சினைகளும் இதில் இல்லை. பொறுமையாக மெல்ல நகரும் திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்காமல் ரசித்து ரசித்து திரைப்படம் எடுக்கும் இயக்குநரின் படைப்பைப் பார்ப்பவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது. பல குறைகள் இருந்தாலும், இப்படம் முக்கியமான படமே.

Thanks: https://oreindianews.com/?p=7556

Share

FIR – திசை தவறிய பறவை

Spoilers ahead.

FIR – மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கும் தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எப்படி வரையறுப்பது என்றே தெரியவில்லை. எல்லாவனுக்கும் நல்லவனாக இருக்கணும், அதே சமயம் முற்போக்குப் பட்டமும் வேணும் என்றால் எப்படி? ஒன்று, கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கவேண்டும், இல்லையென்றால் இந்தப் பக்கம் இருக்கவேண்டும், இரண்டும் இல்லாமல் அங்கேயும் இங்கேயும் தாண்டிக்கொண்டு, வணக்கம் போடும் வரை யோசிக்கவிட்டு மூளையைக் களைப்படையச் செய்துவிட்டார் இயக்குநர். இது இஸ்லாமியர்களுக்கான ஆதரவு என்ற போர்வையில் இந்திய அரசை எதிர்க்கும் படம் என்று பத்தாயிரம் வார்த்தைகளும், இது இந்திய ஆதரவுப் படம் என்று இன்னொரு சாரார் பத்தாயிரம் வார்த்தைகளும் எழுதலாம். நான் நினைப்பது, அப்பாவி இஸ்லாமியன் ஒருவன், தன் பெயர் இஸ்லாமியப் பெயர் என்னும் ஒரே காரணத்துக்காக அவன் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லி ஆனால் அந்த அப்பாவி இந்திய முஸ்லிம் எப்பேற்பட்ட தியாகி என்பதை விளக்க முயன்றிருக்கிறார் என்பதுவே. ஒரு இந்திய முஸ்லிம் தன்னை பெருமை மிகு இந்திய முஸ்லிம் என்று அழைப்பதால் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? இங்கேதான் கதை சறுக்குக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள் என்பது பித்தலாட்டம். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு பெரும்பான்மை ஹிந்துவுக்கு என்ன என்ன உரிமை உண்டோ அத்தனையும் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கும் உண்டு, சொல்லப் போனால் கூடுதலாகவே உண்டு. மனசாட்சி உள்ளவர்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன்னை தேசிய இஸ்லாமியராக உணரும் ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இந்தப் படத்தில், அப்பாவி முஸ்லிம் ஒருவன், சூழ்நிலையால் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தப்பட்டால் அவன் என்ன என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கவேண்டி இருக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைசியில் தேசியப் புலனாய்வு மையத்தோடு முடிச்சு போட்டு அவனைத் தியாகியாக்கி வைக்கிறார்கள்.

சூழ்நிலையால் பயங்கரவாதியாகும் இர்ஃபான், அதுவும் இந்தியாவில் ஊடுருவி இருக்கும் ஐ எஸ் தலைவன் என்று சந்தேகிக்கப்படும் இர்ஃபான், தன் ஹிந்து நண்பர்களோடு வரும்போது முக்கியமான கேள்விகளைக் கேட்கிறான். என் பேர் இர்ஃபான்றதாலதான என்னை பயங்கரவாதின்னு நினைக்கிறாங்க, இதுவே ஒரு ஹிந்துப் பெயரா இருந்தா விட்டிருப்பாங்கள்ல என்று. உடனே ஹிந்து நண்பர்கள் நடந்ததற்காக இர்ஃபானிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். கூடுதலாக ஒரே ஒரு கேள்வியை இந்திய இஸ்லாமியனான இர்ஃபானோ, உடன் வந்த ஹிந்து நண்பர்களோ கேட்டிருக்கலாம். ஏன் இப்படி ஒரு நிலைமை? எதனால் வந்தது? இப்படம் சொல்ல நினைப்பது, அப்படி ஒரு முஸ்லிமை முஸ்லிம் பெயர் இருப்பதாலேயே சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று. ஆனால் சொல்லி இருப்பதோ, அப்படி ஒரு சூழ்நிலை வர முஸ்லிம்களே காரணம் என்று. நான் சொல்லவில்லை, திரைக்கதையில் அப்படி அர்த்தம் வருகிறது.

ஜனநாதன் என்றொரு தீவிர கம்யூனிஸ இயக்குநர் இருந்தார். அவரது திரைப்படங்கள் எல்லாம் புரட்சி என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் திரையில் பார்த்தால், இந்தியத்துவத்தை எங்கேயும் கை விட்டிருக்கமாட்டார். இந்தப் படத்துக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. படம் முடியும்போது தியாகி முஸ்லிமுக்காக வருத்தப்படவேண்டிய நாம், இந்திய அரசின் போராட்டத்துக்காக மகிழ்ச்சி அடைந்துவிடுகிறோம்.

இர்ஃபான் ஒரு பெருமைமிகு இந்திய முஸ்லிம் என்றால், இர்ஃபான் தீவிரவாதி என்று நம்பி, அவனைக் கொன்று இந்தியாவைக் காப்பாற்ற நினைக்கும் அந்த இஸ்லாமியப் பெண் யார்? இர்ஃபான் ஒரு காட்சியில் நானும் முஸ்லிம் நீயும் முஸ்லிம் என்று சொல்ல, அடுத்த நொடி இர்ஃபானின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் இஸ்லாமியப் பெண் அதிகாரி. அவரும் பெருமை மிகு இந்திய முஸ்லிமே.

ஒரு கட்டத்தில், இர்ஃபான் தன் நிலைக்குக் காரணமான இந்தியாவுக்கு எதிராக மாறுகிறான். இந்தியாவை ஒழிக்க நினைக்கும் ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவாக அவர்கள் கேட்கும் கெமிகல் கேஸ் வெபன் (ரசாயன வாயுவை வைத்துக் கொல்வது) தயாரிக்க உதவுகிறான். கடைசி ஐந்து நிமிடத்தில் இர்ஃபானின் குடும்பமே எப்பேற்பட்ட தியாகிகள் என்று சொல்லப்படுகிறது. இர்ஃபான் உதவும் ஐ எஸ் அமைப்பில் அத்தனை பேரும் முஸ்லிம்களே. இந்தியாவை வெறுக்கும் முஸ்லிம்கள். தலைவன் முஸ்லிம் ஒரு முன்னாள் ஹிந்து. மதம் மாறி, ஐ எஸ்ஸில் சேர்ந்து, என்னவெல்லாமோ சொல்கிறார்கள். சொல்லிவிட்டு, கார்த்திக் என்ற பெயர் இருப்பதால் அவனை போலிஸ் சந்தேகிக்கவில்லை, ஆனால் இர்ஃபான் என்ற பெயர் இருப்பதால் ஒரு அப்பாவி முஸ்லிமை சந்தேகித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

FIR Tamil movie poster.jpg

படம் பார்க்கும் அத்தனை இந்திய வெறுப்பாளர்களை அல்லது இஸ்லாமியர்களுக்கு இப்படித்தான் நடக்கிறது என்று நம்பும் நடுநிலையாளர்களை இந்தக் கதை பதைபதைக்கச் செய்திருக்கவேண்டும் இல்லையா? ஆனால் செய்திருக்காது. ஏன்? படத்தின் திரைக்கதையே காரணம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

* ஐ எஸ் அமைப்பு என்பது எத்தனை பெரிய கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று உலகுக்கே தெரியும். இந்திய முஸ்லிம்கள் தங்களை எந்த இடத்திலும் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி யோசித்துக் கூடப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு அமைப்பின் தலைவனாக இர்ஃபான் இருப்பானோ என்ற சந்தேகம் வந்தால், இந்தியா அல்ல, அது எந்த நாடாக இருந்தாலும் ஊராக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும். கதையை யோசிக்கும்போது ஐ எஸ் அமைப்பின் ஒரு தலைவன் இந்தியாவில் இருந்தால் என்று யோசித்துவிட்டார்கள். இந்த ஒரு வரியில் மயங்கிவிட்டார்கள்.

* இந்தியப் புலனாய்வு மையம் என்பது பக்கத்து வீட்டில் மாங்காய் அடித்துத் திருடித் திங்கும் அமைப்பு அல்ல. பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்வது, எதிர்த்தாக்குதல் நடத்துவது என்று இந்தியாவின் தலையாய பிரச்சினையை தினம் தினம் எதிர்கொள்பவர்கள். அந்த அமைப்பு சட்டென திருவல்லிக்கேணி இர்ஃபானை எப்படி ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதி என்று நம்பும்? இதற்குக் கடைசியில் வேறு ஒரு கதை சொல்கிறார்கள். ஆனால் அந்த நொடி வரை இதே நினைப்பில் கதை பார்க்கும் பார்வையாளர் நம்பகத்தன்மை இல்லாமல்தானே பார்ப்பான்?

* ஒரு ஹீரோ கெட்டவனாக இருக்கமுடியாது என்று நமக்குத் தெரியாதா? கடைசியில் ஒரு நொடியில் என் ஐ ஏ-வின் திட்டங்கள் தெரியும்போது நமக்கு அதிர்ச்சி வருவதற்குப் பதிலாக, இதுக்காடா இவ்ளோ சீன் என்ற கேள்விதான் வருகிறது.

* கதையின் மையம் என்ன? பெயரில் என்ன இருக்கிறது என்பதுதானே? ஆனால், ஹீரோ இர்ஃபான் தன் பெயர் இர்ஃபான், தான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே தேசியப் புலனாய்வு மையம் தன்னைத் தேர்ந்தெடுக்கிறது என்று தெரிந்தே ஒப்புக்கொள்கிறான். அப்படியானால் இது கதையின் அடிப்படைக்கே எதிரானதல்லவா? தேசியப் புலனாய்வு மையத்திடம் அவன் என்ன கேட்டிருக்கவேண்டும்? என் பெயர் கார்த்திக் என்றால் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா என்றுதானே? அங்கே கேட்காமல் ஊரெல்லாம் கேட்டுத் திரிகிறான் இர்ஃபான்.

* கடைசியில் இர்ஃபான் குடும்பமே இந்தியத் தியாகிகள் என்று சொல்லி, அதன் பின்னால் இருக்கும் திட்டத்தை என் ஐ ஏ இயக்குநர் விவரிக்கும்போது அதுவரை கதையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையும் அடியோடு போய்விடுகிறது. என் ஐ ஏ இயக்குநராக வரும் கௌதம் மேனன் கொஞ்சம் தமிழில் அவ்வப்போது பேசுகிறார். மற்றபடி இவர் எப்போதும் போல் ஹாலிவுட் நடிகராகவே வலம் வருகிறார்.

* மோடி போன்ற கெட்டப்பில் வரும் பிரதமர் கடைசியில் சொல்கிறார், பயங்கரவாதியின் பெயர் இர்ஃபானா அப்துல்லா, சரி, பெயர் எதுவாக இருந்தால் என்ன, பயங்கரவாதி பயங்கரவாதிதானே என்று சொல்லிவிட்டுப் போகிறார். அதாவது இர்ஃபான் குடும்பம் செய்த தியாகத்தை என் ஐ ஏ இயக்குநர் பிரதமரிடம் இருந்து மறைத்துவிடுகிறார். இதனால் இர்ஃபான் இந்திய ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவனாகவே இறந்தும் போகிறாராம்.

* இப்படி எத்தனையோ முஸ்லிம்களின் தியாகம் வெளியே வராமல் போய்விட்டது என்று சொல்கிறார்கள். விட்டுருவீங்களாய்யா நீங்க என்றுதான் கேட்கவேண்டும். அதைவிட இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள், இப்படி இர்ஃபான் பயங்கரவாதி என்று சந்தேகம் வரக் காரணம், அதை உடனே நம்பிய மீடியா என்று. தமிழ் ஊடகங்களா? சுத்தம்!

* சிரியாவில் போய் ஐ எஸ்ஸில் சேர்வது வீட்டுக் கொல்லையில் இருக்கும் புளியம் பழம் பறிப்பதைப் போல சுலபமானது போல. அதுவும் இந்திய ஐ எஸ் காரன் முன்னாள் ஹிந்து என்பதெல்லாம் அதீத நகைச்சுவை.

இப்படி நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும், இலக்கு என்ன என்பதைத் தீர்மானமாக நிர்ணயிக்காததாலும், அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலைக் கைதியாகிறான் என்பதைக் காட்டுவதற்கு தரப்படும் முன்னொட்டுக் காட்சிகளின் நீளத்தாலும், இப்படம் மொத்தத்தில் எரிச்சலைத்தான் தருகிறது. இதனால் விஷ்ணுவிஷால் பட்ட கஷ்டம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிறது.

இதில் இன்னொரு காமெடியை வேறு செய்து வைத்திருக்கிறார்கள். இர்ஃபான் தன்னைப் பற்றித் தானே ஒரு பிம்பத்தை உருவாக்குகிறான். அதில் வருவது ஒரு காதல். அதுவும் எப்படி? ஒரு பிராமணப் பெண் இர்ஃபானை விழுந்து விழுந்து காதலிக்கிறாளாம். இதை உலகமே நம்புகிறதாம். சொல்வதோ ஊரை ஏமாற்ற ஒரு கதை என்றாகிவிட்டது, அதில் ஏன் ஒரு பிராமணப் பெண் இர்ஃபானைக் காதலிக்கவேண்டும்? அந்தப் பெண்ணும் ஒரு முஸ்லிமாக இருந்துவிட்டால் அது கதையை எப்படிப் பாதித்துவிடும்? இயக்குநருக்கே வெளிச்சம்.

இன்னும் தமிழில் உருப்படியான இஸ்லாமியத் திரைப்படம் வரவில்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்ட யதார்த்தமான இஸ்லாமியச் சூழலுடன் வரும் படம் ஒன்றில்தான் ஒரு அப்பாவி முஸ்லிமின் கஷ்டத்தைச் சரியாகக் காட்டமுடியும். இல்லையென்றால், குறைந்தபட்சம் அந்த அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலையால் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுகிறான் என்பதை உள்ளூர் அளவிலாவது யோசிக்கவேண்டும். இப்படி ஐ எஸ் என்றெல்லாம் யோசித்தால் எடுபடாது. கடைசியில் FIR என்று போட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முஸ்லிம் பெயரைப் போடுவதால் மட்டும் நாம் சொல்ல நினைத்ததை சொன்னதாகிவிடாது. இந்திய தேசிய முஸ்லிம்களுக்கும் இந்திய தேசிய ஹிந்துக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, எந்தப் பெயரில் வந்தாலும் அவர்கள் இந்தியர்களே. அப்படி இல்லாமல் போவது ஏன் என்பதை இந்திய தேசிய ஹிந்துக்களை போலவே இந்திய தேசிய முஸ்லிம்களும் யோசிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான விடை கிடைக்கும்.

Thanks: https://oreindianews.com/?p=7553

Share

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஆனால் யாருக்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவரை நினைத்துப் பாவமாக இருக்கிறது. இது போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் ஒரு பிடிவாதம் வேண்டும். தான் எடுக்கும் படங்கள் மீதான நம்பிக்கை வேண்டும். இரண்டுமே மணிகண்டனிடம் இருக்கிறது, அதற்காகப் பாராட்டுகள்.

கடைசி விவசாயி என்ற பெயர் ஒரு வகையில் இப்படத்துக்குத் தவறான பெயரோ என்று இப்போது யோசிக்கிறேன். குற்றமே தண்டனையில் ‘ஜி-ன்னு கேட்டாலே எரிச்சல் வருது’ என்றொரு வசனம் வரும். இது போன்ற புதிய அலை இயக்குநர்கள் (மணிகண்டன் புதிய அலையில் வருவாரா என்பது தனியே விவாதத்துக்குரியது) எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இந்திய – ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது வழக்கம் என்பது ஒரு பக்கம். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் விவசாயம் என்பதைத் அதீதப் புனிதமாக்கி, எங்கெல்லாம் திரைக்கதை எழுத முடியவில்லையோ அங்கெல்லாம் புனித விவசாயத்தைப் புகுத்தி, விவசாயம் என்றாலே பார்வையாளர்கள் ஓடிவிடும் அளவுக்கு ஆக்கி வைத்திருப்பது ஒரு பக்கம். இதனால்தான், இப்படத்தின் பெயர் கடைசி விவசாயி எனவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் மணிகண்டன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏன்? முதல் பாராவை வாசிக்கவும். அந்த நம்பிக்கையில் இப்படத்துக்குப் போனேன்.

முதல் 50 நிமிடம் ரொம்பவே சோதித்துவிட்டார் இயக்குநர். கதைக்குள் எடுத்த எடுப்பிலேயே வந்திருக்கலாம். ஆனால் என்னவெல்லாமோ காண்பித்துப் பாடாகப் படுத்திவிட்டார். அதிலும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படத்துடன் எங்கேயும் ஒட்டாமல் எப்படியோ அலைபாய்கின்றன. கேள்வியை எதாவது கேட்டுவிட்டு அதற்கு எதாவது ஒரு பதில் சொல்லி, அதைத் தத்துவ பன்ச் என்று நினைத்து அவர்களாக ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. வெளியே போய்விடலாமா என்று நினைக்கும்போதுதான் அந்த நீதிமன்றக் காட்சி ஆரம்பிக்கிறது.

அதற்குப் பிறகு படம் நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியை எங்கே எப்படி வைப்பது என்பதிலும் மணிகண்டனுக்குக் குழப்பம் போல. இழுஇழு என்று இழுத்து எப்படியோ முடித்து வைக்கிறார். நவீன விவசாயத்தின் மீதான அவநம்பிக்கை படத்தில் ஒவ்வொரு காட்சியில் தெரிந்தாலும், கதையின் மையம் அதுவல்ல என்பது என் எண்ணம். இன்னொரு கோணத்தில் கதையின் மையம் அதுவே என்று சிலர் சொல்லக் கூடும். இயற்கை விவசாயம் என்பதை யாரால் முடியுமோ அவர்கள் செய்துகொள்ளலாம். ஆனால் நவீன வேளாண்மை என்ற ஒன்று இல்லாவிட்டால், பூச்சி மருந்துகள் என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகம் முழுக்க ஊஊஊஊதான் என்பதை எல்லாரும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. என் பார்வையில் இப்படம் ஒட்டுமொத்த விவசாயமே கேள்விக்குறியாகிறது என்பதைப் பற்றியே பேசுகிறது என்றே நினைக்கிறேன். ஆனால், கடைசிக் காட்சியில் மயில் நடனமாட, மழையும் பெய்கிறது! அப்படியானால் மழைதான் பிரச்சினையா? ‘குற்றமே தண்டனை’யிலும் இதே போல் மணிகண்டனுக்குப் பிரச்சினைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது. ரொம்ப யோசித்துத் தத்துவச் சிக்கலுக்குள் மூழ்கும்போது திரைக்கதை எழுதுவாரோ? 🙂

படம் எப்போதெல்லாம் நம்மை சோதிக்கிறது என்றால், விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் வரும்போது! இந்த இரண்டு பேரும் ஏன் இந்தப் படத்துக்குத் தேவை என்பதே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சி மட்டுமன்றி, கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறேன் என்று, படத்தோடு ஒட்டமுடியாத, ஆனால் காட்சியாக நல்ல காட்சிகளும் பல உண்டு.

விவசாயியாக நடித்திருப்பவர் மட்டுமல்ல, பல நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். க்ளிஷேவாக அல்ல, நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களையே காட்சிக்கேற்றார் போல் வசனம் பேசச் சொல்லிவிட்டார் போல இயக்குநர். பல வசனங்கள் நாம் வீட்டில், தெருவில் பேசிக்கொள்வது போல அப்படியே வருகின்றன. திக்குவது, தவறாகச் சொல்லிப் பின்னர் சரியாகச் சொல்வது, எதாவது பேசுவது என எல்லாமே அப்படியே வருகின்றன. துல்லியமான மதுரைப் பேச்சு வழக்கில். இதில் சொதப்புவர்கள் யாரென்றால், பெயர் பெற்றுவிட்ட விஜய்சேதுபதி போன்றவர்கள்தான். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியெல்லாம், எத்தனை இயல்பாக இருக்கிறது என்றால், இப்படித் தமிழ்ப்படங்களில் பார்த்ததே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக இருக்கிறது. பெரிய சாதனை இது. இதற்காக மணிகண்டன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்.

நீதிபதியாக வரும் பெண்ணின் நடிப்பு மிக அருமை. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே பெரிய பலம்.

விஜய் சேதுபதி தான் இத்தனை நாள் நடித்த படங்களிலும் இனி நடிக்கப் போகும் படங்களிலும் ஹிந்து மதத்தைத் தாக்கியதற்காக ஒரு பெரிய பிராயசித்தமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் போல. தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஹிந்து மதச் சின்னங்கள்தான். ஆனால் பைத்தியம். எல்லாப் படங்களிலும் இவர் பேசுவது இப்படித்தான் இருக்கிறது என்பதால், நமக்கு இதில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை.

எழுத்து போடும் காட்சியில் ஒலிக்கும் டி எம் எஸ்ஸின் முருகன் பாடல் தொடங்கி இறுதிக் காட்சி வரை முருகன், பிள்ளையார், குலசாமி, அய்யனார் என பக்தி மயம்தான். படத்தின் முதல் சட்டகமே ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, பாட்டன் முருகனுக்கும் அவனது அடியார்களுக்கும்’ என்றெல்லாம் வந்தது. ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று கூட நினைத்தேன். இல்லை, உண்மையிலேயே பக்தியாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 🙂

சந்தோஷ் நாராயன் இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. இளையராஜா இசையமைத்த டிரைலர் இன்னும் காதில் ஒலிக்கிறது. நமக்குக் கொடுப்பினை இல்லை. வேறென்ன சொல்ல!

மணிகண்டனின் படங்கள் மெல்ல நகரும் என்பது தெரிந்ததுதான். இப்படம் மெல்ல ஆனால் நகரவே இல்லை என்பதுதான் பிரச்சினை. சில காட்சிகள் மிக இயற்கையாக இருக்கின்றன, சில காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து, திரைக்கதையில் கவனம் செலுத்தி, விஜய் சேதுபதி + யோகி பாபுவை மொத்தமாக நீக்கி இருந்தால், இப்போது மயிலின் அகவலாகத் தேங்கி இருக்கும் படம், மயிலின் நடனமாக . மணிகண்டன் தவறவிட்டுவிட்டார்.

இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, மணிகண்டன் யாரை நம்பி இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறார் என்பதுதான். ரசிகர்களை நம்பி என்று தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும். இன்று நான் தியேட்டரில் பார்த்தபோது 20 பேர் இருந்தால் அதிகம். நல்லவேளை, ஓ.டி.டி என்ற ஒன்று இருக்கிறது. அதில் வரும்போது இன்னும் சில லட்சம் பேர் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்? மணிகண்டன் யோசிக்கவேண்டும். மணிகண்டன் திறமையான இயக்குநர் என்பதில் ஐயமே இல்லை. அந்தத் திறமையைப் பறைசாற்றும் திரைப்படங்களை அவர் தரட்டும். அந்த முருகன் அவருக்கு பிழைக்கும் புத்தியைத் தரட்டும்.

பின்குறிப்பு: படத்தில் ஒரு கவித்துவமான காட்சி. யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். அந்த யானைக்கு கொசு வலை போட்டு உறங்க வைப்பார். அந்தக் காட்சியில் யோகி பாபுவின் உதவியாளர் படுத்திருக்கும் யானைக்குக் கால் அமுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார். ❤ எனக்கு மிகவும் பிடித்துப் போன காட்சி.

Share

சில கன்னடத் திரைப்படங்களும் மலையாளத் திரைப்படங்களும்

சர்க்காரி ஹிரிய ப்ரதமிகெ ஷாலே, காஸர்கோடு – கொடுகெ: ராமண்ணா ராய் – படத்தின் பெயர் இது. தோராயமாக மொழிபெயர்த்தால்: அரசு உயர்நிலைப்பள்ளி, காஸர்கோடு – உபயம்: ராமண்ணா ராய் என்று சொல்லலாம். இது என்ன என்று புரிந்துகொள்ளவே எனக்கு ஐந்து நிமிடங்கள் ஆகியது. ஒரு திரைப்படம் வந்துவிட்டால் அது தொடர்பான வார்த்தைக்கு கூகிளில் பொருள் கண்டுபிடிப்பது என்பது மலையைப் புரட்டி எலியைப் பிடிப்பது போலத்தான். ஹிரிய ப்ரதமிகெ ஷாலே என்றால் நடுநிலைப்பள்ளியா உயர்நிலைப்பள்ளியா என்று இன்னும் பிடிபடவில்லை. கன்னடம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். ராமண்ணா ராய் என்பவர் காஸர்கோட்டில் இருந்து 80களில் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மொழிவாரி பிரிக்கப்படும்போது 1956ல் காஸர்கோடு கேரளாவுடன் இணைக்கப்படுவதற்கு எதிராகப் போராடியவர் என்று தெரிகிறது.

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் நகைச்சுவைத் திரைப்படம். நகைச்சுவை என்றால் நம்ம ஊர் கமல்ஹாசனின் திரைப்படங்கள் வகையல்ல. இது ஒரு மென் நகைச்சுவைத் திரைப்படம். கூடவே, சிறுவர்களுக்கான படம் என்றும் சொல்லலாம். காஸர்கோட்டின் கர்நாடக கேரள எல்லைப் பகுதியில் இருக்கும் கன்னடம்வழி கற்பிக்கும் பள்ளி கேரள அரசின் கீழ் உள்ளது. ஐம்பது பேர் மட்டுமே படிக்கும் இப்பள்ளிக்கு மலையாளியான கணக்கு வாத்தியாரை அரசு அனுப்புகிறது. இவருக்கு கன்னடம் தெரியாது. மலையாளத்தில் கணிதம் சொல்லித் தருகிறார். இங்கிருக்கும் கன்னடர்கள் அதை எதிர்க்க, அந்த மலையாளி ஆசிரியர் பயந்து ஓடிப் போகிறார். இனியும் இப்பள்ளியை நடத்துவது தேவையற்றது என்று ஊழல்வாதியான கேரளக் கல்வி அதிகாரி முடிவெடுக்கிறார். ஆனால் பள்ளி தலைமையாசிரியரான மலையாள நம்பூதிரியோ கன்னடப் பள்ளியும் அதில் படிக்கும் கன்னட மாணவர்களும் பாவம் என்று தன்னால் முடிந்த அளவுக்குப் போராடுகிறார். மாணவர்கள் போராடி, மைசூரிலிருந்து ஒருவரை அழைத்து வந்து அவரை வைத்துச் சட்டப் போராட்டம் நடத்தி எப்படிப் பள்ளியை மீட்கிறார்கள் என்பது மீதிக் கதை.

இந்த அளவுக்கு சீரியஸ் கதையை இத்தனை நகைச்சுவை இழையோடச் சொல்லி இருப்பது ஆச்சரியம். எப்போதும் ஒரு சிறு புன்னகை நம் முகத்தில் தவழ்ந்தபடி இருக்கிறது. சில காட்சிகள் நல்ல நகைச்சுவை. சில கொஞ்சம் டல். ஒவ்வொரு நடிகரும் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். (கன்னட வெறியராக வரும் ப்ரமோத் ஷெட்டி தவிர!) பள்ளி மூடப்பட்டு அங்கே படிக்கும் ஏழை மாணவர்கள் தத்தம் தொழிலுக்குப் போகும் காட்சியைக் கூட உணர்ச்சிவசப்பட வைக்காமல் மிகவும் ஜாலியாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கும் நமக்கு மட்டுமே அம்மாணவர்களின் எதிர்காலம் குறித்த வருத்தம் வருகிறது. அத்தனை தெளிவாகத் திரைக்கதை எழுதி இருக்கிறார்கள்.

அழகி திரைப்படத்தில் பள்ளி சார்ந்த காட்சிகளை நாம் திரையில் பார்த்தபோது எப்படிச் சில்லரையை சிதற விட்டோமோ அப்படி படம் முழுக்கக் காட்சிகள் இருக்கின்றன. நம்மை பழங்காலத்துக்குக் கொண்டு போகும் காட்சிகள். காஸர்கோட்டில் மலையாளம் கலந்து கன்னடம் பேசும் சிறுவர்கள், மம்மூட்டி மோகன்லாலைக் கொண்டாடும் கன்னடச் சிறுவர்கள் என்று இயல்பாக நகர்கிறது படம்.

2001ல் துபாயில் நான் தியேட்டரில் பார்த்த முதல் திரைப்படம் சூத்ரதாரன். அப்போது எனக்கு மலையாளம் ஒரு வார்த்தை கூடத் தெரியாது. தியேட்டரில் பாண்டவபுர காட்சிகள் வந்தபோது அதில் சிலர் கன்னடம் பேச, ஆஹா நமக்குப் புரிந்த ஒரு மொழி என்ற ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. அதேபோல் இத்திரைப்படத்தில் பல இடங்களில் மலையாளம் பேசப்படுகிறது. காஸர்கோட்டில் இத்திரைப்படம் ஓரளவுக்கு ஓடி இருக்கிறது. இப்படம் 2018ல் வெளி வந்திருக்கிறது. 2020ல் கூட காஸர்கோட்டில் ஒரு கன்னட மீடியம் பள்ளியில் மலையாள கணக்கு ஆசிரியை நியமிக்கப்பட்டு பிரச்சினை ஆகி இருக்கிறது. அதாவது இன்று வரை இப்பிரச்சினை இன்னும் அங்கே இருக்கிறது.

பள்ளியை மாணவர்கள் ஆனந்த்நாக் மூலம் மீட்பதெல்லாம் கொஞ்சம் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளே. ஆனால் தாய்மொழியில் சிந்திக்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்லி புல்லரிக்க வைத்துவிட்டார்கள். பதினைந்து வயதில் ஒரு பையனுக்கும் உடன் படிக்கும் ஒரு மாணவிக்கும் வரும் எதிர்பாலினக் குறுகுறுப்பைப் படம் முழுக்கப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், எல்லை தாண்டாமல்.

கன்னட நகைச்சுவைப் படங்கள், மற்ற கன்னடப் படங்களைப் போலவே, பார்க்கவே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். ஆனால் இத்திரைப்படம் நல்ல ஃபீல் குட் முவீயாக வந்திருக்கிறது. நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். ஆன்லைனில் எம் எக்ஸ் ப்ளேயரில் இலவசமாகக் கிடைக்கிறது.

இதே பிரச்சினையை அப்படியே தமிழுக்கு மையப்படுத்திக் கொண்டு வந்தால், புல்லரிக்க வைக்கும் தமிழ்வழிக் கல்வி தொடர்பான ஒரு உருப்படியான படத்தைக் கொண்டு வர முடியும். அந்த அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கிறது இத்திரைப்படம்.

*

பாப்கார்ன் மன்க்கி டைகர் என்றொரு படம். தனஞ்செய் நடித்தது. ரத்னன் ப்ரபஞ்ச பார்த்துப் பிடித்துப் போய் தனஞ்செய்யின் இந்தப் படத்தைப் பார்த்தேன். கன்னடத்தின் சிறந்த நவீன படமாக நான் நினைப்பது, உலிதவரு கண்டெந்தெ. (தமிழில் ரிச்சி!) ரக்‌ஷித் ஷெட்டி இயக்கி நடித்தது. சமீபத்தில் கருட கமனா வ்ருஷப வாகனா என்றொரு படம் சென்னையில் திரையிடப்பட்டிருந்தது. ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்து இதற்கு டிக்கெட் வாங்கப் போகும்போது, எதோ ஜெர்க்காகிப் பார்த்தால், இது ராஜ் ஷெட்டியின் படம். பின் எப்படி ரக்‌ஷித் ஷெட்டியின் படம் என்று நினைத்தேன்? பின்னர் நினைவுக்கு வந்தது, இப்படம் பற்றி ரக்‌ஷித் ஷெட்டி தன் ஃபேஸ்புக்கில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது.

ராஜ் பி ஷெட்டியின் படம் என்று தெரிந்ததும் டிக்கெட் வாங்கவில்லை. இவரது படமான ஒரு மொட்டயின் கதா-வை ஆஹா ஓஹோ என்று பலர் கொண்டாடினாலும் எனக்குப் பிடிக்கவில்லை. ராஜ் ஷெட்டியின் படங்களில் எனக்கு உறுத்துவது எதோ ஒரு தேக்கம். ஆனால் கருட கமனா அப்படி இல்லை. படம் நன்றாகவே இருந்தது. எல்லாரும் ராஜ் பி ஷெட்டியைப் புகழ, அவரை விட எனக்கு ரிஷப் செட்டியின் நடிப்பு பிடித்துப் போனது. வழக்கமான கன்னடப் படம் போலல்லாமல் நவீன மலையாளத் திரைப்படத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, சில காட்சிகளில் அதையும் தாண்டி நன்றாகவே இருந்தது கருட கமனா. தமிழ்ப் படங்களின் மேக்கிங் தரத்துடன்! ஆனாலும் உலிதவரு கண்டெந்தே இதைவிடப் பல மடங்கு நல்ல படம்.

இப்படி ஒரு பின்னணியில் பாப்கார்ன் மன்க்கி டைகர் பார்த்தேன் – என்ன சொல்ல! உலிதவரு கண்டெந்தெ போல மிகச் சிறப்பான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், சந்தேகமே இல்லாமல் மிக வித்தியாசமான படம். முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை ரத்தம், வன்முறை, கொலைதான். ரிவர்ஸ் க்ரொனாலஜிகல் முறையில் படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூகிள் சொல்கிறது. படம் முழுக்க அப்படி இல்லை. ஆனால் நிறைய காட்சிகள் அப்படித்தான். படம் முடிந்தாலும் கூட, இத்தனை நேரம் என்ன பார்த்தோம், ஏன் இத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் புரிவதே இல்லை. அல்லது எதோ ஒரு குழப்பம். பின்பு நீண்ட நேரம் யோசித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. படம் வெளிவந்தபோது (2020) தியேட்டரில் கதறிக்கொண்டேதான் பலர் போயிருக்கிறார்கள். விஸ்வரூபம் பலருக்குப் புரியவில்லை என்று சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்படம் அதைப் போல பத்து மடங்கு புரியாது. படம் பார்த்துவிட்டு யூ ட்யூப்பில் பல வீடியோக்களைத் தேடிப் பிடித்துப் பார்த்து, நான் நினைத்தது சரியா என்று உறுதிப்படுத்த வேண்டியதாயிற்று. இதனாலேயே பலருக்குப் புரியாத படமாகவும், சிலருக்கு மிகவும் முக்கியமான படமாகவும் ஆகிவிட்டிருக்கிறது இத்திரைப்படம்.

இப்படி புதிர் போன்ற ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்கள், மூளைக்கு வேலை வைக்கும் திரைப்படத்தைப் பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் தவறவிடக் கூடாத படம் இது. இப்படத்தில் வரும், குழந்தை காணாமல் போகும் தொடர் காட்சிகள் பதற வைக்கும் சோகக் கவிதை என்றே சொல்லவேண்டும். இடைவேளையின் போது அக்குழந்தை அழுதுகொண்டிருக்கும் அந்தச் சட்டகம் என்றும் மறக்கமுடியாத ஒன்று. அதே போல் டைகர் சீனு கதாபாத்திரத்துடன் இணையும் நான்கு பெண் பாத்திரமும் மிகவும் நேர்த்தியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் மனைவியின் கதாபாத்திரம் மிக அருமை.

நேரம் இருப்பவர்கள், பொறுமை இருந்தால் மட்டும், இப்படத்தைப் பாருங்கள். நான் ஸீ5ல் பார்த்தேன்.

*

ரத்னன் ப்ரபஞ்ச (க)

முன்பின் தெரியாத ஒரு திரைப்படத்தை ஏன் பார்க்கிறோம் என்பதே கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான். நேற்றிரவு தூக்கம் வராத நேரத்தில் பார்த்த கன்னடத் திரைப்படம் ரத்னன் ப்ரபஞ்ச. (ரத்னனின் உலகம்) இதன் டிரைலர் தற்செயலாகக் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வசவுச் சொற்கள். போளி மகனே, திக்கா முச்கொண்டிருத்தீரா, முள்ஹந்திமுண்டேகண்டி என்றெல்லாம் காதில் விழவும், ஆர்வமாகப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். போளி மகனே டப்பிங்கில் தட்டி மகனே ஆகிவிட்டது. திக்கா வரவே இல்லை. ஆனாலும் படத்தை முழுக்கப் பார்த்தேன்.

திணிக்கப்பட்ட கதை. ஹீரோவின் அம்மாவின் அதீத நடிப்பு. இதைப் பொறுத்துக்கொண்டால், கன்னடம் கொஞ்சமேனும் தெரியும் என்றால், முழுக்கப் பார்த்துவிடலாம். காஷ்மீரில் நடக்கும் காட்சிகளில், கதாநாயகியின் அம்மா என ஒரு transgenderஐ அறிமுகப்படுத்த, அந்த 2 நிமிடக் காட்சிகள் இனிமை.

அதைத் தொடர்ந்து வரும் உத்ர கர்நாடகக் காட்சிகள் இத்தனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை. நல்லவேளை, தவறவிடாமல் பார்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நன்றாக இருந்தது. குறிப்பாக உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்கு. உத்ர கர்நாடகத்தின் பேச்சு வழக்குக்காகவே பற்பல வீடியோக்களை தேடி தேடிப் பார்த்திருக்கிறேன். இப்படத்திலும் என்ன அழகு! ஹீரோவின் தம்பியாக வரும் நடிகரின் நடிப்பு மிக நன்றாக இருக்கிறது. ஹீரோ தனஞ்சயாவின் நடிப்பும் அருமை.

இறுதிக் காட்சிகளில் நெஞ்சை நக்க வைத்து, வளர்ப்புத் தாயை நினைத்து மகன் ஏங்குவதோடு சுபமாக முடித்து வைக்கிறார்கள். பெற்றால் மட்டுமே அம்மா அல்ல என்பதை மூன்று பகுதிகளாக ஆழ உழுதிருக்கிறார்கள்.

உத்ர கர்நாடகக் காட்சிகளுக்காகவும், படம் முழுக்க உடன் வரும் சொக்க வைக்கும் ஒளிப்பதிவுக்காகவும், நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம். பிராமணப் பையனின் அக்கா முஸ்லீமாக இருந்தும் எவ்வித மதப் பிரச்சினைகள், வம்புகளுக்குள் போகாமல், அது அதை அப்படியே காட்டி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவலுக்காக.

*

நீண்ட நாள்கள் கழித்து இரண்டு மலையாளப் படங்கள் பார்த்தேன். கடந்த 8 மாதங்களில் நான் இன்னும் பார்க்காத பல தமிழ்ப்படங்கள் அப்படியே இருக்கின்றன. என்னவோ ஒரு மனவிலகல். இப்போது பார்த்த இரண்டு மலையாளப் படங்கள் பீமண்டெ வழி மற்றும் மின்னல் முரளி.

பீமண்டெ வழி – வளவளவென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் இப்படிப் பேசிக்கொண்டே இருக்கும் மலையாளப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டே பார்க்க ஆரம்பித்தேன். படம் சுமார். அரை மணி நேரத்தில் எடுத்து முடித்திருக்கவேண்டியதை இழு இழு என்று இழுத்து, ஒரு வழியாய் முடித்து வைத்தார்கள். ஜினு ஜோசப்பின் நடிப்பு மிரட்டல்! கடைசி காட்சியில் ஜினு ஜோசப்பை அந்த குண்டுப் பெண் தூக்கி அடிக்கும் காட்சியில் வாய் விட்டுச் சிரித்தேன். மற்றபடி சிரிக்க ஒரு காட்சி கூட படத்தில் இல்லை.

மின்னல் முரளி – ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் மிரட்டல். சூப்பர் மேன் படங்கள் வந்து குவிந்து விட்டிருக்க, அதே பாணியில் ஒரு படத்தை இத்தனை விறுவிறுப்பாகவும் அட்டகாசமான திரைக்கதையுடனும் எடுக்கவேண்டுமென்றால், அது எத்தனை கஷ்டம்? ஆனால் இதை மிக எளிதாகத் தாண்டி இருக்கிறார்கள். குரு சோம சுந்தரத்தின் நடிப்பு அற்புதம். தமிழனைக் கொன்று மலையாளி கடவுள் ஆகிறான் என்றெல்லாம் யாரும் வரப்புத் தகராறுக்குப் போகாமல் இருந்ததன் காரணம், கள படத்தில் தமிழன் மலையாளியை ஓட ஓட விரட்டி அடித்தாலோ என்னவோ. டொவினோ தாமஸ் எத்தனை நடித்தாலும் எனக்கு ஏனோ ஓட்டவே ஒட்டாது. ஆனால் மின்னல் முரளியில் கலக்கிவிட்டார். தவறவிடக் கூடாத படம் இது.

Share

மணிக்கொடி சினிமா – புத்தகம்

மணிக்கொடி சினிமா | Buy Tamil & English Books Online | CommonFolks
மணிக்கொடி சினிமா, பதிகம் பதிப்பகம், கடற்கரய், விலை ரூ 125, போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 9445901234

மணிக்கொடி சினிமா – ஆய்வுப் புத்தகமா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமான புத்தகம். கடற்கரய்-யின் நீண்ட கட்டுரையும், அது தொடர்பான மணிக்கொடி காலத்து திரைப்படக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1935களின் சினிமாவுக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விமர்சனங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். இன்றுவரை நாம் அதையேதான் செய்துகொண்டிருக்கிறோம்.

மனத்தைக் கவர்ந்தவை இரண்டு முக்கிய விஷயங்கள். 1935களில் எழுதப்பட்ட விமர்சனங்களின் நடை இன்றும் மிக இலகுவாகப் படிக்கும்படி இருக்கிறது. அந்தக் காலத்துக்கே உரிய சில வார்த்தைப் பயன்பாடுகளைத் தாண்டி எவ்வித நெருடலும் இல்லாமல் வாசிக்க முடிகிறது. அதிலும் கலாரஸிகன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனம் நேற்று எழுதியது போல் இருக்கிறது. சஞ்சயன் என்பவர் எழுதி இருக்கும் விமர்சனங்களில் சில அந்தக்கால பிரத்யேக வார்த்தைகளைப் பார்க்க முடிகிறது. அன்றும் இன்றைப் போலவே தமிழ் சினிமாவைத் திட்டித் தீர்த்து இருக்கிறார்கள்.

“இதுவரையில் நாம் கண்ட தமிழ்ப்படங்களில் ஏதாவது ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ஏதோ தனித்தனியாக நான்கைந்து கதைகள் பார்த்ததாகத் தோன்றும்.”

“இதுவரையில் ஹாஸ்யப் படம் என்றால் ஆபாசம் நிறைந்த கதைகள், விரசமான சம்பாஷணைகள்தான் என்று என்னும்படி இருந்தது.” (அம்மாஞ்சி பட விமர்சனம்.)

“முதல்முதலில் தமிழ்ப் பேசும்படம் ஆரம்பித்தபோதே, நமது வேத காலத்தில் ஆரம்பிக்கவில்லையென்றாலும், புராண இதிகாஸ காலங்களிலேயிருந்து ஆரம்பித்தது.” 🙂

இப்படி சில நறுக்குத் தெறிப்புகள். அதுவும் 1935களில்! நூறு வருடமாக ஒரே வட்டத்துக்குள்தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் போல.

அச்சுத கன்யா-வின் கதை கொஞ்சம் ஆச்சரியம். பறையர் பெண்ணை ஒரு பிராமணன் காதலிக்கும் கதை. இருவரும் திருமணம் செய்துகொண்டு புரட்சி எல்லாம் நடக்கவில்லை என்றாலும், 90 வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு படம் வந்திருக்கிறது. எந்த மொழி என்று தெரியவில்லை. இந்த நூலின் பெரிய குறை, எந்தப் படம் தமிழ்ப்படம் எந்தப் படம் வேற்று மொழிப் படம் என்பதை உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இயக்குநர், நடிகர்களின் பெயரை வைத்தே யூகிக்க வேண்டி இருக்கிறது.

கோடீஸ்வரன் என்ற (தமிழ்ப்படமா என்று தெரியவில்லை) ஒரு திரைப்படத்தின் கதை, திடீரென ஒரு பெண் நடிகையாக, அவளை காதலிக்கும் ஒருத்தன் குதிரை ரேஸில் ஜெயித்துப் பெரிய பணக்காரனாகி அவளைக் கை பிடிக்கப் போகும் நேரத்தில், ஹீரோவின் அம்மா அந்த நடிகையிடம் தற்செயலாகச் சொல்கிறாள், தன் பையனை ஒரு நடிகைக்கு எந்நாளும் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன், குடும்பப் பெண்ணுக்குத்தான் கட்டி வைப்பேன் என்று. மனம் உடைந்து போகும் நடிகை ஹீரோவின் வாழ்க்கையை விட்டு விலக, ஹீரோ தற்கொலை செய்துகொள்வதாகக் கடிதம் எழுதி வைக்க, மருத்துவர்கள் வந்து அவனைக் காப்பாற்ற முயல, அப்போதுதான் தெரிகிறது அவன் இன்னும் விஷமே குடிக்கவில்லை என்று. சுபம்.

இன்றளவும் இதே கதையைத்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்? கடைந்த பத்து வருடப் பாய்ச்சல் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்காவிட்டால், 90% தமிழ் சினிமாக்கள் 90 வருடங்களாக ஒரே போலவேதான் யோசித்துக்கொண்டு இருந்திருக்கின்றன என்று சொல்லிவிடலாம்.

Share

ஜகமே தந்திரம் – முற்போக்குத் தந்திரம்

ஜகமே தந்திரம் (Spoilers ahead) – பக்கா கேங்ஸ்டர் படமாக வந்திருக்கவேண்டியது, தேவையற்ற அலைச்சல்களில் வீணாகிறது. துரோகம், துரோகத்துக்கு துரோகம் என்பதால் அதுவே நியாயம் என்று அலைபாய்கிறது திரைப்படம். தமிழின் முக்கிய இயக்குநர்கள் அனைவருமே தங்கள் வீர தீர இந்திய எதிர்ப்பு முற்போக்கு அரசியலில் காணாமல் போகப் போகிறார்கள். இதற்கு முன்பும் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. இனியும் பட்டியல் நீளும். இன்று கார்த்திக் சுப்புராஜ்.

ஜோஜு ஜோர்ஜ் மிக நன்றாக நடித்திருக்கிறார். அவரும் பிரிட்டன் வில்லனும் தனுஸும் மோதிக்கொள்ளும் இடங்கள் அனைத்துமே பட்டாசு. அப்படியே கலக்கலாகப் போயிருக்கவேண்டிய படம், ஈழத் தமிழர்களின் இன்னல்களுக்குள் போய், இன்ன்னொரு திருப்பத்தையும், அதிலிருந்து இன்னொரு திருப்பத்தையும் எடுத்துக்கொண்டு, அதுவரை எப்படியோ தக்க வைத்துக்கொண்டிருந்த விறுவிறுப்பை விட்டுவிடுகிறது. தமிழ்நாட்டில் வாழும் சேட்டுகள் மீது எரிச்சல் காண்பிக்கும் வசனங்கள் ஆரம்பத்தில் வர, எரிச்சலான எனக்கு, பிற்பாதியில் இயக்குநர் ஒரு நியாயம் செய்தது சந்தோஷம். ஆனால், யார் எங்கே வந்து பிழைக்கிறார்களோ அவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லும் இயக்குநர், அதேபோல் மற்ற ஊர்களுக்குப் பிழைக்கப் போகும் பிற நாட்டுக்காரர்கள் செய்யும் ரௌடியிஸத்தைப் பற்றிப் பேசவே இல்லை. ஏனென்றால் தனுஷின் கதாபத்திரமே அப்படிப்பட்ட ஒன்றுதான்.

ஜோஜு ஜார்ஜின் கதாபாத்திரத்தை பிரபாகரன் என்று கொண்டால், தனுஷின் துரோகத்தை இந்தியாவின் துரோகம் என்று கொண்டால், இந்தியாவே மீண்டும் உதவவேண்டும் என்று சொல்ல வருகிறார் என்றும் பார்க்கலாம். அப்படியானால், ஈழத்துக்கு ஆதரவாக இந்தியாவை உதவச் சொல்லும் குரல்கள் எல்லாம் நியாயமாக எந்தப் பக்கம் இருந்து ஒலிக்கவேண்டும்? இந்திய தேசியத்தின் பக்கம்தானே? ஆனால் தமிழ்நாட்டில் ஒலிக்கும் இந்தக் குரல்கள் எல்லாம் இந்திய எதிர்ப்புக் குரல்களாகவே இருக்கின்றன. இது தற்செயல் அல்ல. இவர்களோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் வரை இந்தக் குரல்களோடு சேர்ந்து ஒலிக்கும் நியாயமான குரல்களுக்கும் நியாயம் கிடைக்கப் போவதில்லை. இதைப் புரிந்துகொள்வதில்தான் ஈழத்துக்காக ஒலிக்கும் குரல்களின் வெற்றி இருக்கிறது.

படம் முதலில் அரை மணி நேரம் நோகடித்துவிட்டது. தொடர்ந்து பார்க்கத்தான் வேண்டுமா என்றெல்லாம் தோன்றியது. ஆனால், அதற்கடுத்த ஒரு மணி நேரம், குறிப்பாக ஜோஜு ஜார்ஜ் கொல்லப்படும் வரை, அதகளம். (லாஜிக் சுத்தமாக இல்லை என்பதைத் தாண்டி ஒரு மாயம் நிகழ்கிறது.) தனுஷ் அப்படியே ரஜினியை பிரதியெடுக்கிறார். இன்னும் கொஞ்சம் கவனமாக திரைக்கதையை எழுதி இருந்தால், தலைவன் நிச்சயம் மீண்டும் வருவான், நாங்கள் நம்புகிறோம் என்றெல்லாம் எதையாவது எழுதி யாரையாவது ஏமாற்றும் திரைக்கதையை எல்லாம் தவிர்த்து இருந்தால், இன்னும் தீவிரமான கேங்வார் படமாக வந்திருக்கும்.

எந்த ஒரு அரசியலையும் அதன் ஆழத்துக்குள் சென்று பேசாமல், ஃப்ளாஷ் பேக்குக்காகத் தொட்டுக்கொண்டால் அந்தப் படம் அரசியல் படமாகிவிடாது. இயக்குநரின் அரசியல் சார்பு தெரியலாம், அதைத் தவிர வேறு பலன் எதுவும் இருக்காது. இந்தப் படமும் இயக்குநரின் அரசியல் சார்பைச் சொல்வதோடு நின்று விட்டிருக்கிறது. மக்களுக்கு எதைப் பிடிக்குமோ அதைச் சொல்லும் பாதுகாப்பு அரசியலைப் போல, மக்களுக்கு எதைப் பிடிக்குமோ அதை மட்டும் காட்டித் தப்பித்துக்கொள்ளும் படங்கள்தான் இன்றைய ட்ரெண்ட். இது தப்பித்துக் கொள்ளுதல் மட்டும் அல்ல, அதைத் தாண்டிய ஆதாரங்களும் கிடைக்குமோ என்னவோ. கடவுளுக்கே வெளிச்சம்.

ஈழப் பிரச்சினை என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரை உணர்வுரீதியான ஒரு தொடர்பு மட்டுமே அன்றி தினசரி அரசியல் பிரச்சினை அல்ல. இதுதான் யதார்த்தம். ஆனால் என்னவோ தமிழக மக்கள் அனைவரும் ஈழப் பிரச்சினைக்காக இன ரீதியாக உயிரையே தரத் தயாராக இருப்பதாக இயக்குநர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொண்டு மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தீராதவரை ஈழ மக்களின் நிஜ அரசியல் திரைப்படம் தமிழ்நாட்டில் வர வாய்ப்பே இல்லை. நான் தமிழன் நான் தமிழன் என்று ஒரு ஐடி கார்டாக ஒரு படம் அதன் இயக்குநருக்கு உதவலாம். அதுதான் நோக்கமே என்றால் நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்யும் மிகப் பெரிய உதவி, இப்படி அரைகுறையாக எதையாவது சொல்லாமல் இருப்பதுதான். இந்தப் படத்தைப் பார்க்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு பிரிட்டனில் ஈழத் தமிழர்கள் ரௌடிகளாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் வராமல் இருக்கவேண்டும். இதையே ஃபேமிலிமேன் போன்ற ஒரு தொடரில் காட்டி இருந்தால் தமிழர்கள் என்ற முற்போக்க்காளர்கள் தோரணம் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். நல்லவேளை, ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தை நல்ல கேங்க்ஸ்டராக்கி தப்பித்துக் கொண்டார் இயக்குநர். இந்த புத்திசாலித்தனமே ஒரு நியாயமான படத்துக்கான எதிரி!

பின்குறிப்பு: பிரிட்டன் வில்லனுக்கு ஆங்கில வசனம் எழுதியது யார் என்று தெரியவில்லை. சப்டைட்டிலிலும் கூடப் புரியாது. இரண்டு முறை படிக்க வேண்டி இருக்கிறது. அத்தனை லோக்கல், அத்தனை தீவிரம்!

(படம் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.)

Share