Archive for திரை

ப்ரமயுகம் – மலையாளம்

ப்ரமயுகம் (M) – பிரமை என்றால் கற்பனை என்றும் பைத்தியக்காரத்தனம் என்றும் பொருள் கொள்ளலாம் போல. படமும் அப்படித்தான் இருக்கிறது. சாதி குறியீட்டுடன் பார்த்தால் அதிகாரத்தை அடையும் வெறி என்று கொள்ளலாம். ஆனால் குறியீடுகளுடன் ஒரு படத்தைப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது. நேரடியான சாதிப் படங்களே என் தேர்வு.

இந்தப் படத்தை மம்மூட்டிக்காக நிச்சயம் பார்க்கலாம். மிரட்டல் என்னும் வார்த்தை எல்லாம் குறைவு. கண்களிலேயே நடிக்கிறார். வெறித்தனமான சிரிப்பு ஒன்று போதும். அதிலும் அந்தத் தொடக்கக் காட்சி, மறக்கவே முடியாது. விதேயன் திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். தனது 72ம் வயதில், அன்றைய விதேயன் போல அத்தனை சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் கதை ஒழுங்காக அமைந்திருந்தால் நிச்சயம் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்கும். இப்போதும் விருது கிடைக்க நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. அதே போல் பின்னணி இசை. அருமை. ஒளிப்பதிவும் அட்டகாசம். ஆனால் கதை?

கறுப்பு வெள்ளை திரைப்படம். படம் முழுக்க நான்கே பேர். அதிலும் பெரும்பாலும் மூன்று பேர்தான். படம் முழுக்க பார்க்க வைத்ததே பெரிய விஷயம். என்ன பிரச்சினை என்றால், இதைத்தாண்டி ஒன்றுமே இல்லை.

மிக பலவீனமான கதை. மம்மூட்டிக்காக எவ்வளவு நேரம் ஒரே விஷயத்தை இரண்டு மணி நேரம் பார்ப்பது? ஒரு பரபரப்பும் இல்லை, ஒரு பயமும் இல்லை. sick திரைப்பட வகை என்பதைச் சிறப்பாகக் கொண்டு வந்தவர்கள், கதையிலும் திரைக்கதையிலும் கோட்டை விட்டுவிட்டார்கள். மெல்ல நகரும் மலையாளப் பாணி இன்னொரு எரிச்சல். அதிலும் மம்மூட்டி கதாபாத்திரத்தின் மறைவுக்குப் பிறகு, உலகத்துக்கே தெரிந்த முடிவை இன்ச் இன்சாகக் காட்டி இன்னும் சாகடித்துவிட்டார்கள்.

தம்பட் (ஹிந்தி), குமாரி (மலையாளம்) திரைப்படங்கள் பிடிக்கும் என்பவர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்கும். குமாரி திரைப்படமும் இத்திரைப்படமும் கிட்டத்தட்ட ஒரே வகை.

மற்றபடி ஆஹோ ஓஹோ என்று புகழ ஒன்றுமே இல்லை. தூக்கம் கெட்டுத் தலைவலி வந்ததே மிச்சம். ஃபேஸ்புக்கில் புகழ்ந்தவர்களின் பேச்சைக் கேட்டு தியேட்டர் வரை போயிருக்க வேண்டாம். ப்ச்.

Share

அயலான்

அயலான் – பல குறைகள் இருந்தாலும் தமிழில் வந்திருக்கும் ஒரு பொருட்படுத்தத் தக்க படமே. நல்ல கிராஃபிக்ஸ். குழந்தைகளுக்கான படம் என்ற தெளிவு. இந்த இரண்டும் படத்தை சுவாரஸ்யமானதாக்குகின்றன.

,ஹீரோ பெயர் தமிழ் & வில்லனுக்குப் பெயர் ஆரியன், ஆதார் கார்டைக் கிண்டலடிக்கும் ஐடெண்டிடி கார்ட் போன்ற குறியீடுகளைச் சமன் செய்யும் சில வசனங்களும் உண்டு, ‘இந்த ஊர்ல ஒரு திட்டத்தை செயல்பட விடமாட்டாங்களே… போராட்டம்னு ஆரம்பிச்சிருவாங்களே.’

மின்னல் முரளி, எந்திரன் போன்ற திரைப்படங்களின் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. விவசாயம், கிராமம் என்றெல்லாம் எரிச்சலைக் கிளப்பி கொட்டாவி வரும் நேரத்தில் அயலான் வருகிறான். பின்னரே படம் சுதாரித்துக் கொள்கிறது. முதல் அரை மணி நேரக் கிராமத்துக் காட்சிகளை எல்லாம் வெட்டி எறிந்துவிட்டு, ,நேரடியாக அயலான் காட்சியில் ஆரம்பித்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

கிளைமாக்ஸ் காட்சி மிக அருமை. அயலானின் கிராஃபிக்ஸ் நிஜ பிராணி என்று நம்ப வைக்கும் வகையில் இருப்பதும் அருமை. யோகி பாபு பெரிய ப்ளஸ். பின்னணி இசை கொடூரம். படத்தின் மிகப் பெரிய மைனஸ் இது. இன்னொரு மைனஸ் சித்தார்த்தின் குரல். அதேசமயம் விஜய் சேதுபதியைப் போடாததற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். ஆங்கிலப் படங்களில் இருக்கும் லாஜிக் தீவிரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்தது, திரைக்கதை ரீதியாக மைனஸ். ஆனால் தமிழில் அறிவியல் புனைகதைப் படங்களே இல்லை என்ற நிலையில், இந்த அளவுக்கு ஒரு படம் வந்திருப்பதே சிறப்புதான்.

சிவகார்த்திகேயன் குழந்தைகளின் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இஷா கோபிகர் பெயரைப் பார்த்ததும் பழைய நினைவுகள். எவ்வளவு பெரிய திறமைசாலி. கூகிள் தேடிப் பார்த்தேன். பிஜேபியில் இருக்கிறாராம்.

இயக்குநர் ஆர்.ரவிக்குமாரின் ‘இன்று நேற்று நாளை’ நல்ல சுவாரஸ்யமான அறிவியல் புனைகதைத் திரைப்படம். அயலான் இன்னும் சிறப்பு. தேவையற்ற அரசியல் வசனத் தெறிப்புகளில் சிக்கிச் சிதறிப் போகாமல் பெரிய இயக்குநராக இவர் வர வாழ்த்துகள்.

Share

கருடா / ஸ்வாதி முத்தின மலெ ஹனியே

கருடா (ம)

நல்ல படம். நல்ல திரைக்கதை. ஆனால் மிகவும் முக்கியமான விறுவிறுப்பான காட்சிகளைக்கூட மெல்ல எடுப்பது ஏனென்று புரியவில்லை. யார் ஹீரோ என்பதில் திரைக்கதை ஏற்படுத்தி இருக்கும் சுவாரஸ்யம் முக்கியமானது. இதுதான் கதையின் வெற்றி. தமிழில் கொஞ்சம் மசாலா சேர்த்து விறுவிறுப்பாக்கி, இரண்டு இளைய நல்ல நடிகர்களை வைத்து எடுத்தால் படம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. சுரேஷ் கோபிக்குப் பதிலாக துல்கர் சல்மானும், பிஜூ மேனோனுக்குப் பதிலாக ஃபக்த் ஃபாஸிலும் நடித்து, கதைக்களத்தைக் கொஞ்சம் தட்டி இருந்தால் இந்தப் படம் இன்னும் பேசப்பட்டிருக்கும். நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.

*

ஸ்வாதி முத்தின மலெ ஹனியே (க)

இயக்குநராக ராஜ் பி ஷெட்டியின் திரைப்படங்கள் கொஞ்சம் வழவழ கொழகொழதான். ஒந்து மொட்டய கதா பார்த்து நொந்து போயிருந்தேன். ஆனால் கருட கமனா ரிஷப வாஹனா மிக நன்றாக இருந்தது. ராஜ் பி ஷெட்டியா இயக்கியது என்று ஆச்சரியமாக இருந்தது. அதிலும் சில தேவையற்ற காட்சிகள் உண்டு என்றாலும், கன்னடத்தில் அது முக்கியமான படமே. ஸ்.மு.ம.ஹ என்னைப் போட்டுச் சவட்டிவிட்டது. மலையாளத் திரைப்படம் போல மிக மெல்ல நகரும் பாணி. பாலுமகேந்திரா பாணி போல ஒவ்வொரு ஃப்ரேமையும் மெல்ல நின்று நிதானித்துக் காண்பிக்கும் கேமரா. போதாக் குறைக்கு இசை. துர்ப்பிணி அதிலும் கர்ப்பிணி என்பது போல கதை. அதுவும் பத்தாதுன்னு திரைக்கதை. முடியலடா சாமி. இதில் ராஜ் பி ஷெட்டி ஒரு கவிஞன் வேறு. எனவே எதைப் பேசினாலும் தீர்க்கமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு சாவடிக்கிறான். செத்தும் இதைச் செய், அதைச் செய் என்று ஹீரோயினை சாவடிக்க, ஹீரோயின் நம்மை சாவடிக்க, படம் முழுக்க ஒரே வியாதி மயம். ஏண்டா பாத்தோம்னு நொந்து போனேன். மெல்ல நகரும் கலைப்படங்களைக் கண் கொத்தாமல் பார்த்து, அதில் வரும் ஷொட்டான வசனங்களைப் பாராட்டி, அதில் வரும் குறியீடுகளைக் கொண்டு இயக்குநர்களைப் பாராட்டும் ஸ்பீஸிஸ்களுக்கான திரைப்படம்.

Share

காந்தாரா

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்க்காத திரைப்படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் பேரதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாகத் தமிழில் மிக அதிகம். ஆம், நிறைய முக்கியமான திரைப்படங்களைப் பார்க்கவில்லை. என்னவோ ஒரு சலிப்பு, வேலைப்பளுவும் சின்ன காரணம்.

நேற்றுதான் காந்தாரா பார்த்தேன். 🙂

ஹே ராம் திரைப்படத்துக்கு அடுத்து நான் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்த படம் இதுவே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு, பிரம்மாண்டம், எமோஷன் என அசத்திவிட்டார்கள். கதை என்று பார்த்தால், பெரிய புதுமை எல்லாம் இல்லை. ஆனால் அதை கிராம தெய்வ வழிபாட்டுடன் இணைத்ததுதான் பெரிய விஷயம்.

படம் ஓடுமா ஓடாதா, யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் நம்பும் கதைக்கு 100% உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் திரைப்படத்தின் ஆதார விதி. இயக்குநர், நடிகர் என அனைவரும் இந்தப் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். இந்தப் படத்தில் அது நிகழ்ந்திருக்கிறது.

பஞ்சுர்ளி தெய்வ கடாக்‌ஷம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பன்றியை வேட்டையாடுகிறான் என்ற இருமைப் புள்ளி மிக அருமை. இதிலேயே எல்லாம் சரியாக அமைந்துவிட்டது.

ரிஷப் ஷெட்டிக்குள் குலிகா தெய்வம் வரவும், வெறி கொண்டது போல் அவர் நடித்த நடிப்பு அசரடித்துவிட்டது. படம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு பூத கோலா (தெய்வ ஆட்டம்) ஆட்டத்தைப் பொறுமையாகக் காண்பிக்கிறார்கள். அதில் அனைவரின் கைகளையும் இணைத்து ஒன்றாக்கி, ஓ ஓ என்ற சத்தத்தை மட்டும் தரும் காட்சி – புல்லரிக்க வைக்கிறது.

கடலோரக் கிராமக் கன்னட வட்டார வழக்கு வெறி கொள்ள வைத்துவிட்டது. பல வசனங்களை நிறுத்தி நிதானமாகக் கேட்டேன்.

ரிஷப் ஷெட்டி, ராஜ் ஷெட்டி, ரக்‌ஷித் செட்டி மூன்று பேரும் கன்னடத் திரையுலகத்தை எங்கோ கொண்டு போகப் போகிறார்கள். இதில் ரக்‌ஷித்தும் ரிஷப்பும் கடலோரக் கிராமக் கதைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் போல. சப்த சாஹரக்காச்சே எல்லோ – சைட் ஏ படத்தில் கடலையைக் கதாநாயகி கேட்கும் காட்சியும், உலிதவரு கண்டந்தெ (மறக்க முடியாத திரைப்படம்) படத்தில் வரும் கடலலைகளின் சத்தமும் இன்னும் கண்ணில் நிற்கிறது.

Share

துபாய் பாபா

பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய் திரும்ப வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குக் காரில் போனோம். ரிபீட் மோடில் பாபா பாடல்கள். மாயா மாயா பாடலும், பாபா ஒரு கிச்சு தா பாடலும் ராஜ்யமா பாடலும் எனக்கு மிகவும் பிடித்துப் போயின.

துபாயில் ஆகஸ்ட் 22 வாக்கில்தான் பாபா வெளியானது. திருவோணத்துக்கு. முதல் நாள் முதல் ஷோ பார்க்க வாய்ப்பில்லை. வேலைக்குப் போயாக வேண்டும். மாலைக் காட்சிக்குப் போக வேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பினால்தான் டிக்கட் கிடைக்கும். எப்போதும் என்னுடன் படம் பார்க்க வரும் மலையாளி நண்பன் சந்தோஷ் திருவோணம் என்பதால் படத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டான். எப்படியாவது சரியான நேரத்துக்குப் போகவேண்டும், டிக்கட் கிடைக்கவேண்டும் என்கிற என் பரிதவிப்பைப் பார்த்த டாக்டர் கருண் (தமிழர்) என்னை சரியான நேரத்தில் அவரது காரிலேயே தியேட்டரில் டிராப் செய்வதாக வாக்களித்தார். செய்யவும் செய்தார்.

டிக்கட் கிடைத்தது. படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தால் பாதிக்கு மேல் மலையாளிகள். திருவோணம் என்பதால் கொண்டாட்டத்திற்கு வேறு படங்கள் இல்லை என்பதால் இப்படத்துக்கு வந்ததாகப் புலம்பினார்கள் சிலர். படத்தில் சினிமா சினிமா பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது. பல மலையாளிகள் எரிச்சலுடன் அமர்ந்திருந்தார்கள். நான் இந்தியாவில் வாழ முடியாத ஏக்கத்தை இந்தப் படத்தில் வந்த கை தட்டல்கள் கொஞ்சம் குறைத்தன. எங்கேயோ ரத்னா அல்லது பார்வதி தியேட்டரில் பார்க்கும் ஒரு உணர்வு. இப்போது நினைத்தாலும் இந்த நினைவு ஒரு சுக அனுபவம்தான்.

இடைவேளை வரை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடைவேளைக்குப் பிறகு அலை பாய்ந்தது. படம் முடிந்து போகும்போது பல இஸ்லாமியர்கள் மிகவும் ஆச்சரியமாக, இத்தனை மாய தந்திரம் உள்ள ஒரு படத்தை எப்படி வளைகுடாவில் அனுமதித்தார்கள் என்று பேசியபடி போனார்கள்.

படம் ஓடவில்லை. இந்தியாவிலும் ஃப்ளாப் என்றே நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம். பாபாவில் ரஜினியின் கெட்டப் பலருக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்திருந்தது. பாடல்கள் பலருக்குப் பிடிக்கவில்லை, எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை முன்னேறியது போலத் தோன்றியது இந்தப் படத்தில்தான். காதலி எல்லாம் தேவையில்லை என்று ரஜினி நடித்தது அந்த நேரத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இடைவேளைக்குப் பிறகு வந்த தந்த்ரா காட்சிகளில் இயக்குநர் செய்த பெரிய தவறு, ரஜினி படம்னா என்ன வேணா பாப்பாங்க என்கிற திமிர்தான். ஓம்புரியை ஹிந்தியில் பேச விட்டு அதற்குத் தமிழில் வசனம் பேசி டப்பிங் தெலுங்கு படம் போல ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் ஒரு நாஸ்டாஜியாவாக துபாய் பாபா எப்போதும் எனக்கு மணக்கத்தான் செய்கிறது. கூடவே, பேசி வைத்த பெண்ணுடன் ஊர் சுற்றிய நினைவுகளும்.

பின்குறிப்பு: இதில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது. பாபா திரைப்படம் வருவதற்கு முன்பே இதில் வரும் அசாத்திய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஒரு கதையை நான் என் கைப்பட அப்போதைய டைரி ஒன்றில் எழுதி இருந்தேன். இதைப் பற்றி நான் மரத்தடி யாஹூ குழுமத்தில் சொன்ன போது, செகண்ட் ஷோ பாத்துட்டு தூக்க கலக்கத்துல அதையே நீ எழுதி வெச்சிருப்ப என்று கேஸை முடித்து வைத்துவிட்டார்கள்!

Share

மாமன்னன் – சாதா மன்னன்

மாமன்னன் – தீவிரமான வெளிப்படையான குறியீடுகளுடன் ஒரு படம். பட்டியலின ஆதரவுத் தரப்பு என்பதை திராவிட அரசியல் நிலைப்பாட்டுடன் வெளிப்படுத்தும் தீவிரமான கலைத்தன்மையுடன் கூடிய திரைப்படங்களைப் போல இன்னும் அதன் எதிர்த்தரப்பிலிருந்து அதே பட்டியலின ஆதரவுடன் வராமல் இருப்பது நம் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட தலித் ஆதரவைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தை எவ்விதச் சார்பும் இன்றி ஆராய்ந்து பார்த்தால்,

• முதல் நாற்பது நிமிடங்கள் படம் எதையுமே சொல்லவில்லை. தாமிரபரணியில் ஆளும்கட்சி / போலிஸால் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இத்திரைப்படம் சாதிய மோதலாக உருவகிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான சம்பவம் படத்தின் மையச் சரடோடு பயணிக்காததால் வெறும் ஒரு காட்சியாகத் தனித்து நின்றுவிடுகிறது. எப்படியாவது பதற்றத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிடவேண்டும் என்ற இயக்குநரின் ஆசையைத் தாண்டி எதுவுமில்லை.

• அதற்கடுத்த ஒரு மணி நேரம், பரபரப்பின் உச்சம். அதுவும் மாமன்னன் நாற்காலியில் உட்காரும் காட்சி மிக அருமை.

• அதன் பின் படத்தில் பொருட்படுத்தத்தக்க கோர்வையான காட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவரை மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்ட வசனங்கள் நீர்த்துப் போகத் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், ஒரே விதமான வசனம். இவையெல்லாம் வெறும் தனித்தனிக் காட்சிகளாகத் திரையில் தோன்றி மறைகின்றன. அவை எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. சாவுக்கு வரும் காட்சி, திடீரென இளைஞர்கள் திரண்டு வந்து நிற்கும் காட்சி, ரத்னவேலு காலில் விழும் காட்சி, காரில் மாமன்னன் துப்பாக்கியால் மிரட்டும் காட்சி, கீர்த்தி சுரேஷிடம் அதிவீரன் கோபமாகப் பேசும் காட்சி என எதுவுமே ஒட்டவில்லை. எல்லாம் திடீர் திடீர்க் காட்சிகள். அதிலும் ஒரே ஒரு வீடியோவில் மாமன்னன் வெல்வதெல்லாம் கொடுமை. அதிலும் அந்த வீடியோவில் மாமன்னன் பேசுவதெல்லாம் எவ்வித ஆழமும் இன்றி மேம்போக்காக இருக்கிறது.

• உச்சகட்டக் காட்சியில் மாமன்னன் சபாநாயகராகப் பதவி ஏற்பது அருமை. அதற்கு முந்தைய சண்டை எல்லாம் பொறுமையைச் சோதிக்கிறது.

• கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாமன்னன் அதிமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. முன்னாள் சபாநாயகர் தனபாலை மனதில் வைத்து மட்டும் சொல்லவில்லை. ரத்னவேலு கட்சி மாறியதும் அக்கட்சித் தலைவரின் படம் தினகரனில் முதல் பக்கத்தில் வருகிறது. தினகரனில் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தால் நிச்சயம் அது அதிமுகவாக இருக்கமுடியாது. எனவே மாமன்னன் அதிமுகதான் என்பது நிரூபணமாகிறது. (நானே யோசிச்சேன்!)

• இத்தனை முக்கியமான படத்துக்கு இத்தனை சப்பையான பாடல்களைப் போட்டிருக்கவேண்டாம். இன்னும் கதைக்களத்துடன் பயணப்பட ஏ.ஆர்.ரகுமானால் முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் சமாளிக்கிறார்.

• ரத்னவேலுவின் மனைவியாக வரும் நடிகையும் சரி, கீர்த்தி சுரேஷும் சரி – வீண்.

• பன்றி நாய் குறியீடெல்லாம் சுத்த அறுவை.

• வடிவேலுவின் நடிப்பு பிரமாதம். அதேபோல் ஃபகத்தின் நடிப்பும். இருவருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் உதயநிதி ஏதோ சமாளிக்கிறார்.

பரியேறும் பெருமாள் > கர்ணன் > மாமன்னன்.

Share

திரைப்படங்கள்

ன்னா தான் கேஸு கொடு (M)

படம் மிகவும் சீரியஸான படமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். ஆரம்பக் காட்சிகளிலேயே ஒருவிதமான ப்ளாக் காமெடி போன்று முயன்றிருந்தார்கள். நமக்கு இது ஒத்துவராதே என்று தோன்றியது. சரி, முழு படத்தையும் பார்ப்போம் என்று பார்த்தேன்.

சில நம்ப முடியாத காட்சிகளைக் கடந்துவிட்டால், சில எரிச்சலான காமெடிகளைக் கடந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் இத்திரைப்படம் அற்புதமான அனுபவம்.  

குஞ்சாக்கோ போபனுக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமையும். உடல்மொழியும் மேக்கப்பும் நடிப்பும் அற்புதம். ஆனால், நீதிபதியாக வரும் குன்ஹி கிருஷ்ணன் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்து பின்னர் திருந்திய ஒரு சாமானியன், அசுர பலம் பொருந்திய அரசை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடுகிறான். நீதிமன்றக் காட்சிகள்தான் படம் முழுக்க. ஆனால் படம் தொய்வில்லாமல் போகிறது. காரணம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. அரசு வக்கீல்களும், குற்றம் சுமத்தப்பட்டவனின் வக்கீலும், நாம் பார்ப்பது நிஜ நீதிமன்றக் காட்சிகளையோ என்னும் எண்ணத்தை வரவழைக்கிறார்கள்.

ஒரு நீதிபதி ஏன் ஒரு குற்றவாளிக்கு இத்தனை இடம் தரவேண்டும், எப்படி நினைத்தபோதெல்லாம் ஒரு திருடனால் அமைச்சர் முதல் முதல்வர் வரை சந்திக்க முடிகிறது என்பதையெல்லாம் மறந்துவிட்டால், இத்திரைப்படம் நம்மை அள்ளிக்கொள்ளும்.

சாலையில் இருக்கும் ஒரு பள்ளத்துக்கு எப்படி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் என்பதைத் தாண்டி,  வழக்கு தொடுக்க முடிந்து அதில் அமைச்சருக்குத் தண்டனையும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் இப்படத்தை அணுகவேண்டும்.

நடிகர்களின் நடிப்பாலும் வித்தியாசமான மேக்கிங்காலும் நம்பவேமுடியாத திரைப்படத்தைக் கூட பேரனுபவமாக மாற்ற முடியும் என்பதை இந்த மலையாளத் திரைப்படம் ஆயிரமாவது முறையாக நிரூபிக்கிறது.

மாளிகப்புரம் (M)

உன்னி முகுந்தனின் அழகான முகத்துக்காகப் பார்க்கலாம். மோடி, மோகன் பகவத்துக்கெல்லாம் நன்றி போட்டு ஆரம்பிக்கும் தைரியம் கேரளா வரை வந்துவிட்டது.

முன்பு இதே போல் நந்தனம் என்றொரு மலையாளப் படம் கேரள பக்தர்களைக் கட்டிப் போட்டது. எனக்கும் அந்தப் படம் ஓரளவு பிடித்திருந்தது. குருவாயூரப்பன் மனிதனாக வரும் படம். தமிழில் தனுஷ் நடித்து வெளிவந்து மோசமான தோல்வியைத் தழுவியது. சீடன் என நினைக்கிறேன்.

மாளிகப்புரம் மிகவும் எளிமையான கதையாகிவிட்டது பலவீனம். முதல் அரை மணி நேரம் படுத்தல். அந்தச் சின்ன பெண்ணும் பையனும் வாவ்.

சின்ன பெண்ணை முறைத்துப் பார்க்கும் வில்லன் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை. வில்லன் தமிழன். இதற்கு முன்பு நான் பார்த்த கூமன் படத்திலும் வில்லன் தமிழன். நாம் பிறருக்குச் செய்வதையே பிறர் நமக்குச் செய்வார்கள்.

கூமன் (M)

ஜித்து ஜோசப்பின் மலையாளத் திரைப்படம். அட்டகாசமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, இடைவேளை வரை புருவத்தை உயர்த்த வைக்கிறது. அதற்குப்பின் எங்கெல்லாமோ அலைபாய்கிறது. ஏன்டா இந்தக் கொடுமையைப் பார்த்தோம் என்ற எரிச்சலில் அப்படியே நிறுத்தி விடலாமா என்னும் அளவுக்கு கோபத்தை வரவழைக்கிறது‌. வேஸ்ட் ஆப் டைம். திருடன் மணியனாக வரும் ஜாஃபர் இடுக்கியின் நடிப்பு பிரமாதம்.

21 Hours (K)

எனக்கு ஏனோ தனஞ்செய் பிடிக்கும். ஆனால் இந்தக் கன்னடப் படம் எல்லா வகையிலும் திராபை. இப்போதும் தனஞ்செய்யைப் பிடித்தே இருக்கிறது. ஆனால் இப்படி இன்னும் நான்கு படங்கள் பார்த்தால் பிடிக்காமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.

Share

லவ் டுடே – அசட்டுக் காதல்

லவ் டுடே – தமிழகமெங்கும் ‘பரபரப்புடன்’ பேசப்பட்ட படம். ஏழு மாதம் கழித்து ஒரு படம் பார்க்கிறேன். சும்மா வெச்சி செஞ்சி அனுப்பினார்கள். இப்படத்தில் பிராமணர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பற்றிப் பின்னர் பார்க்கலாம். இது இல்லாமல், ஒரு திரைப்படமாக இது எந்த லட்சணத்தில் வந்திருக்கிறது என்று முதலில் பார்த்துவிடலாம்.

நவீன விக்கிரமனாக பிரதீப் ரங்கநாதன் உருவாகி இருக்கிறார். அசட்டு காமெடி, கிறுக்குத்தனமான திரைக்கதை, கொஞ்சம் கூட ஆழமே அற்ற மேம்போக்கான காட்சிகள், வாய்க்கு வந்ததைப் பேசும் வசனங்கள், மோசமான மேக்கிங் – இப்படித்தான் கிட்டத்தட்ட படம் முழுக்க. யுவன் சங்கர் ராஜா ஏன் எஸ்.ஏ.ராஜ்குமார் போல இம்சை அளித்திருக்கிறார் என்றே புரியவில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார் லாலலலா என்பதை குரலில் போட்டே கொல்வார் என்றால், யுவன் படம் முழுக்க எதோ ஒரு இசையை ஓடவிட்டே கொன்றிருக்கிறார். அதிலும் நகைச்சுவைக் காட்சிகளில் இசை தாங்கமுடியாத இம்சையாக இருக்கிறது. விக்கிரமனின் பாணியைப் போலவே, பாஸிட்டிவான ஒரு செய்தியைச் சொல்லி, புல்லரிக்க வைத்து அனுப்புகிறார்கள். திரையரங்கில் பலர் அழவும் செய்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே தாங்கமுடியாமல் நெளிந்துகொண்டிருந்தவன் என நினைக்கிறேன்.

விக்கிரமன் படத்தில் நிஜமான ஒரு நேர்மறை அம்சம் இருக்கும். அது யாரையும் மனம் நோக வைக்காமல் இருப்பது. இந்த பிரதீப் அப்படியுமில்லை. பிராமணர்கள் மேல் ஏன் அப்படி ஒரு இளக்காரம், கோபம்!

இப்படத்தில் வரும் கதாநாயகி ஏன் பிராமணப் பெண்ணாக இருக்கவேண்டும்? கதைக்கும் ஜாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பிராமண அப்பாவாக வரும் சத்யாராஜுக்கு நடிக்கவே வரவில்லை. சத்யராஜும் இன்னும் சில கதாபாத்திரங்களும் பிராமணப் பேச்சு வழக்காக நினைத்துக்கொண்டு பேசும் வசனங்களைக் காதால் கேட்கமுடியவில்லை. மலபார் போலிஸில் சத்யராஜ் மலையாளம் கலந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிய பாலக்காட்டுத் தமிழின் கொடூரம் இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போது திடீர் திடீர் என்று இத்திரைப்படத்தில் பேசும் பிராமணப் பேச்சு வழக்கும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது.

வக்கிரமான ஒருவனைக் காண்பிக்கும்போது அவன் நெற்றியில் வம்படியாக விபூதி இருப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் பிராமணப் பெண்ணோ சாதாரண பொட்டு கூட பல காட்சிகளில் வைப்பதில்லை.

ஒரு பையன் ஹோம குண்டத்தில் சிறுநீர் கழிக்கிறான். காமெடி என்று நினைத்து இக்காட்சியை இயக்கிய இயக்குநரை என்ன சொல்ல!

அந்தச் சிறுநீரை லெமன் சர்பத்தில் பிடிக்கும் ஹீரோ, யாரோ ஒருவரிடம் தரும்போது, அதைக் குடிப்பவரைப் பார்த்து ‘குடிங்கோ’ என்று சொல்கிறார். ஹீரோ பிராமணரல்ல. தான் காதலிக்கும் பெண்ணிடம் கூட அவர் பிராமண வழக்கில் பேசுவதில்லை. ஹீரோ வீட்டுக்கு எத்தனையோ அபிராமணர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சிறுநீர் கலந்த எலுமிச்சை சர்பத்தைக் குடிப்பவர் ஒரு பிராமணர். அசட்டு நகைச்சுவையாக, 1960களிலேயே சலித்துப் போன, ‘என்ன உப்பா இருக்கு’ என்ற வசனமும் உண்டு.

பல காட்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியலின் தரத்தில்தான் இருக்கின்றன. குறிப்பாக, யோகி பாபுவின் டிராக். அதை நல்ல டிராக் என்று நம்பி எப்படித்தான் எடுத்தார்களோ!

பிராமணரான சத்யராஜ் கண்டிப்பானவர் என்பதைக் காண்பிக்கும் காட்சிகளும் இதே ரகத்திலானவையே. தண்ணீர் கேன் போடுபவருக்குத் தருவதற்காக ஒரு ரூபாய்க்கு அவர் தேடுகிறாராம். அதனால் கண்டிப்பானவராம். கோபமானவராம். இத்தனை கண்டிப்பான கோபமான அப்பா என்னவோ செய்யப் போகிறார் என்றால், அவர் செய்யும் வேலை கிறுக்குத்தனமானதாக இருக்கிறது.

இத்தனை அவலட்சணங்களையும் தாண்டி எது இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது? இரண்டு விஷயங்கள். கதாநாயகன் மற்றும் நாயகியின் நடிப்பு. அசரடிக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பு மட்டும் இல்லையென்றால், இந்தக் கிறுக்குத்தனத்தைத் தாங்கிக்கொண்டிருக்கவே முடியாது. இரண்டு மொபைலை மாற்றுவதன் மூலம் ஒன்றும் ஆகிவிடாது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த ரௌடிக்கேத்த பொண்ணு அந்த ரௌடிதான் என்ற முடிவுக்கு வேண்டுமானால் வரலாம்.

இதில் ஒரு பையன் மாங்கொட்டையை ஊன்றி வைத்துவிட்டு தினமும் எடுத்துப் பார்க்கிறான். 20 வருடம் கழித்து அது வளர்ந்து மரமாக நிற்கிறதாம். இது பாஸிடிவ் வைபாம். இதை நம்பி, அந்தப் பையன் மாங்கொட்டைக்கு தண்ணீர் ஊற்றுவதை ஏதோ அவார்ட் படம் போலக் காட்டிச் சாவடிக்கிறார்கள். செத்தோம் பிழைத்தோம் என்று தப்பித்து வீடு வந்தேன்.

Share