Archive for திரை

OTT வழியாக வரும் திரைப்படங்கள்

கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின்போதே எழுத நினைத்தேன். படத்தின் விமர்சனம் தடம் மாறிப் போய்விடுமோ என்று எழுதாமல் விட்டேன். இந்தத் திரைப்படம் பார்க்க ஒரு காட்சிக்கு 199 ரூ. சென்னையில் தியேட்டருக்குப் போய் ஒரு படம் பார்த்துவிட்டு வர எல்லாச் செலவுகளும் சேர்த்து குறைந்தது 500 ரூபாய் வரை ஆகும். நேரமும் கணிசமாகவே ஆகும். வீட்டில் அமர்ந்து பார்த்தால் 199 ரூபாய் மட்டுமே. ஆனால் திரையரங்கு தரும் பிரமாண்டம் நிச்சயம் தவறிப் போகும். பெரிய தொலைக்காட்சி, 5.1 என்று இந்த அனுபவத்தைக் கொஞ்சம் நெருங்கலாம் என்றாலும், திரையரங்கு தரும் அனுபவம் அலாதிதான். அதேசமயம், பணமும் நேரமும் எத்தனை மிச்சம் என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படம் வந்தபோது கமல் இதைச் செய்ய நினைத்தார். அன்று நடந்த தவறு என்ன? சுருக்கமாகச் சொன்னால், பேராசை. ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய்! இது கமலின் முடிவா, டிஷ் நிறுவனத்தின் முடிவா என்பதெல்லாம் தெரியாது. ஒரு குடும்பத்துக்கே ஆயிரம் ரூபாய்தான் என்று யோசித்து அவர்களே சமாதானம் ஆகி இருப்பார்கள் போல. பொருட்படுத்தத் தக்க அளவுக்குக் கூட முன்பதிவு இல்லை. அத்திட்டம் கைவிடப்பட்டு, திரைப்படம் வழக்கம்போல் திரையரங்கிலேயே வெளியானது. இன்று க/பெ 199 ரூபாய்க்கு வந்திருக்கிறது.

அமேஸான் ப்ரைம் ஒரு மாதத்துக்கு 160 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு பல திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. எப்படியும் புதுத் திரைப்படம் ஒன்றாவது பார்த்துவிட முடிகிறது. வேற்று மொழிப் படங்களையும் பார்க்க முடிகிறது. அதை ஒப்பிட்டால் இந்த 199 ரூபாயே அதிகம் என்கிற தோற்றம் உருவாகி வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

டிஷ் வழியாகப் பார்க்கப்படும் படங்களில் பிரச்சினைகள் என்ன? டாடா ஸ்கையின் ஆன் டிமாண்ட் மூலம் படம் பார்த்தால், அப்படத்தை அந்தத் தினம் முழுக்கப் பார்க்கலாம். ஆனால் க/பெ அப்படிப் பார்க்க முடியவில்லை. ஒரு காட்சி மட்டுமே. அதாவது திரையரங்கில் பார்ப்பதைப் போலவே. அன்று திடீரென மழை பெய்து படம் தெரியாமல் போனால்? மின்சாரம் தடைபட்டால்? வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால்? பணம் போனது போனதுதான். திரையரங்கில் இப்பிரச்சினைகள் எல்லாம் இல்லை. வீட்டில் இந்த அத்தனை பிரச்சினைகளும் உண்டு. எனவே ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்பதை மாற்றவேண்டும்.

அதேபோல் எதாவது ஒரு சானலில் என்பதைக் கைவிட வேண்டும். ஏன் எக்ஸ்க்ளூசிவிட்டிக்குப் (தனியுரிமை) போகிறார்கள் என்றே தெரியவில்லை. அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு சானலின் வழியாகவும் படம் பார்க்க முடியும் என்கிற வசதி வரவேண்டும். ஒரு படம் பார்க்க கட்டணம் இவ்வளவு என்று மட்டுமே நிர்ணயிக்கவேண்டும். அதாவது இந்த ஓடிடி சானல்கள் திரையரங்குகளின் இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது 10% தள்ளுபடி கொடுத்து கூடுதல் பார்வையாளர்களைப் பெற முடிந்தால் அது அவர்கள் இஷ்டம். இப்படிச் செய்தால், டிஷ், அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு தளத்தின் வழியாகவும் பார்க்க முடியும் என்பதால், நிச்சயம் பார்வையாளர்கள் கூடுவார்கள்.

ப்ரைமில் கூட, இப்படி தனியுரிமை இல்லாமல் வெளியாகும் படங்களுக்குப் பணம் வசூலிக்கலாம். ப்ரைமில் இல்லாதவர்கள் ஒரு படத்துக்கு மட்டும் பணம் செலுத்திப் பார்க்க முடியும் என்ற வசதியைக் கொண்டு வரலாம். நெட்ஃப்ளிக்ஸிலும். ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு 50% தள்ளுபடி தரலாம். இப்படியெல்லாம் செய்தால் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு கூட்ட முடியும்.

எந்த ஒரு சானலில் படம் ஒளிபரப்பானாலும் மறுநாளே திருட்டுத்தனமாகப் படத்தைத் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்றாகிவிட்டது. அப்படி இருக்கும்போது, படத்துக்குக் குறைவான கட்டணத்தை வைத்துக் கூடுதல் பார்வையாளர்களைக் கொண்டு வர முயலவேண்டும். விஸ்வரூபம் பார்க்க 1000 ரூபாய் என்ற தப்பை, எதோ ஒரு சாதாரணப் படத்துக்கு 200 ரூபாய் என்று வைத்து, இன்னொரு வகையில் தவறு செய்யக் கூடாது. தேவை என்றால் முதல் நாள் மட்டும் 200 ரூபாய், மறுநாள் 100 ரூபாய் என்று கூட யோசிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்வையாளர்களைக் கூட்டுவது எப்படி என்று யோசிப்பது நல்லது. அதற்கு இந்தத் தனியுரிமை என்னும் எக்ஸ்க்ளூசிவிட்டி ஒழியவேண்டும். அதற்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒரே அணியில் வரவேண்டும். இதெல்லாம் நடக்குமா எனத் தெரியாது. நடக்காமல் இருக்கவே வாய்ப்பதிகம். அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வணிக நிறுவனங்களும் இப்படி நடப்பதை விரும்பாது, அனுமதிக்காது. ஆனால், எந்தத் திரையரங்கில் எந்தப் படம் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எப்படி இல்லையோ அது போல இந்த ஓடிடி உலகம் மாறாதவரை, திரைப்படங்கள் தங்களுக்கான நியாயமான சந்தையை முழுமையாகப் பெறப் போவதில்லை.

Share

கணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு

Spoilers ahead. கதையைத் தெரிந்துகொள்ளவேண்டாம் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். நீண்ட பதிவு.

நல்ல ஒரு கதையை வைத்துக்கொண்டு, அதில் தேவையே இல்லாமல் அரசியல் கலப்பதால் எத்தனையோ படங்கள் தங்கள் இலக்கைத் தொடாமலேயே தேங்கிப் போய்விடுகின்றன. அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவை இப்படித்தான். மீண்டும் மீண்டும் ஒரே அரசியல்தான் இதிலும் சொல்லப்படுகிறது. இந்தியா வாழ லாயக்கற்ற தேசம், இந்தியாவில் தனிமனிதனால் வாழவே முடியாது என்ற செய்திகள்தான். இந்திய அரசு (இந்தப் படத்தில் மாநில அரசையும் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்) எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் இருந்தாலும் செத்தாலும் அரசுக்குக் கவலை இல்லை. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது. கவலைக்குரிய ஒரு பெண்ணின் வலியோடு. இந்த அரசியலில் கவனிக்கப்படவேண்டிய இந்தப் பெண்ணின் வலியும் அது சார்ந்த பிரச்சினைகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ரணசிங்கம் வீரன், தீரன், முற்போக்காளன், எக்ஸட்ரா எக்ஸட்ரா. ராமநாதபுரத்தில் தன் கிராமத்தில் குடிநீருக்காகப் போராடுகிறான். கிராமத்தின் ஒற்றுமைக்காகப் போராடுகிறான். அவனை அத்தனை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள். அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள்ளாகவே அவனது மரணச் செய்தி வந்து சேர்கிறது. ரணசிங்கத்தின் வீர தீர காதல் எல்லாம் அவ்வப்போது நினைவலையாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எதாவது ஒரு நினைவு வந்து அங்கேயும் விஜய் சேதுபதி வந்துவிடுவாரோ என்ற அச்சம் வரும் அளவுக்கு அதீதமாக ரணசிங்கத்தின் காட்சிகள் வருகின்றன. பத்தாம் நிமிடத்திலேயே அவன் செத்துப் போய்விடுவதால், கதை எதைப் பற்றியது என்ற ஆர்வம் நமக்கு வருகிறது. ஆனால் படமோ ரணசிங்கத்தை விவரிப்பதிலேயே சுற்றுகிறது.

பின்னர் ஒரு வழியாகக் கதை என்பது ரணசிங்கத்தின் உடலை துபாயில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதுதான் என்பது தெரிகிறது. ஏன் துபாய் அரசும், அங்கே ரணசிங்கம் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனமும் அவன் உடலைத் தரவில்லை? அதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை. நம்புவோம். ஏனென்றால் கதை அந்தக் காரணம் பற்றியது அல்ல. அப்படிச் செத்துப் போகும் இந்தியர்களின் உடல் இந்தியாவுக்கு வருவதைப் பற்றியது. இதிலுள்ள சிக்கலில் இந்தியாவின் அரசு நிர்வாகம் எத்தனை மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இப்படம் பற்றிய நோக்கம்.

ரணசிங்கத்தின் திருமணம் இரவோடு இரவாக நடக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் படத்தைப் பார்த்து நொந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கு ஆதாரமே இல்லை. அதாவது ஊரில் எல்லாருக்கும் தெரியும். ஆதாரம் மட்டும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரண சிங்கம் செத்துப் போனதோ துபாயில். அவன் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மனுச் செய்ய அவரது மனைவிக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்தான் மனைவி என்பதற்கு ஆதாரம் இல்லை. அதை அரசு கேட்கிறது. இதில் என்ன தவறு? இத்தனைக்கும் அரசு அதிகாரியாக வரும் பிராமணர், தங்கை மூலம் உடலைக் கோரலாம் என்று நியாயமான, நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் சொல்கிறார். வசனம் எழுதியவர் அவரை அறியாமலேயே இந்த உண்மையை எழுதி இருக்கவேண்டும். இங்கே மட்டும் அல்ல, அரசின் குரலாகப் பல இடங்களில் உண்மையை எழுதி இருக்கிறார். இதற்காக இவரையும் இயக்குநரையும் பாராட்டவேண்டும். ஆனால் ரணசிங்கத்தின் மனைவி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், தான் தான் ரணசிங்கத்தின் மனைவி என்று நிரூபிக்கும் போராட்த்துக்குள் போகிறாள். ரணசிங்கம் எத்தகையவன் என்று சொல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட படம், இங்கே ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியே என்று நிரூபிக்கப் போராடும் பெண்ணின் படமாக மாறுகிறது.

ரணசிங்கத்துக்கு ஆதரவாகவே நல்லவராக வரும் கலெக்டர் (ரங்கராஜ் பாண்டே) தன்னளவுக்கு இயன்றவரை உதவி செய்கிறார். முதலில் ரணசிங்கத்துக்கும், பின்னர் அவனது மனைவிக்கும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் ரணசிங்கம் இறந்துவிட்டதால், அந்த விபத்தை மறைக்க நினைக்கும் நிறுவனம், ஏதேதோ பொய் சொல்கிறது. செட்டில்மெண்ட்டுக்கெல்லாம் வருகிறது. ஆனால் உடலைத் தர மறுக்கிறது. ஏனென்றால் உடலே அவர்களிடம் இல்லை. இது இறுதிக்காட்சியில்தான் நமக்குத் தெரிகிறது.

இதற்கிடையில் துபாயில் ஸ்ரீதேவி இறந்து போக, அதற்கு பிரதமர் இரங்கல் செய்தி போட்டு ட்வீட் போடுகிறார். அவரது உடல் மூன்றே நாளில் இந்தியா வருகிறது. இந்த ஒப்பீடு ஒரு நல்ல கற்பனைதான். ஆனால் யதார்த்தமும் இதுதான். ஒரு நடிகையின் மறைவுக்குப் பிரதமர் ட்வீட் போடுகிறார், ஆனால் ஒருத்தன் துபாயில் செத்துப் போய் பத்து மாதங்கள் ஆகின்றன, அவன் உடல் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படித்தான். பாஜகவிலும் இப்படித்தான். ஊரிலும் வீட்டிலும் இப்படித்தான். ஆனால் இயக்குநர் இதைத் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ரணசிங்கத்தின் மனைவி சென்னைக்கு வந்து, மத்திய அமைச்சர் வரும் காரில் போய் விழுந்து நீதி கேட்கிறாள். மத்திய அமைச்சர் ஒரு பெண். பாதுகாப்பு அமைச்சர். ஆனால் நிர்மலா சீதாராமன் அல்ல! அவர் பரிவுடன் விசாரித்து, ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியுடன் ஒரு செல்ஃபியும் போட்டு, சக அமைச்சருக்கு டேக்-க்கும் செய்கிறார். விஷயம் இந்தியா முழுக்கவும் பரவுகிறது. ஆனால் பிரயோஜனமில்லை.

அரியநாச்சி தமிழ்நாட்டு முதல்வரைப் பார்க்க முயல்கிறாள். ஆனால் போலிஸ் தரப்பு அவளை முதல்வர் அருகில் கூட வரவிடுவதில்லை. இப்படியே வெளியுறவுத் துறை அதிகாரிகளும் செய்கிறார்கள். வேறு வழியே இன்று டெல்லி போகிறாள். அணையைத் திறந்துவிட வரும் பிரதமர் வரும் இடத்துக்குப் போய், அணையில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறாள். கையில் குழந்தையுடன். அதை லைவாகவும் ஒளிபரப்பாகிறது. பிரதமர் மோதி வருகிறார். அதாவது மோதியைப் போல ஒருவர் வருகிறார். அவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரிகிறது. பரிவுடன் பரிசிலீக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் இந்தியா வரவேண்டும், அதுவரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். இந்தியாவே பரபரக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ரணசிங்கத்தின் உடல் இந்தியா வருகிறது. அரியநாச்சியே அணையைத் திறந்துவிடட்டும் என்று பரிவுடன் பிரதமர் சொல்ல, அரியநாச்சியே திறந்து வைத்துவிட்டுப் போகிறாள். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்று சொல்கிறார் பிரதமர்.

ரணசிங்கத்தின் உடல் வீட்டுக்கு வருகிறது. எரிக்கும்போது அரியநாச்சி கண்டுகொள்கிறாள், அது ரணசிங்கத்தின் உடல் இல்லை என. ஆனாலும் அது ரணசிங்கத்தின் உடல்தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். இரவில் தனிமையில் ‘வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க’ என்று சொல்கிறாள். தேவடியா பசங்க என்பது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உருப்படியான படமாகவே எடுத்திருக்கலாம். தமிழில் அதிகம் விவாதிக்கப்படாத கதை இது. ஒரே கதையிலேயே கிராமத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் காட்ட நினைத்தது முதல் தவறு. விஜய் சேதுபதிக்காக கதையை அவரைச் சுற்றிப் பின்னிவிட்டது இரண்டாவது தவறு. அவனது உடலைக் கொண்டு வருவதற்கு ஏதேனும் காரணங்களைச் சொல்லவேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் அவன் மீது இருக்கும் வழக்குக்களை எல்லாம் சேர்த்து என்னவெல்லாமோ வசனங்களைச் சொல்லவிட்டது அடுத்த குழப்பம். பன்னாட்டு நிறுவனமும் துபாய் அரசும் சேர்ந்துகொண்டு செய்யும் பிரச்சினைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் என்ன செய்யமுடியும் என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலே சொல்லாமல் விட்டது பெரிய சறுக்கல். இதில் ஸ்ரீதேவியின் உடல் மட்டும் மூன்றே நாளில் வருகிறது என்பதை இத்துடன் எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

பன்னாட்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விபத்தை மூடி மறைத்தால், அதுவும் அது வேறொரு நாட்டில் நடந்தால், அதை இங்கிருந்தபடியே ஒரு கிராமத்துப் பெண் எதிர்கொள்வது உள்ளபடியே கஷ்டம்தான். இதன் பொருள் இந்திய அரசு அவளைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல. வேண்டுமென்றே இந்தியாவைத் திட்டவேண்டும் என்று நினைத்தால்தான் இப்படி யோசிக்கமுடியும். ரேஷன் அரிசியில் பெயர் சேர்க்க வரும் ஒரு அதிகாரியிடம் நாங்க இந்தியாவுலயே இல்லைன்னு எழுதிக்கோ என்று அரியநாச்சி சீறுகிறாள். ஆனால் வந்த அதிகாரி கேட்கும் கேள்வி நியாயமானது. அந்த நியாயத்தை மறைக்க அவர்கள் கேட்ட விதத்தை வேண்டுமென்றே மோசமாக்கி எடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படித்தான் அந்த பிராமண அதிகாரி விஷயத்திலும் நடக்கிறது.

பிராமண அதிகாரியின் விஷயத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டி இருக்கிறது. படத்தில் வரும் எந்த ஒருவரின் சாதியும் மதமும் தெரிவதில்லை. இரண்டு பேரைத் தவிர. ஒருவர் பிராமணர். இவர் கலெக்டரின் உதவியாள். அதிகாரி. அரசுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யும் ஆள். கலெக்டரையும் மீறி, அரியநாச்சியுடம், வந்த பிணம் ரணசிங்கம்தான் என்று கையெழுத்து வாங்க அலைகிறார். அரியநாச்சியைப் பற்றி அலட்சியமாகப் பேசுகிறார். அவரை இப்படிக் காண்பிக்கிறார்கள். இன்னொருவர் முஸ்லீம். அவர்தான் ரணசிங்கத்தை, பணம் வாங்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்புகிறார். துபாய் பன்னாட்டு கம்பெனி இவர் மூலமாகத்தான் பண பேரம் பேசுகிறது. ஆனால் இவர் பேசும் வசனத்தில் ஒன்றில்கூட வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். தன் கையறு நிலையைப் பேசுகிறார் இந்த ஏஜெண்ட். மிகத் தெளிவாக இரண்டு கதாபாத்திரங்களையும் அமைத்திருக்கிறார்கள். முஸ்லீம் ஒருவரை நல்லவராகக் காண்பிப்பது, சூழ்நிலைக் கைதியாகக் காண்பிப்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக இன்னொரு கதாபாத்திரம் வரும்போது எப்படி யோசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஸ்ரீதேவி இறந்தபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருக்கு ஒரு ட்வீட் செய்தாலே போதும் எப்படி உதவுவார் என்று உலகமே வியந்தது. அவர் இறந்தபோது காங்கிரஸ் அமைச்சர்களே அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இயக்குநருக்கு அது மட்டும் நினைவில்லை போல.

பிரதமரே வந்திருந்து ஒரு பெண்ணுக்கு உதவுகிறார். ஆனாலும் அந்தப் பெண் அரியநாச்சி தேவடியா பசங்க என்று யாரைத் திட்டுகிறாள்? அவளுக்கே அதில் தெளிவில்லை. இயக்குநருக்கும் தெளிவில்லை. யார் மீது கோபத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. புகைப்படமும் இல்லை. பத்திரிகையும் இல்லை. அப்படியானால் அதிகாரிகளால் எப்படி உதவமுடியும்? அதற்கான வழிகளையும் ஒரு அதிகாரி சொல்கிறார். எல்லா இடங்களிலும், அரசு அலுவலர்களின் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும், வேலை நடக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் இறந்து போன ஒருவரின் உடலைக் கொண்டு வருவது என்பது நிச்சயம் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். அதற்கு இந்தியாவின் மீது கோபப்பட்டு, வெறுப்புடன் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அரியநாச்சியாக அட்டகாசமாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அற்புதமான நடிப்பு, இந்த அரசியலில் பின்னுக்குப் போய்விடுகிறது.

எப்படியாவது இந்திய, ஹிந்து, பாஜக வெறுப்பைக் காண்பித்தால்தான் ஆதரவு கிடைக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் படத்தை அதன் ஆதாரக் கருத்தை மட்டுமே சுற்றி எடுத்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சிகளில் வரும் கிராமம் மற்றும் குடும்பம் சார்ந்த காட்சிகள் மிக இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தன. அதைவிட்டுவிட்டுப் படம் எப்போது புரட்சி வசனங்களை நோக்கிப் போகிறதோ அங்கேயே தன் பிடியை இழக்கத் துவங்குகிறது. அதிலும் உன் பேர் என்னப்பா என்ற கேள்விக்குக் கூட, ஊர் நியாயம் உலக நியாயம் சாதி மத இன வேறுபாடு என்று பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி பேசத் துவங்கும்போது கொட்டாவிதான் வருகிறது. அவர் செத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொல்கிறாரே என்று தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தையெல்லாம் விட்டுவிட்டு, அரசுடன் போராடும் ஒரு பெண்ணின் கதையை மட்டும் சொல்லி இருந்தால், அரசின் மெத்தனமும் அலட்சியப் போகும் பின்னணியில் அதுவாகவே வெளிப்படுவதாகக் காட்டி இருந்தால், இந்தப் படம் வேறு தளத்துக்குப் போயிருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்.

பின்குறிப்பு: சென்னைக்கு வந்து இறங்கிய உடனேயே தெரிந்த ஒருவர் உதவுவது, ஒரு கதாபாத்திரம் தலையை ஆட்டிக்கொண்டே வருவது (சோ-வின் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது) என்பதையெல்லாம் சினிமா உலகம் தாண்டி எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. இயக்குநர் கொஞ்சம் மனம் வைக்கவேண்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

Section 375

Section 375 (Hindi) 18+ பதிவு. Spoilers ahead.

மீ டூ விவகாரம் வந்தபோதே மிகப் பரவலாக அலசப்பட்ட ஒரு விஷயம், பரஸ்பர ஒப்புதலுடன் நடக்கும் உறவு பின்னர் எப்படி பாலியல் அத்துமீறலாகக் கருதப்படலாம் என்பது. சில வழக்குகளில் ‘ஐந்து வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார்’ என்றெல்லாம் வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டாலும், ஒரு தடவை சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் கூட அது பாலியல் பலாத்காரமே என்பதுதான் இதிலுள்ள செய்தி.

நோ மீன்ஸ் நோ என்று சொன்ன பின்க் திரைப்படம் போல, இந்தத் திரைப்படமும் பாலியல் அத்துமீறலைப் பற்றிச் சொல்கிறது. ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே ஒரு பெண் பொய்யாக வழக்கைப் புனைகிறாள். டிஃபன்ஸ் தரப்பு எத்தனையோ ஆதாரங்களை வலுவாகக் காட்டியும், குற்றம் நடக்கவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க முடியாமல் போகிறது. எத்தனை முறை பரஸ்பர ஒப்புதலுடன் உறவு கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றதுக்கு வந்து பாலியல் பலாத்காரம் என்று சொன்னால், அதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள சட்டம் அறிவுறுத்துகிறது. அதன் அடிப்படையில் தீர்ப்பு வருகிறது.

சட்டம் சார்ந்த படங்களைச் செய்வதில் ஹிந்தி திரை உலகம் நிபுணத்துவம் பெற்றுவிட்டது என்று நினைக்கிறேன். மிக முக்கியமான படம் தல்வார் என்று சொல்லலாம். இன்னொரு முக்கியமான படம் ஆர்ட்டிகிள் 15. ஜாலி எல் எல் பி கொஞ்சம் கமர்ஷியலாக இருந்தாலும், மிக சுவாரஸ்யமான படம். பின்க்கும் அப்படியே. இந்தப் படமும். பின்க் மற்றும் செக்‌ஷன் 375ல் நமக்குப் புலம்ப பல விஷயங்கள் இருந்தாலும், பாலியல் ரீதியான பிரச்சினையில் சட்டத்தின் பார்வையை இந்தியா முழுக்க கொண்டு சென்றதில், இந்தப் படங்கள் மிக முக்கியமான பங்கை வகித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. A must watch movie.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை எங்கேயும் படம் அலைபாயவில்லை. நூல் பிடித்தாற்போல் செல்கிறது. ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. படத்தை மக்களுக்குக் கொண்டு செல்கிறேன் என்று, நேர் கொண்ட பார்வை செய்த அநியாய அக்கிரமங்களைச் செய்யவில்லை. தான் வக்கீல் மட்டுமே என்று உணர்ந்து நடிக்கும் நடிகர்கள். மிக முக்கியமான படம் இது.

Share

ஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்

சென்ற ஞாயிற்றுக் கிழமை இரவு. சென்னை மழையில் குளிர்ந்துகொண்டிருந்த வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளைக்கு வேலையே வைக்காத படம் எதாவது பார்ப்போம் என்று அமேஸான் ப்ரைமில் தேடினேன். கிட்டத்தட்ட 40 நாள்களாக எந்தப் படமும் பார்த்திருக்கவில்லை. தேடுதலில் கண்ணில் பட்டது, ஆயுஷ்மான்பவ என்ற கன்னடப் படம். ஷிவராஜ்குமார் நடித்தது. இயக்கம் பி.வாசு என்று கண்ணில் படவும், இதுதான் நான் தேடிய படம் என்று பார்க்கத் துவங்கினேன்.

வாசுவுக்கு இசையின் மீது என்னவோ அடங்காத வெறுப்பு இருக்கிறது. அதை இசையின் மீதான காதல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இசை எல்லாவற்றையும் சரி செய்கிறது. குடும்பத்துக்குள் இருக்கும் சண்டையை, பைத்தியத்தைக் கூட குணம் செய்கிறது. ஏன் ஷிவ்ராஜ்குமார் இதையெல்லாம் செய்கிறார் என்றால், அவர் டாக்டர், மனோதத்துவ நிபுணர், பாட வரும், ஆட வரும், சண்டை போட வரும், சமைக்க வரும், அன்பு பொழிய வரும். சந்திரமுகி ரஜினிக்கும் அண்ணன்! பைத்தியக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய், காடெல்லாம் சுற்றி, கிராஃபிக்ஸ் புலி துரத்த, குத்துப் பாட்டு ஆட, போலிஸ் தேட, இசையாலே அந்தப் பெண்ணைக் குணப்படுத்துகிறார். உதவுவது எப்போதும் நெற்றியைச் சுருக்கியபடியே பேசும் சுஹாசினி அக்கா! பத்தாததற்கு ஷிவராஜ் குமாரின் அப்பா நம்ம ஊர் பிரபு. அவரால் உட்காரவோ எழுந்திருக்கவோ முடியவில்லை. பாவமாக இருந்தது. சின்னதம்பி நினைவுக்கு வந்தது! கடைசியில் ஷிவ்ராஜ் குமார் அந்தப் பெண்ணையே கைப் பிடிக்கிறார். ஆனந்த் நாக்தான் தாத்தா.

இடைவேளை வரை கொஞ்சம் அறுவையாக இருந்த படம், இடைவேளைக்குப் பிறகு தாங்கவே முடியாத அறுவையாகிவிட்டது. இரண்டே இரண்டு விஷயங்கள் கொஞ்சம் பரவாயில்லை, ஒன்று பாடல்கள். இன்னொன்று, காமெடி. காமெடி என்றால் சாது கோகிலாவின் இரட்டை அர்த்த காமெடி அல்ல. அது சந்திரமுகியின் வடிவேலு-ரஜினி காமெடியின் நகல். இங்கே நன்றாக இருந்தது, ரங்காயன ரகுவின் காமெடி. கலக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். ஷிவராஜ்குமார் மிக நன்றாகவே நடித்தார். படம் நொந்து நூலாகி முடிந்தபோது ஞாயிறு முடிந்துவிட்டிருந்தது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்து நம்மை நாமே திட்டிக் கொள்ள ஏற்ற படம். தேவைப்படுபவர்கள் பார்க்கவும்.

Share

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில்! ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வாங்கிக் கேட்டுவிடுவேன். எத்தனை முறை என்ற கணகெல்லாம் இல்லை. அப்பாடல்கள் மனப்பாடம் ஆகும் வரை.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பத்து வருடங்களில், வண்டிச் சோலை சின்ராசு தவிர, அவரது அனைத்துப் படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். வண்டிச் சோலை சின்ராசு கூட எனக்கு சூப்பர் ஹிட்தான் – பரோட்டா பாட்டு உட்பட.

கடந்த பதினைந்து வருடங்களாக அந்த ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ரஹ்மானின் மனமுதிர்ச்சி உட்பட. அந்தப் பரபரப்பு, அந்த ஹிட், தியேட்டரில் அந்த ஆட்டம் இவை எதுவுமே இல்லை. இது ஒரு குறையா என்றால் இல்லை. ஆனால், இளையராஜா வெறுப்பாளர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால், இதையெல்லாம் மீண்டும் மீண்டும் வம்புக்காகவாவது சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

இளையராஜாவின் கடந்த இருபது வருடங்களில் வந்த பாடல்களில் உள்ள நுணுக்கங்களைக் கேட்டு ரசித்தால், ராஜாவின் பாடல் ஹிட்டாகவில்லை என்பார்கள். இன்று ரஹ்மானுக்கு அதே நிலை என்றால், ரஹ்மானின் பாடலில் உள்ள நுணுக்கத்தோடு ஓடி வருகிறார்கள். இதைத்தான் முன்னோடும் வாய்க்கால் பின்னோடும் என்றார்கள்.

அதிலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு சில ஆல்பங்கள் தவிர, சில பாடல்களைக் கேட்கக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்ட்ரீயோடைப். ராஜாவின் ஸ்ட்ரீயோடைப்பை அலசும் விற்பன்னர்களுக்கு ரஹ்மானின் ஒரே போன்ற பாடல்களைக் கேட்கும்போது காது அடைத்துப் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.

இப்போதும் ரஹ்மானின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டால், அவரது ஹிட்டாகாத பாடல்கள் உட்பட, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்துவிடும். ராஜா ரசிகர்களும் கடந்த இருபது வருடங்களில் இதைத்தான் செய்தும் சொல்லியும் வந்தார்கள். அப்போது கிண்டலாகப் பேசினார்கள். இப்போது வரிசையில் நிற்கிறார்கள், பெரிய பலாப்பழத்துடன்.

Share

சில மலையாளத் திரைப்படங்கள்

Spoilers ahead.

ஈட (ம) – மலையாளப் படங்கள் பொதுவாக மெல்ல நகரும் படங்கள் என்றால், இப்படம் மெல்ல மெல்ல மெல்ல நகரும் படம். ஹிந்துத்துவவாதிகளைச் சேர்ந்த ஒரு பையனும் (ஆனால் தீவிரமான ஹிந்துத்துவவாதி அல்ல), தீவிர கம்யூனிஸ்ட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலிக்கிறார்கள். தீவிர கம்யூனிஸ்ட், தீவிர ஹிந்துத்துவவாதி என்று சொன்னால் கூடப் போதாது. இருவரும் கண்ணூர்க்காரர்கள்! தொடர்ந்து மாறி மாறி அரசியல் கொலைகள் செய்யும் ‘பழக்கம்’ உள்ளவர்கள். யார் உயிர் யாரால் எப்போது போகும் என்று தெரியாது. அப்படியான இடத்தில் ஒரு காதல். இரண்டு தரப்பையும் நியாயமாக காண்பிக்க இயக்குநர் முயன்றாலும், கம்யூனிஸப் பாரம்பரியத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. உதாரணமாக, அன்பும் காதலும் உள்ள ஒரு ஹிந்துத்துவவாதி, ஹிந்துத்துவக் கொள்கைக்காக ஜெயிலுக்குப் போக ஒத்துக்கொள்ளும் ஒரு ஹிந்துத்துவவாதி, ஹீரோவுக்குப் பிடித்தமான நண்பனான ஹிந்துத்துவவாதி கம்யூனிஸ்ட்டுகளால் கொல்லப்படும் செய்தி மட்டுமே வருகிறது. அவரது பிணம் மட்டுமே காட்டப்படுகிறது. பதிலுக்குப் பழிவாங்க ஹிந்துத்துவவாதிகள் கையெறி குண்டுகள் செய்கிறார்கள். ஹீரோயினின் அண்ணனான, அன்பே உருவான கம்யூனிஸ்ட்டு கொல்லப்படுவதை வெறும் செய்தியாகச் சொல்லவில்லை. ஹிந்துத்துவவாதிகள் ஓட ஓட விரட்டிக் கொல்வதைக் காண்பிக்கிறார்கள். அதிலும் அந்த அண்ணனை நம் ஹீரோ எச்சரிக்கிறான். இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த கம்யூனிஸ்ட் தைரியமாக அரசியல் கொலையை எப்போதும் எதிர்நோக்கியே இருக்கிறான். ஓட ஓட விரட்டிக் கொல்லப்படுகிறான். அத்தனை வெட்டியும் எங்கே அவன் பிழைத்துவிடுவானோ என்று ஹிந்துத்துவவாதிகள் அவன் உடலெங்கும் மண்ணையும் தூவிவிட்டுப் போகிறார்கள். கம்யூனிஸ்ட்டுகளை அன்பே உருவாகக் காண்பிக்கிறார்கள். ஹிந்துத்துவவாதிகளுக்கு இடதுகை ட்ரீட்மெண்ட்தான். ஹிந்துத்துவவாதி தரப்பில் இருந்து ஹீரோ நியாயம் பேசுகிறான். இதெல்லாம் எதற்கு என்கிறான். ஆனால் கம்யூனிஸ்ட்டு தரப்பில் இருந்து யாரும் வாயையே திறப்பதில்லை. கம்யூனிஸ்ட் அரசியலுக்குள்ளே இருக்கும் பாதகமான விஷயங்களையும் சின்ன சின்ன காட்சிகளில் சொல்கிறார்கள். கம்யூனிஸ்ட் ஒருத்தன் ஹிந்துத்துவர்களின் நண்பனான ஹீரோவுக்கு அடைக்கலமெல்லாம் தருகிறான். கடைசியில் ஹீரோவை கம்யூனிஸ்ட்டுகள் ஓட ஓட விரட்டிக் கொல்லப் பார்க்கிறார்கள். நியாயமாகக் காட்டி இருக்கிறார்களே என்று நினைத்துவிடாதீர்கள். அது எல்லாத் திரைப்படங்களிலும் வரும் க்ளைமாக்ஸ் காட்சியில் விரட்டைப் போலவும் சண்டையைப் போலவும்தான் உள்ளது. ஹிந்துத்துவவாதிகள் அரசியல்படுகொலை செய்வதைப் போல இல்லை. இந்த அளவுக்காகவது எடுத்திருக்கிறார்களே என்று தோன்றுவதும் சரிதான். அதே நேரத்தில், எதை எப்படி எடுக்கிறோம், எதை எப்படி விடுக்கிறோம் என்பதில் உள்ள நிலைப்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருபத்தைந்து வயதுப் பையனும் இருபது வயசுப் பெண்ணும் ஏன் எப்போதும் அவார்ட் பட ஹீரோ ஹீரோயின் போலக் காதலிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு சிரிப்பில்லை, ஒரு கட்டிப்பிடித்தல் இல்லை, ஒரு மலர்ச்சி இல்லை. ஆனால் ஹீரோ ஷேன் நிகம் (ஷெய்ன் நிகம்!) நடிப்பு அட்டகாசம். மலையாளம் திறமையுள்ள நடிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த பத்து வருடங்களில் கிடைக்கப் போகும் எல்லா விருதுகளும் மலையாள நடிகர்களுக்கே போகப் போகின்றன. மொழி மாஃபியா என்று அப்போது கதறிப் பயனில்லை.

நால்பத்தியொண்ணு (ம) – ஒரு கம்யூனிஸ்ட் இன்னொரு கம்யூனிஸ்ட்டை சபரிமலைக்குக் கூட்டிப் போகிறான். கூட்டிக்கொண்டு போகும் கம்யூனிஸ்ட் தீவிர கம்யூனிஸ்ட். கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம், பண்பாடு என எதிலும் நம்பிக்கை இல்லாதவன். லெனினும் மார்க்ஸும் சொன்னது மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவன். பாரம்பரியத் திணிப்புக்காகத் தன் திருமணத்தையே துறந்தவன். இன்னொரு கம்யூனிஸ்ட்டோ கடவுள் நம்பிக்கை உள்ளவன். ஒரு ஹிந்து ஆதரவாளரைக் கொன்றவன். கட்சி வேறொருவனை ஜெயிலுக்கு அனுப்ப, பார்வையற்ற தன் மகளுக்காக வெளியே இருப்பவன். பெரிய குடிகாரன். இவன் குடியைத் திருத்த சபரிமலைக்குப் போகும் ஒரு முடிவை கட்சி எடுக்கிறது. சிந்தாவிஷ்டயாய சியாயமளே படத்தின் அதே யோசனையை அரசியல் ரீதியாக அணுகி இருக்கிறார்கள். குடிகார கம்யூனிஸ்ட் தான் சபரிமலைக்குப் போகவேண்டும் என்றால், தீவிர கம்யூனிஸ்ட்டும் உடன் வரவேண்டும் என்கிறான். நம்பமுடியாத இந்த ஒரு திருப்பம் நிச்சயம் ஒரு சிரிப்பை வரவழைக்கிறது. இருவரும் போகிறார்கள். பின்பு என்ன ஆகிறது என்பதுதான் படம். கம்யூனிஸ்ட்டுகள் ஒருத்தனைத் திருத்த ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமாக யோசிக்கிறார்கள் என்பது நியாயமான கேள்வி. பதில் ஒன்றுதான், அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் அல்லவா! ஆனால் சமீபத்தில் நடந்த சபரிமலைப் பிரச்சினையில் கம்யூனிஸ்ட்டுகள் கூடப் பாரம்பரியத்தின் பக்கம் நின்றது நினைவுக்கு வரலாம். அதை ஒட்டித்தான் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இயக்குநருக்குப் பெரும் குழப்பம். யாரைத் திட்டுவது, யாரைக் கைவிடுவது என்பதில். எதோ ஒரு குன்ஸாக பேலன்ஸ் செய்து படம் எடுத்திருக்கிறார். தீவிர கம்யூனிஸ்ட் கடைசி வரை தன் பிடிப்புகளில் இருந்து விலகுவதில்லை. கடவுள் என்பதற்கான வரையறை என்ன என்பதற்கு அவனுக்கு யார் யார் மூலமெல்லாமோ விடை கிடைக்கிறது. ஆனாலும் அவன் கம்யூனிஸ்ட்டாகவே இருக்கிறான். குடிகார கம்யூனிஸ்ட் மனம் திருந்துகிறான். ஆனால் உடல்நலமில்லாமல் சபரிமலையிலேயே செத்துப் போகிறான். கடைசியில் வரும் இயக்குநரின் குரல் சொல்கிறது, ஒரு பகுத்தறிவுவாதியாக இல்லாவிட்டால் இப்படி ஒரு முடிவை எடுத்து, இறந்து போன கம்யூனிஸ்ட்டுக்கு இத்தனை பணத்தையும், அதனால் பார்வையற்ற மகளுக்குப் பார்வையும் கிடைக்கச் செய்திருக்க முடியுமா என்று. அதாவது தீவிர கம்யூனிஸ்ட் பொய் சொல்லி குடிகார கம்யூனிஸ்ட்டின் குடும்பத்துக்கு அவன் மரணத்துக்குப் பிறகு அரசாங்கத்தின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருகிறான். இந்த சமயோசிதப் பொய்க்கு ஏன் ஒருத்தன் கம்யூனிஸ்ட்டாகவோ பகுத்தறிவு வாதியாகவோ இருக்கவேண்டும்? சாதாரணமாக யாருக்குமே அந்த நேரத்தில் தோன்றுவதுதானே? உண்மையில் நியாயம் பார்க்கும் கம்யூனிஸ்ட் இதைச் செய்யக் கூடாது. பொதுவான தர்மம் என்பதைத் தன் நோக்கில் பார்க்கும் ஆன்மிகவாதி வேண்டுமானால் செய்யலாம்! ஆனால் இயக்குநர் தலைகீழ் நியாயம் கற்பிக்கிறார். அதோடு மனம் திருந்திய ஒரு கம்யூனிஸ்ட் சபரிமலைக்குப் போனதால் செத்துப் போகிறான் என்று புரிந்துகொள்ளவும் இடம் தருகிறார். யாரை அனுசரித்து நடந்துகொள்ளவேண்டும் என்பதில், குழப்பத்தைத் தாண்டிய புத்திசாலித்தனமும் தெரிகிறதுதான்.

சுமாரான படம்தான். செக்யூலரிஸ மத ஜல்லிக் காட்சிகளும் உண்டு. தீவிர ஐயப்ப பக்தர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால் கடுப்பாகிவிடுவார்கள். ஆனாலும், சபரிமலையைக் காண்பிக்கும் காட்சிகளுக்காகப் பார்க்கலாம். குழப்பமாகத்தான் இயக்குநர் யோசிக்கிறார் என்றாலும், இப்படியாவது யோசிக்கிறார்கள் மலையாளத்தில். தமிழைப் போல அல்ல.

*

அஞ்சாம் பாதிரா (ம) – அட்டகாசம். தமிழில் ராட்சசன் மட்டும் வரவில்லை‌ என்றால் இப்படத்தைக் குற்ற உணர்ச்சியுடன்‌ பார்க்க வேண்டி இருந்திருக்கும். இப்படம்‌ பல இடங்களில், கதையில் ராட்சசனையும் நிபுணனையும் கொஞ்சம் சைக்கோவையும் நினைவூட்டுகிறது. இது‌போன்ற படங்களுக்கு ஃப்ளாஷ்பேக் எத்தனை முக்கியம் என்பதை ராட்சசனும் இப்படமும் நினைவூட்டுகின்றன. கிறித்துவ தேவாலயங்களில் நடக்கும் பாலியல் பிரச்சினைகளை அப்படியே ஹிந்து சாமியார்களாகக் காட்டி எடுப்பதுதான் தமிழ்த் திரை உலகத்தின் வழக்கம். இப்படம் மலையாளப் படம் என்பதால் அந்தக் கிறுக்குத்தனத்தை எல்லாம் செய்யவில்லை. தமிழ்ப் படங்களில் ஹிந்து மதம் சித்திரிக்கப்படுவதை அணுகுவதைப் போல ஏன் மலையாளப் படங்களை அணுகத் தேவையில்லை என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படியான படங்களும் மலையாளத்தில் வருகின்றன. இதைப் படித்துவிட்டு இப்படம் மத ரீதியான படம் என்று நினைத்து விடவேண்டாம். சைக்கோ த்ரில்லர் படம். பொறுமையாகப் பார்க்கவும்.

*

பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே (ம) – சுமாரான படம். ஒரு புருஷனுக்குப் பல பொண்டாட்டிகள். ஒரு பொண்டாட்டிக்குப் பல காதலர்கள். 18+ கதை, ஆனால் 13+ படம். மிகப்பெரிய குண்டைக்கூட, இந்தா‌ வாழைப்பழம் என்று தருகிறார்கள். மெல்லிய நகைச்சுவை படம் முழுக்கவே இருக்கிறது. ஹீரோயின் நடிப்பு பிரமாதம். அங்காமாலி டைரீஸ், வைரஸ் மூலம் மலையாளப் படங்களுக்குள் வந்தவர்களுக்கு இப்படம் ஒத்துவராது. பொறுமையுடன் பார்க்கவேண்டிய வசனத் திரைப்படம். ஹிந்துத்துவவாதிகள் அந்த ஃபாதர் கதாபாத்திரத்துக்காகப் பார்க்கலாம். தமிழில் இப்படி எடுத்தால் ஜெமினி மேம்பாலத்தை ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள் – கிறித்துவர்கள் அல்ல, அரசியல்வாதிகள்! பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எறியுங்கள் என்று சொல்லி ஒரே வெள்ளையாக அடித்துவிட்டார்கள். பாவம் செய்திருந்தாலும் பரவாயில்லை, கல்லெறிங்கடா என்று தோன்ற வைத்துவிட்டது இறுதிக்காட்சிகள்!

*

சூஃபியும் சுஜாதயும் (ம) – ஹிந்துத்துவவாதிகள் நெஞ்சு வெடித்துவிடக்கூடாது என்பதற்காகவே முதல்‌காட்சியில் சூஃபி செத்துப் போய்விடுகிறான். அடுத்த காட்சியில் ஹிந்துவுக்கு சுஜாதா வாழ்க்கைப்பட்டுவிடுவதையும் காண்பித்துவிடுகிறார்கள். ஆனாலும் நெஞ்சு வெடித்துத்தான் போகிறது. பாங்கொலி கேட்கும்போதெல்லாம் ஆடுகிறாள். தொழத் தயாராகிறாள் சுஜாதா. சூஃபியோ பாங்கு சொல்கிறான், சுஜாதாவைக் கட்டிப்பிடிக்கிறானே ஒழிய ஹிந்துக் கடவுளைக் கும்பிடுவதில்லை. ஏனென்றால் சுஜாதா ஒரு ஹிந்து. அவள்தானே தொழவேண்டும்! சுஜாதாவாக வரும் அதிதி ராவின் கண்கள் கலங்கடிக்கின்றன. ஜெயசூர்யா கேரக்டரின் பெயரை இளிச்சவாயன் என்று வைத்திருக்கலாம். படத்தின் பெயரையே கூட சூஃபியும் இளிச்சவாயனும் என்றே கூட வைத்திருக்கலாம். பாதிக்குப் பின் வரும் ஜெயசூர்யாவின் காட்சிகள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பாங்கொலி‌ போக மீதம் இருக்கும் நேரத்தில் படத்தில் வசனங்களும் வருகின்றன. இன்னுமொரு ‘நடுநிலை’ திரைப்படம்.

*

Forensic (M). Very cruel one. A serial killer murders children for a pathetic motive. Worst one. Serial killing of children, my God, horrible. 🙁 Never try to watch it. Its worse as a movie too. A movie I want to forget. Director sucks. Hope some sense prevails at least in his next project.

*

Kappela (Malayalam) – பதற வைக்கும் இன்னொரு படம். இரண்டு பதற்றம். ஒன்று, திரைப்படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை தொடரும், திரைக்கதை தரும் பதற்றம். இன்னொன்று, வழக்கமான ஒன்றுதான். ஒரு அப்பாவி அழகான கிறித்துவப் பெண்ணை அப்பாவி போல் நடித்து ஏமாற்றி விற்கப் பார்க்கும் ஒரு ஹிந்துவிடம் இருந்து ஒரு ரௌடி காப்பாற்றும் கதை. இயக்குநர் பெயரை கூகிள் செய்து பார்த்துக் கொள்ளவும். அவர் பெண்ணைக் காப்பாற்ற உதவுபவராகவும் நடிக்கிறார். ஸ்ரீநாத் பாசிக்காகவும் திரைக்கதை மற்றும் அதைக் கையாண்ட விதத்துக்காகவும் பார்க்க வேண்டிய படம். எனக்கு ஒரு குறை, நல்ல ரௌடியின் மதம்தான் தெரியவில்லை. கிறித்துவராக அல்லது முஸ்லிமாக இருக்கலாம் என நினைக்கிறேன். இன்னொரு முறை பார்த்தால் கண்டுபிடித்து விடுவேன். ஆனால் பார்க்க மனம் ஒப்பவில்லை. கலைக்கு (ஹிந்து) மதம் (மட்டும்) கிடையாது என்பவர்கள் ஒன்றிப் போய்ப் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாமே தற்செயல்தானே!

பின்குறிப்பு: ஒன்றுமில்லாத‌ படத்தைத் தூக்கிப் பிடிப்பதில்லை. அடிப்படையில் நேர்மையற்ற படங்கள் எனக்குத் தேவையில்லை. மத ரீதியான ஆராய்ச்சிக்காகத்தான் இனி படமே பார்க்கப் போகிறேன். எவ்வித மதத்தையும் விட்டு வைக்காமல் விமர்சிக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தை ஒரு லாபத்துக்காக தூக்கிப் பிடிக்காத படங்களை மட்டுமே கலை என்ற வகையில் அணுகுவேன். இப்படி நூறு பேர் செய்யாவிட்டால் தமிழ் சினிமா போலிகளின் உலகமாகவே தொடரும்.

*

Share

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய பிரச்சினை. அதாவது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் இருந்து, இப்போது அவை திடீரெனக் கிடைக்கும்போது வெடிக்கின்றன. அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைப் பற்றிய கதை. சில நாடுகளில் இது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்ற நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் இத்தகைய வெடிக்காத குண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டதில்லை. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இதுபோன்ற பெரிய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைச் செயலிழக்கச் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார்கள். சில குண்டுகள் வெடித்து மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையாக இதுவரை வந்ததில்லை. எனவே இது நமக்கு வேறு ஒரு ஊரின் பிரச்சினையாகத் தோன்றிவிடுகிறது. இந்த குண்டு வெடித்தால் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்பது பற்றி நமக்குப் புரியாததால், இந்தியாவின் அப்படி நிகழ்ந்தது இல்லை என்பதால், நாம் இந்தப் படத்துடன் ஒன்ற மறுத்து விடுகிறோம். படமும் நம்முள் அந்தப் பதற்றத்தைக் கடத்தவில்லை.

அதேபோல் இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லப்போகும் ஒரு குண்டை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியமாகக் கையாளும் என்று நமக்குள் ஒரு கம்யூனிச மூளையின் சிந்தனை திணிக்கப்படுகிறது. அந்த கம்யூனிச மூளை இப்படத்தை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இயக்குநராக இருக்கலாம் அல்லது தயாரிப்பாளராக இருக்கலாம். இப்படி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தியைப் போல எப்போதும் நம் அரசு நம்மைக் கொல்லத் தயாராக இருக்கிறது என்று சொல்வதை இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் குறைகளே இல்லை என்பதல்ல. ஆனால் குறைகளின் நடுவே மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று வலிந்து உருவாக்கப்படும் சித்திரம் ஏற்கத்தக்கதல்ல. ‘முற்போக்காளர்’களின் முதன்மையான நோக்கமே இந்த சித்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவதுதான்.

திரைப்படம் என்று வந்து விட்டால் நம் ‘முற்போக்காளர்கள்’ அன்பு அக்கறை என்றெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் இதே கம்யூனிசம் உலகம் முழுக்க ஒன்றரை கோடி பேரை, ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றரை கோடி பேரைக் காவு வாங்கியிருக்கிறது ஹிட்லரின் இன ஒழிப்பின்போது மாண்ட மக்களுக்கு இணையான எண்ணிக்கையில் கம்யூனிஸத்தால் மக்கள் உலகம் முழுக்கக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அதைப்பற்றி இவர்கள் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கோட்பாட்டை விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குண்டு வெடித்தால் 1,000 முதல் 2,000 அப்பாவிகள் செத்துப் போவார்கள் என்று புலம்பும் ஒரு தோழர், வருடம்தோறும் மாவோயிஸ்டுகளால் இந்தியா முழுக்கக் கொல்லப்படும் குடிமக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியா முழுக்கக் கொன்று போடும் அப்பாவி இந்தியர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவன் வலி இன்னொருவனுக்குத் தெரியவேண்டும் என்று வக்கணையாகப் பேசும் தோழர் கதாபாத்திரம், இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழக்கும் மனிதர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் அத்தனையுமே வெறும் புனைவு சார்ந்ததாக மட்டுமே ஆகிவிடுகிறது. உண்மையைச் சார்ந்ததாக மாறுவதில்லை. ஆனால் அடிப்படையோ உண்மை சார்ந்த நிகழ்வு என்று சொல்கிறார்கள். எனவேதான் நம்மால் இந்தப் படத்துடன் ஒன்ற முடிவதில்லை.

முதல் திரைப்படம் என்ற வகையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பெரிய நம்பிக்கையைத் தருகிறார். படம் எடுக்கப்பட்ட விதம் மிக நன்றாக இருக்கிறது. மிகச் சரியான கதையைக் கையில் எடுத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தால் இப்படம் பெரிய அளவு பேசப்பட்டிருக்கும். நமக்கு அனுபவப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளாதது முதல் மைனஸ். அதில் காதல் வர்க்க ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும் சேர்த்து, எதையும் தீவிரமாகக் காட்டாமல் போனது இரண்டாவது மிகப்பெரிய மைனஸ்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் யாமகுச்சி என்ற ஒரு ஜப்பானியர் வருகிறார். அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவராகச் சொல்லப்படுகிறது.  ஒரு வரலாற்று அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் வரும் இந்தக் கதாபாத்திரமும் உண்மையான ஒன்றாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முழுக்க இது புனைவு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஜப்பானியர் தன் மகள் குறித்த ஒரு கதை சொல்கிறார். உலகம் முழுக்க பிரபலமான அந்தக் கதை நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஒரு குண்டு தந்த புற்றுநோயைச் சுமக்கும் பெண்ணைப் பற்றியது.  ஸடகோ ஸஸகி என்னும் அந்தச் சிறுமி 1000 காகிதப் படகுகள் செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளுடன் படிக்கும் இன்னொரு சிறுமி சொல்கிறாள். இந்தப் பெண்ணும் படகுகள் செய்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தைதான் இந்தப் படத்தில் வரும் ஜப்பானியர் என்றும் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றவர் என்றும் காட்டப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியலில் எந்த யாமாகுச்சியும் கிடையாது. அதேபோல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு குண்டு வீச்சிலும் உயிர் பிழைத்த யாமாகுச்சி என்பவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அவரது மகள் ஸடகோ ஸஸகி அல்ல. இத்தனை குழப்பமான ஒரு கதாபத்திரத்தை ஏன் க்ளைமாக்ஸில் கொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. உண்மைக்கு அருகில் என்றால் அது உண்மையில் உண்மைக்கு அருகில் இருந்தாக வேண்டும்.

காகிதப் படகுகள் செய்யும் பெண்ணின் கதை இரண்டு நிமிடமே வந்தாலும் அது நெஞ்சை உருக்குகிறது. ஏனென்றால் அதில் நெஞ்சை உருக்கும் உண்மை உள்ளது. இந்தப் படம் தோற்றதும் இந்த இடத்தில்தான்.

படத்தின் ஹீரோ தினேஷ் மிக நன்றாக நடிக்கிறார். சில காட்சிகளில் அதீத நடிப்பு. தோழர் தோழர் என்று அழைத்துக் கொண்டே வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமாகவே எஞ்சுகிறது. யாரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிறார். போலீசை விட தோழர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பதெல்லாம் பெரிய நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. முதலாளி வர்க்கம் உலக மக்களை ஒருவர் விடாமல் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற கம்யூனிச வெற்று அலப்பறைகளை எல்லாம் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்பும் தமிழ்த் திரையுலகம் தாங்கிக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்!

ஒரு வித்தியாசமான திரைப்படம் என்றால் அதில் எப்படியாவது தெருக்கூத்து தொடர்பான காட்சிகள் வந்துவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் இருந்து நம் இயக்குநர்கள் எப்போது வெளியே வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஒரு தெருக்கூத்துக் காட்சி வருகிறது. அந்தத் தெருக்கூத்துக் காட்சி அதனளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றாலும் கூட, இது போன்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவது ஒரு க்ளிஷேவாகி எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது.

தமிழ் இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் அரசியல் குறியீடுகளையும் அரசியல் தொடர்பான பின்னணிகளையும் தேவையே இல்லாமல் புகுத்துவதன் மூலம் உண்மையான அரசியல் திரைப்படம் வருவதைத் தடுக்கவே போகிறார்கள். இதனால், திரைப்படத்தை எவ்விதக் கோட்பாடும் இன்றிப் பார்க்க விரும்பும் பொது ரசிகர்களைத் தங்களிடமிருந்து விலக்கி வைக்கப் போகிறார்கள். எல்லாப் படங்களிலும் அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கான கொள்ளி. இதை இவர்கள் வைக்காமல் விடப் போவதில்லை.

நன்றி: ஒரேஇந்தியா

Share