Archive for திரை

மேற்குத் தொடர்ச்சி மலை

மேற்குத்தொடர்ச்சி மலை பார்த்தேன். தாமதமாகத்தான் பார்க்க முடிந்தது. சந்தேகமே இல்லாமல் மிக முக்கியமான திரைப்படம். கொஞ்சம் அவுட் டேட்டட் என்ற போதிலும் கூட, படம் எடுத்த விதம் கொஞ்சம் பழைய மாதிரி என்பதைப் போல இருந்தாலும் கூட, முக்கியமான திரைப்படமே. முதல் அரை மணி நேரத்துக்கும் மேலாக திரைப்படம் அந்த மலைவாழ் எளிய மனிதர்களின் வாழ்வைச் சித்தரிப்பதில் கழிகிறது. அது எடுக்கப்பட்ட விதம் மிக அற்புதமாக உள்ளது. படத்தில் முதல் தென்றல் வீசும் காட்சி என்று படத்தின் கதாநாயகி வரும் காட்சியைச் சொல்லலாம். அழகு. மண் சார்ந்த அழகு. கண்களிலேயே அவர் பேசுகிறார். இரண்டாவது தென்றல் வீசிய காட்சி இளையராஜாவின் ‘கேக்காத வாத்தியம்’ பாடல் வரும்போது. மெஸ்மரிசம் செய்யும் பாடல்.

மிக மெதுவாக வாழ்க்கையை மட்டுமே சொல்லிக் கொண்டு செல்லும்போது, அந்த ஏலக்காய் சிதறும் காட்சி மிகப் பெரிய பதற்றத்தைக் கொண்டு வருகிறது. இதுபோன்ற படத்தை ஆயிரம் பேர் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஆனால் இப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்று இதைத் தயாரித்த விஜய் சேதுபதியைப் பாராட்ட வேண்டும். இயக்குநர் லெனின் பாரதி தீவிரமான கம்யூனிஸ்ட். ஆனால் இந்தப் படத்தில் எவ்விதச் சாய்வும் இன்றி மிக நியாயமாகவே படத்தை எடுத்திருக்கிறார். எந்த ஒரு முதலாளியையும் மோசமானவராக சித்தரிக்கவில்லை என்பது பெரும் ஆறுதல். அவர்களின் வாழ்க்கை மற்றும் சூழல் நியாயங்களைப் பொருத்து அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகிறார். அதைவிட நம்பிக்கை துரோகம் செய்பவராக ஒரு கம்யூனிஸ்ட் காட்டப்படுகிறார். அவர் இன்னொரு கம்யூனிஸ்ட்டால் கொல்லப்படுகிறார். மிக நல்லவரான கங்காஅணி, ஒரு இஸ்லாமியர். இந்தப் படத்தில் மத ரீதியான சீண்டல்கள் இல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் மலைவாழ் மனிதர்களின் மிக எளிய ஆன்மிகம் படம் நெடுகிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்காகவே இயக்குநரை இன்னுமொருமுறை பாராட்ட வேண்டும்.

இதுபோன்ற படங்களின் இன்றைய மதிப்பு என்ன என்பதைப்பற்றி சிந்திக்க வேண்டும். இந்தப் படம் தமிழில் மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு படமாகவும் மாறப்போவதில்லை. அதேபோல் இந்தப் படம் சமீபத்திய இடைநிலை மாற்றுத் திரைப்படங்கள் எதிர்கொள்ளும் ஓரளவு வசூலுடன் கூடிய நல்ல பெயரையும் பெறப்போவதில்லை. அதேபோல் இது ஒரு வணிக நோக்கப் படமாக இருக்கவே முடியாது. அப்படியானால் இதுபோன்ற திரைப்படங்களின் வாழ்வுதான் என்ன? பாராட்டுக்காக வா? யோசிக்க வேண்டிய விஷயம் இது. இதுபோன்ற திரைப்படங்களது இயக்குநர்களின் முதல் படமும் கடைசி படமும் ஒன்றாகவே அமைந்துவிடக் கூடிய துர்பாக்கிய சூழல் இங்கு உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

மலையாளத்தில் இதுபோன்ற பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. 2018ல் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பார்க்க உண்மையிலேயே கொஞ்சம் பாவமாகவும் பரிதாபமாகவும்தான் இருக்கிறது. இந்தக் காலகட்டங்களை நாம் என்றோ திரை உலகில் கடந்து விட்டோம் என்றே நினைக்கிறேன். இந்தப் படம் பேசும் அந்தச் சிறிய கால மாற்றமும் அதில் நிகழும் தொழிலாளர்களின் அவலமும் மிக முக்கியமானதுதான். பதிவு செய்யப்பட வேண்டியதுதான். ஆனால் அது ஒரு திரைப்படமாக வரும்பொழுது அது ஒரு பதிவு என்ற அளவில் மட்டுமே சுருங்கி விடுவது குறித்து நாம் யோசிக்க வேண்டும். ஏனென்றால் இதில் வணிகமும் உள்ளது. திரைப்படத்தில் உள்ள செலவு மற்றும் வரவு சார்ந்த கணக்குக்குள் இப்படங்கள் வர முடியாது எனும்போது, இதுபோன்ற திரைப்படங்களை விவரணைப் படங்களாகவே பதிவு செய்துவிடுவது இன்னொரு வகையில் புத்திசாலித்தனமானது என்று நினைக்கிறேன்.

இது அத்தனையையும் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தை எடுத்த குழு யோசிக்காமல் இருந்திருக்காது. அதையும் மீறி எடுக்கிறார்கள் என்றால் திரைப்படத்தின் மீதான அவர்களது வெறியையும் காதலையும் குறிக்கோளையும் புரிந்துகொள்கிறேன் அவர்கள் என்றென்றும் பாராட்டுக்குரியவர்கள்.

Share

விஜய் சேதுபதி

அந்திமழை நவம்பர் 2018 இதழ் – கிட்டத்தட்ட சினிமா சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. விஜய் சேதுபதி பற்றிச் சிலர் சிலாகித்திருக்கிறார்கள். அத்தனை பேருமே அவருக்குப் பிடித்தவர்கள், அவரைப் பிடித்தவர்கள். எனவே விமர்சன பூர்வமாக ஒன்றும் இல்லை. விஜய் சேதுபதியின் வளர்ச்சி, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஒன்றுதான். கமர்ஷியல் ஹீரோவாக மட்டுமே கைத்தட்டுகளைப் பெற்றுக்கொண்டிருந்த நடிகர்களுக்கு மத்தியில் தரமான ஒரு நடிகராகவும் கைத்தட்டு பெற்று, கமர்ஷியல் வேல்யூவும் பெறமுடியும் என்று பல காலங்களுக்குப் பிறகு நிரூபித்தவர். (முதலில் சிவாஜி கணேசன் இதைச் செய்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். பின்னர் கமல்.) அதிலும் பல கதாநாயகர்கள் செய்யத் தயங்கும் திரைப்படத்தையெல்லாம் இவர் செய்தார். மலையாளத்தில் மிகப் பல காலமாக, தொடர்ச்சியாக இது நிகழ்ந்து வருகிறது. தமிழில்தான் வறட்சி.

தொடக்க காலத்தில் விஜய் சேதுபதி சில தேவையற்ற படங்களை நடிக்கிறார் என்று நான் சொன்னபோது, ஞாநி போன்றவர்கள், மிக ஆக்ரோஷமாக பதில் சொன்னார்கள். வேடத்தில் சிறியது பெரியது என்றில்லை என்ற தத்துவத்துக்குள் போனார்கள். ஆனால் நான் சொன்னதைத்தான் விஜய் சேதுபதி புரிந்துகொண்டார் என்றே நம்புகிறேன். இனியும் ரம்மி போன்ற படங்களுக்கு விஜய் சேதுபதி தேவையில்லை. அப்போதே தேவையில்லைதான். விஜய் சேதுபதி ஒருவழியாகத் தனக்கான இடம் என்ன என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். இங்கேதான் அவருக்கான பிரச்சினையும் இருக்கிறது.

தீவிர அரசியல் பார்வையுடன் விஜய் சேதுபதி பேசுகிறார். இது பிற்காலத்தில் ஒரு நடிகருக்குரிய தேவைக்கு எதிராக அமையலாம். இது பற்றி அவருக்குக் கவலை இல்லை என்பதே அவரது கருத்துகளும் உடல்மொழியும் உணர்த்துகின்றன. ஒருவகையில் இந்த வெளிபப்டைத்தன்மையும் நமக்கு நல்லதுதான். விஜய் சேதுபதி கைக்கோர்க்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கும் ஒரு நிறம் இருப்பதைப் பார்க்கலாம். அது அவர்களை ஒன்றிணைக்கிறது என்பது வெளிப்படை. இதற்கு முன்பு திராவிட இயக்கம் திரையில் கோலோச்சிய காலத்தில் இப்படி சில நடிகர்கள் இருந்தார்கள். இடையில் கொஞ்சம் தளர்ந்தது. இப்போது விஜய் சேதுபதி மூலமாக அது முற்போக்கு அரசியலாக மாறியிருக்கிறது. இதன் இன்னொரு கோணம் இனி வரும் நாள்களில் வெளிப்படலாம்.

அந்திமழை இதழில் பேசிய அத்தனை பேரும் விஜய் சேதுபதியின் உடல் நலம் பற்றிப் பேசியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னது, அவர் தனது உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது. நான் சொல்ல நினைப்பது, அவர் தன் உடலில் அக்கறை எடுத்துக்கொள்ள வேணுடும் என்பது. இல்லையென்றால் விரிவடையும் உடலே அவருக்குப் பெரிய எதிரியாக அமையும். அதேபோல் வெரைட்டியாக நடிக்க அவருக்கு வரவில்லை. வந்து மிகச் சில ஆண்டுகளே ஆன நிலையில், இதை ஒரு புகாராகச் சொல்ல அவசியமில்லை. போகப் போக இவையெல்லாம் சரியாகிவிடும். ஆனாலும் இன்றைய நிலையில் இவர் ஒரே மாதிரியாகவே எல்லாப் படங்களிலும் நடிக்கிறார் என்பது சரியான கருத்துதான்.

விஜய் சேதுபதியைக் கொண்டாடுபவர்கள் அவரது நடிப்புக்காக மட்டும் கொண்டாடவில்லை. ஞாநி போன்றவர்களை இப்போது புரிந்துகொள்கிறேன். அதேபோல் விஜய் சேதுபதியை விமர்சிப்பவர்கள்கூட எதிர்காலத்தில் அவரது நடிப்புக்காக இல்லாமல் விமர்சிக்கத் துவங்கலாம். ஒரு புள்ளி, அதன் எதிர்ப்புள்ளியை உருவாக்கியே தீரும். இது சரியா தவறா என்பதைவிட, இதுதான் நிகழும். யதார்த்தம்.

Share

சர்கார் (தமிழ்)

சர்க்கார் –

முதலில் சில பாஸிடிவ்வான சிலவற்றைச் சொல்ல ஆசைதான். ஆனால் எத்தனை யோசித்தாலும் எதைச் சொல்வதென்று தெரியவில்லை. விஜய் அழகாக இருக்கிறார். அவ்வளவுதான். இன்னொன்றைச் சொல்லவேண்டுமென்றால் பழ.கருப்பையா, ராதாரவி தேர்வு. மிக முக்கியமான இன்னொன்று, ராதாரவி சொல்லும் வசனங்கள். இவை நிச்சயம் ஜெயமோகனின் பங்களிப்பாகவே இருக்கவேண்டும். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை நன்றாக உள்ளது. இதற்கு மேல் தேத்தமுடியாது.

மற்றபடி

வலுவே இல்லாத கதை. அதனால் எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் அலைபாயும் திரைக்கதை.

அரசியல் ஒரு கதையென்றால், கூடவே நடிகர் விஜய்யின் முதல்வர் கனவு இன்னொரு கதை. இதனால் தமிழ்நாட்டில் நடந்த எல்லாவற்றையும் எங்கேயாவது எப்படியாவது தூவ வேண்டிய நிர்ப்பந்தம். கந்துவட்டி, ஜல்லிக்கட்டு, நீயுட்ரினோ என வாயில் வந்ததையெல்லாம் யார் யாரோ சொல்கிறார்கள்.

ஒரு நிமிடத்துக்கு முன்பு பதவி ஏற்பு ரத்து, ஒரு ஓட்டு கள்ள ஓட்டானதால் அதற்கு மறு ஓட்டு உரிமை தரப்படுவதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மறுதேர்தல் என்றெல்லாம் நம்பவே முடியாத கதை. முதல்வனும் நம்பமுடியாத கதைதான். ஆனால் அதில் தெளிவான ஓட்டமும் திரைக்கதையும் இருந்தன. முதல்வன் போல ஒரு படம் எடுப்பது அத்தனை எளிதில்லை என்று நிரூபிக்கிறது சர்கார். கூடவே விஜய்யின் அரசியல் ஆசையும் சேர்ந்துகொண்டதால் தெலுங்குப் படம் போல போகிறது.

இதற்கிடையில் விஜய்யின் கமர்ஷியல் ஹீரோ பிம்பத்தையும் கட்டிக் காப்பாற்ற வேண்டி இருக்கிறது. குப்பத்துக்குப் போய் பேசி மீனவன் என்கிறார். உடனே நம்பி ஓடி வருகிறார்கள். (அதிலும் அந்த தக்காளி விளக்கம் ஐயையோ.) ஆளும் கட்சி கூட்டத்துக்குப் போயே பேசுகிறார். நாம் திடீரெனக் கனவு காண்போமல்லவா, ஜெயலலிதா நாளைக்கே ஜெயிலுக்கு போனால், கருணாநிதி கைதானால் என்று, அதை அத்தனையும் விஜய் செய்கிறார். ஆளும்கட்சியின் முதல்வர் மரணம் அடைந்தாலும் 15 நாளில் தேர்தல் நடக்கிறது. படத்தின் போக்குக்கு இது முக்கியம் இல்லைதான். ஆனால் இப்படிப் பல நெருடல்கள்.

ஒரு ஓட்டு கள்ள ஓட்டு போடப்பட்டால் பேலட் ஓட்டு பதிவு செய்யப்படவேண்டும் என்பது விதி. தேர்தலின் முடிவில் குழப்பம் இருந்தால் தேவைப்பட்டால் மட்டுமே அந்த பேலட் ஓட்டு கணக்கில் கொள்ளப்படும். விஜய் பேலட் ஓட்டும் போடுவதில்லை என்பதால் என்றாரம்பித்து என்ன என்னவோ செய்து… முடியல. அதிலும் அந்த கொடுமையான க்ளைமாக்ஸ், கற்பனை வறட்சி. ஓட்டுப் பதிவு தொடங்கி பாதி நேரம் பதிவு கழிந்தும்… ரொம்ப ஓவருங்க இதெல்லாம். தாங்கமுடியலை.

பல முக்கியமான காட்சிகளில் விஜய் என்னவோ போல் பேசி வெறுப்பேற்றுகிறார். அதிலும் ஆளும்கட்சி அலுவலகத்துக்குள்ளே போகும் காட்சி (ஆமாம், இப்படி ஒரு காட்சி!) கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும்போதே விஜய் அடிதடியில் இறங்கி அக்காட்சியை காலி செய்கிறார். சாதாரணமாகப் பேசுவதே இல்லை. மீண்டும் தேர்தல் என்பதைக் கூட அடிவயிற்றிலிருந்து உணர்ச்சி பொங்க மட்டுமே பேசுகிறார் விஜய். இப்படியே போனால் பிற்கால சிவாஜியாகிவிடுவார் என்று நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்த ஒரே காட்சி, வரலட்சுமி பழ.கருப்பையாவுக்கு மருந்து கொடுக்கும் காட்சிதான். அதற்குப் பின்னர் தெலுங்குப் படமாகிவிட்டது.

வலுவற்ற கதை, வலுவற்ற திரைக்கதை, திக்கின்றி அலையும் காட்சிகள். சீரியஸான காட்சியில் சொதப்பும் விஜய். இதுதான் சர்க்கார்.

Share

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

* மணி ரத்னம் இறங்கி அடித்திருக்கிறார். இளம் இயக்குநர்களுக்கு நிஜமாகவே தண்ணி காட்டியிருக்கிறார்.

* காற்று வெளியிடை மூன்று மணி நேரத்தில் முப்பது மணி நேரம் உணர்வைத் தந்ததை அப்படியே மாற்றிப்போட்டு இப்படம் முழுக்க பரபரவென வைத்திருக்கிறார்.

* நான்கு பெரிய நடிகர்கள் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் எல்லாக் காட்சிகளிலும் கிட்டத்தட்ட வருமாறு திரைக்கதை அமைத்ததுதான் பெரிய பலம்.

* இது மணிரத்னம் படமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படம் கமர்ஷியல். அதுவும் அவரது துல்லியமான தரத்தில் வரும்போது மிக நன்றாகவே இருக்கிறது.

* குறைகள் என்று பார்த்தால் –

* அரவிந்த் சாமி என்னதான் நன்றாக நடித்தாலும், அவருக்கு இந்தப் பாத்திரம் கொஞ்சம் ஓவர். எரிச்சல் வரும் அளவுக்கு!

* ஏர் ஆர் ரஹ்மானிடம் கதையே சொல்லாமல் செம பாட்டு வாங்கிவிடுவதுதான் மணி ரத்னம் பாணி. இதிலும் பாடல்கள் அட்டகாசம். ஆனால் கதைக்கு ஒரு பாட்டுக்கூடத் தேவையில்லை. அதனால் அத்தனை பாடல்களையும் வீணடித்திருக்கிறார் மணி ரத்னம். சீரியஸான காட்சிகளிலெல்லாம் சம்பந்தமே இல்லாமல் பாட்டைப் போட்டு நிரப்பி இருக்கிறார் – வழக்கம் போலவே.

* ஒரே ஒரு பாடல் மட்டும், கொலைக்கு முன்னர் எல்லாம் வருகிறது என்று நினைத்தால் அதையும் பின்னர் விட்டுவிட்டார்.

* விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட காமெடி வேடம். ஆனால், ஆனால்…

* ஒரு முழுமையான கமர்ஷியல் பட ரசிகன் படத்தின் முதல் ஐந்து நிமிடங்களிலேயே முக்கியமான ஒரு முடிச்சையும், கமர்ஷியல் வெறியன் அடுத்த பத்து நிமிடங்களில் இன்னொரு முக்கியமான முடிச்சையும் யூகித்துவிடுவான். நான் யூகித்தேன். ஆனால் வெறியன் அல்ல! மணி ரத்னத்தின் பெரிய சமரசம் இது. அவருக்கு வேறு வழியில்லை. படத்தின் இறுதிக்காட்சியில் அப்படிக் கை தட்டுகிறார்கள்.

* படத்தின் நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் நன்றாக இருக்கிறார்கள். நன்றாக நடிக்கிறார்கள். அருண் விஜய் செம ஸ்டைல்.

* வழக்கமான மணி ரத்னம் ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து எரிச்சல் அடையவும் மணி ரத்னம் வெறுப்பாளர்கள் கொண்டாடவும் செய்வார்கள். நான் மணி ரத்னம் ரசிகனே. ஆனால் க்ளைமாக்ஸ் நான் யூகித்தபடியே இருந்ததால் பிடித்தது. அது என்னவென்றால்… அனைவரும் கழுவி ஊற்றும்போது தெரிந்துகொள்ளவும்.

* ஹை ஃபை மண்ணாங்கட்டி ஓவர் லாஜிக் என்பதையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு இப்படி மணி ரத்னம் அவ்வப்போது ஒரு படம் எடுப்பது அவருக்கு நல்லது. கமர்ஷியலும் தரமும் ஒன்றிணையும் படங்கள் மிகவும் முக்கியம். அந்த வகையில் இது நன்றாக உள்ளது.

பின்குறிப்பு 1: நீல மலைச்சாரல் பாட்டைக் கூட ரெண்டு வரியில் முடிக்க ஒரு அசட்டு தைரியம் வேணும்.

பின்குறிப்பு 2: கருணாநிதி, பொன்னியின் செல்வன், காட் ஃபாதர் என எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போகவும். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாவற்றின் சாயலையும் வேண்டுமென்றே வைத்துவிட்டு, கேங்க்ஸ்டர் படமொன்றை எடுத்திருக்கிறார் மணி ரத்னம்.

பின்குறிப்பு 3: ட்ரைலரைப் பார்த்துவிட்டு, பெயரையும் வைத்துக்கொண்டு கம்யூனிஸ லெனினிஸ மாவோயிஸ ட்ராட்ஸ்கியிஸ குறியீட்டைக் கண்டுபிடித்த என்னை நானே நொந்துகொண்டேன்.

Share

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம் என்றொரு கொடுமையைப் பார்த்தேன். தலையெழுத்து. ஒரு காட்சி கூடவா நல்லா இருக்காது? மாயாண்டி குடும்பத்தார் போன்ற இன்னொரு‌ கொடுமை இது. இதில் விவசாயி காளை ஆணவக் கொலை என்றெல்லாம் அங்கங்கே தூவல் வேறு. ஜாதியைத் திட்டிக்கொண்டே அவங்களும் பெரிய தலைக்கட்டு என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். வளவள என்று காது தொங்கும் அளவுக்கு வசனம். கண்றாவி.

Share

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2
 
நாம் நம் ஊரில் சில தையல்காரர்களைப் பார்த்திருப்போம் அவர்கள் தங்களிடம் மீதமுள்ள துணிகளை வைத்து ஒரு சட்டையைத் தைத்துவிடுவார்கள். அது நன்றாகவும் இருக்காது, அதைத் தூக்கி எறியவும் முடியாது. அதேபோல் கமலஹாசன் தன்னிடம் ஏற்கெனவே இருந்த ஒரு படத்தின் மீதக்காட்சிகளிலிருந்து புதியதாக ஒரு படத்தைத் தயாரிக்க ஆசைப்பட்டுவிட்டார். அது ஒரு படமாகவும் இல்லாமல் படம் இல்லாததாகவும் இல்லாமல் ஏதோ ஒன்றாக உருவாகி இருக்கிறது.
 
50 வயதுக்கு மேல் ஒருவன் தன் காதல் அனுபவங்களை நினைத்து நினைத்துத் தனக்குத் தானே சிரித்துக் கொள்வது போல அமைந்திருக்கிறது இத் திரைப்படம். என்னவெல்லாமோ காட்சிகள் திடீர் திடீரென வருகின்றன. தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அக்காட்சி முடிவடைந்ததும் நாம் ஏதேனும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. இதற்கிடையில் கமலின் வழக்கம்போன்ற மேதாவித்தனமான வசனங்கள் வேறு. புரியவில்லை என்பதன் அர்த்தம், கமல் எப்போதுமே 20 வருடங்களுக்கு முன்பான ஒரு திரைப்படத்தை எடுத்து விடுவார் என்று அவரது ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் வகையிலானது அல்ல. தெளிவின்மை தரும் புரிதலின்மை.
 
ஒரு காட்சி ஏன் வருகிறது, அது சொல்ல வரும் செய்தி என்ன என்று எதுவும் யாருக்கும் புரியாது. முதலில் இருந்து கடைசி வரை ஒரே இடத்திலேயே கதை அப்படியே நிற்கிறது. காட்சிகள் தொடர்பின்றி நகர்கின்றன. நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். யாரோ யாரோஒருவரைக் கொன்று கொண்டே இருக்கிறார்கள். யார் செத்தால் நமக்கென்ன என்ற மனப்பான்மையில் நாம் அமர்ந்திருக்கிறோம். முதல் பாகத்தில் தப்பித்துப்போன ராகுல்போஸ் இடைவேளைக்குப் பிறகுதான் தலையைக் காண்பிக்கிறார். இப்படத்தில் இவருக்கு எவ்வித ஸ்கோப்பும் இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை நிரூபிக்கும் வகையிலான காட்சிகள்தான் படம் நெடுகிலும் பெரும்பாலும் வருகின்றன.
 
64 வயது கமலுக்கு இரண்டு பெண்கள் போட்டிப் போட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பொறாமைப்பட்டுக் கொண்டும் பேசும் காட்சிகள் பெரும் அலுப்பைத் தருகின்றன. எரிச்சலை அடக்கமுடியவில்லை. கமலுக்கும் மனைவிக்குமான காதல் காட்சிகள் காணச் சகிக்கவில்லை. கமல் இப்போது முஸ்லிமா இந்துவா என்ற குழப்பம் அவர் மனைவிக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏற்படுகிறது. கமலின் மனைவி அவரை ஏன் அன்றுதான் கல்யாணம் ஆன ஒருவர் போல உருகுகிறார் என்பதெல்லாம் ஒரு மண்ணும் புரியவில்லை. வசீம் என்று அழைக்கிறார். கொடுமை.
 
கமல் சம்மந்தம் சம்மந்தம் இல்லாமல் என்னவெல்லாமோ வசனம் பேசுகிறார். படத்தின் முதல் காட்சியில் தன் அரசியலுக்கு விளம்பரம் செய்து கொள்கிறார். இதனால் படத்தில் வரும் காட்சிகள் அரசியலுக்கு உள்ளதா அல்லது படத்துக்கு உரியதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. 64 குண்டுகள் என்கிறார். 64 வருடம் கொள்ளை என்று பிராமணரைப் பார்த்துச் சொல்கிறார். நொடிக்கு நொடியில் முஸ்லிம் – பிராமண – காங்கிரஸ் அரசியல் என்று மாறும்போது நமக்குத் தலை சுற்றுகிறது. அந்த 64 என்பது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பது எனக்குப் புரியவில்லை. 1947ல் சுதந்திரம் பெற்றதைக் குறிப்பிடுகிறது என்றால் 64 என்பது இடிக்கிறது. நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்கும். ஒருவேளை 2011ல் நடக்கும் கதையா? இதை விளக்க கமல் இன்னொரு படம் எடுத்துத் தொலைக்காமல் இருக்கவேண்டும்.
 
முதல் பாகத்தில் மிகத் தெளிவாக, இந்திய முஸ்லீம் நல்லவன் என்கிற அடையாளத்தைச் சொல்லி இருந்தால் படத்திற்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது என்று நினைத்தாரோ என்னவோ, இப்படத்தில் இந்திய முஸ்லிம்களை வெளிப்படையாக உயர்த்தும் காட்சிகள் மிக தெளிவாகக் காண்பிக்கப்படுகின்றன. இந்தத் தெளிவு முதல் படத்தில் கிடைத்த அடியில் கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது.
 
பிராமணர்கள் மேல் இருக்கும் எரிச்சல் கமலுக்கு இன்னும் தீரவில்லை. படத்தில் இந்தியாவைக் காட்டிக் கொடுப்பவர் ஒருவர் பிராமணர். அவர் பெயர் ஐயர் என்றே வருகிறது. அதுமட்டுமின்றி வகைதொகை இல்லாமல் எல்லோரும் பிராமண பாஷையில் பேசிக் கொல்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் எட்டிப் பார்த்து ரூம் போட உதவி செய்யும் ஒரு நபர் கூட பிராமண பாஷையில் பேசுகிறார். இது போதாதென்று திடீரென ஆண்ட்ரியாவும் பிராமண பாஷை பேசுகிறார். நல்லைவேளை, அடுத்த காட்சியில் கொல்லப்பட்டுவிடுகிறார். முஸ்லிம்களை வம்பிக்கிழுத்தால், அது இந்திய முஸ்லிம் உலக முஸ்லிம் வேறுபாடுகளையெல்லாம் தாண்டி, கொமட்டிலேயே கும்மாங்குத்தாகக் கொண்டு வரும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்ட கமல், பிராமணர்கள்தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்திருப்பது பெரிதும் வரவேற்கப்படவேண்டியது. அரசியல் செய்ய உயிர் வேண்டும் என்பதைத்தான் நம் முன்னோர்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்று சுருங்கச் சொல்லினர்.
 
படத்தில் பக்கத்து வீட்டுக்குப் போய் வரும் தோரணையில் பாகிஸ்தான் போய்விடுகிறார்கள். கமல் நினைத்தால் கண்மூடி ஆப்கானிஸ்தான் போகிறார். அடுத்த காட்சியில் அம்மாவைப் பார்க்க டெல்லி வருகிறார். அவரிடம் தான் மகன் என்று சொல்லத் தேவையில்லை எனச் சொல்லிவிடுகிறார். காலில் விழுகிறார். பாடுகிறார்கள், ஆடுகிறார்கள், பாடாய்ப்படுத்துகிறார்கள். அவர் மதமென்ன என்று யோசிக்கும்போதே கமல் வேறு நாட்டுக்குப் போய்விடுகிறார். கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாரா டெல்லியில் இருக்கிறாரா ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா பாகிஸ்தானில் இருக்கிறாரா என்று கண்டுபிடிப்பதற்குள் நமக்கு வயதாகிவிடுகிறது.
 
கமலுக்கும் வயதாகிவிட்டது. ஆனால் அழகாக இருக்கிறார், நடிக்காமல் இருக்கும்போது மட்டும். பிரச்சினை என்னவென்றால் படம் முழுக்க ஏதாவது நடித்துக் கொண்டே இருக்கிறார். பார்த்து பார்த்து புளித்து போன நடிப்பு.
 
பாசிட்டிவாக சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றால், இப்படி ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற பல காட்சிகளை குன்சாக ஒன்றாக்கி ஒரு படமாக்கியது பெரிய சாதனைதான். இதற்கு எடிட்டருக்குப் பெரிய பாராட்டு சொல்ல வேண்டும். பல காட்சிகள் ஆங்கிலப்படத்தின் தரத்துடன் இருக்கின்றன – பார்க்க மட்டும். இதற்கு இணையாக பல காட்சிகள் தரமற்று இருக்கின்றன.
 
படத்தில் சிரிக்க சீரியஸான பல காட்சிகள் உண்டு என்றாலும் கிளைமாக்ஸ் காட்சி சிரிப்பின் உச்சம். 40 நொடியில் கமல் குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்து வில்லனையும் கொன்று தன் மனைவி கொல்லப்படுவதற்கு முன்னால் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வரும் காட்சி, வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. அதிலும், உன் கடவுளே உன்னைக் கொல்லும் என்று சொல்லவும், சாகக் கிடக்கும் ஒரு அல்லக்கை கமலைப் பார்த்து சைகையில் கேட்க, கமல் அதை மறுக்க, இவர் ஊதறும் அவ ஆடறதுக்கும் இணையான காட்சி.
 
ஒரு திரைப்படம் எடுத்து முடித்ததும் அதை எப்படி தயாரித்தோம் என்று கடைசியில் ஓட விடுவார்கள். பெரிதினும் பெரிது கேள் என்ற எண்ணத்தில் கமல் அதையே ஒரு திரைப்படமாக்கத் துணிந்து விட்டார். விஸ்வரூபம் பாகம் 1 படத்தித்துக்குச் செய்யும் மரியாதையாக இந்தப் படத்தை கமல் தவிர்த்திருக்க வேண்டும்.
 
பின்குறிப்பு: எப்போதும் ஒருத்தன் என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். தம்பி போல அவன். ஒருநாள் திடீரென்று பெயர் சொல்லி அழைத்தான். நீ போ என்று சொல்ல ஆரம்பித்தான். என் மனதுக்குள் மலைபோல கேள்விகள். வேறொன்றுமில்லை. உத்தமவில்லன் வரை ஜிப்ரான் என்றறியப்பட்ட இசையமைப்பாளர் இப்படத்தில் முகம்மது ஜிப்ரான் ஆகியிருக்கிறார். வாழ்த்துக்கள். வரும்போதே ஜோசப் விஜய் ஆகவும் முகமது ஜிப்ரான் ஆகவும் வந்து விடுங்கள் என்பதே நம் வேண்டுகோள்.
Share

பிக்பாஸ் மோகன்லால்

Image result for biggboss malayalam

மலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நேற்றோடு மூன்று வாரங்கள் முடிவடைந்துள்ளது. இதைப் பற்றி எழுதி எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் ஒரு சிறுகுறிப்பாவது எழுதாமல் இருப்பது பாவம் என்பதால்…

தமிழைப் போலவே மலையாள பிக்பாஸும் பெரிய அறுவை. தமிழைப் போல அல்லாமல், தினமும் டாஸ்க். டாஸ்க் இல்லாமல் செல்ஃப் பிக்கப் எடுக்கவே இல்லை. தமிழிலும் முதல் பிக்பாக்ஸ் இப்படித்தான் ஆகியிருக்கவேண்டும். ஆனால் ஓவியா என்றொரு புயல் மையம் கொண்டதால், பிக்பாஸுக்கு வேலை குறைந்துபோய்விட்டது. ஓவியாவே பிக்பாஸுக்குப் பதில் நிஜமான டாஸ்க் பலவற்றை அள்ளி வீசினார். ஓவியா இல்லாவிட்டால் பிக்பாஸ்1க்கு இத்தனை விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கலாம்.

தமிழைப் போல இல்லாமல், மலையாளத்தில் அனைவரும் ஆச்சரியமாக ஒற்றுமையாக இருக்கிறார்கள். குறைவாகவே புரணி பேசுகிறார்கள். பெரிய சண்டைகள் எல்லாம் வருவதில்லை. சின்ன சின்ன சண்டைகள் எல்லாம் உடனே மறந்துவிடுகிறார்கள். அனைவரும் ஒன்றாகக் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அரிஸ்டோ சுரேஷ் (ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவில் குடித்துவிட்டு கைலியை அவிழ்த்து பிரச்சினை பண்ணும் நடிகர், முத்தே பொன்னே பிணங்கல்லே புகழ் சுரேஷ்) கையில் கிடைக்கும் எந்த ஒரு சாதனத்திலும் தட்டிப் பாட்டுப் பாட, ஒட்டுமொத்த அணியினரும் கூடப் பாடுகிறார்கள், ஆடுகிறார்கள்.

தமிழோடு ஒப்பிட, இங்கே அனைத்து நடிகைகளும் மிக நாகரிகமாக உடை அணிந்து வருகிறார்கள். மலையாளத்தில் முதல் பிக் பாஸ் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்களோ என்னவோ.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெரிய அளவில் சண்டை வரும் முகாந்திரங்கள் எல்லாம் அப்படியே சிதறிப் போகின்றன. பிக்பாஸும் எத்தனை முயன்றும் இன்னும் நிகழ்ச்சி செல்ஃப் எடுக்கவில்லை. மலையாளி ஓவியாவை இங்கேயும் அனுப்பிப் பார்க்கலாம். 🙂 சாபு என்பவர், பெண் விடுதலை, பெண்ணிய உரிமைகள் என்ற பெயரில் உள்ள எல்லாவற்றையும் ஏற்கமுடியாது என்று அடித்து ஆடுகிறார். கம்யூனிஸ்ட் என்று நினைக்கிறேன். அவரது மலையாளம் நன்றாக உள்ளது. மிகக் குறைவான ஆங்கிலக் கலப்போடு பேசுகிறார். இவர்தான் மிக இயல்பாக இருக்கிறார். ஆனால் இவரது பின்னணி – பிக்பாஸுக்கு முன்னர், பிஜேபி பெண் தலைவர் ஒருவரைப் பற்றி மிகவும் மோசமாக இவர் எழுதி, அது பிரச்சினையாகி இருக்கிறது. காலாபவன் மணி மரணத்தில் இவர் பெயர் அடிபட்டிருக்கிறது. இவையெல்லாம் நான் கூகிளில் கண்டவை.

அனூப் மேனோன் ஸ்வேதா மேனோனைப் பற்றிச் சொன்ன கமெண்ட் பெரிய பிரச்சினையை உண்டு பண்ணியது. அவர் ஸ்வேதாவைப் பார்த்து, ‘இன்னும் மலையாளிகள் உன்கிட்ட பார்க்க என்ன பாக்கி இருக்க்கிறது’ என்று கேட்டதை அடுத்து, அங்கே பெண்ணியக்காரர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்த்தார்கள். அனூப் தான் காமெடியாகச் சொன்னதாகவும் அது தவறுதான் என்றும் மன்னிப்புக் கேட்டார். இதைப் போல ஒன்றிரண்டு எபிசோடுகள் கொஞ்சம் ஆக்டிவ்வாக இருந்தால், மற்ற எல்லா நேரமும் அன்பாகவும் ஆரவாரத்துடனும் ஆடிப்பாடியே இருக்கிறார்கள். ஒரு சண்டையோ பிரச்சினையோ இல்லாமல் ஒரே அறுவை. 🙂

தமிழில் பிக்பாஸ் செய்தபோது முதலில் கமல் இதற்கு செட் ஆகமாட்டார் என்றே நினைத்தேன். ஆனால் போகப் போக, கமல் இதனை மிக அட்டகாசமாகக் கையாண்டார். மலையாளத்தில் மோகன்லால் முதல் எபிசோடிலிருந்தே அடித்து ஆடுகிறார். சான்ஸே இல்லை. மோகன்லால் மலையாளம் பேசும் வேகமும், அட்டகாசமான மலையாளமும் வேற லெவல். எவ்விதத் திக்கலும் திணறலும் இன்றி, யாருக்கும் ஆதரவாக இல்லாமல், மனதில் பட்டதை மிக வெளிப்படையாகப் பேசுகிறார். அதைவிட முக்கியம், சனி ஞாயிறுகளில் பிக்பாஸ் போட்டியாளர்களுடன் பேசும்போது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வரிக்கும் அதைவிட வேகத்தில் கவுண்ட்டர் கொடுப்பதும் நகைச்சுவையாகப் பேசுவதும் என கலக்குகிறார். நான் பலதடவை கைதட்டிச் சிரிக்கும் அளவுக்கான டயலாக் டெலிவிரி. எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் பாதி, தானாக அவர்கள் பேசுவது பாதி என்பதுதான் இந்நிகழ்ச்சி என்பது என் உறுதியான நிலைப்பாடு. அதில் மோகன்லாலின் திறமை விண்ணைத் தொடுகிறது. ஆள் அழகாக கம்பீரமாக இருக்கிறார். கமல் கலக்கினார் என்றால் மோகன்லால் கமலைப் பலமடங்கு தாண்டுகிறார். (ஒருவழியாக ஏன் எழுதுகிறேன் என்ற காரணத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்!)

இன்னும் 3 வாரங்கள் மட்டும் பார்க்க உத்தேசித்திருக்கிறேன். மோகன்லாலுக்காக மட்டும். எதாவது க்ளிக் ஆகினால் மட்டுமே தொடர்ந்து பார்ப்பேன். தமிழில் பிக்பாஸ்1ஐ ஓவியா வெளியேறும் நாள் வரை பார்த்தேன். பின்பு பார்க்கவில்லை. பிக்பாஸ்2 இதுவரை ஒரு நிமிடம் கூடப் பார்க்கவில்லை – ஓவியா உள்ளே வந்த அந்த 5 நிமிடங்கள் தவிர. மலையாளத்தில் பார்ப்பது, மோகன்லால் என்கிற ராட்சசனுக்காகவும் மலையாளத்தைக் கொஞ்சம் தேற்றிக்கொள்ளலாம் என்பதற்காகவும்.

Share

காலா விமர்சனம்

காலா

பொதுவாக ரஜினியின் திரைப்படத்துக்குப் பெரிய அளவில் யோசித்து விமர்சனம் எழுதும் வேலையெல்லாம் செய்ததில்லை. ரஜினியின் படம் என்றாலே அது கொண்டாட்டத்துக்குரியது. முதல் நாள் முதல் காட்சி தரும் கொண்டாட்ட மனநிலையைப் புரிந்துகொள்ள நீங்கள் தொடர்ந்து இருபது வருடங்களாக ரஜினியின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியில் திரையில் பார்த்திருந்தால்தான் புரியும். திடீரெனப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு அபத்தம். பொதுவாகவே இது அபத்தம் என்பது சரிதான். ஆனால் ஒரு கொண்டாட்ட மனநிலைக்கு ஒரு நாள் மட்டும் போய்வரும் இந்த அபத்தம் எனக்குப் பிடித்தமானது. ரஜினி எனக்குத் தலைவரோ சூப்பர் ஸ்டாரோ இல்லை. எனக்கும் ரஜினிக்குமான ஈர்ப்பு உற்சாகம் சார்ந்தது. கொண்டாட்ட மனநிலை சார்ந்தது. தமிழின் மிகச் சிறந்த நடிகர் ஒருவரின் திறமை சார்ந்தது. ஆனால் கடந்த சில ரஜினியின் படங்கள் வெற்றுக் கொண்டாட்டங்களை மீறியவையாக அமைந்திருக்கின்றன. சிவாஜி திரைப்படத்திலேயே இப்போக்கு துவங்கினாலும் ஷங்கர் அதை ஒருவிதமாகக் கையாண்டார். கபாலியில் இது துலக்கம் பெற்றது. காலாவில் அரசியல் படமாகவே மையம் கொண்டிருக்கிறது. எனவே ஒரு கொண்டாட்டமான திரைப்படத்தை மட்டும் அணுகும் நோக்கில் இனி ரஜினியின் படங்களை அணுகமுடியாது. அத்திரைப்படத்தை எடுப்பவர்கள் யார், அவர்களது அரசியல் என்ன என்பதைக்கொண்டே தீர்மானிக்கமுடியும்.

ஒரு திரைப்படமாக காலா மிக நன்றாகவே உள்ளது. முதல் 30 நிமிடங்களில் நெளிய வைத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட கதறும் அளவுக்கு. பின்னர் படம் வேகம் கொள்கிறது. இறுதி நிமிடம் வரை வேகம் குறையவே இல்லை. இனியும் வயதான மனைவிக்கும் கணவனுக்குமான காதலைச் சொல்வதை ரஞ்சித் நிறுத்திக்கொள்வது நல்லது. சில ரசனையான காட்சிகள் இருந்தாலும் மொத்தத்தில் இவை கழுத்தறுக்கின்றன. இக்காட்சிகள் எல்லாம் மறைந்து காலாவின் அரசியலுக்குள் படம் செல்லும் நொடியில்தான் உண்மையான திரைப்படம் தொடங்குகிறது. நானே படேகர் அறிமுகாகும் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை வேகம் குறைவதே இல்லை.

படத்தில் மிக முக்கியமான காட்சிகள் நான்கைந்தாவது இருக்கின்றன. இடைவேளை அரும் காட்சி அட்டகாசம். அந்தக் காட்சியில் நிகல் நிகல் சல்தேரே பாடலை முழுமையாக ஓடவிட்டிருக்கவேண்டும். சட்டென முடித்தது, அட்டகாசமான அந்தப் பாடலுக்கும் அந்தப்பாடல் மிகக் கச்சிதமாகப் பொருந்தி வந்த அந்தக் காட்சிக்கும் அநியாயம் செய்வதைப் போலத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு ரஜினியும் நானாபடேகரும் சந்திக்கும் இரண்டு காட்சிகளுமே அபாரம். வசனங்கள் மிகக் கூர்மை. நானா படேகர் இந்தப் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு போகிறார்.

ரஜினியின் நடிப்பைத் தனியே சொல்லவேண்டியதில்லை. தனக்கான இடம் இனி என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் உடல் ஒத்துழைப்பதில்லை என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கதையற்ற திரைப்படங்கள் இனி வேலைக்காகாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து இறுதிக்காட்சி வரை எவ்விதக் குறையுமின்றி மிக நன்றாக நடித்திருக்கிறார். அதீத நடிப்பு என்கிற குழிக்குள் என்றுமே ரஜினி விழுவதில்லை. இப்படத்திலும் அப்படியே. எங்கே அதீதமாக நடிக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதே ரஜினியின் நிஜமான பலம்.

ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம் ஆரம்பக் காட்சிகளில் அலட்டுவது போலத் தோன்றினாலும், என்னையும் லவ் பண்ணாங்க என்று தியேட்டரையே அதிர வைத்த காட்சியில் மனசுக்குள் நுழைகிறார். சமுத்திரக்கனிக்கு வித்தியாசமான வேடம். செவ்வனே செய்கிறார்.

இப்படத்தில் மிக முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டிய நடிகர் – மணிகண்டன். அட்டகாசம், ஆசம். இவருக்கு மிக பிரகாசமான எதிர்காலம் நிச்சயம். படத்தில் மனத்தைக் கொள்ளை கொண்ட நடிகர் இவரே.

படத்தின் செட்டிங்க்ஸ் அபாரம். அப்படியே கண்ணுக்குள்ளே தாராவியைக் கொண்டு வந்துவிட்டார்கள். பின்னணி இசையில் காதைக் கிழிக்காமல் அதேசமயம் பிரம்மாண்டமான இசையைத் தந்த சந்தோஷ் நாராயண் பாராட்டப்படவேண்டியவர். இந்தப் படத்துக்கென அவர் இசையமைத்த பல பாடல்கள் இப்படத்தில் வரவில்லை. யார் வெச்சது யார் வெச்சது பாடல் காட்சிகளூடாகக் கடந்து சென்றதையெல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. படத்துக்கு இது நல்லதுதான் என்றாலும், அந்தப் பாடலின் தன்மையை இப்படி வீணடித்துவிட்டாரே ரஞ்சித் என்ற வருத்தம் இப்போதும் இருக்கிறது. அதேபோல் பாடலுக்கு நடனம் என்றாலே யாராவது தரையில் கிடந்து சுற்றுவது என்கிற எண்ணத்தை ரஞ்சித் கைவிடுவது நல்லது.

இனி…

இப்படத்தில் தமிழர்களை ராவணனாக மாற்றுகிறார் ரஞ்சித். ராமனை எதிரியாக்குகிறார். வெளிப்படையாகவே. நானே படேகர் ஒரு ஹிந்துக் கட்சியின் தலைவர். பாஜகவாகவோ சிவசேனையாகவோ அல்லது இரண்டுமோ அல்லது கொள்கையாகவோ இருக்கலாம். ராமனே நானா படேகரின் நாயகன். ஒருவகையில் ராவணனான காலாவை அழிக்கப் போகும் ராமன் நானா படேகரே. தலித் அரசியல்வாதிகளின் ஹிந்து மத எதிர்ப்பும் காழ்ப்பும் உலகறிந்த ஒன்றே. ராவணன் உண்மையில் தீமையின் வடிவம். சிவபக்தனாக இருந்தும் அவன் தீமையின் வடிவமே. ராவணன் பிராமணன் என்பதை மறந்து (அல்லது தங்கள் தேவைக்காக மறைத்து) அவனைத் தமிழனின் அடையாளமாக மாற்றி நெடுநாளாகிறது. இந்தக் குழப்பத்துக்கே இவர்களிடம் விடை இல்லை. இந்நிலையில் ஹிந்து மதத்தின் புராணங்களின் ஆழம் தெரியாமல் அதன் வீச்சும் புரியாமல் ராவணனை, தீமையின் வடிவத்தை, திரைப்படத்தில் காலாவுக்கு இணை வைத்துவிட்டார்கள். இதனால் ராவணை ஒழிக்க நினைக்கும் நானா படேகர் என்ற மோசமான அரசியல்வாதியை, உண்மையில் அறத்தின் வடிவான ராமனுக்கு இணை வைத்துவிட்டார்கள். ராமாயணத்தின் கதாகாலக்ஷேபத்தின் வரிகளுக்கு இணையாக ராவணன் ஒழிக்கப்படும் காட்சி மிக பிரமாண்டமாக மனதைப் பதற வைக்கும் அளவுக்குப் படமாக்கப்பட்டுள்ளது. (படத்தில் அசரடிக்கும் காட்சி இதுதான்.) நல்லவன் ராவணன் காலா தீய ராமனால் அழிக்கப்படுகிறான். ஆனால் ராவணன் என்னும் மாயன் மீண்டும் ராமனை அழிக்கிறான்.

மிகத் தெளிவாக தமிழர்களை, ராவணனை ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கான காரணமாக ராமனைக் கெட்டவனாகச் சித்திரிக்கிறார்கள். இந்த அரசியலுக்கு அப்படியே தன்னை ஒப்புக்கொடுத்திருக்கிறார் ரஜினி. ஆனால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ரஜினி என்றுமே திரைப்படத்தில் எடுப்பார் கைப்பிள்ளைதான். இயக்குநரைத் தீர்மானித்துவிட்டால் அவர் என்ன சொன்னாலும் செய்வார். செய்திருக்கிறார்.

இங்கே நாம் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது. தனது எந்த ஒரு திரைப்படமும் வெளி வருவதற்கு முன்பாக அத்திரைப்படத்துக்கு எதிரான எந்த ஒரு செயலையும் செய்யாதவர் ரஜினி என்ற பிம்பம் இங்கே இருக்கிறது. ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரத்தை ஒட்டி ரஜினி பேசியது, இத்திரைப்படத்தில் தான் செய்திருக்கும் கதாபாத்திரத்தை மனத்தில் வைத்துத்தான் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படத்தில் ரஜினி காவல்துறையை அடிக்கிறார். கொல்லுகிறார். கொல்லத் துணை நிற்கிறார். புரட்சிக்குத் துணை போகிறார். ஒட்டுமொத்த அரசுக்கு எதிரான போராட்டங்களை ஆதரிக்கிறார். ஆனால் நிஜத்தில் ரஜினி இவை அத்தனையும் மறுத்தார். காவல்துறை போட்டிருக்கும் சீருடை என்பது மரியாதைக்குரியது என்ற ஒரு அரசு சார்ந்த கருத்தை வெளிப்படையாக முன் வைத்தார். தான் வேறு தன் திரைப்படம் வேறு என்பதை உணர்த்தவே ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் என்று இப்போது புரிகிறது.

இத்திரைப்படத்தில் சட்டத்தை எரிக்கலாம் என்றொரு வாசகம் வருகிறது. ஆனால் அது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான ரஜினி இப்படிப்பட்டவர்களைச் சமூக விரோதிகள் என்றும் விஷக் கிருமிகள் என்று சொல்லிவிட்டார். அதாவது திரைப்படத்தில் ரஜினி நடித்திருப்பது, ராவணனாக சித்திரிக்கப்பட்டிருப்பது, உண்மையான ரஜினியின் கருத்தின்படி ஒரு விஷக்கிருமியின் பாத்திரமே, ஒரு சமூக விரோதியின் பாத்திரமே. அத்தனை நியாயங்கள் காலாவின் பக்கம் இருந்தாலும் உண்மையான ரஜினியின் கருத்தின்படி சட்டத்துக்கு எதிராக வன்முறைக்குத் துணை போகும் எந்த ஒரு போட்டாரமும் சமூக விரோதியின் செயலே. இதைப் புரிய வைக்கவே ரஜினி அப்படிப் பேசி இருக்கிறார். இதனால்தான் ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் எந்நிலை எடுப்பது என்று புரியாமல் தத்தளித்திருக்கிறார்கள். ரஜினி இப்படி வெளிப்படையாகப் பேசுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஹிந்தி பேசும் ராமனே தமிழ் ராவணர்களின் எதிரி என்று மிகத் திறமையாக, வெளிப்படையாக இத்திரைப்படம் முன்வைக்கிறது. படம் தாராவியின் பிரச்சினை என்றாலும் உள்ளூர இப்படம் சொல்ல விரும்புவது இதையே. அதாவது தாராவி பற்றி எப்புரிதலும் இல்லாத தமிழர்கள் இப்படத்தை இப்படியே சென்று அடைவார்கள். (இதில் பாதி பேர் எந்த அரசியல் புரிதலும் இன்றி நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்று கருப்பு வெள்ளையாகக் காண்பார்கள், அந்த அப்பாவிகளை விட்டுவிடலாம்.) நானா படேகர் ஷெரினாவைக் காலில் விழச் சொல்லும் காட்சியில் ஒரு நொடி ராமர் சிலை காண்பிக்கப்படுகிறது. நானா படேகர் வரும் இன்னும் சில காட்சிகளிலும் ராமர் சிலை வருகிறது. நானா படேகர் வரும் காட்சிகள் எல்லாமே காவி வண்ண மயம். இறுதிக் காட்சியில் திரையில் வரும் கதாபாத்திரங்களின் உடல் கருமை நிறத்துக்கு மாறுகிறது. கருமை நிறம் வீறுகொண்டு எதிரியைக் கொல்கிறது. திரையின் நிறம் சிவப்பாகிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. எங்கும் காலாவின் முகமாகிறது. திரையின் நிறம் நீலமாகிறது. இந்த நிற விளையாட்டு இனியும் எத்தனை படங்களுக்குத் தொடரும் எனத் தெரியவில்லை. கருமை சிவப்பு நீலம் என்ற நிறங்களை காவிக்கு எதிராக நிறுத்துகிறது இத்திரைப்படம். அந்தக் காவி கொடிய அரசியல்வாதியின் முகம். கருமையும் சிவப்பும் நீலமும் (ஏன் திடீரென்று நீலம் வருகிறது என்பதற்கு ஒரே காரணம் இது ரஞ்சிதி படம் என்பதால்தான்) உண்மைக்கும் ஏழ்மைக்கும் புரட்சிக்குமான முகமாகிறது.

ஏழைகளுக்கான நிலம் என்பதை மையமாக வைத்து அதன் அரசியல் கருத்துகளை முன் வைத்திருக்கிறார் ரஞ்சித். அதையும் பிறப்பால் மராட்டியரான ஒருவரைக் கொண்டே பேச வைத்திருக்கிறார். அதிலும் தேவையே இல்லாமல் ஒருவர் தன் பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்று சொல்லிக் குண்டடி பட்டுச் சாகிறார். ரஜினியின் மகன் பெயரை லெனின் என்று வைத்து சிவப்பின் ஈர்ப்பைக் காண்பிக்கிறார். (ஆனால் ரஜினி லெனினை நன்றாகத் திட்டித் தீர்க்கிறார்.) இத்தனைக்கும் நடுவில் தொடரும் ரஞ்சித்தின் முக்கியமான விஷயம் – புத்தரும் அம்பேத்கரும் வருகிறார்கள், ஈவெரா எங்கும் வரவில்லை. ஒரு காட்சியின் பின்னணியில் ஈவெரா சிலை ஒன்றின் தாடி போலத் தெரிந்தது. ஆனால் ஈவெராவின் முகம்தானா என்று காண்பிக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த பேட்டிகளில் ஈவெரா எப்படித் தன்னை மெருகேற்றினார் என்று ரஞ்சித் உருகக்கூடும். திரைப்படங்களில் மட்டும் அம்பேத்கரோடு நின்றுவிடுகிறார். திரைப்படங்களில் மட்டும் தொடர்கிறது ரஞ்சித்தின் ஈவெராவை மறைக்கும் அரசியல். இதற்காகவே ரஞ்சித்தைப் பாராட்டலாம்.

இத்திரைப்படத்தின் சாதனை என்ன? ஒரு ரஜினி படத்துக்கு இப்படி மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இரண்டாம் முறையாகவும் யோசிக்க வைத்ததுதான் ரஞ்சித்தின் சாதனை. ரஜினி தூத்துக்குடி கலவரத்தை ஒட்டித் தன் கருத்துகளை வெளிப்படையாகக் கூறாத நிலையில் இப்படம் வந்திருந்தால் ரஜினியின் அரசியலில் பெரிய கேள்விகள் எழுந்திருக்கும். மிகத் தெளிவாகத் திட்டமிட்டு இதைத் தவிடுபொடியாக்கி இருக்கிறார் ரஜினி. தலித் கட்சிகளின் தேவைகள் மிக முக்கியமானவை. இக்கட்சிகள் இல்லாவிட்டால் ஒரு பொதுக்கட்சியால் இக்கருத்துகளை இத்தனை தீவிரமாக முன்னெடுக்கவோ மாற்றங்களைக் கொண்டு வரவோ முடியாது. ஒவ்வொரு ஜாதிக்கட்சிக்கும் இது பொருந்தும் என்றாலும் தலித் கட்சிகளின் தேவைக்கு இவை அதிகம் பொருந்தும். அதேசமயம் யதார்த்தத்தில் ஒரு தலித் கட்சியே (அல்லது எந்த ஒரு ஜாதிக்கட்சியும்) பொதுவான பிரதானமான அரசியல் கட்சியாகிவிடமுடியாது. ரஜினியின் அரசியல் தலித் கட்சிகளின் தேவைகளை ஏற்றுக்கொண்ட ஒரு பொதுக்கட்சியாகவே இருக்கமுடியும் என்பதை ரஜினி உணர்ந்திருக்கிறார். அதனால்தான் திரைப்படத்தில் தன்னை அரசியலுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களுக்கு, அத்திரைப்படம் வருவதற்கு முன்பாகவே, தன் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் தான் யார் என்பதை புரியவைத்திருக்கிறார். இது பெரிய திட்டம்தான் என்றாலும் இத்தகைய விஷப் பரிட்சைகளில் இனி ரஜினி சிக்காமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது.

ஒரே வரியில், ஒரு திரைப்படமாக (மட்டும்) அட்டகாசம்.

Share