Archive for திரை

சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்

ஏர் டெக்கான் மற்றும் கேப்டன் கோபிநாத் என்ற பெயர்கள், இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவை. இன்று ஏர் டெக்கான் மூடப்பட்டிருந்தாலும், கேப்டன் கோபிநாத் கொண்டுவந்த புதுமையான யோசனையும் அதனால் விளைந்த பயனும் இன்றியமையாதவை. எதையுமே பெரிதாக யோசி, வித்தியாசமாக யோசி என்பதைச் செயல்படுத்திக் காண்பிக்கும் தொழிலதிபர்களே நாட்டை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்பவர்கள். இன்றைய ஜியோ புரட்சியை இதனுடன் ஒப்பிடலாம். நாளை ஜியோ நஷ்டத்தில் மூடப்பட்டாலும், 4ஜி தொழில்நுட்பத்தை மிகக் குறைந்த விலையில் சாமானியனுக்கும் கொண்டு சென்ற பெருமை ஜியோவையே சேரும். அப்படி ஒரு புரட்சியையே கேப்டன் கோபிநாத் செய்தார். ஜியோ செய்த புரட்சியையும் விட கடினமான புரட்சி என்று புரிந்துகொண்டால், கேப்டன் கோபிநாத்தின் சாதனை நமக்குப் புரியும். கேப்டன் கோபிநாத்தின் ஏர் டெக்கானும் நஷ்டத்தாலும் பிற சூழ்ச்சிகளாலும் மூடப்பட்டது. ஆனாலும் முன்னோடி கேப்டன் கோபிநாத்தின் சிந்தனைதான்.

எல்லா ஆர்வலர்களையும் போல கேப்டன் கோபிநாத்துக்கும் புத்தி ஒரு நிலையில் இருக்காது. விவசாயம், ஹெலிகாட்பர் சேவை, அரசியல் ஆர்வம், ஏர்டெக்கான் என்று அவர் என்னவெல்லாமோ செய்து பார்த்துக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை சந்தேகமே இல்லாமல் ஒரு திரைப்படத்துக்கு உரியதுதான். சோகம் என்னவென்றால், தமிழில் நாம் இன்னும் இதற்குப் பக்குவப்படவில்லை என்பதுதான். இத்தனைக்கும் ஒரு திறமையான இயக்குநரே படத்தை இயக்கி இருக்கிறார். அப்படி இருந்தும் இத்தனை சறுக்கல்.

படத்தின் ப்ளஸ்களை முதலில் வேகமாகப் பார்த்துவிடலாம். ஆபாசம் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்க முடிகிறது. மிகத் திறமையான நடிகர்களைத் தேடி தேடி நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். அச்யுத், பரேஷ் ராவல், பிரகாஷ் பெலவாடி என ஒவ்வொரு மொழியில் இருந்தும் சிறந்த நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார். ஒவ்வொருவரும் படத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு நடிக்கிறார்கள். தமிழ் நடிகர்களில் காளி வெங்கட், விவேக் பிரசன்னா, பூ ராமு என்ற திறமையான நடிகர்கள். திருஷ்டிப் பொட்டு என்றால், ஊர்வசி மற்றும் மோகன் பாபு. மோகன் பாபு தன்னை சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த நாள்களிலேயே நடிக்கத் தெரியாது. இப்போதும் அப்படியே. சூர்யா என்னதான் நடிக்க முயன்றாலும், எனக்கு ஒட்டாது. இவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டுகிறார் அபர்ணா. அவருக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். அப்படி ஒரு நடிப்பு. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்திலும் தரம். ஒவ்வொரு காட்சியும் தரமாக இருப்பதில் அத்தனை மெனக்கெட்டிருக்கிறார்கள். பின்னணியில் முள்ளும் மலரும் ஓடும் காட்சி, சூர்யா – அபர்ணாவின் காதல் காட்சிகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். சடங்குகளை முடித்துக்கொண்டு, பிரச்சினைக்குப் போகலாம்.

கேப்டன் கோபிநாத் பிறப்பால் ஒரு பிராமணர். ஆனால் இந்த சுயசரிதைத் திரைப்படத்தில் சூர்யா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். ஏன் இந்த மாற்றம்? பயோ பிக் என்று சொல்லப்படும் சுயசரிதைத் திரைப்படத்தில் ஏன் இப்படி மாற்றவேண்டும்? பயோ பிக் என்று சொல்லிப் படத்தை எடுத்துவிட்டு, படம் ஆரம்பிக்கும்போது, இதில் வரு காட்சிகள் எல்லாம் கற்பனையே என்று போட்டுவிட்டால் புத்திசாலித்தனமா? அப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை ஹீரோவாக்கிக் காட்டும் படத்தில் வில்லன் மட்டும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்! இதுதான் இவர்கள் ஒரு பயோ பிக்-கை யோசிக்கும் லட்சணம்.

படத்தின் முதல் காட்சியிலேயே பிராமணக் கதாபாத்திரம் ஒன்றைக் காண்பித்து, அந்தக் கதாபாத்திரம் சாதி வெறி பிடித்தது போலவும், எல்லாத் தரப்பு மக்களுடனும் ட்ரைனில் போகப் பிடிக்காமல் வெறுப்பைக் கக்குவது போலவும் காண்பிக்கிறார்கள். இது நடப்பது 1950ல் அல்ல, 2000ல். எங்கள் மாறன் எங்களைப் பறக்க வைப்பான் என்று ஒரு வசனத்தைச் சொல்வதற்காகவே இப்படி ஒரு காட்சியை நுழைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி இவர்களைப் பறக்க வைத்தது பிறப்பால் ஒரு பிராமணர்தான் என்கிற உண்மையைப் பற்றித் திரைப்படக் குழு கண்டுகொள்ளவே இல்லை. சூர்யாவையும் ஒரு பிராமணராகவே காட்டி, பிராமணர்களையே வில்லன்களாகவும் காட்டுவதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? அங்கேதான் இருக்கிறது தமிழ்த் திரைப்பட உலகின் உள்முகம்.

சூர்யாவுக்குத் திருமணம் நடக்கிறது. எப்பேற்பட்ட திருமணம்? சுயமரியாதைத் திருமணம். கேப்டன் கோபிநாத்தின் திருமணம் முறைப்படி எவ்வித சிறு பிசிறுமில்லாமல் ஐயங்கார் முறை திருமணம்! தன் திருமணம் பற்றி கேப்டன் கோபிநாத்தே அவரது சுயசரிதையில் எழுதி இருக்கிறார். ஆனால் திரைப்படத்தில் மணமகன் கருப்புச் சட்டை அணிந்து சுயமரியாதைத் திருமணம். சூர்யா திருமணம் செய்துகொள்ளும் பெண் எந்த ஜாதி? சுயஜாதியா அல்லது வேறு ஜாதியா? ஊர் மக்கள் அனைவரும் சூர்யா ஆரம்பிக்கும் ஒரு தொழிலுக்குப் பணத்தைக் கொட்டி அனுப்புகிறார்களே, அவர்கள் அனைவரும் என்ன ஜாதி? இவை அனைத்தையும் சாய்ஸில் விட்ட இயக்குநருக்கு, பிராமணர்களை உயர்வாகக் காட்டிவிடவே கூடாது என்பது மட்டும் தீர்மானமாக இருந்திருக்கிறது. அதே சமயம், அப்துல் கலாமைக் காட்டுவதில் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். அப்துல் கலாமைப் பார்த்து இப்படி கோபிநாத் புலம்பினாரா என்பதற்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்தப் படக்குழுவிடம் அவரோ அல்லது அவரைச் சேர்ந்தவர்களோ சொல்லி இருக்கக்கூடும். கோபிநாத் அவரது சுயசரிதையில் இப்படிச் சொல்லியது போலத் தெரியவில்லை. அப்துல் கலாம் கேப்டன் கோபிநாத்தின் புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறார் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். உண்மையை வெட்டி அல்லது மாற்றி, எப்படி இல்லாத ஒன்றைப் புகுத்துகிறார்கள் பாருங்கள். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்பதன் பின்னே இருக்கிறது, தமிழ்த் திரைப்பட உலகம் போகும் பாதை.

கேப்டன் கோபிநாத்தின் ‘வானமே எல்லை’புத்தகத்தில் இருந்து.
ஆங்கிலத்தில் வந்த Simply Fly – A Deccan Odyssey புத்தகத்தின் தமிழாக்கம்.

கேப்டன் கோபிநாத் ஒரு தொழிலை ஆரம்பித்துச் செய்ய பல வகைகளில் கஷ்டப்படுகிறார். அவருக்கு உதவுவது அரசியல்வாதிகள்தான். எஸ்.எம்.கிருஷ்ணா, சந்திரபாபு நாயுடு, வெங்கய்யா நாயுடு (பாஜக), ராஜிவ் பிரதாப் ரூடி (பாஜக) என அனைவரும் பல வகைகளில் உதவி இருக்கிறார்கள் – கட்சி பேதமின்றி. விமானத்தின் பாதுகாப்புக் குறைபாடு பற்றி பிரச்சினை வரும்போது மத்திய அரசே ஏர் டெக்கானுக்குத் துணை நிற்கிறது. ஆனால் திரைப்படம் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. என்னவோ அரசியல் அரங்கில் அனைவரும் மாறன்களை ஒழித்துக் கட்டிவிட்டு கோஸ்வாமிகளை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார்கள் என்று காண்பிக்கிறார்கள். சூர்யாவை பிராமணராகவே காட்டி இருந்தால், இந்தக் காட்சிகளை எல்லாம் எடுக்க முடியாது. மீறி எடுத்தால், இந்தப் படம் வெறும் தொழில் போட்டிப் படமாகி இருக்கும். திரைப்படக் குழு இதனை விரும்பவில்லை. கேப்டன் கோபிநாத் எதிர்கொண்டது தொழில்போட்டியைத்தான். ஆனால் சூர்யாவுக்காக இத்திரைப்படம் ஜாதிப் போட்டிகள் நிறைந்த படமாக மாறிவிட்டது!

வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பதே கேப்டன் கோபிநாத்தின் கனவு. எதோ ஒரு பேட்டியில் தற்செயலாக கோபிநாத் ‘வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல்’ என்று சொல்லப் போக, பத்திரிகை அதையே தலைப்புச் செய்தியாக்க, வானத்தில் ஒரு உடுப்பி ஹோட்டல் என்பது ஒரு ஸ்லோகனாக மாறிப் போனது. தமிழில் இந்த உடுப்பி ஹோட்டலை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டுவிட்டார்கள். கோபினாத்தை மாறனாக்கியவர்கள் இதனைக் கூட முனியாண்டி விலாஸ் ஆக்கி இருக்கலாம். ஆனால் இதை மாற்றுவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதை மாற்ற வேண்டும், எதை மாற்றத் தேவையில்லை என்று தெளிவாகவே செயல்பட்டிருக்கிறார்கள்.

எந்த ஒரு கனவுக்குப் பின்னாலும் ஒரு தனிப்பட்ட சோகம் அல்லது உந்துதல் இருக்கும் என்கிற திரைப்பட பாலபாடத்தை இவர்களும் பின்பற்றி இருக்கிறார்கள். கேப்டன் கோபிநாத்தைப் பொருத்தவரை அவரது அப்பா ஒரு தெய்வம். தனது புத்தகத்தையே முதலாக அவர் தனது அப்பாவுக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால் இதில் சூர்யாவைப் புரிந்துகொள்ளாத அப்பாவாக மாற்றிவிட்டிருக்கிறார்கள். பின்னர் தன் மகனையே எண்ணிச் செத்தும் போகிறார். அவரைப் பார்க்க சூர்யாவால் முடியவில்லை. ஏன்? ஏனென்றால் அவரது கையில் பணமில்லை. எனவே விமானத்தில் பறக்க முடியவில்லை. இத்தனை பத்தாம்பசலித்தனமாக யோசித்திருக்க வேண்டாம். தொடர்ச்சியாக நீண்ட காட்சிகள் – அலுப்பைத் தருகின்றன. என்ன நடக்கப் போகிறது எனத் தெரியும் என்னும் திரைக்கதைக்கு இவையெல்லாம் தேவையா? அப்பாவைப் பார்க்க முடிந்திருந்தாலும் மாறன் விமானப் போக்குவரத்தை ஆரம்பித்திருப்பானே? அவனுடைய கனவே அதுதானே?

கேப்டன் கோபிநாத் தேர்தலில் நின்று தோற்றுப் போகிறார். பாஜக சார்பாகப் போட்டி இட்டார். வாஜ்பாயுடன் பிரசாரம் எல்லாம் செய்திருக்கிறார். 2019ல் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராகப் போட்டி இடுகிறார். மீண்டும் தோற்கிறார். ஆனால் திரைப்படம் இந்தத் திக்கில் போகவே இல்லை. அவர்களுக்கு முக்கியமாகப் பட்டது, கோபிநாத்தின் காதலும் கல்யாணமும்தான். தேவைக்கு அதிகமாக அதில் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். முதல் விமானப் பயணம் தோல்வியில் முடியும்போது கூட, மனைவியின் பிரசவம் என்றெல்லாம் சவ்வாக இழுக்கிறார்கள். ஒரு பயோ பிக் திரைப்படத்தில் சொந்தப் பிரச்சினைகளை எந்த அளவில் எங்கே நிறுத்தவேண்டும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

படம் மிக மெதுவாகப் போகிறது. எப்படா விமானம் ஒழுங்கா ஓடும் என்று கொட்டாவி வரும் அளவுக்கு மெல்லப் போகிறது. மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள், காரணங்கள், நம்பிக்கைத் துரோகங்கள், பழிவாங்கல்கள், சூர்யாவின் ஒரே டெம்ப்ளேட் வசனங்கள் – இவையே இந்த தொய்வுக்குக் காரணம். எந்த ஒரு சாதாரண விஷயத்துக்கும் கூட சூர்யா தடதடவென ஓடுகிறார். அங்கே நாம் ஒரு தொழிலதிபரைப் பார்க்க முடிவதில்லை. சூர்யாவைத்தான் பார்க்க முடிகிறது.

ஒரு பயோ பிக் திரைப்படத்தை எடுக்கும்போது திரைப்படத்துக்கு ஏற்றவாறு மாற்றுவது முக்கியமானதுதான். அதற்காக யாரைப் பற்றிப் படம் எடுக்கிறோமோ அவரை முதல் காட்சியிலேயே கொலை செய்துவிட்டு ஆரம்பிக்கக் கூடாது. அப்படி ஒரு முயற்சியையே சூரரைப் போற்று செய்திருக்கிறது. சூரரைப் போற்று என்று தலைப்பு வைத்ததில் தொடங்கி இப்படியே யோசித்து, நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு சுயசரிதைத் திரைப்படத்தை நேர்மையற்ற படமாக்கி இருக்கிறார்கள்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

கீதா (கன்னடம்)

கீதா (க) – கோகக் கிளர்ச்சி என்று சொல்லப்படும் கிளர்ச்சி, கர்நாடகத்தில் கோகக் (ஞானபீட விருது பெற்றவர்) என்பவரால் கன்னட மொழிக்காக தொடங்கப்பட்ட கிளர்ச்சி. மூன்று மொழிக் கல்விக் கொள்கையைக் கைக்கொண்டிருந்த கர்நாடகாவில், பள்ளிகளில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் சம்ஸ்க்ருத மொழிகள் கன்னடத்தைவிட அதிகம் முக்கியத்துவம் பெற்றதால், அதை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சி இது. இப்படியே போனால் எதிர்கால சந்ததி கன்னடத்தைக் கைவிட்டுவிடுவார்கள் என்று அஞ்சி, கன்னடத்தை அலுவல் மொழியாக ஆக்க இக்கிளர்ச்சி செய்யப்பட்டது. முதலில் சுணங்கி இருந்த இந்தப் போராட்டம், ராஜ்குமார் தலைமையில் கர்நாடகாவின் முழு ஆதரவையும் பெற்றது. இந்தப் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் கீதா! இந்தப் பின்னணியில் வரும் காட்சிகளில், பள்ளிகளில் ஹிந்தி ஆங்கிலத் திணிப்பைக் காட்டாமல், ஊரில் மற்ற மொழிக்காரர்களின் வளர்ச்சியைக் காண்பித்து, அதை எதிர்த்துப் போராட்டம் என்று கொண்டு போகிறார்கள். அதிலும் தமிழ் பேசும் நான்கு பேரை கணேஷ் அடித்து நிமிர்த்துகிறார். அடுத்த காட்சியிலேயே பெங்காலிப் பெண்ணைக் காதலிக்கிறார். கோகக் கிளர்ச்சியை மையமாகக் கொண்டு வரும் காட்சிகள் வரை படம் பார்க்கும்படியாகவே உள்ளது. அதற்குப் பின்பு அது காதல் படமாகி எங்கெங்கோ அலைந்து எப்படியோ போய், சீக்கிரம் முடிங்கய்யா என்று கதறும்போது முடிகிறது. இதெல்லாம் நமக்கெதுக்கு? ஆனால் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.

ஷங்கர் நாக்-கின் (பழைய) கீதா என்னும் திரைப்படம் கன்னட க்ளாஸிக் என்று சொல்லப்படுகிறது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சாகா வரம் பெற்றவை. ஜொதயலி ஜொத ஜொதயலி (விழியிலே மணி விழியில் – தமிழில்) பாடல் கர்நாடகாவின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று. இந்தப் படத்தில் வரும் கேளதே நிமகீஹா (தேவதை இளம் தேவி – தமிழில்) பாடலும் மிக நன்றாக இருக்கும். அதே போல் சந்தோஷக்கே ஹாடு என்ற பாடல் கர்நாடகாவின் பட்டி தொட்டிகளிலும் நிச்சயம் ஒலித்திருக்கும். இளையராஜா ரம்மியமான ஒரு பொழுதில் இந்தப் படத்தின் பாடல்களைப் போட்டிருக்கவேண்டும். ஏனே கேளு கொடுவே ஈகா பாடல் அத்தனை இனிமையாக இருக்கும். இந்த ஜொத ஜொதயலி பாடலை எத்தனை முறை கேட்டிருக்கிறேன் என்றே கணக்கில்லை.

(புதிய) கீதா படத்தில் முதல் காட்சியிலேயே (பழைய கீதா படத்தின்) ‘கீதா சங்கீதா’ பாடல்தான். ஹெட்போனில் படம் பார்க்க ஆரம்பித்தபோது இந்தப் பாடல் ஒலிக்கவும் ஏற்பட்ட புல்லரிப்பு கொஞ்சநஞ்சமல்ல. இளையராஜாவின் இசை என்னை எங்கோ கொண்டு போய்விட்டது. கமலின் ஏக் துஜே கேலியே படத்தைப் பார்க்கப் போகும் ஹீரோயினுக்கு கணேஷ் ராஜ்குமாரின் பெருமைகளைச் சொல்லி, கமலே புகழ்ந்த நடிகர் ராஜ்குமார் என்று சொல்லும் வசனமும் உண்டு. கன்னடத்தின் பெருமைகளைச் சொல்லும் கணேஷ், ராஜ்குமாரின் ஒரு பாடலைக் குறிப்பிட்டு சிலாகிக்கிறார். அது, ஜீவா ஹூவாகிதே. இதுவும் ராஜா இசை! கேட்டாலே மனதை உருக்கிவிடும் ஒரு காதல் பாடல்.

நல்லா எழுதுறீங்கய்யா வசனமும் திரைக்கதையும்!

Share

OTT வழியாக வரும் திரைப்படங்கள்

கணவர் பெயர் ரணசிங்கம் படத்தின்போதே எழுத நினைத்தேன். படத்தின் விமர்சனம் தடம் மாறிப் போய்விடுமோ என்று எழுதாமல் விட்டேன். இந்தத் திரைப்படம் பார்க்க ஒரு காட்சிக்கு 199 ரூ. சென்னையில் தியேட்டருக்குப் போய் ஒரு படம் பார்த்துவிட்டு வர எல்லாச் செலவுகளும் சேர்த்து குறைந்தது 500 ரூபாய் வரை ஆகும். நேரமும் கணிசமாகவே ஆகும். வீட்டில் அமர்ந்து பார்த்தால் 199 ரூபாய் மட்டுமே. ஆனால் திரையரங்கு தரும் பிரமாண்டம் நிச்சயம் தவறிப் போகும். பெரிய தொலைக்காட்சி, 5.1 என்று இந்த அனுபவத்தைக் கொஞ்சம் நெருங்கலாம் என்றாலும், திரையரங்கு தரும் அனுபவம் அலாதிதான். அதேசமயம், பணமும் நேரமும் எத்தனை மிச்சம் என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும்.

விஸ்வரூபம் திரைப்படம் வந்தபோது கமல் இதைச் செய்ய நினைத்தார். அன்று நடந்த தவறு என்ன? சுருக்கமாகச் சொன்னால், பேராசை. ஒரு காட்சிக்கு ஆயிரம் ரூபாய்! இது கமலின் முடிவா, டிஷ் நிறுவனத்தின் முடிவா என்பதெல்லாம் தெரியாது. ஒரு குடும்பத்துக்கே ஆயிரம் ரூபாய்தான் என்று யோசித்து அவர்களே சமாதானம் ஆகி இருப்பார்கள் போல. பொருட்படுத்தத் தக்க அளவுக்குக் கூட முன்பதிவு இல்லை. அத்திட்டம் கைவிடப்பட்டு, திரைப்படம் வழக்கம்போல் திரையரங்கிலேயே வெளியானது. இன்று க/பெ 199 ரூபாய்க்கு வந்திருக்கிறது.

அமேஸான் ப்ரைம் ஒரு மாதத்துக்கு 160 ரூபாய் வரை வாங்கிக்கொண்டு பல திரைப்படங்களைப் பார்க்க அனுமதிக்கிறது. எப்படியும் புதுத் திரைப்படம் ஒன்றாவது பார்த்துவிட முடிகிறது. வேற்று மொழிப் படங்களையும் பார்க்க முடிகிறது. அதை ஒப்பிட்டால் இந்த 199 ரூபாயே அதிகம் என்கிற தோற்றம் உருவாகி வந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது.

டிஷ் வழியாகப் பார்க்கப்படும் படங்களில் பிரச்சினைகள் என்ன? டாடா ஸ்கையின் ஆன் டிமாண்ட் மூலம் படம் பார்த்தால், அப்படத்தை அந்தத் தினம் முழுக்கப் பார்க்கலாம். ஆனால் க/பெ அப்படிப் பார்க்க முடியவில்லை. ஒரு காட்சி மட்டுமே. அதாவது திரையரங்கில் பார்ப்பதைப் போலவே. அன்று திடீரென மழை பெய்து படம் தெரியாமல் போனால்? மின்சாரம் தடைபட்டால்? வீட்டுக்கு யாராவது வந்துவிட்டால்? பணம் போனது போனதுதான். திரையரங்கில் இப்பிரச்சினைகள் எல்லாம் இல்லை. வீட்டில் இந்த அத்தனை பிரச்சினைகளும் உண்டு. எனவே ஒரு நாளைக்கு ஒரு காட்சி என்பதை மாற்றவேண்டும்.

அதேபோல் எதாவது ஒரு சானலில் என்பதைக் கைவிட வேண்டும். ஏன் எக்ஸ்க்ளூசிவிட்டிக்குப் (தனியுரிமை) போகிறார்கள் என்றே தெரியவில்லை. அமேஸான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு சானலின் வழியாகவும் படம் பார்க்க முடியும் என்கிற வசதி வரவேண்டும். ஒரு படம் பார்க்க கட்டணம் இவ்வளவு என்று மட்டுமே நிர்ணயிக்கவேண்டும். அதாவது இந்த ஓடிடி சானல்கள் திரையரங்குகளின் இடத்தை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். யாராவது 10% தள்ளுபடி கொடுத்து கூடுதல் பார்வையாளர்களைப் பெற முடிந்தால் அது அவர்கள் இஷ்டம். இப்படிச் செய்தால், டிஷ், அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு தளத்தின் வழியாகவும் பார்க்க முடியும் என்பதால், நிச்சயம் பார்வையாளர்கள் கூடுவார்கள்.

ப்ரைமில் கூட, இப்படி தனியுரிமை இல்லாமல் வெளியாகும் படங்களுக்குப் பணம் வசூலிக்கலாம். ப்ரைமில் இல்லாதவர்கள் ஒரு படத்துக்கு மட்டும் பணம் செலுத்திப் பார்க்க முடியும் என்ற வசதியைக் கொண்டு வரலாம். நெட்ஃப்ளிக்ஸிலும். ப்ரைம் மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் சந்தாதாரர்களாக இருப்பவர்களுக்கு 50% தள்ளுபடி தரலாம். இப்படியெல்லாம் செய்தால் திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையைப் பல மடங்கு கூட்ட முடியும்.

எந்த ஒரு சானலில் படம் ஒளிபரப்பானாலும் மறுநாளே திருட்டுத்தனமாகப் படத்தைத் தரவிறக்கிக் கொள்ள முடியும் என்றாகிவிட்டது. அப்படி இருக்கும்போது, படத்துக்குக் குறைவான கட்டணத்தை வைத்துக் கூடுதல் பார்வையாளர்களைக் கொண்டு வர முயலவேண்டும். விஸ்வரூபம் பார்க்க 1000 ரூபாய் என்ற தப்பை, எதோ ஒரு சாதாரணப் படத்துக்கு 200 ரூபாய் என்று வைத்து, இன்னொரு வகையில் தவறு செய்யக் கூடாது. தேவை என்றால் முதல் நாள் மட்டும் 200 ரூபாய், மறுநாள் 100 ரூபாய் என்று கூட யோசிக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்வையாளர்களைக் கூட்டுவது எப்படி என்று யோசிப்பது நல்லது. அதற்கு இந்தத் தனியுரிமை என்னும் எக்ஸ்க்ளூசிவிட்டி ஒழியவேண்டும். அதற்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒரே அணியில் வரவேண்டும். இதெல்லாம் நடக்குமா எனத் தெரியாது. நடக்காமல் இருக்கவே வாய்ப்பதிகம். அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற வணிக நிறுவனங்களும் இப்படி நடப்பதை விரும்பாது, அனுமதிக்காது. ஆனால், எந்தத் திரையரங்கில் எந்தப் படம் வரவேண்டும் என்ற கட்டுப்பாடு எப்படி இல்லையோ அது போல இந்த ஓடிடி உலகம் மாறாதவரை, திரைப்படங்கள் தங்களுக்கான நியாயமான சந்தையை முழுமையாகப் பெறப் போவதில்லை.

Share

கணவர் பெயர் ரணசிங்கம் – இலக்கற்ற அம்பு

Spoilers ahead. கதையைத் தெரிந்துகொள்ளவேண்டாம் என்று விரும்புகிறவர்கள் நிச்சயம் படிக்கவேண்டாம். நீண்ட பதிவு.

நல்ல ஒரு கதையை வைத்துக்கொண்டு, அதில் தேவையே இல்லாமல் அரசியல் கலப்பதால் எத்தனையோ படங்கள் தங்கள் இலக்கைத் தொடாமலேயே தேங்கிப் போய்விடுகின்றன. அதிலும் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவை இப்படித்தான். மீண்டும் மீண்டும் ஒரே அரசியல்தான் இதிலும் சொல்லப்படுகிறது. இந்தியா வாழ லாயக்கற்ற தேசம், இந்தியாவில் தனிமனிதனால் வாழவே முடியாது என்ற செய்திகள்தான். இந்திய அரசு (இந்தப் படத்தில் மாநில அரசையும் கொஞ்சமே கொஞ்சம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்) எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் கண்டுகொள்வதே இல்லை. நீங்கள் இருந்தாலும் செத்தாலும் அரசுக்குக் கவலை இல்லை. இதைத்தான் இந்தப் படமும் சொல்கிறது. கவலைக்குரிய ஒரு பெண்ணின் வலியோடு. இந்த அரசியலில் கவனிக்கப்படவேண்டிய இந்தப் பெண்ணின் வலியும் அது சார்ந்த பிரச்சினைகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன.

ரணசிங்கம் வீரன், தீரன், முற்போக்காளன், எக்ஸட்ரா எக்ஸட்ரா. ராமநாதபுரத்தில் தன் கிராமத்தில் குடிநீருக்காகப் போராடுகிறான். கிராமத்தின் ஒற்றுமைக்காகப் போராடுகிறான். அவனை அத்தனை காதலித்து ஒரு பெண் திருமணம் செய்துகொள்கிறாள். அரியநாச்சி (ஐஸ்வர்யா ராஜேஷ்). படம் தொடங்கிய பத்து நிமிடத்துக்குள்ளாகவே அவனது மரணச் செய்தி வந்து சேர்கிறது. ரணசிங்கத்தின் வீர தீர காதல் எல்லாம் அவ்வப்போது நினைவலையாகச் சொல்லப்படுகிறது. இன்னும் எதாவது ஒரு நினைவு வந்து அங்கேயும் விஜய் சேதுபதி வந்துவிடுவாரோ என்ற அச்சம் வரும் அளவுக்கு அதீதமாக ரணசிங்கத்தின் காட்சிகள் வருகின்றன. பத்தாம் நிமிடத்திலேயே அவன் செத்துப் போய்விடுவதால், கதை எதைப் பற்றியது என்ற ஆர்வம் நமக்கு வருகிறது. ஆனால் படமோ ரணசிங்கத்தை விவரிப்பதிலேயே சுற்றுகிறது.

பின்னர் ஒரு வழியாகக் கதை என்பது ரணசிங்கத்தின் உடலை துபாயில் இருந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருவதுதான் என்பது தெரிகிறது. ஏன் துபாய் அரசும், அங்கே ரணசிங்கம் வேலை பார்த்த பன்னாட்டு நிறுவனமும் அவன் உடலைத் தரவில்லை? அதற்குச் சொல்லப்படும் காரணம் நம்பும்படியாக இல்லை. நம்புவோம். ஏனென்றால் கதை அந்தக் காரணம் பற்றியது அல்ல. அப்படிச் செத்துப் போகும் இந்தியர்களின் உடல் இந்தியாவுக்கு வருவதைப் பற்றியது. இதிலுள்ள சிக்கலில் இந்தியாவின் அரசு நிர்வாகம் எத்தனை மெத்தனமாகச் செயல்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இப்படம் பற்றிய நோக்கம்.

ரணசிங்கத்தின் திருமணம் இரவோடு இரவாக நடக்கிறது. என்ன காரணம் என்றெல்லாம் படத்தைப் பார்த்து நொந்துகொள்ளுங்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கு ஆதாரமே இல்லை. அதாவது ஊரில் எல்லாருக்கும் தெரியும். ஆதாரம் மட்டும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக ரண சிங்கம் செத்துப் போனதோ துபாயில். அவன் உடலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று மனுச் செய்ய அவரது மனைவிக்குத்தான் உரிமை இருக்கிறது. ஆனால் அவர்தான் மனைவி என்பதற்கு ஆதாரம் இல்லை. அதை அரசு கேட்கிறது. இதில் என்ன தவறு? இத்தனைக்கும் அரசு அதிகாரியாக வரும் பிராமணர், தங்கை மூலம் உடலைக் கோரலாம் என்று நியாயமான, நடக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் சொல்கிறார். வசனம் எழுதியவர் அவரை அறியாமலேயே இந்த உண்மையை எழுதி இருக்கவேண்டும். இங்கே மட்டும் அல்ல, அரசின் குரலாகப் பல இடங்களில் உண்மையை எழுதி இருக்கிறார். இதற்காக இவரையும் இயக்குநரையும் பாராட்டவேண்டும். ஆனால் ரணசிங்கத்தின் மனைவி அதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், தான் தான் ரணசிங்கத்தின் மனைவி என்று நிரூபிக்கும் போராட்த்துக்குள் போகிறாள். ரணசிங்கம் எத்தகையவன் என்று சொல்வதை முக்கிய நோக்கமாகக் கொண்ட படம், இங்கே ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியே என்று நிரூபிக்கப் போராடும் பெண்ணின் படமாக மாறுகிறது.

ரணசிங்கத்துக்கு ஆதரவாகவே நல்லவராக வரும் கலெக்டர் (ரங்கராஜ் பாண்டே) தன்னளவுக்கு இயன்றவரை உதவி செய்கிறார். முதலில் ரணசிங்கத்துக்கும், பின்னர் அவனது மனைவிக்கும். ஆனால் பல மாதங்கள் ஆகியும் ரணசிங்கத்தின் உடல் இந்தியாவுக்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது. காரணம், பன்னாட்டு நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தில் ரணசிங்கம் இறந்துவிட்டதால், அந்த விபத்தை மறைக்க நினைக்கும் நிறுவனம், ஏதேதோ பொய் சொல்கிறது. செட்டில்மெண்ட்டுக்கெல்லாம் வருகிறது. ஆனால் உடலைத் தர மறுக்கிறது. ஏனென்றால் உடலே அவர்களிடம் இல்லை. இது இறுதிக்காட்சியில்தான் நமக்குத் தெரிகிறது.

இதற்கிடையில் துபாயில் ஸ்ரீதேவி இறந்து போக, அதற்கு பிரதமர் இரங்கல் செய்தி போட்டு ட்வீட் போடுகிறார். அவரது உடல் மூன்றே நாளில் இந்தியா வருகிறது. இந்த ஒப்பீடு ஒரு நல்ல கற்பனைதான். ஆனால் யதார்த்தமும் இதுதான். ஒரு நடிகையின் மறைவுக்குப் பிரதமர் ட்வீட் போடுகிறார், ஆனால் ஒருத்தன் துபாயில் செத்துப் போய் பத்து மாதங்கள் ஆகின்றன, அவன் உடல் வரவில்லை என்பதுதான் யதார்த்தம். கம்யூனிஸ்ட் கட்சியிலும் இப்படித்தான். பாஜகவிலும் இப்படித்தான். ஊரிலும் வீட்டிலும் இப்படித்தான். ஆனால் இயக்குநர் இதைத் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ரணசிங்கத்தின் மனைவி சென்னைக்கு வந்து, மத்திய அமைச்சர் வரும் காரில் போய் விழுந்து நீதி கேட்கிறாள். மத்திய அமைச்சர் ஒரு பெண். பாதுகாப்பு அமைச்சர். ஆனால் நிர்மலா சீதாராமன் அல்ல! அவர் பரிவுடன் விசாரித்து, ரணசிங்கத்தின் மனைவி அரியநாச்சியுடன் ஒரு செல்ஃபியும் போட்டு, சக அமைச்சருக்கு டேக்-க்கும் செய்கிறார். விஷயம் இந்தியா முழுக்கவும் பரவுகிறது. ஆனால் பிரயோஜனமில்லை.

அரியநாச்சி தமிழ்நாட்டு முதல்வரைப் பார்க்க முயல்கிறாள். ஆனால் போலிஸ் தரப்பு அவளை முதல்வர் அருகில் கூட வரவிடுவதில்லை. இப்படியே வெளியுறவுத் துறை அதிகாரிகளும் செய்கிறார்கள். வேறு வழியே இன்று டெல்லி போகிறாள். அணையைத் திறந்துவிட வரும் பிரதமர் வரும் இடத்துக்குப் போய், அணையில் விழுந்து தற்கொலை செய்யப் போவதாகச் சொல்லிப் போராட்டம் நடத்துகிறாள். கையில் குழந்தையுடன். அதை லைவாகவும் ஒளிபரப்பாகிறது. பிரதமர் மோதி வருகிறார். அதாவது மோதியைப் போல ஒருவர் வருகிறார். அவருக்கு அப்போதுதான் அந்த விஷயம் தெரிகிறது. பரிவுடன் பரிசிலீக்கிறார். அடுத்த ஒரு மணி நேரத்தில் உடல் இந்தியா வரவேண்டும், அதுவரை நான் இந்த இடத்தை விட்டுப் போகப் போவதில்லை என்று அங்கேயே உட்கார்ந்து கொள்கிறார். இந்தியாவே பரபரக்கிறது. அடுத்த மூன்று மணி நேரத்தில் ரணசிங்கத்தின் உடல் இந்தியா வருகிறது. அரியநாச்சியே அணையைத் திறந்துவிடட்டும் என்று பரிவுடன் பிரதமர் சொல்ல, அரியநாச்சியே திறந்து வைத்துவிட்டுப் போகிறாள். இந்த அரசு சாமானிய மக்களுக்கானது என்று சொல்கிறார் பிரதமர்.

ரணசிங்கத்தின் உடல் வீட்டுக்கு வருகிறது. எரிக்கும்போது அரியநாச்சி கண்டுகொள்கிறாள், அது ரணசிங்கத்தின் உடல் இல்லை என. ஆனாலும் அது ரணசிங்கத்தின் உடல்தான் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறாள். இரவில் தனிமையில் ‘வேற எவனோ ஒருத்தன் உடம்பை கொடுத்து ஏமாத்திட்டாங்க தேவடியா பசங்க’ என்று சொல்கிறாள். தேவடியா பசங்க என்பது ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உருப்படியான படமாகவே எடுத்திருக்கலாம். தமிழில் அதிகம் விவாதிக்கப்படாத கதை இது. ஒரே கதையிலேயே கிராமத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் காட்ட நினைத்தது முதல் தவறு. விஜய் சேதுபதிக்காக கதையை அவரைச் சுற்றிப் பின்னிவிட்டது இரண்டாவது தவறு. அவனது உடலைக் கொண்டு வருவதற்கு ஏதேனும் காரணங்களைச் சொல்லவேண்டும் என்பதற்காக, கோர்ட்டில் அவன் மீது இருக்கும் வழக்குக்களை எல்லாம் சேர்த்து என்னவெல்லாமோ வசனங்களைச் சொல்லவிட்டது அடுத்த குழப்பம். பன்னாட்டு நிறுவனமும் துபாய் அரசும் சேர்ந்துகொண்டு செய்யும் பிரச்சினைக்கு இந்திய அரசும் தமிழக அரசும் என்ன செய்யமுடியும் என்ற பூதாகரமான கேள்விக்கு பதிலே சொல்லாமல் விட்டது பெரிய சறுக்கல். இதில் ஸ்ரீதேவியின் உடல் மட்டும் மூன்றே நாளில் வருகிறது என்பதை இத்துடன் எப்படித் தொடர்பு படுத்த முடியும்?

பன்னாட்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் நடக்கும் ஒரு விபத்தை மூடி மறைத்தால், அதுவும் அது வேறொரு நாட்டில் நடந்தால், அதை இங்கிருந்தபடியே ஒரு கிராமத்துப் பெண் எதிர்கொள்வது உள்ளபடியே கஷ்டம்தான். இதன் பொருள் இந்திய அரசு அவளைக் கைவிட்டுவிட்டது என்பதல்ல. வேண்டுமென்றே இந்தியாவைத் திட்டவேண்டும் என்று நினைத்தால்தான் இப்படி யோசிக்கமுடியும். ரேஷன் அரிசியில் பெயர் சேர்க்க வரும் ஒரு அதிகாரியிடம் நாங்க இந்தியாவுலயே இல்லைன்னு எழுதிக்கோ என்று அரியநாச்சி சீறுகிறாள். ஆனால் வந்த அதிகாரி கேட்கும் கேள்வி நியாயமானது. அந்த நியாயத்தை மறைக்க அவர்கள் கேட்ட விதத்தை வேண்டுமென்றே மோசமாக்கி எடுத்திருக்கிறார் இயக்குநர். இப்படித்தான் அந்த பிராமண அதிகாரி விஷயத்திலும் நடக்கிறது.

பிராமண அதிகாரியின் விஷயத்தில் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டி இருக்கிறது. படத்தில் வரும் எந்த ஒருவரின் சாதியும் மதமும் தெரிவதில்லை. இரண்டு பேரைத் தவிர. ஒருவர் பிராமணர். இவர் கலெக்டரின் உதவியாள். அதிகாரி. அரசுக்கு விழுந்து விழுந்து வேலை செய்யும் ஆள். கலெக்டரையும் மீறி, அரியநாச்சியுடம், வந்த பிணம் ரணசிங்கம்தான் என்று கையெழுத்து வாங்க அலைகிறார். அரியநாச்சியைப் பற்றி அலட்சியமாகப் பேசுகிறார். அவரை இப்படிக் காண்பிக்கிறார்கள். இன்னொருவர் முஸ்லீம். அவர்தான் ரணசிங்கத்தை, பணம் வாங்கிக்கொண்டு துபாய்க்கு வேலைக்கு அனுப்புகிறார். துபாய் பன்னாட்டு கம்பெனி இவர் மூலமாகத்தான் பண பேரம் பேசுகிறது. ஆனால் இவர் பேசும் வசனத்தில் ஒன்றில்கூட வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். தன் கையறு நிலையைப் பேசுகிறார் இந்த ஏஜெண்ட். மிகத் தெளிவாக இரண்டு கதாபாத்திரங்களையும் அமைத்திருக்கிறார்கள். முஸ்லீம் ஒருவரை நல்லவராகக் காண்பிப்பது, சூழ்நிலைக் கைதியாகக் காண்பிப்பதெல்லாம் இயக்குநரின் உரிமை. அதில் நமக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் அதற்கு இணையாக இன்னொரு கதாபாத்திரம் வரும்போது எப்படி யோசிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டி இருக்கிறது.

ஸ்ரீதேவி இறந்தபோது இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். அவருக்கு ஒரு ட்வீட் செய்தாலே போதும் எப்படி உதவுவார் என்று உலகமே வியந்தது. அவர் இறந்தபோது காங்கிரஸ் அமைச்சர்களே அதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். ஆனால் இயக்குநருக்கு அது மட்டும் நினைவில்லை போல.

பிரதமரே வந்திருந்து ஒரு பெண்ணுக்கு உதவுகிறார். ஆனாலும் அந்தப் பெண் அரியநாச்சி தேவடியா பசங்க என்று யாரைத் திட்டுகிறாள்? அவளுக்கே அதில் தெளிவில்லை. இயக்குநருக்கும் தெளிவில்லை. யார் மீது கோபத்தைச் சொல்வது என்று தெரியவில்லை. திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. புகைப்படமும் இல்லை. பத்திரிகையும் இல்லை. அப்படியானால் அதிகாரிகளால் எப்படி உதவமுடியும்? அதற்கான வழிகளையும் ஒரு அதிகாரி சொல்கிறார். எல்லா இடங்களிலும், அரசு அலுவலர்களின் மெத்தனத்தோடும் அலட்சியத்தோடும், வேலை நடக்கத்தான் செய்கிறது.

வெளிநாட்டில் இறந்து போன ஒருவரின் உடலைக் கொண்டு வருவது என்பது நிச்சயம் சிக்கல் நிறைந்த ஒன்றுதான். அதற்கு இந்தியாவின் மீது கோபப்பட்டு, வெறுப்புடன் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அரியநாச்சியாக அட்டகாசமாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் அற்புதமான நடிப்பு, இந்த அரசியலில் பின்னுக்குப் போய்விடுகிறது.

எப்படியாவது இந்திய, ஹிந்து, பாஜக வெறுப்பைக் காண்பித்தால்தான் ஆதரவு கிடைக்கும் என்பதையெல்லாம் விட்டுவிட்டு, இந்தப் படத்தை அதன் ஆதாரக் கருத்தை மட்டுமே சுற்றி எடுத்திருந்தால், முக்கியமான படமாக இருந்திருக்கும். ஆரம்பக் காட்சிகளில் வரும் கிராமம் மற்றும் குடும்பம் சார்ந்த காட்சிகள் மிக இயல்பாகவும் இயற்கையாகவும் இருந்தன. அதைவிட்டுவிட்டுப் படம் எப்போது புரட்சி வசனங்களை நோக்கிப் போகிறதோ அங்கேயே தன் பிடியை இழக்கத் துவங்குகிறது. அதிலும் உன் பேர் என்னப்பா என்ற கேள்விக்குக் கூட, ஊர் நியாயம் உலக நியாயம் சாதி மத இன வேறுபாடு என்று பக்கம் பக்கமாக விஜய் சேதுபதி பேசத் துவங்கும்போது கொட்டாவிதான் வருகிறது. அவர் செத்துப் போனாலும் மீண்டும் மீண்டும் வந்து கொல்கிறாரே என்று தோன்றுகிறது. இந்தக் குழப்பத்தையெல்லாம் விட்டுவிட்டு, அரசுடன் போராடும் ஒரு பெண்ணின் கதையை மட்டும் சொல்லி இருந்தால், அரசின் மெத்தனமும் அலட்சியப் போகும் பின்னணியில் அதுவாகவே வெளிப்படுவதாகக் காட்டி இருந்தால், இந்தப் படம் வேறு தளத்துக்குப் போயிருக்கும். அதைத் தவறவிட்டுவிட்டார் இயக்குநர்.

பின்குறிப்பு: சென்னைக்கு வந்து இறங்கிய உடனேயே தெரிந்த ஒருவர் உதவுவது, ஒரு கதாபாத்திரம் தலையை ஆட்டிக்கொண்டே வருவது (சோ-வின் சரஸ்வதி சபதம் நினைவுக்கு வந்தது) என்பதையெல்லாம் சினிமா உலகம் தாண்டி எத்தனையோ வருடங்கள் ஆகின்றன. இயக்குநர் கொஞ்சம் மனம் வைக்கவேண்டும்.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

Section 375

Section 375 (Hindi) 18+ பதிவு. Spoilers ahead.

மீ டூ விவகாரம் வந்தபோதே மிகப் பரவலாக அலசப்பட்ட ஒரு விஷயம், பரஸ்பர ஒப்புதலுடன் நடக்கும் உறவு பின்னர் எப்படி பாலியல் அத்துமீறலாகக் கருதப்படலாம் என்பது. சில வழக்குகளில் ‘ஐந்து வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார்’ என்றெல்லாம் வாசிக்கும்போது ஆச்சரியமாக இருக்கும். எத்தனை முறை பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டாலும், ஒரு தடவை சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் கூட அது பாலியல் பலாத்காரமே என்பதுதான் இதிலுள்ள செய்தி.

நோ மீன்ஸ் நோ என்று சொன்ன பின்க் திரைப்படம் போல, இந்தத் திரைப்படமும் பாலியல் அத்துமீறலைப் பற்றிச் சொல்கிறது. ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், இங்கே ஒரு பெண் பொய்யாக வழக்கைப் புனைகிறாள். டிஃபன்ஸ் தரப்பு எத்தனையோ ஆதாரங்களை வலுவாகக் காட்டியும், குற்றம் நடக்கவில்லை என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிரூபிக்க முடியாமல் போகிறது. எத்தனை முறை பரஸ்பர ஒப்புதலுடன் உறவு கொண்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றதுக்கு வந்து பாலியல் பலாத்காரம் என்று சொன்னால், அதற்கு ஆதாரம் இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள சட்டம் அறிவுறுத்துகிறது. அதன் அடிப்படையில் தீர்ப்பு வருகிறது.

சட்டம் சார்ந்த படங்களைச் செய்வதில் ஹிந்தி திரை உலகம் நிபுணத்துவம் பெற்றுவிட்டது என்று நினைக்கிறேன். மிக முக்கியமான படம் தல்வார் என்று சொல்லலாம். இன்னொரு முக்கியமான படம் ஆர்ட்டிகிள் 15. ஜாலி எல் எல் பி கொஞ்சம் கமர்ஷியலாக இருந்தாலும், மிக சுவாரஸ்யமான படம். பின்க்கும் அப்படியே. இந்தப் படமும். பின்க் மற்றும் செக்‌ஷன் 375ல் நமக்குப் புலம்ப பல விஷயங்கள் இருந்தாலும், பாலியல் ரீதியான பிரச்சினையில் சட்டத்தின் பார்வையை இந்தியா முழுக்க கொண்டு சென்றதில், இந்தப் படங்கள் மிக முக்கியமான பங்கை வகித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. A must watch movie.

முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை எங்கேயும் படம் அலைபாயவில்லை. நூல் பிடித்தாற்போல் செல்கிறது. ஒரு காட்சி கூட போரடிக்கவில்லை. படத்தை மக்களுக்குக் கொண்டு செல்கிறேன் என்று, நேர் கொண்ட பார்வை செய்த அநியாய அக்கிரமங்களைச் செய்யவில்லை. தான் வக்கீல் மட்டுமே என்று உணர்ந்து நடிக்கும் நடிகர்கள். மிக முக்கியமான படம் இது.

Share

ஆயுஷ்மான் பவ – கன்னடத் திரைப்படம்

சென்ற ஞாயிற்றுக் கிழமை இரவு. சென்னை மழையில் குளிர்ந்துகொண்டிருந்த வேளையில் என்ன செய்வது என்று தெரியாமல், மூளைக்கு வேலையே வைக்காத படம் எதாவது பார்ப்போம் என்று அமேஸான் ப்ரைமில் தேடினேன். கிட்டத்தட்ட 40 நாள்களாக எந்தப் படமும் பார்த்திருக்கவில்லை. தேடுதலில் கண்ணில் பட்டது, ஆயுஷ்மான்பவ என்ற கன்னடப் படம். ஷிவராஜ்குமார் நடித்தது. இயக்கம் பி.வாசு என்று கண்ணில் படவும், இதுதான் நான் தேடிய படம் என்று பார்க்கத் துவங்கினேன்.

வாசுவுக்கு இசையின் மீது என்னவோ அடங்காத வெறுப்பு இருக்கிறது. அதை இசையின் மீதான காதல் என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இசை எல்லாவற்றையும் சரி செய்கிறது. குடும்பத்துக்குள் இருக்கும் சண்டையை, பைத்தியத்தைக் கூட குணம் செய்கிறது. ஏன் ஷிவ்ராஜ்குமார் இதையெல்லாம் செய்கிறார் என்றால், அவர் டாக்டர், மனோதத்துவ நிபுணர், பாட வரும், ஆட வரும், சண்டை போட வரும், சமைக்க வரும், அன்பு பொழிய வரும். சந்திரமுகி ரஜினிக்கும் அண்ணன்! பைத்தியக்காரப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய், காடெல்லாம் சுற்றி, கிராஃபிக்ஸ் புலி துரத்த, குத்துப் பாட்டு ஆட, போலிஸ் தேட, இசையாலே அந்தப் பெண்ணைக் குணப்படுத்துகிறார். உதவுவது எப்போதும் நெற்றியைச் சுருக்கியபடியே பேசும் சுஹாசினி அக்கா! பத்தாததற்கு ஷிவராஜ் குமாரின் அப்பா நம்ம ஊர் பிரபு. அவரால் உட்காரவோ எழுந்திருக்கவோ முடியவில்லை. பாவமாக இருந்தது. சின்னதம்பி நினைவுக்கு வந்தது! கடைசியில் ஷிவ்ராஜ் குமார் அந்தப் பெண்ணையே கைப் பிடிக்கிறார். ஆனந்த் நாக்தான் தாத்தா.

இடைவேளை வரை கொஞ்சம் அறுவையாக இருந்த படம், இடைவேளைக்குப் பிறகு தாங்கவே முடியாத அறுவையாகிவிட்டது. இரண்டே இரண்டு விஷயங்கள் கொஞ்சம் பரவாயில்லை, ஒன்று பாடல்கள். இன்னொன்று, காமெடி. காமெடி என்றால் சாது கோகிலாவின் இரட்டை அர்த்த காமெடி அல்ல. அது சந்திரமுகியின் வடிவேலு-ரஜினி காமெடியின் நகல். இங்கே நன்றாக இருந்தது, ரங்காயன ரகுவின் காமெடி. கலக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். ஷிவராஜ்குமார் மிக நன்றாகவே நடித்தார். படம் நொந்து நூலாகி முடிந்தபோது ஞாயிறு முடிந்துவிட்டிருந்தது. மூளையைக் கழற்றி வைத்துவிட்டுப் பார்த்து நம்மை நாமே திட்டிக் கொள்ள ஏற்ற படம். தேவைப்படுபவர்கள் பார்க்கவும்.

Share

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (2 பாகங்கள்)

எனது ‘நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்’ புத்தகங்களுக்கு நான் எழுதிய முன்னுரை இங்கே. முதல் பாகம் ரூ 140. இரண்டாம் பாகம் ரூ 170. இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)

போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234

வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609

பாகம் 2க்கான முன்னுரை:

தமிழ்த் திரையுலகம் புதிய அலை இயக்குநர்களின் வருகைக்குப் பின்பு மிக வேகமாக ஹிந்து – ஹிந்துத்துவ – இந்திய வெறுப்புக்குள் தீவிரமாகப் பயணிக்கிறது. ஹிந்துக்களைக் கிண்டல் செய்யும் ஒரு காட்சி இல்லை என்றால் சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்னும் அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது என்றாலும், எவ்வித அரசியலும் அற்ற படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால் இன்று எந்த ஒரு படத்திலும் தேவையே இல்லாமல் ஹிந்துக்களைக் குறை சொல்வது என்பது வேண்டுமென்றே திணிக்கப்படுவதைப் பார்க்கலாம்.

தமிழ்த் திரையுலகம் இந்த வகையான ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டது போவது. இப்படிப் பல முனைத் தாக்குதல்களில் இறங்கி இருக்கிறது தமிழ்த் திரையுலகம்.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

என் நண்பர் ஒருவர் சொன்ன விஷயம் அது. அவர் ஒரு ஹிந்து அமைப்புக்கு உதவும் சிறிய கிளை அமைப்பில் பொறுப்பில் இருக்கிறார். அவரது அலுவலகத்தை ஒரு படம் எடுக்கப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். அலுவலகமும் அதிகம் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டார்கள் போல. அந்த அலுவலகத்தின் வரவேற்பு மேஜையில் ஒரு விவேகானந்தர் சிலை இருக்குமாம். அது வரக்கூடாது என்று படத்தின் இயக்குநர் சொல்லி இருக்கிறார். படக்குழு அந்த விவேகானந்தர் சிலையை எடுத்து ஓரமாக வைத்துவிட்டது. பின்னர் பின்னணியில் கார்ல் மார்க்ஸ் படம் வரவேண்டும் என்று சொல்லி அங்கே மார்க்ஸை ஒட்ட வந்திருக்கிறார்கள். அப்போதுதான் அலுவலகத்துக்கு உறைத்திருக்கிறது, இதையெல்லாம் யோசிக்காமல் சம்மதித்துவிட்டோமே என்று. அந்தப் படம் வெளியாகவில்லை என்பது ஒரு நிம்மதி. ஆனால் இதில் இன்னொரு சோகமும் உள்ளது. அந்த இயக்குநர் போகும்போது அழகான அந்த விவேகானந்தர் சிலையைக் கொண்டு போய்விட்டாராம்! அதாவது படத்தின் சட்டகத்துக்குள் விவேகானந்தர் வரத் தேவையில்லை. கார்ல் மார்க்ஸ் வரவேண்டும். ஆனால் விட்டுக்கு விவேகானந்தர் சிலை வேண்டும்!

எனவே ஒரு காட்சியில் ஒருவர் நாமம் போட்டு வருகிறார் என்றாலோ அல்லது உத்திராட்சை அணிந்து வருகிறார் என்றாலோ அல்லது எவ்வித அடையாளமும் இன்றி வருகிறார் என்றாலோ அல்லது பின்னணியில் ஏதேனும் ஒரு படம் இருக்கிறது என்றாலோ அது எதுவுமே தற்செயல் அல்ல. மிகத் தெளிவாக யோசித்தே வைக்கப்படும் ஒன்றுதான். நாம் அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.

சிலர் கேட்டார்கள், முன்பெல்லாம் திரைப்படத்தில் வில்லனுக்கு கிறித்துவப் பெயர்கள் வருகின்றனவே என்று. உண்மைதான். ஆனால் அவற்றுக்கும் இன்று நிகழ்வதற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அன்று நிகழ்ந்ததன் பின்னால், திரைப்படத்தில் தொற்றிக்கொண்டிருந்த (இப்போதும் இருக்கும்) ‘வழக்கத்தை அப்படியே பின்பற்றுவது’ என்ற எண்ணம் மட்டுமே. இதே திரைப்படங்களில் அனாதை ஆசிரமம் என்றாலே கிறித்துவ ஆசிரமங்கள் காட்டப்படுவதைப் பார்க்கலாம். இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம், இதன் பின்னணியில் எவ்விதக் கருத்துத் திணிப்பும் இல்லை என்பதை. ஆனால் இன்று வரும் திரைப்படங்களில் வரும் ஹிந்து எதிர்ப்பு மிகத் தீவிரமான உள்நோக்கத்தோடு, அரசியல் நோக்கத்தோடு புகுத்தப்படுகிறது. இதுதான் வித்தியாசம். எனவே அரசியல் நோக்கத்தோடு செய்யப்படும் விஷயத்தை அதே அரசியல் நோக்கத்தோடுதான் எதிர்க்கவேண்டும். இதில் நடுநிலை என்பதும் கலை என்பதும் அடிபட்டுப் போய்விடும். எந்தப் படம் அரசியல் சார்பின்றி கலையைப் பேசுகிறதோ அந்தப் படத்தை மட்டுமே கலையை மட்டும் கொண்டு எடை போட முடியும்.

ஏன் தமிழ்த் திரையுலகம் இப்படி இருக்கிறது? மிகப் பெரிய கேள்வி இது. படத்தை யார் தயாரிக்கிறார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதை யோசிப்பதில்தான் இதற்கான பதில் இருக்கிறது. அனைத்துத் தயாரிப்பாளர்கள், அனைத்து இயக்குநர்கள் என அனைவரின் அரசியல் நிலைப்பாடும் ஹிந்து எதிர்ப்பாக இருக்கிறது என்பது முதல் காரணம். இதனால் புதியதாக வரும் இயக்குநர்கள் கூட இந்த ‘வழக்கத்துக்கு’ ஆட்பட்டாக வேண்டியது அவசியம் என்பது இரண்டாவது காரணம். பின்பு அவர்களும் இதே பழக்கத்தில் ஊறிப் போய்விடுகிறார்கள் என்பது நம் அவலம்தான். எத்தனை திட்டினாலும் ஹிந்துக்கள் ஒரு அமைப்பாகத் திரளவே போவதில்லை, அத்தனை தூரம் அவர்களை மூளைச் சலவை செய்து வைத்திருக்கிறது திராவிட அரசியல் என்பது அடுத்த காரணம்.

இதற்கெல்லாம் விடிவுகாலம் இல்லையா? இருக்கிறது. தொடர்ச்சியாக இது போன்ற திரைப்படங்களைப் பற்றிப் பேசி மக்களிடம் கொண்டு போவது முக்கியமானது. சிலர் சொல்கிறார்கள், சென்சாரைக் கொண்டு இப்படங்களை முடக்கவேண்டும் என்று. நான் அதை ஏற்கவில்லை. கருத்துச் சுதந்திரம் என்பது முக்கியமானது. நாம் கருத்தை கருத்தால்தான் முறியடிக்க வேண்டும். அதற்குச் சில வருடங்கள் ஆகலாம். சில பத்து வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் முயன்றுதான் ஆகவேண்டும்.

இன்று OTT எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம் படங்களை வெளியிடும் வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. இங்கேயும் இது போன்ற படங்கள்தான் வரும் என்றாலும், இதற்கு எதிர்த்தரப்புப் படங்கள் வருவதில் பெரிய சிக்கல் இருக்காது என்று எதிர்பார்க்கலாம். இதைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு.

ஒட்டுமொத்த திரையுலகமும் அரசியல் மற்றும் மதக் குறியீடுகளின் பின்னால் போய் ஒரு நல்ல திரைப்பட அனுபவமே இல்லாமல் போய்விட்டது. இது தமிழக மக்களுக்கு நிச்சயம் ஒரு எரிச்சலைத் தரும். அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வது இன்னொரு வாய்ப்பு. அதற்கு நாம் தொடர்ந்து இத்திரைப்படங்களின் பின்னணி பற்றியும், இத்திரைப்படத்தின் உண்மையான நோக்கம் பற்றியும் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அது முக்கியம். இப்படிப் பேசுவதால் ஒரு பலனும் இல்லை என்று சிலர் சொல்லலாம். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கலாம். அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து செயல்படுவது, தீவிரமாக இதைப் பற்றி எழுதுவது – இவைதான் நம் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு. அதைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

‘திரௌபதி’ என்ற ஒரு திரைப்படம் இன்று பலருக்கும் பல எரிச்சலைக் கொண்டு வந்திருக்கிறது. திரௌபதி திரைப்படம் சொல்லும் அரசியலில் எனக்குச் சில மாற்றுக் கருத்துகள் உண்டு. ஆனால் இத்தனை நாள் ஹிந்து மதத்தைக் குறை சொல்லிய படங்களுக்கு இருந்த அதே உரிமையை ஒரே ஒரு ‘திரௌபதி’ பயன்படுத்தவும் எத்தனை பதற்றம் பாருங்கள். நாம் இதைத்தான் செய்யவேண்டும். ‘கொளஞ்சி’ என்ற ஒரு திரைப்படத்தைவிட, அதைச் சாடி வெளியிடப்பட்ட குறும்படம் அதிகம் பரவலானது. நம் முன்னே உள்ள சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொள்வது என்பது இதுதான்.

திராவிட, கம்யூனிஸ அரசியல் தொடர்ந்து பல வருடங்களாக இந்த ஹிந்து மத எதிர்ப்பை ஒரே அணியில் நின்று ஆதரித்தும் பரப்பியும் வந்திருக்கின்றன. திரைப்படங்கள் தொடத் தகாதவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஹிந்து இயக்கங்கள் இத்திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தது அவர்களுக்கு இன்னும் வசதியாகப் போனது. இன்று அதன் பலனைப் பார்க்கிறோம். இந்த நிலை மாறத்தான் வேண்டும்.

நாம் எதிர்பார்ப்பது ஹிந்துக்களைப் போற்றும் திரைப்படங்களையோ கிறித்துவ இஸ்லாமிய மதங்களைத் திட்டும் படங்களையோ அல்ல. நியாயமான படங்களை. நியாயமான விமர்சனங்களை. உள்ளே ஹிந்து வெறுப்பை வைத்துக்கொண்டு அதையே நடுநிலை என்றும் முற்போக்கு என்றும் வெறுப்பைப் பரப்பாத படங்களை. எல்லாக் கருத்துக்கும் இடம் இருக்கும் ஒரு சமமான களத்தை. இதுதானே நியாயமான ஆசையாக இருக்கமுடியும்? இதைச் செய்வதில் என்ன பிரச்சினை இருக்கமுடியும்? கேட்க எளிதாக இருக்கிறதல்லவா? ஆனால் யதார்த்தம் கசப்பானது.

இது போன்ற திரைப்படங்களில் வரும் குறியீடுகளைப் பற்றிப் பலரிடம் சொல்லியபோது அவர்கள் சொன்னார்கள், ‘இதுவரை எங்கள் கண்ணில் இது பட்டதே இல்லை’ என்று. ஒரு திரைப்படப் பாடலில் வரும் ஆபாசமான அங்க அசைவுகளைக் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கப் பழக்கப்பட்டுவிட்டது போல, இக்குறியீடுகளையும் தாண்டிச் செல்லப் பழக்கப் பட்டிருக்கிறோம். அதை எடுத்துச் சொல்லும்போதுதான் பலருக்கும் புரிகிறது. இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது உங்களுக்கும் அப்படி ஒருவேளை தோன்றினால், இப்புத்தகத்தின் நோக்கம் நிறைவேறும்.

நான் கண்ணில் பட்ட படங்களை மட்டுமே பட்டியலிட்டிருக்கிறேன். தேடி தேடிப் பதிவிடவில்லை. அப்படிச் செய்தால் நான் கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையும் புகார் சொல்ல வேண்டி இருக்கலாம் என்ற அச்சம்தான் காரணம். ஒருவேளை இன்னும் உங்களுக்கு ஆதாரங்கள் போதாமல் இருக்கலாம். இன்னும் அடுத்தடுத்துப் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றைப் பற்றி நான் எழுதத்தான் போகிறேன். மீண்டும் மீண்டும் சந்திப்போம்.

இந்த நேரத்தில் தமிழில் சில நல்ல முயற்சிகளைத் தந்த சில இயக்குநர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். கே.பாலசந்தர் பல ஹிந்து எதிர்ப்புப் படங்களைத் தந்திருந்தாலும் ‘கல்யாண அகதிகள்’ படத்தின் தைரியமான இறுதிக் காட்சிக்காகப் பாராட்டப்படவேண்டியவர். அதேபோல் தமிழ் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இவர் பல விதங்களில் ஹிந்துக்கள் ஆச்சரியப்படும் வகையில் படங்களை எடுத்தவர், கடும் நாடகத்தனமாக இருந்தபோதிலும். அதேபோல் ஏ.நாகராஜன். இவரும் பாராட்டுக்குரியவர். இந்தத் தொடர்ச்சியை நாம் இழந்திருக்கிறோம். அதை மீட்டெடுக்கவேண்டும்.

பாகம் 1க்கான முன்னுரை:

வலைப்பதிவுகள் தொடங்கி ஃபேஸ்புக் மற்றும் பல வலைத்தளங்களில் எழுதிய திரைப்படம் தொடர்பான கட்டுரைகளின் முதல் தொகுப்பு இது. ஒரு திரைப்படம் எப்படி நடுநிலையானது இல்லையோ அதேபோல் என் விமர்சனமும் நடுநிலையானதல்ல. இதுவே இந்த விமர்சனங்களின் அடிநாதம். இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன. பெரும்பாலான விமர்சனங்கள் திரைப்படம் வந்த சில மணி நேரங்களுக்குள் எழுதப்பட்டவை. இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பகுதி ஒன்றும் வெளிவரும். அதில் வரும் கட்டுரைகளையும் சேர்த்துப் பார்த்தால் ஒரு அப்பாவி திரைப்பட ரசிகனை இந்தத் திரைப்பட உலகம் எப்படி ஒரு அரசியல் பார்வையாளனாக மாற்றி இருக்கிறது என்று புரியலாம்.

இப்புத்தகத்தில் வரும் கட்டுரைகள் சிலவற்றில் அரசியல் கலக்காத படங்களை ஒரு திரைப்படம் என்ற வகையில் மட்டுமே விமர்சித்திருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் எதிர்பார்ப்பது நியாயமான, எல்லோருக்கும் பொதுவான விமர்சனம் உள்ள ஒரு திரைப்படத்தை மட்டுமே. அன்றி, ஹிந்து மதத்தையோ இந்தியாவையோ விமர்சிக்காத திரைப்படங்களை அல்ல. ஹிந்து மதம் என்றதும் வசதியாக விமர்சிப்பதும் மற்ற மதங்கள் என்றதும் அமைதி காப்பதும் அல்லது புகழ்வதுமான இரட்டை நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

பின்குறிப்பு: கிண்டிலில் கிடைக்கும்!

Share

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜாவில் அறிமுகம் ஆனபோது காது ரெண்டும் எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இசை கேட்டு இல்லை, பொறாமையில்! ராஜா வெறியனான எனக்கு ரஹ்மானைத் திட்டித் தீர்ப்பதில்தான் ஆனந்தம் இருந்தது. ஆனால் செல்லும் இடமெல்லாம் ரஹ்மான் பாடல்தான். பட்டிதொட்டி எங்கும் அவரது பாடல்களே. தியேட்டரில் மாணவர்கள் அவரது பாடலுக்குப் போட்ட ஆட்டமெல்லாம் அதுவரை நான் பார்க்காதவை. ஏ.ஆர்.ரஹ்மானின் அத்தனை கேசட்டையும் முதல்நாளே வாங்கிக் கேட்டுவிடுவேன். எத்தனை முறை என்ற கணகெல்லாம் இல்லை. அப்பாடல்கள் மனப்பாடம் ஆகும் வரை.

ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் பத்து வருடங்களில், வண்டிச் சோலை சின்ராசு தவிர, அவரது அனைத்துப் படங்களின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்தான். வண்டிச் சோலை சின்ராசு கூட எனக்கு சூப்பர் ஹிட்தான் – பரோட்டா பாட்டு உட்பட.

கடந்த பதினைந்து வருடங்களாக அந்த ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவில்லை. காரணங்கள் பல இருக்கலாம். ரஹ்மானின் மனமுதிர்ச்சி உட்பட. அந்தப் பரபரப்பு, அந்த ஹிட், தியேட்டரில் அந்த ஆட்டம் இவை எதுவுமே இல்லை. இது ஒரு குறையா என்றால் இல்லை. ஆனால், இளையராஜா வெறுப்பாளர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்தால், இதையெல்லாம் மீண்டும் மீண்டும் வம்புக்காகவாவது சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

இளையராஜாவின் கடந்த இருபது வருடங்களில் வந்த பாடல்களில் உள்ள நுணுக்கங்களைக் கேட்டு ரசித்தால், ராஜாவின் பாடல் ஹிட்டாகவில்லை என்பார்கள். இன்று ரஹ்மானுக்கு அதே நிலை என்றால், ரஹ்மானின் பாடலில் உள்ள நுணுக்கத்தோடு ஓடி வருகிறார்கள். இதைத்தான் முன்னோடும் வாய்க்கால் பின்னோடும் என்றார்கள்.

அதிலும் கடந்த பத்து வருடங்களில் ஒரு சில ஆல்பங்கள் தவிர, சில பாடல்களைக் கேட்கக்கூட முடியவில்லை. அத்தனை ஸ்ட்ரீயோடைப். ராஜாவின் ஸ்ட்ரீயோடைப்பை அலசும் விற்பன்னர்களுக்கு ரஹ்மானின் ஒரே போன்ற பாடல்களைக் கேட்கும்போது காது அடைத்துப் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.

இப்போதும் ரஹ்மானின் பாடல்களைத் தொடர்ந்து கேட்டால், அவரது ஹிட்டாகாத பாடல்கள் உட்பட, கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிக்க ஆரம்பித்துவிடும். ராஜா ரசிகர்களும் கடந்த இருபது வருடங்களில் இதைத்தான் செய்தும் சொல்லியும் வந்தார்கள். அப்போது கிண்டலாகப் பேசினார்கள். இப்போது வரிசையில் நிற்கிறார்கள், பெரிய பலாப்பழத்துடன்.

Share