Archive for திரை

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

ராகெட்ரி – நம்பிக்கையின் விளைவு

இப்போதுதான் ராக்கெட்ரி திரைப்படம் பார்க்க முடிந்தது. Ready to fire புத்தகத்தை முன்பே படித்துவிட்டிருந்ததால், படமாகப் பார்க்கும்போது எப்படி இருக்குமோ என்கிற தயக்கம் இருந்தது. புத்தகம் முழுக்க பாதி நம்பி நாராயணன் மீது போடப்பட்ட வழக்கு பற்றியது என்றால், மீதி இஸ்ரோவின் செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் பற்றியது. எனவே ஒரு திரைப்படமாக இதை இந்தியாவில் எடுப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம்தான். ஏற்கெனவே பல பயோபிக்சர்கள் தந்த கொடூரமான அனுபவமும் மனதில் ஓடியவண்ணம் இருந்தது.

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால், மாதவன் டீசண்டான ஒரு படத்தைத் தந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இத்தனை டெக்னிகல் சவால்கள் உள்ள ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்ததே ஆச்சரியம்தான். இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி சாதனையாளரா தேசத் துரோகியா என்னும் ஒற்றை வரி சுவாரஸ்யமானதுதான். ஆனால் மாதவன் அதை மட்டும் படமாகச் செய்யவில்லை. எப்படி நம்பி நாராயணன் தன் புத்தகத்தை ஒரு விரிவான களமாகக் கொண்டாரோ அதே போல மாதவனும் தன் திரைக்களத்தை விரிவாக அமைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் நம்பி நாராயணன் வழக்கு பற்றிய விஷயங்கள் மிகக் குறைவாகவே வருகின்றன.

நம்பி நாராயணன் உலகம் முழுக்கச் சுற்றி இந்தியாவின் இஸ்ரோவுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் பாடுபடும் காட்சிகள் அனைத்தும் மிக நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. நாம் காண்பது ஆங்கிலத் திரைப்படமோ என்னும் மயக்கம் வருமளவுக்குக் காட்சிகளின் தரம் உள்ளது. இதெல்லாம் எத்தனை பேருக்குப் புரியும், வணிக ரீதியாகப் படம் எப்படிப் போகும் என்றெல்லாம் மாதவன் அலட்டிக்கொண்டது போலவே தெரியவில்லை.

உலகத் திரைப்படங்களுக்கு உரிய ஒரு பொதுமொழி, பொறுமை. இந்தப் படமும் அதே பாதையில் மிகப் பொறுமையாக ஒவ்வொன்றையும் விவரிக்கிறது. ஃப்ரான்ஸ், ரஷ்யா தொடர்பான காட்சிகளின் விரிவும், வசனங்களின் ஆழமும் பிரமிப்பைத் தருகின்றன. இயக்கத்துக்காக மட்டுமின்றி வசனத்துக்காகவும் மாதவன் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். வளவள வசனங்கள் இன்றி, சுருக்கமாக, தீர்க்கமாக வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.

மாதவன், சிம்ரன் மிக நன்றாக நடித்திருக்கிறார்கள். இது ஒரு விஷயமே அல்ல என்னுமளவுக்கு, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மேல்நாட்டு நடிகர்களில் இருந்து உள்ளூர் நடிகர்கள் வரை இதைச் சாத்திருக்கிறார்கள். இயக்குநர் மாதவனாக இந்தப் படத்தை அவர் தூக்கி நிறுத்தியது, இந்த நடிகர்களின் நடிப்பின் மூலமாகவே நிகழ்ந்துள்ளது என்றே சொல்லலாம்.

புத்தகத்துக்கும் திரைமொழிக்கும் உள்ள வேறுபாடுகள் தெரிந்தவையே. ஆனாலும் மாதவன் இன்னும் சில விஷயங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சில விஷயங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கலாம். புத்தகத்தில் மிக ஆழமாகச் சொல்லப்பட்ட விஷயங்கள் இங்கே விரைவான தொனியில் சொல்லப்படுகின்றன. குறிப்பாக உன்னி விஷயம். (புத்தகத்தில் பாலகிருஷ்ண பிள்ளை.) பாலகிருஷ்ணன் நம்பி நாராயணனை அறைந்ததாக எனக்கு நினைவில்லை. அந்தப் புனைவுச் சுதந்திரத்தை மாதவன் எடுத்துக்கொள்ளலாம்தான். ஆனால் ரத்தமும் சதையுமாக நம்பி நாராயணன் நம்முன் இருக்கும்போது ஏனோ நெருடுகிறது. உன்னி தொடர்பான காட்சிகள் புத்தகத்தில் நெடுக சொல்லப்படும்போது, அவர் மகன் இறந்து போயும் அவனிடம் மறைக்கப்பட்ட செய்தி ஒரு தாக்கத்தைக் கொண்டு வந்தது. திரைப்படத்தில் அதைச் சில நிமிடங்களில் சொல்லவேண்டிய கட்டாயம். எனவே அதன் தாக்கமும் குறைவாகவே உள்ளது. அதுவே உன்னி கைதுசெய்யப்பட்ட நம்பியைக் காணும் காட்சி வலுவாக வந்திருக்கிறது. காரணம், இரு காட்சிகளுக்கும் இடைப்பட்ட காலம்தான்.

இந்த உன்னி காட்சியையும், தொடக்க சில நிமிடங்களையும் விட்டுவிட்டால், படம் முழுக்க அறிவியல் திரைப்படம்தான் என்றே சொல்லிவிடலாம். வழக்கு ரீதியான விஷயங்கள் எல்லாம் ஒரு சீரியலைப் போல ஒரே டேக்கில் சொல்லி முடிக்கப்பட்டு விடுகின்றன. ஒரு நீதிமன்றக் காட்சி வந்தது போலக் கூட நினைவில்லை.

தமிழ்நாட்டில் இஸ்ரோவுக்கு இடம் கேட்கும்போது குடித்துவிட்டு வந்த திமுக மந்திரியைப் பற்றிய காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறவில்லை. படத்துக்கு அது தேவையில்லை என்று மாதவன் நினைத்திருந்தால், அதுவும் சரிதான். ஆனால் அதை வைத்திருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது. 🙂

மாதவன் தவறவிட்ட அற்புதமான ஒரு விஷயம், உனக்குத் தெரிந்த முஸ்லிம் ஒருவன் பெயரைச் சொல் என்று போலிஸ் நம்பி நாராயணனை வற்புறுத்தும்போது அவர் சொல்லும் பெயர் ‘அப்துல் கலாம்’. இந்தக் காட்சி சினிமா ரீதியாகவே நன்றாக இருந்திருக்கும். மாதவன் இதையும் வைக்கவில்லை. ஒருவேளை ஒரு திரைப்படமாகப் பார்க்கும்போது நம்பி நாராயணனின் குத்தலான விளையாட்டைச் சிலர் புரிந்துகொள்ளாமல் போகக் கூடும் என்று மாதவன் நினைத்திருக்கலாம் என்று யூகிக்கிறேன்.

ஒரு சினிமாவுக்கே உரியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதால், ஆங்காங்கே தெரியும் சில நாடகத்தனமான காட்சிகளையும் தாண்டி, இத்திரைப்படம் மிக முக்கியமானது. பயோ பிக்சரில் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறோம் என்று பெருமைப்படலாம்.

முதல் திரைப்படத்திலேயே இத்தனை பெரிய சாதனையை நிகழ்த்தி இருக்கும் மாதவனை வாழ்த்துவோம். ஹே ராம் போன்ற ஒன் முவீ வொண்டராகத் தேங்கிவிடாமல் தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களைத் தர மாதவனுக்கு வாழ்த்துகள்.

Share

வலிமை – ஹைடெக்

வலிமை – மிரட்டலாக எடுத்திருக்கிறார்கள். அனைத்து உச்ச நடிகர்களும் நகைச்சுவைக் காட்சிகள், காதல், குடும்பத்தைக் கொல்லும் வில்லன், பழிவாங்கல் என்று போய்க்கொண்டிருக்க, இது எதுவுமே இல்லாமல் ஒரு படத்தை நடிக்க முன்வந்திருக்கும் தைரியத்துக்காக அஜித்தை நிச்சயம் பாராட்டவேண்டும். ஒரு நவீன தொழில்நுட்பத் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறார்கள். வித்தியாசமாக யோசித்து, எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்து, லாபமும் பார்ப்பதெல்லாம் பெரிய சாதனை. வலிமை டீமுக்கு வாழ்த்துகள்.

மைனஸ் பாய்ண்ட் என்று சொல்லவேண்டுமானால், பேசி பேசியே அனைத்துப் பெரிய பிரச்சினைகளையும் அஜித் விடுவிப்பது, நீளமான அந்த பைக் ரேஸ், வில்லனை ஏமாற்றுவதை ஒரே போல் இரண்டு முறை செய்வது, என்னதான் லாஜிக் வேண்டாம் என்றாலும் அரசு வசம் இருக்கும் போதை மருந்தை அஜித் எடுப்பது இவையெல்லாம்தான். செண்ட்டிமெண்ட் அதிகம் என்று அனைவரும் சொன்னார்கள், நான் பார்த்தது எடிட் செய்யப்பட்ட வெர்ஷன் போல, அதில் அத்தனை செண்டிமெண்ட் இல்லை.

மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது, உச்சக்காட்சியில் கதாநாயகன் கொலைகாரர்களை மன்னித்து ஒரு வழக்கு கூட இல்லாமல் விடுவிப்பது – இது அராஜகம். என்னதான் கதாநாயகனுக்குக் காவடி எடுக்கவேண்டும் என்றாலும் இத்தனை தூரம் தரம் தாழவேண்டியதில்லை.

வில்லனை அஜித் காவல்துறை பஸ்ஸில் கொண்டு போகும் சேஸிங் காட்சி, மிக நீளமாக இருந்தாலும், அட்டகாசமாக இருந்தது. அஜித் நன்றாக இருக்கிறார், கெத்தாக இருக்கிறார், முக்கியமாக மிக நன்றாக நடிக்கிறார்.

செய்ன் அறுப்பு என்பது எனக்கு மிகவும் பதற்றம் தரும் ஒன்று. சில நிஜ வீடியோக்களைப் பார்த்திருக்கிறேன். அதை நினைத்தாலே பதற்றம் வந்துவிடும். இந்தப் பதற்றத்தை அப்படியே திரையில் கொண்டு வந்த தமிழ்ப்படம் மெட்ரோ. உச்சக்காட்சிகள் மட்டுமே சொதப்பல். வலிமை திரைப்படத்தின் முதல் பதினைந்து நிமிடங்கள், அஜித் வராதபோதும், பரபரப்பாக இருந்ததற்கு இந்த செய்ன் அறுப்புக் காட்சிகளும் அதை ஒட்டிய கொலைகளுமே காரணம். இன்னும் ‘மெட்ரோ’ படத்தை இப்படம் தொடவில்லை என்றாலும், வலிமையும் முக்கியமான பதிவுதான்.

இனி அரசியல். இவ்வளவு பார்க்கவேண்டுமா என்பவர்கள் இங்கேயே ஜூட் விட்டுவிடவும். என் நோக்கமே இதைப் பதிவு செய்யத்தான்!

பொதுவாகவே அஜித் ஹிந்துக்களுக்கு எதிராக வேண்டுமென்றே எதையும் திணிப்பதில்லை என்று இங்கே இருக்கும் அஜித் ரசிக ஹிந்துத்துவர்கள் சொல்வது வழக்கம். நானும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றுதான் நம்புகிறேன். இப்போதும்!

அதே சமயம் இந்தப் படத்தில் வந்திருக்கும் சில காட்சிகளைப் பற்றி ஒரு குறிப்பாவது எழுதி வைத்துக்கொள்வது நல்லது என்றும் தோன்றியது. இந்த இயக்குநரின் அடுத்த படத்துக்கு நமக்கு உதவலாம்! (இயக்குநர் மட்டுமே இதற்குப் பொறுப்பு என்று நழுவிவிடவும் முடியாது!) இதே இயக்குநரின் மிக முக்கியமான படமான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திலும் இப்படிப் பிரச்சினைகள் இருந்தன. மத ரீதியிலானது அல்ல, இவர்கள் இப்படித்தான் என்னும் மோசமான முத்திரை குத்தல் தொடர்பானது.

வலிமை படத்தில், குடிகாரனாக வரும் ஒருவன் பெரும் பட்டை போட்டுக்கொண்டு வருகிறான்.

ஐயப்ப மாலை போட்டிருக்கும் அண்ணன் ஐயப்ப மாலையைப் பாலில் கழற்றிப் போட்டுவிட்டுக் குடிக்கிறான்! அப்படிக் குடித்தால் பாவமில்லை என்று ஒரு நியாயமும் கற்பிக்கிறான். இதைப் பார்த்துவிட்டு இன்னும் எத்தனை பேர் ஆரம்பிக்கப் போகிறார்களோ..

வில்லன் கதாபாத்திரம், அதாவது செய்ன் அறுப்பு + போதை மாஃபியா + கொடூரக் கொலைகாரனை மட்டும் ஜி என்று அழைக்கச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

மற்றபடி வலிமை வலிமைதான்!

Share

தி காஷ்மீர் ஃபைல்ஸ் – ஆஸாதியின் நிறம்

நான் அப்போது பதினோரம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அன்று வகுப்புக்கு வந்த ஆசிரியர், யாரெல்லாம் சைக்கிளில் போகிறீர்கள் என்று கேட்டார். பாதிக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து நின்றோம். யார் எந்தப் பகுதி என்று கேட்டபோது, நாங்கள் டவுன் என்றும், பொதுவாக சிந்துபூந்துறை வழியாகச் செல்வோம் என்று சொல்லவும், எங்களை உட்காரச் சொல்லிவிட்டார். மேலப்பாளையம் வழியாக யாராவது போவீர்களா என்று கேட்டபோது, அப்படி யாரும் இல்லை என்று சொல்லவும், அப்ப பிரச்சினை இல்லை என்றவர், எதுக்கும் இன்றொரு நாள் விபூதி குங்குமத்தை அழிச்சிட்டுப் போங்க, நம்ம ஊர்ல பிரச்சினை இல்லைதான், எதுக்கும் கவனமா இருக்கட்டும் என்று தன்னுடன் வந்த இன்னொரு ஆசிரியருடன் பேசிக்கொண்டு போனார்.

இது நடந்தபோது, ஏன் இவர்கள் இப்படிக் கேட்கிறார்கள் என்று கூட எங்களுக்குப் புரியவில்லை. அப்போது அது ஒரு விஷயமாகக் கூடத் தெரியவில்லை. நாங்கள் எப்போதும் போல் சைக்கிளை ஜாலியாக ஓட்டிக்கொண்டு போனோம். வழியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஊர் எப்போதும் போலத்தான் இருந்தது. பின்னர் புரிந்துகொண்டோம், அயோத்தியில் மசூதி உடைக்கப்பட்டதன் எதிரொலியாகவே ஆசிரியர் எல்லாரையும் எச்சரித்திருக்கிறார் என்று. முதல்நாள் உடைக்கப்பட்ட மசூதி விவரம் மறுநாள் திருநெல்வேலியில் எங்களுக்குத் தெரிந்துவிட்டிருந்தது. காஷ்மீரில் பண்டிட்டுகள் விரட்டப்பட்டார்கள் என்று தெரிந்தபோது எனக்கு வயது 22க்கு மேல். அப்போதும் அதை ஒரு அலட்சியத்துடன் அணுகியதை இப்போது வெட்கத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். அதன்பிறகு நான்கைந்து வருடங்கள் கழித்தே, அது விரட்டப்பட்டது மட்டுமல்ல, இனஒழிப்பு என்ற அதிர்ச்சியான உண்மை புரிந்தது. இன்று இந்த வலியை மிகத் தீவிரமாக தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.

மசூதி உடைப்பு ஒட்டி எழுந்த கலவரங்களை நாடெங்கும் கொண்டு சேர்க்க முடிந்திருக்கிறது, ஆனால் காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இத்திரைப்படம் வந்தபின்னர் ஃபேஸ்புக்கில் பலர் இதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். இப்படி ஒரு அவலம் நடந்தது பற்றி எப்படித் தெரியாமல் போனது என்று. ஹிந்து இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களைத் தவிர, சாதாரண மக்களுக்கு இந்தப் பெரிய கொடுமை தெரியவே இல்லை. இதே கேள்வியை இப்படத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியும் கேட்டிருக்கிறார்.

விவேக் அக்னிஹோத்ரியின் திரைப்படங்களின் ஆதாரமாக இரண்டைச் சொல்லலாம். ஒன்று, மூளைச் சலைவையால் குழப்பப்பட்ட இளைஞர்கள். இன்னொன்று, இதைச் செய்யும், அராஜகத்துக்குத் துணைபோகும், பொய்ச் செய்திகளைப் பரப்பும், உண்மைச் செய்திகளை மறைக்கும் ஊடகத் துறையினர். அர்பன் நக்ஸல்ஸ் என்னும் பதத்தை இவர் பரப்பியதே இதனால்தான். புத்தா இன் டிராஃபிக் ஜாம், தாஷ்க்ண்ட் ஃபைல்ஸ் மற்றும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் மூன்றிலும் இந்த இரண்டு அடிப்படைகளைக் காணலாம். இந்த அடிப்படைகளை உடைத்து, தான் சொல்ல வந்த உண்மையை ஒரு திரைப்படத்துக்கு ஏற்றவாறும் சொல்லிவிடுவது இயக்குநரின் அபாரத் திறமைதான்.

இதைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் ஷிக்காரா என்றொரு திரைப்படத்தைப் பற்றியும் பேசவேண்டும். Our moon has blood clots என்றொரு புத்தகம், ராகுல் பண்டிதா எழுதியது. இந்தப் புத்தகத்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். காஷ்மீரில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதைப் பற்றி விவரிக்கும் ஒரு புத்தகம் இது. ஹிந்துக்களுக்கு ஆதரவான தொனியில் அமைந்த புத்தகம் அல்ல இது என்பதை, ஆசிரியர் வேண்டுமென்றே ஆர் எஸ் எஸ் பற்றி ஒரு பக்கம் எழுதித் திணித்த குறிப்புகளில் இருந்து புரிந்துகொண்டாலும், இப்புத்தகத்தில் உள்ள தரவுகள் முக்கியமானவையே. அதுவும், ஹிந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்க்கும் ஒருவர் எழுதி இருப்பதால், இந்தத் தரவுகளை நம்புவதில் பெரிய சிக்கல் இருக்கமுடியாது. ஷிக்காரா படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது, இந்தப் புத்தகத்தைத் தொட்டுக்கொண்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள் என. ஆனால் யாருக்கும் எதற்கும் கொஞ்சம் கூடக் கோபமே வந்துவிடக் கூடாது என்ற ரீதியில், இத்தனை பெரிய இன ஒழிப்பை முலாம் பூசி ஒப்பேற்றி இருந்தார்கள். ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் குமுறலை, ஒரு குடும்பம் தன் வீட்டை இழந்த ஒரு நாஸ்டால்ஜியாவாக மாற்றி இருந்தார்கள். அந்த இழப்பின் பின்னால் இருந்த அநியாயங்களை மங்கலாக மட்டுமே காட்டி இருந்தார்கள். அந்தப் புத்தகத்தில் இருந்த தரவுகளைக் கூடப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பெரிய அவலத்தைப் பற்றிப் பேசும் ஒரு திரைப்படம் இத்தனை திராபையாகவா இருக்கும்? இந்த நேரத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் வந்திருப்பது எத்தனை முக்கியமானது என்று யோசித்துப் பாருங்கள்.

எத்தனையோ கொடூரமான திரைப்படங்களைப் பார்க்கிறோம். சைக்கோபாத் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு, இரண்டு நாள்களில் மறந்துவிடுகிறோம். ஆனால், நாம் எதிர்பாராமல் பார்க்கும் ஒரு நிஜமான விபத்து வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாமல் ஆகிவிடுகிறது. உண்மைக்கும் புனைவுக்குமான இடைவெளி இது. உண்மையில் நடந்த ஒரு வாழ்க்கையைத் திரைப்படம் ஆக்கும்போது அது நமக்குத் தரும் பதற்றத்தின் பின்னணியில் உள்ளது, ‘அது வெறும் புனைவல்ல, ரத்தமும் சதையும் சேர்ந்த உண்மை’ என்பதுதான்.

இப்படம் நம்மைப் பதற வைக்கிறது. முதல் பதினைந்து நிமிடங்கள் மிக முக்கியமானவை. கடைசி ஐந்து நிமிடங்கள் தரும் பதற்றத்தைப் பார்க்க திடமான மனம் வேண்டும். இளைஞர்களை மூளைச் சலவை செய்யும் ராதிமா மேனோனாக நடிக்கும் நடிகையும், அனுபம் கெர்ரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நெற்றியில் ஒரு குங்குமப் பொட்டென ரத்தம் தோய கண்கள் மூடாமல் மரிக்கும் அச்சிறுவனின் களங்கமற்ற முகம் என்றென்றும் மறக்க முடியாதது.

ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முன்னால் அது தொடர்பான அத்தனை தகவல்களையும் திரட்டி எடுப்பது விவேக் அனிஹோத்ரியின் பாணி. கூடவே அத்திரைப்படம் சொல்ல வரும் கருத்துக்கு எதிரான அனைத்துக் கருத்துக்களையும் அத்திரைப்படத்திலேயே வைத்து, அதற்கும் சேர்த்து பதில் சொல்வார். எந்த அளவுக்கு என்றால், இதுதான் உண்மையோ என்று உருவாக்கப்படும் பொதுப்புத்திக்கு ஆதாரமாக இவர் சொல்லும் வாதங்களையே வைக்கலாம் என்னும் அளவுக்கு. ஆனால் உண்மைப் பின்னணி நமக்குத் தெரியும் என்பதால், இந்தப் பத்திரிகையாளர்கள் எந்த அளவுக்குக் கீழிறங்கிப் புனிதப் பிம்பங்களைக் கட்டமைக்கிறார்கள் என்பது நமக்கு அதற்கு இணையாகப் புரிகிறது.

குழம்பிக் கிடக்கும் கிருஷ்ணன் தீவிரவாதியிடம் பேசும் காட்சி மிக முக்கியமானது. தனது பார்வையாக அந்தத் தீவிரவாதி முன்வைக்கும் பார்வையும், பாகிஸ்தானின் குரலும், இந்திய வெறுப்பாளர்களான ஊடகத்தினரின் பார்வையும் ஒரே போல இருப்பதைப் பார்க்கலாம். இது தற்செயல அல்ல. திட்டமிட்ட ஒன்றிணைப்பு. காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் விருப்பப்பட்டதைத் தந்துவிட்டால் என்ன என்று ஜனநாயகக் காவலர்கள் போல கம்யூனிஸ்ட்டுகள் பேசுவது சும்மா இல்லை. இந்தக் குரலுக்கான ஆதாரம் பாகிஸ்தானின் நியாயத்தில் இருந்து வருகிறது. கம்யூனிஸம் இந்தியாவுக்குத் தேவையா இல்லையா என்று இந்தியா முழுக்க வாக்கெடுப்பு நடத்தி தேவையில்லாத மாநிலங்களில் தடை செய்ய ஒப்புக்கொள்வார்களா இவர்கள்? இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீர் என்ற பின்பு ஏன் வாக்கெடுப்பு? தேவையே இல்லை. நேரு வேறு வழியின்றி இதை ஒரு நல்ல முடிவு என்று சொல்லி இருந்தாலும் கூட, இனி தேவையே இல்லை.

ராதிகா மேனோன் பல பத்திரிகையாளர்களின் கலவை. அப்பட்டமான தோலுரிப்பு. தீவிரவாதி யாசின் மாலிக் மற்றும் கராத்தே பிட்டாவின் ஒன்றிணைப்பு. யாசின் மாலிக் பிபிசிக்கு அளித்த நேர்காணல் ஒன்றின் வீடியோவைப் பார்த்தேன். அதில் அவர் கொன்ற விமானப் படைக்காரர்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது வெளிப்படும் இளக்காரமான புன்னகையில் இப்படத்தின் அடிப்படை நியாயம் அமைந்திருக்கிறது. அரவிந்தன் நீலகண்டன் சொல்லி, கராத்தே பிட்டாவின் வீடியோவைப் (https://www.youtube.com/watch?v=c5Kw5bvvMfw) பார்த்தேன். அதில் அவன் சொல்கிறான், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் அண்ணனையும் கொல்வேன், அம்மாவையும் கொல்வேன் என்று. எவ்விதக் குற்றவுணர்ச்சியும் இல்லை. இதே வசனம் இத்திரைப்படத்திலும் வருகிறது. இந்த வசனம் மட்டுமல்ல, பற்பல வசனங்கள் நிஜத்தில் யாராலோ எப்போதோ சொல்லப்பட்டவைதான்.

நிஜமான ஆஸாதி (சுதந்திரம்) மதம், மொழி, இனம், நிறம், ஜாதி பார்க்காது. மதவாத அடிப்படையிலான ஆஸாதி உண்மையான ஆஸாதிக்குக் களங்கம் கற்பிப்பதைத் தவிர, நாட்டைத் துண்டாடுவதைத் தவிர எதையும் சாதிக்காது. இத்திரைப்படம் அதை அப்பட்டமாக பதிவு செய்திருக்கிறது.

ஒரு திரைப்படம் என்ற அளவிலும் இத்திரைப்படம் தரமாகவே உள்ளது. மெல்ல நகரும் திரைப்படம்தான். யோசித்து யோசித்து வசனங்கள் வரும் திரைப்படம்தான். ஆனாலும் ஏன் இந்தியர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பார்த்து வரவேற்றார்கள்? இது வெற்றுப் புனைவல்ல, உள்ளத்தை உலுக்கும் உண்மை என்பதால்தான். தரமும் உண்மையும் கூடி வந்தால் எந்த மொழியிலும் இதைச் சாதிக்க முடியும். தமிழிலும் இத்தகைய திரைப்படங்கள் எல்லாச் சார்பிலிருந்தும் வெளிவரவேண்டும். அதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என்கிற ஏக்கம் வராமலில்லை.

370ம் பிரிவு திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான நியாயத்தையும், ஏன் நாட்டை நேசிப்பவர்கள் இந்தியாவை ஆளவேண்டும் என்பதையும்கூட இப்படம் சந்தேகத்துக்கு இடமின்றி வலியுறுத்தி இருக்கிறது. நிச்சயம் தியேட்டருக்குச் சென்று பாருங்கள் – மன தைரியத்துடன்.

Share

மேப்படியான் – நில அரசியல்

தமிழ் சமூக ஊடகங்களில் இந்த மலையாளப் படம் ஹிந்துக்களுக்கு ஆதரவான ஒரு மனநிலையில் கொண்டாடப்பட, இது ஒரு அரசியல் திரைப்படம் என்று நினைத்துக் கொஞ்சம் கவனமின்றி இருந்துவிட்டேன். இன்றுதான் பார்த்தேன்.

ஒரு படமாக இப்படம் எந்த வகையிலும் எந்த ஒரு மதத்தையும் குறை சொல்லவில்லை. எல்லாருமே தங்கள் நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்க்கும் சந்தர்ப்பவாதிகளாகக் காட்டப்படுகிறார்களே ஒழிய, வேண்டுமென்றே கெட்டவர்களாகச் சித்திரிக்கப்படவில்லை, ஒரே ஒருவரைத் தவிர. அந்தக் கதாபாத்திரம் ஒரு அரசியல்வாதி. அந்த அரசியல்வாதி ஒரு ரியல் எஸ்டேட் ப்ரோக்கரும் கூட. அவர் கிறித்துவர். படத்தில் ஏகப்பட்ட கிறித்துவக் கதாபாத்திரங்கள். மிக நல்லவர்களாகப் பலர் காட்டப்படுகிறார்கள். ஹாஜியார் கதாபாத்திரமும் கூட அதனளவில் வியாபாரத்துக்காக, தன் லாபத்துக்காக எதிராளிகளின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு பாத்திரமே.

இரண்டு குடும்பங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்கள் வாக்கை கைவிடாத குடும்பங்களாகக் காட்டப்படுகின்றன. ஒன்று, கதாநாயகன் முகுந்தன் உன்னியின் குடும்பம். இன்னொன்று, வீட்டை விற்கும் கிறித்துவக் குடும்பம். தான் கொடுத்த வாக்குக்காக, ஒரு கிறித்துவப் பெண்ணின் வாழ்க்கைக்காகத் தன் எல்லா உடைமைகளையும் இழந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் ஹிந்துக் குடும்பத்துக்கு இணையாக, சாகும் தறுவாயிலும் தான் கொடுத்த வாக்குக்காக சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து வீட்டை கிரையம் செய்து கொடுக்கும் கிறித்துவக் குடும்பம் என்று எல்லாமே சமநிலையில்தான் உள்ளது.

முகுந்தன் மிக அழகாக இருக்கிறார். எல்லை தாண்டாமல் நடிக்கிறார். மிக மெல்ல நகரும் படத்தில் மெல்ல மெல்ல ஒரு படபடப்பைக் கூட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதிலும் சார்பதிவாளர் அலுவலகக் காட்சி உச்சம். ஒரே விஷயத்தைச் சுற்றிச் சுழலும் கதை தரும் அலுப்பைத் தாண்டிவிட்டால் ஓரளவுக்கு சுவாரஸ்யமான திரைப்படமே. நில அரசியலின் அத்தனை சாத்தியங்களும் காட்டப்படுகின்றன.

பின்னெப்படி இத்திரைப்படம் ஹிந்து ஆதரவுப் படமாகியது? படத்தில் வரும் சேவா பாரதி ஆம்புலன்ஸ் ஒரு சின்ன குறியீடே ஒழிய, அது பெரிய காரணமல்ல.

நிஜ உலகில் நடிகர் முகுந்தன் உன்னி உடல் எடை குறைப்பை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு 95 கிலோவில் இருந்து 75 கிலோவாக உடலைக் குறைக்கிறார். (அந்தப் புகைப்படத்தைத் தேடிப் பாருங்கள். பெரிய சாதனைதான்!) அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் பகிர்கிறார். அதில் தன்னுடன் ஒரு ஹனுமானின் படத்தையும் சேர்த்துப் பகிர்கிறார். அங்கே சந்தோஷ் கீழாற்றூர் என்றொரு நடிகர் கமெண்ட் போடுகிறார். “இந்த ஹனுமான் நாட்டை கொரானாவில் இருந்து காப்பாற்றுவாரா” என்று கேட்கிறார். இதற்கு முகுந்தன் உன்னி பதில் சொல்கிறார், “நாம் ஒன்றாக நடித்திருக்கிறோம், எனவே பணிவுடன் சொல்கிறேன், நான் நம்பும் கடவுளை வேண்டிக்கொண்டு இங்கே ஒரு பதிவு போடுகிறேன். இப்படியெல்லாம் பதில் சொல்லி உங்கள் மரியாதையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். இப்போதெல்லாம் ஏன் நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்?” என்று.

முகுந்தன் உன்னி குஜராத்தில் சின்ன வயதில் இருக்கும்போது பட்டம் பறக்கவிடும் விழாவில் மோடியுடன் பட்டம் விட்டதாகச் சொன்ன செய்தியையும் மேலே நடந்த டிவிட்டர் விஷயத்தையும் முகுந்தன் உன்னி பிரதரமரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொன்னதையும் சேர்த்துக்கொள்கிறார்கள்.

பின்னர் மாத்ருபூமி செய்திகள் பேட்டியில் நெறியாளர் கேட்கிறார், “நீங்கள் வலதுசாரி என்று தெரிகிறது.” உடனே மறிக்கிறார் முகுந்தன் உன்னி.

முகு: எப்படித் தெரியும்? எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

நெறி: உங்கள் சமூக ஊடகங்கள் இடுகைகளில் இருந்து.

முகு: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு என்றா?

நெறி: வலதுசாரி என்றால் பிஜேபி ஆதரவு மட்டுமே என்று சொல்லவேண்டியதில்லை.

முகு: அப்படியானால் அது என்ன? நீங்கள் சொல்வதை வைத்து நான் பிஜேபி என்றுதான் புரிந்துகொண்டேன். தெளிவாகச் சொல்லுங்கள். நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொன்னதாலா என்னை வலதுசாரி என்கிறீர்கள்? எனக்கு இப்போதைக்கு அரசியல் ஆர்வம் எதுவும் இல்லை. நான் வளர்ந்த சூழலில் ஐயப்பன், கிருஷ்ணன், ஹனுமான் என்றுதான் வளர்ந்தேன். ஜிம்மில் கூட எதிரே ஹனுமான் படமே இருந்தது. ஏன் அந்த நடிகர் ஹனுமானால் கொரோனா போகும் என்று கேட்டார் எனத் தெரியவில்லை.

என்றெல்லாம் விளக்குகிறார்.

இது போதாதா? அவர் சங்கியாக்கப்படுகிறார். அதனால் அவர் நடிக்கும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அரசியல் பார்க்கப்படுகிறது போல!

நம் தமிழ்த் திரையுலகில் ஹிந்துக்களுக்கும் பாஜக அரசுக்கும் எதிராகச் செய்யப்படும் பிரசாரத்தில் நூறில் ஒரு பங்கு கூட, மேப்படியான் படத்தில் கிறித்துவர்களுக்கோ இஸ்லாமியர்களுக்கோ எதிராக இல்லை. ஆனாலும் கொண்டாடுகிறார்கள். அத்தனை காய்ந்து போய் இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

முகுந்தன் உன்னி இன்னும் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.

திரௌபதி, ருத்ர தாண்டவம் இயக்குநர் மோகன் ஜி இப்படத்தைப் பார்க்கவேண்டும். மேப்படியான் ஒரு பிராசரப் படம்தான் என்று வைத்துக்கொண்டாலும் அதன் நேர்த்தி எந்த அளவுக்கு யாராலும் புறந்தள்ள முடியாமல் இருக்கிறது என்று நாம் எல்லாரும் புரிந்துகொள்ள இன்னுமொரு வாய்ப்பாக இருக்கும். படத்தின் செலவு வெறும் 3 கோடி மட்டுமே என்று விக்கி சொல்கிறது. மேப்படியான் இயக்குநர் விஷ்ணு மோகனின் அடுத்த திரைப்படம் ‘பப்பா’ என்று தெரிகிறது. அதன் மோஷன் பிக்சர் டிரைலரில் முகுந்தன் உன்னி கழுத்தில் சிலுவையுடன் வருகிறார். இப்படம் முகுந்தன் உன்னியின் இதே திசையில் இருக்குமா அல்லது இதை சமன் செய்யும் எதிர்த்திசையில் இருக்குமா என்று அறிந்துகொள்ள இப்படத்தைப் பார்க்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

Share

KPAC Lalitha

கே பி ஏ சி லலிதா நேற்று உடல்நலமில்லாமல் மரணமடைந்திருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் களேபரத்தில் இந்தச் செய்தி கண்ணில் படவே இல்லை. எப்பேற்பட்ட நடிகை. எத்தனை பெரிய இழப்பு!

சென்ற வாரம் பொழுது போகாத ஒரு நேரத்தில் ‘பவித்ரம்’ என்றொரு மலையாளப் படம் பார்த்துக்கொண்டிருந்தேன். மோகன்லால் நடித்து 1994ல் வெளியான திரைப்படம். மோகன்லால், திலகன் என்று இருவரும் கலக்கியெடுக்க, கே ஏ பி சி லலிதா நிழல் போலப் படம் முழுக்க கலகலப்பாக வந்து மனதை கனக்கச் செய்தார். அதிலும் மோகன்லால் தன் மகளை (தங்கையை!) அடிக்கப் பாயும் கணத்தில் கே ஏ பி சி லலிதா தடுக்கும் காட்சி உணர்ச்சிகரமானது. மோகன்லால் கதாபாத்திரத்தின் அம்மா கர்ப்பமாகி இருப்பதை கே ஏ பி சி லலிதா நாணத்துடன் மோகன்லாலுக்கு சொல்லும் காட்சி மறக்க முடியாதது. (அந்த ஸ்ரீவித்யாவின் முகம்தான் எத்தனை பாந்தம்!)

தமிழில் 70களின் குழந்தைகளுக்கு இவர் ராஜபார்வையில் நடித்தவர் என்று சொன்னால் தெரியலாம். அதைவிட, காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வரலாம்.

ஓம் ஷாந்தி.

Share

மகான் – முரண்களின் சுவாரஸ்யமான ஊர்வலம்

மகான் திரைப்படம் பற்றி எழுதவேண்டுமா என்று யோசித்தேன். ஆனால் ஒரு சிறு குறிப்பையாவது எழுதி வைப்பதுதான் நியாயம் என்று தோன்றியது.

மகான் திரைப்படத்தில் சாராயம் காய்ச்சும் ஒருவனின் பெயர் காந்தி மகான். அவனே ஹீரோ. இது காந்தி ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய எரிச்சலை உருவாக்கி இருக்கிறது. நியாயமான எரிச்சலே. ஆனால் படம் பார்த்த பின்பு எனக்கு இது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. காரணம் என்ன? முதலில் இந்தப் படம் பரம்பரை பரம்பரையாக காந்திய வழியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை. ஹீரோ அவ்வழியில் வந்தவன். கள்ளுக்கடை மறியலில் தன் உயிரைக் கொடுத்த ஒரு தாத்தாவின் பேரன் அவன். அவனது அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். காந்தியின் நினைவாக தன் மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைக்கிறார். அவன் பின்னாளில் குடும்பத்தின் அஹிம்ஸையின் உச்சமான அடக்குமுறை பிடிக்காமல் காந்திய வழியில் இருந்து விலகி ஓடுகிறான். இப்படித்தான் அவனது பெயர் காந்தி மகான் என்று வைக்கப்படுகிறதே ஒழிய காந்தியை இழிவு படுத்தும் நோக்கில் அல்ல.

கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். ஒரு கதாபாத்திரத்துக்கு வேண்டுமென்றோ நரேந்திர மோடி என்றோ வேறு மதங்களின் இறைத்தூதர் பெயரையோ வைத்தால் சும்மா இருப்பார்களா? இருக்கமாட்டார்கள். ஆனால் காந்திக்கு இன்று அந்த அளவுக்குப் பிரச்சினைகள் இல்லை. இது காந்தி உருவாக்கித் தந்த ஒரு ஜனநாயக வெளி என்று கூடக் கருதிக்கொள்ளலாம்.

இதைவிட முக்கியம், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் சொந்த வாழ்க்கையில் அவர் காந்திய வெறுப்பாளராக இருந்திருக்கும் தடயங்கள் ஏதும் இல்லை. தீவிர அரசியல் நிலைப்பாட்டுடையவர் வேண்டுமென்றே தனக்குப் பிடிக்காத ஒரு அரசியல்வாதியின் பெயரை ஒரு கதாபாத்திரத்துக்கு வைப்பதற்கும் இப்படத்தில் காந்தி மகான் என்று பெயர் வைத்ததற்குமான முக்கியமான வேறுபாடாக இதைப் பார்க்கிறேன். இப்படம் பார்த்த பிறகு தோன்றியது, ராஜிவ்காந்தி என்று பெயரை வைத்துக்கொண்டு எல்டிடிஈ-யினரை ஆதரிப்பவர்கள், காந்தி என்று பெயர் வைத்துக்கொண்டு திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன மனநிலையில் இருப்பார்கள் என. உண்மையில் பெயர் நமக்கு வைக்கப்படுவது, நாம் தேர்வது அல்ல!

இத்திரைப்படத்தை நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். பல லாஜிக் மீறல்களையும் எரிச்சலூட்டும் க்ளிஷே காட்சிகளையும் (எதிரிகள் இருவருமே நண்பர்களாக இருப்பது) தாண்டி இப்படம் பிடித்திருந்தது. காரணம் என்ன? வழக்கமான கேங்ஸ்டர் கதையில் வழக்கமான அப்பா மகன் மோதலை ஒரு தத்துவப் பின்னணியில் சுவாரஸ்யமாகக் கொண்டு போய்ச் சேர்த்ததுதான். தொடக்க 10 நிமிடங்கள் பெரிய எரிச்சலைத் தந்தாலும், பின்னர் படம் சூடுபிடிக்கிறது. ஒரு பக்கம் காந்தி சாராய வியாபாரியாக உயர்ந்துகொண்டே போக, தன் மகனை ரட்சிக்க வந்த தேவ தூதன் காந்தி என்று சத்தியன் மதமார்க்கத்தில் போக எத்தனிக்கிறான். ஆனால் அவனை மீண்டும் சாராய வழிக்கே கொண்டு வருகிறான் காந்தி. இக்காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, படத்தின் உச்ச காட்சிகளுக்கு மிகப் பெரிய அடித்தளத்தை அமைத்துத் தருகின்றன. பிரமாதமான திரைக்கதை இது.

இத்தொழிலே வேண்டாம் என்று விலகிப் போனவனைக் கூட்டி வந்து தன் கையாலேயே கொல்வது, தானே காப்பாற்றிய தன் மகன் போன்ற ஒருவனை தன் நிஜ மகனே கொல்வது, காந்தி மகான் என்று பெயர் வைக்கப்பட்டு மது விலக்குக்காகப் போராட வேண்டியவனே சாராய வியாபாரி ஆவது என்று படம் முழுக்க முரண்களின் ஊர்வலம். காந்திய வழி இல்லை என்றாலும், நான் கொன்றால் அது சட்டப்படி சரி என்று அத்தனை பேரையும் என்கவுண்ட்டரில் போடும் மகனே தன் கையால் சட்டத்துக்கு உட்படாத கொலைகளைச் செய்யவேண்டி வருவது இன்னொரு உச்சக்கட்ட முரண்.

உண்மையில் காந்தியின் அவனது மகனும் இறுதிக்காட்சிக்கு முன்பாக காரில் வரும்போதே இப்படம் முடிந்துவிடுகிறது. கடைசி பத்து நிமிடம் படம் தேவையற்று அலைபாய்ந்து விட்டது. காரணம், ஹீரோவே வெல்லவேண்டும் என்பது போன்ற ஒரு லாஜிக். கூடவே, இறுதிக்கணத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்தே ஆகவேண்டும் என்கிற கார்த்திக் சுப்புராஜின் வெறி. ஆனாலும் இக்காட்சிகளையும் ஓரளவுக்கு நியாயப்படுத்தி எடுக்க முயன்றிருக்கிறார்.

ஜகமே தந்திரம் போலவே அட்டகாசமான மேக்கிங்கில் இப்படம் உருவாகி இருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு இலக்கின்றி அலைபாய்ந்த ஜகமே தந்திரம் படத்தின் பிரச்சினைகளும் இதில் இல்லை. பொறுமையாக மெல்ல நகரும் திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள், பார்வையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசிக்காமல் ரசித்து ரசித்து திரைப்படம் எடுக்கும் இயக்குநரின் படைப்பைப் பார்ப்பவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம் இது. பல குறைகள் இருந்தாலும், இப்படம் முக்கியமான படமே.

Thanks: https://oreindianews.com/?p=7556

Share

FIR – திசை தவறிய பறவை

Spoilers ahead.

FIR – மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருக்கும் தமிழ்த் திரைப்படம். இப்படத்தை எப்படி வரையறுப்பது என்றே தெரியவில்லை. எல்லாவனுக்கும் நல்லவனாக இருக்கணும், அதே சமயம் முற்போக்குப் பட்டமும் வேணும் என்றால் எப்படி? ஒன்று, கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கவேண்டும், இல்லையென்றால் இந்தப் பக்கம் இருக்கவேண்டும், இரண்டும் இல்லாமல் அங்கேயும் இங்கேயும் தாண்டிக்கொண்டு, வணக்கம் போடும் வரை யோசிக்கவிட்டு மூளையைக் களைப்படையச் செய்துவிட்டார் இயக்குநர். இது இஸ்லாமியர்களுக்கான ஆதரவு என்ற போர்வையில் இந்திய அரசை எதிர்க்கும் படம் என்று பத்தாயிரம் வார்த்தைகளும், இது இந்திய ஆதரவுப் படம் என்று இன்னொரு சாரார் பத்தாயிரம் வார்த்தைகளும் எழுதலாம். நான் நினைப்பது, அப்பாவி இஸ்லாமியன் ஒருவன், தன் பெயர் இஸ்லாமியப் பெயர் என்னும் ஒரே காரணத்துக்காக அவன் இந்தியாவில் படும் பாட்டைச் சொல்லி ஆனால் அந்த அப்பாவி இந்திய முஸ்லிம் எப்பேற்பட்ட தியாகி என்பதை விளக்க முயன்றிருக்கிறார் என்பதுவே. ஒரு இந்திய முஸ்லிம் தன்னை பெருமை மிகு இந்திய முஸ்லிம் என்று அழைப்பதால் யாருக்கு என்ன பிரச்சினை இருக்கப் போகிறது? இங்கேதான் கதை சறுக்குக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்கள் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள் என்பது பித்தலாட்டம். இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு பெரும்பான்மை ஹிந்துவுக்கு என்ன என்ன உரிமை உண்டோ அத்தனையும் ஒவ்வொரு சிறுபான்மையினருக்கும் உண்டு, சொல்லப் போனால் கூடுதலாகவே உண்டு. மனசாட்சி உள்ளவர்களுக்கு இது நிச்சயம் தெரியும். தன்னை தேசிய இஸ்லாமியராக உணரும் ஒவ்வொருவருக்கும் இது தெரியும். இந்தப் படத்தில், அப்பாவி முஸ்லிம் ஒருவன், சூழ்நிலையால் ஒரு பயங்கரவாதி என்று குற்றம் சுமத்தப்பட்டால் அவன் என்ன என்ன பிரச்சினைகளை எல்லாம் சந்திக்கவேண்டி இருக்கிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைசியில் தேசியப் புலனாய்வு மையத்தோடு முடிச்சு போட்டு அவனைத் தியாகியாக்கி வைக்கிறார்கள்.

சூழ்நிலையால் பயங்கரவாதியாகும் இர்ஃபான், அதுவும் இந்தியாவில் ஊடுருவி இருக்கும் ஐ எஸ் தலைவன் என்று சந்தேகிக்கப்படும் இர்ஃபான், தன் ஹிந்து நண்பர்களோடு வரும்போது முக்கியமான கேள்விகளைக் கேட்கிறான். என் பேர் இர்ஃபான்றதாலதான என்னை பயங்கரவாதின்னு நினைக்கிறாங்க, இதுவே ஒரு ஹிந்துப் பெயரா இருந்தா விட்டிருப்பாங்கள்ல என்று. உடனே ஹிந்து நண்பர்கள் நடந்ததற்காக இர்ஃபானிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள். கூடுதலாக ஒரே ஒரு கேள்வியை இந்திய இஸ்லாமியனான இர்ஃபானோ, உடன் வந்த ஹிந்து நண்பர்களோ கேட்டிருக்கலாம். ஏன் இப்படி ஒரு நிலைமை? எதனால் வந்தது? இப்படம் சொல்ல நினைப்பது, அப்படி ஒரு முஸ்லிமை முஸ்லிம் பெயர் இருப்பதாலேயே சந்தேகம் கொள்ள எந்தக் காரணமும் இல்லை என்று. ஆனால் சொல்லி இருப்பதோ, அப்படி ஒரு சூழ்நிலை வர முஸ்லிம்களே காரணம் என்று. நான் சொல்லவில்லை, திரைக்கதையில் அப்படி அர்த்தம் வருகிறது.

ஜனநாதன் என்றொரு தீவிர கம்யூனிஸ இயக்குநர் இருந்தார். அவரது திரைப்படங்கள் எல்லாம் புரட்சி என்ற அளவிலேயே இருக்கும். ஆனால் திரையில் பார்த்தால், இந்தியத்துவத்தை எங்கேயும் கை விட்டிருக்கமாட்டார். இந்தப் படத்துக்கும் அதுவே நேர்ந்திருக்கிறது. படம் முடியும்போது தியாகி முஸ்லிமுக்காக வருத்தப்படவேண்டிய நாம், இந்திய அரசின் போராட்டத்துக்காக மகிழ்ச்சி அடைந்துவிடுகிறோம்.

இர்ஃபான் ஒரு பெருமைமிகு இந்திய முஸ்லிம் என்றால், இர்ஃபான் தீவிரவாதி என்று நம்பி, அவனைக் கொன்று இந்தியாவைக் காப்பாற்ற நினைக்கும் அந்த இஸ்லாமியப் பெண் யார்? இர்ஃபான் ஒரு காட்சியில் நானும் முஸ்லிம் நீயும் முஸ்லிம் என்று சொல்ல, அடுத்த நொடி இர்ஃபானின் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் இஸ்லாமியப் பெண் அதிகாரி. அவரும் பெருமை மிகு இந்திய முஸ்லிமே.

ஒரு கட்டத்தில், இர்ஃபான் தன் நிலைக்குக் காரணமான இந்தியாவுக்கு எதிராக மாறுகிறான். இந்தியாவை ஒழிக்க நினைக்கும் ஐ எஸ் அமைப்புக்கு ஆதரவாக அவர்கள் கேட்கும் கெமிகல் கேஸ் வெபன் (ரசாயன வாயுவை வைத்துக் கொல்வது) தயாரிக்க உதவுகிறான். கடைசி ஐந்து நிமிடத்தில் இர்ஃபானின் குடும்பமே எப்பேற்பட்ட தியாகிகள் என்று சொல்லப்படுகிறது. இர்ஃபான் உதவும் ஐ எஸ் அமைப்பில் அத்தனை பேரும் முஸ்லிம்களே. இந்தியாவை வெறுக்கும் முஸ்லிம்கள். தலைவன் முஸ்லிம் ஒரு முன்னாள் ஹிந்து. மதம் மாறி, ஐ எஸ்ஸில் சேர்ந்து, என்னவெல்லாமோ சொல்கிறார்கள். சொல்லிவிட்டு, கார்த்திக் என்ற பெயர் இருப்பதால் அவனை போலிஸ் சந்தேகிக்கவில்லை, ஆனால் இர்ஃபான் என்ற பெயர் இருப்பதால் ஒரு அப்பாவி முஸ்லிமை சந்தேகித்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

FIR Tamil movie poster.jpg

படம் பார்க்கும் அத்தனை இந்திய வெறுப்பாளர்களை அல்லது இஸ்லாமியர்களுக்கு இப்படித்தான் நடக்கிறது என்று நம்பும் நடுநிலையாளர்களை இந்தக் கதை பதைபதைக்கச் செய்திருக்கவேண்டும் இல்லையா? ஆனால் செய்திருக்காது. ஏன்? படத்தின் திரைக்கதையே காரணம். ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

* ஐ எஸ் அமைப்பு என்பது எத்தனை பெரிய கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று உலகுக்கே தெரியும். இந்திய முஸ்லிம்கள் தங்களை எந்த இடத்திலும் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபடுத்தி யோசித்துக் கூடப் பார்ப்பதில்லை. அப்படி ஒரு அமைப்பின் தலைவனாக இர்ஃபான் இருப்பானோ என்ற சந்தேகம் வந்தால், இந்தியா அல்ல, அது எந்த நாடாக இருந்தாலும் ஊராக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும். கதையை யோசிக்கும்போது ஐ எஸ் அமைப்பின் ஒரு தலைவன் இந்தியாவில் இருந்தால் என்று யோசித்துவிட்டார்கள். இந்த ஒரு வரியில் மயங்கிவிட்டார்கள்.

* இந்தியப் புலனாய்வு மையம் என்பது பக்கத்து வீட்டில் மாங்காய் அடித்துத் திருடித் திங்கும் அமைப்பு அல்ல. பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்வது, எதிர்த்தாக்குதல் நடத்துவது என்று இந்தியாவின் தலையாய பிரச்சினையை தினம் தினம் எதிர்கொள்பவர்கள். அந்த அமைப்பு சட்டென திருவல்லிக்கேணி இர்ஃபானை எப்படி ஐ எஸ் அமைப்பின் தீவிரவாதி என்று நம்பும்? இதற்குக் கடைசியில் வேறு ஒரு கதை சொல்கிறார்கள். ஆனால் அந்த நொடி வரை இதே நினைப்பில் கதை பார்க்கும் பார்வையாளர் நம்பகத்தன்மை இல்லாமல்தானே பார்ப்பான்?

* ஒரு ஹீரோ கெட்டவனாக இருக்கமுடியாது என்று நமக்குத் தெரியாதா? கடைசியில் ஒரு நொடியில் என் ஐ ஏ-வின் திட்டங்கள் தெரியும்போது நமக்கு அதிர்ச்சி வருவதற்குப் பதிலாக, இதுக்காடா இவ்ளோ சீன் என்ற கேள்விதான் வருகிறது.

* கதையின் மையம் என்ன? பெயரில் என்ன இருக்கிறது என்பதுதானே? ஆனால், ஹீரோ இர்ஃபான் தன் பெயர் இர்ஃபான், தான் ஒரு முஸ்லிம் என்பதற்காகவே தேசியப் புலனாய்வு மையம் தன்னைத் தேர்ந்தெடுக்கிறது என்று தெரிந்தே ஒப்புக்கொள்கிறான். அப்படியானால் இது கதையின் அடிப்படைக்கே எதிரானதல்லவா? தேசியப் புலனாய்வு மையத்திடம் அவன் என்ன கேட்டிருக்கவேண்டும்? என் பெயர் கார்த்திக் என்றால் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா என்றுதானே? அங்கே கேட்காமல் ஊரெல்லாம் கேட்டுத் திரிகிறான் இர்ஃபான்.

* கடைசியில் இர்ஃபான் குடும்பமே இந்தியத் தியாகிகள் என்று சொல்லி, அதன் பின்னால் இருக்கும் திட்டத்தை என் ஐ ஏ இயக்குநர் விவரிக்கும்போது அதுவரை கதையில் இருந்த கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையும் அடியோடு போய்விடுகிறது. என் ஐ ஏ இயக்குநராக வரும் கௌதம் மேனன் கொஞ்சம் தமிழில் அவ்வப்போது பேசுகிறார். மற்றபடி இவர் எப்போதும் போல் ஹாலிவுட் நடிகராகவே வலம் வருகிறார்.

* மோடி போன்ற கெட்டப்பில் வரும் பிரதமர் கடைசியில் சொல்கிறார், பயங்கரவாதியின் பெயர் இர்ஃபானா அப்துல்லா, சரி, பெயர் எதுவாக இருந்தால் என்ன, பயங்கரவாதி பயங்கரவாதிதானே என்று சொல்லிவிட்டுப் போகிறார். அதாவது இர்ஃபான் குடும்பம் செய்த தியாகத்தை என் ஐ ஏ இயக்குநர் பிரதமரிடம் இருந்து மறைத்துவிடுகிறார். இதனால் இர்ஃபான் இந்திய ஐ எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவனாகவே இறந்தும் போகிறாராம்.

* இப்படி எத்தனையோ முஸ்லிம்களின் தியாகம் வெளியே வராமல் போய்விட்டது என்று சொல்கிறார்கள். விட்டுருவீங்களாய்யா நீங்க என்றுதான் கேட்கவேண்டும். அதைவிட இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள், இப்படி இர்ஃபான் பயங்கரவாதி என்று சந்தேகம் வரக் காரணம், அதை உடனே நம்பிய மீடியா என்று. தமிழ் ஊடகங்களா? சுத்தம்!

* சிரியாவில் போய் ஐ எஸ்ஸில் சேர்வது வீட்டுக் கொல்லையில் இருக்கும் புளியம் பழம் பறிப்பதைப் போல சுலபமானது போல. அதுவும் இந்திய ஐ எஸ் காரன் முன்னாள் ஹிந்து என்பதெல்லாம் அதீத நகைச்சுவை.

இப்படி நம்பகத்தன்மையற்ற காட்சிகளாலும், இலக்கு என்ன என்பதைத் தீர்மானமாக நிர்ணயிக்காததாலும், அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலைக் கைதியாகிறான் என்பதைக் காட்டுவதற்கு தரப்படும் முன்னொட்டுக் காட்சிகளின் நீளத்தாலும், இப்படம் மொத்தத்தில் எரிச்சலைத்தான் தருகிறது. இதனால் விஷ்ணுவிஷால் பட்ட கஷ்டம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிறது.

இதில் இன்னொரு காமெடியை வேறு செய்து வைத்திருக்கிறார்கள். இர்ஃபான் தன்னைப் பற்றித் தானே ஒரு பிம்பத்தை உருவாக்குகிறான். அதில் வருவது ஒரு காதல். அதுவும் எப்படி? ஒரு பிராமணப் பெண் இர்ஃபானை விழுந்து விழுந்து காதலிக்கிறாளாம். இதை உலகமே நம்புகிறதாம். சொல்வதோ ஊரை ஏமாற்ற ஒரு கதை என்றாகிவிட்டது, அதில் ஏன் ஒரு பிராமணப் பெண் இர்ஃபானைக் காதலிக்கவேண்டும்? அந்தப் பெண்ணும் ஒரு முஸ்லிமாக இருந்துவிட்டால் அது கதையை எப்படிப் பாதித்துவிடும்? இயக்குநருக்கே வெளிச்சம்.

இன்னும் தமிழில் உருப்படியான இஸ்லாமியத் திரைப்படம் வரவில்லை என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்ட யதார்த்தமான இஸ்லாமியச் சூழலுடன் வரும் படம் ஒன்றில்தான் ஒரு அப்பாவி முஸ்லிமின் கஷ்டத்தைச் சரியாகக் காட்டமுடியும். இல்லையென்றால், குறைந்தபட்சம் அந்த அப்பாவி முஸ்லிம் எப்படி சூழ்நிலையால் பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுகிறான் என்பதை உள்ளூர் அளவிலாவது யோசிக்கவேண்டும். இப்படி ஐ எஸ் என்றெல்லாம் யோசித்தால் எடுபடாது. கடைசியில் FIR என்று போட்டு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு முஸ்லிம் பெயரைப் போடுவதால் மட்டும் நாம் சொல்ல நினைத்ததை சொன்னதாகிவிடாது. இந்திய தேசிய முஸ்லிம்களுக்கும் இந்திய தேசிய ஹிந்துக்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, எந்தப் பெயரில் வந்தாலும் அவர்கள் இந்தியர்களே. அப்படி இல்லாமல் போவது ஏன் என்பதை இந்திய தேசிய ஹிந்துக்களை போலவே இந்திய தேசிய முஸ்லிம்களும் யோசிக்கவேண்டும். அப்போதுதான் உண்மையான விடை கிடைக்கும்.

Thanks: https://oreindianews.com/?p=7553

Share

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

கடைசி விவசாயி – மயிலின் அகவல்

மணிகண்டன் பாராட்டுக்குரியவர். ஆனால் யாருக்காக இந்த மாதிரி திரைப்படங்களை எடுக்கிறார் என்றே தெரியவில்லை. உண்மையிலேயே அவரை நினைத்துப் பாவமாக இருக்கிறது. இது போன்ற திரைப்படங்களைத் தொடர்ந்து எடுக்கவும் ஒரு பிடிவாதம் வேண்டும். தான் எடுக்கும் படங்கள் மீதான நம்பிக்கை வேண்டும். இரண்டுமே மணிகண்டனிடம் இருக்கிறது, அதற்காகப் பாராட்டுகள்.

கடைசி விவசாயி என்ற பெயர் ஒரு வகையில் இப்படத்துக்குத் தவறான பெயரோ என்று இப்போது யோசிக்கிறேன். குற்றமே தண்டனையில் ‘ஜி-ன்னு கேட்டாலே எரிச்சல் வருது’ என்றொரு வசனம் வரும். இது போன்ற புதிய அலை இயக்குநர்கள் (மணிகண்டன் புதிய அலையில் வருவாரா என்பது தனியே விவாதத்துக்குரியது) எப்போது வாய்ப்புக் கிடைத்தாலும் இந்திய – ஹிந்து மதத்தை ஒரு இடி இடிப்பது வழக்கம் என்பது ஒரு பக்கம். தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்கள் விவசாயம் என்பதைத் அதீதப் புனிதமாக்கி, எங்கெல்லாம் திரைக்கதை எழுத முடியவில்லையோ அங்கெல்லாம் புனித விவசாயத்தைப் புகுத்தி, விவசாயம் என்றாலே பார்வையாளர்கள் ஓடிவிடும் அளவுக்கு ஆக்கி வைத்திருப்பது ஒரு பக்கம். இதனால்தான், இப்படத்தின் பெயர் கடைசி விவசாயி எனவும் கொஞ்சம் யோசித்தேன். ஆனால் மணிகண்டன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏன்? முதல் பாராவை வாசிக்கவும். அந்த நம்பிக்கையில் இப்படத்துக்குப் போனேன்.

முதல் 50 நிமிடம் ரொம்பவே சோதித்துவிட்டார் இயக்குநர். கதைக்குள் எடுத்த எடுப்பிலேயே வந்திருக்கலாம். ஆனால் என்னவெல்லாமோ காண்பித்துப் பாடாகப் படுத்திவிட்டார். அதிலும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் படத்துடன் எங்கேயும் ஒட்டாமல் எப்படியோ அலைபாய்கின்றன. கேள்வியை எதாவது கேட்டுவிட்டு அதற்கு எதாவது ஒரு பதில் சொல்லி, அதைத் தத்துவ பன்ச் என்று நினைத்து அவர்களாக ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம்மால்தான் பார்க்கமுடியவில்லை. வெளியே போய்விடலாமா என்று நினைக்கும்போதுதான் அந்த நீதிமன்றக் காட்சி ஆரம்பிக்கிறது.

அதற்குப் பிறகு படம் நன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிக் காட்சியை எங்கே எப்படி வைப்பது என்பதிலும் மணிகண்டனுக்குக் குழப்பம் போல. இழுஇழு என்று இழுத்து எப்படியோ முடித்து வைக்கிறார். நவீன விவசாயத்தின் மீதான அவநம்பிக்கை படத்தில் ஒவ்வொரு காட்சியில் தெரிந்தாலும், கதையின் மையம் அதுவல்ல என்பது என் எண்ணம். இன்னொரு கோணத்தில் கதையின் மையம் அதுவே என்று சிலர் சொல்லக் கூடும். இயற்கை விவசாயம் என்பதை யாரால் முடியுமோ அவர்கள் செய்துகொள்ளலாம். ஆனால் நவீன வேளாண்மை என்ற ஒன்று இல்லாவிட்டால், பூச்சி மருந்துகள் என்கிற ஒன்று கண்டுபிடிக்கப்படாவிட்டால், உலகம் முழுக்க ஊஊஊஊதான் என்பதை எல்லாரும் மனத்தில் நிறுத்தி வைத்துக்கொள்வது நல்லது. என் பார்வையில் இப்படம் ஒட்டுமொத்த விவசாயமே கேள்விக்குறியாகிறது என்பதைப் பற்றியே பேசுகிறது என்றே நினைக்கிறேன். ஆனால், கடைசிக் காட்சியில் மயில் நடனமாட, மழையும் பெய்கிறது! அப்படியானால் மழைதான் பிரச்சினையா? ‘குற்றமே தண்டனை’யிலும் இதே போல் மணிகண்டனுக்குப் பிரச்சினைகள் இருந்தது நினைவுக்கு வருகிறது. ரொம்ப யோசித்துத் தத்துவச் சிக்கலுக்குள் மூழ்கும்போது திரைக்கதை எழுதுவாரோ? 🙂

படம் எப்போதெல்லாம் நம்மை சோதிக்கிறது என்றால், விஜய் சேதுபதியும் யோகி பாபுவும் வரும்போது! இந்த இரண்டு பேரும் ஏன் இந்தப் படத்துக்குத் தேவை என்பதே புரியவில்லை. ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். இவர்கள் வரும் காட்சி மட்டுமன்றி, கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறேன் என்று, படத்தோடு ஒட்டமுடியாத, ஆனால் காட்சியாக நல்ல காட்சிகளும் பல உண்டு.

விவசாயியாக நடித்திருப்பவர் மட்டுமல்ல, பல நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். க்ளிஷேவாக அல்ல, நிஜமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களையே காட்சிக்கேற்றார் போல் வசனம் பேசச் சொல்லிவிட்டார் போல இயக்குநர். பல வசனங்கள் நாம் வீட்டில், தெருவில் பேசிக்கொள்வது போல அப்படியே வருகின்றன. திக்குவது, தவறாகச் சொல்லிப் பின்னர் சரியாகச் சொல்வது, எதாவது பேசுவது என எல்லாமே அப்படியே வருகின்றன. துல்லியமான மதுரைப் பேச்சு வழக்கில். இதில் சொதப்புவர்கள் யாரென்றால், பெயர் பெற்றுவிட்ட விஜய்சேதுபதி போன்றவர்கள்தான். மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியெல்லாம், எத்தனை இயல்பாக இருக்கிறது என்றால், இப்படித் தமிழ்ப்படங்களில் பார்த்ததே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இயல்பாக இருக்கிறது. பெரிய சாதனை இது. இதற்காக மணிகண்டன் பெரிதும் பாராட்டப்படவேண்டியவர்.

நீதிபதியாக வரும் பெண்ணின் நடிப்பு மிக அருமை. நீதிமன்றக் காட்சிகள் எல்லாமே பெரிய பலம்.

விஜய் சேதுபதி தான் இத்தனை நாள் நடித்த படங்களிலும் இனி நடிக்கப் போகும் படங்களிலும் ஹிந்து மதத்தைத் தாக்கியதற்காக ஒரு பெரிய பிராயசித்தமாக இப்படத்தில் நடித்திருக்கிறார் போல. தொடக்கக் காட்சி முதல் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஹிந்து மதச் சின்னங்கள்தான். ஆனால் பைத்தியம். எல்லாப் படங்களிலும் இவர் பேசுவது இப்படித்தான் இருக்கிறது என்பதால், நமக்கு இதில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லை என்பதுதான் பிரச்சினை.

எழுத்து போடும் காட்சியில் ஒலிக்கும் டி எம் எஸ்ஸின் முருகன் பாடல் தொடங்கி இறுதிக் காட்சி வரை முருகன், பிள்ளையார், குலசாமி, அய்யனார் என பக்தி மயம்தான். படத்தின் முதல் சட்டகமே ‘தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி, பாட்டன் முருகனுக்கும் அவனது அடியார்களுக்கும்’ என்றெல்லாம் வந்தது. ஒருவேளை கிண்டல் செய்கிறார்களோ என்று கூட நினைத்தேன். இல்லை, உண்மையிலேயே பக்தியாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநருக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. 🙂

சந்தோஷ் நாராயன் இசையில் பாடல்கள் ஒட்டவில்லை. இளையராஜா இசையமைத்த டிரைலர் இன்னும் காதில் ஒலிக்கிறது. நமக்குக் கொடுப்பினை இல்லை. வேறென்ன சொல்ல!

மணிகண்டனின் படங்கள் மெல்ல நகரும் என்பது தெரிந்ததுதான். இப்படம் மெல்ல ஆனால் நகரவே இல்லை என்பதுதான் பிரச்சினை. சில காட்சிகள் மிக இயற்கையாக இருக்கின்றன, சில காட்சிகள் செயற்கையாக இருக்கின்றன. இதையெல்லாம் சரி செய்து, திரைக்கதையில் கவனம் செலுத்தி, விஜய் சேதுபதி + யோகி பாபுவை மொத்தமாக நீக்கி இருந்தால், இப்போது மயிலின் அகவலாகத் தேங்கி இருக்கும் படம், மயிலின் நடனமாக . மணிகண்டன் தவறவிட்டுவிட்டார்.

இன்னும் எனக்கு ஆச்சரியமாக இருப்பது, மணிகண்டன் யாரை நம்பி இது போன்ற திரைப்படங்களை எடுக்கிறார் என்பதுதான். ரசிகர்களை நம்பி என்று தன்னைத்தானே அவர் ஏமாற்றிக் கொள்ளாமல் இருக்கட்டும். இன்று நான் தியேட்டரில் பார்த்தபோது 20 பேர் இருந்தால் அதிகம். நல்லவேளை, ஓ.டி.டி என்ற ஒன்று இருக்கிறது. அதில் வரும்போது இன்னும் சில லட்சம் பேர் நிச்சயம் பார்ப்பார்கள். அதற்குப் பின்னால்? மணிகண்டன் யோசிக்கவேண்டும். மணிகண்டன் திறமையான இயக்குநர் என்பதில் ஐயமே இல்லை. அந்தத் திறமையைப் பறைசாற்றும் திரைப்படங்களை அவர் தரட்டும். அந்த முருகன் அவருக்கு பிழைக்கும் புத்தியைத் தரட்டும்.

பின்குறிப்பு: படத்தில் ஒரு கவித்துவமான காட்சி. யோகிபாபு யானையை வைத்துப் பிழைப்பு நடத்துபவர். அந்த யானைக்கு கொசு வலை போட்டு உறங்க வைப்பார். அந்தக் காட்சியில் யோகி பாபுவின் உதவியாளர் படுத்திருக்கும் யானைக்குக் கால் அமுக்கிவிட்டுக் கொண்டே இருப்பார். ❤ எனக்கு மிகவும் பிடித்துப் போன காட்சி.

Share