Archive for திரை

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

1998 Coimbatore bombings.gif
Nine convicted in Coimbatore blast case released - The Hindu

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் – ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.

Share

ஆர்.கே.நகர் திரைப்படம்

ஆர்.கே.நகர் – பொருட்படுத்தத் தகாத ஒரு படம். முழுமையாகப் பார்ப்பதே பெரிய கொடுமை. இப்படிப் படம் எடுக்கும் லட்சணத்தில் நம் இயக்குநர்களுக்குத் தங்கள் திரைப்படங்களில் குறியீட்டை வைக்கவும், அரசியலைக் கிண்டல் செய்யவும் மட்டும் ஆசை வந்துவிடுகிறது. மனசாட்சியைக் கழற்றி வைத்துவிட்டுக் கதை வசனம் எழுதுகிறார்கள்.

ஆர்.கே. நகர் என்ற பெயரே நமக்குச் சொல்லும், இது அரசியல் படமாக இருந்தால் எதைப் பற்றிப் பேசவேண்டும், எந்தக் கட்சிகளைப் பற்றிப் பேசவேண்டும் என்று. இந்தப் படத்தில் அதைப் பற்றிய மூச்சே இல்லை. பின்னணியாகப் பள்ளி சிறுவர்களின் சீரழிவே கதை. ஆனால் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் அரசியல் தொடர்பானவை. சந்தான பாரதி ஒரு கவுன்சிலர். செல்வாக்கு மிக்க கவுன்சிலர். தமிழ்நாட்டில் செல்வாக்கு மிக்க கவுசின்லர், அடிதடி கவுன்சிலர், ரௌடி கவுன்சிலர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கமுடியும்? அதைக்கூட விடுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக நிச்சயம் இருக்க முடியாது? பாஜக காரராக இருக்க வாய்ப்பில்லைதானே? இந்தப் படத்தில் வரும் சந்தான பாரதி நெற்றியில் குங்குமத் திலகமிட்டு வருகிறார். காவி வேட்டி கட்டி வருகிறார். எந்தக் கழக அரசியல்வாதி காவி வேட்டி கட்டிக் கொண்டு திரிகிறார்? இவர்களுக்குக் கழக அரசியல்வாதிகளைக் காண்பிக்க பயம்.

அத்தோடு நிற்கவில்லை. சந்தான பாரதியும் வாஜ்பேயியும் இருக்கும் ஒரு புகைப்படம் ஒரு காட்சியில் பின்னணியில் வருகிறது. குறியீடாம்! இதிலும் திருப்தி அடையவில்லை இயக்குநர் சரவணன் ராஜன். இந்த சந்தான பாரதி கோவில் நிலத்தை ஆட்டையைப் போடுகிறார். தமிழ்நாட்டில் யார் கோவில் இடத்தை ஆட்டையைப் போட்டிருப்பவர்கள்? யார் தொடர்ந்து 50 வருடங்களாக ஆட்சியில் இருப்பவர்கள்? இயக்குநர் பச்சைக் குழந்தை என்பதால் இதெல்லாம் தெரியாது. கைச்சூப்பிக்கொண்டு, அப்படியே மக்களும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் இப்படத்தை எடுத்திருக்கிறார். அப்படியும் திருப்தி வரவில்லை குழந்தை இயக்குநருக்கு. கோவில் சொத்தை ஆட்டையைப் போடுவதைத் தடுக்கும் ஒரு கட்சியின் உதவிக்குப் போகிறார் கோவில் பட்டர். அவருக்கு உதவுபவர்கள் பக்தியில் நம்பிக்கையில்லாத ஆனால் நல்லவர்களாம்!

இந்த இயக்குநருக்கும் இதன் தயாரிப்பாளரான வெங்கட் பிரபுவுக்கும் ஏன் ரஜினி மேல் இத்தனை காண்டு, வெறுப்பு எனத் தெரியவில்லை. சந்தான பாரதியை ரஜினியின் கதாபாத்திரமாக்கி திட்டித் தீர்க்கிறார்கள். போர் வரும்போது வருவேன் என்ற வசனத்தை சந்தான பாரதி சொல்கிறார். சந்தான பாரதி கவுன்சிலர் என்றால் ரஜினியை எப்படித் திட்டுவது என்பதற்காகவே சந்தான பாரதியை ஒரு நடிகர் என்று காட்டி இருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் என்று காட்டினால் கவுன்சிலராகக் காட்ட முடியாதே என்பதற்காக சின்ன நடிகர் என்று காட்டிவிட்டார்கள். எவ்வளவு கற்பனைப் பஞ்சம் பாருங்கள். அதாவது வசனமும் காட்சிகளும் மட்டும் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகருக்கானவை! அவரோ ஒரு கவுன்சிலர்! ஒரு காட்சியில் சந்தான பாரதி ரஜினியுடன் இருக்கும் படம் வருகிறது. அதாவது சந்தான பாரதியும் வாஜ்பேயியும் புகைப்படத்தில் வரும் அதே காட்சியில் இந்த சந்தானபாரதி – ரஜினி படமும் அதற்கு இணையாக வருகிறது. குறியீட்டுக்குள் குறியீட்டுக்குள் குறியீடாம். இதில் சந்தான பாரதியை எந்திரன் போல கிராஃபிக்ஸ் செய்து ஃப்ளக்ஸ் எல்லாம் பின்னணியில் குறியீடாக வருகிறது. இரண்டு முறை ‘நீ என்ன எம்ஜியாரா?’ என்ற வசனம் வருகிறது.

ஒழுங்காக ஒரு படம் எடுக்க முடியவில்லை. ஆக்ரோஷமான அரசியல் சட்டையர் எடுக்க வக்கில்லை. தமிழ்நாட்டில் கோலோச்சும் கட்சிகளை விமர்சித்து, தாக்கி, தீவிரமான அரசியல் படம் எடுக்க துணிவில்லை. ஆனால் வாய் மட்டும் இருக்கிறது இவர்களுக்கு.

Share

தாராள பிரபு – விமர்சனம்

18+ கதையைக் கையாளும் திரைப்படம்.

விக்கி டோனர் என்ற ஹிந்திப் படத்தை எந்த அளவுக்குக் கூறு போட முடியுமோ அந்த அளவுக்குக் கூறு போட்டிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது அதை அப்படியே எடுத்தாலும் (பின்க் – நேர்கொண்ட பார்வை) சரி, முடிந்த அளவுக்கு மாற்றி எடுத்தாலும் சரி, அதை வன்கொலை செய்துவிடும் திறமை நம் தமிழ் இயக்குநர்களுக்கு இருக்கிறது. ஆனால் அதில் குறியீடுகளைப் புகுத்துவதில் மட்டும் களைப்படைவதில்லை.

விபூதி வைத்துவிடும் ஒரு அம்மா. பையன் (ஹரீஷ் கல்யாண்) வீட்டுக்கு வெளியே வந்ததும் அதை உடனே அழிக்கிறான். இதைக் காட்டுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது நம் இயக்குநர்களுக்கு. சந்தோஷம் மட்டும் அல்ல, வேறு எதோவும் இருக்கிறது. (‘பிரேம் ப்யார் காதல்’ படத்தில் இதே ஹரீஷ் கல்யாண் தேவையே இல்லாமல், சிலுவை அணிந்த டீ ஷர்ட்டுடன் வந்தார்!) விவாகரத்தான பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறான் தன் மகன் என்று தெரிந்ததும் அம்மா சொல்லும் வசனம், “நீ மதம் மாறி கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட பிரச்சினை இல்லை. இது எப்படிடா?” இந்த வசனத்துக்கு நியாயம் சேர்ப்பது போல, அந்தக் குடும்பம் ஒரு ஆர்த்தடக்ஸ் குடும்பமும் அல்ல. ‘நாங்கலாம் ரொம்ப முன்னேறிட்டோம்’ என்று வசனம் வேறு வருகிறது. இந்தக் குடும்பம் ஒரு சிங்கிள் பேரண்ட்டால் வளர்க்கப்படும் குடும்பமும் கூட!

படமாகப் பார்த்தால் – விவாகரத்தான பெண் என்று வைத்திருப்பது பெரிய மைனஸ். ஹிந்தியிலும் இப்படித்தான். ஆனால் ஹிந்தியில் focus வேறு. தமிழில் வேறு வகையாக எடுத்ததில் படமே பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது. ஒரு விவாகரத்தான பெண்ணுக்கு, தன் கணவன் விந்துக் கொடையாளராக (ஸ்பெர்ம் டோனர்) இருப்பதில் என்ன பெரிய பிரச்சினை என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு வருகிறது. இதனால் ஒரு பெரிய பரபரப்பு வராமல் போகிறது. குழந்தையே முக்கியம் என்று சரியாக ஹீரோயின் பாத்திரத்தை வடிவமைத்த இயக்குநர், தன் கணவர் விந்துக் கொடையாளர் என்றால் அந்தப் பெண் அதிர்ச்சி அடையவேண்டிய அளவுக்கும் அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்க வேண்டும். ஆனால் அதில் இயக்குநர் கோட்டை விட்டுவிட்டார்.

அதே போல் ஒரு வேலை கிடைப்பதற்காக ஹீரோ இப்படியெல்லாம் செய்கிறான் என்கிற காரணங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை. அதிலும் அத்தனை தடவை விந்துக் கொடை கொடுத்த பின்பு! திருமணத்துக்கு ஒரு கன்னடக் குடும்பமும் தமிழ் பாரம்பரிய சைவைக் குடும்பமும் (பிராமணர்கள் என்று நேரடியாகக் காட்டவில்லை!) பேசிக்கொள்ளும் வசனங்கள் எல்லாம் தேவையே இல்லாதவை. அடுத்த மைனஸ், க்ளைமாக்ஸ். புன்னகையை வரவழைக்கும் அதே ஹிந்தி க்ளைமாக்ஸ்தான் என்றாலும், தமிழில்  இந்தக் காட்சி அடிப்படையே கேள்விக்குள்ளாகிறது. தன் கணவன் மீது எரிச்சலில் இருக்கும் மனைவி முன்பு அவனது 49 குழந்தைகளையும் அவள் பார்க்கும்போது மனம் மாறுவதாகக் காட்டுவதெல்லாம் நம்பக்கூடியதாக இல்லை.

தன் குழந்தையே தனக்குக் கிடைப்பது போல் எடுத்திருப்பதெல்லாம் அபத்தம். ஹிந்தியிலும் இப்படித்தான். ஆனால் இதை ஹிந்தியில் கடைசியில் வைத்தார்கள். தமிழில் இதை முன்னரே கொண்டு வந்து அது தொடர்பான பாசக் காட்சிகளை எல்லாம் செருகிவிட்டார்கள். ஹிந்தியிலும் சரி, தமிழிலும் சரி, உண்மையில் இப்படி எடுத்திருப்பது படத்தின் ஆதாரக் கருத்துக்கே எதிரானது.

படத்தில் வேறு சில பிரச்சினைகளும் உள்ளன. விந்துக் கொடை தொடர்பான அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள். தத்து எடுப்பது என்பது பக்கத்துக் கடையில் போய் காய்கறி வாங்கிக் கொண்டு வருவது போல எளிதானது என்று காட்டுவது. தன் விந்து மூலம் பிறந்த குழந்தையைத் தெரிந்து கொள்வது. இப்படிப் பல காட்சிகள் கதைக்காகப் புனையப்பட்டுள்ளன.

படத்தின் ப்ளஸ் என்ன? 18+ படம், ஆனால் காட்சிகளில் ஆபாசமில்லாமல் எடுத்திருக்கிறார்கள். ஹரீஷ் கல்யாண் நடித்திருந்தும் ஆபாசமில்லாமல் இருக்கிறது என்பது அதிர்ச்சிதான். அதுமட்டுமல்ல, ஹரீஷ் கல்யாண் மிக நன்றாக நடித்திருக்கிறார். இப்படி ஒரு ஹீரோவும் தமிழுக்குத் தேவைதான். கௌதம் கார்த்திக் போன்றவர்கள் மிக ஆபாசமாக நடிக்க, ஓரளவுக்கு ரசிக்கும்படியான இளமையான ரொமாண்டிக் படங்கள் என்ற அளவில் நின்றுகொள்ளும் விவேகம் ஹரீஷ் கல்யாணுக்கு இருக்கிறது.

விவேக் வரும் காட்சிகள் கலகலப்பாக இருக்கின்றன. ஹிந்துக் கடவுளை வழிபடும் ஆன்மிக வாதியாக வந்தும் ஹிந்துக் கடவுள்கள் யாரையும் திட்டவில்லை. இதுவும் ஒரு அதிர்ச்சிதான். ‘எங்கயோ போயிட்டீங்க’ சிவாஜி மிகச் சில காட்சிகள் வந்தாலும், அவருக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

18+ கதையை எடுத்துக்கொண்டு ரகளையான திரைக்கதையை அமைத்திருக்க வேண்டும். ஆனால் படம் தொடக்கம் முதலே தேவையே இல்லாமல் மெல்லப் போகிறது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அழுது வடிகிறது. கலகலப்பான தொடக்கம், இறுக்கமான இறுதி என்று எடுத்திருந்தால் கொஞ்சம் எடுபட்டிருக்கும். அடிப்படைகளையே சிதைக்கும் திரைக்கதையாலும் இயக்கத்தாலும் படம் அடிபட்டுப் போய்விட்டது.

பின்குறிப்பு: மதுவந்தி நடித்திருக்கிறார். செல்ஃபி வீடியோவில் எப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுகிறாரோ அப்படியேதான் படத்திலும். இவர் ஏன் வருகிறார், இவர் யார் என்பதெல்லாம் த்ரில்லர் படம் அளவுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

செத்தும் ஆயிரம் பொன்

சின்ன வயதிலேயே குடும்பத்தோடு விரட்டிவிட்ட பாட்டியைத் தேடி வரும் பேத்தியும் பாட்டியும் உண்மையைப் புரிந்துகொண்டு ஒன்றாகச் சேரும் கதை. பாட்டி ஒப்பாரி வைப்பவள். பேத்தி சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட். பேத்திக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே கல்யாணம் செய்து வைக்க முயலும் பாட்டி. அந்தக் கல்யாணப் பையன் பேத்தியின் அத்தைப் பையன் தான். அவன் சடலங்களுக்கு அழகு செய்பவன்.

படத்தில் பிடித்ததைச் சொல்லிவிடலாம். இரண்டு காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளன. கூத்தியாளுடன் சல்லாபிக்கப் போகும் ஒருவன் அந்த இரவில் அவள் மேலேயே சரிந்து இறந்துபோக அங்கேயே இறுதிச் சடங்கு நடக்கிறது. அப்போது அவனது மனைவிக்கும், அவனது தொடுப்பிற்கும் நடக்கும் சண்டை. இந்தக் காட்சி நன்றாக வந்திருக்கிறது.

இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சினிமாவில் மேக்கப் போடும் ஒரு காட்சி வருகிறது. அது இயல்பான காட்சியாக இருக்கிறது.

இந்த இரண்டு காட்சிகளை விட்டுவிட்டால், படம் முழுக்க எதோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக்கொண்டே இருக்கிறது. ஒன்று காட்சியில், அல்லது நடிகர்களின் நடிப்பில், அல்லது செயற்கையான வசனங்களில். இப்படி எதோ ஒன்று செயற்கையாக இருக்கிறது. சில நடிகர்கள் நன்றாக மதுரை வட்டாரத் தமிழ் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று நெல்லைத் தமிழில் பேசிவிடுகிறார்கள். கிராமத்து மக்கள் ஆங்கிலம் கலக்க மாட்டார்கள் என்பதால் தமிழைப் புகுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசாமல் அதே சமயம் எப்படி இயல்பான தமிழில் பேசுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கலாம். பாட்டியைப் பார்க்க வரும் பேத்தி ஏன் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மேக்கப் கிட்டையும் கையிலேயே சுமந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் புரியவே இல்லை.

ஸ்ரீலேகா என்ற தொலைக்காட்சிக் கால நாடக நடிகை பாட்டியாக நடித்திருக்கிறார். இவர் நாடகங்களில் கூட நன்றாக நடிக்கமாட்டார். இந்தப் படத்திலும் அப்படியே.

உண்மையிலேயே ஒப்பாரி வைப்பவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி இயல்பாக இருக்க, ஸ்ரீலேகா வைக்கும் ஒப்பாரியும் அதில் வரும் வசனங்களும் மிகச் செயற்கையாக இருக்கின்றன. ஒட்டவே இல்லை.

பேத்தியாக வரும் நிவேதிதா நன்றாக நடித்திருக்கிறார். மாடர்ன் பெண் என்பதால் சிகரெட் பிடிக்கிறார். கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கு சிகரெட் பிடிக்க கற்றுத் தருகிறார். பாட்டி சுருட்டே பிடிப்பாள் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

இறுதிக் காட்சியில் பாட்டி செத்துப் போக பேத்தி கிராமத்துக்கு வந்து ஒப்பாரி வைக்கிறாள்.

சில படங்களை யார் ஏன் இயக்குகிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கும். இப்படியான படங்களை எடுப்பவர்களை நினைத்துப் பார்ப்பேன். தியேட்டர் கிடைக்கப் போவதில்லை. போட்ட பணம் வரப் போவதில்லை. ஆனால் எதோ ஒரு ஆர்வத்தில் எடுக்கிறார்கள். அதைப் பாராட்ட வேண்டும். இந்தப் படமும் அந்த வகையறாதான்.

படத்துக்குப் பின்னணியாகக் காட்சிகள் வரவேண்டும். அதில் விவரணைகள் வரவேண்டும். விவரணைகளைக் காட்டுவதற்காகவே படத்தை எடுத்தால் என்னாகும் என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம். கிராமத்தில் நிகழும் சாவை ஒட்டி நடக்கும் காட்சிகளைத் தத்ரூபமாகக் காண்பிக்கிறேன் என்று முதல் 25 நிமிடங்களில் நம்மைச் சோதித்துவிட்டார்கள். அதிலும் செயற்கையான நடிப்பு, செயற்கையான வசனம் வேறு. இதில் பாதியில் ஒரு குழந்தையைக் கொன்று அதற்கு யார் சாயம் பூசுவது என்ற மனப் போராட்டத்தை விவரிக்கிறேன் என்று படுத்திவிட்டார்கள். கொடூரமான கற்பனை இதெல்லாம்.

கலைத் திரைப்படம் என்பது எதையாவது கதையாகச் செய்து, அதன் பின்னணியை சம்பந்தமே இல்லாமல் விரிவாகக் காண்பிப்பது அல்ல. அதில் இயல்பும் உயிரும் இருக்கவேண்டும். இந்த இரண்டுமே இந்தப் படத்தில் இல்லை.

Share

பாரம் – அபாரமான திரைப்படம்

2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழில் பாரம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. அந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் பற்றிய பதிவில் ‘பாரம்’ என்ற படத்தைக் கேள்விப்பட்டதே இல்லை என்று எழுதி இருந்தேன். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலை என்கிற முக்கியமான திரைப்படம் அந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அதேசமயம் ஒருவேளை இந்த ‘பாரம்’ திரைப்படம் நல்ல படமாக இருக்குமானால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன் என்றும் எழுதி இருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பு ‘இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்’ என்ற ஒரு படத்துக்கு விருது தரப்பட்டது. அந்தப் படத்தைப் பற்றியும் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. இப்படி கேள்விப்படாத ஒரு படத்துக்கு, பின்பு எப்போதும் பார்க்க இயலாத ஒரு படத்துக்கு ஏன் விருது வழங்குகிறார்கள் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன். இதில் சில படங்களைப் பார்க்கவே முடியாது என்பது இன்னொரு பக்கம். (உதாரணம்: உச்சிவெயில்.) அதேசமயம் சில நல்ல படங்களும் அமைந்துவிடும். காக்கா முட்டை, மறுபக்கம் போல.

அமேஸான் ப்ரைம் புண்ணியத்தில் நேற்று பாரம் திரைப்படத்தைப் பார்த்தேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நம்பிக்கையின்மையின் உச்சத்தில்தான் பார்த்தேன். ஆனால் படம் மிக நன்றாக இருக்கிறது. விருது தரப்பட்டது நியாயமான ஒன்றே.

தலைக்கூத்தல் என்ற பெயரில் நடக்கும் அநியாயமான ‘கருணைக் கொலை’யை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் உள்ள ஆச்சரியங்கள் என்ன?

விருதுத் திரைப்படங்கள் யதார்த்தம் என்ற போர்வையில் மிக மெதுவாக நகரும். இத்திரைப்படமும் மிகவும் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் உண்மையான யதார்த்தத்துடன். வலிந்து இழுத்துக்கொண்ட செயற்கையான யதார்த்தம் அல்ல. மெதுவாக நகரும் படம் என்றாலும் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை படம் எவ்வித விலகலும் இல்லாமல் நேர்த்தியாகப் போகிறது. நம்மைப் பார்க்க வைக்கிறது. அதுவும் சுவாரஸ்யத்துடன்!

மலையாளத்தில் உள்ள பல திரைப்படங்கள் மிக யதார்த்தமாக இருக்கும். மிக முக்கியமான விஷயம், மலையாளப் படத்தில் நடிப்பவர்கள் ஒவ்வொருவரும் மிக நன்றாக நடிப்பார்கள். சமீபத்தில் ஈ மா யோ என்றொரு திரைப்படம் மலையாளத்தில் வந்திருந்தது. படமாக்கப்பட்ட விதமும், அதில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பும் அத்தனை அசலாக இருந்தது. அதேபோன்று ஒரு தமிழ்த் திரைப்படத்தைச் சொல்லவேண்டுமானால் ‘பாரம்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஈ மா யோ அளவுக்கு நுணுக்கமான ஒரு திரைப்படம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் பாரம் திரைப்படம் கொஞ்சம் புனைவுக்குள்ளும் கொஞ்சம் யதார்த்த உலகின் பிரச்சினைக்குள்ளும் பயணிக்கிறது. ஒரு தமிழ்ப்படத்திலும் அத்தனை நடிகர்களையும் இத்தனை இயல்பாக நடிக்க வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.

கலைப்படங்களுக்கே உரிய அலட்டல்கள், போலித் தனங்கள் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். ஒரு கதாபத்திரம் திடீரென்று போராட்டம் என்றெல்லாம் சொல்லவும், பிறகு என்னவெல்லாம் இந்த இயக்குநர் கொண்டு வருவாரோ என்று நினைத்தேன். ஆனால் கதாபத்திரத்தின் தன்மைக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது புரிந்தபோது நிம்மதியானது.

நல்ல படத்தை எடுக்கும் பெரும்பாலான முற்போக்கு இயக்குநர்கள் எங்காவது எதிலாவது எதாவது அரசியலை நுழைத்து, ஒரு நல்ல படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் செய்வார்கள். இந்த வெற்று ஜம்பத்துக்குள் எல்லாம் இயக்குநர் போகவில்லை. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை, எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகவே இல்லை.

குறைகளை வலிந்து தேடினால் சில விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, மிக அழகாக யதார்த்தமான வசனங்கள் துல்லியமான வட்டார வழக்கில் சொல்லப்படும்போது திடீரென்று முதியவர் பாத்திரம் தான் ஒரு மின்மினிப் பூச்சி, விட்டில் பூச்சி அல்ல என்பது. இந்த சிறிய விலகலைத் தவிர்த்திருந்திருக்கலாம். இரண்டாவது, நியாயத்துக்காகப் போராடும் ஒரு மனிதனின் குடும்பத்தை ஒரு ஊரே எரிச்சலாகப் பார்ப்பது போல் காட்டி இருப்பது. இதைக் கொஞ்சம் ஓவர் டோஸாகக் காட்டிவிட்டார் என்று தோன்றியது. இந்த இரண்டுமே அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் வரும் காட்சிகள் மட்டுமே. எனவே இவை பெரிய குறை அல்ல. மூன்றாவது, இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் வரும் டாக்குமெண்ட்ரி தன்மை. ஆனால் இப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநர் சிரத்தை எடுத்துக்கொண்டிருப்பதும் தெரிகிறது. அதையும் மீறி வரும் சின்ன டாக்குமெண்ட்ரி தன்மையையும் தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆதாரக் கருத்தே ஒரு பிரசாரம் என்ற வகையில்தான் உள்ளது என்பதால் இப்படியே இருக்கட்டும் என இயக்குநர் நினைத்திருந்தால் அதில் நியாயம் உள்ளதுதான்.அதேபோல் மருமளின் பெயர் ஏன் ஸ்டெல்லா என்பது புரியவில்லை. தேவையற்ற விலகல் இது. இன்னொரு முக்கியமான விவாதத்துக்குரிய விஷயம், இந்தத் தலைக்கூத்தல் என்பது எந்த சமூகத்தில் நடைபெறுகிறது என்பது.

தமிழில் சந்தியா ராகம், வீடு, மேற்குத் தொடர்ச்சி மலை வரிசையில் வைக்கலாம் என்ற அளவுக்கான அபராமான படம் பாரம். நிச்சயம் பார்க்கவும். அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.

பின்குறிப்பு: நான் எழுதிய கதைகளுள் எனக்குப் பிடித்தமான ஒன்று ‘யாரோ ஒருவனின் வானம்.’ என் ‘சாதேவி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ளது. இதை ஒட்டிய கதைதான். வாசித்துப் பார்க்கலாம். கிண்டிலில் கிடைக்கிறது.

Share

திரௌபதி – அவர்கள் எறிந்த கல்

இன்று தமிழில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் முற்போக்கு என்ற பெயரில் வரும் போலி முற்போக்குத் திரைப்படங்களே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – அரசியல் மற்றும் சாதி பேசும் அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் இந்த நான்கிற்குள்  அடைத்துவிடலாம். இப்படிப்பட்ட படங்கள் வரும்போது கொண்டாடி மகிழ்ந்து போகும் போலிகளைக் கதற வைக்கும் ஒரு படமாக வந்திருக்கிறது திரௌபதி. ஹிந்து மத நிந்தனைகளைப் பயன்படுத்தி நியாயமே இல்லாமல் பேசிய திரைப்படங்களைக் குற்றம் சொன்னவர்களுக்கு மட்டுமே திரௌபதியைக் குற்றம் சொல்லத் தகுதி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முற்போக்கு முகமூடிகளில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனவே இந்தப் படத்தைக் குறை சொல்லும் தகுதியும் ஹிந்துத்துவர்களுக்கு மட்டுமே உண்டு.

தலித்துகளுக்கு ஆதரவான திரைப்படம் வரும்போது அதிலிருக்கும் சமநிலையின்மையைப் பற்றி யாரும் இங்கே பேச மாட்டார்கள். பரியேறும் பெருமாள் மிக முக்கியமான திரைப்படம். திரைப்படம் என்கிற வகையிலும் சரி, அது படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அது சொல்ல வந்த வகையிலும் சரி, அது நிச்சயம் தமிழின் முக்கியமான திரைப்படம்தான். அந்தப் படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே கொடூரர்களாகக் காட்டப்படவில்லை. சாதி வெறி இருந்தாலும் கூட, அவர்களுக்குள்ளும் ஒரு மனிதாபிமானம் இருப்பதாகப் பெண்ணின் தந்தையின் பாத்திரம் காட்டப்பட்டது. அதாவது முற்பட்ட சாதியினரில் எல்லா வகை மனிதர்களும் உண்டு! ஆனால் தலித்துகளில்? அந்தப் படத்தில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள். இப்படி ஒரு சமநிலையின்மை அந்தப் படத்தில் இருக்கிறது. ஏன் அந்தப் படம் தலித்துகளிலும் சாதி வெறியர்கள் உட்பட பல்வேறு வகையான மனிதர்கள் உண்டு என்பதைக் காட்டவில்லை? ஒரு பிரசாரப் படம் இதைக் கணக்கில் கொள்ள முடியாது என்பதே பதில். அதே சமயம் பரியேறும் பெருமாள் வெறும் பிரசாரப் படமாகத் தேங்கவில்லை. அதையும் தாண்டிச் சென்றது. அப்படியானால் தலித்துகளில் உள்ள வேறுவகைபட்ட மனிதர்களையும் அது கொஞ்சம் பேசி இருக்கவேண்டும். ஆனால் பேசவில்லை. ஒரு தலித் படமும் மற்ற சாதிப் படங்களும் ஒன்றல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆயிரம் படங்களில் ஒரு படம் கூடவே வேறு விதமாகப் பேசாது?

பரியேறும் பெருமாள் என்றில்லை, தமிழில் வரும் அனைத்து முற்போக்குத் திரைப்படங்களும் இப்படித்தான். பல படங்களைச் சொல்லலாம் தற்போது வெளியான கன்னிமாடம் வரை. முற்பட்ட சாதியினரின் சாதி வெறியை சரியாகப் படம் பிடிக்கும் ஒரு திரைப்படம், தான் பரிந்து பேசும் சாதியினரைப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட வைப்பதில்லை. ஒரு பிரசாரத் திரைப்படம் பல்வேறு நுணுக்கங்களுக்குள் சிக்கினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து மக்களைச் சென்றடைவதில் குழப்பம் இருக்கலாம் என்று இயக்குநர்கள் சொல்லக் கூடும். அது நியாயம்தான். ஒரு படத்துக்குள்ளும் சமநிலை இல்லை சரி, தமிழில் வெளியாகும் அத்தனை சாதிப் படங்களுக்குள்ளும் சமநிலை இல்லையே ஏன் என்பதற்கு அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஒரே ஒரு பதில் நாம் சொல்வதாக இருந்தால், ஹிந்து மத வெறுப்பு மட்டுமே. உண்மையான தலித் திரைப்படத்தின் சாத்தியங்களைக் கெடுத்ததோடு அல்லாமல், அதற்கான முன்னெடுப்புகளையும் தங்கள் அரசியல் சார்பாலும் இந்திய-ஹிந்து மத வெறுப்பாலும் மந்தப் படுத்தி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.

ஒரு தலித் பிரசாரத் திரைப்படத்துக்கான அத்தனை சால்ஜாப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களையே தாக்கும் ஆயுதமாக உருவாகி இருக்கிறது திரௌபதி. அவர்கள் எறிந்த கற்களையே எடுத்து அவர்களை நோக்கி எறிந்திருக்கிறது. தலித் திரைப்படங்களில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள் என்றால், இப்படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே நல்லவர்கள்! தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல்! காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது? முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம்? சிரிக்காமல் கடுப்பாகிறார்கள்.

ஜிப்ஸி திரைப்படத்தில் உத்திர பிரதேசத்தின் ஆதித்யநாத் யோகியை வில்லனாகக் காண்பித்தபோது அப்படியே புளகாங்கிதம் அடைந்தார்கள். அதை எப்படிக் காட்டலாம் என்று ஒருவர் கூடப் பேசவில்லை. சென்சார் அதைப் பெரும்பாலும் நீக்கவும் சென்சாரையும் திட்டினார்கள். படத்தின் இயக்குநர் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் ட்ரைலரில் ஜிப்ஸி ஒரு இசைத் திரைப்படம் என்று கூறினார். யோகியைக் காண்பித்தது தவறு என்று சொல்ல இங்கே ஆளில்லை. திரௌபதி ஒரு அண்ணன் கதாபாத்திரத்தைக் காட்டியது. யோகியைக் காண்பித்தபோதே நியாயம் பேசி இருந்தால் இப்போதும் நீங்கள் பேசும் நியாயத்தில் ஒரு அறம் இருந்திருக்கும். அப்போது அமைதியாகக் கூட நீங்கள் இல்லை, குதூகலித்தீர்கள். படத்துக்குத் தொடர்பே இல்லாமல் குறியீடுகளை வைப்பது, குறியீடுகளுக்காகவே படங்களை எடுப்பது, அந்தக் குறியீடுகளைப் புகழ்ந்தே படம் எடுப்பது – இவற்றையே ஆயுதமாக்கி உங்களை நோக்கி எறிந்திருக்கிறது திரௌபதி.

காதலே கூடாது, சாதி மாறி காதலோ கல்யாணமோ கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவை எல்லாம் இல்லவே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவற்றை எதிர்க்கவும் வேண்டும். சாதி மாறி நடக்கும் காதல் திருமணங்களை ஏற்கவும் வேண்டும். எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது சவால்தான். அதற்காக ஒட்டுமொத்த சாதி மாறிய திருமணங்களைப் புறக்கணிப்பது சரியானதல்ல. உண்மையில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்த பின்னர் பெரும்பாலானவற்றில் அந்தத் திருமணத்தில் எதோ ஒரு ஆதிக்க சாதி புழங்கப் போகிறது என்பதே யதார்த்தம். (விதிவிலக்குகள் உண்டு!) மதம் மாறி நடக்கும் திருமணங்களிலோ ஹிந்து மதம் அல்லாத ஒரு மதமே புழங்கப் போகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான். சாதி இணக்கத் திருமணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதிலும் கூட அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் சாதி இணக்கம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும். முற்போக்கு ஜிகினாக்களில் சிக்கி வாய்ப் பந்தல் போட வேண்டுமானால் இவையெல்லாம் உதவலாம்.

தங்கள் சாதிப் பெண்கள் குறி வைத்து ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு சாதி நம்ப இடம் இருக்கிறது. அதையே திரௌபதி முன் வைக்கிறது. ஆனால் தட்டையாகச் சொல்கிறது. அனைத்துக் காதல்களுமே நாடகக் காதல் என்பதும், ஆணவக் கொலையே இல்லை என்பதுமெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. ஆனால் ஒரு பிரசாரப் படமாகவே இது வெளியாகி இருப்பதால், இந்த விவாதங்களுக்குள் செல்லாமல், தன் பிரசாரத்தை மட்டுமே முன் வைக்கிறது – முன்பு தலித் திரைப்படங்கள் செய்ததைப் போலவே!

இத்திரைப்படத்தின் சிக்கல்கள் என்ன? ஒரு திரைப்படமாக இது மிகவும் பின் தங்கி இருக்கிறது. மெட்ராஸ், அட்டகத்தி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டதற்குக் காரணம், அத்திரைப்படங்கள் பேசிய விஷயம் மட்டும் காரணமல்ல, அவை சொல்லப்பட்ட விதமும், அவற்றின் தரமும் கூடக் காரணங்கள்தான். திரௌபதி இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி விட்டது. அதே சமயம், பார்க்கவே முடியாத அளவுக்கு இல்லை என்பது ஒரு ஆச்சரியம். இடைவேளை வரை (அந்த தேவையற்ற ஒரு பாடல் நீங்கலாக) ஓரளவு பரவாயில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆவணப் படம் போல் ஆகிவிட்டது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் ஓரளவுக்கு இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.

ஒரு பிரசாரத் திரைப்படமாகவே இருந்தாலும் படம் தரமாக எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். திரௌபதி தப்பித்ததன் ஒரே காரணம், இந்த வகையான தலித்துகள் அல்லாத சாதியில் இருக்கும் ஒரு பிரிவினரின் மனக்குமுறலை முதன்முதலாகச் சொன்னது என்பதால்தான். அது சரியோ தவறோ நியாயமோ அநியாயமோ அவர்களுக்கான குரல் வெளிவர ஒரு இடம் தேவை என்பதை திரௌபதி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

திராவிட அரசியல் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஹிந்துக் காழ்ப்பு என்பதே பிராமணக் காழ்ப்புதான்’ என்கிற மாயையில் திரௌபதி திரைப்படமும் விழுந்திருப்பது பெரிய அலுப்பைத் தருகிறது. எந்த சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்களோ அந்த சாதிகளைப் பற்றி ஒரு வெளிப்படையான குறிப்பு கூட கிடையாது. ஆனால் பிராமண ஜாதியை வெளிப்படையாகக் காட்டும் ஒரு பாத்திரம் உண்டு. இதை ஏன் இப்படி இயக்குநர் வைத்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான் என்றாலும், திரௌபதி போன்ற படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பதுதான் சிக்கல். அர்த்தநாரீஸ்வர வர்மாவின் புகைப்படத்தைக் கூட காண்பிக்காமல் இருக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கும் சென்ஸார், இந்தப் பாத்திரத்தைக் கண்டுகொள்ளவில்லை. சாதிக் கலவரம் வரும் என்றால் மட்டுமே சென்ஸார் அஞ்சும் போல.

ஒரு திரைப்படத்தின் ஆதாரக் கருத்து என்பது அது சொல்ல வரும் நீதியிலும் அறத்திலும்தான் உள்ளது. அதாவது அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவிலேயே உள்ளது. மற்ற திரைப்படங்களில் வரும் ஆன்மா களங்கத்துடன் இருந்தபோது கொண்டாடியதால்தான் திரௌபதி போன்ற ஒரு திரைப்படம் வரவேண்டிய அவசியம் உருவானது. திரௌபதி திரைப்படத்தின் ஆன்மா நிச்சயம் குறைபட்டதுதான், அதற்கான காரணம் இதற்கு முன் வந்து குவிந்த போலி முற்போக்குத் திரைப்படங்களே. திரௌபதி போன்ற படங்கள் இனி இல்லாமல் போகவேண்டும் என்றால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியது, ஹிந்து மதக் காழ்ப்பால் பீடிக்கப்பட்டிருக்கும் இயக்குநர்களும், அதைக் கொண்டாடும் முற்போக்காளர்களுமே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – இந்த நான்கிற்குள் சிக்கி தமிழ்த் திரையுலகமே தன் முகத்தை இழந்து நின்றுகொண்டுள்ளது. இன்று கைதட்டுபவர்கள் நாளை தங்கள் அரசியலைப் பார்க்கப் போய்விடுவார்கள். இது உறைக்காதவரை தமிழ் இயக்குநர்கள் பெரிய அளவில் திறமை இருந்தும் கிணற்றை விட்டு வெளியே வரப் போவதே இல்லை.

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

மிஷ்கினின் சைக்கோ – குழப்பக்காரன் கையில் ஒரு கத்தி

தொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் லாஜிக் சிதைக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். இதையெல்லாம் தாண்டி, கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழின் ஒரே சிறந்த சீரியல் கொலைப்படம் ராட்சசன். ராட்சசன் ஏன் முக்கியமானது என்பதை, சைக்கோவின் குழப்பங்களைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.

பெண்களைக் கடத்தி ஒரே இரவுக்குள் தலையை வெட்டி வெறும் உடலை மட்டும் காட்சிக்கு அனுப்பி வைக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், தலைகளை சேமித்து வைக்கிறான். கொல்லப்பட்டவர்களுள் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எப்படி யோசித்தாலும் யார் ஏன் கொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. போலிஸ் திணறுகிறது.

பார்வையற்ற ஹீரோ, குரலைக் கொண்டே காதலிக்கும் ரேடியோ ஜாக்கியிடம், தன் காதலைச் சொல்லி அவள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கும் இரவில் அவள் கடத்தப்படுகிறாள். பார்வையற்ற தன் காதலன் ஒரு வாரத்துக்குள் தன்னை மீட்பான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சபதமும் செய்கிறாள். அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான் சைக்கோ. எப்படி பார்வையற்ற ஹீரோ வெல்கிறான் என்பதே சவசவ மீதிக் கதை! ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள்? அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும்? இப்படி பல எப்படிகள் அப்படியே காற்றில் அலைகின்றன.

சின்ன வயதில் நாம் கதை கேட்டிருப்போம். பார்வை தெரியாத ஒருவனும் கால் நடக்கமுடியாத ஒருவனும் நட்பாகி வெல்லும் கதை. அதையே கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கிறார் மிஷ்கின். பார்வையற்ற ஹீரோவுக்கு கால் நடக்கமுடியாத பெண் (முன்னாள்) ஐபிஎஸ் துணை. சதா தன் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் அந்த ஐபிஎஸ். சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் கே பாலசந்தர் ரக கதாபாத்திரங்களை நினைவூட்டும் சீரியஸான நகைச்சுவை பாத்திரமாக எஞ்சுகிறது இந்த ஐபிஎஸ்.

ஏன் ஹீரோ பார்வையற்றவராக இருக்கிறார்? என்ன தேவை இந்தப் படத்துக்கு? அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார்? எல்லாம் அப்படித்தான்! அப்படி இருக்கக்கூடாதா என்ன என்ற கேள்வியைத் தாண்டி ஒரு பதிலும் இல்லை! ஒரு பார்வையற்ற ஹீரோ இந்த அளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கப் போகிறான் என்ற ஒற்றை வரி தரவேண்டிய சுவாரஸ்யம் பெரும் அலுப்பையே கொண்டு வருகிறது. கடைசிக் காட்சி வரை அந்த அலுப்பு தீரவே இல்லை. அதிலும் கண் தெரியாத ஹீரோ கார் ஓட்டுவதெல்லாம் ராம நாராயணன் படத்தில் பாம்பு கார் ஓட்டுவதையும் விட மோசமான கற்பனையாகவே எஞ்சுகிறது.

சிசிடிவி என்ற வஸ்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், இதன் மூலம் உலகளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் பல கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதையும், ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை சில மணி நேரங்களுக்குள் போலிஸ் தெரிந்துகொண்டு விடுகிறது என்பதையும் யாராவது இயக்குநருக்குச் சொன்னால் நல்லது.

மிஷ்கினுக்கும் இலக்கிய உலகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பறைசாற்றுவதற்காகவே ஷாஜி, பாரதி மணி, பவா செல்லத்துரை ஆகியோர் ஐயோபாவமாக வந்து போகிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அள்ளுகின்றன. ஆனால் விழலுக்கு இறைத்த நீர்! இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக வந்திருக்கவேண்டிய ‘தாய் மடியில்’ பாடல் கடைசியில் ஒற்றை வரி மட்டுமே வருகிறது. ஏன் இப்படி இயக்குநர்கள் ராஜாவின் கழுத்தை அறுக்கிறார்கள் என்பது புரிவதே இல்லை.

ஒருவன் ஏன் சைக்கோ கில்லராகிறான் என்பதற்கான காரணம் மிக முக்கியம். அந்தக் காட்சிகளை மட்டும் இப்படத்தில் ஓரளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள். அந்த பத்து நிமிடம் மட்டுமே கொஞ்சம் படத்துடன் ஒட்டிப்போக முடிந்தது.

சிறுவயதில் கிறித்துவப் பள்ளியில் படிக்கும் மாணவனை கிறித்துவ பெண் ஆசிரியை (மிரட்டலான நடிப்பு), மாணவனின் இயல்பான பதின்ம வயது சுய இன்பத்துக்குத் தரும் கொடூரமான தண்டனை அவனை சைக்கோவாக்குகிறது. சீர்திருத்தப் பள்ளிக்குப் போகும் வழியில் அவன் ஒரு போலிஸால் பாலியல் வதைக்குள்ளாக்கப்படுகிறான். இந்தக் காட்சிகள் காட்சிரீதியாக காட்டப்படாமல், பாதிக்கப்பட்ட நபரால் சொல்லப்படுவதுபோல், மாற்று அரங்க நாடகங்களின் பாதிப்பில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடகங்களில் பரிச்சியமில்லாதவர்கள் எரிச்சாகிவிடும் சாத்தியங்களும் உள்ளன. ஆனால் இந்தக் காரணங்கள், ஏன் அவன் பல கொலைகளை அதுவும் பெண்களாகப் பார்த்துக் கொல்கிறான் என்பதையோ அவன் ஏன் அவர்களைப் பாலியல் ரீதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதையோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

மற்றபடி கொலைகாரன் யாரையாவது கொல்லப்போகிறான் என்ற பயம் நம்மிடம் பரவவே இல்லை. அதேபோல் ஏன் இந்த ஹீரோ முன்பின் தெரியாத, காதலிக்கத் துவங்காத ஒரு பெண்ணுக்காக இத்தனை அலைகிறான் என்பதும் பிடிபடவே இல்லை. திடீர் திடீர் என்று ஹீரோவும் போலிஸும் என்னவோ யோசித்து எதையோ கண்டுபிடிப்பதெல்லாம் எவ்வித லாஜிக்கும் இன்றி, சட்டென்று தோன்றும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சாகும் முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலிஸெல்லாம் – பாவமாக இருக்கிறது இந்தக் கால இயக்குநர்களை நினைத்தால்!

இடைவேளை வரை படம் தொடங்கிய புள்ளியில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை என்பது அலுப்பைத் தருகிறது. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தரும் வேளையில், மீண்டும் மீண்டும் கொடூரமான கொலைகள் என்ற பழைய பல்லவிக்கே படம் திரும்பிவிடுகிறது. அதிலும் சைக்கோ கொலைகாரன் மேல் ஹீரோயினுக்கு கொலைகாரன் மேல் வரும் இரக்கமெல்லாம் படு க்ளிஷேவாக இருக்கிறது. ஒரே வெட்டில் தலையை வெட்டி எரிவதை தினம் தினம் பார்க்கும் ஹீரோயின் அவனிடம் குழந்தையைப் பார்த்தேன் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்.

இப்படத்தில் சுய இன்பம் தொடர்பான வார்த்தையும் நான்கெழுத்து ஆங்கில வசவு வார்த்தையும் மயிறு என்ற வார்த்தையும் வெளிப்படையாக ம்யூட் செய்யப்படாமல் இடம்பெற்றிருக்கின்றன. நாம் முன்னேறுகிறோம்! படம் நெடுகிலும் கொடூரமான கொலைகள். வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது. குழந்தைகள் பார்க்கக்கூடாத ஒன்று.

மிஷ்கினுக்கு ஒரு திரைப்படம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவை ஒரு நல்ல கதை மற்றும் திரைக்கதையோடு சேர்ந்து பெரிய படைப்பாக மாற்றத் தெரியவில்லை. திணறுகிறார். இந்தப் படம் அதற்கு இன்னொரு சான்று. திரைப்பட இயக்குநர்கள் தீவிர இலக்கியவாதிகளாக, தீவிர இலக்கிய வாசகர்களாக இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை என்ற என் எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதைகளை இலக்கியவாதிகளிடம் இருந்து எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்ற திரைக்கதையையும் திரைமொழியையும் உருவாக்கும் படங்களே பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சைக்கோ – இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு, முதல்நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்தேன். இனிமே வருவியா இனிமே வருவியா என்று பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தொடைகளில் வைத்து இழுத்து..

நன்றி: ஒரேஇந்தியாநியூஸ்

Share

தர்பார் – திரை விமர்சனம்

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி ஒரு வருடம் கழிந்த நிலையில், அவர் மீதிருந்த தீவிரமான ஆதரவும் வெறுப்பும் கடந்த ஒரு வருட கால இடைவெளியில் பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டுவிட்ட நிலையில் வந்திருக்கிறது தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் பொதுவாக நல்ல கமர்ஷியல் படங்களை எடுப்பதில் பெயர்பெற்றவர். இன்றைய நிலையில் வெளிப்படையாக ரசிக்கத்தக்க, எவ்வித அரசியலும் அற்ற கமர்ஷியல் படங்கள் வருவது அரிதாகிவிட்ட சூழலில், ரஜினியும் ஏ.ஆர். முருகதாஸும் இணைவது கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தத்தான் செய்திருந்தது. திரைப்படத்தை தங்கள் அரசியல் கருத்துகளுக்குப் பயன்படுத்தும் வெளிப்படையான இயக்குநர்களின் படத்தில் ரஜினி நடிக்கும்போது வெளிப்படும் அரசியல் கருத்துகளை ரஜினியின் அரசியல் கருத்துகாகக் கொள்ளக்கூடாது என்பது ஒருவித சமாளிப்பு மட்டுமே. உண்மையில் இது கொஞ்சம் விவரமான சமாளிப்பு என்றே சொல்லவேண்டும். ரஜினி வெறும் நடிகராக மட்டுமே இருந்து, இயக்குநர்களும் வெறும் இயக்குநர்களாக மட்டுமே இருந்தால் இக்கருத்தை ஒட்டுமொத்தமாகவே ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் அப்படி இல்லாத ஒரு நிலையில் இதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. ரஜினியின் காலா வருவதற்கு முன்பு ரஜினி தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாகப் பேசிய பேச்சு கொடுத்த எதிர்வினை, அனைத்து ‘முற்போக்காளர்களையும்’ ரஜினிக்கு எதிராகப் பேச வைத்தது. ஆனால் படமோ அப்பட்டமான ஹிந்துத்துவ எதிர்ப்புத் திரைப்படம். உடனே தங்கள் நிலைப்பாட்டை ரஞ்சித்தை முன்வைத்து காலா திரைப்படத்துக்காக மட்டும் மாற்றிக்கொண்டார்கள் ‘முற்போக்காளர்கள்.’ அதாவது தங்கள் வசதிப்படி இருந்தார்கள்.

இன்று ஒட்டுமொத்த திரைப்பட உலகமும் ஹிந்து மற்றும் ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கையில் சிக்கிக்கொண்டிருக்கிறது. முதலில் இரண்டு திரைப்படங்களை அப்பாவிப் பூனைகளாக எடுக்கும் இயக்குநர்கள் திடீரென்று ஒரு அரசியல் கருத்தோடு ஒரு படத்தை எடுக்கிறார்கள். அல்லது அரசியல் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் இப்படிச் செய்யக்கூடாது என்பதல்ல. ஆனால் இவர்கள் செய்யும் விஷயங்கள் எல்லாம் ஹிந்து மதத்துக்கு எதிரான அரசியல் என்பதாக மட்டுமே இருக்கிறது. மறந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியோ மதமாற்ற விஷயங்கள் குறித்தோ ஒரு மாற்றுக் கருத்தைக் கூட வைத்துவிடமாட்டார்கள். இந்தச் சூழலுக்கு ரஜினியும் பலியானார். காலாவைத் தொடர்ந்து வெளிவந்த பேட்ட படத்திலும் இந்த ஹிந்துத்துவ எதிர்ப்பு வெளிப்படையாகவே முன் வைக்கப்பட்டது. அதன் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் முதலிரண்டு படங்களை நல்ல இயக்குநராகத் தந்தவர், பேட்ட படத்தை ரஜினியின் ரசிகராகத் தந்தவர், இன்று சி ஏ ஏ (தேசியக் குடியுரிமை சட்டத் திருத்தம்) தொடர்பாக திடீரென்று ஒரு கருத்தை முன்வைக்கிறார். இப்போது அவரது படங்களை நாம் வெறும் திரைப்படங்களாக அணுக முடியாது. அணுகக் கூடாது. இது ஒரு உதாரணம் மட்டுமே.

இதை ஏன் தர்பார் திரைப்படத்தின் போது பேசவேண்டும்? ஏனென்றால் ஒரு திரைப்படத்தை வைத்து அந்தத் திரைப்படத்தை மட்டுமே அணுகமுடியும் என்று சொல்வதற்கும், இனி வரும் திரைப்படங்களில் இந்தத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் யார் வசம் சிக்குவார்கள் என்பதைக் கணிக்க முடியாது என்று சொல்வதற்கும்தான். அப்படி இருக்கிறது நிலைமை.

தர்பார் திரைப்படம் வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை. ஆனால் நுணுக்கமாக ஒரு விஷயத்தை மெல்லத் தாண்டிப் போகிறது. தாண்டி போவதன் நோக்கம், பயம் மட்டுமே. வேறு எந்த வகையிலும் ஹிந்து மத அரசியலைப் பழிக்கவேண்டும் என்பதற்காகவோ, பிற அரசியல் இயக்குநர்கள் செய்வது போல ஹிந்துக்களை இழிவுபடுத்துவதற்காகவோ அல்ல. வெளிப்படையாக மத அரசியலைப் பேசவில்லை என்பது தரும் நிம்மதியுடன், நுணுக்கமாக அது தாண்டிப் போகும் விஷயத்தையும் நாம் பேசத்தான் வேண்டும். அதே சமயம் தர்பார் திரைப்படம் மிக தைரியமாக வெளிப்படையாக காவல்துறையை அங்குலம் அங்குலமாக ஆதரிக்கிறது. இன்றைய நிலையில் ஹைதராபாத் என்கவுண்டரைப் பொருத்து மக்களின் மனநிலையில் என்கவுண்ட்டர்களுக்கு ஆதரவான மனநிலை இருப்பதால் தப்பித்தது. இல்லையென்றால் இப்படம் வேறு மாதிரியான எதிர்வினைகளைப் பெற்றிருக்கக்கூடும். எவ்வித விசாரணையும் இல்லாத என்கவுண்ட்டர்களை, ஹைதராபாத் என்கவுண்ட்டர்கள் உட்பட, நான் ஆதரிக்கவில்லை. சட்டரீதியாகத் தரப்படும் தண்டனையே சரியானது அது மரண தண்டனையாக இருந்தாலும் சரிதான். ஆனால் ஹைதரபாத் என்கவுண்ட்டரின்போது இருந்த பொதுமக்களின் கொதிநிலையின் முன்பு இக்கருத்துச் சொல்லப்பட்டபோது மிகத் துச்சமாகவே அது எதிர்கொள்ளப்பட்டது. ஒரு பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள் என்பது நிச்சயம் கேட்ட நொடியில் ஒரு மகிழ்ச்சியைத் தரவே செய்கிறது. குரூர மகிழ்ச்சி. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அறிவு சொல்கிறது. பொதுமக்களோ சட்டென கிடைக்கும் மகிழ்ச்சியிலேயே தங்கிக்கொள்கிறார்கள். இப்படமும் என்கவுன்ட்டரின் இன்னொரு‌ பக்கத்தைத் தொட்டுப் பார்க்கக்கூட முனையவில்லை. நல்ல கிறுக்குத்தமான போலீசின் என்கவுன்ட்டர் என்பதே போதும் என்று நினைத்துவிட்டார்கள்.

இப்படம் வன்புணர்வுக்குத் தரப்பட்டும் என்கவுண்ட்டரை மட்டும் சொல்லும் படமல்ல. மாறாக எந்த ஒரு கொடூர குற்றத்துக்கும் என்கவுண்ட்டர் செய்யும் ஒரு போலிஸை ஹீரோவாகக் காண்பிக்கிறது. தொடர் என்கவுண்ட்டர்கள். கொல்லப்படுபவர்கள் அனைவருமே கெட்டவர்கள். எனவே மக்கள் இந்த என்கவுண்ட்டருக்கு மிக நெருக்கமாகிப் போகிறார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது வெடித்த ரஜினியின் உண்மைக்குரலும் இப்படத்தின் கருத்தும் அப்படியே ஒன்றிப் போகிறது. இதை ஒட்டித்தான் இனி ரஜினிக்கும் இப்படத்துக்கும் முருகதாசுக்கும் வேப்பிலை அடிப்பார்கள். அடிக்கட்டும், நல்லதுதான். அதுமட்டுமல்ல, மிக வெளிப்படையாகவே மனித உரிமைக் கழகத்தின் போலித் தனத்தை விமர்சிக்கிறார்கள். ரஜினியின் வசனம் ஒன்று ஒரு மனித உரிமைக் கழக அலுவலரைப் பார்த்து இப்படி வருகிறது, ‘எவனாவது செத்தா மனித உரிமைக் கழம் வரும், நீங்களே செத்தா எந்த கழகம் வரும்?’ என்று. அதேபோல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களைக் காட்டி, பணம் கொடுத்தா யாருக்கு வேணா பேசுவாங்க என்று வசனம் வருகிறது. சசிகலாவைக் குறிப்பிடும் ஒரு வசனமும் போகிற போக்கில் வருகிறது.

ரஜினி இதுபோல தன் கருத்துக்கு ஒத்துவரும் படங்களை எடுத்துக்கொண்டு நடிப்பது அவருக்கு நல்லது. ஹிந்துக்களுக்கு எதிராக மட்டும் நடித்துவிட்டு, அது வெறும் படம் என்று சொல்லும் சமாளிப்பையெல்லாம் நிறுத்திக்கொள்வது அவரது அரசியலுக்கும் நாட்டுக்கும் நல்லது. ஏனென்றால் நமக்குப் பழக்கப்பட்ட ரஜினி இப்படிப்பட்டவர் அல்ல! ஆன்மிக வாதி! அதை திடீரென்று மாற்றும் தேவையற்ற விஷச் சுழலில் ரஜினி சிக்கிக்கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையென்றால் அரசியலில் கமலுக்கும் ரஜினிக்கும் வித்தியாசம் நூலிழை அளவு மட்டுமே இருக்கும்.

இப்படம் வெளிப்படையாக ஹிந்துக்களுக்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் மும்பையில் போதை மாஃபியா, ரவுடியிஸம் என எல்லாவற்றையும் செய்து குவித்தது தாவூத் இப்ராஹிம். அதைச் சொல்லக்கூட தைரியம் இன்றி, இயக்குநர் அதை ஹரி சோப்ரா என்று வைத்துக்கொண்டு விட்டார். இன்னுமா அச்சம்? இது வன்முறை தொடர்பான அச்சமல்ல. தனக்கும் இத்திரைப்படத்துக்கும் முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று எழும் அச்சம். அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியான பின்னடைவு ஏற்படுத்தும் பயம். இதையே ஹிந்துக்களும் திருப்பிச் செய்யாதவரை இந்தத் தமிழ்த் திரையுலகம் ஹிந்துக்களை துரத்துவதை நிறுத்தப்போவதில்லை.

ஒரு படமாகப் பார்த்தால் – முதல் பகுதி போவதே தெரியவில்லை. மிரட்டல். கார்த்தி சுப்புராஜ் தம்பட்டம் அடித்துக்கொண்டு காண்பித்த பழைய ரஜினியை ஏ.ஆர். முருகதாஸ் அலட்டலே இல்லாமல் சாதித்துக்காட்டிவிட்டார். கடந்த நான்கு படங்களில் ரஜினிக்கு இல்லாத சுறுசுறுப்பும் வேகமும் இப்படத்தில் வந்திருக்கிறது. ஆச்சரியம். காலா, கபாலி படங்களில் ரஜினி ஓடும் காட்சியெல்லாம் கிடையாது. இப்படத்தில் பல காட்சிகள் ரஜினி படு எனர்ஜட்டிக்காக இருக்கிறார். முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மெல்ல இழுக்கும் படம், மும்பையின் விபசார விடுதிகளின் ரெய்டுகளின் போது வேகம் பிடிக்கிறது. இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம், எவ்வித திருப்பமும் இன்றிப் படம் செல்வதுதான். ரஜினியின் மகள் கதாபாத்திரத்தின் முடிவு மிக உருக்கமானது, முக்கியமானது என்றாலும், அது தரும் சிறிய அலுப்பு படத்துக்கு பெரிய தடையைக் கொண்டு வருகிறது. அதிலிருந்து படம் மீளவே இல்லை. ரஜினி தனியாளாகப் போராடுகிறார். இன்னமும் கடைசிக் காட்சியில் கதாநாயகன் தனியாளாகத்தான் வில்லனிடம் மோதவேண்டும் என்ற நிலை வரும்போது, ரஜினியின் தனியாள் போராட்டமும் வீணாகப் போகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு படமாக நிச்சயம் படம் நன்றாகவே உள்ளது. காலா, கபாலி, பேட்ட திரைப்படங்களில் இல்லாத நகைச்சுவையான கலகலப்பான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. இது பெரிய ப்ளஸ். ரஜினியின் மகளாக நடிக்கும் நிவேதா அட்டகாசமாக நடிக்கிறார். எந்த ஒரு வேலையும் இல்லாமல் வெட்டியாக நடிக்கும் நடிகைக்கு தமிழ்த் திரையுலகில் கதாநாயகி என்று பெயர். இப்படத்தில் நயந்தாரா. இசையும் ஒளிப்பதிவும் கச்சிதம். இடைவேளைக்குப்‌ பின்னர் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால் எங்கேயோ‌ போயிருக்கும்.

ரஜினிக்கு 70 வயது. இந்த மாதிரி கமர்ஷியல் படத்தில் இந்த அளவுக்கு உழைப்பதெல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. என் அப்பாவின் 70வது வயதில் அவர் கையைப் பிடித்து பாத்ரூமுக்குக் கூட்டிச் செல்வேன்!

இனி ‘முற்போக்காளர்களிடம்” ரஜினியை விட்டுவிட்டு நாம் ஸ்வீட் சாப்பிடலாம்!

Thanks: OreIndiaNews.com

Share