காவலன் – கொலையரங்கம்

நன்றி: தமிழ் பேப்பர்

சன் பிக்சர்ஸ் தயாரிக்காத, வினியோகிக்காத திரைப்படம் என்பதால், காவலன் திரைப்படத்தைத் திரையிட தியேட்டர்களே கிடைக்கவில்லை. பெரிய பாடுபட்டுத்தான் இப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் அதிமுக பினாமிகள்தான் படத்தை ரிலீஸ் செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். வேறு வழியில்லாமல் இப்போது விஜய் அதிமுக ஆதரவாளராகவே தன்னைக் காண்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. ஏற்கெனவே அரசியலில் உள்ளே வெளியே என்று ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த விஜய், இனிமேல் அந்த ஆட்டத்தைக் குறைத்துக்கொண்டு அதிமுகவின் நன்றி விசுவாசியாகக் கொஞ்சம் காலத்தையாவது ஓட்டவேண்டிய நிர்ப்பந்தம். இப்படிப்பட்ட முன்னாள் விசுவாசிகளெல்லாம் இன்று என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று அவர் யோசித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.

சன் பிக்சர்ஸ் தயாரித்த திரைப்படத்தின்போது தான் அனுபவித்த தேன்நிலவுக் காலத்தின் இன்னொரு முகம் இப்போது விஜய்க்குப் புரிந்திருக்கும். இது மெல்ல ரஜினிக்கும், கமலுக்கும் நேர்வதைத் தவிர்க்கமுடியாது. அன்றுதான் சன் பிக்சர்ஸின் மாயவலையைப் புரிந்துகொள்வார்கள் அவர்கள். இது எத்தனை சீக்கிரம் நடக்கிறதோ அத்தனை சீக்கிரம் நடப்பது நல்லது.

திரைப்படம் ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில், சன் பிக்சர்ஸ் இந்தத் திரைப்படத்தை வெளியிட தியேட்டர்கள் தராததற்கு நன்றிதான் சொல்லவேண்டும் எனத் தோன்றிவிட்டது. (கலையரங்கம் தியேட்டர் ஒரு தனிக்கொடுமை!) சன் டிவியில் வரும் மெகா சீரியல்கள் இதைவிடக் கொஞ்சம் தரமானதாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

மலையாள கமர்ஷியல் இயக்குநர்கள் மலையாளத் திரைப்படங்களை சீரியல்கள் போலவே வைத்திருக்கப் படும்பாடு நாம் அறிந்ததே. அவர்களே தமிழில் படமெடுக்கும்போது, அதே பாணியில் எடுத்து நம்மைப் படுத்துவதைப் பொறுத்துக்கொள்ள பெரிய மனோபலம் வேண்டும். முதலில் ஒரு ப்ளாஷ்பேக்கில் ஆரம்பித்து, பின்னர் படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்னர் அதனை முடித்து, திடீரென ஒரு டிவிஸ்ட் கிளைமாக்ஸ் கொடுத்து, நம்மைப் படுத்தி எடுக்கும் அதே ஃபார்முலா கதை. குறைந்த பட்ஜெட், நிறைய செண்டிமெண்ட், யூகிக்கக்கூடிய காட்சிகள், வளவள வசனம், மினிமம் கேரண்டி.

கொஞ்ச நாளாக பெரிய ஹிட் இல்லாத விஜய், விக்ரமனும் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை என்னும் தைரியத்தில், மினிமம் கேரண்டியான செண்ட்டிமெண்ட் + காமெடியில் இறங்கிவிட்டார். சோகம் என்னவென்றால், லோ கிளாஸ் செண்டிமெண்ட், லோ கிளாஸ் காமெடி.

இந்த லோ கிளாஸ் காமெடி பழகிப்போய், சில இடங்களில் வடிவேலு நம்மைச் சிரிக்க வைத்துவிடுவதும் உண்மைதான். பின்னர் ஏன் சிரித்தோம் என்று வழக்கம்போல யோசிக்கதத் தொடங்கிவிடுகிறோம். ஆனால், சாமானிய மனிதர்களும், பெண்களும் விடாமல் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் என் மனைவி கண் கலங்கி தியேட்டரை விட்டு வெளியேறியதைக் குறிப்பிடவேண்டியது என் கொடுப்பினையா தலையெழுத்தா என்பது தெரியவில்லை.

அசின், ஐஸ்வர்யா ராய்க்குப் போட்டியாகப் பாட்டியாகிவிட்டார். பாடல்களில் ‘யாரது’ பாடல் மட்டும் காதில் ரீங்கரிக்கிறது. இரண்டு விஜய் வரும் பாடல் பார்க்க சுவாரஸ்யம். மற்றபடி பெரிய நடிகர் பட்டாளத்தின் இம்சை இலவச இணைப்பு. லாஜிக்கே கிடையாது என்பது பம்பர் பிரைஸ். நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் எல்லாம் சம்பந்தமே இல்லாமல் எண்ட்ரி கொடுத்து, இது மலையாள இயக்குநர் ஒருவரின் படம்தான் என்று ஊர்ஜிதப்படுத்திவிட்டுப் போகிறார்கள். இப்போதெல்லாம் படம் எடுக்காத பாஸில்தான் எவ்வளவு நல்லவர் என்று நம்மை நினைக்க வைத்துவிடுகிறார் சித்திக்.

ஏன் ஒருவர் பாடிகார்டாக இருக்கவேண்டும் என்பதில் தொடங்கி, ஏன் அவர் யூனிஃபார்ம் போட்டுத் தொலைக்கவேண்டும், ஏன் அவரை கல்யாணம் செய்துகொள்ளும் இரண்டாம் கதாநாயகியின் அப்பா மௌனமாக இருக்கவேண்டும், ஏன் போலிஸுக்குப் பதில் சாதாரண ஒருவர் பாடிகார்டாக போகவேண்டும் என இப்படிப் பல ஏன்கள்? அதில் இன்னொன்று, ஏன் ரோஜா என்பதும் அடங்கும். இத்தனை கொடுமைகளையும் ஒரே ஆளாகச் சுமக்கிறார் விஜய்.

சொல்லாமலே, காதல்கோட்டை, ‘ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ (காலமெல்லாம் காதல் வாழ்க) போல இன்னொரு ஃபோன் காதல். நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் போல விஜய். சுறா, எறா என்றெல்லாம் பார்த்துவிட்டு, இப்படி விஜய்யைப் பார்க்கவே கொஞ்சம் ஆச்சரியமாக (நிறைய பரிதாபமாகவும்!) இருந்தது உண்மைதான். அத்தனையையும் மெல்ல மெல்ல மறக்கடித்துவிடுகிறார். அதிலும் தனது காதலியைப் பார்க்கப் போகிறோம் என்ற காட்சிகளில் அவரது பரிதவிப்பு அருமை. பல கொடுமைகளுக்கு இடையில் கொஞ்சமாவது நம்மை சந்தோஷமாக வைத்திருந்தது விஜய்யும் வடிவேலுவும்தான்.

இத்தனை பெரிய செண்டிமெண்ட் மொக்கை என்று இந்தப் படத்தைக் குறிப்பிடும் வேளையில், இன்னொன்றையும் சொல்லவேண்டும். விஜய்க்கு தொடர் ஃப்ளாப்பாக இருந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், பெண்கள் கூட்டத்தால் இந்தப் படம் ஒரு வெற்றிப்படமாக அமையும். சன் பிக்சர்ஸ் தவிர வேறு யார் படம் தயாரித்தாலும் அப்படத்தைச் சுதந்தரமாகத் திரையிடக்கூட முடியாது என்ற நிலையில் இந்தப் படம் வெற்றி பெறவேண்டியது முக்கியத் தேவை.

Share

Comments Closed