Archive for திரை

புலி என்னும் கிட்டத்தட்ட அம்புலிமாமா

புலியும் தமிழ்நாட்டு சிறுவர் திரைப்படங்களும் – ‘மாஸ்’ திரைப்படம் பார்த்தபோது இதுபோன்ற கட்டுரை (!) ஒன்றை எழுத நினைத்தேன். ‘புலி’ திரைப்படம் பார்த்ததும்தான் எழுத முடிந்தது. ஒன்றோடு ஒன்று மிக லேசாகத் தொடர்புடைய எண்ணங்களை (கொஞ்சம் தொடர்பற்ற எண்ணங்களையும்கூட) ஒன்று கோர்ப்பதே நோக்கம்.

Puli_vijay

முதலில் ‘புலி’ திரைப்படம் பற்றிச் சொல்லிவிடுவோம். முதல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை. சகிக்கமுடியாத திரைக்கதை, கொஞ்சம் கூட ஒட்டாத விஜய்யின் நடிப்பு. பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ ‘கதை’ நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இதிலும் எந்தப் புதுமைகளும் இல்லை. ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டிய நம் மரபில் வந்த சிறுவர் கதைகளின் இன்னொரு வடிவம். எத்தனையோ முறை அரைக்கப்பட்டுவிட்ட அதே விடுகதை வடிவங்கள். இவையெல்லாம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோவின் திரைப்படம் ஆகமுடியாது. இந்த மாஸ் ஹீரோ என்ற பதத்தை எழுதும்போதே கொஞ்சம் எரிச்சலாகத்தான் வருகிறது. ஆனால் அதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் சிம்புதேவனின் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23ம் புலிகேசியே கொஞ்சம் சுமாரான திரைப்படம்தான். பல்லாண்டுகளாக அப்படி ஒரு திரைப்படம் வராமல் போனதாலும், வடிவேலு என்றொரு சரியான நடிகர் அந்தப் படத்தில் அமைந்ததாலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் பார்க்கும்போது தோன்றிய உணர்வு, தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ஒன்றாக்கிய ஒரு படம் என்பதே. அந்த அபத்தத்தை மட்டும் ‘புலி’ எப்படியோ தாண்டி, முழுநீளத் திரைப்படம் என்று இதைப் பார்க்கமுடிகிறது.

இந்தப் படத்தைக் கெடுத்ததில் முக்கியப் பங்கு தம்பி ராமையாவுக்கே. அவர் வரும் காமெடிக் காட்சிகள் நாலாந்தரக் காட்சிகள். சிம்புதேவன் செய்த மிகப்பெரிய தவறு, தொடக்கக் காட்சிகளில் தேவையின்றி வைத்த தம்பி ராமையாவின் காட்சிகளும் விஜய்-ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகளும். உண்மையில் நான் என் மகனுடன் சென்றிருக்காவிட்டால் இக்காட்சிகளிலேயே எழுந்து வெளியே வந்திருப்பேன்.

அதன் பின்னர் ஓர் இந்திய சிறுவர் திரைப்படத்துக்கான அத்தனை காட்சிகளையும் இப்படத்தில் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதுவும் புதுமையில்லை என்றாலும் இப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. நாற்பது வருடங்கள்கூட இருக்கலாமோ? இருக்கலாம்.

இது போன்ற சிறுவர் திரைப்படங்களுக்குத் தேவையானது கொஞ்சம்கூட லாஜிக் பார்க்காத கற்பனை. அதை செயல்படுத்த ஒரு சூப்பர் ஹீரோ. சிறுவர்களைக் கட்டிப்போடும் அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, இசை. இத்தனையும் இப்படத்தில் எல்லா கச்சிதங்களுடனும் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் சில இடங்களில் சொதப்பினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேறிவிட்டது என்றே சொல்லவேண்டும். தேவையற்ற பாடல்கள் நாராசமாய் ஒலித்து சிறுவர்களை சோதிக்கின்றன என்றே சொல்லவேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தப் பாடல்களை இதே சிறுவர்கள் மனப்பாடமாகச் சொல்லக்கூடும். எனவே அவர்களுக்கு இந்தப் பாடல்கள்கூட தடையாக இருக்க வாய்ப்பில்லை.

இப்படத்தைப் பார்க்கும் நாம்தான் சிறுவர் உலகத்துக்கும் முழுமையாகச் செல்லமுடியாமல் வயதுவந்தவர்களுக்கான மெச்சூர்ட் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளவும்முடியாமல் தத்தளிக்கிறோம். இதற்கான காரணம் பார்வையாளர்களான நம்மிடம் மட்டும் இல்லை. இயக்குநரில் தொடங்கி நடிகர்கள்வரை அனைவருக்கும் பங்குள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களில், மந்திர சக்தி கொண்ட நீர்மத்தைப் பற்றிய காட்சியின்போது நினைத்துக்கொண்டேன். முழுமையான சிறுவர் படத்தில் குள்ளர்கள் வருவார்களே என்று. பாலகிருஷ்ணாவும் ரோஜாவும் நடித்த ஒரு தெலுங்கு மொழிமாற்றப் படத்தைப் பார்த்திருக்கிறேன். (தெலுங்கில் பைரவ த்வீபம் தமிழில் விஜயராகவன் என்ற எதோ ஒரு பெயரில் வந்தது.) அதில் குள்ளர்கள் வருவார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட் என்று அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோதே அடுத்த காட்சியில் குள்ளர்கள் வந்தார்கள். சரி, இது முழுமையான சிறுவர் படம்தான் என்று எனக்கு அப்போதுதான் உரைத்தது. இந்தியத் திரைப்படங்களில் குள்ளர்கள் வரும் திரைப்படங்களில் என்ன என்ன காட்சிகள் வருமோ அவையே வந்தன என்பதுதான் இடைஞ்சல். ஆனாலும் குள்ளர்கள், பறக்கும் மனிதர்கள், ராட்சத வீரன், இறவா வரத்துக்கான அரசியின் யாகம், பேசும் பறவைகள், கொலைகாரத் தளபதி என எதையும் விட்டுவைக்காமல் சிறுவர்களுக்கு ஒரு விருந்தையே படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இப்படம் வருவதற்கு முன்பு யாரும் வாய் திறந்துகூட இது சிறுவர்கள் படம் என்று சொல்லிவிடவில்லை. சிறுவர்கள் படமெடுக்க உலகெங்கும் பில்லியன் கணக்கில் செலவு செய்துகொண்டிருக்க, இங்கே சிறுவர் படம் என்று சொல்லவே கூச்சம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவர் படங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கும் வழக்கமே இல்லை. வயது வந்தவர்கள் என்ன படம் பார்க்க விரும்புகிறார்களோ அதையேதான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அப்படியே அதை மட்டுமே விரும்பத் தொடங்குகிறார்கள். அதோடு உலகத்தில் வெளியாகும் அத்தனை சிறுவர் படங்களையும் நம் சிறுவர்கள் எப்படியோ பார்த்துவிடுகிறார்கள். எனவே தமிழ்த் திரைப்படங்களின் போதாமையே இவர்களின் முகத்தில் முதலில் அறைகிறது. அதுவே அப்படத்தின் தோல்விக்கான முக்கியமான காரணமாக அமைந்தும்விடுகிறது. எனவேதான் சிறுவர்கள் படம் என்று சொல்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை. சிறுவர்களுக்கான ஒன்றைச் செய்யும் பொறுமையோ வழக்கமோ நம் பெற்றோர்களுக்கும் இல்லை.

ஒரு இயக்குநர் சொன்னாராம், தான் நல்ல கலைப்படம் எடுத்தபோது அதை வெற்றிபெற வைக்காத தமிழர்களுக்கு நல்ல படம் பார்க்கவோ கேட்கவோ தகுதியில்லை என்று. இதில் கூடுதல் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் உண்மையும் உள்ளது.

ரேவதியும் அரவிந்த் சாமியும் நடித்து ‘பாச மலர்கள்’ என்றொரு திரைப்படம் வந்தது. படம் வந்த ஒரு வாரத்தில் ரேவதி ஒரு தொலைக்காட்சியில் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இது குழந்தைகள் திரைப்படம். அவர்களை நம்பித்தான் வெளியிட்டோம். ஆனால் எந்தக் குழந்தைகளும் பார்க்க வரவில்லை’ என்று. அதுவரை அது குழந்தைகள் படம் என்று யாருமே சொல்லததால் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது அது குழந்தைகள் படம் என்று. படம் ஓடவில்லை என்றாகவும் மெல்ல சிறுவர் படம் என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

இம்சை அரசனை விட ‘புலி’ மிக முழுமையான சிறுவர் திரைப்படம். அந்தக் காலம் என்றால் வரிவிலக்கெல்லாம் கொடுத்திருப்பார்கள். இன்று படம் வருவதே வரிவிலக்கு கொடுத்ததற்கு ஒப்பானதாகிவிட்டது. அதிலும் இப்படத்தில் அரசியல் வசனங்கள் உண்டு. தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று ஜெயலலிதா நினைக்காமல் இருந்ததே விஜய் செய்த பூர்வஜென்ம புண்ணியம். திரையரங்கில் ரஜினியின் அந்தக் காலஅரசியல் வசனங்களுக்கு எப்படி ஆர்ப்பரித்தார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இதில் வரும் அரசியல் வசனங்கள் பலருக்கும் அவை அரசியல் வசனங்கள் என்றே தோன்றவில்லை. விஜய் இந்த அரசியல் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு நல்லது.

விஜய் நடித்ததின் ஒரு ப்ளஸ் அவரது புகழ் என்றால், மிகப்பெரிய மைனஸ், படம் முழுக்க அவரை பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம். தேவையற்ற காட்சிகளிலும் ஸ்லோ மோஷனில் நடந்து பின்னணி இசை ஒலிக்க அவர் வருவதைப் பார்க்கும்போது, இப்படத்தை வயது வந்தவர்களுக்கான திரைப்படமாகவே அவரும் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பல காட்சிகளில் நடிக்கத் திணறுகிறார். இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவும் ஒரு திறமை வேண்டும். மிகவும் மோசம் என்று விஜயைச் சொல்லமுடியாது என்றாலும், என்னவோ ஒட்டவில்லை.

இப்படம் வருவதற்குமுன்பே நினைத்தேன், ஒன்று இப்படம் பெரிய வெற்றியடையும் அல்லது ஊத்திக்கொள்ளும் என்று. இன்று நான் பார்த்தபோது திரையரங்கில் என்னுடன் முப்பது பேர் பார்த்திருந்தால் அதிகம். நமக்கு சிறுவர் படங்கள் இனியும் வாய்க்காமல் போவதற்கு இப்படமும் ஒரு காரணமாக இருக்கும். இதில் வரும் காதல் காட்சிகள், பாடல்கள், கேவலமான காமெடிக் காட்சிகள் என பலவற்றைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உள்ள ஒரு படம் எப்படி குழந்தைகள் படமாக முடியும் என்று யாரேனும் கேட்டால், அக்கேள்வியைப் புறந்தள்ளவும் முடியாது.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு படத்தை நடிக்க முன்வந்ததற்காக விஜய்யைப் பாராட்டவேண்டும். முதலில் உள்ள ஒரு மணி நேரத்தில் பல காட்சிகளை வெட்டி நீக்கி, பின்னர் கடைசியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் முன்னகர்த்தி நகாசு வேலை செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிழைத்திருக்கலாம்.

சிம்புதேவனின் பல மொக்கைத் திரைப்படங்களுக்கு மத்தியில் இது ‘சிறுவர் திரைப்படம்’ என்ற அளவில் கொஞ்சம் தேறுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதன் வணிகத் தோல்வி தவிர்க்க முடியாததுதான். ஐந்து வயது முதல் பத்து வயது சிறுவர்களுக்கான முழுமையான சிறுவர் படம் கடந்த முப்பது நாற்பது வருடங்களில் வந்தது எது என்று யோசித்தால் நமக்கு பதிலே கிடைக்காது.  தங்கமலை ரகசியம், வேதாள உலகம் அளவுக்கு, அதைவிட அட்டகாசமான ஒரு தரத்தில் இப்படம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு ஐம்பது வருடம் கழித்து இப்படம் வெறும் ஓர் உதாரணமாக மட்டும் தேங்கும் என நினைக்கிறேன்.

ஒரு பொறுப்பற்ற அவசரத்தாலும் வணிக வெற்றியை நினைத்தே செயல்பட்டதாலும் திரைக்கதைக்கு மெனக்கெடுவது அநாவசிய வேலை என்ற தமிழ்த்திரைப்பட முடிவுகளாலும் இத்திரைப்படம் கண்டிக்கும் வணிகத்தோல்வி, சிறுவர் திரைப்படங்கள் மீண்டும் தமிழில் இல்லாமல் போவதற்கு காரணமாக அமையும். நம் தொழில்நுட்ப வசதி உயரும்வரை, சிறுவர் திரைப்படங்களுக்கான தேவையை வயது வந்தவர்கள் அறியும்வரை தமிழில் சிறுவர் திரைப்படங்கள் வந்து என்னதான ஆகப்போகிறது?

அறிவுரையே சொல்லாத, லாஜிக்கே இல்லாத, கற்பனையின் உச்சத்துடன் இயக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நிச்சயம் இப்படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். படம் பார்க்க சகிக்காமல் நெளியும் காட்சிகளில் நீங்கள் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை எப்படி வாயை பிளந்து ரசிக்கிறது என்று பார்த்து அதை நீங்கள் ரசிக்கலாம்.

குறிப்புகள்:

* விட்டலாச்சாரியாவின் கேவலமான (டப்பிங்) திரைப்படங்களை நான் கணக்கிலேயெ எடுக்கவில்லை.

* பாகுபலி வந்தபோது புலி டீம் ஏன் பதறியது என்பதற்கான காரணம் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம் மட்டுமல்ல, கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதுதான். இந்த இரண்டின் கதையும் கோச்சடையானின் கதையும்கூட ஓரளவுக்கு ஒன்றுதான். கோச்சடையான் தமிழின் மிக முக்கியமான மேலான முயற்சி. அப்படத்தின் தோல்வியும் ‘புலி’ படத்தின் விமர்சனத்துடன் ஒப்பிடத்தக்கதே.

* சொல்லி வைத்தாற்போல் இப்படத்தில் வரும் எந்த முக்கிய நடிகையும் நெற்றிப் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. நடிகரும் வைத்துக்கொள்வதில்லை. அதெப்படி?

* மாஸ் திரைப்படமும் நல்ல குழந்தைகள் திரைப்படமும். என்ன பிரச்சினை என்றால் வெங்கட் பிரபுவுக்கோ சூர்யாவுக்கோ அதைப் பார்த்த பெற்றோர்களுக்கோ அது வழக்கம்போல தெரியாது என்பதுதான்.

Share

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share

மெஹர் Vs பாயம்மா

பிரபஞ்சனின் புனைவுகள் என்றாலே படிக்க எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான். ஆரம்பகாலங்களில் அவர் எழுதிய சில கதைகளைப் படித்ததனால் வந்த நடுக்கமாகவே அது இருக்கவேண்டும். அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன்று அவரது சிறுகதையான பாயம்மாவைப் படித்தேன். விஜய் டிவி சித்திரத்தில் தாமிரா இயக்கத்தில் வெளியான மெஹர் என்னும் சித்திரத்தைப் பார்த்தபின்னர், அவரது இந்தச் சிறுகதையைப் படிக்க ஆர்வம் கொண்டு, இன்று படித்தேன். இந்த பாயம்மா கதை நற்றிணை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘யாசுமின் அக்கா’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.

மெஹர் ஒரு நல்ல முயற்சி. தமிழில் இதுவரை முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நேர்மையான ஒரு திரைமுயற்சி கூட வந்ததில்லை. மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்துள்ளன. ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. எதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் அது முஸ்லிம்களின் படமல்ல. அப்படி இருந்த ஒரு நிலையில் இந்த மெஹர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். அந்த அளவில் தாமிரா பாராட்டப்படவேண்டியவர். ஒரு திரைப்படத்தின் முக்கியப் பங்கு இப்படி யதார்த்தங்களை தன்னளவில் தொடர்ந்து பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வரும் மெகா தொடர்களும் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. முன்பு சுஹாசினி இயக்கிய சில குறுந்தொடர்களும், பாலுமகேந்திரா இயக்கிய குறுந்தொடர்களும் மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. இதுபோன்ற ஒரு சித்திரம் முயற்சி முன்பு தூர்தர்ஷனிலும் நடந்தது. நீங்காத நினைவுகள் என்றொரு நாடகம் ஒளிபரப்பப்பட்டது. ஜெயபாரதி நடித்தது என்று நினைக்கிறேன். இன்னொரு நாடகம் ஜெய்சங்கர் நடித்தது. ஆனால் அவையெல்லாம் நல்ல முயற்சியாகக் கைகூடவில்லை.

இந்நிலையில் தாமிராவின் மெஹர் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம், அதன் தரம். இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவு. இந்த இரண்டுமே இச்சித்திரத்தை முக்கியத்துவம் பெற வைக்கின்றன. சல்மாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அதைவிட சல்மாவின் மகனாக வருபவரது நடிப்பு அட்டகாசம். பவா செல்லத்துரைக்குக் குரல் கொடுத்தவரின் குரல் பொருந்திவரவில்லை என்பது ஒரு குறை. இன்னொரு குறை என்று சொன்னால், சரியாக கையாளப்படாத நெல்லை வட்டார வழக்கு. மாப்பிள்ளையின் அண்ணன், கடன் தர மறுத்து இரண்டாம் தாரத்துக்கு வாழ்க்கைப்படச் சொல்லும் இன்னொருவர் என இருவரும் மிக இயல்பு. பின்னணி இசை மிக அழகாக இருந்தது. கதைக்கு ஏற்றபடி எவ்வித உறுத்தலும் இன்றி கூடவே முழுக்கப் பயணித்தது.

சிறுகதை என்று பார்த்தால் பாயம்மா மிகத் தட்டையான கதை. நுணுக்கங்களெல்லாம் எதுவுமே இல்லை. தவறு செய்யத் தயாராக இருக்கும் ஒரு பையன், அவனுக்குள் எவ்விதப் போராட்டங்களும் இல்லை. கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்பதால் திருடுகிறான். பாயம்மாவே போலிஸிடம் சொல்கிறாள். வழக்கு வேண்டாம் என்று முதலாளி சொல்கிறார். முதலாளியே மனம் இறங்கி கல்யாணத்துக்குப் பணம் தருகிறார். ஆனால் பாயம்மா மறுத்துவிடுகிறாள். அவ்வளவுதான். இக்கதையைப் படிக்க நான் நினைத்த காரணமே, பிரபஞ்சன் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கை எப்படி எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளத்தான். என்னை ஏமாற்றவில்லை பிரபஞ்சன், பேச்சு வழக்கைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் சாதியினரின் கதையை எழுதுவதில் உள்ள சவால் இது. ஆனால் பிரபஞ்சன் கதையை மட்டுமே கவனத்தில்கொண்டு, இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லா, யாரசூல், நிக்காஹ் போட்டு நிரப்பிவிட்டார். அதில் மோனே மோளே என்றும் ஒரு வரியில் ’என்னண்டயே சதாய்க்கிறியே’ என்றும் வருகின்றன. இங்கேதான் தாமிராவின் திறமை மின்னுகிறது.

ஒரு எழுத்துப் பிரதியை எப்படி திரைமொழியாக்குவது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மிக அழகாக நிர்ப்பந்தங்களை உருவாக்குகிறார் தாமிரா. தன்மொழியில் தேவைப்படும்போதெல்லாம் சொல்லத் தொடங்கி பார்ப்பவர்களுக்கு ‘அவன் திருடினாலும் தப்பே இல்லை’ என்ற எண்ணத்தைக் கொண்டுவருகிறார். இந்த எண்ணமே பாயம்மா எடுக்கப்போகும் முடிவுக்கு ஓர் அழுத்தத்தைத் தருவது. இவையெல்லாம் சிறுகதையில் இல்லை. பாயம்மா ஒரு சிறிய கதை, அவ்வளவுதான். ஆனால் மெஹர் பல நுணுக்கங்களைத் தொட்டுப் போகும் படைப்பு. பாயம்மா சிறுகதை பாயம்மாவை ஒரு படி மேலேற்றுகிறது. ஆனால் மெஹர் பாயம்மாவுக்கும் அவருக்கு இணையாக அவரது மகனுக்கும் ஓர் இடத்தை வழங்குகிறது. மெஹரின் முடிவு கொஞ்சம் பிரசாரத்தனத்தோடு முடிகிறது. பாயம்மாவின் முடிவோ ஒரு லட்சியத்தோடு முடிகிறது. இரண்டுக்கும் அடிநாதம் ஒன்றுதான். அந்த அடிநாதம் மெஹரில் மட்டுமே மிக அழகாக பல இடங்களில் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.

தாமிராவின் இந்த மெஹர் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஒரு சிறிய கதையின் பொறியே போதும், ஒரு சிறந்த திரைமொழியை உருவாக்க முடியும் என்று காட்டுவதற்கு. அதுமட்டுமல்ல, அந்தப் பொறி எவ்விதத்திலும் புதுமையாக இல்லாமல் இருந்தாலும் (பாயம்மாவின் கதையில் எவ்விதப் புதுமையும் இல்லை) திரை உருவாக்கத்தில் கதையைப் பின்னுக்குத் தள்ளி காட்சி அனுபவத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும் என்பதற்கும் மெஹர் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பின்குறிப்புகள்:

01. ரெட்டைச்சுழி எடுத்ததற்காக தாமிராவை மன்னித்துவிடலாம்.
02. பாயம்மா கதையில் மோதிரத்தைத் திருடிக்கொண்டு ஓடும் பரசுராமன் கதாபாத்திரம் ஏன் மெஹரில் பரந்தாமன் ஆனது என்று புரியவே இல்லை. 🙂
03. மெஹர் சித்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் பிரபஞ்சன் எழுதியதுதான் என்றால் – ஒருவேளை இப்படி இருந்தால் – பிரபஞ்சன் பாயம்மாவிலிருந்து மெஹருக்கு முன்னேறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 😛

Share

இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள்

இளையராஜா தேசபக்திப் பாடல்களைப் போட்டதில்லை என்று ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதையே நினைத்துக்கொண்டிருந்ததில் சிக்கிய பாடல்கள். இவை போக எனக்குத் தெரியாதவை, நான் மறந்தவை எத்தனையோ. இதற்குப் பின்னும் அது இந்தப் பாடல் போல இல்லை, அந்தப் பாடல் போல இல்லை என்றே சொல்லப் போகிறார்கள். பின்னால் பயன்படும் என்ற நோக்கில் அதை இங்கே சேமித்து வைக்கிறேன்.

என்னவோ தேடிப் போய் பல பாடல்களைக் கேட்டபோது உண்மையிலேயே அசந்து நின்றேன். இப்படிப்பட்ட ஒரு கலைஞனை போகிற போக்கில் அவமதித்துச் செல்வது வேறு எங்கேயும் நடக்காது என்றே நினைக்கிறேன்.

நான் பட்டியலிட்டிருக்கும் பாடல்களில் சில நேரடியாக தேசபக்திப் பாடல்கள் வகையில் வருபவை அல்ல. ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை தேசபக்திப் பாடலென்றால் இவையும் அப்படியே.

சொர்க்கமே என்றாலும், உலகம் இப்போ எங்கோ போகுது (இரண்டுமே இளையராஜா இசை) – இவையும் ஒருவகையில் தேசபக்திப் பாடல்களே. அப்படியென்றால் கீழே உள்ளவையும்தான்.

காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிவப்பு மனிதன்

 

மனதில் உறுதி வேண்டும் – சிந்துபைரவி

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – காமராஜர்

 

நண்பா நண்பா – தேசிய கீதம்

 

அண்ணல் காந்தி – தேசிய கீதம்

 

என் கனவினைக் கேள் நண்பா – தேசிய கீதம்

 

பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதி

 

 

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் – பாரதி

 

வந்தே மாதம் ஜெய வந்தே மாதரம் – பாரதி

 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட – பாரதி

 

தம்பி நீ நிமிர்ந்து பாரடா – என் உயிர்த்தோழன்

இந்த நாடு இருக்கிற – மக்கள் ஆட்சி

மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

 

போராடடா ஒரு வாளேந்தடா – அலை ஓசை

கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாயிருக்க – ஒண்ணா இருக்க கத்துக்கணும்

காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டால், நாட்டுப்பற்று என்பது நம் நாட்டில் என்ன இல்லை என்ற விரக்தியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் ’ஏங்கிடும் ஏழையின் கூக்குரல்தான் இங்கு தேசியகீதமடா’ பாடலும் ‘நஞ்சையுண்டு புஞ்சையுண்டு’ பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலும் கூட தேசபக்திப் பாடல்தான்!

கடைசியாக: இப்படியெல்லாம் ஒருவர் என்ன பாட்டு போட்டிருக்கிறார், என்ன போடவில்லை என்று பார்ப்பதெல்லாம் சரியான செயலில்லை. ஒரு கருத்தியல்வாதிக்கு இது பொருந்தி வரலாம். நிச்சயம் கலைஞனுக்குப் பொருந்தி வராது. ஒரு கலைஞன் வெளிப்படையாக மறுத்தவற்றையே நாம் பொருட்படுத்தவேண்டும்.

எத்தனையோ ராஜா ரசிகர்கள் இதைவிட அதிகமான பாடல்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்னை மன்னிக்க. 🙂

Share

பொறம்போக்கு – ஓர் இந்திய சலாம்

மாவோயிஸ்ட்டுகளின் தோல்வியுற்ற பிரசார நாடகமாக வெளிவந்திருக்கிறது பொறம்போக்கு என்னும் பொதுவுடைமை. தமிழ்ப்படங்களின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு மாவோயிஸ்ட்டுகளின் எந்த ஒரு கொள்கையையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மிக ரகசியமாக வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்ற வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்றால் அந்த ரகசியத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் நம்மூர் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தா. பாண்டியனின் முகமும் நல்லகண்ணுவின் முகமும்தான். வெகுஜனம் நிச்சயம் ’இந்த நல்லகண்ணுவா இப்படி ஆளுங்களைக் கொல்ல அனுப்பி வைக்காரு’ என்று யோசித்து மெர்சலாகப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. 

விநோதமான தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது நீதிமன்றம். தூக்கிலிடுபவர் அனுபவசாலியாக இருக்கவேண்டுமாம். யமலிங்கத்தைக் கூட்டிவருகிறார்கள். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில், அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக, தூக்கிலிடும் வேலையைச் செய்தவர். அதனால் கடும் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில் யாரைத் தூக்கில் போட்டார் என்பதை கற்பனையில் விட்டுவிட்டார்கள். அஃப்சல் குரு, கசாப்பை எல்லாம் தூக்கில் போட்டவரை அழைத்துக்கொண்டு வந்து இந்த மாவோயிஸ்ட் தீவிரவாதியையும் தூக்கில் போட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் யமலிங்கத்தை அழைத்து வருகிறார்கள். தமிழனை தமிழனே தூக்கில் போடவேண்டும் என்ற தமிழ்த்தேசியம் உள்குத்தாக உள்ளதோ என்னவோ.

மெலோ டிராமா போல யமலிங்கத்தின் உளவியல் சிக்கல்கள் எவ்வித சீரியஸ்நெஸ்ஸும் இல்லாமல் அலைபாய்கின்றன. தூக்கில் போடக்கூடாது என்பதற்காகவே அவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார் என்பதெல்லாம் அம்புலிமாமாவில் வரவேண்டிய கதை. ஒரு தடவை அல்ல, கடைசி வரை உதவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு அவரையும் ஒரு மாவோயிஸ்ட்டாகவே காட்டியிருக்கலாம். காளியிடம் பேசும் யமலிங்கம் மாவோயிஸ்ட்டாக மாறுவதற்கு ஒரு அழகான பெண்ணே காரணம் என்று சுளுவில் திரைக்கதையை முடித்துவிட்டார்கள்.

தமிழ்த் திரைப்படங்களின் பெரிய சவால் திரைக்கதைகளில் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவது. இதுபோதும் என்ற நினைப்புடனேயே திரைக்கதை எழுதுவார்கள் போல. எவ்வித தர்க்கமும் இன்றி படம் முழுக்க காட்சிகள் நிரவிக் கிடக்கின்றன. படத்தின் மையம் என்ன என்பதிலேயே இயக்குநருக்குக் குழப்பம். ஒரே மாவோயிஸ்ட் படத்தில் இந்திய ராணுவத்தின் அராஜகம், தூக்கு தண்டனையை அறவே ஒழிக்கவேண்டிய அவசியம், சிறைக்குள்ளே நடக்கும் அராஜகங்கள், தமிழ்த்தேசியத்தின் புகழ்பாடுதல், சிறைக்கைதிகளின் மனிதாபிமானம் எனப் பலவற்றையும் போட்டுக் குதப்பி சிவப்பாகத் துப்பிவிட்டார். இதனால் இது என்ன மாதிரியான படம் என்பது யாருக்குமே புரியாமல் போய்விட்டது. என்னைப் பொருத்தவரை இது இயக்குநர் இந்த சமூகத்துக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய நல்ல விஷயம். ஏனென்றால் படத்தில் மக்களுக்குப் புரிந்தது ஒரே விஷயமாக மட்டுமே இருந்திருக்கமுடியும், அது ‘கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள்’ என்பது மட்டுமே.

தூக்கு தண்டனை கூடாது ஆனால் ராணுவத்தில் யாரையும் கொத்து கொத்தாகக் கொல்லலாம், ஆயுதங்கள் வாங்கக் கூடாது ஆனால் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் ரகரகமாக ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற மாவோயிஸ்ட்டுகளின் சிந்தனையை படத்தில் தெளிவாகக் காண்பித்து அசரடிக்கிறார் இயக்குநர். தூக்கு தண்டனை உயிர்க்கொலைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறாரா அல்லது தூக்கு தண்டனையையே எதிர்க்கிறாரா என்பதில் இயக்குநருக்கு அக்கறை இல்லை. தூக்கு பெற்ற ஒருவர் நிரபராதி என்பதால் அவரைத் தூக்கில் போடக்கூடாது என்று மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் தூக்கு தண்டனையை அறவே எதிர்ப்பவர்கள், ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனை தரப்படக்கூடாது என்றே வாதிடவேண்டும். இதைப் பற்றியெல்லாம் இயக்குநருக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 12 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூகிள் (மேம்போக்கான தேடல்தான், சரியாகத் தேடவேண்டும்) சொல்கிறது. அதிலும் சமீப காலங்களில் மிக அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கே இத்தனை கூப்பாடு. ஒருவேளை நிறுத்திவைக்கப்பட்டுள்ள தூக்குக்காக எடுக்கும் காவடியாக இருக்கலாம். தங்கள் கொள்கையோடு சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்கு என்று வரும்போது மட்டுமே, ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையை எதிர்ப்பது நம் பகுத்தறிவுவாதிகள் வழக்கம். அதிலும் அவர்கள் நிரபராதிகள் என்ற பிலாக்கணத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். இதிலும் மாவோயிஸ்ட்டு தீவிரவாதி ரொம்ப நல்லவர். அறிவாளி. அழகானவர். கிட்டத்தட்ட பகத்சிங். ஆனால் கருணையற்ற இந்திய அரசாங்கம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துவிட்டது. 

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எல்லாருமே நிரபராதிகள் என்று வெள்ளை அடித்துவிட்டார் இயக்குநர். சிறையில் ஒருவர்கூட கெட்டவர் இல்லை. இந்த அரசாங்கம் அநியாயத் தீர்ப்பினால் அவர்களை உள்ளே வைத்திருக்கிறது என்பதே இபப்டம் சொல்லும் செய்தி. அதிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட காந்திகள் அல்லது பகத்சிங்குகள். இப்படி ஒரு கருத்தைச் சொல்லிப் படமெடுக்கும் தைரியம் தமிழ் இயக்குநர்களுக்கு மட்டுமே வரும்.

இயக்குநர் அழுத்தமாகச் சொல்ல விரும்பாத, ஆனால் அதன் போக்கிலேயே வெளிப்பட்டுவிட்ட சில விஷயங்கள் உள்ளன. ஐ பி எஸ்ஸாக வரும் ஷாமின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக ஒரு நேர்மையான அதிகாரியை கண்முன் வைக்கிறது. கடைசி நொடி வரை இக்கதாபாத்திரம் தன் கடமையில் இருந்து இம்மியும் பிசகவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட கடமையை மிகத் தெளிவான திட்டமிடல் மூலம் செய்து காட்டுகிறார் இந்த ஐ பி எஸ். இந்திய நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து ‘உங்களைப் பார்த்தா பைத்தியக்காரத்தனமா தெரியுது’ (நினைவிலிருந்து சொல்கிறேன்) என்று அவர்களது இஸத்தையே கேள்விக்குள்ளாக்கி, மாவோயிஸ்ட்டு தலைவரை தூக்கில் தொங்கவிட்டு இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு ஒரு இந்திய வணக்கம். 

மாவோயிஸ்ட்டுகளை நம்பினால் என்ன ஆகும் என்பதும் இப்படத்தில் மறைமுகமாகக் காட்டப்படுகிறது. தங்கள் வேலை முடிந்ததும் மாவோயிஸ்ட்டுகள் அடுத்த கொலை ப்ராஜெக்ட்டுக்குப் போக, எமலிங்கம் பைத்தியமாகத் தெருவில் திரிகிறார். இதுவும் சமூகத்துக்குத் தேவையான நல்ல செய்தியே. மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் என்றே சொல்வதால், கம்யூனிஸ்ட்டுகளை நம்பினால் லூஸாத்தான் திரியணும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். நல்ல விஷயம்.

படத்தின் லாஜிக் ஓட்டைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. படமே லாஜிக் ஓட்டை என்பது ஒருபுறமிருக்க, லாஜிக் ஓட்டைகளுக்கு மேல்தான் ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறுத்தப்பட்டுள்ளது. . இதில் காதல் பாடல்கள், காதல் ஏக்கம் வேறு. மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு காமம் ஆகாது என்ற கம்யூனிஸ விதி ஏதேனும் உண்டா எனத் தெரியவில்லை. மாவோவின் களியாட்டங்களெல்லாம் நடிப்பா? 🙂 இளம் மாவோயிஸ்ட் தலைவரும் இளம் பெண் தலைவரும் மனிதவெடிகுண்டாக இறக்கப்போகும் நாளுக்கு முதல்நாள் என்ன செய்வார்கள் என்ற தேவையற்ற கேள்வியைக் கொண்டு வரும் இயக்குநர், அதற்கான சரியான பதிலைச் சொல்லாமல் நட்டாற்றில் விட்டுவிட்டார். அவர்கள் இருவரும் உறவுகொண்டார்கள் என்று காட்டிவிட்டால் புனிதத்தன்மை போய்விடுமா என்ன? அல்லது அப்படி ஒரு காட்சியே இல்லாவிட்டால் சாதாரண தமிழன் விறுவிறுப்பு இல்லாமல் படம் பார்க்கமாட்டானா என்ன? என்ன எழவோ, ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் நாடகத்தன்மையை மீறிய ஒரு சீரியஸ்தன்மை வெளிப்படவே செய்கிறது. அதுமட்டுமே இத்திரைப்படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமாவது பார்க்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

உண்மையில் இத்திரைப்படத்தை மிகச் சிறப்பான திரைப்படமாக எடுத்திருக்கலாம். தூக்கிலிடுபவனின் மனப்போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கலாம். அதற்கு நம்பிக்கை அளிக்க, இந்திய மக்கள் அதிகம் எதிர்கொண்ட, பழக்கப்பட்ட, யதார்த்தத்தில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளான அப்சல் குரு அல்லது கஸாப்பை மையப்படுத்தியே எடுத்திருக்கலாம். லால் சலாம் இயக்குநருக்கு இதை எடுப்பதிலும் மனத்தடை. வெகுஜன இஸ்லாமியர்களின் மனம் கோணிவிட்டால் என்ன செய்வது? அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் இஸ்லாமிய ஆதரவுக்கு பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? ஒரு படத்தை பிரசாரப் படமாக எடுக்க எத்தனை பேரை திருப்திப்படுத்தவேண்டியுள்ளது! எந்தக் கேள்வியும் கேட்காமல் படம் பார்க்கவேண்டுமென்றால் இந்தியாவைத் திட்டிப் படமெடுப்பதுதான் எளிதானது. இதைத்தான் இந்த ஊடகம் பழக்கி வைத்திருக்கிறது. என்ன கொடுமை என்றால், ஊடகம் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இல்லை என்றெல்லாம் இப்படத்தில் பேசிக் கொல்கிறார்கள்.

இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், மாவோயிஸ்ட்டு தலைவரைத் தூக்கில் இடுவதுதான். எத்தனை லால் சலாம் சிந்து பாடினாலும், இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கராவாதிகள் ஆலோசனை சொன்னாலும், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிகழுமென்றால் அந்த இயக்கத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை இந்தியா நிச்சயம் நிறைவேற்றியே தீரும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள். இயக்குநர் இதை விரும்பிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதை இப்படித்தான் புரிந்துகொள்வார்கள் என்பதால் இயக்குநருக்கு மீண்டும் ஒரு இந்திய சலாம். தூக்குத் தண்டனை தரப்படும் மாவோயிஸ்ட்டு தலைவர் தூக்கில் தொங்கியதும் படம் பார்க்கும் யாருக்கும் எவ்வித மன வருத்தமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அந்தத் தலைவரின் கதாபாத்திரத்தை இயக்குநர் தெளிவாக நிலைநிறுத்தவில்லை. வெறும் செயற்கையான பிரசார நெடி தூக்கலான வசனங்கள் மூலமும், சாகசக் காட்சிகள் மூலமும் காட்டிவிட்டார். அப்படி பச்சாதாபம் வராத வகையில் படத்தை எடுத்திருப்பது இப்படத்தின் ஆதார செய்திக்கே எதிரானது. ஆனாலும் அதற்கும் மீண்டும் ஒரு இந்திய சலாம்.

சில அவசரத் தீர்ப்புகள்:

விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம்.

ஆர்யா ஓகே, மோசமில்லை.

ஷாம், கார்த்திகா – நடிக்கவே வரவில்லை.

இசை – கொடுமை. ஒரே ஒரு ஹிந்திப் பாடல் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்ததுபோல் காதில் விழுந்தது, ஆனால் நான்கு வரிகளே படத்தில் வந்தது.

Share

2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

2013ல் நான் வழங்கிய விருதுகளை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒவ்வொரு தமிழன் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் 2014 – திரைப்பட விருதுகள் இங்கே. 

உண்மையில் எல்லா விருதையும் லிங்காவுக்கும் கோச்சடையானுக்கும் கொடுப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் அநியாயமாக கீழே உள்ள பட்டியலை இட்டுள்ளேன். பார்த்து வளர்ச்சி பெறுக. 

 

சிறந்த திரைப்படம்: ஜிகர்தண்டா

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (லிங்கா) (Cool friends!)

சிறந்த நடிகை: யாருமில்லை

சிறந்த புதுமுகம்: துல்கர் சல்மான் (வாயைமூடிப் பேசவும்)

சிறந்த இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த கதை: ரஞ்சித் (மெட்ராஸ்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: லிங்கா

சிறந்த வில்லன்: William Orendorff (லிங்கா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (பல படங்கள்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): அனிருத் (வேலையில்லா பட்டதாரி, கத்தி)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (லிங்கா)

சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயண் (மெட்ராஸ்)

சிறந்த பாடகர்: ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியனே, கோச்சடையான்)

சிறந்த பாடகி: சின்மயி (இதயம் நழுவி நழுவி, கோச்சடையான்)

சிறந்த பாடல்: இதயம் நழுவி நழுவி (கோச்சடையான்)

சிறந்த குத்துப்பாட்டு: மஸ்காரா போட்டு (சலீம்)

சிறந்த பாடலாசிரியர்: கானா பாலா (மெட்ராஸ்)

சிறந்த வசனம்: கே.எஸ். ரவிக்குமார் (கோச்சடையான்)

சிறந்த புதிய முயற்சி: கோச்சடையான்

சிறந்த ஓவர் ஆக்டிங்: துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

சிறந்த அண்டர் ஆக்டிங்: விஜய் ஆண்டனி (சலீம்)

சிறந்த காணாமல் போன நடிகர்: சிம்பு

நன்றாக வந்திருக்கவேண்டியவை: சதுரங்க வேட்டை, ஆடாம ஜெயிச்சோமடா.

பார்க்க முடியாதவை: மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று காளைகளும், பண்ணையாரும் பத்மினியும், மஞ்சப்பை, சைவம், அஞ்சான்.

Share

ஜீவா – காட்சிப்பட்ட தந்திரமும் காட்சிப்படவேண்டியவையும்

ஜீவா திரைப்படத்தை நேற்றுத்தான் பார்த்தேன். கிரிக்கெட் அரசியல் பற்றிய திரைப்படம். பிராமணர்களின் ஆதிக்கத்தால் திறமை இருந்தும் மற்ற சாதிக்காரர்களுக்கு ரஞ்சி டிராபியில் இடம் கிடைக்காததை அழுத்தமாகச் சொல்லும் படம். இது முக்கியமான விஷயமே. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஆடிய 16 பேர்களில் 14 பேர் பிராமணர்கள் என்பது தற்செயல் அல்ல. நிச்சயம் பின்னணி ஏதோ உள்ளது. அதைத் தெளிவாகக் காட்டிய வகையில், அதுவும் நெஞ்சைப் பிசையும் வகையில் காட்டியதால் மிக ஆழமாகவே இக்கேள்வி மனத்தில் பதிகிறது. 

முக்கியமான விஷயத்தைவிட்டு காதல் என்று சுற்றுவதற்கே பாதிப் படம் போய்விடுகிறது. நான் திரைப்பட விமர்சனமாக இதை எழுதவில்லை என்பதால் இந்த திரைப்பட கோணல்களையெல்லாம் விட்டுவிட்டு, அரசியலுக்குப் போகிறேன். படம் நெடுகிலும் மிகத் தெளிவான கிறித்துவப் பின்னணியை வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர், அந்தப் பக்கத்து வீடும் கிறித்துவர். ஹிந்துக் குழந்தை கிட்டத்தட்ட கிறித்துவனாகவே வளர்கிறது. எந்த அளவுக்கு? ஹிந்துப் பையனின் காதல் வெளியே தெரியவரும்போது பாதிரியார் கூப்பிட்டுப் பேசுகிறார். ஒரு ஹிந்துப் பையன் கிறித்துவ குடும்பத்தோடு பழகினாலே அவன் கிறித்துவன், எனவே நாம் ஒரு கிறித்துவக் குடும்பத்தை விசாரிப்பதைப் போலவே விசாரிக்கலாம் என்ற அளவுக்கு ஒரு பாதிரியாரும், அவன் கிறித்துவனே என்று ஒரு கிறித்துவ தம்பதி பெற்றோரும் நம்பும் அளவுக்கு! 

சீனியர் சூரி கிறித்துவர். கோச் கிறித்துவர். பக்கத்துவீட்டுக்கு வந்து சேரும் பின்னாள் காதலி கிறித்துவர்! பிராமணர்களுக்கு மட்டும் இடம் கிடைப்பது எப்படி தற்செயலல்ல என்று இயக்குநர் நம்புகிறாரோ, அதேபோல் சுசீந்திரனின் இந்த பின்னணித் திணிப்பு தற்செயலானதல்ல என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் ஆதலால் காதல் செய்வீர் திரைப்படத்திலும் வெகுவான கிறித்துவ பின்னணி. கிறித்துவ பின்னணி வருவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. (நீர்ப்பறவை ஆழமான கிறித்துவப் பின்னணி கொண்ட திரைப்படம். ஆனால் அதில் அரசியல் இல்லை. நிஜமான பதிவு மட்டுமே இருந்தது.) ஆனால் தொடர்ந்து இயக்குநர் ஒருவரின் படத்தில் இப்படி வருமானால் அதை தற்செயல் என்று ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?

அதிலும் ஒரு காட்சி வருகிறது. காதலுக்காக இரண்டு நிபந்தனைகள். ஒன்று, ஹீரோ மதம் மாறவேண்டும். இரண்டாவது, கிரிக்கெட்டை விட்டுவிடவேண்டும். அப்போது ஹீரோ சொல்கிறார், மதம் மாறுவது ஒரு பிரச்சினையில்லை. அதாவது வாயசைப்பில் இப்படி வருகிறது. டப்பிங்கில் மாற்றி இருக்கிறார்கள், மதம் மாறுவதை அப்புறம் பார்த்துக்கலாம் என்பது போல. ஸ்கிரிப்ட்டில் மிகத் தெளிவாகவே இயக்குநர் மதம் மாறுவது பிரச்சினையில்லை என்றே எழுதியிருக்கிறார். (பார்க்க: கடைசியில் உள்ள 11 நொடி வீடியோ.) கல்யாணத்துக்காக மதம் மாறுவதைப் பற்றி சமூக அக்கறையுள்ள இயக்குநர் இப்படி சிந்திப்பாரென்றால், பிராமண ஆதரவுக் குழுக்கள் வேறெப்படி சிந்திக்கவேண்டும் என்று இயக்குநர் எதிர்பார்க்கிறார்? இப்படிச் சொன்னாலும், பிராமண ஆதரவு கிரிக்கெட் தேர்வில் இல்லவே இல்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயம் அதைப் பற்றிப் பேசத்தான் வேண்டும். ஆனால், அத்தோடு, திறமை இருந்தும் முன்னேற முடியாத அதேசமயம் திறமை இல்லாமல் முன்னேறிவிடுகிற மற்ற சாதிகளைப் பற்றிய பிராமணர்களின் குமுறலையும் பேசவேண்டுமே. சுசீந்திரன் என்ன பைத்தியமா இதைப் பேச. எது எடுபடுமோ அதைப் பேசுகிறார். ஒரே படத்தில் அத்தனையையும் காட்டிவிடமுடியாது. திரைக்கதை வீரியத்துக்கு ஒருமுனையில் படத்தை குவிப்பது தேவைதான். ஆனால் அதைப் பற்றிய ஒரு வரி கூட படத்தில் இல்லை! ஏனென்றால் இயக்குநருக்கு அது பற்றிய அக்கறை இல்லை.

ஆனால் இன்னொன்றில் அக்கறை உள்ளது. அபிராமணர்கள் என்ன சாதி என்று சொல்லக்கூடாது என்பதில் அக்கறை இருந்திருக்கிறது. நல்லது. போகட்டும். ஜீவாவின் வாழ்க்கையில் விளக்கை ஏற்றி வைக்கும் கதாபாத்திரம் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை உள்ளது. தமிழகத்தில் இருந்து உருவான கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் பெரும்பான்மை பிராமணர்கள் என்று தெரிந்துகொண்ட சுசீந்திரனுக்கு, இந்திய அளவில் தன் செல்வாக்கு மூலம் இன்னொருவனுக்கு வாய்ப்புத் தர முடியக்கூடிய ஒரு கிரிக்கெட்காரர் ஹிந்துவாகத்தான் இருக்கமுடியும் என்று தெரிந்திருக்கவில்லை. இந்திய அளவில் வெற்றிபெற்ற இஸ்லாமிய ஆட்டக்காரர்கள் எத்தனை பேர், அவர்களில் அத்தனை செல்வாக்குப் பெற்று, ரஞ்சி டிராஃபியில்கூட விளையாடியிருக்காத ஒருத்தனுக்கு ஐபிஎல் (படத்தில் சிபிஎல்) குழுவில் இடம்வாங்கித்தரும் அளவுக்கு உள்ள முஸ்லிம் ஆட்டக்காரர் என்று ஒருவரைக் காட்டமுடியுமா? பிராமணர்களைச் சொல்லும்போது தரவோடு வருகிறவர், ஹிந்துக்களைப் புறக்கணிக்க எந்தத் தரவோடும் வருவதில்லை. இது புதியதல்ல. ஏற்கெனவே நன்கு போடப்பட்ட பாதை. அதிலே சுசீந்திரனும் மிக இலகுவாகச் செல்கிறார்.

குறைந்தபட்சம், இந்தியாவின் முக்கிய அச்சுறுத்தலான தீவிரவாதம் பற்றியும் அதில் அதிகமான இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றியும் சுசீந்திரன் படம் எடுக்கவேண்டும். இந்தப் படத்தில் கிறித்துவர்களை நல்லவர்களாக வைத்ததுபோல் புதிய படத்தில் ஹிந்துக்களை அப்பாவி நல்லவர்களாக வைக்கவேண்டியதில்லை. இந்திய அப்பாவி பொதுஜன முஸ்லிம்களை நல்லவர்களாக வைக்கட்டும். உண்மையும் அதுதான், எனவே யதார்த்தமாகவும் இருக்கும். இப்படி வைத்தாவது அவரால் ஒரு படத்தை இயக்கிவிட முடியுமா என்ன? முடியும். செய்யட்டும். செய்யவேண்டும்.

இதை ஒட்டி வேறு சில வாய்ப்பரசியலைப் பார்க்கவேண்டும். திறமை இருந்தும் புறக்கணிப்படுகிற பிராமணர்களின் குமுறலைப் படமாக்கினால் அதுவே அந்த இயக்குநருக்குக் கடைசிப் படமாக இருக்கலாம். இடஒதுக்கீட்டில் கைவைக்கும் திரைப்படம் ஒன்றை எடுப்பது சாதாரணமானதல்ல. எதிர்ப்புக் கூட்டம் போட்டே சாகடித்துவிடுவார்கள். ஆனால் பிராமணர்களைத் திட்டி, ஹிந்துக்களைத் திட்டி படம் எடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் இல்லை. ஒருவேளை தொடர்ச்சியான லாபம்கூட இருக்கலாம்! இதை எந்த ஒரு இடத்திலும் நாம் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஒரு ஹிந்துத்துவ ஆதரவுத் திரைப்படம், அதிலும் கலை ரீதியாக மேம்பட்ட படம் வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். ஹிந்துத்துவப் படமே வராது, சரி, ஜஸ்ட் வைத்துக்கொள்ளுங்கள், ப்ளீஸ். அதைப் பாராட்டி ஒரு கட்டுரையை நீங்கள் எங்கேயும் பார்த்துவிடமுடியாது. எந்த இதழும் வெளியிடாது. ஒருவேளை நீங்கள் எழுதினால், கட்டுரையோடு அந்தப் பத்திரிகை உங்களையும் நிராகரிக்கும் அந்தப் படத்துக்கு எதிர்க்கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரும் என்பதற்கு நான் உத்திரவாதம்.

ஏதேனும் ஒரு படம் வந்தால், ஒரே பத்திரிகையில் அதே படத்தை ஐந்து விதமாக விமர்சிப்பார்கள். ஐந்து விமர்சனங்களும் ஒரு புள்ளியில் ஒன்றிணையும். ஒரு பொது அடித்தளத்தைப் பெற்றிருக்கும். இந்த அடித்தள சமரசத்துக்குட்பட்டே நீங்கள் அந்தப் பத்திரிகையில் எழுத முடியும். சமரசமே இல்லாமல் கட்டுரை எழுதுவது என்று அந்த எழுத்தாளர்கள் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் உண்மையில் குறைந்தபட்ச சமரசம் என்பது உங்கள் கொள்கையாக இருந்தால்மட்டுமே நீங்கள் அங்கே எழுதமுடியும். அடித்தளம் மறைந்திருக்கும், அது ஒன்றேயானது. மேலே கட்டுமானங்கள் மட்டும் விதம்விதமாக.

இது ஹிந்த்துத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிற இதழுக்கும் பொருந்தும். ஆனால் ஹிந்துத்துவ இதழ் இங்கே நடுநிலை இதழ் இல்லை. மற்றவை நடுநிலை இதழ்கள். சமரசமற்ற இதழ்கள். இதுவே முக்கியமான வேறுபாடு.

ஒரு ஐயாயிரம் பிரதி விற்க கஷ்டப்படும் இதழில் எழுதக்கூட இத்தனை வாய்ப்பரசியல் என்றால், கோடிகள் புரளும் விளையாட்டும் வாய்ப்பரசியல் இருக்காது என்று நம்ப யாருமே முட்டாளல்ல. ஆனால் வாய்ப்பரசியலை ஹிந்துக்களையும் பிராமணர்களையும் விமர்சிக்கப் பயன்படுத்துவதோடு நிறுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சுசீந்திரனும் புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதை எதிர்வரும் அவரது படங்கள் நிரூபிக்கும் என்றே நம்புகிறேன்.


வாயசைப்பையும் டப்பிங்கையும் கூர்ந்து நோக்க.

Share

விக்கிரமாதித்தனும் வேதாளமும் – கத்தியை முன்வைத்து

முன்னொரு காலத்தில் விக்கிரமாதித்தன் என்றொரு அரசன் வாழ்ந்துவந்தான். தன் வாழ்நாளெல்லாம் வேதாளத்தைத் துரத்துவதே அவன் வேலை. அன்றும் அவன் துரத்தி அந்த வேதாளத்தைப் பிடித்து, தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.

“என்ன விக்கிரமா பேசாமல் வருகிறாய்?” என்று வேதாளம் கேட்டது. விக்கிரமாதித்தன் பதில் சொல்லாமல் வந்தான். பதில் சொன்னால் அவன் மௌனம் கலைந்து வேதாளம் மரத்திற்கு போய்விடுமல்லவா.

வேதாளம் தன் வழக்கம்போல் கதை சொல்லத் தொடங்கியது.

“விக்கிரமா, முன்னொரு காலத்தில் கத்தி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அது துப்பாக்கியின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளி வந்து பெரிய வெற்றி பெற்றது. படத்தை லைக்கா என்றொரு ராஜபக்ஷேயின் பினாமி நிறுவனம் தயாரித்ததாகக் குற்றம் கூறியவர்கள், என்னவோ டீலுக்குப் பின்னர் அமைதியாகிப் போனார்கள் என்றொரு பேச்சும் உண்டு. படத்தில் விவசாயிகளின் பிரச்சினையைக் காட்டியதால் என்ன செய்வது என்று குழம்பிப்போன கம்யூனிஸ்ட்டுகளும் தமிழ்த் தேசியவாதிகளும் கள்ளமௌனம் சாதித்து மெல்ல நழுவிப் போனார்கள். கடைசியில் ராஜபக்ஷே மூலம்தான் தமிழ்நாட்டில் புரட்சி வரவேண்டியிருக்கிறது என்றெல்லாம் அன்றைய தமிழர்கள் பேசிக்கொண்டார்கள். 

அதில் ஒரு வரி கம்யூனிஸம் பற்றி வரும். மிக யதார்த்தமான காட்சி அது. கம்யூனிஸம் படித்துக்கொண்டு ஃபிலிம் காட்டும் யாருக்குமே கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது என்பதை தெளிவாகக் காண்பித்த காட்சி அது. ஆம், அந்த ஜீவானந்தமும் கம்யூனிஸம் என்றால் இட்லி சட்னி என்று விளக்கிய காட்சியைப் பார்த்து, இப்படி கிண்டலாவது செய்கிறார்களே என்று விரல்சூப்பிக்கொண்டு உத்சொ கொட்டியது கம்யூனிஸக் கூட்டம் என்பது வரலாறு.

அந்தப் படத்தைப் பற்றி பொதுவாக இப்படி கருத்து இருந்தது விக்கிரமா. படம் நன்று. குறிப்பாக விஜயின் நடிப்பு நன்றாக இருந்தது. ஷங்கருக்கு அடுத்தபடியாக ஷங்கரின் ஃபார்முலாவை வெற்றிகரமாகப் படமாக்கிய முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான். சில காட்சிகளில் லாஜிக் ஓட்டை இருந்தாலும், படத்தின் வேகத்தில் அது தெரியவில்லை. இறுதிக்காட்சி சண்டை மட்டுமே தாங்கமுடியாததாக இருந்தது. இப்படி மக்கள் பேசிக்கொண்டார்கள். அது ஒருவகையில் சரிதான் விக்கிரமா.

ஆனால் விக்கிரமா நான் கேட்கப்போவது இதைப் பற்றி அல்ல. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் விமர்சனம் எழுதித்தள்ளிய அன்றைய இணையவீரர்கள் யாருமே ஒன்றைக் கவனிக்கவில்லை.

மூன்று விவசாயிகள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறார்கள். அப்போது அவர்களின் கைவிரல் ரேகையில் மையைப் பார்க்க ஓடி வருகிறார் விஜய். முதல் பிணம் ஹிந்துப் பிணம். யாரிடமும் கேட்காமல் உரிமையாக அவரே பிணத்தைத் திறந்து கைவிரலில் மை இருக்கிறதா என்று பார்க்கிறார். இரண்டாம் பிணம் இஸ்லாமியப் பிணம். அங்கே ஓடுகிறார் விஜய். பேஸ்த் அடித்து நின்றுவிடுகிறார் விக்கிரமா. ஆம். அங்கே இருக்கும் இஸ்லாமிய உறவினர்களிடம் அனுமதி கேட்டு கைவிரலைப் பார்க்கிறார். ஏன் விக்கிரமா இப்படி?

இதுமட்டுமல்ல. ஆறு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஹிந்து விவசாயிகள் சாகும்போது ஹிந்துமதம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இஸ்லாமிய விவசாயி சாகும்போது மதத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சாகிறார். ஹிந்து மதம் செத்துப் போவதற்குப் பெத்துப் போட்டதா விக்கிரமா?

இந்தக் கேள்விகளை யாரும் எழுப்பவில்லை. ஏன்? ஆனால் விக்கிரமா இதற்கான பதில் உனக்குத் தெரியும். ஆனால் இந்தமுறை நம் விளையாட்டில் ஒரு விதிமுறை மாற்றம் விக்கிரமா. உனக்குப் பதில் தெரியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பதிலைச் சொன்னால் உன் தலைவெடித்துச் செத்துப் போவாய். நான் ஓடிப்போய் மரமேறிக் கொள்வேன். பதில் சொல்லாமல் கள்ளமௌனம் சாதித்தால் நான் உன்னுடன் வந்துவிடுவேன். உன் கோடானகோடி தேடல் முடிவுக்கு வரும் என்றான்.

நொடி யோசித்தான் விக்கிரமன். மெல்லப் புன்னகைத்தான். “வேதாளமே, என் தலைவெடித்தாலும் பரவாயில்லை. நான் பதில் சொல்லியே தீருவேன். இந்த நோயின் பெயர்…” என்று சொல்வதற்குள் அவன் தலை சுக்கு நூறாக வெடித்தது. வேதாளம் ஓடிப்போய் மரத்தின் மேலேறி அமர்ந்துகொண்டு லூசுப்பய என்றது.

Share