சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

சுட்டுப் பிடிக்க உத்தரவு – கபட நாடகம்

கோவை தொடர் குண்டுவெடிப்பு என்பது தமிழ்நாட்டில் எத்தனை முக்கியமான தீவிரவாத நிகழ்வு என்பது எல்லாருக்கும் தெரியும். சிதைந்த வேனும் வெடிக்க காத்திருந்த காரும் அத்தனை மறக்கக் கூடியதல்ல. இத்தனை முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னணியாக வைத்து ஒரு படம் வருகிறது என்றால், அது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? எப்படிப்பட்டதாக இருக்கக்கூடாது என்று தெரியவேண்டுமானால் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ பார்க்கலாம்.

1998 Coimbatore bombings.gif
Nine convicted in Coimbatore blast case released - The Hindu

ஒரு முக்கியமான நிகழ்வை, ஒரு மாநிலத்தையே உலுக்கிய நிகழ்வை மையமாக வைத்து முக்கியமான திரைப்படங்கள் உலகம் முழுக்க வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு சாபம் இருக்கிறது. உண்மையைச் சொல்வதைவிட யாரையாவது தாஜா செய்யவேண்டும் என்றால் அதற்காக இந்தக் கருவை எடுத்துக்கொண்டு, மனசாட்சியை அடகு வைத்துவிட்டுப் படம் எடுப்பது. அந்த அளவுக்கு தாஜா அரசியல் இங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அரசியலிலும் திரை உலகிலும்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் கோர முகத்தை கோயமுத்தூரில் பார்த்தோம். இஸ்லாமியர்களை எப்போதும் உச்சி மோந்து அன்பு செலுத்தும் கருணாநிதி கூட இந்தக் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து தீவிரமான நடவடிக்கை எடுத்தார் என்று திமுகவினரே சொல்வார்கள். இதைக் குறை சொல்லியும் பல திமுக ஆதரவு இஸ்லாமியர்கள் இன்று வரை பதிவுகள் இடுவதைக் காணலாம். ரஜினி சம்பந்தமே இல்லாமல் ஒரு அறிக்கை தந்தார். திமுகவைச் சேர்ந்த இஸ்லாமியர்களே ரஜினி சொன்னது மடத்தனம் என்றும், இந்தக் குண்டுவெடிப்புக்கு அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களே காரணம் என்று ஒப்புக்கொண்டதும் வரலாறு. இதுகுறித்து ரஜினி இன்று வரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது வேறு விஷயம். இப்படி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பின்னணியைக் கொஞ்சம் கூட வரலாற்றுப் பிரக்ஞையோ பொறுப்போ இல்லாமல் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு தீவிரவாதக் குழு கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்த்த திட்டமிடுகிறது. அவர்கள் உடை பாவனை பேச்சு எல்லாம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போலவே இருக்கிறது. ஆனால் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆறு தீவிரவாதிகளின் பெயர்களைக் கூடச் சொல்லாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு தீவிரவாதியின் பெயர் முபாரக் என்று வருகிறது என நினைக்கிறேன். தீவிரவாதிகளின் குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தி வெற்றி பெறுகிறது தமிழகக் காவல்துறை.

பயங்கரவாதிகளுக்கு உதவும் ஒருவரது பெயர் தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஹிந்து. இது உண்மையாக இருக்கவே வாய்ப்பும் அதிகம். அதை மறுப்பது என் நோக்கமல்ல. ஆனால் தீவிரவாதிகளின் பெயர்கள்? இயக்குநர் அந்தச் சமயத்தில் தாஜா அரசியல் மற்றும் செக்யூலரிசத்தின் உச்சத்துக்குப் போய்விட்டார். அத்துடன் நிற்கவில்லை. இந்தத் தீவிரவாதத் தாக்குதலை முறியடிக்கும் இன்ஸ்பெக்டரின் பெயர் இப்ராஹிம்! இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பார் என்பது நிச்சயம்.

படத்தில் இரண்டு முறை ஒரு வசனம் வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்தால் மசூதியில் தொழுபவர்கள் இறந்து போய்விடுவார்கள் என்று. அதாவது இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமல்ல என்று இயக்குநர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறாராம். இத்தனை உண்மைகளைக் கவனம் எடுத்து வலிந்து வலிந்து சொன்ன இயக்குநருக்குப் பயங்கரவாதிகளின் பின்னணியை விவரிப்பதில் மட்டும் செலக்டிவ் அம்னீஷியா வந்துவிடுகிறது. ஒரு தீவிரவாத நிகழ்வை அப்படியே படம் எடுப்பதில் என்ன பிரச்சினை? அது எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் மதத்துக்கும் எதிரான படமாகும்? உண்மையில் இப்படி யோசிப்பதே அந்த மதத்தினருக்குச் செய்யும் அநீதி அல்லவா? இப்படி யோசிப்பவன் தானே நியாயமானவனாக இருக்கமுடியும்? ஆனால் இங்கே அவன் கட்டம் கட்டப்படுவான். எனவேதான் இயக்குநர்கள் எதிர்த்திசைக்குப் போகிறார்கள்.

இத்தனை பெரிய குண்டுவெடிப்பை காவல்துறை தடுத்து நிறுத்த ஒரு நாடகம் நடத்துகிறார்கள். அந்த நாடகம் – ஐயகோ. குண்டுவெடிப்பைக் காட்டிலும் கொடூரமானதாக இருக்கிறது. இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று கூட இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா யோசிக்கவில்லை. அவரது நோக்கம் உண்மையைப் பதிவு செய்வதல்ல, மாறாக ஒரு நாடகத்தைச் சொல்வதுதான் என்பது உறுதியானபின்பு அவர் ஏன் இதைப் பற்றிக் கவலை கொள்ளப் போகிறார்!

தமிழ்நாட்டுத் திரையுலகம், உண்மையான நிகழ்வைப் பின்னணியாக வைத்து அரசியல் ரீதியான தீவிரமான படம் எடுப்பதில் இன்னும் வயதுக்கு வரவில்லை என்று சொல்லலாமா? இப்படியும் சொல்லிவிடமுடியாது. இதுவே ஹிந்துக்களுக்கு எதிரான திரைப்படம் என்றால் எல்லாவிதமான திறமைகளையும் ஒரே நேரத்தில் இறக்கிப் படமெடுப்பார்கள் என்பது உறுதி. உண்மையான நிகழ்வை அப்படியே பதிவு செய்யாமல், தங்களது மன ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் புகுத்தி ஒரு படம் எடுத்தால் அங்கே கலை செத்துப் போய்விடும். ஆனால் முற்போக்காளர் பட்டமும் பணமும் கிடைக்கும். எது தேவை என்பதை இயக்குநர்கள் தெளிவாகவே முடிவு செய்துவிடுகிறார்கள்.

ஆனாலும் நாம் சில நன்றிகளைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒன்று, இந்தக் குண்டுவெடிப்பைத் திட்டமிடும் தீவிரவாதிகளின் பின்னணியைக் காண்பிக்கவில்லை என்பது போலவே, இந்த குண்டுவெடிப்பு நியாயமான தேவையான ஒன்றுதான் என்ற அளவுக்கு இயக்குநர் யோசிக்காமல் இருந்திருக்கிறாரே, அதற்கு முதல் நன்றி! இரண்டு, குண்டுவெடிப்பைத் தகர்க்க உதவும் இஸ்லாமிய போலிஸுக்கு உதவும் மற்றவர்கள் ஹிந்துக்கள். அவர்களையும் இஸ்லாமியர்களாகவோ கிறித்துவர்களாகவோ யோசிக்காத இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டாமா! இயக்குநர் இதையெல்லாம் யோசித்து மனதில் வைத்து அடுத்த படத்தில் இன்னும் பதினாறு அடி பாய வாழ்த்துவோம்.

Share

Comments Closed