Tag Archive for பா.ரஞ்சித்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய பிரச்சினை. அதாவது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் இருந்து, இப்போது அவை திடீரெனக் கிடைக்கும்போது வெடிக்கின்றன. அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைப் பற்றிய கதை. சில நாடுகளில் இது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்ற நினைத்திருக்கிறார்கள்.

ஆனால் நாம் இத்தகைய வெடிக்காத குண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டதில்லை. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இதுபோன்ற பெரிய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைச் செயலிழக்கச் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார்கள். சில குண்டுகள் வெடித்து மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையாக இதுவரை வந்ததில்லை. எனவே இது நமக்கு வேறு ஒரு ஊரின் பிரச்சினையாகத் தோன்றிவிடுகிறது. இந்த குண்டு வெடித்தால் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்பது பற்றி நமக்குப் புரியாததால், இந்தியாவின் அப்படி நிகழ்ந்தது இல்லை என்பதால், நாம் இந்தப் படத்துடன் ஒன்ற மறுத்து விடுகிறோம். படமும் நம்முள் அந்தப் பதற்றத்தைக் கடத்தவில்லை.

அதேபோல் இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லப்போகும் ஒரு குண்டை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியமாகக் கையாளும் என்று நமக்குள் ஒரு கம்யூனிச மூளையின் சிந்தனை திணிக்கப்படுகிறது. அந்த கம்யூனிச மூளை இப்படத்தை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இயக்குநராக இருக்கலாம் அல்லது தயாரிப்பாளராக இருக்கலாம். இப்படி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தியைப் போல எப்போதும் நம் அரசு நம்மைக் கொல்லத் தயாராக இருக்கிறது என்று சொல்வதை இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் குறைகளே இல்லை என்பதல்ல. ஆனால் குறைகளின் நடுவே மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று வலிந்து உருவாக்கப்படும் சித்திரம் ஏற்கத்தக்கதல்ல. ‘முற்போக்காளர்’களின் முதன்மையான நோக்கமே இந்த சித்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவதுதான்.

திரைப்படம் என்று வந்து விட்டால் நம் ‘முற்போக்காளர்கள்’ அன்பு அக்கறை என்றெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் இதே கம்யூனிசம் உலகம் முழுக்க ஒன்றரை கோடி பேரை, ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றரை கோடி பேரைக் காவு வாங்கியிருக்கிறது ஹிட்லரின் இன ஒழிப்பின்போது மாண்ட மக்களுக்கு இணையான எண்ணிக்கையில் கம்யூனிஸத்தால் மக்கள் உலகம் முழுக்கக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  அதைப்பற்றி இவர்கள் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கோட்பாட்டை விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குண்டு வெடித்தால் 1,000 முதல் 2,000 அப்பாவிகள் செத்துப் போவார்கள் என்று புலம்பும் ஒரு தோழர், வருடம்தோறும் மாவோயிஸ்டுகளால் இந்தியா முழுக்கக் கொல்லப்படும் குடிமக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியா முழுக்கக் கொன்று போடும் அப்பாவி இந்தியர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவன் வலி இன்னொருவனுக்குத் தெரியவேண்டும் என்று வக்கணையாகப் பேசும் தோழர் கதாபாத்திரம், இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழக்கும் மனிதர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் அத்தனையுமே வெறும் புனைவு சார்ந்ததாக மட்டுமே ஆகிவிடுகிறது. உண்மையைச் சார்ந்ததாக மாறுவதில்லை. ஆனால் அடிப்படையோ உண்மை சார்ந்த நிகழ்வு என்று சொல்கிறார்கள். எனவேதான் நம்மால் இந்தப் படத்துடன் ஒன்ற முடிவதில்லை.

முதல் திரைப்படம் என்ற வகையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பெரிய நம்பிக்கையைத் தருகிறார். படம் எடுக்கப்பட்ட விதம் மிக நன்றாக இருக்கிறது. மிகச் சரியான கதையைக் கையில் எடுத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தால் இப்படம் பெரிய அளவு பேசப்பட்டிருக்கும். நமக்கு அனுபவப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளாதது முதல் மைனஸ். அதில் காதல் வர்க்க ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும் சேர்த்து, எதையும் தீவிரமாகக் காட்டாமல் போனது இரண்டாவது மிகப்பெரிய மைனஸ்.

இந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் யாமகுச்சி என்ற ஒரு ஜப்பானியர் வருகிறார். அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவராகச் சொல்லப்படுகிறது.  ஒரு வரலாற்று அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் வரும் இந்தக் கதாபாத்திரமும் உண்மையான ஒன்றாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முழுக்க இது புனைவு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஜப்பானியர் தன் மகள் குறித்த ஒரு கதை சொல்கிறார். உலகம் முழுக்க பிரபலமான அந்தக் கதை நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஒரு குண்டு தந்த புற்றுநோயைச் சுமக்கும் பெண்ணைப் பற்றியது.  ஸடகோ ஸஸகி என்னும் அந்தச் சிறுமி 1000 காகிதப் படகுகள் செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளுடன் படிக்கும் இன்னொரு சிறுமி சொல்கிறாள். இந்தப் பெண்ணும் படகுகள் செய்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தைதான் இந்தப் படத்தில் வரும் ஜப்பானியர் என்றும் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றவர் என்றும் காட்டப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியலில் எந்த யாமாகுச்சியும் கிடையாது. அதேபோல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு குண்டு வீச்சிலும் உயிர் பிழைத்த யாமாகுச்சி என்பவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அவரது மகள் ஸடகோ ஸஸகி அல்ல. இத்தனை குழப்பமான ஒரு கதாபத்திரத்தை ஏன் க்ளைமாக்ஸில் கொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. உண்மைக்கு அருகில் என்றால் அது உண்மையில் உண்மைக்கு அருகில் இருந்தாக வேண்டும்.

காகிதப் படகுகள் செய்யும் பெண்ணின் கதை இரண்டு நிமிடமே வந்தாலும் அது நெஞ்சை உருக்குகிறது. ஏனென்றால் அதில் நெஞ்சை உருக்கும் உண்மை உள்ளது. இந்தப் படம் தோற்றதும் இந்த இடத்தில்தான்.

படத்தின் ஹீரோ தினேஷ் மிக நன்றாக நடிக்கிறார். சில காட்சிகளில் அதீத நடிப்பு. தோழர் தோழர் என்று அழைத்துக் கொண்டே வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமாகவே எஞ்சுகிறது. யாரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிறார். போலீசை விட தோழர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பதெல்லாம் பெரிய நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. முதலாளி வர்க்கம் உலக மக்களை ஒருவர் விடாமல் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற கம்யூனிச வெற்று அலப்பறைகளை எல்லாம் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்பும் தமிழ்த் திரையுலகம் தாங்கிக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்!

ஒரு வித்தியாசமான திரைப்படம் என்றால் அதில் எப்படியாவது தெருக்கூத்து தொடர்பான காட்சிகள் வந்துவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் இருந்து நம் இயக்குநர்கள் எப்போது வெளியே வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஒரு தெருக்கூத்துக் காட்சி வருகிறது. அந்தத் தெருக்கூத்துக் காட்சி அதனளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றாலும் கூட, இது போன்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவது ஒரு க்ளிஷேவாகி எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது.

தமிழ் இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் அரசியல் குறியீடுகளையும் அரசியல் தொடர்பான பின்னணிகளையும் தேவையே இல்லாமல் புகுத்துவதன் மூலம் உண்மையான அரசியல் திரைப்படம் வருவதைத் தடுக்கவே போகிறார்கள். இதனால், திரைப்படத்தை எவ்விதக் கோட்பாடும் இன்றிப் பார்க்க விரும்பும் பொது ரசிகர்களைத் தங்களிடமிருந்து விலக்கி வைக்கப் போகிறார்கள். எல்லாப் படங்களிலும் அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கான கொள்ளி. இதை இவர்கள் வைக்காமல் விடப் போவதில்லை.

நன்றி: ஒரேஇந்தியா

Share

பா.ரஞ்சித் – திருமாவளவன்

ரஞ்சித் முழுமையான அரசியல்வாதியாகவே மாறிக்கொண்டிருக்கிறார். நல்லது. திரைப்படங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, வெளிப்படையாகத் தெரியாத வரை மட்டுமே வேகும் பருப்பு. அதற்குள் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்நெருப்பு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. நீர்த்துப் போகத் துவங்கும். அந்நிலையில் முழுமையாக அரசியலுக்குள் போகவேண்டி இருக்கும். படைப்பாளியின் சமூகத்துடனான உறவு என்பது ஒரே மட்டத்தில் கண்கூடாகப் என்பது மாறி, மேலிருந்து கீழே நோக்குவது என்றாகும். அப்போது உயிரைத் தொடும் திரைப்படங்களுக்குப் பதிலாக அறிவுரை சொல்லும், நியாயம் கேட்கும் படங்கள் என்றாகும். அவை முழுமையாக ஏற்கப்படாதபோது அரசியலே முழுப் புகலிடம். ஏனென்றால் அடிப்படையில் திரைப்படம் என்பது ஒரு வணிகம். அதை நீங்கள் எதற்குப் பயன்படுத்தினாலும் அதில் வணிகம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

தனித் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியல் சாதிக் கட்சிகள் போட்டியிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்க இது மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமானது. இங்கிருக்கும் பட்டியல் சாதிக் கட்சிகளுக்கு இது தெரியாததல்ல. இது தெரிந்தும் அவர்கள் தனியாகவே இயங்குகிறார்கள், இயங்க விரும்புகிறார்கள். காரணம், அரசியலில் அவர்கள் இருப்பு.

ரஞ்சித் சொன்னதை திருமாவளவன் மறுத்திருக்கிறார் என்று பார்த்தேன். திருமாவளவன் மறுத்திருப்பது சரியான ஒன்றே. இதற்குக் காரணம், தனது அரசியலுக்கு ரஞ்சித்தின் செய்கை போட்டியாக வந்துவிடும் என்று நினைப்பதாலும் இருக்கலாம். அல்லது தனது அனுபவத்தில் இது சரிப்பட்டு வராது என்று புரிந்துகொண்டதாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரது முடிவு சரியானதே. ரஞ்சித், ஒரு வேகத்திலும் அரசியலுக்குள்ளே களத்தில் நின்று போட்டியிடுவது தரக்கூடிய சிக்கல் குறித்த அனுபவமின்மையாலும் பேசுகிறார்.

பட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த வாக்கையே பட்டியல் சாதிக் கட்சிகளால் பெறமுடியாது என்னும் நிதர்சனத்தில் இருந்து துவங்கவேண்டும். அப்படியானால், பட்டியல்சாதிக் கட்சிகளைப் போலவே தத்தம் சாதிகளின்மீதுள்ள பிடிப்பால் தம் சாதிக் கட்சிக்கும் தம் சாதியினருக்கும் வாக்களிக்க விரும்பும் மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி? சாதி பார்த்து வாக்களிக்கக்கூடாது என்பவர்கள் பட்டியல் சாதிக்கு வாக்களிக்கலாம். ஆனாலும் மற்ற கட்சிகளைவிட்டுவிட்டு அவர்கள் பட்டியல் சாதிக்கட்சிகளின் பொது வாக்காளருக்குத்தான் வாக்களிப்பார் என்று சொல்லமுடியாது. தொடர்ச்சியாக மற்ற சாதியினர் மீதான விமர்சனங்களை வைத்துவிட்டு (ஒருவேளை அது மிக நியாயமானது என்றபோதும்) வாக்கரசியல் என்று வந்ததும் மற்றசாதியினர் அதை மறந்துவிட்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ரஞ்சித்தின் வேகத்தில் இதெல்லாம் அவருக்கு எளிதாக வெல்லப்படக்கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது. திருமாவளவனின் அரசியல் அனுபவத்தில் இதைமீறித் தனியே நின்று வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று தோன்றுகிறது.

கூடவே ரஞ்சித், அம்பேத்கரை ஆர் எஸ் எஸ் சொந்தம் கொண்டாடவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். நியாயமாக இப்படிச் சொல்லவேண்டும். இதை அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திலேயே சொல்லிவிட்டார். சொந்தம் கொண்டாட ஒருவேளை முடியுமென்றால் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பால்தான் முடியும். நிச்சயம் மற்ற மதங்களால் முடியாது. ஹிந்து மதம் / அமைப்புகளுடனாவது அம்பேத்கர் தொடர்ச்சியான விவாதத்தில் இருந்தார். எனவே ஆர் எஸ் எஸ்ஸாவது உரிமை கொள்ளமுடியும் என்பதுதான் சரி. மற்ற மதத்தினரே அம்பேத்கரைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அது ரஞ்சித் போன்றவர்களைக் கலவரப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, அது மிகச்சரியானது என்பதையே காட்டுகிறது.

செய்தி: https://tamil.news18.com/news/tamil-nadu/politics-should-be-dealt-accordingly-thirumavalavan-replies-to-pa-ranjith-77289.html

ரஞ்சித் பேசிய வீடியோ: https://youtu.be/844Vu3F1Z7E?t=685

Share

அன்புள்ள பா. ரஞ்சித்

அன்புள்ள பா.ரஞ்சித்

அன்புடன் ஒரு கடிதம். 🙂

நீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். தெரிந்தும் செத்துப்போன தன் மனைவிக்கு பாசவலையில் கமல்ஹாசன் கடிதம் எழுதிக் கொன்றெடுத்தது போல என் பங்குக்கு நானும் எழுதிக்கொல்கிறேன்.

நீங்கள் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.

கபாலி, ரஜினியின் திரை வரலாற்றில் மிகச் சிறந்த படமாக அமைந்துவிட்டது. நீங்கள் இயக்கப்போகும் அடுத்த படமும் அப்படியே ஆகட்டும். ஆனால் கபாலி திரைப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரை வரலாற்றில் என்ன இடம் நீங்கள் யோசிக்கவேண்டும். ரஜினி என்ற ஒரு உச்ச நடிகராக அப்படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தாலும், ஒரு முக்கியமான வளர்ந்து வரும் இளம் இயக்குநராக அப்படம் உங்களுக்கு பெருமை தரக்கூடிய, காலாகாலம் உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்காது. சுருக்கமாக மெட்ராஸ் போன்ற ஒரு படமாக இருக்காது.

உண்மையில் உங்கள் கைக்கு வந்து அமர்ந்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு ரஜினி வில்லனை வெல்லும் காட்சிகளில் திரைக்கதை என்பதோ புத்திசாலித்தனம் என்பதோ மருந்துக்கும் இல்லை. இங்கே நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உங்கள் திரை வரலாற்றிலும், கபாலி திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். இன்று கபாலி ரஜினியின் திரைப்படமாகவும் வசூலில் சாதனை செய்த படமாகவுமே அறியப்படுகிறது. இனியும் அப்படித்தான் அறியப்படும்.

அதிர்ஷ்டம் இரண்டாவது முறை கதவைத் தட்டாது என்பது இன்று பொய்யாகி இருக்கிறது. இந்த முறையாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களைத் தவிரவும் நல்ல நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை நம்புங்கள். பாலு மகேந்திரா செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். ஒரே நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது தரும் அலுப்பை ஓர் இயக்குநராக நீங்கள் கடந்தே ஆகவேண்டும்.

ரஜினி படம் என்பதால் எதைச் சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் இரண்டு நாள்களில் முடிந்துவிடும். நீங்கள் படம் செய்வது ரசிகர்களுக்காக மட்டுமே அல்ல. எனவே திரைக்கதையில் சின்ன சமரசம் கூட ரஜினிக்காகச் செய்யாதீர்கள்.

வசனத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாடலாகப் போடும் சந்தோஷ் நாராயணனிம் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல பாடலாகக் கேட்டு வாங்குங்கள். ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வேண்டாம். அல்லது உலகம் ஒருவனுக்கே போல் வேண்டவே வேண்டாம். கபாலி திரைப்படத்தில் தனியே அதிகம் பாடல்கள் வராததுதான் நல்லதாகப் போனது. சந்தோஷ் நாராயண்தான் இசை என்றால் அப்படியே இப்படத்துக்கும் செய்துவிடுங்கள். ஒரு மாற்றத்துக்கு, இளையராஜாவை அல்லது ஏ.ஆர். ரஹ்மானை யோசிப்பது நல்லது என் எண்ணம்.

ஒன்று, தீவிரமான அரசியல் படமாகவே எடுங்கள். அல்லது அரசியலற்ற படமாகவே இயக்குங்கள். அரசியலற்ற ஒரு கேளிக்கைத் திரைப்படமாக எடுத்துவிட்டு அதை அரசியல் படமாக முன்வைக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்வைக்காவிட்டாலும் உங்கள் ‘நண்பர்கள்’ அதை, கபாலிக்குச் செய்தது போல, அப்படி முன் வைப்பார்கள். அப்போது அதை ஆதரிக்காதீர்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.

உங்களுக்கு இருக்கும் தீவிரமான அரசியல் உணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால் அதையே மேடைதோறும் பேசுவது திரையுலகில் உங்களுக்கு நல்லவற்றைத் தராது என்றே நான் நிச்சயம் நம்புகிறேன். இன்று உங்களை ஏற்றிப் பேசும் உங்கள் நண்பர்கள், உங்களது தோல்விக் காலத்திலும் உங்களிடமிருந்து அரசியல் ஆதாயம் பெற மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் தேடல் சினிமாவில் வெற்றி என்பதாக இருக்கும். அது இல்லாதபோது நீங்கள் அரசியல் என்ற வெளிக்குள் வேறு வழியின்றி நுழையவேண்டியிருக்கும். இருபது படங்கள் செய்வது வரை உங்கள் அரசியல் உங்களுக்குள்ளே இருக்கட்டும். உங்கள் தொடர்பு மொழி சினிமா. அதை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துங்கள். மணிரத்னத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் திரைவாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தே, சேரன், தங்கர்பச்சான், அமீர் வரிசையில் போய்ச்சேரவேண்டி இருக்கும்.

கடைசியாக ரகசியமாக ஒன்று. வழக்கம்போல் திரைப்படத்தின் பின்னணியில் ஈவெராவின் படத்தை எங்கேயும் வைக்காதீர்கள். கவின்மலர்களின் பேட்டியில் வழக்கம்போல் ஈவெராவின் பெண் விடுதலையை ரசிப்பவன் என்றும், கபாலியில் குமுதவல்லி போல இப்படத்தில் வரும் விகடவல்லி ஈவெராவின் பாதிப்பில் வந்ததுதான் என்று எதாவது சொல்லி நழுவிவிடுங்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டது போல காட்டிவிடுவார்கள். நம் வேலை நமக்கு. அது வெற்றிகரமாகத் தொடரட்டும்.

ரஜினியை மீண்டும் இயக்கப் போகும் நீங்கள் தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வர வாழ்த்துகள்.

Share