Archive for ஹரன் பிரசன்னா

கோபி ஷங்கரின் மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம்

மறைக்கப்பட்ட பக்கங்கள், கோபி ஷங்கர், கிழக்கு பதிப்பகம் (சென்னை புத்தகக் கண்காட்சி 2018)

முன்குறிப்பு: இப்புத்தகத்தில் உறவு நிலைகள் வெளிப்படையாக விவரிக்கப்பட்டுள்ளன. எனவே இப்புத்தகம் வயது வந்தவர்களுக்கு மட்டுமானது.

மறைக்கப்பட்ட பக்கங்கள் – உலக வரலாற்றில் பாலும் பாலினமும் என்னும் புத்தகம் கோபி ஷங்கர் என்னும் இண்டர்செக்ஸ் மனிதரால் எழுதப்பட்ட ஒரு புத்தகம். திருநங்கைகள், திருநம்பிகள் போலவே அல்லது அதையும்விடக் கூடுதலாக புறக்கணிக்கப்பட்ட சமூகம் இந்த இடையிலங்க மனிதர்களின் உலகம். அதன் வலிகளையும் புறக்கணிப்புகளையும் உடல்சார் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு போராடி வெல்லத் துடிக்கும் ஒரு இளைஞர் கோபி ஷங்கர்.

ஹிந்து சமய சேவை அமைப்புகளின் கண்காட்சி ஒன்றில் இவரது மறைக்கப்பட்ட பக்கங்கள் என்ற புத்தகத்தை வானதி ஸ்ரீனிவாசன் வெளியிடும்போதுதான் இவரைப் பற்றி முதன்முதலாக அறிந்துகொண்டேன். பின்பு அரவிந்தன் நீலகண்டன் இந்த நூலைச் செம்மைப்படுத்தி வெளியிடவேண்டியதன் அவசியத்தைச் சொன்னார். முதலில் வெளியிடப்பட்டிருந்த மறைக்கப்பட்ட பக்கங்கள் நூல், ஒரு நூல்வடிவமின்றி, அனைத்துக் கட்டுரைகளையும் தொகுத்து அப்படியே அச்சிடப்பட்டிருந்தது. அந்த நூலைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை நான் எடுத்துக்கொண்டேன். முதலில் தனியே வெளியிடும் எண்ணமே இருந்தது. ஆனால் புத்தகத்தைப் படித்து, எடிட் செய்து முடித்ததும் அது கிழக்கு பதிப்பகம் போன்ற ஒரு பதிப்பகத்தின் வழியே வரவேண்டிய அவசியத்தை உணர்ந்தேன். தற்போது, மறைக்கப்பட்ட பக்கங்கள் புத்தகம் கிழக்கு பதிப்பகம் மூலம் வெளியாகிறது.

இந்நூலில் ஆண் பெண் பாலினம் தவிர இன்னும் எத்தனை வகையான பாலினங்கள் உள்ளன என்பது பற்றி விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்குள்ள தன்மைகள் என்ன, அவர்கள் எப்படி ஒருவரிலிருந்து மற்றவர் வேறுபடுகிறார்கள் என்று விளக்கப்பட்டுள்ளது. பால் மற்றும் பாலியல் ஒருங்கிணைவு (Gender and Sexual orientation) என்பதற்குரிய விளக்கத்தைப் புரிந்துகொண்ட பின்னர்தான் இந்தப் புத்தகத்துக்குள்ளேயே நம்மால் செல்லமுடியும். இதற்குரிய விளக்கத்தின் மூலம்தான் தங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறார் கோபி ஷங்கர். இந்த அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ளாமல்தான் இச்சமூகம் உள்ளது என்பதுதான் இந்தப் புத்தகத்தின் அடிப்படைக் கோபம்.

ஆண் பெண் பாலியல் உறவுகள் தாண்டி நிலவும் உறவு நிலைகளைப் பற்றி மிக விரிவாக இந்நூலில் பேசியுள்ளார் கோபி ஷங்கர். ஹோமோ மற்றும் லெஸ்பியன் உறவுகள் தாண்டி, பல்வேறு உறவுநிலைகளை இப்புத்தகம் விளக்குகிறது. அதேபோல் ஹோமோ மற்றும் லெஸ்பியம் உறவுநிலைகள் இந்த உலகத்தில் தொன்றுதொட்ட காலம் முதலே இருந்திருக்கவேண்டும் என்பதை வரலாற்றையும் புராணத்தையும் உதாரணமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். உலக வரலாற்றின் பாலியல் உறவுகளின் நிலைகளையும், ஆண் பெண் உறவு நீங்கலாகப் பிற உறவுகள் கொண்டிருந்தவர்களின் சமூக நிலையையும் மிக விரிவாக எழுதியுள்ளார் கோபி ஷங்கர்.

Lesbian, Gay, Bisexual, and Transgender (LGBT) குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் சமூகம் அவர்களைப் புறக்கணிப்பதன் வலியையும் பல்வேறு கட்டுரைகளில் விளக்கி இருக்கிறார் கோபி ஷங்கர். இந்தியா முழுமைக்கும் திருநங்கைகளுக்கு இருந்த இடம், இந்தியப் பண்பாட்டில் அவர்களுக்கு இருந்த மதிப்பு, அதேசமயம் இடைப்பட்ட காலத்தில் அவர்களுக்கு நேர்ந்த இழிவு, இன்று மெல்லத் தெரியும் வெளிச்சம், அது நீடித்துத் தொடருமா என்கிற ஏக்கம் எனப் புத்தகம் பல்வேறு செய்திகளை, நாம் இதுவரை அறிந்திராத பின்னணிகளைப் பட்டியலிடுகிறது. ஆண் பெண் என்ற இரண்டு பாலினங்கள் தாண்டி மூன்றாவது பாலினத்தை படிவங்களில் குறிப்பிடக்கூட உரிமையற்ற நிலையை நீக்கப் போராடும் இடத்தில் இச்சமூகம் உள்ளது.

இதுவரை இதுதொடர்பான இத்தனை விரிவான புத்தகம் தமிழில் வெளிவந்ததில்லை. அந்த வகையில் இப்புத்தகம் ஒரு பெரிய பாய்ச்சல்.

இப்புத்தகத்தின் ஆகப்பெரிய இன்னொரு சாதனை என்று பார்த்தால், அனைத்து வகையான உறவு நிலைகள், பாலியல் நிலைகள் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கும் தமிழ்வார்த்தை சொல்ல முயல்வது. இது பாராட்டப்படவேண்டியது. தமிழின் செழுமைக்கு இத்தகைய வார்த்தைகள் நிச்சயம் உதவும். அதேபோல் உலக வரலாற்றில் உள்ள LGBT குறித்த தகவல்களைத் தேடிப்பிடித்துத் தொகுத்திருப்பது முக்கியமாகச் சொல்லப்படவேண்டியது.

இந்நூலில் எனக்குள்ள விமர்சனங்கள் என்று பார்த்தால், ஒரு கட்டத்தில் ஆண் பெண் என்ற இரு பாலினத்துக்குள் உள்ள உறவுநிலையைவிட மற்ற உறவுநிலையே மேம்பட்டது என்று தோன்றும் அளவுக்கு இந்நூலில் எழுதப்பட்டுள்ளது போன்ற ஒரு மயக்கம். இது மயக்கம்தான், அப்படி நூல் சொல்லவில்லை, சொல்லக் காரணமும் இல்லை. புறக்கணிக்கப்பட்டதன் வெறுப்பும் எரிச்சலும் இப்படி வெளிப்படுகிறதெனப் புரிந்துகொண்டேன். இன்னொரு பிரச்சினை, திருநங்களைகளுக்குக் கிடைக்கும் வெளிச்சம் கூடத் தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று இடையிலங்கத்தவர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தே மிகக் குறைந்த அளவே இருப்பார்கள் என்ற நிலையில் இவர்களுக்குள்ளான பிரிவு வேதனை அளிக்கிறது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையுடன் இதைத் தாண்டத்தான் வேண்டும்.

இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, உலக வரலாற்றைச் சேர்ந்த மனிதர்களின் பெயர்கள் சரியான உச்சரிப்பில் சொல்லப்படவில்லை என்பது இன்னொரு குறை. இதை அடுத்த பதிப்பில் சரி செய்யவேண்டும்.

இப்புத்தகத்தின் தொடக்க பக்கங்கள், பாலினங்களையும் பாலியல் ஒருங்கிணைவையும் பட்டியலிடுபவை. இப்பக்கங்களில் நாம் ஒரு பாடப் புத்தகத்தைப் படிக்கிறோமோ எனத் தோன்றலாம். ஆனால் இப்பக்கங்கள் மிக முக்கியமானவை. தவிர்க்க இயலாதவை. தமிழில் இவையெல்லாம் கிடைக்கவேண்டியது மிக அவசியம். எனவே இவற்றைத் தாண்டித்தான் நாம் இப்பிரச்சினைக்குள்ளும் புத்தகத்துக்குள்ளும் நுழைந்தாகவேண்டும்.

முக்கியமாக நான் நினைத்த ஒரு விஷயம், உலகில் உள்ள எல்லாக் குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற அவதூறுகளையும்கூட கோபி ஷங்கர் நம்ப முனைகிறாரோ என்பது குறித்து. பொதுவாகவே இதுபோன்ற புத்தகங்கள் தங்களுக்கு ஆதரவான எந்தக் குரலையும் தவிர்க்க முனையாது என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனாலும் ஆதாரமற்ற குரல்களை ஏற்பது தற்சமயத்தில் உதவினாலும் நீண்டகால நோக்கில் அது நமக்கே எதிரானதாக அமையும். இதைப் புரிந்துகொண்டு கோபி ஷங்கர் எதிர்காலத்தில் அனைத்தையும் அணுகுவது அவருக்கு உதவலாம்.

மற்றபடி, இந்தப் புத்தகம் தமிழில் நிகழ்ந்திருக்கும் ஒரு புதிய திறப்பு. அரிய வரவு. முகச்சுளிப்போடும் அருவருப்போடும் நாம் கடந்துசெல்லப் பழக்கப்பட்டிருக்கும் ரத்தமும் சதையுமான மனிதர்களின் ஆவணம் இது. இதைப் புரிந்துகொண்டால்தான் நாம் நம்மைப் புரிந்துகொள்ளமுடியும் என்பதில் உள்ளது இப்புத்தகத்தின் அடிப்படைத் தேவை. கோபி ஷங்கர் போன்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதும் அதையேதான்.

– ஹரன் பிரசன்னா

Share

2017 தமிழ்த் திரைப்படங்கள் ஒரு ரீவைண்டிங்

2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)2017 தமிழ்த் திரைப்படங்கள் – ஒரு வேகமான ரீவைண்டிங். (நான் பார்த்தவற்றுள் என்னை ரசித்தவை இவை. ஆய்வெல்லாம் இல்லை. உலகமகா திரைப்படத்தை நான் பார்க்காமல் விட்டிருந்தால், அது இங்கே இடம்பெற்றிருக்காது என்கிற ஏமாற்றத்தைத் தாங்கும் வல்லமை இருந்தால் மட்டும் மேற்கொண்டு பட்டியலைப் பார்க்கவும்.)
சிறந்த திரைப்படம்: எதுவுமில்லை
சிறந்த நடிகர்: யாருமில்லை
சிறந்த நடிகை: அதிதி பாலன் (அருவி)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சாம் எஸ் (விக்ரம்வேதா)
சிறந்த இசையமைப்பாளர்: யாருமில்லை
சிறந்த குத்துப்பாட்டு: டசக்கு டசக்கு (விக்ரம் வேதா)
சிறந்த பாடல்: நீதானே நீதானே (மெர்ஸல், இசை: ஏ.ஆர்.ரஹ்மான்), (அடுத்ததாக, விவேகம் படத்தின் காதலாடா பாடல், இசை அநிருத்)
நன்றாக வந்திருக்கவேண்டிய, ஆனால் தேங்கிவிட்ட படங்கள்: மாநகரம், 8 தோட்டாக்கள், அருவி, தீரன், பா பாண்டி
சிறந்த வணிகத் திரைப்படம்: விக்ரம் வேதா
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: மீசைய முறுக்கு
எதிர்பார்த்து கதற வைத்த படங்கள்: விவேகம், மெர்சல், டோரா, ரிச்சி.
படு மோசமான படம்: இந்திரஜித்
சிறந்த காமெடி நடிகர்: சூரி
சிறந்த துணை நடிகர், நடிகை: யாருமில்லை
சிறந்த ஒளிப்பதிவாளர்: ரவி  வர்மன்  (காற்று வெளியிடை)
இந்த வருடம் பார்த்த படங்களுள் மனசுக்குள் பச்சக்கென ஒட்டிக்கொண்ட படங்கள்: தொண்டிமுதலும் திருக்ஷாக்க்ஷியும் (மலையாளம்), நியூட்டன் (ஹிந்தி), உளுதுவரு கண்டெந்தெ (கன்னடம் 2015).

Share

சென்று வருக 2017

இந்த வருடம் படித்த புத்தகங்கள்

* தடைசெய்யப்பட்ட துக்ளக்

* முஸ்லிம் லீக் ஆர் எஸ் எஸ் சந்திப்பு

* ஒளிர் நிழல் – சுரேஷ் பிரதீப்

* நாயகிகள் நாயகர்கள் – சுரேஷ் பிரதீப்

* பிரேக்கப் குறுங்கதைகள் – அராத்து

* தற்கொலை குறுங்கதைகள் – அராத்து

* உடலென்னும் வெளி (இன்னும் வெளிவரவில்லை.)

* பால், பாலினம். (கோபி ஷங்கரின் நூல்)

* லக்ஷ்மி சரவணக்குமாரின் நாவல் (இன்னும் வெளிவரவில்லை)

* பூனைக்கதை (பா.ராகவனின் நாவல்)

* போகப் புத்தகம்

* இந்தியப் பயணம் (ஜெயமோகன்)

* ஓரிதழ்ப்பூ – அய்யனார் விஸ்வநாத்

* பான்கி மூனின் றுவாண்டா – அகரமுதல்வன்

* உப்புக் கண்க்கு – வித்யா சுப்பிரமணியன் (இன்னும் படித்துமுடிக்கவில்லை!)

* ஆதி சைவர்கள் வரலாறு

* நேதாஜி மர்ம மரணம்

* My father Baliah (Not yet finished)

* சினிமா பற்றிய ஒரு புத்தகம் (இன்னும் வெளிவரவில்லை)

* நரசிம்ம ராவ் – ஜெ.ராம்கி மொழ்பெயர்ப்பில்

* மீன்கள் – தெளிவத்தை ஜோசப்

* குடை நிழல் – தெளிவத்தை ஜோசப்

* ஜெஃப்னா பேக்கரி – வாசு முருகவேல் (இன்னும் முடிக்கவில்லை)

* போரின் மறுபக்கம் – பத்திநாதன்

* எம்டன் செல்வரத்தினம் – சென்னையர் கதைகள்

* கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்

* ரோக்ஸ் வாட்ச் – சரவணன் சந்திரன்

* சார்த்தா – எல். பைரப்பா

* அவன் காட்டை வென்றான்

* நான் ஏன் தலித்துமல்ல – தர்மராஜ்

* ஒருத்திக்கே சொந்தம் – ஜெயலலிதா

* திராவிட மாயை பாகம் 2 – சுப்பு

இன்னும் சில புத்தகங்களைப் பட்டியலிட விட்டுவிட்டேன். மறந்துவிட்டது.

உடனடியாகப் படிக்கவேண்டியவை:

* அஜ்வா – சரவணன் சந்திரன்

* பார்பி – சரவணன் சந்திரன்

* பச்சை நரம்பு – அன்னோஜன்

இதற்கிடையில் 12 வலம் இதழ்கள் கொண்டுவருவதில் என் பங்களிப்பும் உண்டு.

மீதி நேரங்களில் 100 திரைப்படங்களுக்கு மேல் பார்த்திருக்கிறேன்.

இவையெல்லாம் உணவைக் குறைத்ததால் கிடைத்த நேரத்தில் சாத்தியமாகி இருக்கிறது என நினைக்கிறேன்.

இதற்கிடையில் கிழக்கில் வேலையும் பார்த்திருக்கிறேன் என்று லேசாகத் தோன்றவும் செய்கிறது. 🙂

பிப்ரவரி மாதம் என் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. ஆகஸ்ட்டில் மரணமடைந்தார். பேரிழப்பு. இந்த ஐந்து மாதங்களில் அதிகம் படம் பார்க்கவில்லை, புத்தகங்கள் படிக்கவில்லை. இந்த நேரத்திலும் கொஞ்சம் ஆக்டிவாக இருந்திருந்தால்… ஜாக்கிரதை.

Share

5 கவிதைகள்

கனவின் அலைதல்

என்னை கௌவிக்கொண்டு
வழிதவறிச் சென்ற தட்டான்
மலைமுகட்டிலிருந்து
திரும்ப வரும்போது
என்னை மறந்துவிட்டிருந்தது
நான் தூங்கிவிட்டிருந்தேன்
அங்கே
என் கனவில்
கையில் தட்டானை ஏந்திக்கொண்டிருந்தேன்
கைகள் விரிக்கவும் மூடவும்
தட்டான் இறக்கையை அடித்துப் பறக்கவும்
கடந்துகொண்டே இருக்கிறது
நிமிடம் நாள் மலைகள் ஆறுகள்
யுகமுடிவில்
அங்கே தட்டான் இல்லை
நானில்லை
மலைமுகடில்லை
ஆனால் அலையும்
என் கனவு மட்டும் இருக்கிறது.

மீண்டு வரும் ஒரு சித்திரம்

கண்ணில் தெரியும் கதைகளில்
உருவாகி வரும் சித்திரத்தில்
நான் சேர்த்த சில வரிகள் இருக்கின்றன
நீங்கள் நீக்கிய சில வரிகள் இல்லை
அவன் கிழித்த கோடுகள் உள்ளன
அவள் வரைந்த ஓவியத்தின் ஒருபகுதி தெரிகிறது
போக வர கைகள் கிறுக்கிய கோடுகளோடு
உள்ளிருந்து
உயிர்ச்சொல்லென
மேலெழும்
வார்த்தைகளொடு
அழிக்கப்பட்ட தடங்களின் மௌனத்தோடு
கண்ணில் தெரிகிறது புதிய கதை

ரணங்களில் துளிர்க்கும் ஒரு சிறு செடி

கனன்றுகொண்டிருக்கும்
இன்னும்
அச்சொல்லை நீ சொல்லாதிருந்திருக்கலாம்
நான் மறந்திருக்கலாம்.
இரவுகளில் நம் நிர்வாணம்
பொத்தி வைத்துக் கொண்டிருக்கும்
அநேகக் கதைகளை
ஒவ்வொன்றாகப் பிரித்தால்
இன்னொரு உலகமென
நாமறிவோம்
நம் பாவனைகள்
அதை மறப்பதை ஒட்டியே என்றாலும்.
மீள மீள
நீர் தெறிக்க
வீசப்பட்டுக்கொண்டே இருக்கும்
கல்லும்
ரணமும்
இதற்கிடையில்
ரணத்தில் மெல்ல துளிர்க்கிறது
ஒரு சிறு செடி.

இடுகை

ஃபேஸ்புக்கின் முகமிலிகள்
அலுக்கத் துவங்கும்போது
யாரோ யாரையோ
வசைபாடத் துவங்கினார்கள்.
அவன் ஒரு பக்கம் சேர்ந்தான்.
சில வரிகள் உள்ளிட்டான்.
அவன் மூக்கு ரத்தத்தை மோப்பம் கொண்டது.
உள்பெட்டியின் வசைகளில் தனித்து நின்றது ஒரு கெட்ட வார்த்தை.
நான்கைந்து முறை சொல்லிப் பார்க்கவும்
இளவயதின் கிராமம் விரிந்தது.
ரத்தமும் சதையுமான மனிதர்களைத் தேடி
தெருவோர தேநீர்க் கடைக்கு ஓடினான்.
யாரும் யாரையும் திட்டவில்லை.
அவனுக்கு ஒரு தும்மல் வந்தது.
என்ன சமூகம் இது என்றான்.
கைபேசியில்
ஃபேஸ்புக்கைத் திறந்து
தாயளி என எழுதத் துவங்கினான்.

சிறுமியின் புன்னகை

அச் சிறுமியின் புன்னகையில்
உயிர்கள் தோற்று மண்டியிட்டன
பறவைகள் பறக்க மறந்து உறைந்தன
உலகக் கடவுளர்கள்
கை கட்டி
வாய்பொத்தி
மெய்குழைந்து
வரிசை கட்டிக் காத்திருந்தனர்,
அவள் உறங்கிவிட்டிருந்தாள்.
அந்தச் சிறுமி
தன் மென்கைக்குள்
உலகைச் சுருட்டி இருந்தாள்
எங்கேயும்
இரவுபகல்
பேதமின்றி
பூக்கள் பூத்தன
அணுகுண்டு வெடித்த வெளிகளில்
அவளையொத்த சிறுமிகள்
புன்னகையைத் தெளித்தவண்ணம் இருந்தனர்
சாத்தான் உலகச் சிறுமிகளை
ஒற்றை ஓவியமாக்கிப் பார்த்தான்,
அந்த ஓவியத்திலிருந்து
ஆயிரம் ஆயிரம் சிறுமிகள்
மொட்டென வெடித்துப் பரவி
கடவுளானபடியே இருந்தார்கள்.
சிறுமிகள் கால்பட்ட நிலத்தின்
கூழாங்கற்கள் சிலிர்த்தன.
கருமேகம் எப்போதும் அவர்கள்பின்
சென்றபடி இருக்க,
பூமியின் சமநிலை
புன்னகை பூத்த
சிறுமிகளால் நிரப்பப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

Share

உலிதவரு கண்டந்த்தெ – Ulidavaru kandanthe

நேற்றைய தி ஹிந்துவில் வெளியாகி இருந்த நவின் பாலியின் பேட்டிக்குப் பின்னர்தான் அவர் நடித்து வெளிவரப்போகும் ரிச்சி திரைப்படம், உலிதவரு கண்டந்த்தெ (மற்றவர்களின் பார்வையில்) என்ற கன்னடப் படத்தின் ரீமேக் எனத் தெரிந்தது. உடனே இப்படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டேன். டொரண்ட் சரணம். இந்த உலிதவரு கண்டந்த்தெ என்ற பெயர் மனதில் பதியவே மாட்டேன் என்கிறது. உச்சரிப்பும் இதுதான் சரியா எனத் தீர்மானமாகத் தெரியவில்லை. இப்படியெல்லாம் தமிழில் சோதிக்காமல் ரிச்சி என்று தெளிவாக வைத்துவிட்டார்கள்.

 

சில படங்களை ஏன் ஆர்வம் கொண்டு ரீமேக் செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். சிலர் சில படங்களை ஏன் தயாரிக்கிறார்கள் என்பதும் புதிரே. லூஸியா அற்புதமான திரைப்படம். சமீபத்தில் வந்த இந்தியத் திரைப்படங்களில் இது முக்கியமானது என்பது என் பார்வை. அதைத் தமிழில் எடுக்க சித்தார்த் நினைத்தது எனக்குத் தந்த ஆச்சரியம் இன்னும் தீரவில்லை. இப்படம் ஓடாது என்று நிச்சயம் சித்தார்த்துக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனாலும் தமிழில் எடுத்தார். தமிழிலும் எனக்குப் பிடித்திருந்தது. சிலர் தமிழில் நன்றாக இல்லை என்றார்கள். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதேபோல், நடிகை சௌந்தர்யா த்வீபா என்ற படத்தைத் தயாரித்ததும் எனக்கு ஆச்சரியமான ஒன்றே. இப்படிச் சில ஆச்சரியங்களைத் திரைப் பிரபலங்கள் தந்தவண்ணம் உள்ளார்கள்.

தமிழில் (மலையாளத்திலும் வருகிறது எனத் தெரிகிறது) உலிதவரு கண்டந்த்தெ ரிச்சியாக வருவது இன்னொரு ஆச்சரியம். இந்தப் படம் லூஸியா போல் வணிக ரீதியாக நிச்சயம் வெற்றியடைய முடியாது என்று சொல்லமுடியாது. கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஓரளவு நல்ல வசூலைச் செய்துள்ளது எனத் தெரிகிறது. படம் நல்ல பாராட்டைப் பெற்றிருக்கிறது. இப்படியே தமிழில் எடுத்தால் இப்படம் பாராட்டப்படும் என்றாலும், வணிக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் கொஞ்சம் தமிழுக்கு ஏற்றபடி மாற்றினால் நிச்சயம் விக்ரம் வேதா அளவுக்கு நல்ல பெயர் பெறுவதோடு நல்ல வசூலையும் செய்யலாம்.

ஆய்த எழுத்து, விருமாண்டி மாதிரியான உத்தி கொண்ட திரைப்படம். இந்த உத்தி இல்லாவிட்டால் இதெல்லாம் ஒரு கதையே அல்ல என்று இடதுகையில் தள்ளிவிட்டுப் போய்விடலாம். படம் பார்த்த முடிந்த பின்பும் இதில் கதையே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் படத்தை எடுத்த விதம் அசத்தலாக உள்ளது. பொதுவாக கன்னடப் படங்களில் (நான் மிகக் குறைந்த படங்களையே பார்த்துள்ளேன்) இது விஷுவலாக கொஞ்சம் மேன்மை காட்டுகிறது. (இதிலும் சில காட்சிகள் டெக்னிகலாக கொஞ்சம் பின் தங்கி உள்ளன என்பதும் உண்மையே.) இதையெல்லாம் தமிழில் பக்காவாகச் செய்தால் இன்னும் மெருகு கூடலாம்.

கன்னடத்தில் உடுப்பியைக் களமாகக் கொண்டு ஜன்மாஷ்டமி தினம் நடக்கும் மாறுவேடத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. நேற்றைய தி ஹிந்து பேட்டியில் திருநெல்வேலி வட்டார வழக்கைப் பேசத்தான் 50 நாள்கள் ஆகியது என்றும் படம் எடுக்க 30 நாள்தான் ஆனது என்றும் நவின் பாலி சொன்னதை வைத்துப் பார்த்தால், குலசேகரன் பட்டணத்தில் நடக்கும் தசராவை எடுத்துக்கொள்வார்களோ என்று தோன்றுகிறது. டீஸரை வைத்து இதை முடிவு செய்யமுடியவில்லை. படம் வந்தால்தான் தெரியும்.

உலிதவரு கண்டந்தெ படத்தில் நாயகன் ரக்‌ஷித் ஷெட்டி (இவரே இயக்குநரும் கூட என அறிந்தபோது ஆச்சரியம் இரண்டு மடங்காகிவிட்டது) அசரடித்துவிட்டார். உண்மையில் படம் பார்க்க ஆரம்பிக்கும் முன்பு, கன்னடத்தில் யார் நடித்திருந்தாலும் அதைவிடப் பல மடங்கு நிச்சயம் நவின் பாலி நன்றாக நடிப்பார் என நினைத்துக்கொண்டுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் படம் பார்த்தபின்பு, ரக்‌ஷித் ஷெட்டி அளவுக்கு நவின் பாலியால் நடிக்கமுடியாது என்று எண்ணம் வந்துவிட்டது. ரக்‌ஷித் ஷெட்டியின் நடையும் துள்ளலும் அலட்டலும் வசனம் பேசும் விதமும் அந்த பெல்ட்டை அணிந்துகொண்டிருக்கும் விதமும் – என்ன சொல்ல, அற்புதம். (இவரே கோதி பண்ணா சாதாரண மைக்கட்டு படத்தில் நடித்தவர். அந்தப் படத்திலும் அட்டகாசமாக நடித்திருந்தார். உண்மையில் அந்தப் படத்தில் அவர் அப்பாவுடன் சேர்கிறாரோ இல்லையோ, அவரது காதலியுடன் சேரவேண்டும் என்ற நினைப்பைக் கொண்டு வந்தது அவரது நடிப்பு!) நவின் பாலியும் நிச்சயம் கலக்குவார் என்பது உறுதி. ஆனால் திருநெல்வேலி வட்டார வழக்கு என்பதுதான் கொஞ்சம் நடுக்கத்தை வரவழைக்கிறது.

இந்தப் படத்தை ஏன் நவின் பாலி நடிக்க எடுத்தார் என்பது இன்னொரு ஆச்சரியம். ஏனென்றால் இப்படத்தில் மூன்று நடிகர்களுக்குச் சமமான வாய்ப்பு. தமிழில் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வேறு ஒரு தமிழ் நாயகன் என்றால் கூறு போட்டிருப்பார். இது நவின் பாலி என்பதால் அப்படிச் செய்யமாட்டார் என்று நம்புகிறேன். கன்னடத்தில் நாயகியாக வரும் நடிகையைவிட தமிழில் வரப்போகும் ஸ்ரெத்தா அதிகம் நம்பிக்கை தருகிறார்.

உலிதவரு கண்டந்த்தெ மிக மெதுவாகவே நகர்கிறது. தமிழிலும் இப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். எனவே படம் வந்தவுடனேயே பார்த்துவிடவேண்டும். நவின் பாலியின் முதல் தமிழ்ப்படம் என்று சொல்கிறார்கள். நேரம் படமும் தமிழ்ப்படம்தானே? இருமொழிப் படம் என்றுதான் நினைவு. இதுவும் இருமொழிப் படமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தால் மலையாளத்தில் நிச்சயம் ஒரு ப்ளாக் பஸ்டராக இருக்க வாய்ப்பு அதிகம். தமிழில்தான் என்ன நடக்கும் என்று சொல்லமுடியவில்லை. என் கணிப்பில் நல்ல பெயர் வாங்கி, அதிலுள்ள குறைகள் முன்னிறுத்தப்பட்டு படம் வசூலில் சுணங்கும் என்றே தோன்றுகிறது. அப்படி நடக்காமல் இருக்கட்டும்.

Share

விழித்திரு

‘அவள் பெயர் தமிழரசி’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக மிக சுமாரானது என்றாலும் அதில் சில காட்சிகள் மாற்றுத் திரைப்படங்களின் வகைமையைச் சேர்ந்தவையாக இருந்தன. எழுத்தாளர்கள்களும் கலைஞர்களும் நடித்திருந்தார்கள். இயக்குநர் என்னவோ முயற்சி செய்யப் பார்த்திருக்கிறார் என்பது புலனாகும். ஆனால் படம் தோல்வி. ஒரு தடவை (எங்கே எப்போது என்று என்ன யோசித்தாலும் நினைவுக்கு வரவில்லை, எதோ ஒரு புத்தக வெளியீட்டு விழாவில்தான்) தியடோர் பாஸ்கரனிடம் இப்படத்தைப் பற்றி ஒரு வார்தை பேசியபோது, அவள் பெயர் தமிழரசி படத்தில் இயக்குநருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் என்றும் இல்லையென்றால் படம் சிறப்பாக வந்திருக்கும் என்றும் சொன்னார். இயக்குநர் பெயரையும் அடுத்த சில தினங்களில் மறந்துவிட்டேன்.

இப்போது மீரா கதிரவன் ‘விழித்திரு’ திரைப்படத்தை எடுத்திருக்கிறார். முதல் படம் தந்த தோல்வி, அவரை வெகுஜனத் திரைப்படத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது போல. 2014ல் எடுத்து முடிக்கப்பட்ட படம் இப்போதுதான் வெளியாகி இருக்கிறது.

நிகழ்கால தீவிர அரசியல் களத்தைத் திரைப் பின்னணியாகப் படம் எடுப்பது கொஞ்சம் சவாலானது. பிரச்சினைகள் நிறைந்தது. மணிரத்னம் தீவிரப் பிரச்சினைகளைப் பின்னணியாக வைத்துப் படம் எடுப்பார். ஆனால் படத்தின் பிரச்சினைகளைப் பற்றி ஆராயாமல் அதில் காதல் பிரச்சினைகளோ உணர்வு ரீதியான பிரச்சினைகளோ இருக்கும். ஒருவகையில் திரைப்பட இயக்குநர்களுக்கு இந்த சமூகமும் அரசியல் அதிகாரமும் தரும் சுதந்திரம் அதுதான். அதைமீறித் தங்கள் வாழ்க்கையையே பணையம் வைக்க இயக்குநர்களுக்கு தைரியம் வேண்டும். அப்படியே பணையம் வைத்தாலும் இந்த சமூகத்தில் சாதிக்கப்போவது என்ன, இந்த சமூகம் இதை எப்படிப் பார்க்கப் போகிறது என்பது கேள்விகள்.

விழித்திரு திரைப்படம், ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம். மணிரத்னத்தின் பின்னணிக்கே அதைக் கழுவி ஊற்றுவார்கள் விமர்சகர்கள். இதில் இயக்குநர் இந்த ஆணவக் கொலை பற்றிய விஷயத்தை, மணிரத்னம் அளவுக்குக் கூடப் பின்னணியாகக் கொள்ளவில்லை. ஒரு காரணமாக மட்டுமே கையாண்டிருக்கிறார். இதைப் பற்றிய அலசல்களோ விவரிப்போ எதுவுமே இல்லை. ஒரு பரபரப்புத் திரைப்படத்துக்கான பின்னணி மட்டுமே என்ற அளவில் இதைப் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இதை மிக சீரியஸான படம் என்று வகைப்படுத்த முடியாது.

அரசியல் கொலை என்ற பின்னணியை விட்டுவிட்டுப் பார்த்தாலும், படம் அட்டகாசமான த்ரில்லர் என்று சொல்லக்கூடிய வகையிலும் அடங்கவில்லை. ஒரே இரவில் நான்கு கதைகளைச் சொல்லும் வகைமைத் திரைப்படம். படம் எடுத்து முடிக்கப்பட்டு உடனே வெளியாகி இருந்தால் இதில் ஒரு சுவாரஸ்யம் இருந்திருக்கலாம். இது போன்ற வகைமைகளில் பல படங்கள் வந்துவிட்டன. ‘மாநகரம்’ சட்டென நினைவுக்கு வரும் உதாரணம்.

‘ஆய்த எழுத்து’ திரைப்படம் மூன்று புள்ளிகளை இணைக்கும் ஒரு படம். ஆனால் அதன் பின்னணி மிக முக்கியமானது, அழுத்தமானது. அதில் வரும் மூன்றாவது புள்ளி, மற்ற இரண்டு புள்ளிகளுடன் மிகப் பின்னால்தான் இணையும். அதுவே நம்மை அதிகம் பாதிக்காத புள்ளி. அதேசமயம் சித்தார்த் தொடர்பான காட்சிகள், அக்காட்சிகளுக்கே உரிய நியாயத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அப்படி இருந்தும் எடுபடவில்லை. (தனிப்பட்ட அளவில் ‘ஆய்த எழுத்து’ எனக்கு மிகப் பிடித்த படம், மிக முக்கியமான படம்.) இது போன்ற திரைப்படங்களில் நான்கு வேறு வேறு சம்பவங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு குறுக்கீடு நல்ல சுவாரஸ்யத்தைத் தரலாம். இது யதார்த்தம் இல்லை என்பது சரிதான். ஆனாலும் இதுவே நம்மைக் கட்டிப் போடும் ஒன்று. அப்படி ஒன்று இப்படத்தில் இல்லை.

அதுபோக, நான்கு கதைகளுமே நம்பகத்தன்மை இன்றிச் செல்கின்றன. எனவே இவை அனைத்தும் முட்டி நிற்கும்போது நமக்கு எவ்விதப் பரபரப்பும் உண்டாவதில்லை. இது ஒரு பலவீனம். எப்படியே எல்லாவற்றையும் இழுத்துவந்து அதை ஒரு அரசியல் பின்னணியில் ஒட்டச் செய்வதாலோ, கதாபாத்திரத்தின் பெயர்களைத் தன் கொள்கைக்கேற்ப வைப்பதாலோ ஒரு படம் எதையும் மக்களுக்குச் சொல்லிவிடாது என்றே நினைக்கிறேன்.

டி.ராஜேந்திரரின் குத்துப்பாட்டு வைக்கப்படவேண்டிய அவலத்தை இயக்குநர் மீரா கதிரவன் வெளிப்படையாகச் சொன்னார். உண்மையில் இந்தக் குத்துப்பாட்டு படத்துக்கு மிகப்பெரிய தடையைத்தான் தருகிறது. இதை ஏன் விநியோகஸ்தர்கள் வேண்டும் என்கிறார்கள் என்பதே புரியவில்லை. அதிலும் டி.ராஜேந்திரர் ஆடுவது, நமக்குத் தரப்படும் இனிமாதான்.

2014ல் எடுக்கப்பட்டும் படம் இன்றுவரை ஃப்ரஷாக இருக்கிறது என்பது ஆச்சரியம். ஒரு தடவை பார்க்கலாம் என்ற ரீதியில் இருப்பது பொருளாதார ரீதியாகப் படத்துக்கு பலம் சேர்க்கலாம். இன்னும் சுதந்திரமான வாய்ப்பளிக்கப்பட்டால் மீரா கதிரவன் மிக நல்ல படங்களை எடுக்கலாம். அந்த வாய்ப்பு அவருக்கு அமையட்டும். அதற்கான அரசியல் சூழலும் மலரட்டும்.

Share

கொங்குதேர் வாழ்க்கை – நாஞ்சில் நாடன்

பதிமூன்று கதைகள் அடங்கிய தொகுப்பு. ஒரே மூச்சில் படிக்கத்தக்க புத்தகமே. என்றாலும் நாளொன்றுக்கு இரண்டு மூன்று கதைகள் என நான்கு நாள்களில் படித்தேன்.
 
நாஞ்சில் நாடனின் பிரத்யேகமான மொழியே அனைத்துக் கதைகளின் அச்சாணி. இன்னொருவர் ஒரு சிறுகதையில் இத்தகைய தமிழை, தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் (யாண்டு, ஈங்கு, யாவர் உள்ளிட்ட வெகு பல வார்த்தைகள்) கதைகளில் ஒரு அந்நியத் தன்மை தோன்றிவிடும். நாஞ்சில் நாடன் கதைகளில் அப்படித் தோன்றவில்லை. கூடவே ஒரு இசைத்துவம் தெரிகிறது. கதைகளை வாய்விட்டு வாசிக்கலாம் என்ற அளவுக்கான இசைத்துவம் அது. கூடவே ஒரு வார்த்தை கிடைத்துவிட்டால் அவ்வார்த்தைகளின் இணை வார்த்தைகளையும் அதன் பொருளையும் வரலாற்றையும்கூடத் தொட்டுச் செல்கிறார் நாஞ்சில்நாடன்.
 
எல்லாக் கதைகளுமே நுணுக்கமானவை. பொதுவாகவே நாஞ்சில் நாடனின் கதைகளின் தலைப்பும் கதையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருப்பவை. கதையின் தலைப்பு கதைக்கான பெரிய வெளியை வைத்திருக்கும். இக்கதைகளின் தொகுப்பிலும் அப்படியே. நுணுக்கம் பிடிபடும் தருணத்தில் சட்டென விரிவு கொள்ளும் கதைகள் அபாரமானவை. பெரும்பாலான கதைகள் அப்படியே. இந்த நுணுக்கம் உடையாவிட்டால் நமக்கு இவை வெற்று விவரணைகாளகவே எஞ்சும். வேறொரு சந்தர்ப்பத்தில் வாசித்தால் மனவிரிவுக்குள் இக்கதைகள் சிக்க நேரலாம்.
 
இத்தொகுப்பில் வயதானவர்கள் குறித்த சித்திரம் ஒன்று உள்ளது. இரண்டு மூன்று கதைகளில் அது பயின்று வருகிறது. ஒரு கதை கல்யாணம் ஆகாத பெண்ணைப் பற்றியது. இன்னொன்று, திருமணம் தடைபடும் ஆணைப் பற்றியது. கொங்குதேர் வாழ்க்கை என்னும் சிறுகதையே இக்கதைகளின் உச்சம். அதேபோல் பரிசில் வாழ்க்கையும் இன்னொரு அட்டகாசமான சிறுகதை. கதைகளில் ஆங்காங்கே தெறிக்கும் நகைச்சுவையும் கோபமும் ஏளனமும் நாஞ்சில் நாடனின் முத்திரைகள். பாம்பு போன்ற உருவகக் கதைகள் எனக்கு எப்போதுமே பிடிக்காதவை. பெருந்தவம் சிறுகதையில் வருவம் ஏழிலைக் கிழங்கு பற்றிய விவரணைகள் அபாரமானவை. இக்கதையின் இறுதி வரியே முக்கியமானது. ஒரு சிறிய விஷயத்தைக் கூட விலாவாரியாக விவரிக்கும் பண்பை இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணலாம். சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உள்ள அத்தனை சாத்தியங்களையும் தொட்டுப் பார்க்கிறார் நாஞ்சில் நாடன். ஒன்றிரண்டு கதைகள் அனுபவம் என்ற அளவுக்கே நம்மைச் சேர்கின்றன.
 
சிறுகதைகளின் பல்வேறு சாத்தியங்களைச் சொல்லும் கதைகள் அடங்கிய தொகுப்பு. மொத்தத்தில் அருமையான தொகுப்பு. நிச்சயம் படிக்கவும். கிண்டிலில் 9 ரூபாய்க்குக் கிடைத்தது. இப்போது விலை 50 ரூ.
 
https://www.amazon.in/Konguther-Vazhkai-Tamil-Naanjil-Nadan-ebook/dp/B06Y45RMMY/ref=sr_1_fkmr0_1?ie=UTF8&qid=1509710941&sr=8-1-fkmr0&keywords=konguther+vaazkkai
 
#கிண்டிலுக்குவாங்கஇயக்கம் 🙂
Share

டாய்லட் (ஹிந்தி)

சவசவ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காது வலிக்கிறது. டாய்லட் இல்லாத வீடும் வேண்டாம், புருஷனும் வேண்டாம் என்று கோர்ட்டுக்குப் போகிறாள்  ஒரு பெண். அரசு அலறியடித்துக்கொண்டு டாய்லட் கட்டித் தருகிறது. டாய்லட் கட்டாததற்கு அரசு காரணமல்ல, மக்களே காரணம் என்று சில காட்சிகளும் அரசும் காரணம் என்று சில வசனங்களுமென எல்லாப் பக்கமும் கர்ச்சீஃப் போட்டு வைத்துவிட்டார்கள். தன் வீட்டில் டாய்லட் வரக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார் ஒரு பண்டிட். (பிராமணர்களை இழிவுபடுத்துகிறதுன்னு கிளம்பிடாதீங்கய்யா…) கடைசியில் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்படி டாய்லட் போகிறார் என்பதே இறுதிக்காட்சி. 🙂
கழிப்பறை இல்லாத வீடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் தன் வீட்டில் கழிப்பறையே வரக்கூடாது என்று சொல்லும் நபர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதெல்லாம் கப்ஸா. ஒரு ஊரே அறியாமையில் டாய்லட் இல்லாமல் இருக்கிறது என்பதெல்லாம் நம்பவே முடியாத சங்கதிகள்.

அனிதா நர்ரே என்பவரின் உண்மைக் கதையை மையமாகக் கொண்ட படம் என்று இறுதியில் காண்பிக்கிறார்கள். இந்த நர்ரே என்பது பிராமணர்களைக் குறிக்கும் ஜாதியா? திரைப்படத்தில் பிராமணர்களின் ஜாதியாகக் காட்டி இருக்கிறார்கள் என்பதால் கேட்கிறேன். திரைக்கதையில் இப்படிக் காட்டினால்தான் படத்துக்கு ஒரு தர்க்கம் வரும் என்பதால் காட்டி இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். இல்லையென்றால் ஏன் ஒருவர் தன் வீட்டுக்கு டாய்லெட் வேண்டாம் என்று சொல்லவேண்டும்?

படம் நல்ல வசூல் என்கிறது கூகிள். தமிழில் வந்தால் ஊத்தியிருக்கும்.

Share