Flying Abiram

ஒரு விநோதமான கனவு.

நான் என் பையனை அவனது காலேஜுக்கு வானில் பறக்கும் ராட்சத பலூனில் டிராப் செய்கிறேன். இந்தக் கனவு ஏற்கெனவே ஒரு முறை வந்திருக்கிறது. மறந்துவிட்டது. நேற்றுமுன்தினம் மீண்டும்.

ராட்ச பலூனில் ஒரு ஸ்டேஷனில் அபிராம் ஏறிக் கொள்கிறான். அது சென்னைதான். நான் ஏறவில்லை. அஞ்சுகிறேன். அவனைப் பார்த்துப் போய்விட்டு வா என்கிறேன். ஒரு பக்கக் கயிற்றை நான் பிடித்துக் கொள்கிறேன். வானத்தில் பறக்கிறது ராட்சத பலூன். மறுநாள் அதேபோல் அவன் போகத் தயாராகிறான். குமார் வருகிறார்(ன்). என் மனைவியின் சித்தப்பா என்றாலும் எனக்கும் அவனுக்கும் 2 வயசுதான் வித்தியாசம். ஒன்றாக திருநெல்வேலியில் கிரிக்கெட் விளையாண்டவர்கள். அவனும் அபிராமை அன்று வழியனுப்ப வருகிறான்.

அபிராம் பலூனில் ஏறிக்கொள்ள, நான் ஏறப் பயப்பட, அபிராம் குமாரை வந்து பார்க்கச் சொல்ல, குமாரும் அதில் ஏறிக்கொள்கிறேன். சென்னை முழுக்கப் பறந்து வண்டலூர் தாண்டிப் போகும் என்கிறான் அபிராம். நான் மீண்டும் ஒரு பக்கக் கயிற்றைப் பிடித்துக் கொள்கிறேன். அபிராம் ராட்சத பலூனில் பறந்தவாறு, கடல் தெரிகிறது என்கிறான், ஸ்பென்ஸர் ப்ளாஸா என்கிறான். பலூன் அப்படியே ஓரிடத்தில் நிற்க, ஒரு பெரிய கட்டடத்தின் மொட்டை மாடியில் அபிராம் இறங்கிக் கொள்கிறான்.

காலேஜ் போகலயாடா என்று நான் கேட்க, ஒரு திரைப்பட ப்ரொமோஷன் என்கிறான். குமாரைக் காணவில்லை. ஆனால் நான் அங்கே இருக்கிறேன். எப்படி வந்தேன் என்பது கனவுக் கடவுளுக்கே வெளிச்சம். அங்கே பல முன்னணி இளைய நடிகர்கள் தங்கள் படங்களை ப்ரொமோட் செய்ய வரிசையாக நிற்கிறார்கள். அபிராம் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறான். நான் எடுக்க மாட்டேன் என்கிறேன். எடுப்பா என்கிறான்.

கனவு கலைந்தது.

பின்குறிப்பு: இந்தக் கனவும் மறந்துவிடக் கூடாது என்று, இரவு 2 மணி வாக்கில் என் மனைவியை எழுப்பி, “கனவு வந்தது, அபிராம் ராட்சத பலூனில் காலேஜுக்குப் பறக்கிறான், நாளை ஞாபகப்படுத்து” என்று சொல்லிவிட்டுப் படுத்தேன். சரியான லூசு என்று திட்டியபடி மீண்டும் தூங்கத் தொடங்கினாள். மறுநாள் காலை, நான் எதிர்பார்த்தது போலவே கனவு மறந்துவிட்டது. “என்னவோ அபிராம் ராட்சத பலூன்னு சொன்னீங்க” என்று சொல்லவும், அனைத்தும் படம் போல ஞாபகத்துக்கு வந்தது.

Share

Devaaaa

தேவாஆஆஆ

நேற்று ஒரு வேலையாக கேப் ஏறி அமர்ந்ததுமே என்னவோ கலவரமாக இருந்தது. காரணம்‌ உள்ளே ஒலித்தது தேவாவின் ஒரு பாடல். தேவா எனக்கு அத்தனை பிடித்தமான இசையமைப்பாளர் அல்ல. அவரது 20 – 30 பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் பல பாடல்கள் ஏனோ எரிச்சலைத்தான் வரவழைத்திருக்கின்றன. நேற்று கேப்-இல் ஒலிபரப்பானது தேவாவின் ஹிட் பாடல்கள் அல்ல. படம் வந்தபோது அவ்வப்போது அங்கங்கே கேட்டு தேவாவே மறந்து விட்ட பாடல்கள். தொடர்ந்து அதே போன்ற பாடல்கள் வரிசையாக வந்தன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் தவிர யார் இசை அமைத்த பாடல்களாக இருந்தாலும் தொடர்ந்து ஐந்தாறு பாடல்கள் கேட்டாலே எனக்கு பிபி ஏறத் தொடங்கும். நேற்று நடந்தது வன்கொடுமை. என்னென்ன பாடல்கள் என்று கூட எனக்கு இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் நான் கல்லூரிக்கு சைக்கிளில் போகும் போதோ அல்லது ஏதோ ஒரு டீக்கடையிலோ நிச்சயம் கட்டியிருக்கிறேன். டிரைவரிடம் பாடலை மாற்றச் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சரி போய்த் தொலையட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50 நிமிடப் பயணம். 11 பாடல்கள். காது புண்ணாகிப் போனது.

அவர் என்னை இறக்கி விடவும் அங்கே இருந்த ஒரு டீக்கடையின் முன்பாக இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து, அந்த மிதமான மழைச்சாரலின் நடுவே, எனது மொபைலில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் ராம நாமம் ஒரு வேதமே பாடலைக் கேட்டேன். கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது. அதிலும் அந்த யேசுதாஸின் குரலும் இளையராஜாவின் இசையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒர் அனுபவம். அடுத்ததாக அழைக்கிறான் மாதவன் கேட்டேன். டீக்கடை மறந்து, டீக்கடையின் முன்னால் நின்று 5 இளைஞர்களும் 5 யுவதிகளும் சிறிய கேக்கை வாங்கி என்னவோ பேசி அர்த்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறைந்து, எனக்குள்ளே ஒரு பிருந்தாவனம் தோன்றி மறைந்தது. மனம் கொஞ்சம் இலகுவானது.

ஒரு வேலையை முடித்துவிட்டு மீண்டும் கேப் பிடித்தேன் மீண்டும் தேவா. இப்படி ஒரு நிலைமை எனக்கு இதுவரை
வந்ததில்லை‌ இந்த முறை தேவாவின் ஹிட் பாடல்கள். அதனால் கொஞ்சம் தாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் 50 நிமிடம். மீண்டும் பதினொரு பாடல்கள்.

நேற்று எனக்கும் தேவாவுக்கும் இப்படி ஒரு ஏழாம் பொருத்தம் அமைந்திருக்க வேண்டாம்.

Share

S.I.R – my views

SIR திருத்தம் மிக முக்கியமானது. இது குறித்து முன்பே பலமுறை பேசி இருக்கிறோம். இன்று வரும் இத்தனை சதவீத ஓட்டுப் பதிவு என்பதெல்லாம் 80% மட்டுமே சரியாக இருக்க வாய்ப்பு. ஏனென்றால், இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாதது, பலருக்கும் இரண்டு இடங்களில் வாக்கு இருப்பது, நாம் நீக்கச் சொல்லி இருந்தாலும் நீக்கப்படாமல் இருப்பது, சில உள்நுழைப்புகள் என்று ஏகப்பட்ட குளறுபடிகள். இதனால் இந்தத் திருத்தம் அவசியமானது.

ஆனால் இதன் நடைமுறைதான் தேவையின்றிப் பலரைக் கலங்கடித்துவிட்டது. இப்போதும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு வேண்டுமென்றே பரப்பப்பட்ட அரசியல் உள்நோக்கமும் ஒரு காரணம் என்றாலும், குழப்பம் இல்லாமல் இல்லை என்பதுதான் உண்மை.

நான் இந்த SIR நடவடிக்கையை எப்படி எதிர்கொண்டிருப்பேன்? இதைத் தேர்தல் ஆணையம் செய்திருக்கவேண்டும் என்று சாமானியனாகக் கருதுகிறேன். அவர்களுக்கு இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் எனக்கும் புரியும். ஆனாலும் இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் ஆணையத்தின் பார்வையில் மட்டுமே பார்த்ததே அன்றி, தமிழக மக்கள் பார்வையில் பார்க்கத் தவறிவிட்டது அல்லது வேறு வழியின்றி அமைதியாக இருந்துவிட்டது என்றே நான் புரிந்துகொள்கிறேன்.

• முதலில் தேர்தல் ஆணையம் மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கவேண்டியது, 2024 வரை வாக்களித்து அதே இடத்தில் அதே முகவரியில் நீங்கள் இருந்தால் இந்த முறையும் வாக்களிப்பதில் ஒரு சிக்கலும் இல்லை என்பதை. அதாவது, தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் உங்கள் பெயர் இருந்து, அதே முகவரியில் இருந்தால் நீங்கள் வாக்களிப்பதில், எஸ் ஐ ஆர் படிவம் தருவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்பது.

• பின்னர் சொல்லி இருக்கவேண்டியது, நீங்கள் முகவரி மாறி இருந்து, பழைய முகவரியில் வாக்களித்துக் கொண்டிருந்தால், உங்கள் பெயர் நிச்சயம் நீக்கப்படும் வாய்ப்பிருக்கிறது, ஆனால் அஞ்சத் தேவையில்லை, உங்கள் பழைய ஐடியையும் புதிய முகவரி நிரூபணங்களையும் கொடுத்து, வரைவுப் பட்டியல் வெளியான பிறகு அப்ளை செய்யலாம், அதுவரை பொறுமையாக இருங்கள் என்பதை.

• ஒருவேளை நீங்கள் முகவரி மாறி இருந்தாலும், அதே தொகுதியில் இருந்தால், இதே படிவத்தில் நீங்கள் நிரப்பிக் கொடுக்கலாம் என்பதை.

• முதலில் சில படிவங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன, உங்கள் வீட்டுக்கு வர 15 நாளாவது ஆகும், அப்படியும் வரவில்லை என்றால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• எப்போது பி எல் ஓ வருவார் என்பதை, யார் யாரெல்லாம் மொபைல் எண்ணை தங்கள் வாக்காளர் அட்டையுடன் இணைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எஸ் எம் எஸ் அல்லது இமெயில் மூலம் தகவல் அனுப்புவோம் என்ற முடிவை எடுத்திருக்கலாம்.

• பி எல் ஓ உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் வீடு பூட்டி இருந்தால், அவர் இன்னும் இரண்டு முறை வருவார், மொத்தம் 3 முறையும் உங்கள் வீடு பூட்டி இருந்தால், அந்தப் புகைப்படத்தை பி எல் ஓ எங்களுக்கு அனுப்புவார். இதையும் சொல்லி இருக்க வேண்டும். சில இடங்களில் இப்படி ஃபோட்டோ அனுப்பச் சொல்லி வாய்மொழித் தகவல் மூலம் கட்டளை இடப்பட்டிருப்பதாக அறிந்தேன். இது நல்ல விஷயம். சும்மா வராமல் வீட்டில் ஆள் இல்லை என்று சொல்வதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

• ஆன்லைனில் தாங்களாகவே முன்வந்து எஸ் ஐ ஆர் பதிவு செய்ய விரும்புவர்கள், ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர் இனிஷியல் உட்பட ஒரே போல் இருந்தால், உங்களுக்கு லாகின் இருந்தால், அதைச் செய்யலாம். இல்லையென்றால் பி எல் ஓ மூலமாக மட்டுமே இதைச் செய்யவேண்டும் என்று சொல்லி இருக்கவேண்டும்.

• மூன்று முறை வந்தும் நீங்கள் இல்லை என்றால், எங்களைத் தொடர்புகொள்ளுங்கள் என்று சொல்லலாம்.

• இந்தப் படிவத்தை எப்படி நிரப்புவது என்று ஒரு வீடியோவை எங்கள் வலைத்தளத்தில் ஏற்றி இருக்கிறோம், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது மொழிகளில் உள்ளது, பாருங்கள் என்று சொல்லலாம்.

• இப்படி எல்லாம் சொல்லி முடித்துவிட்டு, 2002 மற்றும் 2005 சிறப்புத் திருத்தப் பட்டியல் பற்றிச் சொல்லவேண்டும். அப்படிச் செய்யாமல், முதலில் இதைச் சொல்லிவிட்டு, எல்லாரும் குழம்பி, அப்பா அம்மாவின் பெயர், தன் பெயர் எதுவும் 2002 சிறப்புத் திருத்தப் பட்டியலில் கிடைக்காமல் – இதெல்லாம் அவசியமே இல்லை. திருத்தப்பட்டியலில் இருந்தால் நிரப்புங்கள், இல்லை என்றால் அவசியமில்லை என்று சொல்லிவிட்டு, 2004 வரை நீங்கள் வாக்களித்து சரியான முகவரியில் இருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, இது அவசியமில்லை என்று சொல்லி இருக்கவேண்டும்.

• அடுத்து மிக முக்கியமாக, வரைவுப் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யச் சொல்வது.

• வரைவுப் பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு அவர்களது மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்பலாம். இமெயில் அனுப்பலாம்.

இவற்றை எல்லாம் செய்யாமல், எடுத்த எடுப்பில் 2002/2005 சிறப்புப் பட்டியலைப் பற்றி பேசி, 1987க்குப் பின்னர் பிறந்திருந்தால் என்று சொல்லிக் குழப்பி, இன்று என்னடா என்றால் அதை ஃபில்லப் செய்யத் தேவை இல்லை என்கிறார்கள். அவர்களே நிரப்புவார்களாம். எப்படி முடியும்? நம்மாலேயே முடியவில்லை, அவர்களால் எப்படி முடியும்? அன்று மொபைல் இல்லை, ஆதார் இல்லை, பெயரோ கிருஷ்ணனைக் குரங்கு என்று அடித்து வைத்திருந்தார்கள், எப்படி நிரப்புவார்கள்?

மிக முக்கியமாக, ஆளும் கட்சிகள் இதை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்யச் சொல்லவேண்டும். தேர்தல் வரும் நேரத்தில் இப்படி முட்டி மோதிக் கொண்டிருப்பது அவசியமற்றது.

இதை எளிதாக்க என்னவெல்லாம் செய்யலாம்?

• புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைப் படிவத்தை கல்லூரியிலேயே நிரப்பச் சொல்லவேண்டும். இது அனைத்துக் கல்லூரியின் வேலையாக வேண்டும். எப்படி பள்ளிகள் ஆதார் எண் வழங்க ஏற்பாடு செய்தார்களோ அதைப் போல. ஒரு ஊரைச் சேர்ந்த மாணவன் இன்னொரு ஊரில் இருந்தாலும் ஆன்லைனில் அப்ளை செய்து வாக்காளர் அட்டை வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

• இறந்தவர்களுக்கான டெத் சர்ட்டிஃபிகேட் தரப்படும்போது அவர்கள் வாக்குச் சீட்டின் நகல் அதனுடன் சேர்க்கப்பட்டு மாதம் ஒருமுறை இவர்களது பெயர்கள் கட்டாயமாக நீக்கப்படவேண்டும்.

• ஆதார் எண்ணை வாக்காளர் எண்ணுடன் இணைத்தால் பாதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதைச் செய்ய ஏன் இத்தனை யோசனை என்று தெரியவில்லை.

இனி நாம் செய்யவேண்டியது என்ன?

• பி எல் ஓ உங்களிடம் வந்து படிவங்களைத் தருவது வரை ஓயவே ஓயாதீர்கள். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காமல், அவருக்கு ஃபோன் செய்வது, மெசெஜ் அனுப்புவது, அவர் பதில் அளிக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையத்துக்கு மெயில் அனுப்புவது என்று தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருங்கள். வாக்கு உங்கள் உரிமை. அதை சரியாகத் தரவேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. அவர்கள் சொன்ன வேலையை பி எல் ஓ செய்ய வேண்டியது கட்டாயம்.

• பி எல் ஓ ஏக்கப்பட்ட அழுத்தத்தில் இருப்பதால் அவரிடம் அமைதியாக உரையாடலாம். அவர் வேண்டுமென்றே சதி செய்கிறார் என்கிற கான்ஸ்பிரஸிக்குள் போகவேண்டாம்.

• பெரும்பாலான பி எல் ஓக்கள் சரியாக உங்கள் படிவத்தைத் தந்துவிடுவார்கள். ஆனால் சிலர் உங்கள் வீடு பூட்டி இருக்கிறது என்று சொல்ல முற்படலாம். காரணம், ஏன் அலையவேண்டும், ஒரு வாக்குதானே என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதை நாம்தான் முறியடிக்கவேண்டும். ஆனால் 90% பி எல் ஓக்கள் இப்படிச் செய்வதில்லை.

• படிவத்தை நிரப்புவது மிக எளிது. படிவம் கையில் கிடைப்பதுதான் பிரச்சினை. அதை நிரப்புவது ஒரு விஷயமே இல்லை. 2002 / 2005 ஐ மறந்துவிட்டு நிரப்புங்கள்.

• மீண்டும் படிவத்தை அவரிடம் சேர்ப்பது மிக முக்கியமானது.

• வரைவுப் பட்டியல் வந்த உடனேயே உங்கள் வாக்கு இருக்கிறதா என்று உறுதி செய்து ஒரு பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

• வரைவுப் பட்டியலில் இல்லை என்றால், மீண்டும் வாக்காளர் அட்டைக்கு அப்ளை செய்யுங்கள். சரியான முகவரி மற்றும் சான்று இருந்தால் இது மிக எளிதான விஷயம். நம்மால் செய்யமுடியவில்லை என்றால் இ சேவை மையத்தில் சிறப்பாகச் செய்து தருவார்கள்.

நான் இப்போது எந்த நிலையில் இருக்கிறேன்? சிலர் லூசுத்தனமாக நான் என்னவோ பிஜேபிக்கு எதிராகப் பேசுவது போல் உளறினார்கள். அவர்களை எல்லாம் ப்ளாக் செய்துவிட்டேன். வாக்குரிமை இருந்தால்தான் பிஜேபி வரும். இல்லையென்றால் மாங்காய் பறித்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். மாங்காய் மந்திரத்தில் முளைக்காது மோனே!

என் படிவம் (பல குழப்படிக்குப் பிறகு) என் கையில் கிடைத்துவிட்டது. நிரப்பித் தயாராக வைத்திருக்கிறேன். இன்று வாங்கிக் கொள்கிறேன் என்று பி எல் ஓ சொன்னார். இன்று வேலையோ என்னவோ. வரவில்லை. நாளை வாங்கிக் கொள்வார். நாளையும் அவரால் வரமுடியவில்லை என்றால் நானே அவர் இருக்கும் இடத்துக்குச் சென்று கொடுத்துவிடுவேன்.

நம் வாக்கு நம் உரிமை.

Share

SIR initial mess ups in Tamilnadu – 2

என்னை யார் எப்படித் திட்டினாலும் பரவாயில்லை. தொடர்ந்து வாக்காளர்ப் பட்டியல் திருத்தத்தின் குளறுபடிகளைப் பதிவு செய்கிறேன்.

இரண்டு நாள் முன்பாக பிஎல்ஓவிற்கு என் வாக்காளர் அட்டையை அனுப்பினேன். உங்கள் பாகம் எண் 798 என்று அவர் சொன்னார். இல்லை என்றேன். ஆனால் அதுதான் என்று சொல்லிவிட்டார். இன்று மீண்டும் தேர்தல் ஆணையம் வலைத்தளத்துக்குள் சென்று என் வாக்காளர் எண்ணை எடுத்து அதில் பாகம் எண் நான் சொன்னதுதான் இருப்பதை உறுதி செய்து அதே பி எல் ஓவிற்கு ஸ்க்ரீன் ஷாட் அனுப்பி இருக்கிறேன். அவரிடம் இருந்து பதில் வந்ததும் அப்டேட் செய்கிறேன்.

அப்டேட்: பி எல் ஓவை அழைத்தேன். அனைத்தையும் சொன்னேன். மிகவும் பொறுமையாகப் பேசினார். மீண்டும் சரி பார்க்கிறேன் சார் என்று சொல்லி இருக்கிறார்.

தேர்தல் ஆணைய வலைத்தளத்தின் காமெடி அடுத்து.

அதில் உள்நுழைய உங்கள் ஈபிக் எண் அல்லது மொபைல் எண்ணைத் தரலாம் என்றது. என் வோட்டர் ஐடி ஈபிக் எண்ணை உள்ளிட்டதும், இப்படி ஒரு பதிவே இல்லை என்று சொல்லிவிட்டது. மீண்டும் என் மொபைல் எண்ணை உள்ளிட்டதும் ஓடிபி வந்தது. உள் நுழைந்தேன். அங்கே அழகாக என் பெயரும் வாக்காளர் பட்டியலில் என் எண்ணும் உள்ளது. பிறகு ஏன் இப்படி ஒரு பதிவே இல்லை என்று வலைத்தளம் சொன்னது என்பது தெரியவில்லை.

அடுத்த காமெடி.

2005ல் என் ஓட்டு இருந்தது திருநெல்வேலியில். அதைக் கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தால், எந்த பூத்தில் ஓட்டு போட்டீர்கள் எனக் கேட்டது. டவுண் மார்க்கெட் தெருவில் இருக்கும் தாய் சேய் நலவிடுதியில் ஓட்டு போட்டேன். அல்லது ஏதோ ஒரு மெடிகல் செண்டர். அது எந்தத் தெரு என்று தெரியவில்லை. கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியே கண்டுபிடித்தாலும் அந்த வாக்காளர் எண்ணின் பாகம் எண்ணைக் கேட்கிறது. யாருக்குத் தெரியும்?

அப்பா அம்மா பெயரைத் தேடலாம் என்றால் அவர்கள் ஓட்டர் ஐடி வேண்டுமாம். அதற்கு எங்கே போவது? அம்மா அப்பாவே போய்விட்டார்கள், ஓட்டர் ஐடி எப்படி இருக்கும்?

இன்னொரு லின்க்கில் பெயரை வைத்துத் தேடலாம் என்றிருந்தது. ஹரிஹரபிரசன்னா, ஹரிஹர பிரசன்னா, ஹரிஹர ப்ரசன்னா, ஹரிஹரப்ரசன்னா, ஹரிஹரப்ரஸன்னா, ஹரி ஹரப்ரசன்னா, ஹரி ஹர பிரசன்னா என்று ஆயிரம் காம்பினேஷனிலும் என் அப்பா பெயரை ஒரு ஆயிரம் காம்பினேஷனிலும் தேடினாலும், போடா மயிரே என்று சொல்லிவிட்டது வலைத்தளம்.

இந்த முறை எப்படியாவது ஓட்டு போட்டே ஆகவேண்டும் என்பது லட்சியம். போட முடியாமல் போகப் போகிறது என்பது நிச்சயம்.

இதில் கமெண்ட் போடுபவர்களின் காமெடி சொல்லி மாளாது. ரொம்ப எளிது, எனக்கு ஈசியாக இருந்தது, உங்களுக்கு ஃபில்லப் பண்ண தெரியவில்லை, உங்களிடம் சரியான ஓட்டர் ஐடி இல்லை, என் கிராமத்துக்கே எல்லாருக்கும் ஒரே நாள்ல கிடைச்சிருச்சு – இப்படி தோன்றுவதையெல்லாம் எழுதுவது. சிரித்துவிட்டு நகர்கிறேன்.

Share

SIR initial mess ups in Tamilnadu – 1

எஸ் ஐ ஆர் இல் எந்தக் குழப்பமும் இல்லை, எளிதாக இருக்கிறது என்று ஆளாளுக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லட்சம் குழப்பம் இருக்கிறது. யாருக்கும் எதுவும் தெரியவில்லை. கேட்டால் என்ன என்னவோ காரணம் சொல்கிறார்கள். எலக்‌ஷன் கமிஷன் கொடுத்திருக்கும் நம்பருக்கு எல்லாம் போன் செய்து கேட்டாகிவிட்டது. உங்கள் வீட்டுக்கு வரவில்லையா என்று என்னிடமே மீண்டும் கேட்கிறார்கள். தெருவில் கேட்டால், வந்தார்கள், ஆனால் அவர்களிடம் பெரும்பாலான வாக்காளர் பட்டியல் படிவங்களே இல்லை, தெருவின் முக்கில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தார்கள் உங்களுக்குத் தெரியாதா என்கிறார்கள். அவர்கள் சேர் போட்டு அமர்ந்திருந்தால் எனக்கு எப்படித் தெரியும்? ஆனால் அவர்களிடமும் பெரும்பாலான படிவங்கள் இல்லை. ஆனால் தெருக்காரர்கள்‌ அனைவரிடமும் ஓட்டர் ஐடி இருக்கிறது. இவர்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டு விட்டு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் மீண்டும் அப்ளை செய்ய வேண்டும் என்றால், இது என்ன லாஜிக்? என்னவோ பெரிய குழப்படி நடந்து கொண்டிருக்கிறது. இதைச் சரியாகத் திருத்தாவிட்டால் தேர்தலின் போது பொதுமக்கள், கட்சிகள் பாகுபாடு இல்லாமல் கதறப் போகிறார்கள். போகிறோம்.

தற்போது இருக்கும் ஓட்டர் ஐடி சரியாக இருந்தால் அவர்கள் பெயரை நீக்கக் கூடாது. இதை ஏன் செய்யாமல் விட்டார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

2002-2005 பட்டியலைப் பார் என்பதெல்லாம் சென்னை போன்ற நகரங்களுக்கு எப்படிப் பொருந்தும்?

எஸ் ஐ ஆர் எளிய விளக்கம் என்று டிவிகளில் வருகிறது. அதில் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு மட்டும் யாரிடமும் பதில் இல்லை. என்னிடம் ஓட்டர் ஐடி இருக்கிறது, ஆனால் படிவம் கொண்டு வருபவர்களிடம் என்னைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய படிவம் இல்லை. என்ன செய்ய வேண்டும்? மிக சாதாரணமாகச் சொல்கிறார்கள், வரைவுப் பட்டியலைப் பார்த்துவிட்டு மீண்டும் அப்ளை செய்யுங்கள் என்று. அப்படியானால் இத்தனை நாள் என்னிடம் இருந்த ஒட்டர் ஐடியும் நான் போட்ட ஒட்டும் என்ன? இது தவறில்லையா?

அதேபோல் முகவரி மாறி வேறு ஒரு தொகுதிக்குப் போயிருந்தால் அப்போதும் நாம் வரைவுப் பட்டியல் வரும் வரை காத்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு நடைமுறையைக் கண்டுபிடித்தவரை என்னவென்று சொல்வது.

ஓட்டர் ஐடி சரியாக இருந்து, நீங்கள் இருக்கும் வீடும், அங்கே நபர்களும் சரியாக இருந்தால், அதை சரியான வாக்காளர் விவரமாக எடுத்துக் கொள்ளாத வரை இந்தத் திருத்தம் பல குழப்பங்களை மட்டுமே கொண்டு வரும்.

***

எஸ் ஐ ஆர் விஷயமாக இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் தேர்தல் கமிஷன் வலைத்தளத்தில் இருந்து பாஜக பி எல் ஏ அலுவலரின் நம்பரை பெற்றேன். ஒரு பெண் பேசினார். மிகப் பொறுமையாக எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டு யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலைத் தந்தார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவர் தந்த நபரை அழைத்தேன். அவரும் பெண். அவரும் மிகப் பொறுப்பாகப் பேசி யாரிடம் நான் பேச வேண்டும் என்று இன்னொரு தகவலைச் சொன்னார். கூடவே எனது வாக்காளர் அட்டையை வாங்கி யாரிடம் பேச வேண்டும் என்ற தகவலை மீண்டும் உறுதிப்படுத்தினார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு மூன்றாம் நபரை அழைத்தேன்‌ அவர் ஓர் ஆண். அவர் மேலும் சில விவரங்களைச் சொல்லிவிட்டு இன்னொரு நபரிடம் பேசச் சொன்னார் அதற்குள். முதலாம் நபர் மீண்டும் அழைத்து, சரியான நபரிடம் பேசச் சொல்லி இன்னொரு எண்ணைக் கொடுத்தார். அவரும் அவரால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்கினார். இந்த நான்கு பேருமே பிஜேபிக்காரர்கள். அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் 2002க்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால்தான் படிவத்தை நிரப்பிக் கொண்டு வருவார்கள் போல. இல்லையென்றால் வரைவுப் பட்டியல் வந்த பிறகு நாம் அப்ளை செய்ய வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு நான் புரிந்து கொண்ட தலைவிதி.

Share

Badri’s daily news coverage in Kizhakku News YouTube channel

பத்ரி தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் யூடியூப் வீடியோ கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலில் நேற்றில் இருந்து வருகிறது. சுவாரசியமாக இருக்கிறது. காலையில் வாக்கிங் செல்லும் போது இதைப் போன்ற ஒரு வீடியோ மிகவும் உதவியாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் இதைக் கேட்டுவிட்டால் முக்கியமான செய்திகளில் 25 சதவீதமாவது தெரிந்து கொள்ளலாம். அதிலும் பத்ரிக்கு இருக்கும் உலகளாவிய ஞானம் இதில் பல விஷயங்களை நமக்குச் சொல்கிறது.

இதில் சில சுவாரசியமான விஷயங்களைச் செய்யலாம். ஒன்று, அனைத்துப் பத்திரிகைகளிலும் அந்த செய்தி குறித்து வந்திருக்கும் ஹெட்லைனையும் முதல் இரண்டு வரிகளையும் மேம்போக்காக வாசிக்கலாம். இது நேரத்தைக் கூட்டும் என்றாலும் சுவாரசியமாக இருக்கும். ஒரே விஷயத்தைப் பல பத்திரிகைகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்க்க உதவியாக இருக்கும். இதை பத்ரியே செய்வது கடினம் என்றால், கூட ஒருவரை வைத்துக்கொள்ளலாம். நிச்சயம் கூட ஒருவரை வைத்துக் கொள்கிறேன் என்று அவர் நேற்றே சொல்லி இருந்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம், முரசொலி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ்கள் அங்கே இல்லாமல் இருப்பது. முடிந்தால் கி வீரமணியின் பத்திரிகை ஏதேனும் இருந்தால் அதையும் வைக்கலாம். தலைப்புச் செய்திகள் மட்டுமாவது அவற்றிலிருந்து சொல்வது நிச்சயம் சுவாரசியமாகவே இருக்கும்.

அதேபோல் தமிழ்நாட்டளவில் நான்கு செய்திகள், இந்திய அளவில் ஒன்றிரண்டு செய்திகள், வெளிநாட்டு அளவில் ஒரு செய்தி என்று ஒரு வரைமுறை வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் மூன்று நிமிடம் ஒதுக்கினாலே 25 நிமிடங்கள் தாராளமாக வரும். சில சமயங்களில் முக்கியத்துவம் கருதி இவற்றை மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை.

அதேபோல் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கும் ஒரு பெயர் இருப்பது நல்லது. நாளை யூடியூபில் தேடும்போது வசதியாக இருக்கும். இப்போது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பெயர் வைக்கிறார்கள். கூடவே அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொதுப்பெயர் நிச்சயம் தேவை. அதற்கான ஒரு தனி கேட்டகிரி லின்க் இருப்பதும் நல்லதுதான்.

https://youtube.com/@kizhakkunews?si=r-PLn91uMOV7PVvw

Share

Idli Kadai

இட்லிக்கடை – படமாய்யா எடுத்து வெச்சிருக்கீங்க. அடப் பக்கிகளா. முதல் 10 நிமிஷம் நல்லா இருக்கேன்னு நெனச்சேன், அது ஒரு குத்தமாய்யா. வெச்சு செஞ்சிட்டீங்களே.

1960ல‌ இந்தப் படத்தை எடுத்திருந்தா கூட பழைய படமாத்தான் இருந்திருக்கும். ராயன் எடுத்த தனுசுக்கு ஏன் இப்படிப் புத்தி போனது என்று தெரியவில்லை. கதை திரைக்கதை என ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இரண்டே நிமிடத்தில் ஒரு பாடலில் முடிக்க வேண்டிய கதையை 3 மணி நேரம் கண்றாவியாக இழுத்து இழுத்துச்‌ சாவடித்து விட்டார்.

ஃபீல் குட் மூவி என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் பேய்ப் படம் போல இருக்கிறது. ராஜ்கிரனும் அவர் மனைவியும் செத்தும் கடைசிக் காட்சி வரை பேயாக வந்து பாடாய்ப்படுத்துகிறார்கள்.

கொடுமை ஒன்றாய் இரண்டா. சமுத்திரகனி வடிவில் இன்னொரு கொடுமை. தாங்கிக்கொள்ள முடியாத நித்யா மேனன் வேறு.

நமத்துப் போன‌ நாலு‌ இட்லியும் அவிஞ்சி போன அந்த ரெண்டு கரண்டி சாம்பாரையும் தின்றதற்காக ஊரே உயிரைக் கொடுத்து இவன் பின்னால் நிற்குமாம். கேட்பவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுமாம்.

இது எல்லாமே கூட மன்னித்து விடலாம். ஆனால் கருப்பசாமி காலில் சலங்கை கட்டி பவ்யமாகப் போவது இட்லி சுடுவதற்காகத்தான்னு காமிச்சீங்களே, அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.

படம் முழுக்க ஹிந்துக் குறியீடுகள் வருவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா, இல்லை இந்தக் கொடுமையைப் பார்த்தால் பாதி பேர் இன்னும் மதம் மாறி போய் விடுவானே என்று வருத்தப்படுவதா… டெலிகேட் பொசிஷன்.

ஆனாலும் ஒரு சந்தோஷம். இன்பக்குட்டியண்ணாஜியையே தனுஷ் காண்டாக்கிப் பார்த்ததுதான்.

பிகு: இடது கையால் மாவை தள்ளும் இட்லிக்கா இவ்ளோ மவுசு? உவ்வேக்.

Share

Dies Irea

Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. 

பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.

பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு. 

இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.

பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம். 

இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.

Spoiler alert.

படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச்‌ சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.

தமிழில்,‌ கன்னடத்தில்,  ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.

 அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.

மேலதிக எண்ணங்கள்

Full of spoilers

திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.

எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?

திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.

நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.

படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.

நானே சிந்தித்தேன். : )

Share