Sri Raman and Vairamuthu

திகைத்தனை போலும் செய்கை

திகைத்தனை என்ற சொல்லுக்கு, மதி மயங்கிச் செய்தல் என்ற ஒரு பொருளும் உண்டு என்பதைக் கண்டுபிடித்துவிட்டு, தனக்கு ஏற்றவாறு வைரமுத்து அடித்துவிட்டிருக்கிறார்.

தன் மனைவியைப் பிரிந்த ராமன், எது நியாயம் என்று தெரியாமல், மனைவியைப் பிரிந்த மதி மயக்கத்தில் தன் மீது மறைந்திருந்து அம்பெய்துவிட்டான் என்பது வாலி சொல்லும் குற்றச்சாட்டு. பின்னர் வாலியே ராமனைக் கடவுள் என்று புரிந்துகொண்டுவிட்டான். இது உண்மையில், ராமனைக் கடவுள் என்று அறியாமல், தன் மேல் அம்பு பாய்ந்த மதி மயக்கத்தில் வாலி சொல்வது!

உண்மையில் ராமன் மதி மயங்கித்தான் இதைச் செய்தாரா? இல்லவே இல்லை. முதலில் ராமன் சுக்ரீவனை வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறார். ஆனால் அன்று ராமன் வாலி மீது அம்பெய்யவில்லை. வாலி சுக்ரீவனை வெளுத்து அனுப்புகிறான். ஏன் அம்பெய்யவில்லை என்று சுக்ரீவன் கேட்டபோது, இருவரில் யார் வாலி என்று தனக்குப் பிடிபடவில்லை என்று சொல்லும் ராமன், மறுநாள் சுக்ரீவனை ஒரு மாலை அணிந்துகொண்டு வாலியுடன் சண்டைக்குச் செல்லச் சொல்கிறான். இதுவா மதி மயங்கிச் செய்வது? இது சிறப்பாக யோசித்துச் செய்வது. சீதையின் பிரிவால் மனம் வாடிச் சோர்வுற்றுக் கிடந்தாலும் ராமன் மதி மயங்கிக் கிடக்கவில்லை. மதி மயங்கவே இல்லை என்னும்போது, எங்கே புத்தி சுவாதினம் இல்லாமல் போவது?

பின்னர் ஏன் வைரமுத்து போன்றவர்கள் இப்படி வாய்க்கு வந்ததை உளறுகிறார்கள்?

இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். இதே வைரமுத்துவின் இன்னொரு பேச்சு யூடியூபில் கிடைக்கிறது.

அதில் வைரமுத்து சொல்கிறார். கருணாநிதியும் இவரும் லிஃப்ட்டில் போகிறார்கள். லிஃபிட்டில் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஆறாவதாக ஒருவர் லிஃப்ட்டுக்குள் ஏறுகிறார். லிஃப்ட் அதிகப் பளு காரணமாக இயங்காமல் போக, ஒருவர் வெளியேற வேண்டியதாகிறது. பின்னர் லிஃப்ட் கிளம்பவும் கருணாநிதி சொன்னாராம், லிஃப் பாஞ்சலி போல, ஐந்து பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்றாராம். இவர்களுக்குத் தெரிந்த இலக்கியம் இவ்வளவுதான். எதையும் உடலுடன் முடிச்சுப் போடுவது. இதைக் கற்றதே இவர்கள் செய்த சாதனை. எத்தனை பெரிய காவிய நாயகி என்றாலும் உடலும் உடலுறவுமே பிரதானம். ஏனென்றால் இவர்கள் புத்தி எப்போதும் இருப்பது அதற்குள்ளே மட்டும்தான். இவர்களிடம் என்ன தீவிரமான இலக்கிய ஆய்வை எதிர்பார்த்துவிட முடியும்?

வைரமுத்து சொல்கிறார், புத்தி சுவாதீனம் இல்லாமல் ராமன் வாலி வதம் செய்தது தவறில்லையாம், ஏனென்றால், இன்றைய சட்டம் அதைச் சொல்கிறதாம். அடித்துவிடுவது என்றானபின்பு, என்ன வேண்டுமானாலும் பேசலாம். இன்றைய சட்டத்தை அன்றே ராமன் கணித்தானா? விவாதிப்போம்!

மதி மயங்கிச் செய்வதும் புத்தி சுவாதீனம் இல்லாமல் ஒருவன் செய்வதும் ஒன்றல்ல. ராமன் மதி மயங்கிச் செய்ததல்ல வாலி வதம். அது வாலிக்கே தெரியும். புத்தி சுவாதீனம் இல்லாமல் செய்வது என்றுமே ராமனல்ல. இப்படி பேசித் திரியும் வைரமுத்துக்களே.

Share

Ronth Malayalam Movie

ரோந்த் (M) – எப்படியாவது ஒரு நல்ல படம் கொடுத்துத் திகைக்க வைப்பதில் மலையாளிகளை அடித்துக் கொள்ள முடியாது. அப்படி ஒரு நல்ல திரைப்படம் ரோந்த்.

கதை எல்லாம் எதுவும் இல்லை. அல்லது கொஞ்சமே கொஞ்சம் இருக்கிறது. காவல் நிலையத்தில் நடப்பதை அப்படியே காண்பிக்க முயன்ற ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைக்கதையைப் போல, ஒரு ரோந்தின் போது நடப்பதை அப்படியே காண்பிக்கும் வகையிலான திரைக்கதை. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமும் இருக்கிறது. இது சீரியஸான திரைப்படம். திலீஷ் போத்தன் அசரடிக்கிறார். அவரது உடல்மொழி பிரமிப்பூட்டுகிறது. திலீஷ் போத்தனின் கதாபாத்திரத்தை நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள். அவரும் அதைப் புரிந்துகொண்டு பிரமாதமாக நடித்திருக்கிறார்.

திரைப்படம் நெடுக வரும், குழந்தைகளின் மீதான வன்முறை குறித்த காட்சிகள் பதற வைக்கின்றன. படத்தில் இதுவே பிராதனம்.

கடைசி அரை மணி நேரம் பரபரப்பாகச் செல்கிறது திரைக்கதை. முடிவைப் பற்றிப் பலர் நெகடிவாகக் கருத்துச் சொல்லி இருந்தார்கள். ஒருவகையில் அது சரிதான். அதே சமயம், காவல்துறையின் இன்னொரு முகத்தைக் காண்பிக்கும் அந்த முடிவு சரியாக உள்ளதாகவும் தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கவேண்டும். தீலீஷுக்காக.

Share

Saiyaara Hindi movie

சையாரா (H) – நீண்ட நாள்களுக்குப் பிறகு திரையரங்கில் ஒரு ஹிந்தித் திரைப்படம். அதுவும் துபாயில்.

90களின் ஹிந்தித் திரைப்படம் போன்ற ஒரு கதையை, இன்றைய தேதிக்கு மார்டனாக எடுத்திருக்கிறார்கள். கேன்சர், மூளைக் காய்ச்சல் போன்றவற்றையெல்லாம் காட்டிச் சாவடித்தது போல் இந்த நோயை வைத்துக்கொண்டு இன்னும் என்ன பாடுபடுத்த போகிறார்களோ! என்றாலும் இந்தத் திரைப்படம் பார்க்கும்படியாகவே இருக்கிறது.

தன்மாத்ர திரைப்படம் தந்த அளவு மன அழுத்தத்தையும் பயத்தையும் இந்தப் படம் தரவில்லை. அப்படித் தந்துவிடக் கூடாது என்பதில் இயக்குநர் கவனமாக இருந்திருக்கிறார்

மிக அழகான ஒரு கதாநாயகன். முதல் படமாம். நம்பவே முடியவில்லை. அதைவிட அழகான கதாநாயகி. இளமை துள்ளும் கேமரா. அட்டகாசமான இசை எனப் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தமிழின் மூன்றாம் பிறை (ஹிந்தியில் சத்மா) திரைப்படத்தின் எதிர்த் திரைக்கதை என்று இந்தத் திரைப்படத்தின் மூலக் கதையைச் சொல்லலாம். அதிலும் இறுதிக் காட்சியில் கிரிக்கெட் வர்ணனையை ஹீரோ சொல்லும்பொழுது கமலஹாசனை நினைவுகூராமல் இருக்கவே முடியாது.

படத்தின் பலம் என்ன? ஐ லவ் யூ மகேஷ் என்று கதாநாயகி கதாநாயகனைப் பார்த்துச் சொல்லும்பொழுது ஒரு திடுக்கிடல் அனைவருக்குள்ளும் வருகிறது. அதைக் கொண்டு வந்ததில்தான் இந்தப் படத்தின் வெற்றியும் இயக்குநரின் சாமர்த்தியமும் இருக்கின்றன. முக்கியமாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொன்று, படத்தில் வில்லன் அடிதடி ரத்தம் துப்பாக்கி என எதுவும் இல்லை. படம் இயல்பாக ஒரே நேர்கோட்டில் செல்கிறது.

பொறுமையாக நகரக்கூடிய, இளமைத் துள்ளலான படத்தை பார்க்க விரும்புபவர்கள், முக்கியமாக அழகான ஹீரோவுக்காகவும், சிம்ரனையும் ஆலியாவையும் அனஸ்வரா ராஜனையும் கலந்த, அடுத்த பத்தாண்டு ஹிந்தித் திரை உலகை ஆளப்போகும் திறமையான ஒரு கதாநாயகியையும் பார்க்க விரும்பினால் இந்தத் திரைப்படத்தைத் தவற விடாதீர்கள்.

Share

infinix blocked in UAE

அலறவிட்ட அபுதாபி

கடந்த சனிக்கிழமை அன்று அதிகாலை அபுதாபியில் விமானம் தரையிறங்கும் போது மனதுக்குள் ஓர் எண்ணம். ஒரு டைரியில் சில போன் நம்பர்களைக் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாமே என்று நினைத்தேன். அடுத்த நொடியே, இனி ஏன் குறித்து வைக்க வேண்டும், அதுதான் அபுதாபியில் தரையிறங்கி விட்டோமே என்றும் நினைத்துக் கொண்டேன்.

தரையிறங்கிய உடனே ஜெயக்குமாருக்கு மெசேஜ் அனுப்பவில்லை. அவர் தூங்கட்டும். இறங்கி இமிகிரேஷன் அடித்து விட்டு நமது லக்கேஜ் எல்லாம் எடுத்துக் கொண்ட பிறகு அவருக்குச் சொல்லலாம் என நினைத்திருந்தேன். லக்கேஜ் அருகில் வந்தேன். அவருக்கு மெசேஜ் அனுப்ப எனது போனில் இலவச வைஃபை கனெக்ட் செய்தேன். அடுத்த நொடி என்னுடைய போன் லாக் ஆகிவிட்டது. அதாவது தடை செய்யப்பட்டு விட்டது.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. எத்தனை செய்தும் அதை சரி செய்ய முடியவில்லை. லக்கேஜை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன். வெக்கை முகத்தில் அடித்தது.

ஜெயக்குமார் உட்பட யாருடைய எண்ணும் என்னிடத்தில் இல்லை. அங்கே இருந்து வாட்ஸ் அப்பில் இன்னொருவர் போன் மூலம் என் மனைவியை அழைக்கலாம் என்றால், வாட்ஸ் அப் கால் அங்கு தடை செய்யப்பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு என் மனைவி இன்டர்நெட்டை ஆஃப் செய்து வைத்திருந்தாள்.

ஒரு வழியாக ஒருவரைப் பிடித்து இந்தியாவுக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று கேட்டேன். இந்தியர்தான். வடநாட்டுக்காரர். ஏதோ யோசித்தவர் சரி என்று ஃபோனைக் கொடுத்துவிட்டார். என் மனைவிக்கு ஃபோன் செய்து அவளை எழுப்பினேன். விஷயத்தை சுருக்கமாகச் சொல்லி வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் பார் என்று சொல்லித் துண்டித்து விட்டேன்.

அருகில் இருந்த இன்னொரு தொழிலாளி நண்பர் தமிழ்நாட்டுக்காரர் அவருடைய வாட்ஸ் அப்பில் இருந்து என் மனைவி எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப உதவினார். உடனடியாக ஜெயக்குமார் எண்ணை எனக்கு அனுப்பு என்று சொன்னேன். அவள் அனுப்பிய அந்த நம்பரைப் பார்த்துவிட்டு மனனம் செய்து கொண்டேன். மீண்டும் அதே நண்பர் போனிலிருந்து whatsapp மூலமாக ஜெயக்குமாருக்கு இன்னொரு மெசேஜ் அனுப்பினேன். அவர் விமான நிலையத்துக்கு வந்து விட்டதாகவும் ஐந்தாவது கேட்டுக்கு வருகிறேன் என்றும் சொன்னார். உதவிய நண்பரை வழி அனுப்பி வைத்துவிட்டு அவருக்குக் காத்திருந்தேன்.

ஐந்து நிமிடத்தில் வந்து விட்டார் ஜெகே. இது அனைத்தும் நடந்து முடிய 45 நிமிடங்கள் ஆகி இருந்தன. அந்த 45 நிமிடங்களில் என்னை நானே நினைத்து நொந்து கொண்டேன். ஒழுங்காக ஒரு டைரியில் ஃபோன் என்னை எழுதி வைத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் அத்தனை பிரச்சினைகளும் ஒரே நொடியில் தீர்ந்திருக்கும்.

என் ஃபோன் செத்தது செத்ததுதான். எனக்கு எல்லாமே கைவிட்டுப் போனது போல் இருந்தது. அந்த ஃபோனை நம்பித்தான் நான் அபுதாபிக்கே வந்திருந்தேன். என்னுடைய ஃபோன் இன்பினிக்ஸ் ஃபோன். இன்பினிக்ஸ் இங்கே அனுமதி இல்லையாம்.

நாங்களும் இந்த ஃபோனை சரி செய்ய நான்கு ஐந்து கடைகளுக்கு ஏறி இறங்கினோம். யாருமே சரி செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ஃபோன் ஆன் செய்தால் ஸ்கிரீனில் ஒரு மெசேஜ் வந்தது. இப்படிச் செய்தால் உங்கள் ஃபோனை சரி செய்யலாம் என்றது. அதற்கு ஃபோனின் ஆதி முதல் அந்தம் முறை அனைத்தையும் கேட்டார்கள். எப்போது வாங்கியது எங்கே வாங்கியது அதன் இன்வாய்ஸ் எனது போர்டிங் பாஸ் என எல்லாவற்றையும் கேட்டார்கள். எப்படியோ சகலத்தையும் கொடுத்து, அன்லாக் கிளிக் செய்தேன். காத்திருங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

தினமும் மூன்று முறை அன்லாக் ஆகிவிட்டதா என செக் செய்வேன். ஃபோன் அப்படியே பிளாக் மெசேஜை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும். எரிச்சலாகிப் போனது.

மூன்று நாட்கள் பெரும்பாடாகிவிட்டது. ஜெயக்குமாரின் இன்னொரு ஃபோனை எடுத்துக்கொண்டு அதில் எனது நம்பரை போட்டு, மூன்றாவது ஃபோனில் லோக்கல் யு ஐ ஈ நம்பரைப் போட்டு எப்படியோ அடித்துப் பிடித்துச் சமாளித்தேன்.

மூன்று நாள் கழித்து நான்காவது நாள் இன்று எனது ஃபோனை எரிச்சலுடன் ஆன் செய்த போது, அது அன்லாக் செய்யப்பட்டிருக்கிறது. இன்று தான் உயிர் வந்தது போல் இருக்கிறது. இப்போது ஃபோன் பேக்கப் ஆகிக் கொண்டு இருக்கிறது.

ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனமான நடைமுறை எனப் புரியவில்லை. நான் முன்பே துபாயில் நான்கு வருடம் இருந்திருக்கிறேன் என்பதாலும் அபுதாபியில் எப்படியும் ஜெகேவுடன் பேசி விடலாம் என்ற தைரியம் இருந்தாலும் எனக்குப் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் எல்லோருக்கும் இப்படி அமையாது. இதே போல் ஒரு பெண் அல்லது முதல்முறை வருபவர்கள் தனியாக வந்து மொழி தெரியாத ஊரில் மாட்டிக் கொண்டிருந்தால் உண்மையில் நொந்து போய் இருப்பார்கள். இன்பினிக்ஸ் போன் வைத்திருப்பவர்கள் அல்லது வேறு பிராண்ட் போன் வைத்திருப்பவர்கள் அமீரகத்துக்குள் வரும்போது கவனமாக இருங்கள்.

தமிழ்நாட்டின் பொக்கிஷமான எனக்கே இந்தக் கதி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Share

mareesan movie review

மாரீசன் – மோசம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. அருமை என்று கொண்டாடவும் முடியாது. இரண்டே இரண்டு நடிகர்கள் மட்டும் பெரும்பாலும் படம் முழுவதும் வரும்போது ஏற்படக்கூடிய ஒரு அலுப்பு இந்த படத்தில் பெரிய அளவுக்கு ஏற்படாததற்குக் காரணம், இதில் வந்திருக்கும் இரண்டு நடிகர்கள் ராட்சசர்கள். அந்த இரண்டு நடிகர்களைப் பிடிக்கும் என்றால் இந்தப் படம் நீங்கள் தவற விடக்கூடாதது.

வடிவேலு தன் எல்லை மிகாமல் தெளிவாக ஒரு கோடு போட்டுக்கொண்டு அதற்குள்ளேயே பிரமாதப்படுத்தி இருக்கிறார். இதற்கு முந்தைய மாமன்னன் திரைப்படத்தில் வந்ததைவிட இதில் இன்னும் விரிவான பாத்திரம். நன்றாகச் செய்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக்கில் அவர் அழும் காட்சி குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது.

ஃபகத் ஃபாஸில் பற்றித் தனியே சொல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு நொடியும் முகபாவத்தில் அசரடிக்கிறார். இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் இழுவையாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்பாகிறது. இடைவேளை வரை கவிதை என்றால் இடைவேளைக்குப் பிறகு அந்தக் கவிதை கொஞ்சம் தொலைந்து போனாலும் கூட, இறுதிவரை பார்க்க முடிகிறது.

படத்தின் லாஜிக் ஓட்டைகள் என்று எடுத்துக் கொண்டால் பெரிய பட்டியலே போடலாம். அதிலும் போலீசின் பங்கு இத்தனை கேவலமாக இருந்திருக்க வேண்டியதில்லை. அதனால்தானோ என்னவோ கோவை சரளாவை போலீஸாகப் போட்டு சிரிப்பு போலீஸ் என்று சிம்பாலிக்காகக் கட்டியிருக்கிறார்கள் போல. கோவை சரளாவுக்கு நடிக்கவே வரவில்லை.

நேத்து ஒருத்தரை ஒருத்தர் பார்த்தோம் பாடல் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் வரும் இரண்டு நடிகர்களும் பிரமாதப்படுத்தி விட்டார்கள்.

ஃபகத் ஃபாசிலுக்காகவும் வடிவேலுக்காகவும் பொறுமை இருந்தால் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

பின்குறிப்பு: படத்தின் மையக்கதை இதுதான் என்று முன்பே தெரிந்திருந்தால் நான் படத்துக்குப் போயிருக்கவே மாட்டேன். இது ஒரு ரோடு ஸ்டோரி, அதிலும் ஃபகத்தும் வடிவேலும் நடித்திருக்கிறார்கள் என்பதற்காகவே போனேன். பொதுவாக எனக்கு இதுபோன்ற கதை தரும் படபடப்பு சொல்லி மாளாதது. கதை தெரியாததால் மாட்டிக் கொண்டு விட்டேன்.

Share

Pradhosha and Makudesuvaran

பிரதோஷம் என்பதற்கு மகுடேசுவரன் அளித்த விளக்கம் தொடர்பான பரிமாற்றங்களைப் பார்க்கிறேன்.

மகுடேசுவரன் முக்கியமான தமிழ் அறிஞர். 2000ம்களில் சுஜாதாவுடனான மின்னம்பலம் அரட்டையின்போதே அவர் பல ஆங்கில வார்த்தைகளுக்குத் தமிழ் வார்த்தைகளை அள்ளி வீசிக்கொண்டிருப்பார். பல எனக்குச் சிரிப்பாக இருக்கும். ஆனாலும் அவர் எந்தக் கிண்டலையும் பொருட்படுத்தாமல் அவர் மனதுக்குப் பட்டதைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இது மிக முக்கியமான உந்துசக்தி. தேவையான ஒன்று. இது இல்லாவிட்டால் யாராலும் சாதிக்க முடியாது.

ஸ்டம்புக்கு முக்குச்சி, ஃபேஸ்புக்கிற்கு முகப் புத்தகம் போன்றவை எனக்கு ஒவ்வாதவை. அதேசமயம், இது போன்ற தனித் தமிழ் தீவிர ஆர்வலர்கள் இல்லாவிட்டால் தமிழ் மொத்தமாக அழிந்துவிடும் அபாயம் உண்டு என்பதாலும், இவர்கள் தோற்றுவிக்கும் பல வார்த்தைகளில் சில ஊன்றி நின்றாலும் (பேருந்து, தொடர்வண்டி போன்றவை) அவை தமிழுக்குச் செழுமை சேர்ப்பவை என்பதாலும், இவர்கள் மீது எனக்கு எப்போதும் (கிண்டலைத் தாண்டிய) மரியாதை உண்டு. பல முறை இதைச் சொல்லி இருக்கிறேன். மகுடேசுவரன் மீதும் அப்படியே.

ஆனால் பிரதோஷம் என்கிற வார்த்தை குறித்து மகுடேசுவரன் சொல்லி இருப்பது தவறான விளக்கம். அதைச் சரியாக மற்றவர்கள் சுட்டிக் காட்டும்போது, அதில் ஓர் ஏளனத் தொனி கலந்துவிட்டது உண்மைதான் என்றாலும், அந்தத் தொனியைக் கண்டிக்கவேண்டியது மகுடேசுவரனின் தனிப்பட்ட உரிமைதான் என்றாலும், அதைத்தாண்டி, விளக்கத்தை ஏற்றுக்கொள்வது அவசியம்.

பற்பல வார்த்தைகளுக்குத் தமிழில் அருவி போலக் கொட்டிக்கொண்டிருக்கும் போது ஒன்றிரண்டு தவறுவது இயல்பு. அதை ஏற்றுக் கொள்வதே சிறப்பு.

எனக்கு வருத்தம் தந்தது அல்லது ஆச்சரியம் தந்தது அல்லது எரிச்சல் தந்தது, மகுடேசுவரனின் சிறிய சறுக்கல அல்ல, அதற்கான ஆதாரமாக தினமலர் யூடியூவை அவர் காட்டியதுதான். மகுடேசுவரன் தனது திறமையும் உயரமும் என்ன என்பதை அவரே இன்னும் உணரவில்லை என்று நினைக்க வைத்துவிட்டது.

பாலகுமாரன் ஒரு கதையில் எழுதிய நினைவு. தமிழ் தெரியாத ஒரு பத்திரிகையாளர் திருமனம் என்று எழுத, அது திருமனம் அல்ல, திருமணம் என்று பலர் சுட்டிக்காட்ட, பத்திரிகையாளர் அதற்கு விளக்கமாக, “திருமணம் என்பது சரியாக இருக்க முடியாது. இரு மனங்கள் இணைவது என்பதால் திருமனம் என்பதே சரியாக இருக்கமுடியும்” என்றாராம்.

சிறிய தவறை அப்போதே ஒப்புக்கொண்டு அதைத் தாண்டிப் பல தூரம் பறப்பதே அறிஞர்களுக்கு அழகு.

Share

Ear bud missing

காசிக்குப் போனால் என்னெல்லாம் நடந்தால் நல்லது என்று கதை ஒன்று சுற்றும். ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்வார்கள். அதில் ஒன்று, காசியில் நீயாக எதையும் தொலைக்கக் கூடாது, ஆனால் அதுவாக தொலைந்து போனால் நல்லது.

நானும் கண்டுகொள்ளாத மாதிரி விலை குறைந்த எதையாவது தொலைத்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் துரதிர்ஷ்டம், ஒன்றுகூட தொலையவில்லை. செந்தூர டப்பா தொலைந்து விட்டது என்று நினைத்தேன். ஏர்போர்ட்டில் பார்த்தால் பைக்குள் பத்திரமாக அது ஒளிந்து கொண்டிருக்கிறது. இப்படியாக எதையுமே இயல்பாகத் தொலைக்காத‌ பாவியாகிவிட்டேன். இந்தப் பாவத்தைத் தொலைக்க மீண்டும் காசிக்குப் போக வேண்டும், அதுவும் ஜெயக்குமார் செலவில். ப்ச்.

நேற்று அலுவலகத்தில் என்னுடைய இயர் பட்ஸ் டப்பியைத் திறந்து பார்த்தால், அதில் ஒன்றுதான் இருக்கிறது. இன்னொன்றைக் காணவில்லை. இத்தனைக்கும் அதை காசியில் ஒரு முறை கூட பயன்படுத்திய நினைவில்லை. கடவுளே வந்து நான் அறியாத போது ஒன்றை எடுத்துக் கொண்டு இந்தப் பாவியைப் புனிதனாக்கி விட்டார் என நினைக்கிறேன். இனி ஒற்றைக் காதுடன் வலம் வர வேண்டியதுதான்.

பின்குறிப்பு: நான் யாரையும் சந்தேகப்படவில்லை

Share

Book shops in Tirunelveli in 2000

பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது வீட்டில் பொதுப் புத்தகங்கள் படிக்க அனுமதியில்லை. சிறுவர்களுக்கான நாவல்கள், சிறுவர் மலர், அம்புலிமாமா, கோகுலம், ரத்னபாலா, பாலமித்ரா, பூந்தளிர் படிக்கலாம். அதற்கு மேல் சுஜாதாவோ ஜெயகாந்தனோ படிக்க அனுமதி தரமாட்டார்கள்.

மதுரையில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, 12க்கு திருநெல்வேலி வந்தபோது மெல்லப் படிக்க ஆரம்பித்தேன். ஏனோ யாரும் அதிகம் கண்டிக்கவில்லை. ஜெயகுமார் ஶ்ரீனிவாசன் அப்போது எங்கள் வீட்டில் சில மாதங்கள் தங்கி இருந்தார். அப்போது பாலகுமாரனை நிறையப் படிக்க ஆரம்பித்தேன். வாராவாரம் நாவல் டைம் போன்றவற்றில் தொடர்ந்து எழுதினார். வியாழக் கிழமை ஆனால் பாலகுமாரன் என்றானது. ஒரு மணி நேரத்தில் படித்துவிடலாம். அன்று முழுக்க அந்த நாவலின் யோசனையாகவே இருக்கும்.

+2 தேர்வு வரவும் மீண்டும் பள்ளிப் புத்தகங்கள். அந்த விடுமுறையில் நிறையப் புத்தகங்கள். 1996 வாக்கில் பிரகாஷ் ராஜகோபால் விஷ்ணுபுரம் தந்தார். அவரால் வாசிக்க முடியவில்லை என்று அப்போது சொன்ன நினைவு. நான் முழுக்க பைத்தியம் பிடித்தது போல வாசித்து முடித்தேன்.

கல்லூரியில் முழுக்க ஒரே பாலகுமாரன் புராணம்தான். கல்லூரியில் இருந்த நூலகத்தின் உதவியாளர்களில் ஒருவர், ‘பாலகுமாரனுக்கு ரெண்டு பொண்டாட்டி, அது தெரியுமா ஒனக்கு’ என்றார். அவராவது வெளிப்படையாகச் செய்கிறார், எத்தனையோ பேர் எத்தனையோ வைத்திருக்கிறார்கள் என்று சொன்னேன்.

1996ல் வேலைக்கும் சேர்ந்திருந்தேன். டேக் கம்பெனியின் TERC நூலகத்தில் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன், தி.ஜா புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. அத்தனையையும் படித்து முடித்தேன். பின்னர் கி.ரா. அங்கே இருக்கும் தொழிற்சங்க நண்பர்களிடம், நிறைய இலக்கியப் புத்தகங்களை எழுதித் தந்து, வாங்கி வைக்கச் சொன்னேன்.

தொடர்ந்து ஜெயமோகனின் ரப்பர் நாவலை விலைக்கு வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். விலைக்கு நாவலை வாங்கி வாசிப்பதில் ஒரு கிக் இருந்தது. தோரணையாக உணர்ந்தேன். வீ ஆர் எலைட் மொமென்ட். புத்தகங்கள் வாங்கும் கிறுக்கு பிடித்துக்கொண்டது. பாலகுமாரன் அந்நியப்படவும் தொடங்கினார்.

+2 வகுப்புத் தேர்வில் நான் பெற்ற மதிப்பெண்களுக்காக இரண்டு பை நிறையப் புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்திருந்தேன். இப்போது வீட்டில் வைக்க இடமில்லை என்னும் அளவுக்குப் புத்தகங்கள் சேர ஆரம்பித்தன.

சம்பளம் கைக்குக் கிடைத்ததும் புத்தகம் வாங்குவேன். அப்போதுதான் பின் தொடரும் நிழலின் குரல் என்றொரு புத்தகம் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். சிற்றிதழ்கள் வாசிக்கும் பழக்கத்தில் இவையெல்லாம் எனக்குத் தெரிய வந்தன!

அந்தப் புத்தகத்தை வாங்க திருநெல்வேலியில் அத்தனை அலைந்தேன். அப்போதெல்லாம் இவை போன்ற இலக்கியப் புத்தகங்கள் கொஞ்சமாவது கிடைத்த இடம், அருள்நந்தி சிவம் புத்தகக் கடை. ஜங்ஷனில் கண்ணம்மா தெருவில் இருந்தது. அடிக்கடி அங்கே போவேன். பின் தொடரும் நிழலின் குரல் என்றதும், என்னை வினோதமாகப் பார்த்தார்கள். எழுதி வெச்சிட்டுப் போங்க என்றார்கள். ஜெயமோகன் பெயரை அவர்கள் கேள்விப்பட்டிருக்கவே இல்லை. சுஜாதா புக் தம்பிக்கு காமிம்மா என்றார் கடைக்காரர். “நல்லா எழுதுவாரு தம்பி!” அடிக்கடி அந்தக் கடையில் பி தொ நி கு என்று ஒரு நோட்டில் எழுதி வைப்பேன். அந்த நோட்டை என்னைத் தவிர யாரும் வாசிக்கவில்லை என நினைக்கிறேன்.

மதிதா பள்ளிக்கு அருகில் போடப்பட்டிருந்த நிரந்தரப் புத்தகக் கண்காட்சி என்ற பெயரிலான என் சி பி எச் கடையில் கேட்டேன். ஜெயமோகன் அப்படி ஒரு புத்தகம் எழுதியதே இல்லை என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்தார்கள். வேறு புத்தகங்கள் காண்பித்தார்கள். சாகித்ய அகாடெமியின் புத்தகங்கள் விலை குறைவாக இருந்தன. சந்தோஷமாக வாங்க ஆரம்பித்தேன். என்னை அசர வைத்த புத்தகம், இரண்டாம் இடம்.

இப்படியே ஆறு மாதம் அலைந்தேன். ஒவ்வொரு முறையும் வேறு எதாவது புத்தகம்தான் வாங்குவேன். பின் தொடரும் நிழலின் குரல் மட்டும் கிடைக்கவே இல்லை. அந்தச் சமயத்தில் மதிதா பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்தது. நான் பார்த்த முதல் புத்தகக் கண்காட்சி அதுதான். மலைப்பாக இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு சிறிய அளவிலான கண்காட்சி மட்டுமே. ஒவ்வொரு கடையில் கேடலாக் வாங்கிக் குறித்து வைத்துக்கொண்டு, நான்கைந்து முறை போய் புத்தகங்கள் வாங்கினேன். அங்கேயும் பி தொ நி கு கிடைக்கவில்லை.

சகுந்தலா இண்டர்நேஷனல் பக்கத்தில் உள்ள ஒரு தெருவில் ஒரு புத்தகக் கடை இருக்கிறது என்றார்கள். அங்கே போனால் அது பள்ளிகளுக்கான புத்தகங்கள் சப்ளை செய்யும் கடை. போனதற்கு, பெயருக்காக ஒரு புத்தகம் வாங்கினேன்.

டவுனில் சியாமளா புக் செண்டர், ஈகிள், பாளையம்கோட்டையில் ஈகிள், ஜங்ஷனில் இன்னொரு புத்தகக் கடை என்று நான் போகாத இடமே இல்லை. யாருக்கும் பி தொ நி கு என்றால் என்னவென்றே தெரியவில்லை.

மீண்டும் என் சி பி எச் நிரந்தரப் புத்தகக் கண்காட்சிக் கடை. அங்கே இருந்தவர் என் மேல் வருத்தப்பட்டு, அருகில் இருந்த எஸ் டி டி பூத்தில் இருந்து யாருக்கோ பேசினார். அடுத்த மாதம் எப்படியோ பி தொ நி கு பிரதி கையில் கிடைத்தது.

டவுணில் மங்கையர்க்கரசி பள்ளிக்கு அருகில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவிலுக்கு எதிரே ஒரு ஜெராக்ஸ் கடை போன்ற ஓர் இடத்தில் ஒருவர் சில புத்தகங்களையும் விற்றார். அங்கே பழைய, விற்காத இலக்கியப் புத்தகங்கள் தூசி அப்பிக் கிடந்தன. இந்திரா பார்த்தசாரதி தொகுத்த தேர்ந்தெடுத்த ஆதவன் சிறுகதைகளா அல்லது பொதுவான சிறுகதைகளா என்று நினைவில்லை, அங்கேதான் வாங்கினேன்.

திருநெல்வேலியில் நல்ல இலக்கியப் புத்தகக் கடைகள் என்றுமே இருந்ததில்லை. எப்படித்தான் இத்தனை பேர் அத்தனை இலக்கியம் படித்து அத்தனை அத்தனை இலக்கியம் எழுதினார்களோ! ஒருவேளை நிறையப் படிக்காமல் நிறைய எழுதினார்களோ என்னவோ. ஒருவேளை, நிறைய நன்றாக எழுதவேண்டும் என்றால் நிறையப் படிக்கக் கூடாதோ என்னவோ! திருநெல்வேலிக்கே இந்த நிலை என்றால், கோவில்பட்டி சாத்தூர் எல்லாம் நினைத்துப் பாருங்கள்.

தூத்துக்குடியில் பேருந்து நிலையத்துக்கு எதிரே ஒரு பெட்டிக் கடையில்தான் சிற்றிதழ்கள் வாங்குவேன். என்ன என்ன பெயரில் எல்லாமோ புத்தகங்கள் இருக்கும். அனைத்தையும் வாங்குவேன். பாதிப் புத்தகங்களில் அவர்களது திருகு மொழியே புரியாது. ஆனாலும் அதில் ஒரு போதை இருந்தது. நாம் அதையெல்லாம் படித்தால் ஒரு பெருமை என்ற ஜம்பம் வந்தது. ஆனால் அந்தக் கடையிலும் இலக்கியப் புத்தகங்கள் கிடைக்காது.

சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் சொன்னால் அவர்களுக்கு முடிந்தபோது வாங்கி அனுப்புவார்கள். இல்லையென்றால், நாம் எதிர்பார்க்கும் அந்தப் புத்தகங்கள் கைக்குக் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

தூத்துக்குடியில் வேலை பார்த்த வரை, இரண்டே வேலைகள்தான். ஒன்று சினிமா பார்ப்பது, இன்னொன்று புத்தகம் படிப்பது. புத்தகங்கள் வீட்டில் சேர ஆரம்பித்தன. வைக்க இடமே இல்லை என்றானது. புத்தகங்கள் வைக்க ஓர் அலமாரி செய்ய ஆசைப்பட்டு, ஓர் ஆசாரியை அழைத்துச் செய்தேன். மர அலமாரிக்குக் கண்ணாடிக் கதவுகள் போட்டு அட்டகாசமாகச் செய்து கொடுத்தார்.

வர்த்தமானன் பதிப்பகம் மலிவு விலையில் புத்தகங்கள் விற்க ஆரம்பித்தார்கள். கல்கியின் அத்தனை நாவல்களையும், கம்ப ராமாயணம் முழுத் தொகுதியும் வாங்கி அந்த அலமாரியில் அடுக்கி வைத்தேன். பார்க்க வண்ணமயமாக அழகாக இருந்தது. அலை ஓசை, பொன்னியின் செல்வன் எல்லாம் படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் இரண்டு நாள்களில் படித்து முடித்தேன்.

நெல்லையில் நான் போய்ப் பார்க்காத புத்தகக் கடைகள் இருக்க வாய்ப்பில்லை. புத்தகத்துக்கென்று பிரத்யேகமான கடைகள் பெரிய லாபத்தைத் தருவதில்லை. எனவே வேறு பல பொருள்களையும் சேர்த்து வைத்து விற்கிறார்கள். அவை விற்க ஆரம்பிப்பதால், அந்தக் கடை பல்பொருள் அங்காடி ஆகி விடும். புத்தகங்களை மீண்டும் அங்கே தேட வேண்டி இருக்கும். இதுதான் எங்கேயும் எப்போதும் நடக்கும்.

துபாயிலும் தமிழ்ப் புத்தகங்களைத் தேடி வெட்டியாக அலைந்திருக்கிறேன். இலக்கிய இதழ்கள் எப்போதாவது கையில் மாட்டும். மஞ்சரியின் பழைய இதழை அங்கே வாங்கி வாசித்திருக்கிறேன். பொக்கிஷமாக அங்கே கிடைத்தது இனிய உதயம் நாவலிதழ். அதில் மொழிபெயர்ப்பு நாவல்கள் அல்லது குறுநாவல்கள் வந்துகொண்டே இருக்கும். மலையாளக் குறுநாவல்களை மொழிபெயர்த்து சுரா என்று ஒருவர் எழுதுவார். முகுந்தனின் குறுநாவல்களை அவர் மொழிபெயர்த்திருந்தார் என நினைவு. முகுந்தன் எழுதிய, கம்யூனிஸம் தொடர்பான ஒரு குறுநாவலை வாசித்த நினைவு இன்னும் இருக்கிறது. இந்த இனிய உதயம் இதழை வெளியிட்டது நக்கீரன் போல. பெரிய ஆச்சரியம்தான்.

திருமணமான புதிதில் 2004ல் சென்னைக்கு வந்தபோது, புதிய புத்தக உலகம் கடையை திநகரில் பார்த்து, அதிசயத்து உறைந்து நின்றேன். அதுவரை நான் அப்படி ஒரு தமிழ்ப் புத்தகக் கடையைப் பார்த்ததில்லை. முழுக்க ஏஸி. உள்ளே நுழைந்ததும் மோர். புதிய புத்தகங்களின் சுவரொட்டிகள். அசந்து போய்விட்டேன். ஆனால் வாடிக்கையாளர் சேவை மோசமாக இருந்தது. பிரச்சினையில்லை. புத்தகங்கள் கொட்டிக் கிடந்தன. நிறைய வாங்கினேன். இன்றளவும் கடை அனுபவமாக நல்ல அனுபவத்தைத் தந்தது இந்தக் கடை மட்டுமே.

ஆன்லைன் வரவும் கடைகள் பக்கமே போனதில்லை என்றாகிவிட்டது!

Share