அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்துக் குவிப்பு பற்றிய செய்திகள்

ஊடகங்களின் இருட்டடிப்பு இது. முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடக் கூட இவர்களால் முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் உள்ள மோகம். பணமே அரசியலை நிர்ணயிக்கிறது.

கேஜ்ரிவால் செய்தியை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு, அண்ணாமலை சொன்னதை 2ம் பக்கத்தில் போட்டிருக்கிறது தமிழ்த்திசை. அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்னும் முக்கியச் செய்தியை தமிழ்த்திசை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மற்ற செய்தித்தாள்களின் உட்பக்கங்களை நான் பார்க்கவில்லை.

தந்தியும் தினகரனும் ஒரே குரலில் முதல் பக்கத்தில் பேசுகின்றன.

தினமலர் ஒன்றே தைரியமாக, முதல் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தினமணியின் முதல் பக்கத்தை இணையத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்தேன். கொடுமை. இதற்கு எதற்கு தினமணி?

பத்திரிகைகள் எல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் நேர்மை, உண்மை என்றெல்லாம் பேசுகின்றன? அசிங்கமாகவே இருக்காதா? செய்தியைச் சொல்லிவிட்டு, அதை எதிர்த்து பல கட்டுரைகளைக் கூட வெளியிடட்டும். அது அவர்களின் கொள்கைச் சாய்வு. அதில் தவறில்லை. ஆனால் செய்தியையே சொல்லாமல் சாய்ஸில் விடுவதெல்லாம் எவ்வளவு அசிங்கம்!

***

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார். டிவிட்டரிலும் இதுவே.

வானதி ஶ்ரீனிவாசன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது செயல்பாடுகளைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளன. டிவிட்டரில் விஷு ஆஷாம்ஷகள் என்று மலையாளத்திலும் வாழ்த்து வெளியிட்டிருக்கிறார் வானதி.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இல்லை.

சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் இன்று என்ற செய்திகளையும், அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற முக்கியமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா பற்றிச் சொல்லவேண்டும். எஸ்.வி.சேகருக்கான விருதில் ராஜா கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய வருத்தம். ஆனால்,  ஹெச்.ராஜா ஒருவரே அண்ணாமலையின் சொத்துப்பட்டியல் பற்றிய குறிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார். ஹெச்.ராஜா மதிப்பிற்குரியவர்.

இந்நிலையில், மற்ற பத்திரிகைகள் பாஜகவின் செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது என்று சொல்ல பாஜகவினருக்குத் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.

Share

அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம்.

யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு பிசினஸ் மீட் என்ற அளவில் மட்டுமே போயிருக்கிறார்கள். பணத்தையும் மதுவையும் அதற்காகத்தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நியாயத்துக்காக எதையுமே வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். இதுவரையும் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படையாக உணர வைத்திருக்கிறார்கள்.

முன்பொரு சமயம், இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து மது தரவேண்டிய சூழல் வந்தது. அவரைத் தனியே அழைத்து மதுவைத் தந்தபோது, அவர் பதற்றத்துடன் சொன்னார், இதெல்லாம் வேண்டவே வேண்டாம், உள்ள வைங்க என்று. அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் திமுக அனுதாபி. இப்போதும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனக்கு அவரை இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தியபோது, நான் அவரைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். மது விஷயத்தைத் தவிர மற்றவற்றைச் சொன்னேன். இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க, எனக்கு எதுவுமே நினைவில்லை என்றார். இன்றும் அவர் இதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்பது தெரியாது என்பதால் அவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். மதுவோ பணமோ எதுவும் வாங்காத உறுதிப்பாடு உள்ள பத்திரிகையாளர்களே முக்கியம். ஆனால் இவர்களால் பொருளாதார ரீதியாக ஜெயிக்க முடியுமா என்று தெரியவில்லை.

யூ ட்யூபர்கள் என்னும் பத்திரிகையாளர்களை அண்ணாமலை இடது கையில் டீல் செய்தது சரிதான். இவர்கள் அதற்குத்தான் லாயக்கு.

ராஜவேல் நாகராஜன், தான் ஒரு ஸ்டிரேடஜிஸ்ட்டாகத்தான் சென்றதாகச் சொல்கிறார். நம்பும்படியாகத்தான் இருக்கிறது. கட்சி அபிமானமே இல்லாமல் வெறும் ஸ்டிரேடஜிஸ்ட்டாக இருப்பது தொழில்முறை சார்ந்த ஒன்று. ஒரு கட்சியின் ஆதரவாளனாகவும் இருப்பேன், இன்னொரு கட்சிக்கு ஸ்டிரேடஜிஸ்ட்டாகவும் இருப்பேன் என்றால் அது சரிப்பட்டு வராது. இதையும் ராஜவேல் நாகராஜன் தெளிவாகவே சொல்கிறார். என்ன ஒன்றென்றால், நேற்று நாம் தமிழர், இன்று பாஜக என்றால், நாளை என்னவாகவும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. அங்கேதான் எந்தக் கட்சிக்கு ஸ்டிரேஜிஸ்ட்டாகப் போகலாம் என்னும் திறப்பும் இருக்கிறது.

அரசியல் வீடியோ வெளியிடும் யூ ட்யூபர்கள் வெறும் காற்றில் கம்பு சுத்திக் கொண்டிருக்கவில்லை. பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வ்யூ இருந்தால் பணம் கிடைக்கும் என்று நம்பி இத்தொழிலை ஆரம்பிப்பவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள். வ்யூ இருந்தால், அரசியல் பணத்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு சானலை ஆரம்பிப்பவர்களே புத்திசாலிகள்.

இந்த யூ ட்யூபர்கள் யாருக்காகவும் நான் சில்லரையை சிதறவிட்டதில்லை என்பதைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். இவர்கள் கேள்வி கேட்ட விதம் பிடித்திருந்திருக்கிறது. இவர்கள் வெளியிட்ட வீடியோ சில பிடித்திருந்திருக்கிறது. அதைத் தாண்டி யாரையும் நான் கொண்டாடவில்லை. தெய்வம் காத்திருக்கிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்தால், நம்பிப் பேச வைத்து, ஒருவரை டிராப் செய்வது மிக எளிது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பொதுவெளியில் வெறும் ஐயாயிரம் ரூபாயை வாங்கினால் கூட அது தவறு என்கிற பொதுப்புத்தி இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலும் வெறும் பதினைந்தாயிரம் ரூபாயும், அதுவும் ஒரு தொழில்முறை கன்சல்டிங்கிற்காக வாங்கிய ஒன்று, இத்தனை பேரை காலி செய்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நேர்மையான பொய்யர்கள். இவர்கள் அது கூட இல்லை.

Share

திரைப்படங்கள்

ன்னா தான் கேஸு கொடு (M)

படம் மிகவும் சீரியஸான படமாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தொடங்கினேன். ஆரம்பக் காட்சிகளிலேயே ஒருவிதமான ப்ளாக் காமெடி போன்று முயன்றிருந்தார்கள். நமக்கு இது ஒத்துவராதே என்று தோன்றியது. சரி, முழு படத்தையும் பார்ப்போம் என்று பார்த்தேன்.

சில நம்ப முடியாத காட்சிகளைக் கடந்துவிட்டால், சில எரிச்சலான காமெடிகளைக் கடந்துவிட்டால், சந்தேகமே இல்லாமல் இத்திரைப்படம் அற்புதமான அனுபவம்.  

குஞ்சாக்கோ போபனுக்கு இத்திரைப்படம் ஒரு மைல்கல்லாக அமையும். உடல்மொழியும் மேக்கப்பும் நடிப்பும் அற்புதம். ஆனால், நீதிபதியாக வரும் குன்ஹி கிருஷ்ணன் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். இருவருக்கும் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்து பின்னர் திருந்திய ஒரு சாமானியன், அசுர பலம் பொருந்திய அரசை எதிர்த்து சட்ட ரீதியாகப் போராடுகிறான். நீதிமன்றக் காட்சிகள்தான் படம் முழுக்க. ஆனால் படம் தொய்வில்லாமல் போகிறது. காரணம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. அரசு வக்கீல்களும், குற்றம் சுமத்தப்பட்டவனின் வக்கீலும், நாம் பார்ப்பது நிஜ நீதிமன்றக் காட்சிகளையோ என்னும் எண்ணத்தை வரவழைக்கிறார்கள்.

ஒரு நீதிபதி ஏன் ஒரு குற்றவாளிக்கு இத்தனை இடம் தரவேண்டும், எப்படி நினைத்தபோதெல்லாம் ஒரு திருடனால் அமைச்சர் முதல் முதல்வர் வரை சந்திக்க முடிகிறது என்பதையெல்லாம் மறந்துவிட்டால், இத்திரைப்படம் நம்மை அள்ளிக்கொள்ளும்.

சாலையில் இருக்கும் ஒரு பள்ளத்துக்கு எப்படி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் என்பதைத் தாண்டி,  வழக்கு தொடுக்க முடிந்து அதில் அமைச்சருக்குத் தண்டனையும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் இப்படத்தை அணுகவேண்டும்.

நடிகர்களின் நடிப்பாலும் வித்தியாசமான மேக்கிங்காலும் நம்பவேமுடியாத திரைப்படத்தைக் கூட பேரனுபவமாக மாற்ற முடியும் என்பதை இந்த மலையாளத் திரைப்படம் ஆயிரமாவது முறையாக நிரூபிக்கிறது.

மாளிகப்புரம் (M)

உன்னி முகுந்தனின் அழகான முகத்துக்காகப் பார்க்கலாம். மோடி, மோகன் பகவத்துக்கெல்லாம் நன்றி போட்டு ஆரம்பிக்கும் தைரியம் கேரளா வரை வந்துவிட்டது.

முன்பு இதே போல் நந்தனம் என்றொரு மலையாளப் படம் கேரள பக்தர்களைக் கட்டிப் போட்டது. எனக்கும் அந்தப் படம் ஓரளவு பிடித்திருந்தது. குருவாயூரப்பன் மனிதனாக வரும் படம். தமிழில் தனுஷ் நடித்து வெளிவந்து மோசமான தோல்வியைத் தழுவியது. சீடன் என நினைக்கிறேன்.

மாளிகப்புரம் மிகவும் எளிமையான கதையாகிவிட்டது பலவீனம். முதல் அரை மணி நேரம் படுத்தல். அந்தச் சின்ன பெண்ணும் பையனும் வாவ்.

சின்ன பெண்ணை முறைத்துப் பார்க்கும் வில்லன் காட்சிகளைப் பார்க்கவே முடியவில்லை. வில்லன் தமிழன். இதற்கு முன்பு நான் பார்த்த கூமன் படத்திலும் வில்லன் தமிழன். நாம் பிறருக்குச் செய்வதையே பிறர் நமக்குச் செய்வார்கள்.

கூமன் (M)

ஜித்து ஜோசப்பின் மலையாளத் திரைப்படம். அட்டகாசமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, இடைவேளை வரை புருவத்தை உயர்த்த வைக்கிறது. அதற்குப்பின் எங்கெல்லாமோ அலைபாய்கிறது. ஏன்டா இந்தக் கொடுமையைப் பார்த்தோம் என்ற எரிச்சலில் அப்படியே நிறுத்தி விடலாமா என்னும் அளவுக்கு கோபத்தை வரவழைக்கிறது‌. வேஸ்ட் ஆப் டைம். திருடன் மணியனாக வரும் ஜாஃபர் இடுக்கியின் நடிப்பு பிரமாதம்.

21 Hours (K)

எனக்கு ஏனோ தனஞ்செய் பிடிக்கும். ஆனால் இந்தக் கன்னடப் படம் எல்லா வகையிலும் திராபை. இப்போதும் தனஞ்செய்யைப் பிடித்தே இருக்கிறது. ஆனால் இப்படி இன்னும் நான்கு படங்கள் பார்த்தால் பிடிக்காமல் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.

Share

சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சி பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியாக மாறி இருப்பது மிகவும் முக்கியமான முன்னெடுப்பு. இதைச் செய்த அரசுக்கும் ஆர்வலர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளும்.

டெல்லி புத்தகக் கண்காட்சியில் பெரும்பாலும் பிசினஸ் டூ பிசினஸ் என்பதாகவே விற்பனை இருக்கும். அதில் இப்படி காப்புரிமை வாங்கி பல மொழிகளில் மொழிபெயர்க்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். இன்றைய பதிப்புலகம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான விவாதங்களும் கருத்தரங்கங்களும் நடந்துகொண்டே இருக்கும். பல மொழிகளைச் சேர்ந்த பல முன்னணி பதிப்பாளர்கள் பேசுவார்கள். அதிலிருந்து ஓர் ஒட்டுமொத்தச் சித்திரம் கிடைக்கும்.

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இதை இந்த ஆண்டுதான் தொடங்கி இருக்கிறார்கள். எதிர்வரும் ஆண்டுகளில் இவையெல்லாம் இன்னும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். அப்போது நம் பதிப்புலகம் சார்ந்த இந்திய மற்றும் உலக அளவிலான பார்வை விரிவு பெறும். இது சென்னைக்கு எப்போதோ நிகழ்ந்திருக்க வேண்டும். சரி, இப்போதாவது தொடங்கி இருக்கிறதே என மகிழ்ச்சியடையலாம். அரங்கு அனைவருக்கும் ஒதுக்குவதில் இருந்து, அரங்கைப் பதிப்பகங்கள் தங்கள் வசதிப்படி அமைத்துக் கொள்ளலாம் என்பது வரை இந்தப் பார்வை விரிவடைய வேண்டும்.

இந்தியப் புத்தகக் கண்காட்சிகளில் பிஸினஸ் டூ கஸ்டமர் எனப்படும் வியாபாரத்தில், எனக்குத் தெரிந்து சென்னை முதல் இரண்டு இடங்களுக்குள் இருக்கும் என நினைக்கிறேன். சென்னையில் புத்தகக் கண்காட்சிக்குத் திரளும் மக்கள் வெள்ளம் நிஜமான ஒரு சாதனை. 40 வருடங்களுக்கும் மேலாக இதை வளர்த்திருக்கிறார்கள். இந்நேரம் இது உலகப் புத்தகக் கண்காட்சியாகவும் முதலிடத்துக்கு வந்திருக்கவேண்டும். நம் விரிவான பார்வைக் குறைபாட்டால் இதை இத்தனை நாள் தவற விட்டிருக்கிறோம்.

இன்று பல பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்கள் பல மொழிகளுக்கும் செல்வதையும், பல மொழிகளில் இருந்து தமிழுக்குப் புத்தகங்கள் வருவதையும் குறிப்பிட்டுப் பதிவிட்டு மகிழ்கிறார்கள். எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் ஒன்று இருக்கிறது. இன்றைய மகிழ்ச்சி என்பது, ஒரு தொடக்கத்தின் மகிழ்ச்சி மட்டுமே. பல படிகள் தாண்டியே ஒரு புத்தகம் இன்னொரு மொழியில் வெளி வரும். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் புத்தகங்கள் கொண்டு வந்து நாம் பழகிவிட்டோம். எனவே அதே போல் எல்லா மொழிகளிலும் வந்துவிடும் என்று எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. பெரிய வேலை இது. 1700 ஒப்பந்தங்கள் போடப்பட்டால் அதில் 100 புத்தகங்கள் ஆங்கிலம் அல்லாத வேற்று மொழியில் வந்துவிட்டாலே அது சாதனைதான்.

எனவே ஒப்பந்த மகிழ்ச்சியோடு நின்றுவிடாமல், அதைத் தொடர்ந்து செயல்படுத்திக் காண்பிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. பிற மொழிகளில் வரும்வரை தொடர்ந்து ஊக்கத்துடன் செயல்பட சக பதிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.

Share

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சி 2023

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான்கு நாள்கள் இருந்ததில் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. இவை அனைத்தும் என் தனிப்பட்ட புரிதல்கள். உங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

* பிரிண்ட் ஆன் டிமாண்ட் தொழில்நுட்பம் புத்தகத் தொழிலைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும். நன்மைகளும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. பெரிய பதிப்பகங்களைப் பொறுத்தவரை இந்த பிஓடி ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் போடவேண்டிய முதலீட்டைக் குறைத்திருக்கிறது. பெரிய அளவிலான புத்தகத் தேக்கமே இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறது.

* சிறிய பதிப்பகங்களைப் பொறுத்தவரை நினைத்த நேரத்தில் அடித்துக்கொள்ளலாம் என்ற ஆசுவாசத்தைக் கொண்டு வந்திருக்கிறது. பிஓடி அதன் உச்சத்தில் இருக்கிறது.

* இன்று ஒருவர் பிஓடி அச்சகத் தொழிலைத் தொடங்கி மார்க்கெட்டில் நிலவுவதைவிடக் கொஞ்சம் குறைவாகக் கொடுத்தாலும் போதும், பெரிய அளவில் வெற்றி பெறலாம். புத்தக அச்சுக்கு பிஓடி அத்தனை தேவையானதாக மாறி இருக்கிறது. பெரிய தேவை, ஆனால் நிறைவேற்றித் தர குறைவான பிஓடி அச்சகங்கள் என்ற நிலை நிலவுகிறது.

* பிஓடி தொழில்நுட்பத்தால் எந்த ஒரு எழுத்தாளரும் தன் புத்தகத்தைப் பதிப்பிக்க முடிகிறது. இதன் பாதகம் என்று பார்த்தால், குவிந்து கிடக்கும் புத்தகங்களில் யார் எந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தது என்று நினைவில் வைக்க முடிவதில்லை. எந்த எழுத்தாளர் எழுதியது என்பதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடிவதில்லை. ஒரு பதிப்பாளர் மூலம் வரும்போது இந்தச் சிக்கல் குறைவாக இருந்தது.

* இதனாலேயே இன்று ஒரு பதிப்பாளரை விட ஒரு விற்பனையாளர் முக்கியத்துவம் பெறும் சூழல் உருவாகிறது. ஒரு பதிப்பாளருக்குத் தெரிந்திருக்கும் ஒரு புத்தகத்தைவிட ஒரு விற்பனையாளருக்கு அதைப் பற்றித் தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

* ஒப்பீட்டளவில், கொரோனாவுக்கு முன்பிருந்த விற்பனை இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. என்னிடம் பேசிய அனைத்துப் பதிப்பாளர்களும் இதை ஒப்புக்கொண்டார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். புத்தகங்கள் பரவலாகப் பல பதிப்பகங்கள் மற்றும் எழுத்தாளர்களில் சுய உருவாக்கம் மூலம் வருவதால் விற்பனையும் பிரிந்து போயிருக்கலாம். ஆன்லைன் மூலம் வாங்குவது அதிகரித்திருப்பதாலும் இருக்கலாம்.

* தொடர்ச்சியாக 16 நாள்கள் புத்தகக் கண்காட்சி என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அலுப்பைத் தரும் விஷயம் இது. ஒவ்வொரு முறையும் 11 நாள்கள் போதும் என்று பேசினாலும், புத்தகக் கண்காட்சி நடத்தும்போது 16 நாள்களில் வந்து முடிந்துவிடுகிறது. இன்னொரு கோணத்தில் யோசித்தால், இந்த நாள்களில் இத்தனை விற்பனை கூட சாதாரணமாக ஒரு கடையிலோ அல்லது பதிப்பகத்திலோ இருப்பதில்லை என்பதால், 16 நாள்கள் இருந்துவிட்டுப் போகட்டும் என்றும் சொல்லலாம்.

* பொங்கலை ஒட்டிய சனி ஞாயிறுகளில், பொங்கல் அல்லாத சனி ஞாயிறு அளவுக்குக் கூட்டம் இருக்காது. இந்த முறையும் அப்படியே. பலர் ஊருக்குப் போயிருப்பார்கள். எனவே அடுத்த சனி ஞாயிறு இரண்டு நாள்கள் புத்தகக் கண்காட்சியின் ஒட்டுமொத்த விற்பனையை இறுதி செய்யும் நாள்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். எனவே பதிப்பாளர்களின் விற்பனை குறித்த கருத்து இறுதி வடிவம் பெறுவது, எதிர்வரும் சனி ஞாயிறு விற்பனையைப் பொறுத்தே அமையும்.

* நடிகர்கள் மட்டுமே செலிபிரிட்டி என்கிற நிலை மாறி, யூ ட்யூப் சானல்களில் வருபவர்களும் செலிபிரிட்டியாகி இருக்கிறார்கள். மக்கள் இவர்களுடன் ஆர்வமாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

* சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு மெனக்கெட்டு வந்து மக்கள் புத்தகங்களை வாங்கக் குவிவது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான ஒன்றுதான். புத்தகம் வாங்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன. எப்படியும் நமக்குத் தெரிந்த அல்லது நாம் முடிவுசெய்துவிட்ட புத்தகங்களைத்தான் வாங்கப் போகிறோம். இருந்தாலும் மக்கள் இத்தனை வெயிலில், இத்தனை வியர்வைக்கிடையில் புத்தகம் வாங்க வருகிறார்கள். இந்த வகையில் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒரு மாபெரும் சாதனைதான்.

* பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நல்ல முயற்சி இது. சரியாகத் திட்டமிட்டால் பத்து வருடங்களுக்குள் இது மாபெரும் சாதனையாக மாறும் வாய்ப்பிருக்கிறது. இந்த மூன்று நாள்களோடு இந்தப் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியை மறந்துவிடாமல், தொடர்ந்து இதைப் பற்றி யோசித்து, செயலாற்றி வருவதும் முக்கியம். நீண்ட கால நோக்கில் பதிப்பாளர்கள் பலருக்கு இது பயனுள்ளதாக அமையும்.

Share

லவ் டுடே – அசட்டுக் காதல்

லவ் டுடே – தமிழகமெங்கும் ‘பரபரப்புடன்’ பேசப்பட்ட படம். ஏழு மாதம் கழித்து ஒரு படம் பார்க்கிறேன். சும்மா வெச்சி செஞ்சி அனுப்பினார்கள். இப்படத்தில் பிராமணர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பற்றிப் பின்னர் பார்க்கலாம். இது இல்லாமல், ஒரு திரைப்படமாக இது எந்த லட்சணத்தில் வந்திருக்கிறது என்று முதலில் பார்த்துவிடலாம்.

நவீன விக்கிரமனாக பிரதீப் ரங்கநாதன் உருவாகி இருக்கிறார். அசட்டு காமெடி, கிறுக்குத்தனமான திரைக்கதை, கொஞ்சம் கூட ஆழமே அற்ற மேம்போக்கான காட்சிகள், வாய்க்கு வந்ததைப் பேசும் வசனங்கள், மோசமான மேக்கிங் – இப்படித்தான் கிட்டத்தட்ட படம் முழுக்க. யுவன் சங்கர் ராஜா ஏன் எஸ்.ஏ.ராஜ்குமார் போல இம்சை அளித்திருக்கிறார் என்றே புரியவில்லை. எஸ்.ஏ.ராஜ்குமார் லாலலலா என்பதை குரலில் போட்டே கொல்வார் என்றால், யுவன் படம் முழுக்க எதோ ஒரு இசையை ஓடவிட்டே கொன்றிருக்கிறார். அதிலும் நகைச்சுவைக் காட்சிகளில் இசை தாங்கமுடியாத இம்சையாக இருக்கிறது. விக்கிரமனின் பாணியைப் போலவே, பாஸிட்டிவான ஒரு செய்தியைச் சொல்லி, புல்லரிக்க வைத்து அனுப்புகிறார்கள். திரையரங்கில் பலர் அழவும் செய்கிறார்கள். நான் ஒருவன் மட்டுமே தாங்கமுடியாமல் நெளிந்துகொண்டிருந்தவன் என நினைக்கிறேன்.

விக்கிரமன் படத்தில் நிஜமான ஒரு நேர்மறை அம்சம் இருக்கும். அது யாரையும் மனம் நோக வைக்காமல் இருப்பது. இந்த பிரதீப் அப்படியுமில்லை. பிராமணர்கள் மேல் ஏன் அப்படி ஒரு இளக்காரம், கோபம்!

இப்படத்தில் வரும் கதாநாயகி ஏன் பிராமணப் பெண்ணாக இருக்கவேண்டும்? கதைக்கும் ஜாதிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பிராமண அப்பாவாக வரும் சத்யாராஜுக்கு நடிக்கவே வரவில்லை. சத்யராஜும் இன்னும் சில கதாபாத்திரங்களும் பிராமணப் பேச்சு வழக்காக நினைத்துக்கொண்டு பேசும் வசனங்களைக் காதால் கேட்கமுடியவில்லை. மலபார் போலிஸில் சத்யராஜ் மலையாளம் கலந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசிய பாலக்காட்டுத் தமிழின் கொடூரம் இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போது திடீர் திடீர் என்று இத்திரைப்படத்தில் பேசும் பிராமணப் பேச்சு வழக்கும் அதனுடன் சேர்ந்துகொள்கிறது.

வக்கிரமான ஒருவனைக் காண்பிக்கும்போது அவன் நெற்றியில் வம்படியாக விபூதி இருப்பது போல் காண்பிக்கிறார்கள். ஆனால் பிராமணப் பெண்ணோ சாதாரண பொட்டு கூட பல காட்சிகளில் வைப்பதில்லை.

ஒரு பையன் ஹோம குண்டத்தில் சிறுநீர் கழிக்கிறான். காமெடி என்று நினைத்து இக்காட்சியை இயக்கிய இயக்குநரை என்ன சொல்ல!

அந்தச் சிறுநீரை லெமன் சர்பத்தில் பிடிக்கும் ஹீரோ, யாரோ ஒருவரிடம் தரும்போது, அதைக் குடிப்பவரைப் பார்த்து ‘குடிங்கோ’ என்று சொல்கிறார். ஹீரோ பிராமணரல்ல. தான் காதலிக்கும் பெண்ணிடம் கூட அவர் பிராமண வழக்கில் பேசுவதில்லை. ஹீரோ வீட்டுக்கு எத்தனையோ அபிராமணர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் சிறுநீர் கலந்த எலுமிச்சை சர்பத்தைக் குடிப்பவர் ஒரு பிராமணர். அசட்டு நகைச்சுவையாக, 1960களிலேயே சலித்துப் போன, ‘என்ன உப்பா இருக்கு’ என்ற வசனமும் உண்டு.

பல காட்சிகள் தொலைக்காட்சிகளில் வரும் மெகா சீரியலின் தரத்தில்தான் இருக்கின்றன. குறிப்பாக, யோகி பாபுவின் டிராக். அதை நல்ல டிராக் என்று நம்பி எப்படித்தான் எடுத்தார்களோ!

பிராமணரான சத்யராஜ் கண்டிப்பானவர் என்பதைக் காண்பிக்கும் காட்சிகளும் இதே ரகத்திலானவையே. தண்ணீர் கேன் போடுபவருக்குத் தருவதற்காக ஒரு ரூபாய்க்கு அவர் தேடுகிறாராம். அதனால் கண்டிப்பானவராம். கோபமானவராம். இத்தனை கண்டிப்பான கோபமான அப்பா என்னவோ செய்யப் போகிறார் என்றால், அவர் செய்யும் வேலை கிறுக்குத்தனமானதாக இருக்கிறது.

இத்தனை அவலட்சணங்களையும் தாண்டி எது இந்தப் படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது? இரண்டு விஷயங்கள். கதாநாயகன் மற்றும் நாயகியின் நடிப்பு. அசரடிக்கிறார்கள். இவர்கள் இருவரின் நடிப்பு மட்டும் இல்லையென்றால், இந்தக் கிறுக்குத்தனத்தைத் தாங்கிக்கொண்டிருக்கவே முடியாது. இரண்டு மொபைலை மாற்றுவதன் மூலம் ஒன்றும் ஆகிவிடாது. இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த ரௌடிக்கேத்த பொண்ணு அந்த ரௌடிதான் என்ற முடிவுக்கு வேண்டுமானால் வரலாம்.

இதில் ஒரு பையன் மாங்கொட்டையை ஊன்றி வைத்துவிட்டு தினமும் எடுத்துப் பார்க்கிறான். 20 வருடம் கழித்து அது வளர்ந்து மரமாக நிற்கிறதாம். இது பாஸிடிவ் வைபாம். இதை நம்பி, அந்தப் பையன் மாங்கொட்டைக்கு தண்ணீர் ஊற்றுவதை ஏதோ அவார்ட் படம் போலக் காட்டிச் சாவடிக்கிறார்கள். செத்தோம் பிழைத்தோம் என்று தப்பித்து வீடு வந்தேன்.

Share

Arathu and Deepavali crackers

அன்புள்ள அராத்து எழுதிய போஸ்ட் தொடர்பாக:

* நான் வெடியும் போட்டுவிட்டு, நாய்களுக்கு உணவும் அளித்தத்தைப் பற்றி எழுதும்போது, கேங்க் ரேப் செய்துவிட்டு ஜூஸும் கொடுத்தது போல என்று எழுதி இருக்கிறார். இந்த மாதிரி ஒப்பீடெல்லாம் அபத்தமானது. அவர் சொன்ன விஷயத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், நான் சொன்னதன் காரணம், இதைப் பார்த்து நாலு பேராவது ஞாபகம் வந்து நாய்களுக்கு உணவு வைக்கமாட்டார்களா என்பதற்காகத்தான்.

* இது அராத்துவுக்கு அல்ல. பொதுவாக. ஒருநாள் வெடியில் நாய் பயப்படுகிறதே என்று குய்யோ முறையோ எனக் கதறிவிட்டு, மறுநாளே கறிக்கடையில் பிரியாணிக்கு வரிசையில் நிற்பவர்களின் கருத்துகளைப் பொருட்படுத்த எந்த அவசியமும் இல்லை.

* இன்று அதே நாய்கள் அதே அன்புடன் அதே சுதந்திரத்துடன் சுற்றிக்கொண்டிருக்கின்றன. வெரிஃபைட். அதே நாய்கள் அதே சுதந்திரத்துடன் அடுத்த இரண்டு மாதங்களில் குட்டிகள் போடும். டோன்ட் வொரி மேன்!

* இதில் என்னைக் குறிப்பிட்டுச் சொல்ல அராத்து சொன்ன காரணம், அரசின் உத்தரவை மதிப்பவன் என்பதால்! ஆம், உத்தரவை மதிப்பவந்தான். ஆனால், அதற்காக என்னவோ நான் புனித ஆத்மா ரேஞ்சுக்கு நினைக்க வேண்டாம். போலிஸ் பார்க்காவிட்டால் சிவப்பு விளக்கின் போதே பைக்கை ஓட்டும், ஒவ்வொரு சமயம் ஹெல்மேட் போடாமல் வண்டி ஓட்டும், குறுகுறுப்புடன் எளிய மீறலைச் செய்துவிடும் சாமானியந்தான். இந்த விதிமீறலும் அப்படித்தான். உடனே, ‘மேச்சா மாமியாரைத்தான் மேப்பேன்’ என்ற பழமொழியைப் போல பேசுவது காமெடியாக இருக்கிறது. கொலை செய்வதும், பாலியல் பலாத்காரமும், தெருவில் ஒரு கடையில் பத்து இட்லியைத் திருடிவிடுவதும் எல்லாமே குற்றங்கள்தான். சட்ட மீறலகள்தான். ஆனால் எல்லாமே ஒரே தரத்தனாவை அல்ல. அதற்காகத்தான் குற்றத்துக்கு ஏற்ப தண்டனைகள். தெருவில் எச்சிய எப்படி நீ துப்பலாம், ஒனக்கும் கேங் ரேப் பார்ட்டிக்கும் நாளைக்கு தூக்கு என்றால் என்ன அர்த்தம்? ஷாக்க கொறைங்கய்யா!

* இதில் சாரு பற்றி அவர் சொல்லி இருப்பது. என்னவோ இலக்கியவாதிகள் என்றால் அப்பாவிகள், ஒன்றுமே தெரியாதவர்கள் என்னும் பில்டப்பைக் குறைங்க சாமிகளா. வெடிக்காக பொங்கறதைவிட இதைப் படிக்கத்தான் ஆயாசமா இருக்கு.

* அடுத்த வருடமும் வெடி வெடிக்கப்படும். கேங் ரேப் எக்ஸாம்பிளர்கள் தயாராக இருக்கலாம்.

Share

Uzhavan magan

உழவன் மகன் திரைப்படம் பார்த்த அன்பவம் பற்றி கணேஷ் பாலா அவரது நினைவுகளைச் சொல்லி இருந்தார். நானும் இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நிறைய நாள்களாகவே நினைத்திருந்தேன்.

1987வாக்கில், கல்லுப்பட்டியில் இருந்த ஒரு தாத்தா நீண்ட நாள் இழுத்துக்கொண்டிருந்து ஒருநாள் செத்துப் போனார். அதைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. எப்படி? ஒரே கொண்டாட்டமாக! பாட்டும் வெடியும் அமர்க்களப்பட்டன. அவரது காரியம் நடக்கும் 16ம் நாள் இரவில் டெக் எடுத்து ஸ்பீக்கர் வைத்து மூன்று திரைப்படங்கள் போடப் போவதாக ஊரெல்லாம் பேச்சு. அந்த நாள் வருவதற்காகக் காத்திருந்தோம்.

அந்த நாளும் வந்தது. அவரது வீட்டுக்கு முன்னே ஒரு கலர் டிவியை வைத்து, பெரிய ஸ்பீக்கர் செட்டை போட்டு, படங்களைப் போட்டார்கள். முதலில் போட்டது உழவர் மகன். ஊரே வாய் பிளந்து பார்த்தது. ஏனென்றால், அந்தத் திரைப்படம் கல்லுப்பட்டி தியேட்டருக்கு வர எப்படியும் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகி இருக்கும். அதற்குள் ஒரு புதுப்படத்தைப் பார்க்கிறோம் என்றால் சும்மாவா? அதுமட்டுமல்ல, அந்தக் காலத்தில் அந்தப் படத்தின் பிரமாண்டமும் அதன் இசையும் அமர்க்களமாக இருந்தன.

இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து ஒரு மணி வாக்கில் படம் முடிந்தது. அடுத்து ஒரு பத்து நிமிடம் பிரேக் விடப்பட்டது. மீண்டும் ஒரு திரைப்படம். அதுவும் விஜயகாந்த் படமே. சட்டம் ஒரு விளையாட்டு என நினைக்கிறேன். அந்தப் படம் முடிய அதிகாலை ஆகிவிட்டது. இரண்டு புதுத் திரைப்படங்களைப் பார்த்த ஆச்சரியம் அந்த வாரம் முழுவதும் இருந்தது எனக்கு.

இப்படி இரண்டு அல்லது மூன்று படங்களை டெக் எடுத்துப் போடுவது அப்போதெல்லாம் சகஜம். டெக் வாடகையை மிச்சப்படுத்த இப்படிச் செய்வார்கள். மூன்று படங்கள் போட்டால் ஒரு படம் மட்டும் பார்க்கலாம் என்று அம்மா சொல்வார். ஆனால் அன்று பொதுவெளியில் போட்டதால் இரண்டு படங்கள் பார்க்க அம்மா அனுமதித்துவிட்டார். உழவன் மகன் திரைப்படத்தைப் பற்றி யார் பேசினாலும், இந்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வரும்.

இதில் அந்தத் தாத்தா இறந்தது எனக்குள் கொஞ்சம் அதிர்ச்சியையும் உண்டாக்கி இருந்தது. அதை ஒரு சிறுகதையாகவும் எழுதி வைத்தேன். இதற்கான சுட்டியை கமெண்ட்டில் போட்டிருக்கிறேன். படித்துப் பார்க்கவும்.

Share