ஏன் திமுக ஒழிக்கப்படவேண்டும் – மாரிதாஸ்

கீழே உள்ளவை மாரிதாஸ் சொல்பவை. நான் சொல்பவையல்ல. நான் அப்பாவி. அனைத்துத் திட்டுகளும் அவருக்கே செல்லட்டும் என்று நியாயமாக ஒதுங்கிக்கொள்கிறேன். மாரிதாஸ் பொரிந்து தள்ளும் வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=-hH4qcsIO4E&feature=youtu.be

திமுக ஏன் அழிக்கப்படவேண்டும் என்பதற்கு மாரிதாஸ் சொல்லும் காரணங்கள்:

  • அரசு ஊழியர்களுக்கு அநியாயத்துக்கு சம்பள உயர்வு தருவதால்.
  • தாசில்தார்கள், வி ஏ ஓ உடன் இணைந்து அரசு மற்றும் கோவில் நிலங்களை அபகரித்ததற்காக.
  • திமுக ஒரு ரௌடி கட்சி. நில அபகரிப்பு செய்பவர்களுக்கு, நில மாஃபியாக்களுக்குப் பிடித்த கட்சி திமுக.
  • சபரிமலை விவகாரத்தில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றது திமுக. ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஹிந்துக்களை திமுக அசிங்கப்படுத்துகிறது. டாவின்சி கோட் படத்தைத் தடை செய்யும் திமுக, உண்மையான தீர்ப்பை ஆதரிக்கிறது!
  • ஹிந்து மதத்தின் திருமண மந்திரங்களை அசிங்கமானவை அருவருப்பானவை என்று சொன்னவர் ஸ்டாலின். ஆனால் இதே வார்த்தைகளை இஸ்லாமியர் மற்றும் கிறித்துவ சடங்குகளைக் குறித்து அவரால் சொல்லமுடியுமா?
  • மின் தடை. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் மின் தடை இருந்தது திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான்!
  • திமுகவுக்குக் கொள்ளை அடிக்கத் தெரியுமே ஒழிய, நிர்வாகத் திறமை கிடையாது.
  • திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாகிவிட்டது.
  • சமச்சீர்க் கல்வியைப் புகுத்தியது. இதனால் கல்வியே நாசமாகிவிட்டது.
  • அரசுக் கல்லூரிகளில் துணைவேந்தர் துவங்கி அனைத்துப் பணிகளிலும் அரசியலை நுழைத்தது திமுகதான்.
  • கச்சத்தீவு, காவிரி வாரியம், ஈழத் தமிழர் படுகொலை விவகாரங்களில் தமிழர்களுக்குத் தீங்கிழைத்தது திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எம்பிக்கள் எதுவுமே பேசவில்லை. இதை எதிர்த்துப் பேசியவர்கள் ஃபார்வர்ட் ப்ளாக்கின் மூக்கையா தேவர் மற்றும் யூனியன் முஸ்லிம் லீக்கின் முஹம்மது ஷரீஃப் மட்டுமே. இவர்களது எதிர்ப்பை ஆதரித்த ஒரே தேசியத் தலைவர் வாஜ்பாய். கச்சத்தீவை இழந்ததற்கு காரணம், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்.
  • பொறுப்பற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது திமுக.
  • திமுக ஒரு கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். இவர்களது நோக்கம் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதும் அதைப் பிரிப்பதும்தான்.
  • திமுகவைப் போல யாராலும் வசனம் பேசி ஏமாற்றமுடியாது. பொய் பொய் பொய் மட்டுமே இவர்களது கொள்கை. திராவிடம் 2.0 என்பதே பொய்ப் பிரசாரம்.
  • பட்டியல் இனத்தவரின் ஜாதியை ஒழிக்கப் பயன்பட்டது அண்ணல் அம்பேத்கரின் சட்டமே ஒழிய, ஈவெரா அல்ல. திமுக ஜாதியை ஒழித்தோம் என்று சொன்னது பொய். அது பட்டியல் இனத்தவரை ஏமாற்றச் சொல்வதுதான்.
  • கடைசியாக: நான்கு முறை முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரின் அண்ணன் மளிகைக்கடை வைத்திருக்கிறார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் உறவினர்கள் முதல் கொள்ளுப்பேரன் வரை பல கோடி சொத்து உள்ளது.
  • நேர்மையானவர்களுக்கு வாக்களிப்போம். திமுகவுக்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு சிங்கப்பூராகும் என்று கனவு காண்பதற்கு உரிமையே கிடையாது. டாட்.
Share

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share

ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும்

மார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம்! முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.

பேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது!

கதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.

நயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி! கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.

யோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.

கருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.

மிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.

இந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:

நன்றி:
https://oreindianews.com/?p=4294

Share

பெயர் சொல்லி அழைத்தல்

ஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.

ஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா? சம வயதே என்றாலும் அழைப்போமா? பெண்களை அழைப்போமா? அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர்களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்மை இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.

இன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.

கருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.

நேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.

எனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.

நன்றி ராகுல் ஜி!

Share

7ம் வகுப்பு மாணவர்களின் தமிழ் எழுதும் அறிவு – ஒரு சாம்பிள்

ஓர் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தாங்களே எழுதியது. 73 மாணவர்களில் (சந்திப் பிழையைக் கவனத்தில் கொள்ளாது) ஒரு வார்த்தை கூடப் பிழையின்றி எழுதியவர்கள் 7 பேர். 5 எழுத்துகளுக்கு மேலுள்ள வார்த்தைகள் கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே தவறாக எழுதியவர்கள் 15 பேருக்கும் மேல். பாதிக்கும் மேல் தவறாக எழுதியவர்கள் 40 பேருக்கும் மேல். கிட்டத்தட்ட அனைத்து வார்த்தைகளையும் தவறாக எழுதியவர்கள் 6 பேர் இருக்கலாம்.

8ம் வகுப்பில் செய்யுட் பகுதியில் பெரிய வினா உண்டு, உரைநடைப் பகுதியிலும் உண்டு, கட்டுரை உண்டு. யோசித்துப் பாருங்கள்.

இது ஒரு பள்ளியின் நிலைதான். என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தமிழின் நிலையும் இதுவாகவே இருக்கக்கூடும்.

இதைத் தொடர்ந்து போகன் ஃபேஸ்புக்கில் எழுப்பிய கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்:

1. இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. அது தேவை. எனவே, மார்க் குறைந்தாலும் ஏன் வருகிறார்கள் என்ற கேள்வி எனக்கானதல்ல.

2. 10% புதிய ஓசி ஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

3. காட்டாயத் தேர்ச்சி தவறு. மாணவர்களின் தரத்தை, ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதன் மூலம் எதிர்கொள்ள வேண்டும்.

4. எதோ ஒரு வகையில் பொதுத் தேர்வு தேவை. முழுக்க மாநில அரசே வைத்துக்கொண்டாலும் சரி.

5. சாதிய ஆதரவில் பேச எனக்கு ஒரு முகாந்திரமும் இல்லை. பள்ளிகளின் மீதான அக்கறையிலேயே சொல்கிறேன். மற்ற “பிராமணர்கள்” கருத்துக்கு அவர்களே கருத்துச் சொல்ல வேண்டும்.

6. பிராமண வெறுப்பில்லை, ஆனால்‌ பிராமணர்கள் அப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதில், பிள்ளைமார், முதலியார் உள்ளிட்ட பிறர்களுக்கான விலக்கில் ஒரு நியாயமும் இல்லை. அதாவது, ஒரு சாரார் இப்படி யோசிக்கிறார்கள் என்பதையே நான் ஏற்கவில்லை. அது பிராமணக் காழ்ப்பாளர்களால் கட்டி ஏற்றப்படும் ஒன்று.

7. பள்ளிகளின் யதார்த்த நிலையைச் சொன்னால், அதையும் இட ஒதுக்கீடு, சாதியோடு புரிந்துகொள்வது, விளக்கம் கொடுத்த பின்பும் மீண்டும் மீண்டும் சொல்வதெல்லாம், பழகிப் புளித்துப் போய்விட்டது. 

8. அரசுப் பள்ளிகளை அல்ல, ஒட்டுமொத்த பள்ளிகளின் தரமும் அதுதான் என்றே சொல்லி இருக்கிறேன். தனியார்ப் பள்ளிகளில் இட ஒதுக்கீடு இல்லை. அப்படியானால் இது பொதுக் கருத்து என்பது குழந்தைகளுக்கும் புரிந்திருக்கவேண்டும். சில குழந்தைகளுக்குப் புரியாதது, பிராமணக் காழ்ப்பு.

Share

முகிலனைக் காணவில்லை

முகிலன் என்பவரைக் காணவில்லை என்ற விஷயத்தை அரசு இத்தனை மெத்தனமாகக் கையாள்கிறதா அல்லது நமக்கு எதுவும் விஷயங்கள் சொல்லப்படுவதில்லையா என்று தெரியவில்லை. ஸ்டெரிலைட் கலவரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடரபான விவகாரத்தில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இவரைக் காணவில்லை. பிப்ரவரி 15ம் தேதி சென்னையில் ஒரு பிரஸ் மீட் நடத்தி சில காவலர்களின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்றும் அதன்பிறகு எக்மோர் ரயில்வே நிலையத்தில் வண்டி ஏறியவரைக் காணவில்லை என்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா தெரிவிக்கிறது.

முகிலன் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்/ஆதரிப்பவர் என்பதெல்லாம் தேவையற்ற விஷயம். அவரை யார் கடத்தியது, அதன் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டிய தேவை அரசுக்கு உள்ளது. உண்மையிலேயே அவர் ஸ்டெரிலைட் தரப்பால் அலல்து அரசுத் தரப்பால் அல்லது அதிகாரிகள் தரப்பால்தான் அபாயத்துக்குள்ளானாரா என்பதை அரசுதான் தெளிவுபடுத்தவேண்டும்.

ஒருவரைக் காணவில்லை என்னும் போக்கை, அவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாம் ஆதரிக்கவோ கண்டும் காணாமல் போகவோ கூடாது. இதன் பின்னான உண்மையைத் தெரிந்துகொள்வது அவசியம். அதேசமயம் ஹிந்து அமைப்பினர் கொல்லப்பட்டாலும்கூட மிக அமைதியாகக் கடந்து செல்பவர்களையும் நாம் இந்நேரத்தில் நினைவுகொள்ளுதல் வேண்டும்.

Share

தேமுதிக கூட்டணி

பாஜக அதிமுக பாமக கூட்டணிக்கு வரவில்லை என்றால் அது இக்கூட்டணிக்குப் பெரிய பின்னடைவாகவே அமையும். அதிலும் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக செல்லுமானால் அது இரட்டைப் பின்னடைவாகவே அமையும்.

அதேசமயம் தேமுதிகவின் தற்போதைய நிலை, விஜய்காந்த் உடல்நலமில்லாமல் இருப்பது – இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் அதிகபட்சம் அதற்கு 3 இடங்களே தரமுடியும். போனால் போகிறதென்று 5 இடங்களைத் தரலாம்.

தேமுதிகவின் பலம் என்பது, அதன் எதிரணியை எத்தனை இடங்களில் தோற்கடிக்கமுடியும் என்பதிலேயே உள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் நின்று பத்து இடங்களில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளது. தனித்து 20,000 வாக்குகளைப் பெறும் என்றாலும்கூட, எதிரணிக்கு சேதாரம் பலமாக இருக்கும். இதை வைத்து திமுக 7 இடங்களை தேமுதிகவுக்குத் தரலாம். தந்தால் அது சரியான முடிவுதான். ஆனால் வரலாற்றில் சமீப காலங்களில் பொதுவாக கூட்டணிப் பேரங்களை முதலில் ஆரம்பித்து கடைசியில் அதைச் சரியாகக் கோட்டை விடும் கட்சிகளில் உலகளவில் முதன்மை பெறுவது திமுகவாகவே இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்காந்த் கட்சி தொடங்கும் முன்பிருந்தே என் யூகம், இவர் இன்னொரு வைகோவாக அமைவார் என்பதாகவே இருந்தது. இன்று வைகோ அதலபாதாளம் போய்விட்ட நிலையில், வைகோ அளவுக்கு விஜய்காந்த் மோசமாக முடியாது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் மாறி மாறி ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தே தீரவேண்டிய நிலை இவருக்கும் ஏற்பட்டே தீரும். இதுவரை திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், எந்நேரத்திலும் எக்கட்சியுடனும் கூட்டணி வைக்கும் வாய்ப்புடனேயே தேமுதிக இருந்தது, இருக்கிறது, இருக்கும்.

2014ல் தமிழ்நாட்டில் அமைந்த பாஜக கூட்டணி மிக முக்கியமான ஒன்று. விஜய்காந்த் மற்றும் அன்புமணி என இருவருக்கும் முதல்வர் பதவி மேல் இருந்த (நியாயமான) ஆசை காரணமாக இக்கூட்டணி தொடராமல் போனது. இக்கூட்டணி தொடர்ந்திருந்தால், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மறைந்த நேரத்தில் நல்ல ஒரு மாற்றாக அமைந்திருக்கும். பாஜக இல்லாமல் இப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் அது மாநில அளவில் முக்கியமான மாற்றாகவே அமையும். ஆனால் தேசியக் கட்சி என்ற ஒன்றில்லாமல் இது அமையாது என்றே நினைக்கிறேன்.

Share

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு

நடப்பாண்டிலேயே 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற அறிவிப்பை சூசகமாக வெளியிட்டதற்கே இத்தனை எதிர்ப்புகள். ஆனால் இதற்கான ஆயத்தம் முன்பிருந்தே நடந்த வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டிலேயே, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மத்திய அரசு சிபிஎஸ்ஸி பள்ளிகளுக்கு இதைப் போன்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதை ஒட்டி மாநில அரசுகளுக்கும் பரிந்துரைத்தது என்று நினைக்கிறேன். அப்போதிருந்தே இது நிகழலாம் என்றிருந்த நிலையில் நேற்று செங்கோட்டையன் இந்த ஆண்டிலிருந்தே இத்தேர்வுகள் நிகழும் வாய்ப்பு உள்ளது என்றும், இதுகுறித்து அமைச்சரவை விவாதிக்கும் என்றும் சொல்லி இருக்கிறார். (ஆனால் நேற்றே பள்ளிகளுக்கு இதுதொடர்பான அறிக்கை வந்துவிட்டது!) இந்த ஆண்டிலிருந்து இத்தனை வேகமாகச் செய்யத் தேவையில்லை என்பது சிறிய பிரச்சினையே. இதைச் செய்வது அத்தனை கடினமான செயல் ஒன்றுமில்லை என்ற நிலையில் இந்த ஆண்டேவா என்ற கேள்வி முக்கியமற்றது. இந்த ஆண்டு செய்யாமல் அடுத்த ஆண்டிலிருந்து செய்யலாம் என்றாலும் சரிதான். ஆனால் இப்படி ஒரு பொதுத் தேர்வு தேவையா என்ற கேள்வியே அனைவராலும் முன்வைக்கப்படுகிறது.

பொதுத்தேர்வு என்றாலே பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளால் பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பீதிக்கும் ஆளாகி இருக்கும் பெற்றோர்கள், இந்த இரண்டுக்கும் மீண்டும் பொதுதேர்வா என்று அலறுகிறார்கள். இப்படி அலற ஒன்றுமில்லை. நான் அரசுப் பள்ளியில் படித்தபோது (1988 வாக்கில்) ஈ எஸ் எஸ் எல் சி என்ற பெயரில் பொதுக் கேள்வித்தாள் ஒன்றுக்கு விடை எழுதிய நினைவு வருகிறது. அப்போதே அது கைவிடப்பட்டதா அல்லது தொடர்ந்ததா என்று தெரியவில்லை. பொதுவாகவே, சமச்சீர்க் கல்வி என்றானபிறகு, அனைத்து வகுப்புகளுக்குமே பொதுவான கேள்வித்தாளைக் கொடுத்துவிடுவது நல்லது. (சமச்சீர் என்பதே தேவையற்றது என்பதே என் கருத்து. மெட்ரிகுலேஷன், அரசுப் பள்ளி, சிபிஎஸ்ஸி என்று அவரவர்களுக்கான கல்வித் திட்டத்தை வைத்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொதுத் தேர்வைக் கொண்டாலே போதுமானது.) விடைத்தாள் திருத்துவது, குறுவள மைய அளவில் திருத்தப்படும் என்று இன்றைய தமிழ் தி ஹிந்து சொல்லி இருக்கிறது. குறுவள மைய அளவு என்றால் என்னவென்று எனக்குப் புரியவில்லை. மண்டல அளவில் திருத்தப்பட்டாலும் சரிதான், பிரச்சினையில்லை.

பொதுத் தேர்வு வினாத்தாள் என்ற உடனேயே பதற ஒன்றுமில்லை. மாணவர்களை வேண்டுமென்றே தோல்வி அடையச் செய்து அரசு (எந்தக் கட்சி ஆண்டாலும்) அடையப்போவது எதுவுமில்லை. கட்டாயத் தேர்ச்சி என்பது நிச்சயம் ஒழித்துக் கட்டப்படவேண்டியது. மாணவர்களுக்குக் கட்டாயக் கல்வி எத்தனை அவசியமோ அதற்கு இணையான அவசியம் அவர்களது கல்வித் தரம். அவர்களது கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் தகுதியைச் செம்மையாக்க வேண்டும். பள்ளிகளின் தரத்தை உயர்த்தவேண்டும். இதிலெல்லாம் எதுவுமே செய்யமுடியாது அல்லது என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதற்காக, மிக எளிதான தீர்வாக, படிக்கிறார்களோ இல்லையோ தரமிருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கலாம் என்பது அநியாயம்.

5ம் வகுப்பிலும் 8ம் வகுப்பிலும் இப்படி ஒரு பொதுத் தேர்வு இருப்பது நல்லது. இதனால் இடை நிற்றல் அதிகமாகும் என்பது சரியான கருத்தல்ல. இடை நிற்றல் என்பது இல்லாமல் போக நாம் பேசவேண்டியது பெற்றோர்களிடம். கல்வியின் பயன் எதுவுமின்றி ஒரு மாணவர் இப்படித் தேர்ச்சி பெற்றுக்கொண்டே போவது சரியானதல்ல என்பதை விட்டுவிட்டு, கட்டாயத் தேர்ச்சிதான் சரியான தீர்வு என்று சொல்வதால் என்ன பயன்? இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் இதே கல்விமுறையில்தான் சாதிக்கிறார்கள் என்பதும் உண்மைதான். சாதிப்பவர்களுக்கு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறை என்பதோ பொதுத் தேர்வு என்பதோ ஒரு பொருட்டே இல்லை என்பதையே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாம் கவலை கொள்ளவேண்டியது சராசரி மாணவர்களையும் சராசரிக்கும் கீழான மாணவர்களையும்.

இதில் ஜாதியை நுழைப்பதில்தான் திராவிடக் கல்வியாளர்களின், முற்போக்காளர்களின் சூட்சுமம் உள்ளது. ஜாதிக்கும் இதற்கும் ஒரு தொடர்புமில்லை. பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தரம் என்ன என்பதைப் பாருங்கள். தலையில் பெரிய இடி விழுந்ததைப் போல இருக்கும். கட்டாயத் தேர்ச்சியே இதற்கு ஒரு காரணம். (கட்டாயத் தேர்ச்சி மட்டுமே காரணமல்ல என்பதும் மிகச் சரியான வாதம்தான்.) இதைக் கொஞ்சம் சரி செய்யவே இந்தப் பொது வினாத்தாள் மற்றும் பொதுத் தேர்வு. நான் பத்தாம் வகுப்பு போனபோது முதல் நாளில் என் ஆசிரியர் பத்தாம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்று வந்த மாணவர்களிடம் அவர்கள் 9ம் வகுப்புப் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சொன்னார். கேட்டபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அப்போது கட்டாயத் தேர்ச்சி இல்லை. இன்றும் இந்நிலை அன்று இருந்ததைவிடப் பல மடங்கு கீழே போயிருக்கிறது.

பொதுத் தேர்வைக் கொண்டுவருவதால் மாணவர்கள் அத்தனை பேரும் சரியாகிவிடுவார்களா என்பது முக்கியமான கேள்வி. நிச்சயம் அப்படி ஆகிவிடாது என்பதுதான் யதார்த்தம். அதேசமயம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான பொறுப்பு கூடும். அரசுப் பள்ளியில் ஒரு வகுப்பில் மாணவர்களின் தோல்வி விகிதம் கூடுதலாக இருந்தால் அவர்கள் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்நிலையில் இத்தேர்வு வருமானால் அத்தனை எளிதாக அவர்களால் ஒதுங்கிவிடமுடியாது. நாளை அரசு கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்ற நெருக்கடி உருவாகும். இதனால் பள்ளிகளில் நடக்கும் கல்வியின், சொல்லித் தரப்படும் முறையின் தரம் ஒருவேளை உயரலாம். இந்தப் பொதுத் தேர்வை ஒட்டுமொத்தமாக மறுப்பதன்மூலம் இதற்கான வாய்ப்பை ஒரேடியாக இல்லாமல் செய்துவிடக்கூடாது.

இந்த வருடமே பொதுத் தேர்வு வந்தாலும் உடனே மாணவர்களை அரசு தோல்வி அடையச் செய்யபோவதில்லை. மாணவர்களின் கழுத்தை நெரிக்க அரசு தயாராக உள்ளது போன்ற சித்திரங்களை எல்லாம் நம்பாதீர்கள். உச்சநீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு எல்லாருமே மாணவர்களுக்கு உதவவே சிந்திக்கிறார்கள். இதில் சாதியை, பொருளாதாரத்தைப் புகுத்திக் குழப்பப் பார்ப்பது அரசியல்வாதிகளே. இந்த ஆண்டு கேள்வித்தாள் நிச்சயம் எளிதாகத்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, எல்லா ஆண்டும் எளிதாகத்தான் இருக்கும்! ஒரு பொது வரையறையை எட்டவும், கட்டாயத் தேர்ச்சி என்பதால் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவைச் சரி செய்யவுமே இது பயன்படப்போகிறது.

கட்டாயத் தேர்ச்சி திட்டம் நீக்கப்படுவதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கிவிட்டாலும், இன்றும் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. உண்மையில் இதனால் மாணவர்களுக்குப் பெரிய பயன் ஒன்றுமில்லை. தோல்வி அடையவில்லை என்ற நெருக்கடி இல்லை என்ற ஒன்று மட்டுமே இதனால் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல விஷயம். மன நெருக்கடியைக் களைவது, இரண்டு மாதத்தில் மீண்டும் நடக்க இருக்கும் பொதுத் தேர்வில் வெல்ல வைப்பது, அப்படியே தோற்றாலும் அது சகஜம்தான் என்ற நினைப்பை உருவாக்குவது, கல்வி வராத மாணவர்களுக்கு வாழ்க்கையில் வெல்ல என்ன செய்யலாம் என்று சிந்திப்பது, அதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவது போன்றவற்றைச் செய்வதே நாம் செய்யும் பெரிய சேவையாக இருக்கும். 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியில் வென்ற ஒரு மாணவன், 9ம் வகுப்பில் தோற்றால் என்ன ஆகும் என்பதையும் நாம் யோசிக்கவேண்டும். இப்படி எதையும் யோசிக்காமல் கட்டாயத் தேர்ச்சி ஒன்றே சரியான வழி என்று பேசுவது, போகாத ஊருக்கு இல்லாத வழியை அமைப்பது போன்ற ஒன்றுதான்.

மிக முக்கியமான பின்குறிப்பு: இப்போது வரப்போகும் பொதுத் தேர்வும் 60 மதிப்பெண்களுக்குத்தான். மீதி 40 மதிப்பெண்களுக்கு, 20 மதிப்பெண்கள் செய்முறைகளுக்காக (பிராஜெக்ட்), மீதி 20 ஸ்லிப் டெஸ்ட்டுகளுக்காக. பொதுவாக ஒரு பள்ளி இந்த மதிப்பெண்களில் கை வைக்காது. அப்படியானால் கட்டாயத் தேர்ச்சி என்பது இப்போதும் செயல்வடிவில் தொடரத்தான் போகிறது போல! இதில் இன்னும் புரிதல் கூடினால்தான் இதைப் பற்றி அதிகம் பேசமுடியும்.

நன்றி: https://oreindianews.com/?p=3463

Share