Pink Vs நேர்கொண்ட பார்வை

(ஸ்பாய்லர்ஸ் அஹெட்)

பின்க் திரைப்படத்தின் கருவைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒரு பெண்ணின் சம்மதத்துடன் மட்டுமே உறவு கொள்ளவேண்டும். பார்க்க இது மிக எளிமையான ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பின்க் திரைப்படம் இதில் சில பல நிபந்தனைகளைச் சேர்த்துக்கொண்டே போகிறது. அது காதலியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் உறவு கூடாது என்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாலியல் தொழிலாளி கை நீட்டி காசு வாங்கிவிட்டு பின்னர் வேண்டாம் என்று மறுத்தாலும் உறவு கொள்ளக்கூடாது என்கிறது. இந்தக் கடைசி நிபந்தனையை ஒட்டி பின்க் திரைப்படம் வெளியானபோது இந்தியா முழுக்க விவாதம் நடந்தது.

இன்று பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகளை ஒட்டி இத்திரைப்படம் தமிழிலும் வருவது நல்லது என்று அஜித் நினைத்திருக்கிறார். அஜித் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பதும் அதை செயல்படுத்துவதும் மிக முக்கியமான விஷயம். ஆனால் எப்போதும் குறுக்கே வந்து நிற்கும் தமிழின் துரதிர்ஷ்டம் இந்தத் திரைப்படத்தையும் விட்டு வைக்கவில்லை. எந்த அளவுக்கு இந்தத் துரதிர்ஷ்டம் அமைத்திருக்கிறது என்றால், ஏன் அஜித்தை பின்க்கைப் பார்த்தார் அல்லது ஏன் பின்க்கை நாம் முன்பே பார்த்தோம் என்ற அளவுக்கு!

ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது என்னவெல்லாம் செய்துவிடக்கூடாது என்பதற்குத் தமிழில் ஏகப்பட்ட திரைப்படங்கள் உதாரணமாக உள்ளன. சமீபத்திய உதாரணம் இது. அதிலும் ஒரு பெரிய நட்சத்திரம் நடிக்கும்போது சின்ன சின்ன காட்சி முதல் பெரிய காட்சி வரை என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ஒப்பிட பின்க் திரைப்படமும் நேர்கொண்ட பார்வையும் மிகச் சிறந்த உதாரணம்.

பின்க் திரைப்படத்தில் அமிதாப் மிகச் சாதாரண வக்கீல். ஆனால் தமிழில் அஜித்தோ அஜித்! எனவே அவர் தோன்றும் காட்சி பின்னால் இருந்து கொஞ்சம் ஸ்டார்-சஸ்பென்ஸுடன் காண்பிக்கப்படுகிறது. மற்ற பெரிய நட்சத்திரங்களின் படத்துடனும் அஜித்தின் மற்ற படங்களுடனும் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்பது உண்மைதான். ஆனால் பின்க்-க்கு இது ஒத்துவராது. அதைவிட அடுத்த காட்சியில் அஜித் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும்போது அவரை அழைக்கும் உதவியாளர் மிரள்வதெல்லாம் தாங்க முடியாத காட்சி.

அஜித்துக்கு ஒரு காதல் காட்சியும் பாட்டும் பைக் சீனும் சண்டையும் வேண்டும் என்பதற்காக ஜஸ்ட் லைக் தட் சேர்த்திருக்கிறார்கள். இவை மட்டுமே மொத்தம் 20 நிமிடங்களுக்கு மேல் வரும்! பின்க் படத்தில் அமிதாப் உடல் நிலை சரி இல்லாதவர். அவர் மனைவியும் உடல் நிலை சரி இல்லாதவர். ஆனால் நேர்கொண்ட பார்வையில் என்னவெல்லாமோ காண்பித்து அஜித் ‘நான் வாழ வைப்பேன்’ சிவாஜி ரேஞ்சுக்கு தலையைப் பிடித்துக்கொண்டு உடலைக் குலுக்குகிறார். உண்மையில் நல்ல திரைப்படத்தின் ரசிகன் அந்தக் காட்சியோடு தலை தெறிக்க தியேட்டரை விட்டு வெளியே ஓடி இருக்கவேண்டும். ஆனால் நான் சிவாஜி, ரஜினி, கமல், விஜய் எனப் பலரின் இதுபோன்ற திரைப்படங்களைப் பார்த்த தமிழன் என்பதால், என்னதான் ஆகிவிடும் பார்க்கலாம் என்று தொடர்ந்து பார்த்தேன்.

பின்க் திரைப்படத்தின் காட்சிகளை ஒன்றுவிடாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் மழை பின்க் படத்தில் பெய்தால் அதே காட்சியில் நேர்கொண்ட பார்வையிலும் மழை. அந்த அளவுக்கு டிட்டோ. அத்தோடு விட்டிருந்தால் படம் கொஞ்சம் சுமாராகவாவது இருந்திருக்கும். சில காட்சிகளை இவர்களாக யோசித்துச் சேர்த்தும் இருக்கிறார்கள். எங்கெல்லாம் காப்பியோ அங்கெல்லாம் படம் நன்றாக இருப்பது போல ஒரு பிரமை (பிரமைதான்!), இவர்கள் சேர்த்த காட்சிகளில் படம் பல்லிளிக்கிறது.

பின்க் திரைப்படத்தின் வசனங்களை அப்படியே தமிழாக்கி இருக்கிறார்கள். கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். ஹிந்தியில் சப் டைட்டிலுடன் பார்க்கும்போது சரியாகத் தோன்றும் வசனமெல்லாம் தமிழில் கேட்கும்போது இரண்டு மூன்று விதமாகப் புரிந்து தொலைக்கிறது! We should save our boys, not our girls, becuase if we save our boys, then our girls will be safe என்ற உயிர்நாடியான வசனத்தை இவர்கள் மொழிபெயர்த்திருக்கும் விதத்தில் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டேன். நம் பெண்களை ஆண்களிடமிருந்து காக்கவேண்டும் என்று வருகிறது (என நினைக்கிறேன்!). எப்போதுமே அப்படித்தானே. இந்தப் படம் எதற்கு இதைச் சொல்ல? இப்படி சில நுணுக்கமான விஷயங்களை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

பின்க் படத்தில் 22 கிமீ தூரத்தை எப்படி 10 நிமிடத்தில் கடக்கமுடியும், வண்டியை 125 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று வரும் வசனத்தை, தமிழுக்கேற்றவாரு மாற்றவேண்டும் என்பதற்காக, 40 கிமீ தூரத்தை 10 நிமிடத்தில் எப்படி கடக்க முடியும், 425 கிமீ வேகத்தில் ஸ்டார்ட் செய்தீர்களா என்று கேட்கிறார்கள். எல்லாவற்றிலும் தமிழனுக்கு எக்ஸ்ட்ரா தேவை என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார். (தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் தான் இந்தப் படத்தின் இயக்குநர் என்பதை நம்பவே முடியவில்லை!)

அஜித்தைப் பார்த்து வில்லன் நீதிமன்றத்தில் ஒரு கட்டத்தில் நீ என்று பேசுகிறார். அஜித்தும் பதிலுக்கு அவரை நீ என்கிறார். ஆனால் பின்க்கில் அமிதாப் தன் குரல் உயராமல் தொடர்ந்து மரியாதையுடனேயே பேசுகிறார். பின்க் படத்தில் அமிதாப் கதாநாயகியைப் பார்த்து Be careful என்கிறார். அர்த்தம் பொதிந்த வசனம் அது. ஆனால் அஜித்தோ ‘யோசிச்சி நட, யோசிச்சிக்கிட்டே நடக்காத’ என்ற பன்ச்சுடன் அறிமுகமாகிறார்.

ஒரு நல்ல திரைப்படத்தை, முக்கியமான திரைப்படத்தை, கமர்ஷியலாகவும் வெற்றி பெற வைத்துக் காட்டுகிறேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு எத்தனை தடவை மூக்குடைபடுவார்கள் எனத் தெரியவில்லை. கழுதையாகவும் இல்லாமல் புலியாகவும் இல்லாமல் இவர்கள் நம்மைப் படுத்தும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

நீதிமன்றக் காட்சிக்கு முன்னர் ரங்கராஜ் பாண்டே தன் கட்சிக்காரருக்கு அறிவுரை சொல்வது போலவும் அஜித்தை ரேக்கச் சொல்வது போலவும் வருகிறது. ஹிந்தியில் இந்தக் கண்றாவியெல்லாம் கிடையாது.

வித்யா பாலன் ஏன் வந்தார் என்று இன்னும் யாருக்கும் புரியவில்லை. எத்தனை வருடம் ஆனாலும் யாருக்கும் புரியப் போவதுமில்லை. அதிலும் அஜித் பொதுசேவகராக நீதிமன்றத்துக்குள் நுழையும்போது ஒருவர் போன் செய்கிறார். ஏன் செய்கிறார் என்று தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம் என்றால், இரண்டாம் பாகத்தில் சொல்வார்கள் என்று சொல்லிவிட்டால் என்னாவது என்ற அச்சத்தில் கமுக்கமாக இருந்துவிட்டேன்.

ரங்கராஜ் பாண்டே இங்கேயும் கேள்வியாகக் கேட்கிறார். ஒரே ஒரு வேண்டுகோள்தான் அவரிடம், ப்ளீஸ், வேண்டாம் இந்த விஷப் பரிட்சை. தாங்க முடியவில்லை. பின்க் படத்தில் இதே பாத்திரத்தில் வரும் அந்த நடிகரின் நடிப்பு எத்தனை யதார்த்தமாக இருக்கும்! ரங்கராஜ் பாண்டேவோ என் கேள்விக்கு என்ன பதில் ரேஞ்சிலேயே பேசுகிறார்.

அமிதாப்பின் நடிப்பையும் அஜித்தின் ‘நடிப்பையும்’ பற்றிப் பேசப்போவதில்லை. அது பாவக்கணக்கில் சேர்ந்துவிடும்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் மிக நன்றாக நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் தப்ஸீ – வாய்ப்பே இல்லை. வேற லெவல் அது.

இதே போல் ஒவ்வொன்றையும் ஒப்பிடலாம். பெண் போலிஸ் தமிழில் பரவாயில்லாமல் நடிக்கிறார். ஆனால் பின்க் படத்தில் அவர் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். வில்லனாக வரும் நடிகர்கள் இரண்டு மொழிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழ்த் திரையுலகம் இந்தத் திரைப்படத்தைக் கையாளும் அளவுக்கு வயதுக்கு வரவில்லை. எதையுமே உரக்கவும் ஒரு நிலைப்பாடு எடுத்தும் கருப்பு வெள்ளையாகவும் மட்டுமே இவர்களுக்கு (நமக்கு!) அணுகத் தெரியும். இடைப்பட்ட நுணுக்கங்கள், கதாபாத்திரத்தின் தன்மையே முக்கியம் என்பதெல்லாம் இன்னும் இவர்களுக்குப் பழக்கப்படவில்லை. அதுவரை பின்க் படத்தைப் பார்த்துவிட்டு, பாராட்டிவிட்டு, அதை நிச்சயம் அனைவரும் பார்க்கவேண்டும் என்று அஜித் போன்றவர்கள் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால் புண்ணியமாகப் போகும். அஜித் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது, நல்ல ரசனையாளராக மட்டும் இருந்தாலும் போதாது, அதை அப்படியே எப்படித் தமிழில் கொண்டு வருவது என்றும் யோசித்திருக்கவேண்டும். அங்கே ஒட்டுமொத்தமாக அஜித் சறுக்கி இருக்கிறார்.

நன்றி: ஒரே இந்தியா நியூஸ் வலைத்தளம்

Share

சந்தானத்தின் ஏ1 என்ற கொடுமை

சில படங்களுக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கும். அது என்னவென்றால், படத்தைப் பார்க்கப் போகும்போதே அப்படம் கேவலமாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்துக் கொண்டேதான் செல்வோம். நாம் எதிர்பார்த்ததைவிட படம் கொஞ்சம் சுமாராக இருந்துவிட்டால்கூட அது ஒரு நல்ல படமோ என்ற மயக்கம் சிலருக்கு ஏற்பட்டுவிடும். இதை ஒட்டியே சில படங்களுக்கு மைனஸ் பாயிண்ட் உண்டு. அது என்னவென்றால், நாம் பார்த்த படம் நாம் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருக்கும். ஏ1 திரைப்படம் இரண்டாம் வகையைச் சார்ந்தது.

சந்தானத்தின் இந்தப் படம் எப்படியும் மோசமாகத்தான் இருக்கும் என்று நினைத்தேதான் நான் திரையரங்குக்குள் நுழைந்தேன். நான் எதிர்பார்த்ததை விட மிகக் கேவலமாக இருந்தது.

இப்படத்தின் டீசர், பிராமண சமுதாயத்தைக் கேவலப்படுத்துவதாக இருந்தது. இதை ஒட்டிப் பேசிய சந்தானம், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்றும் சில விஷயங்களைக் கிண்டலுக்கு உள்ளாக்கினால்தான் காமெடி செய்ய முடியும் என்றும் வேலை வெட்டி இல்லாதவர்களே இதை எதிர்ப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இந்தப் படத்தைப் பார்க்கும்பொழுது ஒன்று உறுதியாகிறது. வேலை வெட்டி இல்லாதவர்கள் இது போன்ற படத்தை எடுப்பவர்களும் இப்படத்தில் நடிப்பவர்களும்தான்.

இந்தப் படத்தை ஜான்சன் என்ற இயக்குநர் இயக்கி இருக்கிறார். ஜான்சன் என்ற பெயருடையவர் என்பதால் இப்படம் இப்படி பிராமணர்களைத் தாக்குகிறது என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால் இப்படம் சந்தானத்தின் திரைப்படமாகவே அறியப்படுகிறது. ஜான்சன் என்பவர் இதற்கு முன்பு ஏதேனும் திரைப்படம் எடுத்திருக்கிறாரா என்ற தகவல் கூட எனக்குத் தெரியாது. சந்தானம் போன்றவர்களே இப்படிப்பட்ட படத்தை எடுக்கத் துணியும்போது மற்றவர்களைச் சொல்லி பொருளில்லை.

நான் கூட தொடக்கத்தில் பிராமணர்களை அத்தனை கேவலப்படுத்தி இருக்கமாட்டார்கள் என்றே நினைத்தேன். ஆனால் எத்தனை முடியுமோ அத்தனை அத்தனை இப்படத்தில் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, சேரியில் வாழ்பவர்கள் முட்டாள்கள், குடிகாரர்கள் என்றும் மிகக் கேவலமானவர்கள் என்ற ரீதியிலும் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இந்த இரட்டை நிலையிலிருந்து தமிழ்த் திரைப்படங்கள் விடுபடாத வரை நமக்கு மோட்சம் இல்லை.

இப்படத்தில் வரும் ஒரு பிராமணக் கதாபாத்திரம் மிக நேர்மையானவராகக் காட்டப்படுகிறது. ஊரே அவரைப் போற்றுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை எந்த நேரத்திலும் சிதைப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். படத்தின் மைய முடிச்சே அந்தக் கதாபாத்திரத்தைச் சீரழிப்பதுதான் என்பது நான் கொஞ்சமும் எதிர்பாராதது. அதை எப்படி சீரழித்து இருக்கிறார்கள் என்பதை திரைப்படத்தில் பார்த்தால்தான் தெரியும். நேர்மையானவராகக் காட்டப்பட்ட அந்தப் பிராமணக் கதாபாத்திரத்திற்கு மூன்று மனைவியர். ஒருவர் வட இந்தியப் பெண். இன்னொருவர் சேரியில் வாழும் பெண் ரௌடி. இதில் அந்தப் பிராமணர் நடு இரவில் கருவாட்டுக் குழம்பை வாங்கிச் சாப்பிடுவார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

இந்தத் திரைப்படத்தில் பொருட்படுத்தத்தக்க அம்சம் ஒன்று கூடக் கிடையாது என்பது விஷேசம். சந்தோஷ் நாராயணன் இசை உட்பட. பிராமணர்களைக் கேவப்படுத்துவதற்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையில்லை. சந்தானம் தொலைக்காட்சியில் பேசும்பொழுது சொன்னார், திரைப்படங்களை இப்படி எடுத்தால்தான் காமெடி செய்ய முடியும் என்று‌ அப்படியும் காமெடியே இல்லை என்பது ஒரு பக்கம். அவருக்கும் தெரிந்திருக்கிறது, ஜான்சனுக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, பிராமணர்களை மட்டுமே வெளிப்படையாகக் காட்ட வேண்டும் என்றும் இதில் வரும் இன்னொரு ஜாதி என்ன என்பதைக் காட்டவே கூடாது என்றும் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மறந்தும் ஒரு சொல் கூடச் சொல்லிவிடக் கூடாது என்றும் இவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்கிறது. பிராமணப் பெண்ணிடம் முட்டை சாப்பிட்டுத்தான் தன் காதலை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லும் சந்தானம் உள்ளிட்ட திரையுலகத்தினர் எந்த படத்திலாவது இஸ்லாம் பெண் தன் காதலை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்களா?

தமிழ்த் திரையுலகமே மிக மோசமான ஒரு சூழலில் சிக்கி இருக்கிறது. இந்திய வெறுப்பு, ஹிந்து வெறுப்பு, பிராமண வெறுப்பு என்ற மூன்றும் உள்ளடக்கி உருவாகியிருக்கும் இந்தச் சுழலில் சிக்காத நடிகர்களே இன்று கிடையாது என்று சொல்லிவிடலாம். இவர்களிடமிருந்து தமிழ்நாட்டை நாம் மீட்டாக வேண்டும்.

இந்தப் படத்தின் சென்சார் சர்டிபிகேட் காட்டப்படும்போது ஒரு நொடி மட்டுமே கவனித்தேன், அதில் லீனா மணிமேகலை என்ற பெயர் வந்ததோ? பெயரைப் பார்த்தேன் என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்குத்தான் இப்போதைக்கு எனக்கு நினைவிருக்கிறது. ஏனென்றால் ஒரு நொடியில் அது மறைந்து விட்டது. லீனா மணிமேகலை போன்றவர்கள் சென்சார் பட்டியலில் இருப்பார்கள் என்றால் நாம் இதுபற்றி மேற்கொண்டு விவாதிக்க ஒன்றும் இல்லை.

நன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்

(Update: நல்லவேளை, அது லீனா மணிமேகலை இல்லையாம். லீலா மீனாட்சி என்று சொன்னார் அம்பை. அதெப்படி யாரென்றே தெரியாமல் எழுதலாம் என்ற அம்பையின் கேள்விக்கு என் பதில் இங்கே. 🙂

Share

கிராம்னிக் தாக் சேவா 2019 – தமிழ்நாடு – 10% இட ஒதுக்கீடு

தபால்துறையில் கிராமின் தாக் சேவா என்னும் கிராமப்புற ஊழியர்களுக்கான முடிவுகள் ஜூன் 22 2019அன்று அறிவிக்கப்பட்டன. பத்தாம் வகுப்புத் தேர்வின் மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது இது. திடீரென சில நாள்களுக்கு முன்பு அந்த பிடிஎஃப் கோப்பை தரவிறக்கிய திமுகவினர், அதில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானவர்களின் (EWS) கட் ஆஃப் 42 என்பதை எடுத்துக்கொண்டு, ஒரு பதிவை எழுதி சுற்ற விட்டனர். அந்தப் பதிவில் ஒரு சிறிய உண்மை உள்ளது. அதேசமயம் அதில் சொல்லப்படாத பல உண்மைகளும் உள்ளன. ஒரே ஒரு உண்மையை மட்டும் உரக்கச் சொல்வது, இரண்டாம் கருத்துக்கே இடமின்றி, 10% EWS இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்காக மட்டுமே. அதைக்கூட நியாயப்படி எதிர்க்காமல், அவர்களுக்கே உரிய அநியாயப்படி, அதில் பயன்பெறப்போவது பிராமணர்கள் மட்டுமே என்று சொல்லி வருகிறார்கள். எவ்வித சலுகைகளும் இல்லாத அனைத்து முற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் இது பொருந்தும் என்பதை மறந்தும் இவர்கள் சொல்லமாட்டார்கள். இதில் பயன்பெறும் பிராமணரல்லாத சாதியினரின் பெயர்களைச் சொல்லிவிட்டால் இவர்கள் அரசியல் வேகாது என்பதுதான் காரணம்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்கள் அல்ல. இன்னும் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆக்கப்படவில்லை. அவர்களது கோரிக்கை நிலுவையில்தான் உள்ளது. ஆனால் பதிவை சுற்ற விட்டவர்களும், உடனே சமூக நீதி செத்துப்போய்விட்டது என்று எள்ளும் நீரும் தெளித்தவர்களும், பிராமணர்களுக்கு அரசு வேலைன்னா கசக்குதா என்று கேட்டார்கள். இந்த கிராமின் தாக் சேவா ஊழியர்கள் கிராமப்புற ஊழியர்கள். தபால் துறையால் நேரடியாக முழு நேர அலுவலகமாகவோ துணை அலுவலகமாகவோ தொடங்க முடியாத இடங்களில் இவர்கள் நியமிக்கப்படுவார்கள். அது கிராமமாக, பட்டிக்காடாக, மக்கள் எளிதில் செல்லமுடியாத இடங்களாக இருக்கலாம். இவர்களது சம்பளம், மற்ற பொதுவான அரசு ஊழியர்களின் சம்பளத்தைவிடப் பலமடங்கு குறைவாக இருக்கும். இவர்கள் ஐந்து வருடம் இந்த வேலையில் இருந்து, பின்னர் தேர்வெழுதி தபால்துறைக்குள் வேலைக்கு வரலாம். அப்போது இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராமின் தாக் சேவா ஊழியர்கள் வேலைக்கு மனு செய்யும்போதே அவர்களுக்குரிய இடத்துக்குத்தான் மனு செய்யமுடியும். அல்லது அவர்கள் எந்த இடத்துக்கு மனு செய்தார்களோ அந்த இடத்துக்கு மட்டுமே அவர்களது மனு பரிசீலிக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு இடத்துக்கு மனு செய்தவர்கள், தகுதி இருக்கிறது என்ற காரணத்துக்காக, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் நியமிக்கப்படமாட்டார்கள். ஏனென்றால், எது உள்ளூர்க்காரர்களுக்கான வேலைக்கு வசதியோ அதை ஒட்டியே இந்த வேலை என்பதுதான் இதன் அடிப்படையே. ஆனால் திமுகவினர் இதையும், உள்ளூர்ல வேலைன்னா கசக்குதா என்று ஒருவரியில் சொல்லிக்கொண்டார்கள்.

கட் ஆஃப்: கட் ஆஃப் என்பது, போட்டியில் பங்கெடுத்தவர்களையெல்லாம் ஒழித்துக் கட்டவேண்டும் என்பதற்காக, காற்றில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மதிப்பெண் அல்ல. ஒரு தேர்வில் பங்குகொண்டவர்களின் தரத்தைப் பொருத்தே இந்த கட் ஆஃப் அமையும். கட் ஆஃப் என்பதுதான் இறுதித் தேர்வு என்றால், இதற்குப் பின் நேர்முகத்தேர்வுகூடக் கிடையாது என்றால், கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வாங்கும் அனைவருக்கும் வேலையோ மேற்படிப்போ கிடைத்துவிடும். உதாரணமாக, மிக மேம்போக்காகச் சொல்வதென்றால், 4000 பேர் தேர்வெழுதி, 400 பேர் மட்டுமே தேந்தெடுக்கப்படவேண்டும் என்றால், யார் 400வது குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களோ அதுவே கட் ஆஃப் என்று வைத்துக்கொள்ளலாம். இதையே ஒவ்வொரு இட ஒதுக்கீட்டின்படியும் செய்வார்கள்.

அம்மாபட்டினம் என்ற ஒரு கிராமத்தில் ஒருவர் 42 மதிப்பெண்கள் பெற்று EWS கோட்டாவில் வேலைக்கு வந்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன?

முதலில் வேலைக்கு மனு போடும்போதே இந்த இடத்தில் ஒரே ஒரு வேலைதான் என்றும், அது EWSக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என்பதும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் ஒவ்வொரு ஊரிலிலும் எந்த கோட்டாவில் வேலை என்பதைத் தெரிவித்திருந்தார்கள். அப்படியானால் இந்த ஊரில் EWS கோட்டாபடி எத்தனை பேர் வேலைக்கு மனு செய்திருந்தார்கள்? இது தெரிந்தால்தானே ஏன் 42 மதிப்பெண் பெற்றவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்? அந்த விவரம் யாருக்கும் தெரியாது. தெரிந்தால்தான் இதை மேற்கொண்டு பேசமுடியும்.

இன்னும் சில ஊர்களில் 50 மதிப்பெண்களுக்கும் கீழான மதிப்பெண்கள் பெற்றவர்கள் EWS கோட்டாவில் வந்திருக்கிறார்கள். அந்த ஊர்களிலும் இதுவேதான் பிரச்சினை.

EWS கோட்டாவின்படி இந்த ஆண்டே வேலைக்கு மனு செய்வது என்பது கொஞ்சம் சிரமமான விஷயமே. அதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் நிச்சயம் குறைவாகவே இருக்கமுடியும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில், EWS கோட்டாவில் மனு செய்பவர்கள் அதிகரிக்கும்போது, எஸ் சி எஸ் டி பிரிவுகளுக்கான கட் ஆஃப் மற்றும் EWS கோட்டாவின் கட் ஆஃப் இரண்டுக்கும் இடையேயான வேறுபாடு மறையும். நிச்சயம் இது நடக்கத்தான் போகிறது.

ஆனால் எந்தத் தகவல்களும் இல்லாத நிலையில், 42 மதிப்பெண்கள் பெற்ற ஐயரும் ஐயங்காரும் வேலைக்குப் போகிறார்கள் என்று சொல்வது எப்பேற்பட்ட அயோக்கியத்தனம்? அதைத்தான் திமுகவினர் செய்து வருகிறார்கள். இன்னும் பகுத்துப் பார்த்தால், எஸ் சி எஸ் டி இவர்களின் கட் ஆஃபைவிடக் குறைவான EWS கோட்டாவினர் மிகச் சொற்பமே. அதாவது 4500க்கும் மேற்பட்ட மொத்த நபர்களில் 10% EWS கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 100க்கும் குறைவானவர்களே இப்படி வந்திருக்கிறார்கள். அதுவும் இது EWS கோட்டாவுக்கான முதல் வருடம் என்பதால்! இதை எதையுமே இவர்கள் கணக்கில் கொள்ளவில்லை.

இதை ஒட்டி இதே பதிவுகளில் அவர்கள் சொல்லத் துவங்கியது, 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து என்பது. 69%ல் உண்மையில் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இவர்கள் இதை எப்படி ஒரு செய்தியாக உருவாக்கினார்கள்? 69% இட ஒதுக்கீட்டோடு சேர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பொது இடங்களிலும் போட்டியிட முடியும். அப்படியானால் ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை கூடுதலாக வரும். அந்த பொதுப் பிரிவில் 10% EWS கோட்டா என்றாக்கிவிட்டால், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை எஸ் சி மற்றும் எஸ் டி பிரிவினருக்கு (அதாவது பொதுப்பிரிவுக்குப் போட்டியிடும் எண்ணிக்கையும் சேர்த்து) குறையும் அல்லவா? அதைச் சொல்லத் தொடங்கினார்கள். அதாவது EWS கோட்டாவுக்கு முன்பு எஸ் சி எஸ் டி பிரிவினருக்கான இடங்கள் எத்தனை கிடைக்கும், இப்போது எத்தனை கிடைக்கும் என்பதை மட்டும் சொல்லி, ஒரு மீம் ஆக்கி, அதைப் பரப்பினார்கள்.

இப்படிப் பொய்ச் செய்திகளை, அரைகுறை உண்மைகளைப் பரப்புவது எளிதாக இருக்கிறது. அதற்கு தேவையான பதிலைச் சொல்வது பெரிய வேலையாக இருக்கிறது. 10% EWS கோட்டா என்பது, பொதுப்பிரிவில் உள்ள இடங்களுக்குள்ளே மட்டுமே. எவ்வகையிலும் ஏற்கெனவே மாநில மத்திய அரசுகளில் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அது பாதிக்காது. இதை மத்திய அரசு தெளிவாகவே சொல்லி இருக்கிறது. ஆனாலும் திமுகவினர் இதை வேண்டுமென்றே ஒரு செய்தியாகப் பரப்புகிறார்கள். அதிலும் EWS கோட்டாவின்படி பலன் பெறப் போவது ஐயரும் ஐயங்காரும் என்று சொல்வதில் உள்ள வெக்கம்கெட்டத்தனம்தான் கேவலமாக இருக்கிறது.

8 லட்சம் வருட வருமானம் என்பது நிச்சயம் கூடுதலான தொகைதான். இதை மத்திய அரசு குறைக்கவேண்டும் என்பதே என் தனிப்பட்ட எண்ணம். 2.5 லட்சமாக்கலாம் என்பது என் பரிந்துரை. ஆனால் இந்த 8 லட்சம் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் க்ரீமி லேயர் பரிந்துரையில் தரப்பட்டிருக்கும் தொகை இது. அதையே, உண்மையில் நேர்மையாக, மத்திய அரசு EWS கோட்டாவுக்கும் வைத்துள்ளது. EWS கோட்டாவில் 8 லட்சம் அதிகம் என்று பேசுபவர்கள், க்ரீமி லேயர் பற்றி வாயே திறக்கமாட்டார்கள்.

க்ரீமி லேயரையும் அறிமுகப்படுத்தி, EWS கோட்டாவின் வருட வருமானம் மற்றும் சொத்து மதிப்பையும் வரைமுறை செய்தால், இட ஒதுக்கீடும் EWS ஒதுக்கீடும் நிச்சயம் தேவையானவர்களைச் சென்றடையும். ஆனால் திமுகவினர் ஐயர் ஐயங்காருக்கு இட ஒதுக்கீடு என்றுதான் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். ஐயர் ஐயங்கார்தான் என்றாலும், அவர்களில் உண்மையான பொருளாதார நலிவில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதும் அவசியம்தான். இதையும் உள்ளடக்கியதுதான் உண்மையான சமூக நீதி. 99% வாங்கிய பிராமணருக்கு வேலை இல்லை, ஆனால் 94% வாங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வேலை கிடைக்கும் என்பதில் உள்ள நியாயத்தை இந்த EWS கோட்டா கொஞ்சமாவது சமன் செய்யும். உண்மையான சமூக நீதியைப் பேசுபவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள்.

ஒரு பிரச்சினையில் மிகச் சரியான தகவல்கள் கிடைக்காத நிலையில், தமிழ்நாட்டின் பாஜகதான் இதை முன்னெடுத்துச் செய்யவேண்டும். ஒரு பொய்க்கருத்தை திமுக பரப்புகிறது என்றால், அதை உடனே சரியான வல்லுநர்களுடன் ஆராய்ந்து, அதிலுள்ள தவறைக் குறிப்பிட்டு சொல்லிப் பரப்பும் செயலை தமிழக பாஜகதான் மேற்கொள்ளவேண்டும். ஒரு பொய் லட்சம் பேர்களால் பரப்பப்படுகிறது. அதற்கான உண்மை என்பதைக் கண்டறிய தனியாளால் முடியாது. பாஜகவினர் இதைச் செய்யலாம். ஆனால் பாஜகவினர் கருத்தைப் பரப்பும் ஒரு விஷயத்தில் திமுகவிடம் தோல்வி அடைந்தவர்களாகவும் அதை ஒப்புக்கொள்பவர்களாகவுமே நடந்துகொள்கிறார்கள். இதை முதலில் மாற்றவேண்டும். அப்போதுதான் உண்மையான கருத்து என்ன என்பது பரவத் துவங்கும்.

  • ஹரன் பிரசன்னா

தொடர்புடைய ஃபேஸ்புக் பக்கம்:
https://www.facebook.com/pudugai.abdulla/posts/10215186778051424

Share

அரசுப் பள்ளிகள், தனியார்ப் பள்ளிகள் குறித்து பி.ஆர். மகாதேவன் எழுதியது குறித்தும், என் சொந்த அனுபவங்களும், இன்ன பிறவும்

* தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கல்வித் தரம் நன்றாக இருப்பதற்கு, ஒருவேளை அங்கு பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் இருப்பதால்தானோ என்ற ரீதியில் மகாதேவன் சொல்லி இருக்கும் கருத்து எவ்வித அடிப்படையும் அற்றது. அநியாயமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது. மாணவர்கள் அதிகம் பிராமணர்களாக அல்லது உயர்சாதி மாணவர்களாக இருப்பதற்கும் அங்கே பாடம் நன்றாக நடத்தப்படுவதற்குமான தொடர்பு கொஞ்சம் கூட விவாதத்திற்கு உரியதல்ல என்று நான் நினைப்பதால் அதை விட்டுவிட்டு மற்ற ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.

* நான் ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல், மகாதேவன் சுயமான சிந்தனை உடையவர். இதன் எதிர்த்திசையில், யாராவது ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காகவேகூட தீவிரமான சிந்தனை செய்பவரும்கூட என்பது என் அனுமானம். இப்படிச் சிந்திப்பவர்களால் சில சமயங்களில் தீவிரமான கருத்துப் பிரதிவாதங்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே கருத்தின் அடிப்படையில் மட்டுமே மகாதேவன் போன்றவர்களை அணுகுதல் நலம். இந்த இடுகையில் நான் சொல்லும் கருத்து, மகாதேவனின் அனைத்துக் கருத்துகளுக்குமான கருத்தல்ல.

* சிபிஎஸ்இ பள்ளிகளில் பிராமணர்கள் அதிகம் ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதையே நான் முதலில் ஏற்கவில்லை. பிராமணர்கள் உள்ளிட்ட மற்ற உயர்சாதி ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், அதனால்தான் அவர்கள் நன்றாக நடத்துகிறார்கள் என்பது அடிப்படையற்றது. இதேபோன்ற தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் உள்ள ஹிந்து அல்லாத மற்ற மத ஆசிரியர்களும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் நடத்துவது கண்கூடு. எனவே தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளால்தான் இது சாத்தியமாகிறதே ஒழிய ஜாதியாலோ மதத்தாலோ அல்ல.

* சாதி மற்றும் மதத்தால் ஆசிரியர்களை பொதுப்படுத்துவது என்பது சரியானதல்ல. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதில் ஆயிரம் உதாரணங்கள் இருக்கும். நேரிடையாக அனுபவப்பட்டதாகவும் இருக்கலாம், ஐயத்துக்கு இடமின்றி நடந்த ஒன்றைக் கேள்விப்பட்டதாகவும் இருக்கலாம்.

* 3ம் வகுப்பு முதல் கல்லூரி நான் படித்தவை அனைத்தும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளே. நான் படித்து முடித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்றெல்லாம் கல்வி நன்றாக இருந்தது என்பது முதல் பொய். நான் படித்தபோதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் லட்சணம் மிகக் கேவலமாக இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் இன்று பல மடங்கு முன்னேறி இருக்கிறது. (இந்த முன்னேற்றம் உண்மையான, சரியான முன்னேற்றமா என்பது தனியே விவாதிக்கப்படவேண்டியது.)

* 3 மற்றும் 4ம் வகுப்பில் பஞ்சாயத்துப் பள்ளியில் படித்தேன். பாடம் நடத்தவே மாட்டார் ஆசிரியர். உண்மையில் அவருக்கு ஏதேனும் தெரியுமா என்பது எனக்கு இன்று வரை சந்தேகமாக உள்ளது. ஆனால் மாட்டடி அடிப்பார்கள். கூட்டமாக உட்கார்ந்து சொன்னதையே சொல்லி மனனம் செய்யச் சொல்வார்கள். அதிலும் ஆயிரம் பிழைகள் இருக்கும். அப்படியே மனனம் செய்யச் சொல்வார்கள். இந்த லட்சணத்தில்தான் அந்தப் பள்ளியில் படித்தேன். (பள்ளியின் பெயர் வேண்டாம் என்பதால் எந்தப் பள்ளியின் பெயரையும் ஆசிரியரின் பெயரையும் சொல்லப் போவதில்லை.) ஆசிரியர்கள் அனைவருமே அபிராமணர்கள்.

* 5ம் வகுப்பு படித்த பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தண்டம். இதற்கு மேல் அந்தப் பள்ளியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆசிரியர் பிராமணர். 30 வருடத்துக்கு முன்பாகவே இதுதான் நிலைமை, தரம்.

* 6,7 வகுப்பும் வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. ஜாதியின் வெறியாட்டத்தை உணர்த்தியது இந்தப் பள்ளிதான். ஆசிரியர்கள் தங்களுக்குள்ளே பிராமணர்கள், அபிராமணர்கள் என்று பிரிந்துகிடந்தார்கள். காந்தியத்தை வளர்த்த பள்ளி திராவிடத்தால் பீடிக்கப்பட்டுக் கிடந்தது. இந்தப் பள்ளியில் படித்ததையே நான் மறக்க நினைக்கிறேன். நான் முதல் ரேங்க் வாங்கவில்லை என்று ஒரு பிராமண ஆசிரியர், ‘குலத்தை கெடுக்க வந்த கோடாரிப் பாம்பே’ என்று சொல்லி அடித்தார். நான் தொடர்ந்து 15 முறை (இரண்டு ஆண்டுகளில்) முதல் மதிப்பெண் பெற்றபோது, தேவையற்ற காரணங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து அபிராமண ஆசிரியர் அடித்தார். இதில் தன்னை பிராமணச் சார்பு இல்லாதவராகக் காட்டிக்கொள்ளவேண்டிய பிராமண ஆசிரியர்களும் திட்டித் தீர்த்து எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இந்த வெறி மோதல்களுக்கு இடையேதான் நான் ஏதோ படித்தேன். இதில் உள்ள ஆசிரியர்கள் – பிராமணர்களும் அபிராமணர்களும்!

* இப்பள்ளியில் நடந்தவையெல்லாம் அராஜகமானவை. ஒரு பெண் நன்றாகப் படிக்கவில்லை என்பதற்காக ஓர் ஆசிரியர் தன் பேனாவைக் கொண்டு அந்தப் பெண்ணை உந்தித் தள்ளினார். அந்தப் பேனாவின் நுனி பட்டது, எந்நேரத்திலும் வயதுக்கு வரப்போகும் பெண்ணின் மார்பகத்தில். அன்று முழுவதும் அந்தப் பெண் அந்த பேனா மையின் புள்ளியோடு கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள். அதை எதைக் கொண்டு மறைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தடுத்த வகுப்பில் ஆசிரியர்கள் அனைவரும் பார்த்தார்கள். ஒருவரும் இதைப் பற்றிப் பேசக்கூட இல்லை. ஏன்? ஜாதி பயமாக இருக்கலாமோ என்னவோ. அன்று வீட்டுக்கு வந்ததும் அந்தப் பெண் வேறு உடை மாற்றிக்கொண்டு அப்படி அழுதாள். அந்த ஆசிரியர் அபிராமணர்.

* யாராவதுசரியாகப் பாடம் படிக்கவில்லை என்றால் ஒரு ஆசிரியர் ஒரு மாணவனை மாணவிகள் மத்தியில் தூக்கிப் போடுவார். எங்கடா பட்டுச்சு என்று கேட்பார். அந்த ஆசிரியர் பிராமணர்.

* இந்தப் பள்ளியை விட்டுச் சென்றதே என் வாழ்க்கையின் விடுதலை என்று இப்போதும் நினைக்கிறேன். அடுத்து சென்றது இன்னொரு அரசு உதவி பெறும் பள்ளி. 8,9 மற்றும் 10வது படித்தேன். உண்மையான சுதந்திரத்தை இங்கே உணர்ந்தேன். ஆசிரியர்கள் பாடம் எடுக்க முயன்றார்கள். வெகுசிலர் மட்டுமே மிகச் சிறப்பாக எடுத்தார்கள். அதில் ஒரு ஆசிரியரை என் வாழ்நாளில் நான் மறக்கமாட்டேன். கணித ஆசிரியர். அவர் கிறித்துவர்.

* இதே பள்ளியில் எனக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தவர் கிறித்துவர். நல்லவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருநாள் திடீரென்று அனைவரிடமும் இன்று நம் வகுப்பில் ம்யூஸிக் கிளாஸ் நடக்கும் என்று சொன்னார். இசைக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தோம். வந்தவர்கள் பெரிய பெரிய கிட்டார், ஸ்பீக்கர் என்றெல்லாம் வைத்து அமர்க்களப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக ஏசுவைப் பற்றிய பாடல்களைப் பாடினார்கள். என்னால் அங்கே இருக்கவே முடியவில்லை. எனக்கு வயது 14. வகுப்பாசிரியர் என் மீது மிகவும் பாசமாக இருப்பவர். அவரிடம் சொன்னேன், இது எனக்கு சரிவராது என்று. மனதுக்குள் எனக்குப் பிடித்தமான கடவுளான ராமரையோ ஆஞ்சநேயரையோ நினைத்துக்கொள்ளச் சொன்னார். அன்று அப்படித்தான் நினைத்துக்கொண்டேன். ஆனால் இனி இப்படி என்னால் இருக்கமுடியாது என்று சொல்லிவிட்டேன். தலைமை ஆசிரியர் கிறித்துவர்! அரசு உதவி பெறு பள்ளி!!! இதுதான் லட்சணம். அங்கிருந்த பிராமண ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் யாரும் இதை எதிர்த்து எதுவும் பேசவில்லை. இந்த லட்சணத்தில்தான் நம் பள்ளிகள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்தன.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல் வீணாகப் பேசிக்கொண்டு இரட்டை அர்த்த ஜோக் அடித்துக்கொண்டிருந்த ஆசிரியர் அபிராமணர்.

* இதே பள்ளியில் பாடமே நடத்தாமல், மாணவர்களை ஹோட்டலுக்கு அனுப்பி சாப்பாடு வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டு, தூங்கி எழுந்து சென்ற ஆசிரியர் பிராமணர்.

* பின்பு +1, +2 வேறொரு அரசு உதவி பெறும் பள்ளி. அங்கே உருப்படியாகப் பாடம் நடத்திய ஒரே ஆசிரியர், என் வாழ்நாளில் நான் மறக்கவே கூடாத இன்னொரு ஆசிரியர், அபிராமணர். இவர் நடத்தும் தனிப்பயிற்சிக்குச் சென்றேன். என்னைப் பார்த்த உடனே அவர் கேட்ட முதல் கேள்வி, “ஏம்ல நீ இங்க வார? ஸ்கூலைவிட இங்க நல்லா சொல்லித் தருவேன்னு நினைக்கியா? அங்கயும் இங்கயும் ஒண்ணுதாம்ல. நாளைக்கு இந்தப் பக்கம் பாத்தேன், தொலைச்சிருவேம்ல” என்றார். கெஞ்சிக் கூத்தாடி ட்யூஷன் சேர்ந்தேன். உண்மையில் பள்ளிக்கும் ட்யூஷனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லாமல் நடத்தியக் காட்டியவர் இந்த ஆசிரியர். நமஸ்காரம் இவருக்கு.

* முதல் நாளே இன்னொரு ஆசிரியர் சொன்னார். மெதுவாக. ரொம்பமெதுவாக. மெல்லப் பேசினார். “என்னை நம்பாதீங்க. நான் முடிஞ்சதை நடத்துவேன். நல்ல மார்க் வேணும்னா ட்யூஷன் சேர்ந்து பொழச்சிக்கோங்க. பிராக்டிகல் மார்க் எப்படியாச்சும் வாங்கித் தரேன். நான் ஹார்ட் பேஷண்ட்.” இவர் பிராமணர்.

* இன்னொரு ஆசிரியர் எங்களையே வாசிக்கச் சொல்வார். அவ்வளவுதான் பாடம். அவர் அபிராமணர்.

* இவையெல்லாம் நடந்தது 11 மற்றும் 12ம் வகுப்பில். அதாவது எங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கப் போகும் இடத்தில் நடந்தவை. இதே போன்ற பிரச்சினைகளுடன் தான் இன்று வரை நம் அரசுப் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்வியைத் தந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் நாம் கவனிக்கவேண்டியது ஒட்டுமொத்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் லட்சணத்தையும், அதற்கான காரணங்களையும், இப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் தரத்தையுமே அன்றி, அவர்களின் சாதி மற்றும் மதத்தை அல்ல.

* அரசுப் பள்ளிகளைவிட கொஞ்சம் பரவாயில்லை அரசு உதவி பெறும் பள்ளிகள். இன்றையக் கல்வியில் இந்த அளவுக்கு ஜாதி மற்றும் மதத் தாக்குதல்கள் நிகழாமல் இருக்கக் காரணம், மெட்ரிக் பள்ளிகளின் பெருக்கமே. இவை இல்லை என்றால் மாணவர்கள் இன்னும் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பார்கள்.

* இப்படி எல்லாம் சொல்வதால் அரசுப் பள்ளிகளில் நல்லவர்களே இல்லை என்று நான் சொல்வதாக எண்ணவேண்டாம். மேலேயே மிக நல்ல ஆசிரியர்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறேன். ஆனால் சொற்பம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மனதளவில் நல்லவர்களாக இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. பாடம் நடத்துவதில் கில்லாடிகளாக இருக்கவேண்டும்.

* இன்று அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை நம்மால் கற்பனையில் கூட யோசிக்கமுடியாது. இத்தனை பிரச்சினைகளுக்கு இடையேதான் அந்த மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களின் ஒரே மீட்சி அரசுப் பள்ளிகள்தான். அங்கே எத்தனையோ ஆசிரியர்கள் அவர்களுக்கு சமூக ரீதியாக உதவுகிறார்கள். கால் நடக்க முடியாத பையனைத் தானே தூக்கிச் செல்லும் ஆசிரியர், வகுப்பில் வயதுக்கு வந்துவிட்ட பெண்ணை அழைத்துச் சென்று வேறு உடை தந்து புது ஆடை வாங்கிக் கொடுத்து, குங்குமம் மஞ்சள் கொடுத்து நெட்டி முறித்து வீடு வரை சென்று விட்டு வரும் ஆசிரியை, தன் கைக்காசைப் போட்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு இரவில் தங்கிப் படிப்பதற்காக உணவு தரும் ஆசிரியர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் தெய்வத்துக்குச் சமம். ஆனால் இவர்கள் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்றால், ஒரு ஆசிரியருக்குரிய தகுதி இல்லை என்றால், இவர்களை இவர்களது நல்ல செயல்களுக்காகப் பாராட்டலாமே தவிர, ஒரு முழுமையான ஆசிரியராக ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மையில் அரசுப் பள்ளிகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் இப்படியான ஈரமான ஆசிரியர்களின் தொண்டுகளையே முன் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத் தேவை, இத்துடன் கூடிய சிறப்பான கல்வி. சிறப்பான கல்வி மட்டுமே ஒரு பள்ளியின் முதல் இலக்காக இருக்கவேண்டும். அதை நோக்கியே ஆசிரியர்கள் உயரவேண்டும்.

* இந்த நிலை இன்றைய நிலையில் நம் அரசுப் பள்ளியிலோ அரசு உதவி பெறும் பள்ளியிலோ இல்லை. பணம் இருந்தால் நிச்சயம் உங்கள் பிள்ளைகளை மெட்ரிகுலேஷனில் படிக்க வையுங்கள். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் புனிதர்கள் அல்ல. ஆனால் அரசுப் பள்ளிகள் அளவுக்கு மோசமானவையும் அல்ல. எனவே நிச்சயம் சேர்க்கலாம். அதேசமயம் மெட்ரிகுலேஷனில் சேர்த்துவிட்டால் பையன் நன்றாகப் படித்துவிடுவான் என்றெல்லாம் கனவு காணக்கூடாது. இது ஒரு சிக்கலான விஷயம். நாம் முயன்றால்தான் ஒரு பையனை சிறப்பாகப் படிக்க வைக்க முடியும். இது பல படிகளில் நிகழவேண்டியது. ஆசிரியர்கள் மட்டுமே ஒரு பையனை சிறப்பாக உருவாக்கிவிடமுடியாது. பல சூழல்கள் ஒன்றிணைய வேண்டும். அதேபோல் மெட்ரிகுலேஷனைவிடப் பல மடங்கு சிறந்தவை சி பி எஸ் இ பள்ளிகள். ஆனால் அவை உண்மையில் சிபிஎஸ்இ பள்ளிகளாக இருக்கவேண்டும். மெட்ரிக் வழிமுறையிலேயே நடத்தி பெயருக்கு சிபிஎஸ்இ என்று வைத்துக்கொள்ளும் பள்ளிகளாக இருக்கக்கூடாது. பணமும் இருந்து நல்ல பள்ளியும் இருந்தால் யோசிக்காமல் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேருங்கள். தமிழ்நாட்டுக் கூச்சல்களுக்கு மதி மயங்கி, முற்போக்காளர்களின் மூளைச் சலவையில் சிக்கி மாணவர்களின் எதிர்காலத்தையும் இந்தியாவின் எதிர்காலத்தையும் வீணாக்கிவிடாதீர்கள்.

* ஹிந்தி படிக்கும் வாய்ப்பு இருந்தால் அதை நிச்சயம் பயன்படுத்துங்கள். ஹிந்தி இல்லாவிட்டால் குடி மூழ்கிவிடாது. அதே சமயம் ஹிந்தி படிப்பதாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடமாட்டார்கள் என்பதோடு பல வகைகளில் பின்னாளில் உதவவும் கூடும். எனவே நிச்சயம் படிக்கச் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் முதன்மை, ஹிந்தி அடுத்ததாக என்று இருக்கட்டும்.

* அரசுப் பள்ளிகளின் தரத்தை மாற்ற ஆசிரியர்களின் தரத்தை மாற்றவேண்டும். சும்மா பாடத்திட்டத்தை உயர்த்திவிட்டோம் என்று சொல்லிப் பெருமை பேசுவதில் ஒரு பொருளும் இல்லை. தமிழக அரசு இதைத்தான் எப்போதும் செய்துகொண்டுள்ளது. பாடத்திட்டத்தைப் பெருமையாகப் பேசும் முற்போக்காளர்கள் ஆசிரியர்கள் பற்றி மூச்சே விடமாட்டார்கள். இவர்களது ஒரே நோக்கம் இந்திய ரீதியிலான பாடத் திட்டத்தை முடக்குவதுதான். முதலில் இவர்களைப் புரிந்துகொள்ளுங்கள். இவர்களே இன்றைய கல்விக்கும் கல்வித் திட்டத்துக்கும் மாணவர்களுக்கும் முதல் எதிரி. இவர்களை எதிர்கொண்டால் நாம் முன்னேறிவிடலாம்.

* இறுதியாக: பி.ஆர். மகாதேவன் சொன்னதை நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். அதேசமயம் அவர் சொன்னது இதுவரை யாரும் சொல்லி இராத கருத்தல்ல. இவராவது நிறைய விஷயங்களை யோசித்து ஒன்றாக்கி அதிலிருந்து இன்னொன்றை வந்தடைகிறார். மற்ற சிலர், வெளிப்படையாக, இட ஒதுக்கீட்டால்தான் பள்ளிகள் மோசமாகின என்று சொல்லி இருக்கிறார்கள். இவற்றைச் சொன்னவர்கள் பாஜக அபிமானிகள் அல்ல என்பதும் (குறிப்பு: பாஜக அபிமானிகள் இப்படிச் சொன்னதே இல்லை என்று நான் சொல்லவில்லை!), திராவிட சிந்தாத்தத்தை நம்புகிறவர்கள் என்பதும்தான் யதார்த்தமாக இருக்கிறது.

Share

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே – கவிஞர் முத்துலிங்கம்

முன்குறிப்பு: ஏன் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ புத்தகத்தைப் படித்தேன்? படித்த இரண்டு அரசியல் நூல்கள் – சகிக்கவில்லை ரகம். பிரச்சினையே இல்லாத ஒன்றைப் படிப்போம் என்று தோன்றியதில், வேகமாகப் படிக்கவேண்டும் என்று தோன்றியதில், கையில் சிக்கியது இப்புத்தகம்தான்!

கவிஞர் முத்துலிங்கத்தின் ‘ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே’ என்ற புத்தகத்தைப் படித்தேன். வானதி வெளியீடு. பல சுவையான, முக்கியமான பாடல்களை எழுதியவர் கவிஞர் முத்துலிங்கம். இளையராஜாவின் இசையில் பல முக்கியமான பாடல்களை எழுதி இருக்கிறார். (மரவண்டு கணேஷ் இவர் எழுதிய பாடல்களில் சிலவற்றைத் தொகுத்திருந்தார்.) முரசொலியில் வேலை பார்த்து, பின்னர் எம்ஜியாரின் அதிமுகவில் சேர்ந்து, மேலவையில் இருந்து, பின்னர் அரசவைக் கவிஞராக இருந்தவர் என்று நீள்கிறது இவரது வாழ்க்கை.

பொதுவாகவே திரையைச் சேர்ந்தவர்களின் சுயசரிதை என்பது, அவர்களது நன்றியை, வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒன்றாகவே இருக்கும். இதுவும் விதிவிலக்கல்ல. பலருக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார். எம்ஜியாருக்கும் எம் எஸ் விக்கும் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறார் என்று சொல்லலாம். சின்ன சின்ன நினைவுகளைக் கூடக் குறித்துவைத்துவிடும் வேகம், இந்நூல் முழுக்கத் தெரிகிறது. தவறில்லை, எழுதப்போவது ஒரே ஒரு சுயசரிதை என்னும்போது இதைத் தவிர்க்கமுடியாது. அதனாலேயே பல குறிப்புகளின் தொகுப்பாகிவிடுகிறது இப்புத்தகம். உண்மையில் மணிரத்னம் – பரத்வாஜ் ரங்கன் பேட்டி போலத்தான் ஒருவரின் நினைவுகளைப் பட்டியலிடும் நூல் இருக்கவேண்டும். (தமிழில்: மணிரத்னம் படைப்புகள், கிழக்கு வெளியீடு) ஆனால் அதற்கெல்லாம் பெரும் உழைப்பும் திட்டமிடலும் வேண்டும்.

பல நினைவுத் தெறிப்புகளுக்கு நடுவே சில ஆச்சரியங்கள் கிடைக்கின்றன. இளையராஜா 1973லேயே இசையமைத்த பாட்டு; கண்ணதாசனுக்கு எழுத நேரம் இல்லாததால் அவரைப் போலவே எழுதும் வாலியை வைத்து எழுதப்பட்டு கண்ணதாசன் பெயரில் வரவிருந்த பாட்டு (பின்னர் வாலி பெயரிலேயே வருகிறது); ஆண்டவன் கட்டளைக்கு முன் அரச கட்டளை என்னாகும் என்று எழுதி எம்ஜியாரின் கோபத்துக்கு ஆளாகி அந்தப் படத்தில் இவர் நீக்கப்பட்டு இன்னொரு கவிஞரான முத்துக்கூத்தன் ‘ஆளப் பிறந்தவளே ஆடிவா’ என்றெழுதுவது; பொன்னெழில் பூத்தது புதுவானில் பாட்டில் இளவேனில் என்று எழுதி, அதைப் பாடும்போது இழவே நில் என்று வருவதால், நிலவே நில் என்று பஞ்சு அருணாசலம் மாற்றியது – இப்படி ஏகப்பட்ட ஆச்சரியமான தகவல் குறிப்புகள் கடல் போலக் கிடைக்கின்றன.

கவிஞர் சுரதா இவரைப் பார்த்து, “அகமுடையார்தானே?” என்று கேட்கிறார். இவர் உட்பிரிவுடன் தன் ஜாதியைச் சொல்கிறார். எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு சுரதா சொல்லும் பதிலைப் புத்தகத்தில் படிக்கவும். ராகவனே என்று எழுதுங்கள் என்று வைரமுத்து சொல்ல, கோபாலனே என்று எழுதியதை மாற்றி ராகவனே ரமணா ரகுநாதா என்று எழுதுகிறார் முத்துலிங்கம். ஜானகி என்ற சொல் வருவதால் எம்ஜியார் பெயரும் வரட்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீராமசந்திரா என்று ஒரு வரியில் எழுதினாராம்.

இப்புத்தகத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் சொல்ல நினைப்பது: இப்புத்தகத்தில் வரும் ஏகப்பட்ட கவிஞர்கள் எழுதிய திரைப்பாடல்களின் பட்டியலை. அந்த அளவுக்கு எல்லாக் கவிஞர்கள் மேலும் நல்ல அபிப்பிராயத்துடன் இருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம். மருதகாசி, உடுமலை நாராயணக்கவி தொடங்கி இன்றைய யுகபாரதி, நா.முத்துக்குமார் வரை அனைவரையும் பற்றி, பற்பல பெயர் மறந்துபோன கவிஞர்களைப் பற்றி, அவர்கள் எழுதிய மறக்கமுடியாத பாடல்கள் பற்றி எழுதிக் குவித்திருக்கிறார். இப்புத்தகத்தில் உள்ள எல்லாப் பாடல்களையும் அதை எழுதிய கவிஞர்களின் பெயர்களையும் இசையமைப்பாளர்களையும் மட்டும் தொகுத்து தனியே வைத்தால் பொக்கிஷமாக இருக்கும்.

இளையராஜாவைப் பற்றிய பல நினைவுகளைச் சொல்லி இருக்கிறார். ராஜா எந்த ஒருவருக்கும் உதவவே இல்லை என்றொரு புரளி பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. பலர் வெளிப்படையாக ராஜா எப்படியெல்லாம் உதவினார் என்று சொல்லத் தொடங்கியதும் அப்புரளி இப்போது அடங்கிவிட்டது. ராஜா எப்படி எல்லாம் உதவினார் என்பதற்கு முத்துலிங்கத்தின் புத்தகம் இன்னொரு சாட்சி.

தனித்தமிழ்த்தாகம் (சில இடங்களில் கமல்காசன் என்றெல்லாம் வருகிறது!) அரசியல் மேம்போக்குத் தன்மை (மோடியின் பணமதிப்பிழப்பு பற்றி ஒரு வரிவிமர்சனம்!), அரசியலில் பிற்பட்டுப் போன தன்மை என எல்லாம் அங்கங்கே சிதறல்களாக, எவ்வித ஆழமும் இன்றிக் கண்ணில் படுகின்றன. இவற்றையெலலம் விட்டுவிட்டு, இதன் தகவல்களுக்காக நிச்சயம் படிக்கலாம்.

பின்குறிப்பு: கவிஞர் அநியாயத்துக்கு சந்தி வைக்கிறார். ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே என்பதுதான் புத்தகத்தின் பெயரே. புத்தகத்திலும் பல இடங்களில் தேவையற்ற இடங்களில் சந்தி வருகிறது. ஏனென்று தெரியவில்லை.

ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே, கவிஞர் முத்துலிங்க, வானதி பதிப்பகம், விலை ரூ 400

Share

நிலம் புதியது நீர் புதியது

1991ல் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் பைபை சொல்லிவிட்டுப் பிரிந்தோம். அன்று அந்தப் பிரிவின் வலி உள்ளுக்குள் இருந்தாலும், மதியக்காட்சி சில நண்பர்களுடன் ‘தர்மதுரை’ போகும் எண்ணமும் மறுநாளே திருச்சிக்கு அத்தை வீட்டுக்குப் போகும் எண்ணமும் சேர்ந்து அன்றைய வலியை மறைத்துவிட்டன. மதியம் 12.30க்கு தேர்வை முடித்துவிட்டு, அனைவரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு நடந்து வந்து, வேகு வேகென்று சாப்பிட்டுவிட்டு, திரும்ப நடந்தே போய் பேருந்து பிடித்து சினிப்ரியா மின்ப்ரியா சுகப்ரியா காம்ப்ளெக்ஸுக்குப் போனால், ‘அஞ்சலி’ ஹவுஸ்ஃபுல், தர்மதுரைக்குப் பெரிய வரிசை. இத்தனைக்கும் படம் வந்து 90 நாள்களுக்கும் மேல் இருக்கும். ஆறேழு நண்பர்கள் மட்டுமே போயிருந்தோம். நான் கவுண்ட்டருக்குச் சென்று, ஸ்கூல் முடிச்சிட்டு வர்றோம்ண்ணே என்று சொல்லவும், கவுண்ட்டரில் இருந்தவர் சட்டென எங்களுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டார். கதிர்வேல், அழகேசன், ஜெ.குமரன், சுரேஷ்குமார், நான், இன்னும் ஒன்றிரண்டு பேர். எங்களுக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. சந்தோஷத்துடன் படம் பார்த்தோம்.

படம் முடிந்ததும் மீண்டும் பேருந்து பிடித்தோம். சிம்மக்கல் பக்கத்தில் சுரேஷ்குமார் இறங்கினான். பின்பு ஜெ.குமரன். பின்பு ஒவ்வொருவராகப் பிரிந்தோம். அன்றைக்குப் பிறகு சுரேஷ்குமார், ஜெ.குமரன் என்று யாரையும் பார்க்கக்கூட முடியவில்லை. எங்கே இருக்கிறார்கள், என்னை நினைப்பார்களா – எதுவும் தெரியாது. மதுரையில் ஒவ்வொருவர் ஒவ்வொரு திசைக்குப் போய்விட்டார்கள். அழகரடியில் குடி இருந்தோம். அங்கே போய்த் தேடியதில் சிலரைப் பிடிக்க முடிந்தது. ஆனால் பலரை இன்று வரை பார்க்கமுடியவில்லை. வீட்டு நண்பர்களாக இருந்தவர்களில் ராஜாவுடன் மட்டும் இன்றும் தொடர்பு இருக்கிறது. மற்றவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது. . மதிப்பெண் பட்டியல் வாங்கும்போதுகூட யாரையும் பார்க்கமுடியவில்லை. நான் சீக்கிரமே போய் வாங்கிக்கொண்டு திருநெல்வேலி வந்துவிட்டேன். இப்போது நினைத்தாலும் தொண்டையை அடைக்கும் துக்கம் அது. இன்றும்கூட திடீரென அழகரடி கனவில் வருவதுண்டு. ஃப்ரான்சிஸ், இன்பக்கந்தன், சரவணக்குமார், பாலாஜி என்று சிலரை ஃபேஸ்புக்கில் பிடிக்கமுடிந்தது. ஃப்ரான்சிஸுடன் எப்போதுமே கொஞ்சம் தொடர்பில் இருந்தேன்.

மகன் அபிராமை 9ம் வகுப்புக்கு வேறு ஒரு பள்ளிக்கு மாற்றினேன். கொஞ்சம் ரிஸ்க்தான். பெரிய ரிஸ்க்காகக்கூட இருக்கலாம். தொடர்ந்து ஏழு வருடங்கள் ஒரே பள்ளியில் படித்தவன் அபிராம். நான் எந்த ஒரு பள்ளியிலும் 3 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து படித்ததில்லை. அதற்கே எனக்குப் பிரிவு அத்தனை வருத்தமாக இருந்தது. அபிராமுக்கும் இப்போது அதே மனநிலை. ஆனால் நான் இருந்ததைவிட கொஞ்சம் முதிர்ச்சியுடன் இருக்கிறான் என்றே தோன்றுகிறது. 1ம் வகுப்பிலிருந்து 2 வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற்றும்போது,  “என்னடா, ஃபிரண்ட்ஸை விட்டுப் போறோம்னு இருக்கா” என்று கேட்டதற்கு, “ஏன் அங்க ஃப்ரண்ட்ஸ் இருக்கமாட்டாங்களா” என்று கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இன்று இதைக் கேட்கும் நிலையிலெல்லாம் இல்லை. விவரம் புரியத் தொடங்கிவிட்டது. இதுதான் நிஜம் என்று ஒரு பக்கம் புரிந்தாலும், வருத்தமாகத்தான் இருக்கிறான். கடைசி வரையில் எப்படியாவது இந்தப் பள்ளி மாற்றம் தடைபட்டுவிடும் என்று எதிர்பார்த்தான்.

நான் மதுரையில் பெரிய நண்பர்கள் படையைவிட்டுவிட்டு திருநெல்வேலி சென்றபோது, இனி அப்படி நண்பர்கள் கிடைக்கமாட்டார்கள் என்றே நம்பினேன். ஆனால் திருநெல்வேலி இன்னொரு நண்பர்படையுடன் என்னை உள்வாங்கிக்கொண்டது. இன்றளவும் தொடரும் நட்புகள் அவை. அதே தீவிரத்துடன் அதே நட்புடன் அதே உண்மையுடன். துபாய் சென்றபோது மீண்டும் அதே எண்ணம், ‘இனி அப்படி நட்பு அமையாது’ என்பதே. ஆனால் வாழ்க்கை இதையும் உடைத்துப் போட்டது. சென்னைக்கு வந்த பிறகும் இப்படிச் சில நண்பர்கள் அமைந்தார்கள். இனி அமைவார்களா? தெரியாது. ஆனால் அமையமாட்டார்கள் என்று நிச்சயம் சொல்லிவிடமுடியாது என்பதை காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது.

இன்று அபிராம் புதிய பள்ளிக்குச் செல்கிறான். நான் பத்தாம் வகுப்பில் என் நண்பர்களைப் பிரிந்தபோது அவர்களுடன் ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது அதற்கெல்லாம் வசதி இல்லை. இன்று மறக்காமல் நான் அபிராமுக்குச் செய்தேன். பள்ளியின் கடைசி நாளன்று அவன் பள்ளிக்குப் போய் அவனை அவன் நண்பர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன். இதில் பல நண்பர்களை அபிராம் இனி பார்த்துப் பழகமுடியாமல் போகலாம். ஆனால் புதிய பள்ளி புதிய நண்பர்களுடன் நிச்சயம் காத்திருக்கும்.

Share

சிலுக்குவார்பட்டி சிங்கம்

விஷ்ணுவிஷாலின் அஜெண்டா என்னவென்று தெரியவில்லை. மிகத் தவறாமல் ஹிந்து மதத்தைச் சீண்டுவதை, குறிப்பாக கிறித்துவ மதத்துக்கு மாறுவதை நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் படத்தில் நுழைத்துக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சொல்லி படத்தில் காட்சியை வைத்தே ஆகவேண்டிய அளவுக்கு அவர் உயரவும் இல்லை. அப்படியானால் ஒட்டுமொத்த திரைப்படச் சூழலும் எப்படி இருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

இவர் நடித்த ஜீவா படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி ஏற்கெனவே எழுதி இருந்தேன். இங்கே வாசிக்கலாம்.

இப்போது ஒரு படம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம். 2018ல் வந்திருக்கிறது. ஓவியாவுக்காகப் பார்க்கப் போனால், கதாநாயகி வேறொரு பெண். சரி, பார்ப்போம் என்று பார்த்ததில், கண்ணில் பட்ட ஒரு காட்சி. வீடியோ இணைத்திருக்கிறேன்.

எப்படி நேரடியாக, மறைமுகமாக, பின்னணியாக, உபகாட்சியாக, காமெடியாக, சாதாரணமாக, காதலாக, கண்ணீராக, கோபமாக எப்படியெல்லாம் நுழைக்கிறார்கள் பாருங்கள். எதாவது ஒரு படத்திலாவது ஒரு இஸ்லாமிய கதாபாத்திரமோ கிறித்துவ கதாபாத்திரமோ இப்படி ஒரு வசனம் பேசுவதாக வைத்திருக்கிறார்களா? அப்படி வைத்திருந்தால், அது ஹிந்து மதத்தையும் சேர்த்துப் புறக்கணிக்கும் ஒரு ‘புரட்சி’ப் படமாக இருக்குமாறு பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

Share

கிரேஸி மோகன் – அஞ்சலி

கிரேசி மோகன் – மறக்கமுடியாத ஆளுமை. மூன்று முறை போல சந்தித்திருக்கிறேன். எதையுமே அவரால் நகைச்சுவையாகத்தான் யோசிக்கமுடியும். நகைச்சுவை அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்று. அதனால்தான் தமிழின் மிகச்சிறந்த காமெடிப் படங்களை அவரால் தர முடிந்தது. இன்றளவும் அவர் பங்களித்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் மற்றவர்களால் தொடமுடியாத உயரத்திலேதான் இருக்கின்றன. ஒரு வார்த்தையை அப்படியே நோண்டி எடுத்து அதிலிருந்து இன்னொரு வார்த்தை, அதிலிருந்து இன்னொரு வார்த்தை என உருவாக்குவதில் சமர்த்தர். அது மட்டும் இருந்திருந்தால் பெரிய விஷயமல்ல. அப்படி இணைக்கப்படும் வார்த்தைகளில் இருக்கும் நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். காதலா காதலா நகைச்சுவை வசனங்களுக்கெல்லாம் தியேட்டரில் எப்படிச் சிரித்தோம் என்று இன்னும் நினைவிருக்கிறது. கொஞ்சம் குறைங்க என்னும் வசனத்துக்கு கமல் குறைக்கவும், அட அப்படி இல்லைங்க என்று எதிராளி எரிச்சலுடன் சொல்வார். எனக்கும் அதே எரிச்சல் இருந்தது. அப்ப இப்படியாங்க என்று வேறு மாதிரி கமல் குரைத்துக் காண்பித்த காட்சியில் சட்டென சிரித்தது இன்னும் நிழலாடுகிறது. பேரு மதன், மதனேஸ்வரன்னு சுருக்கமா கூப்பிடுவாங்க – என்பதெல்லாம் மறக்கவே முடியாது.

ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு அவர் வசனம் எழுதுவதாக இருந்தது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். எழுதி இருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் என்று திரையில் பார்த்த நொடியில் ஆச்சரியமாக இருந்தது. கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை அதில் பார்க்கவே முடியாது.

மூன்று முறை சந்தித்தபோதும் கிரேஸி மோகனை ஒரு குழந்தை என்றேதான் உணரமுடிந்தது. ‘என் புக் கிண்டில்ல நம்பர் 1 ஆமேவாம்ப்பா’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இன்று வரை புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை வாசகர்கள் தேடி வருவார்கள். அதில் ஒன்று கிரேஸி மோகனின் புத்தகங்கள். எளிமையான மனிதர்.

எனக்கு பதினாறு வயதிருக்கும்போது தற்செயலாக ‘பொய்க்கால் குதிரை’ என்றொரு படம் பார்த்தேன். வாலி மீது அத்தனை பிரியம் இருந்த நாட்கள் அவை. அந்தப் படத்தில் வந்த பல வசனங்களில் அப்படிச் சிரித்தேன். அது வாலி எழுதியவை என்றே நினைத்திருந்தேன். பின்னர்தான் அது கிரேஸி மோகனின் நாடகம் ஒன்றின் திரையாக்கம் என்றும், அந்த வசனங்கள் கிரேஸி மோகன் எழுதியது என்றும் தெரிந்தது. அதற்கும் முன்பே தூர்தர்ஷனின் பல நாடகங்கள் வழியாக கிரேஸி அறிமுகமாகி இருந்தார்.

நடிப்பைப் பொருத்தவரை கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில்கூட கொஞ்சம் அலட்டலே இல்லாமல் அவர் நடித்தது மறக்கமுடியாதது. ‘உங்க பையனைக் கூட்டிண்டு நாடகத்துக்கு வாங்களேன்’ என்றார். அவர் சொன்னதும்தான் அவரது நாடகத்தை நேரடியாகப் பார்த்ததில்லை என்று உறைத்தது. சரி பையனைக் கூட்டிக்கொண்டு போவோம் என நினைத்திருந்தேன். சமீபத்தில் சுவரொட்டிகளைப் பார்த்தபோதும்கூடத் தோன்றியது. ஆனால் போகவே முடியவில்லை.

தேவி 2 அவர் எழுதிய வசனம் என்று கூகிள் சொல்கிறது. அவருக்காகவாவது பார்க்கவேண்டும்.

தமிழர்களை அதிகம் சிரிக்க வைத்த கலைஞர் கிரேஸி மோகனாகவே இருக்கவேண்டும். அஞ்சலிகள்.

Share