Archive for திரை

பஸ்தர் – ஹிந்தித் திரைப்படம்

பஸ்தர் – தி நக்ஸல் ஸ்டோரி (H) – மாவோயிஸ்ட்டுகளுக்கான எதிர்பிரசாரத் திரைப்படம். கேரளா ஸ்டோரி எடுத்த குழுவிடமிருந்து வந்திருக்கும் படம். ஒரு திரைப்படமாக கேரளா ஸ்டோரியில் இருந்த போதாமைகளும் பின்னடைவுகளும் இந்தப் படத்தில் துருத்திக் கொண்டு வெளிப்படையாக வெளியே தெரிகின்றன.

என்னதான் பிரசாரப் படம் என்றாலும் அடிப்படையில் இது ஒரு சினிமா. அந்த சினிமாவின் மொழியைத் தீவிரமாகவும் லாகமாகவும் கை கொள்ளாத எந்த ஒரு திரைப்படமும் எரிச்சலையே ஏற்படுத்தும். இந்தப் படம் முழுமையாக எரிச்சலை மட்டுமே தருகிறது. நாடகத்தனமான கதை. செயற்கையான நடிப்பு. அதீதத் திணிப்பு.

மிகப் பெரிய நாட்டின் முக்கியமான பிரச்சினையைக் கிறுக்குத்தனமாக கையாண்டிருக்கிறார்கள். பஸ்தர் என்ற ஊரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் மாவோயிஸ்டுகள் என்ற வார்த்தை நினைவுக்கு வராமல் இருக்காது.

பஸ்தரையும் சரி, பஸ்தரில் இருக்கும் பிரச்சினைகளையும் சரி, மாவோயிஸ்ட்டுகளையும் சரி, மிக மேம்போக்காகப் பேசுகிறது இத்திரைப்படம்.

Share

Laapataa Ladies – Hindi Movie

Laapataa ladies {H} – நம்ப முடியாத கதை. ஆனால் சுவாரசியமாக எடுத்திருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் பலரும் பாராட்ட மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தேன். அந்த அளவுக்குக் கவரவில்லை என்றாலும் சந்தேகமே இல்லாமல் நல்ல ஃபீல் குட் மூவி.

குடும்ப பந்தங்களை எல்லாம் விட்டுவிட்டுத் தன் கனவை நோக்கிச் செல்ல நினைக்கும் ஒரு பெண். தன் கணவனே தனக்கு எல்லாம், குடும்பமே எல்லாம் என்ற கனவுடன் குடும்ப வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இன்னொரு பெண். இதற்கிடையில், கணவனை வெறுத்து ஒதுக்கி, தன் காலில் தனியாக நின்று கடை நடத்தும் ஒரு பெண். எந்த உறுத்தலும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையில் பெண்ணுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே அந்தப் பெண் படிக்க நினைக்கும் கனவையும் வலியுறுத்தி, அனைவருக்கும் நல்லபடியாக முடித்து விட்டார்கள். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளும் இன்னும் பல காட்சிகளும் செயற்கைத்தனமாக இருந்தன. ஆனாலும் படம் எடுத்த விதத்திலும் நடித்த விதத்திலும் அதை ஈடு செய்திருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் கடை நடத்தும் அந்த பெண்ணின் நடிப்பு மிக மிக அருமை

படத்தின் பிரச்சினையாக நான் பார்த்தது, படம் முதலில் ஒரு பெண்ணின் பார்வையில் வருகிறது. நாம் அதனுடன் பயணிக்கிறோம். திடீரென்று படம் இன்னொரு பெண்ணின் பார்வைக்குத் தடம் மாறுகிறது. இந்தத் தடுமாற்றத்தை கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

Share

Thalaimai seyalagam web series

தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ்)

முதலில் பாஸிடிவ்வான விஷயம். தமிழக அரசியலின் குடும்ப அரசியலை நன்றாக எடுத்திருக்கிறார்கள். மிகப் பெரிய பலம் இது. முழு எபிசோடையும் பார்க்க வைப்பது இது மட்டுமே.

இனி மற்றவை.

ஸ்பாய்லர்ஸ் உண்டு.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. மாவோயிஸ்ட் பெண் அதிகாரத்தைக் கைப்பற்றும் கதையைச் சுற்றி வளைத்துச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையில் இந்த மாவோயிஸ்ட் புரட்சி ஜல்லியை விட்டுவிட்டு, தமிழக அரசியலில் மட்டும் கவனம் குவித்து எடுத்திருந்தால் பிரமாதமான அரசியல் சீரிஸாக வந்திருக்கும்.

தமிழக அரசியலில் குடும்ப அரசியல் என்றால் யாரை நினைப்போம் என்று எல்லாருக்கும் தெரியும். அந்தச் சாயல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஊழலில் தண்டனை பெறப் போகும் முதல்வர் என்று சொல்லி, ஜெயலலிதாவின் சாயலைக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனாலும் குடும்ப அரசியல் பற்றிய காட்சிகளைப் பார்க்கும்போது நாம் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

1998ல் அமைக்கப்படும் ஆட்சி மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க ஒரு கமிட்டி அமைக்கிறது. அந்த கமிட்டியில் மூன்று முதல்வர்கள் மட்டும் வன்முறைக்கு எதிராகக் களம் இறங்குகிறார்கள். அதில் ஒருவர் தமிழக முதல்வர். இதை சட்னின்னா இட்லி கூட நம்பாது மொமெண்ட். அந்த மத்திய ஆட்சி 99ல் கலைகிறது. அந்த ஆட்சி, ‘நியாயத்துக்காக’ப் போராடும் மாவோயிஸ்ட்டுகளை, கிராமத்து மக்கள் கையில் துப்பாக்கிகளைக் கொடுப்பதன் மூலம் கொல்கிறதாம். ஏன் வாஜ்பாயி இப்படிச் செய்யாமல் விட்டார் என்கிற எண்ணம்தான் வருகிறது.

பேராசைப்படும், அரசியல் குயுக்தி செய்யும் பிராமண வக்கீல்கள். நமாஸ் செய்தபடி நியாயத்துக்காகப் போராடும் போலிஸ். கூடவே வரும் நல்ல கிறித்துவ போலிஸ். எல்லாம் பக்கா. எங்கேயும் ‘போராளி’ இயக்குநர் தவறவே இல்லை. தவறி இருந்தால் செம சீனாகிரும்னு அவருக்குத் தெரியும்.

அரசியலில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் ஆளுமைகளை ஒருங்கே பயன்படுத்தியது சிறப்பு. ‘ஊழல் செய்த ஒரு முதலமைச்சராகவும் இருக்கவேண்டும், அவர் மேல் மக்களுக்குக் கரிசனமும் வரவேண்டும்’ என்று யோசிக்காமல், உள்ளது உள்ளபடி காட்டி இருக்கலாம். இப்படியான நல்ல ஆனால் கெட்ட முதல்வர் என்பதுதான் இயக்குநரின் கையைக் கட்டிப் போட்டுவிட்டது.

அடுத்த முதல்வர் யாரென்று சொன்னதோடு படம் முடிந்துவிட்டது. அப்படியே முடித்திருந்தால் உண்மையில் இது மைல் கல் சீரிஸாகி இருந்திருக்கும். ஆனால் போராளி இயக்குநர் விழித்துக்கொண்டு விட்டார்.

ஒரே ஃப்ரேமில் கதையை மாற்றி, போராளியை முதல்வராக்கி, அதிகாரத்தைக் கைப்பற்றி.. மொத்தமும் பாழ்.

மேக்கிங்கில் பல காட்சிகள் தரம். பல காட்சிகள் குழந்தைத்தனம். பல காட்சிகள் டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வு. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது சின்ன குழந்தைக்குக்கூட தெரியும் வகையிலான திரைக்கதை. முதலிரண்டு எபிசோடுகள் பொறுமைக்கான சோதனை. திரைப்படமல்ல என்பதற்காகவே பத்து நொடி காட்சியை முப்பது நொடிக்கு இழுக்கவேண்டியதில்லை. எபிசோட் ஆரம்பிக்கும்போது எதாவது திடுக்கென இருக்கவேண்டும் என்பதறாக எதையாவது காண்பிக்கும் அவலம். செத்துப் போன போலிஸ், அவன் மனைவி எனக் கொடுமைகளின் வரிசை.

அரசியல் சீரிஸாக உச்சம் தொட்டிருக்கவேண்டிய ஒரு வாய்ப்பை, தேவையற்ற மாவோயிஸ்ட் திணிப்பால் கோட்டை விட்டிருக்கிறார் வசந்தபாலன். ஒன்று மாவோயிஸ்ட் படம் எடுக்கவேண்டும், இல்லையென்றால் தமிழக அரசியல் படம் எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றாகச் செய்தது சறுக்கல்.

ஸீ 5ல் கிடைக்கிறது. பொறுமை இருப்பவர்கள் பார்க்கலாம்.

Share

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக

இளையராஜா குறித்து அராத்து எழுதியது தொடர்பாக.

பொதுவாக அராத்து சென்ஸிபிளாக எழுதக் கூடியவர். ஆனால் இந்த முறை சறுக்கி இருக்கிறார். சில பூமர் அங்கிள்கள் பொழுதுபோகாமல் அவ்வப்போது ராஜாவைத் திட்டி லைக் வாங்குவது கண்கூடு. அராத்து அப்படிச் செய்பவரும் அல்ல.

* இசை தெரியாது என்று சொன்னால் இசை குறித்த கருத்தில் இருந்து விலகி இருந்திருக்கவேண்டும்.

* தபேலாவில் டொண்டனக்க என்று இசையமைப்பவர் என்று செவிடர்கள் கூட சொல்ல மாட்டார்கள்.

* கணவன் மனைவிக்கு, காதலர்களுக்கு ராஜாவின் பாட்டே கிடையாது என்பது அபத்தம். ஒருமுறை சுரேஷ்குமார் இந்திரஜித், ‘ராஜாவின் பாடல்களில் அதிகபட்சம் 15 தேறும்’ என்றார். அதற்கு இணையான அபத்தம். மூன்று தலைமுறைகள், ராஜாவின் பாடலால்தான் காதலித்தது, காமம் கொண்டது, சோகத்தில் அழுதது, வெற்றியில் நிமிர்ந்தது, சந்தோஷத்தில் தளுதளுத்தது. இது எம்.எஸ்.விக்கும் கே.வி.எம்முக்கும் பின்னர் ரஹ்மானுக்கும் நடந்தது.

* ‘என் இசை’ என்ற கர்வமே ஒரு கலைஞனைச் செலுத்தக் கூடியது. அராத்து அடிப்படையில் ஓர் எழுத்தாளர். அவர் எப்படி இதைத் தவறவிட்டார் என்பது ஆச்சரியம். சாரு நிவேதிதாவின் ‘என் எழுத்து’ என்னும் திமிருக்காகவே அவரது வாசகர்கள் அவரை வாசிப்பது அராத்துவுக்குத் தெரிந்திருக்கும். அந்த உரிமை ராஜாவுக்கு உண்டு. அதுவும் சாரு நிவேதிதாவைவிட பல மடங்கு உண்டு.

* இன்னொருவரை வளரவிடவில்லை என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இளையராஜாவை மீறி வளர, அவரளவு திறமை உள்ள ஒருவர் வரவேண்டும். இல்லையென்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் ஆள்கள் வருவார்கள். வந்தார்கள். ரஹ்மான் புதிய இசையோடு வந்தபோது இளையராஜா அவர் வளர்ச்சியை ஒன்றும் செய்துவிடவில்லை என்பதே வரலாறு.

* இளையராஜா போன்ற, கற்பனைக்கெட்டாத சாதனையாளர்கள் இப்படித் தூற்றப்படுவது நாம் யார் என்பதைத்தான் சொல்கிறதே ஒழிய, ராஜாவின் திறமையை இம்மியளவும் மதிப்பிட்டுவிடவில்லை.

Share

Avesham Malayalam Movie

ஆவேஷம் (M) – ஃபகத்தின் நடிப்பை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். நம்ப முடியாத கதை. நம்பினால் சில அருமையான காட்சிகளும் அனுபவமும் இருக்கின்றன. அது முழுமையானதாக இருக்கிறதா என்றால் இல்லை. மலையாளப் படங்களின் பிரத்யேகத் தன்மையில் இருந்து முற்றிலும் விலகி, ஒரு தமிழ்ப் படம் போல நகர்கிறது இப்படம். தனுஷின் பல படங்கள் இப்படிப்பட்ட வகையறாக்கள்தான். எனவே நமக்கு எதுவும் புதிதாகத் தோன்றுவதில்லை.

மலையாளிகள் நல்ல வசூல் தரும் படங்களை எடுப்பதிலும் மெல்ல மெல்ல மேலேறி வருகிறார்கள். குருப் படத்தில் ஆரம்பித்து இப்போது வரை பல படங்களில் நல்ல வசூல். இத்தனைக்கும் குருப் சுமாரான திரைப்படமே.

இந்தப் படமும் அப்படியே. ஆனால் இந்தப் படத்தில் முதல் 40 நிமிடம் அதாவது ஃபகத் ஃபாசில் வரும் வரையிலான திரைப்படம் அசல் மலையாளத் திரைப்படம். அந்த மூன்று இளைஞர்களின் நடிப்பும் முகமும் மறக்க முடியாதவை. கிளைமாக்ஸ் யூகிக்கக் கூடியதாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் இருந்தது மிகப்பெரிய பலவீனம். ஃபகத் பல இடங்களில் ஓவராக நடித்தாலும் அது இந்த கேரக்டருக்குப் பொருந்தித்தான் போகிறது.

இத் திரைப்படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை குடி குடி குடிதான். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒரே ஒரு காட்சியில் அந்த மூன்று இளைஞர்களும் குடியை வேண்டாம் என்று சொல்கிறார்கள். இத்தனை குடி அவசியமா என்று எரிச்சல் வரும்போது தமிழ்ப் படங்களின் லட்சணம் முகத்திலறைகிறது.

விடுவித்துக் கொள்ளவே முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொள்ளும் திரைக்கதைகளின் முடிவு எப்போதுமே மிக எரிச்சல் தருவதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. கேங்ஸ்டர் படங்கள் பிடிக்கும் என்றால், கேங்ஸ்டர் படத்தை இன்னொரு கோணத்தில் காண்பித்ததற்காக ஒரு முறை பார்க்கலாம்.

Share

Premalu Malayalam Movie

ப்ரேமலு (ம) – இளமைக் கொண்டாட்டம். நான்-ஸ்டாப் புன்னகை. மலையாள இளைஞர்களின் வாழ்நாள் படமாக இது இருக்கும். ஹீரோயின்‌ அழகு என்றால் ஹீரோ அதற்கும் மேல். இருவரின் வெள்ளந்தித்தனமே நம்மை ஒன்ற வைக்கிறது. காட்சிக்குக் காட்சி புன்னகை. கடைசி பத்து நிமிடம் ஒரு பக்கம் மனம் உருக, இன்னொரு பக்கம் சிரிப்பு என கலக்கிவிட்டார் கள். தொடக்கம் முதல் இறுதி வரை கதையே இல்லாமல் காட்சிகளிலும் காதலிலும் நட்பிலும் படத்தை எங்கோ கொண்டு போய்விட்டார்கள். தமிழ் டப்பிங்கில் பார்த்தால் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு குறையலாம். ஏனென்றால் இது பிரேமம் போல மலையாள இளைஞர்களின் அசல் கொண்டாட்டம். பிரேமத்தில் கேரள நிலம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. இதில் அதுவும் இல்லை. ஆனாலும் அக்மார்க் மலையாளத் திரைப்படமாக முகிழ்ந்திருக்கிறது. டோண்ட் மிஸ்.

ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

J Baby Tamil Movie

ஜெ பேபி – 1990களில் இருந்தே ஊர்வசியின் நடிப்பைப் பார்த்துப் பயந்து போய், அவரது படம் என்றாலே கையெடுத்துக் கும்பிட்டு ஒதுங்கி நின்றவன் நான். அதிலும் ஒருவித லூஸு கதாபத்திரமாகவே நடித்து நடித்து அவரது எந்த ஒரு கதாபாத்திரமும் லூஸுதானோ என்று நினைக்க வைத்துவிட்டது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் ஊர்வசி இத்தனை தத்ரூபமாக நடிப்பார் என்று நினைக்கவே இல்லை.

படத்தைத் தனியாளாகத் தாங்கிப் பிடிக்கிறார் ஊர்வசி. இத்தனை வருடத் திரைப்படங்களில் காண்பிக்காத உடல்மொழியைக் கொண்டு வந்திருக்கிறார். இப்படி குறைந்தது பத்துக் காட்சிளாவது சொல்ல முடியும். கண்கலங்க வைத்துவிடுகிறார்.

படத்தின் முதல்பாதியிலேயே பேபியின் கதாபாத்திரம் இத்தகையது என்று காட்டி இருந்தால் ஒரு தொடர்ச்சியும் பரிதாபமும் இருந்திருக்கும். ஏனோ அதை விட்டுவிட்டார்கள். மூத்த மகனாக வரும் நடிகரின் நடிப்பும், கல்கத்தாவில் உதவி செய்யும் நடிகரின் நடிப்பும் அபாரம். யதார்த்தம். அட்டகத்தி தினேஷும் நன்றாக நடித்திருக்கிறார். படத்துக்காகத் தொப்பை போட்டிருந்தால் கூடுதல் பாராட்டுகள்.

சில காட்சிகள் மிகப் பிரமாதமாக இருப்பதும் சில காட்சிகள் இழுவையாக இருப்பதும் பலவீனம். சென்னைத் தமிழ் பெரிய பலம். ஒரே ஒரு காட்சியில் தெரசா தன் கைகளை நீட்டி அபயம் காட்டிக்கொண்டிருக்க, அடுத்த சில காட்சிகளில் ‘கடவுளே இல்லை’ என்பது போல தன் கையில் இருக்கும் கயிறுகளை ஹீரோ கழற்றி எறிகிறார். ‘நீலம்’ திரைப்படமென்றால் இது போல ஏதாவது ஒன்று இருக்கவேண்டும் என்பதற்காகவே இதை வைத்திருக்கிறார்கள் போல.

குடும்பத் திரைப்படங்கள் வராத காலங்களில், நிஜமான நிகழ்ச்சி ஒன்றை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை எடுத்து, விசுத்தனமான கதையை இத்தனை தரமாக எடுத்து அசத்தி இருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் ‘பெண்மணி அவள் கண்மணி’யை நினைவுபடுத்தின. கட்டாயம் பார்க்கலாம்.

Share

Rebel Tamil Movie

Rebel (T) – தமிழ்ப் படத்துக்கு ஆங்கிலப் பெயர் வைப்பது ஃபேஷனாகிவிட்டது. ஆங்கிலப் பெயர் வைத்தால் 10% கூடுதல் வரி என்று சொல்லி இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசுக்கு நல்ல லாபமும், தமிழ்க்குடி காத்தான் என்கிற பாராட்டும் கிடைக்கும்.

எப்படி நான் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறேனோ அப்படித்தான் படமும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. கல்லூரிக்குள் நடக்கும் அரசியலை, அதுவும் கலைக்கல்லூரிக்குள் நடக்கும் அரசியல் என்னும் ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கிக் காட்டுகிறார்கள். ஒட்டவே இல்லை. மூணாற்றில் தமிழர்கள் பட்ட கஷ்டங்களைக் காண்பிக்க நினைக்கும் படத்தில் நம் மனதில் நிற்பது கேரள கம்யூனிஸ காங்கிரஸ் அரசியல் சண்டைகள்தான்!

கம்யூனிஸ்ட்டுகளை முதலில் நல்லவர்களாகக் காண்பித்து, பின்பு அவர்களையும், பாவாடையைக் கழற்றிவிடும் கெட்டவர்களாக்கி, அதற்கொரு முட்டுக் கொடுக்கும் விதமாக, ‘நீ பாத்து வளந்த கம்யூனிஸம் வேற இந்த கம்யூனிஸம் வேற’ என்று என்னவோ சொல்லி… அடேய்களா… ரெண்டு கம்யூனிஸத்துக்கும் என்ன வித்தியாசம்னு எனக்குத் தெரியும். அது கறுப்பா பயங்கரமா இது. இது பயங்கரமா கறுப்பா இருக்கும். ஆட்சி அதிகாரம் கிடைத்தால் கம்யூனிஸம் என்ன செய்யும் என்பது வரலாற்றில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது இயக்குநருக்குத் தெரியாது போல.

காங்கிரஸ் சார்பாக வரும் இளைஞர் பட்டையைக் கிளப்புகிறார். நன்றாக நடிக்கும் அத்தனை பேரும் மலையாளிகள்! இந்த மலையாளிகள் நடிக்கும் காட்சிகள் அநியாய மண்மணத்தோடு பளபளப்பாக இருக்கின்றன. இயக்குநருக்கு கேரளத் திரையுலகில் நல்ல எதிர்காலம் நிச்சயம் உண்டு.

படத்தில் வசனம் எழுதியவர் என்னவோ எழுத, காட்சியாக வேறு என்னவோ வருகிறது. வேட்டி கட்டியவனைப் பார்த்ததும் தமிழ் உணர்வு பொங்கி வருது என்று ஒரு பக்கம் வசனகர்த்தா பிலாக்கணம் வைக்க, அங்கே தமிழ்த் தடியர்கள் பேண்ட் சட்டையில் வர, மலையாளக் ‘குடி வெறியர்’களோ அழகாக, பாந்தமாக வேட்டியில் இருக்கிறார்கள். இன்னொரு காட்சியில் வசனகர்த்தா உணர்ச்சிவசப்பட்டு திமுகவின் கொடியை, கறுப்பும் சிவப்புமே நம் நிறம் என்று புல்லரிப்புடன் பேச, கொடியில் கறுப்பு வெள்ளை சிவப்பு என்று அதிமுக கொடி போலக் காண்பிக்கிறார்கள். அதிமுகவுக்கும் புரட்சிக்கும் என்னய்யா சம்பந்தம்?

பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் வரும் அதே எரிச்சல் இதிலும். ஆம், கேரள மாணவர்களுள் ஒருவன் கூட நல்லவனில்லை. தமிழ் மாணவர்களுள் ஒருத்தன் கூட கெட்டவனில்லை. இங்கேயே ஒரு படம் பிரசாரப் படமாக மாறித் தோற்றுப் போய்விடுகிறது.

படம் முழுக்க சிவப்பு, புரட்சி, ஈவெரா, சேகுவேரா என்று குறியீடுகள். 80களின் ரஜினி மற்றும் இளையராஜாவைச் சரியாகப் பின்னணியில் வைத்தவர்கள், என்னதான் கம்யூனிஸம் மூணாற்றில் வலுவாக இருந்தது என்றாலும், திமுக அதிமுக தலைவர்களை ஒரே ஓர் இடத்திலாவது வைத்திருக்கலாம்.

80கள் என்பதால் இளையாராஜாவின் தமிழ்ப் பாடல்கள் பின்னணியில். அத்தனையும் மனதை வருடுகின்றன. அதுவும் ஒரு காட்சியில், ‘பூங்காற்றினோடும்’ என்னும் மலையாளப் பாடல் மனதை வருட, அப்படியே படத்தை நிறுத்திவிட்டுப் பாட்டைப் போட்டுக் கேட்டால் என்று மனம் கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. இன்று காலை அந்தப் பாட்டை பலமுறை கேட்டபின்பே இதனை எழுதுகிறேன்.

மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், செயற்கைத்தனமான புரட்சி என்று எரிச்சலை ஏற்படுத்தும், மனதோடு ஒட்டாத இன்னுமொரு தமிழ்ப்படம். மலையாளிகளும் கேமராவும் அருமை.

Share