இது எங்கள் வழக்கம். பலர் வீட்டில் இப்பழக்கம் இருக்கும். மீந்து போன பழைய சாதத்தை, நல்லெண்ணெய்யும் உப்பும் போட்டுக் கெட்டியாகப் பிசைந்து, அதை உருட்டி, அதில் குழி செய்து, குழம்பு சேர்த்து உண்டால், சொர்க்கம். (இதில், கன்னடத்தில் கரத எண்ணெ எனப்படும், வடை இதியாதி சுட்ட எண்ணெய்யைப் போட்டுப் பிசைந்தால் சுவை இன்னும் கூடும்.)
சுண்ட வைத்தப் பழங்குழம்பு என்றால், அதுவும் கொதிக்க கொதிக்க இருந்தால், சுவை அள்ளும். அதாவது அந்தக் குழம்பு நாக்கில் படும்போது நாக்கு பொள்ளிப் போகவேண்டும்.
எண்ணேப்பின்னா என்றால், எண்ணெய் உப்பு அன்னம் என்று பொருள். சிலர் வழக்கத்தில் எண்ணப்பிட்டன்னா என்றும் எண்ணப்புன்னா என்றும் சிலர் சொல்வதுண்டு.
என் அம்மா கையில் உருட்டித் தருவார். இப்போது நினைத்தாலும் அந்தச் சுவைக்கு நாக்கு ஏங்குகிறது.
அப்போதெல்லாம் பழைய சோறு நிறைய மீந்து போகும். ஏனென்றால் எப்போதும் சாதம் வீட்டில் இருக்கவேண்டும் என்பது ஒரு விதி. கஷ்ட ஜீவனம். பழைய குழம்பும் இதுவும் உண்டால் மதியம் மூன்று மணி வரை பசிக்காது. சுவையும் அள்ளும்.
இப்போதெல்லாம் மதியத்துக்கு உணவு என்றால் அது மதியமே காலியாகும் வகையில்தான் சமைக்கிறோம். எப்போதாவதுதான் இப்படிச் சாப்பிட முடிகிறது. டயட் கவலை வேறு. ஆம், இந்த உணவு என்னைப் போன்ற ஸ்லிம்மிக்களுக்கான உணவு.
திருநெல்வேலியில் என் 20 வயதில் பரோட்டா எனக்குத் தீவிரமாக அறிமுகமாகியது. அதாவது வாரம் ஒரு தடவை பரோட்டா சாப்பிடவில்லை என்றால் கை கால் நடுங்கும் அளவுக்கு. என் நண்பர்களுக்கும் இதேதான். ஞாயிற்றுக் கிழமை இரவானால் அசைவ பரோட்டா சாப்பிடுவது அவர்கள் வழக்கம். அந்த வட்டத்தில் மாட்டிக்கொண்ட ஒரே சைவன் நான்.
திருநெல்வேலியில் சால்னாவுடன் சேர்த்து, தக்காளி அரைத்து ஊற்றிய இன்னொரு வகை குருமாவும் (கிரேப்ஸ்) தருவார்கள். நண்பர்களுடன் சாப்பிடும்போது நான் இதை மட்டும் சாப்பிடுவது வழக்கம். ஏனென்றால் இதில் அசைவம் சேர்க்கப்படாது என்றொரு ’நம்பிக்கை’. (சைவமாக இதுவும் தவறுதான். ஆனால் அன்று அப்படி!)
சில சமயம் நண்பர்களுடன் நான் சைவக் கடைகளுக்குப் போவதுண்டு. அங்கே பரோட்டா குருமா நன்றாக இருந்தாலும் அசைவ நண்பர்களுக்கு ஏனோ செட்டாகாது. ஆனாலும் எனக்காக வருவார்கள்.
ஒருநாள் இனி அசைவக் கடைகளில் சாப்பிடுவதில்லை என முடிவெடுத்தேன்.
எனக்கு ஒரு வழக்கம் என்னவென்றால், பரோட்டாவுக்குக் கட்டிச் சட்னி வைத்துச் சாப்பிடுவது. அசைவக் கடையில் இது கிடைக்காது. சைவக் கடைகளில் கிடைக்கும். எந்தச் சைவக் கடைக்குப் போனாலும் இப்படிச் சாப்பிடுவேன். ரகுவிலாஸில் ஒருவிதப் புதினாச் சட்னி தருவார்கள். ஆனால் சைவக் கடைகளில் பரோட்டா விலை அதிகம். அசைவக் கடைகளில் பரோட்டா 1 ரூபாய் என்றால், இங்கே ஒரு பரோட்டா 10 ரூ. ஆனால் பரோட்டா பெரியதாக இருக்கும்.
அப்போதுதான் டவுணில் முத்து பரோட்டாக் கடை ஒன்று உதயமானது. அசைவ ஸ்டைலில் ஒரு சைவக் கடை. சைவ பரோட்டா 2 ரூபாய் மட்டுமே. உடனே அங்கே போக ஆரம்பித்தோம். கடை ஆரம்பித்த புதிது என்பதால் பட்டாணி எல்லாம் போட்டு பிரமாதமாக இருக்கும் குருமா.
அந்தக் கடை சிறிய கடை. 10க்குப் 10 கடை. உள்ளேயே மரப்படி அமைத்து மாடியில் உணவு தயாரிக்கும் இடம். அங்கே இருந்து ஒவ்வொரு தடவையும் ஓனர் கீழே வந்து பரிமாறுவார். இரண்டே பேர். பரிமாற, பில் செய்ய ஓனர். மேலே மாஸ்டர்.
நான் கட்டிச் சட்னி கேட்பேன். பரோட்டாவுக்குத் தருவதில்லை என்றாலும், எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பரோட்டாக் கடையை எட்டிப் பார்ப்பதில்லை என்பதால், எங்களையும் விட்டுவிடக் கூடாது என்பதற்காக, ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சூண்டு கட்டிச் சட்னி தருவார் ஓனர். ஆனால் நாங்கள் விடாமல் கட்டிச் சட்னி கேட்டுக்கொண்டே இருப்போம். ஒவ்வொரு முறையும் மாடிப்படி ஏறி அங்கிருந்து கொஞ்சூண்டு கட்டிச் சட்னி கொண்டு வருவார். எங்களுக்கே சங்கடமாக இருக்கும். ஆனாலும் கட்டிச் சட்னி, குருமா என்று கேட்டுக்கொண்டே இருப்போம். அவரும் சின்ன சின்ன கிண்ணங்களில் தருவார். சரியான கஞ்சன் அவர்!
சாப்பிட்டுவிட்டு வெளியே வந்ததும் நாங்களே பேசிச் சிரித்துக்கொள்வோம். என் நண்பர்கள் என்னை, ‘இவரு பெரிய இவரு, கட்டிச் சட்னி இல்லாம சாப்பிட மாட்டாரு’ என்றெல்லாம் ஓட்டுவார்கள்.
ஒருநாள் திடீரென அந்த முத்து பரோட்டாக் கடை மூடப்பட்டது. ஆறு மாதம் கூட அங்கே அந்தக் கடை செயல்பட்டிருக்கவில்லை. நாங்கள் சாப்பிடப் போனபோது கடை அங்கே இல்லாததைப் பார்த்து அத்தனை நண்பர்களும், ‘கட்டிச் சட்னி கேட்டுக் கடையையே மூடிட்டியே மக்கா’ என்று சொல்ல ஆரம்பித்து, அதுவே நிலைத்தும் போனது.
பெரிய கடைக்குப் போய் பரோட்டா சாப்பிடும்போது நான் கட்டிச் சட்னி கேட்டால் உடனே நண்பர்கள், ‘ஏல! இந்தக் கடையாவது இருக்கட்டும், ப்ளீஸ்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
பின்னொரு சமயம் தூத்துக்குடியில் பேருந்து நிலையத்தில் முத்து பரோட்டாக் கடை ஓனரைப் பார்த்தேன். தலையில் கர்ச்சீஃப் போட்டுக்கொண்டு கையில் ஒரு பையுடன் பரபரப்பாக எங்கோ போய்க்கொண்டிருந்தார். ‘சொல்லாம கொள்ளாம மூடிட்டேளே, தூத்துக்குடியில் கடை போட்டுருக்கேளா’ என்று கேட்க நினைப்பதற்குள் ஆள் மாயமாக மறைந்துவிட்டார்.
நேற்று அரட்டை ஆப் பற்றிச் சொன்னதும், நண்பர்கள் அரட்டையில்(லும்!) ஒரு க்ரூப் ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பெயர், ‘பரோட்டா கெட்டிச் சட்னி’.
நண்பர்களின் மனதை ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறேன் போல. ஆனாலும் இன்றுவரை பரோட்டா குருமாவுக்குக் கட்டிச் சட்னி எனக்கு வேண்டும்.
அபிமானியின் தீர்ப்புகளின் காலம் நாவல் பாதி வாசித்தேன். நான் வாசிக்கும் இவரது முதல் நாவல் இது.
இந்த நாவல் என் ரசனைக்கானதாகத் தெரியவில்லை என்பதால் நிறுத்தி விட்டேன். பழைய கால எழுத்து, க்ளிஷே விவரணைகள், பிரசாரம் மட்டுமே குறிக்கோள், எதையுமே தேவைக்கதிகமாகச் சொல்லி உணர்ச்சி மேலீட்டைச் செயற்கையாக உருவாக்குவது – இவையே இந்த நாவல் முழுக்க. இது 2019ல் வந்த நாவல் போல. உறுதியாகத் தெரியவில்லை.
நாவலில் தலித்தியப் பிரசாரம் என்பதெல்லாம் அவசியம்தான். ஆனால் அதைத் தாண்டி நாவலுக்கென்று ஒரு குணமும் அதை நோக்கிச் செல்லும் பலவிதமான கோணங்களும் தவறே என்றாலும் எதிர்த்தரப்பின் குரலும் இருப்பது, அந்த நாவல் தட்டையாவதில் இருந்து காப்பாற்றும். இந்த நாவல் இவற்றையெல்லாம் பாதி வரை தவற விட்டு இருக்கிறது. மீதி நாவலில் இவையெல்லாம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
என் நண்பர்கள் என்னை அரட்டை ஆப்பில் தொடர்பு கொள்ளலாம். 🙂
அரட்டை நன்றாகவே இருக்கிறது. பல சின்ன சின்ன விஷயங்கள் அசத்தலாகவே இருக்கின்றன.
அரட்டை என்றால் என்ன? வாட்ஸப் போன்ற ஒரு ஆப். இந்திய ஆப். ஃபோன் நம்பர் இருந்தால் எப்படி வாட்ஸப் பயன்படுத்துகிறோமோ அப்படி இதைப் பயன்படுத்தலாம்.
வாட்ஸப்புடன் ஒப்பிடும்போது என்ன இல்லை என்று பார்த்தால்…
* வாட்ஸப்பில் பணம் அனுப்பும் வசதி இருந்தது. இதில் இல்லை. பெரிய குறை எனக்கு இது. ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன்.
* டூயல் ஆப் வசதி வாட்ஸப்புக்கு ஆண்ட்ராய்டில் வருகிறது. அரட்டைக்கு வருவதில்லை. வேறு எந்த வழியில் அரட்டை ஆப்பை டூயல் ஆப்பாக வைப்பது என்று தெரியவில்லை. அரட்டை ஆப்பின் நோக்கில் இது மிக முக்கியமானது. இல்லையென்றால், அரட்டை ஆப்பும் வாட்ஸப்பும் ஆப்பும் தேவை என்றாகிவிடும்.
* பிசினஸ் விஷயங்களில் அரட்டை ஆப்பை எந்த அளவுக்குப் பயன்படுத்தமுடியும் என்று தெரியவில்லை. சொல்லி சொல்லித்தான் மற்றவர்களை மாற்றவேண்டும். அது நடக்காது. அந்த விஷயத்தில் வாட்ஸப் தொடவே முடியாத உயரத்தில் உள்ளது.
* அரட்டை ஆப்பில் ஸூம் போன்ற மீட்டிங் வசதிகள் கிடைக்கின்றன. மிக முக்கியமாக, 40 நிமிட எல்லை இல்லை என நினைக்கிறேன். அதைவிட முக்கியம், மொபைல் ரெக்கார்டிங், மொபைலில் சேமிக்கும் வசதி இருக்கிறது. எத்தனை எம்பி சேமிக்க முடியும் என இன்னும் சோதிக்கவில்லை. இந்த மீட்டிங் வசதி அட்டகாசம். அதாவது கூகிள் மீட்டும் வாட்சப்பும் இணைந்த வசதி அரட்டையில் கிடைக்கிறது.
* சில சமயம் வாட்ஸப்பில் நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்றால், அதை ஃபிக்ஸ் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடும். ஆனால் அரட்டை ஆப்பில் அதை ஃபிக்ஸ் செய்ய எளிதான வழி கொடுத்திருக்கிறார்கள். அதுவே செட்டிங்க்ஸை சோதித்து என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிடுகிரது. இது அட்டகாசம். நோட்டிஃபிகேஷன் வரவில்லை என்ற நண்பர்களுக்கு இதை அனுப்பி இருக்கிறேன்.
* இனி வரப் போவதுதான் அரட்டையின் ஆகப் பெரிய குறை. பல வெளிநாட்டு வாழ் நண்பர்கள், ஓடிபி வரவில்லை, எனவே இந்த ஆப்பை நிறுவமுடியவில்லை என்றார்கள். நிர்வாகம் உடனே இதைச் சரி செய்வது நல்லது.
* வாட்ஸப்பில் நமக்கு நாமே மெசேஜ் அனுப்பிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மிக முக்கியமானது இது. இது அரட்டையில் இல்லை. ஃபீட் பேக் அனுப்பி இருக்கிறேன். பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என. அதற்குப் பதிலாக பாக்கெட் என்றொரு வசதி இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன்பு பாக்கெட் என்றொரு ஆர் எஸ் எஸ் ஃபீடை சேமித்துப் படிக்கும் வசதி இருந்தது. மிக உபயோகமானது. அப்போதெல்லாம் ஆன்லைன் லின்க்கை க்ளிக் செய்து பாக்கெட்டில் சேமித்தால் அதை எப்போது வேண்டுமானாலும், ஆஃப்லைனிலும் படித்துக்கொள்ளலாம். அதைப் போன்ற வசதி என நினைத்தேன். ஆனால் இதை எப்படிப் பயன்படுத்துவது என்று இப்போதுவரை தெரியவில்லை. இன்னும் ஆழமாகச் சோதித்துப் பார்க்கவேண்டும்.
அரட்டை குரூப்பிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அல்லது எனக்குத் தான் பார்க்கத் தெரியவில்லையா என தெரியவில்லை குரூப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினால் அதில் இன்ஃபோ சென்று பார்த்தல் யார் யாரெல்லாம் அந்த மெசேஜை பார்த்து இருக்கிறார்கள் அல்லது ஆடியோ மெசேஜ் ப்ளே செய்து இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க முடியும். அந்த வசதி அரட்டையில் இல்லை என நினைக்கிறேன்.
* வாட்ஸப்பில் ஸ்டேட்டஸுக்குப் பெரிய அளவிலான விசிறிகள் உண்டு. மெசேஜைப் பார்க்காவிட்டாலும் ஸ்டேட்டஸைப் பார்க்காவிட்டால் செத்துப் போய்விடுவார்கள் என்னும் அளவுக்கு. அரட்டையில் அது ஸ்டோரீஸ் என்று இருக்கிறது. ஆனால் என்னைத் தவிர ஒருவரும் ஸ்டோரி வைக்கவில்லை. 🙂
* வாட்ஸப்பில் ரிமைண்டர் ஆப்ஷன் கிடையாது. அரட்டையிலும் இல்லை. இதை மட்டும் அரட்டை கொண்டு வந்து, இதை அடிப்படையாக வைத்து விளம்பரம் செய்தால், பெரிய அளவில் ரீச் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. இதையும் ஃபீட்பேக்காக அனுப்பி இருக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பும் நண்பர்கள் அரட்டைக்கு வாருங்கள்!
Update
அரட்டை ஆப் குறித்து எழுதி இருந்தேன். அதில் இருக்கும் முக்கியக் குறைபாடு ஒன்றையும் சொல்லியாக வேண்டும். அதாவது தனிப்பட்டுச் சொல்ல வேண்டிய அளவுக்கு முக்கியமான குறைபாடு.
ஒரு சாட்டிலோ அல்லது ஒரு குழுவிலோ பிறர் அனுப்பும் மெசேஜை நாம் நமக்கு மட்டும் டெலிட் செய்து கொள்ளும் வசதி இல்லை. இந்த வசதியை எப்படி அதில் ஏற்படுத்தாமல் விட்டார்கள் எனத் தெரியவில்லை. இது மிகவும் அடிப்படையானது.
பலர் அனுப்பும் மெசேஜில் ஒரு மெசேஜைப் படித்து விட்டோம் அல்லது நமக்குத் தேவையில்லை அல்லது பிரைவசி காரணமாக, அந்த மெசேஜை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, அந்த மெசேஜை மட்டும் டெலிட் செய்யும் வசதி கூட இல்லாமல் ஓர் ஆப்பை எப்படிப் பயன்படுத்துவது?
உண்மையில் அரட்டை ஆப்பைத் தொடர்ந்து பயன்படுத்தத்தான் வேண்டுமா என்னும் கேள்வியை எழுப்பும் அளவிற்கான குறைபாடு இது.
ஃபீட்பேக் அனுப்பி இருக்கிறேன். சரி செய்வார்களா எனத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவரும் இந்த முக்கியமான குறைபாட்டை உடனே சரி செய்யச் சொல்லி ஃபீட்பேக் அனுப்புங்கள்.
தி நியூஸ் மினிட் மற்றும் பிற இடதுசாரி-ஹிந்து எதிர்ப்பு பெய்ட் ஊடகங்கள் தர்மஸ்தலா கோயிலின் புனிதத்தைக் கெடுக்க உள்நோக்கத்துடன் செயல்பட்டன.
2012ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 17 வயதுச் சிறுமி தொடர்பான பழைய வழக்கைத் திடீரெனக் கையில் எடுத்துக்கொண்டு SM media போஸ்ட் ஒன்று வருகிறது.
அடுத்து ஒரு வீடியோவில், ஒரு முகமூடி அணிந்த மனிதர், கோயிலுக்கு அருகில் 1,000-க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்களைத் தானே புதைத்ததாகக் கூறுகிறார்.
தி நியூஸ் மினிட், இந்தச் செய்தி உண்மையா என்று சரிபார்க்காமல், அல்லது சரி பார்க்க விரும்பாமல் வேண்டுமென்றே அந்தச் செய்தியைப் பெரிய அளவில் விவாதத்திற்கு உட்படுத்திப் பரப்புகிறது. தன்யா ராஜேந்திரன் ஆர்வமாக இதைச் செய்கிறார்.
கர்நாடகா ஆந்திரா கேரளா எனப் பல இடங்களில் செய்யப்பட்ட கொலைகள் அனைத்தும் தர்மஸ்தலாவை ஒட்டிப் புனையப்படுகின்றன.
இறுதியில், இது ஒரு பொய் என்றும், தர்மஸ்தலாவிற்கு எதிரான பிரசாரம் என்பதும் கண்டறியப்படுகின்றன. தர்மஸ்தலாவை ஒட்டிய இடங்களில் தோண்டிய போது ஒரே ஒரு பிணம் மட்டுமே கிடைத்தது. அதுவும் எப்போதோ தற்கொலை செய்து கொண்ட ஒருவரது பிணம்.
முகமூடி அணிந்த மனிதர் அந்தக் குற்றச்சாட்டுகளைக் கூறத் தான் வற்புறுத்தப்பட்டதாக ஒப்புக்கொள்கிறார்.
முழுமையாக, சுருக்கமாக அலசுகிறது இந்த வீடியோ.
நான்கு நாள்களுக்கு முன்பு சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. என்னதான் நடந்தது, அங்கு நிலவும் மர்மம் என்ன என்பதைக் கண்டறிய நாம் இன்னும் சில காலம் பொறுத்து இருக்க வேண்டும் போல.
தர்மஸ்தலா கொலைப் புரட்டு தொடர்பாக போலி டாக்ஸின் இந்த வீடியோவை நிச்சயம் பார்க்கவும். (பலர் ஏற்கெனவே பார்த்திருப்பீர்கள்.)
நேராகக் களத்துக்குச் சென்று, அதுவரை மீடியாவில் சொல்லப்பட்டவற்றில் எவை எல்லாம் பொய் என்பதை ஆதாரத்துடன் சொல்கிறார்.
மீடியாவில் எப்படி எல்லாம் பேசினார்கள் என்பதையும், கொலை நடந்த இடத்தையும் பார்த்தால் நமக்குத் தெரியும், இந்தத் தமிழ்நாட்டு பெய்ட் மீடியா எப்படியெல்லாம் நேரேடிவ் செட் செய்கிறது என.
போலிடாக்ஸ் விக்னேஷ் எப்போதுமே அட்டகாசமாக வீடியோ வெளியிடக் கூடியவர். இதில் ஸ்க்ரிப்ட் இன்னும் அட்டகாசம்.
ஜிஎஸ்டி தொடர்பான சீர்திருத்தங்களைப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்தியா முழுமைக்கும் பாஜக திணறிய நிலையிலும், அமெரிக்கா தொடர்ச்சியாக இந்தியாவுக்குக் கொடுத்து வரும் நெருக்கடியால் இந்தியப் பொருளாதார நிலைமை என்ன ஆகுமோ என்று எதிர்க்கட்சிகள் பயமுறுத்தி வந்த நிலையிலும், இவை இரண்டையும் எதிர்கொள்ளும் விதமாக மோடி இன்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடையே பேசி இருக்கிறார்.
இந்தியா முழுமைக்கும் ஜிஎஸ்டி குறைப்பு தரப் போகிற பயனைத் தெளிவாகப் புரிய வைத்திருக்கிறார்.
அமெரிக்கா பற்றி நேரடியாக எதுவும் பேசாவிட்டாலும் இந்தியா தன்னைத்தானே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.
இந்தியப் பொருட்களைப் பயன்படுத்துவது பற்றிக் குறிப்பாக பேசியிருக்கிறார். இதனால் அனைவரும் இந்தியப் பொருள்களை வாங்குகிறார்களோ இல்லையோ, இந்தியப் பொருளாதாரம் இன்குளுசிவ் ஆக தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறதோ இல்லையோ, ஆனால் ஒன்று முக்கியமாக நடக்கும். அது இந்திய அளவில் அனைவருக்கும் ஒரு தைரியத்தை கொடுக்கும். உலக அளவில் இந்தியாவின் பொருளாதார இன்க்ளூசிவ்நெஸ் குறித்துப் பேசப்படும்.
அனைவரும் இல்லாவிட்டாலும் பலர் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்ற வகையில் சுதேசிப் பொருட்களை வாங்க இயன்றவரை ஆர்வம் காட்டினால், (இதன் பொருள் முழுமையாக விதேசிப் பொருள்களைப் புறக்கணிப்பதல்ல, அது இயலாது என்பது எல்லோருக்கும் தெரியும்) அது உண்மையிலேயே இந்தியப் பொருளாதாரத்திற்கு பயனுள்ளதாகவும் அமையும்.
இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பேசி இருக்கிறார் பிரதமர்.
ஏன் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்பதை இந்த நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிப் பேசியதன் மூலம் மீண்டும் ஒருமுறை நமக்கு உணர்த்தி இருக்கிறார் மோடி.
நவராத்திரியில் நயோ இந்தியா பிரகாசமாகத் தொடங்கட்டும்.
பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை. துரோகம். இருபது வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு மேக்கிங் பார்த்திருந்தால் கொஞ்சம் புதியதாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. ஆனால் இப்போது இந்தப் படத்தின் மேக்கிங் ஆயிரம் மலையாளத் திரைப்படங்களில் பார்த்துவிட்டு அலுத்துப் போன ஒன்றாகிவிட்டது. அதாவது, பேசிக்கொண்டே யதார்த்தத்துக்கு அருகில் இருப்பது. (தமிழில் இன்னும் இதில் 10% கூடச் சாத்தியப்படவில்லை என்பது தனிக்கதை.) முதல் முப்பது நிமிடங்கள் கதைக்குள் வராமல் என்னவோ பேசி பேசிச் சுற்றி அடிக்கிறார்கள். பின்புலத்தைக் கட்டமைக்கிறார்கள். முப்பதாவது நிமிடத்தில் இருந்து படம் கொஞ்சம் விறுவிறுப்பாகிறது. பின்னர் துரோகம், துரத்தல், கொலை என நீள்கிறது.
ஆனாலும் படத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. எதனால்? அந்த நான்கு நண்பர்களின் வெள்ளந்தியான முகம் மற்றும் நடிப்பால். வெள்ளந்தி என்பதால் நல்லவர்கள் என நின்னைத்துவிட வேண்டாம். கொட்டேஷன் எடுத்துக் கொலையும் கொள்ளையும் செய்பவர்கள்.
Spoilers ahead.
பொதுவாகப் பல மலையாளப் படங்களில் தமிழகர்களைத் துரோகிகளாக்குவார்கள். (நாம் தமிழ்த் திரைப்படங்களில் மலையாளிகளுக்குச் செய்வதைவிட இது குறைவே!) ஆனால் இந்தப் படத்தில்? இன்னும் கூட நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டு தமிழ்த் திருடர்களை உயரத்தில் கொண்டு போய் வைத்துவிட்டார்கள். இந்த ஆறு திருடர்களுக்கு இடையேயான இளம் நட்புக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம். சுமாரான படமே என்றாலும், ஏனோ எனக்குப் பிடித்திருந்தது.
பெருமானி (M) – சுமார். ஹீரோ ஹீரோயின் யதார்த்த காதல் மற்றும் வினய் ஃபோர்ட் வரும் காட்சிகள் அருமை. மற்ற காட்சிகள், நம்ம ஊர் ந முத்துசாமி வகையறா போன்ற அபத்த நாடகம். கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் சிரிப்பு. ஆனால் முதல் ஒரு மணி நேரம் பெரிய அறுவை.
தீரன் (M) – குப்பை.
Shodha (K) – கன்னட வெப் சீரிஸ். அய்யன மனே சீரியலை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. அத்தனை ஸ்லோ. இது கொஞ்சம் ஓகே. ஏனென்றால் ஒரு எபிசோட் 18 நிமிடங்கள்தான். இயக்குநர் பவன்குமார் இதில் ஹீரோ. என்ன கொடுமை என்றால், புதிய பறவை படத்தை அப்படியே எடுத்து வைத்திருக்கிறார்கள்!
Pariwar (M) – பொறுமையைச் சோதிக்கும் படம். ஆதே சமயம், பல காட்சிகள் அருமை. பல இடங்களில் நாராணீன்டெ மூனாண்மக்கள் படம் நினைவுக்கு வருகிறது. நடிகர்களின் நடிப்பை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.