ஜமா

ஜமா – இத்தனை தீவிரமான படமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. பல குறைகள் இருக்கின்றன. முதலில் நிறைகளைப் பார்த்துவிடலாம்.

இயக்குநருக்கு ஒரு தீவிரமான திரைப்படம் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது. தன் கதையின் மீதும் காட்சிமொழியின் மீது நம்பிக்கை இருக்கிறது. பெரிய அளவில் முத்திரை பதிப்பதற்கான அழுத்தமான தடயங்கள் தெரிகின்றன. சாதிக்க வாழ்த்துகள்.

இந்தக் கதை அவதாரம் திரைப்படத்தை நினைவூட்டுவதாகச் சிலர் எழுதி இருந்தார்கள். என்னளவில், இல்லை என்றே சொல்வேன். பெண் வேடம் கட்டும் ஒற்றை இழையைத் தவிர, இரண்டுக்கும் தொடர்பே இல்லை. இன்னும் சொல்லப் போனால், எடுத்துக்கொண்ட களம் என்ற வகையில், அவதாரத்தைவிட இத்திரைப்படம் எள்ளளவு கூட அங்கும் இங்கும் அலைபாயவில்லை. அவதாரம் படத்தில் இருந்தது போன்ற, கொலை, கற்பழிப்புக் காட்சிகள் இதில் இல்லை.

இளையராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் அபாரம். ஆனால் கூத்துக்கு ஏற்ற பாடல் ஒன்று கூட இல்லை. அவதாரம் போன்ற ஃபீல் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இப்படி இயக்குநர் யோசித்துவிட்டாரோ என்னவோ. கடைசியில் கதாநாயகன் தலையில் அம்மனைச் சுமந்து வரும் காட்சியில் ஒரு பாடல் வைத்திருக்கலாம்.

நம் மண்ணின் மரபான பக்தியை இத்திரைப்படம் வெகு சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறது. இன்றைய இயக்குநர்கள் பக்தியைக் காட்டினால் அது ஹிந்து மதத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகிவிடும் என்ற போலி முற்போக்குத்துவத்தில் மயங்கிக் கிடக்க, இத்திரைப்படம் அவ்வகைக்குள் சிக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

இன்னொரு முக்கியமான ஆச்சரியம், பல காட்சிகள் படு யதார்த்தம். நம் கிராமத்தில் நேரில் நடப்பது போன்ற ஓர் உணர்வு. இத்தனைக்கும் நடிப்பவர்கள் அத்தனை பேரும் முகம் தெரியாத நடிகர்கள். அசத்திவிட்டார்கள். உறுத்திக்கொண்டு தெரியும் சென்னை வட்டார வழக்கு போல் அல்லாது, இயல்பான, தேவையான அளவுக்கான வட்டார வழக்கு கூடுதல் பலம்.

ஆனாலும் ஏன் ஒரு திரைப்படமாக இது முழு அனுபவத்தைத் தரவில்லை? அற்புதமான பல நீண்ட காட்சிகளுக்கு இணையான அமெச்சூர் காட்சிகளும் இருப்பது. ஒரே இடத்தில் கதை சுற்றி சுற்றி வருவது போதாது என்று, ஒரே ரீதியிலான வசனங்கள். அதுவும் குறிப்பாக முதல் முக்கால் மணி நேரம் ரொம்பவே இவை அதிகம்.

இது கதை காதல் கதையா, ஜமா உரிமைக் கதையா என்கிற தேவையற்ற குழப்பம் இன்னொரு மைனஸ். ஜமாதான் கதை என்றான பிறகு, கதை கொள்ளும் வேகம் முன்பகுதியில் இல்லை.

ஹீரோவாக வரும் நடிகர் ( இயக்குநரே நடித்திருக்கிறார்) உயிரைக் கொடுத்து நடிக்கிறார் என்றாலும், பல காட்சிகளில் ஏனோ ஒட்டவில்லை. குருவி தலையில் பனங்காய் வைத்தது போன்று ஆகிவிட்டது. இது மிகப்பெரிய சறுக்கல்.

சேத்தன் மிக அருமையாக நடித்திருக்கிறார். ஆனாலும் நாசரோ பிரகாஷ்ராஜோ நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதேபோல் ஹீரோவின் அப்பா கேரக்டருக்கும் இன்னொரு நல்ல நடிகரை தேர்ந்திருக்கவேண்டும். இந்த மூன்று விஷயத்தில் நடந்ததுதான் படத்தை இன்னொரு தளத்துக்குக் கொண்டு போகாமல் கைவிட்டு விட்டது.

துணை நடிகர்களின் இயல்பான நடிப்பு இத்திரைப்படத்துக்கு பெரிய பலம். அவர்களே இப்படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அவர்களுக்காகவாவது இத்திரைப்படத்தை அவசியம் பாருங்கள்.

இயக்குநருக்கு மீண்டும் ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

பிரைமில் கிடைக்கிறது.

Share

Two movies

Little hearts (M) – சுமாரான படம். ஷேன் நிகம்-க்காகப் பார்த்தேன். சிறிய புன்னகை ஆங்காங்கே வருகிறது என்றாலும் மொத்தத்தில் அறுவை.

கோடி (K) – பார்க்கலாம். மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படம். கொஞ்சம் இழுவையால் நீர்த்துவிட்டது. என்னைப் போல் தனஞ்செய் பிடிக்கும் என்பவர்கள் பார்க்கலாம்.

இரண்டும் ப்ரைமில் கிடைக்கிறது.

Share

வாழை

வாழை – ஒரே வார்த்தையில் செல்வதென்றால் வாழ்க்கை.

Spoilers ahead.

நல்ல திரைப்படம். திரைக்கதையில் நம்மை இணைக்க சிறுவனின் வாழ்க்கையையும் அவனது நட்பையும் சித்தரித்த விதம் அருமை. இந்த காட்சிகளில் இருந்துதான் நாம் திரைப்படத்துக்குள் நுழைகிறோம். அங்கங்கே கதிர் அருவாள் கம்யூனிசம் என்று ஊறுகாய் போல் காட்டினாலும் படம் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையின் வலியை விரிவாகப் பேசுகிறது. நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் எல்லை அறிந்து சிறப்பாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் இரண்டு சிறுவர்கள் அமர்க்களம் செய்திருக்கிறார்கள். கமல் ரஜினி பற்றிய அளவான வசனங்கள் அள்ளிக்கொண்டு போகின்றன.

குறைகளைப் பேசும் நேரம் இதுவல்ல என்றாலும் 90களின் விருதுத் திரைப்பட சாயலைக் கொஞ்சம் தவிர்த்து இருந்திருக்கலாம். கடைசிக் காட்சியில் வரும் அதீத உணர்ச்சியையும் கொஞ்சம் மட்டுப்படுத்தி இருக்கலாம். எதிர்பாராத திடுக்கிடலுக்கு ஏற்ற இதுவும் ஒருவகை யதார்த்தம்தானே என்றால் அதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மறுப்பதற்கில்லை. ஆனால் உச்ச காட்சிக்குப் பின்னர் அந்தச் சிறுவன் சாப்பிட அமர்வது கதையைத் தாண்டிப் பயணிப்பது போல் எனக்குத் தனிப்பட்ட அளவில் தோன்றியது.

மணிகண்டனின் திரைப்பட‌ வகையில் மாரி செல்வராஜின் படம் இது.

இப்படத்தில் இசைக்கு காது இளையராஜாவுக்காக ஏங்குகிறது. பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல் தேவா.‌ ஆனாலும் மனம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

பூங்கொடிதான் பூத்ததம்மா பாடலின் தொடக்க இசை ஒலித்தபோது எனக்கு இறக்கை முளைத்தது நிஜம். இந்த அவஸ்தையை இயக்குநரும் அனுபவித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

திருநெல்வேலி வட்டாரத் தமிழைக் கொலை செய்யாமல் நன்றாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக திருநெல்வேலி கிராம வட்டார வழக்கைக் கச்சிதமாக அந்த இரு சிறுவர்களும் இன்னும் முகம் தெரியாத பல நடிகர்களும் பேசுகிறார்கள். கதாநாயக நாயகிகள் வழக்கம்போல் சில இடங்களில் சரியாக திருநெல்வேலித் தமிழையும், சில இடங்களில் வாய்க்கு வந்த தமிழையும் பேசிக் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறார்கள் என்றாலும், முழுமையான அளவில் திருநெல்வேலி வட்டாரத் தமிழ் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக திருநெல்வேலிக்கே உரிய வட்டார வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் சிறப்பு.

தங்கலான் எனும் அதீத‌ நடிப்புச் செயற்கைக் காவியம் தந்த ரணத்துக்குக் கொஞ்சம் களிம்பு பூசி இருக்கிறது இந்த யதார்த்தம்.

Share

Thangalaan

தங்கலான் – ரஞ்சித்தின்‌ பலமே யதார்த்தத்தில் அரசியல். நுணுக்கமான காட்சிகள். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படமாய் வந்திருக்கிறது தங்கலான்‌. தங்கத்தைத் தேடுவதில் அரசியலை நுழைக்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நில உரிமை என்று பேசுகிறார்கள். மாய யதார்த்தம் என்று‌ வைத்துக்கொண்டு ஜல்லியான திரைக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் எப்போதும் அடிவயிற்றில் இருந்து நரம்பு தெறிக்கப் பேசுகிறார்கள்? யார் இந்த இயக்குநர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது? ஒருவர் விடாமல் அனைவரும் வளவளவென்று பேசியே சாவடிக்கிறார்கள். அதிலும் என்னவோ ஒரு காலத் தமிழ். ஆனால் பாட்டு பாடும்போது மட்டும் இன்றைய தமிழாம்! எல்லாக் காலகட்டத்திலும் பிராமணர்களே எதிரிகள் என்று வலுக்கட்டாயமாகக் காட்டி, புத்தரை திணியோ திணி என்று திணித்திருக்கிறார்கள். கடைசி காட்சியில் ஏன் விக்ரம் கதாபாத்திரத்துக்கு உண்மை தெரிந்தது? அது முதல் காட்சியிலேயே தெரிந்து தொலைத்திருந்தால்தான் என்ன? இத்தனை நீளப் படத்தில் ஒரு காட்சி கூட ஒட்டவில்லை. விக்ரம் இத்தனை கஷ்டப்பட்டு ஏன் ஓவர் ஆக்ட் செய்தார் என்றே புரியவில்லை. உள்ளொழுக்கு படத்தில் ரசித்த பார்வதியை வெறுக்க இந்த ஒரு படம் போதும். இதில் பாடாவதியான கிராஃபிக்ஸ் வேறு. மொத்தத்தில் ஒட்டாத குறியீட்டுச் செயற்கைத்தனத்துடன், பாலாவின் படம் போன்ற ஒரு ரஞ்சித் திரைப்படம். பாலாவின் பரதேசி படமும் இப்படித்தான் இருந்தது.

Share

Golam

கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று‌ அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.

Share

சிபிஐ 4

CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி

2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், என்னடா இது ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெளியிட்டிருக்கிறார்களே என்று நினைத்து, அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கவிதை வெளியிட்டதை என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நான் எழுதிய கடிதத்துக்கு பதில் வந்தபோதுதான் இளங்கோவன் என்று ஒருவர் இருப்பதே எனக்குத் தெரியும்.

அந்த வலைத்தளத்தின் பெயர் அந்திமழைதானா என்பது கூட இப்போது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் இளங்கோவனின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது.

பத்துப் பதினைந்து நாள்கள் கழித்து, துபாய்க்கு ஒரு மடல் போஸ்டலில் வந்தது. பார்த்தால், என் கவிதையை வெளியிட்டு, அதை அச்செடுத்து தபாலில் அனுப்பி இருந்தார்கள். ஆன்லைன் தளமே ஆன்லைனில் வாசிக்கத்தானே, ஏன் அச்செல்லாம் என்று இளங்கோவனுக்கு பதில் அனுப்பினேன். எப்போது வேண்டுமானாலும் என் படைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்ன நினைவு.

அதன் பிறகு பல முறை இளங்கோவனுடன் தொடர்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே தற்செயலாக அமைந்தவைதான். புத்தகக் கண்காட்சிகளில் பார்ப்பது. ஏதேனும் புத்தக வெளியீட்டில் பார்ப்பது. குறிப்பாக, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட, சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக்கு அவர் வந்திருந்தார். சாருவுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யாமல் விலகிச் சென்றபோது, என்னை அழைத்துப் பேசினார். இருவரும் சேர்ந்து டீ குடித்தபடி பேசினோம்.

அந்திமழையில் இருந்து அடிக்கடி படைப்புகள் கேட்பார்கள். எழுதிக் கொடுப்பேன். நண்பர் அசோகன் பெரும்பாலும் அதை அப்படியே பிரசுரிப்பார். ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் இதழில் ஏன் எழுதுகிறீர்கள் என்று சில ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள். என் கருத்தை அவர்கள் திருத்துவதே இல்லை, பின்னர் என்ன பிரச்சினை என்பதே என் பதிலாக இருந்தது.

படைப்புக்கான சன்மானத்தை மிகச் சரியாக அனுப்பும் இதழ் அந்திமழை.

ஜெயமோகன் அந்திமழை இதழை முன்னெப்போதோ தீவிரமாகத் திட்டி எழுதியபோது, நான் அந்திமழை போன்ற இடைநிலை இதழ்களின் அவசியத்தைப் பற்றி எழுதினேன். அதற்கும் இளங்கோவன் நன்றி செலுத்தினார்.

அந்திமழை போன்ற ஓர் இதழ், அதுவும் வண்ண நிறத்தில், நல்ல தரத்தில் எப்படி இத்தனை வருடங்கள் தொடர்ந்து வந்தது என்பதே பெரிய புதிர். ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டதாக இருக்கும். ஒரு வேள்வி போல் இந்த இதழ்ப் பணியைச் செய்தாலன்றி, இதனால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக கெட்ட பெயரும் வந்து சேரும். இத்தனை வருடங்கள் அந்திமழை அதுவும் அழகிய வடிவமைப்பில் நல்ல தரத்தில் கொண்டு வந்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். இளங்கோவன் போன்ற ரசிகர் ஒருவரின் பிடிவாதமும் ஆர்வமும் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.

இத்தனை சீக்கிரம் நம்மைவிட்டு மறைவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சென்று வாருங்கள் இளங்கோவன். உங்கள் தொடர் பணியை இந்தத் தமிழ் உலகம் மறக்காது. கண்ணீர் அஞ்சலி.

Share