Badri’s daily news coverage in Kizhakku News YouTube channel

பத்ரி தினமும் செய்தித்தாள்களைப் பார்த்து விமர்சனம் செய்யும் யூடியூப் வீடியோ கிழக்கு நியூஸ் யூடியூப் சேனலில் நேற்றில் இருந்து வருகிறது. சுவாரசியமாக இருக்கிறது. காலையில் வாக்கிங் செல்லும் போது இதைப் போன்ற ஒரு வீடியோ மிகவும் உதவியாக இருக்கலாம். காலை எழுந்தவுடன் இதைக் கேட்டுவிட்டால் முக்கியமான செய்திகளில் 25 சதவீதமாவது தெரிந்து கொள்ளலாம். அதிலும் பத்ரிக்கு இருக்கும் உலகளாவிய ஞானம் இதில் பல விஷயங்களை நமக்குச் சொல்கிறது.

இதில் சில சுவாரசியமான விஷயங்களைச் செய்யலாம். ஒன்று, அனைத்துப் பத்திரிகைகளிலும் அந்த செய்தி குறித்து வந்திருக்கும் ஹெட்லைனையும் முதல் இரண்டு வரிகளையும் மேம்போக்காக வாசிக்கலாம். இது நேரத்தைக் கூட்டும் என்றாலும் சுவாரசியமாக இருக்கும். ஒரே விஷயத்தைப் பல பத்திரிகைகள் எப்படிக் கையாளுகின்றன என்று பார்க்க உதவியாக இருக்கும். இதை பத்ரியே செய்வது கடினம் என்றால், கூட ஒருவரை வைத்துக்கொள்ளலாம். நிச்சயம் கூட ஒருவரை வைத்துக் கொள்கிறேன் என்று அவர் நேற்றே சொல்லி இருந்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம், முரசொலி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ்கள் அங்கே இல்லாமல் இருப்பது. முடிந்தால் கி வீரமணியின் பத்திரிகை ஏதேனும் இருந்தால் அதையும் வைக்கலாம். தலைப்புச் செய்திகள் மட்டுமாவது அவற்றிலிருந்து சொல்வது நிச்சயம் சுவாரசியமாகவே இருக்கும்.

அதேபோல் தமிழ்நாட்டளவில் நான்கு செய்திகள், இந்திய அளவில் ஒன்றிரண்டு செய்திகள், வெளிநாட்டு அளவில் ஒரு செய்தி என்று ஒரு வரைமுறை வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சம் மூன்று நிமிடம் ஒதுக்கினாலே 25 நிமிடங்கள் தாராளமாக வரும். சில சமயங்களில் முக்கியத்துவம் கருதி இவற்றை மாற்றிக் கொள்வதிலும் தவறில்லை.

அதேபோல் ஒட்டுமொத்த நிகழ்ச்சிக்கும் ஒரு பெயர் இருப்பது நல்லது. நாளை யூடியூபில் தேடும்போது வசதியாக இருக்கும். இப்போது ஒவ்வொரு வீடியோவுக்கும் ஒரு பெயர் வைக்கிறார்கள். கூடவே அனைத்துக்கும் சேர்த்து ஒரு பொதுப்பெயர் நிச்சயம் தேவை. அதற்கான ஒரு தனி கேட்டகிரி லின்க் இருப்பதும் நல்லதுதான்.

https://youtube.com/@kizhakkunews?si=r-PLn91uMOV7PVvw

Share

Idli Kadai

இட்லிக்கடை – படமாய்யா எடுத்து வெச்சிருக்கீங்க. அடப் பக்கிகளா. முதல் 10 நிமிஷம் நல்லா இருக்கேன்னு நெனச்சேன், அது ஒரு குத்தமாய்யா. வெச்சு செஞ்சிட்டீங்களே.

1960ல‌ இந்தப் படத்தை எடுத்திருந்தா கூட பழைய படமாத்தான் இருந்திருக்கும். ராயன் எடுத்த தனுசுக்கு ஏன் இப்படிப் புத்தி போனது என்று தெரியவில்லை. கதை திரைக்கதை என ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இரண்டே நிமிடத்தில் ஒரு பாடலில் முடிக்க வேண்டிய கதையை 3 மணி நேரம் கண்றாவியாக இழுத்து இழுத்துச்‌ சாவடித்து விட்டார்.

ஃபீல் குட் மூவி என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தால் பேய்ப் படம் போல இருக்கிறது. ராஜ்கிரனும் அவர் மனைவியும் செத்தும் கடைசிக் காட்சி வரை பேயாக வந்து பாடாய்ப்படுத்துகிறார்கள்.

கொடுமை ஒன்றாய் இரண்டா. சமுத்திரகனி வடிவில் இன்னொரு கொடுமை. தாங்கிக்கொள்ள முடியாத நித்யா மேனன் வேறு.

நமத்துப் போன‌ நாலு‌ இட்லியும் அவிஞ்சி போன அந்த ரெண்டு கரண்டி சாம்பாரையும் தின்றதற்காக ஊரே உயிரைக் கொடுத்து இவன் பின்னால் நிற்குமாம். கேட்பவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுமாம்.

இது எல்லாமே கூட மன்னித்து விடலாம். ஆனால் கருப்பசாமி காலில் சலங்கை கட்டி பவ்யமாகப் போவது இட்லி சுடுவதற்காகத்தான்னு காமிச்சீங்களே, அதை மட்டும் மன்னிக்கவே மாட்டேன்.

படம் முழுக்க ஹிந்துக் குறியீடுகள் வருவதைப் பார்த்துச் சந்தோஷப்படுவதா, இல்லை இந்தக் கொடுமையைப் பார்த்தால் பாதி பேர் இன்னும் மதம் மாறி போய் விடுவானே என்று வருத்தப்படுவதா… டெலிகேட் பொசிஷன்.

ஆனாலும் ஒரு சந்தோஷம். இன்பக்குட்டியண்ணாஜியையே தனுஷ் காண்டாக்கிப் பார்த்ததுதான்.

பிகு: இடது கையால் மாவை தள்ளும் இட்லிக்கா இவ்ளோ மவுசு? உவ்வேக்.

Share

Dies Irea

Dies Irea (M) – சமீப காலங்களில் பேய்ப் படங்கள் எடுப்பதில் இந்திய அளவில் மிகச்சிறந்த இயக்குநர் என்று நான் கருதுவது ராகுல் சதாசிவனைத்தான். பேய்ப் படங்களில் நான் பார்த்த அவரது முதல் திரைப்படம் பூத காலம். வித்தியாசமான சைகலாஜிகல் ஹாரர். கடைசியில் கொஞ்சம் சொதப்பிவிட்டது. அந்தப் படத்தில் பேயை காட்ட வேண்டுமா அல்லது பயம் மட்டும் போதுமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. 

பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிப் பலருக்குப் பல சந்தேகங்கள் இருக்கலாம். ஆனால் பேய் பற்றிய பயம் உலகம் முழுக்க நிஜம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. அதைத்தான் அந்தப் படத்தில் அவர் காட்சிப்படுத்தியிருந்தார். அப்படி அத்தனை அழகாக யோசித்தவர் கடைசியில் பேயைக் காட்டினார் என்பதில் அந்தப் படம் எனக்குக் கொஞ்சம் விலகலைத்் தந்து விட்டது. மற்றபடி அது நல்ல திரைப்பட அனுபவமே.

பின்னர் வந்தது பிரமயுகம். அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு மிரட்டல். கதையும் ஓரளவு வித்தியாசமான கதை. ஆனால் மிக மெல்ல நகரும் காட்சி அமைப்பும் சில தேவையற்ற காட்சிகளும் எனக்குக் கொஞ்சம் விலகலைத் தந்தன. ஆனால் சந்தேகமே இல்லாமல் அதுவும் முக்கியமான படமே. குறிப்பாக மம்முட்டியின் மிகச் சிறந்த படங்களில் அந்தப் படத்துக்கு என்றைக்கும் ஓர் இடம் உண்டு. 

இதனால் அந்த இயக்குநர் இப்போது எடுத்து வெளியாகி இருக்கும் டியஸ் இரியே (Dies Irea – கோப நாள்) என்ற படத்தைப் பார்க்க முதல் நாளே போக வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன். இன்னொரு காரணம் பிரணவ் மோகன்லால்.

பேய்ப் பயம் பற்றிய அனுபவம்தான் முதன்மை என்றால் இந்தப் படத்திலும் ராகுல் சதாசிவன் நம்மை ஏமாற்றவில்லை. ஆனால் தனது கடைசி இரண்டு படங்களில் அவர் கையாண்ட அந்த சைக்காலஜிக்கல் மாயாஜாலத்தைக் கைவிட்டு விட்டு முற்றிலுமான பேய்ப் படத்துக்குள் வந்து விட்டார். இது ஒரு சமரசம். 

இடைவேளை வரை நம்மை என்னென்னவோ யோசிக்க வைத்து அதற்கேற்றாற்போல் திரைக்கதை எழுதி, இடைவேளையில் அசர வைத்திருக்கிறார். ஒரு திரைப்படமாக ஃப்ரேம் பை ஃப்ரேம் மிரட்டி இருக்கிறார். ஆனால் ஒட்டுமொத்தக் கதையாக யோசித்தால் புதுமையாக ஒன்றுமில்லை. அப்படி இருந்தும் கூட இந்த அளவு முதல் கட்சியிலிருந்து கடைசி நொடிவரை நம்மைக் கட்டி போட்டது பெரிய விஷயம்.

Spoiler alert.

படத்தில் பல காட்சிகளில் ரசிகர்கள் கை தட்டுகிறார்கள். ஆனால் கதையாகச்‌ சில குழப்பம் படத்தில் இருக்கிறது. தம்பிக்கு ஏன் அப்படி நேர்ந்தது என்பதிலிருந்து, அந்த அப்பா கேரக்டர் யார் என்ன ஆனது, உதவி செய்பவனைக் கொல்ல நினைப்பது ஏன் என்பதெல்லாம் குழப்பங்கள். இதையெல்லாம் படமாக எடுத்து வெட்டித் தள்ளி விட்டாரா இல்லை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரா என்பது புரியவில்லை.

தமிழில்,‌ கன்னடத்தில்,  ஹிந்தியில் பேய்ப் படங்கள் என்னும் போர்வையில் கண்ட கண்ட கருமத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போது இத்தனை அழகாக இத்தனை அழகியலுடன் இத்தனை மெல்ல நகர்ந்தாலும் இத்தனை விறுவிறுப்பாக ஒரு படம் எடுக்கும் இயக்குநரைப் பார்த்து நிச்சயம் நான் ஆச்சரியப்படுகிறேன்.

 அனுபவத்திற்காக என்றால் நிச்சயம் பார்க்கலாம். பிரமயுகம், பூத காலத்துடன் ஒப்பிட்டால் கொஞ்சம் கீழேதான்.

மேலதிக எண்ணங்கள்

Full of spoilers

திரைப்படம் என்னதான் நவீன காலத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் அடிப்படை, கெட்டவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதாகத்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் கெட்டவன் தண்டிக்கப்படக்கூடாது என்பதாக இருக்கக் கூடாது. அந்த வகையில் பார்த்தால் இந்த படத்தின் ஹீரோதான் கொல்லப்பட வேண்டும். பேய் அவனை விரட்டி விரட்டிக் கொல்ல வரும்போது அவன் பிழைக்க வேண்டுமே என்ற எண்ணம் நமக்கு வராமல் இருப்பதற்குக் காரணம், அவன் செய்த சேட்டைகள். செய்வதெல்லாம் செய்துவிட்டு ஒரு காரில் உட்கார்ந்து கொண்டு மொபைலைப் பார்த்தபடி ஐ அம் சாரி என்று சொல்லிவிட்டால் செய்ததெல்லாம் அப்படியே காற்றோடு மறைந்து போய்விடாது.

எத்தனையோ வருடங்கள் கழித்துச் சந்தித்த அப்பாவிப் பெண்ணை, அவள் சம்மதத்தோடு தன் இஷ்டத்துக்குப் பயன்படுத்திவிட்டு, அந்தப் பெண் திருமணம் செய்து கொள் என்றதும், திருமணமா வாட் இஸ் திஸ் என்று சொல்லி அவளை மொத்தமாக அப்படியே விட்டு விட்டால் அது என்ன நியாயம்?

திருமணம் செய்து கொள் என்று அந்தப் பெண் சொல்வதைப் பார்த்தால், அந்தப் பெண்ணை மிகவும் நல்லவளாகக் காட்டி இருப்பதைப் பின்புலமாக வைத்துக் கொண்டால், தன்னைக் கழற்றி விட்டவனைக் கூட பேயான பின்பும் தலையை வருடிக் கொடுப்பதைப் பார்த்தால், அந்தப் பெண், இவன் திருமணம் செய்து கொள்வான் என்று நம்பித்தான் அவனுடன் இருந்திருக்கிறாள் என்பது புலனாகிறது.

நியாயப்படி பார்த்தால் மூடுபனிக்கார பாடிதான் ஹீரோ. நமக்கு ஹீரோவாக அறிவிக்கப்பட்டிருப்பவன்தான் வில்லன். இந்த வில்லன் அந்த நல்ல பாடியையும் சேர்த்து எரித்து விட்டிருக்கிறான். என்ன கொடுமை இதெல்லாம்.

படம் தந்த அனுபவம் வேறு. ஆனால் படம் சொல்வது இதைத்தான்.

நானே சிந்தித்தேன். : )

Share

Mirage

Mirage (M) – சின்ன வயதில் அதிர்ஷ்டப் பரிசுச்சீட்டு கிழிக்கும் வழக்கம் உண்டு. 25 பைசா கொடுத்து சீட்டுக்கிழித்தால் அதில் 50 பைசா அல்லது ஒரு ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் பத்து ரூபாய். பல சமயம் பரிசு விழாது‌ அப்போது புதிதாக ஒரு பரிசுச்சீட்டு வந்தது. அதாவது 25 பைசாவுக்குக் கிழித்தால் ஏதேனும் ஒரு பரிசு நிச்சயம். அது ஐந்து பைசாவும் இருக்கலாம், பத்து பைசாவாகவும் இருக்கலாம்.

இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சில திரைப்படங்கள் பார்க்கும்போது நாம் சிலவற்றை யூகித்துக் கொண்டே இருப்போம். ஒரு துப்பறியும் படம் என்றால், இவன் கொலைகாரனா அவன் கொலைகாரனா என்று யோசிப்போம். படத்தில் வரும் அத்தனை பேரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் யாரோ ஒருவன் கொலைகாரன் ஆவான். நான் சொன்னேன் பார்த்தியா என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இந்தப் படம் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல. நீங்கள் என்ன யூகித்தாலும் அது அத்தனையும் இந்தப் படத்தில் நடக்கும். இப்படி ஒரு திரைக்கதையை யோசித்ததற்காகவே ஜீது ஜோசப்பைப் பாராட்ட வேண்டும்.

முதல் காட்சியில் இருந்து பலவற்றை நான் யூகித்தேன்.வ்அத்தனையும் நடந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸை முதல் காட்சியிலேயே யூகித்தேன் என்பது முக்கியமான விஷயம்.

படம் கொஞ்சம் இழுவை என்றாலும் எனக்குப் பிடித்திருந்தது. முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை போரடிக்காமல் போகிறது என்பது பெரிய ப்ளஸ்பாய்ண்ட். பின்னணி இசை அபாரம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.

ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் ஜீதுதான் இப்படம்.

Share

Sridhar Subramaniyam on Taliban

11.10.2025

ஸ்ரீதர் சுப்ரமணியம் வழக்கம் போல் பாஜகவைத் திட்ட ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். எப்போதும் போல் காவிகளைத் திட்டுவதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது நேரம், தாலிபானையும் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஒரு படி மேலே போய், முகத்தை மூடாத பெண்களைப் பார்த்தால் தாலிபன் அமைச்சருக்கு மூடு வருமே என்றெல்லாம் கேட்டுவிட்டார். அவர் நினைத்துக் கொண்டு எழுதியது, ‘நாம் திட்டுவது தாலிபனைத்தான், லைக் அள்ளப் போகிறது’ என்று. ஆனால் கமெண்ட் போட்டவர்கள் அவர் தாலிபனைத் திட்டுவதாக நினைக்கவில்லை. அப்புறம் என்ன நடக்கும்? அவரைக் காவியாக்கிவிட்டார்கள்.  அதிலும் மயிலாப்பூர் மாமி என்றெல்லாம் கமெண்ட் கேவலமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் முழுக்க என்னதான் நீங்கள் கரடியாகக் கத்தினாலும் நீ பாப்பான்தானே என்று சொல்லக்கூடிய டெம்ப்லேட் ஞாநி தொடங்கி இன்று வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. (ஸ்ரீதர் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது)

அது எப்படியோ போகட்டும், அங்கே கமெண்ட் போடுபவர்களுக்கு… நீங்கள் பாஜகவைத் திட்டுங்கள் அல்லது ஸ்ரீதரைத் திட்டுங்கள், ஆனால் ஸ்ரீதர் காவி என்று சொல்லி பாஜகவை அசிங்கப்படுத்தாதீர்கள்.

Sridhar’ post:

https://www.facebook.com/share/p/1GvLV377vx

13.10.2025

எதிர்பார்த்தது போலவே ஸ்ரீதர் சுப்பிரமணியம் தனது நடுநிலைமையைப் பறைசாற்றிக் கொள்ள கொஞ்சம் கூட அடிப்படை நியாய உணர்வே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ம் தாலிபனும் ஒன்றுதான் என்று தீர்ப்பளித்து விட்டார். 

ஏன் இவர்களையெல்லாம் மறந்தும் கூட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஆதரிப்பதில்லை என்பதும், இப்படிப்பட்டவர்கள் அடிப்படைவாதிகளால் திட்டப்படும் போது ஏன் ரசிக்கிறார்கள் என்பதும் இந்த அராஜகத்துக்காகதான். 

இப்படிப்பட்டவர்கள் நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் என் நியாய உணர்வுக்காக மட்டுமே இது போன்ற பதிவுகளை எழுதுகிறேன்.

https://www.facebook.com/share/p/1DBuveS7Zt

Share

Justice Gavai And Rakesh Kishore

நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது கண்டிக்கத் தக்கது. கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயல். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் எள்ளளவும் பிறழக் கூடாது.

கவாய் சொன்ன தீர்ப்பை நானும் ஏற்கவில்லை. அதேபோல், பல நீதிமன்றங்களின் பல செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவும், குழப்பம் தருவதாகவும் இருக்கின்றன. ஒரு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாகச் சிக்கிய பணமெல்லாம் நீதித்துறையின்மீது நம்பிக்கையின்மையைப் பல மடங்கு கூட்டின. இவை எல்லாமே உண்மை. ஆனால் இந்த நேரத்தில் இவற்றையெல்லாம் சொல்லி, ஹிந்து மதக் கடவுளை கவாய் ஏளனம் செய்ததற்காக ராகேஷின் செயலை நாம் ஆதரிப்போம் என்றால், அது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

இந்த நேரத்தில் திராவிட ‘முற்போக்காளர்கள்’ இதுதான் சாக்கு என்று, மிகவும் நியாயவாதிகள் போலப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம்தான் அந்த இடத்தைக் கொடுக்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

இதே போன்ற ஒரு செயலை, ஹிந்து ஆதரவு நீதிபதிக்கு ஹிந்து எதிர்ப்பு வழக்கறிஞர் செய்திருந்தால், இந்நேரம் இந்த ‘முற்போக்காளர்கள்’ அவருக்கு கலைமாமாமணி விருதைக் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களது இரட்டைத் தனத்தையும், தேவைக்கேற்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதுவே நேர்மையான, உலகமே விதந்தோதும் நீதியான செயல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதையும் நாம் லட்சத்து ஓராவது முறையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதில் பெரிய நியாயவான்கள் போல, ‘அந்த நீதிபதியின் தீர்ப்பும் சரியல்ல’ என்று சதாரணமாகச் சொல்பவர்களைக் கூட ஜாதி ரீதியாகத் தூற்றிக்கொண்டு அலைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்கள் என்றுமே பொருபடுத்தத் தகுந்தவர்கள் அல்ல. தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்யப்படவேண்டியவர்கள். இவர்களுக்கு இருப்பது இரண்டே இரண்டுதான், ஒன்று ஹிந்து மத வெறுப்பு, அடுத்து பிராமணக் காழ்ப்பு. இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

நீதிபதி கவாயின் ஹிந்து மதக் கடவுள் மீதான விமர்சனமும், ராகேஷ் அவர் மேல் செருப்பு எறிந்ததும் வேறு வேறு என்று நாம் இந்நேரத்தில் பார்க்கவேண்டும். சரியாகச் சொல்வதென்றால், கவாயின் செயலைவிட ராகேஷ் செய்தது அராஜகமானது. கண்டிப்போம்.

Share

Puthiya Thalaimurai Blocked in Arasu Cable

புதிய தலைமுறை முடக்கப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்.

நாம் என்னதான் கண்டனம் தெரிவித்தாலும், நாளையே இந்தப் புதிய தலைமுறை திமுகவுக்குச் சொம்படிக்கத்தான் போகிறது என்றாலும், இப்போது ஓர் அநியாயம் நடக்கும்போது அதைக் கண்டிக்கவேண்டியது அவசியம்.

இப்படியெல்லாம் நடந்தாலும் தமிழ் ஊடகங்கள் ஒருநாளும் திருந்தப் போவதில்லை என்றாலும், இந்த முடக்கம் அநியாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எதாவது நடந்தால் வீறுகொண்டு எழுந்து, இதென்ன ஆட்சி என்றெல்லாம் முழக்கமிட்ட ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் வாலைச் சுருட்டி அமர்ந்திருப்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியமானது.

எழுத்தாளர்களுக்கு, ‘முற்போக்காளர்களுக்கு’ மனிதர்களை விட உயர்ந்த நிலை கொண்டவர்களுக்கு நிச்சயம் இரண்டு கொம்பு இருக்கிறது என்றுதான் நானும் நம்ப விரும்புகிறேன். என்ன பிரச்சினை என்றால், திமுக என்று வரும்போது மியாவ் என்று கத்திவிடுகிறார்கள்.

Share

Zoho Social

1 கல்லில் 6 இல்ல 7 மாங்காய்

ஸோஹோ சோஷியல் என்று ஒரு வசதி இருக்கிறது. இது ஆப்பாகவும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில், டிவிட்டரில், லின்க்ட் இன்னில், இன்ஸ்டாகிராமில், திரெட்டில், வாட்ஸப் பிஸினஸில் போஸ்ட் செய்யும் வசதியைத் தருகிறது. இது ஒரு சாதனை. ஆனால் சில க்-கன்னாக்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் ஸோஹோ சோஷியலில் லாகின் செய்து கொண்டு, உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் மற்றும் லின்க்ட் இன் ப்ரொஃபைலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தடவை இதைச் செய்தே ஆகவேண்டும். (வாட்ஸப் பிஸினஸ் நான் இன்னும் சோதிக்கவில்லை.)

நீங்கள் ஏதேனும் ஒன்றை அடிப்படையாக வைத்து இதைச் செய்யவேண்டும். அதாவது ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்து, மற்ற சோஷியல் மீடியாக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அடிப்படையான விஷயம் இனி உங்கள் ப்ராண்ட் என அழைக்கப்படும். நான் ஹரன் பிரசன்னா என்ற ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்தால், என் பிராண்ட் ஹரன் பிரசன்னா.

இதில் உள்ள சிக்கல் என்ன? ஃபேஸ்புக் ப்ரொஃபைலைச் சேர்க்க முடியவில்லை. மாறாக அந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலை அடிப்படையாக வைத்துத் தொடங்கப்பட்ட ஃபேஜ் மட்டும்தான் சேர்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, என் ப்ரொபைலுக்கு 15 ஆயிரம் ஃபாலோயர்ஸ். ஆனால் ஹரன் பிரசன்னா என்னும் பேஜ்ஜுக்கு 1000 பேர் கூடக் கிடையாது. என்னால் இந்த பேஜுக்குத்தான் ஸோஹோ சோஷியல் வழியாக போஸ்ட் போடமுடிகிறது. இது ஒரு சறுக்கல்.

இது தொடர்பாக ஸோஹோ கஸ்டமர் சர்வீஸில் பேசினேன். நீண்ட நேரம் விளக்கினேன். அத்தனையும் கேட்டுவிட்டு, இதை அப்படியே மடல் போடுங்கள் என்றார்கள். போர் அடித்ததால் மடல் போடவில்லை. இதை அடுத்து ஒரு காமெடி நடந்தது. ஸோஹோவில் இருந்து தினமும் ஒரு மிஸ்ட்கால் வரும். அவ்வளவுதான். அதாவது அவர்கள் என்னைத் தொடர்புகொண்டுவிட்டதாக ஒரு தோற்றம் வருவதற்காக இதைச் செய்வார்கள் போல. இப்படித்தான் ஃப்ளிப்கார்ட் அமேஸான் எல்லாம் செய்து நாசமாகப் போயின.

இது குறித்து எனக்குப் பெரிய கவலை இல்லை. ஏனென்றால், மேலே சொன்னவை அனைத்தும் இப்போதைக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எனக்கு அது போதும்.

இன்னும் உள்ள சில சிக்கல்கள் என்ன? அது எல்லாவற்றிலும் உள்ளது. நீங்கள் டிவிட்டரில் 240 டெக்ஸ்ட் மட்டும்தான் போடமுடியும் என்றால், இந்த ஸோஹோ சோஷியல் மூலமாகப் போடும்போதும் அவ்வளவுதான் போட முடியும். இதுவேதான் திரெட் மற்றும் இன்ஸ்டாகிராமிலும். இது உங்கள் பிரச்சினை. ஸோஹோவின் பிரச்சினை அல்ல.

இன்ஸ்டாகிராமில் கூடுதல் சிக்கல், புகைப்படம் இருந்தாகவேண்டும். அந்தப் புகைப்படமும் இன்ஸ்டாவின் விதிக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அதையும் எடிட் செய்யும் வசதியை ஸோஹோ சோஷியல் தந்திருக்கிறது என்பது கூடுதல் வசதி.

ஃபேஸ்புக்கிலேயே இரண்டு மூன்று பேஜ்களுக்குப் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? உதாரணமாக, நான் புதிய புத்தக அறிவிப்பை என் ஃபேஸ்புக் பேஜ் மற்றும் சுவாசம் ஃபேஸ்புக் பேஜ்ஜில் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? செய்யலாம். இங்கே நீங்கள் பணம் கட்டி சந்தா வாங்க வேண்டி இருக்கும். இலவசம் கிடையாது. நீங்கள் இரண்டு பிராண்டை அல்லது பல பிராண்டுகளைப் பணம் கட்டி வாங்கினால், இது அனைத்தும் சாத்தியம். கூடவே, ஆட் ஆன் ஆப்ஷனும் தந்திருக்கிறார். வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அது ப்ரைமரி அக்கவுண்ட்டில் மட்டுமே சாத்தியம். இதில் கூடுதல் வசதி, யூ டியூபிலும் போஸ்ட் செய்யலாம். ஆம், 1 கல்லில் 7வது மாங்காய்!

இந்த ப்ரைமரி அக்கவுண்ட்டில் கூடுதல் வசதி, அங்கே இருக்கும் டேஷ் போர்டிலேயே நீங்கள் உங்கள் போஸ்ட் தொடர்பான அத்தனை அறிக்கைகளையும் பார்க்கலாம்! எத்தனை போஸ்ட் கூடுதலாகப் போட்டிருக்கிறோம், எத்தனை பேர் லைக், எத்தனை கூடுதல் லைக், இத்யாதி…

ஒரு நிறுவனத்துக்கு இது பெரிய வசதி. ஒரே க்ளிக்கில் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும், வாட்ஸப் பிஸினஸிலும் போஸ்ட் போட்டுவிடலாம். கொஞ்சம் செலவுதான். ஆனாலும், நேர விரயம், ஒவ்வொன்றாக லாகின் ஆகி ஒவ்வொரு போஸ்ட்டாகப் போடும் எரிச்சல் எல்லாம் மிச்சமாகும்.

ஒரு புத்தக அறிவிப்பை நான் என்னவெல்லாம் செய்கிறேன்? முதலில் என் ப்ரொஃபைலில் ஒரு போஸ்ட்டாகப் போடுகிறேன். பின்னர் என் பேஜில். பின்னர் டிவிட்டரில். பின்னர் சுவாசம் ஃபேஸ்புக் பேஜில். பின் சுவாசம் டிவிட்டர் பேஜில். பின் என் இன்ஸ்டாகிராமில். பின்னர் சுவாசம் இன்ஸ்டாகிராமில். பின்னர் தேவைப்பட்டால் வாட்ஸப் பிஸினசில். இதைச் செய்து முடிக்கும்போது மூளை சோர்ந்துவிடும். இதற்குத் தீர்வுதான் ஸோஹோ சோஷியல்.

ஸோஹோ சோஷியல் உடனே செய்யவேண்டியது என்ன? உடனடியாக ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போஸ்ட் செய்யும் வசதியைக் கொண்டு வருவது. இரண்டாவது ப்ராண்டு அல்லது பல ப்ராண்டுகளுக்குக் கொஞ்சம் செலவைக் குறைப்பது. இதைப் பிரபலப்படுத்துவது. இவற்றைச் செய்தால் பெரிய வரப்பிரசாதமான இந்த வசதி பெரிய பெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.

பின்குறிப்பு: இதை நான் இருபத்து இரண்டரை ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன், இப்பதான் தெரியுமா ஃபேஸ்புக்காரர்களுக்கு என் வாழ்த்துகள்.

Share