Mirage

Mirage (M) – சின்ன வயதில் அதிர்ஷ்டப் பரிசுச்சீட்டு கிழிக்கும் வழக்கம் உண்டு. 25 பைசா கொடுத்து சீட்டுக்கிழித்தால் அதில் 50 பைசா அல்லது ஒரு ரூபாய் கிடைக்கும். அதிகபட்சம் பத்து ரூபாய். பல சமயம் பரிசு விழாது‌ அப்போது புதிதாக ஒரு பரிசுச்சீட்டு வந்தது. அதாவது 25 பைசாவுக்குக் கிழித்தால் ஏதேனும் ஒரு பரிசு நிச்சயம். அது ஐந்து பைசாவும் இருக்கலாம், பத்து பைசாவாகவும் இருக்கலாம்.

இந்தப் படம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம். சில திரைப்படங்கள் பார்க்கும்போது நாம் சிலவற்றை யூகித்துக் கொண்டே இருப்போம். ஒரு துப்பறியும் படம் என்றால், இவன் கொலைகாரனா அவன் கொலைகாரனா என்று யோசிப்போம். படத்தில் வரும் அத்தனை பேரையும் சந்தேகப்படுவோம். கடைசியில் யாரோ ஒருவன் கொலைகாரன் ஆவான். நான் சொன்னேன் பார்த்தியா என்று சந்தோஷப்பட்டுக் கொள்வோம். இந்தப் படம் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல. நீங்கள் என்ன யூகித்தாலும் அது அத்தனையும் இந்தப் படத்தில் நடக்கும். இப்படி ஒரு திரைக்கதையை யோசித்ததற்காகவே ஜீது ஜோசப்பைப் பாராட்ட வேண்டும்.

முதல் காட்சியில் இருந்து பலவற்றை நான் யூகித்தேன்.வ்அத்தனையும் நடந்தது. குறிப்பாக க்ளைமாக்ஸை முதல் காட்சியிலேயே யூகித்தேன் என்பது முக்கியமான விஷயம்.

படம் கொஞ்சம் இழுவை என்றாலும் எனக்குப் பிடித்திருந்தது. முதல் காட்சியிலிருந்து கடைசிக் காட்சி வரை போரடிக்காமல் போகிறது என்பது பெரிய ப்ளஸ்பாய்ண்ட். பின்னணி இசை அபாரம். நேரம் இருப்பவர்கள் பார்க்கலாம்.

ட்விஸ்ட்டுக்கே ட்விஸ்ட் கொடுக்கும் ஜீதுதான் இப்படம்.

Share

Sridhar Subramaniyam on Taliban

11.10.2025

ஸ்ரீதர் சுப்ரமணியம் வழக்கம் போல் பாஜகவைத் திட்ட ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். எப்போதும் போல் காவிகளைத் திட்டுவதோடு அவர் நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் அவரது நேரம், தாலிபானையும் வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். ஒரு படி மேலே போய், முகத்தை மூடாத பெண்களைப் பார்த்தால் தாலிபன் அமைச்சருக்கு மூடு வருமே என்றெல்லாம் கேட்டுவிட்டார். அவர் நினைத்துக் கொண்டு எழுதியது, ‘நாம் திட்டுவது தாலிபனைத்தான், லைக் அள்ளப் போகிறது’ என்று. ஆனால் கமெண்ட் போட்டவர்கள் அவர் தாலிபனைத் திட்டுவதாக நினைக்கவில்லை. அப்புறம் என்ன நடக்கும்? அவரைக் காவியாக்கிவிட்டார்கள்.  அதிலும் மயிலாப்பூர் மாமி என்றெல்லாம் கமெண்ட் கேவலமாகப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் முழுக்க என்னதான் நீங்கள் கரடியாகக் கத்தினாலும் நீ பாப்பான்தானே என்று சொல்லக்கூடிய டெம்ப்லேட் ஞாநி தொடங்கி இன்று வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. (ஸ்ரீதர் என்ன ஜாதி என்று எனக்குத் தெரியாது)

அது எப்படியோ போகட்டும், அங்கே கமெண்ட் போடுபவர்களுக்கு… நீங்கள் பாஜகவைத் திட்டுங்கள் அல்லது ஸ்ரீதரைத் திட்டுங்கள், ஆனால் ஸ்ரீதர் காவி என்று சொல்லி பாஜகவை அசிங்கப்படுத்தாதீர்கள்.

Sridhar’ post:

https://www.facebook.com/share/p/1GvLV377vx

13.10.2025

எதிர்பார்த்தது போலவே ஸ்ரீதர் சுப்பிரமணியம் தனது நடுநிலைமையைப் பறைசாற்றிக் கொள்ள கொஞ்சம் கூட அடிப்படை நியாய உணர்வே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ம் தாலிபனும் ஒன்றுதான் என்று தீர்ப்பளித்து விட்டார். 

ஏன் இவர்களையெல்லாம் மறந்தும் கூட ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஆதரிப்பதில்லை என்பதும், இப்படிப்பட்டவர்கள் அடிப்படைவாதிகளால் திட்டப்படும் போது ஏன் ரசிக்கிறார்கள் என்பதும் இந்த அராஜகத்துக்காகதான். 

இப்படிப்பட்டவர்கள் நம் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பது எனக்கும் தெரியும். ஆனாலும் என் நியாய உணர்வுக்காக மட்டுமே இது போன்ற பதிவுகளை எழுதுகிறேன்.

https://www.facebook.com/share/p/1DBuveS7Zt

Share

Justice Gavai And Rakesh Kishore

நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் செருப்பு வீசியது கண்டிக்கத் தக்கது. கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயல். இந்த நிலைப்பாட்டில் இருந்து நாம் எள்ளளவும் பிறழக் கூடாது.

கவாய் சொன்ன தீர்ப்பை நானும் ஏற்கவில்லை. அதேபோல், பல நீதிமன்றங்களின் பல செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவும், குழப்பம் தருவதாகவும் இருக்கின்றன. ஒரு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாகச் சிக்கிய பணமெல்லாம் நீதித்துறையின்மீது நம்பிக்கையின்மையைப் பல மடங்கு கூட்டின. இவை எல்லாமே உண்மை. ஆனால் இந்த நேரத்தில் இவற்றையெல்லாம் சொல்லி, ஹிந்து மதக் கடவுளை கவாய் ஏளனம் செய்ததற்காக ராகேஷின் செயலை நாம் ஆதரிப்போம் என்றால், அது தவறான முன்னுதாரணமாகவே அமையும்.

இந்த நேரத்தில் திராவிட ‘முற்போக்காளர்கள்’ இதுதான் சாக்கு என்று, மிகவும் நியாயவாதிகள் போலப் பேசுகிறார்கள். அவர்களுக்கு நாம்தான் அந்த இடத்தைக் கொடுக்கிறோம் என்பதையும் நாம் நினைவில் வைக்கவேண்டும்.

இதே போன்ற ஒரு செயலை, ஹிந்து ஆதரவு நீதிபதிக்கு ஹிந்து எதிர்ப்பு வழக்கறிஞர் செய்திருந்தால், இந்நேரம் இந்த ‘முற்போக்காளர்கள்’ அவருக்கு கலைமாமாமணி விருதைக் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்களது இரட்டைத் தனத்தையும், தேவைக்கேற்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு அதுவே நேர்மையான, உலகமே விதந்தோதும் நீதியான செயல் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதையும் நாம் லட்சத்து ஓராவது முறையாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இதில் பெரிய நியாயவான்கள் போல, ‘அந்த நீதிபதியின் தீர்ப்பும் சரியல்ல’ என்று சதாரணமாகச் சொல்பவர்களைக் கூட ஜாதி ரீதியாகத் தூற்றிக்கொண்டு அலைவதையும் பார்க்கத்தான் செய்கிறோம். இவர்கள் என்றுமே பொருபடுத்தத் தகுந்தவர்கள் அல்ல. தொடர்ந்து எக்ஸ்போஸ் செய்யப்படவேண்டியவர்கள். இவர்களுக்கு இருப்பது இரண்டே இரண்டுதான், ஒன்று ஹிந்து மத வெறுப்பு, அடுத்து பிராமணக் காழ்ப்பு. இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

நீதிபதி கவாயின் ஹிந்து மதக் கடவுள் மீதான விமர்சனமும், ராகேஷ் அவர் மேல் செருப்பு எறிந்ததும் வேறு வேறு என்று நாம் இந்நேரத்தில் பார்க்கவேண்டும். சரியாகச் சொல்வதென்றால், கவாயின் செயலைவிட ராகேஷ் செய்தது அராஜகமானது. கண்டிப்போம்.

Share

Puthiya Thalaimurai Blocked in Arasu Cable

புதிய தலைமுறை முடக்கப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனங்கள்.

நாம் என்னதான் கண்டனம் தெரிவித்தாலும், நாளையே இந்தப் புதிய தலைமுறை திமுகவுக்குச் சொம்படிக்கத்தான் போகிறது என்றாலும், இப்போது ஓர் அநியாயம் நடக்கும்போது அதைக் கண்டிக்கவேண்டியது அவசியம்.

இப்படியெல்லாம் நடந்தாலும் தமிழ் ஊடகங்கள் ஒருநாளும் திருந்தப் போவதில்லை என்றாலும், இந்த முடக்கம் அநியாயமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் இப்படி எதாவது நடந்தால் வீறுகொண்டு எழுந்து, இதென்ன ஆட்சி என்றெல்லாம் முழக்கமிட்ட ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் வாலைச் சுருட்டி அமர்ந்திருப்பதை நாம் தொடர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியமானது.

எழுத்தாளர்களுக்கு, ‘முற்போக்காளர்களுக்கு’ மனிதர்களை விட உயர்ந்த நிலை கொண்டவர்களுக்கு நிச்சயம் இரண்டு கொம்பு இருக்கிறது என்றுதான் நானும் நம்ப விரும்புகிறேன். என்ன பிரச்சினை என்றால், திமுக என்று வரும்போது மியாவ் என்று கத்திவிடுகிறார்கள்.

Share

Zoho Social

1 கல்லில் 6 இல்ல 7 மாங்காய்

ஸோஹோ சோஷியல் என்று ஒரு வசதி இருக்கிறது. இது ஆப்பாகவும் கிடைக்கிறது. ஒரே நேரத்தில் ஃபேஸ்புக்கில், டிவிட்டரில், லின்க்ட் இன்னில், இன்ஸ்டாகிராமில், திரெட்டில், வாட்ஸப் பிஸினஸில் போஸ்ட் செய்யும் வசதியைத் தருகிறது. இது ஒரு சாதனை. ஆனால் சில க்-கன்னாக்களும் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதலில் ஸோஹோ சோஷியலில் லாகின் செய்து கொண்டு, உங்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், திரெட் மற்றும் லின்க்ட் இன் ப்ரொஃபைலைச் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு தடவை இதைச் செய்தே ஆகவேண்டும். (வாட்ஸப் பிஸினஸ் நான் இன்னும் சோதிக்கவில்லை.)

நீங்கள் ஏதேனும் ஒன்றை அடிப்படையாக வைத்து இதைச் செய்யவேண்டும். அதாவது ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்து, மற்ற சோஷியல் மீடியாக்களைச் சேர்த்துக் கொள்ளலாம். அடிப்படையான விஷயம் இனி உங்கள் ப்ராண்ட் என அழைக்கப்படும். நான் ஹரன் பிரசன்னா என்ற ஃபேஸ்புக்கை அடிப்படையாக வைத்துச் செய்தால், என் பிராண்ட் ஹரன் பிரசன்னா.

இதில் உள்ள சிக்கல் என்ன? ஃபேஸ்புக் ப்ரொஃபைலைச் சேர்க்க முடியவில்லை. மாறாக அந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலை அடிப்படையாக வைத்துத் தொடங்கப்பட்ட ஃபேஜ் மட்டும்தான் சேர்க்க முடிகிறது. எடுத்துக்காட்டாக, என் ப்ரொபைலுக்கு 15 ஆயிரம் ஃபாலோயர்ஸ். ஆனால் ஹரன் பிரசன்னா என்னும் பேஜ்ஜுக்கு 1000 பேர் கூடக் கிடையாது. என்னால் இந்த பேஜுக்குத்தான் ஸோஹோ சோஷியல் வழியாக போஸ்ட் போடமுடிகிறது. இது ஒரு சறுக்கல்.

இது தொடர்பாக ஸோஹோ கஸ்டமர் சர்வீஸில் பேசினேன். நீண்ட நேரம் விளக்கினேன். அத்தனையும் கேட்டுவிட்டு, இதை அப்படியே மடல் போடுங்கள் என்றார்கள். போர் அடித்ததால் மடல் போடவில்லை. இதை அடுத்து ஒரு காமெடி நடந்தது. ஸோஹோவில் இருந்து தினமும் ஒரு மிஸ்ட்கால் வரும். அவ்வளவுதான். அதாவது அவர்கள் என்னைத் தொடர்புகொண்டுவிட்டதாக ஒரு தோற்றம் வருவதற்காக இதைச் செய்வார்கள் போல. இப்படித்தான் ஃப்ளிப்கார்ட் அமேஸான் எல்லாம் செய்து நாசமாகப் போயின.

இது குறித்து எனக்குப் பெரிய கவலை இல்லை. ஏனென்றால், மேலே சொன்னவை அனைத்தும் இப்போதைக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. எனக்கு அது போதும்.

இன்னும் உள்ள சில சிக்கல்கள் என்ன? அது எல்லாவற்றிலும் உள்ளது. நீங்கள் டிவிட்டரில் 240 டெக்ஸ்ட் மட்டும்தான் போடமுடியும் என்றால், இந்த ஸோஹோ சோஷியல் மூலமாகப் போடும்போதும் அவ்வளவுதான் போட முடியும். இதுவேதான் திரெட் மற்றும் இன்ஸ்டாகிராமிலும். இது உங்கள் பிரச்சினை. ஸோஹோவின் பிரச்சினை அல்ல.

இன்ஸ்டாகிராமில் கூடுதல் சிக்கல், புகைப்படம் இருந்தாகவேண்டும். அந்தப் புகைப்படமும் இன்ஸ்டாவின் விதிக்கு உட்பட்டு இருக்கவேண்டும். அதையும் எடிட் செய்யும் வசதியை ஸோஹோ சோஷியல் தந்திருக்கிறது என்பது கூடுதல் வசதி.

ஃபேஸ்புக்கிலேயே இரண்டு மூன்று பேஜ்களுக்குப் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? உதாரணமாக, நான் புதிய புத்தக அறிவிப்பை என் ஃபேஸ்புக் பேஜ் மற்றும் சுவாசம் ஃபேஸ்புக் பேஜ்ஜில் போடவேண்டும் என்றால் என்ன செய்வது? செய்யலாம். இங்கே நீங்கள் பணம் கட்டி சந்தா வாங்க வேண்டி இருக்கும். இலவசம் கிடையாது. நீங்கள் இரண்டு பிராண்டை அல்லது பல பிராண்டுகளைப் பணம் கட்டி வாங்கினால், இது அனைத்தும் சாத்தியம். கூடவே, ஆட் ஆன் ஆப்ஷனும் தந்திருக்கிறார். வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், அது ப்ரைமரி அக்கவுண்ட்டில் மட்டுமே சாத்தியம். இதில் கூடுதல் வசதி, யூ டியூபிலும் போஸ்ட் செய்யலாம். ஆம், 1 கல்லில் 7வது மாங்காய்!

இந்த ப்ரைமரி அக்கவுண்ட்டில் கூடுதல் வசதி, அங்கே இருக்கும் டேஷ் போர்டிலேயே நீங்கள் உங்கள் போஸ்ட் தொடர்பான அத்தனை அறிக்கைகளையும் பார்க்கலாம்! எத்தனை போஸ்ட் கூடுதலாகப் போட்டிருக்கிறோம், எத்தனை பேர் லைக், எத்தனை கூடுதல் லைக், இத்யாதி…

ஒரு நிறுவனத்துக்கு இது பெரிய வசதி. ஒரே க்ளிக்கில் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும், வாட்ஸப் பிஸினஸிலும் போஸ்ட் போட்டுவிடலாம். கொஞ்சம் செலவுதான். ஆனாலும், நேர விரயம், ஒவ்வொன்றாக லாகின் ஆகி ஒவ்வொரு போஸ்ட்டாகப் போடும் எரிச்சல் எல்லாம் மிச்சமாகும்.

ஒரு புத்தக அறிவிப்பை நான் என்னவெல்லாம் செய்கிறேன்? முதலில் என் ப்ரொஃபைலில் ஒரு போஸ்ட்டாகப் போடுகிறேன். பின்னர் என் பேஜில். பின்னர் டிவிட்டரில். பின்னர் சுவாசம் ஃபேஸ்புக் பேஜில். பின் சுவாசம் டிவிட்டர் பேஜில். பின் என் இன்ஸ்டாகிராமில். பின்னர் சுவாசம் இன்ஸ்டாகிராமில். பின்னர் தேவைப்பட்டால் வாட்ஸப் பிஸினசில். இதைச் செய்து முடிக்கும்போது மூளை சோர்ந்துவிடும். இதற்குத் தீர்வுதான் ஸோஹோ சோஷியல்.

ஸோஹோ சோஷியல் உடனே செய்யவேண்டியது என்ன? உடனடியாக ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் போஸ்ட் செய்யும் வசதியைக் கொண்டு வருவது. இரண்டாவது ப்ராண்டு அல்லது பல ப்ராண்டுகளுக்குக் கொஞ்சம் செலவைக் குறைப்பது. இதைப் பிரபலப்படுத்துவது. இவற்றைச் செய்தால் பெரிய வரப்பிரசாதமான இந்த வசதி பெரிய பெற்றி பெரும் என்பதில் சந்தேகமில்லை.

பின்குறிப்பு: இதை நான் இருபத்து இரண்டரை ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன், இப்பதான் தெரியுமா ஃபேஸ்புக்காரர்களுக்கு என் வாழ்த்துகள்.

Share

Aravindan Neelakandan

முழு நேரமாகக் கட்சிக்காகக் குரல் கொடுத்த அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்கள் காத்திருந்து ஏமாறுகிறார்கள் என்று ஜெயமோகன் எழுதியிருப்பது குறித்து.

இது முற்றிலும் அநியாயமான கருத்து. உள்நோக்கம் கொண்டது.

அரவிந்த நீலகண்டன் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் ஆதரவாக எழுத ஆரம்பித்தது திண்ணையின் தொடக்கக் காலத்திலேயே, அதாவது அப்போதெல்லாம் பாஜக இத்தனை வலுவாக ஆட்சிக்கு வரும் என்று யாரும் எதிர்பார்க்காத நேரம், ஆர்எஸ்எஸ் பெயரைச் சொன்னாலே அடி விழும் ஒரு காலம், அந்தக் காலத்திலேயே, குறிப்பாக அதற்கும் முன்பாகவே ஆதரித்தார்.

அரவிந்தன் ஆர் எஸ் எஸ் & பாஜகவை ஆதரித்தது அவருடைய சித்தாந்தத்தின்படிதானே ஒழிய எதையும் எதிர்பார்த்து அல்ல.

இன்று பாஜக வலுவாக இந்தியா முழுக்கக் கால் பரப்பி இருக்கும் நிலையிலும் அவர் எந்த ஒரு சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. பெரிய சமரசம் அல்ல, சிறிய சமரசங்களை அதாவது கருத்து ரீதியாகச் சில சமரசங்களை அவர் செய்திருந்தாலே போதும், பல்வேறு விஷயங்கள் அவரைத் தேடி வந்திருக்கும். பல்வேறு எழுத்தாளர்கள் அவரைக் கொண்டாடி இருப்பார்கள். அந்தச் சமரசங்கள் தவறும் அல்ல. எல்லோரும் எல்லாக் கட்சியின் ஆதரவாளர்களும் எல்லா எழுத்தாளர்களும் எப்போதும் செய்வதுதான்.

நானே அவரிடம் அதைப் பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால் அதை ஒருபோதும் செய்யாதவர் அரவிந்தன். இப்படியான ஒருவரை, ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அதனால் பாஜகவை ஆதரித்து அதனால் ஏமாந்தார் என்பதெல்லாம் அநியாயத்திலும் அநியாயம்.

இதை ஜெயமோகன் சொல்லி இருக்கக் கூடாது. பத்மஸ்ரீ அவருக்குத் தரக் கோரிக்கை வைக்கப்பட்ட போது நிகழ்ந்தவற்றை நினைத்துப் பார்க்கிறேன். பத்மஸ்ரீ விருதுக்குத் தன் பெயர் பரிந்துரைக்கப்பட்டதே தனக்குத் தெரியாது என்று ஜெயமோகன் சொன்னார். அப்படி ஒரு வாய்ப்பு இருக்குமா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன். என்னால் அதை நம்ப முடியவில்லை என்பதையும் பதிவு செய்கிறேன்.

அதேபோல் முன்பு ஒரு நண்பர் – இன்று அவர் நட்புப்பட்டியலில் இல்லை – அவர் தெளிவாகச் சொன்னார். என்னிடம் சொன்னார். நீங்கள்தான் அரவிந்த நீலகண்டனுக்கு பத்மஸ்ரீ பட்டம் வாங்கி தர மேலிடத்தில் பேச வேண்டும் என்று. எனக்கு மேலிடத்தில் யாரையும் தெரியாது என்பது தனிக்கதை.

ஆனால் எனக்கும் அந்த எண்ணம் இருந்தது. பத்மஸ்ரீக்கு பரிந்துரைக்கும் அறிவிப்பு வந்தது. நான் அரவிந்தனிடம் எத்தனையோ பேசினேன். பத்மஸ்ரீக்கு அப்ளை செய்வோம், கிடைக்க விட்டாலும் பரவாயில்லை என்று சொன்னேன். அரவிந்தன் ஒரேயடியாகவே மறுத்து விட்டார்.

என்னைக் கட்டுப்படுத்த உங்களால் முடியாது, யாருக்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பத்மஸ்ரீ தர வேண்டும் என்று பரிந்துரை அனுப்பலாம், நீங்கள் ஏன் என்னைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அப்படி நான் பரிந்துரை செய்தால் என் நட்பில் இருந்து விலகுவேன் என்று கடுமையாகக் கூறினார்.

ஏதேனும் எதிர்பார்ப்பவர் இப்படிச் செயல்பட மாட்டார் அல்லது தன் நண்பனை விட்டு அப்ளை செய்துவிட்டு அந்த பிரச்சினை பெரிதாகும் போது நான் அப்படிக் கேட்கவில்லை என்றாவது சொல்லாமல் இருப்பார். இந்த இரண்டையுமே அரவிந்தன் செய்யவில்லை.

மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அவர்கள் மட்டுமே அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

நிச்சயம் அரவிந்தன் ஏதோ ஒன்று எதிர்பார்த்திருந்தால் இத்தனை வெளிப்படையாக, கொள்கைக்காக எதிர்க்க மாட்டார்.

இப்போதும் இத்தனை சமரசமற்ற தன்மையும் எதிர்ப்பும் அரவிந்தனுக்குத் தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு. ஆனால் வழக்கம் போல் அவர் அதைக் கேட்கப் போவதில்லை.

.

Share

Statement of Padaippalar Sangamam

கரூர் துயரத்தில் எழுத்தாளர்கள் அரசியல் செய்யக் கூடாது!
‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை

#
நாள்: 05.10.2025.
#

41 உயிர்களை பலிகொண்ட கரூர் துயரம் தொடர்பாக எழுத்தாளர்கள் எவரும் அரசியல் செய்யக் கூடாது என்று ‘படைப்பாளர்கள் சங்கமம்’ கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
___________________

கடந்த 2025, செப். 27ஆம் தேதி, ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் தலைவரும் நடிகருமான நடிகர் விஜயின் பிரசாரப் பயணம் கரூர் வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இது தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. கரூரில் பலியானோருக்கு ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

இந்த நிகழ்வு விபத்தா, சதியா என்ற கோணத்தில் விவாதங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைத்திருக்கிறது. அவரும் தனது விசாரணையைத் தொடங்கிவிட்டார். தவிர கரூர் மாவட்ட காவல் துறையும் தேவையான புலன் விசாரணையை நடத்தி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ந்த நீதிமன்ற வழக்குகளும் விசாரணையில் உள்ளன.

இந்த நிலையில்தான், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் 2025 அக். 2ஆம் தேதி கூட்டறிக்கை ஒன்றை சிலர் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கை, கரூர் கொடிய நிகழ்வுக்கு நடிகர் விஜய் தரப்பு மட்டுமே காரணம் என்று தெரிவித்திருக்கிறது. விஜய் ரசிகர்களின் கட்டுப்பாடற்ற தன்மை கண்டிக்கத் தக்கதே.

போதிய முன்னேற்பாடுகளைச் செய்யாதது, கூட்டத்தை நிர்வகிக்கத் தெரியாதது, நடிகர் என்ற பிராபல்யத்தை முறையாகப் பயன்படுத்தாதது, பொறுப்பின்மை ஆகியவை த.வெ.க. கட்சியின் தவறுகள். குறிப்பாக, நடிகர் விஜய் பொறுப்புள்ள அரசியல் தலைவராக நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் கண்டித்தாக வேண்டும்.

ஆனால், கரூர் துயர நிகழ்விற்கு விஜய் தரப்பு மட்டுமே காரணம் அல்ல என்பதை தமிழகத்தில் உள்ள பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர். தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது, குறுகிய இடத்தில் அனுமதி அளித்து அரசியல் நோக்குடன் செயல்பட்டது ஆகியவை மாநில அரசின் தவறுகள்.

மேலும், கண்மூடித்தனமாகக் கூடி நெரிசலை ஏற்படுத்திய கட்டுப்பாடற்ற ரசிகர்கள் மற்றும் சினிமா மோகம் கொண்ட மக்களுக்கும் இதில் இணையான பொறுப்பு உண்டு.

இந்த மூன்று தரப்பினரும் நடந்த துயரத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. இதனையே நாமும் வலியுறுத்துகிறோம்.

ஆனால், ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளவர்கள், மாநில அரசின் தவறுகள் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இதில் கையொப்பமிட்டுள்ள அனைவருமே திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாடுகளைக் கொண்டவர்கள். தங்கள் கூட்டறிக்கையை திமுக ஆதரவு எழுத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் வெளியிட்டிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழக எழுத்தாளர்களின் பிரதிநிதிகள் போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்குவதை ஏற்க முடியாது.

இலக்கியம், கலை மற்றும் எழுத்துலகில் ‘தாதா’ மனநிலையுடன் சிலர் செயல்படுவதையும், தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு உதவுவதற்காக கூட்டறிக்கை வெளியிடுவதையும், நடுநிலையான படைப்பாளர்களால் ஏற்க முடியாது.

இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டிருப்பவர்களில் பெரும்பாலோர், இந்திய அரசின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிட இயலாது.

நாட்டுநலனோ, மக்கள் மீதான நேசமோ இன்றி கூட்டறிக்கை வெளியிட்ட இந்தக் குறுங்குழுவை அன்றே ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் கண்டித்தோம். இவர்களின் இயல்பிலேயே ஒருசார்புத் தன்மையும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளும் இருக்கின்றன. எனவேதான், தற்போது இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையின் தேவை என்னவென்று ஆராய வேண்டியிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அக். 3ஆம் தேதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது நீதிமன்றம் இரு தரப்புக்கும் முக்கியமான கேள்விகளை எழுப்பி, சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் வாய்ப்பும் உண்டு.

இந்தத் தருணத்தில், பொதுக்கருத்து உருவாக்கம் மூலமான நிர்பந்தத்தை நீதித்துறை, தனிநபர் விசாரணை ஆணையம், காவல்துறை ஆகியோர் மீது அளிப்பதற்காகவே, திமுக, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனரோ என்று சந்தேகிக்கிறோம். இது குற்றம் தொடர்பான விசாரணை நடைமுறையைப் பாதிக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எழுத்தாளர்களும் கலைஞர்களும், சமூகத்தின் மனசாட்சியாகவும் அரசுக்கு உண்மையை எடுத்துக் கூறும் துணிவுள்ளவர்களாகவும் இருக்க வேண்டுமே ஒழிய, அரசின் தவறுகளை நியாயப்படுத்துபவர்களாக இருந்துவிடக் கூடாது.

எனவே, ‘கலை இலக்கியவாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள்’ என்ற பெயரில், தமிழகத்தை ஆளும் அரசியல் கட்சிக்கும் மாநில அரசுக்கும் ஆதரவாக வெளியிடப்பட்டுள்ள இந்தக் கூட்டறிக்கையை உரிய கண்டனத்துடன் நிராகரிக்கிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து எழுத்தாளர்களும் கலைஞர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் குறுங்குழுவின் நிலைப்பாட்டை ஏற்கவில்லை என்பதை ‘படைப்பாளர்கள் சங்கமம்’ சார்பில் தெளிவுபடுத்துகிறோம்.

கரூர்த் துயரம் தொடர்பாக நியாயமான விசாரணைகள் நடைபெற வேண்டும்; குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்; இதுபோன்ற விவகாரங்களுக்கு நிலையான தீர்வு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

-தமிழக நலனில் அக்கறையுடன்…

‘திராவிட மாயை’ சுப்பு, சென்னை
இசைக்கவி ரமணன், சென்னை
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சென்னை
பேராசிரியர் ப.கனகசபாபதி, கோவை
கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சென்னை
எஸ்.ஆர்.சுப்ரமணியம், ஈரோடு
கவிஞர் ரவி சுப்பிரமணியன், சென்னை
கவிஞர் பெ.சிதம்பரநாதன், கோவை
கவிஞர் லட்சுமி மணிவண்ணன், நாகர்கோவில்
பத்ரி சேஷாத்ரி, சென்னை
மோகன் ஜி ஷத்ரியன், சென்னை
பி.டி.டி.ராஜன், சென்னை
இயகோகா சுப்பிரமணியம், கோவை
அர்ஜுன் சம்பத், கோவை
பேராசிரியர் உமையொருபாகன், நாகர்கோவில்
வானவில் க.ரவி, சென்னை
எஸ்.கே.கார்வேந்தன், தாராபுரம்
பா.பிரபாகர், சென்னை
ம.வெங்கடேசன், சென்னை
என்.சி.மோகன்தாஸ், சென்னை
டாக்டர் சீனிவாசகண்ணன், நாகர்கோவில்
பத்மன், சென்னை
நம்பிநாராயணன், சென்னை
வ.மு.முரளி, திருப்பூர்
ஹேமா கோபாலன், சென்னை
மீனாட்சி ஸ்ரீதர், சென்னை
ஜவஹர் வெங்கடசாமி, சென்னை
பாஸ்கர் சுப்பிரமணியம், சென்னை
ஒமாம்புலியூர் ஜெயராமன், சென்னை
ஜெயகிருஷ்ணன் கோபால், சென்னை
முனைவர் ஜெயஸ்ரீ சாரநாதன், சென்னை
ஆமருவி தேவநாதன், சென்னை
செங்கோட்டை ஸ்ரீராம், சென்னை
சந்திர.பிரவீண்குமார், சென்னை
ஹரன் பிரசன்னா, சென்னை
ஜடாயு, பெங்களூரு
பி.ஆர்.மகாதேவன், சென்னை
சத்தியப்பிரியன், சேலம்
எஸ்.ஜி.சூர்யா, சென்னை
கோதை ஜோதிலட்சுமி, சென்னை
பி.வெங்கடாசலபதி, திருநெல்வேலி
முனைவர் காயத்ரி சுரேஷ், சென்னை
அருட்செல்வப்பேரரசன், திருவொற்றியூர்
கவிஞர் சுரேஜமீ, சென்னை
கவிஞர் உமாபாரதி, சென்னை
கவிஞர் பாபு பிரித்திவிராஜ், நாகர்கோவில்
கவிஞர் சுதே.கண்ணன், நாகர்கோவில்
கவிஞர் அமுல்ராஜ், திருவண்ணாமலை
கவிஞர் மீரா வில்வம், மும்பை
கவிஞர் லட்சுமி சாஹம்பரி, பெங்களூரு
கவிஞர் திருமலைக்கண்ணன், ஸ்ரீரங்கம்
கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம், திருப்பூர்
கவிஞர் சிவதாசன், திருப்பூர்
கோவிந்தராஜ், திருப்பூர்
விசாலி கிருஷ்ணன், சென்னை
கமலநாதன். சென்னை
கவிஞர் பால்முகில், சென்னை
கவிஞர் துரைசிங், கன்னியாகுமரி
கவிஞர் இயற்கை, செஞ்சி
கவிஞர் நந்தலாலா, சென்னை
கவிஞர் சுராகி, திருவொற்றியூர்
கவிஞர் மீ.விஸ்வநாதன், சென்னை
கவிஞர் விவேக்பாரதி, சென்னை
கவிஞர் எஸ்.சுவாதி, சென்னை
கவிஞர் தில்லைவேந்தன், சென்னை
கவிஞர் ஹரிஹரன், சென்னை
கவிஞர் முரளிகிருஷ்ணா, சென்னை
கவிஞர் விஜயகிருஷ்ணன், சென்னை
கலைச்செல்வி ஸ்ரீநிவாஸ், சென்னை
வழக்கறிஞர் எம்.விஜயா, சென்னை
ராதா எஸ்.தேவர், சென்னை
ராமசுப்பிரமணியன், சென்னை
ராகவேந்திரா, சென்னை
நடராஜ சாஸ்திரி, சென்னை
ஜனனி ரமேஷ், சென்னை
முனைவர் செ.ஜகந்நாத், மதுரை
சோ.விபின்ராஜ், கன்னியாகுமரி
ஜா.விநாயகமூர்த்தி, விழுப்புரம்
அசோக்ராஜ், கும்பகோணம்
சே.வெங்கடேசன், திருவண்ணாமலை
பத்மா சந்திரசேகர், சென்னை
பொன்.மூர்த்திகன், பறங்கிப்பேட்டை
நிழலி, பெரம்பலூர்
பாவலர் கா.நேசன், திருகளப்பூர்
ச.மோகன், பெரம்பலூர்
தேவரசிகன், கும்பகோணம்
ஜி.பி.இளங்கோவன், கும்பகோணம்
மா.செல்வகுமார், கல்லூர், கும்பகோணம்
கே.மணிமாறன், சென்னை
திருமை பா.ஸ்ரீதரன், சென்னை
பி.வீரராகவன், சென்னை
பேராசிரியர் ஜோஸபின்மேரி, பாளையங்கோட்டை
பேராசிரியர் பாலசுப்பிரமணியம், திருநெல்வேலி
வி.வி.பாலா, சென்னை
விதூஷ், சென்னை
கே.ஜி.ஜவர்லால், சென்னை
முனைவர் சடகோபன், சென்னை
முனைவர் தர்மசேனன், சென்னை
சக்திவேல் ராஜகுமார், சென்னை
ஜெயந்தி நாகராஜன், சென்னை
கே.கந்தசாமி, கோவை
புதுகை பாரதி, புதுக்கோட்டை
தசரத் ஷா, காஞ்சிபுரம்
அருண்பிரபு, சென்னை
ஆனந்த்பிரசாத், சென்னை
துக்ளக் சத்யா, சென்னை
ஆர்.ராமமூர்தி, சென்னை
குமரேசன், சென்னை
திவாகர், சென்னை
தேவப்பிரியா, சென்னை
ஆண்டனி, சென்னை
அரவிந்தா நாஞ்சில், சென்னை

மற்றும் பலர் (200க்கு மேற்பட்டோர்)

#
##

(இந்த அறிக்கையை ஆதரிக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் தங்களை பின்னூட்டத்தில் இணைக்கலாம்).


ஒரே ஓர் அறிக்கை படைப்பாளர் சங்கமம் சார்பாக. கதறல் ஆரம்பம்.

இவர்களுக்குள்ளே இப்படி ஒரு நெட்வொர்க்கா என்று அங்கலாய்ப்பு.

முன்பு ஒரு முறை காலச்சுவடு இதழில் சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு பேட்டியில், ‘இப்போதெல்லாம் பாஜக ஆதரவுக் குரல்கள் எல்லாம் கேட்கின்றன’ என்ற ரீதியில் அங்கலாய்த்ததற்கு இணையான, கருத்துச் சுதந்திரப் பீராய்வு தொடக்கம்.

அத்தனை பேரும் பாஜக ஆதரவாளர்கள் என்று ஒரு கண்டுபிடிப்பு. இதே கண்டுபிடிப்பு, போலி முற்போக்காளர்கள் காய்த்து ஊற்றிய அறிக்கையில் ‘அத்தனை பேரும் அர்பன் நக்ஸல்கள்’ என்று கண்டுபிடிக்கத் தெரியவில்லை.

’இந்த அறிக்கைக்கு நன்றி, எத்தனை பேர் பாஜக ஆதரவாளர்கள் என்று கண்டுகொண்டோம்’ என்று உலகப் பிரசித்தி பெற்ற ஒரு கமெண்ட். அதே வெங்கயாத்தைத்தான் நாங்களும் காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் கண்டுகொண்டு இதனை வெளியிட்டிருக்கிறோம்.

இதில் சிகரம் வைத்த திராவிட மாடல் கமெண்ட் ஒன்று உண்டு. அத்தனை பேரையும் விட்டுவிட்டு, அர்ஜூன் சம்பத் எழுத்தாளரா என்ற கேள்வி. ஏன் அர்ஜூன் சம்பத்தை மட்டும் கேட்கவேண்டும்? நூல் நூல் என்று சொல்லிக்கொண்டே, உண்மையில் திராவிட மாடலுக்கு உறுத்துவது என்ன ஜாதி வெறி என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை என்பதற்கு இந்த கமெண்ட் இன்னும் ஓர் ஆதாரம்.

அந்த காய்ச்சி ஊற்றிய அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் இருக்கலாமாம், ஆனால் நேர்மையான அறிக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் வரக் கூடாதாம்! எரியட்டும் எரியட்டும்.

Share

Let us Ulaa

உலா போக நீயும் வரணும்

உலா ப்ரவுசரை இரண்டு வாரங்களுக்கு முன்பே நான் நிறுவி இருந்தாலும் அதைப் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. காரணம், க்ரோம் தரும் க்ளவுட் வசதி, அது தரும் கடவுச் சொல் பதிவு வசதி, ப்ரவுசிங் ஹிஸ்டரி எனப் பல.

உலாவில் ப்ரவுஸிங் ஹிஸ்டரியை பிசி மூலம் இறக்கிக் கொள்ளும் வசதி இருக்கிறது. மொபைலில் இல்லை. இன்று பொறுமையாக அமர்ந்து, அனைத்து ப்ரவுஸிங் ஹிஸ்டரியையும் க்ரோமில் இருந்து உலாவுக்கு லேப் டாப் மூலம் மாற்றினேன்.

அடுத்து பாஸ்வேர்ட். எத்தனையோ தளங்களுக்கான பாஸ்வேர்ட் எனக்குத் தெரியாது. அனைத்தும் க்ரோமில் பதியப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் இரண்டடுக்குப் பாதுகாப்பு மூலம் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இவை அனைத்தையும் எப்படி உலாவில் கொண்டு வருவது?

க்ரோம் நல்லவன். அனைத்து பாஸ்வேர்டையும் இம்போர்ட் செய்யும் வசதி கொடுத்திருக்கிறான். அதை இறக்கி, உலாவில் ஏற்றினேன். இப்போது உலா ப்ரவுஸிங் ஹிஸ்டரி மற்றும் பாஸ்வேர்ட்களுடன் தயார்.

உலாவில்தான் இரண்டு வாரமாக மொபைலில் உலவுகிறேன் என்றாலும், இன்றுதான் லேப்டாப்பில் உலவினேன். முதல் அனுபவம் எப்படி? அட்டகாசம். அழகான வடிவமைப்பு. கண்ணை உறுத்தாத வடிவம். தொடர்ந்து உலாவைப் பயன்படுத்த உத்தேசம்.

இதன் பாதுகாப்பு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நான் டெக்கி அல்ல. ஆனால், ஸோஹோவின் மீதும் ஸ்ரீதர் வேம்புவின் மீதும் நம்பிக்கை உள்ளதால், நிச்சயம் பாதுகாப்புப் பிரச்சினை இருக்காது என்று நம்புகிறேன். இப்படி நம்புபவர்கள் நீங்களும் உலாவுக்கு வாருங்கள்.

என்ன ஒரே ஒரு பிரச்சினை என்றால், என்னை அறியாமல் என் கண்ணும், மௌஸும் க்ரோமைத் தேடுகின்றன. 20 ஆண்டு கால நட்பு!

பின்குறிப்பு: நான் போட்ட அரட்டை போஸ்ட்டைப் பார்த்து அரட்டையில் என்னைத் தொடர்புகொண்ட 200க்கும் மேற்பட்ட நல்லுல்லங்களுக்கு நன்றி. என்ன, பலரை யாரென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே அரட்டையில் உங்கள் புகைப்படத்தையும், ஃபேஸ்புக்கில் எந்தப் பெயரில் உலவுகிறீர்களோ அந்தப் பெயரையும் வையுங்கள். அப்போதும் எனக்கு ஞாபகம் வராது என்பது என் சாபம். 🙂

Share