சின்ன வயதிலேயே குடும்பத்தோடு விரட்டிவிட்ட பாட்டியைத் தேடி வரும் பேத்தியும் பாட்டியும் உண்மையைப் புரிந்துகொண்டு ஒன்றாகச் சேரும் கதை. பாட்டி ஒப்பாரி வைப்பவள். பேத்தி சினிமா மேக்கப் ஆர்ட்டிஸ்ட். பேத்திக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே கல்யாணம் செய்து வைக்க முயலும் பாட்டி. அந்தக் கல்யாணப் பையன் பேத்தியின் அத்தைப் பையன் தான். அவன் சடலங்களுக்கு அழகு செய்பவன்.
படத்தில் பிடித்ததைச் சொல்லிவிடலாம். இரண்டு காட்சிகள் மிக நன்றாக வந்துள்ளன. கூத்தியாளுடன் சல்லாபிக்கப் போகும் ஒருவன் அந்த இரவில் அவள் மேலேயே சரிந்து இறந்துபோக அங்கேயே இறுதிச் சடங்கு நடக்கிறது. அப்போது அவனது மனைவிக்கும், அவனது தொடுப்பிற்கும் நடக்கும் சண்டை. இந்தக் காட்சி நன்றாக வந்திருக்கிறது.
இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில் சினிமாவில் மேக்கப் போடும் ஒரு காட்சி வருகிறது. அது இயல்பான காட்சியாக இருக்கிறது.
இந்த இரண்டு காட்சிகளை விட்டுவிட்டால், படம் முழுக்க எதோ ஒரு செயற்கைத்தனம் துருத்திக்கொண்டே இருக்கிறது. ஒன்று காட்சியில், அல்லது நடிகர்களின் நடிப்பில், அல்லது செயற்கையான வசனங்களில். இப்படி எதோ ஒன்று செயற்கையாக இருக்கிறது. சில நடிகர்கள் நன்றாக மதுரை வட்டாரத் தமிழ் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று நெல்லைத் தமிழில் பேசிவிடுகிறார்கள். கிராமத்து மக்கள் ஆங்கிலம் கலக்க மாட்டார்கள் என்பதால் தமிழைப் புகுத்தி இருக்கிறார்கள். ஆங்கிலம் பேசாமல் அதே சமயம் எப்படி இயல்பான தமிழில் பேசுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டிருக்கலாம். பாட்டியைப் பார்க்க வரும் பேத்தி ஏன் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மேக்கப் கிட்டையும் கையிலேயே சுமந்துகொண்டிருக்கிறார் என்பதெல்லாம் புரியவே இல்லை.
ஸ்ரீலேகா என்ற தொலைக்காட்சிக் கால நாடக நடிகை பாட்டியாக நடித்திருக்கிறார். இவர் நாடகங்களில் கூட நன்றாக நடிக்கமாட்டார். இந்தப் படத்திலும் அப்படியே.
உண்மையிலேயே ஒப்பாரி வைப்பவர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் ஒப்பாரி இயல்பாக இருக்க, ஸ்ரீலேகா வைக்கும் ஒப்பாரியும் அதில் வரும் வசனங்களும் மிகச் செயற்கையாக இருக்கின்றன. ஒட்டவே இல்லை.
பேத்தியாக வரும் நிவேதிதா நன்றாக நடித்திருக்கிறார். மாடர்ன் பெண் என்பதால் சிகரெட் பிடிக்கிறார். கிராமத்தில் இருக்கும் பெண்ணுக்கு சிகரெட் பிடிக்க கற்றுத் தருகிறார். பாட்டி சுருட்டே பிடிப்பாள் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.
இறுதிக் காட்சியில் பாட்டி செத்துப் போக பேத்தி கிராமத்துக்கு வந்து ஒப்பாரி வைக்கிறாள்.
சில படங்களை யார் ஏன் இயக்குகிறார்கள் என்பதே ஆச்சரியமாக இருக்கும். இப்படியான படங்களை எடுப்பவர்களை நினைத்துப் பார்ப்பேன். தியேட்டர் கிடைக்கப் போவதில்லை. போட்ட பணம் வரப் போவதில்லை. ஆனால் எதோ ஒரு ஆர்வத்தில் எடுக்கிறார்கள். அதைப் பாராட்ட வேண்டும். இந்தப் படமும் அந்த வகையறாதான்.
படத்துக்குப் பின்னணியாகக் காட்சிகள் வரவேண்டும். அதில் விவரணைகள் வரவேண்டும். விவரணைகளைக் காட்டுவதற்காகவே படத்தை எடுத்தால் என்னாகும் என்பதை இந்தப் படத்தில் பார்க்கலாம். கிராமத்தில் நிகழும் சாவை ஒட்டி நடக்கும் காட்சிகளைத் தத்ரூபமாகக் காண்பிக்கிறேன் என்று முதல் 25 நிமிடங்களில் நம்மைச் சோதித்துவிட்டார்கள். அதிலும் செயற்கையான நடிப்பு, செயற்கையான வசனம் வேறு. இதில் பாதியில் ஒரு குழந்தையைக் கொன்று அதற்கு யார் சாயம் பூசுவது என்ற மனப் போராட்டத்தை விவரிக்கிறேன் என்று படுத்திவிட்டார்கள். கொடூரமான கற்பனை இதெல்லாம்.
கலைத் திரைப்படம் என்பது எதையாவது கதையாகச் செய்து, அதன் பின்னணியை சம்பந்தமே இல்லாமல் விரிவாகக் காண்பிப்பது அல்ல. அதில் இயல்பும் உயிரும் இருக்கவேண்டும். இந்த இரண்டுமே இந்தப் படத்தில் இல்லை.
டிஜிபி விஜயகுமாரின் ‘வீரப்பன் தேடுதல் வேட்டை’ மிக முக்கியமான புத்தகம். ஒரு பக்க நியாயத்தைத்தான் முன் வைக்கிறது என்றாலும், தமிழகக் காவல்துறை எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்ள முக்கியமான ஆவணம். ஒரு வெற்றிக்குப் பின்னே மறைந்திருக்கும் ஆயிரம் தோல்விகளைப் பற்றி நாம் அறிந்துகொள்வதே இல்லை. ஒருவேளை வீரப்பன் வேட்டை வெற்றியில் முடியாமல் போயிருந்தால், இந்த ஆயிரம் தோல்விகளையும் நாம் தெரிந்துகொள்ளாமலேயே போயிருப்போம். தமிழக, கர்நாடக போலிஸும் வனத்துறையும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, உள் மற்றும் வெளி துரோகங்களுக்கிடையே ஒரு கொள்ளைக்காரனை, கொலைகாரனை வேட்டையாடிய ஆவணம் இது.
சாதாரண கொள்ளைக்காரனாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வீரப்பன் பெரிய கொலைகாரனாக, கடத்தல்காரனாக வளர்ந்துவிடுகிறான். அவனுக்குத் தொடர்பு பல மட்டங்களில் விரிகிறது. ஒரு கட்டத்தில் உலக அளவில் அவன் பிரபலமாகிறான். அவனை உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருவதற்கான சன்மானத் தொகை கூடிக்கொண்டே போகிறது. எல்டிடிஈ அமைப்புடன் தொடர்பு, ஆந்திர நக்ஸலைட் அமைப்புடன் தொடர்பு என்று செய்திகள் விரிவாகிக்கொண்டே போகின்றன. வீரப்பன் தொடர்ந்து ஆடியோ கேசட்டுகளை அனுப்புகிறான். ஜெயலலிதாவைத் திட்டியும் போலிஸைத் திட்டியும் அவன் அனுப்பும் ஆடியோ கேசட்டுகள் தங்கு தடையின்றி ஊடகங்களுக்குக் கிடைக்கின்றன. நக்கீரன் கோபால், பழ நெடுமாறன், கொளத்தூர் மணி போன்றவர்கள் நினைத்தபோது வீரப்பனைப் பார்க்க முடிகிறது. வீரப்பனுக்குச் செய்தி அனுப்ப முடிகிறது. ஆனால் போலிஸால் அவனைப் பார்க்கக் கூட முடியவில்லை.
ஒரு அரசியல்வாதி வீரப்பனிடம் கடன் வாங்கி வீரப்பனையே ஏமாற்றி இருக்கிறார். திரைத்துறையினர் வீரப்பனுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை விஜய்குமாரின் புத்தகம் எழுப்புகிறது. இதற்கிடையே வீரப்பன் தமிழ்த் தேசியவாதிகளின் ஐகான் ஆகிறான். ஆனால் போலிஸால் மட்டும் அவனை நெருங்க முடியவில்லை.
இருபது வருட வேட்டையில் ஒரு தடவை மட்டுமே வீரப்பன் போலிஸால் கைது செய்யப்பட்டிருக்கிறான். தப்பியும் விடுகிறான். சில போலிஸார் ஒன்றிரண்டு தடவை அவனை வேட்டையின் போது பார்த்திருக்கிறார்கள். போலிஸின் மீது மக்களுக்கு நம்பிக்கை போகிறது. திரைப்படங்கள், ஊடகங்கள் போன்றவற்றில் போலிஸ் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்த நிலையில்தான் வீரப்பன் போலிஸால் சுட்டுக்கொலை என்ற ஃப்ளாஷ் நியூஸ் வருகிறது. அப்போதும்கூட போலிஸின் மேல் ஆயிரம் கேள்விகள், சந்தேகங்கள் சுமத்தப்படுகின்றன.
விஜய்குமார் இருபது வருட வேட்டையின் முக்கியமான பக்கங்களைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பான நாவலைப் படிப்பது போல் புத்தகம் ஓடுகிறது. அதிலும் கடைசி நூறு பக்கங்களின் விறுவிறுப்பைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஸ்ரீனிவாஸ் என்னும் கர்நாடக போலிஸ் அதிகாரியின் தலை வீரப்பனால் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. அந்தத் தலையை மூன்று வருடங்களுக்குப் பிறகுதான் போலிஸால் கண்டுபிடிக்கவே முடிகிறது. வெட்டிய தலையை வைத்து வீரப்பன் ஃபுட்பால் விளையாடியதாகப் பின்னர் தெரிந்துகொள்கிறார்கள். ஒரு முக்கியமான தேடுதல் வேட்டையில் பல சந்தனக் கட்டைகளை ஸ்ரீனிவாஸ் கைப்பற்றுகிறார். ஏற்கெனவே ஒருமுறை வீரப்பன் கைது செய்யப்பட்டது இவரால்தான். ஆனால் வீரப்பன் தப்பித்துவிட, மீண்டும் அவனை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்கிற வெறியில் இருந்தார் ஸ்ரீனிவாஸ்.
வீரப்பனின் தங்கை மாரி ஸ்ரீனிவாஸ் கிராமத்தினருக்காக நடத்தி வந்த க்ளினிக்கில் பணி செய்கிறார். வீரப்பன் மனைவி வீரப்பனை ரகசியமாக சந்திக்க மாரி உதவுவதாக நினைக்கும் போலிஸ், வீரப்பனின் தங்கையை எச்சரிக்கிறது. வீரப்பனின் தங்கை விஷம் குடித்துச் சாகிறாள். தன் தங்கை மரணத்துக்கு ஸ்ரீனிவாஸ்தான் காரணம் என்று நினைக்கும் வீரப்பன், தான் சரணடையப் போவதாக நாடகம் ஆடுகிறான். ஸ்ரீனிவாஸும் அதை உண்மை என்று நம்பி வீரப்பனைப் பிடிக்கப் போகிறார். ஆனால் அவரது தலை கொய்யப்படுகிறது. பின்னர் ஸ்ரீனிவாஸுக்கு கோவில் கட்டுகிறார்கள் அந்த ஊர் மக்கள். ஏனென்றால் தனது பல சேவை மூலம் ஊர் மக்களுடன் கலந்திருந்தார் ஸ்ரீனிவாஸ். ஸ்ரீனிவாஸுக்கு கீர்த்தி சக்ரா விருது பின்னர் வழங்கப்பட்டது.
ஒரு சமயம் 22 போலிஸார் வெடி வைத்துத் தகர்க்கப்படுகிறார்கள். அதைக் கண் முன்னே பார்த்த போலிஸ் அதிகாரி இறுதிவரை அதிரடிப்படையில் இருந்து விலகாமல், வீரப்பனின் மரணத்தைப் பார்க்கக் காத்திருக்கிறார். சில போலிஸார் வீரப்பனைக் கொல்லாமல் திருமணம் செய்துகொள்வதில்லை என்று காத்திருக்கிறார்கள்.
ஜடையன் என்னும் சோலிகா பழங்குடியினரின் தலைவர், தங்கள் கிராமத்தில் தான் கண்ட மனித மலம் வெளியூர்க்காரர்களின் மலத்தைப் போல் உள்ளது என்று சொல்லி, அங்கே கூடாரம் போட்டுத் தங்கி இருக்கும் வீரப்பனின் ஆள்களைப் பற்றித் துப்புக் கொடுக்கிறார். ஜடையனும் இன்னும் ஐந்து பேரும் போலிஸின் இன்ஃபார்மர்களாக இருப்பதை அறிந்துகொள்ளும் வீரப்பன் தனது ஆட்களுடன் கிராமத்துக்கு வருகிறான். அன்று ஜடையன் அங்கு இல்லை. மற்ற ஐந்து பழங்குடியினரையும் சுட்டுக் கொன்று கழுத்தை அறுத்து எரிக்கிறான். நடுங்கிப் போகும் பழங்குடி இன மக்கள் தங்களைக் கைவிட்ட ஜடையசாமி (சிவலிங்கம்) கோவிலைப் பூட்டி வைக்கின்றனர். வீரப்பன் கொல்லப்பட்ட பின்பே அக்கோவில் திறக்கும் என்று காத்திருக்கிறார்கள். ஐந்து பேர் கொல்லப்பட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக அக்கோவில் பூட்டியே கிடக்கிறது. அந்தக் கோவிலைப் பார்க்கும் விஜய்குமார், இந்தக் கோவிலைத் திறக்கவேண்டும் என்று சபதம் செய்கிறார்.
போலிஸுக்கு இன்ஃபாமர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். வீரப்பனால் யார் இன்ஃபாமர் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சந்தேகம் வரும்போது தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் தள்ளி வைக்கிறான். இதனால் போலிஸ் செயல்படும் வேகம் அப்படியே நின்றுவிடுகிறது. வீரப்பன் யாரையாவது பார்க்க வருவதாகச் சொன்னால் அதை சொன்னபடி செய்யாமல் இழுத்தடித்தே செய்கிறான். இதனால் எப்போது எங்கே யாரைப் பார்க்க வீரப்பன் வருவான் என்பதை போலிஸால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.
தொழில்நுட்பம் என்றால் வீரப்பனுக்குப் பிடிப்பதில்லை. வேன், கார் கூடப் பிடிப்பதில்லை. தன் உடல் வலுவையும் துப்பாக்கி சுடும் திறனையும் மட்டுமே நம்பினான் வீரப்பன். போலிஸின் தொழில்நுட்ப அறிவு வீரப்பனை நெருங்க உதவுகிறது. வீரப்பனின் கேங் குறைகிறது. ஒற்றை இலக்கத்துக்குள் வருகிறது. தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறான் வீரப்பன். ஜிபிஎஸ் துணையால் ஐந்து கிமீ தூரத்துக்குள்ளாக நெருங்குகிறது போலிஸ்.
வீரப்பனை போலிஸால் வெல்ல முடியாததற்குக் காரணம், வீரப்பனைக் காட்டில் வேட்டையாட நினைப்பதுதான் என்று புரிந்துகொள்கிறது போலிஸ். வீரப்பனை வெளியே கொண்டு வந்தால், தங்களுக்கு வசதியான இடத்தில் வீரப்பனை எளிதாகக் கொன்று விடலாம் என்று ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். வீரப்பனை வெளியே கொண்டு வர அவனது மனைவி முத்துலட்சுமியை அவளுக்கே தெரியாமல் பயன்படுத்த முடிவெடுக்கிறார்கள்.
ஏற்கெனவே போலிஸின் இன்ஃபாமர் இதயத்துல்லா வீரப்பன் கேங்கில் சேர்ந்து வீரப்பனின் நம்பிக்கைக்கு உரியவராக ஆகிறார். 21 நாள்கள் அவனுடனே தங்கி இருந்து போலிஸுக்குப் பல செய்திகளை அனுப்புகிறார். ஆனால், சிறையில் இருக்கும் தமானி என்னும் மத பயங்கரவாதியிடம் இருந்து துப்பு ஒன்று, வீரப்பன் கேங்கில் ஒரு இன்ஃபார்மர் இருக்கிறார் என்பதைச் சொல்லிவிடுகிறது. யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறும் வீரப்பன், அனைத்து புது ஆள்களையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறான். இதனால் இதயத்துல்லாவால் உதவ முடியாமல் போகிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கண்டுபிடிக்கிறார் இதயத்துல்லா. வீரப்பனுக்குக் கண்ணில் பிரச்சினை இருக்கிறது. அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. அவனுக்கு மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்தச் செய்தி போலிஸுக்குப் பின்னால் பெரிய அளவில் உதவுகிறது.
இதயத்துல்லாவை இன்ஃபாமராக அனுப்புவதற்கு முன்பு வேறொரு கொலைகாரனைத்தான் வீரப்பன் கேங்குக்குள் அனுப்ப முடிவெடுத்தது போலிஸ். ஆனால் கடைசி நேரத்தில் இதயத்துல்லா போகிறார். முதலில் தேர்வு செய்யப்பட்ட கொலைகாரனைப் போல கொடூரமான ஆள் இல்லை இதயத்துல்லா. அதற்கு முன்பு ஒரு கொலை கூட இதயத்துல்லா செய்ததில்லை. இதயத்துல்லாவுக்குப் பெரிய குற்றப் பட்டியல் எதுவும் கிடையாது. இதுவே பெரிய பின்னடைவாகப் போகிறது. ஒரு கட்டத்தில் வீரப்பனை எளிதாகக் கொல்ல ஒரு சந்தர்ப்படம் கிடைக்கிறது. ஒரு கல்லைத் தூக்கி வீரப்பன் தலையில் போடத் தயாராகிறார் இதயத்துல்லா. ஆனால், இப்படிக் கொல்வது அவசியமா என்கிற ஒரு மனப்போராட்டம் வர, கல்லைக் கீழே போட்டுவிடுகிறார். இதுவே ஒரு பயங்கரமான கொலைகாரன் வீரப்பன் கேங்குக்குள் ஊடுருவி இருந்தால் ஒரு நொடியில் கொன்றிருப்பான் என்று அங்கலாய்க்கிறார் விஜய்குமார்.
ராஜ்குமார் கடத்தலின்போது அவருடன் கடத்தப்பட்ட நாகப்பாவுக்கும் வீரப்பனைக் கொல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கையில் அரிவாளுடன் வீரப்பனைக் கொல்ல முனையும்போது, நக்கீரன் கோபால் நாகப்பாவைக் கடிந்துகொள்கிறார். நாகப்பா வீரப்பனைக் கொல்லாமல் தப்பித்து ஓடி வந்துவிடுகிறார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை மையமாக வைத்து ஒரு ஆபரேஷனைச் செய்கிறது போலிஸ். ஆபரேஷன் போஸ்டன். யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பெரிய ஆபரேஷன். கர்நாடக போலிஸ் முத்துலட்சுமியை சேலத்தில் கண்காணிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது தமிழக போலிஸ். அந்த நேரத்தில் அங்கே போகும் அசோக் குமார் என்னும் தமிழக போலிஸ்காரர் முத்துலட்சுமிக்கு உதவுவதாகச் சொல்லி அவரை அழைத்து வருகிறார். திருப்பூருக்குச் சென்று வீடு தேடுகிறார்கள். ரம்யா என்கிற போலிஸ் இன்ஃபாமர் ஒருவரின் வீட்டை வாடகைக்கு எடுக்கிறார்கள். ரம்யா முத்துலட்சுமியுடன் மிகவும் நட்பாகிறார். ஊட்டியில் இருக்கும் தனக்கு சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸுக்கு முத்துலட்சுமியை ரம்யா அழைத்துப் போகிறார். அந்த கெஸ்ட் ஹவுஸ் போலிஸால் ஏற்கெனவே பார்த்து வைப்பட்ட இடம்தான்! அங்கே போகும் முத்துலட்சுமியிடம் பேசும் ரம்யா, வீரப்பனை இங்கே வரச் சொல்லும்படியும் முத்துலட்சுமியையும் குழந்தைகளையும் பார்க்கட்டும் என்றும், வீரப்பனின் கண்ணுக்கு மருத்துவம் செய்ய தான் ஒரு மருத்துவரைக் கொண்டு வருவதாகவும் ஆசையைத் தூவுகிறார். முத்துலட்சுமியும் சம்மதிக்கிறார். வீரப்பனும் சம்மதிக்கிறான். வீரப்பன் இவர்களைக் காண வரும் நாளும் வருகிறது.
வீரப்பனை இந்த தடவை முடித்துவிடலாம் என்று காத்திருக்கிறது போலிஸ். இதற்கிடையில் முத்துலட்சுமிக்குத் தன்னை யாரோ கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் வருகிறது. ரம்யாவும் முத்துலட்சுமியின் பிக்னிக் போக, போன இடத்தில் முத்துலட்சுமிக்கு திடீரென்று ஐயம் வர, வரும்போது இருவருக்குள்ளும் ஒருவித இடைவெளி உருவாகிவிடுகிறது. ஆனால் அன்று வீரப்பன் வரவில்லை. பின்னாளில் ஒரு ஜோதிடர் நேரம் சரியில்லை என்று சொன்னதால் வீரப்பன் வரவில்லை என்று தெரிகிறது. அன்று வீரப்பன் தப்பிவிடுகிறான். இந்த எஸ்டேட் திட்டம் தவிடுபொடியாகிவிடுகிறது.
இப்படி பல ஆபரேஷன்கள் உள்ளன.
போலிஸ் இன்ஃபாமர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர். போர்வை, ரெட் இப்படிப் பல பெயர்கள். ஒவ்வொரு ஆபரேஷனும் தோல்வியில் முடிந்தாலும், பல விவரங்கள் போலிஸுக்குக் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. மிஸ்டர் எக்ஸ் என்னும் பணக்காரர் ஒருவர் வீரப்பனுக்கு இன்ஃபாமராக இருக்கிறார். தங்கள் இன்ஃபாமர் மூலம் போலிஸ் அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது. வேறு வழியின்றி அவர் போலிஸ் இன்ஃபாமராக மாற ஒத்துக்கொள்கிறார். அவரால்தான் வீரப்பனின் கதை முடிவுக்கு வருகிறது.
இன்ஃபாமர்களும் வீரப்பன் கேங் ஆள்களும் சந்தித்துக்கொள்ளும்போது பரிமாறிக்கொள்ளும் சங்கேத வார்த்தைகள் எல்லாம் அலாதியானவை. திரைப்படங்களில் வருபவை எல்லாமே உண்மைதான். அமாவாசைல பௌர்ணமி வருமா என்று நாம் சங்கேத வார்த்தைகளைக் கிண்டல் செய்தாலும் (இந்த அளவுக்கு இல்லையென்றாலும்) இவற்றைப் போன்ற சங்கேத வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடையில் சர்க்கரை டப்பாவை நகற்றி வைப்பது, ‘ஸ்வீட் பாக்ஸ்ல கரும்பு ஏத்தியாச்சு’, மூன்று முறை கல்லால் தட்டுவது என்று பல சங்கேத வார்த்தைகளும் செய்கைகளும் புத்தகம் முழுக்க இருக்கின்றன.
வீரப்பனை வெளியே கொண்டு வர இரு தரப்புக்குள்ளும் ஒரு லாட்டரிச் சீட்டு சங்கேதக் குறியீடாக இருக்கிறது. ஒரு லாட்டரிச் சீட்டை இரண்டாகக் கிழித்து ஒரு பகுதியை வீரப்பன் தரப்புக்கும் இன்னொரு பகுதியை போலிஸ் தரப்புக்கும் கொடுக்கிறார்கள் இரண்டு தரப்பின் இன்ஃபாமர்களும்!
இந்த முறை இரை தப்பிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது போலிஸ். லாட்டரிச் சீட்டின் நம்பர் 007710. தன் நம்பகமான காரின் எண்ணும் 0771 என்று நினைத்துக்கொள்கிறார் அந்த ஆபரேஷனில் ஈடுபட்டிருக்கும் கண்ணன் என்ற அதிகாரி. விஜய்குமார் தன் பர்சில் எப்போதும் தன்னுடன் இருக்கும் ஐயப்பன் டாலரைத் தொட்டுக்கொள்கிறார். வேனில் ஒட்டப்பட்டிருக்கும் குருவாயூர் கிருஷ்ணனின் படத்தைப் பார்க்கிறார். வீரப்பனின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
வீரப்பனைக் கொண்டு வர ஒரு ஆம்புலன்ஸ் பலவித வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. வேனில் இருக்கும் வெங்கடாஜலபதி படத்தில் ஒரு கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது எதுவுமே வெளிப்பார்வைக்குத் தெரியாது. வீரப்பன் சிக்கிக்கொள்கிறான். எந்த வகையிலும் தப்ப முடியாதபடி அவனை போலிஸ் சுற்றி வளைக்கிறது. வீரப்பன் என்கவுண்ட்டர் செய்யப்படுகிறான். செய்தியைக் கேள்விப்படும் ஜெயலலலிதா போனில் விஜய்குமாரிடம் சொல்கிறார், “தான் முதல்வர் ஆன பின்பு கேட்கும் மிகவும் சந்தோஷமான விஷயம் இதுதான்.” விஜய்குமார் பண்ணாரி அம்மன் கோவிலுக்குப் போய் மொட்டை போட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறார்.
ஆம்புலன்ஸில் வீரப்பன் ஏறிக்கொள்ளும்போது போலிஸின் இன்ஃபார் ஒருவரும் ஏறிக்கொள்ள விரும்புகிறார். ஏனென்றால் அவருக்குத் தெரியாது அன்று வீரப்பனை என்கவுண்ட்டர் செய்யப் போகிறார்கள் என்று. அவருக்கு மட்டுமல்ல. அந்த ஆபரேஷனில் இருக்கும் பலருக்கும் தெரியாது. ஆம்புலன்ஸை ஓட்டிப் போகும் சரவணன் என்கிற அதிகாரிக்கும் கூட, அந்த ஆம்புலன்ஸில் அவர் ஏறப் போகும் அந்த நிமிடத்தில்தான் தெரியும், தான் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கப் போவது வீரப்பனை என்று. வீரப்பன் இருந்த ஆம்புலன்ஸை சரமாரியாக சுட்டு வீழ்த்திய எந்த அதிரடிப்படை வீரருக்கும் தெரியாது தாங்கள் சுட்டுக்கொண்டிருப்பது வீரப்பனை என. ஒரு கொள்ளைக்காரனின் அராஜகங்கள் முடிவுக்கு வருகின்றன.
விஜய்குமார் தன்னை மட்டும் முன்னிறுத்தாமல், வால்டர் தேவராம் தொடங்கி தன்னுடன் பணிபுரிந்த அனைத்து அதிகாரிகளின் பங்களிப்புகளையும் நியாயமாகப் பதிவு செய்திருக்கிறார். டிரைவர்கள் தொடங்கி இன்ஃபாமர் வரை அனைவரையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். இத்தனை நல்ல மனதுடையவர் போலிஸாகவும் இருக்கமுடியுமா என்னும் சந்தேகம் வரும் அளவுக்கு அவர் இதைச் செய்கிறார்!
வீரப்பனுக்கு சாதிக்காரனே எதிரியாக இருப்பது, தன் சாதிக்காரன் தனக்கு உதவுவான் என்று வீரப்பன் நினைப்பது, வீரப்பனைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க நினைக்கும் விஜய்குமார், அவற்றைப் பார்க்கும்போது அவை படிக்க முடியாத அளவுக்கு கோழிக்கிறுக்கலாக இருப்பதைப் பார்த்து நொந்து போவது, வீரப்பன் விஜய்குமாரை எம்ஜியாரின் மருமகன் என்று நம்புவது, சந்தேகத்தில் தன் அதிரடிப்படை ஆளையே ஒரு போலிஸ் சுட்டுக்கொன்று மனம் பிறழ்ந்து போவது, ராஜ்குமாரைக் கடத்துவதற்கு முன்பாக ரஜினி அல்லது ஸ்டாலினைக் கடத்த யோசிப்பது எனப் பல வகையான குறிப்புகள் இப்புத்தகத்தில் உள்ளன. தவறவிடக்கூடாத புத்தகம். கிண்டிலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் படிக்கக் கிடைக்கிறது.
2019ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டபோது தமிழில் பாரம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. அந்த வருடத்தில் நான் பார்த்த திரைப்படங்கள் பற்றிய பதிவில் ‘பாரம்’ என்ற படத்தைக் கேள்விப்பட்டதே இல்லை என்று எழுதி இருந்தேன். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலை என்கிற முக்கியமான திரைப்படம் அந்த ஆண்டு வெளியாகி இருந்தது. அதேசமயம் ஒருவேளை இந்த ‘பாரம்’ திரைப்படம் நல்ல படமாக இருக்குமானால் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன் என்றும் எழுதி இருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பு ‘இரண்டு பேர் வானத்தைப் பார்க்கிறார்கள்’ என்ற ஒரு படத்துக்கு விருது தரப்பட்டது. அந்தப் படத்தைப் பற்றியும் அப்போது கேள்விப்பட்டிருக்கவில்லை. இப்படி கேள்விப்படாத ஒரு படத்துக்கு, பின்பு எப்போதும் பார்க்க இயலாத ஒரு படத்துக்கு ஏன் விருது வழங்குகிறார்கள் என்ற எண்ணத்தில்தான் அப்படி எழுதினேன். இதில் சில படங்களைப் பார்க்கவே முடியாது என்பது இன்னொரு பக்கம். (உதாரணம்: உச்சிவெயில்.) அதேசமயம் சில நல்ல படங்களும் அமைந்துவிடும். காக்கா முட்டை, மறுபக்கம் போல.
அமேஸான் ப்ரைம் புண்ணியத்தில் நேற்று பாரம் திரைப்படத்தைப் பார்த்தேன். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், நம்பிக்கையின்மையின் உச்சத்தில்தான் பார்த்தேன். ஆனால் படம் மிக நன்றாக இருக்கிறது. விருது தரப்பட்டது நியாயமான ஒன்றே.
தலைக்கூத்தல் என்ற பெயரில் நடக்கும் அநியாயமான ‘கருணைக் கொலை’யை மையமாக வைத்து இயக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படத்தில் உள்ள ஆச்சரியங்கள் என்ன?
விருதுத் திரைப்படங்கள் யதார்த்தம் என்ற போர்வையில் மிக மெதுவாக நகரும். இத்திரைப்படமும் மிகவும் மெதுவாகத்தான் நகர்கிறது. ஆனால் உண்மையான யதார்த்தத்துடன். வலிந்து இழுத்துக்கொண்ட செயற்கையான யதார்த்தம் அல்ல. மெதுவாக நகரும் படம் என்றாலும் முதல் காட்சியில் இருந்து கடைசிக் காட்சி வரை படம் எவ்வித விலகலும் இல்லாமல் நேர்த்தியாகப் போகிறது. நம்மைப் பார்க்க வைக்கிறது. அதுவும் சுவாரஸ்யத்துடன்!
மலையாளத்தில் உள்ள பல திரைப்படங்கள் மிக யதார்த்தமாக இருக்கும். மிக முக்கியமான விஷயம், மலையாளப் படத்தில் நடிப்பவர்கள் ஒவ்வொருவரும் மிக நன்றாக நடிப்பார்கள். சமீபத்தில் ஈ மா யோ என்றொரு திரைப்படம் மலையாளத்தில் வந்திருந்தது. படமாக்கப்பட்ட விதமும், அதில் நடித்தவர்களின் யதார்த்தமான நடிப்பும் அத்தனை அசலாக இருந்தது. அதேபோன்று ஒரு தமிழ்த் திரைப்படத்தைச் சொல்லவேண்டுமானால் ‘பாரம்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஈ மா யோ அளவுக்கு நுணுக்கமான ஒரு திரைப்படம் என்று சொல்லமுடியாது. ஏனென்றால் பாரம் திரைப்படம் கொஞ்சம் புனைவுக்குள்ளும் கொஞ்சம் யதார்த்த உலகின் பிரச்சினைக்குள்ளும் பயணிக்கிறது. ஒரு தமிழ்ப்படத்திலும் அத்தனை நடிகர்களையும் இத்தனை இயல்பாக நடிக்க வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் பிரியா கிருஷ்ணஸ்வாமி.
கலைப்படங்களுக்கே உரிய அலட்டல்கள், போலித் தனங்கள் இல்லை என்பது பெரிய ஆசுவாசம். ஒரு கதாபத்திரம் திடீரென்று போராட்டம் என்றெல்லாம் சொல்லவும், பிறகு என்னவெல்லாம் இந்த இயக்குநர் கொண்டு வருவாரோ என்று நினைத்தேன். ஆனால் கதாபத்திரத்தின் தன்மைக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்தி இருக்கிறார் என்பது புரிந்தபோது நிம்மதியானது.
நல்ல படத்தை எடுக்கும் பெரும்பாலான முற்போக்கு இயக்குநர்கள் எங்காவது எதிலாவது எதாவது அரசியலை நுழைத்து, ஒரு நல்ல படத்தை நிம்மதியாகப் பார்க்க முடியாமல் செய்வார்கள். இந்த வெற்று ஜம்பத்துக்குள் எல்லாம் இயக்குநர் போகவில்லை. முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை, எடுத்துக்கொண்ட கதையை விட்டு விலகவே இல்லை.
குறைகளை வலிந்து தேடினால் சில விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, மிக அழகாக யதார்த்தமான வசனங்கள் துல்லியமான வட்டார வழக்கில் சொல்லப்படும்போது திடீரென்று முதியவர் பாத்திரம் தான் ஒரு மின்மினிப் பூச்சி, விட்டில் பூச்சி அல்ல என்பது. இந்த சிறிய விலகலைத் தவிர்த்திருந்திருக்கலாம். இரண்டாவது, நியாயத்துக்காகப் போராடும் ஒரு மனிதனின் குடும்பத்தை ஒரு ஊரே எரிச்சலாகப் பார்ப்பது போல் காட்டி இருப்பது. இதைக் கொஞ்சம் ஓவர் டோஸாகக் காட்டிவிட்டார் என்று தோன்றியது. இந்த இரண்டுமே அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் வரும் காட்சிகள் மட்டுமே. எனவே இவை பெரிய குறை அல்ல. மூன்றாவது, இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் வரும் டாக்குமெண்ட்ரி தன்மை. ஆனால் இப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநர் சிரத்தை எடுத்துக்கொண்டிருப்பதும் தெரிகிறது. அதையும் மீறி வரும் சின்ன டாக்குமெண்ட்ரி தன்மையையும் தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆதாரக் கருத்தே ஒரு பிரசாரம் என்ற வகையில்தான் உள்ளது என்பதால் இப்படியே இருக்கட்டும் என இயக்குநர் நினைத்திருந்தால் அதில் நியாயம் உள்ளதுதான்.அதேபோல் மருமளின் பெயர் ஏன் ஸ்டெல்லா என்பது புரியவில்லை. தேவையற்ற விலகல் இது. இன்னொரு முக்கியமான விவாதத்துக்குரிய விஷயம், இந்தத் தலைக்கூத்தல் என்பது எந்த சமூகத்தில் நடைபெறுகிறது என்பது.
தமிழில் சந்தியா ராகம், வீடு, மேற்குத் தொடர்ச்சி மலை வரிசையில் வைக்கலாம் என்ற அளவுக்கான அபராமான படம் பாரம். நிச்சயம் பார்க்கவும். அமேஸான் ப்ரைமில் கிடைக்கிறது.
இன்று தமிழில் வரும் பெரும்பாலான திரைப்படங்கள் முற்போக்கு என்ற பெயரில் வரும் போலி முற்போக்குத் திரைப்படங்களே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – அரசியல் மற்றும் சாதி பேசும் அத்தனை தமிழ்த் திரைப்படங்களையும் இந்த நான்கிற்குள் அடைத்துவிடலாம். இப்படிப்பட்ட படங்கள் வரும்போது கொண்டாடி மகிழ்ந்து போகும் போலிகளைக் கதற வைக்கும் ஒரு படமாக வந்திருக்கிறது திரௌபதி. ஹிந்து மத நிந்தனைகளைப் பயன்படுத்தி நியாயமே இல்லாமல் பேசிய திரைப்படங்களைக் குற்றம் சொன்னவர்களுக்கு மட்டுமே திரௌபதியைக் குற்றம் சொல்லத் தகுதி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக முற்போக்கு முகமூடிகளில் அப்படி யாரும் இருக்கவில்லை. எனவே இந்தப் படத்தைக் குறை சொல்லும் தகுதியும் ஹிந்துத்துவர்களுக்கு மட்டுமே உண்டு.
தலித்துகளுக்கு ஆதரவான திரைப்படம் வரும்போது அதிலிருக்கும் சமநிலையின்மையைப் பற்றி யாரும் இங்கே பேச மாட்டார்கள். பரியேறும் பெருமாள் மிக முக்கியமான திரைப்படம். திரைப்படம் என்கிற வகையிலும் சரி, அது படமாக்கப்பட்ட விதத்திலும் சரி, அது சொல்ல வந்த வகையிலும் சரி, அது நிச்சயம் தமிழின் முக்கியமான திரைப்படம்தான். அந்தப் படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே கொடூரர்களாகக் காட்டப்படவில்லை. சாதி வெறி இருந்தாலும் கூட, அவர்களுக்குள்ளும் ஒரு மனிதாபிமானம் இருப்பதாகப் பெண்ணின் தந்தையின் பாத்திரம் காட்டப்பட்டது. அதாவது முற்பட்ட சாதியினரில் எல்லா வகை மனிதர்களும் உண்டு! ஆனால் தலித்துகளில்? அந்தப் படத்தில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள். இப்படி ஒரு சமநிலையின்மை அந்தப் படத்தில் இருக்கிறது. ஏன் அந்தப் படம் தலித்துகளிலும் சாதி வெறியர்கள் உட்பட பல்வேறு வகையான மனிதர்கள் உண்டு என்பதைக் காட்டவில்லை? ஒரு பிரசாரப் படம் இதைக் கணக்கில் கொள்ள முடியாது என்பதே பதில். அதே சமயம் பரியேறும் பெருமாள் வெறும் பிரசாரப் படமாகத் தேங்கவில்லை. அதையும் தாண்டிச் சென்றது. அப்படியானால் தலித்துகளில் உள்ள வேறுவகைபட்ட மனிதர்களையும் அது கொஞ்சம் பேசி இருக்கவேண்டும். ஆனால் பேசவில்லை. ஒரு தலித் படமும் மற்ற சாதிப் படங்களும் ஒன்றல்ல என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஆயிரம் படங்களில் ஒரு படம் கூடவே வேறு விதமாகப் பேசாது?
பரியேறும் பெருமாள் என்றில்லை, தமிழில் வரும் அனைத்து முற்போக்குத் திரைப்படங்களும் இப்படித்தான். பல படங்களைச் சொல்லலாம் தற்போது வெளியான கன்னிமாடம் வரை. முற்பட்ட சாதியினரின் சாதி வெறியை சரியாகப் படம் பிடிக்கும் ஒரு திரைப்படம், தான் பரிந்து பேசும் சாதியினரைப் பற்றிய ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட வைப்பதில்லை. ஒரு பிரசாரத் திரைப்படம் பல்வேறு நுணுக்கங்களுக்குள் சிக்கினால் தாங்கள் சொல்ல வரும் கருத்து மக்களைச் சென்றடைவதில் குழப்பம் இருக்கலாம் என்று இயக்குநர்கள் சொல்லக் கூடும். அது நியாயம்தான். ஒரு படத்துக்குள்ளும் சமநிலை இல்லை சரி, தமிழில் வெளியாகும் அத்தனை சாதிப் படங்களுக்குள்ளும் சமநிலை இல்லையே ஏன் என்பதற்கு அவர்களால் பதில் சொல்லவே முடியாது. ஒரே ஒரு பதில் நாம் சொல்வதாக இருந்தால், ஹிந்து மத வெறுப்பு மட்டுமே. உண்மையான தலித் திரைப்படத்தின் சாத்தியங்களைக் கெடுத்ததோடு அல்லாமல், அதற்கான முன்னெடுப்புகளையும் தங்கள் அரசியல் சார்பாலும் இந்திய-ஹிந்து மத வெறுப்பாலும் மந்தப் படுத்தி வைத்திருக்கிறது தமிழ் சினிமா.
ஒரு தலித் பிரசாரத் திரைப்படத்துக்கான அத்தனை சால்ஜாப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களையே தாக்கும் ஆயுதமாக உருவாகி இருக்கிறது திரௌபதி. அவர்கள் எறிந்த கற்களையே எடுத்து அவர்களை நோக்கி எறிந்திருக்கிறது. தலித் திரைப்படங்களில் தலித்துகள் அனைவருமே நல்லவர்கள் என்றால், இப்படத்தில் முற்பட்ட சாதியினர் அனைவருமே நல்லவர்கள்! தலித் திரைப்படங்களில் வரும் அத்தனை காதலும் நல்ல காதல், ஒரு திருடனை ஒரு நல்ல குடும்பத்துப் பெண் காதலித்தாலும் அது நல்ல காதல் என்றால், திரௌபதியில் வரும் அத்தனை காதலுமே நாடகக் காதல்! காதலே கூடாது, அப்பா அம்மா சொல்லும் பையனையோ பெண்ணையோ கட்டவேண்டும் என்கிறது திரௌபதி. இதையெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது? முடியாது. கூடாது. ஆனால் தலித்துகளை மட்டும் குறையில்லாமல் காட்டியபோது சிரித்தவர்கள் இப்போதும் சிரிப்பதுதானே நியாயம்? சிரிக்காமல் கடுப்பாகிறார்கள்.
ஜிப்ஸி திரைப்படத்தில் உத்திர பிரதேசத்தின் ஆதித்யநாத் யோகியை வில்லனாகக் காண்பித்தபோது அப்படியே புளகாங்கிதம் அடைந்தார்கள். அதை எப்படிக் காட்டலாம் என்று ஒருவர் கூடப் பேசவில்லை. சென்சார் அதைப் பெரும்பாலும் நீக்கவும் சென்சாரையும் திட்டினார்கள். படத்தின் இயக்குநர் கொஞ்சம் கூடக் கூச்சமில்லாமல் ட்ரைலரில் ஜிப்ஸி ஒரு இசைத் திரைப்படம் என்று கூறினார். யோகியைக் காண்பித்தது தவறு என்று சொல்ல இங்கே ஆளில்லை. திரௌபதி ஒரு அண்ணன் கதாபாத்திரத்தைக் காட்டியது. யோகியைக் காண்பித்தபோதே நியாயம் பேசி இருந்தால் இப்போதும் நீங்கள் பேசும் நியாயத்தில் ஒரு அறம் இருந்திருக்கும். அப்போது அமைதியாகக் கூட நீங்கள் இல்லை, குதூகலித்தீர்கள். படத்துக்குத் தொடர்பே இல்லாமல் குறியீடுகளை வைப்பது, குறியீடுகளுக்காகவே படங்களை எடுப்பது, அந்தக் குறியீடுகளைப் புகழ்ந்தே படம் எடுப்பது – இவற்றையே ஆயுதமாக்கி உங்களை நோக்கி எறிந்திருக்கிறது திரௌபதி.
காதலே கூடாது, சாதி மாறி காதலோ கல்யாணமோ கூடாது என்பதை நான் ஏற்கவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவை எல்லாம் இல்லவே இல்லை என்றும் நான் சொல்லவில்லை. நாடகக் காதல், லவ் ஜிகாத் போன்றவற்றை எதிர்க்கவும் வேண்டும். சாதி மாறி நடக்கும் காதல் திருமணங்களை ஏற்கவும் வேண்டும். எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பது சவால்தான். அதற்காக ஒட்டுமொத்த சாதி மாறிய திருமணங்களைப் புறக்கணிப்பது சரியானதல்ல. உண்மையில் சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்த பின்னர் பெரும்பாலானவற்றில் அந்தத் திருமணத்தில் எதோ ஒரு ஆதிக்க சாதி புழங்கப் போகிறது என்பதே யதார்த்தம். (விதிவிலக்குகள் உண்டு!) மதம் மாறி நடக்கும் திருமணங்களிலோ ஹிந்து மதம் அல்லாத ஒரு மதமே புழங்கப் போகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணம் என்பதே ஒரு கண்கட்டு வித்தைதான். சாதி இணக்கத் திருமணம் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதிலும் கூட அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் சாதி இணக்கம் என்பது என்னவாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்யத்தான் வேண்டும். முற்போக்கு ஜிகினாக்களில் சிக்கி வாய்ப் பந்தல் போட வேண்டுமானால் இவையெல்லாம் உதவலாம்.
தங்கள் சாதிப் பெண்கள் குறி வைத்து ஏமாற்றப்படுகிறார்கள் என்று ஒரு சாதி நம்ப இடம் இருக்கிறது. அதையே திரௌபதி முன் வைக்கிறது. ஆனால் தட்டையாகச் சொல்கிறது. அனைத்துக் காதல்களுமே நாடகக் காதல் என்பதும், ஆணவக் கொலையே இல்லை என்பதுமெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதவை. ஆனால் ஒரு பிரசாரப் படமாகவே இது வெளியாகி இருப்பதால், இந்த விவாதங்களுக்குள் செல்லாமல், தன் பிரசாரத்தை மட்டுமே முன் வைக்கிறது – முன்பு தலித் திரைப்படங்கள் செய்ததைப் போலவே!
இத்திரைப்படத்தின் சிக்கல்கள் என்ன? ஒரு திரைப்படமாக இது மிகவும் பின் தங்கி இருக்கிறது. மெட்ராஸ், அட்டகத்தி, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் பெரிதும் பேசப்பட்டதற்குக் காரணம், அத்திரைப்படங்கள் பேசிய விஷயம் மட்டும் காரணமல்ல, அவை சொல்லப்பட்ட விதமும், அவற்றின் தரமும் கூடக் காரணங்கள்தான். திரௌபதி இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி விட்டது. அதே சமயம், பார்க்கவே முடியாத அளவுக்கு இல்லை என்பது ஒரு ஆச்சரியம். இடைவேளை வரை (அந்த தேவையற்ற ஒரு பாடல் நீங்கலாக) ஓரளவு பரவாயில்லை. இடைவேளைக்குப் பிறகு ஆவணப் படம் போல் ஆகிவிட்டது. தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் ஓரளவுக்கு இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம்.
ஒரு பிரசாரத் திரைப்படமாகவே இருந்தாலும் படம் தரமாக எடுக்கப்படவில்லை என்றால் மக்கள் புறக்கணித்துவிடுவார்கள். திரௌபதி தப்பித்ததன் ஒரே காரணம், இந்த வகையான தலித்துகள் அல்லாத சாதியில் இருக்கும் ஒரு பிரிவினரின் மனக்குமுறலை முதன்முதலாகச் சொன்னது என்பதால்தான். அது சரியோ தவறோ நியாயமோ அநியாயமோ அவர்களுக்கான குரல் வெளிவர ஒரு இடம் தேவை என்பதை திரௌபதி பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
திராவிட அரசியல் உருவாக்கி வைத்திருக்கும் ‘ஹிந்துக் காழ்ப்பு என்பதே பிராமணக் காழ்ப்புதான்’ என்கிற மாயையில் திரௌபதி திரைப்படமும் விழுந்திருப்பது பெரிய அலுப்பைத் தருகிறது. எந்த சாதிகளைப் பற்றிப் பேசுகிறார்களோ அந்த சாதிகளைப் பற்றி ஒரு வெளிப்படையான குறிப்பு கூட கிடையாது. ஆனால் பிராமண ஜாதியை வெளிப்படையாகக் காட்டும் ஒரு பாத்திரம் உண்டு. இதை ஏன் இப்படி இயக்குநர் வைத்தார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. பழக்கப்பட்டுவிட்ட ஒன்றுதான் என்றாலும், திரௌபதி போன்ற படத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பதுதான் சிக்கல். அர்த்தநாரீஸ்வர வர்மாவின் புகைப்படத்தைக் கூட காண்பிக்காமல் இருக்கச் சொல்லி நிபந்தனை விதிக்கும் சென்ஸார், இந்தப் பாத்திரத்தைக் கண்டுகொள்ளவில்லை. சாதிக் கலவரம் வரும் என்றால் மட்டுமே சென்ஸார் அஞ்சும் போல.
ஒரு திரைப்படத்தின் ஆதாரக் கருத்து என்பது அது சொல்ல வரும் நீதியிலும் அறத்திலும்தான் உள்ளது. அதாவது அந்தத் திரைப்படத்தின் ஆன்மாவிலேயே உள்ளது. மற்ற திரைப்படங்களில் வரும் ஆன்மா களங்கத்துடன் இருந்தபோது கொண்டாடியதால்தான் திரௌபதி போன்ற ஒரு திரைப்படம் வரவேண்டிய அவசியம் உருவானது. திரௌபதி திரைப்படத்தின் ஆன்மா நிச்சயம் குறைபட்டதுதான், அதற்கான காரணம் இதற்கு முன் வந்து குவிந்த போலி முற்போக்குத் திரைப்படங்களே. திரௌபதி போன்ற படங்கள் இனி இல்லாமல் போகவேண்டும் என்றால் அதைப் பற்றிச் சிந்திக்கவேண்டியது, ஹிந்து மதக் காழ்ப்பால் பீடிக்கப்பட்டிருக்கும் இயக்குநர்களும், அதைக் கொண்டாடும் முற்போக்காளர்களுமே. ஹிந்து மதத்தைக் கிண்டல் செய்வது, ஹிந்து வெறுப்பைக் கக்குவது, இந்தியக் காழ்ப்பைக் கொட்டுவது, பாஜகவைக் குறை சொல்வது – இந்த நான்கிற்குள் சிக்கி தமிழ்த் திரையுலகமே தன் முகத்தை இழந்து நின்றுகொண்டுள்ளது. இன்று கைதட்டுபவர்கள் நாளை தங்கள் அரசியலைப் பார்க்கப் போய்விடுவார்கள். இது உறைக்காதவரை தமிழ் இயக்குநர்கள் பெரிய அளவில் திறமை இருந்தும் கிணற்றை விட்டு வெளியே வரப் போவதே இல்லை.
இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
*
அவன் பெயர் வசதிக்காக அமுதன் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பெண்ணின் பெயர் அமுதா! அமுதன் என்னுடன் கல்லூரியில் படித்தான். நான் மற்ற நண்பர்கள் வீட்டுக்குப் போகும்போது அமுதனும் வருவான். அங்கே அமுதா என்ற ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண் இந்த அமுதனுக்கு தூரத்துக்கு உறவு. இது அமுதனுக்குத் தெரிய வந்ததும் அவனுக்கு அமுதா மேல் காதல் வந்துவிட்டது. அமுதாவின் வீட்டுக்காரர்கள் அமுதன் தங்கள் தூரத்துச் சொந்தம் என்பதால் ஓவராக அவனுக்காக உருகினார்கள். தினமும் காஃபிதான் வடைதான். இவனும் அடிக்கடி வருவான் போவான். அந்தப் பெண்ணுக்கும் இவனை உள்ளூரப் பிடித்திருந்தது. ஆனால் இருவரும் பரஸ்பரம் வெளியே சொல்லிக்கொள்ளவில்லை. இப்படியே காதலை பொத்தி பொத்தி வளர்த்தார்கள். என்னிடம் மட்டும் அமுதன் அமுதாவைப் பற்றி அப்படி இப்படி என்றெல்லாம் பேசி பெரிய அறுவையைப் போடுவான். தலையெழுத்தே என்று கேட்டுக்கொண்டிருப்பேன். நாங்களெல்லாம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம் பார்க்கும் வேகத்தில் இருக்க, இவன் அறுபதுகளின் காதலை எங்கள் காதில் ஓதி கடுப்பைக் கிளப்பிக்கொண்டிருந்தான். அமுதா அப்படி சிரித்தாள், அமுதா அப்படி பார்த்தாள், அமுதா வேண்டுமென்றே பார்க்காமல் போனாள், அமுதா அப்படிச் செய்தால் அதன் அர்த்தம் அவங்க அம்மாப்பாவுக்குக் கூடத் தெரியாது, தனக்குத்தான் தெரியும் இத்யாதி இத்யாதி. ஒருநாள் அமுதா என்ற பெயரை ஒரு பேப்பரில் ரத்தத்தில் எழுதிக்கொண்டு வந்து பெருமையாகக் காண்பித்தான். அடதாயளி என்பதே என் அதிகபட்ச ரீயாக்ஷனாக இருக்கவும் நொந்து போனான். அந்த பேப்பரை நாலாக எட்டாக மடித்து ஒரு முத்தம் கொடுத்து பர்ஸில் வைத்துக்கொண்டு, ‘வாழ்க்கை முழுக்க இது என் கூட இருக்கும் மக்கா’ என்றான். வாக்தேவி அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டாள். அந்த பேப்பர் மட்டுமே நிலைத்தது. அமுதாவின் வீட்டில், ‘சொந்தமெல்லாம் சரிதான், ஆனா கல்யாணமெல்லாம் வேண்டாம்’ என்று முடிவெடுக்க, அதே மனநிலையில் அமுதனின் வீடும் இருக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் அமுதாவுக்கு வேறொரு தடியனுடன் கல்யாணம் ஆனது. கல்யாணத்துக்கு போய் பந்தி பரிமாறி மொய் வைத்துச் சிறப்பித்து போட்டோவும் எடுத்துக்கொண்டு வந்தான் அமுதன். நாங்களும் போயிருந்தோம்!
அன்றிரவு முழுக்க அமுதன் அரற்றிக்கொண்டே இருந்தான். கூட இருந்த பையனெல்லாம் சும்மா இல்லாமல், எல இப்ப என்னல ஆயிருக்கும் என்றெல்லாம் கேட்டு வைக்க அமுதன் அழுவதா சிரிப்பதா எரிந்து விழுவதா என்று தெரியாமல் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தான். இன்னொருத்தன் சொன்னான், ‘அதுக்குத்தான் அன்னைக்கே டெக் போடும்போது கூப்பிட்டேன். அதுமட்டும்தாம்ல நெஜம்’ என்று சொல்லி வைத்தான்.
அமுதன் அழகாக இருப்பான். நன்றாகப் படிப்பான். அவனை ஏன் அமுதாவின் குடும்பம் விட்டுக்கொடுத்தது என்பதே எங்களுக்கு விளங்கவில்லை. அமுதன் இன்னும் படித்து வெளிநாடு போய் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனபோது அவனுக்கு அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தைக்கு அமுதா என்றெல்லாம் பெயர் வைக்காமல் தந்திரமாகத் தன் மனைவியிடம் இருந்து தப்பித்துக்கொண்டான். இடையிடையே என்னுடன் பேசுவான். வாட்சப் புண்ணியத்தில் இப்போதெல்லாம் அடிக்கடி.
இதற்கிடையில் அமுதாவின் சொந்தக்காரர்கள் மூலம் அந்தப் பெண்ணின் மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என்றறிந்தேன்.
இது நடந்தபோது ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் போரடிக்கவே இளையராஜாவின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா பாட்டு. அதுதான் அமுதன் அமுதாவின் ஃபேவரைட் பாட்டு. இந்தப் பாட்டு காதில் விழவும் அமுதனின் ஞாபகம் வர, கூடவே அமுதாவின் மகள் பெரியவளான செய்தியும் வர, உடனே அமுதனை அழைத்தேன்.
கடும் புழுக்கத்தில் சிக்னலில் வரிசையாக வண்டிகள் காத்திருக்க பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேனிலிருந்து வந்து விழுகின்றன இரண்டு சாக்லெட் தாள்கள் சட்டென எங்கிருந்தோ பறந்து வரும் இரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல. சிக்னல் திறக்கவும் வேன் மிதந்து மிதந்து செல்கிறது ஒரு நத்தையைப் போல. நெரிசல் தந்த கடுப்பில் ஹாரன் சத்தத்தில் புருவம் உயர்த்தி கண்கள் இடுக்கி நகர்ந்து செல்லும் கூட்டத்தின் எரிச்சலில் அந்த வேனுக்குள் சாரல் அடிக்கத் தொடங்கி இருந்தது.
தொடர் கொலைகள், அதைத் துப்பறியும் கதைகள் உலகம் முழுக்க பிரசித்தி பெற்றவை. சைக்கோ வகைக் கொலைகளில் எத்தனையோ விதங்களாக யோசித்து எப்படியெல்லாமோ எடுத்திருக்கிறார்கள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத, நினைத்துப் பார்த்தாலே குமட்டி வாந்தி வரும் அளவுக்கான கதைகள் எல்லாம் யோசிக்கப்பட்டுவிட்டன. இத்திரைப்படங்களுக்குக் கொலைகள் முக்கியமல்ல. கொலைக் காட்சிகளின்போது நாம் அடையும் பதைபதைப்பே முக்கியம். கொலைகளுக்கான காரணம் மிக முக்கியம். அந்த வலுவான காரணம் கொலைகளையே நியாயப்படுத்தும் அளவுக்கு இருக்கவேண்டும். படத்தில் லாஜிக் சிதைக்கப்படாமல் இருப்பது மிக முக்கியம். இதையெல்லாம் தாண்டி, கொலைகாரன் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும்போது மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழின் ஒரே சிறந்த சீரியல் கொலைப்படம் ராட்சசன். ராட்சசன் ஏன் முக்கியமானது என்பதை, சைக்கோவின் குழப்பங்களைப் பார்ப்பதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
பெண்களைக் கடத்தி ஒரே இரவுக்குள் தலையை வெட்டி வெறும் உடலை மட்டும் காட்சிக்கு அனுப்பி வைக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், தலைகளை சேமித்து வைக்கிறான். கொல்லப்பட்டவர்களுள் எவ்வித ஒற்றுமையும் இல்லை. எப்படி யோசித்தாலும் யார் ஏன் கொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. போலிஸ் திணறுகிறது.
பார்வையற்ற ஹீரோ, குரலைக் கொண்டே காதலிக்கும் ரேடியோ ஜாக்கியிடம், தன் காதலைச் சொல்லி அவள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் இருக்கும் இரவில் அவள் கடத்தப்படுகிறாள். பார்வையற்ற தன் காதலன் ஒரு வாரத்துக்குள் தன்னை மீட்பான் என்று சைக்கோ கொலைகாரனிடம் சபதமும் செய்கிறாள். அந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான் சைக்கோ. எப்படி பார்வையற்ற ஹீரோ வெல்கிறான் என்பதே சவசவ மீதிக் கதை! ஏன் அப்படி ஒரு சபதத்தை ஹீரோயின் செய்கிறாள்? அது எப்படி ஹீரோவுக்குத் தெரியும்? இப்படி பல எப்படிகள் அப்படியே காற்றில் அலைகின்றன.
சின்ன வயதில் நாம் கதை கேட்டிருப்போம். பார்வை தெரியாத ஒருவனும் கால் நடக்கமுடியாத ஒருவனும் நட்பாகி வெல்லும் கதை. அதையே கொஞ்சம் சீரியஸாக யோசித்திருக்கிறார் மிஷ்கின். பார்வையற்ற ஹீரோவுக்கு கால் நடக்கமுடியாத பெண் (முன்னாள்) ஐபிஎஸ் துணை. சதா தன் அம்மாவைத் திட்டிக்கொண்டே இருக்கிறார் அந்த ஐபிஎஸ். சோவின் சரஸ்வதியின் சபதம் நாடகத்தில் வரும் கே பாலசந்தர் ரக கதாபாத்திரங்களை நினைவூட்டும் சீரியஸான நகைச்சுவை பாத்திரமாக எஞ்சுகிறது இந்த ஐபிஎஸ்.
ஏன் ஹீரோ பார்வையற்றவராக இருக்கிறார்? என்ன தேவை இந்தப் படத்துக்கு? அதிலும் அவர் ஏன் இசைஞராக இருக்கிறார்? எல்லாம் அப்படித்தான்! அப்படி இருக்கக்கூடாதா என்ன என்ற கேள்வியைத் தாண்டி ஒரு பதிலும் இல்லை! ஒரு பார்வையற்ற ஹீரோ இந்த அளவு கொடூரமான சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கப் போகிறான் என்ற ஒற்றை வரி தரவேண்டிய சுவாரஸ்யம் பெரும் அலுப்பையே கொண்டு வருகிறது. கடைசிக் காட்சி வரை அந்த அலுப்பு தீரவே இல்லை. அதிலும் கண் தெரியாத ஹீரோ கார் ஓட்டுவதெல்லாம் ராம நாராயணன் படத்தில் பாம்பு கார் ஓட்டுவதையும் விட மோசமான கற்பனையாகவே எஞ்சுகிறது.
சிசிடிவி என்ற வஸ்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதையும், இதன் மூலம் உலகளவில், இந்திய அளவில், தமிழ்நாட்டு அளவில் பல கொலைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதையும், ஒரு குற்றம் எப்படி நடக்கிறது என்பதை சில மணி நேரங்களுக்குள் போலிஸ் தெரிந்துகொண்டு விடுகிறது என்பதையும் யாராவது இயக்குநருக்குச் சொன்னால் நல்லது.
மிஷ்கினுக்கும் இலக்கிய உலகத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பறைசாற்றுவதற்காகவே ஷாஜி, பாரதி மணி, பவா செல்லத்துரை ஆகியோர் ஐயோபாவமாக வந்து போகிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அள்ளுகின்றன. ஆனால் விழலுக்கு இறைத்த நீர்! இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்றாக வந்திருக்கவேண்டிய ‘தாய் மடியில்’ பாடல் கடைசியில் ஒற்றை வரி மட்டுமே வருகிறது. ஏன் இப்படி இயக்குநர்கள் ராஜாவின் கழுத்தை அறுக்கிறார்கள் என்பது புரிவதே இல்லை.
ஒருவன் ஏன் சைக்கோ கில்லராகிறான் என்பதற்கான காரணம் மிக முக்கியம். அந்தக் காட்சிகளை மட்டும் இப்படத்தில் ஓரளவு நன்றாக எடுத்திருக்கிறார்கள். அந்த பத்து நிமிடம் மட்டுமே கொஞ்சம் படத்துடன் ஒட்டிப்போக முடிந்தது.
சிறுவயதில் கிறித்துவப் பள்ளியில் படிக்கும் மாணவனை கிறித்துவ பெண் ஆசிரியை (மிரட்டலான நடிப்பு), மாணவனின் இயல்பான பதின்ம வயது சுய இன்பத்துக்குத் தரும் கொடூரமான தண்டனை அவனை சைக்கோவாக்குகிறது. சீர்திருத்தப் பள்ளிக்குப் போகும் வழியில் அவன் ஒரு போலிஸால் பாலியல் வதைக்குள்ளாக்கப்படுகிறான். இந்தக் காட்சிகள் காட்சிரீதியாக காட்டப்படாமல், பாதிக்கப்பட்ட நபரால் சொல்லப்படுவதுபோல், மாற்று அரங்க நாடகங்களின் பாதிப்பில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்நாடகங்களில் பரிச்சியமில்லாதவர்கள் எரிச்சாகிவிடும் சாத்தியங்களும் உள்ளன. ஆனால் இந்தக் காரணங்கள், ஏன் அவன் பல கொலைகளை அதுவும் பெண்களாகப் பார்த்துக் கொல்கிறான் என்பதையோ அவன் ஏன் அவர்களைப் பாலியல் ரீதியாக ஒன்றும் செய்யவில்லை என்பதையோ தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.
மற்றபடி கொலைகாரன் யாரையாவது கொல்லப்போகிறான் என்ற பயம் நம்மிடம் பரவவே இல்லை. அதேபோல் ஏன் இந்த ஹீரோ முன்பின் தெரியாத, காதலிக்கத் துவங்காத ஒரு பெண்ணுக்காக இத்தனை அலைகிறான் என்பதும் பிடிபடவே இல்லை. திடீர் திடீர் என்று ஹீரோவும் போலிஸும் என்னவோ யோசித்து எதையோ கண்டுபிடிப்பதெல்லாம் எவ்வித லாஜிக்கும் இன்றி, சட்டென்று தோன்றும் காட்சிகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. சாகும் முன்பு ஏ.எம்.ராஜா பாட்டுப் பாடும் போலிஸெல்லாம் – பாவமாக இருக்கிறது இந்தக் கால இயக்குநர்களை நினைத்தால்!
இடைவேளை வரை படம் தொடங்கிய புள்ளியில் இருந்து ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்கவில்லை என்பது அலுப்பைத் தருகிறது. அதற்குப் பிறகு வரும் காட்சிகள் கொஞ்சம் சுவாரஸ்யத்தைத் தரும் வேளையில், மீண்டும் மீண்டும் கொடூரமான கொலைகள் என்ற பழைய பல்லவிக்கே படம் திரும்பிவிடுகிறது. அதிலும் சைக்கோ கொலைகாரன் மேல் ஹீரோயினுக்கு கொலைகாரன் மேல் வரும் இரக்கமெல்லாம் படு க்ளிஷேவாக இருக்கிறது. ஒரே வெட்டில் தலையை வெட்டி எரிவதை தினம் தினம் பார்க்கும் ஹீரோயின் அவனிடம் குழந்தையைப் பார்த்தேன் என்பதெல்லாம் சுத்த மடத்தனம்.
இப்படத்தில் சுய இன்பம் தொடர்பான வார்த்தையும் நான்கெழுத்து ஆங்கில வசவு வார்த்தையும் மயிறு என்ற வார்த்தையும் வெளிப்படையாக ம்யூட் செய்யப்படாமல் இடம்பெற்றிருக்கின்றன. நாம் முன்னேறுகிறோம்! படம் நெடுகிலும் கொடூரமான கொலைகள். வயது வந்தவர்களுக்கான திரைப்படம் இது. குழந்தைகள் பார்க்கக்கூடாத ஒன்று.
மிஷ்கினுக்கு ஒரு திரைப்படம் என்றால் என்னவென்று நன்றாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த அறிவை ஒரு நல்ல கதை மற்றும் திரைக்கதையோடு சேர்ந்து பெரிய படைப்பாக மாற்றத் தெரியவில்லை. திணறுகிறார். இந்தப் படம் அதற்கு இன்னொரு சான்று. திரைப்பட இயக்குநர்கள் தீவிர இலக்கியவாதிகளாக, தீவிர இலக்கிய வாசகர்களாக இல்லாமல் இருப்பது முக்கியத் தேவை என்ற என் எண்ணம் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கதைகளை இலக்கியவாதிகளிடம் இருந்து எடுத்துக்கொண்டு தங்களுக்கேற்ற திரைக்கதையையும் திரைமொழியையும் உருவாக்கும் படங்களே பேசப்படும் என்று உறுதியாக நம்புகிறேன்.
சைக்கோ – இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்களைக் கேட்டு, முதல்நாள் முதல் காட்சி திரையரங்கில் பார்த்தேன். இனிமே வருவியா இனிமே வருவியா என்று பழுக்கக் காய்ச்சிய கம்பியைத் தொடைகளில் வைத்து இழுத்து..
PenToPublish, an ebook contest to be so simple, was introduced in Tamil last year for the first time to boost the ebooks and its sales in Tamil. The first prize, compared to the other usual competitions happening in the Tamil literary field, is really a huge amount, 5 Lakh, but Kindle self-publishing was not popular enough to attract a huge number of writers into the contest last year. Kindle platform was dominated, even now too, by female writers, of course not feminists, and so the participants for PenToPublish2018Tamil were mainly female writers last time. It was a big struggle last time to get the attraction to the contest. But when the winners were announced, Tamil ebook world came to know some foul play cleverly played by a Dravidian political party DMK.
The important part of this issue is, even the judges were not aware of this! The DMK cadres in social media shared the links of their supporters’ stories in their hidden group and campaigned successfully for getting likes and pre-loaded reviews. Even though its termed as a contest by Kindle, the entries that got high numbers of likes and reviews would go into the second selection list that was sent to the judges for selecting the final winners. In this way, DMK supporters easily hijacked the contest to make their supporters win the contest. This came to limelight only when the DMK supporters proudly shared this in social media.
This time this went to another step ahead, yes, the DMK supporters started their campaign openly! The very purpose of the contest is almost killed by the DMK supporters.
Partly Amazon also to be blamed for not letting know the rules clearly. Even now the clarity lacks. If the likes and reviews would simply elect the winners, what is the role of the judges? Last time there was some confusion till the end on the judges part too. Earlier it was announced, Mr. S. Ramakrishnan, a famous writer, would be the judge for Tamil entries, but later it was announced Mr. Era Murukan would be the judge. Era Murukan is one of the important serious literary writers of Tamil, but the winning entries did not exhibit any sense of seriousness in the content. This clearly shows the role of the judges is really restricted by the rules of Amazon.
We can understand very well, bringing the serious stories/essays to the Tamil literary world would not be the aim of Amazon. But if these likes and reviews would decide the winners, it makes the contest useless. Those who can write really serious fiction, like Lakshmi Saravanakumar who wrote a Tamil novel for 2019 contest, would not even be considered for the second round if he fails to generate enough likes and reviews. But Lakshmi Saravanakumar somehow managed to get enough likes and reviews, the only happiest moment of this contest I would say, amid this hijacking by DMK’s social media supporters.
This time the judges for Tamil are Mr. Pa. Raghavan, a famous writer and Mr. Saravana Karthikeyan (CSK), an emerging writer! This is yet another disappointing decision from Amazon to have selected CSK to be one of the juries, for he was too young, he has written just one novel and some short stories so far. Apart from his inexperience to be the judge, another important thing to be emphasized is, CSK, one of the juries of Tamil, is a hardcore DMK supporter! One can argue a DMK person could be unbiased when it comes to a contest, I agree, I am sure CSK will be unbiased in finalizing the winners, but we are not running out of judges in the Tamil writing world to select a very junior one to be one of the juries. It is really weird.
If you can see who all are getting high numbers of likes and reviews in PenToPublish Tamil entries, if you are active in Tamil social media, you can easily understand almost all of them are DMK supporters except very few. DMK supporters and judges are saying, this is open to all, and so the same thing could be tried by the opponents too to get more likes and reviews. If you really consider the serious atmosphere of the Tamil writing industry, its sad to see the writers themselves becoming a marketing person asking for likes and reviews. Indeed a pathetic one. However, we could at least digest this thinking a writer is promoting his own book. But when the same thing is done by an ideological driven political party, just imagine the outcome of the contest.
Last year the winning entries are very shallow. But the winner could achieve it as he has a very good network with the DMK supporters of social media. This time too the same thing could happen again. Off late, ex MLA of DMK is also participating in the contest it seems. If an entry could win the contest for its stuff, everybody would be fine with it. Even an MLA, of any party, sitting or ex, could write an excellent novel, I know I am sounding very weird here, but if it really happens, even if he is a DMK MLA, no doubt it’s a time for celebration. But if the winning is achieved just by marketing, only with the help of the network of a political party, let it be any political party, it’s not correct. That would kill the very purpose of the spirit of the contest. This is what is happening now to PenToPublishTamil. This would keep either all the important writers away from the contest or they would also try to get the support of political party cadres.
High time Amazon should understand this and change the pattern of the contest. It must rather be selection than election. Otherwise, its a total waste of time to read the entries and participate in the contest.