Yad Vashem Novel

யாத் வஷேம் – யாத் வஷேம் என்றால் நினைவிடம் என்று பொருள். வதைமுகாம்களில் ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் நினைவாக ஜெருசலத்தில் இஸ்ரேல் நிறுவி இருக்கும் நினைவிடம் இது. இதைப் பின்னணியாக வைத்து ஒரு நாவல் எழுத நினைத்ததே பெரிய விஷயம். நேமிசந்த்ரா வாழ்த்துக்குரியவர். கன்னட நாவல், தமிழில் கே.நல்லதம்பி சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறார். கன்னடம் எனக்குப் படிக்கத் தெரியாது என்பதாலும், கன்னட ஆடியோ புத்தகம் கிடைக்கவில்லை என்பதாலும் சில இடங்களை ஒப்பிட முடியவில்லை என்றாலும், சிறப்பான மொழிபெயர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 350 பக்க நாவலை ஒரே நாளில் முடித்தேன். அந்த அளவுக்கு வேகம். எதிர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

நாவலின் முதல் நூறு பக்கங்கள் மிக மிக அருமை. மானுட தரிசனம் என்று சொல்வார்களே, அப்படி ஒரு தரிசனம். இந்தியாவில் தஞ்சமாகும் யூதச் சிறுமியைத் தன் குடும்பப் பெண்ணாக்கிக் கொள்ளும் இந்திய ஹிந்து வொக்கலிகா குடும்பம் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது. இந்த நாவலின் அற்புதமான பக்கங்கள் இவை. அதிலும் கன்னடத்தில் எப்படி எழுதி இருப்பார்கள் என்கிற யூகத்துடன் வாசித்த எனக்கு மகத்தான அனுபவமாகவே அமைந்தது.

தன் குடும்பத்தைத் தேடி யூதப் பெண் தன் முதிய வயதில் தன் கணவனுடன் மேற்கொள்ளும் பயணமும், யூத வதைமுகாம்களைப் பார்ப்பதும், யூதர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அது வரை நினைத்து வருந்தும் பெண், ஒட்டுமொத்த உலகின் அடக்குமுறைகளுக்கு எதிராக நினைக்கத் தொடங்குவதும் அடுத்து வருகின்றன.

இறுதியில் தன் அக்காவைச் சந்திக்கும் கதாநாயகியின் குடும்பம் எதிர்கொண்ட அராஜகங்கள் விவரிக்கப்படுகின்றன. எல்லா யூதக் குடும்பத்திற்கான ஒட்டுமொத்த சித்திரமும் அதுவே.

அடுத்த ஐம்பது பக்கம் – என் பார்வையில் திருஷ்டிப் பொட்டு என்றே சொல்லவேண்டும்.

அதுவரை நாவல் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்காகப் பரிதவிப்புடன் நாவல் பேசுகிறது. இந்தியா அந்த யூதப் பெண்ணை எப்படி அரவணைத்தது என்று சிலாகிக்கிறது. இந்தியா பல்வேறு மோழி மத இன வேறுபாடுகளுடன் இருந்தாலும், அதன் அரவணைப்பில் எந்தக் குறையும் இல்லை என்று கொண்டாடுகிறது. தன் அக்காவைக் கண்டதும் அதுவரை இருந்த நினைவுகள் தர்க்கமாக மாற, மத ரீதியான ஒட்டுமொத்த கொடுமைகளுக்காக அந்தக் கதாபாத்திரம் பேச ஆரம்பிக்கிறது., எழுத்தாளர் நேமிசந்த்ராவின் ஒட்டுமொத்த மத விடுதலையை ஒட்டிய தர்க்கம் இது என்று கொண்டாலும், என்னளவில் அது நம்ம ஊர் செக்யூலர் ஜல்லியாகவே தெரிந்தது.

எந்த ஒரு மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்பது வரை சரி, ஆனால் யூத மண்ணில் யூதர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைப் பார்த்துக்கொண்டு நின்ற மனிதர்களை அதுவரை கடுமையாகப் பேசிய நாவல், அதிலிருந்து அவர்கள் பக்க நியாயத்தையோ அல்லது இரக்கத்தையோ பேச ஆரம்பிப்பது ஏற்கும்படியாகவே இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் ஹிட்லர் வரக் கூடும் என்கிற தியரியை, ரத்தமும் சதையுமாக வேதனையை உணர்ந்தவர்களிடம் பேசுவதெல்லாம் அபத்தம். யதார்த்த கொடூரங்களில் இருந்து தான் மேலெழுந்துவிட்டதான பாவனை என்பதைத் தாண்டி ஒன்றுமில்லை என்றே எனக்குப் பட்டது. இந்தப் பாவனை கதாநாயகியுடையதாகவும் இருக்கலாம், நேமிசந்த்ராவினுடையதாகவும் இருக்கலாம்.

போக போக தர்க்கங்கள் எல்லை மீறிப் போகின்றன. இது நாவலா தர்க்கமா என்ற குழப்பம் ஏற்படும் அளவுக்கு. அதிலும் கடைசி இரு அத்தியாயங்களில் தன் வீட்டுக்கு வரும் முஸ்லிம் பெண்ணுக்கு அடைக்கலம் தருவதெல்லாம் தவறில்லை, ஆனால் சுத்த முற்போக்கு அபத்த நாடகம்.

இந்த நாவலை எப்படி எழுதினேன் என்று நேமிசந்த்ரா கடைசி இருபது பக்கங்களில் எழுதி இருக்கிறார். நான் நாவலை வாசிக்கும்போது என்னவெல்லாம் நினைத்தேனோ அதற்கு ஏற்றாற்போன்ற காரணங்களை அதில் பார்க்க முடிந்தது. நாவலின் கடைசி அத்தியாத்தைத் திருத்தி எழுதியதாகச் சொல்லி இருக்கிறார். இன்றைய செக்யூலர் அரசியல் சரி நிலைக்கு ஏற்ப நாவலை மாற்றி எழுதியது போல் எனக்குத் தோன்றியது. நாவலின் முதல் இருநூறு பக்கங்களில் நாவலில் இருந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வழக்கமான ஒரு நீதியைச் சொல்லும் இடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது துரதிர்ஷ்டம்.

முக்கியமான நாவல். நிச்சயம் வாசிக்கவேண்டிய நாவல். யூதர்களின் வாழ்க்கையும் இந்தியர்களின் வாழ்க்கையும் ஒப்பிடப்பட்டு இத்தனை விரிவாக எந்த நாவலிலும் இதுவரை விவாதிக்கப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன்.

Share

Two movies

Adiyos Amigo (M) – பேசி பேசியே சாவடித்துவிட்டார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவின் ஒரே போன்ற முகபாவமும் நடிப்பும் எரிச்சலூட்டுகின்றன. ஆசிஃப் அலி உயிரைக் கொடுத்து நடித்தாலும் எவ்வளவு நேரம் ஒரே காட்சியை, நகராத திரைக்கதையை மீண்டும் மீண்டும் காண்பது? அலவலாதித்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கும் ஓர் அளவில்லையா! சாலையைச் சலிக்க சலிக்க காட்டுவதைத் தாண்டி வேறு ஒன்றும் இல்லை. எப்படி இதைச் சிலர் புகழ்ந்தார்கள் என்பது ஆச்சரியமே.

படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.

லப்பர் பந்து – சமீபத்தில் தமிழில் வந்த திரைப்படங்களில் அபாரமான திரைக்கதை கொண்ட சிறந்த கமர்சியல் படம் இதுவே. பெரிய இயக்குநர்களின் படங்களுக்குரிய கச்சிதம் இதில் இல்லை என்றாலும், அந்த இயக்குநர்களின் ஆரம்பப் படங்களில் இருக்கும் அந்த rawness இந்தப் படத்தில் இருப்பது பெரிய ப்ளஸ். பின்னால் இந்த rawnessஐ இந்த இயக்குநர் தவற விடாமல் இருக்க வேண்டும். படத்தில் மாமியார் மருமகள் உருகும் காட்சி கொஞ்சம் இழுவை. அதை மட்டும் விட்டு விட்டால் மற்ற அனைத்துக் காட்சிகளும் பக்காவான திரைக்கதையுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாதான் கிரிக்கெட்டில் தனக்குப் போட்டி என்பது அவனுக்குத் தெரியாதா என்ற கேள்வியை மறக்க வைக்கிறது பரபரப்பான திரைக்கதை. 80களின் இசை பின்னணியில் வந்தால் அந்தப் படம் எந்த அளவுக்கு நம்மை கவர்ந்திழுக்கும் என்பதற்கு இந்தப் படம் இன்னும் ஒரு உதாரணம்.

Share

Two Tamil novels

ராஜ வனம் – ராம் தங்கம் எழுதிய சிறு நாவல். கிண்டிலில் வாசித்தேன். காடு, அவன் காட்டை வென்றான், கெடைக்காடு, ஆரண்யக், கானகன் போன்ற நாவல்களைப் படிக்காதவர்களுக்கு இந்த நாவல் காட்டைப் பற்றி ஓர் ஆச்சரியத்தைச் சிறிய அளவில் தரக்கூடும். அந்த நாவல்களை வாசித்தவர்களுக்கு இது இன்னும் ஒரு காட்டைப் பற்றி நாவலாகவே மிஞ்சும். காட்டைப் பற்றிய நாவலுக்கு அபாரமான கற்பனையும் யதார்த்தமான காட்டு வாழ்க்கை அனுபவமும் தேவை. இந்த நாவலில் காட்டைப் பற்றிய இடங்கள் கொஞ்சம் தேங்கினாலும், கூறியதே மீண்டும் மீண்டும் கூறுவதாகப் பட்டாலும், பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய விவரங்கள் மற்றும் நிகழ்வுகள் கொஞ்சம் மேலெழுந்து வருகின்றன. இன்னும் ஆழமாக விரிவாக இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றாமல் இல்லை.

வேசடை – ஏக்நாத்தின் சிறு நாவல். ஏற்கெனவே இவர் எழுதிய கெடைகாடு நாவலைப் படித்திருக்கிறேன். அந்த நாவிலிலும் கதை என்று ஒன்று கிடையாது. வட்டாரம், இடங்கள் மற்றும் மனிதர்களைப் பற்றிய விவரணைகளும் அதனூடாகச் செல்லப்படும் சில நிகழ்வுகளுமே கதை. அதே போல் தான் இந்த நாவலும். அந்த நாவலில் இயற்கையான காடு ஒன்றைப் பார்க்க முடிந்தது. இந்த நாவலில் ஒரு சிறிய பற்றுக்கோடாகக் கதை என்ற ஒன்று இருக்கிறது. மற்றபடி பல்வேறு காலங்களில் நிகழும் காலமாற்றம், அதை ஒட்டிய ஒரு கிராமத்து மனிதனின் நினைவுகளுமாகக் கதை நீள்கிறது. கெடைகாடு அளவுக்கு இல்லை என்றாலும், இதை வாசிக்கலாம். இன்னும் ஆழமாக அடர்த்தியாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியதை மறுக்க முடியாது. நாவலில் வரும் நிகழ்வுகள் எவையுமே புதியதாக இல்லை என்பதும் ஒரு குறை. நெல்லை வட்டார வழக்கு பிடித்தவர்களுக்கு இந்த நாவல் கூடுதலாக ஒட்டிக்கொள்ளக் கூடும்.

Share

Amma

இன்று முருங்கைக்காய் சாம்பார். முருங்கைக்காயைப் பிளந்து அதில் ஒவ்வொரு வரியாகச் சதையை வழித்து எடுத்து ஒவ்வொரு உருண்டை மேலேயும் அம்மா வைப்பாள். எப்போதும் கைதுத்து தருவதே அம்மாவின் வழக்கம். இருக்கும் முருங்கைக்காயைக் கடைசி உருண்டை வரை வழித்து விழுதை வைத்துக் கொண்டே இருப்பாள். அம்மா பார்த்து பார்த்து எங்களை வளர்த்தாள். இன்று முருங்கைக்காய் சாப்பிடும்போது அம்மாவின் நினைவு வந்து கண்ணீர் முட்டிவிட்டது.

Share

Vettaiyan

வேட்டையன் – ஒன்று ரஜினிக்கான வணிகப் படம் என்று இயக்குநர் யோசிக்கவேண்டும். அல்லது நல்ல படம் என்று யோசிக்கவேண்டும். இரண்டையும் யோசித்தால் என்னாகும்?

முதல் பாதி பரபர. இடைவேளைக்கான ப்ளாக்கைக் குழந்தை கூட யூகிக்கும் என்றாலும் அந்தக் காட்சி நன்றாகவே இருந்தது. ஏனென்றால் அந்தக் காட்சியின் முக்கியத்துவம். இது போன்ற ஒரு கதையில் நடித்ததற்காகவே ரஜினியைப் பாராட்டவேண்டும் என்கிற அளவுக்கு முக்கியமான காட்சி. எல்லாவற்றையும் பக்காவாக செட் செய்துவிட்டு இரண்டாம் பாதியில் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள்.

இடைவேளை வரை என்கவுண்ட்டர் செய்வது ஏன் தவறே இல்லை என்று பொதுப்புத்தியில் ஆழமாக நிலைநிறுத்திவிட்டு, ஒரே காட்சியில் அது தவறு என்று கொண்டு போனால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இடைவேளைக்குப் பிறகான படம் அமிதாப் vs ரஜினி என்று இருக்கும் என நினைத்துப் பார்த்தால், அமிதாப் ரஜினியின் வாலாகிவிடுகிறார். இதில் ஜோக்கர் வேடத்தில் ஃபகத். பாவம்.

சமீப கால இயக்குநர்களைப் பிடித்தாட்டுவது டிவிஸ்ட் என்னும் வியாதி. அதற்காகத் திரைக்கதையைக் கோட்டைவிடுகிறார்கள். யார் வில்லன் என்று முதலில் காட்டாமல் இருக்க இது என்ன த்ரில்லர் படமா? யார் வில்லன் என்று நமக்குத் தெரிவதற்குள் பாதி உயிர் போய்விடுகிறது. இதே தவறுதான் அண்ணாத்தே படத்திலும். ஒரு திரைப்படத்துக்கு ஒரு ஹீரோ என்றும் ஒரு வில்லன் என்றும் இருப்பது எப்போதுமே பலம்.

அடுத்த பிரச்சினை, ரஜினியை வைத்துக்கொண்டு நீட்டுக்கு எதிராகப் பேசுவதிலும் இயக்குநருக்குச் சிக்கல். நீட்டை ஆதரித்தாலும் சிக்கல். எனவே சுற்றி வளைத்து கோச்சிங் செண்ட்டர்களைக் குறி வைக்கிறார்கள். படம் கோச்சிங் செண்டருக்கு எதிரானதா நீட்டுக்கு எதிரானதா என்பதிலும் இயக்குநருக்குத் தெளிவில்லை.

கல்வியில் சமத்துவம் என்றால் அரசே நடத்தும் பல தேர்வுக்கும் அது பொருந்தவேண்டும். இயல்பில் அது சாத்தியமே இல்லை. ஏதோ ஒரு கட்டத்தில் நுழைவுத் தேர்வுகளை நீங்கள் தவிர்க்கவே முடியாது. கல்வியில் சமத்துவத்தை ஆதரிக்கிறோமா, நீட்டை எதிர்க்கிறோமா அல்லது கோச்சிங் செண்டரின் ஏமாற்றுத் தனத்தை எதிர்க்கிறோமா என்று இயக்குநருக்குக் குழப்பமோ குழப்பம்.

என்கவுண்ட்டருக்கு எதிரான திரைப்படம் என்றால் உண்மையில் திரைக்கதை ரஜினி vs அமிதாப் என்றிருந்திருக்கவேண்டும். நல்ல வாய்ப்பையும் களத்தையும் தவற விட்டிருக்கிறார் இயக்குநர்.

ரஜினி படம் என்று பார்த்தால் ரஜினிக்கான மாஸ் சீனோ, புல்லரிப்புக் காட்சியோ ஒன்று கூட இல்லை. ரஜினியின் நடிப்புக்கேற்ற காட்சிகளும் இல்லை. இதைவிட அராஜகம், ரஜினியும் இல்லாமல், அமிதாப்பும் இல்லாமல், ஃபகத்தும் இல்லாமல் படம் முழுக்க ஏகப்பட்ட காட்சிகள்.

ரஜினிக்கு நடக்க முடியவில்லை. அதை எப்படி சமாளித்துப் படமெடுக்க என்று இயக்குநருகுத் தெரியவில்லை. இந்தக் காலப் படத்தில் ஏன் இத்தனை சண்டைக் காட்சிகள்?

ஒரு பெண் கொல்லப்படுவதை அதிகம் முறை மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட சாதனைத் திரைப்படமாக இது இருக்க வாய்ப்பு அதிகம். எத்தனை தடவைப்பா காமிப்பீங்க? இந்தப் பெண் சாகும் காட்சியில் உயிர்கொள்ளும் திரைப்படத்தை அராஜகமாகக் கொன்றுவிட்டார் இயக்குநர்.

என்கவுண்ட்டருக்கு எதிரான படம் என்ற போர்வையில் நீட்டுக்கு எதிரான படமாகவும் அது இருந்து அது ரஜினி படமாகவும் இருக்கவும் ஆசைப்பட்டு அதில் கார்ப்பரேட் எதிர்ப்பையும் சேர்த்து ஒரு தட்டில் பரிமாறினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது திரைப்படம். இத்தனை குழப்பங்களுடன் வந்தால் ஒரு படம் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது வேட்டையன்.

ஒரு தடவை பார்க்கலாம்.

Share

Hadinelentu kannada movie

ஹதினேழென்ட்டு (K) – 2022ல் வந்த கன்னடத் திரைப்படம். தொடக்க நொடி முதல் இறுதி நொடி வரை இத்தனை பரபரப்பான ஆனால் தீவிரமான கதையைச் சொல்லும் ஒரு திரைக்கதையை நான் பார்த்ததில்லை என்றே சொல்ல வேண்டும். உலிதவரு கண்டந்தே, காந்தாரா போன்ற திரைப்படங்களைத் தந்த கன்னடத் திரையுலகம் பெருமை கொள்ள இன்னுமொரு படம். ஜாதி ரீதியாகப் பிராமணர்களுக்கு இப்படம் வருத்தத்தை ஏற்படுத்தும் என்றாலும், எந்த ஒரு ஜாதியையும் விட்டு வைக்காமல், சந்தர்ப்பவாதிகள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு உள்ளேயே ஆங்கே மனிதமும் இருக்கிறது என்பதையும் ஒருங்கே சொல்லும் இதைப் போன்ற திரைப்படங்கள் மிகக் குறைவு. யூடியூபில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது. உடனே பார்த்து விடுங்கள்.

Share

Ragu Thatha Tamil movie review

ரகு தாதா – ஹிந்தி எதிர்ப்பில் சொந்தச் செலவில் சூனியம்.

படம் இடைவேளை வரை சுமார். அதன் பிறகு அறுவை. படத்தின் ப்ளஸ் என்று பார்த்தால், நடிகர்களின் நடிப்பு. அனைவருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் அண்ணன் மற்றும் அண்ணியின் நடிப்பு குறிப்பிடவேண்டியது. படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது. இயக்குநர் அரசியல் ஜல்லியைக் கைவிட்டால் பெரிய அளவில் வர வாய்ப்பிருக்கிறது. படத்துக்கு ரகு தாதா என்று பெயர் வைத்திருப்பது சிறப்பு.

ஹிந்தி எதிர்ப்பை வைத்துக்கொண்டு எப்படி அரசியல் கட்சிகள் ஜல்லி அடிக்கின்றனவோ அதே போல் இயக்குநரும் அடித்த ஜல்லி கொஞ்ச நஞ்சமல்ல. ஹிந்தி ஒழிக என்று கத்துகிறார்கள். ஆனால் கடைசியில் எங்கே ஹிந்தி ஒழிகன்னு நாங்க சொன்னோம், ஹிந்தித் திணிப்பு ஒழிகன்னுதானே சொன்னோம் என்று சொல்லி காமெடி செய்கிறார்கள்.

ஆனாலும் இயக்குநர் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளத் தவறவில்லை.

பெரிய கொள்கைவாதியாக ஹீரோவைக் காண்பிக்கும் இயக்குநர், பெரிய அரசியல் பிரசாரப் படம் போல என்று நினைத்துப் பார்க்கும் பார்வையாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தருகிறார். எப்படி கொள்கைவாதிகள் வாய் கிழியப் பேசினாலும் உள்ளுக்குள் அவர்கள் பெண்ணியத்தின் எதிரிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் இருப்பார்கள் என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறார். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் என்று என்னை சந்தோஷப்பட வைத்துவிட்டார். அதிலும் அந்த ஹீரோ ஈவெராவை அடிக்கடி மேற்கோள் காட்டுபவர். மேற்கோள் மட்டும் காட்டுபவர்.

இதை இயக்குநர் ஹீரோவுடன் மட்டும் நிறுத்தவில்லை. ஹீரோயினையும் இந்தச் சிப்பிக்குள் அடைத்துவிட்டார். அத்தனை கோஷம் போட்டு ஹிந்திக்குத் தார் பூசும் பெண், தனக்கு ஒரு தேவை என்று வந்ததும் ஹிந்தி கற்கத் தயாராகிறாள். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 2.

ஹிந்தி தன் புத்திக்கு ஒத்துவரவில்லை என்பதும் அந்தப் பெண் கொள்கைச் சிங்கம் ஊழலுக்குத் தயாராகிறது. பேப்பரை மாற்றி ஹிந்தித் தேர்வில் ஜெயிக்கிறது. இதைத்தானே நாங்களும் சொல்கிறோம் மொமண்ட் 3.

படத்தில் ஹிந்தி பேசும் அனைவரும் அத்தனை நல்லவர்கள். யதார்த்தவாதிகள். இ.நா.சொ. மொமெண்ட் 4 மற்றும் சொந்தச் செலவில் சூனியம் மொமெண்ட் 2.

ஹிந்திக்காரன் தனக்குத் தேவை என்றால் சுத்தமாகத் தமிழைக் கற்றுப் பேசுகிறான். அவனுக்குத் தமிழ் மேல் எந்த வெறுப்பும் இல்லை. எல்லா மொழிகள் மேலும் அவனுக்குக் காதல் இருக்கிறது. இ.நா.சொ. மொமெண்ட் 4.

கதாநாயகி கல்கத்தா போக முடிவெடுப்பதன் காரணம், பப்ளிஷர் அங்கதான் இருக்காங்களாம். இவள் எழுதுவது தமிழில். அங்கே என்ன பதிப்பாளர் இருக்கிறார்? கொடுமை. கதாநாயகி இன்னொன்றும் சொல்கிறாள். இவளது எழுத்து இந்தியா முழுமைக்கும் பரவவேண்டுமாம். அப்ப ஹிந்தி படி! இ.நா.சொ. மொமெண்ட் 5.

படத்தில் இரண்டு பிராமண கதாபாத்திரங்கள். ஒரு பிராமண கேரக்டர் கதாநாயகியின் தோழி. அவள் மேல் குறையே சொல்ல முடியாது. அத்தனை நல்லவள்! இன்னொரு பிராமண கதாபாத்திரம் ஹிந்தி சபாவின் ஆசிரியர். அவர் மேலும் குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர் ஹிந்தித் திணிப்பை எங்கேயும் செய்யவில்லை. ஹிந்தி சொல்லித் தருகிறார், அவ்வளவுதான். ஆனால் ஹீரோயின் தமிழ் வெறிகொண்டு அந்த இடத்தை அடித்து நொறுக்குகிறாள். ஏன், அந்த இடத்தைப் பூட்டுப் போட்டால் மட்டும் போதாதா? ஹிந்தி ஒழிப்பிற்கு முன்னணியில் நிற்கும் கதாநாயகியின் தாத்தா தன் பேத்திக்குத் திருமணம் என்று வரவும், சபா நடக்கட்டும் என்று சொல்லிவிடுகிறார். என்ன அருமையான திருப்பம்!

உண்மையில் ஹிந்தித் திணிப்பைச் செய்வது வங்கி. அங்கே சம்பளத்துக்காக வாய் பொத்தி, ஹிந்தித் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகி, ரௌடித்தனமெல்லாம் செய்வதில்லை. வங்கியை அடித்து உடைப்பதில்லை. வேலையை விடுகிறேன் என்று வாய் தவறிக் கூட சொல்வதில்லை. ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புக் கொள்கைப் பிடிப்பு என்றால் சும்மாவா!

இது ஹிந்தி எதிர்ப்புத் திரைப்படம் என்று மக்களை நம்ப வைத்தது பற்றிப் புகாரில்லை. ஆனால் யாரோ இயக்குநரையும் நம்ப வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதாகச் சொல்லி, கொள்கை அரசியல் என்று சொல்லிக்கொண்டு ஊரை ஏமாற்றுபவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் திரைப்படம். 🙂

Share

Chattambi (M)

மகாநதி திரைப்படத்தில் கமலை ஆசை காட்டி மோசம் செய்வது ஒரு மலையாளி. அதில் நடித்ததும் ஒரு மலையாளி. கொச்சின் ஹனீஃபா.

சட்டம்பி என்றொரு மலையாளத் திரைப்படம். 2022ல் வெளியான படத்தை நேற்றுதான் பார்த்தேன். சுமாரான படம்.  நாம் எப்படி மலையாளிகளைக் காண்பிக்கிறோமோ அதே போல் தமிழர்களை பாண்டி என்று அழைக்கும் இன்னுமொரு திரைப்படம். இதில் ஹீரோ மட்டும் ஒரு தமிழனை நம்புகிறான். ஆனால் ஹீரோவின் எதிரி ஹீரோவிடம் தமிழனை நம்புவதற்குப் பதிலாக (கெட்டவார்த்தை) என்று சொல்கிறான். அதையும் மீறி ஹீரோ தமிழனை நம்புகிறான். கடைசிக் காட்சியில் அந்தத் தமிழன் ஹீரோவைப் பணத்துக்காக நயவஞ்சமாக, ஹீரோவின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்கிறான். அந்தத் தமிழன் பாத்திரத்தில் நடித்திருப்பது தமிழ் நடிகர் சோம சுந்தரம். மிக நல்ல நடிகர். நடிப்புக்கு மொழி அவசியமே இல்லை என்று அவர் எப்போதும் உரக்கச் சொல்வார் என்று நம்புகிறேன், ஜி என்ற வார்த்தையைக் கேட்டாலே எரிச்சலா வருது என்று சொல்லி நடித்ததும் நடிப்பு மட்டுமே என்று சொல்வார் என்று நம்புவதைப் போல.

Share