Thangalaan

தங்கலான் – ரஞ்சித்தின்‌ பலமே யதார்த்தத்தில் அரசியல். நுணுக்கமான காட்சிகள். இந்த இரண்டும் இல்லாமல் ஒரு படமாய் வந்திருக்கிறது தங்கலான்‌. தங்கத்தைத் தேடுவதில் அரசியலை நுழைக்கிறேன் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நில உரிமை என்று பேசுகிறார்கள். மாய யதார்த்தம் என்று‌ வைத்துக்கொண்டு ஜல்லியான திரைக்கதை. ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் ஏன் எப்போதும் அடிவயிற்றில் இருந்து நரம்பு தெறிக்கப் பேசுகிறார்கள்? யார் இந்த இயக்குநர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுத்தது? ஒருவர் விடாமல் அனைவரும் வளவளவென்று பேசியே சாவடிக்கிறார்கள். அதிலும் என்னவோ ஒரு காலத் தமிழ். ஆனால் பாட்டு பாடும்போது மட்டும் இன்றைய தமிழாம்! எல்லாக் காலகட்டத்திலும் பிராமணர்களே எதிரிகள் என்று வலுக்கட்டாயமாகக் காட்டி, புத்தரை திணியோ திணி என்று திணித்திருக்கிறார்கள். கடைசி காட்சியில் ஏன் விக்ரம் கதாபாத்திரத்துக்கு உண்மை தெரிந்தது? அது முதல் காட்சியிலேயே தெரிந்து தொலைத்திருந்தால்தான் என்ன? இத்தனை நீளப் படத்தில் ஒரு காட்சி கூட ஒட்டவில்லை. விக்ரம் இத்தனை கஷ்டப்பட்டு ஏன் ஓவர் ஆக்ட் செய்தார் என்றே புரியவில்லை. உள்ளொழுக்கு படத்தில் ரசித்த பார்வதியை வெறுக்க இந்த ஒரு படம் போதும். இதில் பாடாவதியான கிராஃபிக்ஸ் வேறு. மொத்தத்தில் ஒட்டாத குறியீட்டுச் செயற்கைத்தனத்துடன், பாலாவின் படம் போன்ற ஒரு ரஞ்சித் திரைப்படம். பாலாவின் பரதேசி படமும் இப்படித்தான் இருந்தது.

Share

Golam

கோளம் (M) – தவற விடக் கூடாத ஒரு திரைப்படம். தொடக்கம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு. ஆட்டம் திரைப்படம் போல. கொலையாளிகளின் பக்கம் நின்று‌ அவர்கள் கொல்வதை நம்மை ரசிக்க வைத்துவிடுவது திரைக்கதையாக எவ்வளவு பெரிய வெற்றி! குறைந்த வசனங்கள், நல்ல பின்னணி இசை என அசத்தி இருக்கிறார்கள். அவர்கள் முகத்தை மறக்க முடியாது என்று டாக்டர் சொல்லவும் அந்த 13 பேரும் நிற்கும் ஃப்ரேம் மறக்க முடியாத காட்சி. ப்ரைமில் கிடைக்கிறது.

Share

சிபிஐ 4

CBI (டைரிக்குறிப்பு) 5 (M) – சவட்டித் தள்ளி விட்டார்கள். மூன்று மணி நேரப் படத்தை ஓட்டி ஓட்டிப் பார்த்தாலும் ஆறு மணி நேரம் ஓடுகிறது. பேசுகிறார்கள் பேசுகிறார்கள், வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். பயங்கரமான திருப்பம் என்று அவர்களாக நினைத்துக் கொண்டு நம்மைப் போட்டு தள்ளி விடுகிறார்கள். 72 வயதில் மம்மூட்டி அழகாகத்தான் இருக்கிறார். ஆனால் கை கால்கள் ஒத்துழைக்கவில்லை. வில்லன் ஓடும்போது வீட்டுக்குள் நின்று தலையை மட்டும் சாய்த்து சாய்த்து மாடியையே பார்க்கிறார், பாவமாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து ஜெகதீஷ் ஸ்ரீ குமாரை திரையில் பார்த்தபோது மனம் கனத்தது. ஜெகதி ஸ்ரீ குமார் முகம் காட்டியது மட்டுமே இந்தப் படத்தின் ஒரே சாதனை.

Share

Some movies

உள்ளொழுக்கு (M) – அடர்த்தியான சிறுகதையைப் போன்ற ஒரு திரைப்படம். எளிய கதையில் சிறப்பான திரைக்கதை. யூகிக்க முடியும் ஒரு முடிவுதான் என்றாலும் முழுக்க பார்க்க வைக்கும் அனுபவம். ஊர்வசியும் பார்வதியும் வெகு சிறப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மிக மெல்ல நகரும் படம் விறுவிறுப்பாகவும் இருக்க முடியும் என்று சொல்லும் இன்னொரு மலையாளப் படம். ஒவ்வொரு காட்சியைப் பார்த்துப் பார்த்து எழுதி இருக்கிறார்கள். பல அநாவசியமான விஷயங்களை எல்லாம் ஒரே தாண்டாகத் தாண்டிவிடும் திரைக்கதை பெரிய பலம். மறக்க முடியாத ஒளிப்பதிவு. அடர்த்தியான படம்.

ப்ரைமில் கிடைக்கிறது.

அஞ்சக்கள்ளகொக்கன் (M) – இன்னொரு சிறந்த இயக்குநரின் வருகையைப் பறைசாற்றும் படம். ஆஹாஓஹோ வகையல்ல என்றாலும், எடுத்த‌விதம்‌ அருமை. சுற்றி சுற்றிச் செல்லும் திரைக்கதை. அனைத்து நடிகர்களும் சிறப்பு. அதீத யதார்த்தம். இணையாக நாடகத்தனமான வில்லன்களும். சமீப மலையாளப் படங்களில் தமிழ் அல்லது கன்னடம் நிறைய வருகிறது. இதில் ஆங்காங்கே கன்னடம். நேரமிருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

அயல்வாஷி (M) – மிக எளிமையான, மண்டை காயாத கதை கொண்ட படம் பார்க்க‌ விரும்புபவர்களுக்கான படம். இரண்டு நண்பர்களுக்கு இடையே வரும் விரிசலை எப்படிச் சரிசெய்து கொள்கிறார்கள் என்று நகைச்சுவையாகச் சொல்லி இருக்கிறார்கள். பாதிக்குப் பிறகு பல இடங்களில் சிரிக்க முடிந்தது. கடைசி ஃப்ரேமில் சத்தமாகச் சிரித்து விட்டேன். சூப்பர் டூப்பர் படங்களை மட்டுமே பார்ப்பவர்களுக்கான படமல்ல. மற்றவர்கள் பார்க்கலாம்.

Share

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி

அந்திமழை இளங்கோவன் அஞ்சலி

2001கள் வாக்கில் மரத்தடி யாஹூ குழுமத்தில் கைக்கு வந்தவற்றை எழுதுவது வழக்கம். அப்போது அந்திமழை.காம் என்றொரு ஆன்லைன் இதழ் இருப்பதே எனக்குத் தெரியாது. என் கவிதை ஒன்றை அந்திமழை என்னும் வலைத்தளம் வெளியிட்டிருப்பதாக நண்பர் ஒரு சொல்லவும், என்னடா இது ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் வெளியிட்டிருக்கிறார்களே என்று நினைத்து, அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கவிதை வெளியிட்டதை என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நான் எழுதிய கடிதத்துக்கு பதில் வந்தபோதுதான் இளங்கோவன் என்று ஒருவர் இருப்பதே எனக்குத் தெரியும்.

அந்த வலைத்தளத்தின் பெயர் அந்திமழைதானா என்பது கூட இப்போது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் இளங்கோவனின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது.

பத்துப் பதினைந்து நாள்கள் கழித்து, துபாய்க்கு ஒரு மடல் போஸ்டலில் வந்தது. பார்த்தால், என் கவிதையை வெளியிட்டு, அதை அச்செடுத்து தபாலில் அனுப்பி இருந்தார்கள். ஆன்லைன் தளமே ஆன்லைனில் வாசிக்கத்தானே, ஏன் அச்செல்லாம் என்று இளங்கோவனுக்கு பதில் அனுப்பினேன். எப்போது வேண்டுமானாலும் என் படைப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொன்ன நினைவு.

அதன் பிறகு பல முறை இளங்கோவனுடன் தொடர்பு நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே தற்செயலாக அமைந்தவைதான். புத்தகக் கண்காட்சிகளில் பார்ப்பது. ஏதேனும் புத்தக வெளியீட்டில் பார்ப்பது. குறிப்பாக, கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட, சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டுக்கு அவர் வந்திருந்தார். சாருவுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொந்தரவு செய்யாமல் விலகிச் சென்றபோது, என்னை அழைத்துப் பேசினார். இருவரும் சேர்ந்து டீ குடித்தபடி பேசினோம்.

அந்திமழையில் இருந்து அடிக்கடி படைப்புகள் கேட்பார்கள். எழுதிக் கொடுப்பேன். நண்பர் அசோகன் பெரும்பாலும் அதை அப்படியே பிரசுரிப்பார். ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் இதழில் ஏன் எழுதுகிறீர்கள் என்று சில ஹிந்துத்துவ நண்பர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள். என் கருத்தை அவர்கள் திருத்துவதே இல்லை, பின்னர் என்ன பிரச்சினை என்பதே என் பதிலாக இருந்தது.

படைப்புக்கான சன்மானத்தை மிகச் சரியாக அனுப்பும் இதழ் அந்திமழை.

ஜெயமோகன் அந்திமழை இதழை முன்னெப்போதோ தீவிரமாகத் திட்டி எழுதியபோது, நான் அந்திமழை போன்ற இடைநிலை இதழ்களின் அவசியத்தைப் பற்றி எழுதினேன். அதற்கும் இளங்கோவன் நன்றி செலுத்தினார்.

அந்திமழை போன்ற ஓர் இதழ், அதுவும் வண்ண நிறத்தில், நல்ல தரத்தில் எப்படி இத்தனை வருடங்கள் தொடர்ந்து வந்தது என்பதே பெரிய புதிர். ஒவ்வொரு இதழும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சுற்றிப் பின்னப்பட்டதாக இருக்கும். ஒரு வேள்வி போல் இந்த இதழ்ப் பணியைச் செய்தாலன்றி, இதனால் கிடைக்கப் போவது எதுவுமில்லை. மாறாக கெட்ட பெயரும் வந்து சேரும். இத்தனை வருடங்கள் அந்திமழை அதுவும் அழகிய வடிவமைப்பில் நல்ல தரத்தில் கொண்டு வந்ததை ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். இளங்கோவன் போன்ற ரசிகர் ஒருவரின் பிடிவாதமும் ஆர்வமும் இல்லாவிட்டால் இது சாத்தியமே இல்லை.

இத்தனை சீக்கிரம் நம்மைவிட்டு மறைவார் என்று கனவிலும் நினைக்கவில்லை.

சென்று வாருங்கள் இளங்கோவன். உங்கள் தொடர் பணியை இந்தத் தமிழ் உலகம் மறக்காது. கண்ணீர் அஞ்சலி.

Share

கல்கி 2898 AD

கல்கி 2898 AD – மகத்தான படைப்பாக வர வாய்ப்பிருந்தும் அதை இழந்துவிட்ட ஒரு படம். கடைசி 1 மணி நேரம் படம் பிரம்மாண்டம். ஆனால் முதல் இரண்டே கால் மணி நேரம் பேசியே கொன்றுவிட்டார்கள். அதிலும் பிரபாஸ் அறிமுகக் காட்சியை இத்தனை நீளமாக எந்த அறிவார்ந்த இயக்குநரும் யோசித்திருக்க மாட்டார்.

கிட்டத்தட்ட இன்னொரு குருக்ஷேத்திரப் போரை யோசித்ததெல்லாம் நல்ல கற்பனைதான். அமிதாப் கலக்கல். பிரபாஸ் சொதப்பல். மற்ற யாருக்கும் பெரிய வேடமில்லை. முக்கிய ஹீரோவான கிராபிக்ஸ் அட்டகாசம். பல ஆங்கிலத் திரைப்படங்களில் நாம் பார்த்ததுதான் என்றாலும் இந்தியா இதைச் செய்யும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

முதல் பாகத்தை முடித்த இடம் புல்லரிப்பு. இரண்டாம் பாகத்தில் கர்ணன்தான் கதாநாயகன், நல்லவன் என்று எதையாவது சொல்லி நம்மைச் சாகடிக்காமல் இருக்கவேண்டும். குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்லுங்கள். மார்வெல் திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய குழந்தைகளுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.

Share

குருவாயூர் அம்பல நடையில்

குருவாயூர் அம்பல நடையில் (M) – இருபது வருடங்களுக்கு முன்பு வந்த நந்தனம் மலையாளிகளால் கொண்டாடப்பட்டது. பிரிதிவிராஜ், நவ்யா நாயரின் முதல் படம். அதைத் தேவையே இல்லாமல் நாஸ்டால்ஜியாவுக்காகத் தொட்டுக்கொண்டு ஒரு காமெடிப் படம். ஒரேடியாக வாய் விட்டுச் சிரிக்கும்படியாகவும் இல்லை. வெறுப்பாகவும் இல்லை. லாஜிக் மறந்துவிட்டுப் பார்த்தால் கொஞ்சம் பிடிக்கலாம். முன்கணிக்கக்கூடிய எளிய திரைக்கதை. ஆனாலும் கடைசி இருபது நிமிடங்கள் சுவாரஸ்யம்தான். யோகிபாபு அறை வாங்கும் காட்சி நல்ல சிரிப்பு.

தமிழ்நாட்டு வசூலுக்காக இதிலும் தமிழ்ப்பாட்டு உண்டு. அழகிய லைலா பாடல்‌ என்பதால் ஒன்றும் ஒட்டவில்லை.‌ ஏன் இளையராஜாவின் பாடல்கள் இதற்குத் தேவை என்று முன்பே மஞ்ஞும்மெல் பாய்ஸுக்குத் தெரிந்திருக்கிறது.

ஒருமுறை பார்க்கலாம். ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது.

Share

சூர்ப்பனகை – சிறுகதைத் தொகுப்பு

கெ.ஆர்.மீராவின் ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு படித்தேன். எனக்கான தொகுப்பல்ல. இத்தனை வெளிப்படையான பெண்ணியம் எனக்கு ஆகாது. ஒரு கதை நம்மோடு கொள்ளும் ஆத்மார்த்தமான உறவை முடிவு செய்வது அதனுள் இருக்கும் அந்தரங்கமான, ஆர்ப்பாட்டமில்லாத கதையின் போக்குதான். வெளிப்படையாக ஆடம்பரமாக அலட்டலாக அது கதையை மீறும்தோறும் அக்கதை பிரசாரக் கதையாகிறது. இந்த ‘சூர்ப்பனகை’ சிறுகதைத் தொகுப்பு முற்றிலுமாக ஆடம்பரமாக, பிரசாரமாக ஆகிவிடவில்லை. அந்தரங்கமாக அமைதியாகவும் இல்லை. இரண்டுக்கும் இடையே இருக்கிறது.

இத்தொகுப்பில் ‘லி’ என்னும் எழுத்து அச்சாகாமல் ‘-’ என்று அச்சாகி இருக்கிறது. ஒரு பதிப்பகம் பதிப்பிக்கும் புத்தகங்களில் இதுபோன்ற எதிர்பாராத பிழைகள் வந்துகொண்டே இருக்கும். ஒரு பதிப்பாளனாகப் பல சம்பவங்களை இதுபோன்று பார்த்திருக்கிறேன். எனவேதான் எழுத்துப் பிழைகளைப் பற்றி நான் என் விமர்சனங்களில் எழுதுவதே இல்லை. இதைச் சொல்வது வேறொரு காரணத்துக்காக.

எனது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘சாதேவி’ ஆரம் வெளியீடாக வெளிவந்தது. அதில் முதல் கதையில் மட்டும் பி என்ற எழுத்தைக் காணவில்லை. மற்ற கதைகளில் பிரச்சினை இல்லை. திஸ்கி எழுத்துருவில் பழைய எழுத்துரு ஒன்றை வேறொரு எழுத்துக்கு மாற்றும்போது நிகழ்ந்த விபரீதம் இது. முன்பெல்லாம் ‘ஆ’ என்ற எழுத்தில் பிரச்சினை வரும். 2000களில் தமிழ் எழுத வந்தவர்களுக்கு நினைவிருக்கும். ஆபாசமாகப் பேசினான் என்பது பாசமாகப் பேசினான் என்று வந்துவிடும். இதற்காக நான் என்ன செய்வேன் என்றால், ஆ என்ற எழுத்தை மட்டும் %% என்று ரீப்ளேஸ் செய்துவிட்டு, எழுத்துரு மாற்றிவிட்டு, பின்னர் %% என்பதையெல்லாம் ஆ என்று மாற்றுவேன்.

சாதேவி தொகுப்பில் பி என்ற எழுத்து இல்லை, அதற்குப் பதிலாக ப என்று இருப்பதாக ஆனந்த் அழைத்துச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை. இத்தனை ப்ரூஃப் பார்த்தும் பி இல்லையா? மை காட்! நான் ப்ரூஃப் பார்த்தது யூனிகோடில். பி சுழித்துக்கொண்டு போனது வேறொரு எழுத்துருவில்.

‘சூர்ப்பனகை’க்கும் இப்படித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும். அடுத்த பதிப்பில் சரிசெய்வார்கள்.

அனந்த் என்றதும் நினைவுகள் அவரைச் சுற்றுகின்றன. நான் கிழக்கில் இருந்தபோது மூன்றாவது எம்.டியாகச் சில காலம் வந்தவர் அனந்த். அமெரிக்கவாசி. சார் என்று அழைக்கவே கூடாது, அனந்த் என்றே அழைக்கவேண்டும் என்றார். அனைவரின் புருவங்களும் உயர்ந்தன. எல்லாவற்றிலும் ஓர் அமெரிக்க ஒழுங்கை எதிர்பார்த்தார். அதனாலேயே மறுநாளில் அனைவருக்கும் அவர் பிடிக்காமல் போனார்.

ஆனால் பழக பழகத்தான் தெரிந்தது அவர் மனசுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது என்று. இதனாலேயே கூட அவருக்குப் பிரச்சினைகள். அவரால் பிறருக்கும்.

நான் கிழக்கில் இருந்து விலகி சுவாசம் தொடங்கியபோது என்னை அழைத்து அத்தனை அன்பாகப் பேசினார். என்ன என்னவோ அறிவுரைகள் சொன்னார். வாட்ஸப்பில் நீள நீள கட்டுரைகளை அனுப்பினார். முதலீடு தொடர்பான லின்க்குகளை அனுப்பினார்.

ஒரு கட்டத்தில் மெல்ல மெல்ல அவருடனான தொடர்பு குறைந்துபோனது. ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அவர் உடல்நலம் சரியின்றி இறந்து போன செய்தியைக் கேட்டபோது உண்மையிலேயே வருந்தினேன். இதை எழுதும்போது கூட ஏதோ ஒரு சோகம் பரவத்தான் செய்கிறது. நல்ல மனிதர். தன்னை சரியாக வெளிப்படுத்திக்கொள்ளத் தெரியாத, சில பிடிவாதங்களில் தேங்கிவிட்ட மனிதர்களை எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி ஒருவர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

நேரமிருப்பவர்கள் சூர்ப்பனகை சிறுகதைத் தொகுப்பையும், நேரமே இல்லாவிட்டாலும் சாதேவி தொகுப்பையும் வாங்கவும்.

Share