TN Bjp’s worst decision

தமிழ்நாட்டு பாஜகவில் ஒரு விசித்திரமான நோய் உண்டு. தொடர்ந்து பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் ஆதரிப்பவர்களைப் பெரிய அளவில் கண்டு கொள்ளாது. அதுவே அதுவரை பாஜகவையும் ஆர்எஸ்எஸையும் திட்டிக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று பாஜகவை புகழ்ந்து பேச ஆரம்பித்தால் அவர்களை உடனே அரவணைத்துக் கொள்ளும். இது காலம் காலமாக இருக்கும் நோய்.

இந்திய அளவில் இன்னொரு நோய் உண்டு. பாஜகவின் நம்பிக்கை மிகுந்த தலைவராக இருக்கும்போது அவரைப் புறக்கணிப்பார்கள். அதுவே அவர் வெளியேறி தனிக் கட்சி கண்டு வெற்றி பெற்றால் மீண்டும் அவரைத் தலைவராகக் கூட்டிக் கொண்டு வருவார்கள். எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். கல்யாண் சிங் எடியூரப்பா போன்றவர்கள் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் மூன்றாவது ஒரு வியாதியும் உண்டு. மற்ற கட்சியில் தலைவராக இருந்தவர்களையே தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவராகவும் வர வைப்பார்கள். அவர்களும் தலைவராக இருந்து விட்டு மீண்டும் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவைத் திட்டுவார்கள். திருநாவுக்கரசு நினைவுக்கு வருகிறார்.

இது போன்ற பல வினோதங்களைத் தொடர்ந்து செய்வதால்தான் தமிழ்நாட்டு பாஜகவால் சட்டென ஓர் உயரத்திற்குச் செல்ல முடியாமல் இருக்கிறது. இப்போது நடந்து கொண்டிருப்பது இது எல்லாவற்றையும் தாண்டிய அதலபாதாளமான வீழ்ச்சி. மீட்புக்கு இடமில்லை. இதனால் அண்ணாமலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Share

Azhagaradi in Madurai and my father

அழகரடியும் அப்பாவும்

மதுரை அழகரடியின் நினைவுகள் மறக்க முடியாதவை. என்னதான் உள்ளும் புறமும் திருநெல்வேலிக்காரனாக இருந்தாலும் 87 முதல் 91 வரை அழகரடியில் வாழ்ந்த காலங்கள் எப்போதுமே பசுமையானவை. இப்படித்தான் நான் என பின்னால் அமையப்போகும் பலவற்றுக்கு அங்கே தான் விதை ஊன்றப்பட்டது என்பது என் மனப்பதிவு. குறிப்பாக இரண்டு பேர் இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர். கொஞ்சம் கமலஹாசனும் கூட. ஆனால் இன்று கமல்ஹாசன் முற்றிலுமாக என்னிடமிருந்து விலகி விட்டார். வெறுப்பு கூட தோன்றி விட்டது. ஆனால் இளையராஜாவும் சச்சினும் அன்று எந்த நிலையில் இருந்தார்களோ அதைவிட கூடுதலான உயரத்தில் இப்போதும் இருக்கிறார்கள்.

அழகரடியை நினைக்கும் போது பல விஷயங்கள் எப்போதும் மனதில் வந்து போகும். அவற்றில் ஒன்று அப்பாவின் நினைவு.

அப்பா, நான், அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா என்று ஒண்டிக் குடித்தன வீடு ஒன்றில் வாழ்ந்தோம். வரண்டா போன்ற ஒன்றில் தட்டி போட்டு மறைக்க அது தாத்தாவும் பாட்டி அறையானது. அம்மா அப்பா அக்கா எல்லாம் வீட்டுக்குள் படுத்துக்கொள்ள நான் வெளியே திண்ணையில் படுத்துக் கொள்வேன். வீட்டு வாடகை அதிகபட்சம் 50 ரூபாய் இருக்கலாம் என நினைவு. அப்பாவுக்கு சம்பளம் 300 ரூபாய் போல. தினம் பேட்டா ஒரு ரூபாய் டீ குடிக்க. அந்த ஒரு ரூபாயைப் பத்திரமாகச் சேர்த்து வைப்பார். தினச் செலவுக்கு தின வட்டிக்குப் பணம் வாங்கி ஓட்டிய காலம். அப்பா வேல்முருகன் லாரி சர்வீஸ் சென்ற ஒரு கம்பெனியில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.

அழகரடியில் இருந்து மெய்ஞானபுரத்தில் குடியிருந்த சித்தப்பா வீட்டுக்கு நடந்து போகும்போது அப்பாவின் ஆபிசைக் கடந்து போக வேண்டும். அப்போது ஆஃபிசுக்குச் சென்று அவரைப் பார்ப்பேன். பென்சிலின் பின்னால் ரப்பர் பேண்டைச் சுற்றி அதை ரப்பராகப் பயன்படுத்துவார். எப்போதும் அந்த பென்சிலைக் காதில் வைத்திருப்பார். பெரிய கணக்கு நோட்டைத் திறந்து ஏதேதோ பெரிய பெரிய நோட்டுகளில் கணக்குப் போட்டுக் கொண்டே இருப்பார். கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தார். அவரது ஆஃபிஸுக்கு நான் சென்றதும் ஒரு சேரில் அமரச் சொல்வார். டீ குடிக்கிறியா என்று கேட்பார். வேண்டாம் என்பேன். ஏனென்றால் அம்மா என்னிடம் முதலிலேயே தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பார். அப்படியும் ஒன்றிரண்டு முறை டீ வாங்கிக் கொடுத்திருக்கிறார். என்னவோ அப்பாவை மிகப் பெரிய கம்பெனியில் பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். மனதுக்குள் அத்தனை பெருமையாக இருக்கும். அப்படியே சித்தப்பா வீட்டிற்கு அந்தப் பெருமிதத்துடன் நடந்து செல்வேன்.

அப்பா தனக்காக எதையும் சேமிக்க வேண்டும் என்று நினைத்தவர் இல்லை. அத்தனை வருமானமும் இல்லை. பெரிய பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டவர் இல்லை. அதற்கான பெரிய கல்வித் தகுதிகளும் இல்லை. ஆனால் எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும் என்பதில் இறுதிவரை மாறாத உறுதியுடையவராக இருந்தார். அவரது இயல்பே அன்புதான். கள்ளம் கபடமற்றவர். எத்தனை வேகமாக கோபம் வருகிறதோ அத்தனை வேகமாக கோபத்தை இழக்க கூடியவர். பின்பு அதிலேயே குற்ற உணர்ச்சி கொண்டு, தான் கோபம் கொண்டவரிடம் ஏதாவது பேசி சமாதானம் செய்யும் வரை நிலை இல்லாமல் தவிப்பவர். அம்மா சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிராகப் பேச நினைத்தாலும் அதை ஆரம்பித்துப் பாதியிலேயே விட்டுவிட்டு அம்மா சொல்வதையே சரி என்று வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத் தயங்காதவர்.

எல்லோரையும் போல ஒரு குழந்தையாகவே பிறந்தார். குழந்தையாகவே வளர்த்தார். குழந்தையாகவே வாழ்ந்தார். அப்படியே மறைந்தார்.

அப்பாவும் அம்மாவும் இல்லாமல் இன்று நாங்கள் இல்லை. அழகரடி வீட்டில் பட்ட கஷ்டங்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. 15 நாளுக்கு ஒருமுறை கூட இட்லி தோசை சாப்பிட்டிருக்க மாட்டோம். ரேஷன் அரிசி சாப்பாடுதான். தினமும் காலை செய்த குழம்பு ரசம்தான் இரவு வரை. பொரியல் எப்போதாவது இருக்கும். குடும்பமாகச் சேர்ந்து திரைப்படத்திற்குப் போன கதை எல்லாம் கிடையவே கிடையாது. எனக்குத் தெரிந்து ஒரு முறை படித்துறை மடத்தில் சாப்பிட்டுவிட்டு நான் அண்ணா அக்கா அம்மா அப்பா என அனைவரும் பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்த மைக்கேல் மதன காமராஜனுக்குச் சென்றோம். அதற்கு முன்னும் பின்னும் இப்படி அத்தனை பேரும் சேர்ந்து பார்த்த வேறு படங்கள் நினைவுக்கு வரவில்லை.

அப்பா எங்களுக்காகவே வாழ்ந்தார். அப்பாவை நினைக்காத நாளில்லை. மறந்த நொடி இல்லை. எங்கிருந்தாலும் அப்பா எங்களை அணைத்து ஆசீர்வதிக்கட்டும்.

இன்று அப்பாவின் திதி.

Share

Third Language policy in Tamilnadu

மூன்றாம் மொழிக் கொள்கையில் திமுக செய்து வருவது உச்சகட்ட உணர்ச்சி நாடகமே அன்றி வேறில்லை.

தினம் தினம் இப்படி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் ஒரு வரிக் கருத்தைச் சொல்லிச் செய்யும் அரசியல் திமுகவினருக்கு எளிதாக இருக்கிறது. அனைத்தையும் ஆதாரத்துடன் மறுத்துப் பேசும் அண்ணாமலையின் அரசியலை எதிர்கொள்ள முடியாமல் இந்த ஒற்றை வரி உணர்ச்சித் தெறிப்பு அரசியலில் அவர்கள் தஞ்சம் கொள்கிறார்கள்.

பி எம் ஸ்ரீ திட்டத்தில் தரப்படும் பணம் உரிமைப் பணம் அல்ல. நீங்கள் அந்தத் திட்டத்தில் சேராதவரை அந்தப் பணத்தைக் கேட்க எந்த மாநிலத்துக்கும் எந்த ஓர் உரிமையும் இல்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர மாட்டோம் என்பது மாநிலத்தின் உரிமை. அதில் சேராவிட்டால் பணம் கிடையாது என்பது விதி.

பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அதிகபட்சம் 300 பள்ளிகள் வரலாம். இதை அனுமதித்து, மத்திய அரசுப் பங்குத் தொகையையும் பெற்றுக்கொண்டு, இங்கே ஹிந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளைக் கற்றுத் தரும் வேலையை ஓர் சாதுர்யமான மாநில அரசு செய்திருக்கும். ஆனாம் நம் மாநில அரசுக்கு அந்தச் சாதுர்யம் இல்லை. காரணம், அவர்களுக்குத் தேவை எப்போதுமே பிரசார அளவிலான அரசியல் மட்டுமே.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முடியாமல், கல்வித் தரத்தைக் கூட்ட முடியாமல், மற்ற பள்ளிகளின் தரத்தில் கை வைப்பதையே இவர்கள் வழக்கமாகக் கொண்டார்கள். சமச்சீர்க் கல்வித் திட்டம் வந்ததே அனைவருக்கும் ஒரே கல்வி என்பதற்காகத்தான். ஆனால் இன்று அமைச்சர்களின் மகன்(ள்)கள் மூன்று மொழி கற்கிறார்கள், ஆனால் ஏழை அரசுப் பள்ளி மாணவரால் அப்படிக் கற்க முடியவில்லை என்னும் ஆதாரமான கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டார்கள்.

தமிழுக்கு இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என்றால் அதிலும் மலைப்பே மிஞ்சும். தமிழை உணர்வு ரீதியாகத் தூண்டிவிடுவதைத் தவிர இவர்கள் எதுவுமே செய்ததில்லை. 2010 வரை, அதாவது திராவிடக் கட்சிகளின் ஆட்சி அமைந்து 43 வருடங்கள் வரை தமிழைப் படிக்காமல் ஒருவர் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு வரை படித்துவிடலாம் என்கிற நிலைமைதான் இருந்தது.

சரி, தமிழையாவது உருப்படியாக வளர்த்தார்களா என்றால் அதுவும் இல்லை. அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலரை அழைத்து அவர்களை தமிழில் எழுதச் சொல்லிப் பாருங்கள். உங்களுக்குப் பேரதிர்ச்சியே மிஞ்சும். கேட்டால் தமிழ் எங்கள் உணர்வுமொழி, அறிவல்ல என்று வாய்ச்சவடால் பேசுவார்கள். அறிவுள்ளவர்கள் இதைச் சொல்ல வெட்கப்படவேண்டும்.

தமிழை உணர்வுரீதியாக அணுகுபவர்கள், அந்த மொழிக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்றுதான் யோசிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழை எப்படி எடுத்துப் போவது என்று திட்டம் தீட்டுவார்கள். ஆனால் இவர்கள் அரசுப் பள்ளியின் தரத்தைக் கூட்டாமல், ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தாமல், அவர்களைத் தங்கள் வாக்கு அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி, ‘டீச்சர்ஸ் ஓட்டு எங்களுக்குத்தான்’ என்று வெற்றுப் பெருமை பேசி, இன்று தமிழை ஒழுங்காக எழுதத் தெரியாத, படிக்கத் தெரியாத பல கோடி பேர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கேட்டால் தமிழ் எங்கள் உணர்வாம். இதைச் சொல்ல நாணமற்றவர்களின் கூட்டத்துடன் என்ன பேசுவது!

The DMK’s stance on the third language policy is nothing more than an emotional ploy.

The DMK finds it easy to make simplistic statements daily. They can’t handle Annamalai’s evidence-backed politics, so they resort to emotionally charged, one-liner politics.

Subsidies from the PM Shri scheme aren’t a state’s entitlement. States don’t have the right to demand those funds unless they participate in the scheme. While it’s a state’s prerogative not to join the PMSREE scheme, a savvy state government would have signed the MOU, ensuring students could learn any Indian language besides Hindi. Unfortunately, our state government lacks such tact, opting instead for propaganda politics.

The Uniform Education Scheme aims for universal education. However, while ministers’ children learn three languages, poor government school students are deprived of such opportunities.

The DMK’s contributions to the Tamil language are negligible. Until 2010, 43 years after Dravidian parties emerged as ruling parties, students could complete their 12th grade in Tamil Nadu without studying Tamil.

Had they properly developed Tamil, it might be different. But ask a few Class XII students from government schools to write in Tamil, and you’ll be shocked by their inability. Dravidian parties consider Tamil an emotional language, not a scholarly one—a sentiment that should be met with embarrassment.

Those who approach Tamil with genuine emotion would think about its preservation and progress. They’d strategize on how to pass Tamil down to the next generation. Instead, by not enhancing the quality of government schools or teachers, focusing solely on vote politics, and boasting about ‘teacher votes,’ they’ve created millions who can’t read or write Tamil properly. And yet, they claim Tamil stirs their emotions—this is disgraceful.

Share

Two movies

நாராயணீன்டே மூணாண்மக்கள் (ம) – கண்றாவி திரைப்படம். மிக மிக மெல்ல நகர்கிறது. சரி, போய்த் தொலைகிறது என்றால் இன்செஸ்ட் என்று என்னத்தையோ எடுத்து வைத்திருக்கிறார்கள். மூன்று அண்ணன் தம்பிகள் பேசிக் கொள்ளும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன என்றாலும், ஒட்டுமொத்தக் கதை இந்த இன்சஸ்டை நோக்கி நகர்வதால் எரிச்சலும் குமட்டலும்தான் ஏற்படுகின்றன. என்னதான் அந்தப் பையன் பாதி முஸ்லிம் என்று வைத்துக் கொண்டாலும் கன்றாவியான அனுபவம். ரெட்ட திரைப்படத்திலாவது ஓர் பதட்டமும் தவறுக்கான தண்டனையும் பிராயச்சித்தமும் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தன. இந்தக் கருமத்தில் அதுவும் இல்லை. நல்ல வேளை, ரெட்ட அளவுக்குத் தீவிரமாகச் செல்லாமல் மேலோட்டமாக நிறுத்திக் கொண்டார்கள். எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்பதற்காக யாராவது உண்ணக் கூடாததை உண்பார்களா என்ன. திரைப்பட விழாவில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கானது.

குடும்பஸ்தன் – சொறித்தரமான காமெடியில் ஆரம்பித்து மெல்ல மெல்ல பிக்கப் ஆகி அந்த காமெடிக்குள்ளேயே நாம் அமிழ்ந்து நம்மை அறியாமலேயே பல இடங்களில் சிரிக்க ஆரம்பித்து விடும் வகையான ஒரு திரைப்படம். சில காமெடிகள் மிகவும் தட்டைதான் என்றாலும் மணிகண்டன் நடிப்பால் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இதையும் மீறி மணிகண்டன் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கில் கால் வைத்து மெல்ல எப்படியோ தப்பி வெளியே வந்து விடுகிறார்.

சோமசுந்தரத்தின் நடிப்பு அலட்டல் மிகுந்ததாக அமைந்துவிட்டது பெரிய துரதிர்ஷ்டம். இவர் வரும் காட்சிகள் அனைத்துமே அறுவை.

பல காட்சிகள் நன்றாக இருக்கும்போதே பல காட்சிகள் மோசமாக இருப்பது படத்தின் பிரச்சினை.

இதில் இன்னொரு விஷயம்.. ஹீரோயின் எஸ் சி பெண்ணை உயர்ஜாதி ஹீரோ வீட்டுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்கிறான். படத்தின் கதைக்கும் இதற்கும் பெரிய சம்பந்தம் இல்லை. ஆனால் பல இடங்களில் நச் நச் என வசனம் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த மாமியார், நீ ஆக்கிப்போட்டாலும் நான் சாப்பிட்டேன் என்று சொல்ல, அந்தப் பிரசவ வலியிலும் அந்தப் பெண் சோத்ததான ஆக்கி போட்டேன் என்று சொல்லும் வசனம். அதேபோல் ஆயிரம் வருடங்களாக பொறுத்தாச்சு, இனி பொறுக்க முடியாது என்று சொல்லும் வசனம். 2000 வருடம் என்று சொல்லவில்லை என்பது முக்கியமானது.

குடசநாடு கனகம் பற்றித் தனியே சொல்ல வேண்டும். ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கலக்கியவர் இந்தப் படத்தில் பிரமாதப்படுத்திவிட்டார்.

முன்பு கஸ்தூரி மான் படத்தை மலையாளத்தில் பார்த்துவிட்டு குலப்புள்ளி லீலா தமிழில் எப்படி நடித்திருக்கிறார் என்று தமிழில் பார்த்தபோது எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. இரண்டிலும் ஒரே மாதிரியான நடிப்பு. ஆனால் தமிழில் புதிய ஒரு அம்மாவை கண்டு கொண்டதாகப் பலர் பாராட்டினார்கள். அதற்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரிய பட வாய்ப்புகள் அமையவில்லை. மருது போன்ற ஒன்றிரண்டு படங்களில் வந்து போனார். இப்போது அப்படி ஒரு அம்மா கதாபாத்திரத்திற்கு பெரிய வறட்சி நிலவுகிறது. கனகம் அந்த இடத்தை நிச்சயம் நிரப்புவார்.

ஜோக் என்று என்ன சொன்னாலும் சிரிப்போம் என்பவர்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய படம் இது.

Share

Throat pain

உங்களுக்கு தொண்டை வலின்னு நியூஸ்ல பார்த்தேன்

நியூஸ்லயா? என்ன சார் சொல்றீங்க?

ரொம்பத்தான் ஓவர் பில்டப் சார் உங்களுக்கு. இதெல்லாமா நியூஸ்ல வரும்? ஃபேஸ்புக்ல பாத்தேன்.

ஓ, சொல்லுங்க சார்

போஸ்ட் பாத்ததும்தான் உங்க ஞாபகம் வந்துச்சி. ஒரு புக் பத்தி சொன்னேனே..

சொல்லுங்க சார்.

நான் எழுதி அனுப்பினா எத்தனை நாளாகும் உங்களுக்கு ப்ரிண்ட் பண்ண.

அனுப்புங்க சார், பாத்துட்டு சொல்றேன்.

சும்மா தோராயமா சொல்லுங்க சார்.

மே மாசம் கொண்டு வரலாம் சார். அனுப்பறீங்களா சார்?

எதை அனுப்பணும்?

புக்?

நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலையே! பெரிய சப்ஜெக்ட் சார். எழுதி முடிக்க ஒரு வருஷம் ஆகும். எழுதி அனுப்பினா எத்தனை நாள்ல வரும்னு தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்.

அந்த புக்கை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ண எவ்ளோ நாளாகும் சார்?

அனுப்புங்க சார், பாத்துட்டு சொல்றேன்.

தோராயமா எத்தனை நாள் ஆகும்? சரி விடுங்க, பாத்துக்கலாம். அப்புறம் சார், தொண்டை வலின்னு போட்டிருந்தீங்கல்ல..

ஆமா…

என்ன என்ன கை வைத்தியமெல்லாமோ சொல்வாங்க. எதையும் செய்யாதீங்க.

ம்

வாயையும் வயித்தையும் புண்ணாக்கிக்கிட்டா யாரு சார் பாப்பா?

ம்

நான் சொல்றதை கேளுங்க.

ம்

ரெண்டு ஓம இலை, ஒரு கிராம்பு எடுத்துக்கோங்க.

எடுத்துட்டேன் சார்

அதுக்குள்ளயா? எப்படி சார்?

நேத்து கமெண்ட்ல வந்த எல்லாத்தையும் வாங்கி ரெடியா முன்னாடி வெச்சிருக்கேன் சார். இருபத்து ரெண்டாயிரம் ரூபா ஆச்சு. எப்படி இதையெல்லாம் காலி பண்ண போறேன்னுதான் தெரியல.

ஏன் சார் எல்லாத்தையும் வாங்கினீங்க? எல்லாம் சுத்த ஹம்பக் சார். ரெண்டு ஓம இலை, ஒரு கிராம்பு, வெறும் வாய்ல போட்டு மென்னீங்கன்னா… ஒலகத்துல இருமலே வராது.

ஆமா சார், அமெரிக்கால இதுக்கு காப்பி ரைட் வாங்கப் போறானாம். கண்டுபிடிச்சது நாம, ஆனா காப்பிரைட் அமெரிக்காவுக்கும். அமெரிக்காவை ஆப்படிச்சாத்தான் சார் இந்தியா வல்லரசாகும்.

ம்.

அப்புறம் இன்னொரு விஷயம். தொண்டை வலி வெச்சிக்கிட்டு யாருகிட்டயும் ரொம்ப பேசாதீங்க சார்.

ஓகே சார்

சும்மா ஓகேன்னு சொல்லிட்டு, இப்ப என்கிட்ட பேசின மாதிரி பேசிக்கிட்டே இருக்காதீங்க சார். புக் ஒரு வருஷம் கழிச்சி வரப் போகுது, அதுக்கு எதுக்கு இப்பவே இத்தனை டிஸ்கஷன்? வெச்சிடறேன் சார்.

Share

Masters League 2025

மாஸ்டர்ஸ் லீக் 2025

முன்பு ‘ஒரு கல்லூரியின் கதை’ என்றொரு திரைப்படம் வந்தது. திராபையான திரைப்படம். ஆனால் நல்ல கரு. அப்போதுதான் கல்லூரி எல்லாம் முடிந்து வேலைக்குப் போய் திருமணம் என்று செட்டிலாகி இருந்த தருணம். கல்லூரியை ரொம்பவே மிஸ் பண்ண நேரம். மீண்டும் கல்லூரி வாழ்க்கைக்குள் போவது என்பதே போதை தரும் ஒரு நாஸ்டால்ஜியா. அந்தப் படத்தில் இதுதான் கதை.

சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எனக்கு அடிக்கடி தோன்றியதுண்டு, மீண்டும் சச்சின் விளையாடுவதைப் பார்க்கவேண்டும் என்று. என்னைப் போலப் பலரும் யோசித்திருக்கிறார்கள் போல. ஓய்வுபெற்றவர்களை எல்லாம் அழைத்து வந்து மாஸ்டர்ஸ் டிராஃபி!

சச்சின் மீண்டும் ஆடுவதைப் பார்த்ததே புல்லரிக்கும் தருணமாக இருந்தது. சச்சினுக்கு இப்போது 51 வயதாகிறது. மாஸ்டர்ஸ் டிராஃபியில் ஆடும் சிலருக்கு இதைவிட வயது குறைவுதான். 51 வயதுக்குப் பார்க்கையில் சச்சின் தன் உடலை நன்றாக ஃபிட்டாகவே வைத்திருக்கிறார்.

ஶ்ரீலங்காவிற்கு எதிரான முதல் மேட்ச்சில் இரண்டு ஃபோர் அடித்த அழகும் அவரது பழைய ஆட்டத்தை நினைவூட்டின. அவரது எப்போதுமான ஸ்டைல் ஷாட் ஒன்றில் அடுத்து ஆட்டமிழந்தபோது ஐயோ என்றிருந்தது. ஆனால் மற்ற விளையாட்டுக்காரர்களின் சிறப்பான ஆட்டத்தில் எப்படியோ இந்தியா வென்றுவிட்டது.

இரண்டு நாள் முன்னர் லாரா ஆடியதைப் பார்க்கும்போது பழைய சுகமான நினைவுகள் வந்து போயின.

இத்தனை சீக்கிரம் ஷேன் வார்ன் நம்மைவிட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்.

யுவராஜ் சிங் படு ஃபிட். மற்ற பல இந்திய வீரர்களை அவ்வப்போது எங்கோ பார்த்த நினைவு!

ஏனோ ஷேவாக், கங்கூலி, பிரெட் லீ, வாஸ், முரளிதரன் உள்ளிட்ட பலர் வரவில்லை. அடுத்த டிராஃபிக்கு வருவார்கள் என நினைக்கிறேன்.

மாஸ்டர்ஸ் டிராஃபியைப் பார்க்கும்போது கொஞ்சம் காமெடியாகவும் இருக்கிறது. பெரும்பாலான வீரர்களால் ஓடவே முடியவில்லை. அடியாள்களை அடிக்க துரத்தும் அடியாள்கள் சுகர் மாத்திரை போட்டுட்டு வந்துரட்டுமா பாஸ் என்று கேட்பது போல், பவுண்டரியை மெல்ல நடந்து விரட்டுகிறார்கள். போனால் போகட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். கஷ்டப்பட்டு பவுலிங் செய்கிறார்கள். பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்தால் ஓடிப் போய் கையைக் குலுக்கி அலப்பறை எல்லாம் செய்ய முடிவதில்லை. டிரைனில் போகும் நண்பனை வழியனுப்பவது போல தூரத்தில் நின்று கைகாட்டி பரஸ்பரம் பாராட்டிக் கொள்கிறார்கள். தம்ஸ் அப் காட்டி மூச்சு முட்டப் புன்னகைக்கிறார்கள். எப்படியோ பேட்டிங்கில் மட்டும் சமாளிக்கிறார்கள்.

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் சிறப்பாக ஆடினார். 21 பந்துகளில் 34 ரன்கள். ஆறு ஃபோர்கள். பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. 51 வயதில் அற்புதமான ஆட்டம். ஒரு சிக்ஸ். ஜென்ம சாபல்யம் போல இருந்தது.

கடந்த இரண்டு ஆட்டங்களில் இன்னும் சில இந்திய வீரர்கள் மற்ற அணிகளின் பவுலிங்கை அடி வெளுத்துவிட்டார்கள். ஶ்ரீலங்காவுக்கு எதிராக பின்னியும் யூசுஃப் பதானும் பிளந்தார்கள். ஶ்ரீலங்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு ஆட்டங்களிலும் குர்கீரத் சிங் அடி பின்னிவிட்டார்.

இந்த நாஸ்டால்ஜியாவைப் பார்க்கவே ஸ்டேடியத்தில் நல்ல கூட்டம். அத்தனை பேரும் பார்க்க சுகர் பேஷண்ட்டுகள் போலவே இருந்தாலும் பார்க்க சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

மாஸ்டர்ஸ் டிராஃபி என்று யோசித்தவனை எத்தனை பாராட்டினாலும் தகும்.

Share

Tears of Begums

பேகம்களின் கண்ணீர்

பென்னேசன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் முக்கியமான நூல். 1857ல் நடந்த சிப்பாய்ப் புரட்சிக்குப் பிறகு ஆங்கிலேய அரசு அன்றைய ஆட்சியாளர்களை எப்படிப் பந்தாடியது என்பதை விளக்கமாகப் பதிவு செய்யும் நூல். இப்புரட்சியை அடக்காதவர்கள் என்று நினைத்தோ அல்லது புரட்சிக்கு உதவி செய்தார்கள் என்று நினைத்தோ அல்லது ஜாஃபர் ஷா புரட்சியில் பங்கெடுத்தார் என்பதற்காகவோ அல்லது இவை எல்லாவற்றுக்குமாகவோ, அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பிரிட்டிஷ் அரசால் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். அன்று உயிருக்காகத் தப்பிப் பிழைத்தவர்களின் நினைவை, அன்றிலிருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு பேட்டி எடுத்துத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் க்வாஜா ஹஸன் நிஜாமி.

இந்தப் பேட்டி எடுக்கப்படும்போது பலர் பிரிட்டிஷ் அரசு தரும் உதவித் தொகையான ஐந்துக்கும் பத்துக்கும் ஏங்கித் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். தங்கள் அரசப் பாரம்பரியம் தங்கள் கண்முன்னே பறிக்கப்பட்டதை ரத்தமும் வலியுமாக இந்த நூலில் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.

தன் தந்தை தன் கண்ணெதிரே கொல்லப்பட்டதை, ரம்ஜானுக்கு வீட்டில் குந்துமணி கோதுமை கூட இல்லாததை, வேலைக்காரர்களை ஏவி ஏவி ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பதை, உயிருக்கும் உடைமைக்கும் அஞ்சி மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு ஓடியதை எல்லாம் இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.

உருதுவில் இருந்து பென்னேசன் நேரடியாக தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார். அனாவசியமான சொல்லாடல்களோ தேவையற்ற திருகல் மொழியோ இல்லை. இந்த நூலுக்குத் தேவையான நேரடி மொழி. மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் பென்னேசன்.

இந்த நூல் படிக்கும்போது இன்னொரு நினைவும் ஒருசேர எழுந்துவந்ததை மறைக்க முடியாது.

இந்த நூலில் பேசுபவர்கள் அனைவரும் தாங்கள் செங்கிஸ்கானின் வம்சம், பாபரின் பேரர்கள் என்று பழம்பெருமை பேசுவதைத் தொடர்ந்து பார்க்கலாம். பாபரும் செங்கிஸ்கானும் இன்று பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குச் செய்த அதே கொடூரத்தை அன்று மற்றவர்களுக்குச் செய்தவர்கள்தான். அப்படிச் செய்துதான் இவர்கள் இந்த நாட்டில் காலூன்றவே முடிந்தது. ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்று சொன்னவன் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. வன்மத்துடன் நான் இதைச் சொல்லவில்லை, நிதர்சனம் இது என்கிற வகையில் சொல்கிறேன்.

கன்ஃப்யூஸ்ட் தேஸி என்பதைப் போல, இந்த வம்சாவளியினருக்குத் தாங்கள் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது. பழம்பெருமைகளில் தோயும்போது தங்களை பாபரின் சந்ததி என்று நினைத்துக்கொள்கிறார்கள். அதே சமயம் இந்தியாவே இவர்களது யதார்த்தமான தாய்நாடு என்பதும் இவர்களுக்குப் புரிகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையேயும் ஊடாடுகிறார்கள். பாவம்தான்.

இதில் ஒரு கதை என்னை மிகவும் கவர்ந்தது. பாதுஷாவின் மகள் ஒருவர் மெக்கா செல்கிறார். இவர் அரச வம்சம் என்பதால் மெக்கா சுல்தான் இவருக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து தருகிறார். தங்குவதற்கு வீடும், கூடவே மாதச் செலவுக்குப் பணமும் தருகிறார். இந்தியாவில் அல்லல்பட்டு மாதப் பணத்துக்காக பிரிட்டிஷ் அரசிடம் கையேந்த வேண்டிய தேவை இனி இல்லை. கூடுதலாக மெக்காவில் சுல்தானின் தயவால் மரியாதையும் கிடைக்கிறது. ஆனாலும் சில வருடங்களில் இவர் இந்தியா வருகிறார். தன் நாடு இந்தியா என்று உணர்வதால் அவரால் மரியாதையோடு கூட பாக்தாத்தில் வாழ முடியவில்லை. கன்ஃப்யூஸ்ட் தேசிகளுக்கு மத்தியில், பாபரின் வழித் தோன்றல் என்றாலும் தன் நாடு இந்தியா என்று வந்த அந்த மனிதருக்கு, இந்தக் கதையில் வரும் அத்தனை இன்னல்களும் சமர்ப்பணம் ஆகட்டும்.

Share

Vanangaan

வணங்கான் – அரை மணி நேரம் பார்த்திருக்கிறேன். பெரிய இயக்குநர் ஒரு படத்தை சுமாராக எடுக்கலாம். ஆனால் இத்தனை கேவலமாக எடுக்கக் கூடாது. ‘அவன் இவன்’ திரைப்படத்தை விட மோசமான ஒரு திரைப்படத்தை இனி பாலாவால் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தைப் போட்டு உடைத்திருக்கிறார் பாலா. தனக்குத்தான் காமெடி வரவில்லையே, அப்புறம் எதற்கு அதைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் என்று தெரியவில்லை. எல்லாக் காட்சிகளும் ஏதோ அவரது பழைய திரைப்படத்தில் வந்த காட்சிகள் போலவே இருக்கின்றன. ஆங்காங்கே பிராமண பாஷை, ஆங்காங்கே கிறிஸ்துவக் கிண்டல், மீண்டும் கிறிஸ்துவப் புகழ்ச்சி, ஆங்காங்கே அரசியல் நையாண்டி, ஆங்காங்கே இந்து மதக் கிண்டல் என எல்லாவற்றையும் போகிற போக்கில் தொட்டுக்கொண்டு விட்டால் மக்கள் ரசிப்பார்கள் என்று யாரோ பாலாவை நம்ப வைத்துக் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகனும் மகளும் கடுப்பாகி, இது என்ன படம், ஒரு மண்ணும் புரியல, ஏன் இதைப் போட்டுக் கழுத்தறுக்க என்று கேட்டார்கள்.

இப்படித்தான் முன்பொரு சமயம் ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ என்ற கன்னடப் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் 20 நிமிடம் பார்த்ததில் ஒன்றுமே புரியவில்லை. பிடிக்கவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வசீகரம் இருக்கப் போய் அந்தத் திரைப்படத்தைச் சாப்பிடும் போதெல்லாம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அரை மணி நேரம் என்ற வாக்கில் 7 ஞாயிற்றுக்கிழமைகளில் பார்த்து முடித்தேன். முடிவில் உண்மையில் அந்தப் படத்தின் வெறியனாகிவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். ரக்ஷித் ஷெட்டி பிரமாதப்படுத்தி விட்டார். பின்பு அந்தப் படத்தை முழுமையாக மீண்டும் பார்த்தேன்.

அதேபோல் இந்தப் படத்தையும் இனி ஒவ்வொரு நாளும் சாப்பிடும்போது பார்க்கப் போகிறேன் என என் பையனிடம் சொன்னேன். மறு விநாடி அவன் சொன்னான், ‘இந்த வீட்ல உன்கூட சேர்ந்து சாப்பிடறது இன்னைக்குத்தான் கடைசி’.

வணங்கான் திரைப்படத்தில் ஒரு பாதிரியார் நெற்றி நிறையக் குங்குமம் பூசிக்கொண்டு வருகிறார். கன்னியாகுமரி பக்கம் இந்த எழவெடுத்த மரபு ஏதேனும் உண்டா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Update:

இன்று சாப்பிடும்போது வணங்கான் அடுத்த 30 நிமிடம் பார்த்தேன். முதல் 30 நிமிடமே பரவாயில்லையோ என்று நினைக்க வைக்கும் அடுத்த 30 நிமிடம்! கொடூரம். இயக்குநர் எடிட்டர் என அனைவரும் படத்தைப் பார்த்து மயங்கிய தருணம் ஒன்று இருக்கிறது. பிறவியிலேயே பேச முடியாத காது கேட்க முடியாத ஹீரோ கீழே விழுந்துவிட்ட குழந்தையை வேகமாக ஓடிச் சென்று தூக்கியபடி, அடிப்படலைல்ல ஒன்னும் ஆகலைல்லை என்று வாயசைப்பில் கேட்கும் அந்தக் காட்சி!

Share