Archive for திரை

45 Kannada Movie

45 என்றொரு கன்னடப் படம். ரீல்ஸில் ஒன்றிரண்டு காட்சிகளைப் பார்த்துவிட்டு சிவராஜ் குமாரின் ஃபிரஷான நடிப்பை முழுவதுமாகப் பார்ப்போம் என்று நினைத்து அந்தப் படத்தைப் பார்த்தேன். ரீல்ஸில் எத்தனை நேக்காக என்னை மாட்டி விட்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அந்த படத்திலேயே எது இரண்டு காட்சியோ அதை மட்டும் ரீல்ஸில் சுத்த விட்டிருக்கிறார்கள் என்பது படம் முடிந்த பின்னர்தான் எனக்கு உரைத்தது.

கருட புராணத்தை மையமாக வைத்து ஒரு திரைப்படம் என்ற போர்வையில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். இதில் இருக்கும் ஸ்பாய்லரை நான் சொல்ல விரும்பவில்லை. படத்தில் என்னவெல்லாமோ வருகிறது. என்ன பிரச்சினை என்றால் படம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே இதுதான் கதை என்று நான் தீர்மானித்தேன். ஆனால் படம் போக போக அந்தக் கதை இருக்காது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். கடைசியில் கிளைமாக்ளில் பார்த்தால் நான் நினைத்ததுதான் கதை. ஒரு ட்விஸ்ட்டுடன். 

கிளைமாக்ஸில் ஒரு திருப்பம் கொடுக்கிறார்கள் பாருங்கள், உலகத்திலேயே இப்படி ஒரு கற்பனையை எவனும் செய்ததில்லை.

ரத்த குளிகா பாதாள குளிகா என்று பல குளிகா காந்தாராவில் எட்டிப் பார்ப்பது போல சிவராஜ் குமார் ஒவ்வொரு பெயராக அழைக்க அத்தனை தெய்வங்களும் சிவராஜ்குமாராகவே வருகிறார்கள்‌ கிராஃபிக்ஸில் கலக்குகிறோம் என்று கண்கொண்டு பார்க்க முடியாதபடி என்னவெல்லாமோ செய்து வைத்திருக்கிறார்கள். 

உபேந்திராவை விறைப்பாக நடிக்க வைக்கிறேன் என்று நம்மைச் சாவடித்து விட்டார்கள். உபேந்திரா, ராஜ் பி செட்டி, சிவராஜ்குமார் என்று பல பெரிய கைகள் இருந்தும் படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால், கதையும் பாழாய்ப் போன திரைக்கதையும்தான் காரணம்.

 கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் இந்த அளவுக்கு இருக்கக் கூடாது.

Share

TTT review

தலைவர் தம்பி தலைமையில் – சுமாரான திரைப்படம்தான். ஆனாலும்…

படம் முழுக்க வெட்டு குத்து ரத்தம் போன்றவை இல்லை என்பதற்காகவும், கஞ்சா குடி எனப் படம் நெடுக வலிய திணிக்காமல் இருந்த காரணத்துக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். இன்னும் வேறு சில விஷயங்களுக்காகவும் பார்க்கலாம். இயக்குநர் மலையாளி என்பதாலோ (ஃபேலிமி) என்னவோ மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்ப்பது போன்ற ஓர் உணர்வு. ஃபேலிமி அளவு இல்லையென்றாலும், அழகான உணர்வுதான். நேரடி சிறிய பட்ஜெட் மலையாளத் திரைப்படங்கள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் வெறுக்காது.

மிக எளிய கதை. முதல் ஒரு மணி நேரம் கலகலப்பாகவே இருந்தது. பின்னர்தான் கொஞ்சம் இழுக்க ஆரம்பித்துவிட்டது. முடிவை வேறு மாதிரி யோசித்திருக்க வேண்டும். படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட், மலையாளத் திரைப்படங்களில் வருவது போலவே அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். சிறிய வேடத்தில் நடிப்பவர்கள் உட்பட. கொஞ்சம் சுமாராக நடித்தார் என்றால் அது ஜீவா மட்டுமே. தம்பி ராமையா, இளவரசு இருவரும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள்.

படத்தில் சில காட்சிகள் மனதில் பச்சக்கென்று ஒட்டிக்கொண்டன. குழிக்குள் காதலி காதல் காதலனைக் கட்டிக் கொள்ளும் காட்சி. தம்பி ராமையா தன் பொண்ணு வீட்லதான் இருக்கா என்று சொன்னபடியே வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொள்ளும் காட்சி. இந்தக் கதவை மூடிக்கொள்ளும் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், அதைச் சரியான இடத்தில் நிறுத்தியதுதான். தொடர்ந்து அழுவது போலக் காண்பிக்காமல் அப்படி நிறுத்தியது அழகாகவே இருந்தது.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள், மினி மலையாளத் திரைப்படத்தைத் தமிழில் பார்க்க விரும்புபவர்கள், நாகர்கோவில் வட்டார வழக்கை உருப்படியாகக் கேட்க நினைப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். மற்றவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்.

Share

Parasakthi – Tamil Movie

பராசக்தி – இயக்குநர் சுதா கொங்கரா தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்தினை நக்சலைட் போராட்டம் என்று புரிந்து கொண்டிருக்கிறார். தேடி தேடி மாணவர்களை காவல்துறை வேட்டையாடுவதும், போராட்டம் என்ற பெயரில் மாணவர்கள் செய்யும் வன்முறைகளும் படமுழுக்கக் கொட்டிக் கிடைக்கின்றன. மாணவர்களுக்கு நல்ல பெயர் வருவதற்காக, போராட்டக்காரர்கள் புகைவண்டியில் இருப்பவர்களை இறக்கிவிடுவது போலக் காண்பிப்பதும், பின்னர் தன் தம்பியை அடிக்க வருபவனைக் கொளுத்துவதும் என முன்னுக்குப் பின் முரணாகப் பல காட்சிகள். வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்டுப் பின்னர் இன்னொருத்தனை நடுத் தெருவில் கொளுத்துவானேன்?

உண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட (அப்படிச் சொல்லப்பட்ட) போராட்டம் இங்கே இந்த படத்தின் மூலம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. மாணவர்கள் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்தினார்கள் என்பதை நம்ப முடியாது. எப்போதுமே எங்கேயுமே தன்னிச்சையாகப் போராட்டம் இந்தியாவில் நடக்க வாய்ப்புகள் குறைவு. யாரோ ஒருவர் பின்னால் இருந்துதான் நிச்சயம் அதை வழி நடத்தி இருக்க வேண்டும். சுதா கொங்கராவுக்கு திமுக மேல் என்ன கோபமோ தெரியவில்லை, மிகத் தெளிவாக இந்தப் போராட்டத்திற்கும் திமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தில் திமுகவினர் ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போட்டதாகக் கூட அவர் காண்பிக்கவில்லை.

ஹிந்தித் திணிப்பால் தமிழர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் என்ன என்பதைப் பற்றிய விரிவான பிரச்சினைகளும் இந்தப் படத்தில் ஆவணப்படுத்தப்படவில்லை. ஒரே ஒரு நேர்காணலை மட்டும் காட்டிவிட்டு, திரைப்படத்துக்கு அது போதும் என்று முடிவு கட்டி விட்டார்கள்.

இயக்குநரின் இன்னொரு பிரச்சினை, இந்தியா முழுக்கத் தனக்கு நல்ல பெயர் வேண்டும் என்கிற எண்ணம். அதுதான் திரைப்படத்தின் திரைக்கதையே கந்தரகோலம் ஆக்கி விட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இது ஹிந்திக்கு எதிரான போட்டம்தான், ஹிந்தி பேசுபவர்களுக்கு எதிரானதல்ல என்று சொல்வது படு செயற்கைத்தனம். சினிமாவில், மேடையில் இப்படி வசனம் பேசலாம். ஆனால் ஒரு போராட்டம் இப்படிப் பார்த்து பார்த்து இலையில் உணவு பரிமாறுவதுபோல் நடக்காது. எந்த வன்முறைக்கும் எந்தப் பேதமும் கிடையாது.

காலம் காலமாகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த தெலுங்கர்களும் ஆந்திரத் தெலுங்கர்களும் ஒன்றல்ல (இது கன்னடர்களுக்கும் பொருந்தும்) என்கிற புரிதல் மிக முக்கியம். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பக்கத்து வீட்டுத் தெலுங்கர்கள் தங்கள் வீட்டில் பேசிக்கொள்ளும் மொழி தெலுங்காக இருந்தாலும், அவர்கள் வீட்டுக்குள் செய்து கொள்ளும் சடங்குகள் தெலுங்கர்களுடையதாக இருந்தாலும், அவர்கள் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இணையாகவே (கூடுதலாகவே தமிழ் உணர்வுடன் என்று கூடச் சொல்லலாம்) வாழ்கிறார்கள். இது சக தமிழர்களுக்கும் தெரியும். இந்தப் படம் அதைச் சரியாகக் காண்பிக்கவில்லை. நல்லவேளை, கடைசியில் அந்தப் பெண் ஒரு வசனம் பேசுவதாகவாவது வைத்தார்கள்.

தன் இந்திய இமேஜைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழர்களின் போராட்டத்தில் தெலுங்கர்கள், கன்னடர்கள், சௌராஷ்ட்ராவினர், மலையாளிகள், இது போதாது என்று பெங்காலி பேசுபவர்கள் என அனைவரும் உயிரைக் கொடுத்தார்கள் என்று காண்பித்ததெல்லாம் அதீதம். இது படத்தின் நோக்கத்தைச் சிதைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பிற மாநிலங்களில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்கு இணையாக (அத்தனை தீவிரமாக இல்லையென்றாலும்) தமிழ்/தமிழர் எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது அவர்கள் தமிழ்நாட்டுக்கு ரத்தம் சிந்தினார்கள் என்பதெல்லாம் காதில் பூச்சுற்றல். பேருந்தின் மீது ஏறி நின்று இங்கே ஹிந்திதான் வேண்டும் என்பதுதான் எங்கள் போராட்டம் என்று கதாநாயகன் சொல்வதெல்லாம் நகைச்சுவை வசனமின்றி வேறில்லை.

அதைவிட கொடுமை மாணவர்களின் போராட்டத்தை ஒரு காவல்துறை அதிகாரியின் ஈகோ கதையாக மாற்றியது. அதில் அவருக்கு அடையாளச் சிக்கல் வேறு. தான் தமிழனுக்குப் பிறந்தாலும் தன் உடம்பில் ஓடுவது ஹிந்தி ரத்தமே என்பதை நிரூபிக்கத்தான் இத்தனையும் அவர் செய்கிறார் என்பதெல்லாம், ஒட்டுமொத்தப் போராட்டத்தின் நியாயத்தைத் தவிடுபொடியாக்கிவிட்டது.

இது அப்பட்டமான பிரசாரப் படம் என்பதால், இந்தப் போராட்டத்தினால் உயிரிழந்த காவல்துறைக்காரர்களைப் பற்றி எதையுமே காண்பிக்கவில்லை. மொத்தம் பத்து காவல்துறை அதிகாரிகளாவது இறந்திருப்பார்கள் என்று வரலாறு சொல்கிறது. சமீபத்தில் கூட இந்தப் போராட்டத்தில் கொல்லப்பட்ட காவல்துறை வீரர் ஒருவரது மனைவியின் பேட்டியை நாம் பார்த்தது நினைவிருக்கலாம்.

இந்தப் போராட்டம் நடந்தபோது முதல்வராக இருந்த பக்தவத்சலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் கொடுமை. அதிலும் பொள்ளாச்சியில் அனைவரையும் கொன்று குவிக்கிறேன் என்று காவல்துறை அதிகாரி செல்லும்போது, அதை ஒரு கொடூரமான மகிழ்ச்சியுடன் அவர் ஏற்பது போலக் காட்டியிருப்பதெல்லாம் கேவலம். தமிழில் ஒரு நடிகர் இதை நடித்தால் பிரச்சினை வரும் என்று நினைத்தார்களோ என்னவோ, ஒரு கன்னட நடிகரை (பிரகாஷ் பெலவாடி – நல்ல நடிகர்) நடிக்க வைத்திருக்கிறார்கள். அவரும் ரவி மோகனும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மற்ற எல்லாமே வேஸ்ட்.

இந்திரா காந்தியாக நடிக்கும் அந்தப் பெண்ணின் பார்வை ஏன் அப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. டெல்லி சாலையில் நடக்கும் பைத்தியக்காரத்தனமான போராட்டத்தின் போது அவர் சாலையில் நின்று சிவகார்த்திகேயனை பார்த்த பார்வையைக் கண்டு, அடுத்த நொடியில் அவர் ஐ லவ் யூ சொல்லிடுவார் என்று நினைத்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.

இது தவிர, வரலாற்று ரீதியாக ஆயிரம் ஓட்டைகள். இந்திரா காந்தி கோவையில் நின்று கொண்டிருக்கும்போது எரிந்துகொண்டே புகைவண்டி வருவதெல்லாம் – ஏன் தமிழ் இயக்குநர்கள் இன்னும் இத்தனை பைத்தியங்களாக இருக்கிறார்கள் என்று நினைக்க வைத்த தருணம். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்ற தமிழ் வரலாற்றின் முக்கிய நிகழ்வைக் கூட இவர்களால் ஒரு ஹீரோயிஸப் படமாகத்தான் யோசிக்க முடிகிறது என்பது எத்தனை அவலம்! பெரிய மீனின் முள் போன்ற ஒன்றை வைத்துக்கொண்டு கதாநாயகி ரேடியோவில் பேசும் சீரியஸான காட்சிகளை எல்லாம் படமாக எடுக்கக் கூசி இருக்க வேண்டாமா? புறநானூற்றுப் படை என்று கப்சா விடும்போது அசிங்கப்பட்டிருக்க வேண்டாமா!

படத்தின் ஆக்கமும் மிக மோசம். தேவையேற்ற பல காட்சிகள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் செயற்கைத் தனம். காதல் காட்சிகள், அண்ணன் தம்பி பாசம் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத்தனம். பார்க்கச் சகிக்கவில்லை.

ஒட்டுமொத்தமாக இந்தப் படம் ஒரே ஒரு நன்மையை மட்டும் செய்திருக்கிறது. ஹிந்திக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை வைத்து மிக தீவிரமான ஒரு திரைப்படம் வருவதை இந்தப் படம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் சுதா கொங்கராவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இசையைப் பற்றித் தனியே சொல்ல வேண்டும். மகா மட்டம்.

Share

Sarvam Maaya

சர்வம் மாயா (M) – இப்படி அழகான க்யூட்டான ஒரு பேய் கிடைக்குமானால் நான்கைந்து பேய்களுடன் வாழலாம் என்பதைத் தாண்டி இந்தப் படத்தில் ஒரு சுக்கும் இல்லை. ஏன் இப்படிப் பைத்தியக்காரத்தனமான கதைகளை மலையாளிகள் காதலிக்கிறார்கள் என்பது புரியவில்லை. கதை திரைக்கதை லாஜிக் என எதுவுமே இல்லாமல் மொக்கையாக ஒரு திரைப்படம். அங்கங்கே லேசாகப் புன்னகை வரப் பார்க்கிறது என்பதைத் தாண்டி இந்தப் படத்தை முழுமையாக ஏன் பார்த்தோம் என்பதும் புரியவில்லை. கதாநாயகி அழகாக நடிக்கிறார். நிவின் பாலி தன் பங்கைச் சிறப்பாகச் செய்கிறார். ஆரம்பத்தில் இருந்தே மெதுவாக நகரும் திரைப்படம். போட்டுப் படுத்தி எடுத்து விட்டார்கள். மலையாள படங்களைத் தமிழ் டப்பிங்கில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அந்தப் பக்கம் போய் விடாதீர்கள்‌ எத்தனையோ அரத மொக்கையான மலையாளப் படங்களைப் பார்த்து வைரம் பாய்ந்த கட்டைகள் மட்டும் ஒரு முறை பார்க்கலாம்.

Share

Haq – Hindi Movie

Haq (H) – ஜீவனாம்சம் கோரி தன் உரிமைக்காகப் போராடி (ஹக் என்றால் உரிமை) இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஷா பானு வழக்கை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம்.

திரைப்படமாக அழகாக வந்திருக்கிறது. மிகப் பொறுமையாக ஆழமான வசனங்களுடன் நகரும் திரைப்படம். டோண்ட் மிஸ் வகையறா.

நம் இயக்குநர்கள் முஸ்லீம் தாஜா அரசியலுக்காக, நிஜத்தில் ஒரு பட்டியலினப் பையன் கதையை இஸ்லாமியப் பையனாக மாற்றி, நீதிமன்ற வாசலில் நமாஸ் செய்யும் அர்த்தமற்ற காட்சிகளை (சிறை) வைத்துக்கொண்டிருக்க, ஹிந்தியில் உண்மையான வரலாற்றைப் படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

படத்துக்கும் நிஜத்துக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? நிஜத்தில் ஷா பானு தனது 62 வயதில் வழக்கைத் தொடுக்கிறார். இந்தப் படத்தில் இளம் வயதிலேயே கதாநாயகி வழக்கைத் தொடுக்கிறார். ஷா பானுவின் அப்பா ஒரு கான்ஸ்டபிள். ஆனால் கதாநாயகியின் அப்பா ஒரு மௌல்வி. இப்படிச் சில மாற்றங்கள். இவை எதுவுமே தேவையற்ற மாற்றங்களும் கூட. உண்மையில் 62 வயதுப் பெண் ஜீவனாம்சத்துக்காகப் போராடுவது இன்னும் வலுவாகவே இருந்திருக்கும்.

கதாநாயகியின் அப்பாவை மௌல்வி என்று வைத்ததன் மூலம், தேவையற்ற எதிர்ப்புக் குரல்களை இயக்குநர் சமாளித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும். மௌல்வியின் மகள் என்பதால் தனக்கு குரான் மற்ற எவரையும் விட நன்றாகவே தெரியும் என்று அவர் பேசும் பல வசனங்கள் எதிர்ப்பாளர்களை வாயடைக்கும்ச் செய்துவிடும் வகையிலானவை. வசனங்கள் படு கூர்மை.

ஷா பானு தன் வீட்டிலிருந்து கணவனால் வெளியேற்றப்பட்ட பிறகு தனியாகவே வாழ்ந்தார். ஆனால் கதாநாயகி தன் கணவன் வீட்டில், அது தன் பெயரில் உள்ள வீடு என்பதால், வலுக்கட்டாயமாக அங்கே குடியேறி வாழ்கிறார். தேவையில்லாமல் கதையை வளைத்திருக்கிறார்கள் இங்கே.

கதாநாயகிக்காக வழக்காடும் வழக்கறிஞர் ஒருவரும் முஸ்லிம். படத்துக்காக வைத்திருப்பார்களோ என்று தேடிப் பார்த்தால், ஷா பானுவுக்காக வாதாடிய பல வக்கீல்கள் முஸ்லிம்களே.

செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல் தீர்ப்பில் ஜீவனாம்சத் தொகையாக ரூ 22 / மாதம் என்று சொல்லப்படும்போது — நமக்கு அது முன்பே வரலாற்று ரீதியாகத் தெரிந்திருந்தும் கூட — அதிர்ச்சியாகவே இருக்கிறது. கடைசியில் தன் போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு படம் நிறைவடைகிறது. ஆனால் வரலாறு நிறைவடையவில்லை.

இஸ்லாமிய தாஜா அரசியலுக்காக இந்தத் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் விதமாக ராஜிவ் அரசு, இந்தத் தொகையை இத்தா காலத்தில் அதாவது விவாகரத்து செய்யப்பட்ட பின்னான மூன்று மாதக் காத்திருப்புக் காலத்தில் மட்டும் கொடுத்தால் போதும் என்ற வகையில் சட்டம் இயற்றுகிறது. அதைச் சட்ட ரீதியாகச் சரியாக்க 2023 வரை (ஒரே சமயத்தில் தரப்படும் முத்தலாக் தொடர்பாக 2019 வரை) காத்திருக்க வேண்டியதாயிற்று. இவையெல்லாம் கடைசியில் திரையில் எழுத்துகளாகக் காட்டப்படுகின்றன.

செக்யூலர் முஸ்லிம்களும் முஸ்லிம் பெண்களும் இந்திய வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களும் தவறவிடக் கூடாத படம் — உண்மையிலிருந்து சில இடங்களில் படம் விலகிச் சென்றாலும் ஆதாரப் பிரச்சினையில் இருந்து துளி கூட விலகவில்லை என்பதற்காகவும், சென்சிடிவ் பிரச்சினையை எடுத்துக்கொண்டாலும் தேவையற்ற வகையில் யாரையும் சீண்டவில்லை என்பதற்காகவும்.

நவம்பர் 2025ல் வெளியான இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.


பின்குறிப்பு: வலதுசாரிகள் திரைப்படம் எடுக்க நினைப்பதில் தவறில்லை. நிச்சயம் அது தேவையான ஒன்று. ஆனால் தரம் இந்தப் படத்தைப் போல இருக்க வேண்டும். இந்தப் படத்துக்கான செலவு பெரிய அளவில் இருந்திருக்காது. ஆனால் தரம் அட்டகாசம். தரம் இல்லாமல் நாம் நம் கருத்துகளை எங்கேயும் கொண்டு செல்ல முடியாது.

Share

Kalamkaval review

களம்காவல் (M) – பார்க்கும்போது போரடிக்காமல் செல்கிறது என்பது பிளஸ். மம்மூட்டியின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. ஆனாலும் என்னவோ முழுமையாக அதை உள்வாங்க முடியாத அளவுக்கு ஒரு இடறல் படம் முழுக்க இருக்கிறது. திரைக்கதையாகப் பார்த்தால் மீண்டும் மீண்டும் ஒரே போன்ற காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மம்மூட்டியா இப்படி என்கிற பரபரப்பு, முதல் 10 நிமிடங்களில் குறையத் தொடங்கியதும் திரைக்கதை பக்கம் நம் கவனம் செல்லும் போது, என்னடா இது என்ற எரிச்சல் வரத்தான் செய்கிறது. ஒரு 50 வயது பெண்ணுக்கு 20 திருமணங்கள் நடந்த செய்தி நமக்குத் தெரியும். நம் ஊரில் ஆண்களுக்கான ‘இந்த’ poverty செய்தி நமக்குப் புதியதல்ல. ஆனால் ஒரு 50 வயது ஆணுக்கு இத்தனை பெண்கள் அதுவும் குழந்தை குட்டியுடன் உள்ள பெண்கள் ஏன் விழுந்தார்கள் என்பதற்கான காரணம் எதுவுமே வலுவாக இல்லை என்பது மிகப்பெரிய குறை. ஆனாலும் முதல் 10 நிமிடமும் கடைசி அரை மணி நேரமும் விறுவிறுப்பாகத்தான் இருக்கின்றன. மிகப்பெரிய ஆறுதல் கொலைக்கு ஒரு மோட்டிவ் காண்பிக்கிறேன் என்று எதையாவது காண்பிக்காமல் இது இப்படித்தான் என்று முதலிலேயே நமக்குச் சொல்லி விடுவது. நேரம் இருந்தால் ஒரு முறை பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் நடக்கும் திரைப்படம் என்பதால் பின்னணியில் தமிழ்ப் பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அந்தக் காலத்தில் வந்த நேரடித் தமிழ் பாடல்களைப் பயன்படுத்தாமல் இவர்களே தமிழ்ப்பாடல் போன்ற சிலவற்றை உருவாக்கிப் படம் முழுக்கப் பல இடங்களில் ஒலிக்க விட்டிருக்கிறார்கள். மலையாளிகளே எழுதும் தமிழ்ப் பாடல் எப்படி இருக்கும்? ஆம், இதிலும் நாராசமாகத்தான் இருக்கிறது.

Share

Sirai – Islamic appeasement movie

சிறை என்ற கொடுமையைப் பார்த்தேன். என்னடா அனைத்து ‘முற்போக்கு’களும் இப்படி டான்ஸ் ஆடுகிறார்களே என்று பார்த்தால், அது ஏன் என்பதற்கு இன்றுதான் பதில் கிடைத்தது. கிட்டத்தட்ட 3 மாதங்களுக்குப் பிறகு நான் பார்க்கும் ஒரு தமிழ்ப்படம், வாரே வாஹ், என்னை தமிழ் இயக்குநர்கள் ஏமாற்றுவதே இல்லை.

அதே இஸ்லாமிய தாஜா ஜல்லி. உண்மையில் இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் எந்த அச்சத்திலும் இல்லை. இருக்கவேண்டிய தேவையும் இல்லை. (பிராமணர்கள் பயந்து வாழ்கிறார்கள் என்பதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், உண்மையில் தமிழ்நாட்டில் ஒரு மதமாகவோ இனமாகவோ சாதியாகவோ அஞ்சி வாழவேண்டிய நிலையில் யாரும் எப்போதும் இருந்ததில்லை என்பதைச் சொல்வதற்காகத்தான். அவ்வப்போது எழும் பிரச்சினைகள் எல்லாம் எல்லாருக்குமே பொதுவானவை. ஒரு சாதி அல்லது மதம் மேல் இருக்கும் வெறுப்பு என்பது இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அவர்கள் அஞ்சி வாழ வேண்டிய அளவுக்கு இன்னும் போகவில்லை.) ஆனால் இந்தப் படம் இல்லாத ஒன்றை இருப்பது போல இட்டுக்கட்டிச் சொல்கிறது.

படம் முழுக்க புல்லரிப்புதான். ஒரே ஒரு இஸ்லாமியப் பையன், அன்பே உருவான பையன், அவன் விலகிப் போனாலும் காதலிக்கும் இந்துப் பெண். என்ன ஒரு டெம்ப்ளேட்! தெரியாமல் அவன் அந்தப் பெண்ணின் அப்பனைக் கொன்றுவிட, உண்மை தெரிந்து அவனையே உருகி உருகிக் காதலிக்கும் பெண்… இன்னொரு காட்சியை மறந்துவிட்டேனே… அந்த நீதிபதி மன்னிப்புக் கேட்கும் காட்சி… இதைச் சொல்வதா அல்லது நானும் முஸ்லிம்தான் என்று போலிஸ் சொல்வதைச் சொல்வதா… எத்தனை எத்தனை காட்சிகள். அதிலும் கோர்ட்டுக்கு முன்னால் அவன் நமாஸ் செய்யும் காட்சியில் நானே வாயடைத்துப் போய்விட்டேன். இயக்குநர் எங்கோ சென்றுவிடுவார் என்பது உறுதி.

ஈழத் தமிழர்களுக்காக முதலில் உயிர் இழந்தவர் என்று ஒரு இஸ்லாமியப் பெயரைச் சொல்லும் காட்சி உண்டு. அதற்குப் பிறகு அதே ஈழத்தில் அந்த இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து இந்தத் திரைப்படம் மூச்சே விடவில்லை.

இந்தப் படத்தின் ஹீரோவாக வரும் விக்ரம் பிரபுவின் கதாபத்திரம் அற்புதம். இத்தனை கிறுக்கான போலிஸை தமிழில் இதுவரை எந்தப் படமும் இத்தனை மெச்சூர்டாகக் காட்டியதில்லை. பைத்தியக்காரத்தனமான மெச்சூரிட்டியின் உச்சம் இந்தக் கதாபத்திரம்தான்.

தவறவே விடக் கூடாத படம். பார்த்துக் கண்ணீர்விட்டுத் தொலையுங்கள்.

Director has said this – https://www.facebook.com/share/p/1CBpXTPy7M

Share

Devaaaa

தேவாஆஆஆ

நேற்று ஒரு வேலையாக கேப் ஏறி அமர்ந்ததுமே என்னவோ கலவரமாக இருந்தது. காரணம்‌ உள்ளே ஒலித்தது தேவாவின் ஒரு பாடல். தேவா எனக்கு அத்தனை பிடித்தமான இசையமைப்பாளர் அல்ல. அவரது 20 – 30 பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றாலும் பல பாடல்கள் ஏனோ எரிச்சலைத்தான் வரவழைத்திருக்கின்றன. நேற்று கேப்-இல் ஒலிபரப்பானது தேவாவின் ஹிட் பாடல்கள் அல்ல. படம் வந்தபோது அவ்வப்போது அங்கங்கே கேட்டு தேவாவே மறந்து விட்ட பாடல்கள். தொடர்ந்து அதே போன்ற பாடல்கள் வரிசையாக வந்தன. இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், எம் எஸ் விஸ்வநாதன், கே வி மகாதேவன் தவிர யார் இசை அமைத்த பாடல்களாக இருந்தாலும் தொடர்ந்து ஐந்தாறு பாடல்கள் கேட்டாலே எனக்கு பிபி ஏறத் தொடங்கும். நேற்று நடந்தது வன்கொடுமை. என்னென்ன பாடல்கள் என்று கூட எனக்கு இப்போது சொல்ல வரவில்லை. ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் நான் கல்லூரிக்கு சைக்கிளில் போகும் போதோ அல்லது ஏதோ ஒரு டீக்கடையிலோ நிச்சயம் கட்டியிருக்கிறேன். டிரைவரிடம் பாடலை மாற்றச் சொல்லவும் எனக்கு ஒரு மாதிரி இருந்தது. சரி போய்த் தொலையட்டும் என்று அமைதியாக விட்டுவிட்டேன். கிட்டத்தட்ட 50 நிமிடப் பயணம். 11 பாடல்கள். காது புண்ணாகிப் போனது.

அவர் என்னை இறக்கி விடவும் அங்கே இருந்த ஒரு டீக்கடையின் முன்பாக இருந்த பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து, அந்த மிதமான மழைச்சாரலின் நடுவே, எனது மொபைலில் ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் ராம நாமம் ஒரு வேதமே பாடலைக் கேட்டேன். கிட்டத்தட்ட கண்ணீர் வந்துவிட்டது. அதிலும் அந்த யேசுதாஸின் குரலும் இளையராஜாவின் இசையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அது ஒர் அனுபவம். அடுத்ததாக அழைக்கிறான் மாதவன் கேட்டேன். டீக்கடை மறந்து, டீக்கடையின் முன்னால் நின்று 5 இளைஞர்களும் 5 யுவதிகளும் சிறிய கேக்கை வாங்கி என்னவோ பேசி அர்த்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த காட்சிகள் மறைந்து, எனக்குள்ளே ஒரு பிருந்தாவனம் தோன்றி மறைந்தது. மனம் கொஞ்சம் இலகுவானது.

ஒரு வேலையை முடித்துவிட்டு மீண்டும் கேப் பிடித்தேன் மீண்டும் தேவா. இப்படி ஒரு நிலைமை எனக்கு இதுவரை
வந்ததில்லை‌ இந்த முறை தேவாவின் ஹிட் பாடல்கள். அதனால் கொஞ்சம் தாங்கிக் கொள்ள முடிந்தது. மீண்டும் 50 நிமிடம். மீண்டும் பதினொரு பாடல்கள்.

நேற்று எனக்கும் தேவாவுக்கும் இப்படி ஒரு ஏழாம் பொருத்தம் அமைந்திருக்க வேண்டாம்.

Share