Archive for புத்தகப் பார்வை

சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம்

சாவர்க்கரின் My Transportation for life புத்தகம், எஸ்.ஜி. சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற பெயரில் கிழக்கு பதிப்பக வெளியீடாக விரைவில் வர இருக்கிறது. இப்புத்தகம் வெளியாகும்போது இந்நூலைப் பற்றிய விரிவான என் கருத்தைப் பதிகிறேன்.


இந்த நூல் சாவர்க்கரை மிக நெருக்கமாகப் புரிந்துகொள்ள உதவியது. உண்மையில் ஒவ்வொரு இந்தியனும் தவறவே விடக்கூடாத நூல் இது. இந்திய விடுதலைக்காகப் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த தலைவர்கள் பட்ட கஷ்டங்களையும் செய்த தியாகங்களையும் பற்றிய ஒரு பிம்பத்தை சாவர்க்கரின் மூலம் இந்நூலில் பெறலாம். சாவக்கரின் அப்பழுக்கற்ற தேச பக்தியையும் தொலைநோக்குப் பார்வையையும் இப்புத்தகத்தில் காணலாம். முஸ்லிம்களுக்கான தாஜா அரசியலுக்கு எதிராக ஹிந்துத்துவ அரசியலை சிறையிலேயே முன்னெடுக்கும் சாவர்க்கர், தொடர்ச்சியாக ஹிந்துக் கைதிகளுக்காகச் சிறையில் போராடுகிறார். இவை முழுக்க மிக விரிவாக இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம் என்றால் சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் சலுகைகள் ஹிந்து என்றால் மறுக்கப்படுவதை அடியோடு தீவிரமாக எதிர்க்கும் சாவர்க்கர், இந்த முஸ்லிம்களில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் பதான் முஸ்லிம்களுக்கு இடையேயான வேறுபாட்டையும் பதிவு செய்கிறார். தான் போராடுவது நியாயத்துக்காக மட்டுமே அன்றி, எந்த ஒரு மதத்துக்கு எதிராகவும் அல்ல என்று உறுதியாகப் பேசுகிறார். அநியாயம் மற்றும் அக்கிரமங்களுக்கு அடிபணிந்து ஹிந்துக்கள் வீணாகப் போய்விடக்கூடாது என்று சொல்லும் சாவர்க்கர், புரட்சியுடன் கூடிய போராட்டமே நமக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறார். சிறையில் அஹிம்சை எடுபடாமல், இவர் செய்யும் புரட்சிகளே நன்மையைக் கொண்டு வருகின்றன. காந்திஜியின் அஹிம்சை பற்றிய சாவர்க்கரின் கிண்டல்களையும் எதிர்ப்பையும் இந்நூலில் காணலாம்.


தீவிரமான தேசப்பற்று, எப்போதும் எதிலும் தன்னலத்தை முன்னிறுத்தாத தலைமைத்துவம், விடாமுயற்சி, தொடர் போராட்டம் என எல்லா வகைகளிலும் சாவர்க்கர் சந்தேகமே இன்றி வீர சாவர்க்கர்தான்.

இந்நூலை நிச்சயம் வாங்கிப் படியுங்கள்.

Share

பெருவலி நாவல்

கடந்த ஆண்டு ருசிர் குப்தாவின் Mistress of Throne புத்தகத்தைப் படித்தேன். பேஹம் சாஹிப் என்றறியப்பட்ட முகலாய இளவரசி ஷாஜஹானின் மகள் ஜஹானராவைப் பற்றிய நாவல். இந்த நாவல் மேம்போக்காக எழுதப்பட்டதல்ல. மூல ஆவணங்களைப் படித்துத் தரவுகளுடனும் தரவுகள் இல்லாத இடத்தில் புனைவைக் கொண்டு இணைத்து எழுதப்பட்ட ஒன்று. ஜஹானரா, மும்தாஜ், ஷாஜஹான், தாரா ஷுக்கோ, ஔரங்கசீப், ஜனானா பெண்கள் மற்றும் அந்தக் காலத்திய அரசியல் நடவடிக்கைகளை மிக விரிவாக விளக்கும் நாவல்.

இதே பின்னணியில் எழுதப்பட்ட நாவல் சுகுமாரனின் பெருவலி. காலச்சுவடு வெளியீடு. இதற்கு முன்பு ஜஹானரா குறித்து வெளியான புத்தகங்களின் பாதிப்பு எந்த வகையிலும் வந்துவிடக்கூடாது என்பதில் சிரத்தையெடுத்து உழைத்து எழுதி இருக்கிறார் சுகுமாரன். ருசிர் குப்தாவின் ஆங்கில நாவலில் இருந்து இந்நாவல் வேறுபடுவது, இந்நாவலின் அசர வைக்கும் தமிழ் நடையின் மூலமாக. ஒரு தீவிரமான இலக்கியப் புனைவை வாசிக்கும் இன்பத்தைக் கொண்டு வருகிறது சுகுமாரனின் பெருவலி.

யார் எழுதினாலும் ஷாஜஹானின் கடைசி காலக் கட்டம் குறித்த விவரணைகள் பெரும் பதற்றத்தைக் கொண்டு வந்துவிடும் போல. காமத்திலும் ரத்தத்திலும் தோய்ந்து கிடந்த ஒரு பேரசசன், தான் செய்தவற்றின் இன்னொரு உருவாக வந்து நிற்கும் தன் மகன் ஔரங்கசீப்பிடம் மண்டியிடுகிறான். அதே துரோகங்கள், அதே ரத்தம், அதே படுகொலைகள் மீள அரங்கேறுகின்றன. அதற்குள் தாஜ்மஹாலின் மூலம் உலகில் நிலையாப் புகழைப் பெற்று விடுகிறான் ஷாஜஹான்.

முகலாய இளவரசிகளுக்குத் திருமணம் கிடையாது என்பது விதி. ஒருவேளை அவர்களுக்குத் திருமணமானால் அவர்களது கணவன் மூலம், அரசர்களின் ஆண் வாரிசுக்குப் போட்டி உருவாகலாம் என்பதே எண்ணம். இதனால் ஜனானாவில் இருக்கும் இளவரசிகள் களவொழுக்கத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்குள்ளே அவர்களுக்குள் போட்டியும் பொறாமையும் தனி அரசைச் செலுத்துகின்றன. ஆளாளுக்குக் கையாளாக நபும்சகர்கள் இருக்கிறார்கள். தங்கள் இளவரசிகளின் கற்பைக் காக்கவே இந்த ஏற்பாடு. ஆனால் இரவுகளில் நிகழும் ரகசியச் சந்திப்புகளில் யாரும் யாருக்கும் எந்தவித உத்தரவாத்தையும் அளிக்கமுடிவதில்லை. ஜஹானராவும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஔரங்கசீப்பால் வீட்டுச் சிறையில் அடைக்கப்படும் ஷாஜஹானுக்குத் துணையாக, அவரது மிக அன்பான மகள் ஜஹானராவும் அங்கேயே தங்கிவிடுகிறாள். அப்போது அவள் பாரசீக மொழியில் எழுதி, யார் கண்ணுக்கும் படாமல் மறைத்துவைக்கப்பட்ட குறிப்புகள் 300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்செயலாகக் கண்டெடுக்கப்பட்டு, மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின்றன. The Life of Mogul Empress Jahanara Begum, the daugher of Shajahan by Andrea Butenshon என்ற இந்த நூல் 1938ல் வெளியாகிறது. இது இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை.)

இந்த நூலை மையமாக வைத்தும் பிற நூல்களைப் படித்தும் தனக்கென ஒரு புனைவை உருவாக்கி இருக்கிறார் சுகுமாரன். ஜஹானராவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய ஒரு பூடகமான மொழியை மிகக் கச்சிதமாக உருவாக்குகிறார். கனவிலும் அரை நினைவிலும் நடக்கும் நிகழ்வுகளுகாக அவை அட்டகாசமாகச் சித்தரிக்கப்படுகின்றன. இடைவெளிகளை நிரப்ப கனவுகளையும் அவற்றுக்கான சூஃபிக்களின் விளக்கங்களையும் பயன்படுத்துகிறார் ஜஹானரா. ருசிர்குப்தா மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் இதனை சர்ரியலிஸப் பாணியைப் பயன்படுத்திக் கடக்கிறார்.

ஷாஜஹானுக்கும் அவரது மகளான ஜஹானராவுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்த சிக்கல்களை மிகக் குறைவான வார்த்தைகளில் மட்டும் சொல்லிக் கடக்கிறது பெருவலி. ருசிர் குப்தாவின் நாவலும் இதே பகுதிகளை மிக இறுக்கமாகப் பேசுகிறது. மிகத் தெளிவாக இவற்றுக்கு நிரூபணம் இல்லை என்கிறார் ருசிர் குப்தா. ஆனால் சுகுமாரன் பூடமாகச் சொல்லும் ஜஹானாராவின் காதலை மிக வெளிப்படையாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஜஹானாராவுக்கும் அவர் சந்திக்கும் மருத்துவர் கேப்ரியல் (இது உண்மையான பெயரல்ல) என்பவருக்கும் இடையே உறவு இருந்ததாகச் சொல்கிறார் ருசிர் குப்தா. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை என்றும், ராஜபுத்திர அரசர் சத்ரசால்-க்கும் இடையேதான் உறவு இருந்திருக்கும் என்று எடுத்துக்கொண்டு செல்கிறார் சுகுமாரன். முதலில் ராக்கி அணியத்தக்க உறவு என்று ஜஹானாரா சொன்னாலும் பிற்பாடு சத்ரசால் மீதான தனது காதலைப் பதிவு செய்திருக்கிறாள் என்ற உண்மையிலிருந்து இதனை நோக்கிப் போகிறார் சுகுமாரன்.

ஔரங்கசீப்பின் இளமைப் பருவத்தையும் மற்ற விவரங்களையும் மிக விரிவாகப் பதிவு செய்கிறது ருசிர் குப்தாவின் நாவல். சுகுமாரனின் நாவல் இவற்றை மிகச் சுருக்கமாக, தேவையான அளவுக்கு மட்டுமே சொல்கிறது. தாரா ஷூக்கோவின் ஹிந்து மதத்தின் மீதான ஆதரவும், ஹிந்துக்கள் அவரைக் கொண்டாடுவதும் கூட மிகச் சில குறிப்புகளாக மட்டுமே பெருவலி நாவலில் வெளிப்படுகின்றன. நாவலின் முதல்பாகம் பானிபட் எனப்படும் நபும்சகனின் பார்வையில் விரிவதாலும், இரண்டாம் பாகம் ஜஹானராவின் பார்வையில் விரிவதாலும் இப்படிச் சொல்லவேண்டி வந்திருக்கலாம்.

சுகுமாரனின் நாவல் மிகச் செறிவானது. சுகுமாரனின் தமிழ் நடை நம்மை உள்ளிழுத்துக் கொள்வது. மிக நல்ல முக்கியமான நாவல். இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம் என்று நினைக்க வைக்கும் நாவல்.

ருசிர் குப்தாவின் நாவல் எளிமையான ஆங்கிலத்தில் மிக விரிவாக எழுதப்பட்ட ஒன்று. அதனைத் தமிழில் கொண்டு வரவேண்டியது அவசியம். ஆனால் எவ்வளவு விற்கும் என்பது தெரியாது. J

இந்த இரண்டு நாவல்களிலும் நாம் தவறவிடக்கூடாதது, பிற்சேர்க்கைப் பகுதியை. பெருவலி நாவலில் சுகுமாரனின் குறிப்பு உள்ளது. இது நாவல் குறித்த பல சந்தேகங்களை நீக்கும். மிஸ்ட்ரஸ் ஆஃப் த்ரோன் நாவலில் ருசிர் குப்தாவின் பேட்டி உள்ளது. மிக முக்கியமான பேட்டி.

சுகுமாரனின் தன் குறிப்பில், இந்நாவலை எழுதுவதற்குக் காரணம், வரலாற்றைப் பதிவு செய்வது மட்டுமல்ல, அதன் இக்காலத்து அரசியலைத் தொடர்புப்படுத்திப் பார்க்கத்தான் என்று சொல்கிறார். உண்மையில் மீண்டும் மீண்டும் இந்த அரசியல் நிகழ்வுகள் அதேபோன்ற அரசியல் நிகழ்வுகளாகவும் அல்லது வேறு வகையிலான நிகழ்வுகளாகவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. இன்னும் இதே கதைகளைக் கச்சிதமாகப் பயன்படுத்தி இன்றைய நிலையில் பொருத்தி மிகச் சிறப்பான திரைப்படங்களை எடுத்துவிடமுடியும். என்றைக்கும் செல்லுபடியாகும் கதைகளாகவே அவை இருக்கின்றன என்பது உண்மையானதுதான்.

பெருவலி நாவலைத் தவறவிட்டுவிடாதீர்கள். நிச்சயம் வாசியுங்கள்.

Share

செண்பகப் பெருமாளின் நேர்காணல் – யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவும்

செண்பகப் பெருமாள் எழுதிய ‘யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவம்’ புத்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சனத்தையும் பெற்றது. என்னளவில் இந்தப் புத்தகம் கிறித்துவம் தொடர்பான பல விஷயங்களை மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும்படியும் சொன்னது. கிறித்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு, செண்பகப் பெருமாள் என்ன குற்றச்சாட்டை வைக்க வருகிறார் என்பதை உணரமுடியும். இதுவே புத்தகத்தின் பலம். ஒரு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பது போல இப்புத்தகம் மெல்ல மெல்லப் படிப்படியாக பவுலின் கிறித்துவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. புறஜாதியாருக்குமான கிறிஸ்துவாக ஏசு எப்போது மாற்றப்பட்டார் என்பதை செண்பகப் பெருமாள் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

இப்புத்தகம் வந்தபோது யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் புத்தகத்துக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமானது.


மேலே உள்ள நேர்காணலில், இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைத் தொட்டுப் பேசுகிறார் செண்பகப் பெருமாள். இப்புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். பத்ரி சேஷாத்ரியின் கேள்விகளுக்கு எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் செண்பகப் பெருமாள் பதில் சொல்லும் விதம், இத்துறையில் அவருக்குள்ள ஞானத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

செண்பகப் பெருமாள் ஹிந்துத்துவ ஆதரவாளர். ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளர் தனது எதிர்த்தரப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பேட்டி ஒரு முன்மாதிரி. ஹிந்துத்துவத் தரப்பு மட்டுமல்ல, தன் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் யாருக்குமேதான்.

Share

எஸ். விஜய் குமாரின் சிலைத் திருடன்

சிலைத் திருடன் – எஸ். விஜய் குமார் – கிழக்கு பதிப்பகம், விலை ரூ 250

தி ஐடல் தீஃப் என்று ஆங்கிலத்தில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம், பி.ஆர். மகாதேவன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது. நான் வாசித்த புத்தகங்களில் எப்போதும் எனக்குப் பிடித்த ஒன்று ராஜிவ் காந்தி கொலை வழக்கு. காரணம், அதன் பரபரப்பு, அதே சமயம் சற்றும் குறையாத தரம் மற்றும் அதிலிருக்கும் நம்மை உறைய வைக்கும் உண்மை. அதற்கு இணையான புத்தகம் சிலைத் திருடன்.

நம் நாட்டில் நிகழும் பெரும்பாலான, அதிகாரிகள் மட்டத்திலான ஊழல்களுக்குப் பெரிய காரணம், லஞ்சமும் அலட்சியமும். ஒரு பெரிய அரசியல்வாதியின் படுகொலை முதல் சிலைத் திருட்டு வரை, அது நடந்து முடிந்தபின்பு நமக்குத் தோன்றுவது, இதை எளிதாகத் தவிர்த்திருக்கலாமோ என்பதுதான். சிலைத் திருட்டிலும் அப்படியே. இதைக்கூடவா பார்த்திருக்கமாட்டார்கள், இதைக்கூடவா யோசித்திருக்க மாட்டார்கள் என்று பக்கத்துக்குப் பக்கம் பார்த்துப் பதறிப் போகிறோம்.

நமது பிரச்சினை, எதைப் பற்றியும் நம்மிடம் ஒரு தகவல் திரட்டு இல்லாதது. நம் பாரம்பரியத்தைக் காப்பதிலிருந்து நம்மை நாமே தெரிந்துகொள்ள இதுபோன்ற தகவல் களஞ்சியம் அவசியம். ஆனால் இது குறித்த அக்கறை மக்களுக்கும் இல்லை, அரசுக்கும் இல்லை. மெல்ல மெல்ல இப்போதுதான் இது குறித்து யோசிக்கிறோம், செயல்படுகிறோம், முக்கியமாக இணையக் காலத்துக்குப் பிறகு.

எவ்விதத் தகவல்களையும் நாம் சேமிக்காதது சிலைத் திருட்டை மிக எளிதாக்கி இருக்கிறது. சோழர் காலச் சிலைகளை விதவிதமாகக் கடத்தி இருக்கிறார்கள். மூலச் சிலைக்குப் பதிலாக அதே போன்ற போலிச் சிலையைச் செய்து வைப்பது, போலிச் சிலை இல்லாமலேயே மூலச் சிலையைக் கடத்திவிடுவது, பல சாதா சிலைகளைச் செய்து அவற்றோடு பழங்காலச் சிலைகளைச் சேர்த்துக் கடத்துவது, சிலைகள் மட்டுமில்லாமல் பழங்கால புராதன சின்னங்கள் எதுவானாலும் கடத்துவது, நேரடியாக தனக்குத் தேவையான ஊருக்குக் கடத்தாமல் பல நாடுகளுக்குச் சுற்றி எடுத்துச் சென்று கடத்துவது… இப்படிப் பல வகைகளில் கடத்துகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், எந்தச் சிலைகள் கடத்தப்பட்டன என்று நமக்குத் தெரியவே சில மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகின்றன. சிலை கடத்தப்பட்ட விவரமே தெரியாமல் அக்கோவிலுக்கு பாதுகாப்புக் கதவு செய்து பூட்டுகிறார்கள் அதிகாரிகள். களவு போன சிலையை மீட்டெடுக்க அச்சிலை குறித்த தகவல்களும் ஆவணங்களும் நம்மிடம் இல்லை. பின் எப்படி சிலைத் திருட்டைத் தடுப்பது, சிலைகளை மீட்பது?

1972க்கு முன்னர் இச்சிலைகள் விற்கப்பட்டது போன்ற போலி ஆவணங்களை உருவாக்கிக் கடத்துகிறார்கள். காரணம் 1972ல் உருவாக்கப்படும் பன்னாட்டுச் சட்டம் சிலைகள் உள்ளிட்ட பாரம்பரியப் பொருட்களின் விற்பனையில் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. சுபாஷ் கபூர் மிக புத்திசாலித்தனமாகத் தனது எல்லாத் திறமைகளையும் இறக்கி சிலைகளைக் கடத்திக்கொண்டே இருக்கிறார். சலிப்பதே இல்லை. ஏனென்றால், இங்கே அவருக்கு உதவும் சிறு திருடர்களுக்கு சில லட்சங்களில் பணம் தந்துவிட்டு, பன்னாட்டு அரங்கில் பல கோடிகளில் பணம் பெறுகிறார்.

உண்மையில் இச்சிலைகளுக்கு இத்தனை கோடியெல்லாம் தருவார்களா என்றெல்லாம் முன்பு யோசித்திருக்கிறேன். இப்புத்தகத்தைப் படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. கோடிகளில் புரள்கிறது பணம். விஜய் மல்லையா போன்றவர்களை இச்சமூகம் கண்டுகொள்கிறது, ஆனால் அதற்கு இணையான இது போன்ற சிலைத் திருடர்களை நமக்குத் தெரிவதில்லை என்பதோடு அவர்களுக்கு மிகப் பெரிய கௌரவத்தையும் மரியாதையையும் தருகிறோம் என்னும் விஜய் குமாரின் ஆதங்கம் நியாயமானது.

சில கொடுமைகளில் அதீத கொடுமைகளையும் இப்புத்தகத்தில் படிக்கலாம். தன் மகளின் நினைவாகச் சுடுமண் சிற்பத்தை ஒரு அருங்காட்சியகத்துக்குத் தானமாகத் தருகிறார் சுபாஷ் கபூர்! இன்னொரு கொடுமை, சுபாஷ் கபூரும் அவரது தோழியும் பிரிந்த பின்பு, சிலைகள் யாருக்குச் சொந்தம் என்று நீதிமன்றத்தில் மோதிக்கொள்வது. இருவருக்குமே சிலைகள் சொந்தமல்ல, இந்தியாவுக்குச் சொந்தம்! கைது செய்யப்பட்ட பின்பும் சிலைகளை எப்படி எங்கே விற்கவேண்டும், மாற்றவேண்டும் என்ற குறிப்புகளை எல்லாம் சிறைக்குள் இருந்தே அனுப்புகிறார் சுபாஷ் கபூர்! நம் சட்டத்தின் கடுமையும் அதிகாரிகளின் புத்திசாலித்தனமும் இப்படி இருக்குமானால் நாம் என்றைக்கும் எதையும் தடுத்துவிடமுடியாது.

இண்டி என்று பெயர் சூட்டப்படும் அந்த அதிகாரி இந்தியர்களால் வணங்கத்தக்கவர். அத்தனை அருங்காட்சியகத்துடனும் இண்டியும், நம் விஜய்குமாரும் அவரது குழுவும் போராடும் அத்தியாயங்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்கவை. அதேபோல் நம் ஊர் காவல்துறை அதிகாரி செல்வராஜும் போற்றத் தக்கவர். சவுக்கு சங்கரின் ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகத்தைப் படித்தபோது திலகவதி ஐபிஎஸ் குறித்து ஏற்பட்ட ஏமாற்றம், இப்புத்தகத்தின் மூலம் கொஞ்சம் விலகியது என்றே சொல்லவேண்டும்.

சிலைத் திருட்டு வகையில் இது முதல் புத்தகம் என்ற வகையில் இப்புத்தகம் பல இருட்டு இடங்களில் வெளிச்சம் பாய்ச்சுகிறது. தன் வாழ்வையே அர்பணித்தால்தான் இப்படி ஒரு புத்தகம் சாத்தியம். அதுவும் இந்தியா போன்ற தனி மனித உயிருக்கு எவ்வித மரியாதையும் அற்ற ஒரு நாட்டில் இது போன்ற ‘உலகளாவிய’ விஷயத்தை எதிர்ப்பது பெரிய சவால். அதை எதிர்கொண்டு மிகத் தெளிவாக ஆவணப்படுத்தி இருக்கிறார் விஜய் குமார். அதைவிட முக்கியம் இவரது முயற்சியில் நம் தெய்வங்கள் தனக்கான இடங்களில் மீண்டும் ஆராதனை பெறத் துவங்கி இருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்யப்படும் பூஜையின் புண்ணியம் என்றைக்கும் விஜய் குமாரின் சந்ததிக்கும் கிடைக்கு என்பதில் ஐயமில்லை.

அரசியல்வாதிகளின் ஊழல்களைவிட அஞ்சத்தக்கது அதிகாரிகளின் ஊழல் என்பது என் பொதுவான எண்ணம். அவர்களது அலட்சியப் போக்கே நம்மை மிக நேரடியாக உடனே தாக்கும் வல்லமை கொண்டது. இப்புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. ஒரு அதிகாரி மூன்று முறை தன் அறையைவிட்டு வெளியே வருகிறார். ஒரு தடவை டீ குடிக்க, இரண்டு தடவை தம் அடிக்க. அவர் அறைக்குள் இருக்கும்போது அவரைச் சுற்றித்தான் சிலைகள் கடத்தப்படுகின்றன. அவரே மௌன சாட்சி மற்றும் உதவியாளர்!

தமிழ் மொழிபெயர்ப்பை மிகக் குறுகிய காலத்தில் அட்டகாசமாகச் செய்திருக்கிறார் பி.ஆர். மகாதேவன். எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர்களில் இவரும் ஒருவர். (இன்னொரு முக்கியமானவர் கிருஷ்ணன் சுப்பிரமணியன்.) மிகக் கடினமான நூல்களைக்கூட அழகாக மொழிபெயர்ப்பவர் பி.ஆர். மகாதேவன். இந்நூல் ஆங்கிலத்திலேயே மிக சரளமான நடையில் எழுதப்பட்ட ஒன்று. கூடுதலாக, விஷயத்தைப் பொருத்தவரையில் தமிழின் மண்வாசனை இயல்பாகவே இருந்தது. இதனால் அதகளம் செய்துவிட்டார் மகாதேவன். மகாதேவனின் மொழிபெயர்ப்பில் ‘அழகிய மரம்’ அவரது வாழ்நாள் சாதனையாக மதிப்பிடப்படும் என்று ஏற்கெனவே நான் எழுதி இருக்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பி.ஆர். மகாதேவன் நிச்சயம் நினைவுகூரப்படுவார். இந்த நூலில் மிகச் சில திருத்தங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த பதிப்பில் அவர் சரி செய்வார் என்று நம்புகிறேன்.

எஸ். விஜய் குமாருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். பி.ஆர். மகாதேவனுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டியிருக்கிறது. நன்றியும் வாழ்த்தும்.

பின்குறிப்பு: நாத்திகம் வேறு, பாரம்பரியக் கலைச் சின்னங்கள் வேறு. இச்சிலைகள் என்றோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டபோது அதன் பின்னே இருந்தது பக்தியும் கலையும்தான். இன்று பக்தியைக் கைவிட்டிருப்பதுதான் நாம் நம் கலையையும் மறப்பதற்கான வழி என்றாகிவிட்டது என்றே கருதுகிறேன். இத்தனை பல்லாயிரம் ஆண்டுகளாக இச்சிலைகள் காப்பாற்றப்பட்டது பக்தியை முன்னிட்டே ஒழிய கலையைப் பாதுகாக்க வேண்டிய உந்துதலில் அல்ல. பக்தி அழிக்கப்படும்போது இந்த உந்துதல் நிச்சயம் குறையும். பக்தியையும் கலையையும் பிரிப்பதுகூட நமக்கு என்றைக்குமே பிரச்சினைதான். சிலர் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள். சிலர் நிஜமாகவே கலையை ஆராதிப்பதற்காகச் செய்கிறார்கள். ஆனால் இப்போக்கு நமக்கு ஆபத்தானதுதான்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939491.html

Share

ஹிந்துயிஸமும் ஹிந்து மதமும்

சசி தரூரின் ‘நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்’ என்ற புத்தகம் கிழக்கு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பு சத்யானந்தன். நேற்று சும்மா புரட்டலாம் என்று சில பக்கங்களை மேய்ந்தேன். எனக்கான குழி அங்கே காத்திருந்தது. ஓரிடத்தில் இந்துயிஸம் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. கிழக்கு மொழிபெயர்ப்புகள் ஓரளவுக்கு நேர்த்தியானவை. மொழிபெயர்ப்பில் இதுவரை இப்படி இந்துயிஸம் என்ற நேரடியான ஆங்கில வார்த்தை அப்படியே பயன்படுத்தப்பட்டுப் பார்த்ததில்லை. பார்த்தால் புத்தகம் முழுக்க இந்துயிஸம் என்ற வார்த்தையே உள்ளது. போதாக்குறைக்குச் சில இடங்களில் ஹிந்து மதம் என்ற வார்த்தைப் பயன்பாடும் உள்ளது. சசி தரூரே இப்படித்தான் பயன்படுத்தவேண்டும் என்று எதாவது குறிப்பை ஆங்கிலப் புத்தகத்தில் கொடுத்திருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆங்கில மூலத்தைப் படித்தவர்கள் சொல்லவும்.

ஹிந்துயிஸத்துக்கும் இந்து மதத்துக்கும் என்ன வேறுபாடு? ஏன் இந்துயிஸம் என்று பயன்படுத்தி இருக்கிறார்கள்? சத்தியமாகப் புரியவில்லை. கிறிஸ்டியானிஸம், இஸ்லாமிஸம் என்பதையெல்லாம் என்ன செய்திருப்பார்கள்? ஏற்கெனவே ஹிந்து மதம் வேறு, ஹிந்துத்துவம் வேறு ஒரு வாய்க்கா தகராறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஹிந்துத்துவர்கள் என்றறியப்படும் ஹிந்துக்களே கச்சை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது சிறப்பு! ஹிந்து மதத்துக்கு ஹிந்துத்துவம் தேவையில்லை, ஹிந்துத்துவத்துக்குத்தான் ஹிந்து மதம் தேவையென்றெல்லாம் என்ன என்னவோ தத்து பித்தென்று எழுதுகிறார்கள். ஹிந்துத்துவத்தில் இருந்து ஒட்டுமொத்தமாக ஹிந்து மதத்தை நீக்க முடியும் ஒரு நாளில் (ஒருநாளும் அப்படி நடக்கப் போவதில்லை என்பது வேறு விஷயம்) ஹிந்து மதத்தை சீக்கிரமே நசிக்கச் செய்துவிட முடியும் என்பது என் நம்பிக்கை.

இந்நிலையில் ஹிந்துயிஸ ஹிந்து மத வேறுபாட்டைப் புதியதாக நுழைத்திருக்கிறார்கள். இதில் என்ன இன்னொரு கொடுமை என்றால், இதுவரை வெளியான எத்தனையோ ஹிந்து மத எதிர்ப்புப் புத்தகங்களில்கூட இப்படி ஒன்றை நான் பார்த்ததில்லை.

ஹிந்துயிஸம், ஹிந்துமதம், சனாதன தர்மம் எல்லாம் ஒன்றுதான்.
சனாதன தர்மம் என்பதை ஒரு ஹிந்துப் பெருமை கொண்ட ஒருவர் சொல்வதற்கும் மற்றவர்கள் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. ஹிண்டு ரிலிஜன் என்று இருந்தால்தான் ஹிந்து மதம் என்று மொழிபெயர்ப்போம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஒரே ஆங்கில வார்த்தைக்குப் பல தமிழ் வார்த்தைகளும் ஒரே தமிழ் வார்த்தைக்குப் பல ஆங்கில வார்த்தைகளும் இருப்பதெல்லாம் மொழிபெயர்ப்பில் அரிச்சுவடி. அதைவிடுத்து ஹிந்துயிஸம் என்பதை அப்படியே எழுதுவதெல்லாம் தெய்வ லெவல்.

இதில் இன்னொரு காமெடியும் உள்ளது. ஒரு அறிஞர் (பெயர் நினைவில்லை) இந்து மதம் வேறு, ஹிந்து மதம் வேறு என்றாராம். சம்ஸ்கிருதத் தாக்கத்தைச் சொன்னாரா அல்லது ஆய்வு பூர்வமாகவே சொன்னாரா என்றறிய நான் முயலவில்லை. ஆய்வு பூர்வமாகத்தான் சொல்லி இருந்தார் என்று அறிய நேர்ந்தால் எனக்கு எதாவது ஆகிவிடும் வாய்ப்புள்ளதால் அமைதியாக இருந்து தப்பித்துக்கொண்டேன்.

பின்குறிப்பு: நான் ஹிந்து, இந்து என்று மாற்றி மாற்றி வேண்டுமென்றே பயன்படுத்துகிறேன், வேன். இரண்டும் எல்லா வகையிலும் ஒன்றே.

Share

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல்

மலைக்காடு – சீ முத்துசாமியின் நாவல், கிழக்கு பதிப்பகம், விலை ரூ 350

விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் வரை சீ.முத்துசாமி என்ற பெயரே எனக்குத் தெரியாது என்ற ஒப்புதலில் இருந்து தொடங்கிவிடுகிறேன். சீ.முத்துசாமியின் நாவல் ஒன்றைக் கிழக்கு வெளியிடும் என்ற முடிவுக்கு வந்தபோது மலைக்காடு படித்தேன். அது கிழக்கு மூலம் வெளியாகி இருக்கிறது. ஜெயமோகனின் மிக முக்கியமான முன்னுரையுடன்.

சீ.முத்துசாமியின் எழுத்து எதோ ஒரு வகையில் எனக்கு மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தை நினைவூட்டியது. ஒரு மண் சார்ந்த எழுத்து என்பதாக என் மனம் ஒப்பீடு செய்திருக்கலாம் என யூகிக்கிறேன். முத்துசாமியின் எழுத்தைப் படிக்கும்போது ஒருவித உவர்ப்புத் தன்மையை உணரமுடியும். வாக்கியங்களின் தெறிப்பு உருவாக்கும் ஒரு உலகம் அது. அதை மிகக் கச்சிதமாகக் கையாள்கிறார் சீ.முத்துசாமி.

தமிழ்நாட்டிலிருந்து கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்படும் மக்களின் வலி, அவர்களின் பரம்பரை பரம்பரையான பயணம், அங்கே நிகழும் புரட்சி, அதில் அவர்கள் எதிர்கொள்ளும் சோதனைகளே நாவல். சொர்க்க பூமி புக்கிட் செம்பிலான் என்று சொல்லி அழைத்துச் செல்லப்படும் மக்களுக்கு அங்கே காத்திருப்பது காடும் மலையும்.

ரப்பர் மரங்களின் நிரையில் தங்கும் மனிதர்களின் அவல வாழ்வைப் படிக்கும்போது அதன் வலியை வெறுமையை நமக்குள் கடத்துவதில் இந்நாவல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. மக்களுக்கு ஆதரவாகப் புரட்சி செய்யும் இளைஞன் காணாமல் போகிறான். மலைக்காட்டு முனியில் இருந்து ஆள்கொல்லிப் புலி வரை தேடல் நீள்கிறது. அந்த இளைஞனை காட்டுக்குள் அனுப்பி வைத்த யூனியன் தலைவரின் குற்ற உணர்ச்சியும், அவனை இழந்து தவிக்கும் தாய்மையின் கொந்தளிப்பும் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. சீன அதிகாரிக்கு பெண்ணை அனுப்ப கங்காணி கதறும் காட்சி மிக முக்கியமானது. இத்தனைக்கும் அந்தப் பெண்ணுக்கு இன்னொரு ஆணுடன் தொடர்பு உண்டு, ஆனாலும் அவள் வர மறுக்கிறாள் என்பதை கங்காணியால் ஏற்கவே முடிவதில்லை.

மலைக்காடு முனியைப் பற்றி சித்திரம் மிக அபாரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் எல்லாருக்குள்ளும் இந்த முனி குறித்த பயமும் கடவுள் என்கிற உருவமும் உள்ளது. எதோ ஒரு தருணத்தில் அது அவர்களுடன் உரையாடவும் துவங்குகிறது. மலைக்காடு நாவலின் ஒட்டுமொத்த உருவகமே மலைக்காட்டு முனிதான்.

மலேசியப் புரட்சியின் பின்னணியில் இந்நாவல் சில வரலாற்றுக் குறிப்புகளுடன் ஊடாடி நகர்கிறது. அதுவே உச்சகாட்சியில் நாவலின் முடிவாகவும் அமைகிறது.

காட்டுக்குள் சென்ற இளைஞனைத் தேடும் புள்ளியைச் சுற்றி, பல்வேறு வரலாற்றுத் திறப்புகளையும், அவனது காதலையும், அவன் வாயிலாக நிகழந்த ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் சொல்கிறது நாவல். நாவலின் மறக்கமுடியாத இரண்டு இடங்கள், குட்டியப்பனின் அம்மாவின் சித்திரமும், பெண்ணை அதிரிகாரியுடன் இரவு தங்க அழைக்கும் கங்காணியின் சித்திரமும்தான்.

நாவல் முழுக்க மீண்டும் மீண்டும் வருவது நாய்களின் மீதான சக மனிதர்களின் பாசம். இதை சீ.முத்துசாயின் பாசமாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். நாய்க்கு உணவு வைப்பதில் இந்நாவல் கொண்டிருக்கும் மோகம் அசாத்தியமானது. பெரிய அதிகாரியும் சரி, மிக ஏழ்மையான கூலித் தொழிலாளியும் சரி, நாயிடம் உருகுகிறார்கள். அவை தெருநாய்கள். தெரு நாய்களின் சித்திரம் உருவாகி வரும் விதம் அபாரமானது.

நமக்குப் பரிச்சயமற்ற உலகை, தன் விவரணையின் மூலம் கண்முன்னே கொண்டு வருகிறார் சீ.முத்துசாமி. மலேசியத் தமிழர்களின் வாழ்வில் புழங்கும் பல வட்டாரச் சொற்களை இந்நாவலில் தெரிந்துகொள்ள முடிந்தது.

கடைசி அத்தியாயங்களில் கொஞ்சம் பழைய பாணியிலான திரைப்பட சாகசக் காட்சிகள் வந்துவிட்டது போன்ற உணர்வைப் பெற்றேன். நாவலின் முடிவு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. இதற்கா இத்தனை போராட்டம்? இந்த ஆச்சரியத்துக்கு இரண்டு காரணங்கள், மலேசியத் தமிழர்களின் வரலாறு எனக்குத் தெரியாதது, இன்னொன்று, என் கொள்கை ரீதியிலான பார்வை. ஆனால் நாவலின் வரலாற்றுப் பின்னணியின்படி இந்த முடிவு மட்டுமே இருக்கமுடியும் என்பது புரிந்தது.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939392.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

கலாதீபம் லொட்ஜ் – வாசு முருகவேல்

வாசு முருகவேலின் கலாதீபம் லொட்ஜ், நாவல், கிழக்கு பதிப்பகம், ரூ 180

மிக நேரடியான நாவல். இவரது முதல் நாவல் ஜெஃப்னா பேக்கரி பரவலான வரவேற்பையும், ‘கஷ்டமான நாவலாச்சே’ என்ற விமர்சனத்தையும் ஒருங்கே பெற்றது என்பதால் இது நேரடியான நாவல் என்பதைத் தனியே குறிப்பிட வேண்டியிருக்கிறது. கலாதீபம் லொட்ஜ் (லாட்ஜ்) என்ற இடத்தில் தங்கி வெளிநாடு போக விசா எடுக்க வரும் ஈழத் தமிழர்களைச் சுற்றிச் செல்லும் நாவல் இது. இதை மையமாக வைத்து இங்கே வரும் மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்களைச் சொல்கிறார் வாசு முருகவேல்.

பொதுவாக இந்த உத்தியில் அமையும் நாவல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு ஒரு தொடர்பை வலிந்து உருவாக்க வேண்டி வரும். ஆனால் இச்சிக்கல்களுக்குள் எல்லாம் இந்நாவல் விழவில்லை. எவ்விதக் குழப்பமும் இன்றி எடுத்துக்கொண்ட விஷயத்தைச் சொல்வது என்ற ஒரு நோக்கத்தில் மட்டும் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக இது போன்ற நாவல்களில் வரும் அலுப்பு இதில் இல்லை. ஒருவேளை ஈழத் தமிழ் நாவல்களை அதிகம் வாசித்திருப்பவர்களுக்கு சிறிய சலிப்பு வரலாமோ என்னமோ எனக்குத் தெரியவில்லை.

இந்நாவலில் அங்கங்கே வெளிப்படும் மெல்லிய நகைச்சுவையும் அங்கதமும் மிக முக்கியமானவை. ஏனென்றால் அவை நிகழும் தருணங்கள் அப்படிப்பட்டவை. அதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பத்தியை இரண்டு முறை வாசிக்கும்போதும் சிரித்தேன். அதிலும் என்னைப் போன்ற இளையராஜா வெறியர்களுக்குப் பிடித்த ‘விமர்சனம்’ அது. ஆனால் அது உண்மையல்ல என்பது எழுதியவருக்கும் வாசிப்பவர்களுக்கும் தெரியும் என்றும் சொல்லி வைக்கிறேன்.

கொழும்பில் சிங்கள கூலித் தொழிலாளர்களுக்கும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தமிழர்களுக்கும் நிலவும் நட்புணர்வை இந்நாவல் சொல்வது மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. குறிப்பாக ‘குடு தர்மபால’ பாத்திரம். மறக்கமுடியாத ஒன்று.

ஒவ்வொரு நாவலுக்கும் ஏதோ ஒரு மையம் உச்சம் கொள்ளும். இந்நாவலில் அது நிகழ்ந்திருப்பது, கொழும்பன்ரியின் மகனுக்கும் தாரணிக்கும் முகிழும் அன்பு. முகிழும் என்ற வார்த்தையே இதற்குச் சரியானது என்று நினைக்கிறேன். அதேபோல் ஒரு வரியில் ஈரம் சொட்ட வைத்த இடம், தன் கையில் இருப்பது சாயம்தானே ஒழிய நீர் இறைத்து இறைத்து கை சிவந்துவிடவில்லை என்று தம்பிக்காக தாரணி சொல்லும் இடம்.

மிக ரசிக்கத்தக்க நாவல்.

இந்நாவலில் ரசிக்கத்தக்க ஒரு கவிதை வருகிறது, தமிழ்நதி எழுதியது. நீண்ட நாள்களாக மனதில் சுழன்றுகொண்டே இருந்த கவிதை அது.

அவன் எப்படியும் வந்து விடுவானென்று நம்பினேன்
குண்டு வீச்சு விமானங்களுக்கும்
எறிகணைகளுக்கும்
விசாரணைச் சாவடிகளின்
கண்களுக்கும் தப்பி.
அவனது ஒளிபொருந்திய புன்னகையை
எதிர்கொள்ள
இருண்ட தெருக்களைக் கடந்துவந்தேன்.
-தமிழ்நதி

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9788184939835.html

போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044-49595818

Share

1975 இரா முருகனின் நாவல்

இரா.முருகனின் 1975 நாவல். எமெர்ஜென்ஸி அறிவிக்கப்பட்டு விலக்கபடும் வரையிலான 21 மாதங்களில் ஒரு வங்கி அலுவலர் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை எமர்ஜென்ஸியின் பின்னணியில் சுவைபடச் சொல்லும் நாவல். சுவைபட என்றால் வெற்று வார்த்தை இல்லை, நிஜமாகவே சுவைபட. இரா முருகனின் எழுத்தில் இந்நாவலில் (சப்டில்) மென்நகைச்சுவை உச்சம் கொள்கிறது என்பேன். பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன். பாருக்குட்டியின் அத்தியாயமும் முத்துக்கிட்டுவின் அத்தியாயமும் உச்சம்.

வங்கி அதிகாரியாக லோன் தரவேண்டிய கட்டாயத்தில் அல்லாடும் சங்கரன் போத்தி எமர்ஜென்ஸியின்போது சென்னையிலும் டெல்லியிலும் பணி புரிகிறார். சென்னைக்கும் வட இந்தியாவுக்கும் எமர்ஜென்ஸி இரண்டு வேறு முகங்களைக் காட்டுகிறது. ரயில்கள் குறித்த நேரத்தில் வருவதையும் அரசு அலுவலகங்கள் கேள்வி கேட்காமல் சரியாகச் சொல்லி வைக்கப்பட்ட மாதிரி இயங்குவதையும் பாராட்டும் கூட்டம் ஒரு பக்கம். தன் உரிமைகளை சுதந்திரத்தை இழந்ததைப் பற்றிக்கூடப் பேச அஞ்சம் கூட்டம் இன்னொரு பக்கம். எமர்ஜென்ஸி எப்படி மக்களால் பார்க்கப்பட்டது என்பதை அழகாகப் பதிவு செய்கிறது நாவல்.

வலுக்கட்டாய லோன், வலுக்கட்டாய குடும்பக் கட்டுப்பாடு, இவை தரும் இன்னல்கள் எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதி இருக்கிறார் முருகன். அரசுக்கு எதிராக ஒற்றை வார்த்தையைக் கூடச் சொல்லத் தயங்கும் அரசு அதிகாரிகள். இந்திரா, சஞ்சயின் பெயரைச் சொல்லி அனைவரையும் மிரட்டும் கட்சி வர்க்கம். எந்தத் திட்டம் வந்தாலும் இந்திராவின் அல்லது சஞ்சயின் பெயர். லோன் வாங்க கடை தொடங்கினாலும் தொழில் தொடங்கினாலும் இந்திரா/சஞ்சய் பெயர். ஒருவர் எண்ணெய்க் கடை ஆரம்பிக்க, சஞ்சய் விளக்கெண்ணெய் என்று பெயர் வைக்க, கட்சி கவுன்சிலர் கொதித்துப் போய் அதற்கு இந்தியா விளக்கெண்ணெய் என்று வைக்கச் சொல்கிறார்!

இந்திராவின் இருதம்பசத் திட்டமும் சஞ்சயின் ஐந்தம்சத் திட்டமும் சங்கரன் போத்திக்கு மனப்பாடமே ஆகிவிடுகிறது. ஒவ்வொரு அதிகாரிக்கும் இப்படித்தான் இருந்திருக்கும். நரிக்குறவர்களுக்கெல்லாம் கூப்பிட்டு லோன் கொடுக்கிறார்கள். யார் சிக்கினாலும் குடும்பக்கட்டுப்பாடு. எமர்ஜென்ஸி முடிந்து இந்திரா தோற்க, சங்கரன் போத்தி சென்னைக்கு வந்து கல்யாணம் செய்துகொண்டு செட்டில் ஆக, நாவல் சுபம்.

அங்கேயும் இங்கேயுமாகத் தெறிப்பாக வரும் பல சம்பவங்கள் சுவாரஸ்யமளிக்கின்றன. நரேந்திரர் குஜராத்தி என்ற பெயர், கோபால் கோட்ஸேவின் பெயர், 25 அமசத் திட்டத்தின் பாடல்களைப் பாடமுடியாது என்று மறுக்கும் கிஷோர் குமார் (காரணம் சன்மானம் கிடைக்காது என்பதற்காகவாவ்ம்!), 20 அம்சத் திட்டத்தை விளக்கும் பாட்டு, இனிப்பில்லாமல் டீ சாப்பிட்டு வாக்கு கேட்கும் வாஜ்பாய், ரகசியமாக கம்யூனிஸ வகுப்பெடுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எனப் பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் பல விஷயங்கள் இந்தத் தலைமுறைக்குத் தெரிந்திருக்காது. நாவலில் இதைச் சொல்வது மிகப் பெரிய ஆவலைத் தரவல்லதுதான்.

எமர்ஜென்ஸியின் அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரமாக அலசும் புத்தகமல்ல இது. அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான புனைவு. இந்தத் தெளிவுடன் இந்த எல்லைக்குள் நின்று வாசித்தால், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடிக்கான மென்நகைச்சுவையும் விறுவிறுப்பும் உறுதி.

To order online: http://www.nhm.in/shop/9789386737625.html

To order thru phone: Dial for books 044-49595818

Share