Archive for புத்தகப் பார்வை

Mathippurai.com and Andhimazai book review contest

அந்திமழையின் அதிரடி விமர்சனப் போட்டி! (தலைப்பு இப்படித்தான் வைப்போம். க்யாரே செட்டிங்கா என்று கேட்பவர்கள் அன்புடன் ப்ளாக் செய்யப்படுவார்கள்.)

மதிப்புரை.காம் என்றொரு வலைத்தளம் நடத்திக்கொண்டிருந்தோம். நோக்கம், புத்தகங்களுக்கு நல்ல விமர்சனம் வரவைக்கவேண்டும் என்ற எண்ணம்தான். இன்றைய நிலையில் அதிகம் விற்கும் நாளிதழ்களில், பத்திரிகைகளில் ஒரு புத்தகத்துக்கு விமர்சனம் வருவது அத்தனை எளிதானதல்ல. அதேசமயம் அது அத்தனை கடினமானதுமல்ல. பத்திரிகைகளின் நோக்கம் சார்ந்து தேவை பொருத்து விமர்சனங்களுக்கான புத்தகம் தேர்ந்தெடுக்கப்படும். பல விடுபடல்களை மீறி ஒரு புத்தகத்தின் விமர்சனம் வெளியாகவேண்டும். இதில் பத்திரிகைகளின் இடப்பற்றாக்குறை, வருமானம் தரும் பகுதி எதுவோ அதன் தேவை என்பதையெல்லாம் பொருத்தே புத்தக விமர்சனங்கள் வெளியிடப்படும். இந்தப் பத்திரிகைகளில் வெளியாகும் விமர்சனங்களுக்கு ஓரளவு ரீச் இருக்கும். அதேசமயம் இந்த விமர்சனங்கள் எல்லாம் புத்தக அறிமுகங்கள் என்ற அளவிலானவை மட்டுமே.

காலச்சுவடு, ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் புத்தக விமர்சனங்கள் கொஞ்சம் தீவிரமானவை. புத்தகத்தை ஆராய்பவை. இவற்றை விமர்னங்கள் எனலாம். இப்பத்திரிகைகளுக்கு அல்லது பத்திரிகை ஆசிரியர்களுக்கு அல்லது விமர்சனத்தை எழுதும் ஐயோபாவம் எழுத்தாளருக்கு உரிய சாய்வுகளுடனேயே எந்தப் புத்தகத்தின் விமர்சனம் வரவேண்டும் என்பது உறுதி செய்யப்படும்.

இவற்றையெல்லாம் மீறிப் பார்த்தால், ஒரு புத்தகத்துக்கு நியாயம் செய்யும் விமர்சனங்கள் வருவதில்லை என்பதே உண்மை. இதில் எல்லாருக்கும் பங்குண்டு. எனவே குற்றங்களை நாம் நமது என்று பேசுவதே நியாயமானது.

மதிப்புரை.காம் என்ற தளம் தொடங்கப்பட்டது, ஆன்லைனில் எப்படி புத்தக விமர்சனங்களைக் கொண்டு செல்வது, அதன் மூலம் அக்குறிப்பிட்ட புத்தகத்தின் விற்பனையை அதிகப்படுத்துவது என்ற நோக்கில்தான். இதன்படி புத்தக வாசிப்பாளர்களுக்குப் புத்தகம் இலவசமாகத் தரப்படும். அவர்கள் அப்புத்தகத்துக்கு விரிவான விமர்சனம் ஒன்றை எழுதவேண்டும். புத்தகத்தை நிராகரித்தும்கூட எழுதலாம். விமர்சகர்களின் சுதந்திரத்தில் எவ்விதக் குறுக்கீடும் இருக்காது. இதுதான் திட்டம்.

இத்திட்டம் தோல்வி அடைந்தது. காரணங்கள் என்ன? புத்தகத்தை இலவசமாகப் பெற்றுக்கொண்ட விமர்சகர்கள் ஒன்றிரண்டு முறை ஆர்வத்தில் எழுதினார்கள். பின்னர் தொடர்ச்சியாக அவர்களால் எழுதமுடியவில்லை. இது முதல் காரணம். இதனால் தொடர்ச்சியாக எழுதும் ஒன்றிரண்டு நபர்களின் விமர்சனங்கள் மட்டுமே வெளிவரத் துவங்கின. இரண்டாவது பிரச்சினை – இப்படிப் புத்தகங்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிப்பகங்கள் பெரிய அளவில் முன்வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால் ஒரு பத்திரிகைக்குப் புத்தகங்கள் அனுப்பி எப்போது விமர்சனம் வரும் என்று தேவுடு காத்திருப்பது கிட்டத்தட்ட எல்லாப் பதிப்பகங்களுக்கும் பொதுவான அனுபவமே. அதனால் பதிப்பகங்கள் பெரிய அளவில் இதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால், மதிப்புரை.காம் போன்ற ஒரு தளத்தில் ஆன்லைனில் விமர்சனம் வருவதால் ஒரு பயனும் இல்லை என்பதை அவர்கள் கண்டுகொண்டார்கள். அதாவது புத்தகம் பற்றிய பேச்சு இருக்கும், ஆனால் அது விற்பனையாக மாறாது. இது உண்மைதான். எனவே பதிப்பகங்கள் புத்தகங்களை இலவசமாகத் தருவதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. மீண்டும் மீண்டும் பதிப்பாளரிடம் புத்தகத்தை இலவசமாகக் கேட்பது குறித்த ஒரு குற்ற உணர்வு உருவாகத் துவங்கிவிட்டது! மூன்றாவது, விமர்சகர்கள் வாங்கிய புத்தகத்துக்கு விமர்சனங்கள் அனுப்பவில்லை. தொடர்ச்சியாகக் கேட்டாலும் அவர்கள் உண்மையில் மனத்தளவில் விமர்சனம் எழுதவேண்டும் என்றும் நினைத்தாலும் அதைச் செய்து முடிக்கமுடியாத சூழல். இது எல்லோருக்கும் நேர்வது. ஆனால் இதனால் சில சுணக்கங்கள் நேர்ந்தன. பதிப்பாளர்களிடம் மீண்டும் புத்தகம் கேட்கமுடியாத சூழல் இதனாலும் உருவானது. நான்காவதாக, அனாமதேய புத்தகங்கள் என்னும் சொல்லும் அளவுக்கான புத்தகங்கள் விமர்சனத்துக்கு வந்தன. அவற்றைப் படிக்கவோ விமர்சனம் செய்யவோ யாரும் விரும்பவில்லை. ஆனால் அப்பதிப்பாளர்களிடம், எழுத்தாளர்களிடம் அப்புத்தகங்களை அனுப்பாதீர்கள் என்றும் சொல்லும் நிலை உருவானது. இதனால் சில சங்கடங்கள் நேர்ந்தன. ஐந்தாவதாக, நீண்ட புத்தக விமர்சனங்களைப் படிக்க அதிகம் யாரும் தயாராக இல்லை. ஆறாவதாக, இலவசமாகப் புத்தகத்தையும் கொடுத்து, அதை அனுப்பவும் கொரியர் செலவு செய்து – எங்களுக்குக் கட்டுப்படி ஆகவில்லை.

இந்த உண்மைகளின் முன்னே இயல்பாகவே மண்டியிட நேர்ந்தது. இப்படித்தான் நடக்கும் என்று தெரியும். ஆனாலும் மதிப்புரை.காமில் பல முக்கிய விமர்சனங்கள் வெளியாகின. இது தொடர்ந்திருந்தால் மிக முக்கியமான விமர்சனத் தளமாக அது தொடர்ந்திருக்கும். இப்போதும்கூட இப்படி ஒரு தளத்தை, பதிப்பாளர்களின் உதவியுடன் யாரேனும் முயன்று பார்க்கலாம்.

அந்திமழை.காம் புத்தக விமர்சனத்துக்கென்று ஒரு போட்டியை அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாள்களே உள்ளன. அதற்குள் விமர்சனங்களை அனுப்பவேண்டும். மதிப்புரை.காமில் பங்குகொண்ட நண்பர்கள், புத்தக ஆர்வலர்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதிகம் இதனை நண்பர்களுடன் பகிருங்கள்.

முதல் பரிசு – ரூ.10000
இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]
மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.

அந்திமழை விமர்சனப் போட்டி அறிவிப்பு இங்கே: http://andhimazhai.com/news/view/andhimazhai-zhakart-contest-2852018.html

Share

7 days break

ஒரு வாரம் ஃபேஸ்புக் பக்கம் வராமல் இருக்கமுடிகிறதா என்று பார்க்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன். அதற்குள் பலர் போன் செய்து… ஒருத்தர்கூடவா போன் செய்து என்னாச்சு எனக் கேட்கமாட்டீர்கள்? கொடுமை. 🙂 யாருமே கண்டுகொள்ளவில்லை என்பது உறுதியானதும் இனிமேல் வராமல் இருந்தால் சிக்கல் என்றறிந்து உள்ளே வந்தேன்.

வெளியேறிய முதல் நாள் கைவிரல்கள் தொடுதிரையில் ஃபேஸ்புக் ஐகானையே தேடின. ஆனால் நான் அதில் க்ளியர் டேட்டா செய்திருந்தேன். இரண்டு மூன்று முறை தேடிப் பின்னர் மூளை கண்டுகொண்டது. மொபைலில், 8இன்ச் பேடில் என எல்லாவற்றிலும் ஃபேஸ்புக்கை நீக்கி இருந்தேன். 8இன்ச் பேடில் மட்டும் ஃபேஸ்புக் மெசஞ்சரை நீக்க மறந்திருந்தேன். அதையும் நேற்று நீக்கினேன்.

நிம்மதியாக பல வாரப் பத்திரிகைகளைப் படிக்க முடிந்தது. கிண்டிலில் புத்தகம் வாசிக்க முடிந்தது. (Ivory thones புத்தகத்தை போகன் படிக்கச் சொன்னார். சில பக்கங்கள் வாசித்திருக்கிறேன். ஒரே நாயர் புராணம். நாயர் மத்வராக போகன் நாயராகிவிட்டாரா எனக் கேட்கவேண்டும் – சமநிலைக்காகத்தான்!) மன இறுக்கம் குறைந்தது போல இருந்தது. ஒரு கட்டத்தில் போரடிக்க ஆரம்பித்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாமா, மனைவியிடம் எதாவது வம்பு வளர்க்கலாமா என்றெல்லாம் தோன்றத் தொடங்கியது. ஃபேஸ்புக் நம்மை சிறைபடுத்துகிறது என்பதைப் போலவே நம்மை ஆசுவாசப்படுத்துகிறது என்பதும் உண்மைதானோ?

இந்த யோசனை தோன்றிய நிமிடத்தில் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் ஒரு வீடியோவை வாட்ஸப்பில் அனுப்பி இருந்தார். அதில் நாம் எத்தனை முறை நம் ஆண்ட்ராய்ட் போனை அன்லாக் செய்கிறோம் என்று இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட 100 முறையாவது இருக்கும். அஃபிஷியலாகவும் சேர்த்துத்தான். இதை ஜெயக்குமாரிடம் சொல்லி, இதைக் குறைக்கவே ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினேன் என்று சொன்னேன். அவர் நான் சொன்னதில் இம்ப்ரஸ் ஆகி அவரும் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறினார் என நினைக்கிறேன்.

ஆனால் நான் வந்துவிட்டேன். 🙂

இடைப்பட்ட இந்த மூன்று நாளில், காலச்சுவடு ஆன்லைன் சந்தா செலுத்தி, அகா பெருமாள் எழுதிய கோபுரம் ஏறிக் குதித்து சாதல் கட்டுரை வாசித்தேன். டோண்ட் மிஸ்.

துக்ளக் இதழில், மாறன் சகோதரர்கள் டெலிபோன் எக்ஸேஞ்ச் வழக்கில் தப்பித்தது குறித்த கட்டுரை – பிரமாதம். இதையும் நிச்சயம் வாசிக்கவும்.

குமுதம் இதழில் ரஜினியின் ஆன்மிகப் பயணம் குறித்த கட்டுரை – ரசிகர்கள் வாசிக்கவும். குறைந்தபட்சம் அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவாவது.

நியூஸ் லாண்டரி பாட்காஸ்ட்டில் (ஹாஃப்தா) பழைய எபிஸோட் ஒன்றைக் கேட்டேன். கமல் அரசியல் நுழைவு குறித்து. கடுமையாக ஓட்டி இருந்தார்கள். அதே பாட்காஸ்ட்டில், காவிரி பற்றிய கட்டுரை (கட்டுரையா டாக்குமெண்ட்ரியா அல்லது இரண்டுமா எனத் தெரியவில்லை) எழுதியவர் ஒருவர் (பெயர் மறந்துவிட்டது, விவேக் என நினைக்கிறேன்) பேசினார். கட்டுரைக்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது பற்றியும் ஜர்னலிஸத்தின் தேவை அது என்றும் சொன்னார். அக்கட்டுரை எங்கே கிடைக்கும் எனத் தேடவேண்டும். இவர் தமிழ்நாட்டுக்காரர். தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இருக்கும் என்ற கருத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக கள ஆய்வை கர்நாடகாவில் இருந்து துவங்கி இருக்கிறார். முதல் பாகம் கர்நாடகாவில் காவிரி. இரண்டாம் பாகம் தமிழ்நாட்டில் காவிரியாக இருக்கலாம். இது கட்டுரையா அல்லது யூ ட்யூப் வீடியோவா என்றும் தெரியவில்லை. இன்னொரு முறை கேட்டுப் பார்த்தால் புரியும்.

இனி அடிக்கடி இப்படி 2 அல்லது 3 நாள் பிரேக்கில் போக உத்தேசம்.

Share

ஊழல் உளவு அரசியல் – நம் சமூகத்தின் ஆவணம்

சவுக்கு சங்கர் எழுதிய ‘ஊழல் உளவு அரசியல்’ புத்தகம், சீர்கெட்டுக் கிடக்கும் இன்றைய அரசியலின் ஆவணமாகத் திகழ்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் தொடங்கி அமைச்சர்கள் வழியாக முதலமைச்சர் வரையிலும் காவல்துறை அதிகார்கள், நீதிமன்றம் என விதிவிலக்கில்லாமல் ஊழல் புரையோடியுள்ளது என்பது நமக்குத் தெரியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் இத்தகைய ஊழல் காட்சிகளைக் கண்டிருப்போம். இதெல்லாம் உண்மையா என்ற சந்தேகம் எப்போதாவது தோன்றியிருக்கலாம். திரைப்படங்களில் காட்டப்படுபவை எல்லாமே உண்மை என்பது மட்டுமல்ல, திரைப்படங்களில் காட்டப்படுபவையைக் காட்டிலும் உண்மை என்பது கூடுதலாக இருக்கமுடியும் என்பதற்கு இப்புத்தகம் சாட்சியாக அமைகிறது.

படித்தவர்களே ஊழலின் தொடக்கப்புள்ளியும் பூதாகரமான புள்ளியும் என்பதை இப்புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் உணரலாம். படிப்பு என்பது எத்தனை திறமையாக ஊழல் செய்யமுடியும் என்பதற்கான ஒரு தகுதியாகிறதோ என்கிற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியாது. இலக்கியவாதிகள் உட்பட எந்தவொருவரின் கையில் அதிகாரம் வந்தாலும் நமக்குக் கிடைக்கப்போவதென்னவோ இன்னொரு ஊழலும் இன்னுமொரு அதிகார துஷ்பிரயோகமும்தான்.

மிகச் சிறிய வயதிலேயே அரசு வேலைக்குச் செல்லும் சங்கர் பின்னாளில் தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில் சிறைக்குச் செல்கிறார். எவ்வித அமைப்பின் துணையின்றி, சக மனிதர்களின் உதவியுடனும் தன் திறமையான காய் நகர்த்தலின் மூலம் எப்படி வெற்றி பெற்று விடுதலை அடைகிறார் என்பதை ஒரு நாவல் போலச் சொல்கிறது இந்நூல். ஒரு நாவலில் வரும் அத்தனை கற்பனை நிகழ்ச்சிகளுக்கும் ஈடான அடுக்கடுக்கான சம்பவங்கள் சங்கருக்கு நேர்ந்திருக்கின்றன. எந்நிலையிலும் தகர்ந்துபோகாமல் அவற்றை எதிர்கொண்டு வென்றிருக்கிறார் சவுக்கு சங்கர்.

இந்நூலில் யாரையும் சவுக்கு சங்கர் விட்டுவைக்கவில்லை. கிசுகிசு பாணியில் எல்லாம் சொல்லாமல் எல்லாரையும் பெயரையும் பதவியையும் குறிப்பிட்டே சொல்கிறார். இதைத் தொடர்ந்து இன்னும் என்ன என்ன பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளப் போகிறாரோ என்ற அச்சத்துடனேயே படிக்கவேண்டி இருக்கிறது.

ஜெயலலிதாவின் கருணாநிதியும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்னும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறார் சவுக்கு சங்கர். அண்ணா பல்கலைக்கழகத்தில் தனக்குத் தேவையான அதிகாரிகளுக்கு ஜெயலலிதா இடம் வாங்கிக் கொடுத்திருப்பது தொடர்பான அத்தியாயங்கள் மிக முக்கியமானவை. நீதிமன்றத்தில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும், இவ்வழக்கு சொல்லும் செய்திகள் ஏராளமானவை. அண்ணா பல்கலைக்கழத்தின் கட் ஆஃப் மதிப்பெண்களின் தேவையும் ஜெயலலிதாவின் ஆதரவில் இடம் பெறும் அதிகாரிகளின் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் அதிர்ச்சியை வரவழைக்கிறது.

அடுத்த வழக்கு, உபாத்யாய் மற்றும் திரிபாதி ஆகியோருக்கு இடையேயான உரையாடல் வெளியான வழக்கு. சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பது பின்னுக்குப் போய் உரையாடல் வெளியானதே முக்கியமான பிரச்சினையாக மாற்றப்படுகிறது. திமுகவின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை மற்றும் உபாத்யாய் ஆகியோரின் உரையாடலை சுப்பிரமணியம் சுவாமி வெளியிடுகிறார். உபாத்யாய் ஒரு நேர்மையான அதிகாரி என்று பலமுறை இப்புத்தகத்தில் சொல்கிறார் சவுக்கு சங்கர்.

இவ்வழக்கில் குற்றவாளிகளாகச் சிக்க வைக்கப்பட இருக்கும் சக ஊழியர்கள் இருவருக்கு உதவி செய்ய சவுக்கு சங்கர் முடிவெடுக்கிறார்; இதுவே தனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டதாகச் சொல்கிறார் சவுக்கு சங்கர்.

இதற்குப் பிறகு வரும் அத்தியாயங்கள் படு விறுவிறுப்பானவை. அதிர வைப்பவை. ராஜிவ் காந்தி கொலை வழக்கு புத்தகத்துக்குப் பிறகு இத்தனை விறுவிறுப்பான புத்தகத்தை நான் வாசிக்கவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் இவை அத்தனையும் ஒரு சக மனிதனுக்கு நடந்தது என்னும் எண்ணம் தரும் பதற்றத்தைச் சொல்லில் அடக்கமுடியாது.

விசாரணை அதிகாரிகள் எப்படி மிரட்டுகிறார்கள், எப்படி அடிக்கிறார்கள் என்பதையெல்லாம் பல பக்கங்களில் விவரிக்கிறார் சவுக்கு சங்கர். அதே நேரம் அவர்களுக்கு ஒரு வழக்கு பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அதிகாரிகள் என்றில்லை, அரசியல்வாதிகள், நீதிபதிகள் என யாருக்குமே ஒரு வழக்கைப் பற்றிய போதிய புரிதல்கள் இல்லை என்பதையும் தன் துறை சார்ந்த புரிதல்கூட இல்லை என்பதையும் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார்.

சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடும் அத்தியாயங்களும், சிறையில் சவுக்கு சங்கர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றிய அத்தியாயங்களும் நம் அதிகாரக் கட்டமைப்பின் முகத்தை நமக்குத் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமியை வழக்குக்குள் கொண்டு வருவதற்காகச் செய்யப்படும் முயற்சிகள் மிக சுவாரசியமானவை. ஆனால் நீதிமன்றம் சுவாமியை இவழக்குக்குள் கொண்டுவரத் தயாராகவே இல்லை.

வழக்கு எப்படியெல்லாமோ நடக்கிறது. வரிசையாக நீதிபதிகள் மாற்றப்படுகிறார்கள். அரசு மாறுகிறது. அரசின் நோக்கம் மாறுகிறது. அரசுக்கேற்ப ஊழியர்கள் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. தேவையென்றால் விரைவுபடுத்தப்படுகிறது. எல்லாமே அரசின் முடிவுக்கேற்ப நடக்கிறது. ஒரு கட்டத்தில் இதே வேலையை சவுக்கு சங்கரும் அவரது வழக்கறிஞர்களும் தங்கள் தேவைக்காகச் செய்கிறார்கள். முடிவில் போதிய நிரூபணங்கள் இல்லாததால் சங்கர் விடுதலை ஆகிறார்.

சங்கர் விடுதலை ஆகும் தருணம் உண்மையிலேயே உணர்ச்சி மிகுந்ததாக இருக்கிறது.

*

ஒரு தன் வரலாற்றின் பக்கங்களில் உள்ள நிகழ்வுகளின் நம்பகத்தன்மை என்பது வரலாற்றைச் சார்ந்தும் சொல்பவரின் நம்பகத்தன்மை சார்ந்துமே அமையும். தன் வரலாற்றில் ஒருவர் சொல்வதை ஏற்கவேண்டும்; ஒருவேளை நாம் மறுக்க நேர்ந்தால் அதற்கான பின்னணி, ஆதாரம் என எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லவேண்டும். சங்கரின் புத்தகம் முழுக்க அவர் தொடர்பான விவரங்களின் எதிர்த்தரப்பின் குரல் இல்லவே இல்லை. இது சங்கரின் பிரச்சினை அல்ல. இந்நூலின் தேவையும் அல்ல. ஆனால் படிக்கும் நமக்கு எதிர்த்தரப்பின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கிறது.

சவுக்கு என்றொரு தளத்தில் யார் எழுதுகிறார் என்றே தெரியாமல் தொடர்ச்சியாகக் கட்டுரைகளும் அதிகாரிகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் வந்தபோது இணையம் முழுக்க சவுக்கு என்பவரின் நம்பகத்தன்மை குறித்துக் கடுமையாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்தும் கிசுகிசு என்று சொல்லப்பட்டது. இந்நூல் அந்த சந்தேகங்களுக்குப் பெருமளவில் பதில் சொல்லி இருக்கிறது. என்றாலும் எதிர்த்தரப்புக்கான பதில்கள் என்னவாக இருக்கும் என்னும் எண்ணத்தை அதற்கு இணையாக எழுப்பவும் செய்திருக்கிறது.

நம் அமைப்பில் ஒரு முக்கியமான அதிகாரி கூட புத்திசாலியாக இல்லையா என்கிற கேள்வி எழாமல் இல்லை. சில அதிகாரிகள் நல்லவர்களாகச் சொல்லப்படுகிறார்கள் என்றாலும் அவர்களது திறமை பற்றி, முக்கியமாக காவல்துறை அதிகாரிகளில் திறமையானவர்கள் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என வேறுபாடில்லாமல் அனைத்தையும் சங்கர் எழுதி இருக்கிறார் என்றாலும், எதோ ஒரு புள்ளியில் கருணாநிதியின் மீதும் திமுகவின் மீதும் சங்கருக்கு ஒரு சார்பு இருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அதேபோல் கம்யூனிஸ்ட்டுகள் மேல் மிகப்பெரிய நம்பிக்கை இருப்பதை உணரமுடிகிறது. அவர்களே சங்கருக்குப் பல வகைகளில் உதவியும் இருக்கிறார்கள். இவ்வழக்கு தொடர்பாக இணையத்தில் சவுக்கு எழுதியபோது எப்படி அதிமுகவும் திமுகவும் மாற்றி மாற்றி அவற்றைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டன என்பதை, இப்புத்தகத்தைப் படித்துவிட்டு நினைத்துப் பார்த்தால், சிரிப்பே வருகிறது. ஏனென்றால் இந்நூலில் இரு தரப்பையும் சங்கர் துவம்சம் செய்கிறார்.

*

இந்நூல் சங்கரின் வழக்கை விவரிக்கிறது என்றாலும், எனக்கு வேறொரு வகையில் முக்கியமாகிறது. ஒரு வழக்கில் அதிகாரிகள் எப்படியெல்லாம் செயல்படமுடியும் என்பதை இந்நூல் விளக்குகிறது. என்னவெல்லாம் செய்து தனக்குத் தேவையானபடி வழக்கைக் கொண்டுசெல்லமுடியும் என்பதை இப்புத்தகத்தில் பார்க்கலாம். காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள் என நான்கு பக்கமும் இழுக்கப்படும் ஒரு தேராகவே ஒரு வழக்கு அமைகிறது. யார் கை ஓங்கும் என்பதைக் காலமே தீர்மானிக்கும் என்பதை இந்நூல் சொல்கிறது. இத்தனையையும் தாண்டி நாம் நீதியை அடையவேண்டி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அனைத்தின் மீதும் நம்பிக்கையின்மையை விதைக்கிறது சங்கரின் அனுபவங்கள்.

ஒரு தனிப்பட்ட அதிகாரி எதிர்த்து நின்றால் இவை அனைத்தையும் கடந்து வெல்லமுடியும் என்பதை நூல் சொல்கிறதுதான். ஆனால் அந்த அதிகாரிக்கு சங்கர் போன்ற மனத்திட்பம் இருக்கவேண்டும். உங்களை நிர்வாணப்படுத்தி ஆண்குறியில் அடித்தால், வெளியில் இருக்கும் அம்மாவுக்குக் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகக் கத்தாமல் இருக்கும் தைரியம் வேண்டும். வழக்குகளைப் பற்றி, வழக்கு செயல்படும் விதம் பற்றி, அவற்றில் உள்ள நுணுக்கங்கள் பற்றி, முன்பு நடந்த வழக்குகளில் இருந்த தீர்ப்புகள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும். உங்களுக்கு உதவ அரசியல் ஆதரவு உள்ள நண்பர்கள் வேண்டும். எதையும் எதிர்கொள்ள பின்புலம் வேண்டும். உங்களுக்குத் தகவல் சொல்ல எல்லா மட்டங்களில் ஆள்கள் இருக்கவேண்டும். நீங்கள் சொன்னதும் அதை நம்பி செய்தியாக வெளியிட பத்திரிகைகளின் ஆதரவு வேண்டும். அதாவது கிட்டத்தட்ட ஒரு பெரிய வலைப்பின்னலே இருக்கவேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வரம்பில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கும் அதே வகையான வலைப்பின்னல். இரண்டு வலைப்பின்னல்களுக்கு இடையேயான போட்டியாக மாறினால் மட்டுமே உங்களால் மீள முடியும். சங்கரைப் போல. நீங்கள் தனி மனிதர் மட்டுமே என்றால் எதிர்த்தரப்பின் வலைப்பின்னலில் சிக்கும் ஒரு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தனையும் இருந்து வென்றாலும் உங்கள் கேரியரில் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் இல்லை. இன்னுமொரு முக்கியமான எண்ணம் எனக்குத் தோன்றியது. இப்படி ஒரு வழக்கில் சிக்கியவர் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரியாக இருந்திருந்தால் எந்தப் பத்திரிகையாளர் அவருக்கு உதவி இருப்பார் என்பதுதான் அந்த எண்ணம். நினைக்கவே திகிலாக இருக்கிறது.

இந்நிலையில் ஒரு சாமானிய அரசு ஊழியன் எதைத் தேர்ந்தெடுப்பானோ அதையே இன்றும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறான். ஒரு சாமானியனால் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாகும் இந்நூலே, ஒரு சாமானியன் வெற்றி பெற எத்தனை போராட வேண்டியிருக்கும் என்பதற்கும் உதாரணமாகிறது. ஏன் அரசு ஊழியன் தன் பணிக்காலத்தைச் சிக்கலில்லாமல் முடிக்க மட்டுமே நினைக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நூலில் உள்ளவை எல்லாமே உண்மைதானா என்பது எப்படி உறுதி இல்லையோ அதே போல் இன்னொரு உறுதியான விஷயம், நம் சமூகத்தில் இதெல்லாம் நிச்சயம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதே நேரத்தில், எவ்விதக் குற்றமும் செய்யாத, எவ்வித அரசியலும் செய்யாத, எல்லா வகையிலும் அப்பாவியான ஒருவனை, அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருப்பவர் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றாலும் ஒட்டுமொத்தமாக அவனைக் குற்றவாளி ஆக்கிவிடமுடியாது என்னும் நம்பிக்கை எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்கிறது. இதன் பலம், இன்னும் அதிகார-துஷ்பிரயோகம்-செய்பவர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது. பலவீனம், தனக்குப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக எப்போதும் வளைந்து நெளிந்து செல்ல அரசு ஊழியர்கள் தயாராக இருப்பது. இதில் மிகக் கவலையான விஷயம், இந்நிலையில் ஒரு அமைப்பு இருக்கக்கூடாது என்பது.

இந்நூலில் போகிற போக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் முக்கியமானவை. சிறைச்சாலையின் நிலை அவற்றில் மிக முக்கியமானது. கோவை குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த கைதிகளுக்குத் தரப்பட்ட சிறப்புச் சலுகை மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. இன்னொரு விஷயம், காவல்துறை குற்றம் சாட்டப்பவர்களை விசாரிக்கும் முறை. அதேபோல் ஒரு குற்றவாளி எப்படி அரசியலுக்கு வருகிறார் என்னும் விஷயம். அவர்களுக்குள்ளான கோஷ்டி மோதல், பழிவாங்கல். இப்படிப் பல விஷயங்கள் இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. எவ்வகையிலும் புத்தகத்தின் முக்கிய நோக்கத்தைச் சிதைக்காமல் இவற்றை ஆவணப்படுத்தி இருக்கிறார் சங்கர். சங்கரின் எழுத்துத் திறமை அசரடிக்கிறது. மிக நேர்த்தியான எழுத்து. அங்கங்கே தெறிக்கும் கிண்டல்கள் ரசிக்க வைக்கின்றன. இத்தனை வேதனைக்கு மத்தியிலும் சங்கர் இப்படி எழுதிச் செல்வது ஆச்சரியமளிக்கிறது.

புரையோடிக் கிடக்கும் நம் சமூகத்தின் பிரதிபலிப்பே இப்புத்தகம். எல்லா வகையிலும் இது முக்கியமான ஆவணமாகிறது.

ஆன்லைனில் இப்புத்தகத்தை வாங்க: http://www.nhm.in/shop/9788184938357.html

கிண்டிலில் வாசிக்க:https://www.amazon.in/xB8A-xBB4-xBB2-xBCD-Arasiyal-ebook/dp/B078XYHNW5/ref=tmm_kin_swatch_0?_encoding=UTF8&qid=1520605634&sr=8-1

Share

இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு

இ புத்தகமும் அச்சுப் புத்தகமும் – ஆறு மனமே ஆறு

அனைவருக்கும் ஒரு தன்னிலை விளக்கம். இதை எழுதுவதன் ஒரே நோக்கம், இன்றைய நிலையில் கிண்டிலில் வரும் இபுத்தகங்களின் விற்பனை எந்த அளவுக்கு உள்ளது என்பதைச் சொல்ல மட்டுமே. மற்றபடி எந்த வித வம்பு வழக்குகளிலும் சிக்கிக் கொள்ளும் ஆர்வமில்லை. ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை, அது அச்சுப் புத்தகமாக இருந்தாலும் இபுத்தகமாக இருந்தாலும், தானே வெளியிட்டுக்கொள்ளும் அவரது உரிமையை ஆர்வத்தை அவருக்குக் கிடைக்கும் அதிக லாபத்தை (ஒருவேளை கிடைத்தால்) நான் அதை நிச்சயம் மதிக்கிறேன். அதற்காக மகிழ்கிறேன்.

இன்னொரு விளக்கம் – இக்கட்டுரையின் நோக்கம் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும்தானே ஒழிய, அவர்களது உரிமையிலோ ஆர்வத்திலோ தலையிட அல்ல. முழுமையான ஒரு புரிதல் ஒருவேளை எழுத்தாளர்களை விரைந்து கூடச் செயல்படச் சொல்லலாம்.

கடைசி விளக்கம் – ஒரு வாசகராக ஐ லவ் கிண்டில். இ புத்தகங்களே படிக்க இலகுவானவை. என் கருத்தில் மாற்றமில்லை. இக்கட்டுரை மின் புத்தக வாசகர்களுக்கானது அல்ல. விற்பனையாளர்களுக்கானது.

இனி…

நான் ஒரு சாதாரண எழுத்தாளன். உண்மையில் எழுத்தாளன் கூட அல்ல. எழுதுபவன். இதுதான் சரி. எழுத்தாளன் என்பது ஒரு நினைப்பு. அதுவே ஒரு மனிதனை எழுத்தாளனாக்குகிறது. எனக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை. ஆகவே நான் எழுத்தாளனாக முடியாது. எழுதித் தொலைப்பால் புத்தகம் போட்டிருக்கிறேன். அச்சுப் புத்தகமும் மின்னூலும். கிண்டிலிலும் கிடைக்கிறது. எப்போதாவது திடீரென ஒன்றிரண்டு விற்கும்.

இன்னொரு உதாரணம் வேண்டும். நம் நண்பர் கிருஷ்ண பிரபுவை எடுத்துக் கொள்ளலாம். அவர் ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் என்று வைத்துக்கொள்ளுங்கள். (மன்னிச்சூ கிபி.) இலக்கியவாதியின் ஆழமும் சுஜாதாவின் பிரபலமும் உள்ளவர் எனக் கொள்ளுங்கள். இவரது புத்தகம் வெளியாவது அச்சிலும் மின்னூலிலும் முக்கியம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

இனி சில விஷயங்களைப் பார்க்கலாம்.

என் புத்தகம் வெளியிட ஒரு பதிப்பகம் தேவையில்லை. ஏனென்றால் என் புத்தகம் விற்பதே சொற்பமாகத்தான். உண்மையில் ஒரு பதிப்பகம் அதிலும் பிரபலமான பதிப்பகம் என் நூலை வெளியிடுமானால் நிச்சயம் கூடுதலாக விற்கும். 200% அதிக விற்பனை நடக்கலாம். இந்த சதவீதக் கணக்கு நம்மைக் குழப்பக் கூடியது. நானாக அச்சிடும் என் புத்தகம் 10 விற்கும் என்றால் ஒரு பதிப்பகம் அச்சிடும்போது அது 30 விற்கும். 200% அதிக விற்பனை! எனவே ஒரு பதிப்பகம் என் புத்தகத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் ஒன்றுதான். இதே கதைதான் இ புத்தகத்துக்கும். அதனால் ஒரு பதிப்பகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நானே 50 புத்தகங்கள் அச்சடித்து நானே கிண்டிலில் விற்றுக்கொள்ளலாம். எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் எனக்கு லாபமும் இல்லை என்பதும் இன்னும் கொஞ்சம் யோசித்தால் முதலீட்டுப் பணம் வகையில் சின்ன நஷ்டமும், என் நேரத்தை நான் செலவழித்த வகையில் அதிகம் நஷ்டமும் கூட இருக்கலாம் என்பது புரியும். அனுபவத்தில் சொல்கிறேன். இதில் முக்கியமான விஷயம், நான் தினம் தினம் எழுதிக் குவிப்பவன் அல்ல. என் எழுத்து எப்போது வரும் என்று என் வாசகர்கள் காத்திருக்கவில்லை. நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று தேடிச் சென்று வாங்குபவர்கள் கிடையாது. எனவே எல்லா வேலையையும் விட்டுவிட்டு இதையே என்னால் முழுமையாகச் செய்யமுடியும். செய்தாலும் ஒரு மாதத்துக்கு எனக்கு அதிக பட்சம் 200 ரூ வரலாம். ஆம், இரு நூறு ரூபாய்தான். இதையே என்னைவிடப் பெரிய எழுத்தாளர், என்னைவிட அதிகம் மார்க்கெட்டிங்கில் உழைப்பவர் என்றால் மாதம் 400 ரூ வரலாம். ஆனால் இதே வேலையாக இருக்கவேண்டும். விடாமல் என் புத்தகத்தை வாங்குங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதெல்லாம் இல்லையென்றால் அந்த 200 ரூபாயும் வராது. ஒரு மாதம் போராடி 3000 ரூ ராயல்டி பெற்றுக் காட்டினால் அடுத்த மாதமும் அதே பணம் வரும் என்பது நிச்சயமில்லை. நிச்சயமில்லை என்ன, சத்தியமாக வராது!

இப்போது கிருஷ்ண பிரபுக்கு வருவோம். அவர் சூப்பர் ஸ்டார். தினமும் எழுதிக் குவிப்பவர். ஆழமாக விரிவாக. அவர் ஒரு விஷயத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள பலர் காத்திருக்கிறார்கள். பெரிய கூட்டம் ஒன்று அவரை விடாமல் பின்தொடர்கிறது. என்று வைத்துக்கொள்வோம். ஒரு புத்தகம் வெளியானால் அச்சுப் புத்தகமென்றால் 1000 பிரதிகள் உடனே உறுதியாக விற்கும். அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எந்த மூலையில் யார் அவரது புத்தகத்தை ஆர்வமாக வாங்குவார்கள் என்று நமக்குத் தெரியாது. எப்படி வாங்குவார்கள் என்பதும் தெரியாது. தேடி வந்து வாங்குபவர்கள் ஒரு பக்கம் என்றால், கிருஷ்ண பிரபுவின் பெயர் கண்ணில் பட்டதும் அப்புத்தகத்தை வாங்கும் கூட்டம் இன்னொரு பக்கம். அதாவது அவர்கள் கண்ணில் பட்டால் அவரது புத்தகத்தை வாங்கிவிடுவார்கள். இப்படி ஒரு நிலையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இங்கேதான் ஒரு பதிப்பகம் உங்களுக்குத் தேவையாகிறது. உங்களால் செய்யமுடியாததைப் பதிப்பகம் செய்யும். உங்கள் புத்தகத்தை தமிழ்நாடெங்கும் கொண்டு போய்ச் சேர்க்கும். நீங்கள் தினம் தினம் எழுதவேண்டிய தேவை இருப்பதால் எந்தப் புத்தகத்தை எங்கே லே அவுட் செய்வது, எங்கே அச்சிடுவது, எங்கே விற்பது, எப்படிப் பணம் வாங்குவது, பணம் திரும்ப வருமா, எங்கே ஸ்டாக் வைப்பது, எப்படி ரீ ப்ரிண்ட் செல்வது, யாரை வைத்து ப்ரூஃப் கரெக்ஷன் போடுவது என்றெல்லாம் அல்லாட வேண்டியதில்லை. ஏனென்றால் இவையெல்லாம் எதோ ஒரு நிலையில் நீங்களே அறியாத வண்ணம் உங்களது எழுத்தைப் பாதிக்கும். இதை நீங்கள் வாதிடலாம். ஆனால் நான் நிச்சயம் சொல்கிறேன், இது உங்கள் எழுத்தைப் பாதித்தே தீரும். எனவே இச்சிடுக்குகளில் இருந்து நீங்கள் ஒதுங்கியே நிற்பது நல்லது. ஒரு பதிப்பகம் ராயல்டி தரவில்லை என்றால் மட்டுமே நீங்கள் அடுத்து என்ன என்று யோசிக்கவேண்டும். இல்லையென்றால் அப்பதிப்பகத்துடனேயே அல்லது சில பதிப்பகங்களுடனேயே நீங்கள் இருப்பதுதான் உங்களது நட்சத்திர அந்தஸ்துக்கு நல்லது.

இ புத்தகத்தை மட்டும் எழுத்தாளர்களே வெளியிட்டுக் கொள்வதும் இதே விஷயத்தைப் பொருத்ததுதான். நீங்கள் எழுதித் தள்ளும்போது அதை இ புத்தகமாக்குவது என்பது இன்னொரு வேலை. அதற்கும் ப்ரூஃப் ரீடிங் வேண்டும். அதை இ புத்தகமாக மாற்றவேண்டும். அல்லது வேர்ட் ஃபைலில் சரியாக லே அவுட் செய்யவேண்டும். அதற்கு ஒரு ஆள் வேண்டும். நீங்களே செய்தால் உங்கள் எழுத்து பாதிக்கப்படும். நீங்கள் 100 புத்தகம் எழுதி அதைப் பதிப்பகம் எடிட் செய்திருக்கும். அந்த எடிட் செய்த ஃபைலும் நீங்கள் தந்திருந்த திருத்தங்களும் வேர்ட் ஃபைலில் இருக்காது. உங்களுக்கு மறந்திருக்கலாம். அல்லது நீங்கள் கையில் எழுதி அதைப் பதிப்பகம் தட்டச்சிட்டிருக்கும். இப்படி ஆயிரம் விஷயங்கள் உள்ளன.

இன்றைய நிலையில் அமேஸான் என்பது உங்களுக்கு எந்த விதப் பணத்தையும் கொட்டிக் கொடுக்கப் போவதில்லை. என்னைப் போன்ற துக்கடா எழுத்தாளர்களுக்கு மாதம் 500 ரூ வந்தால் ஆஹோ ஒஹோ என்போம். ஆனால் நம் கிருஷ்ண பிரபு போன்ற நட்சத்திரர்களுக்கு மாதம் 1000 ரூ என்பது ஒன்றுமே அல்ல. ஏனென்றால் இன்றைய நிலையில் விற்பனை அவ்வளவுதான் நடக்கிறது. ஒரு பதிப்பகம் 100 புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், இ புத்தக விற்பனை மட்டும் அதிக பட்சம் மாதம் 20,000 ரூபாய்க்கு நடக்கலாம். (குத்து மதிப்பாக.) அதில் 15000 ரூ ஏதேனும் 10 புத்தகங்களில் நடந்த விற்பனை மூலம் கிடைத்திருக்கும். மீதி 5000 ரூ விற்பனை என்பது 90 புத்தகங்களில் நடந்திருக்கும். அந்த 90 புத்தகங்களில் ஒரு புத்தகம் நீங்கள் எழுதியதாக இருந்தால், உங்களுக்கு என்ன கிடைக்கும் என்று யோசியுங்கள். அச்சுப் புத்தகத்தைக் கைவிட்டுவிட்டு இந்த தொன்னூறுக்குள் ஒன்றாவதன் பலன் என்று சிந்தியுங்கள்.

என்னதான் நட்சத்திர எழுத்தாளராக இருந்தாலும், அவரது அனைத்துப் புத்தகங்களும் ஒரே போல் விற்காது. அதுவும் தமிழில் – சில எழுத்தாளர்கள் தங்கள் புத்தக விற்பனை பற்றி எழுதுவதையெல்லாம் படித்திருந்தாலே விளங்கும் நாம் வாசிப்பிலும் புத்தகம் வாங்குவதிலும் என்ன நிலையில் இருக்கிறோம் என. எனவே அவரது 80% புத்தகங்கள் குறைவான விற்பனையையே ஈட்டித் தரும். 80-20 விதி கொஞ்சம் அங்குமிங்கும் ஊசலிட்டாலும் பொருந்தி வருவதைப் பார்க்கலாம். இந்நிலையில் இ புத்தகம் தரும் விற்பனை என்பது நீங்கள் எதிர்பார்ப்பது போல் இருக்காது.

அப்படியானால் ஏன் ஒரு பதிப்பகம் இ புத்தகத்தை விற்பதையும் தானே செய்ய நினைக்கவேண்டும்? ஏனென்றால் அவர்கள் ஒரு புத்தகத்தின் எல்லா வேலைகளையும் அவர்களே செய்கிறார்கள். அச்சுப் புத்தகத்துக்கு முதலீடு செய்கிறார்கள். கரெக்ஷன் போட்டு இறுதி வடிவத்தைத் தயாராக வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இ புத்தகம் செய்வது எளிது. அதற்கென ஒரு குழு இருக்கும். இ புத்தக விற்பனை மூலம் வரும் சிறிய தொகை ஒருவேளை பதிப்பகத்துக்கு உதவலாம். இதைத் தாண்டி வேறு காரணங்கள் இல்லை. என் கணிப்பில் ஒரு பதிப்பகம் இ புத்தகம் வேண்டாம் என்று சொல்வது எழுத்தாளர்களுக்கான தொல்லையே அன்றி வேறில்லை.

இப்போது என்னைப் போன்ற சிறு எழுத்தாளர்கள், இ புத்தக விற்பனையில் நிறையப் பணம் கிடைக்கும் என்று நம்பி, அச்சுப் புத்தகம் பதிப்பிட்டு ராயல்டி தரும் பதிப்பகத்தையும் விட்டுவிட்டு வந்தால், அது அவருக்குப் பெரிய அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும். அதிலும் தீவிர இலக்கியவாதிகள் செய்யக்கூடாத தவறு இது. அச்சுப் புத்தக ராயல்டியும் குறைவாகத்தானே வருகிறது எனலாம். குறைந்த பட்சம் அச்சுப் புத்தகங்கள் உங்கள் வாசகர்கள் கண்ணிலாவது படும். இ புத்தகங்கள் இன்றைய நிலையில் யாரிடம் சென்று சேர்கிறது என்பதைச் சொல்லவே முடியாது. இதுதான் நிலவரம்.

நாளை இ புத்தகங்கள் பெரிய அளவில் வளரலாம். அப்போதும் அது அச்சுப் புத்தகத்தை இல்லாமல் ஆக்காது. இப்போது உலக அளவில் இ புத்தகங்கள் பெரிய அளவில் அச்சுப் புத்தகங்களைத் தகர்த்துவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளத் துவங்கி இருக்கிறார்கள். இ புத்தகங்கள் அச்சுப் புத்தகங்களைத் தாண்டி வளர்ந்தாலும், அச்சுப் புத்தகமே வேண்டாம் என்னும் பதிப்பாளர் மட்டுமே இ புத்தகத்தைத் தானே பதிப்பித்துக் கொள்ள முடிவெடுப்பது நல்லது. இல்லையென்றால் பதிப்பாளருடனே இருப்பதுதான் புத்திசாலித்தனமானது.

எந்நிலையிலும் அச்சுப் புத்தகங்கள் அவசியம் என்பதை மனத்தில் வையுங்கள். அச்சுப் புத்தகத்தையும் நாமே அச்சிட்டு விற்கலாம் என்பது மிகத் தீவிரமான ஒரு முடிவு. அதை ஜஸ்ட் லைக் தட் எடுக்காதீர்கள். ஒரு பதிப்பகம் நடத்தி புத்தக விற்பனை செய்து அதிகம் முதலீடு செய்து புத்தகத்தை அச்சில் வைத்திருந்து அனைத்துப் புத்தகக் கண்காட்சிகளிலும் புத்தகங்களைக் கிடைக்கச் செய்வது சுலபமான காரியமல்ல.

இ புத்தகங்களில் 35% ராயல்டி, 70% ராயல்டி என்பதெல்லாம் ஒரு கணக்குதான். இவையெல்லாம் லட்சக்கணக்கில் விற்பனையாகும் புத்தகங்களுக்கு மட்டுமே ஒரு வேறுபாட்டைத் தரும். இதிலும் 35% ராயல்டி என்றால் இ புத்தகம் கிடைக்கும் நாடுகள் மற்றும் 70% ராயல்டி என்றால் புத்தகம் கிடைக்கும் நாடுகள் என்ற வேறுபாடுகளெல்லாம் உள்ளன என்று நினைக்கிறேன்.

சரியாக அமேஸான் ராயல்டி தந்துவிடும் என்பது உண்மைதான். இதுதான் வலுவான வசீகரமான காரணம். தனக்கு எவ்வளவு பணம் கிடைக்கிறது என்பதை மட்டும் ஓர் எழுத்தாளன் யோசித்தால், இதில் உள்ள வசீகரத்தைக் கண்டு ஏமாறமாட்டார். அச்சுப் புத்தகமும் இ புத்தகமும் பதிப்பகம் விற்று, அதற்கான பணத்தையும் பதிப்பகம் தருமானால் – கொஞ்சம் முன்ன பின்ன என்றாலும்!- அதில் வரும் ஒட்டுமொத்தப் பணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். அதிலும் ஒரு ஸ்டார் எழுத்தாளர் செய்யக்கூடாத தவறு – பதிப்பகம் ஆரம்பிப்பதும் இ புத்தகத்தைத் தானே போடுவதும்.

ஒட்டுமொத்தமாக இப்படி வரையறுக்கிறேன்.

* எழுத்தாளர்கள் வேலை எழுதுவது. முதன்மையானதும் கடைசியானதும் இதுதான். அடுத்த வேலை, ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதைக் கண்காணிப்பது.

* எப்படி விற்றாலும் உங்கள் புத்தகம் 100 தான் விற்கும் என்றால், நீங்களே பதிப்பகம் தொடங்கி நடத்தி விற்றுக் கொள்ளலாம்.

* நீங்கள் ஒரு நட்சத்திர எழுத்தாளர் என்று நீங்கள் நம்பினால் பதிப்பகம் நடத்தும் தவறை மறந்தும் செய்யாதீர்கள். அதே சமயம் ஒரு பதிப்பகத்திலிருந்து ராயல்டி ஒழுங்காக வருகிறதா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். அதைப் போலவே உங்கள் புத்தகம் தொடர்ந்து அச்சில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.

* பதிப்பகம் ஒழுங்காகப் பணம் தரவில்லை என்பதால் பதிப்பகம் ஆரம்பிப்பதாக இருந்தால் சரிதான். ஆனால் அது அத்தனை சுலபமானதில்லை என்பதையும், வேறொரு பதிப்பகம் நிச்சயம் ஒழுங்காகப் பணம் தரும் என்று வாய்ப்பு இருந்தால் அதை அணுகுவதே மேலானது என்பதையும் எப்போதும் மனத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

* இ புத்தக விறபனையை நீங்களே செய்து கொள்வது – உங்கள் புத்தகம் எப்படியும் 100 தான் விற்கும் என்றால் நல்லதுதான். ஆனால் உங்கள் புத்தகம் அச்சுப் புத்தகத்தில் 1000 பிரதிகள் விற்கும் வாய்ப்பு இருக்குமானால், அந்தப் பதிப்பகமே இ புத்தக உரிமையையும் கேட்குமானால் அவர்களிடமே இபுத்தக உரிமையையும் தருவதுதான் நல்லது. ஏனென்றால் இன்றைய நிலையில் அச்சுப்புத்தகத்தின் ரீச்சே முக்கியமானது.

* அச்சுப் புத்தகம் 100தான் விற்கும் என்றாலும் இன்னொரு பதிப்பகம் அதைப் பதிப்பிக்குமானால் அது இன்னமும் நல்லதுதான். அதே பதிப்பகம் இ புத்தகத்தையும் வெளியிட விரும்பினால் அப்பதிப்பகத்திடமே இ புத்தக உரிமையையும் தந்துவிடுவது நல்லது. ராயல்டி வருவதை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள். ராயல்டி வராத பட்சத்தில் நீங்கள் உங்கள் சொந்த முயற்சிக்குப் போவது சரியானது.

* உங்கள் புத்தகத்தை எந்தப் பதிப்பகமும் அச்சிடவில்லை என்றால், இ புத்தக மற்றும் அச்சுப் புத்தகத்தை நீங்கள் செய்துகொள்வதைப் புரிந்துகொள்ளலாம்.

* ஒரு பெரிய பதிப்பகம் இ புத்தக உரிமையைக் கோருவதில் எந்தப் பிழையும் இல்லை. அப்பதிப்பகத்தின் அச்சுப் புத்தக ரீச் உங்களுக்குத் தேவை என்றால் இதற்குச் சம்மதிக்கவும். இல்லையென்றால் விலகிவிடவும். கிருஷ்ண பிரபு மற்றும் நான் உதாரணம் இங்கே பொருந்தலாம். என்னைப் போன்ற எழுத்தாளர் விலகலாம். நஷ்டமில்லை. ஆனால் நட்சத்திர எழுத்தாளர் விலகக்கூடாது. நஷ்டம் அதிகம் உண்டாகும்.

* அமேஸானில் இன்றைய நிலையில் நட்சத்திர எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்கும் பெரிய அளவில் பணம் வராது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். நட்சத்திர எழுத்தாளர்களுக்கும்கூட அச்சுப் புத்தகத்தில் இருந்து வரும் பணத்துக்கும் அமேஸான் பணத்துக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருக்கலாம் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

* நாளை இந்நிலைமை மாறும் என்பது நிச்சயமான உண்மை. ஆனால் – நாளை என்றால் எப்போது என்பதிலும் மாறும் என்றால் எந்த அளவு என்பதிலும் வரையறுக்கமுடியாத நிலை உள்ளது. என் கணிப்பில் அடுத்த பத்து வருடத்தில் அச்சுப் புத்தக விற்பனையில் பாதியை மட்டுமே இ புத்தகம் எட்டி இருக்கும். அச்சுப் புத்தகத்தின் ஒட்டுமொத்த விற்பனைச் சரிவு இன்னொரு பக்கம் இருக்கும். இ புத்தக விற்பனையின் அதிகரிப்பு இன்னொரு பக்கம் இருக்கும். இருந்தாலும் பத்து வருடம் கழித்தும் அச்சுப் புத்தக விற்பனையில் பாதி அளவே இ புத்தக விற்பனை இருக்கும். வேறேதேனும் டெக்னிகல் புரட்சி நடக்காத வரையில் இதுவே நடக்க அதிக வாய்ப்புள்ளது. கிண்டில் கருவி இலவசம், இணையம் இலவசம் என்ற நிலையெல்லாம் வந்தால் கொஞ்சம் மாற்றம் இருக்கும். இ புத்தக விற்பனையும் அச்சுப் புத்தக விற்பனையும் ஒரே அளவில் இருக்கலாம். அதுவும் பத்து வருடங்களுக்குப் பிறகுதான்.

நாளை நம் புத்தகங்கள் இ புத்தகமாக இருப்பது முக்கியமானது. அதற்காக ஒரு எழுத்தாளர் தன் புத்தகத்தை இ புத்தகமாக வெளியிடவேண்டியதும் அவசியமானது. அதை ஒரு பதிப்பகம் செய்யாதபோது மட்டும் செய்தால் போதும்.

நாளையை நம்பி இன்றை விட்டுவிடாதீர்கள்.

சில பின்குறிப்புகள்:

01. நான் கிழக்கு பதிப்பகத்தில் இருக்கிறேன். இப்பதிவு என் தனிப்பட்ட பதிவு. கிழக்கு பதிப்பகத்துக்கும் இப்பதிவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

02. நான் எந்த எழுத்தாளரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. எழுத்தாளர்களின் புத்தகம் கிடைப்பது மட்டுமே வாசகனாக என் ஆசை. அதைத் தாண்டி வாசகனாக எனக்கு எத் தேவையும் இல்லை.

03. யார் கருத்தையும் தகர்க்கும் எண்ணம் சிறிதும் இல்லை. என் கருத்து முழுக்கத் தவறென்று நீங்கள் சொன்னாலும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. இதை ஒரு பதிவு என்று படித்து, அதில் ஏதேனும் யோசித்து, உங்கள் முடிவுப்படி நடந்தால், நல்லது. அதுதான் நோக்கமும் கூட. நன்றி. சுபம்.

04. எனக்குத் தமிழ் படிக்க வராது என்பதால், இதில் வரும் பின்னூட்டங்களுக்கு, கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் போகும் வருத்தம்தான் என்னை வாட்டுகிறது.

Share

பேட்டை – சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்

பேட்டை: சிந்தாதிரிப் பேட்டையின் சித்திரம்

தமிழ்ப் பிரபா எழுதி இருக்கும் நாவல், காலச்சுவடு வெளியீடு. நாவலின் முக்கியமான பலம், இதன் அசல் தன்மை. தன் வாழ்க்கையில் இருந்து மனிதர்களையும் கதைகளையும் எடுத்துக்கொண்டதால் நாவலாசிரியரின் நெஞ்சிலிருந்து உணர்வுபூர்வமாக முகிழ்ந்த நாவலாகிறது. இது ஒரு வகையில் பலம், சிறிய வகையில் பலவீனமும்கூட. ஆனால் அந்த பலவீனத்தைத் தாண்டி நாவலின் அசல் தன்மை, இந்த சுய சரிதைச் சாயலாம் கூடுதல் கனம் கொள்கிறது.

சென்னைத் தமிழ் இத்தனை சிறப்பாகக் கையாளப்பட்ட இன்னொரு நாவல் இருக்குமா என்பது சந்தேகமே. சென்னைத் தமிழோடு அதன் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கே உரிய தனித்துவத்தையும் பெறுவது நாவலின் மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனியே மெனக்கெட்டு விவரிக்காமல் கதை மற்றும் நிகழ்வுகளின் போக்கிலேயே அவை அவற்றுக்குரிய உச்சத்தைப் பெறும் வகையில் நாவல் எழுதப்பட்டுள்ளது.

சென்னையின் சேரிகளில் இருக்கும் கிறித்துவ தாழ்த்தப்பட்டவர்களின் கதைகளை இத்தனை அருகில் நான் வாசித்ததில்லை. அவர்கள் மதத்தில் கிறித்துவர்களாகவும் பண்பாட்டில் கிறித்துவ மற்றும் ஹிந்துக்களாகவும் வாழ்கிறார்கள். ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொள்ளும் கிறித்துவர்களின் பண்பாடு ஒரு சான்று. மதத்தைப் பரப்ப நினைக்கும் சபைகளை இத்தனை உடைத்துப் போட்டு எழுதியது ஆச்சரியம்தான். அதனால் இது ஹிந்து மதத்தைத் தூக்கிப் பிடிப்பதும் இல்லை. சேரிகளின் வாழ்க்கை முறை இப்படித்தான் என்று வெளிப்படையாகப் பேசும் நாவல். கூடவே ஹிந்து மதத்துக்காரர்களின் பிரச்சினைகளையும் சேரி வாழ் மக்களின் பார்வையில் நாவன் முன்வைக்கவும் செய்கிறது.

இடையில் ரூபன் நாவல் எழுதுவதாகச் சொல்லும் அத்தியாயங்கள் மட்டுமே நிலையில்லாமல் அலைபாய்கின்றன. சௌமியனின் ஆவி இறங்கிவிட்ட பின்பு ரூபனைச் சுற்றி நாவல் வேகம் கொள்கிறது. ரூபன், சௌமியன், ரெஜினா, நகோமியம்மா, குணசீலன், இவாஞ்சலின் என பல கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கின்றன.

வட சென்னைக்கே உரிய பல குணங்களை நாவல் தொட்டுச் செல்கிறது. சுவரில் படம் வரைவது, கேரம் விளையாட்டு எனப் பல விஷயங்கள் நாவலில் வெறுமனே களம் என்கிற அளவில் இல்லாமல், கதையோடும் கதாபாத்திரங்களோடும் இடம்பெறுகின்றன.

பேட்டை, நல்ல முயற்சி.

Share

எடிட்டிங் – சில அனுபவங்களும் கருத்துகளும்

புனைவில் (உண்மையில் ஒட்டுமொத்தத்தில்) எடிட்டர் பற்றிய தேவைகளை, எல்லைகளைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் ஜெயமோகன்.

அதனால்தான் நான் ஏதேனும் புத்தகத்தை வாசித்து திருத்தி கருத்து சொல்ல நேர்ந்தால், படைப்பாளியின் ஒப்புதல் இல்லாமல் வரிகளைச் சேர்க்கவே மாட்டேன். அவரிடம் தெளிவாகச் சொல்லித்தான் செய்வேன். அவர் அதை மறுக்கும் பட்சத்தில் நான் அதை வற்புறுத்தவும் மாட்டேன். என் கருத்தை, என் நோக்கைச் சொல்வது மட்டுமே என் வேலை என்கிற அளவில் மட்டுமே செயல்படுவேன்.

யாரேனும் என்னை எடிட்டர் என்று சொன்னாலும் தெளிவாக நான் எடிட் செய்யவில்லை, திருத்தம் மட்டுமே செய்தேன் என்று சொல்லி, படைப்பு அவர்களுக்குரியது என்கிற எண்ணத்தை அவர்களுக்கு வரும்படிப் பேசுவேன். ஏனென்றால் நான் செய்ததும் அதை மட்டுமே.

பிரதியை மேம்படுத்துவது மட்டுமே என் நோக்கம். மாறாக மீள உருவாக்குவது அல்ல. அப்படி தேவை என்றால் அதையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும். அந்த வகையில் அது முழுக்க முழுக்க அவர்களுடைய படைப்பாகிறது.

தமிழின் மிகச் சிறந்த எடிட்டர்களுள் ஒருவர் பத்ரி சேஷாத்ரி. பத்ரியின் பங்களிப்பு, மொழி சார்ந்து மட்டுமின்றி, அதன் கண்டெண்ட் சார்ந்ததாகவும் இருக்கமுடியும் என்பது அவரது ப்ளஸ். குறிப்பாக அபுனைவுகளில்.

எனவே ஒரு எடிட்டராக என் வேலை, பிரதியை ஆசிரியர் மூலம் மேம்படுத்துவது மட்டுமே. ஜெயமோகன், வெங்கட் சாமிநாதன் என்று பலருடன் அவர்களுக்குச் சொல்லி, அதன் பதிலைப் பெற்றுத்தான் பொதுவாக மாற்றுவேன். நான்கைந்து புத்தகங்களுக்குப் பிறகு நமக்கே தெரிந்துவிடும், ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் எதிர்பார்ப்பது என்ன என்பது.

சில புத்தகங்களை முழுவதுமாக மீள எழுதுவது அவசியமாகும். (ரீ ரைட் செய்வது.) அந்த சந்தர்ப்பம் எப்போது வரும் என்றால், ஒரு துறை சார்ந்த எக்ஸ்பெர்ட் ஒருவர் தன் புத்தகத்தை எழுத முயலும்போது. அப்போது அவர்களுடன் இருந்துதான் அதைச் செய்யவேண்டி இருக்கும். அப்போதும் அதிலுள்ள கண்டெண்ட் விஷயம் ஆசிரியர்களுக்கு உரியதுதான். ஆனால் அதன் மொழிநடை அவருக்கு உரியது அல்ல, ரீ ரைட் செய்பவருக்கு உரியது. தமிழில் பல கொடைகள் இப்படி வருபவைதான். இங்கே ஆசிரியரைவிட அதன் கண்டெண்ட்டே முக்கியம்.

இதனால்தான் சரியாக எடிட் செய்யப்படாத நூல்களும் கூட, அதன் உண்மைத்தன்மைக்காக, அதன் வீரியத்துக்காக, அதன் rawness-க்காக முக்கியம் என்று நான் கருதுகிறேன். சில எடுத்துக்காட்டுகளைச் சொன்னால் சிலர் வருத்தப்படக்கூடும் என்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

நாவலை எடிட் செய்ய அதன் எல்லைக்குள் நின்று பழகிய ஒருவர் அமைவது ஒரு வரம். நான் எடிட் செய்த புத்தகங்களுக்கு அல்லது திருத்திய புத்தகங்களுக்கு அந்த நியாயத்தை இந்த நிமிடம் வரை நம்புகிறேன் என்பதுதான் எனக்குள்ள நிறைவு.

*

எடிட்டிங் தொடர்பாக சில தனிப்பட்ட அனுபவங்கள் – என் கதை தொடர்பானவை.

நான் எழுதும் கதைகளில் உள்ள பிரச்சினைகளை எத்தனை முறை நான் படித்தாலும் என்னால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் மற்றவர்கள் எழுதுவதில் உள்ள சிக்கலை ஒரே வாசிப்பிலேயே ஓரளவுக்குக் கண்டுகொள்ள முடியும். இப்படிப்பட்ட நிலையில் என்னிடம் அகப்பட்டவர்தான் ஜெயஸ்ரீ கோவிந்த ராஜன். எழுதத் துவங்கியதில் இருந்து சமீப காலம் வரை என் எல்லாக் கதைகளையும் படித்து அதிலுள்ள பிரச்சினைகளை, பொருத்தமின்மைகளை, குளறுபடிகளைச் சொல்பவர் அவர்தான். (யார் கதை எழுதினாலும் எடிட் செய்வார். )

ஒரு கதையில் கதையின் நாயகன் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து எதிர் வரும் பேருந்தில் அடிபட்டுச் சாவதாக எழுதி இருந்தேன். இதன் தர்க்க அபத்தத்தைச் சுட்டிக் காட்டி இருந்தார். அவர் சொல்லாவிட்டால் என்னால் கண்டுபிடித்திருக்கவே முடியாது. அதை, ஓடும் பேருந்தில் இருந்து குதிக்கும் ஒருவனை அப்பேருந்தை முந்திக்கொண்டிருக்கும் இன்னொரு வண்டி அடித்துப் போடுவதாக மாற்றினேன். இது ஒரு உதாரணம் மட்டுமே. இப்படிப் பலவற்றைச் சுட்டிக் காண்பித்திருக்கிறார். குறிப்பாக இன்னொன்றைச் சொல்லவேண்டும் என்றால், கதையில் நாம் கொள்ளும் கதாபாத்திரத்தின் வயது தொடர்பான குழப்பத்தை. அல்லது தொடக்கத்தில் வரும் கதாபாத்திரம் ஆணா பெண்ணா என்பதை வாசிப்பவர்கள் அவர்களது இஷ்டத்துக்கு எடுத்துக்கொள்ளும் ஆபத்தை. இது தொடர்பாக எனக்கும் முதலில் இருந்தே தெளிவு இருந்தது என்றாலும் கதை எழுதும் வேகத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளவே தோணாது. ஒரு சிறுகதையை அதிகபட்சம் இரண்டு மணி நேரத்தில் எழுதிவிடுவேன். எழுதத் துவங்கி தடுக்கி நின்று மீண்டும் எழுதி – இப்படியெல்லாம் எதுவும் செய்ததில்லை. அதனால் இப்பிரச்சினைகளை எனக்கு எதிர்கொள்ள உதவியர் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.

கடந்த ஆறேழு மாதங்களாக அவர் பிஸியாகிவிட்டதால், எழுதிய கதைகளை யாருக்கும் அனுப்பாமல் வைத்திருந்து பிறகு நானே படித்துத் திருத்தி அனுப்புகிறேன்.

இன்னொரு கதை, பதாகையில் வெளி வந்தது. கதையின் முடிவில் எதோ ஒரு நெருடல் இருப்பதாக பதாகை பாஸ்கர் உணர்ந்தார். அதனால் அக்கதையின் முடிவை மட்டும் வெகு சில வரிகளில் மாற்றி அனுப்பினேன். பின்பு படித்துப் பார்த்தபோது அவர் சொன்னது சரி என்றே எனக்குப் பட்டது.

அதேபோல் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எழுதி இன்னும் வெளிவராமல் இருக்கும் சிறுவர் கதைகளில் ஒரு கதையை அரவிந்தன் நீலகண்டன் படித்துவிட்டு வழக்கம்போல பீராய்ந்து போட்டார். அதில் அவர் சொன்ன திருத்தங்கள் முக்கியமானவை. தனிப்பட்ட திருத்தமல்ல அது, ஒட்டுமொத்த தொனியின் திருத்தம்.

இப்படி இன்னொருவர் படிக்கும்போது நம்மால் தொடமுடியாத ஒன்றைத் தொடத்தான் செய்கிறார்கள். இவற்றால் நாம் எழுதியதையே மாற்றுகிறோம் என்பதல்ல. அது ஒரு கருத்து. திருத்தம் செய்தால் நல்லது என்பதான கருத்து. அதைச் செயல்படுத்துகிறோம் அல்லது நிராகரிக்கிறோம். பலமுறை நிராகரித்திருக்கிறேன்.

புனைவுக்கோ அபுனைவுக்கோ வெளியாள் ஒருவரின் பார்வை முக்கியமானது என்று தொகுக்கலாம். அவர் எடிட்டரா திருத்துனரா கருத்தரா என்பதெல்லாம் அவர் செய்யப்போகும் செயலுக்கேற்ற தேர்வுகள் மட்டுமே.

Share

தற்கொலை குறுங்கதையும் பிரேக்கப்பும் – அராத்து

அராத்து எழுதிய நூல் தற்கொலை குறுங்கதைகள். அராத்து ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக எழுதிய தற்கொலை குறுங்கதைகளின் தொகுப்பு. ஃபேஸ்புக்கில் இல்லாத கதைகளும் இப்போது வெளியாகி இருக்கும் தொகுப்பில் உள்ளன என்று நினைக்கிறேன்.

அராத்துவின் பிரேக் அப் குறுங்கதைகளே எனக்குப் பிடித்திருந்தது. தற்கொலை குறுங்கதைகளைவிட ஒரு படி மேல் என்பது என் எண்ணம். இரண்டாவது புத்தகம் என்பதால் ஏற்பட்ட அனுபவம், விழிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் அராத்து இதை மறுக்கக்கூடும். எப்போதும் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவதே அவரது பாணி எனக்கூடும்.

தற்கொலை குறுங்கதைகள் நூலுக்கு சாரு நிவேதிதா எழுதியிருக்கும் முன்னுரை – வாய்ப்பே இல்லை. உயிர்மை வெளியீடாக தற்கொலை குறுங்கதைகள் வெளிவந்தபோது அந்த நூலுக்கு சாரு எழுதிய முன்னுரை, இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. சில முன்னுரைகளை மறக்கவேமுடியாது. முன்பு இரா.முருகன் எழுதிய அக்கம்மாதேவி பற்றிய ஒரு முன்னுரை அத்தனை அட்டகாசமாக இருந்தது. இப்போதும் அதை நினைத்துக்கொள்கிறேன். சாருவின் இந்த முன்னுரை, புத்தகத்தை எங்கோ கொண்டு போகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் புத்தகத்தை மீறி நிற்கிறது.

முன்பு மரத்தடி யாஹூ குழுமத்தில் கேள்வி பதில் நிகழ்வு நடந்தது. முதலில் பதில் சொல்ல ஒப்புக்கொண்டவர் ஜெயமோகன். கேள்விகள் எத்தரத்தில் இருந்தாலும் சரி, தன் பதிலின் மூலம் அக்கேள்வியை வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றார் ஜெயமோகன். (இக்கேள்வி பதில்கள் எதிர்முகம் என்ற தொகுப்பாக தமிழினி வெளியீடாக வெளிவந்தது.)

முன்பு சுரேஷ் கண்ணன் பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்துக்கு விமர்சனம் எழுதும்போது இளையராஜாவின் இசைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் படம் தள்ளாடுகிறது என்ற ரீதியில் எழுதி இருந்தார். ஆனால் முதலில் படம்தான் எடுப்பார்கள், பின்னர்தான் இசையமைப்பார்கள் என்றொரு பஞ்சாயத்தை வைத்தேன்.

இந்த இரண்டுக்கும் தற்கொலை குறுங்கதைகளுக்கும் உள்ள தொடர்பு – சாரு எழுதியிருக்கும் முன்னுரை தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது.

தற்கொலை குறுங்கதைகள் தொகுப்பை (பிரேக் அப் குறுங்கதைகள் தொகுப்பையும்!) வாசிக்கும்போது யார் யாரை எப்போது எதை அவிழ்ப்பார்கள் என்ற அச்சத்துடன் படிக்கவேண்டி இருக்கிறது என்பது மட்டும் ஒரு எச்சரிக்கை. என்னைப் போன்ற அடிப்படைவாதிகள் மறந்தும் ஒதுங்கக்கூடாத புத்தகம் இது என்பதும் இன்னுமொரு எச்சரிக்கை! மற்றபடி சாருவின் முன்னுரைக்காகவாவது தற்கொலை குறுங்கதைகளை நிச்சயம் வாசிக்கவேண்டும்.

Share

குற்றவாளிக் கூண்டில் மநு

குற்றவாளிக்கூண்டில் மநு?, எஸ். செண்பகப்பெருமாள், கிழக்கு பதிப்பகம்.

மிகச் சிறிய புத்தகம். மநுவின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்புலமான மநு ஸ்மிருதிகளைப் பற்றி விளக்கும் நூல். இந்த நூல் சொல்லும் கருத்துகளை இப்படித் தொகுத்துக் கொள்கிறேன்.

* மொத்தம் ஏழு மநு ஸ்மிருதிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்போது இருக்கும் ஸ்மிருதி ஏழாவது மநு ஸ்மிருதி. விஸ்வேதேவர் தொகுத்தது இது.

* இந்த மநு ஸ்மிருதியில் பிரச்சினைக்குரியது ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே. இந்த அத்தியாயம் பிரச்சினைக்குரிய ஆபத்துக்காலம் என்பதற்கு மட்டுமானதாகத் திருத்தம் செய்யப்பட்ட ஒன்று. அந்த ஆபத்துக்காலம் என்பது பௌத்த காலம்.

* ஆபத்துக் காலம் வரையில் சமூகம் வர்ணத்தால் மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. வர்ணம் பிறப்படிப்படையில் இல்லை. வர்ணத்தை மாற்றிக்கொள்ளமுடியும். அதை மாற்றி அறிவிக்க குழுக்கள் இருந்தன. இதன் அடிப்படையிலேயே மநு ஸ்மிருதி இருந்தது.

* ஆபத்துக்காலம் நீடித்தபடியால் வர்ணம் மெல்ல ஜாதியாகக் கெட்டிப்பட்டது. இதனால் பிறப்படிப்படையில் ஜாதிகள் நிர்ணயிக்கப்பட்டு, வர்ணத்துக்குச் சொல்லப்பட்டிருந்த மநுவின் சட்டங்கள் ஜாதிகளுக்கு என்றானது. இதுதான் பிரச்சினை.

* மநு ஸ்மிருதியின் ஒரே நோக்கம் சமூகத்தைக் காப்பதுதானே அன்றி பிராமணர்களைக் காப்பது அல்ல. அப்படியே பிராமணர்களுக்குச் சொல்லப்பட்டிருந்த விதிகளும் (ஆபத்துக்கால விதிகள் நீங்கலாக) வர்ணத்தின் அடிப்படையிலானவையே. (மநு பிராமணர்களைக் காக்க முனையவில்லை என்பதை கோவில்களில் யார் பூசாரியாக இருக்கவேண்டும் என்பதிலெல்லாம் மநு அக்கறை கொள்ளவில்லை என்பதைச் சொல்வதன்மூலம் விளக்கி இருக்கிறார் நூலாசிரியர்.)

* ஆபத்துக்காலத்தில் பிராமணர்களை சமூகத் தேவையின் பொருட்டுக் காப்பதற்காகவே சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

இப்படியாகத் தொகுத்துக் கொள்ளலாம். பத்தாம் அத்தியாயத்திலும் உள்ள சேர்க்கைகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

வர்ணம் எப்படி ஜாதியாகக் கெட்டிப்பட்டது என்பதை மிக விரிவாக விளக்கி இருக்கிறார் செண்பகப் பெருமாள். பல நிலைப்பாடுகளுக்கு அம்பேத்கரிடமிருந்து ஆதாரத்தைத் தருகிறார். அம்பேத்கரிடமிருந்து விலகும் புள்ளியையும் தெளிவாகச் சொல்கிறார் புத்தக ஆசிரியர்.

எங்கெல்லாம் மநுவின் அடிப்படைவாதக் கருத்துகள் வருகின்றனவோ அங்கெல்லாம் மிக சாமர்த்தியமாக, இணையான அல்லது அதைவிடக் கீழான அடிப்படைவாதக் கருத்துகளை பைபிளில் இருந்து சொல்லிக்காட்டிவிடுகிறார்.

பல அடிப்படைகளை விளக்கும் மிக முக்கியமான நூல்.

மநு ஸ்மிருதி நம் வரலாற்றில் எப்படி இருந்தது என்பதை அறியும் பொருட்டு மட்டும் எனக்கு முக்கியமான நூல். மற்றபடி இன்றையத் தேவைகளுக்கும் மநுவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். புத்தக ஆசிரியரும் நம்புகிறார். இன்றைய தேதியில் நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரே சட்டம் இந்தியாவின் சட்டம் மட்டுமே. அதே சமயம் நம் வரலாற்றின் ஸ்மிருதிகள் எப்படி இருந்தன, நம் சமூக அமைப்பு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள மிக முக்கியமான நூல் இது.

Share