Archive for புத்தகப் பார்வை

காலப்பெட்டகம் – புத்தக விமர்சனம்

75 ஆண்டுகாலம் என்பது எந்த ஒரு வகையிலும் மிகப் பெரிய கால அளவுதான். இத்தனை பெரிய கால அளவுகளில் நாடுகள் பிரிந்து போயிருக்கின்றன. நதிகள் காணாமல் போயிருக்கின்றன. மனிதர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சிகள் நீர்த்துப் போயிருக்கின்றன. உலகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஒரு தமிழ்ப் பத்திரிகை தொடர்ந்து 75 வருடம் வந்துகொண்டிருக்கிறது என்பது அதனளவிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை முரசு கொட்டிச் சொல்கிறது ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ‘காலப்பெட்டகம்’ புத்தகம்.

வாரா வாரம் தோராயமாக 100 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும் பத்திரிகை ஒன்றின் 75 கால சித்திரத்தை 368 பக்கங்களுக்குள் அடக்குவது மிகவும் சிரமமான காரியமே. இப்படி 'காலப்பெட்டகம்' நூலை மட்டுமே முன்வைத்து ஆனந்தவிகடனை அணுகினால் நாம் எத்தனையோ நுண்மையான விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும். அதேசமயம் ‘காலப்பெட்டகம்’ வழியாக நாம் காணும் பிம்பமே ஆனந்தவிகடனின் பிம்பமாக பெரும்பாலும் இருக்கும் என்பதுவும் உண்மையே. இந்த இரண்டுக்கும் இடையில்தான் நாம் ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை வாசிக்க இயலும்.

ஆரம்பகால இதழ்களில் ஆனந்தவிகடனின் எழுத்து நடை அந்தக் காலத்துக்கே உரிய மணிப்பிரவாள நடையில் இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு தலைப்பு: ‘வியாசம் அனுப்புவோருக்கு விஞ்ஞாபனம்.' ஆண்டுகள் போகப் போக அதன் நடையும் மாறுகிறது. இப்படித்தான் அரசியலில், திரையுலகில், ஆனந்த விகடனில் இடம்பெற்ற கார்ட்டூன்களில் நடந்த மாற்றங்களை நாம் பார்த்துக்கொண்டே போகமுடிகிறது. பொதுவாகவே நாம் ‘அந்தக் காலம்’ என்று சொல்லும் காலத்துக்கும் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்துக்கும் இடையேயான காலத்தில் ஒரு தார்மிக வீழ்ச்சியைப் பார்க்கமுடியும். இதற்கு ஆனந்தவிகடனும் தப்பவில்லை. செய்திகளின் தரத்திலிருந்து, எந்த மாதிரியான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்என்பதுவரையில் இந்த மாற்றத்தைப் பார்க்கமுடிகிறது. ஒரு சில சமயங்கள் தவிர, மாற்றம் பெரும்பாலும் வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அரசியல் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களை இந்திய தேசியத்தை மையமாக் கொண்ட தமிழ் இதழ்களாக வரையறுக்கலாம். (1930ம் வருடத்திய இதழ்கள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது விகடன். ஆழ்ந்த தேசபக்தி, அதிரடி நகைச்சுவை இரண்டும் விகடனுக்கு இரண்டு கண்கள் போல்.) ஆனால் இன்றோ ஆனந்தவிகடன் இடதுசாரி சித்தாந்தவாதிகளின் இந்திய வெறுப்பைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளை முன்வைக்கும் இதழாக் காட்சியளிக்கிறது. இந்த இந்திய வெறுப்பு மிகவும் திறமையாக, நடுநிலைமை என்ற போர்வையில் கட்டுரையாளர்களால் எழுதப்படுகின்றது என்பதுதான் அதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. வெளிப்படையாக ஆனந்தவிகடன் இந்திய தேசியத்தைக் கைவிட்தாக அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து ஆனந்தவிகடனை வாசிக்கும் எவரும் விகடன் கட்டுரைகளில் தெரியும் பின்-தொனியையும், மாற்றங்களையும் தெளிவாக உணரமுடியும். எது சரி, எது தவறு என்பதல்ல, எப்படி ஆனந்தவிகடன் மாறியிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள செய்தி. சில காலம் ஆனந்தவிகடனின் இதழ்கள் பாரத மாதா லோகோவாகத் தாங்கி வந்திருக்கின்றன என்பதை நம்பமுடிகிறதா உங்களால்.

கார்ட்டூன்கள் என்று எடுத்துக்கொண்டால், ஆண்டுகள் போகப் போக, கார்ட்டூன்களில் வரும் வார்த்தைகள் மிக் கூர்மையாகியிருக்கின்றன. நீண்ட வரிகளைக் கொண்டுவரும் ஆரம்பகால இதழ்களின் கார்ட்டூன்களிலிருந்து, மிகக் குறைந்த வார்த்தைகள் அல்லது வார்த்தைகளே இல்லாமல் வெறும் குறிப்புகளை மட்டும் கொண்டு வெளிவரும் இன்றைய இதழ்களின் கார்ட்டூன்கள் வரை இந்த மாற்றத்தை நாம் ஓரளவுக்கு இந்நூலில் நாம் காணமுடியும்.

இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு வகைகளில் அணுகவேண்டும். வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை தீவிர இலக்கியமாக் கருத இயலாது. வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் பல்வேறு கதைகள் தொடக்ககால ஆனந்தவிகடனிலிருந்து தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன. ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை வருவது என்பது தனிப்பட்ட தகுதியாகவே இருந்திருக்கிறது. தொடர்கதைகளைத் தொடர்ந்து எழுதுபவர்கள் ஹீரோக்களாகவே அறியப்பட்டார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளின் பங்களிப்பைத் தொடக்க கால இதழ்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. பிற்கால இதழ்களில் மிக முக்கியமான இலக்கியவாதிகள் ஆனந்தவிகடனில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்தவகையில் இந்த மாற்றம் ஒரு நேர்மறையான மாற்றமே.

பொதுவாகவே தொடர்கதை வாசிப்பில் நேர்ந்த தொய்வு ஆனந்தவிகடனிலும் பிரதிபலித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ ஆனந்தவிகடன் உருவாக்கும் ‘நாவல்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. நாவல் என்பது தொடர்கதை அல்ல என்பது முக்கியமான விஷயம். இப்படி ஒரு விஷயம் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமல் போனதற்கு ஆனந்தவிகடனின் வீச்சும், அதன் தொடர்கதைகள் தந்த மயக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

காலப்பெட்டகம்’ இதழ் வருட வாரியாக ஆனந்த விகடனில் வந்த முக்கியமான நிக்ழ்வுகளை வைத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, ஒட்டுமொத்தமாக வரிசையாக அஞ்சலிகளாகப் படிக்கிறோம். அலுப்பை ஏற்படுத்தும் அளவுக்குதொடர்ச்சியாக அஞ்சலிக் குறிப்புகளாக வருவதைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதிலும் இசையோடு தொடர்புடையவர்கள் பலரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொகுத்தவர் இசைப்பிரியராக இருந்திருக்கவேண்டும்.

தொகுப்பின் மற்றொரு குறை என்னவென்று பார்த்தால், பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றன. பல தேவையான விஷயங்கள் தொகுக்கப்படவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தைத் தொடங்கி வைத்து இலவச திருமணம் நட்த்தப் போவதாகப் பேட்டி தந்திருப்பது (1989), 75 ஆண்டுகால ஆனந்தவிகடன் இதழ் வரலாற்றில் எப்படி முக்கியமானதாக மாறுகிறது என்பது புரிவதில்லை. அதே சமயத்தில், 76ல் தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றியமைத்த இளையராஜாவைப் பற்றியோ, 91ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான் பற்றியோ குறிப்புகளைப் பார்க்கமுடியவில்லை.

பாரதியார் பற்றிய குறிப்புகள் முதலிலிருந்தே ‘காலப்பெட்டகம்’ நூலில் இடம்பெறுகின்றன. பாரதியார் பற்றியும் காந்தி பற்றியும் தொடர்ந்து கல்கியும் ராஜாஜியும் எழுதியிருக்கிறார்கள். ஜெயேந்திரர் உபதேசம் ஏற்றது (1954), விஜயேந்திரர் உபதேசம் ஏற்றது (1983)எல்லாம் ‘காலப்பெட்டகம்’ நூலில் வருகின்றன.

இத்தனையையும் மீறி நம்மை ரசிக்க வைப்பது, ஆனந்தவிடனின் நகைச்சுவைத் துணுக்குகளே. வார இதழ்களில் கைச்சுவையில் என்றுமே முதலிடம் ஆனந்தவிகடனுக்குத்தான் என்பது என் கருத்து. ‘காலப்பெட்டகம்’ அதனை உறுதி செய்கிறது. ஆரம்பம் முதலே அட்டகாசமான நகைச்சுவைத் துணுக்குகள். (1927ல் வெளியான ஒரு துணுக்கு. ‘அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பர்ந்த ஐயா, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக எதாவது புஸ்தகங்கள் எழுதினால், உடனே எனக்கு வி.பி – யில் அனுப்பி வையுங்கள்.’) அவற்றுடன் போட்டி போடும் கார்ட்டூன்கள். இன்றுவரை ஆனந்த விகடன் இதில் முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.

திரைப்படங்களின் விமர்சனங்கள் அதிக அளவில் ‘காலப்பெட்டகம்’ இதழில் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 20 படங்களின் பட்டியலோடு அவற்றின் விமர்சங்களை மட்டுமாவது தந்திருக்கலாம். அதேபோல் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களின் கட்டுரைகளை அக்காலத் தமிழ் எழுத்துகளிலேயே பதிப்பித்திருக்கலாம். என்னவோ தெரியவில்லை, சீர்திருத்த எழுத்துகளையே பயன்படுத்திவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகால ‘காலபெட்டகம்’ இதழ் 1979ல் (1928 முதல் 1978 வரையிலான ஐம்பதாண்டு காலத் தொகுப்பு) வெளிவந்தபோது, அதில் அக்கால நடைமுறையான, சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகளே இடம்பெற்றிருந்தன. அதில் இருந்த இயல்புத் தன்மை இந்த 75 ஆண்டுகால ‘காலப்பெட்டகம்’ நூலில் இல்லை. இப்போதைய காலப்பெட்டகத்தைவிட, அது அதிகம் விவரங்கள் கொண்டதாகவும், சிறப்பாகத் தொகுக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒவ்வொரு வருடத்தையும் ஒவ்வொரு பிரபலம் தொகுத்திருந்தார்கள்.

காலப்பெட்டகம்’ நூலில் அக்காலத்தில் இடம்பெற்ற சில விளம்பரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆரம்ப கால விளம்பரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதே பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது. (பக்கம் 14)

 சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தில்லானா மோகனாம்பாள் கதை வந்தபோது, எந்த எந்த கதாபாத்திரத்துக்கு எந்த எந்த நடிகர்கள் நடிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் மடல் (1956) அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நடிகர்கள் நடித்து படம் வருகிறது. அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள குதிரை வீரன் சிலை வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கு வருகிறது. அதில் ‘கிண்டி ரேஸை ஒழிச்சதுக்கு குதிரைச் சின்னம்’ (1974) என்று நகைச்சுவையாக எழுதுப்பட்டுள்ளது. எட்டு மாதங்கள் கழித்து (1975) ‘வந்தியத்தேவன்’ குதிரை சிலைக்குக் கீழே அதே வாக்கியங்கள். இப்படிப் பல சுவாரஸ்யங்கள் புத்தகம் நெடுகிலும்.

சுபாஸ் சந்திர போஸுக்கு ஆதரவளிக்கும் விகடன் காந்தியை எதிர்க்கிறான். காந்தியின் தோல்வி (1939) என்றே அதனைச் சொல்கிறான். ஓட்டுப் போடுவதற்கு பணம் தருவது பற்றிய துணுக்குகள் அப்போதே வந்துள்ளன. வேட்பாளர்கள் (அபேட்சகர்கள்!)திருடர்கள் என்று சொல்லும் விகடம் 1934ல் விகடனில் வந்துள்ளது. விகடன் தாத்தாவுக்கு 35ல் கொம்பு முளைக்கிறது. ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை முழுமையாக ஆனந்த விகடன் ஆதரித்திருக்கிறது. எஸ் எஸ் வாசனின் தாயார் மறைந்தபோது அதற்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது விகடன் – 1949ல்! 1950ல் வாசனின் மகள் கல்யாணம் பற்றிச் செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது!! காங்கிரஸின் தீவிர ஆதரவு இதழான விகடன் அண்ணாத்துரையை வரவேற்று (1957) கட்டுரை தீட்டுகிறது. அண்ணாத்துரை 1958ல் விகடனில் தனது சட்டசபை அனுபவங்களை எழுதுகிறார்.

நடிகர்கள் எவ்வப்போது புயல் நிவாரண நிதிகள் கொடுத்தார்கள் என்பது காலப்பெட்டகத்தில் பதிவு செய்யப்படுகிறது! கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் ரசிகனாகவே விகடன் செயல்பட்டதாக ‘காலப்பெட்டகம்’ நூலைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. வாஷிங்டனில் திருமணம் தொடரின் கடைசி பாகத்தில்தான் அதை எழுதியவர் பெயர் (1963) சாவி என்று வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மை போன்ற திருமணப் பத்திரிகையும் அக்கதைக்கு ஏற்றவாறு இடம்பெறுகிறது!

திமுகவின் வெற்றியை விசித்திரம் என்று சொல்லும் (1967) விகடன், திமுகவின் வெற்றியை வாழ்த்துகிறது. முத்தக் காட்சியில் நடித்தேனா என்று ஜெயலலிதா 1970ல் விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதாவின் விளக்கத்தை ஒப்புக்கொள்ளும் விகடன், அதற்கு ஒரு சால்ஜாப்பு சொல்கிறது. அப்போதே ஜெயலலிதா அதிரடிதான். இவரது இந்த அதிரடி பின்னர் ஸ்ரீதருடன் ஏற்படும் கருத்துவேறுபாடு (1996) வரையில் தொடர்கிறது. ஸ்ரீதருக்கு ஜெயலலிதா எழுதியிருக்கும் பதில் – அட்டகாசம். நான் ஏன் பிறந்தேன் தொடரை எழுதுகிறார் எம்ஜியார் (1970) விகடனில் எழுதுகிறார்.

சோவும் சுரதாவும் 1971ல் கம்பாஸிடர் கவிதையில் மோதிக்கொள்கிறார்கள். சோ இந்திராவைக் கிண்டல் செய்து 1974 பொங்கலன்று துக்ளக் விழாவில் பேசிய, டெல்லியில் புதைக்கப்பட்ட டைம் காப்ஸ்யூல் பற்றிய அட்டகாசமான குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. பாசிப்பயறு ஒன்றின் புதிய வகைக்கு அஞ்சுகம் என்ற பெயர் (கருணாநிதியின் அம்மாவின் பெயர்) வைக்கப்படுவதைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. ஜெயலலிதாவின் முதல் மேடைப்பேச்சு பற்றிய (1982) குறிப்பு உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஜெயேந்திரர் தண்டம் விட்டுச் சென்றது பற்றிய அவரது பேட்டி (1987)ல் வெளிவந்துள்ளது.

1993ல் முதன்முதலாக ஒரு சினிமா ஸ்டில் அட்டைப்படமாக வெளியாகியிருக்கிறது. குமரியில் வைக்கப்பட்ட வள்ளுவர் ஏன் வளைந்து நிற்கிறார் என்று கருணாநிதி கேட்டதற்கு உப்புச்சப்பில்லாமல் ஒரு பதில் சொல்லியிருக்கிறார் (2000) கண்பதி ஸ்தபதி. (நாங்கள் எங்கள் உள்வட்டத்தில் இதனை சிம்ரன் சிலை என்றே சொல்லுவோம்.) மொத்தத்தில் இந்த ஒட்டுமொத்த ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை சிவாஜி கணேசனுக்கு சமர்ப்பணம் செய்யலாம் ஆனந்தவிகடன். அடுத்ததாக கருணாநிதிக்கு!

பொதுவாக ஓர் இதழின் இலக்கிய மதிப்பு, அதன் தார்மிக நெறிகள் – இப்படி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது அதன் மீது வெகுஜன மக்கள் காட்டும் ஆர்வம். அதுவும் 75 வருடங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஓர் இதழைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் அதிர்ஷ்டத்தால் வாய்த்த ஒன்றோ அல்லது புறந்தள்ளத்தக்க ஒன்றோ அல்ல. அப்பத்திரிகையின் வெற்றிதான் அது. காலம் மாற மாற காலத்துக்கேற்ப ஓர் இதழ் மாறவேண்டியது கட்டாயம். அந்த மாற்றம் இல்லையென்றால் அப்பத்திரிகை நிச்சயம் அழியும். இதைப் புரிந்துகொண்டிருப்பதே அனந்த விகடனின் பலம். மக்கள் திரைப்படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, ஓர் இதழும் அதனையே கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மாற்றம் என்பது வீழ்ச்சியுடன் மட்டுமே சாத்தியமாகும் என்பது உண்மையல்ல. இப்போது ஆனந்த விகடன் புரிந்துகொள்ளவேண்டியது இது மட்டுமே.

(காலப்பெட்டகம் – 1924 முதல் 2000 வரை, விகடன் பிரசுரம், பக்கம் 368, விலை 180 ரூ)

புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க: Dial for books – 94459 01234 | 9445 97 97 97

நன்றி: ஆழம் மாத இதழ்.

Share

எக்ஸைல் புத்தக வெளியீடு – மரபுகள் கலைக்கப்படும் தருணம்

எக்ஸைல் நாவலுக்கு விமர்சனங்கள், விவாதங்கள் வந்து ஓய வேண்டிய நேரத்தில் புத்தக வெளியீட்டு விழா பற்றிய கட்டுரையா என்ற ஜெர்க் ஆகவேண்டாம். இதை எழுதி மாதங்கள் ஆகின்றன.

கிழக்கு ‘ஆழம்’ என்று ஒரு மாத இதழைக் கொண்டு வர இருக்கிறது. 

அதற்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஓர் இதழைத் தொடங்குவதற்கு முன்பாகச் செய்யவேண்டிய ஆயத்த வேலைகளில் ஏற்பட்ட எதிர்பாராத தாமத்தினால் இதழ் கொஞ்சம் தாமதமாக வெளிவந்திருக்கிறது. இந்த இதழ் எப்போதிலிருந்து வாசகர்கள் கைகளில் கிடைக்கும் என்பதைப் பற்றி பத்ரி தனியே எழுதுவார். இப்போதைக்கு ‘ஆழம்’ இதழில் வெளியான என் கட்டுரை இங்கே.

இக்கட்டுரை ‘ஆழம்’ இதழில் சில எடிட்டிங்குடன் வெளியானது.

என் கட்டுரையை வெளியிட்ட ‘ஆழம்’ பத்திரிகைக்கும், அதன் பதிப்பாளர்-ஆசிரியர் பத்ரிக்கும் பொறுப்பாசிரியர் மருதனுக்கும் என் நன்றி. 

மரபுகள் கலைக்கப்படும் தருணம்

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ நாவல், டிசம்பர் 6 அன்று காமராஜர் அரங்கத்தில் வெளியிடப்பட்டது. சாருவின் நாவல்கள் எவ்விதக் கட்டமைப்புக்குள்ளும் சிக்காமல் வெளியேறத் துடிப்பவை. சாரு சிறப்புக் கவனம் எடுத்து இதனைச் செய்கிறாரா அல்லது அவரது இயல்பான நாவல் வடிவமே கட்டுக்குள் அடங்காமல் திமிறுவதுதானா என்ற விவாதம் எப்போதும் தமிழ் இலக்கிய உலகில் இருந்துகொண்டேதான் இருக்கிறது.

பொதுவாகவே இலக்கியக் கூட்டங்களும் நாவல் வெளியீடுகளும், காதும் காதும் வைத்தமாதிரி ரகசியக் கூட்டங்கள் நடைபெறுவது போல் நடந்தால்தான் இலக்கியத்தன்மையைப் பெறும். ஓர் இலக்கியக்கூட்டத்துக்கு மூன்று இலக்கங்களில் பார்வையாளர்கள் வந்துவிட்டால் உண்மையில் அது தீவிர இலக்கியக்  கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை என்பதே தீவிர இலக்கிய ஆர்வலர்களின் துணிபு. சாரு இதனையும் உடைக்கவேண்டியவராகிறார்.

இலக்கிய கூட்டத்தின் ஒலிபெருக்கிகள் ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறிடி’ என்று அலறுவதைக் கேட்க ஒரு ‘கொடுப்பினை’ வேண்டும். அராபியப் பாடல் ஒலிக்க வாலி பேச ஓர் இலக்கியக் கூட்டத்தின் மரபுகள் அத்தனையும் காமராஜர் அரங்கத்தில் கலைத்துப் போடப்பட்டன. ஜோல்னாப் பை இல்லாமல் கோட் சூட் போட்டு மேடையேறினார் சாரு. இதற்கும் ஒரு விளக்கம் சொன்னார். அது நமக்குத் தேவையற்றதே. விஷயம், சாரு மேடை மரபுகளைக் கலைக்கிறார் என்பதே. 

சாருவே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தனக்குக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிகழ்ச்சியின் ஆற்றொழுக்கைக் குலைத்து குலைத்து, இது ஒரு மரபுகளற்ற மேடை என்பதை நிறுவுவதில் குறியாக இருந்தார். இப்படி மரபுகள் கலைக்கப்படும்போதெல்லாம் சாருவின் ரசிகர்கள் கைதட்டி விசிலடித்துக் கொண்டாடினார்கள். வொய் திஸ் கொலைவெறி பாடல் ஒலிபரப்பட்ட நோக்கம் அந்தக் கூட்டத்தின் ஒவ்வொரு இடைவெளியிலும் சீழ்க்கையின் வழியே பரவிய தருணம் அது.

இலக்கியக் கூட்டத்தின் இன்னொரு புதுமையாக, எக்ஸைல் நாவலின் முதல் பிரதி 50,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுத்தவர் மேடைக்கு வரவில்லை. மற்ற சில கொலைவெறித் தற்கொலைப் படை சாருவின் ரசிகர்களும் அவரவர்க்கு ஏற்ற சக்தியில் ஏலம் எடுத்திருந்தார்கள் என்னும் செய்தியும் சொல்லப்பட்டது. நெடுங்கால இலக்கிய மரம் விதையூன்றப்பட்ட நிமிடம் அது என உவப்பானார்கள் சாருவின் ரசிகர்கள்.

தான் ஏன் புத்தகத்தை வெளியிட வாலியை அழைத்தேன் என்பதற்கு சாரு வெளிப்படையாகச் சொன்ன காரணம், தன் இலக்கிய வாழ்வில் தன்னைப் புகழ்ந்த ஒரே வெகுஜன விஐபி வாலி மட்டும்தான் என்பதே. ஆனந்த விகடனில் வாலி எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ தொடரில் வாலி சாருவைப் பற்றிப் புகழ்ந்திருந்தார். வாலி இதுவரை தன் வாழ்நாளில் எதற்கும் சமரசமே செய்ததில்லை என்னும் வாலிக்கே தெரியாத ரகசியத்தைச் சொன்னார் சாரு. ஆனால் அதே ‘நினைவு நாடாக்கள்’ தொடரில், நியூ படத்தில் இடம்பெற்ற ‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’ என்று எழுதிய வரியை, ஏ.ஆர்.ரஹ்மானின் நிர்ப்பந்ததுக்கு இணங்க ‘கைதொழும் தேவதை அம்மா’ என்று மாற்றி எழுதியதை எரிச்சலுடன் பதிவு செய்திருந்தார் வாலி. புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய வாலியும் மேடையில் பேசும்போது தனக்கு சமரசம் செய்து பழக்கமில்லை என்ற அர்த்தத்தில் ‘எந்த இசையமைப்பாளரின் கருணையும் எனக்குத் தேவையில்லை’ என்றார். 80 வயதில் முழங்குவது எளிது. சாருவின் வெளிப்படைத் தன்மையைப் பற்றிப் பேசிய வாலி, தான் இந்த விழாவுக்கு வந்ததே சாருவின் புகழ் உலகறியவேண்டும் என்பதற்காகவே என்றார்.

அடுத்துப் பேசியவர் இந்திரா பார்த்தசாரதி. இந்திரா பார்த்தசாரதியும் சமரசம் செய்ததில்லை என்றார் சாரு. தன் புத்தகத்தை வெளியிட வரும் விருந்தினர்கள் சமரசமற்றவர்கள் என்று சொல்வதில் சாரு எடுத்துக்கொண்ட கவனம் ரசிக்கத்தக்கதாக இருந்தது. 

ஏன் செக்ஸைப் பற்றி எழுதக்கூடாது என்பதே இபாவின் ஒட்டுமொத்தப் பேச்சின் ஒருவரி சாராம்சமாக இருந்தது. டெல்லியில் வாழ்ந்த காலங்களில் என்றெல்லாம் எங்கெங்கோ அலைபாய்ந்து மீண்டும் சாருவின் எக்ஸைல் நாவலில் செக்ஸ் இருந்தால் என்ன தவறு என்ற புள்ளிக்கு வந்து சேர்ந்தார் இபா. இது சாஃப்ட் போர்னோ அல்ல, ஹார்ட் போர்னோ என்றார். செக்ஸைக் குற்றவுணர்ச்சியோடு அணுகுபவர்கள் படிக்கக்கூடாத நாவல் என்றார். என்ன தோன்றியதோ இபாவுக்கு, திடீரென்று, இப்படியெல்லாம் சொல்வதால் நான் இப்படித்தான் என்று அர்த்தமல்ல என்றார். இதேபோன்று தற்காப்புக் கலையை இரண்டு இடங்களில் பயன்படுத்தினார். இவருக்கும் 80 வயது. 80 வயது மூத்த எழுத்தாளர்கூட மேடையில் தான் இப்படி அல்ல என்கிற டிஸ்கிளெய்மரோடு பேசவேண்டியிருக்கிறது. அதுவும் சாருவின் கூட்டத்தில். என்னவொரு முரண்நகை!

விழாவுக்கு வந்திருந்த மதனைப் பேச அழைத்தார் சாரு. மதன் தன்னை நாவலில் பாதித்த விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்திருக்கும் அம்சங்கள் பற்றியும் தெளிவாகப் பேசினார். உலக எழுத்துகளைப் படித்திருக்கும் தன்னால், சந்தேகமே இல்லாமல் இந்நாவல் ஓர் உலகத்தரமான நாவல் என்று சொல்லமுடியும் என்றார். இந்திரா பார்த்தசாரதியும் வாலியும் பேசியிருந்தாலும், மதனின் பேச்சே சாருவின் நாவலை மிகச் சரியாகத் தொட்டுப் பேசக்கூடியதாக அமைந்தது. 

சாரு தன் வலைத்தளத்தில், முகநூலில் தன் வாசகர் வட்டத்திலும் இந்நூலுக்கு தொடர்ந்து மார்க்கெட்டிங் செய்திருந்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. ஓர் எழுத்தாளன் தன்னை ஏன் இப்படி மார்க்கெட்டிங் செய்துகொள்ளவேண்டும் என்ற இலக்கியக் கேள்வி ஒருபுறம். ஓர் எழுத்தாளன் தனது புத்தகங்களை விற்க தன்னால் இயன்றதை ஏன் செய்யக்கூடாது என்னும் உலக நிர்ப்பந்தம் மறுபுறம். எப்போதும் மரபுகளைக் கலைத்துப்போட விரும்பும் சாரு இலக்கிய மரபின் பக்கம் நிற்காததே யதார்த்தம். இல்லையென்றால், எந்தவொரு இலக்கியக் கூட்டத்திலும் விசிலடிக்கும் ரசிகர்களையோ, விழாவுக்கு வருவதற்கு முன்பாகவே கர்ம சிரத்தையாக எக்ஸைலின் ஒரு பிரதியை வாங்குவதைக் கடமையாகக்கொண்ட வாசகர்களையோ நாம் பார்க்கவே முடியாது. 

சாருவின் ரசிகர்கள் இந்நாவலை வாங்கலாமா வேண்டாமா அல்லது ஏன் வாங்கவேண்டும் என்னும் உளச்சிக்கல்களுக்குள் இறங்குவதே இல்லை. சாருவின் நாவல் என்பதே தாங்கள் வாங்கத்தான் என்ற தோரணையில் சாருவின் ரசிகர்கள் நாவலை வாங்குவதைப் பார்க்கமுடிந்தது. இது இலக்கியத்தின் போக்குக்கு உகந்ததா அல்லது இலக்கியத்திலிருந்து முற்றிலும் பிரித்தறியப்படவேண்டியதா என்பது தனிக்கேள்வி. இக்கேள்விகூட இலக்கியவாதிகளுக்கு உரியதே அன்றி, அவரது ரசிகர்கள் ஒருபோதும் இக்கேள்வியை எண்ணிப் பார்க்கப்போவதுகூட இல்லை. ரசிகர்களின் உடனடிக் கேள்விகளெல்லாம், திருவிழாவுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்று சாரு அறிவிக்கப்போகிறார் என்பதில் மட்டுமே.

ஆனால் சாருவைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கவேண்டியது கட்டாயமாகிறது. இதுவரை சாரு என்பவர் தன் வழியை தன் கர்வத்தால் நிர்ணயிப்பவராகவும், அவரது வாசகர்கள் அவரது வழியை ஏற்றுக்கொள்பவர்களாகவுமே இருந்திருக்கிறார்கள். சாருவே தொடக்கப்புள்ளி. அவரது வாசகர்கள் தொடர்புள்ளிகளே. ஆனால் இப்போதைய சாருவிடத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள். இணையம் சாருவைப் பாதித்திருக்கும் விதம் ஆய்வுக்கு உரியது. சாரு தன் ரசிகர்களின் கட்டாயங்களுக்கேற்ப இயங்குவது போன்ற தோற்றம் வலுவடைகிறது. வாசகர்கள் என்பவர்கள் ரசிகர்களாகும் ரசவாதத்தை சாரு ரசிக்கிறாரோ என்கிற எண்ணம் வலுப்படுகிறது. சாரு என்னும் ஓர் முன்னாள் இலக்கியவாதியின் இந்தத் தடம்பெயர்வு ரசிக்கத்தக்கதல்ல. நீண்டகால நோக்கில் இலக்கியம் என்னும் ஆதார விழுமியத்துக்கு இது கேட்டையே விளைவிக்கும். சாரு தன் வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் கேள்விகளை டிசம்பர் 6ல் உருவாக்கி அமைதியானது காமராஜர் கலையரங்கம்.

எக்ஸைல் புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க Dial For Books 94459 01234 | 9445 97 97 97

Share

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்

 

 

விலை: 180

Dial for books: 94459 01234 | 9445 97 97 97

அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ (ஒரே பொருளுக்கு நான்கு வார்த்தைகள்!) புத்தகம் கிழக்கு வெளியீடாக வெளிவந்துள்ளது. நேற்று முதல் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்குக் கிடைக்கிறது. நான் எதிர்பார்த்தது போலவே நிறைய பேர் விருப்பத்துடன் வாங்குகிறார்கள். வாங்க யோசிப்பவர்களை, பின்னட்டையில் என்ன எழுதியிருக்கிறது என்பதைப் படிக்கச் சொன்னால், படித்துவிட்டு உடனே வாங்கிவிடுகிறார்கள்.

புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து:

 

கம்யூனிஸம் உலகுக்குக் கொடுத்த கொடை பஞ்சம் படுகொலை பேரழிவு. கம்யூனிஸத்தின் பெயரைச் சொல்லி உலகெங்கும் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை பலகோடி. கம்யூனிஸ்ட்டுகள் உலகில் தாம் சென்ற இடங்களில் எல்லாம் படுகொலைகளையும் பேரழிவுகளையும் ஈவு இரக்கமின்றி ஏற்படுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு நிறுவுகிறது இந்நூல்.

லெனின், ஸ்டாலின், மாஓ என்று தொடர்ச்சியாக கம்யூனிஸத் தலைவர்கள் எல்லோருமே எப்படி ரத்தம் தோந்த வரலாற்றை எழுதினார்கள்? எப்படி சக தோழர்களையே வேட்டையாடினார்கள்? புக்காரினுடம் டிராட்ஸ்கியும் என்ன ஆனார்கள்? சே குவேரா உண்மையிலேயே இளைஞர்களின் ரோல் மாடல்தானா? ஸ்டாலின், லெனினை எப்படி எதிர்கொண்டார்? ரஷ்யா உண்மையிலேயே கனவு பூமிதானா? வதைமுகாம்கள், கூட்டுப்படுகொலைகள் என்பதெல்லாம் ஹிட்லர் காலத்துக்கு முன்பே ரஷ்யாவில் உண்டா? வரலாற்றின் மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது இந்தப் புத்தகம்.

கம்யூனிஸம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? நேருவின் கம்யூனிஸப் பாசம் இந்தியாவுக்குத் தந்த பரிசு என்ன? தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு என்ன ஆனது? கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகள் இந்தியாவில் ஆடிய ஆட்டங்கள் என்ன? இவற்றையும் பதிவு செய்திருக்கிறது இந்நூல்.

வெறும் வாய்ப்பந்தல் போடாமல், சிவப்பு பயங்கரத்தைப் பற்றிய ஒவ்வொரு குறிப்பையும் அதற்கான ஆதாரத்துடன் எழுதியுள்ளார் அரவிந்தன் நீலகண்டன். தமிழ்ப்புத்தக வரலாற்றில் மிக முக்கியமான நூலாக இது அமையும்.

பொதுவாகவே கம்யூனிஸம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள், கம்யூனிஸம் என்றால் முற்போக்கு என்று நினைத்துக்கொண்டு அதனால் அங்கு சென்று சேர்ந்தவர்கள் அல்லது தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்வது பெருமை தருவது என்று நினைத்துக்கொள்பவர்கள் – இவர்கள் யாருக்குமே கம்யூனிஸத்துக்கு ரத்தம் எவ்வளவு பிடிக்கும் என்பது அவ்வளவாகத் தெரியாது. ஏதோ மீடியா குழந்தைகளாக கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.

கம்யூனிஸத்தின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை, கூட்டுப்படுகொலைகளை, வதைமுகாம்களைப் பற்றியெல்லாம் பொதுப்புத்தி கம்யூனிஸ்ட்டுகள் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றாலே நேர்மையாளர்கள் என்ற எண்ணமும் இங்கே உள்ளது. ஆனால் உலகளாவில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் சந்தர்ப்பவாதிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த மீடியா குழந்தைகள் அறிந்திருக்கப்போவதில்லை.

அரவிந்தன் நீலகண்டனின் பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் புத்தகம் இது அத்தனையைப் பற்றியும் தெளிவாக, விரிவாக, ஆதாரத்துடன் பேசுகிறது.

இந்தப் புத்தகத்தைப் படிக்கப் போகும் மென்மையான இதயம் படைத்த அத்தனை பேரும் அதிரப் போவது நிச்சயம். எங்கெல்லாம் கம்யூனிஸம் அங்கெல்லாம் வரிசையாக பஞ்சமும் படுகொலையும் பேரழிவும் வந்துகொண்டே இருக்கின்றன. படுகொலை என்றால் கூட்டுப்படுகொலைகள். விவசாயிகளை ரக ரகமாகக் கொன்று குவித்திருக்கிறார்கள் நம் உலகத் தோழர்கள்.

லெனின் ஸ்டாலினுக்கு இடையே நடக்கும் போட்டி, ஸ்டாலினைப் பார்த்து லெனினே அதிர்ந்து போவது, ஏன் லெனின் புதைக்கப்படவில்லை என்றெல்லாம் புத்தகம் பட்டையைக் கிளப்புகிறது. இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று எழுதினாலே அதுவே இன்னும் 4 பக்கத்துக்கு வரும். மேலும் நான் ஒருமுறை மட்டுமே வாசித்திருக்கிறேன். இன்னொரு முறை நிதானமாக வாசிக்கவேண்டும். அத்தனை முக்கியமான புத்தகம்.

கம்யூனிஸ்ட்டுகள் போல காந்தியை விதவிதமாக விமர்சித்தவர்கள் யாருமில்லை. தன் பேத்தியோடு படுத்து தனது பிரம்மச்சரியத்தைப் பரீட்சித்த காந்தி பற்றிப் பேசவேண்டுமானால் கம்யூனிஸ்ட்டுகள் துள்ளிக்குதித்து ஓடிவருவார்கள். ஆனால் மாஓவின் பெண் தொடர்பு, அதன் ஆராய்ச்சி பற்றியெல்லாம் பேசமாட்டார்கள். மாஓ புனிதரன்றோ. காந்தி கெடக்கான் கெழவன்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் உலக கம்யூனிஸ்ட்டுகள் மீது வெறும் இளக்காரம் மட்டுமே எனக்கு மிஞ்சுகிறது. எப்படி உலக கம்யூனிஸ்ட்டுகள் ஸ்டாலினையும் மாஓவையும் தலைவர்களாக முன்வைக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனை எத்தனை கொலைகள்! எதுவுமே அக்கறையில்லை! எல்லாம் சிவப்பு மயம்.

இந்திய கம்யூனிஸ்ட்டு நேர்மையாளர்கள் பற்றியும் இந்தப் புத்தகத்தில் ஒரு நீண்ட அத்தியாயம் உண்டு. நேருவைப் பற்றி இந்தப் புத்தகம் தரும் சித்திரம் அட்டகாசமானது. அதேபோல தாஷ்கண்ட்டில் லால் பகதூர் சாஸ்திரி மரணம் அடையும் அத்தியாயம் ஒரு நாவலைப் போன்றது. சே குவேராவைப் பற்றிய அத்தியாயம் – நல்ல நகைச்சுவை! மாஓவின் அத்தியாயமோ கிளுகிளு. பௌத்த மடலாயங்களுக்கு, சீன கலாசாரத்துக்கு நேர்ந்ததைச் சொல்லும் அத்தியாயமோ அதிர்ச்சி. எல்லாவற்றிலும் வன்முறை. கம்யூனிஸ்ட்டுகள் எதிலுமே குறைவைப்பதில்லை.

உலகளவில் கம்யூனிஸம் ஏற்படுத்திய பஞ்சத்தால் மக்கள் வேறு வழியின்றி நரமாமிசம் உண்டது பற்றிய தகவல்களைத் தரும் அத்தியாயம் உங்களை உலுக்கக்கூடியது. ஜெயமோகனின் நாவல்களைப் படித்தும், சில உலகத் திரைப்படங்களைப் பார்த்து மட்டுமே நான் இதுவரை பதறியிருக்கிறேன். அதற்கு நிகரான பதற்றத்தைத் தந்தன, இந்தப் புத்தகத்தின் சில அத்தியாயங்கள்.

96களில்ஜெயமோகன் எழுதியதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அளவிற்கு, நான் இன்னொருமுறை இன்னொரு எழுத்தாளரைப் பார்த்து ஆச்சரியப்படுவேன் என நினைக்கவில்லை. அது நிகழ்ந்தது அரவிந்தனின் நீலகண்டனின் எழுத்துக்களைப் பார்த்துதான். இந்நூலின் மூலம் அரவிந்தன் நீலகண்டன் முக முக்கியமான எழுத்தாளராக நிலைபெறுவார்.

பல இளைஞர்கள் கம்யூனிஸம் என்றாலே என்னவென்று தெரியாமல் அதன் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். ஒரு ப்ளஸ் டூ படிக்கும் பையன் இந்த நூலைப் படித்தால், அவன் வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸம் பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டான். கம்யூனிஸத்தின் மீது எதிர்க்கருத்துக் கொண்டிருப்பவர்கள் செய்யவேண்டிய ஒன்று, இந்த நூலை இளைஞர்களுக்கு வாங்கிக் கொடுப்பது. இப்படி ஒரு நூல் இதுவரை தமிழில் இல்லாததுதான் பெரிய குறையாக இருந்தது. அந்தக் குறையும் தீர்ந்தது. இனிமேல் நடக்கவேண்டியது, இந்தப் புத்தகத்தை தமிழர்களுக்குப் பிரபலப்படுத்தவேண்டியது மட்டுமே. இதனை மிக முக்கியமான கடமையாக நினைத்துச் செய்யவேண்டும். (கிழக்கு வெளியிட்ட புத்தகம் என்பதற்காக இப்படிச் சொல்கிறேன் என நினைப்பவர்களுக்குத் தடையில்லை!)

கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்று பார்க்க ஆர்வமாக இருக்கிறது. நிச்சயம் திககாரர்கள் போல, அரவிந்தன் நீலகண்டனின் இன்னொரு புத்தகமான உடையும் இந்தியா புத்தகத்தை உடைக்கிறேன் என்று சொல்லி, தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டு நிற்கமாட்டார்கள் என்பது உறுதி. வேறு எப்படி எதிர்கொள்வார்கள் என்று தெரியவில்லை. வினவு-ல் ஒரு கட்டுரை வரலாம். அவர்கள் மட்டுமே இதனை எதிர்கொள்வார்கள் என நினைக்கிறேன். மற்றபடி கம்யூனிஸ்ட்டுகள் ‘பின் தொடரும் நிழலின் குரலை’ கைவிட்டது போலவே இதையும் கைவிட்டுவிடுவார்கள். வேறென்ன செய்யமுடியும்? வாய்ப்பந்தல் போட்டு கட்சி மேடைகளில் பேசும் விடலைகளுக்கு எதிராக அறிவுப்பூர்வமாகப் பேச கம்யூனிஸ்ட்டுகளால் முடியும். ஆனால் மிக அறிவுப்பூர்வமாக எழுதப்பட்ட, ஆதாரத்தோடு எழுதப்பட்ட புத்தகத்தை எப்படி எதிர்கொள்ளமுடியும்? மௌனத்தால்தான்!

எனவே நண்பர்களே, ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ புத்தகத்தை நிச்சயம் வாங்குங்கள். உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் நண்பர் தோழரென்றால் அவர் நிச்சயம் வாசிக்கவேண்டியது இந்தப் புத்தகம் மட்டுமே! உங்கள் நண்பர் அல்லது அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பரிந்துரை செய்யுங்கள். முடியுமென்றால் நீங்களே வாங்கி அன்பளிப்பாக அளியுங்கள். மற்றவை தன்னால் நடக்கும்.

வந்தே மாதரம்.:))))))

(இந்தப் புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கில் கிடைக்கும். கிழக்கு அரங்கு F 7)

Share

காந்தி புத்தகங்கள்

 

எதிர்பாராத ஒரு தருணத்தில் வ.உ.சியைப் பற்றியும் ராஜாஜியைப் பற்றியும் இரு புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். பொதுவாகவே, சென்னை புத்தகக் கண்காட்சியில் மட்டுமே புத்தகங்கள் வாங்குவேன். பாழாய்ப் போன வரலாற்று ஆர்வம், இந்தமுறை பெரிய அளவில் வேட்டு வைத்துவிட்டது.  ராஜாஜி வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், ராஜாஜியைவிட அதிகமாக காந்தியைப் பற்றிப் பேசப்படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுமளவுக்கு காந்தியைப் பற்றிய பதிவுகள் இருந்தன. வ.உ.சி வரலாற்றில், வ.உ.சியின் அந்திம காலத்தில்தான் காந்தியைப் பற்றிய பதிவுகள் வருகின்றன.

அப்போதுதான் ’அண்ணா ஹசாரே – ஊழலுக்கெதிரான காந்தியப் போராட்டம்’ படித்தேன். இதில் ஹசாரேவைப் பற்றிய ஒவ்வொரு விவரிப்பிலும் காந்தியைப் பற்றிய விவாதமும் இருந்தது. ’இன்றைய காந்தி’ புத்தகம் – தமிழில் நிகழ்ந்த ஒரு சாதனை என்றே சொல்லவேண்டும். ஓராண்டுக்கு முன்பு இதைப் படித்தேன். இலங்கை சென்றிருந்தபோது இந்தப் புத்தகத்தைப் பற்றி நிறைய விவாதித்துக்கொண்டிருந்தது இன்னும் பசுமையாக மனத்தில் இருக்கிறது. இப்புத்தகம் தந்த அனுபவம் மறக்கமுடியாதது. ஒருவரது வாழ்க்கை வரலாற்றை, பிறப்பு தொடங்கி இறப்பு வரை படிப்பதற்குப் பதிலாக, இப்படிக் கேள்வி பதில் மூலம், அத்தலைவர் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள், அந்தத் தலைவர் எடுத்த முடிவுகள், அதன் விளைவுகள் எனப் படிப்பது எளிதானதாகவும், குழப்பமில்லாமலும் இருந்தது. பகவத் கீதையே கேள்வி பதில் வடிவில் அமைந்ததுதான். எனவே கேள்வி பதில் மூலம் படிப்பது ஒருவகையில் பழக்கமானதே என்ற முடிவை மூளை எடுத்துவிடுகிறதோ என்னவோ. அண்ணா ஹசாரேவின் புத்தகத்தைப் படித்ததும் தொடர்ந்து காந்தியைப் பற்றிப் படிக்க முடிவெடுத்தேன். ஏற்கெனவே, ஜெயஸ்ரீ வாங்கிக் கொடுத்து மூலையில் தூங்கிக் கிடந்த ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’யை எடுத்தேன்.

அப்போது நடந்த சில ஃபேஸ்புக் விவாதங்களுக்காக வேறு சில புத்தகங்களைப் படிக்கவேண்டியிருந்தது. ஜெயமோகனின் குழுமத்தில் நடக்கும் விவாதங்களில் காந்தி பற்றிய சில புத்தகங்களைச் சொன்னார்கள். முக்கியமானது, பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘காந்தி வாழ்க்கை’ என்னும் புத்தகம். லூயி ஃபிஷர் எழுதி, திஜர தமிழில் மொழிபெயர்த்திருக்கும் புத்தகம். அதையும் வாங்கினேன். (நான் மேம்போக்காக வாசித்துப் பார்த்த வகையில் மொழிபெயர்ப்பு அட்டகாசம்.) ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ’தண்டியாத்திரை, புத்தகமும் வாங்கினேன். இது நேரடியான தமிழ் நூல். ’நவகாளி யாத்திரை’ (சாவி எழுதியது, நர்மதா வெளியீடு) புத்தகம் கிடைக்கவில்லை. அதையும் வாங்கவேண்டும். இது ஒரு சிறந்த வரலாற்றுப் புத்தகமாக இருக்கும் எனத் தோன்றவில்லை. காந்தியைப் பற்றிய சாவியின் பக்தி வெளிப்பாடாகத்தான் இருக்கும். இருந்தாலும், நேரடியாக நவகாளி சென்று, காந்தியுடன் 2 நாள்கள் தங்கியிருந்து எழுதிய புத்தகம் என்பதால், வாசிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். (நவகாளி யாத்திரை பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தில் மேய்ந்தபோது, மலர்மன்னன் எழுதிய அட்டகாசமான கட்டுரை கண்ணில்பட்டது.)

இப்படி புத்தகங்களைப் படித்தால் காந்தி பற்றிய ஒரு பெரிய தெளிவு கிடைக்கும் எனத் தோன்றுகிறது. காந்தியைப் படிக்க படிக்க அப்படியே அவர் என்னை ஹைஜாக் செய்வதும் புரிகிறது. கல்லூரியில் காந்தியன் ஸ்டடீஸ் என்ற சர்டிஃபிகேட் கோர்ஸ் படித்துத் தேர்ச்சி பெற்றேன். அப்போதே அந்தக் கல்லூரி ஆசிரியர் ஒழுங்காக காந்தியைப் பற்றிச் சொல்லித் தந்திருந்தால், இந்நேரம் காந்தியைப் பற்றிப் பல புத்தகங்களை வாசித்து முடித்திருந்திருக்கலாம். அப்போது தானே கிளம்பும் உத்வேகம் வராததால், காந்தியைப் பற்றி ஒழுங்காகப் படிக்காமல் விட்டது இப்போது வருத்தம் தருகிறது.

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (கிழக்கு வெளியீடு) இரண்டு பாகங்கள். முதல் பாகத்தை பாதி படித்தேன். இரண்டாம் பாகத்தில் தேவையான சில பகுதிகளைப் படித்தேன். இந்தப் புத்தகத்தையும் முழுமையாகப் படிக்கவேண்டியுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது ஓர் எண்ணம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்தப் புத்தகமும் தமிழில் ஒரு சாதனைதான். ராமசந்திர குஹா எழுதி தமிழில் ஆர்.பி.சாரதியால் (பா.ராகவனின் தந்தை) மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 20 வருடங்களுக்காவது இப்புத்தகம் தமிழில் நிலைத்து நிற்கும். தொடர்ந்து பேசப்படும். இந்த அரிய சாதனையை செய்திருப்பது கிழக்கு பதிப்பகம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட வகையில் மகிழ்ச்சி. இந்த முக்கியமான புத்தகத்தைப் பற்றி சில விமர்சனங்களும் வந்துள்ளன. குஹா ஒரு மார்க்சியர் என்பதால் அச்சார்புடன் புத்தகம் உள்ளது என்பது ஒரு குற்றச்சாட்டு. சார்பு இதுதான் எனத் தெரிந்துகொண்டு புத்தகத்தைப் படிப்பதில் ஒரு பிரச்சினையுமில்லை. நடுநிலை என்ற அறிவிப்போடு வரும் புத்தகத்தை வாசிக்கும்போதுதான் மனம் அலைபாயத் தொடங்கிவிடுகிறது! மேலும், சார்பை மீறி பல விஷயங்களைத் தெளிவாகவே குஹா குறிப்பிட்டிருக்கிறார். இன்னொரு குற்றச்சாட்டு, வலதுசாரிகளின் பங்களிப்பை சரியாக குஹா பதிவு செய்யவில்லை என்பது. இப்புத்தகத்தை முழுமையாகப் படித்தால், இக்குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது தெரியும். இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இருந்தாலும், அதை வைத்து இப்புத்தகத்தைப் புறந்தள்ளமுடியாது. 10 ஆண்டுகாலம் உழைத்து, ஒரு பெரிய கண்ணோட்டத்தில், விரிவான பார்வையில் எழுதும்போது இதுபோல நிகழ்வது சகஜமே. தேவை என்றால், வலதுசாரிகள்தான் அவர்கள் கண்ணோட்டத்தில் வரலாற்றைப் பதிவு செய்யவேண்டும். அத்வானியின் தன்வரலாற்று நூலான ‘என் தேசம் என் வாழ்க்கை’ இந்த வகையில் ஒரு முக்கியமான புத்தகமே. அதை ஏற்கெனவே படித்துமுடித்துவிட்டேன். அது பற்றிப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் – தேவைப்படுமானால் எழுதுவேன்.

இப்போது நான் படிக்கவேண்டிய புத்தகங்கள்:

01. காந்தி வாழ்க்கை

02. இன்றைய காந்தி (மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும்)

03. தென்னாப்பிரிக்காவில் காந்தி

04. தண்டி யாத்திரை

05. இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு

06. நவகாளி யாத்திரை

இத்தனை புத்தகங்களைப் படிப்பதற்காகத்தான் டிவிட்டரிலிருந்தும், ஃபேஸ்புக்கிலிருந்தும் வெளியேறினேன். நேரம் நிறையவே கிடைக்கிறது!

இன்னும் ஒரு புத்தகமும் வாங்கவேண்டியிருக்கிறது. ராஜாஜியைப் பற்றி ராஜ்மோகன் காந்தி எழுதி, கல்கி ராஜேந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டு வானதி வெளியீடாக வந்திருக்கும் புத்தகம், ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு. இதையும் வாங்கிப் படிக்கவேண்டும்.

புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: Dial For Books – 94459 01234 | 9445 97 97 97

Share

அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்

நான் எழுதிய ‘அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ புத்தகத்தின் விமர்சனம் தமிழோவியம் தளத்தில் வெளியாகியுள்ளது.

Share

தலித்துகளும் பிராமணர்களும்

 

 

தலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ’அந்தணர் வரலாறு’ எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் எழுதியது. இவர் எழுதிய ’அந்தணர் வரலாறு’ தந்த பயம் காரணமாக, இவரது எழுத்துகள் மீது கொஞ்சம் விலகல் இருந்தது. இந்தப் புத்தகம் அந்த விலகலைத் துடைத்துப் போட்டிருக்கிறது.

’தலித்துகளும் பிராமணர்களும்’ புத்தகத்தை ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு தலித் தலைவர்களும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று நூலாசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நிலவும் மனத்தடை காரணமாக இவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

எனக்கென்னவோ உண்மையில் ஒவ்வொரு (தங்களை அப்படி உணரும்) பிராமணரும் படிக்கவேண்டிய நூல் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொரு (தங்களை பிராமணராகவே உணரும்) பிராமணருக்கு இந்த நூலை வாங்கித் தருவது அவசியம். வாங்கித் தரும்போது மறக்காமல் சொல்லவேண்டியது, ’இந்த நூலைப் படிக்கவேண்டியதன் அவசியம் உங்கள் பிராமணப் பெருமைகளைப் புதுப்பித்துக்கொள்ள அல்ல, மாறாக பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’

கே.சி. லட்ச்மி நாராயணன் பல விஷயங்களில் கவனம் செலுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்துகொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.

’அரிஜன அய்யங்கார்’ என்னும் தன் வரலாற்று நூலை அடிப்படையாக வைத்து ஆலந்தூர் மள்ளன் எழுதிய (உணர்வு-பிரசார!) சிறுகதை இங்கே.

நூல் விவரம்:

 

தலித்துகளும் பிராமணர்களும், ஆசிரியர்: கே.சி.லட்சுமி நாராயணன், Rs. 120,  வெளியீடு: LKM Publications, Old No 15/4, New No 33/4, Ramanathan Street, T Nagar, Chennai – 600017, +(91)-(44)-24361141, 24340599, +(91)-9940682929

இந்நூல் பற்றிய தினமலர் புத்தக அறிமுகம் இங்கே.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்: ஊரும் சேரியும் – சித்தலிங்கய்யா, கவர்மெண்ட் பிராமணன் – அர்விந்த் மாளகத்தி. இவை பற்றிய சிறிய குறிப்புகள் பின்னர். 

 

Share

வாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்

 

வாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு? தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.

கிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராமத்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.

40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது.  பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள்? கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.

கதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.

புராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே. 

ஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.

நாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது. 

மிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.

வாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html

Share

நான் நாகேஷ் – சிறிய குறிப்பு

நான் நாகேஷ் படித்தேன். சுவாரஸ்யமான புத்தகம்தான். கல்கியில் தொடராக வந்ததன் தொகுப்பு. பலப்பல சுவாரய்ஸ்மான சம்பவங்கள். நாகேஷ் உண்மையில் பெரிய குறும்புக்காரராகவே வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் ‘நான் நாகேஷ்’ என்ற பெயரை இப்புத்தகம் நிறைவு செய்கிறதா என்று பார்த்தால் பெரிய ஏமாற்றுமே எஞ்சுகிறது. புத்தகம் வெறும் துணுக்குத் தோரணமாக மாறிவிட்டது. நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சிறிய சிறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை நாகேஷ் அதனை விரும்பியிருக்காமல் இருக்கக்கூடும். இதனால் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய முழுமை கிடைக்காமல் போய்விட்டது. நாகேஷ் பல படங்களில் நடித்தவர். பல அனுபவங்கள் பெற்றவர். இப்படியான ஒருவரின் எண்ண ஓட்டம் அறுந்து அறுந்து ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று கால வரிசைப்படிப் பேசியிருக்கவேண்டும், அல்லது மனிதர்களை முன் வைத்துப் பேசியிருக்கவேண்டும். வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் போல. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டதில், யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்காமல் போய்விட்டது இப்புத்தகம். கமல் கமல்தான், ரஜினி ரஜினிதான் என்றெல்லாம் துணுக்குகளாகப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. இவை எல்லாமே கல்கியில் வந்ததுதானா அல்லது புத்தகமாக்கப்படும்போது ஏதேனும் எழுதி சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இதை மீறி நாகேஷ் விவரித்திருக்கும் பல சமபவங்கள் சுவாரயஸ்மாக உள்ளன. ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்தது, அப்படத்தின் வெற்றி விழாவுக்கு இவர் அழைக்கப்படாமல் போனது, கடன் வாங்க துண்டோடு நடந்து போனது, (கிருஷ்ணன்) பஞ்சுவிடம் சட்டை பொத்தான் எங்கே என்று தேடியது என பல சுவாரயஸ்மான துணுக்குகள். எல்லாவற்றிலும் நாகேஷ் ஏதோ ஒன்றை துடுக்குத்தனமாகச் செய்திருக்கிறார்.

 நாகேஷின் திரைப்பட வாழ்வை அழித்தது எம்ஜியார்தான் என்றொரு பேச்சு உண்டு. அதைப் பற்றியெல்லாம் இப்புத்தகத்தில் மூச்சே இல்லை. கன்னடம் பேசும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பற்றியான சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் இல்லவே இல்லை. ஒரே ஒரு வரி வருகிறது, நான் காதலித்த ரெஜினாவைத் திருமணம் செய்துகொண்டேன் என்று. இவையெல்லாம் எதற்கு என்று நாகேஷ் நினைத்திருக்கக்கூடும். நாகேஷ் இன்று இல்லாத நிலையில் அவையெல்லாம் இருந்திருந்தால் ஒரு நல்ல கலைஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தின் அருமை நமக்குப் புரிந்திருக்கும். அது கை கூடாமல் போனது துரதிர்ஷ்டமே.

 புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-562-2.html

Dial For Books: 94459 01234   |   9445 97 97 97

Share