Archive for புத்தகப் பார்வை

விண்வெளியில் ஒரு வெற்றிலைத் தாத்தா (நாள் 4)

நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை ஜே.எஸ். ராகவன் வெளியிட ஸ்ரீகாந்த் பெற்றுக்கொண்டார். விண்வெளி புத்தகத்தை பத்ரி வெளியிட முரளி கண்ணன் பெற்றுக்கொண்டார்

ராமதுரை எழுதிய விண்வெளி புத்தகத்தை வெளியிட்டு பத்ரி பேசினார். தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுபவர்கள் மிகக் குறைவு என்கிற நிலையில், ராமதுரை எழுதும் அறிவியல் புத்தகங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டார். பெ.ந. அப்புசாமி போன்ற ஒன்றிரண்டு அறிவியல் கட்டுரையாளர்கள் மட்டுமே கண்ணுக்குத் தென்படுகிற நிலையில், கிழக்கு பதிப்பகம் ராமதுரையைக் கண்டறிந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மிக எளிய தமிழில், யாருக்கும் புரியும் வண்ணம் ராமதுரை எழுதும் அறிவியல் கட்டுரைகளை மிகவும் சிலாகித்த அவர், ராமதுரை பயன்படுத்தும் உவமைகள் அப்படியே மனதுக்குள் தங்கிவிடுவதைப் பற்றிச் சொன்னார். பூமியை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதையில் சுற்றும் ஒரு பொருளின் எடை என்பது முக்கியமற்றதாகிறது என்பதை விளக்க ராமதுரை கையாண்டிருக்கும் உவமை, ‘சுற்றுப்பாதையில் ஒரு அம்மிக் கல் சுற்றினாலும், ஒரு கரண்டி சுற்றினாலும் இரண்டு ஒரே வேகத்தில் சுற்றும்’ என்பதாகும் என்று எடுத்துக்காட்டிய பத்ரி, அந்த உவமை எப்படி ஒரு விஷயத்தை எளிமையாக விளக்குகிறது என்பதைப் புகழ்ந்தார். விண்வெளி மட்டுமன்றி, ப்ராடிஜி வெளியீடு மூலமாக மாணவர்களுக்கான அறிவியல் புத்தகங்களை ராமதுரை எழுதும் விதத்தையும் சிலாகித்தார். ஓர் அறிவியல் தாத்தாவைத் தான் கண்டறிந்திருப்பது தன்னுடைய மிகப்பெரிய சாதனை என்றும் தானும் அறிவியல் கட்டுரைகள் எழுதும் வகையில் ராமதுரையே தனது முன்னோடி என்றும் பத்ரி குறிப்பிட்டார்.

இரா. முருகன் எழுதிய நெ.40 ரெட்டைத் தெரு புத்தகத்தை வெளியிட்டு ஜே.எஸ். ராகவன் பேசினார். தன்னால் நகைச்சுவையாக மட்டுமே பேசமுடியும் என்றும், வோல்ட்டேர் அல்லது சூஃபியிசம் போன்ற ஆழமான கருத்துகளைப் பேசமுடியாது என்றும், அப்படி யாரேனும் எதிர்பார்த்து வந்திருந்தால் அவர்கள் ஏமாற்றம் அடையவேண்டியிருக்கும் என்றும் ஆரம்பித்திலேயே குறிப்பிட்டார். தொடர்ந்து ந்கைச்சுவையாகப் பேசிக்கொண்டிருந்த ஜே.எஸ்.ராகவன், புத்தகத்தில் இருந்து எந்தவொரு கேரக்டர் பற்றியும் தான் விளக்கப்போவதில்லை என்றும், அது தன் வாழ்க்கையில் எப்படி தன்னை பாதித்தது என்பதை முன்வைத்து, தன் வாழ்க்கையில் உள்ள கேரக்டர்கள் பற்றி மட்டுமே பேசப்போவதாக நான்கைந்து முறை சொன்னார். இரா. முருகனின் எழுத்து சுயிங்கம் அல்ல, பாதாம் அல்வா என்றெல்லாம் குறிப்பிட்டார். சும்மா இரா முருகன் என்பதுதான் இரா முருகனின் சுருக்கம் என்று சொல்லி பட்டிமன்ற நினைவுகளை மீட்டினார். அவர் பேசப் பேச நிறைய நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். பெரிய பட்டை அடித்துக்கொண்டு தனது நிறத்தை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டிய ராம்கியும் அப்போது ஏன் சிரித்தார் என்பது புரியாத புதிர். ஜே.எஸ். ராகவன் புத்தகத்தைப் பற்றிக் கொஞ்சமும், தன் வாழ்க்கையில் அது எப்படி நினைவுகளைக் கிளறுகிறது என்பது பற்றி நிறையவும் பேசினார். இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இவர் பேசியிருந்தால், அது வரலாற்றின் முக்கியமான பதிவுகளில் ஒன்றாக இருந்திருக்கும். மயிலாப்பூர் டைமிஸில் தொடர்ந்து 7 வருடங்கள் எழுதுவதாகக் குறிப்பிட்டபோது, அவரது வாசகர்களை நினைத்துப் பெருமையாக இருந்தது. சும்மா இரா முருகனின் நாஸ்டால்ஜியா நினைவுகளின் தொகுப்பு எந்த ஊரை மையமாகக் கொண்டது என்கிற விவரிப்பு இல்லை, அது சிவகங்கையாக இருக்கலாம் என்றார் ஜே.எஸ். ராகவன். ஆர்.கே. நாராயண் மால்குடி (மல்லேஸ்வரம் மற்றும் லால்குடியின் இணைப்பு) என்ற ஒரு கற்பனையூரை உருவாக்கியதுபோல, இரா. முருகனும் ஓர் ஊரை நம் கண்முன் கொண்டுவந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். முன்னுரையில் கிரேஸி மோகன், ‘சுஜாதாவின் ஆவி கூடுவிட்டுக் கூடு பாய்ந்து இரா. முருகனுக்குள் வந்துவிட்டது’ என்று எழுதியிருப்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஒவ்வொருவருக்கும் ஓர் எழுத்துப் பாணி உண்டென்றும், அது இரா. முருகனுக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டு இரா. முருகனை வாழ்த்தினார்.

ஜே.எஸ். ராகவனைப் பற்றிப் பேசிய பா.ராகவன், இன்று நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதும் ஒரே எழுத்தாளர் ஜே.எஸ். ராகவன் மட்டுமே என்று புகழ்ந்தார்.

கலந்துரையாடல் தொடங்கியது. தமிழில் ஏன் அறிவியல் கட்டுரைகள் வளரவில்லை என்று கேட்டதற்கு, கிழக்கு பதிப்பகம் மூலம் அந்தக் குறை நீங்கும் என்று ராமதுரை குறிப்பிட்டார். அறிவியல் கட்டுரைகளில் சில தொழில்நுட்ப, அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவதா இல்லை தமிழ்ப்படுத்துவதா என்று கேட்கப்பட்டதற்கு, தமிழில் சாத்தியமில்லை என்பதைத் தன்னால் ஏற்கமுடியாது என்றும், ஆனால் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு போன்ற அறிவியல் வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துவது என்கிற அரசுமுடிவு சரியானதுதான் என்றும் குறிப்பிட்டார். இரா. முருகன், தான் என்னதான் தமிழில் எழுதினாலும் கல்கி உள்ளிட்ட இதழ்களில் அதை ஆங்கிலத்திலேயே எழுதுவதாகவும், காரணமாக மக்களுக்குப் புரியாது என்று சொல்வதாகவும் குறிப்பிட்டார். சுஜாதா எழுதும்போது ஆரம்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு அதற்கான ஆங்கில வார்த்தையை அதனருகில் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுவிட்டு, அக்கட்டுரை முழுக்கத் தமிழிலேயே பயன்படுத்துவார் என்று சிலாகித்தார். ‘நீங்களும் ஏன் அதைச் செய்யக்கூடாது’ என்று நான் கேட்டதற்கு, கல்கி அதை அனுமதிப்பதில்லை என்றார். நாவல், கட்டுரை, அறிவியல் கட்டுரை என்று 3 தளங்கில் எழுதும்போது, ஒன்றிலிருந்து இன்னொன்று எப்படி மாறமுடிகிறது என்று பாரா இரா. முருகனைக் கேட்டார். தன்னுடைய நான்காவது தளமாக திரைக்கதை எழுதுவதைக் குறிப்பிட்டுவிட்டு, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதில் சிக்கல் இல்லை என்றும், ஒன்று எழுதி போரடிக்கத் தொடங்கும்போது அடுத்த வகையை எழுதத் தொடங்குவதாக இரா. முருகன் பதில் சொன்னார். தன்னால் அது இயலவில்லை என்று பாரா குறிப்பிட்டார்.

விண்வெளி ஆராய்ச்சியைப் பற்றி பழங்காலத் தமிழர்கள் எப்படி அறிந்திருந்தார்கள் என்று நான் கேட்டேன். விண்வெளி ஆராய்ச்சியே உலகின் முதல் அறிவியல் சிந்தனை என்று குறிப்பிட்ட ராமதுரை, பழங்கால மக்களுக்கு மின்சாரம் இல்லாததால் இரவில் அவர்கள் வானத்தையே நோக்கிக்கொண்டிருந்தார்கள் என்றும் அதன் மூலம் தங்கள் அனுபங்களைக் குறித்து வைத்தார்கள் என்றும், அனுபவத்தின் மூலம் என்பதால் அதில் தவறுகள் குறைவு என்றும் ராமதுரை குறிப்பிட்டார். என்று மழை வரும் என்று சொல்கிறார்களோ அன்று மழை வருவதில்லையே, ஏன் இந்தக் குழப்பம் என்ற லக்கிலுக்கின் கேள்விக்கு, தானும் அதுகுறித்து ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ராமதுரை, சாட்டிலைட் தரும் தகவல்களுக்கும், அது அறிவிக்கப்படும் நேரத்திற்கும் உள்ள இடையே உள்ள கால அளவு அதிகம் இருப்பது ஒரு காரணம் என்றார். ஜே.எஸ். ராகவன் ஒரு நகைச்சுவை சொன்னார். மற்ற எல்லா நாடுகளிலும் இப்படித்தானே இருக்கிறது என்று சொன்ன எ.எ. பாலாவின் கேள்விக்கு, இந்தியாவில் மட்டுமே அப்படி இருப்பதாக ராமதுரை சொன்னார். தமிழில் அறிவியல் புனைகதைகள் பற்றிய கேள்விக்கு, அது தமிழில் தோற்றுவிட்டது என்று ராமதுரை குறிப்பிட, இரா. முருகன் அது தற்போது கொஞ்சம் வேரூன்றி வருகிறது என்று குறிப்பிட்டு, மரத்தடி யாஹூ குழுமம் நடத்திய அறிவியல் புனைகதை போட்டியில் வந்த அறிவியல் புனைகதைகளை சிலாகித்து, அதில் முக்கியமாக சேவியரின் ஏலி ஏலி கதையைப் பற்றிக் குறிப்பிட்டார்.

மர்மயோகி வருமா வராதா என்று நாயகன் பாணியில் மிரட்டலான கேள்வியைக் கேட்டு இரா. முருகனை பாரா மிரட்டினார். ‘மருதநாயம்தானே’ என்று தொடங்கிய இரா. முருகன் பின்பு மர்ம யோகி என்று மாற்றிக்கொண்டார். மருத நாயகம்தான் மர்மயோகியா என்கிற சந்தேகம் இனி யாருக்கும் இருக்காது என்று நம்பலாம்.

இரா. முருகனிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க நினைத்திருந்தேன். நேரமாகிவிட்டதால் கேட்கமுடியாமல் போய்விட்டது. நாவலுக்கும் தொடர்கதைக்குமுள்ள வித்தியாசங்கள் (மூன்றுவிரல், விஸ்வரூபம், அரசூர் வம்சம் இவை மூன்றுமே தொடர் வடிவில் வந்தவை), ஆரம்பகாலத்தில் உள்ள எழுத்துக்கும் தற்போதுள்ள எழுத்துக்குமான வித்தியாசங்கள் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வார்த்தை இதழில் வந்த கட்டுரைகள், நெ.40 ரெட்டைத் தெருவில் உள்ள கட்டுரைகள் உட்பட, இரா. முருகனின் எழுத்தில் இருந்த ஒரு சீரியஸ் தன்மை மெல்ல குறைகிறது என்பது என் அனுமானம். முக்கியமாக, ஒரு கட்டுரையின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதை அவர் விரைவில் இழக்கிறார் என்பது என் கணிப்பு. வாராவாரம் எழுதுவதால் நேரும் பிரச்சினையாக இருக்கலாம். அவரது நகைச்சுவை என்பது கிரேஸி, ஜே.எஸ்.ராகவன் போன்றவர்களின் வெகுஜ ரசனைக்குரியதாகவும் இல்லை, சீரிய தளத்தில் எழுதப்படும் ஆழமானதாகவும் இல்லை, இரண்டுக்கும் இடையில் தத்தளிக்கிறது என்பது என் கருத்து. இதை முதலில் அவர் தாண்டவேண்டும் அல்லது கைவிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். குட்டப்பன் கார்னர் ஷோப் கட்டுரைகளில் ஒன்றில்கூட இரா. முருகனின் முத்திரை இல்லை என்பது ஒரு வருத்தமான விஷயம். குட்டப்பன் கார்னர் ஷோப் என்பது பெயராகிவிட்டால், ராஜம் கிருஷ்ணன் குறித்த கட்டுரையில் குட்டப்பனைக் காணவில்லை என்றால், அந்தப் பெயரின் பொருள்தான் என்ன? இது ஒரு மிகச்சிறிய கேள்வி மட்டுமே. ஜே.எஸ்.ராகவனும் கிரேஸி மோகனும் தேடும் வெளியில் இரா. முருகன் இல்லை. அவரது இடம் இன்னும் மேலானது என்பதை யார் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ, இரா.முருகன் நிச்சயம் அறிவார். அந்த இடத்திலேயே அவர் இருந்துகொள்ளவேண்டும் என்பதுதான் இரா.முருகனின் தேவை. இதற்கான இடத்தை இதழ்கள் தர மறுத்தால், அவர் அதை தன் வலைத்தளத்திலாவது நிறுவவேண்டும்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, ராமதுரை அறிவியல் தாத்தாவைப் பற்றி எழுதவேண்டும். பத்ரியும் ஜே.எஸ். ராகவனும் பேசிக்கொண்டிருக்க, தன் கைப்பையைத் திறந்து, வெற்றிலையை எடுத்து, அதை பின்னும் முன்னும் நன்கு துடைத்து, சுண்ணாம்பு தடவி, நான்காக எட்டாக மடித்து வாய்க்குள் வைத்து, மெல்லத் தொடங்கினார். வெற்றிலைத் தாத்தாவின் அறிவியல் உணவு ரசனையின் உச்சம்.

Share

மொட்டைமாடியில் அமெரிக்க அரசியல் – கதிகலங்கிப்போன கோயிந்த்சாமி (நாள் 3)


ஒபாமா ப்ராக் புத்தகத்தை சந்திரமௌலி வெளியிட அரவிந்தன் பெற்றுக்கொண்டார். ஆயில்ரேகை புத்தகத்தை நாராயணன் வெளியிட தமிழ் சுஜாதா பெற்றுக்கொண்டார்.

ஆர். முத்துக்குமார் எழுதிய ஒபாமா பராக் புத்தகத்தைப் பற்றி சந்திரமௌலி பேசினார். ஒபாமாவின் வெற்றிக்கான உழைப்பு, அமெரிக்காவின் தேர்தல் முறை என்பதைப் பற்றி ஆர்.முத்துக்குமார் விவரமாக எழுதியிருப்பதாகப் பாராட்டினார். ஒபாமாவின் வெற்றி, அவர் கருப்பர் என்பதற்காகக் கிடைத்த வெற்றியல்ல என்றார். அவர் தன்னை கருப்பர் என முன்வைத்து தேர்தலைச் சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஒபாமாவைப் பற்றிய பல்வேறு புத்தகங்களின் எஸென்ஸ் இந்தப் புத்தகம் எனக் குறிப்பிடும் வகையில், ஒபாமா பற்றி இல்லாத தகவல்களே இப்புத்தகத்தில் இல்லை என்று பாராட்டினார். புத்தகத்தின் குறைகளையும் குறிப்பிட்டார். புத்தகத்தில் உள்ள சில எழுத்துப் பிழைகளையும், ஃபார்மட்டிங் பிழைகளையும் குறிப்பிட்டார். இன்னும் நல்ல எடிட்டிங் இருந்திருக்கவேண்டும் என்றும் சொன்னார். கிழக்கு வெளியிட்டிருக்கும் மற்ற புத்தகங்களின் தரத்தில் இருந்து, எடிட்டிங்கை மையமகா வைத்து, இது கொஞ்சம் குறைந்திருக்கிறது என்றார். ஆனால் இத்தகைய சிறிய குறைகள், புத்தகத்தின் ஓட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் இக்குறைகள் களையப்படவேண்டியவை மட்டுமெ என்றும் குறிப்பிட்டார். பதிலளித்த பத்ரி, சந்திரமௌலி குறிப்பிட்ட பல பிழைகள் ஏற்கெனவே களையப்பட்டுவிட்டன என்று தெரிவித்தார். உண்மையில் சந்திரமௌலி போன்றவர்கள் முன்வைக்கும் இக்குறைகள் நிச்சயம் பதிப்புக்குழுவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

உருப்படாதது நாராயணனும் பா.ராகவனும், ஒரு சிறிய மாற்றம் என்கிற பீடிகையுடன் ஆரம்பித்தார்கள். முதலில் பன்னிரண்டு நிமிடங்கள் (அது என்ன பன்னிரண்டு நிமிடக் கணக்கு எனத் தெரியவில்லை) நாராயணன் பேசுவார், பின்பு நாராயணனும் ராகவனும் கலந்துரையாடுவார்கள். பின்பு எல்லாரும் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல். இதுதான் விஷயம். நாராயணன் பேசியது, பின்பு அவர் பதில் சொன்னது எல்லாம் சேர்த்தால் 90 நிமிடங்கள் வருமென்றால், அதில் அவர் பேசிய நிமிடங்கள் 50 இருக்கலாம். மீதி 40 நிமிடங்கள் பேச ஆயத்தமாவது, மூச்சு இழுத்து விட்டுக்கொள்வது, ஆள்காட்டி விரலால் மூக்கின் கீழே நெருடிக்கொள்வது, தொண்டையைக் கனைத்துக்கொள்வது என்பது போன்ற கமல்தோஷத்தில் செலவழிந்தன. ஆனால் பேசிய நிமிடங்களில் மிகச் சிறப்பாகப் பேசினார். எண்ணெய் அரசியலோடு, உலக அரசியல் உள்ளிட்ட விஷயங்களில் அவரது ஆர்வம், அறிவு என்னை வியக்க வைத்தது. பொது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை அவர் பேச்சில் உணரமுடிந்தது. பல்வேறு கேள்விகளுக்கு மிகச் சரியான அணுகுமுறையில் பதில் சொன்னார். ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றியதாக அவருடைய பேச்சு அமையாமல், ஒரு ஒட்டுமொத்த, அமெரிக்கா சார்ந்த/சம்பந்தப்பட்ட அரசியலை முன் வைத்ததாக அமைந்தது. புத்தகத்தில் குறை சொல்லவேண்டியது சம்பிரதாயம் என்றவர் புத்தகத்தில் உள்ள ஒருசில குறைகளைச் சொன்னார். புத்தகத்தில் உள்ள ஓர் அச்சுத்தவறைச் சொன்னவர், புத்தகத்தின் போதாமையாகச் சொன்னது, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு என்பதைப் பற்றி.

பின்பு எல்லோரும் பங்குபெறும் கலந்துரையாடல் ஆரம்பித்தது. பத்ரியின் முதல் கேள்வியே, நாராயணன் சொன்ன, எண்ணெய் அரசியலின் மீதான இந்தியாவின் பங்கு, இந்தியா எப்படி அதை எதிர்கொள்ளமுடியும் என்பதைப் பற்றியது. பத்ரி கேட்ட இரண்டு நிமிடக் கேள்விக்கு, பாரா 20 நிமிடங்கள் பதில் அளித்தார். (பாராவிற்குப் பேசத் தெரியாது என்று ஏற்கெனவே நாம் அளித்த செய்தி நினைவில் இருக்கலாம்.) ஆரம்பிக்கும்போது, ஆயில் ரேகை புத்தகத்தைப் பற்றி, ரிப்பன் பக்கோடாவைக் கொறித்துக்கொண்டே ஆரம்பிப்பதில் தவறே இல்லை என்று சொல்லி, தனக்கும் தமுஎச-விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்தார். பின்லேடனைவிட அமெரிக்காவே மிகப் பெரிய தீவிரவாதி என்றார். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருள் பற்றிய விவாதத்தில், சில விஷயங்கள் இன்று பரிசோதனை முயற்சியில் இருந்தாலும், இன்னும் ஒரு 50 வருடங்களுக்காகவது பெட்ரோலின் தேவை இருந்தே தீரும் என்றார். ஏகப்பட்ட கேள்விகள் இந்த எண்ணெய் அரசியலைப் பற்றி எழுந்த வண்ணம் இருந்தன. எல்லாவற்றிற்கும் பாரா, நாராயணன், பத்ரி ஆகியோர் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர். அணு சக்தி என்பது பெட்ரோலுக்கு முழுமாற்றாகமுடியுமா என்ற கேள்விக்கு, அதற்கு தற்போது சாத்தியமில்லை என்றார் நாராயணன்.

சத்யா (எம்.டி, நியூ ஹொரைசன் மீடியா), நம்நாட்டில் ஏகப்பட்ட சூரிய சக்தி இருக்க, அதற்கு இதுவரை எத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது, இப்போதாவது இதில் கவனம் செலுத்துவோமா, அது சரியாக வருமா என்றார். அதில் இதுவரை போதுமான கவனம் செலுத்தப்படவில்லை என்றும், தற்போது அதில் இந்திய அரசின் கவனம் குவிந்திருக்கிறது என்றும் நாராயணன் சொன்னார். ஆனால், அணு ஆயுதத்தில் நம் கவனம் இருக்குமளவிற்கு சூரிய சக்தியில் நம் கவனம் இதுவரை இருக்கவில்லை என்றும், தற்போது இருக்கும் கவனமும் ஒப்பீட்டளவில் மிகக் குறைவானதுதான் என்றும் சத்யா சொன்னார்.

எண்ணெய் அரசியலின் மீதான கேள்விகள் மிக நீண்டு கொண்டிருக்க, கேள்வி கேட்காமலேயே பதில் சொல்லிவிடும் அபாய முடிவிற்கு முத்துக்குமார் சென்ற நேரத்தில், அவரிடம் நான் கேள்வியைத் துவக்கி வைத்தேன். ஏற்கெனவே இரண்டு ஒபாமா புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், தற்போது ஆர்.முத்துக்குமார் எழுதியிருக்கும் புத்தகத்தின் தேவை என்ன, அது மற்ற புத்தகங்களில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பது என் கேள்வி. அதை தான் எழுதிய ஒரு காரணத்திற்காகவே அனைவரும் வாங்கவேண்டும் என்று சொல்லி, பேச்சுக்கலையில் திராவிடப் பாரம்பரத்தியின் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். தொடர்ந்து, மற்ற புத்தகங்கள் ஒபாமாவைப் பற்றி மட்டும் சொல்லிநிற்க, தனது புத்தகம் ஒபாமாவோடு அமெரிக்காவின் அரசியலையும், தேர்தல் முறையையும் முன் வைக்கிறது என்றார். தொடர்ந்து பதிலளித்த பாரா, ஒரு வாழ்க்கை வரலாறு என்பது அவர் பிறந்தார், வென்றார், இறந்தார் என்று சொல்வதல்ல; மாறாக, எந்த முறையில், எந்த இடத்தில் ஒருவரின் வெற்றியும், முக்கியத்துவமும் இருக்கிறது, அதன் பின்னணி என்ன என்பனவற்றை விளக்குவதிலேயே இருக்கிறது, அதை இப்புத்தகம் தெளிவாகச் செய்திருக்கிறது என்று அப்புத்தகத்தின் எடிட்டர் என்கிற முறையில் பதில் சொன்னார். தொடர்ந்து ஒபாமா பற்றிய விவாதங்கள் களைகட்டின. ஒபாமா வென்றதுக்குக் காரணம், கருப்பர்கள் வெறித்தனமாக வருக்கு வாக்களித்ததே என்றார் லக்கிலுக். அது மட்டுமே காரணமல்ல என்று விளக்கினார் பத்ரி. ஸ்ரீகாந்த் இது தொடர்பான தனது கருத்துகளையும் சொன்னார். ஸ்ரீகாந்த் ஒபாமாவை அண்ணன் ஒபாமா என்றார். வைகோ சந்தித்தது ஒபாமாவையா, ஸ்ரீகாந்தையா என்கிற சந்தேகம் எனக்கு எழுந்துவிட்டது. அமெரிக்கா எந்த நாட்டில் தனக்கு லாபம் வருகிறதோ அங்கு மட்டுமே உதவி என்ற போர்வையில் உள்ளே செல்லும் என்று கிட்டத்தட்ட அனைவரும் சொன்ன நிலையில், அதற்கும் சில எதிர்ப்புக் கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா அழித்த நாடுகளும் உண்டு, அமெரிக்காவால் வாழ்ந்த நாடுகளும் உண்டு என்றார் ஸ்ரீகாந்து. உதாரணமாக ஜப்பான் என்றார். லாபத்திற்காக மட்டுமே அமெரிக்கா ஒரு நாட்டிற்காகச் செல்லும் என்றால், வியட்நாமை எந்த வகையில் சேர்ப்பது என்றார் சத்யா. ஒரு சில விலக்குகள் நீங்கலாக, அமெரிக்காவின் குணம் அதுவே என்றார் பாரா. அமெரிக்கா ஜப்பானுக்கு உதவியது தனது குற்ற உணர்விற்காக என்றார் பத்ரி. ஒபாமா மீது நிறைய எதிர்பார்ப்பு எல்லாருக்குமே உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் அதிகம் நல்லது செய்யாவிட்டாலும், அமெரிக்காவின் இன்றைய நிலையை மேம்படுத்தினாலே அதுவே மிகப்பெரிய வெற்றி என்று ஒபாமாவின் தம்பி நம்பிக்கையாகச் சொன்னதோடு கூட்டம் முடிவடைந்தது.

ஒபாமாவின் வெற்றிக்கு அவர் பையில் வைத்திருந்த ஆஞ்சநேயர் படமே காரணம் என்ற செய்தி உண்மைதானா என்று கேட்டேன். இந்தக் கேள்விக்கு ஏன் அனைவரும் அப்படி சிரித்தார்கள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்குறிப்பு: நேசமுடன் வெங்கடேஷ் பின்நவீனத்துவப் பாணி கேள்வி (அது கேள்வியாக இல்லாமல் பதிலாகவும் இருக்கலாம்!) ஒன்றை எழுப்பினார். அதைப் பற்றி தனியாக ரூம் போட்டு யோசிக்க உத்தேசித்திருக்கிறேன்.

Share

மால்கம் எக்ஸும் நிறைய எக்ஸ்களும் (நாள் 2)

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் புத்தகத்தை சோம வள்ளியப்பன் வெளியிட ’உருப்படாதது’ நாராயணன் பெற்றுக்கொண்டார். மால்கம் எக்ஸ் புத்தகத்தை பா.ராமசந்திரன் வெளியிட நேசமுடன் வெங்கடேஷ் பெற்றுக்கொண்டார்.

சோம வள்ளியப்பன் யுவ கிருஷ்ணாவின் (லக்கிலுக்) ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தக்த்தைப் பற்றிப் பேசினார். விளம்பரங்களைத் தயாரிப்பதில் விளம்பர ஏஜென்ஸிகளின் பங்கு, ஒரு விளைபொருள் (ப்ராடக்ட்) வெற்றியில் விளம்பரங்களின் பங்கு, அதன் தோல்வியில் விளம்பரங்களின் பங்கு, நெகடிவ் விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்களில் நேரும் போட்டி (உதாரணமாக கோக் Vs பெப்சி, ஹார்லிக்ஸ் Vs காம்ப்ளான்) எனப் பல விஷயங்களைத் தொட்டுப் பேசினார். நல்ல விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் ஒரு விளம்பரமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வந்த சிறிய மொபைல் போனுக்கான விளம்பரத்தைக் குறிப்பிட்டார். ஒரு பெண் மொபைல் பேசிக்கொண்டிருக்க, தன்னுடன் பேசுவதாக நினைக்கும் ஒருவர் எழுந்து வரவும், அவரிடம் ‘ஒன் காஃபி ப்ளீஸ்’ (என்று நினைக்கிறேன்) எனச் சொல்லும் விளம்பரம் அது. (அந்த விளம்பரத்தில் எனக்குப் பிடித்தது, அந்த மனிதர் முகம் அடையும் பாவங்கள். சிறந்த நடிப்பு அது.) லக்கிலுக்கின் இப்புத்தகம் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதாகவும், பல்வேறு விஷயங்களை லக்கிலுக் எழுதியிருப்பதாகவும் பாராட்டினார். ஒரு சிறிய குறையாக, எப்படி சிறந்த விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன, எப்படி விருது வழங்குகிறார்கள் என்பதைப் பற்றியும் ஓர் அத்தியாயம் எழுதியிருக்கலாம் என்றார். சிறந்த நடையில் புத்தகம் எழுதியிருப்பதாக லக்கியைப் பாராட்டினார். (சோம வள்ளியப்பன் தொலைக்காட்சிகளில் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். நேற்றைய கூட்டத்தில் அவர் இன்னும் சிறப்பாகப் பேசுவார் என எதிர்பார்த்தேன். அவர் பேச்சில் ஒரு கோவை இல்லை என்பதே மிகப்பெரிய குறை.)

பா. ராமசந்திரன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) மருதனின் மால்கம் எக்ஸ் புத்தகத்தைப் பற்றிப் பேசினார். தமுஎச-வின் மாநாடு தற்போதுதான் முடிவடைந்திருந்ததால் தான் மிகவும் பிஸியாக இருந்ததாகவும், ஆனாலும் மால்கம் எக்ஸ் புத்தகம் என்பதால் தான் பேச ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் பேச வருவதற்கு முன்பாக எல்லாரும் சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். பேச ஆரம்பித்த பா.ராமசந்திரன் (பாரா என்று வந்தாலே இப்படி எதாவது சொல்லி பேச ஆரம்பிப்பார்கள் போல!) தான் பேச வரும்போது யாரும் சிப்ஸ் கொறித்துக்கொண்டிருக்கக்கூடாதே என்று நினைத்ததாகச் சொன்னார். காரணமாக, ‘மால்கம் எக்ஸை சிப்ஸ் கொறித்துக்கொண்டு பேசமுடியாது’ என்று சொல்லி, தான் தமுஎச-வின் தீவிர உறுப்பினர் என்பதை நிரூபித்தார். இன்னும் சிறிது நேரத்தில் காப்பி வருமே என நினைத்துக்கொண்டேன். [’ஹிந்துமத வெறியன் கோட்ஸே காந்தியைக் கொன்ற போது அவர் ஹே ராம் என்று சொல்லி இறந்ததுபோல’ என்றெல்லாம் பேசினார். கோட்ஸே ஹிந்துமத வெறியன். அதில் விவாதமில்லை. ஆனால் காந்தி இறந்தபோது ஹே ராம் என்று சொன்னாரா இல்லையா என்பது பற்றி பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இது இப்போது தேவையா என நினைக்கலாம். தமுஎச என்று வந்துவிட்டாலே என்ன வேண்டுமானாலும் எழுத வந்துவிடுகிறது. :-)] பா.ராமசந்திரன் மால்கம் எக்ஸின் வாழ்க்கையை, அவர் கறுப்பினத்தவராகப் பிறந்து அடைந்த அவமானங்களை, வலியை விவரித்தார். இனவெறியை எங்கும் பரப்பும் அமெரிக்காவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்ட மால்கம் எக்ஸை வானளாவப் புகழ்ந்தார். ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று நூலில் இருந்ததைப் பார்த்தபோதே, மால்கம் எக்ஸ் இஸ்லாமியராக மாறுவார் என எதிர்பார்த்ததாகச் சொன்னார். முதல் அத்தியாயத்திலேயே சுட்டு வீழ்த்தப்படும் மால்கம் எக்ஸ் புத்தக்த்தை சிறப்பாக எழுதியிருப்பதாக மருதனைப் பாராட்டினார். புத்தகத்தில் எவ்விதக் குறையையும் பா.ராமசந்திரன் வைக்கவில்லை. மால்கம் எக்ஸை ஒரு புனித பிம்பமாகவே நிறுவிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

பின்னர் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். பத்ரி மருதனிடம் நிறையக் கேள்விகள் கேட்குமாறு ஊக்குவித்தார். மால்கம் எக்ஸைப் பற்றி கூட்டத்துக்கு வந்திருந்த ஏகப்பட்ட மிஸ்டர் எக்ஸ்கள் கேள்வி கேட்டார்கள். விளம்பரப் பிரியர் யுவகிருஷ்ணாவை கேள்வி கேட்காதவர்களே இல்லை எனலாம். தொடர்ந்து விளம்பரங்கள் பற்றியும், விளம்பர ஏஜென்ஸிகள் பற்றியும் கேள்விகள். எல்லாவற்றிற்கும் லக்கிலுக் பொறுமையாகப் பதில் சொன்னார். அனைவரும் பொறுமையாகக் கேட்டார்கள். விளம்பரங்களில் ‘செலிபிரிட்டியை ஏன் விளம்பரங்களில் போடவேண்டும்’ என்கிற கேள்வியும், ‘கருப்பு நிறத் தோல்’ பற்றிய கேள்வியும் சில விவாதங்களை எழுப்பின. (கருப்பு வேண்டாம் என்று சொல்கிறோமே, ஆனால் டை (மயிர்ச்சாயம்) அடிக்கும்போது மட்டும் கருப்பை வேண்டுகிறோமே, அது எப்படி என்று ஒரு நண்பர் கேட்டபோது, அவரது பேரல்லல் திங்கிங்கை நினைத்து கூட்டமே அசந்துவிட்டது! அந்த நண்பர் எங்கள் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் என்பது ஜெனெரல் நாலெட்ஜுக்காக மட்டும் இங்கே.) மருதனை மறந்துவிட்டார்கள். ஒரு எக்ஸ் ஏன் அரசியல்வாதிகளை வேட்டி விளம்பரங்களில்கூட பயன்படுத்துவதில்லை என்றார். அரசியல்வாதிகளுக்கு விளம்பரம் தரமாட்டார்கள் என்றார் லக்கி. ஆனால் உண்மையான காரணத்தை நான் கண்டுபிடித்தேன். அரசியல்வாதிகளை நம்பி வேட்டி விளம்பரங்களை எடுத்தால், அவர்கள் வேட்டியை உருவிக்கொண்டு சண்டைக்கு நிற்கும்போது விற்பனை பாதிக்கப்பட்டுவிடும் என்று விளம்பர நிறுவனங்கள் அஞ்சலாம் என்றேன். நல்ல அரசியல்வாதி யார் என்று ஒரு நிமிடம் யோசித்த லக்கி, தமிழருவி மணியன் எனச் சொன்னார். எங்கே கருணாநிதி பெயரைச் சொல்லிவிடுவாரோ என்று அந்த ஒரு நிமிடத்தில் நான் அடைந்த கலவரத்தைச் சொல்லி மாளாது. இந்த யுவனுக்குள் இருந்து பதில் சொன்ன கிருஷ்ணனுக்கு நன்றி. 🙂

பத்ரி மீண்டும் ஞாபகப்படுத்தி மருதனிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.. இன்னொரு ’நண்பர் எக்ஸ்’, இன்னும் முப்பது ஆண்டுகள் கழித்து மருதன் எந்தத் தலைவரைப் பற்றி எழுதப்போகிறார் என்று கேட்டார். அவர் கேட்ட தொனி, இன்றைக்கு நல்ல தலைவர்களே இல்லையே என்கிற ஆதங்கத்தில். ஆனால் பத்ரி அப்படி எல்லாம் நிகழாது என்றும் தனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் தலைவர்கள் உருவாவர்கள் என்றும் சொன்னார். (பத்ரி லெஃப்ட் விங்க் என்கிறார்கள்! ஆம், நிச்சயம் புரட்சி வரும்.) நான், மருதனே தலைவராகிவிட்டால் அவர் ஏன் புத்தகம் எழுதவேண்டும் என்றேன். அப்போதும் பத்ரி விடவில்லை, சுயசரிதை எழுதுவார் என்றார். (புரட்சி வந்தேவிட்டது!) கூட்டம் முடிவதற்கு முன்பாக மைக்கைப் பிடித்த பா.ராமசந்திரன், இன்னும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத நிறையப் பேர் இருப்பார்கள் என்றும், அதற்கான நம்பிக்கை உள்ளது என்றும், அந்த விதையை கிழக்கு மொட்டைமாடிக்கூட்டத்தில் விதைக்காவிட்டால் தனக்கு அன்றிரவு தூக்கம் வராது என்றும் சொன்னார். (இவர் தமுஎச என்கிறார்கள்.)

இப்படி கூட்டம் களையாக நடந்துகொண்டிருக்க ஒரு பெரிய விஷயம் நடந்தது. பலர் கவனிக்கவில்லை. ஏதோ ஒரு நண்பர் மட்டும் அதை படம் பிடித்தார். லக்கியின் இரண்டு கொலைவெறி ரசிகர்கள் ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்தில் அவரிடம் கையெழுத்து வாங்கினார்கள். நான் கேட்க நினைத்த ஒரே கேள்வி இதுதான். ‘லக்கி, நீங்கள் இப்படி கையெழுத்து போடும்போது எப்படி உணர்ந்தீர்கள்?’ என்பதே. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்க முடியாமல் போயிற்று. அந்த இரண்டு கொலைவெறி ரசிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

’இன்னும் கேள்விகள் கேட்டால் நான் நிஜமாகவே பேசவேண்டியிருக்கும்’ என மருதன் அறிவிக்க இருந்த கணத்தில் கூட்டம் நிறைவடைந்தது.

இன்றைய கூட்டம்:

பாராவின் ஆயில் ரேகை புத்தகத்தை வெளியிட்டு பேசுகிறார் நாராயணன். நிறையக் கேள்விகள் வரும் என்பதால் வீட்டில் கடுமையான பயிற்சியில் பாரா ஈடுபட்டிருக்கிறார். யாருக்கேனும் கேள்விகள் தேவைப்பட்டால் என்னைத் தனிமடலில் தொடர்புகொள்ளவும். ஆயில்ரேகை புத்தகத்தை எப்படி இஸ்லாத்துடன் இணைப்பது, அங்கிருந்து எப்படி பாராவை மதச்சண்டைக்குள் கொண்டுபோவது எனப் பல விஷயங்களைத் தயாரித்து வைத்திருக்கிறேன்.

இன்னொரு புத்தகம் ஒபாமா பராக் பற்றியது. இப்புத்தம் பற்றிய ஒரு பார்வையை லக்கிலுக் அவரது பதிவில் வைத்திருக்கிறார். அதைப் படித்துவிட்டு (புத்தகத்தையே படித்துவிட்டதாக நினைத்துக்கொண்டு) யார் வேண்டுமானாலும் முத்துக்குமாரிடம் கேள்விகள் கேட்கலாம்.

முக்கியமான விஷயம், கேள்விகள் கேட்பதன் பெயர் கலந்துரையாடல் என்பதாகும்.

Share

கொஞ்சம் கேண்டீட் நிறைய சூஃபி வழி (கிழக்கு மொடைமாடிக் கூட்டம் – நாள் 1)

வோல்ட்டேரின் கேண்டீட் நாவலை மாலன் வெளியிட இரா.முருகன் பெற்றுக்கொண்டார். சூஃபி வழி நூலை மாலன் வெளியிட ஜே.எஸ்.ராகவன் பெற்றுக்கொண்டார்.

மாலன் கேண்டீட் நாவலைப் பற்றிப் பேசினார். வோல்ட்டேரின் அறிமுகத்தோடு தொடங்கிய மாலன், கேண்டீட் நாவல் எழுதப்பட்டதன் நோக்கத்தை விவரித்தார். பின்பு பத்ரியின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பாராட்டிய மாலன், மொழிபெயர்ப்பின் எல்லையையும் மொழியின் போதாமையையும் பற்றிக் குறிப்பிட்டு, நாவலிலுள்ள சில பிழைகளைச் சுட்டிக்காட்டினார். நாவலின் ஓரிடத்தில் இப்படி வரும். ‘—–ஐக் கொட்டினாள்’ என்று. நான் கேண்டீட் நாவலைப் படித்தபோதே இதைப் பற்றி பத்ரியிடம் கேட்டேன். நாவலின் மூலப் பிரதியிலும் இப்படித்தான் இருக்கிறது என்று பத்ரி சொன்னார். மாலன் வேறொரு மூலத்தில், அவள் தண்ணீரைக் கொட்டினாள் என்றுதான் இருக்கிறது என்றார். ஆனால் பத்ரி மொழிபெயர்க்க எடுத்துக்கொண்டது வேறொரு ஆங்கில மூலத்தை. அதேபோல் கொலைகள் பற்றிய விவரணைகளை தவிர்த்துவிட்டு, பொதுவாக, ’படுகொலை செய்யப்பட்டார்’ என்று பத்ரி எழுதியிருக்கிறார், இது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரம் என்றார் மாலன். இன்னொரு இடத்தில் ‘நயா பைசா’ என்று வருவதைச் சுட்டிக்காட்டிய மாலன், அக்காலத்தில் நயா பைசா என்று கிடையாது என்றார். (பின்பு சூஃபி வழி நூலை வெளியிட்டு பா.ராகவன் பேசினார். பத்ரியும் நாகூர் ரூமியும் கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள்.) பின்பு பதிலளித்தபோது பத்ரி சில கருத்துகளைச் சொன்னார். சில இடங்களில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே தான் மொழிபெயர்த்துவிட்டதாகச் சொன்னார். பல்வேறு பிரிவுகளைக் கொண்ட பாதிரிகளைத் தனித்தனியாக குறிப்பிடாமல் ஒரே வார்த்தையாக பாதிரி எனக் குறிப்பிட்டது, பல்வேறி படிகளைக் கொண்ட ஜமீந்தார் முறைகளைத் தனிதனியாகச் சொல்லாமல் ஒரே வார்த்தையாக ஜமீந்தார் எனப் பயன்படுத்தியது என்பது போன்ற விஷயங்களை விளக்கினார். நாகூர் ரூமி ‘நயா பைசா’ என்பது சரியான முறையில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாகக் கருத்து தெரிவித்தார். இரா.முருகன் தன் கருத்தைத் தெரிவித்தபோது, டிரான்ஸ்லேஷனுக்கும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்கும் டிரான்ஸ்கிரியேஷனுக்கும் (மொழிபெயர்ப்புக்கும் தழுவலுக்கும் எனக் கொள்ளலாம்) வித்தியாசங்கள் உண்டென்றும், மொழித் தழுவல் என்பது வெகு காலமாக நம்மிடையே உள்ளதுதான் என்றும் கருத்துச் சொன்னார். ஆனால் பத்ரி செய்தது மொழிபெயர்ப்புதான். அதனால் நயா பைசா என்பதை மாலன் சுட்டிக்காட்டியது சரியான குறையே என்பது என் எண்ணம். அதை அடுத்த பதிப்பில் சரி செய்யலாம். இந்த நாவலை மொழிபெயர்க்க ஏன் தேர்தெடுத்தீர்கள் என்று பத்ரியிடம் கேட்டபோது, தன்னாலும் மொழிபெயர்க்க முடியும் என்று தனக்கே நிரூபித்துக்கொள்ளவும், அதன் மூலம் நல்ல மொழிபெயர்ப்புகளை ஊக்கப்படுத்தவும் முடியும் என்பதாலும் என்றார். முதல் மொழிபெயர்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கும் நல்ல பெயரின் எக்ஸைட்மெண்ட் அடுத்தடுத்த மொழிபெயர்ப்புகளை நிச்சயம் கொண்டுவரும் என்று நினைக்கிறேன்.

சூஃபி வழி புத்தகத்தை வெளியிட்டு பாரா பேசினார். பேசத் தெரியாது என்றும் மைக் பிடித்து அதிகம் பழக்கமில்லை என்றும் நல்ல நகைச்சுவையோடு ஆரம்பித்த பாரா கிட்டத்தட்ட 35 நிமிடங்களுக்குப் பேசினார். தான் சிறு வயதில் கண்ட சாமியார்களிடத்திலும் சூஃபித்தன்மையைப் பார்ப்பதாக தற்போது உணர்வதாகச் சொன்னார் பாரா. சிறந்த புத்தகம் ஒன்றைப் படித்த திருப்தியைப் பற்றிக் குறிப்பிட்ட பாரா, ஒரே இரவில் எப்படி இப்புத்தகம் அவரை உள்ளிழுத்துக்கொண்டது என்பதையும் குறிப்பிட்டார். ஆண்டாள், ராமகிருஷ்ணர் என யாரையும் பாரா விட்டுவைக்கவில்லை. எல்லாரிடத்திலும் சூஃபித் தன்மை உள்ளது என்றார். ராமானுஜரிடத்திலும் சூஃபித் தன்மையைக் கண்டார் பாரா. சென் பௌத்தம், இஸ்லாம், ஹிந்துமதம் என எந்த மதத்திற்கும் சூஃபித்தன்மைக்கும் தொடர்பே இல்லை என்றார். அதனாலேயே சூஃபி வழி என்கிற பெயரைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும், மதத்துக்கும் சூஃபிக்கும் தொடர்பில்லை என்று நம்பும் எந்தவொரு மனிதனையும் இப்புத்தகம் பாதிக்கும் என்றும் விளக்கினார் பாரா. சூஃபிகளின் சில வரிகளைப் பார்க்கும்போது, ரிக் வேதத்தோடு தன்னால் அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடிந்தது என்பதையும் விளக்கினார் பாரா. புத்தகம் மிகக் கடுமையாகவே அவரைப் பாதித்திருக்கிறது என்கிற உண்மையை உணரமுடிந்தது. அதற்குப் பின்பு சில கேள்விகளுக்கு நாகூர் ரூமி பதிலளித்தார். அரங்கம் எல்லாவித இறுக்கங்களையும் இழந்து, கலந்துரையாடலுக்கான ஒரு மன நிலையைப் பெற்றது நாகூர் ரூமி கேள்விகளுக்கு பதிலளித்தபோதே.

இஸ்லாமுக்கும் சூஃபியிசத்துக்கும் தொடர்பில்லை என்றார் நாகூர் ரூமி. இஸ்லாமியர்கள் இக்காலத்தில் சூஃபியிஸத்தை ஏற்கிறார்களா (கேட்டவர் நேசமுடன் ஆர். வெங்கடேஷ்) என்று கேட்டபோது, எக்காலத்திலும் இஸ்லாம் சூஃபியிஸத்தை ஏற்றுக்கொண்டதில்லை என்றார் ரூமி. அவனே உண்மை எனச் சொல்லவேண்டிய ஒரு சூஃபி, நானே உண்மை எனச் சொன்னதாகவும் (இதற்கான அராபியச் சொற்கள் மறந்துவிட்டன. ஒரு மோன நிலையில் சூஃபி இப்படி மாற்றிச் சொல்கிறார்), அவர் அதையே மீண்டும் மீண்டும் சொன்னதால் அவர் கண்டம் துண்டமாக வெட்டி கடலில் எறியப்பட்டார் என்றும் சொன்னார் நாகூர் ரூமி. இஸ்லாத்தின் கட்டுக்களிலிருந்து வெளிவர விரும்பும் ஒருவர் இஸ்லாமியராகத் தொடர நினைக்கும்போது உருவாகும் வெளியை சூஃபியிஸம் எனலாமா எனக் கேட்டேன். நாகூர் ரூமி சொன்ன பதில் சரியாக நினைவில்லை. சூஃபியிஸம் என்பதை எம்மதத்தோடும் தொடர்புபடுத்தவேண்டியதில்லை என்றார். ஹிந்து மதத்திலும் சூஃபித்தன்மையைக் காணலாம் என்றார். கபீர்தாஸ் ஒரு சூஃபி என்றார். ராமகிருஷ்ண பரமஹம்சரிசம் சூஃபித் தன்மையைக் காணலாம் என்றார். சூஃபிகள் சிலை வழிபாட்டை ஏற்கிறார்களா என்று கேட்டேன். கண்டிப்பாக ஏற்கவில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடம் சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்றார். அவரிடத்திலும் ஒரு சூஃபித்தன்மை குடிபுகுந்துவிட்டதை நான் அந்நிமிடத்தில் கண்டேன். 🙂 வெங்கடேஷ் மற்றொரு கேள்வி கேட்டபோது மாலன் ‘பாரதியார் நானே கடவுள் என்றெழுதிய சமயத்தில் அவருக்குள் ஒரு சூஃபித்தன்மை இருந்ததை உணர்வதாக’ச் சொன்னார். ஹிந்துமத்தில் சூஃபியிஸத்தின் தேவை என்ன என்று நான் கேட்டேன். மீண்டும் வழக்கம்போல மதத்துக்கும் சூஃபியிஸத்துக்கும் தொடர்பு தேவையில்லை என்கிற கருத்தே முன்வைக்கப்பட்டது. மீண்டும் சூஃபியிஸம் பற்றிய கேள்விகளுக்கு, சூஃபியிஸத்தை சரியாக விளக்கமுடியாது, அது அனுபவம் என்றார் ரூமி. அப்படியானால் அது பின்நவீனத்துவமாக மட்டுமே இருக்கமுடியும் என்றேன் நான்.

சூஃபிஸத்திற்கும் மதத்திற்கும் தொடர்பே இல்லை என்கிற கருத்தையே நான் முற்றிலுமாக மறுதலிக்கிறேன். நிச்சயம் சூஃபியிஸத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு உண்டு. இஸ்லாத் சட்டங்களின் அடிப்படையான மதம். சட்டப்படி சரி, தவறு என்கிற இரண்டு பார்வைகளே உண்டு.

பொதுவாகவே எந்த ஒரு மதச் சட்டத்தின் முன்னாலும் அதன் மக்கள் ஓர் அறிவார்ந்த முட்டாள்களாகவே செயல்படமுடியும். அறிவார்ந்த முட்டாள்கள் தங்கள் முட்டாள்தன்மையை கைவிட்டால், அவர்கள் சட்டத்தை மீறவேண்டியிருக்கும். அங்கே தார்மீகம் முன்னுக்கு வரும். அறிவார்ந்த முட்டாள்கள் அப்படியே தொடர்ந்தால் அவர்கள் சட்டத்திற்குள்ளே வாழமுடியும். இது எல்லா மதங்களுக்கும் பொருத்தமானதே.

இஸ்லாத்தில் ஒருவன் இஸ்லாமியனாக இருக்கமுடியும் அல்லது இஸ்லாமியனாக இருக்கமுடியாது என்கிற இரண்டு எல்லைகள் மட்டுமே சாத்தியம். கருப்பு வெள்ளைகளுக்கு நடுவே உள்ள பல்வேறு நிறங்களில் வாழ்வது சாத்தியமல்ல. இங்கேதான் சூஃபியிஸத்தின் தேவை இருக்கிறது. கட்டுக்களின் மீது கேள்வியும் எதார்த்தத்தின் மீது நம்பிக்கையும் கொண்ட ஒருவர் ஒரு சூஃபியாகவே இருக்கமுடியும். இதனால் இது இஸ்லாத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகிறது. ஹிந்து மதத்தில் இந்த பிரச்சினைகள் இல்லை. கடவுளை எதிர்த்துக்கொண்டே ஒரு ஹிந்து ஹிந்துவாகத் தொடர்ந்துவிடமுடியும். ஹிந்துவாக இருப்பதற்கான எந்தவொரு வழிமுறையும் கோரப்படவில்லை. ஹிந்துக்களின் புனித நூலாகச் சொல்லப்படும் பகவத்கீதையை மறுதலித்துவிட்டவனும் ஹிந்துவாகத் தொடரமுடியும். இதனால் ஒரு ஹிந்து கட்டுக்களிலிருந்து வெளிவரவேண்டிய தேவை இல்லை. உள்ளிருந்தே அவன் கேள்விகளை எழுப்பமுடியும் என்பதால் அங்கே சூஃபியிஸம் தேவையில்லை. தீர்ப்பு நாளில் நீங்கள் கடவுளை அடைவீர்கள் என்று இஸ்லாமும், மனிதனாக இருக்கும்போதே கடவுளை அடையும் என்று சூஃபியிஸமும் சொல்கின்றன. இதை இஸ்லாமியர்கள் ஏற்க வாய்ப்பில்லை. ஆனால் ஹிந்துக்கள் இதை எளிதாக ஏற்பார்கள். நாடெங்கும் நிலவும் குலதெய்வ (சிறுதெய்வ) வழிபாட்டின் அடிப்படை இதுவே. அதன் தொடர்ச்சியே தர்கா. இஸ்லாம் வெளிநாடுகளில் பரவும்போது, அங்கிருக்கும் கலாசாரத்தோடும், மதங்களோடும் நெருங்கிவரும்போது அங்கே நிச்சயம் சூஃபியிஸத்தின் தேவை இருக்கும். அதன்வழியேதான் சிலை வழிபாட்டை சில சூஃபிகள் ஏற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். ஒரு இந்திய இஸ்லாம் வீட்டுக் கல்யாணத்தில் இடம்பெறும் பூவும் பழமும் கூட சூஃபிஸத்தின் ஒரு கூறுதான் என்று ஓங்கிச் சொல்லிவிடமுடியும். ஏனென்றால் யாரும் சூஃபியிஸத்தை அறுதியிட்டு விளக்கமுடியாதே! 🙂

ராமானுஜரிடத்திலும் ஆண்டாளிடத்திலும் பரமஹம்சரிடத்திலும் பாரதியாரிடத்திலும் ஒருவர் சூஃபித் தன்மையைக் காண்பது ரசனையின் அடிப்படையில், அன்றி உண்மையின் அடிப்படையில் அல்ல. விமர்சனத்தின் ஒரு புள்ளி அது. ரசனையின் மேம்பட்ட புள்ளி அது. அது உண்மையாக இருக்கவேண்டியதில்லை. அது உண்மையென்றால், தி.ராசகோபாலன் போன்ற தமிழ்ப் பேராசிரியர்கள், சங்ககாலங்களில் காதலன் காதலியோடு பேசும்போது நேரம் விரைவாகச் சென்றது; காதலன் காதலியைப் பிரிந்து இருந்தபோது நேரம் மெதுவாகச் சென்றது என்பது சார்பியல் என்பதன் வெளிப்பாடே; அதனால் அவர்களுக்கு அறிவியல் தெரிந்திருந்தது என்கிற கொடுமையையெல்லாம் ஏற்கவேண்டியிருக்கும். கடல் நீர் ஆவியாகி, மேகமாகி, மழை பெய்வதை பாசுரத்தில் காணலாம் என்பதை சுஜாதா சிலாகித்தார். அது அப்படியே ரசனையோடு நின்றது. அறிவியல் புனைகதைகளின் கூறுகளைப் பட்டியலிட்ட சுஜாதா, அதன் சில கூறுகளை நாம் ராமாயணத்திலேயே, விக்கிரமாத்தித்தன் கதையிலேயே காணலாம் என்றார். அதுவும் ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்ததே. மாறாக, அதுவே சயின்ஸ் பிக்க்ஷனின் முதல் பிரதி என்று நாம் பிரஸ்தாபிக்கமுடியாது. இதுவே சூஃபித்தன்மைக்கும். சூஃபித்தன்மையை நாம் யாரிலெல்லாம் பார்க்கமுடிகிறது என்று யோசிப்பது ஒரு ரசனையின் அடிப்படை. அதை கபீர் தாஸுக்குப் பொருத்துவது, இரண்டு எதிரெதிர் மதங்களுக்குள்ளான ஆன்மிகத்தன்மையின் ஒற்றுமைப்புள்ளியைக் கண்டடைவது. பாராவிற்கு நிகழ்வதும் இதுவே. அதற்காக பரமஹம்சரும், கபீரும் சூஃபி என்பதெல்லாம் ஏற்கமுடியாதது. சூஃபியிஸத்தையும் இஸ்லாத்தையும் பிரித்துப் பார்க்கவேண்டியதில்லை. மென் இஸ்லாமியர்களின் துவக்கப்புள்ளியாக சூஃபியிஸத்தை வைத்துக்கொள்ளலாம். இந்தக் காரணத்துக்காகவே தீவிர இஸ்லாமியர்கள் இதை ஏற்கவில்லை என்பதை நாம் வரலாற்றில் காணமுடிகிறது. அதனால், சூஃபி வழி – இஸ்லாமியர்களின் இதயம் என்று ரூமி வைக்க இருந்த தலைப்பு மிகவும் நேர்மையானதாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.

எனது கருத்தையெல்லாம் நான் சூஃபி வழி புத்தகத்தைப் படிக்காமல் எழுதியிருக்கிறேன். புத்தகத்தைப் படித்தபின்பு, ‘இஸ்லாத்திற்கும் சூஃபியிஸத்திற்கும் தொடர்பே இல்லை’ என்று நானே சொல்லக்கூடும். அப்போது – நாகூர் ரூமி பேசும்போது இடையில், ‘உங்களுக்குத் தெரியாத நாகூர் ரூமி ஒருத்தன் இருக்கான். அவன் எழுதின புத்தகம் இது’ என்றார். அந்நியன் படம் பார்த்தமாதிரி இருந்தது. கொஞ்சம் திகிலாக உணர்ந்தேன் – நீங்களும் இதேபோல் திகிலடையக்கூடும். அந்த நிமிடத்தில், ’பெரியாரும் ஒரு சூஃபியே’ எனச் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

(பி.கு.: நேற்று காராசேவு கொடுத்தார்கள். எந்த சூஃபி தயாரித்தார் எனத் தெரியவில்லை. மிக நன்றாக இருந்தது.)

Share

இருளர்கள் ஓர் அதிசயம்

நன்றி: இட்லிவடை

இருளர்கள் ஓர் அறிமுகம், க. குணசேகரன், 75 ரூபாய், கிழக்கு பதிப்பகம்.

இருளர்கள் ஓர் அறிமுகம் புத்தகத்தை முதலில் பார்த்தபோதே அதன் மீதான ஓர் ஈர்ப்பு தோன்றியது. புத்தகத்தின் மிக நல்ல அட்டையும், இருளர்கள் என்னும் பழங்குடிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வமும் இவற்றிற்குக் காரணம்.

முதல் அத்தியாத்தைப் படித்தபோது, நூலாசிரியரின் ரசனையை எண்ணி வியந்தேன். அவர் விவரிக்கும் சம்பவங்கள் காட்டு வாழ்க்கை மீதான போதையைத் தந்தன. வாழ்க்கையில் இது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் சில சமயங்களில் மனம் கொள்ளும் ஒருவித ஆசையை இப்புத்தகத்தின் முதல் அத்தியாத்தில் மீண்டும் கண்டேன். என் சுவாசக்காற்றே திரைப்ப்டடத்தில் வரும் ‘திறக்காத காட்டுக்குள்ளே’ பாடலும் காடு நாவலும், ஜெயமோகனின் சில கட்டுரைகளில் இத்தகைய ஒருவித கிறக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதே கிறக்கத்தை இந்நூலின் முதல் கட்டுரையில் என்னால் காணமுடிந்தது. இரண்டாம் அத்தியாயம் அப்படியே மேலெழுந்து, ரசனையை முற்றிலும் உதறி, சிறந்த ஆய்வுப் புத்தகமாக மாறியது. உண்மையில் ஓர் அதிசயத் தருணமாக முதலிரண்டு கட்டுரைகளுக்குள் இருந்த வேற்றுமையை உணர்ந்தேன். கிட்டத்தட்ட இதை ஒத்த உத்தியொன்றை மு.க. புத்தகத்திலும், நான் வித்யா புத்தகத்திலும் பார்த்திருக்கிறேன். என்னளவில் அவை தோல்வியான முயற்சிகள். ஆனால் இப்புத்தகம் மிக இயல்பாக இந்த மாற்றத்தை உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.

முதல் அத்தியாயத்தில் கோபால் ராவ் என்பவர் இருளரைப் பற்றிச் சொல்கிறார். இரண்டாவது கட்டுரையில் குணசேகரன் தன் பார்வையைத் தொடர்கிறார். அங்கே தொடரும் தகவல் மழை இப்புத்தகம் முழுக்க எல்லாக் கட்டுரைகளிலும் கொட்டி வழிகிறது. இவ்வளவு தகவல் மழைகளை எப்படி ஆசிரியர் திரட்டினார் என்பதே பெரும் ஆச்சரியம். தகவல் மழைகள் என்றால், வெறும் அடுக்குதல் அல்ல. ஆராய்ச்சியுடன் கூடிய தகவல்கள். ஆராய்ச்சிக்கான தகவல்களும் அதற்கான நிரூபணங்களும் சங்க காலத்திலிருக்கும் பாடல்களிலிருந்து, இருளர்களின் வாழ்வில் சமீப, கடந்த காலங்களில் சந்தித்த அரசியல், சமூகப் பிரச்சினைகள் வரை நீண்டு விரிகின்றன.

பழங்குடிகளாக வாழ்ந்த மக்கள் கடற்கோள்களாலும் இயற்கைச் சீற்றங்களாலும் பல்வேறு இனக்குழுக்களாக இடம்பெயர்கிறார்கள். அங்கிருந்து கிளைக்கிறது இருளர் என்னும் இனக்குழு. அது பின்னர் சாதியாக நிலைபெறுகிறது. இருளர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு நாடோடியின் வாழ்க்கையையாகவே வாழ்கிறார்கள். காடுகளில் தேன் எடுப்பது, பாம்பு பிடிப்பது, மூலிகைகள் சேகரிப்பது என அவர்களது வாழ்க்கை தொடர்கிறது.

சங்ககால மக்கள் தங்கள் குலச்சின்னங்களாக மரத்தையும் பறவையையும் வரித்துக்கொள்வதை ஆசிரியர் விளக்கியிருப்பது சுவையானது. கீரனார், மருதனார் என எடுத்துக்காட்டுகளைத் தந்து விளக்கி, அதற்கான காரணமாக ஆசிரியர் முன்வைப்பது, அக்கால மக்களின் மனதைத் துல்லியமாகப் படம் பிடிக்கிறது. ‘அவர்களின் அத்தனை சந்தேகங்களுக்கும் விடை அளிப்பது போலிருந்தது.’ இருளர்களின் பெயருக்கான காரணங்கள் பல. இருளான பகுதிகளில் வாழ்பவர்கள், இருளைப் போன்ற கருமையானவர்கள், இருள மரத்தின் சந்ததிகளாகத் தங்களைக் கருதுபவர்கள் எனப் பல காரணங்கள். அவர்கள் பேசும் மொழி இருள என்னும் மொழியைப் பேசியிருக்கிறார்கள். இருள என்னும் மொழி தமிழ் மொழியின் ஒரு கிளை. இருளர்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்கள். தமிழிலிருந்து பிரிந்த மொழிகள் வழங்கும் நிலங்களில் வாழ்ந்தாலும், அவர்களுக்குள் ஒருவித தனி மொழி புழக்கத்தில் உள்ளது. இன்று இருளர்கள் கன்னடம் பேசினாலும், மலையாளம் பேசினாலும், துளு பேசினாலும், அவர்கள் தமிழர்களே.

இருளர்கள் எந்நிலையிலும் தங்கள் மரபைக் கைவிடாத தீவிர இந்துக்களாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சார்ந்தது. கன்னித் தெய்வத்தை அவர்கள் நம்புகிறார்கள். எல்லாத் திருவிழாக்களிலும், சடங்குகளிலும் கன்னித் தெய்வமே முதலிடம் பெறுகிறது. எல்லா இருளர்களின் வாழ்விலும் கன்னித் தெய்வமும், அவர்களின் மரபான திருவிழாவும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இருளர்கள் கொண்டாடும் திருவிழா பல்வேறு படிகளைக் கொண்டது. அத்தனையையும் மிக விரிவாக, பொறுமையாக, படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கியிருக்கிறார் குணசேகரன். ஆய்வு செய்து, அவர்கள் அத்திருவிழாவின் ஒவ்வொரு நிலையிலும் பாடும் பாடல்களைத் தொகுத்திருக்கிறார். இன்று மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் வழிபடும் இடங்களை வைத்துக்கொள்ளும் மரபைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் ஆசிரியர். தாங்கள் வாழ்ந்த இடங்களிலெல்லாம் கோயிலையும், கடவுளையும் அழைத்துக்கொண்டவர்கள் இருளர்கள்.

வழிபாட்டில் முதல் இறைவணக்கம் பாடும் பண்பாட்டைக் கொண்டு வந்தவர்கள் இருளர்களே என்கிறார் குணசேகரன். பாணர்களின் (பாணரின் மனைவி பெயர் பாணிச்சி என்கிறார் ஆசிரியர். இப்படி போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்லும் விஷயங்களின் பட்டியலிடவே முடியாது. நினைவில் வைத்துக்கொள்ளவும் முடியாது. அத்தனை அதிகம்) பாடல்களையும், பழங்குடிகளின் பாடல்களையும் தொடர்ந்து இன்றுவரை காப்பாற்றிக்கொண்டு வந்தவகள் இருளர்களே. இதனால் இருளர்களின் வாழ்க்கையில் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (கம்பியில் கட்டிய சலங்கையால் இசையை எழுப்பி, ஒருவரின் தோளை ஒருவர் பிடித்துக்கொண்டு ஆடுவதை ஆசிரியர் விவரிக்கும்போது, பின்னொலியில் இளையராஜாவின் முள்ளும் மலரும் ஹம்மிங்கான ‘எலலே’ (ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்) ஒலிக்கிறது.)

இருளர்கள் திருமணத்திற்காக மேற்கொள்ளும் பெண் பார்க்கும் படலம் மிகவும் சுவையானது. (இதன் நம்பகத்தன்மை குறித்துத் தெரியாது. ஆசிரியர் சொல்வதை அப்படியே நம்புகிறேன். அவ்வளவே.) பெண் பார்க்க வரும் இருளர் அதைப் பற்றிப் பேசுவதில்லையாம். வரும்போது கையில் இரண்டு கம்பிகளைக் கொண்டு வருகிறார்கள். மற்ற எல்லா விஷயங்களையும் நீட்டி முழக்கிப் பேசிவிட்டுப் போய்விடுகிறார்கள். இப்படியே இரண்டாவது முறையும் செய்கிறார்கள். அப்போது பெண் வீட்டார்கள் ‘சென்றமுறையும் இப்படிச் செய்தீர்கள், என்ன விஷயம்’ என்று கேட்க திருமண விஷயம் தொடங்குகிறது. துளை உள்ள பானை ஒன்றை சீதனமாகத் தருகிறார்கள். இதுவே இருள ஆணுக்குப் பின்னர் எலி பிடிக்கப் பயன்படுகிறது. எலி என்பதைச் சிறந்த உணவாகச் சொல்கிறார்கள் இருளர்கள்.

இருளர்களின் இன்றைய முக்கிய வேலை பாம்பு பிடிப்பது. பாம்பு பிடிப்பதன் முகமாகவே இன்றைய இருளர்கள் அறியப்படுகிறார்கள். பாம்பின் வகையை அதன் மணத்தை வைத்தே கண்டறியும் திறமை பெற்றவர்கள் என்கிறார் ஆசிரியர். (எந்தப் பாம்பு என்ன மணம் என்கிற விவரணையும் உண்டு!) எந்தப் புற்றில் பாம்பிருந்தாலும் Y வடிவ முனை கொண்ட கழியை வைத்துப் பிடிக்கிறார்கள். கையாலும் பிடிக்கிறார்கள். காடுகள் குறைந்து வீடுகள் அதிகரிக்கும் சூழலில் இருளரின் தேவையைப் புரிந்துகொள்ளமுடியும். எந்த விதப் பாம்புக் கடிக்கும் மூலிகை மருந்து உண்டு என்கிறார்கள். மூலிகைகளின் பட்டியலையும், பாம்புக்கடிக்கான மருத்துவத்தின் பட்டியலையும் மிக விரிவாகக் கொடுத்து அசர வைக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு தாவரத்தின் தாவரவியல் பெயரையும் கொடுப்பது இன்னும் பாராட்டப்படவேண்டியது.

இருளர்களின் உரிமைப் போராட்டங்கள் பற்றியும் குணசேகரன் எழுதியிருக்கிறார். ஆங்கிலேயர்கள் காலத்தில் இருளர்கள் குற்றப் பரம்பரையாக அறிவிக்கப்பட்டதையும் அதற்கான போராட்டத்தையும் ஓர் இருளரே விவரிக்கிறார். இன்றைய இருளர் வாழ்வின் முக்கியப் பிரச்சினையான சான்றிதழ் வாங்குவதைப் பற்றிச் சொல்லும் ஆசிரியர், இதன் காரணமாகவே பெரும்பாலான இருளர்கள் பாம்பு, அணில் பிடிக்கும் இருளர்களாகவே தங்கிவிடுவதைச் சுட்டிக்காட்டுகிறார்.

மிக எளிமையான தமிழ், ஆழமான பார்வை, தொடர்ச்சியான தகவல்கள் என அசர வைக்கும் ஆசிரியரின் முதல் நூல் இது என்னும்போது அந்த ஆச்சரியம் இன்னும் பன்மடங்கு அதிகரித்தது. இத்தனை முயற்சியும் உழைப்பும் காண்பித்த ஆசிரியர் இன்னும் சில விஷயங்களில் கவனம் கொண்டிருக்கலாம்.

ஒரே விஷயத்தைப் பலமுறை மீண்டும் மீண்டும் சொல்வதன்மூலம் ஏற்படும் அலுப்பைத் தவிர்த்திருக்கலாம். ஐவகை நிலங்கள் பற்றியும், இருளர்களின் மொழி பற்றியும் இது போன்ற இன்னும் நிறைய தகவல்களும் நிறைய முறை வருகின்றன. ஆரிய படையெடுப்பு என்கிற ஒரு கருத்தாக்கம் இன்று பல ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை ஒரு விவாதித்திற்குரிய விஷயமாகக்கூட ஆசிரியர் எடுத்துக்கொள்ளவில்லை. ஆரியப்படையெடுத்து நிகழ்ந்தது என்கிற முடிவின் அடிப்படையில் இருளர்களை தஸ்யூக்களாகவே அணுகிறார். அதேபோல், ஒவ்வொரு அத்தியாயத்திலும் இருளர்களின் பெருமையைச் சொல்வதாக எண்ணிக்கொண்டு, இன்றைய மக்களின் நாகரிகத்தைப் பற்றிய கிண்டல்கள், ஒருவகையில் ஆசிரியரின் சமூக அக்கறையைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ள முடிந்தாலும், செயற்கைத்தனமாக ஒலிக்கிறது. இந்த செயற்கைத்தனமான எழுத்துகள், இந்நூலில் ஆசிரியர் எட்டியுள்ள உயரத்திற்குச் சற்றும் பொருந்தாதவை. சில இடங்களில் இந்த சமூக அக்கறை எல்லை மீறி ஒருவித அலுப்பைத் தருகிறது. ஆய்வுகள் ஊகங்களின் அடிப்படையிலும் நடக்கின்றன என்றாலும், இந்த ஊகம் ஓரோர் இடங்களில் அதிகமாகவிடுகிறது. ஓர் உதாரணம், இருளர்கள் தலைப்பாகை கட்டுவதைப் பற்றியது. இதை இன்றைய உலகின் மக்கள் அணியும் தலைக்கவசங்களோடு ஒப்பிடுவது கொஞ்சம் அதிகபட்ச கற்பனை, ஊகம். இருளர்களின் திருமணம் பற்றிய சிறந்த குறிப்புகளைத் தரும் ஆசிரியர், இருளர்களின் மறுமணம் பற்றிய குறிப்புகளைத் தந்திருக்கலாம். (நிறைய தகவல்களை விடாமல் படித்ததில், இதை நான் பார்க்கத் தவறியிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன். நன்றி.) நிறைய நூல்களையும், குறிப்புகளையும் படித்து நூலாய்வு செய்திருக்கும் ஆசிரியரின் கள ஆய்வு குறித்த விவரங்கள் இல்லை. கள ஆய்வும் செய்திருந்தால் இந்நூலில் இருளர்களின் இன்னொரு பரிமாணமும் கைக்கூடியிருக்கலாம்.

‘சோளகர் தொட்டி’ நாவலில் இருளர்கள் வாழ்வின் இன்னொரு பக்கத்தை உணரமுடியும். காட்டில் வாழ்வதால் அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், வீரப்பன் தேடுதல் வேட்டையில் அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் நம்மைப் பதறவைப்பவை. சரியான கல்வி அறிவும், பொருளாதார சமூக முன்னேற்றமும் மட்டுமே இவர்களை முன்னேற்ற முடியும். இன்றைய இருளர்கள் தங்கள் சந்ததிகளாவது படித்து முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் உள்ளதை ஆசிரியர் குறிப்பிடுகிறார். இது முக்கியமானது. இது நிகழ அவர்களின் இஷ்டமான கன்னித் தெய்வம் அருளட்டும்.

தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருதைப் பெறும் தகுதியுடைய இப்புத்தகத்தைப் போன்ற இன்னும் பல புத்தகங்களை, ஆய்வு நூல்களை குணசேகரன் எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/767/Irullargal%20:%20Orr%20Arimugam

Share

உயிர்ப்புத்தகம் – ஆன்மாவின் அந்தரங்கக் குரல்

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.

சி.வி. பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய ‘ஆயிஸிண்டே புஸ்தகம்’ என்னும் நாவலின் தமிழாக்கம் இந்நாவல். மலையாளத்தின் மிக முக்கிய நாவல்களில் ஒன்றாக இந்நாவல் கருதப்படுவதாக இந்நூலில் உள்ள குறிப்பு சொல்கிறது. நாவலை வாசித்தபோது, இக்குறிப்பு சொல்வது நிச்சயம் உண்மையாகவே இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

இந்நாவலில் சித்திரிக்கப்படும் தோமோ, அவரது தந்தை, தோமோவின் மகன், மகள், மனைவி என ஒவ்வொருவரின் ஆன்மாவின் குரலும் காமத்தை முன்வைத்து ஒலிக்கின்றன. இந்த ஒட்டுமொத்த பிரதியையும்கூட காமத்தின் மீதான ஆன்ம விசாரணை என்று வகைப்படுத்திவிடமுடியும். எங்கும் பின் தொடரும் நிழல் போல, ஒவ்வொருவரின் ஆன்மாவையும் காமம் விடாது பின் தொடர்கிறது. சில சமயம் காதல் என்னும் பூச்சோடு. பல சமயங்களில் எவ்வித பூச்சுமில்லாமல் காமம் என்கிற வேகத்தோடு.

தோமோவின் தந்தை தன் பேத்தியின் மீது தானே எதிர்பார்க்காத தருணமொன்றில் காமம் கொள்கிறார். அதற்கான தண்டனையாகத் தூக்கிட்டுச் சாகிறார். தோமோவின் மனைவி இறந்த பின்பு தோமோ திருமணம் செய்யாமல் குடித்துவிட்டுச் சீரழிகிறான். மகள் ஆனி, பாதிரியார் ஒருவருடன் ஓடிப்போகிறாள். மகன் யோஹன்னான் பள்ளியில் உடன் படிக்கும் ஒரு நண்பனுடன் நெருக்கமாகிறான். ஓரினச்சேர்க்கைக்கு அது இட்டுச் செல்லும் சாத்தியக்கூறுகள் ஒருவித பூடகத் தன்மையுடன் சொல்லப்படுகின்றன. பின்பு அவனுக்கு ராஹேல் என்னும் பெண்ணுடன் உடலுறவு ஏற்படுகிறது. அது காதலாக மாறும் முன்பு, ராஹேல் கன்னியாஸ்த்ரி மடத்திற்குச் செல்கிறாள். ஸாரா என்னும் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத சகரியா கணவனாகிறான். அவளை விடாது காதலிக்கும் யாக்கோப் குடித்துவிட்டு சாகிறான். எவ்விதப் பிடிப்பும் இன்றி அலையும் யோஹன்னான் அவளுடன் உறவு கொள்ளத் தொடங்குகிறான். இந்நிலையில் யோஹன்னின் தந்தை தோமோவிற்கு, மனைவி இறந்து பல வருடங்களுக்குப்பின்பு திருமணம் செய்யும் எண்ணம் வருகிறது. கணவன் இல்லாத ஸாராவைத் திருமணம் செய்ய நினைக்கிறான். தன் மகனுக்கும் ஸாராவிற்கும் இருக்கும் தொடர்பு தெரிந்திருந்தும்கூட, ஸாராவின் அழகு அவனைக் கட்டிப் போடுகிறது. அவள் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுப்பதால், அவளைக் கொலை செய்கிறான். யோஹன்னான் தனித்து விடப்படுகிறான். இறந்துபோன அவனது தாத்தா, தாய், ஸாரா என எல்லோரையும் ஆன்மாவாகக் காண்கிறான்.

கதையின் நடை ஒருவித மாந்திரிக யதார்தத் தன்மையோடு விவரிக்கப்படுகிறது. இத்தன்மையை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தாமல், தேவையான இடங்களில், ஆன்மாவின் குரலாக வெளிப்படுத்துவதில் ஆசிரியர் கவனமாயிருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின்போதும், அதையொத்த விவிலியக் குறிப்புகள் வருகின்றன. பெரும்பான்மையான குறிப்புகள் நடைமுறை வாழ்விற்கும் விவிலியத்திற்குமான முரணாகவே முன்வைக்கப்படுகிறன.

பாதிரியார் ஒருவர் காதல் கொண்டு ஒரு பெண்ணோடு ஓடிப்போவது ஒரு முக்கிய விஷயம். அதை பெரிய பாதிரியார் கடைசியில் ஏற்கிறார். பிரம்மச்சரியம் என்கிற விஷயம் குறித்து நான் பலமுறை நினைத்திருக்கிறேன். கடுமையான பிரம்மச்சரியம் என்பது சாத்தியம்தானா என்பது புரியவில்லை. பாதிரியின் காதல் அவரது கட்டுக்களை உடைக்கிறது. அவர் இயல்பான வாழ்க்கையைத் தேடி ஓடுகிறார். பாதிரியாவதற்கான பயிற்சியில் கடுமையான பிரம்மச்சரிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட நிர்ப்பந்திக்கப்படுவது பற்றிய குறிப்புகளும் உள்ளன. பாதிரியார்கள் இருவருக்கிடையேயான காமம் பற்றிய உரையாடல் முக்கியமானது. ‘கன்னியான தன் மகளைக் கல்யாணம் பன்னிக்கொடுக்கிறவனும் நன்மை அடைகிறான், கொடுக்காதவனும் அதே நன்மையை அடைகிறான்.’

தோமோவின் மகனான யோஹான்னனே மிக முக்கிய பாத்திரம். முக்கியமான விஷயம் அவன் வயது. கடைசியில் ஸாராவுடன் உறவுகொள்ளும்போது அவன் வயது 17. ஸாராவின் வயது 36. அதேபோல் மேரி – நைநான் உறவு. அவர்கள் உறவு கொள்கிறார்கள். ஆனால் நைநான் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். ஸாராவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான பிரிஜித்தாம்மாவும் தன்னைவிட ஒரு சிறிய பையனிடம் உறவு கொள்ள முயல்கிறாள். கட்டுக்கடங்காத காமத்தின் பிரதிகளாக இவர்கள் அனைவரும் சித்திரிக்கப்பட்டுள்ளனர். ஸாராவிற்கும் யோஹான்னானுக்கும் இடையேயான முறை தவறிய உறவை அறியும் பெரிய பாதிரியார் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறார். அவரால் யோஹன்னனையோ ஸாராவையோ கட்டுப்படுத்தமுடியவில்லை. அதற்கான வார்த்தைகளோ வழிகளோ அவரிடம் இல்லை. அவருக்கு எளியதும் பணிவதும் பிரார்த்தனை மட்டுமே. அவர் பிரார்த்தனையின் வழியாக அடையும் மன அமைதியை, யோஹான்னனும் ஸாராவும் காமத்தின் மூலம் கண்டடைகிறார்கள். அதுபோன்ற காமமே ஒரு பாதிரியாரை ஒரு பெண்ணோடு ஓடச் செய்கிறது.

இதில் வரும் எல்லா முக்கியக் கதாபாத்திரங்களில் ஏதேனும் ஒரு தடவையேனும் தங்கள் உயிரின் ரகசியக் குரலை எதிர்கொள்கிறார்கள். ஒருவித அமானுஷ்யத் தன்மையோடோ அல்லது அது தங்களுக்கான குரல்தான் என்கிற தெளிவோடோ அதை எதிர்கொள்கிறார்கள். யோஹான்னான் அக்குரலை எதிர்கொள்கிறான். தோமோ அக்குரலைக் கண்டு ஓடுகிறான். ஸாரா அக்குரலைப் புறக்கணித்து தனக்கான பாதையைத் தேர்கிறாள். ஆனி அக்குரலோடு உடன்படுகிறாள். உயிரின் குரல் யாரையும் விடுவதில்லை.

இந்நாவலை வை. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார். சிக்கலான மொழியுடைய நாவலை மிக நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார். இடையிடையே விவிலியத்திலிருந்து வரும் குறிப்புகளை அப்படியே தமிழில் தந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். சில சமயங்களில் எந்த இடத்தில் குறிப்பு வருகிறது, எந்த இடத்தில் நாவலின் பிரதி வருகிறது என்பதைப் பிரிக்கமுடியவில்லை. சில மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். (ரூபவதி, பரிகாரப் பிரதக்ஷணம், வரிஷித்தார், ஸாரா என்ற பெயரை ஸாரே என்று சொல்லியிருப்பது, ஆகர்ஷித்தன, குசலப்ரச்னம் இப்படிப் பல.) இவற்றைத் தமிழில் எழுதியிருக்கலாம். அதேபோல் திடீரென ஆங்கில வார்த்தைகள் வருகின்றன. (லீவு நாள், ரெடி ஆயின போன்றவை.) மூலத்திலேயே இப்படி இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதேபோல் குற்ற சம்மதம் என்னும் வார்த்தைக்கு பாவ மன்னிப்பு என்றும் கடவுளே என்று அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல்லுக்கு ஆண்டவரே என்னும் மாற்றியிருந்தால், நாவலின் கிறித்துவத்தன்மை கூடியிருக்கும். பொருட்படுத்தத்தகாத இந்த மிகச் சிறிய குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், படிக்க எவ்விதத் தடங்கலுமில்லாத, அழகான மொழிபெயர்ப்பு இது.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/printedbook/648/Uyir%20Puththagam

.

Share

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு ஜோதி நரசிம்மனின் பதில்

அடியாள் புத்தக விமர்சனத்திற்கு, ஜோதி நரசிம்மன் உயிரோசை.காமில் தன் பதிலைச் சொல்லியுள்ளார். என் விமர்சனம் அவரைப் புண்படுத்தியிருப்பது புரிகிறது. அவர் கடைசியில் சைன் – ஆஃப் செய்யும்போது பெயரோடு ‘அடியாள்’ என்று போட்டிருக்கவேண்டாம். அடியாள் என்பது புத்தகத்தின் பெயராக இருந்தாலும், என்னவோ உறுத்துகிறது.

http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=596

உயிரோசையில் அடியாள் நூல் விமர்சனம் படித்தேன். நன்றி. என் படைப்பை விமர்சனம் செய்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் என் எழுத்துப்பணி சிறப்படைய உயிரோசை வாழ்த்துவதாகவே உணர்கிறேன். அந்த விமர்சனத்தில் தாங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஐயத்திற்கு நான் பதில் சொல்−யே ஆக வேண்டும். அது உங்களை சமாதானப்படுத்திக்கொள்ள அல்ல. என்னை செப்பனிட்டுக் கொள்ள.

ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார் அதில் எந்தவித வலியும் தெரியவில்லை. தெரிவதில்லை. என்று சொல்லியிருக்கிறீர்கள். எனக்குள் அந்த சம்பவத்தை, வலியை உள்வாங்கிக் கொண்டுதான் அவற்றை வெளிப்படுத்தியுள்ளேன். படிக்கும்போது வலியை உணரவேண்டும் என்று எழுதியிருந்தால் அது சம்பந்தப்பட்டவர்களை ஆறுதல் அடைய செய்யாது. மாறாக கோபம் ஏற்படச் செய்யும். அவர்களை சமூகம் எப்படி குற்றவாளியாக மீண்டும் மீண்டும் பார்க்கிறதோ, அப்படியே நானும் பார்க்க நேரிடும். மாறாக அது எனது பார்வைக்கும் அனுபவத்திற்கும் எதிராக இருக்கும் என்பதால் நீங்கள் சொல்லியிருக்கும் அந்த வலியை எழுத்துகளுக்குள் வைக்கவில்லை. மேலும் ஒரு விசாரணைக் கைதியாக குறைந்த நாட்களிலே என்னை வாசிப்புக்கும், எழுதுவதற்கும் தூண்டியது சிறை அனுபவம். அந்த சிறை எத்தனையோ கைதிகளை மீண்டும் மீண்டும் குற்றவாளியாக உருவாக்கியிருந்தாலும் என்னைப்போன்ற சில சமூக ஆர்வலர்களை உருவாக்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. 15 நாட்களில் ஒரு சிறையை முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது என்பது போல் எழுதியுள்ளீர்கள். அது நான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்த புத்தகத்தை என்னுடைய எட்டு ஆண்டுகள் அடியாள் அனுபவத்தில் நான் பட்ட அவமானங்களை, துயரங்களை, சொல்லமுடியாத, சகிக்கமுடியாதவைகளின் ஊடாக உணர்ந்து யாரையும் பாதிக்காமல் தொகுத்துள்ளேன். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல நான் ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாக சிறை செல்லவில்லை. விடுதலைப் பு−களின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேரணியில் பங்கேற்று தடையை மீறி பேரணிச் செல்ல முயன்று கைது செய்யப்பட்டேன். நான் இருவேறு நிலைகளிலும் 36 நாட்கள் மத்திய சிறையில் இருந்துள்ளேன். ஹரன்பிரசன்னா போன்றவர்கள் ஓரிரு நாளாவது மத்திய சிறைக்கு சென்றால் என்னைவிட மிகுந்த அனுபவம் பெறமுடியும். அடியாளை விட பெரிய தொகுப்பு எழுத முடியும். மூதோர் மொழிபோல சிறை மனிதனை சிந்திக்கவைக்கும் அறைதான்.

ஜோதி நரசிம்மன் (அடியாள்)

Share

அடியாள் – சிறையும் சிறை சார்ந்த இடமும்

சிறையில் நேரும் அனுபவங்களைப் பற்றி, இதற்கு முன்னர் நான் படித்திருந்த புத்தகம் ‘சிறை அனுபவங்கள்’. (அகல் வெளியீடு.)  அது இந்திய விடுதலைக்கு முன்னர் உள்ள சிறை சார்ந்த விஷயங்களைச் சொல்லியது. மலேசியச் சிறைகளில் நிகழும் கொடுமைகளைப் பற்றி நாளிதழ்களில், வார இதழ்களிலும், அக்கொடுமையை அனுபவித்தவர்கள் கொடுத்த நேர்காணலை வாசித்திருக்கிறேன். ‘சோளகர் தொட்டி’ நாவலில் சிறை போன்றதொரு அமைப்பில் கைதிகள் படும் அவஸ்தை பற்றிய, உயிர் கொல்லும் வர்ணனை உள்ளது. உயிர்மை வெளியிட்டிருக்கும், சாரு நிவேதிதாவின் புத்தகம் ஒன்றிலும் (தப்புத் தாளங்கள்) சிறை அனுபவங்கள் பற்றி வாசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் அப்பாவிகளின் குமுறல் என வகைப்படுத்தலாம். ஒரு அரசியல் அடியாளாக இருந்த ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலத்தைப் படிப்பது இதுவே முதல்முறை.

ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்த ஜோதி நரசிம்மன் அக்கட்சியின் அடியாளாக இருக்கிறார். அக்கட்சிக்காக ஒரு அடிதடி வழக்கில் கைதாகிச் சிறை செல்லுகிறார். சிறை என்றால் தண்டனையாக அல்ல, விசாரணைக் கைதியாக. பத்திலிருந்து பதினைந்து நாள்கள் சிறையில் காணும் விஷயங்களைப் பற்றியும், அங்கே உள்ள கைதிகளைப் பற்றியும் அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். பிணைவிடுதலை (ஜாமீன்) கிடைத்து வெளியில் வரும் அடியாள் அரசியலில் ஆர்வம் கொள்கிறார். தமிழர் தேசிய இயக்கத்தில் சேர்கிறார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு 26 பேருக்குத் தூக்குத்தண்டனை கிடைக்கிறது. அதை எதிர்த்து நடந்த பேரணியில், பழ. நெடுமாறன் தலைமையில் கலந்துகொள்கிறார். தடையை மீறிப் பேரணி என்பதற்காக, நெடுமாறன், வைகோ உள்ளிட்ட எல்லோரும் கைதாகிறார்கள். இவரும் கைதாகிறார். மீண்டும் சிறை. மீண்டும் அனுபவங்கள். அரசியல் கைதியாக அவர் சிறை செல்லும்போது, நெடுமாறன், வைகோவைப் பற்றிச் சொல்கிறார். வைகோவை ஆயுள்தண்டனைக் கைதிகள் கெரோ செய்வது போன்ற சுவாரஸ்யமான விவரங்கள் வருகின்றன. முதல் வழக்கில் கைதானதற்கும் இவ்வழக்கில் கைதானதற்கும் உள்ள வித்தியாசங்களை நினைத்துப் பார்க்கிறார். இன்னும் முதல் வழக்கே முடியாத நிலையில் அடுத்த வாய்தாவை எதிர்நோக்கியிருக்கிறார் ஜோதி நரசிம்மன்.

தான் குற்றம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளும் ஒருவர் பார்வையில் சிறையின் அனுபவங்கள் விவரிக்கப்படுவது முக்கியமானது. அரசியல் அடியாளாக ஜோதி மாறியது, நெருக்கடியால் அல்ல, தேவையற்ற சகவாசங்களாலேயே என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார். நல்ல குடும்பம், நல்ல தந்தை, தாய் என அவருக்கு அமைந்திருந்தாலும், அந்த அரசியல் அடியாள் என்கிற போர்வையிலிருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. ஆனால் சிறையிலிருந்து வெளிவரும் அவர் அரசியல் அடியாளாகத் தொடர விரும்பவில்லை. சிறையில் அவர் படிக்கும் புத்தகங்கள் அவரைப் புரட்டிப் போடுகின்றன. அரசியலுக்குச் செல்கிறார். கொள்கைக்காகச் சிறை செல்வது அவருக்குப் பிடித்திருக்கிறது.

சிறையில் ஜோதி சந்திக்கும் சிறைக்கம்பிகள் கூடத் தனக்கெனக் கதையை வைத்துள்ளன. கைதிகள் அனைவரும் ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்கள். தவறாக காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்களிலிருந்து, கொலை, கொள்ளையைச் செய்தவர்கள் என எல்லோருக்கும் ஒரு கதையும் காரணமும் இருக்கின்றன.

சிறையில் எளிதாகத் தொலைபேசி கிடைக்கிறது. சிறையிலில்லாமல் பொதுவில் வாழும் மனிதர்களிடம் இருக்கும் பணப்புழக்கத்தைவிடச் சிறையில் பணப்புழக்கம் அதிகம் இருக்குமோ என்ற யோசிக்க வைக்கிறது ஜோதி விவரிக்கும் சம்பவங்கள். நாடெங்கும் ஊழல், சிறையெங்கும் ஊழல். சிறையில் இருக்கும் ஒருவர் நினைத்த நேரத்தில் தொலைபேசியில் பேசமுடிகிறது. எல்லாவற்றிற்கும் பணம் தேவை. சிறைக்கைதிகளை நேர்காண வரும் உறவினர்கள், நண்பர்கள் தரும் பணம் இதற்குப் பெரிதும் உதவுகிறது. ஜோதியின் சிறை விவரணைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘மகாநதி’ திரைப்படம் மட்டுமே யதார்த்தத்தோடு ஒட்டிப்போகிறது. அதேபோல் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் வரும், கருணாஸ் பாடும் கானாப்பாட்டு. சிறையில் இரவுகளில் ஏதேனும் ஒரு அறையிலிருந்து எப்படியும் ஒரு கானாப்பாட்டு கேட்கும் என்கிறார் ஜோதி நரசிம்மன்.

சிறையில் ஜோதி அரசியல் கைதிகள் என்றில்லாமல், ஒரு ‘ஆன்மிகக் கைதியையும்’ சந்திக்கிறார். பிரேமானந்தா. பல்வேறு கைதிகள் மனிதாபிமானம் மிக்கவர்களாக ஜோதிக்கு அறிமுகமாவது போல, பிரேமானந்தா பற்றியும் உயர்வான கருத்துகளே ஜோதியால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜாமீன் எடுக்க வசதியில்லாத பல விசாரணை கைதிகளுக்கு, பிரேமானந்தா உதவியதாகச் சொல்கிறார் ஜோதி.

விசாரணைக் கைதிகளின் முக முக்கியப் பிரச்சினை சாப்பாடு. ஜோதியின் விவரணையில் சாப்பாட்டிற்கு மிக முக்கிய இடம் உள்ளது. வீட்டில் வேண்டியதைக் கேட்டுச் சாப்பிடும் சுதந்தரம் முதல்நாளே சிறையில் பறிபோகிறது. நாக்கைப் பழக்கப்படுத்துவது அத்தனை எளிதானதல்ல. கைதிகளுக்கு அசைவ உணவு அந்தச் சமயத்தில் இல்லை என்பதால், பெருச்சாளியை சமைத்து உண்கிறார்கள். இப்போது அரசு கைதிகளுக்கு வாரம் ஒருமுறை அசைவ உணவு வழங்குகிறது.

சிறையில் இருக்கும் கைதிகளின் மீதான அணுகுமுறையில் கொஞ்சம் விவாதம் தேவைப்படுகிறது. சிறைக்கதிகள் அப்பாவிகள் அல்ல என்பதும் உண்மையே. ஆனாலும் அவர்களுக்குத் தரப்படும் அடிப்படை வசதியைப் பற்றி அரசு விவாதிக்கவேண்டியது தேவையான ஒன்றே. இப்புத்தகத்தைப் படித்தபோது எனக்குத் தோன்றிய சிந்தனை இதுவே.

இந்தப் புத்தகத்தின் குறைகளாக்ச் சில விஷயங்களைச் சொல்லலாம். ஜோதி தான் கண்ட விஷயங்களைச் சொல்கிறார். அதில் எவ்வித வலியும் தெரிவதில்லை. மாறாக, பார்த்தவற்றைச் சொல்கிறார் என்கிற எண்ணமே மேலோங்குகிறது. மேலும் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ என்று சொல்லும் ஜோதி, சிறையில் இருந்ததே மொத்தம் பத்திலிருந்து இருபது நாள்களுக்குளேதான் இருக்கும். அதுவும், குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்ட விசாரணைக் கைதியாக மட்டுமே. மேலும் ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லுமளவிற்கு ஜோதியின் வாழ்க்கை அப்படி சம்பவங்களால் நிறைந்து வழியவில்லை, அல்லது அவர் சொல்லவில்லை. ஒருமுறை கூட காவல்துறையினரால் அடிக்கப்படவில்லை. கொடூரமாக தண்டனை கொடுக்கப்படவில்லை. இப்படி எவ்வித அனுபவமும் இல்லாமல் இவர் பார்த்தவற்றை மட்டும் விவரிக்கும்போது, அதை இவர் கண்டவற்றைச் சொல்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளமுடிகிறதே ஒழிய, ‘ஒப்புதல் வாக்குமூலமாக’ உணரமுடியவில்லை. நிறைய இடங்களில் இது தன் வாழ்க்கையைச் சொல்லுதல் என்கிற இடத்திலிருந்து விலகி, கதை சொல்லும் பாணியைப் பற்றிக்கொள்கிறது. இதனால் தீவிரத்தின் முனை மழுங்கடிக்கப்படுகிறது.

இப்புத்தகத்தில் கால அறிவு சுத்தமாக இல்லை. எந்த நேரத்தில் எது நடைபெறுகிறது என்கிற விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படவில்லை. நிகழ்காலத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், விஷயங்களை வைத்து அது எப்போது நடந்தது என்பதனை யோசித்து, அக்காலகட்டத்தின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளை நினைவிற்குக் கொண்டுவரவேண்டியிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகள் கழித்து யாரேனும் இப்புத்தகத்தைப் படித்தால் குழப்பமே மிஞ்சும்.

ஒப்புதல் வாக்குமூலம் என்கிற வார்த்தைக்கு பலம் சேர்க்கும் வகையில், ஜோதி எக்கட்சியைச் சேர்ந்தவர், ஆளும் கட்சி எது, எதிர்க்கட்சி எது என்பன போன்ற விவரங்களைச் சொல்லியிருந்தால், அது உண்மையில் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாக ஆகியிருந்திருக்கும். எக்கட்சியிலும் அடியாள்கள் இல்லாமல் இருக்கமுடியாது என்கிற உண்மை எல்லோரும் அறிந்திருக்கிற நிலையில், இதை வெளியில் சொல்வதால் ஒன்றும் மாறிவிடப்போவதில்லை. இதைச் சொல்லாததற்கு ஜோதிக்கும் வேறு காரணங்கள் இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

இது போன்ற புத்தகங்கள் கைதிகளுக்கு ஒருவித புனித பிம்பத்தைக் கட்டமைக்க வாய்ப்பளிக்கின்றன. ஜோதிக்கும் இது நிகழ்கிறது. ஆனால் ஜோதி பெரிய குற்றவாளியாகவோ, கொலையாளியாகவோ இல்லாததால், இது அதிகம் உறுத்தவில்லை. இல்லையென்றால், ஆட்டோ சங்கருக்கும் வீரப்பனுக்கும் இங்கே ஒரு புனிதப்பிம்பம் ஏற்படுத்தப்பட்டது போன்ற தோற்றம் இவருக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

ஜோதியை அவர் வாசித்த புத்தகங்கள் மாற்றுகின்றன என்று வாசித்தபோது சந்தோஷமாக இருந்தது. ‘எனி இந்தியனி’ல் இருந்தபோது ஒரு கைதியிடமிருந்து கடிதம் வந்திருந்தது. பசுக்கள் பன்றிகள் போர்கள் சூனியக்காரிகள் ஆகிய கலாசாரங்கள் என்கிற புத்தகத்தைக் கேட்டிருந்தார். மிக மகிழ்ச்சியாக இருந்தது. அவர் விசாரணைக் கைதியா, தண்டனைக் கைதியா என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் புத்தகம் ஒரு கைதியை இன்னுமொருமுறை மாற்றக்கூடும்.

இன்னும் வழக்கு முடியாத நிலையில் ஜோதியை அரசியல் அணைக்காமல் இருந்து, அவர் விரும்பும் அவர் மகள் தமிழினி அணைக்கட்டும்.

(அடியாள் – ஓர் அரசியல் அடியாளின் வாக்குமூலம், ஜோதி நரசிம்மன், 70 ரூபாய், கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை – 600 018.)

Share