Archive for திரை

தாரை தப்பட்டை – முழுக்க தப்பு

தாரை தப்பட்டை திரைப்படம் பாலாவின் வழக்கமான கொடூரத் திரைப்படமாகத்தான் இருந்தது. இதுவரை வந்த கொடூரத் திரைப்படங்களில் அதை ஒட்டி கொஞ்சம் கதையும் கொஞ்சம் திரைக்கதையும் இருந்தன. இதில் கொடூரம் மட்டுமே உள்ளது.

மிக முக்கியமான குறையாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, படத்தின் பல காட்சிகள் எவ்வித உயிருமின்றி தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் பாணியில் இருந்தன. இது படத்தின் தரத்தை வெகுவாகக் குறைத்துவிட்டது.

சிவாஜி கணேசன் என்ற ஒரு சிறந்த நடிகன் தன் மிகை நடிப்பை நம்பி காலமாற்றத்தைப் பொருட்படுத்தாமல் அதற்குள்ளேயே சிக்கி மடிந்து போனது போல பாலா தன் திரைப்படம் என்ற ஒரு பிம்பத்துக்குள் பலவாறாகக் சிக்கிக்கொண்டுவிட்டார். அவன் இவன் என்ற திரைப்படம் தமிழ்த் திரைப்படக் குப்பைகளில் ஒன்று. நல்ல படங்கள் இயக்கும் இயக்குநர்களின் தோல்விப் படங்கள்கூட ஒரு எல்லைக்கு மேலே பொருட்படுத்தத்தக்கக் கூடிய படமாக இருக்கவேண்டும். ஆனால் தமிழில் இப்படி நிகழ்வதில்லை. தமிழின் இரண்டு மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்த பாலு மகேந்திரா சில குப்பைகளைக் கொடுத்திருக்கிறார். மகேந்திரனும் இப்படியே. ஆனால் இவற்றையெல்லாம்விட பாலாவின் அவன் இவன் படு மட்டமானது.

விளிம்பு நிலை/புறக்கணிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய படத்தை எடுப்பதாகத் தொடங்கிய பாலா, எப்படி பாரதிராஜா கிராமங்களைக் காட்டுவதாகத் தொடங்கி ஒரு கட்டத்தில் அவரே கிராமங்களை உருவாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தாரோ அப்படி பாலாவின் விளிம்பு நிலை மனிதர்கள் உருவாகி வர ஆரம்பித்தார்கள். இவர்களுக்கும் யதார்த்த சமூகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ‘என் பிரா சைஸை நீயே பார்த்துக்கோ’ ஓர் உதாரணம்.

மணிரத்னம் மிகப்பெரிய பிரச்சினையை மையமாகக் கொண்டு காதல் படங்களை எடுப்பதைப் போல பாலாவும் தாரை தப்பட்டை என்று பெயர் வைத்துவிட்டு அதில் என்னென்னவோ காண்பிக்கிறார். ஏன் எதற்கு என்ற திரைக்கதை பற்றிய எவ்வித முதிர்ச்சியும் இப்படத்தில் இல்லை.

நடிகர்களை அதீதமாக மிகை நடிப்புச் செய்யச் சொல்லி பார்வையாளர்களை முதல் காட்சியிலிருந்தே கலவரப்படுத்துவது பாலாவின் பாணி. அவன் இவன் திரைப்படத்துக்கு அடுத்து வந்ததாலேயே பரதேசி பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலும், பரதேசி திரைப்படத்தின் முதல் பத்து நிமிடங்களிலேயே நான் அடைந்த குமட்டல் இன்றும் நினைவில் உள்ளது. அதேபோலவே இப்படத்திலும் முதல் காட்சியிலேயே ஜி.எம். குமார் அந்த கொடுமையைத் தொடங்கி வைக்கிறார். அவர் இசைக்கும் கருவி என்ன? படத்தின் பெயருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. தப்பட்டை என்றால் பறை என்று விக்கி சொல்கிறது. ஜி.எம்.குமாரோ தவிலை அதை அவர் சிவாஜி கணேசன் போல வாசிக்கிறார். சரக்கு கேட்கிறார். பின்பு ஒரு காட்சியில் சம்பந்தமே இல்லாமல் ஒரு பாடலும் பாடுகிறார். கம்பீரமான குரலில். இவர் யார்? சகலகலா வல்லவரா? இவர் ஏன் புகழ்பெறவில்லை? என்ன நடந்தது? ஏன் குடித்துக்கொண்டே இருக்கிறார்? ஒன்றும் விளங்கவில்லை. ஜி.எம். குமார் போன்ற எவ்வித முகபாவங்களும் இன்றி நடிப்பையே கொலையாக்கும் நடிகர்களை பாலா தள்ளி வைக்கவேண்டும். தன்னால் யாரையும் நடிக்க வைக்கமுடியும் என்பதே இயக்குநரின் தோல்வியின் முதல்படியாக இருக்கும்.

ஜி.எம்.குமாரின் ஒவ்வாத (வராத) நடிப்பைப் பிடித்துக்கொண்டு அடுத்து தொடர்கிறார் வரலட்சுமி. அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். இவரும் சரக்கு கேட்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு காட்சியும் குமட்டலை உண்டு பண்ணுகிறது. இன்னொருவருடன் திருமணம் என்றதும் அப்படியே நடைப்பிணமாக மாறுகிறாராம். சகிக்கவில்லை. ஆ ஓ ஊ என்று கத்தினால் நடிப்பு என்ற, தங்கர் பச்சான் கதாபாத்திரங்களின் இலக்கியப் பிரதியை பாலா கைவிடுவது நல்லது.

சசிக்குமாரும் வரலட்சுமிக்கும் காதலாம். ஆனால் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். நாம் அதைப் புரிந்துகொள்ளவேண்டுமாம். இது என்ன ரொம்ப புதுமையானதா? பார்த்தால் புரியாதா? இடையிடையே செண்ட்மெண்ட் காட்சிகளை வைத்து அதற்கு இளையராஜா மிகப் பிரமாதமான பின்னணி இசையைப் போட்டு, ஆனால் அங்கே காட்சிகளோ கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

தேவையற்ற காட்சிகள்தான் ஒட்டுமொத்த படமும். பாலா 10,000 அடி படங்கள் எடுத்துவிட்டு தேவையற்றதை வெட்டிவிடுவார் என்று சொல்வார்கள். எனக்கென்னவோ அப்படி வெட்டிப்போட்டதை தவறாக வெளியிட்டுவிட்டார்கள் என்று தோன்றுகிறது.

ஒரு திரைக்கதை என்றால் சுவாரஸ்யம் வேண்டாமா? அரிசியை ஊற வைத்து உளுந்தை ஊற வைத்து ஆட்டி எடுத்து ஒன்றாக்கி உப்பு போடும் தினசரி வேலையா என்ன திரைக்கதை? இந்தப் படம் அப்படித்தான் இருக்கிறது. அடுத்து என்ன என்று யோசிக்கவே வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அது அப்படியே நடக்கும். நாம் அதை ஏற்கெனவே சிவாஜி கணேசன்  காலத்திலேயே பார்த்திருப்போம்.

அந்தமான் போகிறார்கள். என்ன நடக்கும்? ஆட்டக்காரிகளை படுக்கக் கூப்பிடுவார்கள். அதேதான் நடந்தது. ஹீரோவுக்குப் பசி. ஹீரோயின் என்ன செய்வாள்? நடு ரோட்டில் ஆடி பிச்சையெடுத்து ஆடி உருக வைக்கும் பின்னணி இசையில் மாமாவுக்காக அம்மணமாகூட ஆடுவேன் என்று சொல்கிறாள். ஹீரோயினுக்கு உடல்நிலை சரியில்லை. ஹீரோ கண் விழித்துப் பார்த்துக்கொள்கிறான். இதெல்லாம் ஏன் அந்தமானில்? எப்படி அந்தமானில் இருந்து திரும்பி வந்தார்கள்? சட்டென்று ஒரு காட்சியில் தஞ்சைக்கு வந்துவிட்டார்கள். இதை முதல் காட்சியிலேயே காண்பித்திருக்கலாமே. (தஞ்சையின் படித்துறை அழகு.)

ஜி.எம். குமாரை சசிக்குமார் திட்டுகிறார். அடுத்த காட்சியில் ஆஸ்திரேலியாகாரர்கள் பாட அழைக்கிறார்கள். அவர் யாழ் போன்ற கருவியை மீட்டுகிறார். அடுத்த காட்சியில் உங்கப்பன் ஜெயிச்சிட்டான் என்று சொல்லி செத்துப்போகிறார். இதில் ஆஸ்திரேலியாகாரர் மொழி தெரியாமலேயே இவர் பாடிய வரிகளை சொல்கிறார். இசை இணைக்கிறதாம். இசை எப்படி மொழியை இணைத்தது? இப்படி படம் முழுக்க கொடுமைகள் வந்தால் எப்படி சகித்துக்கொள்வது? இதில் பணத்துக்கும் மயங்கமாட்டாராம். கோவக்காரராம். பாராட்டை பதில்-சன்மானமாக திரும்பக் கொடுப்பாராம். ஏனென்றால் கலைஞராம். மீம்களில் வருமே, ஐ டி க்ளையண்ட்டுகள் தங்களை சிங்கம் போல நினைத்துக்கொள்ள, மற்றவர்கள் பார்வையில் பூனை போலத் தென்படுவார்களே, அதைப் போல. ஜி.எம்.குமாரை மிகப்பெரிய சமரசமற்ற கோபக்கார திறமையான கலைஞனாகக் காட்ட பாலா எத்தனிக்கிறார். நமக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரனின் கோபமும் உளறலும் மட்டுமே. எல்லாரும் அவரை திறமைக்காரண்டா என்கிறார்கள். என்ன திறமை? அதை மறைத்து வைத்துவிட்டார்கள்.

ஒரு செட்டியாருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு பிராமண ப்ரோக்கர் வேலை பார்க்கிறார். (ஆனால் கிறித்துவ டீன் மட்டும் போப்பே தப்பு செய்தாலும் தொப்பியைக் கழற்றிவிட்டு குட்டுபவர்!) என்னென்னவோ சொல்கிறார். வில்லனின் கொடூரத்தைக் காண்பிக்க ஆறு பெண்களுக்கு மொட்டை. இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. என்ன எடுக்கிறோம், என்ன சொல்லப்போகிறோம் என்று எந்த இலக்குமின்றி இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

பாலாவின் திரைப்படங்கள் திரையில் ஒதுக்கப்பட்ட சமூகத்தினரைக் காண்பிக்க முயல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் அவர்கள் மேல் மரியாதையைக் கொண்டுவரும் எந்த முயற்சியையும் அது செய்வதில்லை. பொதுப்புத்தியில் இருக்கும் இகழ்ச்சியை வெறுப்போடு இணைக்கிறது. ஆட்டக்காரிங்கன்னா அவுசாரிங்களா என்கிறார். இப்படத்தில் அவர்கள் அத்தனை பேரும் ஆபாசமாகவே ஆடுகிறார்கள். ஆபாசமாகவே பேசிக்கொள்கிறார்கள். மாமனாருடன் சேர்ந்து குடிக்கிறார். ஆனால் வசனம் மட்டும் மரியாதையைக் கேட்கிறது. ஆட்டம் ஆபாசமாக இருந்தாலும் அவர்களைத் தொட உரிமையில்லை என்பது நியாயம். ஆனால் அதைப் பார்வையாளர்களுக்குத் தெளிவாகச் சொல்ல பாலாவால் முடியவில்லை.

பாலாவின் நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கே அவரது ஒவ்வொரு படத்தை சீரழிக்கிறது. அது நடிகர்களின் பிரச்சினையல்ல, ஒவ்வொரு நடிகருக்குள்ளும் இருந்துகொண்டு நடிக்கும் பாலாவின் பிரச்சினை. இதைத் தீர்க்காத வரை நல்ல படத்தை பாலாவால் இனி கொடுக்கமுடியாது.

பாலாவின் நகைச்சுவைக் காட்சிகளின் கொடுமை இப்படத்திலும் தொடர்கிறது. லொடுக்கு பாண்டி, சரோஜாதேவி சோப்பு டப்பா என்ற கொடுமைகளின் வரிசையில் இப்படத்திலும் ஒரு காட்சி. புது ஆட்டக்காரியைத் தேடிச்செல்லும் காட்சி. நேரத்தை இழுக்கப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு நல்ல படம் என்று எதையுமே பேசமுடியாது என்பதை பாலா புரிந்துகொள்ளவேண்டும்.

கதையை சவசவ என்று இழுத்துவிட்டு கடைசியில் தன் பிராண்டான கொடூரத்துக்குத் தாவுகிறார். ஹீரோ மிருகம் போல தாக்கி எல்லோரையும் கொல்வதும், ஒரு பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்துவிட்டு அவளைக் கொன்றுவிடுவதும் என கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாத காட்சிகள். ஹீரோ மிருகம் போல மாறி அடிக்கும் காட்சிகளின் விஷுவல்கள்கூட பழைய பாலா படங்களைப் பார்ப்பதைப் போலவே உள்ளது.

இதில் சசிக்குமார் மிகையாக நடிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பாவம் அவர் உழைப்பு. பாலா ஹீரோக்களின் நடிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போவது இது முதல்முறையும் அல்ல, கடைசி முறையும் அல்ல.

இளையராஜாவுக்கு செய்யப்பட்ட துரோகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அட்டகாசமான பாடல்களையெல்லாம் கூறுகெடுத்து கொத்துக்கறி போட்டுக் கெடுத்திருக்கிறார்கள். மிகச்சாதாரண இயக்குநர் கூட இதைவிட ஒழுங்காக எடுத்திருப்பார். பாருருவாயா பாடலைப் பார்த்தால் கதறத் தோன்றுகிறது. இதில் நல்ல பாடல் ஒன்று வரவில்லை. ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளேவைப் பார்க்கமுடியவில்லை. ராஜாவின் பின்னணி இசை பலவித மாயங்களை நிகழ்த்துகிறது. காட்சிகள் ஈடுகொடுக்கமுடியாமல் திணறுகின்றன. உண்மையில் ராஜா காட்சிகளுக்குத்தான் இசையமைத்திருப்பார். ஆனாலும், அவன் தன் தரத்தில் இருந்து கீழே இறங்கவில்லை.

இந்தப் படத்தில் ஒரு பெண்கூட நல்லவராக ஏன் இல்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நினைப்பு இப்படத்தை ஒரு சிக்-மூவியாக என் மனத்தில் பதியச் செய்துவிட்டது. ஏன் பெண்கள் மேல் இத்தனை வெறுப்பு, வன்மம்? யோசிக்க யோசிக்க எரிச்சலே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆறு பெண்களுக்கு மொட்டை போடும் காட்சியும், செட்டியார் முன்னிலையில் வரிசையாகப் பெண்கள் வரும் காட்சியும். இவையெல்லாம் கலையல்ல. குரூரத்தின்  கலை என்பது நீங்கள் எதைப் படமாக எடுக்கிறீர்கள், எந்தக் களத்தில் எடுக்கிறீர்கள் என்பதில் உள்ளது. வெற்றுக் குரூரம் கலையாகாது.

இப்படத்தில் எனக்குப் பிடித்திருந்த ஒரே காட்சி, அண்ணனும் தங்கையும் ஆடும் தெரு டான்ஸ்தான். அது ஒன்று மட்டுமே யதார்த்தத்துக்கு அருகில் உள்ளது. வரலட்சுமியின் ஆட்டமும் யதார்த்தத்துக்கு அருகில் இருந்தாலும், மற்ற காட்சிகளில் அவர் செய்யும் மிகை நடிப்பு இதையும் சேர்த்துக் கெடுத்துவிட்டது.

ஒரே விதமான கதாபாத்திரங்களைப் படைப்பது, பார்வையாளர்களை திடுக்கிட வைப்பதற்காகவே கொடூரமாக எதையாவது செய்வது, தரமற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பது, நடிகர்களை ஏனோ தானோவென்று ஓவர் ஆக்டிங் செய்யவைப்பது, திரைக்கதையெல்லாம் தேவையில்லை என்று தன் திறமையில் அதீத நம்பிக்கை வைப்பது – இவற்றையெல்லாம் கைவிடவில்லையென்றால் பாலாவின் திரைப்படங்கள் இனி தேறப்போவதில்லை.

பின்குறிப்பு: மகராசி இலவசமா அரிசி கொடுக்கிறதால என்ற ஒரு வரி வருகிறது. அதிமுகக்காரர்கள் இதைப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. பாலா போன்ற இயக்குநர்கள் செய்யக்கூடாத ஒன்று இது.

Share

Sleepless night – தமிழில் ஏன் எப்படி எதற்கு

இது சுரேஷ்கண்ணசுபகுணராஜன்கள் எழுதுவதுபோன்ற முக்கியமான திரைக்கட்டுரை அல்ல. எனவே ரத்தம் கொதிக்க காது மடல்கள் சிவக்க படிக்காமல் சாதா‘ரணமாக’ப் படித்துவிட்டு சிரித்துவிட்டு அப்புறம் யோசித்துக்கொள்ளவும். அதேபோல், ரஜினி படம் வருவதற்கு முன்பாக ‘இந்தப் படம் ஒழியணும், நாசமாப் போகணும்’ என்று நான்கைந்து பக்கத்துக்கு வசவிவிட்டு கடைசியாக ஒரு வரியில் அதன் காரணம் ‘வணிகப் படங்களில்கூட மோசமான படம் வெல்லக்கூடாது என்பதுதான்’ ரகக் கட்டுரையும் அல்ல. கமல்ஹாசனை எனக்கு பிடிக்குமா பிடிக்காதா என்றே எனக்கே இன்னும் சரியாகத் தெரியாத நிலையில் (இப்படித்தான் ஆரம்பிப்போம்), கமல்ஹாசன் உள்ளிட்ட யாரொருவரின் படமும் வணிக வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சியே. ஏனென்றால் ஒரு குப்பைப் படமாக இருந்தாலும் அதன் வணிக வெற்றியை ஒரு தொழிலின் வெற்றியாகவும் அத்தொழிலை நம்பியிருக்கும் கணிசமானவர்களின் பிழைப்பாகவும் நான் பார்க்கிறேன். அதேசமயம் ஒரு நல்ல படம் தோற்றுவிட்டால் பெரிய அளவில் அறச்சீற்றப்பொங்கலெல்லாம் எனக்குள் பொங்காவிட்டாலும் வருத்தம் ஏற்படுவது உண்டு. இத்தனை விளக்கமும் சொல்வதற்கான காரணம், இந்தப் படம் வெற்றி பெறக்கூடாது என்பது என் நோக்கமே அல்ல என்பதற்காகவும், ‘கமல் ரசிகர்களே, இத்துடன் நீங்கள் வெளியேறிவிடுங்கள்’ என்று சொல்வதற்காகவும் மட்டுமே.

கதை தெரியாமல் ‘தூங்காவனம்’ படத்தைப் பார்த்தால்தான் பிடிக்கும் என்று நினைப்பவர்கள் மேற்கொண்டு இதைப் படிக்கவேண்டாம். ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

ஸ்லீப்லெஸ் நைட் படம் ஒரே இரவில் நடக்கும் ஒரு படம். மிகச் சாதாரணமான கதை. திரைக்கதையும் ஆஹோ ஒஹோவெல்லாம் இல்லை. பல இடங்களில் கொட்டாவி. பார்வையாளர்களை சீட்டு நுனிக்குக் கொண்டுவரும் பரபரப்பும் இல்லை. சுமாரான படம்தான். கமல்ஹாசன் தமிழில் நடிக்கிறாரே என்பதற்காக மட்டுமே நான் இதைப் பார்த்தேன். இல்லையென்றால் நிச்சயம் பார்த்திருக்கவே மாட்டேன்.

மகனைக் கடத்திக்கொண்டு போகும் போதை மருந்து கேங்கிலிருந்து தன் மகனை தந்தை மீட்கும் கதை. இது போதை மருந்து கொடிகட்டிப் பறந்த கொலம்பியா போன்ற ஊர்களில் எடுக்கப்பட்டிருந்தால் அந்த மக்கள் உறைந்துபோய் பார்ப்பார்கள். தமிழில் எப்படிப் பார்ப்பார்கள்? ஏன் இதனைக் கமல் எடுத்தார்? தமிழ்த்தன்மையோ இந்தியத் தன்மையோ இல்லாத இப்படத்தை தமிழில் கமல்ஹாசன் எடுக்க என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று முழுக்க முழுக்க யூகத்தில் எழுதப்படுவதே இக்கட்டுரை. இக்கட்டுரையில் வரும் அத்தனையும் தவறு என்று படம் வரும்போது நிரூபிக்கப்படலாம். அல்லது அத்தனையும் சரி என்றும் அமைந்து தொலைக்கலாம். ‘ஹேராம்’ படம் வந்தபோது கமல்ஹாசன் சொன்னது, ‘காந்தியைக் கொன்றது கோட்ஸே என்று எல்லோருக்கும் தெரியும். அதை படத்தில் மாற்றமுடியாது. ஆனால் அதுவரை நடப்பதை வைத்து புனைவில் என்னவெல்லாமோ செய்யலாம்’ என்று. அதையேதான் இப்போது நான் சொல்கிறேன், ‘தமிழில் தூங்காவனம் வரும்வரை என்னவேண்டுமானாலும் செய்யலாம்.’ எனவே இது ஒரு புனைவு.

கமல்ஹாசன் இப்படத்தை எடுக்க முதல் காரணம் இப்படத்தில் இருக்கும் கமல்தன்மை என்பதே என் எண்ணம். வயதுக்கேற்றவாறு உத்தமவில்லனில் அப்பாவாக வந்தார். இதிலும் ஒரு வளர்ந்த பையனுக்கு அப்பா. எனவே அதிக விமர்சனங்கள் எழ வாய்ப்பில்லை. ஆனால் இந்த அப்பா-மகன் உறவில் காட்டப்படும் அன்பு குறித்து சொல்லவேண்டும். நம் ஊரில் அப்பா-மகன் உறவென்பது, அப்பா இறந்தபிறகு மகன் அவன் அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அல்லது அப்பாவும் மகனும் நல்ல நண்பர்களாக, ஆனால் அதை சொற்களில் வெளிப்படுத்தாதவர்களாக இருந்துவிடுகிறார்கள். இப்படி இல்லாமல் அப்பாவும் மகனும் விலகி இருப்பதும், அப்பாவின் அன்பைக் கண்டு மகன் நெகிழ்ந்து அப்பாவிடம் அப்படியே வெளிப்படையாகச் சொல்வதும் சமீபகாலமாக இறக்குமதி ஆகிக்கொண்டிருக்கிறது. உத்தமவில்லனில் இது எடுபட்டதற்குக் காரணம், அதில் ஹீரோ மரணத்தை நோக்கிச் செல்கிறார் என்பதுதான். மற்றபடி அப்பா மகன் அன்பென்பது வெளியில் சொல்லப்படாத உணர்வுகளால் நிரம்பியது என்பதுதான் நம் இந்தியத்தன்மை என்று நான் நினைக்கிறேன். அப்படி இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் அப்பா மகன் உறவை நாம் நகலெடுத்தால் அது அந்நியத்தன்மையுடனேயே வந்து நிற்கும். ‘தூங்காவனம்’ இதை எப்படி கையாளப்போகிறது என்று தெரியவில்லை.

ஸ்லீப்லெஸ் நைட்டின் பெரிய ப்ளஸ் அந்த ஹீரோ சாதாரண ஆள் என்பது (குறைந்தபட்சம் படத்தைப் பார்க்கும் தமிழர்களுக்கு). நமக்கோ தமிழில் கமல். இது தரப்போகும் அழுத்தத்தை கமல் படம் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் உடைக்கவேண்டும். பாபநாசத்தைப் போல. பாபநாசத்துக்கே சொக்கலிங்கத்தைக் காணாமல் கமலைக் கண்டு பொங்கி எழுந்த தமிழர்கள் உள்ள ஊர் இது!

ஸ்லீப்லெஸ் நைட்டில் ஹீரோ வில்லனிடம் போதைமருந்து என்று சொல்லி மாவைக்கொடுத்துவிட்டு வெளியேறும் காட்சியில் வில்லன் சொல்கிறான், ‘இனிமே உன் முகத்தை நான் பார்க்கக்கூடாது’ என்று. ஹீரோவும் அமைதியாக ஒன்றும் சொல்லாமல் வெளியேறுகிறான். தமிழில் ட்ரைலரில் பார்த்தேன். கமல் அப்படி வெளியேற முடியாதல்லவா? எனவே வில்லன் பிரகாஷ்ராஜிடம் ‘நானும் அதையே சொல்லிக்கிறேன்’ என்று என்னவோ சொல்கிறார். இப்படித்தான் இந்திய தமிழ்த்தன்மையைக் கொண்டுவரப் பாடுபடுகிறார்கள். (பாடுபடுத்துகிறார்கள் என்று எழுதிவிடவில்லையே!)

கமலின் க்ளிஷேவாக நான் பார்ப்பது, தொடர்ந்து ஒன்றை படம் முழுக்க செய்துகொண்டிருப்பது. இன்னொன்று, கையில் அடிபட்டிருக்கும்போது கோபத்தில் அதை மறந்து தரையில் அடித்துவிட்டு கையை வலியில் உதறிக்கொள்வது. இதுபோன்ற காட்சிகளை யார் நடித்தாலும் எனக்குப் பிடிக்காது. அதுவும் கமல் நடித்தால் தாங்கவே முடியாது. ஆனால் இந்தப் படம் கமலுக்கு சரியான தீனி போடுகிறது. ஆம், இந்த ஸ்லீப்லெஸ் நைட்டின் ஹீரோ முதல் காட்சியிலேயே குண்டடிபட்டு காயத்தை மறைத்தபடி கோட் அணிந்துகொண்டு வலியைத் தாங்கிக்கொண்டு ஓடுகிறான். அவ்வப்போது வலிக்கிறது. கமல் இதைச் செய்யப்போகிறார் என்பதே எனக்கு பீதியைத் தருகிறது. துர்ப்பிணி அதிலும் கர்ப்பிணி என்பார்களே, அப்படி.

அதிலும் ஒரு காட்சியில் அந்த காயத்துக்கு மருந்து அடித்துக்கொண்டு நம் பிரெஞ்சு ஹீரோ அலறுகிறார். அப்போது சப்தங்கள் அனைத்தும் மறைகின்றன. இசை இல்லை. ஹீரோ அலறுவதும் கேட்பதில்லை. அத்தனை சத்தங்களும் மறைய, ஹீரோ கத்துவதை பார்க்க மட்டும் செய்கிறோம். தமிழில் கமல் இதை என்ன செய்திருப்பார் என்று என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பின்னணிக் காட்சியில் ஜிப்ரான் அமைதியாக இருந்துவிட்டால் பெருமாளுக்கு மொட்டை போடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். கமலும் ‘நடித்து’ ஜிப்ரானும் கதறிவிட்டால் என்ன செய்வது? இது நடக்கும் என்று சொல்லவில்லை. நடக்காது என்றும் சொல்லமுடியவில்லை. நடக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மட்டுமே சொல்கிறேன்.

கமலின் புகழ்பாடுபவர்கள் ஒன்றை அடிக்கடி சொல்வார்கள். காட்சியின் பிரசன்ஸைக் கூட்டுவது என்று என்னவோ சொல்வார்கள். அதாவது ஒரு சாப்பாட்டுக் கடைக் காட்சி என்றால் அங்கிருக்கும் டப்ளர் டபரா என எல்லாவற்றையும் பயன்படுத்துவதாம். இப்படத்தில் பிரெஞ்சு ஹீரோ ஒரு உணவகத்தையே ஒட்டுமொத்தமாகக் கபளீகரம் செய்கிறான். இந்த பிரெஞ்சு ஹீரோ சாதாரண ஹீரோ. நம் கமலோ கமல்சார். என்னவெல்லாம் செய்வார் என்று யோசித்துப் பாருங்கள்.

இன்னொரு காட்சி பிரெஞ்சு திரைப்படத்தில் வருகிறது. அந்தக் காட்சியை பிரெஞ்சு திரைப்படத்தில் எழுதியவர்கூட கமல்தானோ என்ற சந்தேகமே வந்துவிட்டது. ஹோட்டலில் மாமிசம் வெட்டும் இடத்தில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் ஒரு போலிஸ் சொல்கிறார், ‘சீக்கிரம் காப்பாத்துங்க. மாமிச நாத்தம். நான் வெஜிட்டேரியன்’ என்று. தமிழில் இதையே ஒரு பிராமணப் பெண் கேரக்டராக்கி யாரைவாது பாப்பாத்தி என்றுகூடச் சொல்ல வைத்து, ‘சீக்கிரம் காப்பாத்துங்கோ, நார்றது, சைவமாக்கும்’ என்று சொல்ல வைக்கலாம். இப்படி ஒரு காட்சி லட்டுபோல பிரெஞ்சுத் திரைப்படத்தில் வந்ததே ஆச்சரியதான்.

கமல் என்றால் முத்தம் பற்றிப் பேசாமல் எப்படி இருக்கமுடியும்? தமிழர்களுக்கு முத்தம் கொடுக்க கற்றுத் தந்ததே கமல்தான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! இந்தப் படத்தில் கன்னாபின்னாவென்று முத்தக்காட்சிகள். தமிழில் இத்தனை முத்தக்காட்சிகள் வருமா என்றெல்லாம் தெரியவில்லை. பாபநாசத்துக்கே ‘மூடநம்பிக்கைகளைப் பரப்புகிறது, வன்முறையை நியாயப்படுத்துகிறது’ என்றெல்லாம் சொல்லி வரிவிலக்கு மறுக்கப்பட்டது. இத்தனை முத்தக் காட்சிகள் இருந்தால் நிச்சயம் வரிவிலக்கை மறுத்துவிடுவார்கள். வரிவிலக்கு இல்லையென்றால் ஒரு படத்தின் லாபம் கடுமையாகப் பாதிக்கப்படும். எனவே கமல் எப்படி இதைக் கையாள்கிறார் என்று தெரியவில்லை. இல்லையென்றால், ஹீரோ தன் முகத்தைப் பார்க்கக்கூடாது என்பதற்காகவே தொடர்ந்து ஒரு பெண்ணை முத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டிய ‘அவசியக்காட்சி’யெல்லாம் ‘காதல் இளவரசனுக்கு’ அல்வா மாதிரி அல்லவா. அதுபோக இப்படம் நடப்பது நைட் கிளப்பில். அங்கங்கே யார் யாரோ கட்டித் தழுவிக்கொண்டும் முத்தமிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். குணா படத்தில் ‘ஹொய்லாலோ’ பாட்டை நினைத்துக்கொள்ளவும். தமிழிலும் அடித்து தூள் பண்ணவேண்டியதுதான். வரிவிலக்குத்தான் பாடாய்ப் படுத்துகிறது. பிரெஞ்சுப் படத்தில் வில்லனுக்கும் ஒரு முத்தக்காட்சி உண்டு. தமிழில் அப்புரட்சி பிரகாஷ்ராஜால் சாத்தியப்படுமா என்று தெரியவில்லை. சாத்தியப்படாது என்றே தோன்றுகிறது.

ஒரு காட்சியில் சாதாரண ஒருவன் ஹீரோவை அடிக்கிறான். அப்போது அமைதியாகச் சென்றுவிடும் ஹீரோ, பின்னால் நேரம் கிடைக்கும்போது அவனை மீண்டும் அறைந்து தான் ஹீரோ என்று நிரூபிக்கிறார். தமிழில் இதைக் கைவைக்கத் தேவையிருக்காது. அப்படியே எடுக்கவேண்டியதுதான்.

போதை மருந்தை ஒரு கழிப்பறைக்குள் ஒளித்துவைக்கிறார்கள். அதுவும் பெண்கள் கழிப்பறை. எனவே ஆண்கள் பெண்கள்கழிப்பறைக்குள் வருவதும் போவதுமான காட்சிகள் உண்டு. அதிலும் இரண்டு மூன்று ஆண்கள் ஒரே கழிப்பறைக்குள்ளே இருப்பதும், வெளியிலிருந்து பெண்கள் அவர்களைப் பார்த்து சிரிப்பதும் கே என்று கிண்டல் அடிப்பதும் அதற்கொப்ப கழிப்பறைக்குள்ளே இருந்து சத்தம் வருவதும் தமிழில் என்னவாகிறது என்று பார்க்க ஆர்வமாக உள்ளேன். தமிழ்த்திரையை உலகத்திரைக்கு உயர்த்த நல்ல ஒரு சந்தர்ப்பம் வீணடிக்கப்படுமா பயன்படுத்தப்படுமா?

மதம் சம்பந்தப்பட்ட நேரடிக் காட்சியை இத்திரைப்படத்தில் பார்த்ததுபோல் நினைவில்லை. இப்படம் ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடுகிறது. தமிழில் இரண்டரை மணி நேரம் ஓட்டலாம். நான்கைந்து பாடல்கள் போட்டு, மீதி நேரத்தில் மதத்தைக் கிண்டல் செய்தால் சரியாகத்தான் வரும். ஆனால் கமல் இப்படித்தான் செய்வார் என்று நம்மால் சொல்லமுடியாது. பாபநாசத்தில் கடவுளைக் கையெடுத்தே கும்பிட்டுவிட்டார். படமும் ஓடியிருக்கிறது. அந்த நன்றியை மறந்திருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன்.

கடைசியாக ஒன்று. கமல்சார்ஆதரவுசுபகுணராஜசுரேஷ்கண்ணன்கள் இப்படத்தின் ஜானரில் இருந்து துவங்குவார்கள். தமிழுக்கு புதுசு என்று தொடர்வார்கள் கமல்சார்ரசிகர்கள். அதிலும் சிலர் மிக நிச்சயம் சொல்லப்போவது ‘பத்து வருடம் கழித்து வந்திருக்கவேண்டிய படம்’ என்று. எத்தனை பார்த்திருக்கிறோம்.

பின்குறிப்புகள்:

* இந்தப் படம் வணிக ரீதியாக வெல்ல கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள். 🙂

* டீஸரில் ‘நான் சொன்னா செஞ்சிருவேன்’ என்றொரு வசனத்தைக் கமல் சொல்லக் கேட்டேன். மிக நல்ல பன்ச் இது. கமல் சொல்லுபோது நன்றாகத்தான் உள்ளது. ஆனால் முழுமையான ரீச்சுக்கு இதை ரஜினிக்கே வைத்திருக்கவேண்டும். 🙂 ரஜினியில்தான் முடிப்போம்.

Share

புலி என்னும் கிட்டத்தட்ட அம்புலிமாமா

புலியும் தமிழ்நாட்டு சிறுவர் திரைப்படங்களும் – ‘மாஸ்’ திரைப்படம் பார்த்தபோது இதுபோன்ற கட்டுரை (!) ஒன்றை எழுத நினைத்தேன். ‘புலி’ திரைப்படம் பார்த்ததும்தான் எழுத முடிந்தது. ஒன்றோடு ஒன்று மிக லேசாகத் தொடர்புடைய எண்ணங்களை (கொஞ்சம் தொடர்பற்ற எண்ணங்களையும்கூட) ஒன்று கோர்ப்பதே நோக்கம்.

Puli_vijay

முதலில் ‘புலி’ திரைப்படம் பற்றிச் சொல்லிவிடுவோம். முதல் முக்கால் மணி நேரம் உட்கார்ந்து பார்க்கமுடியவில்லை. சகிக்கமுடியாத திரைக்கதை, கொஞ்சம் கூட ஒட்டாத விஜய்யின் நடிப்பு. பின்பு ஒரு கட்டத்தில் எப்படியோ ‘கதை’ நம்மைத் தொற்றிக்கொள்கிறது. இதிலும் எந்தப் புதுமைகளும் இல்லை. ஏழு கடல் தாண்டி ஏழு மலைதாண்டிய நம் மரபில் வந்த சிறுவர் கதைகளின் இன்னொரு வடிவம். எத்தனையோ முறை அரைக்கப்பட்டுவிட்ட அதே விடுகதை வடிவங்கள். இவையெல்லாம் நிச்சயம் ஒரு மாஸ் ஹீரோவின் திரைப்படம் ஆகமுடியாது. இந்த மாஸ் ஹீரோ என்ற பதத்தை எழுதும்போதே கொஞ்சம் எரிச்சலாகத்தான் வருகிறது. ஆனால் அதைச் சொல்லித்தானே ஆகவேண்டும். அதிலும் சிம்புதேவனின் திரைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம். 23ம் புலிகேசியே கொஞ்சம் சுமாரான திரைப்படம்தான். பல்லாண்டுகளாக அப்படி ஒரு திரைப்படம் வராமல் போனதாலும், வடிவேலு என்றொரு சரியான நடிகர் அந்தப் படத்தில் அமைந்ததாலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் பார்க்கும்போது தோன்றிய உணர்வு, தொலைக்காட்சிகளில் வரும் நகைச்சுவைத் துணுக்குகளை ஒன்றாக்கிய ஒரு படம் என்பதே. அந்த அபத்தத்தை மட்டும் ‘புலி’ எப்படியோ தாண்டி, முழுநீளத் திரைப்படம் என்று இதைப் பார்க்கமுடிகிறது.

இந்தப் படத்தைக் கெடுத்ததில் முக்கியப் பங்கு தம்பி ராமையாவுக்கே. அவர் வரும் காமெடிக் காட்சிகள் நாலாந்தரக் காட்சிகள். சிம்புதேவன் செய்த மிகப்பெரிய தவறு, தொடக்கக் காட்சிகளில் தேவையின்றி வைத்த தம்பி ராமையாவின் காட்சிகளும் விஜய்-ஸ்ருதிஹாசன் காதல் காட்சிகளும். உண்மையில் நான் என் மகனுடன் சென்றிருக்காவிட்டால் இக்காட்சிகளிலேயே எழுந்து வெளியே வந்திருப்பேன்.

அதன் பின்னர் ஓர் இந்திய சிறுவர் திரைப்படத்துக்கான அத்தனை காட்சிகளையும் இப்படத்தில் பார்ப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதுவும் புதுமையில்லை என்றாலும் இப்படியெல்லாம் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. நாற்பது வருடங்கள்கூட இருக்கலாமோ? இருக்கலாம்.

இது போன்ற சிறுவர் திரைப்படங்களுக்குத் தேவையானது கொஞ்சம்கூட லாஜிக் பார்க்காத கற்பனை. அதை செயல்படுத்த ஒரு சூப்பர் ஹீரோ. சிறுவர்களைக் கட்டிப்போடும் அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு, இசை. இத்தனையும் இப்படத்தில் எல்லா கச்சிதங்களுடனும் அமைந்துள்ளது. கிராபிக்ஸ் சில இடங்களில் சொதப்பினாலும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தேறிவிட்டது என்றே சொல்லவேண்டும். தேவையற்ற பாடல்கள் நாராசமாய் ஒலித்து சிறுவர்களை சோதிக்கின்றன என்றே சொல்லவேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தப் பாடல்களை இதே சிறுவர்கள் மனப்பாடமாகச் சொல்லக்கூடும். எனவே அவர்களுக்கு இந்தப் பாடல்கள்கூட தடையாக இருக்க வாய்ப்பில்லை.

இப்படத்தைப் பார்க்கும் நாம்தான் சிறுவர் உலகத்துக்கும் முழுமையாகச் செல்லமுடியாமல் வயதுவந்தவர்களுக்கான மெச்சூர்ட் திரைப்படமாக ஏற்றுக்கொள்ளவும்முடியாமல் தத்தளிக்கிறோம். இதற்கான காரணம் பார்வையாளர்களான நம்மிடம் மட்டும் இல்லை. இயக்குநரில் தொடங்கி நடிகர்கள்வரை அனைவருக்கும் பங்குள்ளது.

இந்தப் படத்தைப் பார்க்கத் துவங்கிய சில நிமிடங்களில், மந்திர சக்தி கொண்ட நீர்மத்தைப் பற்றிய காட்சியின்போது நினைத்துக்கொண்டேன். முழுமையான சிறுவர் படத்தில் குள்ளர்கள் வருவார்களே என்று. பாலகிருஷ்ணாவும் ரோஜாவும் நடித்த ஒரு தெலுங்கு மொழிமாற்றப் படத்தைப் பார்த்திருக்கிறேன். (தெலுங்கில் பைரவ த்வீபம் தமிழில் விஜயராகவன் என்ற எதோ ஒரு பெயரில் வந்தது.) அதில் குள்ளர்கள் வருவார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட் என்று அப்போது கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி நினைத்துக்கொண்டிருந்தபோதே அடுத்த காட்சியில் குள்ளர்கள் வந்தார்கள். சரி, இது முழுமையான சிறுவர் படம்தான் என்று எனக்கு அப்போதுதான் உரைத்தது. இந்தியத் திரைப்படங்களில் குள்ளர்கள் வரும் திரைப்படங்களில் என்ன என்ன காட்சிகள் வருமோ அவையே வந்தன என்பதுதான் இடைஞ்சல். ஆனாலும் குள்ளர்கள், பறக்கும் மனிதர்கள், ராட்சத வீரன், இறவா வரத்துக்கான அரசியின் யாகம், பேசும் பறவைகள், கொலைகாரத் தளபதி என எதையும் விட்டுவைக்காமல் சிறுவர்களுக்கு ஒரு விருந்தையே படைத்திருக்கிறார் இயக்குநர்.

ஆனால் இப்படம் வருவதற்கு முன்பு யாரும் வாய் திறந்துகூட இது சிறுவர்கள் படம் என்று சொல்லிவிடவில்லை. சிறுவர்கள் படமெடுக்க உலகெங்கும் பில்லியன் கணக்கில் செலவு செய்துகொண்டிருக்க, இங்கே சிறுவர் படம் என்று சொல்லவே கூச்சம். இதற்குப் பல காரணங்கள் உண்டு. சிறுவர் படங்களுக்கு சிறுவர்களை அழைத்துச் சென்று காண்பிக்கும் வழக்கமே இல்லை. வயது வந்தவர்கள் என்ன படம் பார்க்க விரும்புகிறார்களோ அதையேதான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அப்படியே அதை மட்டுமே விரும்பத் தொடங்குகிறார்கள். அதோடு உலகத்தில் வெளியாகும் அத்தனை சிறுவர் படங்களையும் நம் சிறுவர்கள் எப்படியோ பார்த்துவிடுகிறார்கள். எனவே தமிழ்த் திரைப்படங்களின் போதாமையே இவர்களின் முகத்தில் முதலில் அறைகிறது. அதுவே அப்படத்தின் தோல்விக்கான முக்கியமான காரணமாக அமைந்தும்விடுகிறது. எனவேதான் சிறுவர்கள் படம் என்று சொல்வதில் யாருக்கும் விருப்பம் இல்லை. சிறுவர்களுக்கான ஒன்றைச் செய்யும் பொறுமையோ வழக்கமோ நம் பெற்றோர்களுக்கும் இல்லை.

ஒரு இயக்குநர் சொன்னாராம், தான் நல்ல கலைப்படம் எடுத்தபோது அதை வெற்றிபெற வைக்காத தமிழர்களுக்கு நல்ல படம் பார்க்கவோ கேட்கவோ தகுதியில்லை என்று. இதில் கூடுதல் குறைவாக இருந்தாலும், கொஞ்சம் உண்மையும் உள்ளது.

ரேவதியும் அரவிந்த் சாமியும் நடித்து ‘பாச மலர்கள்’ என்றொரு திரைப்படம் வந்தது. படம் வந்த ஒரு வாரத்தில் ரேவதி ஒரு தொலைக்காட்சியில் புலம்பிக்கொண்டிருந்தார். ‘இது குழந்தைகள் திரைப்படம். அவர்களை நம்பித்தான் வெளியிட்டோம். ஆனால் எந்தக் குழந்தைகளும் பார்க்க வரவில்லை’ என்று. அதுவரை அது குழந்தைகள் படம் என்று யாருமே சொல்லததால் யாருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது அது குழந்தைகள் படம் என்று. படம் ஓடவில்லை என்றாகவும் மெல்ல சிறுவர் படம் என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.

இம்சை அரசனை விட ‘புலி’ மிக முழுமையான சிறுவர் திரைப்படம். அந்தக் காலம் என்றால் வரிவிலக்கெல்லாம் கொடுத்திருப்பார்கள். இன்று படம் வருவதே வரிவிலக்கு கொடுத்ததற்கு ஒப்பானதாகிவிட்டது. அதிலும் இப்படத்தில் அரசியல் வசனங்கள் உண்டு. தன்னைத்தான் சொல்கிறார்கள் என்று ஜெயலலிதா நினைக்காமல் இருந்ததே விஜய் செய்த பூர்வஜென்ம புண்ணியம். திரையரங்கில் ரஜினியின் அந்தக் காலஅரசியல் வசனங்களுக்கு எப்படி ஆர்ப்பரித்தார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். இதில் வரும் அரசியல் வசனங்கள் பலருக்கும் அவை அரசியல் வசனங்கள் என்றே தோன்றவில்லை. விஜய் இந்த அரசியல் எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு நல்லது.

விஜய் நடித்ததின் ஒரு ப்ளஸ் அவரது புகழ் என்றால், மிகப்பெரிய மைனஸ், படம் முழுக்க அவரை பெரிய ஹீரோவாகக் காட்டிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியம். தேவையற்ற காட்சிகளிலும் ஸ்லோ மோஷனில் நடந்து பின்னணி இசை ஒலிக்க அவர் வருவதைப் பார்க்கும்போது, இப்படத்தை வயது வந்தவர்களுக்கான திரைப்படமாகவே அவரும் எடுத்துக்கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. பல காட்சிகளில் நடிக்கத் திணறுகிறார். இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்கவும் ஒரு திறமை வேண்டும். மிகவும் மோசம் என்று விஜயைச் சொல்லமுடியாது என்றாலும், என்னவோ ஒட்டவில்லை.

இப்படம் வருவதற்குமுன்பே நினைத்தேன், ஒன்று இப்படம் பெரிய வெற்றியடையும் அல்லது ஊத்திக்கொள்ளும் என்று. இன்று நான் பார்த்தபோது திரையரங்கில் என்னுடன் முப்பது பேர் பார்த்திருந்தால் அதிகம். நமக்கு சிறுவர் படங்கள் இனியும் வாய்க்காமல் போவதற்கு இப்படமும் ஒரு காரணமாக இருக்கும். இதில் வரும் காதல் காட்சிகள், பாடல்கள், கேவலமான காமெடிக் காட்சிகள் என பலவற்றைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் உள்ள ஒரு படம் எப்படி குழந்தைகள் படமாக முடியும் என்று யாரேனும் கேட்டால், அக்கேள்வியைப் புறந்தள்ளவும் முடியாது.

எப்படி இருந்தாலும் இப்படி ஒரு படத்தை நடிக்க முன்வந்ததற்காக விஜய்யைப் பாராட்டவேண்டும். முதலில் உள்ள ஒரு மணி நேரத்தில் பல காட்சிகளை வெட்டி நீக்கி, பின்னர் கடைசியில் வரும் ப்ளாஷ்பேக் காட்சியை கொஞ்சம் முன்னகர்த்தி நகாசு வேலை செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் பிழைத்திருக்கலாம்.

சிம்புதேவனின் பல மொக்கைத் திரைப்படங்களுக்கு மத்தியில் இது ‘சிறுவர் திரைப்படம்’ என்ற அளவில் கொஞ்சம் தேறுகிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இதன் வணிகத் தோல்வி தவிர்க்க முடியாததுதான். ஐந்து வயது முதல் பத்து வயது சிறுவர்களுக்கான முழுமையான சிறுவர் படம் கடந்த முப்பது நாற்பது வருடங்களில் வந்தது எது என்று யோசித்தால் நமக்கு பதிலே கிடைக்காது.  தங்கமலை ரகசியம், வேதாள உலகம் அளவுக்கு, அதைவிட அட்டகாசமான ஒரு தரத்தில் இப்படம் வந்திருக்கிறது. இன்னும் ஒரு ஐம்பது வருடம் கழித்து இப்படம் வெறும் ஓர் உதாரணமாக மட்டும் தேங்கும் என நினைக்கிறேன்.

ஒரு பொறுப்பற்ற அவசரத்தாலும் வணிக வெற்றியை நினைத்தே செயல்பட்டதாலும் திரைக்கதைக்கு மெனக்கெடுவது அநாவசிய வேலை என்ற தமிழ்த்திரைப்பட முடிவுகளாலும் இத்திரைப்படம் கண்டிக்கும் வணிகத்தோல்வி, சிறுவர் திரைப்படங்கள் மீண்டும் தமிழில் இல்லாமல் போவதற்கு காரணமாக அமையும். நம் தொழில்நுட்ப வசதி உயரும்வரை, சிறுவர் திரைப்படங்களுக்கான தேவையை வயது வந்தவர்கள் அறியும்வரை தமிழில் சிறுவர் திரைப்படங்கள் வந்து என்னதான ஆகப்போகிறது?

அறிவுரையே சொல்லாத, லாஜிக்கே இல்லாத, கற்பனையின் உச்சத்துடன் இயக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை உங்கள் குழந்தைகள் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நிச்சயம் இப்படத்துக்குக் கூட்டிச் செல்லுங்கள். படம் பார்க்க சகிக்காமல் நெளியும் காட்சிகளில் நீங்கள் மொபைலை நோண்டிக்கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் குழந்தை எப்படி வாயை பிளந்து ரசிக்கிறது என்று பார்த்து அதை நீங்கள் ரசிக்கலாம்.

குறிப்புகள்:

* விட்டலாச்சாரியாவின் கேவலமான (டப்பிங்) திரைப்படங்களை நான் கணக்கிலேயெ எடுக்கவில்லை.

* பாகுபலி வந்தபோது புலி டீம் ஏன் பதறியது என்பதற்கான காரணம் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம் மட்டுமல்ல, கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பதுதான். இந்த இரண்டின் கதையும் கோச்சடையானின் கதையும்கூட ஓரளவுக்கு ஒன்றுதான். கோச்சடையான் தமிழின் மிக முக்கியமான மேலான முயற்சி. அப்படத்தின் தோல்வியும் ‘புலி’ படத்தின் விமர்சனத்துடன் ஒப்பிடத்தக்கதே.

* சொல்லி வைத்தாற்போல் இப்படத்தில் வரும் எந்த முக்கிய நடிகையும் நெற்றிப் பொட்டு வைத்துக்கொள்வதில்லை. நடிகரும் வைத்துக்கொள்வதில்லை. அதெப்படி?

* மாஸ் திரைப்படமும் நல்ல குழந்தைகள் திரைப்படமும். என்ன பிரச்சினை என்றால் வெங்கட் பிரபுவுக்கோ சூர்யாவுக்கோ அதைப் பார்த்த பெற்றோர்களுக்கோ அது வழக்கம்போல தெரியாது என்பதுதான்.

Share

இங்கே எதற்காக – புத்தக விமர்சனம்

ஒரு திரைப்படத்தை இயக்கி வெளியிடுவது எத்தனை கடினமானது என்பது எல்லாருக்குமே தெரியும். அதுவும் மாற்றுத் திரைப்படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இங்கே வணிகத் திரைப்படங்கள் வெளிவருவதே அத்தனை கடினம் என்னும் நிலையில், மாற்றுத் திரைப்படங்கள் மட்டுமே எடுப்பேன் என்றொரு இயக்குநர் உறுதியாக இருந்தால் அவர் என்ன பாடுபடவேண்டியிருக்கும் என்பதை இயக்குநர் ஜெயபாரதியின் ‘இங்கே எதற்காக’ நூலைப் படித்தால் புரிந்துகொள்ளலாம்.

inge etharkaakaஇங்கே எதற்காக, இயக்குநர் ஜெயபாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், ரூ 150

முன்பு தூர்தர்ஷனில் மதியம் மாநில மொழித் திரைப்படங்கள் வரிசையில் ஜெயபாரதியின் ‘உச்சிவெயில்’ திரைப்படம் ஒளிபரப்பப்படும் என்று அறிவித்தார்கள். அப்போது எனக்கு 13 அல்லது 14 வயதிருக்கலாம். அப்போதே இதுபோன்ற ‘மெல்ல நகரும் இருட்டுக்குள் யாரோ ஒருவர் சத்தம் குறைவாகப் பேசும் படங்களை’ (படமெடுக்க பணம் கேட்டு ஜெயபாரதி செல்லும்போது இப்படித்தான் நடிகை ராதிகா சொல்கிறார்) விரும்பிப் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. மொழி தெரியாமல் சப்-டைட்டில்களை மெல்ல கூட்டி வாசித்து அரைகுறையாகப் புரிந்துகொண்டு மலையாள, கன்னடப் படங்களெல்லாம் பார்த்திருக்கிறேன். இந்தப் படம் கருப்பு வெள்ளை படம். (இதுதான் தமிழின் கடைசி கருப்பு வெள்ளை படமாம்.) ஜெயபாரதி என்ற பெயரைக் கேட்கவும் ஜெயபாரதி என்ற நடிகை நடித்தது என்றுதான் அதைப் பார்க்கத் தொடங்கினேன்.

படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம் என் வீட்டில் எல்லோரும் உறங்கிவிட்டார்கள். நான் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன். மிக மங்கலாக சில காட்சிகள் நினைவிலுள்ளன. தலைவாசல் விஜய் (அப்போது அவர் வெறும் விஜய் மட்டுமே. தலைவாசல் வெளியாகியிருக்கவில்லை) ராணுவத்திலிருந்து திரும்ப வந்தவர் போன்ற நினைவு. அந்த ராணுவ உடையில் க்ளோஸப் காட்சியில் என்னவோ பேசுவார். யாரோ ஒரு முதியவர் காணாமல் போய்விடுவார். அவரை காரில் தேடுதேடென்று தேடுவார்கள்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது இந்தப் படத்தைப் பார்த்திருந்த ஒரே ஜீவன் நானாகத்தான் இருந்தேன். ‘இதுக்கெல்லாம் அவார்ட்னு கொடுத்து… நம்ம டிடிக்குன்னு படம் கிடைக்குதே’ என்பதுதான் ஒட்டுமொத்த கருத்தாக இருந்தது. இந்தப் படம் ஏன் முக்கியமான படம் என்றெல்லாம் அன்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இன்றும் நான் இது மிக முக்கியமான படம் என்றெல்லாம் நினைக்கவில்லை. மாற்றுத் திரைப்படங்களின் இலக்கணமாக ஜெயபாரதியின் திரைப்படங்களைச் சொல்லவும் இல்லை. நிச்சயம் ஜெயபாரதியின் படங்களில் அவற்றுக்கே உரிய குறைகள் உள்ளன. ஆனால் இந்த இயக்குநர் ஏன் எதற்காக இது போன்ற படங்களை எடுக்கிறார், எப்படி இத்தனை கஷ்டத்துக்குள்ளாகி ஒரு படத்தை எடுக்கத் தோன்றுகிறது என்று நிச்சயம் யோசிக்கிறேன். மாற்றுத் திரைப்படங்களின் உச்சம் இல்லை என்றாலும், ஜெயபாரதியின் திரைப்படங்கள் நிச்சயம் மாற்றுத் திரைப்படங்கள்தான். மகேந்திரனின் திரைப்படங்கள்கூட இந்த அளவு மாற்றுத் திரைப்படங்கள் அல்ல என்றுகூடச் சொல்லலாம். மகேந்திரன் மாற்றுத் திரைப்படங்களுக்கும் வணிகத் திரைப்படங்களுக்கும் இடையே ஒரு பாதையைக் கண்டுகொண்டார். கொஞ்சம் முயன்றால் ஜெயபாரதியும் அந்தப் பாதையைக் கண்டுகொண்டிருக்கலாம். ஏனென்றால் சில குறைந்தபட்ச சமசரங்களுக்கு மகேந்திரன் போலவே ஜெயபாரதியும் ஆயத்தமாகவே இருந்திருக்கவேண்டும். அதற்கான தடயங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. ஆனாலும் ஏனோ ஜெயபாரதி அதைச் செய்யவில்லை.

ருத்ரையாவின் ‘அவள் அப்படித்தான்’ திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன். எடிட்டிங், தொடர்ச்சி, ஒளிப்பதிவு, ஒலிக்கோர்ப்பு என எல்லாவற்றிலும் ஏனோதானோவென்று இருந்தது. ஜெயபாரதியின் திரைப்படமும் அப்படித்தான் இருந்ததாக நினைவு. குடிசை திரைப்படத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ருத்ரையாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, உச்சிவெயில், ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் – இவை எல்லாமே ஒரே ரகம். பணம் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.

எவ்வித ஈகோவுமின்றி யார் பணம் தந்தாலும் வாங்கிக்கொண்டு படம் தயாரித்திருக்கிறார் ஜெயபாரதி. ஆனால் பணம் தந்தவர் நேர்மையற்றவர் என்று தெரிந்தால் அத்தோடு விலகிவிடுகிறார். (என்று புத்தகத்தில் சொல்கிறார்.) அப்படித்தான் 24சி வேதபுரம் முதல்வீதி திரைப்படத்தை இவர் நிறுத்துகிறார். கம்யூனிஸ்ட்டுகளுக்காக இவர் எடுக்கும் படம் தேநீர், அந்த கம்யூனிஸ்ட் தயாரிப்பாளர் செம்மலர்ச்செல்வனின் லீலைகளில் நின்றுபோகிறது. பணம் வந்தால் கம்யூனிஸ்ட்டுகள் கள்குடித்த குரங்கைப் போல் ஆடுவார்கள் என்று தோழர் வி.பி. சிந்தன் சொன்னதை அனுபவத்தில் புரிந்துகொண்டு அப்படத்தைக் கைவிடுகிறார். பின்னர் அதுவரை எடுத்த படம் சண்முகம் என்பவரால் (பிற்பாடு இவர் தராசு ஷ்யாம் என்று புகழ்பெறுகிறார்) ஊமை ஜனங்கள் என்று பெயர்மாற்றப்பட்டு வேறு கதையில் இது நுழைக்கப்பட்டு வெளிவந்து படுதோல்வி அடைகிறது.

மேற்கொண்டு படம் எடுக்க பணம் இல்லாமல், நடிக்க வந்த நடிகை போட்டிருந்த நகைகளையெல்லாம் விற்று உடன் நடிக்க வந்த அனைவரையும் பத்திரமாக அனுப்பி வைக்கும் அனுபவமெல்லாம் இவருக்கு ஏற்படுகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இவரைச் செலுத்துகிறது. எப்படியோ அடுத்த அடுத்த படங்களை எடுக்கிறார். ஒவ்வொரு படத்துக்கும் இடையே சில சமயங்களில் பத்துவருடங்கள்கூட கடக்கின்றன. ஆனாலும் யாரேனும் ஒருவர் வந்து படம் எடுக்கவேண்டும் என்றால் படம் எடுக்கிறார்.

இதற்கிடையில் கே.பாலசந்தர் நடிக்கவும் அழைக்கிறார்.  படம் இயக்கிக்கொண்டிருப்பதால் இவரால் நடிக்கச் செல்லமுடியவில்லை. ருத்ரையா இயக்கத்தில் நடிக்கச் சென்று அவமானப்பட்டு திரும்புகிறார். இதற்கெல்லாம் பிற்பாடு ‘கிராமத்து அத்தியாயம் படத்தில் நன்றாக நடித்ததால், ’அந்த’ நடிகருக்கு இவர் போட்டியாகிவிடுவாரோ என்று அஞ்சியே இவர் தூக்கப்பட்டார்’ என்று இவருக்குச் சொல்லப்படுகிறது. அதை இவர் ஏற்கவில்லை. ஆனால் அந்த ஒரு படத்துக்குப் பிறகு ருத்ரையாவும் ஓரம்கட்டப்படுகிறார். இதுதான் சினிமா உலகம் என்று இவருக்கு இவர் நண்பர் சொல்கிறார். முற்போக்களரான ருத்ரையா தனது அடுத்த படம் வராததற்கு ஜெயபாரதியின் வயிற்றெரிச்சலே காரணம் என்று சொன்னதாகவும் இவர் கேள்விப்படுகிறார்.

இப்படி புத்தகம் முழுக்க பல சிதறல்கள். இதன்வழியே நாம் திரையுலகின் ஜொலிக்கும் வெள்ளித்திரைக்குப் பின்னே நடக்கும் அவலங்களை ஏமாற்றங்களை துரோகங்களை துல்லியமாகக் காணமுடியும். சில நண்பர்கள் இதுபோன்ற துரோகங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். இப்படியெல்லாமா செய்வார்கள், இவர் ஏமாற்றத்தில் பேசுகிறார் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால் ஜெயபாரதியின் புத்தகம் முகத்தில் அறைந்து உண்மையைச் சொல்கிறது. எடுத்தவுடனேயே தான் சொல்வதெல்லாம் உண்மை என்று இறைவன் மீது சத்தியம் செய்துவிட்டுத்தான் ஜெயபாரதி தொடங்குகிறார். ஜெயபாரதி பொய் சொல்லவேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகவும் தோன்றவில்லை.

* ஒரு நடிகையிடம் பேட்டி எடுக்கச் சென்று அவர் ஷூட்டிங்கில் ஓய்வில் இருக்கும்போது ‘நான் தினமணிக் கதிரில் இருந்து வருகிறேன்’ என்று சொல்லவும் அவர் பதிலுக்கு ‘ஸோ வாட்’ என்று கேட்க, இவருக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. அந்த நடிகை – ஜெயலலிதா.

* சிவாஜி கணேசன் நடித்த ‘இளைய தலைமுறைகள்’ பட ஷூட்டிங்கில் கஷ்டப்படும் மகனுக்கு தாய் பணம் கொடுத்தனுப்பும் காட்சி. கை நிறைய சில்லறைகளாக அந்தத் தாய் (பண்டரிபாய்) கொண்டு வந்து மகனாக நடிக்கும் சிவாஜியிடம் கொடுக்க, சிவாஜி சில்லறைகளையெல்லாம் தொட்டு நடிக்கமாட்டேன், பணமாகக் கொடுக்கச் சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்.

* குடிசை திரைப்படத்துக்கு இசையமைக்க விரும்பி இளையராஜாவே முன்வருகிறார். ஆனால் ஏற்கெனவே காமேஷ் (கமலா காமேஷின் கணவர்) இசையமைக்க ஜெயபாரதி ஒப்புக்கொண்டுவிட்டதால் இது நிறைவேறாமல் போகிறது.

* குடிசை திரைப்படத்தை எடுப்பதற்குள் ஜெயபாரதி படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. மாயாஜாலக் காட்சி நடத்தி பணம் சேகரித்து ஷூட்டிங் நடத்துகிறார். ’சுராங்கனி’ புகழ் மனோகர் கச்சேரி நடத்தி பணம் திரட்டிக் கொடுக்கிறார். சிவகுமார் யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்லி 2,000 ரூ தருகிறார். மிருணாள் சென்னை வைத்து தமிழில் படம் எடுக்க விரும்பும் விநியோகஸ்தரை, அப்பணத்தை குடிசை திரைப்படத்துக்குத் தரும்படி மிருணாள் சென்னே சொல்கிறார்.

* ஜெயபாரதியின் முதல் படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. பாடல்களைச் சேர்ப்பதால் கோபப்பட்ட கமல் அதிலிருந்து விலகுகிறார். பிற்காலத்தில் ரஜினியை நடிக்கவும் ஜெயபாரதி கேட்கிறார். ‘சலிப்படையும்போது உங்களிடம் வருகிறேன்’ என்று சொல்கிறார் ரஜினி.

*Crowd funding மூலம் பணம் சேர்த்தே திரைப்படம் எடுக்கிறார் ஜெயபாரதி. சிலர் தருகிறார்கள். பலர் தருவதில்லை. ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உச்சிவெயில் படத்துக்கு பத்தாயிரம் நன்கொடை தருகிறார்.

நான் சில விஷயங்களையே சொல்லியிருக்கிறேன். இப்படி புத்தகமெங்கும் அறிந்த மனிதர்களின் அறியாத முகங்களும் அறியாத முகங்களின் அசரடிக்கும் குணங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அம்பிகா நடித்தால் இயக்குகிறேன் என்று சொன்ன மனிதரையும், உச்சிவெயில் படத்தில் ஹீரோவான தனக்கு எத்தனை பாடல்கள் என்று கேட்ட குப்புசாமித் தாத்தாவையும் மறக்கமுடியாது நம்மால்.

கமலையும் ரஜினியையும் நடிக்க கேட்ட இவர் ஏன் இவர் மம்முட்டியையோ மோகன்லாலையோ கேட்கவில்லை என்ற கேள்வி இப்புத்தகம் முழுவதும் எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலும் ஸ்ரீவித்யா ‘நீங்கள் எப்போது அழைத்தாலும் வந்து நடித்துக்கொடுப்பேன்’ என்று சொன்னதைப் படித்தபோது இந்நினைவு அதிகமாகியது. அதைத்தான் வைரமுத்து ஜெயபாரதியிடம் ‘இங்கே எதற்காக?’ என்று கேட்டிருக்கிறார் போலும்.

உண்மையில் தமிழ்த் திரையுலகில் வரும் திரைப்படங்களைப் பார்த்தும் யாருக்காக இன்னும் இதுபோன்ற திரைப்படங்களை ஜெயபாரதி இயக்குகிறார் என்று எனக்கு இன்னும் பிடிபட்டபாடில்லை. நண்பா நண்பா, புத்ரன், குருக்ஷேத்திரமெல்லாம் வந்ததும்கூட யாருக்கும் தெரியாது. சி.சு.செல்லப்பா புத்தகக் கட்டுகளை தலையில் சுமந்துகொண்டு வீதி வீதியாக விற்றதாகச் சொல்வார்கள். படத்தை முடிக்க ஒவ்வொரு கல்லூரியாக பணம் கேட்டு ஜெயபாரதி ஏறி இறங்கும்போது அதுதான் நினைவுக்கு வந்தது

குருக்ஷேத்திரம் படம் வெளிவருவது போர்க்களமான குருக்ஷேத்திரத்தில் பட்டபாட்டைவிட பெரியதாக இருக்கிறது. திடீரென வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் சேர்த்தால்தான் படத்தை விற்கமுடியும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட (இவர் ஏற்கெனவே ஷூட்டிங்கின்போது கோபத்தில் தேவடியா பசங்களா என்று கத்தியவர்) வேறுவழியின்றி அதற்கும் ஒப்புக்கொள்கிறார். முதலில் இவர்தான் ஜெயபாரதி தெரியாத வடிவேலு, இவர் யாரென்று தெரிந்துகொள்ளவும் மிகவும் மரியாதையாக நடந்துகொள்கிறார். ஷூட்டிங் முடிந்து கிளம்பும்போது ‘சந்திரசேகருக்கே தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கும் ஒரு படத்துல வாங்கிக் கொடுங்கண்ணே’ என்று கேட்கிறார். விவேக்கும் இவரை அழைத்து ‘மாற்றுத் திரைப்படம்’ வேண்டுமென்று கேட்டு ஒரு படம் நடிக்க முயல்கிறார். அந்த முயற்சி வெற்றியடையாமல் அது பிற்பாடு ஒய்.ஜி. மகேந்திரா நடித்து ‘புத்ரன்’ என்ற திரைப்படமாக வெளிவருகிறது. (இப்படி ஒரு படம் வந்ததே எனக்குத் தெரியாது!) விவேக், வடிவேலு போன்ற நடிகர்களுக்குள்ளேயும்தான் எத்தனை கனவுகள்!

நூல் முழுக்க தினுசு தினுசான தயாரிப்பாளர்கள். ஹோட்டல் தொழில் நடத்தும் ஒருவர். தன்னைவிட இயக்குநருக்குப் புகழா என்று மருகும் ஒருவர். அம்பிகா ஹீரோயின் என்றால் படம் தயாரிக்கத் தயாராக இருக்கும் ஒருவர். படம் தயாரிக்க இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது என்பதால் கிடைத்ததையெல்லாம் தின்று பெண்களுடன் ஆட்டம்போடும் ஒருவர். இதற்கிடையில்தான் நாம் நல்ல திரைப்படங்களை எதிர்பார்க்கிறோம். நினைக்கவே அயற்சியாகத்தான் உள்ளது.

திரைப்படம் பற்றி தெரிந்துகொள்ள இந்நூலை வாசிப்பது மிக முக்கியம். இது மாற்றுத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வணிகத் திரைப்படங்களுக்கான இயக்குநர்களும் இதேபோலவோ இதைவிட அவமானப்பட்டு நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டு அவமானப்படுத்தி நம்பிக்கைதுரோகம் செய்துதான் மேலே வரவேண்டியுள்ளது. அத்தகைய ஒரு நிலையைக் காலம் காலமாகவே நம் திரையுலக அமைப்பு கைக்கொண்டுள்ளது. இந்நிலை அத்தனை சீக்கிரத்தில் மாறாது. ஒரு புகழ்முகம் தனக்குப் பின்னே ஒளித்துக்கொண்டிருக்கும் பல்வேறு முகங்களை நாம் தரிசிக்க நேரும்போது ஏற்படும் மனவலியை எப்படிச் சொல்வது? அந்த மனவலியை இப்புத்தகம் எனக்குக் காட்டியது.

இப்புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/1000000023800.html

Share

மெஹர் Vs பாயம்மா

பிரபஞ்சனின் புனைவுகள் என்றாலே படிக்க எனக்குக் கொஞ்சம் தயக்கம்தான். ஆரம்பகாலங்களில் அவர் எழுதிய சில கதைகளைப் படித்ததனால் வந்த நடுக்கமாகவே அது இருக்கவேண்டும். அவரது கட்டுரைகளைப் படிப்பேன். இன்று அவரது சிறுகதையான பாயம்மாவைப் படித்தேன். விஜய் டிவி சித்திரத்தில் தாமிரா இயக்கத்தில் வெளியான மெஹர் என்னும் சித்திரத்தைப் பார்த்தபின்னர், அவரது இந்தச் சிறுகதையைப் படிக்க ஆர்வம் கொண்டு, இன்று படித்தேன். இந்த பாயம்மா கதை நற்றிணை பதிப்பகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ‘யாசுமின் அக்கா’ என்னும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.

மெஹர் ஒரு நல்ல முயற்சி. தமிழில் இதுவரை முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நேர்மையான ஒரு திரைமுயற்சி கூட வந்ததில்லை. மலையாளத்தில் பல படங்கள் இப்படி வந்துள்ளன. ஆனால் தமிழில் ஒரு படம் கூட இல்லை. எதாவது ஒரு கதாபாத்திரத்தின் பெயரை முஸ்லிம் பெயராக வைத்துவிட்டால் அது முஸ்லிம்களின் படமல்ல. அப்படி இருந்த ஒரு நிலையில் இந்த மெஹர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லவேண்டும். அந்த அளவில் தாமிரா பாராட்டப்படவேண்டியவர். ஒரு திரைப்படத்தின் முக்கியப் பங்கு இப்படி யதார்த்தங்களை தன்னளவில் தொடர்ந்து பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.

இங்கே வரும் மெகா தொடர்களும் எந்த வகையிலும் பொருட்படுத்தத்தக்கவை அல்ல. முன்பு சுஹாசினி இயக்கிய சில குறுந்தொடர்களும், பாலுமகேந்திரா இயக்கிய குறுந்தொடர்களும் மட்டுமே பொருட்படுத்தத்தக்கவை. இதுபோன்ற ஒரு சித்திரம் முயற்சி முன்பு தூர்தர்ஷனிலும் நடந்தது. நீங்காத நினைவுகள் என்றொரு நாடகம் ஒளிபரப்பப்பட்டது. ஜெயபாரதி நடித்தது என்று நினைக்கிறேன். இன்னொரு நாடகம் ஜெய்சங்கர் நடித்தது. ஆனால் அவையெல்லாம் நல்ல முயற்சியாகக் கைகூடவில்லை.

இந்நிலையில் தாமிராவின் மெஹர் பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம், அதன் தரம். இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவு. இந்த இரண்டுமே இச்சித்திரத்தை முக்கியத்துவம் பெற வைக்கின்றன. சல்மாவின் நடிப்பு மிக நன்றாக இருந்தது. அதைவிட சல்மாவின் மகனாக வருபவரது நடிப்பு அட்டகாசம். பவா செல்லத்துரைக்குக் குரல் கொடுத்தவரின் குரல் பொருந்திவரவில்லை என்பது ஒரு குறை. இன்னொரு குறை என்று சொன்னால், சரியாக கையாளப்படாத நெல்லை வட்டார வழக்கு. மாப்பிள்ளையின் அண்ணன், கடன் தர மறுத்து இரண்டாம் தாரத்துக்கு வாழ்க்கைப்படச் சொல்லும் இன்னொருவர் என இருவரும் மிக இயல்பு. பின்னணி இசை மிக அழகாக இருந்தது. கதைக்கு ஏற்றபடி எவ்வித உறுத்தலும் இன்றி கூடவே முழுக்கப் பயணித்தது.

சிறுகதை என்று பார்த்தால் பாயம்மா மிகத் தட்டையான கதை. நுணுக்கங்களெல்லாம் எதுவுமே இல்லை. தவறு செய்யத் தயாராக இருக்கும் ஒரு பையன், அவனுக்குள் எவ்விதப் போராட்டங்களும் இல்லை. கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்பதால் திருடுகிறான். பாயம்மாவே போலிஸிடம் சொல்கிறாள். வழக்கு வேண்டாம் என்று முதலாளி சொல்கிறார். முதலாளியே மனம் இறங்கி கல்யாணத்துக்குப் பணம் தருகிறார். ஆனால் பாயம்மா மறுத்துவிடுகிறாள். அவ்வளவுதான். இக்கதையைப் படிக்க நான் நினைத்த காரணமே, பிரபஞ்சன் இஸ்லாமியர்களின் பேச்சு வழக்கை எப்படி எழுதி இருக்கிறார் என்று தெரிந்துகொள்ளத்தான். என்னை ஏமாற்றவில்லை பிரபஞ்சன், பேச்சு வழக்கைத் தேடித்தான் கண்டுபிடிக்கவேண்டும்!

ஒரு குறிப்பிட்ட இனத்தினரின் சாதியினரின் கதையை எழுதுவதில் உள்ள சவால் இது. ஆனால் பிரபஞ்சன் கதையை மட்டுமே கவனத்தில்கொண்டு, இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்லா, யாரசூல், நிக்காஹ் போட்டு நிரப்பிவிட்டார். அதில் மோனே மோளே என்றும் ஒரு வரியில் ’என்னண்டயே சதாய்க்கிறியே’ என்றும் வருகின்றன. இங்கேதான் தாமிராவின் திறமை மின்னுகிறது.

ஒரு எழுத்துப் பிரதியை எப்படி திரைமொழியாக்குவது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. மிக அழகாக நிர்ப்பந்தங்களை உருவாக்குகிறார் தாமிரா. தன்மொழியில் தேவைப்படும்போதெல்லாம் சொல்லத் தொடங்கி பார்ப்பவர்களுக்கு ‘அவன் திருடினாலும் தப்பே இல்லை’ என்ற எண்ணத்தைக் கொண்டுவருகிறார். இந்த எண்ணமே பாயம்மா எடுக்கப்போகும் முடிவுக்கு ஓர் அழுத்தத்தைத் தருவது. இவையெல்லாம் சிறுகதையில் இல்லை. பாயம்மா ஒரு சிறிய கதை, அவ்வளவுதான். ஆனால் மெஹர் பல நுணுக்கங்களைத் தொட்டுப் போகும் படைப்பு. பாயம்மா சிறுகதை பாயம்மாவை ஒரு படி மேலேற்றுகிறது. ஆனால் மெஹர் பாயம்மாவுக்கும் அவருக்கு இணையாக அவரது மகனுக்கும் ஓர் இடத்தை வழங்குகிறது. மெஹரின் முடிவு கொஞ்சம் பிரசாரத்தனத்தோடு முடிகிறது. பாயம்மாவின் முடிவோ ஒரு லட்சியத்தோடு முடிகிறது. இரண்டுக்கும் அடிநாதம் ஒன்றுதான். அந்த அடிநாதம் மெஹரில் மட்டுமே மிக அழகாக பல இடங்களில் தொட்டுச் செல்லப்பட்டிருக்கிறது.

தாமிராவின் இந்த மெஹர் பாராட்டப்படவேண்டிய முயற்சி. ஒரு சிறிய கதையின் பொறியே போதும், ஒரு சிறந்த திரைமொழியை உருவாக்க முடியும் என்று காட்டுவதற்கு. அதுமட்டுமல்ல, அந்தப் பொறி எவ்விதத்திலும் புதுமையாக இல்லாமல் இருந்தாலும் (பாயம்மாவின் கதையில் எவ்விதப் புதுமையும் இல்லை) திரை உருவாக்கத்தில் கதையைப் பின்னுக்குத் தள்ளி காட்சி அனுபவத்தைப் பல மடங்கு உயர்த்த முடியும் என்பதற்கும் மெஹர் இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பின்குறிப்புகள்:

01. ரெட்டைச்சுழி எடுத்ததற்காக தாமிராவை மன்னித்துவிடலாம்.
02. பாயம்மா கதையில் மோதிரத்தைத் திருடிக்கொண்டு ஓடும் பரசுராமன் கதாபாத்திரம் ஏன் மெஹரில் பரந்தாமன் ஆனது என்று புரியவே இல்லை. 🙂
03. மெஹர் சித்திரத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் பிரபஞ்சன் எழுதியதுதான் என்றால் – ஒருவேளை இப்படி இருந்தால் – பிரபஞ்சன் பாயம்மாவிலிருந்து மெஹருக்கு முன்னேறியிருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 😛

Share

இளையராஜாவின் தேசபக்திப் பாடல்கள்

இளையராஜா தேசபக்திப் பாடல்களைப் போட்டதில்லை என்று ஃபேஸ்புக்கில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதையே நினைத்துக்கொண்டிருந்ததில் சிக்கிய பாடல்கள். இவை போக எனக்குத் தெரியாதவை, நான் மறந்தவை எத்தனையோ. இதற்குப் பின்னும் அது இந்தப் பாடல் போல இல்லை, அந்தப் பாடல் போல இல்லை என்றே சொல்லப் போகிறார்கள். பின்னால் பயன்படும் என்ற நோக்கில் அதை இங்கே சேமித்து வைக்கிறேன்.

என்னவோ தேடிப் போய் பல பாடல்களைக் கேட்டபோது உண்மையிலேயே அசந்து நின்றேன். இப்படிப்பட்ட ஒரு கலைஞனை போகிற போக்கில் அவமதித்துச் செல்வது வேறு எங்கேயும் நடக்காது என்றே நினைக்கிறேன்.

நான் பட்டியலிட்டிருக்கும் பாடல்களில் சில நேரடியாக தேசபக்திப் பாடல்கள் வகையில் வருபவை அல்ல. ஆனால் வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் வரும் நல்லதோர் வீணை தேசபக்திப் பாடலென்றால் இவையும் அப்படியே.

சொர்க்கமே என்றாலும், உலகம் இப்போ எங்கோ போகுது (இரண்டுமே இளையராஜா இசை) – இவையும் ஒருவகையில் தேசபக்திப் பாடல்களே. அப்படியென்றால் கீழே உள்ளவையும்தான்.

காந்தி தேசமே காவல் இல்லையா – நான் சிவப்பு மனிதன்

 

மனதில் உறுதி வேண்டும் – சிந்துபைரவி

https://www.youtube.com/watch?v=vFfKyShYPxk

 

செந்தமிழ் நாடென்னும் போதினிலே – காமராஜர்

https://www.youtube.com/watch?v=n5m4d3Acg60

 

நண்பா நண்பா – தேசிய கீதம்

 

அண்ணல் காந்தி – தேசிய கீதம்

https://www.youtube.com/watch?v=cOi1ugy72Os

 

என் கனவினைக் கேள் நண்பா – தேசிய கீதம்

 

பாரத சமுதாயம் வாழ்கவே – பாரதி

 

 

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் – பாரதி

https://www.youtube.com/watch?v=adzljgaLKQM

 

வந்தே மாதம் ஜெய வந்தே மாதரம் – பாரதி

https://www.youtube.com/watch?v=uuUFLABpiI8

 

நல்லதோர் வீணை செய்தே அதை நலம்கெட – பாரதி

 

தம்பி நீ நிமிர்ந்து பாரடா – என் உயிர்த்தோழன்

இந்த நாடு இருக்கிற – மக்கள் ஆட்சி

மனிதா மனிதா இனி உன் விழிகள் – கண் சிவந்தால் மண் சிவக்கும்

 

போராடடா ஒரு வாளேந்தடா – அலை ஓசை

கத்துக்கணும் கத்துக்கணும் ஒண்ணாயிருக்க – ஒண்ணா இருக்க கத்துக்கணும்

காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டால், நாட்டுப்பற்று என்பது நம் நாட்டில் என்ன இல்லை என்ற விரக்தியாக வெளிப்படுவதைப் பார்க்கலாம். அந்த வகையில் ’ஏங்கிடும் ஏழையின் கூக்குரல்தான் இங்கு தேசியகீதமடா’ பாடலும் ‘நஞ்சையுண்டு புஞ்சையுண்டு’ பாடலும் ‘உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலும் கூட தேசபக்திப் பாடல்தான்!

கடைசியாக: இப்படியெல்லாம் ஒருவர் என்ன பாட்டு போட்டிருக்கிறார், என்ன போடவில்லை என்று பார்ப்பதெல்லாம் சரியான செயலில்லை. ஒரு கருத்தியல்வாதிக்கு இது பொருந்தி வரலாம். நிச்சயம் கலைஞனுக்குப் பொருந்தி வராது. ஒரு கலைஞன் வெளிப்படையாக மறுத்தவற்றையே நாம் பொருட்படுத்தவேண்டும்.

எத்தனையோ ராஜா ரசிகர்கள் இதைவிட அதிகமான பாடல்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்னை மன்னிக்க. 🙂

Share

பொறம்போக்கு – ஓர் இந்திய சலாம்

மாவோயிஸ்ட்டுகளின் தோல்வியுற்ற பிரசார நாடகமாக வெளிவந்திருக்கிறது பொறம்போக்கு என்னும் பொதுவுடைமை. தமிழ்ப்படங்களின் ஆதார விதிகளுக்கு உட்பட்டு மாவோயிஸ்ட்டுகளின் எந்த ஒரு கொள்கையையும் வெளிப்படையாகச் சொல்லாமல் மிக ரகசியமாக வைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்ற வார்த்தையைக் கூடச் சொல்லவில்லை என்றால் அந்த ரகசியத்தின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளுங்கள். கம்யூனிஸ்ட்டுகள் என்றால் நம்மூர் மக்களுக்குத் தெரிந்ததெல்லாம் தா. பாண்டியனின் முகமும் நல்லகண்ணுவின் முகமும்தான். வெகுஜனம் நிச்சயம் ’இந்த நல்லகண்ணுவா இப்படி ஆளுங்களைக் கொல்ல அனுப்பி வைக்காரு’ என்று யோசித்து மெர்சலாகப் போகிறார்கள் என்பது மட்டும் உறுதி. 

விநோதமான தீர்ப்பு ஒன்றைச் சொல்கிறது நீதிமன்றம். தூக்கிலிடுபவர் அனுபவசாலியாக இருக்கவேண்டுமாம். யமலிங்கத்தைக் கூட்டிவருகிறார்கள். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில், அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக, தூக்கிலிடும் வேலையைச் செய்தவர். அதனால் கடும் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். யமலிங்கம் அவரது பதினெட்டு வயதில் யாரைத் தூக்கில் போட்டார் என்பதை கற்பனையில் விட்டுவிட்டார்கள். அஃப்சல் குரு, கசாப்பை எல்லாம் தூக்கில் போட்டவரை அழைத்துக்கொண்டு வந்து இந்த மாவோயிஸ்ட் தீவிரவாதியையும் தூக்கில் போட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல் யமலிங்கத்தை அழைத்து வருகிறார்கள். தமிழனை தமிழனே தூக்கில் போடவேண்டும் என்ற தமிழ்த்தேசியம் உள்குத்தாக உள்ளதோ என்னவோ.

மெலோ டிராமா போல யமலிங்கத்தின் உளவியல் சிக்கல்கள் எவ்வித சீரியஸ்நெஸ்ஸும் இல்லாமல் அலைபாய்கின்றன. தூக்கில் போடக்கூடாது என்பதற்காகவே அவரும் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவுகிறார் என்பதெல்லாம் அம்புலிமாமாவில் வரவேண்டிய கதை. ஒரு தடவை அல்ல, கடைசி வரை உதவிக்கொண்டே இருக்கிறார். இதற்கு அவரையும் ஒரு மாவோயிஸ்ட்டாகவே காட்டியிருக்கலாம். காளியிடம் பேசும் யமலிங்கம் மாவோயிஸ்ட்டாக மாறுவதற்கு ஒரு அழகான பெண்ணே காரணம் என்று சுளுவில் திரைக்கதையை முடித்துவிட்டார்கள்.

தமிழ்த் திரைப்படங்களின் பெரிய சவால் திரைக்கதைகளில் நம்பகத்தன்மையைக் கொண்டுவருவது. இதுபோதும் என்ற நினைப்புடனேயே திரைக்கதை எழுதுவார்கள் போல. எவ்வித தர்க்கமும் இன்றி படம் முழுக்க காட்சிகள் நிரவிக் கிடக்கின்றன. படத்தின் மையம் என்ன என்பதிலேயே இயக்குநருக்குக் குழப்பம். ஒரே மாவோயிஸ்ட் படத்தில் இந்திய ராணுவத்தின் அராஜகம், தூக்கு தண்டனையை அறவே ஒழிக்கவேண்டிய அவசியம், சிறைக்குள்ளே நடக்கும் அராஜகங்கள், தமிழ்த்தேசியத்தின் புகழ்பாடுதல், சிறைக்கைதிகளின் மனிதாபிமானம் எனப் பலவற்றையும் போட்டுக் குதப்பி சிவப்பாகத் துப்பிவிட்டார். இதனால் இது என்ன மாதிரியான படம் என்பது யாருக்குமே புரியாமல் போய்விட்டது. என்னைப் பொருத்தவரை இது இயக்குநர் இந்த சமூகத்துக்குச் செய்திருக்கும் மிகப்பெரிய நல்ல விஷயம். ஏனென்றால் படத்தில் மக்களுக்குப் புரிந்தது ஒரே விஷயமாக மட்டுமே இருந்திருக்கமுடியும், அது ‘கம்யூனிஸ்ட்டுகள் தீவிரவாதிகள்’ என்பது மட்டுமே.

தூக்கு தண்டனை கூடாது ஆனால் ராணுவத்தில் யாரையும் கொத்து கொத்தாகக் கொல்லலாம், ஆயுதங்கள் வாங்கக் கூடாது ஆனால் மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் ரகரகமாக ஆயுதங்களை வைத்துக்கொள்ளலாம் என்ற மாவோயிஸ்ட்டுகளின் சிந்தனையை படத்தில் தெளிவாகக் காண்பித்து அசரடிக்கிறார் இயக்குநர். தூக்கு தண்டனை உயிர்க்கொலைக்கு எதிரானது என்பதால் எதிர்க்கிறாரா அல்லது தூக்கு தண்டனையையே எதிர்க்கிறாரா என்பதில் இயக்குநருக்கு அக்கறை இல்லை. தூக்கு பெற்ற ஒருவர் நிரபராதி என்பதால் அவரைத் தூக்கில் போடக்கூடாது என்று மட்டுமே படத்தில் காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் தூக்கு தண்டனையை அறவே எதிர்ப்பவர்கள், ஒருவர் தவறே செய்திருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனை தரப்படக்கூடாது என்றே வாதிடவேண்டும். இதைப் பற்றியெல்லாம் இயக்குநருக்கு எவ்வித அக்கறையும் இல்லை. மேலும் இந்தியாவில் இதுவரை 12 பேர் மட்டுமே தூக்கில் போடப்பட்டுள்ளதாக கூகிள் (மேம்போக்கான தேடல்தான், சரியாகத் தேடவேண்டும்) சொல்கிறது. அதிலும் சமீப காலங்களில் மிக அரிதான வழக்குகளில் மட்டுமே தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கே இத்தனை கூப்பாடு. ஒருவேளை நிறுத்திவைக்கப்பட்டுள்ள தூக்குக்காக எடுக்கும் காவடியாக இருக்கலாம். தங்கள் கொள்கையோடு சம்பந்தப்பட்ட ஒருவருக்கு தூக்கு என்று வரும்போது மட்டுமே, ஒட்டுமொத்த தூக்குத் தண்டனையை எதிர்ப்பது நம் பகுத்தறிவுவாதிகள் வழக்கம். அதிலும் அவர்கள் நிரபராதிகள் என்ற பிலாக்கணத்தையும் சேர்த்துக்கொள்வார்கள். இதிலும் மாவோயிஸ்ட்டு தீவிரவாதி ரொம்ப நல்லவர். அறிவாளி. அழகானவர். கிட்டத்தட்ட பகத்சிங். ஆனால் கருணையற்ற இந்திய அரசாங்கம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துவிட்டது. 

சிறையில் இருக்கும் குற்றவாளிகள் எல்லாருமே நிரபராதிகள் என்று வெள்ளை அடித்துவிட்டார் இயக்குநர். சிறையில் ஒருவர்கூட கெட்டவர் இல்லை. இந்த அரசாங்கம் அநியாயத் தீர்ப்பினால் அவர்களை உள்ளே வைத்திருக்கிறது என்பதே இபப்டம் சொல்லும் செய்தி. அதிலும் மிகப் பெரிய தண்டனையைப் பெற்றவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட காந்திகள் அல்லது பகத்சிங்குகள். இப்படி ஒரு கருத்தைச் சொல்லிப் படமெடுக்கும் தைரியம் தமிழ் இயக்குநர்களுக்கு மட்டுமே வரும்.

இயக்குநர் அழுத்தமாகச் சொல்ல விரும்பாத, ஆனால் அதன் போக்கிலேயே வெளிப்பட்டுவிட்ட சில விஷயங்கள் உள்ளன. ஐ பி எஸ்ஸாக வரும் ஷாமின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக ஒரு நேர்மையான அதிகாரியை கண்முன் வைக்கிறது. கடைசி நொடி வரை இக்கதாபாத்திரம் தன் கடமையில் இருந்து இம்மியும் பிசகவில்லை. தனக்கு அளிக்கப்பட்ட கடமையை மிகத் தெளிவான திட்டமிடல் மூலம் செய்து காட்டுகிறார் இந்த ஐ பி எஸ். இந்திய நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் மாவோயிஸ்ட்டுகளைப் பார்த்து ‘உங்களைப் பார்த்தா பைத்தியக்காரத்தனமா தெரியுது’ (நினைவிலிருந்து சொல்கிறேன்) என்று அவர்களது இஸத்தையே கேள்விக்குள்ளாக்கி, மாவோயிஸ்ட்டு தலைவரை தூக்கில் தொங்கவிட்டு இந்தியப் பாதுகாப்பை உறுதி செய்யும் அந்த ஐபிஎஸ்ஸுக்கு ஒரு இந்திய வணக்கம். 

மாவோயிஸ்ட்டுகளை நம்பினால் என்ன ஆகும் என்பதும் இப்படத்தில் மறைமுகமாகக் காட்டப்படுகிறது. தங்கள் வேலை முடிந்ததும் மாவோயிஸ்ட்டுகள் அடுத்த கொலை ப்ராஜெக்ட்டுக்குப் போக, எமலிங்கம் பைத்தியமாகத் தெருவில் திரிகிறார். இதுவும் சமூகத்துக்குத் தேவையான நல்ல செய்தியே. மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் என்றே சொல்வதால், கம்யூனிஸ்ட்டுகளை நம்பினால் லூஸாத்தான் திரியணும் என்று பொதுமக்கள் புரிந்துகொள்வார்கள். நல்ல விஷயம்.

படத்தின் லாஜிக் ஓட்டைகளுக்குள் செல்லவேண்டியதில்லை. படமே லாஜிக் ஓட்டை என்பது ஒருபுறமிருக்க, லாஜிக் ஓட்டைகளுக்கு மேல்தான் ஒவ்வொரு காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கதாபாத்திரமும் நிறுத்தப்பட்டுள்ளது. . இதில் காதல் பாடல்கள், காதல் ஏக்கம் வேறு. மாவோயிஸ்ட் தலைவர்களுக்கு காமம் ஆகாது என்ற கம்யூனிஸ விதி ஏதேனும் உண்டா எனத் தெரியவில்லை. மாவோவின் களியாட்டங்களெல்லாம் நடிப்பா? 🙂 இளம் மாவோயிஸ்ட் தலைவரும் இளம் பெண் தலைவரும் மனிதவெடிகுண்டாக இறக்கப்போகும் நாளுக்கு முதல்நாள் என்ன செய்வார்கள் என்ற தேவையற்ற கேள்வியைக் கொண்டு வரும் இயக்குநர், அதற்கான சரியான பதிலைச் சொல்லாமல் நட்டாற்றில் விட்டுவிட்டார். அவர்கள் இருவரும் உறவுகொண்டார்கள் என்று காட்டிவிட்டால் புனிதத்தன்மை போய்விடுமா என்ன? அல்லது அப்படி ஒரு காட்சியே இல்லாவிட்டால் சாதாரண தமிழன் விறுவிறுப்பு இல்லாமல் படம் பார்க்கமாட்டானா என்ன? என்ன எழவோ, ஆனாலும் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகளில் நாடகத்தன்மையை மீறிய ஒரு சீரியஸ்தன்மை வெளிப்படவே செய்கிறது. அதுமட்டுமே இத்திரைப்படத்தை ஒரு திரைப்படமாக மட்டுமாவது பார்க்கும் நம்பிக்கையை அளிக்கிறது.

உண்மையில் இத்திரைப்படத்தை மிகச் சிறப்பான திரைப்படமாக எடுத்திருக்கலாம். தூக்கிலிடுபவனின் மனப்போராட்டத்தை மட்டுமே மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கலாம். அதற்கு நம்பிக்கை அளிக்க, இந்திய மக்கள் அதிகம் எதிர்கொண்ட, பழக்கப்பட்ட, யதார்த்தத்தில் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளான அப்சல் குரு அல்லது கஸாப்பை மையப்படுத்தியே எடுத்திருக்கலாம். லால் சலாம் இயக்குநருக்கு இதை எடுப்பதிலும் மனத்தடை. வெகுஜன இஸ்லாமியர்களின் மனம் கோணிவிட்டால் என்ன செய்வது? அல்லது தமிழ்த்தேசியவாதிகளின் இஸ்லாமிய ஆதரவுக்கு பங்கம் வந்துவிட்டால் என்ன செய்வது? ஒரு படத்தை பிரசாரப் படமாக எடுக்க எத்தனை பேரை திருப்திப்படுத்தவேண்டியுள்ளது! எந்தக் கேள்வியும் கேட்காமல் படம் பார்க்கவேண்டுமென்றால் இந்தியாவைத் திட்டிப் படமெடுப்பதுதான் எளிதானது. இதைத்தான் இந்த ஊடகம் பழக்கி வைத்திருக்கிறது. என்ன கொடுமை என்றால், ஊடகம் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இல்லை என்றெல்லாம் இப்படத்தில் பேசிக் கொல்கிறார்கள்.

இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், மாவோயிஸ்ட்டு தலைவரைத் தூக்கில் இடுவதுதான். எத்தனை லால் சலாம் சிந்து பாடினாலும், இந்தியாவுக்கு எதிராக சதி செய்ய ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கராவாதிகள் ஆலோசனை சொன்னாலும், இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிகழுமென்றால் அந்த இயக்கத் தலைவருக்கு தூக்குத் தண்டனையை இந்தியா நிச்சயம் நிறைவேற்றியே தீரும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருப்பதற்குப் பாராட்டுகள். இயக்குநர் இதை விரும்பிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அதை இப்படித்தான் புரிந்துகொள்வார்கள் என்பதால் இயக்குநருக்கு மீண்டும் ஒரு இந்திய சலாம். தூக்குத் தண்டனை தரப்படும் மாவோயிஸ்ட்டு தலைவர் தூக்கில் தொங்கியதும் படம் பார்க்கும் யாருக்கும் எவ்வித மன வருத்தமும் ஏற்படுவதில்லை. ஏனென்றால் அந்தத் தலைவரின் கதாபாத்திரத்தை இயக்குநர் தெளிவாக நிலைநிறுத்தவில்லை. வெறும் செயற்கையான பிரசார நெடி தூக்கலான வசனங்கள் மூலமும், சாகசக் காட்சிகள் மூலமும் காட்டிவிட்டார். அப்படி பச்சாதாபம் வராத வகையில் படத்தை எடுத்திருப்பது இப்படத்தின் ஆதார செய்திக்கே எதிரானது. ஆனாலும் அதற்கும் மீண்டும் ஒரு இந்திய சலாம்.

சில அவசரத் தீர்ப்புகள்:

விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதம்.

ஆர்யா ஓகே, மோசமில்லை.

ஷாம், கார்த்திகா – நடிக்கவே வரவில்லை.

இசை – கொடுமை. ஒரே ஒரு ஹிந்திப் பாடல் மட்டும் கொஞ்சம் நன்றாக இருந்ததுபோல் காதில் விழுந்தது, ஆனால் நான்கு வரிகளே படத்தில் வந்தது.

Share

2014 – தமிழ்த் திரைப்பட விருதுகள்

2013ல் நான் வழங்கிய விருதுகளை, தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருந்த ஒவ்வொரு தமிழன் வரை அனைவரும் ஏற்றுக்கொண்டு பாராட்டி மகிழ்ந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அந்த வரிசையில் 2014 – திரைப்பட விருதுகள் இங்கே. 

உண்மையில் எல்லா விருதையும் லிங்காவுக்கும் கோச்சடையானுக்கும் கொடுப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். ஆனால் அநியாயமாக கீழே உள்ள பட்டியலை இட்டுள்ளேன். பார்த்து வளர்ச்சி பெறுக. 

 

சிறந்த திரைப்படம்: ஜிகர்தண்டா

சிறந்த நடிகர்: ரஜினிகாந்த் (லிங்கா) (Cool friends!)

சிறந்த நடிகை: யாருமில்லை

சிறந்த புதுமுகம்: துல்கர் சல்மான் (வாயைமூடிப் பேசவும்)

சிறந்த இயக்குநர்: கார்த்திக் சுப்புராஜ் (ஜிகர்தண்டா)

சிறந்த கதை: ரஞ்சித் (மெட்ராஸ்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: லிங்கா

சிறந்த வில்லன்: William Orendorff (லிங்கா)

சிறந்த நகைச்சுவை நடிகர்: சூரி (பல படங்கள்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்): அனிருத் (வேலையில்லா பட்டதாரி, கத்தி)

சிறந்த ஒளிப்பதிவு: ரத்னவேலு (லிங்கா)

சிறந்த துணை நடிகர்: கலையரசன் (மெட்ராஸ்)

சிறந்த துணை நடிகை: ரித்விகா (மெட்ராஸ்)

சிறந்த பின்னணி இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயண் (மெட்ராஸ்)

சிறந்த பாடகர்: ஏ.ஆர். ரஹ்மான் (இந்தியனே, கோச்சடையான்)

சிறந்த பாடகி: சின்மயி (இதயம் நழுவி நழுவி, கோச்சடையான்)

சிறந்த பாடல்: இதயம் நழுவி நழுவி (கோச்சடையான்)

சிறந்த குத்துப்பாட்டு: மஸ்காரா போட்டு (சலீம்)

சிறந்த பாடலாசிரியர்: கானா பாலா (மெட்ராஸ்)

சிறந்த வசனம்: கே.எஸ். ரவிக்குமார் (கோச்சடையான்)

சிறந்த புதிய முயற்சி: கோச்சடையான்

சிறந்த ஓவர் ஆக்டிங்: துளசி (பண்ணையாரும் பத்மினியும்)

சிறந்த அண்டர் ஆக்டிங்: விஜய் ஆண்டனி (சலீம்)

சிறந்த காணாமல் போன நடிகர்: சிம்பு

நன்றாக வந்திருக்கவேண்டியவை: சதுரங்க வேட்டை, ஆடாம ஜெயிச்சோமடா.

பார்க்க முடியாதவை: மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று காளைகளும், பண்ணையாரும் பத்மினியும், மஞ்சப்பை, சைவம், அஞ்சான்.

Share